Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

தொலைந்துபோன நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்! நலம் நல்லது-51 #DailyHealthDose

Nalam_logo_new_17058.jpg

ன்றைய தொழில்நுட்பங்கள் நம் பண்டைய மரபின் நீட்சியை ஓரங்கட்டி, நமக்கு நல்வாழ்வு தரும் சில நல்ல விஷயங்களை மறக்கடிக்கச் செய்துவிட்டன. அவற்றில் ஒன்று, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக நம்மிடையே இருந்த சில தடுப்பு முறைகள்! 

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரூசல் ஃபாஸ்டர் சமீபத்தில் தன் ஆய்வு முடிவை இப்படி ஒற்றைவரியில் கூறியிருக்கிறார்... ‘நான்கு மில்லியன் வருட மரபை மதிக்காத திமிர் உள்ள ஒரே உயிரினம், மனித இனம்தான்.’ கூடவே, தன் ஆய்வில், இரவில் சரியாகத் தூங்காமல் இருப்பவருக்கும், வேலை நிமித்தமாக இரவில் பணிபுரியும் ஊழியருக்கும் சாதாரண வயிற்று உபாதை முதல் மார்பகப் புற்றுநோய் வரை உருவாகும் ஆபத்துக்களையும் விவரித்திருக்கிறார். அதோடு, `குறைந்த ஆற்றலை எடுத்துக்கொண்டு ஒளியை உமிழும் எல்.இ.டி விளக்கு உள்ள ஸ்மார்ட்போன், டேப்லெட் வகையறாக்கள், தன் ஒளிக்கற்றையில் அதிகபட்ச நீல ஒளியைத் தந்து, இரவில் நெடுநேரம் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

போர்வைக்குள் ஒளிந்துகொண்டு ஸ்மார்ட்போனில் நடுநிசியையும் தாண்டி சாட் செய்தால், காதல் வருமா..? தெரியாது. ஆனால், கேன்சர் வரக்கூடும். இது போன்ற எத்தனையோ பிரச்னைகள் பிற்காலத்தில் வராமல் இருக்க, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது. 

நோய் எதிர்ப்பாற்றல்

கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது. 

மதுரை மாவட்டப் பகுதிகளில், பிறந்த குழந்தைக்கு, தாய்மாமன் `சேனை வைத்தல்’ என ஒரு சடங்கு இன்றளவும் நடைபெறுகிறது. அதில் சிலர், `சர்க்கரைக் (சீனி) கரைசலை’ இப்போது கொடுக்கிறார்கள். `சேனை வைத்தல்’ என்பது குழந்தைக்கு வெறுமனே இனிப்பு ருசியைப் பழக்கும் வெறும் சர்க்கரை மருந்து கொடுக்கும் மரபு அல்ல; `சேய் நெய்’ கொடுத்தல் என்பதே காலப்போக்கில், `சேனை கொடுப்பது’ என்றாகி, அதுவும் பின்னாளில் மேலும் மருவி, `சீனி கொடுப்பது’ எனச் சிதைந்துவிட்டது. `சேய் நெய்’ என்பது, குழந்தைகளுக்காக வீட்டிலேயே செய்யப்படும் மிகச் சிறந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகள் இரு வகைப்படும். ஒன்று... சளி, இருமலைத் தருவது. இன்னொன்று... வயிற்றுப்போக்கைத் தருவது. இந்த இரு வகைகளுக்கும் காரணமான நுண்ணுயிரிகளைச் செயல் இழக்கச் செய்யும் பல மூலிகைகளைக்கொண்டே இந்தச் `சேய் நெய்’ தயாரிக்கப்பட்டது. ஆடுதொடா, தூதுவளை, இண்டு, வேப்பங்கொழுந்து, கண்டங்கத்திரி... முதலான 57 வகை மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் மருந்து அது. 

`57 வகை மூலிகைகளைத் தேடி காடு, மலையெல்லாம் அலைய வேண்டுமா?’... வேண்டியதில்லை. இன்னும் சில கிராம மக்களிடையே `உரை மருந்து’ எனும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழக்கத்தில் இருக்கிறது. இதை, சுக்கு, திப்பிலி, மாசிக்காய், அக்கரகாரம், அதிமதுரம், பூண்டு, கடுக்காய், நெல்லிக்காய், வசம்பு ஆகிய ஒன்பது மூலிகைகளைக்கொண்டு எளிதாகத் தயாரிக்கலாம். 

உரை மருந்து எப்படிச் செய்வது? 

சுக்கின் மேல் தோலைச் சீவியும், கடுக்காய், நெல்லிக்காயை அவற்றின் விதைகளை நீக்கியும் வைத்துக்கொள்ள வேண்டும். வசம்பை அதன் மேல் தோல் கருகும் வரை சுட்டு எடுக்க வேண்டும். பிறகு, அனைத்தையும் சேர்த்து வறுத்து, பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை, அதிமதுரக் கஷாயத்துடன் சேர்த்து அரைத்து சிறுசிறு குச்சிகளாகச் செய்து காயவைத்துக்கொண்டால், உரை மருந்து தயார். 

இதைத் தாய்ப்பாலில் இழைத்து, குழந்தை பிறந்த மூன்றாம் நாளில் இருந்து கொடுக்கலாம். முதலில் ஓர் இழைப்பு, பிறகு இரண்டு இழைப்பு எனத் தொடங்கி, குழந்தை வளர வளர இழைப்பை அதிகமாக்கிக்கொள்ள வேண்டும். ஜீரண சக்தியையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கும் இந்த உரை மருந்து, அரசு சித்த மருத்துவமனைகளில் இலவசமாகவே கிடைக்கும். 

வசம்பு

வசம்பில் உள்ள நறுமண எண்ணெயில், `பீட்டா ஆசரோன்’ (Beta Asarone) எனும் நச்சுப்பொருள் இருப்பதாகச் சிலர் வாதிடுகிறார்கள். அது தவறு. எப்படியெனில், முதலில், வசம்பின் நறுமண எண்ணெயை நாம் பிரித்து உபயோகிப்பது இல்லை. அதோடு, வசம்பில் இருக்கும் அந்த எண்ணெயின் அளவும் மிகக் குறைவானது. அப்படிப் பிரித்த எண்ணெயிலும் மிக நுண்ணிய அளவே பீட்டா ஆசரோன் உள்ளது. அந்த ஆசரோனும், நாம் வசம்பைச் சுடுவதில் உண்டாக்கும் வெப்பத்தில் 100 சதவிகிதம் ஓடியே போய்விடும். 

குடல் பூச்சியில் இருந்து குடல் புற்றுநோய் வரை நோய் எதிர்ப்பாற்றல் கிடைப்பதற்கு நம் பாரம்பர்யம் சுட்டிக்காட்டுவது வேப்பங்கொழுந்தைத்தான். நல வாழ்வு குறித்த புரிதலும், அக்கறையும், அதற்கான மெனக்கெடலும் நம் சமூகத்துக்கு மிக அதிகம். அதைத் தொலைத்துவிடாமல் பாதுகாக்கவேண்டியது நம் அவசரத் தேவை! 

http://www.vikatan.com/news/health/77913-how-to-boost-your-immune-system.art

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

டாஸ்மாக் பக்கம் ஒதுங்குகிறவர்களின் கவனத்துக்கு..! நலம் நல்லது-52 #DailyHealthDose

Nalam_logo_new_20137.jpg

டாலர் மதிப்பு சரிந்தாலும், ஏ.டி.எம் வாசல்களில் வரிசையில் நிற்பது தொடர்ந்தாலும் ஆண்டுக்கு 20 சதவிகித வியாபார வளர்ச்சியுடன் கொடிகட்டிப் பறக்கிறது அரசு நடத்தும் மது வணிகம்... டாஸ்மாக்! குடிப்பவர்களில் 40-50 சதவிகிதம் பேர்களை கிட்டத்தட்ட நிரந்தரக் குடி அடிமைகளாக மாற்றிவரும் இந்தத் தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான், அரசு பல நலத் திட்டங்களை நடத்துவதாகச் சொல்கிறது. இந்த அவலம், உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 

குடி

‘கொஞ்சமாக் குடிச்சா தப்பில்லையாமே...’, `இதயத்துக்கு நல்லதாமே...’, `ஹார்ட் அட்டாக் வராதாமே...’, `கொஞ்சமே கொஞ்சமா ஆல்கஹால் இருக்கும் பீர், ஒயின் சாபிடலாம்ல?’... என சப்பைக்கட்டு கட்டி ஆல்கஹால் சுவைக்கும் சகோதர-சகோதரிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி... ஆல்கஹால் விகிதம் 40 சதவிகிதத்துக்கு அதிகமான விஸ்கி, பிராந்தி போன்ற ஹாட் டிரிங்க்ஸ் என்றால் `பெக்’ கணக்கு, 6.8 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள பீர்/ஒயின் என்றால் `மக்’ கணக்கு... இதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், வயிற்றுக்குள் செல்லும் ஆல்கஹாலுக்கும் அது நடத்தும் அட்டூழியத்தும் எந்த வித்தியாசமும் இல்லை. 

`திராட்சை ஒயினில் நிறைய பாலிஃபீனால் இருக்கிறது... அது இதயத்துக்கு நல்லதாமே’ என படித்தவர்கள்கூட சில வாதத்தை முன்வைப்பார்கள். சில உணவியல் வல்லுநர்கள் இதை ஆதரிக்கவும் செய்யலாம். ஆனால், அவர்களுக்கு எல்லாம் அதே பாலிஃபீனால்கள் பச்சைத் தேயிலையில் இருந்து கத்திரிக்காய் வரைக்கும் எத்தனையோ பொருட்களில் இருக்கிறது என்பதும் தெரியும்தானே? அதற்கெல்லாம் குரல் கொடுக்காதவர்கள், ஒயின் மீது காட்டும் கரிசனத்துக்கு, இதயம் மீதான அக்கறையா காரணம்? 

மது கிளாஸ்

`ஒயினை உணவுப் பட்டியலோடு சேர்க்க வேண்டும். உயர்தர சைவ உணவகம் தொடங்கி, கையேந்தி பவன் வரைக்கும் அனைத்து உணவகங்களிலும் அதை வழங்க அனுமதி வேண்டும்’ என ஒரு பெரும் வணிகக் கூட்டம் தொடர்ந்து அரசை வற்புறுத்திவருகிறது. அதாவது, பெண்களும் மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவித்தால், குடும்பத்தோடு குடிக்கவைத்து, மாதாந்திர மளிகைக்கடைப் பட்டியலில் ஒயினையும் இடம்பெறச் செய்யலாம் என்கிற சந்தை உத்தி. அது சரிதான் என்பதுபோல நகர்ப்புற இளம் பெண்களில் குடிப்பழக்கம் கணிசமாகப் பெருகிவருவதும் வருத்தம்தரக்கூடிய ஒன்று. ஆண்களைவிட பெண்களுக்கு மதுவினால் வரும் நோய்க் கூட்டம் 100 சதவிகிதம் அதிகம். 

`கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் ஈரல் சிர்ரோசிஸ் (Liver Cirrhoosis) நோயாளிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்’ என்கிறது சமீபத்திய நடத்தப்பட்ட ஓர் ஆய்வு விவரம். இதற்கு முக்கியக் காரணம் குடி. சில பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஈரல் (கல்லீரல்) துறைக்காகத் தனிப் பிரிவுகளையே உருவாக்கிவைத்திருக்கின்றன. ஏனெனில், ஈரல் பாதிப்படைந்தவர்களில் சரி பாதிப்பேர் ஈரல் புற்றுநோய்க்கும் ஆளாவார்களாம். தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், சிர்ரோசிஸ் நோய்க்கு `காத்திருப்பு நிலை’யில் உள்ளவர்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

குடிகாரர்

`நீங்கள் குடிப் பழக்கம் உள்ளவராக இருப்பதால், உங்கள் பிள்ளை ஈரல் வியாதியாலோ அல்லது வேறு புற்றுநோய்க்கோ அல்லது சர்க்கரை முதலான பல வியாதிகளுக்கோ ஆளாகலாம்’ என எச்சரிக்கிறது எபிஜெனிடிக்ஸ் (Epigenetics) துறையின் ஆய்வு ஒன்று. குடி போதையில் ஒரு நபர் தள்ளாடுவதுபோல, அந்த நபரின் மரபணுக்களும் தள்ளாடி, மரபணுத் தகவல்களை மிகத் துல்லியமாகப் பிரதியெடுக்கவேண்டிய பணியை மறந்துவிடுகின்றன. தன் செல்களைப் படியெடுக்கும்போது, சந்திப் பிழை, கமா, ஃபுல்ஸ்டாப் எல்லாம் வைப்பதற்கு மறந்ததில் `டி.என்.ஏ டிமெத்திலேஷன் (DNA Demethylation) நடந்து, அது குடித்தவருக்கோ, குடித்தவரின் பிள்ளைகளுக்கோ சிர்ரோசிஸ் முதல் பல வியாதிகளை வரவழைக்கக்கூடும்’ என்கிறது எபிஜெனிடிக்ஸ் துறை ஆய்வு. 

‘சங்ககாலத்திலேயே கள் அருந்தியிருக்கிறார்களே!’ எனச் சிலர் கேட்கலாம். கள் வேறு; எத்தனால் கலந்து விற்கப்படும் சாராயம் வேறு. கள்ளைவிட நவீன சாராயத்தில் 10 மடங்கு எத்தனால் அதிகம். அதற்காக அந்த காலக் கள் குடிக்கலாமா என நினைப்பதும் தவறு. சங்க காலத்தில் கல் தூக்கி, காதலித்து, குமரியில் இருந்து மதுரைக்கு குதிரையில் பயணிக்க உடல் வலிமை தேவையாக இருந்தது. இப்போது பஸ்ஸில் போகவே, `ஸ்லீப்பர் ஸீட் இருக்கா?’ எனக் கேட்கும், சொகுசு தேடுபவர்களுக்கு கள் அவசியமே இல்லை. 

இன்றைக்கு, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு ஆகும் செலவு பல லட்ச ரூபாய். பழுதடைந்த ஈரலைப் பராமரிக்க ஆகும் செலவு பல பத்தாயிரங்கள். குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி, மரணத் தறுவாயில் பெரிய மருத்துவமனைக்குள் நுழையவே முடியாத பாமர, ஏழை மக்கள் கூட்டம்தான் 98 சதவிகிதம். எனவே நினைவில் கொள்வோம்... குடி குடியை மட்டுமல்ல... குலத்தையே கெடுக்கும்! 

http://www.vikatan.com/news/health/78000-alcohol-drinking-is-injurious-to-your-health-and-lineage.art

Link to comment
Share on other sites

வெந்தயம்... கசப்பு தரும் இனிமை! நலம் நல்லது-53 #DailyHealthDose

Nalam_logo_new_20138.jpg

ர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும் ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு. இந்த அதிசய விதைகளை, `சின்னஞ்சிறு நல மாத்திரைகள்’ என்றே சொல்லலாம். 

shutterstock_414327856_20529.jpg

கிரேக்கர்கள்தான் இந்தியாவுக்கு வெந்தயத்தை அறிமுகப்படுத்தியவர்கள். இன்றைக்கு இது சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் உணவில் மணமூட்டி! அதுவும் சாதாரண மணமூட்டி அல்ல... தொற்றாநோய்களான சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்... என அனைத்துக்கும் பயன் தரக்கூடியது! 

`வீகன் டயட்’ முறையைப் பின்பற்றுபவர்களுக்கு அதிக நார்ச்சத்து தருவது வெந்தயம் மட்டுமே. இதில் கரையும் நார், கரையாத நார் இரண்டுமே உள்ளன. கரையும் நார், இதய ரத்தத் தமனிகளில் சேரும் கொழுப்பைக் குறைக்க உதவும். கரையாத நாரில் இரு முக்கியப் பயன்கள் உள்ளன. ஒன்று, மலத்தை எளிதாகக் கழியவைக்கும். இன்னொன்று, உணவோடு வரும் சர்க்கரை ரத்தத்தில் வேகமாகக் கலப்பதைத் தடுக்கும். 

பல மேற்கத்திய நாடுகளில் ரத்தக் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க, வெந்தயத்தின் கசப்புத் தன்மையை நீக்கி, அதன் சத்தை எடுத்து, ரொட்டிகளிலும் கேக்குகளிலும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.   

வெந்தயம்

வெந்தயம் தரும் நன்மைகள்... 

* வெந்தயம், ஹார்மோன்களைச் சீராக்கும் தன்மைகொண்டது. அதனால், `ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் ஊட்டும் உணவு இது’ என்று உலகின் பல பாரம்பர்ய மருத்துவ முறைகள் இதைப் பதிவுசெய்திருக்கின்றன. 

* மாதவிடாய் கால வலியான சூதகவலிக்கு (Dismenorrhea) பல காரணங்களைச் சொல்கிறது நவீன மருத்துவம். ரத்தசோகை, கர்ப்பப்பை உள் சவ்வு, கர்ப்பப்பைக்கு வெளியேயும் வளர்ந்து தொல்லை தரும் எண்டோமெட்ரியோசைஸ்  (Endometriosais), அடினோமயோசிஸ் (Adenomyosis)... எனப் பல காரணங்கள். இவை மாதவிடாய் காலத்தில் பெண்ணுக்குத் தாங்க முடியாத வலியைத் தருபவை. வெந்தயத்தில் இருக்கும் `டயாஜினின்’ சத்து, பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல் செயல்படும் வேதிச் சத்து. வெந்தயப் பொடியில் இருக்கும் இந்த டயாஜினின் சத்து, கர்ப்பப்பையை வலுவாக்கும்; ஹார்மோன்களைச் சீராக்கும்; வலியை நிரந்தரமாகப் போக்கும். 

* `பித்த உதிரம் போகும்; பேராக் கணங்களும் போகும்; வீறு கயம் தணியும்’ என `அகத்தியர் குணவாகடம்’ பாடியுள்ளது வெந்தயத்தைப் பற்றித்தான். வெந்தயம், மாதவிடாய் வலி நீக்க ஒரு பக்க விளைவில்லாத மருந்து. மாதவிடாய் வருவதற்கு முந்தைய ஐந்து நாட்களில், வெந்தயப் பொடியோ, வெந்தயக் களியோ, வெந்தய தோசையோ, வெந்தயம் சேர்த்த குழம்போ சாப்பிடுவது வலியைக் குறைக்க உதவும். 

வெந்தய சட்னி

* வாய் துர்நாற்றம், வியர்வை நாற்றம் இரண்டுக்கும் இது உதவும். சிறிது வெந்தயத்தை வெந்நீரில் கொஞ்ச நேரம் ஊறவைத்து, வெறும் வயிற்றில் அருந்தலாம். இது, குடலின் ஜீரணச் சுரப்புகளைச் சீராக்குவதன் மூலம், வாய் துர்நாற்றத்தை நீக்க உதவும். 

* பாலூட்டும் தாய்மார்கள், வெந்தயத்தைக் கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சியில் சேர்த்துச் சாப்பிட்டால், பால் சுரப்பு கூடும். 

* வெந்தயத்தையும் கருணைக்கிழங்கையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மெலிந்திருக்கும் உடல் வலிமை பெறும் என்கிறது சித்த மருத்துவம். 

வெந்தயம் தோய்த்த இட்லி

* தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் தைலங்களில் வெந்தயத்துக்கு முக்கியமான இடம் உண்டு. உடல் சூடு அதிகமாக உள்ளவர்களுக்கு முடி உதிர்வது பெரிய பிரச்னை. வெந்தயத்தை அரைத்து, தலையில் அப்பி, சிறிது நேரம் ஊறவைத்து, பிறகு தலைக்குக் குளித்தால், கண்களும் தலையும் குளிரும். தலைமுடி உதிர்வது நீங்கும். 

* சர்க்கரைநோயின் ஆரம்பகட்ட நிலையில் (Impaired Glucose Tolerance Stage) இருப்பவர்கள், வெறும் வெந்தயத்தை லேசாக வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு, காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அரை டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.  

http://www.vikatan.com/news/health/78095-the-bitterness-of-eating-fenugreek-will-give-sweetness.art

Link to comment
Share on other sites

கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை! நலம் நல்லது-54 #DailyHealthDose

Nalam_logo_new_19151.jpg

ம் பாரம்பர்யம், கருத்தரித்த பெண்களுக்காக எத்தனையோ வைத்திய முறைகளைத் தேடித்தேடிச் சொல்லியிருக்கிறது. அவற்றையெல்லாம் நவீன மருத்துவ முறை வந்த பிறகு, நாம் மறந்துவிட்டோம். கர்ப்பிணிப் பெண்கள் ஆங்கில மருத்துவத்தோடு, நம் பாரம்பர்ய மருத்துவ விஷயங்களையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது, ஆரோக்கியமான குழந்தைக்கும் எளிதான பிரசவத்துக்கும் வழிவகுக்கும். அவற்றைப் புறக்கணிக்கவே கூடாது. 

கர்ப்பிணிப் பெண்கள்

மகப்பேறு மருத்துவம், மிக அவசியமான ஒன்று. குடும்ப மருத்துவரை அணுகி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிந்துகொள்வது; தன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைச் சரிபார்ப்பது; சர்க்கரைநோய் இருக்கிறதா, உயர் ரத்த அழுத்தத்தின் அளவு என்ன என அறிந்துகொள்வது; தொற்றுநோய் ஏதாவது இருக்கிறதா எனப் பரிசோதனை செய்வது... எல்லாமே கர்ப்பிணிப் பெண்ணுக்கு முக்கியம்தான். ஆனால், பெண் கருத்தரித்திருக்கும் காலம் முழுவதும் மருத்துவமனையையும் மருத்துவரையும் மட்டுமே நம்பி இருக்கும் சூழல் இன்று இருக்கிறது. 

நம் தமிழர் மருத்துவம் கர்ப்பிணிப் பெண்களுக்கு சில நல்ல வழிகளைக் காட்டியிருக்கிறது. அவற்றைப் பின்பற்றினால் பிரசவம் சுகமாகும். அவற்றில் சில... 

* கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பகால வாந்தி, ரத்தசோகை, முதல் ட்ரைமெஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுக்கள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும். 

மாதுளம் பழம்

* காரணமற்ற வெள்ளைப்போக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுந்தங்கஞ்சி சிறந்த தீர்வைத் தருபவை. 

* கர்ப்பகால ஆரம்பத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கர்ப்பப்பையில் ஏற்படும் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நல்லது. 

பன்னீர் திராட்சை

* தாமரைப்பூ, தக்கோலம், நெய்தல் கிழங்கு, செங்கழுநீர்க் கிழங்கு ஆகியவை கர்ப்பகால சங்கடங்களில் இருந்து மீள சித்த மருத்துவம் சொல்லும் மருத்துவ உணவுகள். இவை ஃபோலிக் அமிலம் நிறைந்தவை; வலி நிவாரணி தன்மை உடையவை; வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றல் உடையவை. இரும்பு மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தவை. 

* வண்ணங்கள் நிறைந்த பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி சாதம் ஆகியவை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடவேண்டியவை. 

மீன்

* விலை உயர்ந்த எந்த டானிக்குகளும் தர முடியாத பயனை, முருங்கைக்கீரை, பாசிப் பருப்பு கலந்த பொரியல், கேழ்வரகு அடை ஆகியவை தந்துவிடும். 

* முன் பக்கம் சிறுநீர்ப்பையும் பின் பக்கம் மலக்குடலும் அழுத்தப்படுவதால், முறையே நீர்ச் சுருக்கமும் மலச்சிக்கலும் ஏற்படுவது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சர்வ சாதாரணம். இதற்கு, தினமும் நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், மருத்துவர் ஆலோசனைப்படி இரவில் கடுக்காய் பிஞ்சு ஆகியவற்றைச் சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். 

கேழ்வரகு அடை

* கர்ப்ப காலத்தில் மட்டும் சில பெண்களுக்கு சர்க்கரைநோய் (Gestational Diabetes) ஏற்படும். இதற்காகக் கலங்கத் தேவையில்லை. இந்தப் பெண்களுக்கு உரிய மருத்துவமும் வெள்ளைச் சர்க்கரை சேர்க்காத உணவையும் கொடுக்கவேண்டியது அவசியம். தினமும் உணவில் வெந்தயத்தையும் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக்கொள்வது கூடுதலாக நல்லது. 

அறிவியல் வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே `செப்பியதினம் ஒன்றில் கடுகு போலாம்’ என 23 மி.மீ அளவே இருக்கும் கர்ப்பப்பையையும், `பூவிலே இரண்டு திங்கள் கழுத்துண்டாம், புகழ் சிரசு முறுப்பாகும்’ என ஐந்தாம் மாதம் காது, மூக்கு உதடும், ஏழாம் மாதம் தலைமுடியும் தெரியும் என, கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு அகத்தியர் வல்லாதியிலும், பராசர சேகரத்திலும், யூகி சிந்தாமணியிலும் சொன்னவர்கள் நம் சித்தர்கள். அவர்கள் சொன்ன வழிமுறைகளைக் கடைப்பிடிப்போம்... ஆரோக்கியமான பிரசவத்துக்கு வழி வகுப்போம்! 

http://www.vikatan.com/news/health/78194-health-tips-for-pregnant-women.art

Link to comment
Share on other sites

களி களிப்பூட்டும்... காப்பாற்றும்! நலம் நல்லது-55 #DailyHealthDose

Nalam_logo_new_20229.jpg

ம் தேசத்தில் ஒரு உசேன் போல்ட்டோ, கஸ்தூரிரங்கனோ, டெண்டுல்கரோ உருவாக ஐந்து வயது வரையிலான அவர்களின் சாப்பாடுதான் ஊக்கமூட்டும். உடல் உறுதி மட்டுமல்ல, நோய் எதிர்ப்பாற்றல், உளவியல் வலிமை, ஒட்டுமொத்த சுரப்புகள், ஹார்மோன்களின் சீரான செயல்பாடு, புத்திக் கூர்மை, விவாதிக்கும் திறன், ஆளுமைத் தன்மை... என அத்தனைக்கும் சிறு வயதில் சாப்பிடும் `காய் பூவாவும் கீரை மம்மும்’தான் அடித்தளம். அவற்றில் முக்கியமான ஓர் உணவு களி. 

களி களிப்பூட்டும்... காப்பாற்றும்

ஒருமித்த வளர்ச்சி இல்லாத குழந்தைகளை ‘வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகள்’ என்று குறிப்பிடுகிறார்கள், உணவியலாளர்களும் குழந்தைகள் நல மருத்துவர்களும். சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான சூழலில் தேவையான அளவு சரிவிகித சம உணவு கிடைக்காதபோதுதான், குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டு முதல் மூன்று வயதுக்குள் சரியான உணவுக் கலாசாரத்தை குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தராவிட்டால், பின்னாளில் நோய்க்கூட்டத்தின் வலுவான பிடிக்குள் அந்தக் குழந்தைகள் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உண்டு. அவர்கள், உணவுக்கூறுகளின் குறைபாட்டால், ஒல்லியாக மட்டும் அல்ல; சில நேரத்தில் குண்டாகவும் ஆகக்கூடும். அதோடு, இளம் வயது சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவையும் வரக்கூடும். 

`என் குழந்தையை சூப்பர் சிங்கர் ஆக்கப்போகிறேன், சானியா மிர்சாவாக ஆக்கப்போகிறேன்’ என நம் இயலாமையையும் தோல்வியையும் ஏமாற்றத்தையும் குழந்தைகளிடம் திணிப்பதற்கு முன்னர், நமக்கு இயல்பாகக் கிடைத்த உணவுப் பழக்கத்தை, கொஞ்சம் மெனக்கெட்டாவது அவர்களுக்குப் புகட்டவேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் நம் பாரம்பர்ய உணவான களியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எளிதாகச் செய்யக்கூடியது.  

கேழ்வரகில் தயாரானது

இரும்பு, துத்தநாகம் (Zinc), சுண்ணாம்பு (Calcium) இந்த மூன்றும் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படாமல் இருக்க மிக அவசியமான நுண் கனிமச் சத்துக்கள். இவற்றுடன் புரதம், சரியான கார்போஹைட்ரேட் மிக அவசியம். சித்த மருத்துவப் பார்வையில், உடலை வளர்க்கப் போதிய அளவிலான இனிப்புச் சுவையும் தேவை. இனிப்பு, என்றால் வெள்ளைச் சர்க்கரை அல்ல. பழங்களில் இருந்து கிடைக்கும் ஃப்ரூக்டோஸ் (Fructose) இனிப்பும், பனங்கருப்பட்டியில் இருந்து கிடைக்கும் இனிப்பும் குழந்தைகளுக்கு அவசியம். இவையெல்லாவற்றையும் இதில் இருந்து பெறலாம்.

இது, ஊட்டம் அளிக்கும் ஓர் உன்னத உணவு. கேப்பை, கம்பு,  உளுந்து, பாசிப்பயறு  என விதவிதமாக இனிப்பு வகைகளாக நம் பாரம்பர்ய உணவு முறையில் களியைச் செய்ய முடியும். அதோடு, இது ஒரு சரிவிகித சம உணவும்கூட. 

ஆரோக்கியம் காக்கும்..! 

* உளுந்தங் களியில் இரும்பு முதலான நுண்கனிமச்சத்துகளுடன் புரதமும் நார்ச்சத்தும் அதிகம். பெண் குழந்தைகளின் கருப்பை வலுப்பெறவும், வயதாகும்போது மூட்டுகளின் `கார்டிலேஜ்’ எனும் தசைநார்கள் வலுப்பெறவும் இது உதவும். திருவாதிரை தினத்தன்று சிவன் கோயிலில் தரப்படும் பாசிப்பயறு களியும், வீட்டுப் பெரியவர்களுக்குத் தரப்படும் வெந்தயக்களியும் அப்படி ஒரு மருத்துவ உணவுதான். 

வெந்தயத்தில் தயாரானது

* சில குழந்தைகள் பிசுபிசுவென இருப்பதாலேயே இதைத் தொட மாட்டார்கள். கையில் ஒட்டும் உணவை உதறும் இந்தப் பிஞ்சுகள்தாம், பின்னாளில் எதிலும் ஒட்டாத வாழ்வியலுக்குத் தயாராகிறார்கள். `சாக்லேட்டிலும் கேன் ஜூஸிலும் இல்லாத சத்து, பணியாரத்துடன் வரும் வெங்காயத் துண்டிலும் கொத்தமல்லிக் கீரையிலும் இருக்கிறது. அது நம் உடம்புக்கு ஹெல்த்தி ப்ளஸ் ஹைஜீனிக்‘ என நாம்தான் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.இதை நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்தால், அப்படி ஒட்டாது. இதைக் கொடுத்து, இதன் பெருமையையும் உணர்த்தலாம்.

உண்மையான ஊட்டச்சத்து உணவு இது என்பதைப் புரிந்துகொள்வோம்... நம் சந்ததியினருக்கும் புரியவைப்போம்! 

http://www.vikatan.com/news/health/78402-the-traditional-pudding-will-ecstatic-and-save-our-children.art

Link to comment
Share on other sites

பெருங்காயம்... கடவுளின் அமிர்தம்! நலம் நல்லது-56 #DailyHealthDose

Nalam_logo_new_17038.jpg

விளையாட்டில் ஆகட்டும்... வாழ்க்கையில் ஆகட்டும்... தோற்றுப்போனவர்களை, `காலிப் பெருங்காய டப்பா’ என சிலர் சொல்வதை நாம் கேட்டிருப்போம். பெருங்காயம் அப்படி குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல. பன்றிக் காய்ச்சல் முதற்கொண்டு புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல்கொண்டது. 

பெருங்காயம்

பெருங்காயத்தின் மணத்தை முகர்ந்து முகம் சுளித்த அமெரிக்கர்கள், ஒரு காலத்தில் அதை, `பிசாசு மலம்’ என்று ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. சமீப காலத்தில் நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப்போல, 1910-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ (Spanish Flu) பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்தது. பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டு, அதை தங்கள் கழுத்தில் தாயத்து மாதிரி அமெரிக்கர்கள் கட்டித் திரிந்தார்கள்; அதற்கு `கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டார்கள்; இது வரலாறு. 

பெருங்காயம் தரும் பெரிய பலன்கள்... 

* தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள். தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச்சுருட்டிக்கொண்டு ஓடும். 

* நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம். 

பெருங்காயக்கட்டி

* பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராத பிரச்னையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும். மாதவிடாய் தள்ளித் தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. 

* குறித்த நாளில் மாதவிடாய் வராமல் தவிக்கும் பெண்கள், வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டால் மாதவிடாய் வந்து, அந்த சூதகக் கட்டும் அகலும். 

* குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து ஒருவகையான திரவம் (லோசியா - Lochia) வெளிப்படும். அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது. 

* அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது. 

* சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தை எடுத்துச் சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையாகச் சாப்பிடவும். பிறகு சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண் (Gastric Oesophagal Reflex Disease-GERD) முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும். 

பெருங்காயத் துண்டுகள்

* நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொள்ளவும். இதை காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டால் வாயுக்குத்து முழுமையாக நீங்கும். ஆனால், அதற்கு முன்னர் வந்திருப்பது ஜீரணம் தொடர்பான வலியா அல்லது ஒருவகையான நெஞ்சு வலியா (Unstable Angina) என உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். 

* இர்ரிடபுள் பௌல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாகப் போகும் குடல் அழற்சி நோய்களுக்கும் பெருங்காயம் பலன் தரக்கூடியது. 

* குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், துளியூண்டு பெருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும். 

* புற்றுநோயிலும்கூட வெந்தயத்தின் தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல்புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பகட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

ஆக, இது `கடவுளின் அமிர்தம்’ என்றே சொல்லாம்...

http://www.vikatan.com/news/

Link to comment
Share on other sites

விளக்கெண்ணெய்... விலக்கக் கூடாத எண்ணெய்! நலம் நல்லது-57 #DailyHealthDose

Nalam_logo_new_17223.jpg

“அந்த ஆளு ஒரு விளக்கெண்ணெய் சார்...” என்று யாராவது, யாரையாவது சொல்லக் கேட்டிருப்போம். ஒருவரைக் குறைத்துச் சொல்வதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், விளக்கெண்ணெய் விசேஷமானது. விளக்கெண்ணெயை, ‘ஆமணக்கின் குருதி’ என்றுகூடச் சொல்லலாம். ஆமணக்குச் செடி மண்ணின் நுட்பமானக் கூறுகளை உறிஞ்சி, உழைத்துச் சேமித்த நுண் மருந்துகள்தான் விளக்கெண்ணெயில் கொட்டிக்கிடக்கின்றன. சுருக்கமாக, விளக்கெண்ணெய் ஒரு நலப்பொக்கிஷம்!

விளக்கெண்ணெய்... விலக்கக் கூடாத எண்ணெய்!

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாகவே இந்தியரிடம் மட்டும் அல்லாமல், சீனர்களிடமும், ரோமானியர்களிடமும், கிரேக்கர்களிடமும்கூட விளக்கெண்ணெயின் பயன்பாடு இருந்திருக்கிறது. 

ஆமணக்கின் இலை, விதை, எண்ணெய் என அனைத்துமே மருத்துவக் குணம் நிரம்பியவை. ஆமணக்கு மற்றும் விளக்கெண்ணெயின் பலன்களைப் பார்ப்போம்... 

* ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்; வீக்கம் வடியும். 

* பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம். 

* சமீபத்திய ஆய்வுகள் ஆமணக்கு இலை, கல்லீரல் நோய்க்கு எதிராகச் செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன. காமாலை, கல்லீரல் சுருக்க நோய், கல்லீரல் செயல்திறன் குறைவுக்கு ஆமணக்கு இலையின் உலர்ந்த பொடி பயனளிக்கும். 

விளக்கெண்ணெய்

* கீழாநெல்லி இலையுடன் ஆமணக்கு, கொழுஞ்சி இலை, கடுகு, ரோகிணி, கரிசாலையைச் சேர்த்து உலர்த்த வேண்டும். பிறகு, இதைப் பொடியாக்கி, காலையிலும் மாலையிலும் அரை டீஸ்பூன் அளவுக்குக் கொடுத்துவந்தால் காமாலை குணமாகும் என, சித்த மருத்துவ அனுபவங்கள் கூறுகின்றன. 

* ஆமணக்கு விதையில் இருந்து மருந்து செய்ய அந்தக் காலத்தில் அதன் பருப்பை அரைத்து, அதற்கு நான்கு மடங்கு இளநீர் அல்லது தண்ணீரைவிட்டுக் காய்ச்சுவார்கள். இப்போது பிற எண்ணெய்களைப்போல பிழிந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. 

* நோய் குணமாக்கலில் `நிணநீர் கழிவு ஓட்டம்’ (Lymphatic drainage) மிகமிக முக்கியமானது. உடலில் இந்த ஓட்டத்தைச் சீராக நடத்தி, எங்கும் வீக்கத்தைக் (Inflammation) கட்டுப்படுத்துவதில் விளக்கெண்ணெய்க்கு நிகர் ஏதும் இல்லை. வெள்ளை அணுக்களை ஊக்குவிக்கும் தன்னிகரற்றச் செயலை இந்த எண்ணெய் செய்கிறது. 

* மூலிகை மருந்தறிவியலில், அமெரிக்காவின் எஃப்.டி.ஏ (The Food and Drung Administration - FDA)-வின் அங்கீகாரம் பெறுவது மிக கஷ்டமான காரியம். அந்தப் பெரும் அமைப்பே, `விளக்கெண்ணெய் பொதுவாகப் பாதுகாப்பானது’ (GRAS - Grossly recognized as Safe) எனச் சான்று தந்துள்ளது. 

* தென் தமிழகத்தில் பருப்பு குழைவாக வர அதனுடன் இரு துளி விளக்கெண்ணெயைவிட்டு வேகவிடுவது மரபு. ஆரோக்கியம் தரக்கூடிய உணவு எனப்படும் ஒரு ஃபங்ஷனல் ஃபுட். ஆகவே, விளக்கெண்ணெய் நம் மரபில் இருந்து வந்தது என்பதை இதன் மூலம் உணர முடியும். `விரேசனத்தால் வாதம் தாழும்’ என்கிறது சித்த மருத்துவம். நன்கு மலம் கழிந்தால் வாத நோய்களாகிய மூட்டுவலி முதல் ஆஸ்துமா வரை பயன் கிடைக்கும் என்பதுதான் அதன் பொருள். அதற்கு விளக்கெண்ணெய் உதவும். 

ஆமணக்கு எண்ணெய்

* பிரசவித்த பெண்களுக்கு மலம் எளிதில் கழிய, ஆமணக்கு எண்ணெயை 10 - 20 மி.லி வரை உடல் எடை, ஆரோக்கிய நிலையைப் பொறுத்து அளவாகக் கொடுக்கலாம். சளி, இருமல், கோழைக்கட்டு உடைய நபருக்கு 20 மி.லி விளக்கெண்ணெயில், 10 மி.லி தேன் சேர்த்துக் கொடுத்தால், மலம் கழிவதுடன் மந்த வயிற்றுடன் இருப்போருக்கு விளக்கெண்ணெயை ஓமத்தீ நீர் அல்லது சுக்குக் கஷாயத்தில் இதைக் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கி, பசி உண்டாகும். 

* சாப்பிட மறுக்கும் குழந்தை, மந்தம் உள்ள குழந்தை, அடிக்கடி வாய்ப்புண்ணுடன் உள்ள குழந்தை ஆகியோருக்கு விளக்கெண்ணெயில் செய்த மருந்துகளைத்தான் சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. இருந்தாலும், சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் இந்த எண்ணெயைப் பயன்படுத்தக் கூடாது. இதன் மலமிளக்கும் தன்மையைச் சீராக அளவறிந்து பயன்படுத்த வேண்டும் என்பதால், விளக்கெண்ணெய் விஷயத்தில் சுயவைத்தியம் சரிவராது. 

* விளக்கெண்ணெய், புண்களை ஆற்றவும், பல்வேறு நரம்பு மூட்டுவலிகளுக்கான மூலிகைத் தைலம் காய்ச்சவும் அதன் அடிப்படைத் தைலமாகப் பயன்படுகிறது. 

மொத்தத்தில் விளக்கெண்ணெய் விலக்கக் கூடாத எண்ணெய்! 

http://www.vikatan.com/news/health/78654-health-benefits-of-castor-oil.art

Link to comment
Share on other sites

புளி அல்ல... மாணிக்கம்! நலம் நல்லது-58 #DailyHealthDose

Nalam_logo_new_17327.jpg

புளி... உணவு மட்டுமல்ல; மருந்தும்கூட என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நம் வீட்டு பொக்கை வாய்ப் பாட்டி இப்படிச் சொல்வார்... `நறுக்கின காய்கறித் துண்டுகளை புளியில கொஞ்சம் ஊறவிட்டு வேகவிடும்மா... மல்லித்தழையையும் பெருங்காயத்தையும் இறக்கும்போதுதான் போடணும்; காயவிடக் கூடாது. அப்புறம் அதுல மணம் இருக்காது.’ இந்த வார்த்தைகளை அதன் முக்கியத்துவம் தெரியாமல் அலட்சியப்படுத்தித்தான் வருகிறோம். 

புளி அல்ல... மாணிக்கம்!

சமீபகாலமாக புளியில் ஊறாத காய், ஏலக்காய் இல்லாத லட்டு, பட்டை போடாத பிரியாணி, மல்லித்தழை இல்லாத ரசம், கறிவேப்பிலை இல்லாமல் தாளிக்கப்படும் சட்னி... என தமிழர்களின் சமையல் பழக்கத்தில் பெரும் மாற்றம்! `ஏம்ப்பா... இப்படி உயிரே இல்லாம சமைக்கிறீங்க?’ என்று பதறிப்போய் கேட்டால், ‘எப்படியும் அது எல்லாத்தையும் சாப்பிடுறப்போ எடுத்து தூரப் போடப் போறோம்... அதை எதுக்கு வேஸ்ட்டா போட்டுக்கிட்டு?!’ என விவரமாக பதில் சொல்கிறது இன்றைய இளைய தலைமுறை. 

`சுவை, மணம், காரம் தூக்கலாக இருப்பதற்காகவே இந்த சமையல் அலங்காரங்கள்’ என்றே நம் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால், அது உண்மை அல்ல. 

ஆங்கிலத்தில் ஸ்பைசஸ் (Spices) என்றால் காரம் என அரைகுறையாகப் புரிந்துகொண்டது முதல் சிக்கல். மல்லி, கறிவேப்பிலை என நீளும் மணமூட்டிகள் உணவை மருந்தாக்கும் அத்தியாவசியப் பொருட்கள் என்பதை மறந்துவிட்டது இரண்டாவது சிக்கல். 

புளி

புளி... மகிமை! 

* ‘புளிக்குழம்பா?’ என அலர்ஜி காட்டும் குழந்தைகளில் பலரும் அதன் சுவையால் அதை ஒதுக்குவது இல்லை. அந்தக் குழம்பின் வண்ணம்தான் அவர்களுக்கு அலர்ஜியை வரவழைத்துவிடுகிறது. கறுப்பு என்றால் அழுக்கு, பழுப்பு என்பது பரவாயில்லாத அழுக்கு என்கிற விஷமத்தனமாகப் பழக்கப்படுத்தப்பட்ட மனநிலை காரணமாகவே புளிக்குழம்பைப் பழிக்கிறார்கள். ஆனால், இது மகத்தான மருத்துவக் குணம் கொண்டது என்பதை ஆப்பிரிக்க அப்பத்தாக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். பல்வேறு வகையான காய்ச்சல், அஜீரணம், சுவாச நோய்கள் ஆகியவற்றுக்கும் புண்ணை ஆற்றும் தன்மைக்கும் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் இதைத்தான் நம்பியிருக்கின்றன. இதை, `ஜர்னல் ஆஃப் எத்னோபார்மகாலஜி’ (Journal of Ethnopharmacology) எனும் மருத்துவ நூல் ஆவணப்படுத்தியுள்ளது. 

* புளிக்கரைசலில் ஊறவைத்து வேகவிடுவதாலேயே, காய்கறிகளின் புரதச்சத்து, பல கனிமச் சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன என்ற தேசிய உணவியல் கழகத்தின் ஆய்வு முடிவுகள், நம் முன்னோர்களின் பழக்கத்துக்குக் கிடைத்த அறிவியல் அங்கீகாரம். 

* இதில் அதிகம் இருப்பது, ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையுள்ள டார்டாரிக் அமிலம். அதோடு வைட்டமின் பி வகைச் சத்துக்கள், கால்சியம், இன்னும் மருத்துவக் குணமுள்ள கூறுகள் (Phytonutrients) நிறையவே உள்ளன. பார்வைத்திறனில் பாதிப்பு உண்டாக்கும் சாதாரணக் கிருமித் தொற்று முதல் வயோதிகம் உண்டாக்கும் பிரச்னைகள் வரை தீர்ப்பதற்கு புளிக்கரைசைலைப் பயன்படுத்தலாமா என ஆய்வாளர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். 

புளியங்காய்

`அதிக சர்க்கரைக்கும், அதிக ரத்தக் கொழுப்புக்கும்கூட புளி வேலை செய்வதில் புலியா?’ என பாகிஸ்தானில் ஆராய்ந்துவருகிறார்கள். 

* `மருத்துவக் குணமும், பட்டையைக் கிளப்பும் ருசியும் கொண்டது’ என உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் ஐரோப்பாவின் `வோர்செஸ்டெர்ஷைர் சாஸ்’ (Worcestershire sauce), ஜமைக்காவின் பிக்காபெப்பா சாஸ் (Pickapeppa sauce) இரண்டிலும் நாம் இளக்காரமாக நினைக்கும் புளிக்கரைசல்தான் மிக முக்கியப் பொருள். 

* நம் ஊர் அம்மன் கோயில் பானகத்தின் ருசிக்கு ஈடு ஏது? அதற்கு யாராவது ஒரு ஆங்கில சாஸ் பெயரை வைத்தால், இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சாப்பிடுவார்களோ, என்னவோ! 

`தாவரக் கூட்டத்தின் மாணிக்கங்கள்’ என்றால் அவை `ஸ்பைசஸ்’ எனப்படும் மணமூட்டிகள்தான். அவற்றில் புளி, நம் ஆரோக்கியம் காக்கும் அற்புதமான மாணிக்கம்! 

http://www.vikatan.com/news/health/78773-health-benefits-of-tamarind.art

Link to comment
Share on other sites

குளிர்பானம்... வயிற்றைக் குப்பையாக்கும்! நலம் நல்லது-59 #DailyHealthDose

Nalam_logo_new_18078.jpg

கோடை காலம் நெருங்கிவருகிறது. கோடையை, இப்போதெல்லாம் அன்றில் பறவை வந்து அறிவிப்பது இல்லை; குளிர்பான கம்பெனிகள்தான் கூவிக் கூவி அறிவிக்கின்றன. உண்மையில், இந்த வெப்ப காலத்தில் நமக்குக் கூடுதல் தண்ணீர்தான் அவசியத் தேவையே தவிர, குளிர்பானம் அல்ல. நம் உடலில் இருந்து கழிவாக வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை, நம் ஊரில் களவாடிய தண்ணீரிலேயே கலந்து, அதில் கூடுதல் சர்க்கரை, உப்புடன் கூடுதல் சுவை ஊட்டியாக குடிப்பவர்களுக்குத் தெரியாத, அடிமைப்படுத்தும் ரசாயன ‘வஸ்து’வைக் கலந்து கொடுக்கும் திரவம், இந்தப் புவியையும் நம்மையும் வெப்பப்படுத்துமே தவிர, குளிர்விக்காது. 

குளிர்பானம்

‘வெளியே போ’ என நம் உடல் விரட்டும் வாயுவை, நன்றாக ஏப்பம் வருகிறது என பிரியாணிக்குப் பிறகு குளிர்பானம் அருந்தும் பழக்கம் இருந்துகொண்டே இருக்கும்வரை, நம்மை ஏப்பமிடும் வணிகமும் இருந்துகொண்டேதான் இருக்கும். குளிர்பானம், ஏப்பம் மட்டும் தராது, ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பில் சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டில் இருந்து, ‘ஏன்ஜைனா பெக்டாரிஸ்’ (Angina Pectoris) எனும் இதயவலியையும் தரும் என்கிறது உணவு அறிவியல். 

குளிர்பானம் தவிர்க்க என்ன செய்யலாம்?

* உக்கிரமான கோடை காலத்துக்கு என எண்ணெய்க் குளியலுடன் சம்பா அரிசி வகைகளையும் எள்ளையும் உளுந்தையும் சாப்பிடச் சொல்லிப் பரிந்துரைத்தார்கள் நம் முன்னோர். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில், சூழல் மீது நாம் நடத்தும் வன்முறைகளால், புவியின் வெப்பம் மேலும் மேலும் உயர்ந்துவருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் `மாலத் தீவுகளைக் காணோம்; நியூசிலாந்தைக் காணோம் என்று சொல்லும் நிலை வரலாம்’ என எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள். வெப்பத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் அதே வேளையில், இந்தப் பூமியையும் காப்பாற்றியாக வேண்டியிருக்கிறது. 

* பதநீர், இளநீர், மோர், நன்னாரி பானங்கள் ஆகியவையே நமக்கான கோடைக் கேடயங்கள். உடல் சோர்வு உடனடியாகத் தீர பானகமோ, கருப்புச் சாறோ போதும். நீர்த்துவம் உடலில் குறைந்து சிறுநீர்ச் சுருக்கு ஏற்படுவதற்கு, லேசான அமிலத் தன்மையுடன் உடலைக் குளிர்விக்கும் புளியைக் கரைத்து பனைவெல்லம் கலந்து உருவாக்கப்படும் பானகம் அருமருந்து. 

பாட்டில் பானங்கள்

* கோடைக்கு புரோபயாட்டிக்காக இருந்து குடல் காக்கும் மோரும், சிறுநீரகப் பாதைத் தொற்று நீக்கும் வெங்காயமும், இரும்பு, கால்சியம் நிறைந்து உடலை உறுதியாக்கும் கம்பங்கூழும் போதும்... எத்தனை உக்கிரமான அக்னி நட்சத்திரத்தையும் சமாளித்துவிடலாம். இந்தப் பொருட்கள், வெம்மையால் வரும் அம்மை நோயையும் தடுக்கும். 

* கோடை காலத்தில் அம்மை, வாந்தி, பேதி, காமாலை, சிறுநீரகக் கல், கண்கட்டி, வேனல் கட்டிகள், வேர்க்குரு... போன்ற வெப்பத்துக்கான பிரதிநிதிகள் விருந்தாளிகளாக வந்து போகலாம். இருந்தாலும், குளியல் முதல் தூக்கம் வரை நாம் க்டைப்பிடிக்கும் சிற்சில நடவடிக்கைகள் மூலம் அவற்றைச் சமாளிக்க முடியும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளியல், மீதி நாள் தலைக்குக் குளியல். எள்ளுத் துவையலுடன், தொலி உளுந்து (முழு உளுந்து) சாதம், கம்பங்கூழ் - சிறிய வெங்காயத்துடன் வாழைத்தண்டு, மோர் பச்சடி, வெள்ளைப் பூசணி-பாசிப்பயறு கூட்டு, உளுந்தங் களி, வெந்தயக் களி, முழு உளுந்து போட்டு ஆட்டிய மாவில் தோசை... எனச் சாப்பிடுங்கள். 

* தர்பூசணிச் சாற்றுடன் மாதுளைச் சாறு கலந்து அருந்தி தாகம் தணிக்கலாம். மோருக்கும் இளநீருக்கும் இணையான கனிமமும் வைட்டமினும் கலந்த பானங்கள் செயற்கையில் கிடைக்காது; அதாவது, குளிர்பானம் அந்த அருமை இல்லாதது. 

* உறங்குவதற்கு முன்னர் ஒரு குளியல் போடுங்கள். அக்குள் போன்ற உடலின் மடிப்புப் பிரதேசங்களில் படர்ந்திருக்கும் வியர்வைப் படிமத்தை அழுக்குப் போக தேய்த்துக் குளியுங்கள். 

குளிர்பானம்

பருவத்தை ஒட்டி வாழச் சொன்னது நம் பாரம்பர்யம். பொருளை ஒட்டி வாழச் சொல்வது நவீனம். உணவில் அரை டீஸ்பூன் காரம் அதிகமாகிவிட்டால் நாம் என்ன ஆட்டம் ஆடுகிறோம்? ஆனால், தினமும் சில மில்லியன் ரசாயனங்களை கடலிலும், காற்றிலும், பூமியின் வயிற்றிலும் கொட்டிவிட்டு, உடல் சூடு தணிக்க, `குற்றாலத்துக்குப் போறேன்; குன்னூருக்குப் போறேன்’ என உல்லாச உலா செல்வது நியாயமா? அங்கேயும் போய் வயிற்றைக் குப்பையாக்க, குளிர்பானம் அருந்துவது தகுமா? 

புவி மீதான நம் அக்கறை அதிகரிக்காவிட்டால், நாம் எதிர்பார்க்காத வேகத்தில் அந்த மலை வாசஸ்தலங்களும் மரணித்துவிடும். அதனால், கோடை காலத்தில் கேட்டு வாங்கிப் பருகுவோம் நீர் மோரையும் பானகத்தையும்! குளிர்பானம்..? கோடைக்கு மட்டுமல்ல எந்தக் காலத்துக்கும் அது நமக்கு வேண்டாம். ‘ஆளை விடுறா சாமி...’ என்று அதைத் தலைதெறிக்க ஓடவைப்போம்! 

http://www.vikatan.com/news/health/78835-why-cool-drinks-are-dangerous-to-your-health.art

Link to comment
Share on other sites

மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும்! நலம் நல்லது-60 #DailyHealthDose

நலம் நல்லது

ன்றைக்கு பார்பி டால்களையும் டெடி பியர்களையும் அணைத்துத் தூங்குகின்றன ஜென் இஸட் குழந்தைகள்! ஒரு காலத்தில் செப்புச்சாமான் விளையாட்டுதான் நம் மருத்துவ உணவு மரபையும், பாட்டி வைத்தியத்தையும் காப்பாற்றி வைத்திருந்தது. அதுதான் மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும் மறைந்துபோகாமல், வழிவழியாக அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த உதவியது. இன்று எட்டிப் பிடிக்கவே முடியாத உயரத்துக்குப் போய்விட்டது அந்த மரபார்ந்த விளையாட்டு! செப்புச் சாமான் சொல்லிக்கொடுத்த வாழ்வியலை, பார்பி பொம்மைகளால் நிச்சயம் கற்றுத் தரவே முடியாது. `ஒல்லி இடுப்புடன் (ஸ்லிம் உணவுப் பொருட்கள் + உடற்பயிற்சிக் கருவிகளுக்கான வணிகம்), விதவித சாயங்களுடன் (அழகு சாதனப் பொருட்களின் விற்பனை), எண்ணெயில்லாத தலைமுடியை விரித்துப் போட்டிருப்பது (அழகு நிலைய வர்த்தகம்) பெண்ணுக்கு அழகு’ என நிலைநிறுத்துவதற்காகவே படைக்கப்பட்டவை அந்த பார்பி பொம்மைகள்.

மகளிர்

பெண் குழந்தைகளுக்கு பார்பி பொம்மைகளை ரோல் மாடலாக்கி, மெல்லிடை உடம்புக்காக, `பசிக்கலை; பிடிக்கலை’ என்று சாக்குப் போக்குச் சொல்லவைத்ததால், வளரிளம் பருவத்தில் பெண்களுக்கு உண்டான நோய்கள் ஏராளம்! பாலிசிஸ்டிக் ஓவரி, அனோரெக்ஸியா நெர்வோஸா, இர்ரிடபுள் பவுல் சிண்ட்ரோம் போன்ற வயிறு, குடல், மனம், சினைப்பை சார்ந்த நோய்கள் பெண்களிடையே பெருகுவதை, இந்தப் பொம்மையின் உளவியலோடு ஒப்பிடும் ஏராளமான ஆய்வு முடிவுகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. முன்னர் மாதவிடாய் நாட்களில் `தீட்டு’ எனக் காரணம் சொல்லி ஒதுக்கிவைக்கப்பட்டாலும், அந்தக் குறிப்பிட்ட நாட்களை ஓய்வாகக் கழித்தனர் நம் பாட்டி, அத்தைமார்கள். ஆனால், இன்றோ `மாதவிடாய்க் கால ஓய்வு’ என்ற ஒன்றே பெண்களுக்கு இல்லாமல் போய்விட்டது. `அந்த நாளிலும் நான் ஆறு செட் டென்னிஸ் விளையாடுவேன்’ என்ற விளம்பரம் தன்னம்பிக்கை கொடுத்தாலும், அது அந்தக் குறிப்பிட்ட நாப்கினை வாங்குவதற்கான தூண்டுதலே தவிர, பெண்ணின் உடல்நலம் மீதான கரிசனம் அல்ல. இப்போதெல்லாம் உதிரப்போக்கு வேதனையைத் தாங்கும் உடல் வன்மையைப் பெண்களுக்கு அளிக்கும் உணவைப் பற்றி யாரும் கண்டுகொள்வதே இல்லை. நவீனம் சொல்லும் தொலி உளுந்து, சோயா, பப்பாளி மட்டும்தான் பெண்ணுக்கானதா? நிச்சயம் இல்லை. மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும் இன்றைக்கு இல்லவே இல்லை.

பார்பி பொம்மை

 பெண்களின் உடல்நலத்துக்கு என பல ரெசிப்பிக்கள் நம் மரபிலேயே இருக்கின்றன. அவற்றில் சில...

* பெண்ணுக்குத் தேவையான பிரத்யேக புரதங்கள் நிறைந்த பருப்பு உசிலி, முக்கியமான ஒன்று. எந்தக் காய்கறியிலும் இந்த உசிலியைச் சேர்த்துத் தயாரிக்க முடியும். குறிப்பாக, கொத்தவரை - பீன்ஸ் ஜோடி ஹிட். கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கொஞ்சம் பெருங்காயம், மிளகாய், உப்புடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில், கடுகு உளுத்தம் பருப்புடன் தாளிக்கும்போது இந்தப் பருப்பு விழுதை வதக்கி, வேக வைத்து, அதன் பின்னர் காய்கறிகளைச் சேர்த்துத் தயாரிக்கவும். பருப்பு உசிலி பெண்களுக்கான புரதம் நிறைந்த ஆரோக்கிய உணவு.  

கதம்ப உசிலி

* நாம் மறந்துபோன காய்களில் ஒன்று அத்திக்காய்; துவர்ப்புத் தன்மைகொண்டது. இதன் கனி, அதிக நார், இரும்புச்சத்து, அனைத்து வைட்டமின்கள் நிறைந்தது. காயாகவும் கனியாகவும் சாப்பிடக்கூடிய அத்தியின் பயன் குறித்து, நம் ஊர் சித்த மருத்துவத்திலும், பைபிளிலும், கிரேக்க இலக்கியத்திலும்கூடச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகள் கண்டிப்பாகச் சாப்பிடவேண்டிய கனி. மாதவிடாய்க்கு முந்தைய நாளில் திடீரென வரும் மூக்கடைப்பு, தும்மலுக்கு சித்த மருத்துவம் சொல்லும் மருந்து அத்திக்காய் பச்சடி.

அத்தி

* வாழைப்பூவைச் சமைப்பது கஷ்டம் என்பதால், கிட்டத்தட்ட அதைத் தவிர்த்தேவிட்டோம். ஆனால், இளம் பெண் குழந்தைகளில் மாதவிடாய் தொடக்கக் காலத்தில் வரும் அதிக ரத்தப்போக்குக்கு வாழைப்பூவும் துவரம் பருப்பும் உணவாகும் மருந்து. பெண் குழந்தைகளுக்கு வாழைப்பூ வடகம் செய்து காயவைத்துக் கொடுக்கலாம்.

வாழைப்பூ

* 11 முதல் 45 வயது வரை மாதவிடாய்க் காலங்களில், இரும்புச்சத்து, கால்சியம் சத்து, புரதச்சத்து என நவீன அறிவியல் பரிந்துரைக்கும் உணவியல் கூற்றுடன் பித்தத்தைச் சீராக்கும் உணவும் பெண்ணுக்கு மிக அவசியம்.

* இன்று பெருகிவரும் `பாலிசிஸ்டிக் ஓவரி’ எனும் சினைப்பை நீர்க்கட்டி வராமல் தடுக்க, குழந்தைப் பருவம் முதலே பெண்களுக்கு உணவுதான் மிக மிக அவசியம். பல குழந்தைகளுக்கு துவர்ப்பும் கசப்பும் பிடிக்காத சுவையாக மாறிவருகின்றன. வெறும் இனிப்பும், கூடுதல் எண்ணெயில் பொரித்தவையும் மட்டுமே குழந்தைகளுக்குப் பிடித்ததாக ஆகி வருகின்றன. இரண்டுமே, பின்னாளில் சினைப்பை நீர்க்கட்டி பெருக அடித்தளம் அமைக்கும். அதிகபட்ச மருத்துவக் குணமுள்ள துவர்ப்பு, கசப்பு சுவையுள்ள காய் கனிகளை சாப்பிடப் பெண் குழந்தைகளைப் பழக்கினாலே போதும்... பல வியாதிகளை நம்மால் விரட்டிவிட முடியும். மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய உணவும் மரபும் நம் பாரம்பர்யம். அதை நினைவில் கொள்வோம்.

மரபுகள் தானாக மாறவில்லை, நாம்தான் தொலைக்கிறோம்... சில சமயம் திட்டமிட்டு; சில நேரம் திருடப்பட்டு!

http://www.vikatan.com/news/health/78976-women-health-was-saved-by-culture-and-foods.art

Link to comment
Share on other sites

‘பயன்படுத்து; பின் கசக்கி எறி!’ - ஓரங்கட்டப்பட்ட நினைவாற்றல்... துணைநின்ற துரித கலாசாரம்! நலம் நல்லது-61 #DailyHealthDose

நினைவாற்றல்  -நலம் நல்லது 

 

தைப்போல அற்புதமான ஒன்று வேறு இருக்க முடியாது... எது? நினைவாற்றல். ‘மறதிகூட ஞாபங்களில்தான் கட்டமைக்கப்படுகின்றன’ என்கிற சு.வெங்கடேசனின் வரிகளுக்குப் பின்னே, கவிதையைத் தாண்டி அறிவியலும் ஒளிந்து நிற்பதுதான் விசேஷம். 

 

நினைவாற்றல் 

 

‘தேவை இல்லாம இதை எடுத்து கையையோ, காலையோ காயப்படுத்திடக் கூடாது’ என்று சில விளையாட்டுச் சாமான்களை நம் பாட்டி பரணில் ஒளித்துவைத்திருப்பார். அதுபோல நம்மைச் சங்கடப்படுத்தும் சில விஷயங்களை அழகாக என்கோடிங் (Encoding) செய்து, ஹிப்போகேம்பளின் (Hippocampus) ஓரத்தில் மூளை ஒளித்துவைப்பதால்தான், நிறையப் பேர் முதல் காதலைச் சௌகரியமாக மறந்துவிடுகிறார்கள். ஆனால், நினைவுகள் குறித்த அறிவியல், பிரமிக்கவைக்கும் புதிர்முடிச்சுகளைக்கொண்டது. 

மூன்று வயதில் 300 திருக்குறள்களைச் சொல்லும் குழந்தை, 11 வயதில் மனப்பாடப் பகுதியைப் படிக்க முடியாமல் கடைசி பெஞ்சுக்கு மாறுகிறது... 17 வருடங்களுக்கு முன் மனதுக்குப் பிடித்தவள் அணிந்திருந்த ஆரஞ்சு நிற ரிப்பன் ஞாபகத்தில் இருக்கும்போது, 15 நிமிடங்களுக்கு முன் எங்கேயோ வைத்த வண்டிச்சாவியை மறந்துவிட்டு வீட்டையே தலைகீழாகப் புரட்டுகிறார் ஒருவர்... இவை எல்லாமே மூளையின் ரசவாதம்தான். 

முளை, தனக்குள் சேரும் புதுப்புதுத் தகவல்களை என்கோடிங் செய்து, சரியான இடத்தில் சேமித்து (Storage) வைத்து, பின்னர் டிகோடிங் (Decoding) செய்துகாட்டும் வித்தையில்தான் நம் நினைவாற்றல் ஒளிந்திருக்கிறது. இந்தச் சூத்திரத்தின் நெளிவு சுளிவைக் கற்றவர்கள்தான் விஸ்வநாதன் ஆனந்தாகவோ, அஸ்டாவதானியாகவோ உருவாகிறார்கள். 

பிறந்த குழந்தையை, தாயின் மடியில் வைத்தால் அதுவாகவே தாயின் மார்புக் காம்பைப் பற்றி பால் அருந்துவதை அறிவியலே வியந்து பார்த்திருக்கிறது. குழந்தைக்கு இந்த அறிவு பிறக்கும்போதே ப்ரீ லோடடு (Pre loaded) ஆக மூளையில் பதியப்பட்டிருக்கிறது போலும். 

நினைவாற்றல்  

செய்திகளை, தற்காலிக நினைவு, நீடித்த நினைவு என மூளை வேறு வேறு வடிவில் பதிவுசெய்யும். தற்காலிக நினைவு ஒலி வடிவில் (Acoustic) மூளையில் பதியும். ஒரு தொலைபேசி எண்ணை செவி வழியில் கேட்டு டயல் செய்த பிறகான 30 நொடிகளில் அந்த எண்ணை நாம் மறந்துபோவது, அந்த அக்கூஸ்டிக் ஸ்டோரேஜ் (Acoustic Storage) எனும் தற்காலிக நினைவாற்றல் மூலமாகத்தான். மூச்சு முட்டும் பணியில் இருக்கும்போது, `வீட்டுக்கு வரும்போது வெண்டைக்காய் வாங்கிட்டு வாங்க’ என்று மனைவி போனில் சொல்வதை, மூளையின் தற்காலிக ஞாபக டிபார்ட்மென்ட்டில் போடுவதால்தான், அந்தக் கணமே மறந்துவிடுகிறோம்; வீட்டில் போய் திட்டு வாங்குகிறோம். 

நாம் கேள்விப்படும் விஷயம், தற்காலிக ஞாபக டிபார்ட்ட்மென்ட்டா... நாள்பட்ட ஞாபக டிபார்ட்மென்ட்டா என்பதை நாம் தெளிவாக முடிவுசெய்து பதியப் பழகிக்கொண்டால் மட்டுமே நினைவாற்றல் மிளிரும். 

இந்தத் துரித உலகில் தூக்கமின்மை, மன இறுக்கம், இரைச்சலான சுற்றுச்சூழல்... எனப் பல காரணிகள் நம் மறதியை அதிகரிக்கின்றன. பள்ளி, பரீட்சை சார்ந்த பணி சார்ந்த, பயன் சார்ந்த விஷயங்களைத் தவிர பிறவற்றை எல்லாம் தற்காலிக ஞாபகப் பதிவில் வைத்துக்கொள்ள நவீனம் கற்றுக்கொடுப்பதில்தான் மனித மூளை கொஞ்சம் மங்க ஆரம்பித்துவிட்டது. 

சாதாரணமாக, 150 தொலைபேசி எண்களை மூளையில் பதிந்து வைத்திருக்கும் நாம் செல்போனில் கணக்கில் அடங்கா எண்களைப் பதியத் தொடங்கியதும், `டேய் மாப்ள... என் சொல்போன் நம்பரை உன் போன் புக்ல பார்த்துச் சொல்லேன்...’ எனக் கேட்கத் தொடங்கிவிட்டோம். நினைவாற்றல் மங்கிப்போவதற்கு எலெக்ட்ரானிக் உபகரணங்களை அதிகமாகப் பயன்படுத்துவதும் ஒரு காரணம். 

அந்தக் காலத்தில் சந்தம் மாறாமல், ஆயிரக்கணக்கில் பதியம் பாடியதற்கு அன்றைய சலனமற்ற நுண்ணறிவும், சிதைவு பெறாத பாரம்பர்ய உணவும், அதிகம் ஆர்ப்பரிக்காத மனமும் முக்கியக் காரணிகள். தவிர, நினைவாற்றல் கூட்டும் எளிய தாவரங்களை உணவாக உட்கொண்டதும் ஒரு காரணம். 

நினைவாற்றல் 

 

நினைவாற்றல் மேம்பட உதவுபவை... 

* வல்லாரைக் கீரை நினைவாற்றல் மேம்பட உதவுவது. வெளி உபயோகமாக நாள்பட்ட புண்களை ஆற்றுவதில் பயன் தரும் இந்தக் கீரையின் தாதுச்சத்துகள், மனதைச் செம்மையாக்கி நல்ல உறக்கத்தையும், தீர்க்கமான நினைவாற்றலையும் தரக்கூடியது. நினைவாற்றலை அதிகரிக்க விரும்புகிறவர்கள், வல்லாரைக் கீரை தோசை சாப்பிடலாம். வலிப்பு நோய்க்கு இதைப் பயன்படுத்தலாமா என்கிற ஆய்வுகள்கூட நடைபெற்றிருக்கின்றன. 

* சங்கு வடிவில் பூக்கும் `சங்குப் பூ’ எனும் மூலிகையும், `நீர்ப்பிரமி’ எனும் பிரமிச் செடியும் நினைவாற்றல் திறனை அதிகரிக்கும் நுண் தாவரக்கூறுகள் கொண்டவை. 

* இயல்பாகவே டி.ஹெச்.ஏ (DHA) அதிகம் உள்ள மீன்கள், பாலிபினால்கள், ட்ரைடெர்பெனாய்ட்ஸ் (Triterpenodis) அதிகம் உள்ள வண்ணக் கனிகள், சிறு தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டாலே போதும், நினைவாற்றல் திறன் கூடும். 

* நடைப்பயிற்சிக்குக் கிடைத்த அலாதியான வரவேற்பு இன்னும் மூச்சுப்பயிற்சிக்குக் கிடைக்கவில்லை. பலர் நினைப்பதுபோல இது ஆக்சிஜன் அள்ளும் விஷயம் மட்டுமல்ல; நுரையீரலின் துணைகொண்டு மூளைச் சுரப்பிகளை, நரம்புகளை, திசுக்களை, நிணநீர் ஓட்டத்தை ஆளும் விஷயம். எனவே, ஞாபகசக்திக்கு மூச்சுப்பயிற்சி நல்லது

`பயன்படுத்து; பின் கசக்கி எறி’ - சித்தாந்தம்கொண்ட துரித நவீன கலாசாரம், நாம் அன்றாடம் கடக்கும் அன்பு, காதல், கரிசனம், மெனக்கெடல், அரவணைப்பு, மரபு பழக்கம்... என எல்லாவற்றையும் மூளையின் தற்காலிகப் பதிவில் மட்டுமே கட்டமைத்துள்ளது. இவற்றை நீடித்த நினைவுக்கு மாற்ற வேண்டும் என்று மனது வைத்தாலே போதும்... நினைவாற்றலை மேம்படுத்திவிடலாம். 

http://www.vikatan.com/news/health/79210-lifestyle-effects-on-memory-power.art

Link to comment
Share on other sites

சாதிக்கும் காய்... ஜாதிக்காய்! நலம் நல்லது-62 #DailyHealthDose 

ஜாதிக்காய் 

 

நம்மவர்களை மட்டுமல்லாமல் உலகையே வசீகரித்த ஒரு மூலிகை, ஜாதிக்காய். அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. மருத்துவக் குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் தரும் பலன்கள் எண்ணற்றவை! 

கடுக்காய் 

 

மலேஷியாவில் பினாங்கிலும், நம் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் உற்பத்தியாகிறது ஜாதிக்காய். உலகெங்கும் செல்வாக்கு செலுத்திவரும் ஜாதிக்காய் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளம். இதற்குக் கிடைத்த அதீத வரவேற்பால், அரபுநாட்டு மாலுமிகள் இதை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதையே பல நூறு ஆண்டுகளாக பெரும் ரகசியமாக வைத்திருந்தார்களாம். 

ஜாதிக்காயின் கனி, ஊறுகாயாகப் பயன்படும், இதன் உள்ளே இருக்கும் விதைதான் ஜாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் ஜாதிபத்திரி. இதில் விதையும் ஜாதிபத்திரி இதழும்தான் மணமும் மருத்துவக்குணமும் கொண்டவை. 

`தாதுநட்டம்’ எனும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு, `சுவாசகாசம்’ எனும் ஆஸ்துமா எனப் பல நோய்களுக்கு, சித்த மருத்துவம் ஜாதிக்காயைப் பரிந்துரைக்கிறது. ஆனாலும் இது அதிகம் பயன்படுவது, ஆண்களுக்குக் காமப் பெருக்கத்துக்கும் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான். 

ஜாதிக்காயில் நம்மை அடிமைப்படுத்தும் போதைப்பொருள், அதன் சத்துக்களில் உள்ளதோ என்கிற சந்தேகம்கூட இடையில் வந்தது. ஆனால், பல ஆய்வுகளைச் செய்து, அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும், போதையூட்டும் வஸ்து அல்ல எனக் கண்டறிந்தனர். 

shutterstock_399016087_15397.jpg 

 

சாதனை படைக்கும் ஜாதிக்காய்! 

* `நரம்பு மண்டலத்தில் நற்பணி ஆற்றுவதால், மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும், ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்’ என்கிறது இன்றைய அறிவியல். 

* ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது’ என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள். 

* ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து, உணவுக்கு முன்னதாக மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும். மேலும், வைரஸ், பாக்டீரியா காரணமாக வரும் அத்தனை வயிற்றுப் போக்குகளுக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்து. 

 

ஜாதிக்காய் 

 

* இனிப்புச் சுவையுடன் கூடிய தனித்துவ மணம் ஜாதிக்காயில் இருப்பதற்கு அதன் மைரிஸ்டிசின் (Myristicin) எனும் சத்துதான் காரணம். தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க, ஜாதிக்காயின் மைரிஸ்டிசின் சத்தை ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் சேர்க்கிறார்கள். 

* ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும்போது சாப்பிடுவது, மனஅழுத்தத்தைப் போக்கி, நரம்பு வன்மையையும், சீரான தூக்கத்தையும் தரும். 

* குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள். 

* ஜாதிக்காய், சணல் விதை, ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம், வெண்கொடிவேலி வேர் (அத்தனையையும் முறையாகச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்) சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றை நன்கு நுண்ணியமாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதை வயிற்றுவலி, மாதவிடாய் தீவிர வலி, மைக்ரேன் தலைவலி ஆகியவற்றுக்குக் கொடுக்கலாம். இவற்றுக்கு இந்த மருந்து உடனடி வலி நிவாரணி! 

மொத்தத்தில் ஜாதிக்காய் நல்லன பலவற்றைச் சாதிக்கும் காய். 

http://www.vikatan.com/news/health/79314-health-benefits-of-nutmeg.art

Link to comment
Share on other sites

சித்தர்களின் ஹைக்கூ... சித்தரத்தை! நலம் நல்லது-63 #DailyHealthDose

சித்தரத்தை

‘இருமலுக்கு சித்தரத்தை, இதயத்துக்குச் செம்பரத்தை... சுக்குக்கு மிஞ்சிய மருந்துண்டா, சுப்பிரமணிக்கு மிஞ்சிய சாமியுண்டா’ என்ற சொலவடைகளில் சுகமாக கைவைத்தியங்கள் ஒட்டியிருக்கின்றன. இருமலுக்குச் சித்தரத்தை என்பதுதான் இந்த அத்தியாயத்தில் நாம் அறியவுள்ள சித்தர் ஹைக்கூ. 

சித்தரத்தை

 

‘தொண்டையில் கட்டும் கபத்தைத் துரத்தும் பண்டைச் சீதத்தைப் பராக்கடிக்கும் கெண்டை விழிப் பெண்ணே!’ - என அகத்திய குணவாகடத்தில் அழகுப் பெண்ணுக்கு ஆரோக்கியக் குறிப்பாக, அரத்தையைக் (சித்தரத்தை) காட்டிப் பாடியுள்ளார் சித்தர். இது இஞ்சிக் குடும்பத்துப் பெண்தான். இந்தியாவில் இஞ்சியைக் கொண்டாடுவதுபோல, தாய்லாந்தும், இந்தோனேஷியாவும், வியட்நாமும் அரத்தை இல்லாமல் அம்மிப் பக்கம் போவது இல்லை. 

அரத்தையில் சித்தரத்தை, பேரரத்தை என இரண்டு ரகங்கள் உண்டு. இரண்டும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றாலும், இதற்கு மருத்துவச் சிறப்பு கொஞ்சம் ஒசத்தி. 

சிறப்பான பலன்கள்...

* கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து, காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால், நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் சளியை, இளக்கிக்கொண்டுவந்து வெளியேற்றி, இருமலைப் போக்கும். 

* சளிக்குக் காரணமான சால்மோனெல்லா (Salmonella), ஸ்ட்ரெப்டோ காக்கஸ் எனப் பல்வேறு நுண்ணுயிரிகளின் கொட்டத்தை அடக்கும் எதிர் நுண்ணுயிரி ஆற்றலும் (Anti-biotic activity) கொண்டது என, இன்றைய நவீன அறிவியலும் அங்கீகரித்துள்ளது. 

* இதை சிறுசிறு துண்டுகளாக்கி, அதில் நான்கைந்து துண்டுகளை, இரண்டு டம்ளர் நீர்விட்டு, மூன்று மணி நேரம் ஊறவைத்து, அந்த ஊறல் கஷாயத்தைச் சாப்பிட்டால் இருமல் போகும்.

 

சித்தரத்தை

 

* சின்னதாக இரண்டு துண்டு சித்தரத்தையை வாயில் அடக்கிக்கொண்டால், பேச்சுக்கிடையே வரும் இருமல் பேசாமல் அடங்கிவிடும். வறட்டு இருமல், சூட்டு இருமலுக்கு, இந்தத் துண்டுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து வாயில் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். 

* வயோதிகத்தில் வரும் மூட்டுவலிக்கும், ரூமட்டாய்டு மூட்டுவலிக்கும் (Rheumatoid Arthritis) அரத்தையையும் அமுக்கராங்கிழங்கையும் நன்றாக உலர்த்தி, பொடித்து வைத்துக்கொண்டு, கால் டீஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து, காலை, மாலை உணவுக்கு முன்னர் 45 நாட்கள் சாப்பிட வேண்டும். இது ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் அழற்சியைப் போக்கி நோயின் தீவிரத்தைக் குறைக்கவும் இந்தப் பொடி உதவும். புற்றுநோய்க்கு, அறுவைசிகிச்சை எடுத்துக்கொண்டாலும், இந்தப் பொடியை செயல்பாடு உணவாக (Functional food) எடுத்துக்கொள்வது கூடுதல் பயனை அளிக்கும். 

சித்தரத்தை

 

* சித்தரத்தை, அதிமதுரம், தாளீசம், திப்பிலி இவற்றைச் சமபங்கு எடுத்து, வறுத்துப் பொடித்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டால், மூன்று மாதங்கள் இதன் திறன் குறையாது. இதன் மருத்துவச் செயல்பாட்டுக்கு, அதன் மாறாத குணம் முக்கியம். அடிக்கடி சளி, இருமல் வரும் குழந்தைகளுக்கு, இரைப்பிருமல் எனும் ஆஸ்துமாவால் அவதிப்படுவோருக்கு, இந்தப் பொடியைக் கால் டீஸ்பூன் எடுத்துத் தேனில் குழைத்து, காலையில் உணவுக்கு முன்னர் கொடுத்து வரலாம். 

நம் ஊர் நாட்டு மருந்துக்கடைகளில் சித்தரத்தை மாதிரி பல அற்புதங்கள், அழுக்குக் கோணியில் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மகத்துவத்தை அறிந்து,  நம் பாட்டன் வீட்டுச் சொத்தான இதை பயன்படுத்தி, பாதுகாப்பாக இருப்போம்! 

http://www.vikatan.com/news/health/79444-health-benefits-of-chitharathai.art

Link to comment
Share on other sites

வில்வம்... மனஅழுத்தம் குறைக்கும்! நலம் நல்லது-64 #DailyHealthDose

நலம் நல்லது

 

சித்த மருத்துவத்தில், பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கியமான மூலிகை வில்வம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்துவரும் அரிய மரங்களில் ஒன்று. பண்டைய நாட்களில், `பழங்களின் ராஜா’ எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வ மரத்தின் இலை, பட்டை, பழம், வேர் அனைத்துமே மருத்துவக் குணம்கொண்டவை.

வில்வம்

வில்வம், மஹாவில்வம் என இதில் இரண்டு வகைகள் உண்டு. பெரும்பாலும், மருத்துவத்துக்கு வில்வமே பயன்படுகிறது. சர்க்கரைநோய், வயிற்றுப்போக்கு, பித்தக் கிறுகிறுப்பு, தலைசுற்றல், ஒவ்வாமை (அலர்ஜி), அஜீரணம், வயிறு உப்புசம் எனப் பல நோய்களுக்கும் வில்வம் மிகச் சிறந்த மருந்து.

வில்வம்... விசேஷம்!

* நாள்பட்ட ஒவ்வாமை நோய் (Atopy), மூக்கில் நீர்வடிதல், நீரேற்றம் உள்ளிட்ட நோய்களுக்கு வில்வ இலை, வேம்பு இலை, துளசி இலை மூன்றையும் சமபங்கு எடுத்து, நிழலில் உலர்த்திப் பொடித்துக்கொள்ள வேண்டும். இதில் அரை டீஸ்பூன் அளவுக்கு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், படிப்படியாக நீரேற்றம் குறையும். ஒவ்வாமையினால் வரும் சைனசிடிஸ் மற்றும் உடல் அரிப்பும் குறையத் தொடங்கும்.

 

வில்வ மரம்

* ஒவ்வாமையால் வரும் இரைப்பு (ஆஸ்துமா) நோய்க்கு, இரவில் ஒன்பது வில்வ இலைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஒன்றரைக் குவளைத் தண்ணீர்விட்டு வைத்திருந்து, காலையில் இலைகளை அகற்றிவிட்டு, தண்ணீரை மட்டும் குடிக்கலாம். படிப்படியாக ஒவ்வாமையைக் குறைத்து, அதனால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.

* 50 கிராம் வில்வ இலைத்தூளுடன் 10 கிராம் மிளகு சேர்த்து, நன்கு பொடி செய்து கலந்துகொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் இதில் அரை டீஸ்பூன் அளவுக்குப் பொடியை எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது, ஈஸ்னோபோலியா (Eosinophilia) என்ற ஒவ்வாமையினால் வரும் நீரேற்றம் மற்றும் மூச்சிரைப்புக்கு நல்ல பயன் அளிக்கும். இந்தப் பழக்கம் இன்றும் தஞ்சை மாவட்டங்களில் ஒரு பாரம்பர்ய முறையாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது.

வில்வ மரம்

* வயிற்றுப் புண்களுக்கு (கேஸ்ட்ரிக் அல்சர்) வில்வம் பழம் சிறந்த மருந்து. இதன் துவர்ப்புத் தன்மையும் மலமிளக்கித் தன்மையும் பசியை உண்டாக்கும்.

* வில்வம் பழத்தில் மணப்பாகு செய்து, பித்தத்தினால் வரும் குன்ம நோய்க்கு (பெப்டிக் அல்சர்) கொடுக்கலாம். இதை நாமே வீட்டில் செய்துகொள்ளலாம். வில்வம் பழச் சதையை 100 கிராமுக்கு 200 மி.லி தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டி, ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து, சிரப் பதத்துக்கு காய்ச்சி, சிறிது தேன் கலந்துகொள்ளவும். காலையில் ஒரு டீஸ்பூன், இரவில் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.

* அஜீரணம், வயிற்று உப்புசம் இரண்டுக்கும் வில்வப் பட்டையைக் கொண்டு செய்யும் வில்வாதி லேகியம் நல்மருந்து.

* சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, வில்வம் ஓர் அற்புத மூலிகை. சிவனுக்கு உகந்தது வில்வ இலை

* வில்வ இலை, வில்வம் பழம் இரண்டும் குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் பேதிக்கு அருமருந்து.

* வில்வப் பட்டை, விளாப் பட்டை, நன்னாரி, சிறு பயறு, நெற்பொரி, வெல்லம் சேர்த்து, ஒன்றரை லிட்டர் தண்ணீர்விட்டு 200 மி.லியாகக் கொதிக்கவைத்து அந்தக் கஷாயத்தைக் கொடுத்தால் வாந்தியோடு வரும் காய்ச்சல் நீங்கும்.

* வில்வ இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி, காது நோய்களுக்கு காதில்விடும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

உளவியல் நோய்களில் முதலாவதான மனஅழுத்தம் நீங்க வில்வம் ஒரு தலைசிறந்த மருந்து. வில்வ இலையைக் கொதிக்கவைத்து முன்னர் கூறியதுபோல் ஊறவைத்தோ, கஷாயமாக்கியோ சாப்பிட்டால், மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும். வில்வம் பழத்தின் `சிரப்’ மணப்பாகு சந்தைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி, தினமும் ஓரிரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.

வில்வம் சிவனுக்கு மட்டுமல்ல... நம் ஆரோக்கியத்துக்கும் விசேஷம்!

http://www.vikatan.com/news/health/79567-health-benefits-of-aegle-marmelos.art

Link to comment
Share on other sites

களை அல்ல... உயிர்காக்கும் மூலிகை! நலம் நல்லது-65 #DailyHealthDose

Nalam_logo_new_18443.jpg

‘களை எடுத்தல்’, ‘களை பறித்தல்’, `களை பிடுங்குதல்’... என வெவ்வேறுவிதமாகச் சொன்னாலும், விவசாயத்தில் நாம் `களை’ என ஒதுக்கித் தள்ளுவது எத்தனையோ அரிய மூலிகைகளை! அது மட்டும் இல்லாமல், சில மூலிகைத் தாவரங்களின் அருமையை அறியாமலேயே, குப்பை மேட்டிலும், கண்ட இடங்களிலும் வளர்வதால் ஒதுக்கித் தள்ளுகிறோம். பிடுங்கி எறிகிறோம். அப்படி களையென ஒதுக்கப்படும் சில தாவரங்களின் மருத்துவக் குணங்களையும் அவை தரும் நன்மைகளையும் அறிந்துகொள்வோமா?

களை

பல்லுயிர் நலனில் அக்கறைகாட்டி வாழ்ந்தவர்கள் நாம். ஆனால், இன்றைக்கோ காடுகளில் தீயைப் பற்ற வைப்பது தொடங்கி, கதிர்வீச்சை அணுக்களில் மோதவிட்டு உருவாக்கும் நியூட்ரினோ துகள்வரை நம் சொகுசுகளுக்காகச் சிதைக்கும் பல்லுயிரியம் சொல்லி மாளாதது. `எனக்கு உதவாத ஒன்று இந்த உலகத்தில் எதற்கு?’ என்ற இறுமாப்பு, மனிதனைத் தவிர வேறு எந்த இனத்துக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி விவசாயத்தில் களை என்ற பெயரில் முளைக்கும்போதே நாம் நசுக்கவோ பிடுங்கி எறியவோ செய்வது விஷச் செடிகளை அல்ல... பல உயிர் காக்கும் மூலிகைகளை. 

விளைவிக்கப்படும் தாவரத்தின் வளர்ச்சியை, அதன் கனிகளின், தானியத்தின் அளவைப் பாதிக்கும் களையை முளையிலேயே கிள்ளி எறிவதில் என்ன தவறு என்ற கேள்விதான் ஆந்த்ரோபோசென்ட்ரிசம் (Anthropocentrism) என்ற, மனிதனை மட்டும் மையப்படுத்தி வாழும் வாழ்வின் உச்சம்! இந்தச் சித்தாந்தத்தில் தொலைந்துவருவது பல்லுயிரியமும், நம் உடல் நலம் காக்கும் மூலிகைக் கூட்டமும்தான். அப்படிப்பட்ட சில களைகளின் அருமை, பெருமைகளைத் தெரிந்துகொள்வோம். 

இவை களைகள் அல்ல... மூலிகைகள்! 

நீர்முள்ளிச் செடி

நெல் வரப்பு ஓரமாக கணுக்களில் முட்களுடனும் இளஞ்சிவப்பு நிறமுடைய பூக்களுடனும் இருக்கும் நீர்முள்ளிச் செடி, இன்று களையாகப் பிடுங்கி எறியப்படும் முக்கியமான தாவரம். இதன் உலர்ந்த செடியை ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமாக்கிக் குடித்தால் இதய நோயிலும், சிறுநீரக நோயிலும், கல்லடைப்பிலும், நாளங்களின் வலுக் குறைவிலும், கால் பாதத்தில் வரும் நீர் தேக்கமுடன்கூடிய வீக்கத்துக்கு அற்புதமான மருந்து. நாள்பட்ட சிறுநீரக நோய்க்கும் நாள்பட்ட ருமட்டாய்டு மூட்டுவலிக்கும்கூட இதைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். 

நீர்முள்ளி

கரிசலாங்கண்ணி

‘தேகராஜன்’ என சித்தர்கள் செல்லமாகக் குறிப்பிட்ட கரிசலாங்கண்ணிக் கீரை அற்புதமான காயகல்ப மருந்து. சித்தர்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பட்ட அன்றைய போகரும், இன்றைய வள்ளலாரும் கொண்டாடிய மூலிகை அது. மஞ்சள்காமாலை, கல்லீரல் பாதிப்பு ஆகிய பிரச்னைகளில் கல்லீரலைப் பாதுகாப்பதில் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை. 

கரிசாலை 

கரிசாலை இல்லாமல் கூந்தல் தைலம் செய்ய முடியாது. `கையில் ரொம்ப நேரம் வெச்சிருக்காதீங்க... உள்ளங்கையில் முடி வளர்ந்திடும்’ என்று அதீதமாக விளம்பரத்தப்படும் பெருவாரியான கூந்தல் தைலங்கள் கரிசாலையில்தான் தயாரிக்கப்படுகின்றன. ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இரண்டு லிட்டர் கரிசாலைச் சாறு மட்டும் சேர்த்து, தண்ணீர் போகும் அளவுக்குக் காய்ச்சி எடுக்கப்படும் தைலம் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும், கார் கூந்தலை வளர்க்கும். 

விஷ்ணுகிரந்தி 

வரப்பு ஓரத்தில் வளரும் மிகச் சிறப்பான மூலிகை இது. காய்ச்சல், இருமல் முதல் பெண்களுக்கு சினைமுட்டையைச் சீராக்குவது வரை சாத்தியப்படுத்தும் விஷ்ணுகிரந்தி, சித்த மருத்துவம் போற்றி வணங்கும் முக்கிய மலர்களில் ஒன்றைத் தரும் தாவரமும்கூட. 

விஷ்ணுகிரந்தி

நெருஞ்சில் 

நாம் வரப்பில் நடக்கும்போது நறுக்கென காலில் குத்தும் `நெருஞ்சில்’ எனும் மூலிகை, ஒரு காதல் காப்பான்! ஆண்களின் விந்தணு மிகக் குறைவாக இருப்பதற்கு, செர்டோலி செல்களின் (Sertoli Cells) அழிவு ஒரு முக்கியமான காரணம். அந்தச் செல்களை மீட்டெடுத்து, விந்தணுக்களின் எண்ணிக்கையைக் கூட்ட உதவும் இந்த நெருஞ்சில். வரப்பில் எலிகளின் எண்ணிக்கை எக்குத்தப்பாகப் பெருகுவதற்கு, நெருஞ்சிப்பழம் சாப்பிட்ட ஆண் எலிகளின் அட்டகாசம்தான் காரணம் என்கிறது ஓர் ஆராய்ச்சி. 

களை

இன்னும் களை என அடையாளபப்டுத்தப்பட்ட சிவகரந்தை, சிறுசெருப்படை, கீழாநெல்லி, விராலி, கற்றாழை, நிலக்கடம்பு என வயலில் நெற் செடி வேளாண்மைக்கு முன்னும் பின்னும் இடையிலும் வளரும் பல தாவரங்களின் பயன்கள் மகத்தானவை.  களை என ஒதுக்கப்படுபவற்றை பாதுகாக்கவேண்டிய அவசியம் இன்றைக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் உரிய முறையில் சேகரித்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் உரிய விவசாயக் கூட்டமைப்பின் மூலம் விநியோகித்தால் பல நன்மைகள் விளையும். குறிப்பாக அதுகூட ஒரு விவசாயியின் கண்ணீரைத் துடைத்து ஆசுவாசப்படுத்தும் முயற்சியாக இருக்கும். 

http://www.vikatan.com/news/health/79777-health-benefits-of-various-weeds.art

Link to comment
Share on other sites

செயற்கை நிறமூட்டிகள்... செழிக்கும் வணிகம்... தொலைந்துபோகும் ஆரோக்கியம்! நலம் நல்லது-66 #DailyHealthDose

Nalam_logo_new_18258.jpg

`வண்ணக் கனவுகள் மட்டும் இருந்தால் போதாது; ஆரோக்கியத்துக்கு, உணவிலும் அவை இருக்க வேண்டும்’ என்கிறது உணவு அறிவியல். சில மணங்களை மனம் ரசிப்பதற்கு, மூளைக்குச் சில நிறங்கள் தேவைப்படுகின்றன. எனவேதான், உணவில் செயற்கை நிறமூட்டும் வணிகம், ஒவ்வோர் ஆண்டும் பல மில்லியன் டாலருக்கு உலக அளவில் நடக்கிறது. இந்த செயற்கை நிறமூட்டிகள் காரணமாக நிச்சயம் செயலிழக்கும் ஆரோக்கியம். இயற்கையாகவே வண்ணம் நிறைந்த காய், கனிகள் நம் உடலுக்கு உரமும் ஊட்டுபவை. 

செயற்கை நிறமூட்டிகள்

ஹோட்டலில் செக்கச்செவேலென பரிமாறப்படும் தந்தூரி சிக்கனையும் சில்லி சிக்கனையும் சாப்பிட்டுவிட்டு கையை சமையல் பாத்திரத்தைக் கழுவுவதுபோல் எலுமிச்சைச் சாறு, சோப்புத் தண்ணீர் எல்லாம்விட்டுக் கழுவுவோம். அதற்குப் பிறகும் இளஞ்சிவப்பாக ஒட்டியிருப்பது, கோழியில் இருந்தோ, குழம்பில் போட்ட காய்ந்த மிளகாயில் இருந்தோ வந்தது கிடையாது. நம் கண்களைக் கவர அதில் தூவப்பட்டிருக்கும் `ரெட் டை 40’ (Red Dye 40) எனும் ஆசோ டையின் (Azo Dye) எச்சமாக இருக்கலாம். 

கோழிக்கு செயற்கை நிறமூட்டுதல்

பெட்ரோலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த ரசாயன நிறமி வகைகள்தான் பஞ்சு மிட்டாய், கேசரி, தந்தூரி சிக்கன்களில் பெருவாரியாகச் சேர்க்கப்படுகின்றன. சிக்கனும், பஞ்சு மிட்டாயும், கேசரியும் ரத்தச் சிவப்பு நிறத்தில் இருந்தால்தான் பிடிக்கும் என்றால், ஒருவேளை நம் ரத்தத்தை வற்றச் செய்யும் புற்றுநோயும் கூடவே வரலாம் என்கின்றன இன்றைய ஆய்வுகள். பல நாடுகள் இந்த நிறமிகளைத் தடை செய்திருக்கின்றன. செயற்கையாக இல்லாமல், இப்படி எத்தனை நிறங்கள் இயற்கை உணவில் இருக்கின்றன என உற்றுப் பார்த்தால் ஆச்சர்யம்! 

தாவரம், தன் வளர்சிதை மாற்றத்தில் சேமித்துவைத்திருக்கும் பொருள்தான் இந்தத் தாவர நிறமிகள். `பாலிபீனால்கள் குழுமம்’ என்று தாவரவியலாளர்களால் அழைக்கப்படும் சத்துக்களில்தான் இந்த நிறமிகளைத் தரும் சத்துக்கள் அனைத்தும் அடங்கும். இவை, தாவரம் தன்னை அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்தும், சில கிருமிகளில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள உருவாக்கிக்கொண்டவை. மனிதன் அதைச் சாப்பிடும்போது, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், மாரடைப்பு போன்ற தொற்றா நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்காதபடி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் பெரும் பங்கு செலுத்துபவை. 

பழங்கள்

பாலிபீனால் எதில் கிடைக்கும்? 

* பால் சேர்க்காத ஒரு கப் தேநீரில் 100 - 150 மி.கி உள்ளது. கிரீன் டீயில் பாலிபீனால் சத்து இதைவிடக் கூடுதலாகக் கிடைக்கும். 

* 100 கிராம் கறுப்புப் பன்னீர் திராட்சையோ, கருநீல நாவல் பழமோ, சிவந்த ஆப்பிளோ, பப்பாளியோ, மாதுளையோ 200 - 300 மி.கி பாலிபீனாலைத் தரக்கூடும். இந்தப் பழங்கள் மிகவும் கனிவதற்கு முன்னர், கொஞ்சம் இளம் காயாக இருந்தால் பீனாலிக் அமிலங்கள் (Phenolic Acids) சற்று அதிக அளவில் கிடைக்கும். அதிகம் பழுக்காத இளம் கொய்யாவை சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதும், `வாழை இளம் பிஞ்சொழிய கனியருந்தல் செய்யோம்’ என சித்த மருத்துவ நோயணுகா விதி பாடியதும் இதனால்தான். 

* அதே நேரம், ஆந்தோசயனின் (Anthocyanin) எனும் நிறமிச் சத்துக்களோ, நன்கு பழுக்கும்போது பழத்தோலில் உருவாகிறது. எனவே, மாதுளை, பப்பாளி, தக்காளி, மாம்பழம் ஆகியவற்றை நன்கு கனிந்த பின்னர் சாப்பிடுவதே சிறந்தது. 

பழங்கள்

* வெறும் வயிற்றில் வேறு உணவு இல்லாத வேளையில் பழங்கள் உள்ளே சென்றால்தான் மருத்துவப் பயன் தரும் அதன் நிறமிச் சத்துக்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படும். `டெசர்ட்’ என்ற பெயரில் பழத்தைக் கடைசி பெஞ்சில் உட்காரவைப்பது தவறு. 

* சமைப்பதில், சேமிப்பதில் கவனம் இல்லாவிட்டால், இந்த பாலிபீனால்களின் பயனை இழக்க நேரிடும். சிறிய வெங்காயம், தக்காளி, முள்ளங்கி, `ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா’ எனும் புளிச்ச கீரை ஆகிய காய்கறிகளிலும், சதகுப்பை முதலான மூலிகைகளிலும் உள்ள `குயிர்செட்டின்’ (Quercetin) எனும் சத்துதான், நம் ரத்த நாளத்தில் கொழுப்புப் படியாமல் இருக்க உதவும் முக்கியமான பாலிபீனால் சத்து. ஆனால், வெங்காயத்தையும் தக்காளியையும் சமைக்காமல் சாலட் ஆகச் சாப்பிடும்போதுதான் முழுப் பயன் கிடைக்கும். வெங்காயத்தை வேகவைக்கும்போது 80 சதவிகிதமும், வறுக்கும்போது 30 சதவிகிதமும் பாலிபீனால்கள் காணாமல்போகும். 

காய்கறிகள்

* பாலிபீனால்கள் உட்கிரகிக்கப்பட, நம் சிறுகுடல், பெருங்குடல் பகுதியில் லோக்டோபேசிலஸ் (Lactobacillus) முதலான புரோபயாடிக்ஸ் இருப்பது நல்லது. இது இயல்பாகக் கிடைப்பது மோரில் மட்டுமே. எனவே, சின்ன வெங்காயத்தின் பயன் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்றால், வெங்காயத் தயிர் பச்சடியாகவோ, வெங்காயம் தொட்டுக்கொண்டு மோர் சோறாகவோ, மோர் சேர்த்த கம்பங்கூழாகவோ சாப்பிடுவது சிறந்தது. 

* வெங்காய பக்கோடா சுவை தரலாம்; ஆனால், சுகம் தராது. அதேபோல் வெங்காயத்தின் வெளி வட்டத்தில்தான் அந்தச் சத்து அதிகம். சுத்தம் செய்கிறேன் பேர்வழி என வெளிப்பக்கம் பூராவையும் உரித்து உரித்து, உள்ளே உள்ள வெள்ளை வெங்காயத்தைச் சாப்பிடுவது புத்திசாலித்தனம் அல்ல. 

இயற்கையாக நிறமும் கொடுத்து, உடலுக்கு உரமும் தரும் பொருட்கள் ஏராளமாக இருக்கும்போது அவற்றைச் சாப்பிடுவதே ஆரோக்கியம். அதைவிட்டுவிட்டு செயற்கை நிறமூட்டிகள் பின்னே போவது நம் சுகமான வாழ்க்கையைப் பாழ்படுத்திவிடும். கேக்கில் மூணு அடுக்கு வண்ணம், பிஸ்கெட் பார்டர் ஒரு வண்ணம், உள்ளே க்ரீம் இரண்டு வண்ணம், குளிர்பானத்தில் புது வண்ணம் எனச் சாப்பிடுவது, கொஞ்சமாக பெட்ரோலும் தாரும் குடிப்பதற்குச் சமம். 

http://www.vikatan.com/news/health/79968-dangers-of-artificial-food-coloring.art

Link to comment
Share on other sites

பாரம்பர்ய அரிசி ரகங்கள் தொலைந்த கதை! நலம் நல்லது-67 #DailyHealthDose

Nalam_logo_new_17283.jpg

ளவாகச் சாப்பிட்டால் அரிசியும் அமிர்தம்தான். பாரம்பர்ய அரிசி ரகங்கள் வெறும் உணவுகள் அல்ல; அவை மருத்துவ உணவுகள். `மணக்கத்தை, வாலான், கருங்குறுவை இந்த மூன்றும் ரணக்கஷ்டச் சில்விஷத்தைப் போக்கும்; குன்றி மணிச்சம்பா கொண்டால் அனிலமறும்’ என்று வகை வகையான பாரம்பர்ய அரிசி ரகங்களின் மருத்துவக் குணங்களைப் பட்டியல் இடுகிறது சித்த மருத்துவம். `நான் டயட்ல இருக்கேன்; சாதம் சாப்பிடறதே கிடையாது’ என்று பெருமையாகச் சொல்லத் தொடங்கியிருக்கும் ஒரு பெருங்கூட்டத்துக்காக நம் பாரம்பர்ய அரிசி ரகங்களின் சிறப்பை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

பாரம்பர்ய அரிசி ரகங்கள்

இன்னும் சர்க்கரை நோய் அரிசியால்தான் என அரைகுறை அறிவில் பேசுவோருக்கு, `நல்ல மணிச் சம்பா, நாடுகின்ற நீரிழிவைக் கொல்லும்’ எனச் சர்க்கரை நோய்க்காரருக்கு என்றே ஒரு ரகத்தைச் சொல்கிறது நம் தமிழர் பாரம்பர்யம். குள்ளக்கார் அரிசியில் இட்லி, தோசையும் மாப்பிள்ளைச் சம்பாவில் மத்தியானச் சாப்பாடும் சாப்பிட்டுப் பாருங்கள்... அன்று முதல் பாரம்பர்ய அரிசிக்கு நீங்கள் அடிமையாகிப் போவீர்கள். 

பாரம்பர்ய அரிசி ரகங்கள் பல `லோ கிளைசெமிக்’ (Low Glycemic) தன்மைகொண்டவை. நிறைய நார்கொண்டவை. கறுப்பு, சிவப்பு நிறங்களைத் தரும் ஆந்தோசயனின் (Anthocyanin) எனும் நிறமிச் சத்துகொண்டவை. சீனாவில் சிவப்பரிசியில் இருந்து அதன் `லைகோபின்’ நிறமியைப் பிரித்தெடுத்து, புற்றுநோய்க்குத் துணை மருந்தாகத் தருகிறார்கள். பெல்ஜியத்தில் உடைத்த குருணைகளை உலகெங்கும் வாங்கி அதன் ஸ்டார்ச்சைப் பிரித்து எடுத்து ஏராளமான உணவியல் கூறுகளை உற்பத்தி செய்கிறார்கள். 

அரிசி சாதம்

ஆனால், இங்கே பிரச்னை என்னவென்றால், இன்றைய தலைமுறையினருக்கு எது நல்ல அரிசி... அதாவது, நம்முடைய பாரம்பர்ய அரிசி ரகங்களின் சிறப்புகள் என்னென்ன என்பதே தெரியாததுதான். 

இன்றைக்கு நாம் அரிசி என்று கொண்டாடும் பட்டை தீட்டி, சீவிச் சிங்காரித்த வெள்ளை அரிசி 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை நம்மிடையே கிடையவே கிடையாது. அன்றைக்கு ஏறத்தாழ 2,00,000 அரிசி ரகங்கள் நம்மிடையே இருந்ததாக அரிசி விஞ்ஞானி ரிச்சாரியா சொல்வார். அப்போதைய பாரம்பர்ய அரிசி ரகங்கள் எல்லாம் ஏக்கருக்கு 0.81 டன் விளைச்சல் தருமாம். 

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, `உணவுப் பற்றாக்குறை ஏராளமாகப் பெருகுகிறது. வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கித்தான் ஆக வேண்டும்’ என்று அதுவரை வேளாண் கலாசாரமாக இருந்ததை வேகவேகமாக வேளாண் தொழிலாக மாற்றின புதுத் தொழில்நுட்பங்கள். அப்போது இந்தோனேஷிய இனத்துக்கும் வியட்நாம் இனத்துக்கும் கலப்பினமாக முதன்முதலாக உருவாக்கப்பட்டதுதான் `ஐ.ஆர்.8’ ரக அரிசி. விளைச்சலில் ஏக்கருக்கு 2.5 டன்னுக்கு மேல் மகசூல் வந்தவுடன் உலகமே இந்த புதுப் படைப்பைக் கொண்டாடியது. அப்படியே கொஞ்ச நாட்களில் மேலும் மேலும் பல ரகங்கள் வந்தன. 

நெல்

நம்முடைய பாரம்பர்ய அரிசி ரகங்களை எல்லா விவசாயிகளும் கிட்டத்தட்ட மறந்தேவிட்டபோதுதான், அவர்களுக்கு ஒரு விஷயம் உறைத்தது. அதாவது, புதிய ரகங்களுக்குத் தேவைப்பட்ட ரசாயன உரச் செலவும், புதிது புதிதாக இந்தப் பயிரைத் தேடி வந்த பூச்சி, புழுக்களும் விவசாயத்தையே ஓட்டாண்டி ஆக்குவது புரிந்தது. அப்போது, `அடடா! பாரம்பர்ய அரிசி ரகங்களுக்கு இந்தப் பிரச்னையே இல்லையே என்று நினைத்தவர்கள் ஏராளம். ஆனால், அதற்குள்ளாக வணிகப்பிடிக்குள் பலமாகச் சிக்கிக்கொண்டது அரிசிச் சந்தை. 

கலப்பின அரிசி ரகங்கள் இன்று விஸ்வரூபம் எடுத்து விதவிதமான இனிஷியல்களில் உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கின்றன. வயிற்றுப் பசி போக்க இவை வந்தனவா, வணிகப் பசிக்கு வந்தனவா என்பது புரியாமலேயே அரிசி என்றால், இன்றைக்கு இருக்கும் அரிசிதான் என்று நாமும் நம்பத் தொடங்கிவிட்டோம். 

கதிர் அறுப்பு

நம்முடைய பாரம்பர்ய அரிசி ரகங்கள் பெற்றிருக்கும் மருத்துவக் குணங்கள் ஒரு பக்கம் என்றால், மண்ணுக்கேற்ற, அங்கு நிலவும் மழை, தட்பவெப்பத்துக்கேற்ற எல்லாச் சூழல்களுக்கும் ஈடுகொடுப்பதில் அவற்றுக்கு உள்ள இயல்பு இன்னொரு பக்கம் அசரவைக்கக்கூடியது. 

களர் நிலத்துக்கென்றே `களர்பாளை’ என ஓர் இனம். வயிற்றுக்கு மட்டும் அல்ல... நாம் வாழும் வீட்டுக்குக் கூரையாகவும் பயன்பட சிறப்பு வைக்கோலையும் சேர்த்துத் தரும் `குள்ளக்கார் ரகம்.’ ஏரியிலும் நீர் தங்கும் இடத்துக்கும் என்றே விளையும் `நீலஞ்சம்பா.’ சில நேரங்களில் படகில் சென்று அந்தப் பயிர்களில் நாம் கதிர் அறுத்திருக்கிறோம். 

லேசான தூறலுக்கே குடை சாய்ந்து, இன்றைய உழவனை மண்ணுக்குத் தள்ளும் உயர் விளைச்சல் ரகங்கள் அல்ல அவை. இன்னும் பூச்சி, புழு தாக்காத தமிழகத்தில் விளையும் ஏறத்தாழ 38 வகை ரகங்களை இந்தியப் பாரம்பர்ய அறிவியல் மையம் பட்டியல் இடுகிறது. 

வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் பாரம்பர்ய அரிசியில் உணவு, மற்ற நாளில் சிறுதானியச் சோறு எனச் சாப்பிட்டால் பயமுறுத்தும் பல நோய்களின் இறுக்கமான பிடியில் இருந்து வேகமாக வெளிவர முடியும். 

இவை எங்கே கிடைக்கும்? ஊருக்கு ஊர் ஆங்காங்கே பாரம்பர்ய உணவு தானியக் கடைகள் உருவாகிவருகின்றன. கொஞ்சம் மெனக்கெட்டால் நிச்சயம் கண்டறிய முடியும்... கொஞ்சம் மெனக்கெடுங்களேன் நம் ஆரோக்கியத்துக்காக! 

http://www.vikatan.com/news/health/80062-lost-story-of-our-traditional-rice-varieties.art

Link to comment
Share on other sites

ஆட்டிசம் தவிர்க்க பல்லுயிர் நேயம் அவசியம்! நலம் நல்லது-68 #DailyHealthDose

Nalam_logo_new_18116.jpg

ட்டிசம், கவனக்குறைவு நோய், அஸ்பெர்கர் நோய் (Asberger Syndrome), இன்னும் இன்னதென வரையறுக்க முடியாத நோய்களால் (Pervasive Development Disorder) பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உலகம் முழுக்க அதிகரித்துவருகிறது. 2014-ம் ஆண்டு கணக்குப்படி, உலக மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் பேர் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்கள்; அமெரிக்காவில் 68 குழந்தைகளில் ஒன்று ஆட்டிசம் பாதிப்போடு பிறக்கிறது. 

ஆட்டிசம்

இந்தியாவில், 2012-ம் ஆண்டு கணக்குப்படி, ஒரு கோடி பேருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது; பிறக்கும் 88 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் (Autism Spectrum Disorder) பிரச்னையோடு பிறக்கிறது. இது கவலையளிக்கக்கூடிய விஷயம். ஆட்டிசத்துக்கான தெளிவான காரணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. `மரபணுக்களின் சீரற்ற நிலை, சுற்றுச்சூழல் மாசு, காற்றில்... மண்ணில் கலக்கும் நச்சு ரசாயனங்களும், கனிமங்களும் காரணங்களாக இருக்கலாம்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

`ஒண்ணேகால் வயசு வரைக்கும் ஒழுங்காத்தான் இருந்தான். `அம்மா, அப்பா’னுகூட அழகாச் சொல்லிட்டுதான் இருந்தான். ஒண்ணரை வயசுக்கு அப்புறம்தான் சேட்டை கூடிப் போச்சு. ஒரு இடத்துல இருக்க மாட்டேங்குறான். ஒண்ணு, எல்லாப் பொருளையும் அடுக்கிவெச்சுட்டே இருக்கான். இல்லைனா, தூக்கி எறியறான். அவனை அடக்கவே முடியலை. பேச மாட்டேங்கிறான். படிக்க மாட்டேங்கிறான்...’ - இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளுடன் வரும் குழந்தைகளைப் பாதித்திருப்பது `ஆட்டிசம்’ எனும் நோய். 

ஆட்டிசம் ஏன்... எப்படி?

ஆட்டிசம், இரண்டு வயதுக்கு முன்னால் பெரும்பாலும் கணிக்கப்படுவது இல்லை. தாய் பாலூட்டும்போது குழந்தையுடன் கண்களால் பேச வேண்டும். தாயின் கண்ணசைவுக்கும் முக பாவனைக்கும் குழந்தை பதிலுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவேண்டியது மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. `மூணாம் மாசத்துல குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும்’ எனப் பாட்டி சொல்வது அனுபவம் மட்டும் அல்ல... அறிவியல். `இப்படி முகம் பார்க்காமல், கண்களைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருக்கலாம்’ என்கிறது நவீன அறிவியல். 

`ஆம்பிளைப் புள்ளை மெதுவாத்தான் பேசும். பொண்ணுங்க எப்பவுமே ரொம்ப சீக்கிரம் எட்டு மாசத்துல பேசிடுவாங்க’ எனச் சொல்லி, இரண்டரை வயது வரை பேசாமல் இருக்கும் தன் மகனுக்கு ஆட்டிசமோ, அதை ஒட்டிய நோய்த்தொகுப்போ இருப்பதைப் பெரும்பாலான பெற்றோர்கள் கணிக்கத் தவறிவிடுவார்கள். அந்தத் தாமதம், குழந்தையை முழுமையாகச் சீராக்கத் தரும் பயிற்சிக்குப் பெரும் தடையாக இருக்கும். 

சிறுவன்

இலக்கியத்தில் நம்மாழ்வார், அறிவியல் உலகின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோர் ஆட்டிசம் நோயால் பாதித்தவர்கள் என்று சில வரலாற்றுத் தகவல்கள் உண்டு. ஆனால், அனைத்து ஆட்டிசக் குழந்தைகளும் அப்படி அல்ல. அதனால் அவர்களுக்கு வெகு விரைவில் பயிற்சி தொடங்கப்பட வேண்டும். 

தன்னுடைய ஐம்புலன்களையும், தடுமாற்றம் இல்லா நிலையும் (Vestibular Sense), தன் மூட்டுகளை ஒருங்கிணைத்து ஓடியாடும் திறனிலும் இந்தக் குழந்தைகளுக்குச் சங்கடங்கள் இருப்பதால், சுற்றியிருக்கும் சூழலுக்கு இசைவாக அவர்களால் இத்தனையையும் ஒருங்கிணைத்துச் செய்ய முடியாது. ஒவ்வொரு புலனும் தனித்தனியே அதிகபட்ச ஆளுமையுடன் இருப்பதும் மிக முக்கியக் காரணம். ஹோவர்டு கார்டனர் (Howard Gardner) எனும் உளவியல் விஞ்ஞானி ஒன்பது வகை அறிவாற்றலை விளக்குகிறார். 

இயற்கையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் அறிவாற்றல் (Naturalistic Intelligence), இசை அறிவாற்றல் (Musical Intelligence), கணக்கிடும் அறிவாற்றல் (Mathematicallogical Intelligence), ஏன் பிறந்தோம், மரணத்துக்குப் பின் என்ன என உள்ளார்ந்த தத்துவத் தேடல்கொண்ட அறிவாற்றல் (Existential Intelligence), பிறரிடம் முழுப் புரிதலுடன் இருக்கும் அறிவாற்றல் (Interpersonal Intelligence), நடன உடலசைவு குறித்த அறிவாற்றல் (Body Kinesthetic Intelligence), மொழி அறிவாற்றல் (Linguistic Intelligence), உளவியல் அறிவாற்றல் (Intrapersonal Intelligence), முப்பரிமாணத்தில் சிந்திக்கும் அறிவாற்றல் (Spatial Intelligence) ஆகியவையே அந்த ஒன்பது திறமைகள். 

ஒரு மனிதனுக்கு, இதில் ஏதாவது ஒன்றோ, பலவோ கண்டிப்பாக இருக்கும். ஆனால், அதை ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்ணை மட்டும் வைத்துக் கணிக்க முடியாது. ஐக்யூ டெஸ்ட்டில் மிகவும் பின்தங்கியுள்ள பலர், இந்த அறிவாற்றல் சிலவற்றில் அதீதத் திறமையுடன் விளங்குவதை உலகம் பார்த்திருக்கிறது. இந்த ஒன்பது திறமைகளில் எது ஒரு குழந்தையிடம் ஒளிந்திருக்கிறது... எந்தப் புலனில் அவனுக்கு / அவளுக்கு ஆளுமை அதிகம் எனக் கண்டறிய பள்ளிகளுக்கு நேரம் கிடையாது: அதற்கென மெனக்கெடுவதும் கிடையாது. அம்மா, அப்பாவுக்குத்தான் அந்தக் கடமை இருக்கிறது. 

100 பொருட்கள் இருக்கும் இடத்தில், ஒன்று மட்டும் மாறுபாடாக இருந்தால், சில ஆட்டிசக் குழந்தைகள் கண நேரத்தில் அதைச் சரியாகக் கண்டுபிடித்து எடுக்கும் திறன் பெற்றிருப்பார்கள். பொதுவாக, கூட்டு விளையாட்டில் பிரகாசிக்க முடியாத இவர்கள், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் முதலான தனி விளையாட்டுகளில் எக்குத்தப்பான திறமையுடன் இருப்பார்கள். அவர்களை உரிய முறையில் முடுக்கிவிட்டால், ஆட்டிசக் குழந்தைகளில் இருந்தும் ஒரு உசேன் போல்ட்டையோ, வான்காவையோ உருவாக்க முடியும். 

குழந்தை

ஆட்டிசக் குழந்தைகளுக்கான உணவுகள்... 

* இவர்களின் பராமரிப்பில் உணவுப் பழக்கத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, குளூட்டன் சத்துள்ள மைதா மாவில் செய்யப்படும் உணவுகளும், கேசின் புரதம் அதிகம் உள்ள பாலும் இவர்களுக்கு நல்லதல்ல. `ஆட்டிசக் குழந்தைகளுக்கு அந்தப் புரதச்சத்துகள் அமினோ அமிலமாகப் பிரிவதற்கு முன்னரே, அரைகுறை நிலையிலேயே குடலில் உறிஞ்சப்படுவதால், ஆட்டிச நோயின் மூளைத் திறனில் பாதிப்பு அதிகம்’ என்கின்றனர் அறிவியலாளர்கள். 

* குளூட்டன் புரதம் இல்லாத பாரம்பர்ய அரிசி ரகங்கள், சிறுதானிய உணவுகள் அவர்களுக்குச் சிறந்தவை. 

* பெஞ்சமின் ஃபெய்ன்கோல்டு (Benjamin Feingold) என்ற மருத்துவர் எந்த அளவுக்கு வண்ணமூட்டி ரசாயனங்களும், பிரிசர்வேட்டிவ்களும், ஆட்டிசத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்பதை ஆய்வில் விளக்கியிருக்கிறார். இப்போது ஃபெய்ன்கோல்டு உணவுமுறை மேலை நாடுகளில் ஆட்டிச நோய்க்கான பிரத்யேக உணவாக இருக்கிறது. பாரம்பர்ய உணவு வகைகளின் சாரம்தான் அது. 

* சித்த மருத்துவ நூற்குறிப்புகளில், ஆட்டிசத்தை ஒட்டிய கருத்துகள் அதிகம் இல்லை. அன்றைய ரசாயனம் இல்லா வாழ்க்கை, குளூட்டன் இல்லா பாரம்பர்ய உணவு, பதற்றம் இல்லா வாழ்வியல் ஆகியவையே இந்த நோயைத் தரவில்லை. 

ஆட்டிசம் சொல்லும் பாடங்கள் நிறைய. காற்றிலும், மண்ணிலும், நீரிலும் கழிக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத கசிவுகளை தினம் தினம் சுவாசித்து வாழ்கிறோம். நாளைய நம் சந்ததிக்கு இந்தத் துணுக்குகளை விட்டுச் செல்கிறோம் என்பதுதான் எபிஜெனடிக்ஸ் (Epigenetics) எனும் வளர்ந்துவரும் மருத்துவ அறிவியல் துறை சொல்லும் உண்மை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பழக்கம் மட்டுமே இந்தப் புவியையும் நம்மையும் இவற்றிலிருந்து பாதுகாக்கும்! 

http://www.vikatan.com/news/health/80181-biodiversity-love-is-essential-to-avoid-autism.art

Link to comment
Share on other sites

சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு! நலம் நல்லது-69 #DailyHealthDose

Nalam_logo_new_17566.jpg

ந்தப் பூமியில் மனிதன் கொண்டுவந்த மிக நுட்பமான முதல் தொழில்நுட்பம் எது தெரியுமா? வேளாண்மை. நீங்கள் ஒரு மூட்டை நெல்லைச் சொந்தமாக விளைவிக்க வேண்டும் என்றால், உங்களுக்குக் குறைந்தது 70 தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும், வானிலை அறிவு உட்பட. அந்த அளவுக்குச் சிறப்புப் பெற்ற வேளாண்மையில் விளைவிக்கப்படும் தானியங்களில் அரிசியோடு சேர்த்து மிக முக்கியமானவை கம்பு, கேழ்வரகு, சோளம். இவற்றில் கம்பு தனிச் சிறப்புகொண்டது. சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம்... கம்பு. 

கம்பு

சோளத்தைப் போலவே கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கே வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று. 

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு. கன்னடத்தில் `பஜ்ரா’ என்று அழைக்கப்படும் கம்பு, கர்நாடகாவிலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம். 

அரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ள இந்தத் தானியத்தை வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும். சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடிபோட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பிறகு உலையில் போட்டு வேகவைத்தால்தான் நன்கு குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில்கூட வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும். 

கம்பங்கதிர்

கம்பு... யாருக்கு ஏற்றது... எப்படிச் செய்யலாம்... என்னென்ன பலனகள்? 

* அனைத்துச் சத்துக்களுமே சற்றுத் தூக்கலாக உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம். 

* கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம். 

கம்பு

* அருமையான நாட்டுக்கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பிறகு அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்யவேண்டியதுதான். பீன்ஸ், கேரட், ரொட்டித்துண்டு போட்டு வெஜிடபுள் பிரியாணியும் செய்யலாம். 

* கம்பு ரொட்டி சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்றது. கம்பில் உள்ள லோ கிளைசெமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச்சத்தினாலும், காலை / மதிய உணவில் இதைச் சாப்பிடும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்னையைத் தராது. 

* அரிசியைப்போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும். தவிர, இதில் உள்ள `அமைலோஸ் அமைலோபெக்டின்’ (Amylose Amylopectin) அமைப்பு நெல் அரிசியைக் காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், ஜீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகும். இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசெமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது. 

கிண்ணத்தில்...

* சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்தவரே பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடக்கூடியது என்பதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம். 

* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரைநோய் உள்ளவர்களில் சிலர் மூன்று வேளையும் சப்பாத்தியே கதி என்று கிடப்பார்கள். இது தேவை இல்லை. சர்க்கரைநோய்க்கான சரியான சிகிச்சையை, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாட்களுக்கு புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழவேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல தானியங்களைக் கலந்து எடுத்துக்கொண்டு, கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழ்ந்தால், சர்க்கரைநோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும். 

* கம்பு, செல்கள் பாதுகாப்புக்கு உதவும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. 

கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது. 

http://www.vikatan.com/news/health/80282-health-benefits-of-pearl-millet.art

Link to comment
Share on other sites

காதல்... பரிசுப் பொருட்களால் மட்டும் முழுமை பெறுவதில்லை! நலம் நல்லது-71 #DailyHealthDose

காதல்... நலம் நல்லது

காதலிக்கிறவர்களுக்கு முக்கியமோ இல்லையோ, வர்த்தகர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது `வாலண்டைன்ஸ் டே.’ காதலர் தினத்துக்காகவே பல நாடுகள் பூக்களின் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்காக, வேறு நாடுகளில் இருந்து பூக்களை இறக்குமதி செய்வது, ஆண்டுதோறும் நடக்கும் வழக்கமாகிவிட்டது. இந்த தினத்தை ஒட்டி இந்தியாவிலும் பரிசுப் பொருட்கள், பூக்கள், வாழ்த்து அட்டைகளின் வியாபாரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிவருகிறது. உண்மையில் காதல், வாழ்த்து அட்டைகள், பூக்கள், பரிசுப் பொருட்களால் மட்டும் முழுமை பெறுவதில்லை. 

காதல்

பூ, சாக்லேட், பரிசு... என இந்த தினம் கொண்டாடப்படுவது ஒருபுறம் மகிழ்ச்சியைத்தான் அளிக்கிறது. ஏனெனில், காதல் சாதி வேற்றுமைகளைக் களையக்கூடியது. இன்னொரு புறம், இந்தத் தினத்தைக் கொண்டாடுவதால் கிடைக்கும் பயன் காலம் முழுக்க நிலைத்திருக்குமா என்றால் `இல்லை’ என்றே வருகிறது பதில்.

‘என்னைப் பொறுத்தவரைக்கும் கல்யாணம்கிறது ஒரு கப் காபி குடிக்கிற மாதிரி!’ என்று சொன்னார் ஒரு பெண்மணி. இத்தனைக்கும் அவர் வேற்று தேசத்தைச் சேர்ந்தவர் அல்ல... சென்னையைச் சேர்ந்தவர். சமீபத்தில்தான் மணமுறிவு பெற்றிருந்தார். அவர் சொன்னது என் மனதை உலுக்கிவிட்டது. இன்று அதிவேகமாக உயர்ந்துவருகிறது விவாகரத்துகளின் எண்ணிக்கை. எதிர்காலத்தில் இது, திருமணம் என்பதன் மீதான நம்பிக்கையை உடைத்துவிடும் என்றுகூடத் தோன்றுகிறது.

குடும்ப வன்முறைகள் மற்றும் யாரோ ஒருவரை அடிமைப்படுத்திச் சுரண்டும் அவல வாழ்க்கை போன்றவற்றில் விவாகரத்துகள் வரவேற்கக்கூடியவையே. மறுமணம் என்பது ஏளனமாகப் பார்க்கக் கூடாதது. அது மட்டும் அல்ல, அத்தியாவசியமானதும்கூட. இன்றைய விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலானவை `மனப் பொருத்தம் இல்லை’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருவதுதான் கவலைகொள்ள வைக்கிறது. 

காதல்

காதலன்-காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து சம்மதம் பெறுபவர்களும் சரி... பெற்றோர் பொருத்தம் பார்த்து மணமுடித்துவைத்த வாழ்க்கைத் துணையை, திருமணத்துக்குப் பிறகு காதலிப்பவர்களும் சரி... மிகக் குறுகிய காலத்தில் `மனப் பொருத்தம் இல்லை’ என நீதிமன்ற வளாகத்தில் நிற்க என்ன காரணம்? உளவியல் மலட்டுத் தன்மை (Mental Impotence) காரணமாக அவதிப்படும் இருபாலரின் எண்ணிக்கையும், `நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?’ என்ற மனோபாவமும்தான் மனப் பொருத்தம் எனும் கட்டடத்தின் அடிச் செங்கலை உடைக்கும் வேலையை அன்றாடம் செய்கின்றன. 

எத்தனையோ பொய்மையும், விமர்சனங்களும் இருந்திருந்தாலும், சில ஆயிரம் ஆண்டுகளாக உழைக்கும் இருவரும் இளைப்பாறும் இடமாக, ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் அமைப்பாக இருந்தவை திருமணங்களும் குடும்ப அமைப்புகளுமே! 

காதல்

ஆண் மீது பெண்ணுக்கு இருந்த நம்பிக்கையும், `குவளை மலரின் மணமுடைய கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணமுடைய பவள வாயினையும் உடையவளே... உன்னைப் பிரிந்தால் இந்த உலகமே எனக்குப் பரிசாகக் கிடைத்தாலும் அதை நான் புறக்கணிப்பேன். உன் காதலே எனக்குப் பெரிது!’ என்ற ஆணின் உறுதியும் உள்ள காதலும், அதில் விளைந்த குடும்பமும் சங்ககாலம் தொட்டு நமக்குப் பழக்கமான ஒன்றுதான். 

ஆனால், நவீன யுகத்தில் பொருள் சேர்க்க, தனக்கான சுய அங்கீகாரத்தைப் பெருக்க அதிக நேரத்தை வீட்டுக்கு வெளியே பலரும் செலவழிக்கிறார்கள்; தத்தம் காதலை `எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில்’ தொலைத்துவிடுகிறார்கள். இதனால் பலருக்கு குடும்பம் ஒரு சுமையாகிப் போய்விடுகிறது, அதை எங்கேயாவது இறக்கிவைக்க நினைக்கிறது மனம். 

காதலர்கள்

காதல் தொலைத்த பெற்றோரால், அன்றாடம் தன் குழந்தையின் சிணுங்கலில் மறைந்திருக்கும் வியாதியை நிச்சயம் கண்டறிய முடியாது. மனம் நொறுங்கி இருக்கும்போது சிறுதானியத்தையோ, சிட்டுக்குருவியையோ கண்கள் தேடாது. களைப்பில் கசங்கிவரும் துணைக்கு, தேன் சேர்த்த பச்சைத் தேநீர் (கிரீன் டீ) கொடுத்துப் புன்னகைக்க மனம் வராது. மாதவிடாய் நிற்கும் நேரத்தில் துணைக்கு கால்சியம் அதிகம் உள்ள மோரும் கம்பு ரொட்டியும் செய்து கொடுக்க வேண்டும் என்ற முனைப்பு வராது. 

அக்கறைகளுக்கும், மெனக்கெடலுக்கும், தேடலுக்கும், இளைப்பாற இடம் தருவதற்கும் காதல் மட்டுமே அடித்தளம்! தனித்து வாழும் வாழ்வில் சுகம் இருக்கக்கூடும். ஆனால், வயோதிகத்தில், எவரும் இல்லாத வெறுமை உயிரோடு இருந்து கொல்லும். 

காதல், நெகிழித் தாளில் சுற்றப்பட்ட ரோஜாக்களுக்குள் தேடப்படவேண்டியது அல்ல. வசீகரிக்கும் வழுவழுப்பான சாக்லேட்டுக்குள்ளும் அது இல்லை. கண்களால் பேசி, புன்னகையால் பசியாற்றி, தோள்களில் தாலாட்டி, உச்சி முத்தத்தில் கருத்தரிக்கும் உயிர் வித்தை அது. 

அடையாளங்களால் அல்ல... அன்பால் காதல் செய்வீர்! 

http://www.vikatan.com/news/health/80673-the-love-not-only-fulfill-with-gifts.html

Link to comment
Share on other sites

முதியவர்கள் சாப்பிட, தவிர்க்கவேண்டிய உணவுகள்! நலம் நல்லது-72 #DailyHealthDose

முதியவர்கள் - நலம் நல்லது

முதுமையில் உணவுத் தேவை மாறுபாடானதாக இருக்கும். தேவையானதை... அதையும் அளவோடு, சாப்பிடவேண்டிய காலம் வயோதிகக் காலம். பசி இருக்காது; மூட்டுக்களில் அதிக வலி வரும்; காது மந்தமாகும்; பார்வை குறையும்; மலச்சிக்கல் ஏற்படும்... இப்படிப் பல பிரச்னைகள் படையெடுக்கும். முதியவர்கள் சாப்பிட தவிர்க்கவேண்டிய உணவுகள், வழிமுறைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். 

முதியவர்கள்

* முதியவர்கள் முதலில் கவனிக்கவேண்டிய முக்கியமான பிரச்னை... தண்ணீர். வயோதிகர்களுக்கு உடலின் எடையில் 60 சதவிகிதம் தண்ணீர்தான் இருக்கும். அதாவது, இளமைக்காலத்தில் இருப்பதைவிட 10 சதவிகிதம் குறைவாக இருக்கும். தேவையான அளவுக்குத் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது, குடிக்க மறப்பது ஆகியவற்றால்தான் முதுமையில் பல பிரச்னைகள் ஆரம்பிக்கும். 

பல முதியவர்கள் உயர் ரத்த அழுத்தத்துக்கு, சர்க்கரைநோய்க்கு, மலச்சிக்கலுக்கு, இதய நோய்க்கு மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். இந்த மருந்துகள் பல நேரங்களில், உடலில் நீர் இழப்புக்கும், ரத்தத்தில் உப்பு சதவிகிதம் குறைவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும். அதனால், சிலருக்கு தலையில் மட்டும் வியர்க்கும்; சிலருக்கு உடல் நடுக்கம் வந்து வெலவெலவென்று ஆட ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் என்ன காரணம்... ரத்தத்தில் சர்க்கரையில் அளவு குறைவதா, அதிகமாவதா என்பது புரியாமல் திணறுவார்கள். சரியான அளவில், சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். 

வயதானதால், உடலின் நீரிழைப்பை அறிவுறுத்தும் தாக உணர்வு இளம் வயதைக் காட்டிலும் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். வீட்டில் உள்ள பேரன், பேத்திகள், `கொஞ்சம் தண்ணி குடிசீங்களா தாத்தா?’ என்று அக்கறையுடன் விசாரித்தாலே போதும், இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடலாம். 

முதியவர்

* செல்லுக்கு இடையில் தங்கி, வயோதிக மாற்றத்தை வேகமாகத் தூண்டுவது ஃப்ரீ ரேடிக்கல்ஸ் (Free Radicals). இதை, விலை உயர்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் மாத்திரைகளைக் கொண்டு தடுப்பது ஒரு வழிமுறை. இதைவிட, அவற்றை இயற்கையாகவே கொண்டிருக்கும் கிரீன் டீ, பப்பாளி, மாதுளை ஆகியவற்றைச் சாப்பிடுவதன் மூலம் எதிர்கொள்ளலாம். 

* முதுமையில் பழங்கள் மிகவும் அத்தியாவசியமானவை. மலச்சிக்கலைப் போக்க கரையா நார்களையும், இதய நாடிகளின் கொழுப்பை அகற்ற கரையும் நார்களையும், செல் அழிவைப் போக்க பாலிபீனால்களையும், ஆற்றலை நீடித்துத்தர `காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’டையும் தருபவை பழங்களே. இவை தினமும் உணவில் ஒரு பகுதியாக இருக்கவேண்டியது முக்கியம். ஆனால், மாம்பழம், சப்போட்டா பழங்கள் முதியோருக்கு ஆகாதவை. இவற்றை பேரன், பேத்திகள் சாப்பிடுவதைப் பார்த்து ஆனந்தப்படுவதோடு தாத்தா-பாட்டிகள் நிறுத்திக்கொள்ளலாம். 

* பழங்களையும் தாண்டி தேவைப்படும் அதிக வைட்டமின் சத்துக்கு, வைட்டமின் பி 6-ம், புரதச் செறிவு அதிகம் உள்ள பாசிப் பயறு போட்டுச் செய்த கீரைக் கூட்டு, பீன்ஸ் பொரியல் மற்றும் வைட்டமின் பி 12 அதிகம் உள்ள கோழி ஈரல் கறி ஆகியவற்றை அவ்வப்போது சாப்பிட்டால் போதுமானது. 

* முதுமையில் கொழுப்புள்ள உணவுகளைக் குறைக்க வேண்டும். அதற்காக, முழுமையாகத் தவிர்ப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் போன்ற எண்ணெய்களின் கலவையைக் கொஞ்சமாகப் பயன்படுத்துவது நல்லது. 

முதுமை

* முதுமையில் எலும்புத் தசைகளின் குறைவால், புரதச் சேமிப்பு குறைந்துபோவதாலேயே உடல் மெலிந்துபோகும். அதை ஈடுகட்ட முளை கட்டிய பாசிப் பயறு, முட்டையின் வெண் கரு, சத்து மாவு ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடவேண்டியது அவசியம். 

* முழங்கால் மூட்டுவலியும் தசைவலிகளும் வயோதிகத்தின் அடையாளங்கள். இவை வராமல் இருக்க, வற்றல் குழம்பு, புளியோதரை போன்ற அமில உணவுகளுக்கு முதியோர் ஆசைப்படவே கூடாது. கடுக்காய், நெல்லிக்காய், கரிசலாங்கண்ணிக்கீரை போன்ற எளிய காயகற்ப மூலிகைகள் வயோதிகத்தின் வரப்பிரசாதம்

* `காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் சாப்பிடுவது வயோதிகத்தில் நோய் வராமல் காக்கும் மத்திரம்’ என்கிறது சித்த மருத்துவம். இதையும் பின்பற்றலாம். 

வீட்டில் இருக்கும் வயதானவர்கள் மருந்தோடு உன்னதமான உணவு, உற்சாகமான மனம் இவற்றோடு உரசல் இல்லாத உறவும் இருந்தால் மட்டுமே வயோதிக வியாதிகளை ஜெயிக்க முடியும். இதை வீட்டின் `வருங்கால வயோதிகர்’கள் உணரவேண்டியது அவசியம். 

http://www.vikatan.com/news/health/80822-tips-for-healthy-eating-in-older-age.html

Link to comment
Share on other sites

உடலுக்கு உரமூட்டும் உள்ளூர்க் காய்கறிகள்! நலம் நல்லது-73 #DailyHealthDose

காய்கறிகள் - நலம் நல்லது

`காளானில் புரதச்சத்து வைட்டமின் நிறைந்திருக்கின்றன; கேன்சருக்கு நல்லது பிராக்கோலி’... என இங்கிலீஷ் காய்கறிகளுக்கு எத்தனையோ முக்கியத்துவம் கொடுக்கும் நாம் ஒன்றை மட்டும் சுலபமாக மறந்துவிடுகிறோம். அது, உள்ளூர்க் காய்கறிகள். முந்தைய தலைமுறையோடு நாம் தொலைத்த எத்தனையோ நல்ல விஷயங்களில் முக்கியமானவை, நாட்டுக் காய்கறிகள். 

காய்கறிகள்

கேரட், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு என ஆங்கிலக் காய்கறிகளைப் பயன்படுத்துவது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆரோக்கியப் பேணல் காரணமாக, அரிசியில் இருந்து கோதுமைக்கு பலபேர் மாறிய பிறகு, வத்தக்குழம்பையும், கத்திரிக்காய் பொரியலையும் மறந்தேவிட்டோம்... இவற்றை சப்பாத்திக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிட முடியாது என்ற காரணத்தால். 

‘கரிக்காய் பொரித்தாள்; 
கன்னிக்காய் தீய்த்தாள்; 
பரிக்காய் பச்சடி செய்தாள்; 
உருக்கமுள்ள அப்பைக்காய் 
நெய் துவட்டல் ஆக்கினாள்’ 

- என்கிறது காளமேகப் புலவரின் பாடல் ஒன்று. அதாவது அத்திக்காய் (கரிக்காய்) பொரியல், வாழைக்காய் (கன்னிக்காய்) தீயல், மாங்காய் (பரிக்காய்) பச்சடி, கத்திரி (அப்பைக்காய்) நெய் துவட்டல் ஆகியவை நம்மைவிட்டுக் காணாமல் போய்க்கொண்டே இருக்கின்றன. 

சிலப்பதிகாரத்தில் உயர்த்திப் பாடப்பட்ட பாகற்காய், பீர்க்கங்காய், கொத்தவரை, மாதுளங்காய் வகைகளில் பாதி இப்போது நம்மிடம் கிடையாது. மிச்சம் இருப்பவையும் வீரிய ஒட்டுரகங்களே. ஆனாலும், நம் உள்ளூர் நாட்டுக்காய்கறிகள் சத்தைப் பொறுத்தவரை இங்கிலீஷ் காய்களுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல. 

சில உள்ளூர்க் காய்கறிகள்... மகத்தான பலன்கள்! 

உணவல்ல ஊட்ட மருந்து... கத்திரிக்காய்!

குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸும் கொண்டது கத்திரிக்காய். இது உடல் எடையைக் குறைக்கவும், கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கும் உதவக்கூடியது. கத்திரிக்காய் விதையில் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது. அதன் கருநீலத் தோலில் இருக்கும் பாலிபீனால்களில் கிடைக்கும் ஆன்டிஆக்சிடன்ட்கள் சர்க்கரைநோய், புற்றுநோய் போன்ற பல தொற்றா நோய்களுக்குப் பலன் தரக்கூடியது. `கத்திரிக்காய் பித்தங்கன்றைக் கபந் தீர்ந்துவிடும். முத்தோஷம் போக்கும்’ என்று பாடியிருக்கிறார்கள் சித்தர்கள். கத்திரிக்காயில் பொய்யூர் கத்திரிக்காய், கண்ணாடிக் கத்திரிக்காய், வரிக் கத்திரிக்காய், பச்சைக் கத்திரிக்காய்... என ஐநூறுக்கும் மேற்பட்ட உள்ளூர் வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் ஒரு மணம், ஒரு குணம் எனப் பண்புகளும் உண்டு. அலர்ஜிக்காரர்கள் தவிர அத்தனை பேருக்கும் நாட்டுக் கத்திரி ஊட்ட மருந்து! 

கத்தரிக்காய்

நரம்பை உரமாக்கும் வெண்டைக்காய் எங்கே?

‘வெண்டைக்காய் சாப்பிட்டால் நன்றாகக் கணக்கு வரும்’ என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஒரு சிறுவனைச் சாப்பிடவைக்க யாரோ சொன்ன கதையாகக்கூட இருக்கலாம். வெண்டைக்காய் குளிர்ச்சி தரும். வயிற்றுப் புண்ணை நீக்கும். சர்க்கரைநோய்க்கு நல்லது என்பதற்கு பல மருத்துவ ஆதாரங்கள் உள்ளன. வெண்டைக்காயை நன்றாக எண்ணெயில் வதக்கிச் சாப்பிடாமல், லேசாக வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. கண்ணாடி, பச்சை, சிவப்பு, கஸ்தூரி... என வெண்டைக்காயில் எத்தனையோ வட்டார வகைகள் இருந்தன. அவையெல்லாம் இன்றைக்கு அருகிப் போய்விட்டன. `ஆபீஸ் வெண்டை’ எனும் ஒட்டு வீரிய ரகத்தைத்தான் இன்று நம் விவசாயிகள் அதிகம் பயிரிடுகிறார்கள். நரம்பை உரமாக்கும் பயனைத்  கஸ்தூரி வெண்டைக்காய். அந்தப் பலன் ஆபீஸ் வெண்டையில் கிடைக்காது என்பதே உண்மை.  

வெண்டைக்காய்

ஆண்மைக் குறைவுக்கு நல்லது அவரைக்காய்! 

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்; புரதச்சத்தையும் வைட்டமின் பி சத்தையும் சேர்த்துத் தரும். அவரைக்காயின் விதை ஆண்மைக் குறைவுக்கு மிக நல்லது. அவரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்த கொத்தவரங்காயை வாய்வுக் குத்து என நம்மில் பலர் ஒதுக்கிவிடுவதும் உண்டு. இதன் விதையில் உள்ள பிசின் `குவார் கம்’ (Guar Gum) உலகில் மிக அதிகமாகத் தேடப்படும் ஒரு பிசின். இதில் உள்ள நார்ச்சத்துகள் ரத்தக் கொழுப்பைக்கூடக் குறைப்பதற்கு உதவும் என்கிறார்கள். 

சில உள்ளூர்க் காய்கறிகள்... பலன்கள்! 

* வெள்ளைப் பூசணி, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை எளிதாகப் போக்கிவிடும். 

* கோவைக்காய் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். 

* சுரைக்காய் சிறுநீரகக் கல்லை வெளியேற்ற உதவும். 

* பீர்க்கங்காய் உடல் சூட்டைத் தணிக்கும். இது, சிறுநீர் எரிச்சலைப் போக்கும் உப்பு கனிமச் சத்துக்கள் நிறைந்தது. 

நாட்டுக் காய்கறிகள் நம் நல வாழ்வுக்கான நம்பிக்கைகள்!

http://www.vikatan.com/news/health/80935-health-benefits-of-country-vegetables-in-tamil-nadu.html

Link to comment
Share on other sites

‘உடனடி’ கலாசாரம்... புற்றுநோய்க்குக் காரணமாகும்! நலம் நல்லது-74 #DailyHealthDose

புற்றுநோய் - நலம் நல்லது

பெயரைக் கேட்டாலே நடுக்கத்தை ஏற்படுத்தும் நோய், புற்றுநோய். குழந்தைகள் தொடங்கி முதியோர்வரை, யாரை வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளத் துடிக்கும் அரக்கன் இது. புற்றுநோய் உருவாகக் காரணம் என்ன? மருத்துவமும் அறிவியலும் எத்தனையோ ஆயிரம் காரணங்களை அடுக்குகின்றன. இருந்தாலும் முக்கியமான ஒரு காரணம், நம் வாழ்க்கை முறை! முக்கியமாக உடனடி கலாசாரம்.

மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்துக்கொண்டே கடந்துபோகிறோம். நச்சுக் கழிவுகள் குப்பைகளாகக் கொட்டப்படுவதைச் சாதாரணமாகப் பார்க்கிறோம். பிளாஸ்டிக் கவருக்குள் அடைக்கப்பட்டு, `ஆறு மாதங்களுக்குக் கெட்டுப் போகாது’ என்கிற உத்தரவாதத்தோடு சந்தைக்கு வரும் உணவுகளை வாங்கிச் சாப்பிடுகிறோம். புகையை சுவாசிக்கிறோம்; நச்சுக் கலந்த தண்ணீரைக் குடிக்கிறோம்; ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் சேர்ந்திருக்கும் உணவைச் சாப்பிட்டு வாழ்கிறோம்... ஆக, புற்றுநோய் வரத்தானே செய்யும்? 

பிளாஸ்டிக் ஆதிக்கம்

இன்றைய பரபரப்பான உலகில், மற்றவரிடம் அக்கறைகொள்ளவோ, கரிசனத்தோடு நடந்துகொள்ளவோ முடியாத நிலையில்தான் நம்மில் பலர் இருக்கிறோம். அதோடு, இன்றைய உலகில் வேகமாகப் போட்டி போடுவதை முன்னிட்டு உடனடி கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம். இந்த உடனடி கலாசாரத்தை மாற்றிக்கொள்வதில் இருந்தே மாற்றத்தைத் தொடங்கிவிடலாம். `இன்ஸ்டன்ட்’ அல்லது `ரெடி டு ஈட்’ சமாசாரங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடங்கி, முதல் நாள் செய்ததை ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சாப்பிடுவது வரை எங்கெங்கும் அவசர யுகப் பயன்பாடே வியாபித்து இருக்கிறது. 

நாம் சமைக்கும் உணவு சில மணி நேரங்களிலேயே கெட ஆரம்பித்துவிடும் என்பது இயற்கையின் நியதி. புளிக்கத் தொடங்குவது, பூஞ்சைகள் வளர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நிகழ்வது இயல்பு. அந்த இயற்கையைச் சிதைத்துவிடுகின்றன உடனடி சாப்பாட்டுச் சமாசாரங்கள். பூஞ்சை வளராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமணம் கெடாமல் இருக்க நைட்ரஜன் ஃப்ளஷ்ஷிங்... இன்னும் என்னென்னவோ தேவைகளுக்காக விதவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுத்தான் `உடனடி உணவு’ என சந்தைக்கு வருகின்றன. அதுவும் பாலிதீன் பை அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு வரும் அந்த உணவுகளை ஃப்ரிட்ஜுக்குள்தான் வைக்கிறோம். இது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் விஷயம்தானே! 

மாசடைந்த நிலம்

`மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம். வாய்ப்பு இருக்கும்போது சமைத்து, வசதியாக ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடலாம் என்கிறது இன்றைய தமிழ்க் குடும்பம். பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை ஊற்றி ஃப்ரிட்ஜில் வைப்பது, காய் கனிகளை பிளாஸ்டிக் பையில் பிரித்து வைப்பது,  முதல் நாளே காய்களை நறுக்கி பிளாஸ்டிக் பையில் போட்டு ஃப்ரிட்ஜில் வைப்பது... இவையெல்லாம் நம் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ள நாமே வகுத்துக்கொள்ளும் வழிகள். 

அதிகச் சூட்டிலும், அதிகக் குளிரிலும்தான் பிளாஸ்டிக்கில் இருந்து `டயாக்ஸின்’ வாயு வெளியாகும். இரவு முழுவதும் ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் பையில் இருந்து கசியும் டயாக்ஸின், உள்ளே இருக்கும் பீன்ஸ் துண்டுகளுக்குப் போயிருக்கும். பிறகு, அந்த பீன்ஸ் பொரியல், புரோட்டீன் தருமோ என்னவோ... கண்டிப்பாகப் புற்றுநோயைத் தரக்கூடும். 

புற்றுநோய்க்கான காரணிகளில் மிக முக்கியமாகப் பேசப்படுவது பிளாஸ்டிக்கும் டயாக்ஸின், பென்சீன் வகையாறாக்களும்தான். சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகைமை வெளியிட்டு இருக்கும் புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளின் பட்டியலில், தொகுதி 1-ல் பிளாஸ்டிக் துணுக்குகள் உள்ளன. (தொகுதி 1 காரணி என்றால், அது உறுதியாகப் புற்றுநோயைத் தோற்றுவிக்கும். தொகுதி 2, 3 எல்லாம் அவ்வளவு உறுதிப்படுத்தாத காரணிகள்).

`நீர்க் காய்கறியைக் கூட்டாக வைக்க வேண்டும்; பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும், முற்றிய காயைப் பொரியலாகச் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல; காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக்கரைசலில் வேகவிடவும் வேண்டும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். `புளியில் வேகவைத்தால் அதன் புரதச்சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை. நீர்க் காய்கறிகளில் மிதந்து நிற்கும் வைட்டமின்கள், வற்றவிடாமல், வடித்துக் கொட்டாமல் கூட்டாகச் செய்யும்போது அதன் பயன் சற்றும் கெடாது’ என்கிறது தேசிய உணவியல் கழகம். 

ரெடிமேட் உணவுகள்

சரி... ரெடி டூ ஈட் வேண்டாம். உடனடி கலாசாரத்தைத் தவிர்த்துவிடுவோம். அப்படியானால், மாற்று உணவு என்ன? நிறைய இருக்கின்றன. முக்கியமானது அவல். கைப்பையில் கொஞ்சம் சிவப்பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்லமும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்பு தயார். கால் மணி நேரம் ஊறவைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியையும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும். 

உடனடியாகச் செய்யக்கூடியது கேழ்வரகு லட்டு. கேழ்வரகு, கால்சியம் நிறைந்த ஒரு தானியம். அதை வாணலியில் வறுத்து, பனைவெல்லம் அல்லது வெல்லத்தை நன்கு உதிர்த்து அதில் கிளறிப்போட்டு, சூடாக இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு சூட்டோடு உருண்டையாகப் பிடித்துவையுங்கள். இரும்பு, கால்சியம், புரதம் இன்னும் உடலுக்குத் தேவையான பல கனிமங்கள் நிறைந்த இந்த உருண்டை ருசியோடு பசியாற்றும். 

சர்க்கரைநோய் இருப்பவர்கள், பொரி வாங்கிக்கொள்ளலாம். அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள், காரம் சேர்த்து பொட்டலம் கட்டிக்கொள்ளலாம். இப்படி நிறைய உண்டு. 

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... உடனடி கலாசாரத்துக்கும்!

http://www.vikatan.com/news/health/81058-modern-culture-causes-cancer.html

Link to comment
Share on other sites

உணவே மருந்தாக... மருந்தே உணவாக.. உதவும் பொடிகள்! நலம் நல்லது-75 #DailyHealthDose 

சில அத்தியாவசியமான பொடிகள் நம் வீட்டில் இருந்தால், நாம் மருத்துவமனைப் படிகளை அதிகம் மிதிக்கவேண்டிய அவசியம் இருக்காது. இந்தப் பொடிகளை சாதத்தில் பிசைந்தும், தேநீரில் கலந்தும், கஷாயமாகவும் தேவைப்படும் சமயத்தில் சாப்பிடும் மரபு, நம்மிடம் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. அதை மீண்டும் மீட்டு எடுப்போம். `உணவே மருந்தாக... மருந்தே உணவாக’ நல வாழ்வு வாழ்வோம். அதற்கு உதவும் பொடிகள்... 

பொடிகள் 

 

அஷ்ட சூரணம்! 

சிலருக்கு சாப்பிட்டு முடித்ததும் புளித்த ஏப்பம் வரும்; வயிறு உப்பிப் போகும்; லேசான அமிலத்துடன் சாப்பிட்ட ரசவடையின் வாசம் தொண்டை வரை எட்டிப் பார்க்கும். இவர்களுக்குத்தான் இந்த அஷ்ட சூரணம். சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம் இவற்றை சம அளவில் எடுத்து வறுத்துப் பொடித்துக்கொண்டு, சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் வாயுக் கோளாறு குறையும். கழுத்துவலி இருந்தால் அதுவும் மட்டுப்படும். 

சுண்டவற்றல் பொடி 

சுண்டவற்றல் பொடி! 

குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களுடன் சில சமயங்களில் வயிற்றுப் போக்கும் ஏற்படும். அந்த நேரத்தில் அருமருந்து இந்த சுண்டவற்றல் பொடி! சுண்டவற்றலுடன் கறிவேப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு, மாதுளையின் ஓடு, ஓமம், வெந்தயம், நெல்லிக்காய் வற்றல் ஆகியவற்றை தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இவற்றை தனித்தனியே வறுத்து, பொடித்து, கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைக் குழந்தைகளுக்கு கைப்பிடி சாதத்தில் கலந்து, பிசைந்து கொடுக்கலாம். மாங்கொட்டையையும், மாதுளம் பழத்தோலையும் தூர எறியாமல், நன்கு கழுவி உலர்த்திவைத்துக்கொண்டால் இவை அனைத்தையும் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். 

பெரியவர்களுக்கு கொஞ்சம் மாற்றி செய்து கொடுக்க வேண்டும். சுண்டக்காயை சிற்றாமணக்கு எண்ணெயில் வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை தேவையான அளவுக்குச் சேர்த்து மொத்தமாக வறுத்து, பொடி செய்துகொள்ளலாம். இதைச் சிறிது சாதத்தில் கலந்து சாப்பிட்டால், செரிமானம் சீராகும்; மூல நோய் பிரச்னை குறையும். 

மிளகு கற்பப் பொடி! 

தினமும் உணவில் மிளகு சேர்க்கவேண்டியது அவசியம். 200 கிராம் மிளகை மூன்று நாட்கள் மோரிலும், அடுத்த மூன்று நாட்கள் இஞ்சிச் சாற்றிலும், இப்படி மூன்று மூன்று நாட்களாக வேலிப்பருத்தி, தூதுவளை, கற்பூரவல்லி, ஆடுதொடா இலைச் சாறு ஆகியவற்றில் ஊறவைத்துப் பிறகு உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், சுக்கு, அதிமதுரம், திப்பிலி, கடுக்காய் அனைத்தையும் வகைக்கு 25 கிராம் அளவுக்கு சேர்த்து ஒன்றாக வறுத்து, இடித்து பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடியை சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு கொடுப்பதற்கு முன்னர் தேனில் மூன்று சிட்டிகை போட்டு, குழைத்துக் கொடுக்கலாம். நாளடைவில் சளி வெளியேறி, மூச்சிரைப்பு நிற்கும். மீண்டும் வராத அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். 

 

வெந்தயக் கூட்டுப் பொடி 

வெந்தயக் கூட்டுப் பொடி! 

வெந்தயம், ஆவாரம் பூ, திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்), நாவல் கொட்டை, கறிவேப்பிலை அனைத்தையும் சம அளவில் எடுத்துப் பொடித்துக்கொள்ளவும். இந்தப் பொடியை 1/2 டீஸ்பூன் சாப்பிட்டுவிட்டு, மதிய உணவைச் சாப்பிட்டால், வரவிருக்கும் சர்க்கரைநோயைத் தள்ளிப்போடும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு அதன் தீவிரத்தைக் குறைக்க உதவும். கறிவேப்பிலையும் வெந்தயமும் கலந்திருப்பதால், கெட்ட கொழுப்பும், திரிபலாவின் துணையால் மலச்சிக்கலும் குறையும். 

சிற்றரத்தைப் பொடி! 

நாட்டு மருந்துக் கடைகளில் இந்தப் பொடி கிடைக்கும். இதில் 2 சிட்டிகையை எடுத்து தேனில் குழைத்து குழந்தைக்குக் கொடுத்தால் இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு, சிற்றரத்தையுடன் அதிமதுரத்தை சமபங்கு எடுத்துச் சேர்த்துக் குழைத்துக் கொடுக்க வேண்டும். 

சுக்குக் கஷாயப் பொடி 

சுக்குக் கஷாயப் பொடி! 

சுக்கு, கடுக்காய், சீந்தில், நிலவேம்பு, பேய்ப்புடல் அனைத்தையும் வாங்கி நன்கு சுத்தம் செய்யவும். இவற்றை உலர்த்தி, வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, பொடிசெய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளவும். ஜுரம் வந்தால், இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 200 மி.லி தண்ணீரில் போட்டு, அந்தத் தண்ணீர் 50 மி.லி ஆகும் வரை வற்றவைத்துக் கொள்ளவும். காலை, மாலை வேளைகளில் டீ குடிப்பதற்கு பதிலாக இந்தக் கஷாயத்தை மூன்று நாட்கள் இரண்டு வேளை சாப்பிட்டால், ஜுரம் காணாமல் போகும். 

தாது கல்ப பொடி! 

உலர்த்திய முருங்கைப் பூ, நிலப் பூசணி, அமுக்கரா கிழங்கு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, பாதாம் பிசின், முருங்கைப் பிசின் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். ஆளி விதை, சப்ஜா விதை, பூனைக் காலி விதை இவற்றை முதலில் எடுத்தவற்றில் பாதி அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். இரவு இளஞ்சூடான பாலில் இந்தப் பொடியை 1/2 டீஸ்பூன் அளவுக்குக் கலந்து சாப்பிட்டால் உடலுறவில் நாட்டம் மிகும்; விந்தணுக்களின் எண்ணிக்கை பெருகும். 

கடுக்காய்ப் பொடி 

கடுக்காய்ப் பொடி! 

கடுக்காய்ப் பிஞ்சை விளக்கெண்ணெயில் லேசாக வறுத்து, பொடித்து காற்றுப் புகாத இறுக்கமான பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். சாப்பாட்டுக்குப் பிறகு 30-40 நிமிடங்கள் கழித்து 1/2 டீஸ்பூன் பொடியை வெந்நீரில் கலக்கி இரவில் சாப்பிடவும். மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின் தீவிரத்தைப் பொறுத்து, பொடியின் அளவை 2 டீஸ்பூன் வரை அதிகரித்துச் சாப்பிடலாம். 

ஆரோக்கியம் காக்கும் இந்தப் பொடிகளை பத்திரமாகப் பாதுகாக்கவேண்டியது அவசியம். இவை ஆயுளுக்கும் நலம் பயக்கும் நல் மருந்துகள்! 

http://www.vikatan.com/news/health/81328-health-benefits-of-homemade-powders.html

Link to comment
Share on other sites

கசப்பு, துவர்ப்பு... நோய் எதிர்ப்பு சக்தி தரும் இயற்கை கேடயங்கள்! நலம் நல்லது-76 #DailyHealthDose

கசப்பு, துவர்ப்பு

ம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உச்சத்தில் வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். இன்றைக்கு உடல் உழைப்பு குறைந்த நிலையில், ஒவ்வோர் உணவோடும் வணிக ரசாயனம் ஒட்டிக்கொண்ட இன்றைய நவீன வாழ்வியலில், நோய் எதிர்ப்பு சக்தி வீரியம் இழக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அதை மீட்டெடுக்க சின்னச் சின்ன அக்கறைகளே போதும். கசப்பு, துவர்ப்பு சுவைகளை உணவில் சேர்ப்பதை நம்மில் பலர் மறந்தேவிட்டோம். இவை இரண்டும் அன்றாடம் ஏதேனும் ஓர் உணவில் இருந்தால் நோய்க்கு எதிரான இயற்கைக் கேடயங்கள் போலவே செயல்படும். 

கசப்பு துவர்ப்பு

அறு சுவைகளையும் நாம் தினசரி உணவில் சேர்ந்திருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. காளமேகப் புலவர் பதிவில் வரும், `கரிக்காய் பொரித்தாள், கன்னிக்காய் வாட்டினாள், பரிக்காய் கூட்டினாள், அப்பக்காய் துவட்டினாள்..’ என்ற பாடலில் சொல்லப்பட்டவை வெறும் காய்கறிகள் பெயர் மட்டும் அல்ல. அந்தக்கால உணவில் துவர்ப்பான அத்தி, புளிப்பும் துவர்ப்புமான மாங்காய், துவர்ப்பும் இனிப்புமான வாழைக்கச்சல், கசப்பும் துவர்ப்புமான கத்திரிக்காய், எல்லாவற்றையும் சேர்த்துச் சமைக்கும்போது ஒரு சிட்டிகை கடல் உப்பு... என அனைத்து சுவைகளும் கலவையாக இருந்தன என்பதும் குறிப்பிடப்படுகிறது. 

இன்றைக்கு அதே உணவு, கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழம், `கேவண்டிஷ்’ வாழை, பி.டி.கத்திரிக்காய், அயோடைஸ்டு உப்பு என மாறிவிட்டது. இதை நாம் உண்டால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்குமா அல்லது நோயை வாங்குவோமா என்பதை அதை உருவாக்கியவர்கள்தான் சொல்ல வேண்டும். 

சில இயற்கை உணவுகளில் கசப்பு, துவர்ப்பு சுவைகள்... 

* அதிகமான கசப்பு சுவை உடைய நிலவேம்புக்குள் டெங்கு ஜுரத்தைக் குறைக்கும் கூறு ஒளிந்திருக்கிறது. 

* பன்றிக் காய்ச்சலுக்கு மருந்தான டாமிஃப்ளூ (Tamilflu) தயாரிக்கப் பயன்படும் ஷிகிமிக் அமிலம் (Shikimic Acid), பிரியாணிக்குப் போடும் அன்னாசிப் பூவின் கசப்பில் இருக்கிறது. 

* புற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும் கசப்பும் துவர்ப்புமான ஃபீனால்கள், பால் சேர்க்காத கிரீன் டீயில் இருக்கின்றன. 

கசப்பு துவர்ப்பு - கிரீன் டீ

* காச நோய்க்கும், ஹெச்.ஐ.வி-க்கும் எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு கலந்த சத்துக்கள் நெல்லிக்காயில் நிறைந்திருக்கின்றன. 

* சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி துளசியின் கசப்பு, துவர்ப்புக்குள் இருக்கிறது. 

குழந்தைகளுக்கு...

நம் உடலில் ஒவ்வோர் அணுவுக்குள்ளும் இயல்பாகவே ஒளிந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை, `செல் மீடியேட்டட் இம்யூனிட்டி’ (Cell Mediated Immunity) என்பார்கள். இந்த எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், தொற்றுக்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் உடலைத் தொந்தரவு செய்யாது. ஆனால், வெள்ளைச் சர்க்கரை, துரித உணவுகள், ட்ரான்ஸ் கொழுப்புகள் அடங்கிய பஃப்ஸ், ஃபிங்கர் ஃப்ரைஸ் சாப்பிடும்போது அந்த நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாகப் பராமரிக்கப்படுவது இல்லை’ என்கிறது நவீன அறிவியல். எனவே, குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகளைத் தரக் கூடாது. அதுதான் அவர்களை நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றும் சிறந்த வழி. 

இயல்பாகவே மருத்துவக் குணமுடைய தேனில், கசப்பான, காரமான மூலிகைகளைக் கலந்துகொடுத்து, குழந்தைகளைப் பராமரித்தவர்கள் நாம். தூதுவளைப் பழத் தேன், மாதுளைப் பழத் தேன், மிளகுத் தேன், நெல்லித் தேன்... ஆகியவை சில உதாரணங்கள். அதேபோல் குழந்தைகளுக்கு `சுரசம்’ என்ற மூலிகை இலைச்சாற்றைக் கொடுக்கும் பழக்கமும் நம்மிடம் இருந்தது. கற்பூரவல்லி இலைச் சாற்றை தேனில் குழைத்து, லேசாக அனலில் காட்டி, தேன் பொங்கும்போது எடுத்து, ஆறவைத்துக்கொள்ளலாம். இதை, அவ்வப்போது சளித்தொற்று வரும் குழந்தைக்குக் கொடுக்கலாம். இதேபோல் துளசி, தூதுவளை இலையையும் கொடுக்கலாம்.

வெள்ளிப் பாத்திரத்தில் குழந்தைக்கு உணவு ஊட்டுவது நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். வெள்ளிப் பாலாடை, வெள்ளித் தட்டு பயன்படுத்த வாய்ப்பு உள்ளவர்கள் இவற்றை உணவுக் கலனாகப் பயன்படுத்தலாம். வெள்ளிக்கு மாற்று மண் பாத்திரம். மண் பாத்திரத்தில் சமைத்து, மண் கலனில் நீர்வைத்து அருந்துவதும் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்.

பாகற்காய்

பெரியவர்களுக்கு... 

* `சர்க்கரைநோய் / புற்றுநோய்க்காரர், சமீபத்தில் ஏதோ ஒரு நோயில் இருந்து மீண்டவர்கள், கர்ப்பிணிப் பெண், குழந்தை பெற்ற பெண், முதியோர் இவர்கள்தான் தொற்றுகளுக்கு அதிகம் ஆளாகக்கூடிய `வல்னரபிள் குரூப்’ (Vulnerable Group)’ என்கிறது மருத்துவ உலகம். 

* இவர்களுக்கு காலையிலும் மாலையிலும் தேன் சேர்த்த, பால் சேர்க்காத தேநீர், லேக்டோபேசில்லஸ் (Lactobacillus) எனும் புரோபயாட்டிக் சேர்ந்த இட்லி/கம்பங்கூழ், ஆப்பத்துக்குத் தொட்டுக்கொள்ள தேங்காய்ப்பால், மதிய உணவில் ஒரு கீரை... இவையெல்லாம் தொற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்புக் கவசங்கள். 

* சர்க்கரைநோய் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் இனிப்புக்கு பனைவெல்லம், தேன் அல்லது ஆர்கானிக் நாட்டுவெல்லம் இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். 

* காரம் தேவைப்படும்போது மிளகைச் சேர்த்துக்கொள்வது சுவையுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். 

* ஏழு மணி நேரம் நல்ல உறக்கத்துக்குப் பின், இளங்காலை வெயிலில் 20 நிமிட நடை; பிறகு பிராணாயாமம்; நலுங்கு மாவு தேய்த்துக் குளியல்; காலையில் கரிசாலை முசுமுசுக்கைத் தேநீர்; மதியத்துக்கு தூய மல்லிச்சம்பா சாதம்; அதற்கு மிளகு-வேப்பம்பூ ரசம்; தொட்டுக்கொள்ள நெல்லிக்காய் துவையல், இரவில் சிவப்பு அரிசி அவலுடன் சிவப்பு கொய்யா சாப்பிட்டு வந்தால், எந்தத் தொற்றும் நெருங்காது. 

* எண்ணெய்க் குளியல், உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உதவும். நிணநீர் ஓட்டத்தைச் (Lymphatic Drainage) சீராக்கி, உடலின் செல்களுக்கு இடையில் உள்ள வெப்பப் பரிமாற்றத்தைச் சூழலுக்கு ஏற்றபடி சீராக்கும். 

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்கு கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் உதவும்.

http://www.vikatan.com/news/health/81454-bitter-and-sour-taste-improves-our-immunity.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.