Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

காய்ச்சல்... சில குறிப்புகள்! - நலம் நல்லது! - 1 #DailyHealthDose மருத்துவர் கு.சிவராமன்

medi1106_13407.jpg

ஆனந்த விகடனில் வெளியான ‘ஆறாம் திணை’, ‘ஏழாம் சுவை’, ’உயிர் பிழை’ தொடர்கள் மூலம் பரவலான வாசகர்களின் கவனத்தைப் பெற்றவர் மருத்துவர் கு.சிவராமன். இவருடைய `நலம் 360’ மற்றும் `நாட்டு மருந்துக்கடை’ ஆகியவையும் மிக முக்கியமான மருத்துவ நூல்கள். உணவு எப்படி மருந்தாகிறது; இயற்கை, நோய் வராமல் காக்க நமக்கு என்னவெல்லாம் வழங்கியிருக்கிறது என்பதையெல்லாம் ஆதாரபூர்வமாக, அழுத்தமாக எடுத்துச் சொல்பவர். நம் ஆரோக்கியத்துக்கு வழிகாட்ட, இனி விகடன் டாட்.காமில் திங்கள் முதல் வெள்ளி வரை சின்னச்சின்ன டிப்ஸுகளையும் வழங்க இருக்கிறார். பின்பற்றுவோம்... பயன்பெறுவோம்!

 

மருத்துவர் கு.சிவராமன் medi11062_13007.jpg

மழைக்காலத்தில் அதிக அளவில் நம்மைத் தாக்குவது காய்ச்சல். இப்போதெல்லாம் காய்ச்சல் வந்தாலே, `என்னது காய்ச்சலா? உஷாரா இருங்க... எல்லா பக்கமும் `டெங்கு’வாம், `சிக்குன்குனியா’வாம்... ஏதோ மர்மக் காய்ச்சலாம்!’ எனக் கலவரத்துடன்தான் காய்ச்சலை எதிர்கொள்கிறோம். மூன்று நாட்களுக்கு மேல் ஜுரம் இருந்தால், மருத்துவர் பரிசோதனைக்கு நீட்டும் பட்டியலில் டைஃபாய்டு, மலேரியா, காமாலை, டெங்கு, சிக்குன்குனியா... என விதவிதமான பரிந்துரைகள். 

 

காய்ச்சல் ஏன் வருகிறது, மழைக்காலத்தில் அதைத் தவிர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்வோமா?

* காய்ச்சல் ஒரு தனி நோய் அல்ல. வெள்ளை அணுக்களைக்கொண்டு, நமது உடல் கிருமிகளுடன் நடத்தும் யுத்தத்தில் கிளம்பும் வெப்பமே காய்ச்சல். வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதபோது ஜுரம் கொஞ்சம் நீடிக்கலாம். புதுவகையான பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிரான யுத்தம் எனில், ஜுரம் நீடிக்கலாம். உடலில் வெள்ளை அணுக்கள் - கிருமிகளுக்கு இடையிலான யுத்தத்தில் ரத்தத் தட்டுக் குறைவு, உடல் நீர்ச்சத்துக் குறைவு, ஈரல்-மண்ணீரல் வீக்கம் எனத் தொந்தரவுகள் அதிகரிக்கும். அதுவே உடலின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, சுகவீனத்தை (ஜுரத்தை) உண்டாக்கும். 

* இனிப்பு, பால், நீர்க்காய்கறிகளைத் தவிருங்கள். மருத்துவர் பால் அருந்தச் சொல்லியிருந்தால், அதில் மிளகு, மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து, காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் மட்டும் அருந்துங்கள். இரவிலும் அதிகாலையிலும் வேண்டாம்! 

shutterstock_256541833_13124.jpg

 

* ஆவி பிடித்தல், நெற்றிக்குப் பற்று இடுவது, சுக்கு-மல்லிக் கஷாயம் அருந்துதல்... என வாரம் ஒரு நாள் கண்டிப்பாகச் செய்யுங்கள். சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரம் கலந்து தயாரிக்கப்படும் கற்பூராதி தைலத்தை, குழந்தைகளுக்கு நெஞ்சில் தடவிவிடுங்கள். 

*  மிளகு, மஞ்சள், லவங்கப்பட்டை, கிராம்பு, கொள்ளுப் பயறு, நாட்டுக்கோழி முதலான, உடலுக்கு வெம்மை தரும் உணவுகளை அவ்வப்போது சேர்த்துக்கொள்வது நல்லது. 

* காலையில் கரிசாலை முசுமுசுக்கை இலை போட்ட தேநீர், மதியம் தூதுவளை மிளகு ரசம், மாலையில் துளசி பச்சைத் தேயிலை தேநீர்... இவை மழைக்கால நோய் எதிர்ப்பு உணவுகள். 

* ரத்தத் தட்டுக்களை உயர்த்த, சளியை வெளியேற்ற, இருமலை நீக்க, இரைப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகச் சிறந்த மருந்து ஆடுதொடா இலைச்சாறு. மருத்துவர் ஆலோசனையுடன், சரியான இலைதானா என உறுதிப்படுத்திக்கொண்டு ஓரிரு இலையை அரைத்து, சாறு எடுத்து, மழைக்காலத்து சளி காய்ச்சலை எளிதில் போக்கலாம். 

* இரு சக்கர வாகனத்தின் முன்புறத்தில் குழந்தைகளை அமர்த்தி, மாலை, இரவு நேரங்களில் பயணம் செய்யாதீர்கள். வாடைக் காற்று தாக்காமல் காதுகளைக் கவனமாக மூடிக்கொள்வது நல்லது! 

 

* முதலில், காய்ச்சல் வராமல் தடுக்க முழு முயற்சி எடுக்க வேண்டும். தண்ணீரைச் சேமிக்கும் பாத்திரத்தை மூடி வையுங்கள். வீட்டுக்கு வெளியே மூலையில் நீங்கள் போட்டு வைத்திருக்கும் பழைய பெயின்ட் டப்பா, ரப்பர் டயர், பாத்திரங்களை அகற்றுங்கள். வேப்பம் புகையோ, கார்ப்பரேஷன் கொசுவிரட்டிப் புகையோ காட்டுங்கள். கொதித்து ஆறிய தண்ணீரை மட்டுமே அருந்துங்கள். சூடாக, அப்போது சமைத்த உணவை உண்ணுங்கள். லேசான தும்மல், ஜுரம் இருக்கும்போது, பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.

http://www.vikatan.com/news/health/71359-treatment-tips-for-fever-nalam-nallathu-1-dailyhealthdose.art

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

தலைவலி தவிர்ப்போம்! நலம் நல்லது! - 2, #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

Nalam%20logo%20new_18368.jpg

மருத்துவர் கு.சிவராமன்

உண்மையில் ஒரு மருத்துவருக்குத் தலைவலி தரும் விஷயம் என்ன தெரியுமா? தலைவலிக்குக் காரணம் தேடுவது. ஏனென்றால், தலைவலிக்கு 200-க்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு! 

தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள் சில... 

shutterstock_355233830%20%281%29_18296.j

  • 6-7 மணி நேரமாவது தடை இல்லா இரவு நேரத் தூக்கம் கிடைத்திடாதபோது... 
  • ஷிப்ட் முறை வேலையால் சீரான நேரத்தில் தூங்க இயலாமல் நேரம் தவறித் தூங்கும்போது... 
  • காற்றோட்டமான வசிப்பிடம் இல்லாதபோது... 
  • தொல்பொருள் ஆய்வாளரிடம் சிக்கிய ஓலைச்சுவடிபோல, பர்ஸில் வைத்திருக்கும் 15 வருடங்களுக்கு முந்தைய பிரிஸ்கிரிப்ஷனை வைத்துக்கொண்டு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும்போது... 
  • சிங்கப்பூரில் சீப்பாகக் கிடைக்கும் என வாங்கி வந்து பரிசளிக்கப்பட்ட சென்ட்டை கக்கத்திலும் கைக்குட்டையிலும் விசிறிக்கொள்ளும்போது... 
  • ஊட்டி, கொடைக்கானல் ஊர்சுற்றலில், பெட்டிக்கடைகளில் மலிவான விலையில் விற்கப்படும் குளிர்கண்ணாடிகளை குஷியாக வாங்கி மாட்டிக்கொண்டு உலவும்போது... 
  • பாராட்டாகக் கொஞ்சம் புன்னகை, பரவசப்படுத்தும் உச்சி முத்தம், பரிதவிப்பை ஆசுவாசப்படுத்தும் அரவணைப்பு... இவை எதுவும் எப்போதுமே கிடைக்காதபோது... 

தலைவலி தவிர்க்க... 

  • மூக்கு அடைத்து, தும்மலுடன், முகம் எல்லாம் நீர் கோத்து வரும் சைனசைட்டிஸ் தலைவலி சிறார்களுக்கும் பெண்களுக்கும் அதிகம். இதற்கு மஞ்சள், சுக்கு வகையறாக்களைச் சேர்த்து அரைத்து உருட்டிய `நீர்க்கோவை’ மாத்திரையை நீரில் குழைத்து நெற்றியில், மூக்குத்தண்டில், கன்னக் கதுப்பில் தடவி, ஓர் இரவு தூங்கி எழுந்தால் தலைவலி காணாமல் போகும். அதோடு, நொச்சித்தழை போட்டு ஆவி பிடிப்பது, இரவில் மிளகுக் கஷாயம் சாப்பிடுவது ஆகியவையும் தலைவலியைத் தீர்க்கும். சைனசைடிஸ் தலைவலியைப் போக்க சீந்தில் சூரணம் முதலான ஏராளமான சித்த மருந்துகள் உள்ளன. சீந்தில் கொடியை 'சித்த மருத்துவத்தின் மகுடம்' எனலாம். நீர்கோத்து, மூக்கு அடைத்து, முகத்தை வீங்க வைக்கும் சைனசைட்டிஸ் தலைவலிக்கு, அப்போதைக்கான வலி நீக்கும் மருந்தாக இல்லாமல், பித்தம் தணித்து மொத்தமாக தலைவலியை விரட்டும் அமிர்தவல்லி அது. 

shutterstock_355237268_18236.jpg

 
  • சைனசைட்டிஸோ, மைக்ரேன் தலைவலியோ... வாரம் இருமுறை சுக்குத் தைலம் தேய்த்துக் குளித்தால், வலி மெள்ள மெள்ள மறையும். 
  • மைக்ரேன் எனும் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து. இந்த வலி வராமலிருக்க, இஞ்சித் தேனூறல், இஞ்சி ரசாயனம் என நம் பாட்டி மருத்துவம் இருக்கிறது. இஞ்சியை மேல் தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து, தினமும் காலையில் அரை டீஸ்பூன் சாப்பிட்டால், மைக்ரேனுக்குத் தடுப்பாக இருக்கும். இதுதான் இஞ்சித் தேனூறல். இஞ்சி, சீரகம், இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து, அந்தக் கூட்டுக்குச் சம அளவு ஆர்கானிக் வெல்லம் கலந்தால், இஞ்சி ரசாயனம் தயார். சாப்பாட்டுக்குப் பின் இதை அரை டீஸ்பூன் சாப்பிடுவது அஜீரணத் தலைவலியைத் தவிர்க்கும். 
  • மைக்ரேன் தலைவலிக்கு, அதிமதுரம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஹை ட்ரேஸ் (High Trace) மினரல்ஸ் சேர்க்காத நாட்டுச்சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பால் உடனடித் தீர்வு தரும். 
  • சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போகும் என, 'திருவள்ளுவ மாலை' எனும் நூல் குறிப்பிடுகிறது. இந்த மூன்று பொருட்களும் சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலிக்கான தீர்வை உடையன என நவீன அறிவியல் சான்றையும் பெற்றவை. முகர்ந்தால் மட்டும் போதாது... சாப்பிடவும் வேண்டும். 
  • அஜீரணத் தலைவலி மற்றும் இரவெல்லாம் 'மப்பேறி' மறுநாள் வரும் ஹேங் ஓவர் தலைவலிக்கு சுக்கு, தனியா, மிளகு போட்டு கஷாயம் வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தால், தலைக்கு ஏறிய பித்தம் குறைந்து, தலைவலி போகும்.

http://www.vikatan.com/news/health/71683-we-can-avoid-headache.art

Link to comment
Share on other sites

ஆஸ்துமா நோயாளிகள் என்ன சாப்பிடலாம்? - நலம் நல்லது! - 3, #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

 

Nalam%20logo%20new_18220.jpg

மருத்துவர் கு.சிவராமன் 

asthma-treatment-1_18358.jpg

காய்ச்சல், தலைவலியில் இருந்து ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் வரை, நோயை விரட்ட உணவு ஒரு முக்கிய அம்சம். ஆஸ்துமா சிகிச்சையில் உணவு ஒரு மருந்தும்கூட! ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், சில உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் பிரச்னையைத் தீர்க்க முடியும். 

* காலையில் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பல் துலக்கியதும், முதலில் இரண்டு அல்லது மூன்று குவளை வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லது. அதன் பிறகு, பால் கலக்காத தேநீர் சிறந்தது. வெளுத்த பாலைவிட கறுத்த தேநீரும் காபியும் எவ்வளவோ மேல்! 

* இரவு நேரத்தில் மூச்சிரைப்பால் (Wheezing) சிரமப்படுகிறீர்களா? கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை உதிர்த்துப் போட்டுக் கஷாயமாக வைக்கவும். இனிப்புச் சுவைக்கு தேன் சேர்த்து அருந்தவும்.  இரவில் நெஞ்சில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி, உடனடியாக சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஓரிரு மாதங்களுக்குத் தொடர்ந்து இந்தக் கஷாயத்தைக் காலை பானமாகக் குடித்துவந்தால், இரைப்பு கண்டிப்பாகக் கட்டுப்படும். கூடவே தும்மல் இருந்தால், முசுமுசுக்கை இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். 

* இரவில் மூச்சிரைப்பால் அவதிப்படுபவருக்குக் காலை உணவு சாப்பிடப் பிடிக்காது. பசியும் இருக்காது. எளிதில் செரிக்கக்கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல் உப்புமா, மிளகு ரச சாதம், இட்லி இவற்றில் ஏதாவதொன்றைச் சாப்பிடலாம். ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் அரை வயிற்றுக்குச் சாப்பிடுவது நல்லது. இடையிடையே பால் கலக்காத தேநீர் அருந்தலாம். 

* மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரைக்காய், புடலங்காய், சௌசௌ போன்றவற்றைத் தவிர்த்துவிடலாம். மிளகு, தூதுவளை ரசத்துடன் நிறைய கீரை, காய்கறிகள் சேர்த்துச் சாப்பிட வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், ஜீரணத்தை வேகப்படுத்தி எளிதில் மலம் கழிக்கவைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வாயுவை உண்டாக்கும், செரிக்கத் தாமதமாகும் கிழங்கு வகைகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள் நல்லதல்ல. மோர் சேர்ப்பது தவறல்ல. தயிரைத் தவிர்க்கலாம். 

shutterstock_366828380_18218.jpg

* சில வகைக் காய்கள் சிலருக்கு அலர்ஜியாக இருக்கலாம். அவரவர்கள் அதை அடையாளம் காண வேண்டும். அதே நேரம், தன் நாவுக்குப் பிடிக்காததை எல்லாம், `அய்யோ... எனக்கு பாகற்காய் அலர்ஜி! வெண்டைக்காய் சேராது’ என ஒதுக்கத் தொடங்கினால், இழப்பு கூடும்; இழுப்பும் கூடும். 

* மாலையில் தேநீரோ, சுக்கு-தனியா கஷாயமோ அருந்துவது இரவில் படும் மூச்சிரைப்பு சிரமத்தைப் பெருவாரியாகக் குறைக்கும். இரவு உணவை ஏழரை மணிக்கு முன்னதாகச் சாப்பிட்டுவிடுவது நல்லது. இரவுக்கு கோதுமை ரவை கஞ்சி, இட்லி நல்லது. பரோட்டா, பிரியாணி... கூடவே கூடாது! காலி வயிற்றோடு தூங்கச் செல்வது ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். 

* தினமும் மாலை வேளையில் நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம் சாப்பிடலாம். மருந்து எடுக்கும் காலங்களில் ஆரஞ்சு, திராட்சைப் பழங்களைத் தவிர்க்கவும். பகல் நேரத்தில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாசித் துண்டுகளில் சிறிது மிளகுத் தூள் தூவி சாப்பிடலாம். 

* இனிப்புப் பண்டங்கள் ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல. குளிர்காலத்தில் இனிப்பு கூடவே கூடாது. பெரியவர்கள், மதிய உணவுக்குப் பின்னர் இரண்டு வெற்றிலைகளைச் சுவைப்பது ஆஸ்துமாவுக்கு நல்லது. ஆனால், அதில் புகையிலையை சேர்க்கக் கூடாது. 

* ஆஸ்துமா உள்ளவர்களின் மெனு கார்டில் கட்டாயம் இடம்பிடிக்க வேண்டியவை... சிவப்பரிசி அவல் உப்புமா, புழுங்கல் அரிசிக் கஞ்சி, திப்பிலி ரசம், தூதுவளை ரசம், முசுமுசுக்கை அடை, முருங்கைக்கீரைப் பொரியல், மணத்தக்காளி வற்றல், லவங்கப்பட்டைத் தேநீர்..!

http://www.vikatan.com/news/health/71798-asthma-patients-diet-chart.art

Link to comment
Share on other sites

கருத்தரிப்புக்கு உதவும் உணவுகள் - நலம் நல்லது - 4! #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

 

Nalam%20logo%20new_17582.jpg

மருத்துவர் கு.சிவராமன் 

PREG_17354.jpg

கிராமங்களில், புதுமணத் தம்பதியரை விருந்துக்கு அழைப்பதிலேயே தொடங்கிவிடும், புதுப்பெண்ணை மசக்கைக்குத் தள்ளும் ஏற்பாடு. விருந்து மெனுவில் தலைவாழை இலை தொடங்கி வெற்றிலை வரை இடம்பெற்றிருக்கும். 

கருத்தரிப்புக்கு உதவும் சில உணவுகள் இங்கே...

பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். இன்று, பெரும்பாலும் சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டிதான் முதல் காரணமாகச் (Polycystic Ovary Syndrom) சொல்லப்படுகிறது. அதற்காக ரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. உண்மையில், மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர, வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது. கருமுட்டையானது கர்ப்பப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத் தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. `பாலி சிஸ்டிக் ஓவரி’ என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம் உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic Foods) உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும்தான். இவை தவிர, பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவையல், கறுப்புத்தோல் உளுந்து சாதம் ஆகியவை ஹார்மோன்களைச் சீராக்கி, இந்த பிசிஓடி பிரச்னையைத் தீர்க்க உதவும். சுடு சாதத்தில், வெந்தயப் பொடி ஒரு டீஸ்பூன் அளவில் போட்டு, மதிய உணவை எடுத்துக்கொள்வதும் நல்லது.

%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%

* மாதவிடாய் வரும் சமயம், அதிக வயிற்று வலி உள்ள பெண்கள், சோற்றுக் கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதங்களுக்குச் சாப்பிட வேண்டும். தினமும் சிறிய வெங்காயத்தை 50 கிராம் அளவுக்காவது உணவில் சேர்ப்பது, பிசிஓடி பிரச்னையைப் போக்க உதவும். 

* கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கு கணிசமானது. சரியான அளவுக்கு தைராய்டு சுரப்பு இல்லையென்றாலும், கருத்தரிப்பு தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு, `அகர் அகர்’ எனப்படும் வெண்ணிறக் கடல் பாசி ஆகியவற்றைச் சேர்ப்பது, தைராய்டு பிரச்னையைச் சீராக்க உதவும். கடுகு, முட்டைக்கோஸை அதிக அளவில் எடுத்துக்கொள்வதும் தைராய்டு சீராக உதவும். 

* குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை. இவை ஆண்மையையும் பெருக்கும் என்கிறது ஒரு சித்த மருத்துவப் பாடல். இந்தக் கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். 

shutterstock_113454739_17406.jpg

* ஆண்களுக்கு விந்து அணுக்கள் குறைவு, விந்து அணுக்களின் இயக்கம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதப்படுகிறதா? உணவில் அதிகமாக முளை கட்டிய பயறு வகைகளையும், லவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்களையும் சேர்க்க வேண்டும். தினமும் முருங்கைக்கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரைப் பருப்பு ஆகியவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும். முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஏதாவதொன்றை தினமும் சமைத்துச் சாப்பிட வேண்டும்.

* மாமிச உணவைவிட, மரக்கறி உணவே (காய்கறி, பழங்கள்) விந்து அணுக்களை அதிகரிக்கவும் அதன் இயக்கத்தைக் கூட்டவும் உதவும். 

* முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட, எண்ணெய்ச் சத்து அதிகம் இல்லாத உணவுகளுக்கும், கீரை, பசுங்காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

* குழந்தைப்பேறு நெடு நாட்களாகத் தள்ளிப் போகும் பெண்கள், கொத்துமல்லிக் கீரையை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலன் தரும். 

http://www.vikatan.com/news/health/71927-the-foods-that-helps-to-get-pregnant.art

Link to comment
Share on other sites

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியவை... கூடாதவை! - நலம் நல்லது - 5! #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

 

Nalam%20logo%20new_18330.jpg

மருத்துவர் கு.சிவராமன் 

shutterstock_135457478_18138.jpg

னிப்பு மற்றும் பாலீஷ் செய்யப்பட்ட தானியங்களை அதிகமாகப் பயன்படுத்துவது, உணவுப் பண்பாட்டில் நடக்கும் ஒழுங்கின்மை, மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவது இவைதான் சர்க்கரைநோய் வருவதற்கு இன்றைக்கு முக்கிய காரணங்கள். 

சர்க்கரை நோயாளிகள் எதைச் சாப்பிடுவது நல்லது, எதைத் தவிர்க்கலாம்... தெரிந்துகொள்வோமா? 

சர்க்கரைநோய்க்கு அரிசி எதிரி என்பது உண்மையல்ல. இயற்கையான முறையில் விளைந்த பாரம்பர்ய கைக்குத்தல் அரிசி ரகங்கள் பெரும்பாலும் லோ கிளைசமிக் தன்மை உடையவை. வேகமாக ரத்தத்தில் சர்க்கரையைச் சேர்க்காதவை. கூடுதலாகக் கிடைக்கும் நார்ப் பொருளும், தவிட்டில் உள்ள `ஒரைசினால்' எனும் ஆன்டிஆக்சிடன்ட்களும் சர்க்கரைநோய்க்கு நல்ல பயன் தருபவை. விஷயம் நாம் சாப்பிடும் அளவில்தான் இருக்கிறது. அதிக உடல் உழைப்பு இல்லாமல், ஏசி காரில் போய், நாள் முழுக்க நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு அரிசி சோற்றின் அளவு குறைவாக இருப்பதுதான் நல்லது. 

* இன்றைக்குப் பெரும்பாலும் அரிசியும் கோதுமையும் பாலீஷ் செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகின்றன. வெளியிடங்களில் அரிசி உணவுதான் கிடைக்கிறது என்றால், அத்துடன் கீரை, காய்கறிகளைச் சேர்த்து, நன்கு பிசைந்து, மெதுவாக மென்று சாப்பிடுங்கள். சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தை கீரையின் நார்கள் மெதுவாக ஆக்கிவிடும். 

* தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, உருளைக்கிழங்கை! கேரட்டும் பீட்ரூட்டும் வேண்டவே வேண்டாம்.

shutterstock_80855992_18557.jpg

* கோவைக்காய், கத்திரிக்காய், அவரைப்பிஞ்சு, வாழைப்பூ, சுண்டை வற்றல், முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா... இவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கக்கூடியவை. பாகற்காயும் வெந்தயமும் சர்க்கரைநோய் கட்டுப்பட உதவுபவை. 

* நாருள்ள, இனிப்பு குறைவாகவும் துவர்ப்பு அதிகமாகவும் உள்ள பழங்களை தினமும் சாப்பிட வேண்டியது அவசியம். மாம்பழம், சப்போட்டா, மோரீஸ் வாழைப்பழம்... இன்னும் ஹைபிரிட் வாழை தவிர, மற்ற பழங்களை மருத்துவர் அறிவுரைப்படி, பிற உணவு இல்லாதபோது மாலை வேளைகளில் சாப்பிடலாம். 

* தோலுடன் கூடிய ஆப்பிள், துவர்ப்புச் சுவையில் இளம்பழுப்பு நிறத்தில் உள்ள கொய்யா, நாவற்பழம், துவர்ப்புள்ள மாதுளை நல்லது. 

* பால், இனிப்பு சேர்க்காத கிரீன் டீ அருந்துவதுதான் நல்லது. பாலுக்கு பதில் மோர் சாப்பிடலாம். 

* காலையில் முருங்கைக்கீரை வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்தமல்லி, வெந்தயம் சேர்த்த குடிநீரை அருந்தலாம். வெட்டி வேர் போட்ட பானை நீரும், சீரகத் தண்ணீரும் தினசரி உபயோகத்துக்கு நல்லது.

%20%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%

* மதிய உணவுக்கு... வாரத்துக்கு இரண்டு நாள் அரிசி சோறு, இரண்டு நாள் தினை அரிசி சோறு, இரண்டு நாள் வரகரிசி சோறு, ஒரு நாள் மாப்பிள்ளை சம்பா அவலில் செய்த உணவு நல்லது.

* இரவு உணவு... தினை ரவா உப்புமா, கேழ்வரகு அடை ஆகியவற்றை பாசிப் பயறு கூட்டுடன் சாப்பிடலாம். 

* காலை உணவு.. `பஜ்ரா ரொட்டி’ எனப்படும் கம்பு அடை, சிவப்பரிசி அவல் உப்புமா, கைக்குத்தல் அரிசிப் பொங்கல் என அளவாகச் சாப்பிடலாம். காலை உணவாக நம்ம ஊர் நவதானியத்தில் அல்லது சிறுதானியங்களில் செய்த உப்புமா, அடை சிறந்தவை. கஞ்சியாக செய்து குடிக்க வேண்டாம். கஞ்சி என்றால் சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகம் அதிகமாகிவிடும். அதை மட்டும் தவிர்க்கவும். 

http://www.vikatan.com/news/health/72056-foods-to-be-taken-and-to-be-avoided-by-diabetics.art

Link to comment
Share on other sites

உடல் எடை குறைக்க உன்னதமான வழிமுறைகள்! - நலம் நல்லது - 6! #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

 

Nalam%20logo%20new_17107.jpg

மருத்துவர் கு.சிவராமன் 

shutterstock_293919068_17420.jpg

ன்றைக்குக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை நீக்கமற நிறைந்து காணப்படுகிறது உடல்பருமன். ஏதோ எண்ணெயில் பொரித்த உணவும், அதிக இறைச்சியும் மட்டுமே உடல் எடையை உயர்த்துபவை அல்ல. துரித உணவுகளில் மறைமுகமாகக் காணப்படும் சர்க்கரை, கொழுப்பு, உப்பு மூன்றுமே உடல் எடை உயர்வதற்கு மிக முக்கியக் காரணிகள். இன்றைக்குச் சந்தையில் கிடைக்கும் குளிர் பானங்கள், கேக், இனிப்புப் பண்டங்கள் எல்லாவற்றிலும் இவை ஒளிந்திருக்கின்றன. இவற்றில் முக்கியமான ஓர் உணவு, பரோட்டா.

இன்று தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு பரோட்டா கடைகள் கிளைபரப்பியுள்ளன. பரோட்டா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மைதாவில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் ஆபத்தானவை; நம் உடல் எடையைக் கூட்டுபவை. குழந்தைகள் தொலைக்காட்சி முன் அமர்ந்து, கார்ட்டூன் பார்த்தபடி கண்ட நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதும் அவர்களின் உடல் எடை கூடுவதற்கும், அவர்கள் குண்டாவதற்கும் காரணம். சிறியவரோ, பெரியவரோ உடல் எடையைக் குறைக்க இங்கே சில வழிமுறைகள்... 

* `நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பதை மனதில்கொண்டு, ஆற அமர நொறுக்கி, உமிழ்நீர் சுரக்கச் சாப்பிடும் பழக்கம் உடல் எடையை உயர்த்தாது. 

* செல்போனில் பேசிக்கொண்டே சாப்பிடுவது, நின்றுகொண்டு, நடந்துகொண்டு சாப்பிடுவது என இல்லாமல், தரையில் சப்பணம் இட்டுச் சாப்பிடுவோருக்கு எடையும் தொப்பையும் வரவே வராது. 

* காலையில் காபி / தேநீருக்குப் பதிலாக, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, அரை டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். 

* காலை டிபனுக்கு நெய்யும் முந்திரியும் சேர்க்காத மிளகுத் தினைப் பொங்கல், காய்கறி சேர்த்த வரகரிசி உப்புமா பாத், கம்பு-சோள தோசை, கேழ்வரகு இட்லி இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம். இவற்றுக்குத் தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயச் சட்னி, தக்காளி சட்னி, பாசிப்பருப்பு சாம்பார் சிறந்தவை. 

* பகல் 11 மணிக்கு கிரீன் டீ அருந்தலாம்; கோடைகாலமாக இருந்தால் இரண்டு கப் மோர் நல்லது. 

* மதிய உணவில் தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஒரு கப்பில் சாதம் இருக்க வேண்டும். வெங்காயம் / தக்காளி / வெள்ளரி சாலட் / கீரைக் கூட்டு அதோடு ஏதோ ஒரு காய்கறி. இவற்றுக்குத் தொட்டுக்கொள்ள, புழுங்கல் அரிசி சாதம்! கிழங்கு, எண்ணெயில் பொரித்ததாக இருக்கக் கூடாது. காய்கறிகளில் துவர்ப்பு, கசப்பு நிறைந்திருக்கும் வாழைப்பூ, கோவைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* மாலை நேரத்தில் கொஞ்சம் சுண்டல், கொஞ்சம் தேநீர் சாப்பிட்டால், இரவு உணவை கணிசமாகக் குறைக்கலாம். 

%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88_17274.jpg

* இரவில் கேழ்வரகு ரொட்டி, கம்பு - சோள தோசை, முழுக்கோதுமையில் செய்த சப்பாத்தி... இப்படி ஏதாவது ஒன்றை உணவாகச் சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள கிழங்கில் செய்யப்படாத தொடுகறி போதும். 

* பால், வெள்ளைச் சர்க்கரை, பிஸ்கட், குக்கீஸ், ஐஸ்க்ரீம், குளிர் பானங்கள், துரித உணவுகள், இனிப்புப் பண்டங்கள் பக்கமே போகக் கூடாது. 

* இவற்றோடு வாரம் ஒரு நாள் வெறும் பழ உணவு, இன்னொரு வாரம் திரவ உணவு என இருந்தால் எடை நிச்சயம் குறையும். பழங்களில் அதிக இனிப்பு, உள்ள மாம்பழம், பலாப்பழத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.

http://www.vikatan.com/news/health/72160-easy-tips-to-lose-weight-at-home.art

Link to comment
Share on other sites

ஆண்களின் கவனத்துக்கு-நலம் நல்லது 7 #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

 

Nalam%20logo%20new_17114.jpg

கு.சிவராமன் 

shutterstock_115692961%20man_17467.jpg

`குடும்பக் கட்டுப்பாட்டுக்கு அவசியமே இல்லாமல், இயல்பாகவே மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை பல மடங்கு குறைந்து வருகிறது’ என்கின்றன சில மருத்துவ ஆய்வுகள். ஒரு மில்லி விந்து திரவத்தில் 60-120 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம் இப்போது இல்லை. `15 மில்லியன் இருந்தாலே பரவாயில்லை’ என மருத்துவம் இறங்கி வந்து ஆறுதல் சொல்கிறது. அதிலும் பெரும்பாலானவர்களுக்கு வெளியாகும் விந்தணுக்களில் 10 சதவிகிதம் மட்டுமே கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறதாம். `31 - 40 வயதுள்ள தம்பதிகளில் 46 சதவிகிதம் பேருக்குக் கருத்தரிப்புக்கான மருத்துவ உதவி தேவை’ என்கிறது இந்திய ஆய்வு ஒன்று. அதன் விளைவுதான் செயற்கைக் கருவாக்க மையங்கள் பெருகி வருவது. 

வாகனம் கக்கும் புகை, பிளாஸ்டிக் பொசுங்குவதால் பிறக்கும் டையாக்சின் மற்றும் வேறு பல காற்று மாசுக்களை கருத்தரித்த பெண் சுவாசிப்பது, அந்தப் பெண்ணின் கருவிலிருக்கும் ஆண் குழந்தையின் செர்டோலி செல்களை (பின்னாளில் அதுதான் விந்து அணுக்களை உற்பத்தி செய்யும்) கருவில் இருக்கும்போதே சிதைக்கிறதாம். மண்ணில் நாம் தூவிய ரசாயன உர நச்சுக்களின் படிமங்கள், இப்போது நம் உயிர் அணுக்களுக்கு உலை வைக்கின்றன. இப்படி ஆண்மைக் குறைவுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. தங்க பஸ்பம், சிட்டுக்குருவி லேகியம், காண்டாமிருகக் கொம்பு என கண்டதையும் தேடிப் போகாமல் கீரை, காய்கறி சாப்பிட்டாலே போதும், உயிர் அணு செம்மையாகச் சுரக்கும். 

ஆண்மையைப் பெருக்க வழிகள்..! 

* சித்த மருத்துவம் பல தாவர விதைகளை, மொட்டுக்களை, வேர்களை ஆண்மை அபிவிருத்திக்கான மருந்துகளில் அதிகம் சேர்க்கிறது. சப்ஜா விதை, வெட்பாலை விதை, பூனைக்காலி விதை, மராட்டி மொக்கு, மதன காமேஸ்வரப் பூ, அமுக்குராங்கிழங்கு, சாலாமிசிரி வேர், நிலப்பனைக் கிழங்கு என பெரிய பட்டியல் இருக்கிறது. நெருஞ்சி முள்ளின் சப்போனின்கள், விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செர்டோலி செல் பாதிப்பைச் சீராக்கும் என்கிறது மருத்துவத் தாவரவியல். பூனைக்காலி விதையும், சாலாமிசிரியும், அமுக்குராங்கிழங்கும் அணுக்களைப் பெருக்க டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களைச் சீராக்க எனப் பல பணிகள் செய்கின்றன. உடனே இவற்றைத் தேடி ஓடக் கூடாது. ஆண்மைக் குறைவு பிரச்னைக்கு காரணம் விந்தணு உற்பத்தியிலா, அது செல்லும் பாதையிலா அல்லது மனத்திலா என்பதை மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்த பிறகே முடிவு செய்ய வேண்டும். 

* வெல்கம் டிரிங்காக மாதுளை ஜூஸ், அதன்பிறகு, முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளை சம்பா சோற்றுடன் முருங்கைக்காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு... முடிவில் தாம்பூலம். இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு. 

%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%

* நாட்டுக்கோழி இறைச்சி காமம் பெருக்கும். 

* உயிர் அணு உற்பத்தியில் துத்தநாகச் சத்தின் (Zinc) பங்கு அதிகம். அதை பாதாம் பால்தான் தரும் என்பது இல்லை. திணையும் கம்பும் அரிசியைவிட அதிக துத்தநாகச் சத்துள்ளவை. 

* `காமம் பெருக்கிக் கீரைகள்’ எனப்படும் முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை பருப்பும் தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது விந்து அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். 

shutterstock_322544561_17263.jpg

* 5-6 முருங்கைப் பூக்களுடன் பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டால் உயிர் அணுக்களின் உற்பத்தியும் இயக்கமும் பெருகும். 

stockvault-bananas130078_17491.jpg

* செரட்டோனின் சுரக்கும் வாழைப்பழம், ஃபோலிக் அமிலம் கொண்ட ஸ்ட்ராபெர்ரி, ஃபீனால்கள் நிறைந்த மாதுளை தாம்பத்தியத்துக்கு பேருதவி செய்யும் கனிகள். 

* உடல் எடை அதிகரிப்பதால் புதைந்துபோகும் ஆண் உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக்குறைவும் (Erectile Dysfunction) ஆண்களுக்கான முக்கிய சிக்கல்கள். இரண்டையும் முறையான சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.   

* நல்லெண்ணெய்க் குளியல், பித்தத்தைச் சீராக்கி விந்து அணுக்களைப் பெருக்கும். 

* நீச்சல் பயிற்சி, ஆண்மையைப் பெருக்கும் உடற்பயிற்சி. 

* குடி, குடியைக் கெடுக்கும்; குழந்தையின்மையைக் கொடுக்கும். 

எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தரிப்பை, அழகான தாம்பத்திய உறவை சாத்தியப்படுத்த ஆணுக்கு அவசியத் தேவை உடல் உறுதி மட்டும் அல்ல, மன உறுதியும்தான்!

http://www.vikatan.com/news/health/72386-tips-to-improve-male-fertility.art

Link to comment
Share on other sites

மனஅழுத்தம் குறைக்க உதவும் உணவுகள்! நலம் நல்லது - 8! #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

 

Nalam%20logo%20new_18462.jpg

மருத்துவர் கு.சிவராமன் 

shutterstock_368051696%20%281%29_18104.j

சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் மனதின் வெளிப்பாடுதான் மனஅழுத்தம். அது மெள்ள மெள்ள உள நோயாக மாறும்போது சிலருக்குப் பயம், சிலருக்குப் புதிது புதிதான கற்பனைகள், சிலருக்குச் சந்தேகம், சிலருக்கு வெறுப்பு என வெவ்வேறு வடிவம் பெறும். அது நோயாக வடிவம் எடுக்காமல் தடுக்கத் தேவையான முக்கியக் காரணங்கள் இரண்டு. ஒன்று... கரிசனம் தரும் பேச்சு. மற்றொன்று... கனிவு காட்டும் முகமொழி. 

மன நோய்கள் ஆரம்பநிலையில் பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியவை. நாள்பட்ட நிலையிலும் கட்டுப்படுத்த முடியும். அதற்குத் தேவை ஒருங்கிணைந்த சிகிச்சை. உலக சுகாதார நிறுவனம், ‘உடல்நலம்’ என்பதை, `நலம் எனப்படுவது, உடல் நோயில்லாமல் இருப்பது மட்டும் அல்ல; மன நலமும் சமூக நலமும் சேர்ந்த நிலையே முழு உடல்நலம்’  என வரையறுத்திருக்கிறது. கால மாற்றம், நவீன வாழ்க்கைச் சூழலில் மனஅழுத்தம் என்பது எல்லோருக்கும் சகஜமான ஒன்றாக ஆகிவிட்டது. 

பல்வேறு மனஅழுத்த நோய்களுக்கு உறக்கம் இல்லாததே முதல் காரணம். ஆரோக்கிய வாழ்வுக்கு 6 முதல் 7 மணி நேர தடையில்லாத உறக்கம் தேவை. தூங்க ஆரம்பித்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் கனவு வருவதும், அதிகாலையில் விழிப்பதற்கு முன்னர் 5 முதல் 10 நிமிடங்கள் கனவு வருவதும் இயல்பான உறக்கத்துக்கான அறிகுறிகள். 

பெரும்பாலானவர்களுக்கு இரவு உறக்கத்திலும் அலுவல் மற்றும் குடும்பம் சார்ந்த நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும். இதுவும் மனஅழுத்தத்தின் அறிகுறிதான். தூங்கச் செல்வதற்கு முன்னர் இனிமையான, மகிழ்வான தருணங்கள் அவசியம். உடற்பயிற்சியும் பிராணாயாமப் பயிற்சியும் நிம்மதியான உறக்கத்தைத் தரும்.   

இங்கே மன அழுத்தம் குறைக்கும் உணவுகள் சில... 

* மாதுளம்பழச் சாற்றை வெள்ளைச் சர்க்கரை, ஐஸ் துண்டுகள் சேர்க்காமல் தினசரி அருந்தலாம். இதில் இருக்கும் நிறமிச் சத்து மன இறுக்கத்தைக் குறைக்க உதவும். 

OEMG2N0_18106.jpg

* மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இந்தச் சத்து குறைவினாலும், சீரற்ற நிலையிலும்தான் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன. வாழைப்பழம் மனஅழுத்தத்துக்கு நல்லது.

* உறங்குவதற்கு முன் ஒரு குவளைப் பாலில் அரை தேக்கரண்டி அமுக்கரா கிழங்குப் பொடி சேர்த்து, சூடாக அருந்தவும். நிம்மதியான தூக்கம் வரும். 

* பதற்றமும் கற்பனைகளும் நிறைந்த இரவுத் தூக்கத்தில் உழல்பவர்கள், ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம். நல்ல பலன் கிடைக்கும். 

%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%

* மனஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துவது நல்லது. 

* தினசரி இருமுறை குளிப்பது அன்றாட அழுக்கோடு மன அழுத்தத்தையும் நீக்கும். மனஅழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவரிடம்ன ஆலோசனை செய்து, அவர்களுக்காகவே பிரத்யேகமாக உள்ள பிரமித் தைலம், அசைத் தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது நல்லது. 

* எண்ணெயில் பொரித்த உணவுகள் பித்தத்தைக் கூட்டும்; செரிக்கவும் நீண்ட நேரம் ஆகும். தந்தூரி உணவுகளை மனஅழுத்த நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை. 

* உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் குழந்தைகளுக்கு கவனச் சிதைவு நோயை ஏற்படுத்தக் கூடியவை. நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். 

http://www.vikatan.com/news/health/72390-best-foods-for-stress-relief.art

Link to comment
Share on other sites

மெனோபாஸ் பெண்களுக்கு நலம் டிப்ஸ்! நலம் நல்லது - 9! #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

 

Nalam%20logo%20new_15479.jpg

மருத்துவர் கு.சிவராமன் 

shutterstock_181003538_15170.jpg

பெண்களுக்கு 47 - 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில், மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவது நின்றுபோகும். `இனிமேல் இந்த மூன்று நாள் அவஸ்தை இல்லை’ என்கிற விடுதலை உணர்வைத்தான் தர வேண்டும். உண்மையில், இந்த விடுதலை உணர்வு கிடைப்பது 35 சதவிகிதத்துக்கும் குறைவான, ஆரோக்கியமான உடல்வாகைப் பெற்றிருக்கும் பெண்களுக்கு மட்டுமே. மீதமுள்ள 65 சதவிகிதம் பெண்கள் படும் அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. தலைவலி, வாந்தி, வயிற்று வலி, வயிற்று உப்புசம் என பல பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். கூடவே தனிமை உணர்வு, மற்றவர்கள் தன்னை உதாசீனப்படுத்துகிறார்களோ என்கிற எண்ணம் எல்லாம் சேர்ந்து மனதுக்கும் நிம்மதியின்மையைத் தந்துவிடும். 

இனிமேல் கருமுட்டை வேண்டாம் என உடல் நிறுத்திக்கொள்ளும் இந்தப் பருவத்தில்தான் எலும்புகளின் கால்சியம் அடர்வு குறைய ஆரம்பிக்கிறது. கால் மூட்டுகளில், கழுத்து - இடுப்பு எலும்புகளில் கால்சியம் குறையும். சாதாரணமாக தினமும் 1,000 மி.கி கால்சியம் தேவைப்பட்டால், மெனோபாஸ் சமயத்தில் 1,250 மி.கி வரை அவசியம். மாதவிடாய் முடியும் நேரத்தில் கால்சியம் மட்டும் போதாது; அதை கிரகிக்க வைட்டமின் டி சத்தும் தேவை. 

நலம் டிப்ஸ்... 

* பாலில் கால்சியம் கிடைக்கும். ஆனால், அதன் பக்கவிளைவுகளைக் கருத்தில்கொண்டால் மோரே சிறந்தது. ஒரு குவளை மோரில் 250 மி.கி கால்சியம் கிடைக்கும். 

shutterstock_120938632_15145.jpg

* சில வகை கீரைகள், வெண்டைக்காய், சோயாபீன்ஸ், தோலுடன்கூடிய உருளைக்கிழங்கு, அத்திப்பழம், பாதாம் பருப்பு, இவற்றில் கால்சியம் உண்டு. 

shutterstock_70079539_15504.jpg

* சூரிய ஒளியில் வளரும் காளான்கள், மீன், முட்டை, இறைச்சி, ஈரல் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிகம் உண்டு. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

shutterstock_35469682_15263.jpg

* உடற்பயிற்சி மிக அவசியம் இதுவரை நடைப்பயிற்சி செய்யாதவர்கள்கூட இனி அவசியம் செய்ய வேண்டும். உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பவை. 

* மனப் பதற்றம், பயம், படபடப்பு, திடீர் வியர்வை அவஸ்தைகளுக்கு பிராணாயாமம் மற்றும் ‘சூரிய வணக்கம்’ யோகாசனப் பயிற்சி செய்வது நல்ல பலன் தரும். சூரிய வணக்கம் செய்வது உடலின் ஆறு சக்கரங்களை வலுப்படுத்தி, ஹார்மோன்களைச் சீராக்க உதவும். 

* உணவில் 30 சதவிகிதம் பழங்களாக இருக்கட்டும். சிவந்த நிறமுள்ள மாதுளை, கொய்யா, பப்பாளி ஆகியவை கர்ப்பப்பை புற்றுநோயையும் மார்பகப் புற்றுநோயையும் தடுப்பவை. 

* ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த தொலியுள்ள உளுந்து, நவதானியக் கஞ்சி, `டோஃபு’ எனப்படும் சோயா கட்டி, இரும்புச்சத்து நிறைந்த கம்பு, கால்சியம் நிறைந்த கேழ்வரகு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* பால் சேர்க்காத தேநீர், அதிலும் கிரீன் டீ அருந்துவது நல்லது. தேநீரைக் கஷாயம் போடுவதுபோல் காய்ச்சி எடுக்கக் கூடாது. அது தேநீர் தரும் பலன்களைக் குறைத்துவிடும். கொதிக்கும் வெந்நீரில் தேயிலையைப் போட்டு 4 - 5 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு வடிகட்டி ஆறவைத்துக் குடிக்க வேண்டும். 

மாதவிடாய் நின்றுபோகும் பருவத்தில் உள்ள பெண்களுக்கான தினசரி உணவுப் பட்டியல்... 

* காலை - நீராகாரம் அல்லது தேநீர்... முந்தைய தினம் ஊறவைத்த பாதாம் பருப்பு இரண்டு. 

* காலைச் சிற்றுண்டி - கம்பு, சோள, உளுந்து மாவில் சுட்ட தோசையுடன் பிரண்டை சட்னி அல்லது வெங்காயச் சட்னி. அத்திப்பழம் இரண்டு, ஒரு வாழைப்பழம். 

* மதிய உணவு - கருங்குறுவை அல்லது மாப்பிள்ளை சம்பா அல்லது கவுனி அரிசி அல்லது வரகரிசியில் சோறு. வாழைத்தண்டு பச்சடி, பீன்ஸ், அவரை, சிவப்பு கொண்டைக்கடலை சேர்ந்த தொடுகறிகள். முருங்கை / பசலைக் கீரை, சுரைக்காய் கூட்டு, சுண்டைக்காய் வற்றல் மற்றும் குதிரைவாலி மோர் சோறு. 

* மாலை - முருங்கைக்காய் சூப் உடன் ராகி பனைவெல்ல உருண்டை, நவதானியச் சுண்டலுடன் தேநீர். 

* இரவு - கேழ்வரகு தோசை அல்லது உளுந்து கஞ்சி. (குடும்ப மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும் பால் சேர்த்துக்கொள்ளலாம்). 

இவற்றை மட்டும் தினமும் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இந்த உணவுப் பழக்கத்தை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களாவது அமைத்துக்கொள்வது மெனோபாஸ் பருவத்தை மென்மையாகக் கடக்க வைக்கும். 

http://www.vikatan.com/news/health/72588-healthy-tips-for-women-who-attained-menopause.art

Link to comment
Share on other sites

ஜீரணத்தை சீராக்கும் வழிமுறைகள்! நலம் நல்லது-10! மருத்துவர் கு.சிவராமன் #DailyHealthDose

 

Nalam%20logo%20new_10276.jpg

 

shutterstock_46380667_10102.jpg

 

சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, மாரை அடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால் வந்த நெஞ்செரிச்சலாக இருக்கலாம். ஜீரணம் என்பது, உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கிற செயல்பாடு. இலையில் பிடித்த பதார்த்தத்தைப் பார்த்ததும், உமிழ்நீர் சுரப்பதில் ஆரம்பிக்கும் ஜீரணம் சரியாக நடைபெற, பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும். நினைத்தபோது, நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள். செரிமானக் கோளாறுகள் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை என்பதை கவனத்தில் கொள்வோம். 

இனி, ஜீரணத்தை சீராக்க சில வழிமுறைகள்...

* ஆரோக்கியமான உடலுக்கு இரு நேர சிற்றுண்டியும், ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. இரு சிற்றுண்டிகளில் ஒரு வேளை (இரவு அல்லது காலை) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவும் இருப்பது சிறப்பு.  

ஜீரணத்தை

* காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தைக் குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல் பொங்கல் அல்லது உப்புமா, கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிறு குழந்தைகளாக இருந்தால் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி நல்லவை. வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல் அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளித் துண்டுகள், இளம் பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு சாப்பிடலாம். ஜீரணத்தை சீராக்கும்.

* மதிய உணவில் நிறையக் காய்கறிகள், கீரைக் கூட்டு / கடைசல் இவற்றுடன் அரிசி உணவை அளவாகச் சாப்பிட வேண்டும். 

* அதிகக் காரத்தைத் தவிர்க்கவும். காய்ந்த மிளகாய் பயன்படுத்தவேண்டிய உணவுகளில், அதற்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்த வேண்டும். 

* ஜீரணத்தை எளிதாக்க, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்ப்பது நல்லது. 

* சரியான நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். 

* அவசியமின்றி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. 

* எப்போதும் டென்ஷனுடன் இருப்பவர்களுக்கு ஜீரணக் கோளாறு வந்துவிடும். மனதை லகுவாக வைத்திருக்கவும். 

* புகை, மது இரண்டும் கேன்ஸரை வயிற்றுப்புண் வழியாக அழைத்து வருபவை. இரண்டையும் தவிர்க்கவும். 

* காலை உணவில் இட்லிக்கு பிரண்டைத் துவையல் நல்லது. 

* துவரம்பருப்பு சாம்பாருக்கு பதிலாக பாசிப்பருப்பு சாம்பார் செய்து சாப்பிடலாம். 

p94a_10403.jpg

* வெள்ளைக் கொண்டைக்கடலைக்குப் பதில், சிறு சிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தலாம். அதுவும்கூட குறைந்த அளவில், மிளகு சீரகம் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். 

* காலை 11 மணிக்கு நீர் மோர் இரண்டு டம்ளர் அருந்தலாம். 

* மதிய உணவில் காரமில்லாத, பாசிப் பயறு சேர்த்த கீரைக் குழம்பு, தேங்காய்ப் பால் குழம்பு (சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் இரண்டு குவளை சீரகத் தண்ணீர் அருந்துவது ஜீரணத்தை எளிதாக்கும். 

* இரவில் வாழைப்பழம், ஆவியில் வேகவைத்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடவும்

* கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைத் தவிர்க்கவும். அதிக அளவிலான மாம்பழமும் பலாப்பழமும்கூட வாயுவை உண்டாக்கும். 

* சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சம பங்கு, உப்பு பாதிப் பங்கு சேர்த்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்புப் பொடிபோல் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது. சாப்பிட்டதும் வயிற்று உப்புசம் வருபவர்களுக்கு இந்த அன்னப்பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, மோருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். உடனடியாக வாயு விலகி, வயிற்று உப்புசம் நீங்கும். 

* சித்த மருத்துவரிடம் கிடைக்கும் ஜீரண சஞ்சீவி, சீரக விவாதி மருந்துகள் அஜீரணத்தை அகற்ற உதவுபவை. 

* தினமும் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.

அடுப்பங்கரையில் கொஞ்சம் அக்கறை காட்டினால் அஜீரணத்தை வெல்லலாம்! 

http://www.vikatan.com/news/health/72703-tips-for-easy-digestion.art

Link to comment
Share on other sites

சிறுநீரகம் காக்க சிறப்பான யோசனைகள்! நலம் நல்லது - 11 #DailyHealthDose

 

Nalam%20logo%20new_12028.jpg

kidney-pain_12425.jpg

சிறுநீரகங்கள் நம்முடைய துப்புரவுத் தொழிற்சாலை. கிட்டத்தட்ட 10 லட்சம் நெஃப்ரான்களை (ஃபில்டர்கள் உள்ள அமைப்பு) உள்ளடக்கியது சிறுநீரகம். நீரை மட்டுமல்ல... தேவைக்கு அதிகமான உப்பு, உடலுக்குள் புகுந்துவிட்ட நச்சுக்கள், தேவைக்கு மீந்துவிட்ட மருந்துக்கூறுகள் எல்லாவற்றையும் வெளித்தள்ள, வைட்டமின் டி தயாரிப்பு, ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்காக `எரித்ரோபாய்டின்’ (Erythropoietin) உற்பத்திசெய்வது, ரத்த அழுத்தம் சீராக இருக்க ‘ரெனின்’ சுரப்பை அளவோடு தருவது... என சிறுநீரகம் செய்யும் பணிகள் மிகப்பெரியது. நம் இதயத்தைப்போலவே ஓயாமல் வேலை செய்துகொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம்.

தற்போது சர்க்கரைநோயின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வரும் இன்னோர் அபாயம், சிறுநீரகம் தொடர்பான நோய்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறும்பட்சத்தில், பின்னாளில் அது சிறுநீரகத்தை பாதிக்கும் வாய்ப்பு அதிகம். அடிக்கடி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுய வைத்தியம் செய்துகொள்ளுதல்... என சிறுநீரகம் பாதிக்க வேறு காரணங்களும் உள்ளன. எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 

இங்கே சிறுநீரகங்களைக் காக்க சில யோசனைகள்... 

* மற்ற நோய்களுக்கு இல்லாத அளவுக்கு சிறுநீரக நோய்களுக்கு உணவில் மிகுந்த கவனம் தேவை. உணவுக் கட்டுப்பாடு அவசியம். அதில் அலட்சியமாக இருப்பது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். இன்றுவரை சிறுநீரகச் செயலிழப்பை குணப்படுத்த மருந்துகள் இல்லை. நோயின் தீவிரத்தைத் தள்ளிப் போடத்தான் முடியும். எனவே, சிறுநீரகத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எந்த விஷயத்துக்கும் இடம் கொடுக்கக் கூடாது. 

சிறுநீரகம்

* தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டியது அவசியம். எவ்வளவு வேலை, பணிச்சுமையாக இருந்தாலும் இதை மறக்கக் கூடாது. சிறுநீரகச் செயல் இழப்பு வந்தால், டாக்டர் பரிந்துரைத்த அளவு மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும்.

* சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவும் வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளை வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

வாழைத்தண்டு சூப்

* 40 வயதை நெருங்கிவிட்டீர்களா? அதிக உப்பைத் தவிர்ப்பது நல்லது. அதிக உப்பு, சிறுநீரகச் செயல்பாட்டுக்கு சிரமம் கொடுக்கும். 

* சிறுநீரக நோய் இருப்பவர்கள், உணவில் நீர், புரதம், சோடியம் மற்றும் பொட்டாசியம் உப்புக்கள், இரும்புச்சத்து ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடலில் இருந்து எந்த அளவுக்கு சிறுநீர் வெளியேறுகிறதோ, அதைப் பொறுத்து நீர் அருந்தும் அளவை மருத்துவர் குறிப்பிட்டுக் கொடுப்பார். அதை அப்படியே பின்பற்ற வேண்டும். ரத்தத்தில் இருந்தும், சிறுநீரில் இருந்தும் வெளியேறும் உப்பின் அளவைப் பொறுத்தே நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவும் இருக்க வேண்டும்.

* புரத உணவைப் பொறுத்தவரை காய்கறியில் இருந்து கிடைக்கும் புரதம்தான் சிறந்தது. சிக்கனில் இருந்து கிடைக்கும் புரதத்தைவிட பாசிப்பயறில் இருந்து கிடைக்கும் புரதம் சிறுநீரக நோயாளிகளுக்கு ஏற்றது. ஏனென்றால், சிக்கனில் புரதத்துடன் உப்புக்களும் கூடுதல் அளவில் உள்ளே வந்துவிடும். பயறில் கிடைக்கும் புரதத்தில் அந்தப் பயம் இல்லை. 

* சோடியமும் பொட்டாசியமும் குறைந்த அளவில் உள்ள பழங்களைச் சாப்பிட வேண்டும். வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனியைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் பொட்டாசியம் அதிகம். 

* பைனாப்பிள், பப்பாளி, கொய்யா ஆகியவை குறைந்த அளவு பொட்டாசியச் சத்து உள்ளவை. இவற்றைச் சாப்பிடலாம். 

* கேரட், பீட்ரூட், காலிஃபி்ளவர், நூல்கோல், பருப்புக்கீரை இவற்றில் சோடியம் அதிகம் உள்ளது. இவற்றையும் உணவில் தவிர்க்க வேண்டும். 

* காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டு, நன்கு வேகவைத்து, பிறகு அந்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இப்படியான சமையல் முறை அதிக அளவில் உப்பை உணவில் தங்காமல் பார்த்துக்கொள்ளும். 

* வெண்ணிறப்பூவான சிறுகண்பீளை, நீர்முள்ளிச் செடி, நெருஞ்சி முள், பூனை மீசைச்செடி ஆகியவற்றை தேர்ந்தெடுத்து தேநீராக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறுநீரக நோயாளிகளுக்கு நல்ல பயன் தரும். 

* சரியான உடற்பயிற்சி, யோகா மற்றும் பிராணாயாமம், மருத்துவரின் அறிவுரைப்படி முறையான சிகிச்சை, உணவில் கட்டுப்பாடு ஆகியவை மட்டுமே சிறுநீரக நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். 

சிறுநீரக நோயாளிகள் கூடுதல் அக்கறையோடு தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வது நல்லது. 

http://www.vikatan.com/news/health/72914-tips-to-protect-our-kidneys.art

Link to comment
Share on other sites

நல்லனவெல்லாம் தரும் சுக்கு! நலம் நல்லது-12 #DailyHealthDose

 

Nalam%20logo%20new_14496.jpg

7786144_m_14139.jpg

தென் தமிழகத்தில் பிரபலமான சொலவடை ஒன்று உண்டு... ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை. சுப்பிரமணியனை மிஞ்சிய சாமி இல்லை.’ சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இவற்றில் மட்டுமல்ல… சீன மருத்துவத்திலும், ஜப்பானின் கம்போ மருத்துவத்திலும், கொரியனின் சுஜோக் மருத்துவத்திலும் முதன்மையான இடம் சுக்குக்கு உண்டு. சிவப்பு இந்தியர்களும் சுக்கை தங்கள் மருத்துவத்தில் பிரதானமான பொருளாக வைத்திருக்கிறார்கள். இது, இஞ்சியாக இருக்கும்போது அலாதியான பல மருத்துவப் பயன்களைக் கொடுக்கும்; காய்ந்து சுக்கானதும் வேறு பல நல்ல பலன்களைக் கொடுக்கும்.

`காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் அருந்த…’ என சித்த மருத்துவப் பாடலே உண்டு. காலை பல் துலக்கியதும் இஞ்சியையும், மதியம் சுக்குத் தூளையும் உணவுக்கு முன் எடுத்துக்கொள்வதன் மூலம், நோய்கள் பலவற்றை நம்மை அணுகாமல் காத்துக்கொள்ள முடியும் என்கிறது இந்தப் பாடல். இனி, சுக்கின் பலன்களைப் பார்ப்போம்… 

* பித்தத்தைச் சீராக்காவிட்டால், குடல் புண்கள் ஏற்படும். மலச்சிக்கல் உண்டாகும். வயிற்று உப்புசம், தலைவலியோடு ரத்தக்கொதிப்பும் ஏற்படும். உளவியல் சிக்கலுக்குக்கூட அடித்தளம் இடும். சுக்குத்தூள் ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னைகளை வேரறுக்கும் ஒன்று. சுக்கு, பித்தத்தை சமன்படுத்தும். 

* லேசான காய்ச்சல் தலைவலிக்கு சுக்குத்தூளை வெறும் தண்ணீரோடு கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். சில சமயங்களில் சுக்கு, குழந்தைகளின் தோலைப் புண்ணாக்கிவிடும். எனவே, எட்டு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த சுக்கு பற்றுப் போடக் கூடாது. 

சுக்கு காபி

* சுக்கு, கொத்தமல்லி விதை இரண்டையும் சம அளவு எடுத்து, காபித்தூள் போலப் பயன்படுத்தி கஷாயம் செய்து, அதனுடன் பனைவெல்லம் சேர்த்து, வாரம் இருமுறை மாலை வேளைகளில் சாப்பிடலாம். அஜீரணம் உள்ளவர்களுக்கு அந்தப் பிரச்னை ஓடிப்போகும். 

* பித்தத்தால் வருவது மைக்ரேன் தலைவலி. அதோடு இலவச இணைப்பாக வயிற்றுவலியும் வந்துவிடும். சுக்குத்தூள் மைக்ரேன் தலைவலிக்கு மிகச் சிறந்த மருந்து. மூன்று சிட்டிகை சுக்குத்தூளைத் தேனில் குழைத்து, உணவுக்குப் பின் காலையும் மாலையும் என 45 நாட்கள் சாப்பிட்டுவர, தலைவலி காணாமல் போய்விடும். 

இஞ்சி

* இஞ்சியின் மேல்தோலை சீவி, சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறப்போட்டு, காலையில் அந்தத் தேனோடு சேர்த்துச் சாபிட்டால் தலைவலி சரியாகும். 

* சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய நாட்களிலும், மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலும் பித்தத் தலைவலி வரும். இதற்கு மருந்தாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ‘இஞ்சி ரசாயனம்’ நல்ல மருந்து.

* கருவுற்ற காலத்தில் வரும் பித்த வாந்திக்கு, மிகச் சிறிய அளவு சுக்குத்தூளை எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும். 

* சிலருக்கும் பயணத்தின்போதும், மலைப் பயணத்தின்போதும் குமட்டல் ஏற்படும். அதற்கு சுக்குத்தூள் சிறந்த மருந்து. 

* சுக்குக் கஷாயத்தை நல்லெண்ணெயில் காய்ச்சி, சுக்குத்தைலம் தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் வேறு சில மூலிகைகளோடு கலந்தும் சுக்குத்தைலம் கிடைக்கும். இதைத் தலையில் தேய்த்தால், சைனஸால் வரும் தலைவலி சரியாகிவிடும். 

* காதுக்குள் இரைச்சல் கேட்கும் பிரச்னை (Minears), காதில் சீழ் கோக்கும் நோய் (CSOM), காது இரைச்சலால் தடுமாற்றம் (வெர்டிகோ) பிரச்னைகளுக்கு சுக்குத்தைலம் தேய்த்துக் குளிப்பது நல்ல பலனைத் தரும். 

* 25 ஆண்டுகளுக்கு முன்பே நியூயார்க் அகாடமி ஆஃப் சயின்ஸ், சுக்கு பக்க விளைவு இல்லாத தலைவலி மருந்து என்பதை உறுதிசெய்திருக்கிறது. 

இஞ்சி ரசாயனம் செய்முறை

இஞ்சி 50 கிராம், சீரகம் 50 கிராம் எடுத்துக்கொள்ளவும். இஞ்சியின் மேல்தோலை சீவி, சிறு துண்டுகளாக்கவும். அதன் ஈரத்தன்மையைப் போக்க, மின்விசிறிக் காற்றில் உலர்த்தி எடுக்கவும். ஒரு வாணலியில் சிறுதுளி நெய்விட்டு, இஞ்சியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். சீரகத்தையும் துளி நெய்யில் வறுக்கவும். வறுத்த இஞ்சி, சீரகம் இரண்டையும் பொடித்துக்கொள்ளவும். 100 கிராம் பனைவெல்லம் அல்லது நாட்டு வெல்லத்தில் இந்தப் பொடியைச் சேர்த்துக் கிளறி, ஒரு பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக்கொள்ளவும். இஞ்சி ரசாயனம் தயார். 

http://www.vikatan.com/news/health/73057-health-benefits-of-dry-ginger.art

Link to comment
Share on other sites

கறிவேப்பிலை… தூக்கி எறியாதீர்! நலம் நல்லது-13 #DailyHealthDose

Nalam%20logo%20new_17157.jpg 

DSC_5036_17483.JPG

வெண்பொங்கல், ரசம், கூட்டு, பொரியல்… எதுவாகவும் இருக்கட்டும். சாப்பிடும்போது நம் கை தானாக ஒன்றைத் தூக்கிப் போட்டுவிடும். அது, கறிவேப்பிலை. உண்மையில், இது வேம்பைப் போன்ற மகத்துவமுள்ள மருத்துவ மூலிகை. உச்சி முதல் பாதம் வரை அனைத்தையும் காக்கும் அற்புத மருந்து!

* இதை நிழலில் உலர்த்தி, பொடித்தால் அதுதான் கறிவேப்பிலைப் பொடி. தினமும் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால், தலைமுடி கொட்டுவதைத் தவிர்க்கலாம். 

Kariveppilai%20podi_17333.jpg

* கரிசாலை, நெல்லி, கீழாநெல்லி, அவுரி இவற்றுடன் சமபங்கு கறிவேப்பிலைச் சாறு சேர்த்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம்.  

* இது, பீட்டாகரோட்டின் நிறைந்தது. பார்வைத்திறனை மேம்பட வைக்கும். 

* இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை, புற்றுநோயை எதிர்க்கும் திறன் உடையவை. புற்றுநோய்க் கட்டியின் வேகமான வளர்ச்சியைக் குறைப்பதிலும், புற்றுக்கட்டி உருவாவதைத் தடுப்பதிலும் கறிவேப்பிலை பயன் அளிக்கிறது என்பதை நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. உடனே, புற்றுநோய்க்கு இதன் சட்னி நல்ல மருந்து என நினைத்துவிடக் கூடாது. கறிவேப்பிலையை துவையலாக, பொடியாக, குழம்பாக உணவில் சேர்த்து வந்தால், சாதாரண செல்கள் திடீர் எனப் புற்றாக மாறுவதைத் தடுக்கலாம்.

* அஜீரணம், பசியின்மை, பேதி முதலியவைதான் குடல் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள். இவற்றுக்கெல்லாம் கறிவேப்பிலையைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என நம் சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

* இதன் பொடியை சோற்றின் முதல் உருண்டையில் போட்டுப் பிசைந்து, சாப்பிட்டால் ஜீரணத்தைத் தூண்டி, பசியூட்டும். சரியாக சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு, கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது கல் உப்பு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து, சுடுசோற்றில் போட்டுக் கலந்து சாப்பிட வைத்தால் பசியின்மை போகும். 

* சிலருக்கு சாப்பிட்டவுடன் மலம் கழிக்க வேண்டும்போலத் தோன்றும். வெளியே கிளம்புவதற்கு முன்னர் மலம் கழித்துவிட்டு வந்துவிடலாம் என எண்ணுவார்கள். இது, இர்ரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் எனப்படும் கழிச்சல் நோய். இதற்கு இது நல்ல மருந்து. சுண்டை வற்றல், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சம பங்கு எடுத்து, பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். இந்தப் பொடியை கால் டீஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் போட்டு சாப்பிட்டால், கழிச்சல் நோய் படிப்படியாக கட்டுக்குள் வரும். இதேபோல், அமீபியாசிஸ் கழிச்சல் நோய்க்கும் இந்தப் பொடி பயன் தரும். 

கறிவேப்பிலை

* கறிவேப்பிலையில் கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் நிறைந்துள்ளன. இந்த ஆல்கலாய்டுகள்தான் சர்க்கரைநோய், மாரடைப்பு நோய்களில் மருந்தாகப் பயன்படவைக்கின்றன. 

* உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்க, உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலான ஹெச்.டி.எல்-ஐ (HDL - High Density Lipoprotien) சாதாரண மருந்தால் உயர்த்துவது கடினம். நடைப்பயிற்சி இதற்கு சிறந்த வழி. அதேபோல கறிவேப்பிலையும் நல்ல கொலஸ்ட்ராலை உயர்த்த உதவும். 

* சர்க்கரைநோய், கொலஸ்ட்ராலுக்கு என்ன மருந்து சாப்பிட்டாலும் கூடவே தினமும் கறிவேப்பிலையைச் சாப்பிட்டு வந்தால், இந்த இரு நோய்களுக்கும் செயல்பாடு உணவாக (Functional Food) கறிவேப்பிலை இருக்கும். 

கறிவேப்பிலை மணமூட்டி… நம் உடலுக்கு நலமூட்டவும் செய்யும். எனவே… கறிவேப்பிலையை ஒதுக்காதீர்! 

http://www.vikatan.com/news/health/73165-health-benefits-of-curry-leaf.art

Link to comment
Share on other sites

மூட்டுவலி... வைக்கலாம் முற்றுப்புள்ளி! நலம் நல்லது–14 #DailyHealthDose

Nalam%20logo%20new_17019.jpg

மூட்டுவலி

மூட்டுவலி இப்போது வயதானவர்களுக்கு மட்டும் வருவது இல்லை. இளைஞர்கள்கூட அதிக அளவில் மூட்டுவலி என்று மருத்துவமனைக்கு வரத் தொடங்கிவிட்டனர். இடுப்பில் வலி, கால் மூட்டில் வலி, தோள் மூட்டில் வலி, கழுத்து வலியோ… அப்படியே பரவி பின்பக்க தோள், முன்கை, முழங்கை வலி… என இளமையில் விரட்டும் மூட்டுவலி இன்று ஏராளம். இன்றைய மாடர்ன் கிச்சனால் மறந்துபோன பாரம்பர்யம், கூடிவிட்ட சொகுசு கலாசாரம், வாழ்வியல் மாற்றங்கள்தான் மூட்டுக்களை (Joints) இளமையிலேயே வலுவிழக்கச் செய்கின்றன. அவற்றின் வலுவைக் கூட்டி, நம் வாழ்வை உற்சாகத்துடன் ஓடவைக்க(!) என்ன செய்யலாம்? 

* உங்களால் நம்ப முடியுமா? ஒரு மாருதி காரைத் தாங்கும் வலு நம் ஒவ்வொரு கால் மூட்டுக்கும் உண்டு. ஆனால், அதற்கான உணவும் உழைப்பும் சீராக இருந்திருக்க வேண்டும். இளம் வயதிலிருந்தே உணவில் சரியான அளவில் கால்சியம், இரும்புச்சத்து, துணை கனிமங்கள் சேர்ந்த ஆரோக்கிய உணவுகளை அன்றாடம் சேர்ப்பதுதான் மூட்டுப் பாதுகாப்பில் தொடக்கப் புள்ளி. 

மோர்

* ஒன்று முதல் ஒன்றரை வயது வரை கட்டாயமாகத் தாய்ப்பால். பிறகு ஆறிலிருந்து எட்டு வயது வரை கண்டிப்பாக தினசரி நவதானியக் கஞ்சி, கீரை சாதம், அடிக்கடி தேங்காய்ப்பால் சேர்த்த காலை உணவு, மோர், பீன்ஸ், அவரை, டபிள் பீன்ஸ், வெண்டைக்காய், கேரட் என காய்கறி கலந்த மதிய உணவு மிக மிக அவசியம். 

* குழந்தையை தினசரி இரண்டு மணி நேரம் வியர்க்க வியர்க்க விளையாட விட வேண்டும். கம்ப்யூட்டர், மொபைல் விளையாட்டு அல்ல… கில்லியோ, கிரிக்கெட்டோ நன்றாக ஓடி வியர்க்க விளையாடும் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். கிரிக்கெட்டைக் காட்டிலும், வியர்க்க வியர்க்க ஓடி, ஆடி விளையாடும் எந்த விளையாட்டும் உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்கும். மூட்டுகளை உறுதிப்படுத்தும்.  

shutterstock_227098135_17184.jpg

* செல்ல தொப்பை, உடல்பருமனுடன் குழந்தை இருக்கிறானா? அவனை குடும்ப மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு போய் ஊளைச்சதை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால், அதிக உடல் எடைதான் பெரும்பாலான மூட்டுவலிக்கு முக்கியக் காரணம். 

* அதிக புளிப்பு, மூட்டுகளுக்கு நல்லதல்ல. புளி அதிகம் சேர்க்கப்படும் புளிக்குழம்பு, காரக்குழம்பு, புளியோதரை இவற்றை மூட்டுவலி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. `புளி துவர் விஞ்சின் வாதம்’ என்கிறது சித்த மருத்துவம்… கவனம்! 

* `மண் பரவு கிழங்குகளில் கருணையின்றி பிற புசியோம்’ என்று வாயுவை விலக்கி நோய் அணுகாமல் இருக்கவும் வழி சொல்கிறது சித்த மருத்துவம். எனவே, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், உருளைக்கிழங்கு பொடிமாஸ், வாழைக்காய் பொரியல் என வாயுத் தன்மையுள்ள மெனுக்களை மூட்டுவலிக்காரர்கள், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் விலக்கவேண்டியது அவசியம். 

* வலி நிவாரணிகள் பக்கம் அதிகம் போகாமல் இருக்கவேண்டியது மிக முக்கியம். பல வலி நிவாரணிகளை கண்டபடி நெடுநாட்களுக்குப் பயன்படுத்தினால், அவை நிச்சயம் சிறுநீரகத்தைப் பாதிக்கும். 

* வலி நீங்க சித்த மருத்துவத் தைலங்களைப் பயன்படுத்துவது நல்லது. 

எண்ணெய் மசாஜ்

* எண்ணெய் மசாஜ், மூட்டுவலிகளுக்கு மிகச் சிறந்தது. வலியுள்ள மூட்டு தசைப்பகுதியில் நிறைந்திருக்கும் நிண நீரை (Lymphatic Drainage) வெளியேற்ற, எண்ணெய் மசாஜ் சிகிச்சை சிறந்தது. ஆனால், சரியான, திறமையான சிகிச்சை அளிப்பவரை அதற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

* `ஸ்பாண்டிலோசிஸ்’ எனப்படும் கழுத்து, முதுகுப்பக்க தண்டுவட எலும்பின் மூட்டுக்கிடையிலான தட்டுகள் விலகலோ (Disc Prolapse), நகர்வோ இருப்பின் சரியான நோய்க் கணிப்பும், சிகிச்சையுடன்கூடிய உடற்பயிற்சி, பிசியோதெரப்பி, எண்ணெய் மசாஜ் மிக அவசியம். 

* தினசரி 40 நிமிட நடை. பின்னர் 15 நிமிட ஓய்வு. தொடர்ந்து 30 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய சூரிய வணக்கம் முதலான 4 அல்லது 5 யோகாசனங்கள், கால்சியம் நிறைந்த கீரை, புளி, வாயுப் பொருட்கள் குறைவான உணவு இவற்றுடன் கண்டிப்பாக ஒரு குவளை மோர், ஒரு கிண்ணம் பழத்துண்டு, மாலையில் 30 – 45 நிமிட நடை… போதும், மூட்டுவலி உங்களிடம் இருந்து விலகி ஓடும்.

http://www.vikatan.com/news/health/73260-how-to-get-rid-of-arthritis-pain.art

Link to comment
Share on other sites

ரத்தசோகைக்கு விடைகொடுப்போம்! நலம் நல்லது–15 #DailyHealthDose

Nalam%20logo%20new_18481.jpg

ரத்தசோகை

புற்றுநோய் தொடங்கி, வாய்க்குள் நுழையாத எத்தனையோ நோய்கள் வரை கவலைப்படும் நாம், அதிகம் அலட்சியமாக இருந்துவிடும் ஒரு பிரச்னை உண்டு... அது `அனீமியா’ என்று சொல்லப்படும் ரத்தசோகை! சரி... ரத்தசோகையின் அறிகுறிகள் என்னென்ன? கண்கள், நாக்கு, நகம், உள்ளங்கை இவையெல்லாம் வெளிறிப்போயிருக்கும்; படபடப்புடன் இதயம் துடிக்கும்; நடந்தால் மூச்சிரைக்கும்; ஆயாசம், சோர்வு, எதிலும் பிடிப்பில்லாத வெறுப்பு போன்றவை ரத்தசோகையின் குணங்கள். இந்த அறிகுறிகள் எல்லாமே நம் ரத்தத்தில் இரும்புச்சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவில் குறைந்த பின்னர்தான் தெரியவரும். லேசான சோகையில், பெரும்பாலும் எந்தக் குணங்களும் தெரிவதில்லை. ரத்தசோகைக்கான காரணங்களையும் தீர்வுகளையும் பார்ப்போம்... 

* ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்குத்தான் ரத்தசோகை தொந்தரவு அதிகம் வரும் வாய்ப்பு உண்டு. மாதவிடாயின்போது ஏற்படும் இரும்புச்சத்து இழப்பு, கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் என பெண்களுக்கான பிரத்யேக செயல்பாடுகளிலேயே அதிக அளவில் இரும்புச்சத்து இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மாதவிலக்கில், அதிக ரத்தப்போக்கு அல்லது மாதவிடாயில் ரத்தமே போகாமல் இருப்பது என இரண்டுக்குமே சோகை நோய் ஒரு காரணம். மாதவிடாய்க் கோளாறுகள் பலவற்றுக்கும் சோகையே முதல் காரணம். 

* சரியான உணவு இல்லாமை, ஊட்டச்சத்து குறைந்த உணவு இவையே ரத்தசோகைக்கு மிக முக்கிய காரணங்கள். மூல நோயில் ஏற்படும் ரத்த இழப்பு, சிறுநீரக நோய்கள், ஈரல் நோய்கள், வயிற்றுப் பூச்சிகள், சில புற்றுநோய்கள்... என மற்ற நோய்களாலும் ரத்தசோகை ஏற்படலாம். 

* முதலில், ரத்தசோகை இருக்கிறதா என்பதை மருத்துவர் உதவியுடன் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். ரத்தசோகையை உணவின் மூலமே சரியாக்கிவிட முடியும். அதற்கான முதல் தேர்வாக கீரை இருக்கட்டும். சிறுகீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, பசலைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை இவை அனைத்திலுமே இரும்புச்சத்து அதிகம் உண்டு. சந்தையில் கிடைக்கும் கீரைகளில் முக்கியப் பிரச்னை அதில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள்தான். வாய்ப்புள்ளவர்கள், கீரைகளை வீட்டிலேயே வளர்த்து, அன்றாடம் பறித்துப் பயன்படுத்துவது நல்லது. சமையலறைக் கழிவுகளும், இயற்கை உரங்களும், வேப்பெண்ணெய் தூவலும் உங்கள் கீரைகளைப் பாதுகாப்போடு, கூடுதல் சத்துடன் வளர்க்க உதவும். 

எள் உருண்டை

* எள், பனைவெல்லம் இரண்டையும் இரும்புச் சுரங்கங்கள் என்றே சொல்லலாம். இவற்றில் கிடைக்கும் இரும்புச்சத்து, நம் குழந்தைகளுக்கு அவசியமானது. குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே எள் உருண்டையின் மீது பிடிப்பை உருவாக்கிவிட வேண்டும். 

* கம்பு, வரகு இரண்டிலும் இரும்புச்சத்து மிக மிக அதிகம். இந்த பாரம்பர்ய தானியங்களைக்கொண்டு கம்பஞ்சோறும் வரகரிசிச் சோறும் செய்து சாப்பிடலாம். இவை மட்டுமல்ல... இந்த பாரம்பர்ய தானியங்களைக்கொண்டு புலாவ், பிரியாணி, கிச்சடி, கஞ்சி என எது வேண்டுமானாலும் செய்ய முடியும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்காவது இதுபோன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* பாசிப்பயறு, தொலி உளுந்து, சிவப்பு கொண்டைக்கடலை, முளைகட்டிய தானியங்களில் இருந்து கிடைக்கும் சத்துக்களும் இரும்புச்சத்தை ஜீரணிக்க உதவுபவை. 

மாதுளை

* ரத்தசோகை உள்ளவர்கள், தினமும் காய்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரிய நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சத்து, இரும்புச்சத்தை கிரகிக்க உதவும். 

பெரிய நெல்லிக்காய்

* சில இரும்புச்சத்து மருந்துகள் வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, ரத்தசோகைக்கு சித்த மூலிகை மருந்துகளே சிறப்பானவை. 

* அனீமீயா மூலமாக அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு போன்ற பிற நோய்கள் ஏற்பட்டிருந்தால், வெறும் சத்து மாத்திரை மட்டும் போதாது; அவற்றுக்கான சிகிச்சையும் அவசியம். 

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது ஒவ்வொருவரும் தங்கள் ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தின் அளவைப் பரிசோதனை செய்து, தெரிந்துகொள்ள வேண்டும். 

ரத்தசோகை அலட்சியப்படுத்தவேண்டிய ஒன்று அல்ல; அக்கறையோடு உடனே அலசவேண்டிய பிரச்னை! 

http://www.vikatan.com/news/health/73348-say-goodbye-to-anemia.art

Link to comment
Share on other sites

எதிர்ப்பு சக்திக்கு எளிய மருந்து... மிளகு! நலம் நல்லது–16 #DailyHealthDose

Nalam%20logo%20new_17232.jpg

shutterstock_23263582_17529.jpg

ம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் சுக்குக்கு அடுத்த இடம் மிளகுக்குத்தான். 16-ம் நூற்றாண்டு வரை, உணவில் காரம் சேர்க்க மிளகுதான் பயன்பட்டது. அயல்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு மிளகாய் அறிமுகப்படுத்தப்படும் வரை, மிளகைத்தான் பயன்படுத்தினோம். `மிளகாய்’ என்ற சொல்லே மிளகில் இருந்து வந்ததுதான். மிளகு+ஆய் என்பதுதான் மிளகாய் ஆனது. அதாவது, மிளகைப் போன்றது என்று பொருள். மிளகில் இருக்கும் பைப்பரின் (Piperine), பைப்பரிடைன் (Piperidine) என்கிற இரு மருத்துவப் பொருட்கள், பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் தன்மை கொண்டவை. இயல்பாகவே, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருள் இது. நாமோ வெளிநாட்டு மிளகாயை அரியாசனத்தில் வைத்துவிட்டு, நம்ம ஊர் மிளகை, மருத்துவப் பயன் மிக்க அற்புதமான பொருளை சூடான சூப்புக்கும், ஆம்லெட்டுக்கும், பெப்பர் சிக்கனுக்கும், வெண்பொங்கலுக்கும் என ஒதுக்கிவிட்டோம்.

* ’பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் உண்ணலாம்’ என்று ஒரு பழமொழி உண்டு. நாம் அறியாமல், நம் உடலில் நச்சு செலுத்தப்பட்டால்கூட, அதை முறியடிக்கும் சக்தி இதற்கு உண்டு. நச்சுப்பொருளை அறியாமல் தீண்டினாலோ முகர்ந்தாலோ ஏற்படும் பல்வேறு உடனடி அலர்ஜி தொந்தரவுகளை, மிளகு உடனடியாக முறியடிக்க உதவும். 

மிளகு

* அலர்ஜியால் ஏற்படும் மூக்கடைப்பு, தும்மல், சில நேரங்களில் ஏற்படும் தோல் அரிப்பு, திடீர் தோல் படைகள், கண் எரிச்சல், மூக்கு நுனியில் ஏற்படும் அரிப்பு, மூச்சிரைப்பு போன்ற அலர்ஜி நோய்களை விரட்டும் ஆற்றல் கொண்டது மிளகு. 

* பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி ஏற்பட்டால், அதை வெளியேற்ற இருமல் உண்டாகும். அதுபோன்ற நேரங்களில், கடைகளில் இருமல் மருந்தை வாங்கிக் கொடுப்பது தவறு. பெரும்பாலான இருமல் மருந்துகள், இருமலை உடனடியாக நிறுத்தி, சளியை உள்ளுக்குள்ளேயே உறையவைத்து, நோயைக் குணப்படுத்த முடியாமல் செய்துவிடும். இதற்கு மிளகு மிகச் சிறந்த மருந்து. மிளகு, சளியை இளக்கி வெளியேற்றி, இருமலைக் குறைக்க உதவும். நான்கு மிளகைப் பொடித்து, ஒரு டீஸ்பூன் தேனில் குழைத்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் கலந்து இரவில் கொடுத்தால், சளி வெளியேறி இருமலை நிறுத்தும். சில நேரங்களில் வாந்தியில்கூட சளி வெளியேறும். அதற்காகப் பயந்துவிடக் கூடாது. அதே நேரம், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது. 

மிளகு ரசம்

* தோலில் ஏற்படும் திடீர் தடிப்புக்கு, மிளகுக் கஷாயம் நல்ல மருந்து. 

* தலையில் ஏற்படும் புழுவெட்டுக்குச் சின்ன வெங்காயம், மிளகு இரண்டையும் அரைத்து, வெளிப்பூச்சாகப் பூசினால், பிரச்னை சரியாகும். 

* பனிக்காலத்தில் நெஞ்சுச் சளி கட்டாமல் இருக்க, எல்லா வயதினரும் தினமும் உணவில் மிளகைக் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள், மிளகை தினமும் ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்து வந்தால், இளைப்பின் தீவிரம் குறையும். 

மிளகுக் கஷாயம் செய்வது எப்படி?

தேவையானவை:

அறுகம்புல் - கைப்பிடி, மிளகு - 6, வெற்றிலை - 2. 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, மூன்றையும் போட்டுக் கொதிக்க வைக்கவும். அது அரை டம்ளராக வற்றியதும் எடுக்கவும். இதை பாதிக்கப்பட்டவருக்குக் கொடுத்தால், தோல் அரிப்பு படிப்படியாகக் குறையும். 

http://www.vikatan.com/news/health/73477-pepper-improves-body-immunity-system.art

Link to comment
Share on other sites

யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் ? #MustKnow

 

 

தண்ணீர்

நமது உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. மனிதன் சாப்பிடாமல் சில வாரங்கள்கூட உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம். நாம் தினமும் சாப்பிடும் உணவில் இருந்தே ஒரு நாளில் நம் உடலுக்குத் தேவையான 25 சதவிகிதத் தண்ணீர் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் எழும். இவ்வளவு தண்ணீர்தான் குடிக்க வேண்டும் எனப் பொதுவாகக் கூறமுடியாது. காலநிலை, வயது, உடற்கூறு, நோய்களின் பாதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் தண்ணீர் குடிக்கும் அளவு  மாறுபடும். எந்தெந்த வயதினர் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம், சர்க்கரை, இதய நோய்கள் உள்ளவர்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம், ஆர்ஓ வாட்டர், ஃபிரிட்ஜில் வைத்த குளிர்பானகள் நல்லதா, தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.

 

dietician%20krishnamurthy_17128.jpgயார் யார் எவ்வளவு லிட்டர் நீர் குடிக்கலாம் ?
 

  • கைக்குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மூலமாகவே உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைத்துவிடும். ஆறு மாதத்திற்கு பிறகு, குழந்தைக்கு போதுமான குடிநீரை தரவேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தண்ணீர் தாகம் ஏற்படாது. தாய்மார்கள் அவ்வப்போது தண்ணீர் கொடுத்துப் பழக்க வேண்டும்.
  • 3-6 வயதுள்ள குழந்தைகளுக்கு, அவர்களது தேவைக்கு ஏற்ப அவ்வபோது குடிநீரை குடிக்க சொல்லி பழக்க படுத்தலாம்.
  • வளரும் குழந்தைகளின் உடலுக்குத் தண்ணீரை உறிஞ்சும் சக்தி அதிகம். 6 - 10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறுவர் / சிறுமியர் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரியும் 20 - 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது.
  • நடனக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள், டிரெயினரின் வழிகாட்டுதலின் படி ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.
  • வயதாக ஆக, பசி, தாகம் ஏற்படும் உணர்வு குறையும். வெயில் காலங்களில் வயதானவர்கள் கண்டிப்பாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 70 வயதுக்கு மேல் தாகம் எடுக்கும் உணர்வு அவ்வளவாக இருக்காது. அவர்கள் தாகம் எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

shutterstock_169428596_DC_17597.jpg

 

  • சிறுநீரக செயல்இழப்பு காரணமாக டயாலிசிஸ் செய்துகொள்பவர்கள் தண்ணீர் அதிகம் அருந்தக்கூடாது. சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதால், தண்ணீர் வெளியேறாமல், நுரையீரல், கால் என உடலில் தங்கி பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, மருத்துவர் பரிந்துரையின் பேரில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களுக்குச் சிறுநீர் அதிகமாகப் பிரியும். சிறுநீர்ப்பையின் கொள்ளளவு 800 - 900 மி.லி அளவே இருக்கும். அதனால், இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சிறிதளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
  • சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக குறைந்தது ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாலை ஆறு மணிக்கு மேல் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது. இரவில் அதிகமாகத் தண்ணீர் குடித்தால், தூங்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். இதனால், தூக்கம் தடைப்படும்.

 

 

shutterstock_288003482_17316.jpg

 

  •  
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்று இல்லை... சர்க்கரை சேர்க்காமல் எலுமிச்சைச் சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ், இளநீர் ஆகியவற்றைக் குடிக்கலாம். கார்பனேட்டட் பானங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். திராட்சை ஜூஸ், மாம்பழ ஜூஸ் போன்றவற்றை அளவுடன் சேர்க்கலாம். ஜூஸைவிட  பழங்களாக சேர்த்து கொள்வது பெஸ்ட்.
  • சிறுநீரகம், சிறுநீர்ப்பைக் கற்கள் பாதிப்பு உள்ளவர்கள், கட்டாயம் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • வெயிலில் அலைந்து திரியும் பணியில் உள்ளவர்கள், தண்ணீர் குடிக்காமல் இருந்தால் தலைசுற்றல், மயக்கம், கல்லீரல் வீக்கம், கால் வீக்கம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்கள் தினமும் நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 

 

shutterstock_324342278_17434.jpg

 

தாகம் போக்க குளிர்பானங்கள் குடிக்கலாமா ?

சோடா, கோலா பானங்களைத் தவிர்த்து இளநீர், நுங்கு, தர்பூசணி, பூசணிக்காய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், எலுமிச்சைச் சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சைப் பழ ஜூஸ் உள்ளிட்டவற்றை வெயில் காலங்களில் தண்ணீரோடு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டைக் கட்டுப்படுத்தலாம்.

சைனஸ், பற்கள் பிரச்னை உடையவர்கள், எலுமிச்சைச் சாற்றைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல சிட்ரஸ் பழங்களையும் தவிர்க்கலாம்.

ஃபிரிட்ஜில் வைத்த தண்ணீரைக் குடிக்கலாமா ?

வெயில் காலங்களில் நாம் குளிர்ந்த நீரை அதிகம் விரும்புவோம். குளிர்த்த நீரை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து அப்படியே குடிக்கக் கூடாது. நமது உடல் தசைகள் அதீதக் குளிர்ச்சியை உடனே ஏற்றுக்கொள்ளாது. இதனால், பற்கூச்சம் ஏற்படலாம். மிதமான குளிர்ச்சி உள்ள தண்ணீரையே பருகவேண்டும். முடிந்தவரை குளிர்ச்சியான நீரை தவிர்த்துவிட்டு மண் பானை குடிநீருக்கு பழகலாம்.

 

shutterstock_178846439_DC_17061.jpg

ஆர்ஓ வாட்டர் குடிக்கலாமா ?

பெருநகரங்களில் இன்று ஆர்.ஓ பிளான்ட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இது, தண்ணீரில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழிப்பதோடு, உடலுக்குத் தேவையான தாதுக்களையும் சேர்த்து அழித்துவிடுகிறது. ஆர்ஓ சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீரைவிட, கொதிக்கவைத்து ஆறவைத்தத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக, நல்ல தண்ணீர் குழாய்கள் வழியாக பிளாஸ்டிக் குடங்களில் பிடித்துச் சேகரித்த தண்ணீரைக் கட்டாயம் கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும். இதன் மூலம் நல்ல சத்துக்கள் இழக்க நேரலாம். இதற்கு மாற்றாக, தாதுஉப்புக்ள் நிறைந்த கீரை மற்றும் நீர்க்காய்கறிகள், பழவகைகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

  • ரத்த ஓட்டம் சீராகும்.
  • சிறுநீரகச் செயல்பாடு மேம்படும்.
  • மலச்சிக்கல் தவிர்க்கப்படும்.
  • செரிமானம் எளிதாகும்.
  • உடல் வெப்பம் கட்டுக்குள் இருக்கும்.
  • தசை இறுக்கம் தளர்ந்து நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்.
  • உடலில் அமிலத்தன்மை கட்டுக்குள் வரும்.
  • தலைசுற்றல், படபடப்பு நீங்கும்.

 

எப்போது தண்ணீர் குடிக்கக் கூடாது ?


சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரும் பின்னரும் அதிகமாக தண்ணீரை குடிக்கக் கூடாது. வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலத்தைத் தண்ணீர் நீர்த்துப் போகச்செய்யும். இதனால், செரிமானம் தாமதப்படும். டயட் இருக்கும் சிலர் குறைவாகச் சாப்பிடுவதற்காக இவ்வாறு செய்வார்கள். இது தவறு. தாகம் ஏற்படும்போதெல்லாம் கட்டாயம் நீர் அருந்த வேண்டும்

http://www.vikatan.com/news/health/73675-how-much-water-can-we-consume-per-day.art

Link to comment
Share on other sites

ஆரோக்கியம் காக்க உதவும் பழக்கங்கள்! நலம் நல்லது–17 #DailyHealthDose

Nalam%20logo%20new_18508.jpg

நலம் காக்க உதவும் பழக்கங்கள்

ன்றைய அறிவியல் தேடலுக்குச் சற்றும் குறைவில்லாத, உலக நாகரிகத் தொட்டிலான தமிழ் மரபு கற்றுத்தந்த நலப் பழக்கங்கள் ஏராளம். கலோரி கணக்கிலும், காப்புரிமை சூட்சுமத்துக்குள்ளும் நவீன உணவாக்கம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், எதைச் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் சொல்லாமல், எப்படிச் சாப்பிட வேண்டும், எதற்குச் சாப்பிட வேண்டும் என எப்போதோ எழுதிவைத்த மரபு நம் மரபு மட்டும்தான். 

1,800 ஆண்டுகளுக்கு முன்னரே ஆசாரக் கோவை நூலில், `முன்துவ்வார் முன்னெழார் தம்மிற் பெரியார் தம்பாலிருந்தக்கால்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் நம் பெரியோர். அதாவது, நம்மைவிட வயதில் பெரியவர் நம்மோடு உணவருந்தினால், அவர்கள் சாப்பிட்டு எழுவதற்கு முன்னதாக நாம் எழுந்துவிடக் கூடாது. இது உணவு அறிவியல் கிடையாது; ஆனால், அதைவிட உயர்ந்த உணவுக் கலாசாரம். அதேபோல, `தலை தித்திப்பு, கடை கைப்பு’ எனச் சாப்பிடச் சொன்ன முறையில், இனிப்பை முதலில் சாப்பிடச் சொல்கிறது நம் பண்பாடு.

இது, விருந்தோம்பலில் மகிழ்வைத் தெரிவிக்கும் பண்பாட்டுக்கு மட்டுமல்ல; அந்த இனிப்பு, ஜீரணத்தின் முதல் படியான உமிழ்நீரை முதலில் சுரக்கவைக்கும் என்பதற்காகவும்தான். இப்படி எத்தனையோவிதங்களில் நம் மரபு நமக்கு உதவியிருக்கிறது. உதாரணமாக, நம் ஊர் நடைவண்டியையே எடுத்துக்கொள்வோமே... இதில் பக்கவாட்டுப் பிடி இல்லாததால், நடைக்கான தசைப் பயிற்சியை, இடுப்பு கால்தசைக்கு ஏற்றவாறு தந்து குழந்தையின் நடையைச் செம்மையாக்கும்! இப்படி பேசிப் பேசி தீராத எத்தனையோ விஷயங்கள் நம் பண்பாட்டில் கலந்து வந்திருக்கின்றன. `பதார்த்த குண சிந்தாமணி’ எனும் பழம்பெரும் சித்த மருத்துவ நூல் அற்புதமான சில நலவாழ்வுப் பழக்கங்களை எடுத்துச் சொல்கிறது. அவற்றைக் கடைப்பிடிப்பது எளிது; பின்பற்றினால் நம் ஆரோக்கியமும் மேம்படும். அப்படி நாம் கடைப்பிடிக்கவேண்டிய பழக்கங்கள்... செய்யக் கூடாத விஷயங்கள் என சில உண்டு. அவை...  

எண்ணெய்க் குளியல்

கடைப்பிடிக்கவேண்டிய பழக்கங்கள்...

* ஒரு நாளைக்கு இரு முறை மலம் கழிக்க வேண்டும். 

* வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும்.

* 45 நாட்களுக்கு ஒரு முறை மூக்கில் மருந்து (Nasal Drops) விட வேண்டும். 

* நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிட வேண்டும்; குடல் சுத்தமாகும். 

* வருடத்துக்கு இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிட வேண்டும். 

செய்யக் கூடாத விஷயங்கள்... 

* முதல் நாள் சமைத்த உணவு அமுதமாகவே இருந்தாலும் சாப்பிடக் கூடாது. 

 

266109_18356.jpg

* கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.

கருணைக்கிழங்கு

* ஒரு நாளைக்கு இரண்டு பொழுதுகள் மட்டுமே சாப்பிட வேண்டும். மூன்று வேளை சாப்பிடக் கூடாது. (இன்றைக்கு உடல் உழைப்பு குறைந்துவிட்ட காலகட்டத்தில், உணவை ஆறு வேளையாக பிரித்துச் சாப்பிட அலோபதி பரிந்துரைக்கிறது.)

* பசிக்காமல் உணவு உண்ணக் கூடாது. 

* தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், வாந்தி, இருமல், ஆயாசம், தூக்கம், கண்ணீர், உடலுறவில் சுக்கிலம், கீழ்க்காற்று, மூச்சு இவற்றை அடக்கக் கூடாது. 

கண்டிப்பாக பின்பற்றவேண்டிய பழக்கங்கள்... 

* உணவு சாப்பிட்ட பிறகு சின்னதாக ஒரு நடை (குறு நடை) நடந்துவிட்டு வருவது நல்லது. 

* நீரைச் சுருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்ண வேண்டும். (அதாவது, தண்ணீரை கொதிக்கவைத்து, ஆற வைத்து சுத்தமான நீராக குடிக்க வேண்டும். தயிரில் ஆடையை நீக்கி, நீர்த்த மோராக குடிக்க வேண்டும். நெய்யை எப்போதும் உருக்கிய பிறகே, உணவில் சேர்க்க வேண்டும்.) 

வாழைப்பழம்

* வாழைப்பழத்தை கனிந்த பழமாகச் சாப்பிடாமல், இளம் பிஞ்சாகப் பார்த்து சாப்பிடுவது நல்லது. 

* எண்ணெய்க் குளியலின்போது, குளிர்ந்த நீரில் அல்லாமல், வெந்நீரில் குளிக்க வேண்டும்.

http://www.vikatan.com/news/health/73684-healthy-habits-for-healthier-life.art

Link to comment
Share on other sites

மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? நலம் நல்லது–18 #DailyHealthDose

Nalam%20logo%20new_17256.jpg

மலச்சிக்கல்

`காலைக் கடன்’... இந்த வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை. உடனே இந்தக் கடனை பைசல் செய்யாவிட்டால், வட்டியைக் குட்டியாகப் போட்டு வாழ்வையே சிதைத்துவிடும். மலச்சிக்கல், கடன் சுமையைப்போல பல நோய்களைப் பிரசவித்து, நம் நல்வாழ்வுக்கே சிக்கலைத் தந்துவிடும். இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அலங்காரமாக விற்கப்படும் `ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை, நம் ஜீரண நலத்துக்குச் சிக்கலை ஏற்படுத்துபவை. காலை எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை. 

நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகியவலியுடன் கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் ‘மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பர்ய மருத்துவம் அனைத்துமே, எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகின்றன. ‘கட்டளைக் கலித்துறை’ நூல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்கிறது. சித்த மருத்துவ, `நோய் அணுகா விதி’, மலத்தை அடக்கினால் ஏற்படும் பின் விளைவுகளைச் சொல்கிறது... 

`முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும் 
தலைவலி மிக உண்டாகும் 
சத்தமானபான வாயு பெலமது குறையும் 
வந்து பெருத்திடும் வியாதிதானே...’ என்கிறது.
 

மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை, நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான் முக்கியமான முதல் படியாக சித்த மருத்துவமும், தமிழர் வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன. 

இனி, மலச்சிக்கல் தீர கவனிக்கவேண்டிய விஷயங்கள்... 

*வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம் எனும் மனோபாவம் எல்லோரிடமும் வலுத்து வருகிறது. இது தவறு. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்வோர் வரை பலருக்கும் காலைக் கடன் கழிப்பது கடைசிபட்சமாகிவிட்டது. பின்னாளில் இதுவே பழக்கமாகி, காலைக்கடன் பலருக்கும் மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது. இப்படி, `அதுதான் போகுதே... அப்புறமென்ன?’ என அலட்சியப்படுத்துவதுதான் பல நோய்களுக்கும் ஆரம்பம். காலைக் கடனை காலையிலேயே தீர்த்துவிடுவதே சிறந்தது. 

shutterstock_384445108_17139.jpg

* அதிகாலையில் மலம் கழிப்போருக்குத்தான், பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்; வாயுத்தொல்லை இருக்காது; அறிவு துலங்கும். 

* `சாப்பிட்ட சாப்பாட்டுல கொஞ்சம் துவர்ப்பு கூடிருச்சோ... அதனாலதான் மலச்சிக்கலோ...’ என வீட்டிலுள்ள பெரியவர்கள் யோசிப்பார்கள். அடுத்த முறை வாழைப்பூ சமைக்கும்போது, அளவைக் குறைத்து சமைப்பார்கள். இந்தச் சமையல் சாமர்த்தியம், `டூ மினிட்ஸ்’ சமையலில் கைகூடாது. எனவே, துரித உணவை கொஞ்சம் ஓரமாக வைப்பதே நல்லது. 

வாழைப்பூ

* பாரம்பர்யப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத `அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே சங்கடப்படுத்தும். எனவே, வாயுவையும் அடக்கக் கூடாது. 

* பள்ளிவிட்டு வந்ததும், புத்தகக் கட்டோடு நேரே கழிப்பறைக்கு ஓடும் குழந்தைக்கு, மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசியெடுக்கும். பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திரும்பக்கொண்டு வந்துவிடுவார்கள். எனவே, குழந்தைகளை காலைக்கடனைப் பின்பற்றச் செய்யவேண்டியது அவசியம். 

* நாள்பட்ட மூட்டுவலி, பக்கவாதம், தோல் நோய்கள் அனைத்துக்கும் உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி கொடுப்பார்கள். இது பல ஆயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு வருடத்துக்கு இரண்டு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வது நல்லது. அதற்காக அதைக் கடையில் வாங்கி எடுத்துக்கொள்ளக் கூடாது. குடும்ப மருத்துவரிடம் சென்று, நாடி பார்த்து, உடல் வலிமை பார்த்து, உடலுக்கு ஏற்ற பேதி மருந்தை எடுப்பதே நல்லது. 

* இரவில் படுக்கப்போவதற்கு முன்னர் இளஞ்சூடான நீர் இரண்டு டம்ளர் அருந்துவதும், காலை எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு டம்ளர் சாதாரண நீர் அருந்துவதும் நல்லது. 

கிஸ்மிஸ்

* குழந்தைகளுக்கு 5-10 உலர் திராட்சைகளை (கிஸ்மிஸ், அங்கூர் திராட்சை) 2-3 மணி நேரம் மாலையில் ஊறவைத்து, பின் அதை நீருடன் நன்கு பிசைந்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். 

* கடுக்காய் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுத்து, பொடித்த பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு முதியோர் சாப்பிடலாம். மலம் கழிப்பது எளிதாகும். 

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த தூள் (விதை நீக்கிய பின்), ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய மிக முக்கிய மருந்து; உன்னதமான உணவு. மாலையில் இந்தப் பொடியை மாலையில் ஒரு டீஸ்பூன் வரை சாப்பிட்டால், காலையில் மலத்தை எளிதாகக் கழியவைக்கும். பல ஆரோக்கியங்களை உடலுக்குத் தரும். இதை `திரிபலா பொடி’ என்றும் சொல்வார்கள். 

மலச்சிக்கல் தீர விரும்புகிறவர்கள் முக்கியமாகத் தவிர்க்கவேண்டியது ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான்... கவனத்தில் கொள்க!

http://www.vikatan.com/news/health/73760-tips-to-avoid-constipation.art

Link to comment
Share on other sites

சர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்? நலம் நல்லது–19 #DailyHealthDose

Nalam%20logo%20new_19524.jpg

shutterstock_22357846_19316.jpg

8,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கும் இனிப்புப் பொருள், தேன்! சர்க்கரையை ஒதுக்க விரும்புகிறவர்கள் முதலில் தேர்ந்தெடுக்கவேண்டியது தேன். இதுவும் இனிப்புத்தான். ஆனால், இனிப்பைத் தாண்டி ஏராளமான நலக்கூறுகள்கொண்ட அமிழ்தம் இது. 200-க்கும் மேற்பட்ட நொதிகள், இரும்பு முதலான கனிமங்களுடன் கூடிய இந்தக் கூட்டுச் சர்க்கரையில், தேனீ எந்தப் பூவின் மகரந்தத்தில் இருந்து தேனைச் சேகரித்ததோ, அந்த மலரின், தாவரத்தின் மருத்துவக் குணத்தையும் தன்னுள்கொண்டிருப்பதுதான் தேனின் தனிச் சிறப்பு. 

தேன்

சாதாரணமான வெள்ளைச் சர்க்கரை, புண்ணை அதிகரிக்கச் செய்யும். தேன், ஆறாத புண்ணையும் ஆற்றும். குறிப்பாக, தீப்புண்ணுக்கு தேன் நல்ல முதலுதவி மருந்து. தேன் ஓர் எதிர் நுண்ணுயிரி. `புற்றுநோயைக்கூடத் தடுக்கக்கூடிய வல்லமை தேனுக்கு உண்டு’ என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். ஒவ்வொரு சீஸனிலும் பெறப்படும் தேனுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. வெட்பாலை பூக்கும் சமயத்தில், பாலைத் தேன் கிடைக்கும். வேம்பு பூக்கும் நேரத்தில், கசப்பான வேம்புத் தேன் கிடைக்கும். ஒவ்வொரு மலையைப் பொறுத்தும் தேனின் மருத்துவக் குணங்கள் விசேஷப்படும். பொதிகை மலை, கொல்லி மலைத் தேனுக்கு மருத்துவக் குணம் அதிகம். நியூசிலாந்தில் கிடைக்கும் மனுக்கா தேன், உலகப் பிரசித்தி பெற்றது. 

சரி, தேனை எப்படிச் சேர்த்துக்கொள்வது? 

* ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன், அதாவது 10 கிராம் அளவு தேனை எடுத்துக்கொள்ளலாம். 

242149_19514.jpg

* தேனை அப்படியே தனியாக சாப்பிடலாம். தண்ணீரிலோ, டீயிலோ, பாலிலோ கலந்தும் சாப்பிடலாம். நெல்லிக்காய், இஞ்சியுடன் இணைத்தும் சாப்பிடலாம். 

* தண்ணீரில் தேனைக் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்; வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல. அதிக வெப்பநிலையில் உள்ள பொருட்களுடன் தேனைச் சேர்க்கக் கூடாது. அது, தேனின் மகத்துவத்தைக் குறைத்துவிடும். 

* சர்க்கரைநோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா? வேண்டாம். பொதுவாகவே, சர்க்கரைநோய்க்காரர்கள், தேனோ, வெல்லமோ, கலோரி இல்லாத இனிப்பு ரசாயனங்களோ.... சேர்த்துக்கொள்ளக் கூடாது. கசப்பைக் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். 

* `இனிப்பு என்றாலே தேனும் பனைவெல்லமும்தான்’ என சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும். 

* இஞ்சியின் மேல் தோலை சீவி சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்துவிட வேண்டும். இதை `இஞ்சித் தேனூறல்’ என்பார்கள். இந்த இஞ்சித் தேனூறலை தினமும் காலையில் அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மைக்ரேன் தலைவலி மட்டுப்படும். 

* சாதாரணத் தலைவலியா? சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளவும். இதை தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போய்விடும். 

உடலுக்கு ஒவ்வாத வெண் சர்க்கரையைத் தவிர்ப்போம். அதற்கு பதிலாக தேன் அல்லது பனைவெல்லம் சேர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்!

http://www.vikatan.com/news/health/73867-benefits-of-honey-instead-of-sugar.art

Link to comment
Share on other sites

அள்ள அள்ள ஆரோக்கியம்... அசத்தல் கேழ்வரகு! நலம் நல்லது 20 #DailyHealthDose

Nalam%20logo%20new_17434.jpg

கேழ்வரகு

ரிசி தோசைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம்? கேழ்வரகுதான் சிறந்த தேர்வு. கேழ்வரகு, அரிசியைப்போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் தானியம். அரிசியில் செய்யக்கூடிய இட்லி, தோசை, இடியாப்பம்... என அத்தனைப் பண்டங்களையும் இதிலும் செய்ய முடியும். அதே நேரம், நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத் தேவை இல்லை. உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக்காத உணவுச் செறிவை கேழ்வரகு பெற்று இருப்பதுதான் அதன் சிறப்பு. கேழ்வரகுக்கு உரம் போட்டால், வேகமாக செடி உயரமாக வளர்ந்துவிடும். கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். அதனால் உரம் போட மாட்டார்கள். எனவே, எந்தக் கடையில் கேழ்வரகை வாங்கினாலும், இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட தானியம் என நம்பி வாங்கலாம். 

193793_17550.jpg

கேழ்வரகு பிறந்தது ஆப்பிரிக்காவில்! அதிக விலை இல்லாத இதுதான், வறுமையில் வாடும் தெற்கு சூடான், செனகல், பெனின் போன்ற ஆப்பிரிக்க நாட்டின் பிரதான உணவு. கேழ்வரகு தமிழகத்தில் பிறக்கவில்லை என்றாலும், தமிழ்ச் சமூகத்தோடும் தமிழ்நாட்டு நிலவியலோடும் நெருக்கமான தொடர்பு உடையது. பல நூற்றாண்டுகளாக நாம் இதைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். கேழ்வரகில் கிட்டத்தட்ட 60 வகைகள் உள்ளன. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் `கேழ்வரகுத் திருவிழா’ எனும் ஒரு விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

கேழ்வரகின் சிறப்புகள்... பலன்கள்... பயன்படுத்தும் முறைகள்!

* அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங்களைவிட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச்சத்தும் அதிகம். பாலைவிட மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. பாலும் அரிசியும் உடம்பை வளர்க்கும்; கேழ்வரகோ, உடல் இளைக்க உதவும். எல்லோருக்கும் ஏற்ற தானியம்... வளரும் குழந்தைகளுக்கும், மாதவிடாய் கால மகளிருக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் மிக மிக அவசியமான உணவு கேழ்வரகு. 

332836_17035.jpg

* குழந்தைக்கு ஒரு வயதாகும்போது, கேழ்வரகை ஊறவைத்து, முளைகட்டி, பின்னர் அதனை உலர்த்திப் பொடியாகச் செய்துகொள்ள வேண்டும். இந்தப் பொடியில் கஞ்சி காய்ச்சி கொடுத்தால், சரியான எடையில் போஷாக்கோடு குழந்தை வளரும். 

* மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான, ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக நமக்குக் கிடைக்கும் கேழ்வரகில் கஞ்சிவைத்துக் குடிக்கலாம். இதற்கு இணை, ஏதும் இல்லை. 

* கேழ்வரகில் `மித்தியானைன்’ (Methionine) எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது, இதன் கூடுதல் சிறப்பு. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பராமரிக்கவும் இந்தப் புரதச்சத்து மிக அவசியம். `மித்தியானைன்’ அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும்தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இது மிகவும் உதவும். 

* சமீபத்திய ஆய்வுகளில், மூட்டுவலி முதல் ஆண்மைக்குறைவு வரை பல நோய்களுக்கு கேழ்வரகு உணவு, நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக, வயோதிக நோய்களுக்கு!

கேழ்வரகு அடை

* கஞ்சியில் தொடங்கி, தோசை, இட்லி, பொங்கல், அடை, புட்டு, இடியாப்பம், களி, கூழ், ஊத்தாப்பம் வரை கேழ்வரகில் சமைக்கலாம். 

* கேழ்வரகு உணவுடன் பாலோ, மோரோ, நெய்யோ சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. 

கேழ்வரகு தித்திப்பால் 
 

செய்முறை: 

சிறிது கேழ்வரகை ஊறவைத்து, அதில் பால் எடுத்து, அத்துடன் பனைவெல்லம் சேர்க்க வேண்டும். அதைக் கஞ்சியாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமே கொஞ்சமாக நெய்யோ, தேங்காய் எண்ணெயோ சேர்த்தால், அது கேழ்வரகுத் தித்திப்பால். 

* குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாமல் போகும்போது, ஏழாம் மாதத்தில் திட உணவைத் தொடங்குவது வழக்கம். அந்தப் பருவத்தில் இருந்து, உணவில் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.

வீட்டுச் சமையலறைக்கு கேழ்வரகை அழைத்து வாருங்கள். ஆரோக்கியம் என்றும் நம் வசம்! 

http://www.vikatan.com/news/health/73942-health-benefits-of-ragi.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த மருத்துவர் ஒவ்வொரு இயற்கை உணவைப் பற்றி விபரிக்கும் போதும் "இந்தப் பதார்த்தம் இந்த நோய்களைத் தீர்க்கும் என்று சமீப கால ஆய்வில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.." என்று எழுந்த மானமாகச் சொல்லி விட்டுப் போகிறார். நானும் தேடிப் பார்க்கிறேன், ஒரு ஆய்வும் இல்லை ஆதாரமும் இல்லை! உதாரணமாக கேழ்வரகு மூட்டு வலியில் ஆண்மைக் குறைவில் பலன் தரும் என்று எந்த ஆய்வும் உறுதி செய்யவில்லை! எங்கே இருந்து இப்படித் தவறான மருத்துவத் தகவல்ளைத் திரட்டுகிறார்கள் என்று தான் புரியவில்லை!  

Link to comment
Share on other sites

பல் கவனம்... உடல்நலத்துக்கு உதவும்! நலம் நல்லது - 22 #DailyHealthDose

Nalam_logo_new_17271.jpg

44_08065.jpg

ன்றைக்கோ ஒருநாள் `சுரீர்’ என பல்லில் வலி. அப்போதுதான் நம் பகுதியில் பல் மருத்துவர் அருகில் எங்கே இருக்கிறார் என நினைவில் தேட ஆரம்பிப்போம். அவரைத் தேடி ஓடுவோம். பல் மருத்துவ உலகம் என்ன சொல்கிறது தெரியுமா?... ‘பற்களின் பாதுகாப்பு பிறந்தவுடன் தொடங்கியிருக்க வேண்டும்’ என்கிறது அழுத்தம் திருத்தமாக! சிசுவுக்கு, தாய் பால் புகட்டியதும் மிருதுவான, சுத்தமான துணியால் மிக மிக மென்மையாக ஈறுகளைத் துடைத்துவிடுவார் இல்லையா? அப்போது தொடங்குகிறது பல் பராமரிப்பு.

பற்களை பாதுகாப்பது தொடர்பான சில அத்தியாவசியமான விஷயங்கள் இங்கே... 

* ஆலும் வேலும் மட்டும் அல்ல... மருதம், இலந்தை, இலுப்பை, இத்தி, கருங்காலி... எனப் பல துவர்ப்புத் தன்மையுள்ள மூலிகைக் குச்சிகளை, அதன் பட்டையோடு சேர்த்து பல் துலக்கப் பயன்படுத்தியது நம் பாரம்பர்யம். ஆலங்குச்சியில் குளிர்ச்சி, இலந்தையில் இனிய குரல்வளம், இத்தியில் விருத்தி, இலுப்பையில் திடமான செவித்திறன், நாயுருவியில் புத்திக்கூர்மை, தைரியம், மருதத்தில் தலைமயிர் நரையின்மை, ஆயுள் நீட்டிப்பு... என பல்குச்சி மூலம் சகல நிவாரணங்களைச் சொல்லிக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். பல் துலக்க, துவர்ப்புத்தன்மை பிரதானமாக இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தக் குச்சிகள் எல்லாம் அந்தச் சுவையைத்தான் தந்தன. துவர்ப்புச் சுவை தரும் தாவர நுண்கூறுகள் அனைத்தும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும், எதிர் நுண்ணியிரித் தன்மையையும், ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மையையும் தருபவை என்பது தாவரவியலாளர்கள் கண்டறிந்தது. 

305042_17350.jpg

* துவர்ப்புச் சுவையுடைய மெஸ்வாக் குச்சி மரத்தின் பெயர் `உகாமரம்.’ வழக்குமொழியில் அதை `குன்னிமரம்’ என்பார்கள். உகா குச்சியின் பயனை நாம் மறந்துவிட்டோம்; பேஸ்ட் தயாரிக்கும் கம்பெனிகள் மறக்கவில்லை. மூலிகைப் பற்பசையில் அதற்கு என தனிச் சந்தை உண்டு. ஆக, பல் பாதுகாப்புக்கு துவர்ப்புச் சுவை நல்லது.

* `திரிபலா சூரணம்’ எனும் மூலிகைக் கூட்டணி, வாய் கொப்பளிக்கவும், பல் துலக்கவும் எளிதான, மிக உன்னதமான ஒரு மூலிகைக் கலவை.

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கூட்டணி பல் ஈறில் ரத்தம் வடிதல், வலி, ஈறு மெலிந்து இருத்தல், கிருமித்தொற்று... போன்ற வாய் மற்றும் பற்கள் பிரச்னைக்கு பலன் அளிக்கும் எளிய மருந்து.

* பற்கள் கிருமித் தொற்றால், அழற்சியால் பாதிப்பு அடையும்போது, அதை நீக்காமல் பாதிப்படைந்த சதைப்பகுதியை மட்டும் நீக்கி, இயல்பாக பல்லைப் பாதுகாக்கும் சிகிச்சைதான் `ரூட் கேனால்’. குடும்ப மருத்துவர் பரிந்துரைத்தால், அந்தச் சிகிச்சையை மேற்கொண்டு பற்களைப் பாதுகாக்கலாம்.

* `Periodontitis’ எனும் அழற்சி பலருக்கு வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் பிரச்னை அதிகம். ஆனால், வாய் துர்நாற்றத்துக்கு பல் பிரச்னை மட்டும் காரணம் அல்ல. அஜீரணம், நாள்பட்ட குடல்புண், ஈரல், கணைய நோய்கள்கூட காரணங்களாக இருக்கலாம். இதற்கும் என்ன பிரச்னை எனத் தெரிந்துகொள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.

பொதுவான பராமரிப்பு...

* நள்ளிரவானாலும், குழந்தைக்குப் பால் கொடுத்த பிறகு, குழந்தையின் ஈறுகளைச் சுத்தம் செய்யாமல் விடக் கூடாது. 

* குழந்தைகளுக்கு அனைத்துப் பற்களும் முட்டிக்கொண்டு வெளியே வந்தவுடன், அவர்களுக்கு தினமும் இரு முறை பல் துலக்கும் பயிற்சியைக் கற்றுக் கொடுக்க வேண்டும். 

* குழந்தைகளுக்கு என தனியாக ஃப்ளூரைடு கலக்காத பற்பசைகளைப் பயன்படுத்தலாம். `ஈ... காட்டு’ என குழந்தைகளைப் பயமுறுத்தி, பல் துலக்கப் பயிற்றுவிக்கக் கூடாது. பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை ஒரு குதூகலமான விளையாட்டுப்போல அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். 

* பற்பசையை, பிரஷ்ஷில் கணிசமான அளவில் பிதுக்கி, பற்களில் அப்பி, சுவரைப் பட்டி பார்க்க உப்புத்தாள் போட்டு தேய்ப்பதுபோல தேய்க்கக் கூடாது. பல் துலக்க, ஒரு நிலக்கடலை அளவுக்கான பற்பசையே போதுமானது. 

305044_17115.jpg

* நம்மில் பலருக்கு, இன்னமும் பற்களின் இடையே சிக்கியிருக்கும் துணுக்குகளை நீக்கும் Dental Floss (பற்களுக்கு இடையே மெல்லிய இழையைவிட்டு சுத்தம் செய்யும் பயிற்சி) பழக்கம் தெரியாது. ஒருவருக்கு கல்யாணம் நிச்சயமாகிறதா? உடனே, பல் மருத்துவரிடம் போய், `கல்யாணம்... பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்’ என்று நிற்பார். மருத்துவர், பற்களைச் சுத்தம் செய்து பல அழுக்குகளை வெளியே எடுக்கும்போதுதான், ‘இத்தனை வருஷம் இவ்வளவு அழுக்கா நம்ம வாய்க்குள்ள இருந்துச்சு?’ என வந்தவர் நொந்துபோவார். எனவே அடிக்கடி Dental Floss செய்துகொள்ள வேண்டியது அவசியம். 

* பராமரிப்பு என்பதையும் தாண்டி, பல்லைப் பாழடிக்கும் பழக்கங்களில் இருந்து விடுபடுவதுதான் பற்கள் பாதுகாப்புக்கான முதல் படி. 

* சிலர் சாப்பிட்ட பிறகு, உதடுகளை மட்டும் தேய்த்து, துடைத்துக்கொள்வார்கள். நன்றாக வாயைக் கொப்பளிக்கவேண்டியது முக்கியம். ஆரோக்கியம் தரும் வைட்டமின் சி சத்துள்ள பழங்களைச் சாப்பிட்டால்கூட, வாயைக் கொப்பளிக்காமல்விட்டால், பழங்களின் அமிலத் துணுக்குகள் பற்களில் கறையை உண்டாக்கும்; பல் எனாமலைச் சுரண்டிவிடும். 

பற்கள் வெறும் பற்களல்ல... அவை நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆணிவேர் என்கிற அக்கறை இருந்தால், பற்களை யாரும் அலட்சியமாக விட மாட்டார்கள்.

http://www.vikatan.com/news/health/74246-poor-dental-care-can-affect-your-health.art

Link to comment
Share on other sites

வயிற்றுவலி... வருமுன் காக்க! நலம் நல்லது - 23 #DailyHealthDose

Nalam_logo_new_15401.jpg

வயிற்றுவலி

யிற்றுவலி  நம் மண்டையைப் பிராண்டும் மிக மோசமான வலிகளுள் ஒன்று. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்... என இருக்கும். உடனே அது வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா இல்லை வேறு ஏதேனுமா என நாம் குழம்புவோம். மருத்துவரிடம் போனால், `எவ்வளவு நாளா வயிற்றுவலி’ என ஆரம்பித்து, `நெஞ்சு எலும்புக்குக் கீழேயா, மார்பின் நடுப் பகுதியிலா... எங்கே எரிச்சல்?, கொஞ்சம் சாப்பிட தாமதமானால், பசி வரும்போது வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்புவார். ஒருவேளை பித்தப்பைக் கல் இருந்தாலும் இருக்கலாம் என அனுமானித்து, ஸ்கேன் எடுக்கச் சொல்லும் மருத்துவர்களும் உண்டு. முன்பெல்லாம், ‘இது பித்தப்பை வீக்கமாக இருந்தாலும் இருக்கும்’ என சந்தேகப்பட்டால், மருத்துவர் வயிற்றைக் கைகளால் அழுத்திப் பரிசோதனை செய்வார். மூச்சை நன்கு இழுத்துவிடச் சொல்லி, நோயாளியின் வலதுபக்க விலா எலும்புகள் முடியும் இடத்துக்குக் கீழாக விரல்களால் அழுத்திப் பார்த்து, முடிவு செய்துவிடுவார். இதற்கு `மர்ஃபி சோதனை’ என்று பெயர். இன்றைக்கு அதைப் பலர் ஓரம்கட்டிவிட்டார்கள். நோயாளிகளை ஸ்கேனுக்கு அனுப்புகிறார்கள். 

ஆனாலும், பித்தப்பைக் கல்லுக்கான காரணம் என்ன என்று மிகத் துல்லியமாக இன்றும் நவீன மருத்துவத்தால் நிர்ணயிக்க முடியவில்லை. நம் ஜீரண மண்டலத்தின் தன்மையே ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்றவற்றால் குழம்பிப்போய் இருக்கிறது. அதோடு, ஜீரோ சைஸ் இடுப்பு வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருந்து உடல் மெலிவது, நார்ச்சத்து, மக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் எனும் உயிர்ச்சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளாதது, கொழுப்பைக் கூடுதலாகவும், நார்சத்தைக் குறைவாகவும் சாப்பிடுவது, வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பது, மெலடோனின் சுரப்புக் குறைவது... என பித்தப்பை அழற்சிக்கும், கல்லுக்கும் பல காரணங்கள். `தொடர்வாத பந்தமிலாது குன்மம் வராது’ என வயிற்றுப் புண்ணுக்கு வாதத்தையும், விலாவுக்குக் கீழ் வலி தரும் பித்தக்கல் பிரச்னைக்கு பித்தத்தையும் காரணமாகச் சொல்கிறது தமிழ் மருத்துவம். முதலில் வயிற்றுவலிக்கான காரணத்தை சோதித்தறிந்து, அதற்கேற்ற சிகிச்சை பெறுவதே புத்திசாலித்தனம். 

stomach-cramps_15380.jpg

வயிற்றுவலிக்கான காரணங்கள்! 

* நடு வயிற்றிலும், வலது பக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப் புண்ணாகவோ, பித்தப்பைக் கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம். 

* இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலியை உண்டாக்கலாம். 

* நடு வயிற்றில் எரிச்சலுடன்கூடிய வலி, வயிற்றுப் புண் சார்ந்த வலியாக இருக்கலாம். 

* விலா எலும்பில் பின் முதுகின் இரு பக்கங்களில் இருந்து முன் பக்கம் சிறுநீர்ப்பை நோக்கி வரும் வலி, சிறுநீரகக் கல்லின் வலியாக இருக்கலாம். 

* பெண்களுக்கு அடி வயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடி வயிற்றின் மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம். 

இவற்றைத் தாண்டி, அப்பெண்டிக்ஸ் வலி, அடினோமயோசிஸ் வலி... என வயிற்றுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எல்லா வலிகளுக்குமே `ஒரு சோடா குடிச்சா, சரியாகிடும்’, என்ற அலட்சியமும், ‘ஓ பகவான் கூப்பிட்டுட்டார்’ என்ற பதற்றமும் ஆகாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது முக்கியம். 

வயிற்றுவலி... வருமுன் காக்க...

* முதலில் மலச்சிக்கலை நீக்கி, உடல் வாதத்தைக் குறைக்க வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டாம். அதோடு, பட்டினி முதலிய பித்தம் சேர்க்கும் விஷயங்களையும் தவிர்க்கவும் என்பதே நம் தமிழ் மருத்துவம் சொல்லும் பிரதானமான பரிந்துரைகள். 

பித்தைப்பைக் கல் வராமல் தடுக்கவும், சிறிய கல்லாக இருந்தால் சிரமம் கொடுக்காமல் இருக்கவும், பின் வரும் வழிகள்... 

* கரிசலாங்கண்ணி, மலச்சிக்கலை நீக்கி, பித்தத்தைத் தணிக்கும் மூலிகை. இதில் மஞ்சள் பூ, வெள்ளைப் பூ என இரண்டு வகை உண்டு. வெள்ளைப் பூ பூக்கும் கரிசலாங்கண்ணிக் கீரையை விழுதாக அரைத்து, இரண்டு சுண்டைக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து, ஒரு மாத காலம் சாப்பிடலாம். 

கீழாநெல்லி

* ஒரு சாண் அளவு வளர்ந்திருக்கும் கீழாநெல்லிச் செடியை வேருடன் பிடுங்கி, நன்கு கழுவி, அரைத்து மோரில் இரண்டு சுண்டைக்காய் அளவு கலந்து சாப்பிடலாம்.

* சீரகத்தை கரும்புச் சாறு, கீழாநெல்லிச் சாறு, எலுமிச்சைச் சாறு, முசுமுசுக்கைச் சாற்றில் ஊறவைத்து (ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொன்றாக ஊறவைக்க வேண்டும்) வெயிலில் நன்கு உலர வைக்கவும். அதை மிக்ஸியில் நன்கு பொடித்து, காலையில் இரண்டு டீஸ்பூன், மாலையில் இரண்டு டீஸ்பூன் என உணவுக்கு முன்னதாகச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். 

241224_15300.jpg

* வாரம் ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது, உடலில் பித்தத்தைத் தணிக்கும்; கல் வராமல் தடுக்க உதவும். பித்தப்பைக் கல் உள்ளவர்கள் தலைக்கு குளிர்தாமரைத் தைலம், கீழாநெல்லித் தைலம், காயத்திருமேனித் தைலம்... என இவற்றில் ஒன்றைத் தேய்த்துக் குளிப்பது நல்லது. 

http://www.vikatan.com/news/health/74311-precautious-steps-to-avoid-stomach-ache.art

Link to comment
Share on other sites

உயர் ரத்த அழுத்தம்... உதாசீனம் வேண்டாம்! நலம் நல்லது-24 #DailyHealthDose

Nalam_logo_new_18463.jpg

உயர் ரத்த அழுத்தம்

மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கண் பார்வை பறிபோவது... உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு மூல காரணங்களில் ஒன்றாக இருப்பது உயர் ரத்த அழுத்தம். `இன்னும் 20 ஆண்டுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக உயர் ரத்த அழுத்தம் இருக்கும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். உண்மையில், இது முழுக்க முழுக்கத் தவிர்க்கக்கூடியது; கட்டுப்படுத்தக் கூடியது. உயர் ரத்த அழுத்தம் குறித்த அலட்சியமும் தவறான புரிதலும்தான் அது வருவதற்கான முக்கிய காரணங்கள். 

இது வருவதற்கு மரபும் ஒரு காரணம்தான். ஆனால், 60 வயதைத் தாண்டி அப்பா-அம்மாவுக்கு வந்த உயர் ரத்த அழுத்தம், சூழலையும் வாழ்வியலையும் நாம் சின்னாபின்னமாக்கியதால், 25 வயதிலேயே தலைகாட்டத் தொடங்கிவிட்டது. உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பு பிரதானமான ஒரு காரணம். `உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது உணவைப் பக்குவப்படுத்தும் வித்தை குறித்த முதுமொழி. அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, மானம், ரோஷம் அதிகரிக்க வேண்டும் என்று உப்பை உணவில் அள்ளிப் போட்டுக்கொள்வது, குளிர்பானத்தையும பாக்கெட் பழச்சாறையும் அதிகம் குடிப்பது உள்ளிட்ட காரணங்களால் உப்பு நம் உடலில் தப்பாட்டம் ஆட ஆரம்பித்துவிடுகிறது. 

262680_18309.jpg

ஊறுகாயில் மட்டுமல்ல... இனிப்புச் சுவையோடு இருக்கும் ஜாம், ரொட்டிகளிலும் உப்பு இருக்கிறது. அப்பளம், சிப்ஸ், சூப்பில் தூவப்படும் உப்பு மற்றும் அத்தனை துரித உணவுகளிலும் உப்பு தூக்கலாகவே தூவப்படும். கேக், சாக்லேட், பாஸ்ட்ரி, பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பனீர் பட்டர் மசாலா... என துரித உணவுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சோடியம் உள்ளே போவதுதான் 45 வயதில் வரவேண்டிய உயர் ரத்த அழுத்தத்தை இளம் வயதிலேயே வரவழைத்துவிடுகிறது. 

சரி... உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க மருந்து கண்டிப்பாக அவசியமா? ஆம், நிச்சயம் அவசியம். மருத்துவரின் ஆலோசனையோடு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, உலகம் முழுக்க பல மூலிகைகளை வைத்து ஆராய்ச்சியும் நடந்தபடி இருக்கிறது. சீரகம், பூண்டு, வெங்காயம், வெந்தயத்தில் தொடங்கி செம்பருத்தி, முருங்கைக்கீரை, தக்காளி, கேரட் வரை பல காய்கறிகளில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இவையெல்லாம் மருந்துக்கு துணை நின்று பயன் தரும் உணவுகளே (Functional food ingredients) தவிர, மருந்துக்கு மாற்று கிடையாது. உயர் ரத்த அழுத்தத்துக்கு மூலிகை மருந்துகள் மட்டும் போதாது, நவீன மருத்துவ சிகிச்சையும் அவசியம். சீனாவில், பிளட் பிரஷர் என்று ஒரு நோயாளி மருத்துவமனைக்குப் போனால், மருத்துவர் அதைக் குறைக்க நவீன மருந்தும், கொஞ்சம் கொஞ்சமாக அதைக் கட்டுப்படுத்த சீன மூலிகையும், வாழ்வியல் பழக்கமாக ‘தாய்சீ’ நடனத்தையும் பரிந்துரைக்கிறார். நகரமோ, கிராமமோ பிளட் பிரஷர் உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகமாவதற்கு முக்கியக் காரணம் மதுப் பழக்கம்.  

walking_18187.jpg

பிளட் பிரஷர் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை... 

* 45 நிமிடங்கள் அல்லது 3 கி.மீ நடைப்பயிற்சி. 

* 30 நிமிட உடற்பயிற்சி / சைக்கிள் ஓட்டுதல். 

158443_18466.jpg

* 25 நிமிடங்கள்... யோகாவில் சூரிய வணக்கமும் ஆசனங்களும் செய்வது. 

* 15 நிமிடங்கள் பிராணாயாமம். குறிப்பாக, சீதளி பிராணாயாமம் செய்வது. 

* 20 நிமிடங்கள் தியானம். 

* 6 - 7 மணி நேரத் தூக்கம். இதை மற்றும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தூக்கம், உயர் ரத்த அழுத்தத்துக்கு அத்தனை நல்லது.   

உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கும் உணவு வகைகள்! 

* முருங்கைக்கீரையை நீர் நிறையவிட்டு வேகவைத்து, பூண்டு, சிறிய வெங்காயம், வெந்தயம் போட்டு சாதாரணமாக ரசம் செய்வதுபோலச் செய்து, காலை உணவுடன் பருகலாம். 

317160_18168.jpg

* மதிய உணவில் சமைக்காத சிறிய வெங்காயத் தயிர்ப் பச்சடி, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி சேர்த்துக்கொள்ளலாம். 

* உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமான ரத்தக் கொழுப்பைக் குறைக்க / கரைக்க, எடை குறைக்கும் தன்மை உடைய கோக்கம் புளி அல்லது குடம் புளியைப் பயன்படுத்தலாம். 

* வெந்தயத் தூள், கறிவேப்பிலைப் பொடியை சுடு சாதத்தில், முதல் உருண்டையில் பிசைந்து சாப்பிடலாம். 

* கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்தது என்பதால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பைத் தடுக்க உதவும். 

* உணவில் மஞ்சள் தூள், லவங்கப்பட்டையை அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது. இவை இதயத்துக்கு இதம் அளிப்பவை. 

* வேகவைக்காத சின்ன வெங்காயம், வேகவைத்த வெள்ளைப் பூண்டு இரண்டும் அன்றாடம் உணவில் இடம் பெறட்டும். 

ஆரம்பத்தில் இருந்தே முறையான வாழ்வியலும், சரிவிகித உணவும், வருமுன் காக்கும் மருத்துவமும் இருந்துவிட்டால் உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கக்கூடியதே! 

http://www.vikatan.com/news/health/74413-dont-neglect-higher-blood-pressure.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.