Jump to content

குணா 25 ஆண்டுகள்: அதீத அன்பில் பிறழ்ந்த வாழ்க்கை!


Recommended Posts

சிலருக்கு ‘அபிராமி' எனும் காரணத்தால், சிலருக்கு 'கமல்' எனும் காரணத்தால், சிலருக்கு ‘ரோஷினி' எனும் காரணத்தால், சிலருக்கு 'மனிதர்கள் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதலல்ல' எனும் காரணத்தால்...

இப்படி, நம்மில் பலருக்கு வெவ்வேறு காரணங்களால், ‘குணா' திரைப்படம் நமக்குப் பிடித்தமான திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்!

90-களின் ஆரம்பம் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய உத்வேகத்தைத் தந்த காலம். கதைக்கு முக்கியத்துவம் கொண்ட திரைக்கதைகளுடன் பல இயக்குநர்கள் வந்தனர். அந்தக் கதைகளுக்காக நாயகர்களும் தங்களின் ‘ஸ்டார் வேல்யூ' பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடிக்க ஆரம்பித்தனர். அந்தக் கணக்கை கமல் ஆரம்பித்து வைத்தார் என்று சொன்னால் அதில் மிகையில்லை.

மனநலம் பிறழ்ந்த நாயகன், நாயகனின் தாய் பாலியல் விடுதி நடத்துபவர், ‘ட்ரீம் சாங்'குக்குக்கூட வெளிநாடு செல்வதை நினைத்துப் பார்க்க முடியாத‌ குகை லொகேஷன், தற்கொலையில் முடிகிற காதல், தன் ஹீரோயிசத்தைக் காட்டுவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை... வித்தியாசத்தை விரும்பும் கமல் இப்படியான திரைக்கதை ஒன்றைத் தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லைதான். ஆச்சரியம் என்னவென்றால், இப்படி ஒரு கதையை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர் எப்படி நம்பிக்கை வைத்தார் என்பதுதான்!

மனநலம் பிறழ்ந்த ஒருவன், தன் கனவு நாயகியைக் கைப்பிடிக்க நினைக்கிறான். அந்த நாயகியின் பெயர் அபிராமி. அது ஏன் அபிராமி? ‘அபிராமி அந்தாதி'யைப் படித்த காரணத்தால், தனது நாயகியின் பெயர் அபிராமி என்று நாயகன் முடிவு செய்துகொள்கிறான். அந்த நாயகியை முதன்முதலில் அவன் ஒரு கோயிலில் பார்க்கிறான். அவள் மீது அன்பு கொள்கிறான். அது அதீத அன்பாக இருக்கும் காரணத்தால், அவன் அவளைக் கடத்துகிறான். மனித நடமாட்டமில்லாத குகை ஒன்றில் அவர்கள் வாழத் தொடங்குகிறார்கள்.

நாயகியின் மீது அவன் வைத்திருக்கும் காதல் என்பது ஒரு விதத்தில் ஆன்மநேயக் காதலாக இருக்கிறது. அதனால் படத்தின் ஒரு காட்சியில், ‘உனக்கு என்ன வேணும்? நான் வேணுமா? என் உடம்பு வேணுமா?' என்று நாயகி கேட்கும்போது, ‘இல்லை, கல்யாணம்' என்று நாயகன் சொல்வான். இப்படி காமத்தைப் பொறுத்தாள்வது என்பது பெரும்பாலும் ஆன்மநேயக் காதலில் மட்டுமே சாத்தியப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

நாயகியைக் கடத்தியவுடன், கதையில் ஏற்படும் திருப்பங்களை எல்லாம் படத்தில் நாம் பார்த்திருப்போம். ஆனால், பார்க்க மறந்த சில விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன.

குறிப்பாக, மனநல மருத்துவரின் (கிரீஷ் கர்னாட்) அறையில், கமல் அந்த அறையைச் சுற்றிச் சுற்றி வந்து பேசும் காட்சி. இந்த ‘ட்ராக் ஷாட்' காட்சி மேக்ஸ் ஓஃபுல்ஸ் எனும் ஜெர்மன் இயக்குநரின் ‘தி இயர்ரிங்ஸ் ஆஃப் மேதாம் த' எனும் படத்தினால் ‘இன்ஸ்பையர்' ஆகி எடுக்கப்பட்டது என்று ஒரு தகவல் உண்டு.

இந்தக் காட்சியில் கமல் ஓரிடத்தில் ‘இப்ப போட்டீங்களே ஊசி, அது என்ன ஊசி?' என்று கேட்க, கிரீஷ் கர்னாட் ‘பென்டதால்' என்பார். பலர் இந்தக் காட்சியில் இது தேவையில்லாத ஒரு வசனமாக இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால், ‘பென்டதால்' எனும் வேதிப்பொருளைப் பற்றி நாம் சற்றுத் தெரிந்துகொண்டால், ‘கமல் அண்ட் கோ' திரைக்கதையை எவ்வளவு நுணுக்கமாகச் செதுக்கியிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

மனித உடலில் உள்ள மத்திய நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மையுள்ள அமில உப்புக்கு ஆங்கிலத்தில் ‘பார்பிச்சுரேட்' என்று பெயர். இவை பெரும்பாலும் ‘வெரோனால்' என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வெரோனால் என்பது ஒரு வகையான விஷம். அதில் இருக்கும் இன்னொரு முக்கியமான வேதிப்பொருள் ‘பென்டதால்'. இந்த பென்டதால், மருத்துவத் துறையில் தூக்கம், மயக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பென்டதால் மருந்துக்கு, ‘உண்மையை வெளிக்கொண்டு வரும் மருந்து' என்ற ஒரு பெயரும் உண்டு. இந்த மருந்தை ஒருவருக்குச் செலுத்தினால், அவரை மேலும் சகஜ நிலைக்குக் கொண்டுவந்து நிறைய பேச, உளற வைக்க முடியும். அப்போது அவர் பல தகவல்களைச் சொல்வார். ஆனால், அவற்றில் எது உண்மை என்பது அலசலுக்கு உட்பட்ட தனி விஷயம்.

கமலுக்கு பென்டதால் மருந்தைச் செலுத்துவதன் மூலம், அவரின் ஆழ்மனத்திலிருந்து நிறைய விஷயங்களைப் பெற முடியும் என்ற காரணத்தால் மருத்துவர் அந்த ஊசியைப் போட்டிருக்கிறார். எதிர்பார்த்தபடி, கமலும், ‘இங்க எல்லாமே அசிங்கம். ரோஸி அசிங்கம், எங்க அம்மா அசிங்கம், அப்பா அசிங்கம்...' என்று பட்டியலிடுவார்.

கூகுள் இல்லாத காலத்தில், ‘பென்டதால்' பற்றி இப்படி ஒரு நுணுக்கமான காட்சியை வைத்ததில், தான் ‘காலத்தை முந்திச் செல்பவர்’ என்பதை நிரூபிக்கிறார் கமல். ஆனால், அதை அன்றைய ரசிகர்கள் (ஏன், இன்றைய ரசிகர்களும் கூடத்தான்) புரிந்துகொள்ள முடியாமல் போனது சோகம்!

ஆனால், அந்த பென்டதால் வாசம் எப்படியிருக்கும் என்பதை கமல்தான் சொல்ல வேண்டும். ஒருவேளை, கமல் சொல்லும் அந்த மலைக்குச் சென்றால் அந்த வாசனையை நம்மால் உணர முடியுமோ என்னமோ?

இந்த ‘ட்ராக் ஷாட்' காட்சியைப் போல, படத்தில் ‘இன்ஸ்பையர்' ஆன காட்சிகள் நிறைய‌ உண்டு. உதாரணத்துக்கு, கிளைமேக்ஸ் காட்சிக்கு முந்தைய காட்சியில் அஜய் ரத்னம் உள்ளிட்ட போலீஸாருடன் டாக்டர் ஒருவரின் வீட்டில் கமல் சண்டையிடுவது போன்ற ஒரு காட்சி. அதில், திடீரென்று போலீஸாரின் துப்பாக்கி ‘பல்ப்' ஒன்றைச் சுட்டுவிடும். அந்தக் காட்சியை திலீப் குமார் நடித்த இந்தித் திரைப்படமான 'கங்கா ஜம்னா' படத்தில் வரும் அதேபோன்ற காட்சியை அடிப்படையாக வைத்து எழுதியதாகக் கமலே பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

கமல் இப்படி ‘இன்ஸ்பையர்' ஆனார் என்றால், இந்தப் படத்தைப் பார்த்து நிறைய பேர் உத்வேகம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மலையாள திரை இயக்குநர் சத்யன் அந்திக்காடு. ‘குணா' படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு காதலன்' பாடல் வரியால் ஈர்க்கப் பட்டுத்தான் தன்னுடைய ‘ரசதந்திரம்' படத்தில் கதாநாயகிக்கு ‘கண்மணி' என்று பெயர் சூட்டியதாக, தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அந்திக்காடு.

அதேபோல, மனநிலை பிறழ்ந்தவர் இன்னொருவர் மீது காதல் கொள்வது போன்ற கதையம்சம் கொண்ட ‘காதல் கொண்டேன்’ போன்ற படங்களுக்கும் இது முன்னோடிப் படமாக அமைந்தது.

‘குணா' படத்தில் கதை தவிர, ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் என அனைத்திலும் ஒருவித பக்தி தோய்ந்த மென்சோகம் கலந்திருப்பதை உணர முடியும். ‘அபிராமி' என்ற கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்த நடிகை ரோஷினி இந்த ஒரே படத்துடன் காணாமல்போனது, தமிழ்த் திரைக்கு இழப்பு.

1991-ம் ஆண்டு, தீபாவளியையொட்டி, ‘தளபதி', 'குணா' ஆகிய படங்கள் வெளியாயின. அதில் ‘தளபதி' வசூலில் தப்பிக்க, ‘குணா' சறுக்கியது. எனினும், 25 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்துக்கு ஒரு ‘கல்ட்' நிலையை வழங்கிய ரசிகர்களின் திரைப்பட ரசனையை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். வரும் 7-ம் தேதி தன்னுடைய 62-வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் கமலுக்கு அந்தப் பாராட்டுதான் மிகச் சிறந்த அன்பளிப்பாக இருக்கும்.

மற்றபடி ‘குணா' படத்தைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் எத்தனை முறை எழுதினாலும், அது குறைப் பிரசவமாகவே இருக்கும். ஏனென்றால், இந்தப் படத்தில் கமல் சொல்வதுபோல, ‘அபிராமி உள்ள இருக்கு. எழுத்தெல்லாம் வெளிய இருக்கு!'. அதனால்!

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/குணா-25-ஆண்டுகள்-அதீத-அன்பில்-பிறழ்ந்த-வாழ்க்கை/article9300725.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.