Jump to content

வீரயுக நாயகன் வேள் பாரி


Recommended Posts

வேள்பாரி 100 - விழா

1065_thumb.jpg

 

 

 

 p108c_1537348228.jpg

வீரயுக நாயகன் வேள்பாரி நூறாவது வாரத்தை எட்டியதையொட்டி விகடன் விழா எடுத்தது. இதை ‘விகடன் விழா’ என்று சொல்வதா, ‘வாசகர்கள் விழா’ என்று சொல்வதா என்று சொல் மயக்கம், பொருள் மயக்கம் வருமளவுக்கு சென்னை இந்தியன் ஆபீஸர்ஸ் அசோசியேஷன் அரங்கத்துக்கு வாசகர்கள் திரளாக வந்திருந்து நம்மை மயங்கவைத்தனர்; மலைக்கவைத்தனர். 

p108a_1537348200.jpg

எழுத்தாளர் சு.வெங்கடேசனும் ஓவியர் மணியம் செல்வனும் உள்ளே நுழைய, கைத்தட்டல்களும் விசில்களும் காதைப் பிளந்தன. நிகழ்வின் தொடக்கமாக இரண்டு வீடியோக்கள் திரையிடப் பட்டன.

 ‘வேள்பாரி’யின் கதையை மணியம் செல்வன் ஓவியங்களின் துணைகொண்டு வீடியோவாக மாற்றி ஒளிபரப்பினோம். அடுத்து `நூறு வாரம்...நூறு விநாடி வீடியோ போட்டி’க்கு வந்த வீடியோக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து ஒரு வீடியோவும் திரையிடப்பட்டது. இரண்டு வீடியோக்களையும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக ரசித்தனர் வாசகர்கள்.

 


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக அரசின் தொல்லியல்துறை ஆணையர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., இயக்குநர் வசந்தபாலன், பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகிய சிறப்பு விருந்தினர்களுடன் எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் ஆகியோரும் மேடை ஏறினர். மேடையில் இருந்த அனைவருக்கும் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் ஆனந்த விகடனின் ஆசிரியருமான பா.சீனிவாசன் நினைவுப்பரிசு வழங்கினார். பரிசல்.கிருஷ்ணா அனைவருக்குமான அழகான வரவேற்புரை வழங்க, சிறப்பு விருந்தினர்கள் பாரியுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

“சமூக வலைதளங்களில்  மிகவும் சுருக்கமாகப் படித்துப் பழக்கப்பட்டிருக்கும் தலைமுறை இது. அப்படிப்பட்ட இன்றைய தலைமுறையினரையும் ஈர்த்து, வாசிப்பை வளர்க்கிறது ‘வேள்பாரி’. தன் நாட்டிற்குவரும் கபிலரைப் பாரி தோளில் சுமந்து வருவது போல, எழுத்தாளர் சு.வெங்கடேசனை யானையில் வைத்து அழைத்து வந்திருக்க வேண்டும்” என்று வசந்தபாலன் வாழ்த்துமழை பொழிய, வரவேற்றுக் கைதட்டினார்கள் வாசகர்கள்.

p108b_1537348266.jpg

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரீ.சிவக்குமார், “அடுத்துப் பேசவிருப்பவர் தரையில் மட்டுமல்ல, ஆகாயத்திலும் புகழ்பெற்றவர்” என்று அறிமுகம் கொடுத்து அழைப்பு விடுக்க, புரிந்து கொண்ட கூட்டம் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தது.

“தினமும் பறந்துகொண்டிருக்கும் எனக்கு, பேசுவதைவிடக் கேட்பதே எளிதானது என்பதால் நான் கேட்கவே வந்தேன்” என்று கலகலப்பாகப் பேசத் தொடங்கினார், அந்த அறிமுகத்துக்குரிய,  தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். தான் ஒரு மருத்தவர் என்பதால் ‘வேள்பாரி’யின் மருத்துவக்கூறுகள் குறித்து வியந்து பேசினார்.

“வேள்பாரியின் நூறாவது வாரத்தில் பாரியின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிட்டு, உலகெங்கும் இருக்கும் வேள்பாரியின் வாசகர்களைப் பதற்றத்தில் ஆழ்த்திவிட்டு, சு.வெங்கடேசன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருப்பது மாபெரும் குற்றம் எனக் கருதுகிறேன். அதற்குத் தூரிகை  எனும் ஆயுதம் ஏந்தி ம.செ செய்துகொண்டிருக்கும் உதவியும் மாபெரும் குற்றம்தான்” எனக் கூறி ‘இத்தகைய குற்றங்களைச் செய்தவர்கள் பற்றித்தான் குற்றப்பத்திரிகை வாசிக்க வந்துள்ளேன்’ என்று கலகலப்பாகத் தன் பேச்சைத்  தொடங்கினார் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். ஆழமாகவும் அகலமாகவும் அவர் வழங்கிய உரை ‘வேள்பாரி’ குறித்த ஒரு பி.எச்.டி ஆய்வு என்றே சொல்லலாம்.

“உலகிலேயே எனக்குத் தெரிந்து வயதே ஆகாமல் இருப்பவை எஸ்.பி.பி குரலும் ம.செ-வின் ஓவியமும்தான். வாசிப்புத் தளத்திலிருந்து வெளியே சென்ற இளைய தலைமுறையை வேள்பாரியின் மூலம் வாசிப்பிற்குள் கொண்டு வந்ததற்கு மிகப்பெரிய காரணம் ம.செ-வின் ஓவியங்கள்தான்” என்று ம.செ-வைப் புகழ்ந்து தள்ளினார் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதிபாஸ்கர்.

“வரலாறு நெடுகிலும் அறம் சார்ந்தவர்கள் வஞ்சகத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படிக் கொல்லப்பட்டவர்களில் சிறந்தவன் வேள்பாரி. தமிழக அரசியலின் தொடக்க காலத்தில் தலைவர்கள் அறிவாளிகளாக இருந்தார்கள். மக்கள் முட்டாளாக இருந்தார்கள். ஆனால் இப்போது மக்கள் அறிவாளிகளாக இருக்கிறார்கள். தலைவர்கள்... ஜனநாயக ஆட்சியில் ஐம்பத்தோரு அறிவாளிகள் இருப்பது மன்னர் ஆட்சியில் ஓர் அறிவாளி இருப்பதற்குச் சமம். அப்படியான அறிவாளிதான் வேள்பாரி” என்று இன்றைய அரசியலோடு வேள்பாரியை ஒப்பிட்டுப் பேசினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பழ.கருப்பையா.

“ஒவ்வொரு முறையும் ஒரு தேர்வுக்குத் தயாராகும் மாணவனைப் போலவே இந்தத் தொடருக்கான படங்களை வரைய என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். இந்தத் தொடர் முடிவை நெருங்குகிறது. இரண்டு ஆண்டுகள் ஒரு நீண்ட பயணத்தில் ஒன்றாகப் பயணித்த அனைவரையும் விட்டுப் பிரியப்போகின்றேன் என்ற மனநிலை துயரம் தருகிறது” என்று குரல் தழுதழுக்கப் பேசினார் ஓவியர் மணியம் செல்வன்.

அதிஷாவின் நன்றியுரையுடன் விழா... முடிந்தது என்று எழுத வேண்டும். ஆனால் முடியவில்லை. அதற்குப்பிறகும் ஒருமணிநேரம் வாசகர்கள் சு.வெங்கடேசன், மணியம் செல்வன் ஆகியோருடன் கலந்துரையாடினர்; கையெழுத்து பெற்றனர். சிலர் அவர்களுக்கு என்று சிறப்புப் பரிசுகளையும் எடுத்து வந்திருந்தனர். பிரியத்தைப் பகிர்ந்தபின்பும் பிரிய மனமில்லாமல் சென்றார்கள்.

ஆமாம், ‘வேள்பாரி’ ஆசிரியர் என்னப்பா பேசினார் என்கிறீர்களா? நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, அதே ‘எதிர்பார்ப்பு’தான் அரங்கத்தில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த வாசகர்களுக்கும் இருந்தது.

விழாவின் இறுதியில் உரையாற்றிய சு.வெங்கடேசன், பல விஷயங்களைத் தொட்டுப் பேசிவிட்டு, எதிர்பார்ப்பின் முனைக்கு வந்தார்.

 “பாரி இறந்துவிட்டான் என்ற வரலாறு அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், பல நூற்றாண்டுகள் கழித்து  ‘பாரியைக் கொன்று விடாதீர்கள்’ என்ற வேண்டுகோள் குரல்கள் ஒலிப்பதற்கு என்ன காரணம்? ‘அறவழிப்பட்ட ஒருவன் இறந்துபோக ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்று வாசகர்கள் நினைக்கிறார்கள். ஒவ்வொரு வாசகரும் அதைப் பாரியாகப் பார்க்கவில்லை. ‘தான்தான் பாரி’ என்று வாசகர்கள் கருதுகிறார்கள். வரலாற்றை மாற்ற முடியாது. ஆனால் வரலாற்றை மீறுகிற ஆற்றல் புனைவெழுத்தாளனுக்கு உண்டு. அது நடக்கும்” என்று அவர் அழுத்தமாகக் கூறியதும் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. அந்தக் கைதட்டலின்  அதிர்வு போர்க்களத்தில் இருக்கும் பாரிக்கும் நிச்சயம் கேட்டிருக்கும்.

https://www.vikatan.com

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 127
  • Created
  • Last Reply

வீரயுக நாயகன் வேள்பாரி - 101

 

ஓவியங்கள்: ம.செ.,

 

நாகக்கரட்டி லிருந்து முன்னி ரவுக்குள் யானை கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இரலிமேட்டின் பக்கம் யானைகள் ஏறவே யில்லை. ஏனெனில், அந்தப் பக்கம் இருந்துதான் காட்டெருமைகள் இறங்கி வந்தன. விரட்டப்பட்ட யானைகள், காரமலையின் வலதுபுறமும் இடது புறமுமாகச் சிதறி ஓடின. பள்ளத்தாக்கின் இறுதிப் பகுதியில் நின்றிருந்த யானைகளில் ஒரு பகுதி மட்டும் மீண்டும் வேந்தர் படையின் பாசறைக்குத் திரும்பியுள்ளது. ஆனால், தளபதி உச்சங்காரி என்ன ஆனான் எனத் தெரியவில்லை.

p83a_1537281290.jpg

நாகக்கரட்டெங்கும் பறம்புவீரர்களின் உணர்ச்சிப் பேரொலி இடைவிடாது கேட்டது. போர் முடிவுற்றவுடன் அங்கு இருக்கும் குடிலில் வந்து ஆயுதங்களை வைத்துவிட்டு உணவு அருந்திய பிறகு இரலிமேட்டில் இருக்கும் பாட்டாப்பிறைக்குப் போவார் தேக்கன். ஆனால், இன்று குடிலுக்கு வந்தவர் ஆயுதங்களை வைத்துவிட்டு சற்றே தலை சாய்த்துப் படுத்தார். வீரன் ஒருவன் கலயத்தில் கொண்டுவந்த கஞ்சியையும் குடிக்கவில்லை. ``சிறிது பொழுதாகட்டும். இங்கு வைத்துவிட்டுப் போ” என்று சொல்லிவிட்டார்.

இருள் கவியத் தொடங்கி நெடுநேரம் ஆன பிறகு, தேக்கனைத் தேடி முடியன் வந்தான். பறம்பு ஆசானுக்கென்று அமைக்கப்பட்டிருந்த தனிக் கூடாரத்தில் அவர் படுத்திருந்தார். முடியன் வந்த பிறகுதான் எழுந்து அமர்ந்தார். முடியனின் பார்வை கலயத்தை நோக்கிப் போனபோதுதான் கஞ்சியை எடுத்துக் குடிக்கத் தொடங்கினார்.

தேக்கனின் உடல்நிலை என்ன பாடுபடுகிறது என்பதை முடியனால் உணர முடிந்தது. ஆனாலும் அவர் போர்க்களத்தில் நிற்பது எவ்வளவு முக்கியம் என்பதை இன்றைய நாள் உணர்த்தியது. தேக்கன் சொன்ன வழிமுறைப்படி உத்தியை வகுத்திராவிட்டால், பறம்புக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அளவிடற்கரியதாக இருந்திருக்கும். ஆனால், அது நிகழாமல் தடுக்கப்பட்டது. அப்படியிருந்தும் பறம்புவீரர்கள் அதிக இழப்பைக் கண்ட நாள் இதுதான். நண்பகல் பொழுதில் வேந்தர்படை மிகுந்த ஆவேசத்தோடு தாக்கி முன்னேறியபோது பறம்புப்படை தற்காப்புப் போரை நடத்தவேண்டிய நிலை இருந்தது. அந்நிலையில் பறம்புப்படைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது பற்றி ஆசானிடம் பேச இரலிமேட்டில் இருக்கும் பாட்டாப்பிறை நோக்கிச் சென்றான் முடியன். ஆனால், தேக்கன் ஓய்வெடுப்பதற்காக இன்று தனது குடிலிலேயே இருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் பாட்டாப்பிறைக்குச் செல்லாமல் பாதியிலேயே திரும்பி இங்கு வந்து சேர்ந்தான்.

``இதுவரை நடந்த நான்கு நாள் போரிலும் வேந்தர்படையின் எண்ணிக்கையை சரிபாதிக்குமேல் குறைத்துள்ளோம். ஆனால், நமது படையின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதே நிலையில் இந்தப் போரை நீட்டிக்க முடியாது. வேறு திட்டங்களுக்கு நாம் சென்றாக வேண்டும்” என்றான்.

``எனது சிந்தனையும் அதை நோக்கித்தான் இருக்கிறது” என்றார் தேக்கன்.

அப்போது இரவாதன் உள்ளே நுழைந்தான். இருவரையும் தேடி பாட்டாப்பிறைக்குப் போனவன் அங்கு இல்லை என்பது அறிந்து இங்கு வந்துசேர்ந்தான். `முதலில், அவன் வந்துள்ள செய்தியைக் கேட்டறிந்த பிறகு நாம் பேசிக்கொள்ளலாம்’ என்று இருவரும் பார்வையிலே முடிவுசெய்தனர்.

பறம்புப்படை பெருவெற்றியை ஈட்டிய நாளில் அதற்குரிய முழு மகிழ்வோடு இருந்தது இரவாதனின் முகம். தான் வந்துள்ளதன் காரணத்தை அவன் சொன்னான், ``நான் இன்று மூஞ்சலை முழுமையாகப் பார்த்தேன்.”

முடியனும் தேக்கனும் இரவாதனைக் கூர்ந்து பார்க்கத் தொடங்கினர். நேற்றைய போரில் முடியனும் இரவாதனும் மூஞ்சலை நெருங்கினர். அப்போதுதான் முரசின் ஓசை கேட்டு, போர் முடிவுற்றது. ஆனால், இன்றைக்கு வேந்தர்களின் படை மொத்தமும் கீழிறங்கி பறம்புப்படையைச் சூழ்ந்து முற்றுகைத் தாக்குதலை நடத்தியது. மிகச்சிறிய படைதான் மூஞ்சலைக் காத்து நின்றது. தேக்கனின் திட்டப்படி இரவாதனின் குதிரைப்படை,  முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறி மூஞ்சலை அடைந்தது. அங்கு எண்ணிக்கையில் குறைந்த கவசவீரர்களும் அகப்படை வீரர்களும் காத்து நின்றனர். சின்னஞ்சிறுபடை காத்து நின்றதால் மூஞ்சலை முழு வட்டமடித்துத் தாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டான். ஆனால், இரவாதனின் குதிரைப் படையும் சிறியதாக இருந்ததால் அவனால் உள்நுழைய முடியவில்லை. ஆனால், மூஞ்சலின் தன்மை முழுமையும் அவனால் கவனித்தறிய முடிந்தது.

p83b_1537281325.jpg

முடியனிடமும் தேக்கனிடமும் விளக்கினான், ``நேற்று மூஞ்சலைச் சுற்றிப் பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட பெரும்படை இருந்தது. நாம் அதன் அருகில் சென்றாலும் அதன் தன்மையை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. ஆனால், இன்று அப்படியல்ல; மிகக் குறைந்த வீரர்களே இருந்தனர். அவர்கள் மூஞ்சலை அமைத்துள்ள விதத்தையும் அதைப் பாதுகாக்கச் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டையும் முழுமையாக என்னால் பார்க்க முடிந்தது” என்றான்.

மருந்து தேய்க்கப்பட்டு, காய்ந்த வாழைமட்டை ஒன்றை அருகில் இருந்த விளக்கின் சுடரில் தேக்கன் வைத்தான். நெருப்பு சட்டெனப் பற்றியது. போதுமான அளவுக்கு அதை எரியவிட்டு விலா எலும்போடு எரிமட்டையை அமுக்கித் தேய்த்தார். கணநேரத்தில் கருகித் திரிந்தது. தேய்த்த விரல்களின் வழியே புகை வெளியேறிய படியே இருக்க, சதையின் மேல் போதுமான சூட்டோடு மருந்து அப்பி உள்ளிறங்கியது. தேக்கனின் இந்தச் செயலைப் பார்த்தபடியே இரவாதன் தொடர்ந்தான். ``மூஞ்சலை உடைக்க நமக்குப் புதிய திட்டம் வேண்டும்.”

``என்ன செய்யலாம்?”

சிறிதும் இடைவெளியின்றி இரவாதன் சொன்னான், ``அரிமான்களை உள்ளிறக்க வேண்டும்.”

அதிர்ந்தான் முடியன்.

சற்றே சிரித்தான் தேக்கன். ``இளவயது என்பதால், சட்டெனக் கேட்டுவிட்டாய். ஆனால், அதற்கு வாய்ப்பேதும் இல்லை. வேறு என்ன செய்யலாம் என்று சொல்.”

``இடர்மிகுந்த நேரத்தில்தானே அவர்களைக் களம் இறக்கலாம் என்று சொல்கிறேன்” என்று இரவாதன் தொடர்ந்தபோது முடியன் சொன்னான், ``தேக்கனின் சொல்லைப் பணிந்து கேள்.”

இப்போது தேக்கன், முடியனைப் பார்த்தான். தேக்கன் பயன்படுத்திய ஈட்டி, ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. கண்களை விலக்கித் தாழ்த்திக்கொள்வதன் மூலம் எவ்வளவு உணர்வுகளைக் கடத்திவிட முடிகிறது?

முடியனின் சொல்லை ஏற்றுக்கொண்ட இரவாதன் அடுத்து கேட்டான், ``சரி, திரையர்களையாவது உள்ளிறக்கலாமா?”

``ஏன்... நம்மால் முடியாது என்ற முடிவுக்கே வந்துவிட்டாயா?” எனக் கேட்டான் முடியன்.

``மூஞ்சலைத் தகர்த்தெறியவும் அழித் தொழிக்கவும் நம்மால் முடியும். ஆனால், உள்ளே நுழைந்து நீலனை மீட்டு வெளிவருவதற்கு, கூடுதல் ஆற்றலும் தெளிவான திட்டங்களும் பலவிதமான தாக்குதல் முறைகளை ஒருங்கிணைத்தலும் வேண்டும்.”

``ஏன்?”

``ஏனென்றால், மூஞ்சல் அமைக்கப்பட்டுள்ள விதம் அப்படி. மணற்பரப்பில் பள்ளம் பறித்தால் மறுகணமே சுற்றியுள்ள மணலெல்லாம் சரிந்து மூடிக்கொள்வதைப்போல் அதை வடிவமைத் துள்ளனர். ஆயுதங்கள் ஒன்றோடு ஒன்று செருகப் பட்டு வெளிப்புறச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்பகுதியில் கவசவீரர்களின் அணிவகுப்பு நிற்கிறது. அவர்களுக்குப் பின் மீண்டும் ஆயுதங்களின் சுவர், பிறகு வீரர்கள் என்று மூன்று அடுக்கு இருக்கின்றன. இந்தச் சுவரை எந்த இடத்தில் தகர்த்தாலும் மறுகணமே அருகில் பின்னப்பட்டு இறுகியிருக்கும் ஆயுதச்சுவர் விரிந்துகொடுத்து, தகர்க்கப்பட்ட இடத்தை மறைத்து நிரப்பிவிடும். அதேபோல வீரர்களை வீழ்த்தினாலும் அருகில் கோத்து நிற்கும் வீரர்கள் அந்த இடைவெளியை உடனே நிரப்புவர்” என்று சொன்னவன் முடியனைப் பார்த்துக் கேட்டான், ``நேற்றைய போர் நாம் மூஞ்சலை நெருங்கியவுடன் முடிவுற்றது. நான் அந்த இடம் நீண்டநேரம் நின்றேனே கவனித்தீர்களா?”

``ஆமாம். இவ்வளவு அருகில் வந்தும் பயனில்லாமற்போய்விட்டதே என்ற தவிப்பில் நின்றிருந்தாய்.”

``ஆமாம். எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும் என்பதால்தான் நீண்ட நேரம் நின்றிருந்தேன். ஆனால், எனது நோக்கம் வேறொன்றாக இருந்தது. போரிட்டுக் கொண்டிருந்தபோது மூஞ்சலைச் சுற்றிப் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் இருந்தனர். தேர்களும் குதிரைகளும் இங்கும் அங்குமாக நின்றிருந்தன. ஆனால், போர் முடிவுற்ற முரசின் ஓசை கேட்டதும் வீரர்கள் தங்களின் பாசறைக்குத் திரும்பத் தொடங்கினர். அப்போது செய்வதறியாத தன்மையில் சற்றுக் கூடுதல் நேரம் அங்கு நின்றேன். காரணம், மூஞ்சலுக்குள் எத்தனை கூடாரங்கள், எந்தத் தன்மையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகப் பார்க்க வேண்டும் என்பதால்தான் அப்படிச் செய்தேன். மூஞ்சலைத் தெளிவாகவும் பார்த்தேன். பன்னிரண்டு கூடாரங்கள் இருந்தன” என்றான்.

தெரிந்த எண்ணிக்கையைத்தான் அவன் சொல்கிறான் என்பதால், முடியனின் பார்வையில் வியப்பேதுமில்லை. தேக்கனோ மருந்து தேய்க்கப்பட்ட அடுத்த வாழைமட்டையை எடுத்து, சுடரில் காட்டிப் பற்றவைத்தான். அப்போது இரவாதன் சொன்னான், ``இன்றைக்குப் பார்த்தபோது பதினைந்து கூடாரங்கள் இருந்தன.”

சுடரை நோக்கியிருந்த தேக்கனின் பார்வை, இரவாதனை நோக்கித் திரும்பியது. அவனது கண்ணுள் சுடரின் முனை சுழன்று கொண்டிருந்தது. முடியனோ சற்றே வியப்போடு அவன் சொல்லவருவதைக் கவனித்தான்.

இரவாதன் சொன்னான், ``அவை உண்மையான கூடாரங்கள் அல்ல. நூற்றுக்கணக்கான படை வீரர்கள் உள்மறைந்திருக்கும் பொய்க்கூடாரங்கள். அந்த வகைக் கூடாரங்கள் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன.”

p83c_1537281361.jpg

பாதி எரிந்த மட்டையை விலாவெலும்பில் தேய்த்தபடி தேக்கன் கேட்டான், ``அரிமான்களும் திரையர்களும் இல்லாமல் மூஞ்சலை உடைத்து நீலனை வெளிக்கொண்டுவர, நீ சொல்லும் உத்தி என்ன?”

இரவாதனின் கண்கள் அகல விரிந்தன. பறம்பு ஆசான், இந்தப் போரின் இலக்கை அடைவதற்கான உத்தியைப் பற்றி தன்னிடம் ஆலோசனை கேட்கிறார் என்றதும் உடலெங்கும் உற்சாகம் பீறிட்டது. நீண்ட தன் இரு கைகளையும் விரித்தபடி சொல்லத் தொடங்கினான். ``மூஞ்சலை ஒரு குழு ஓர் இடத்தில் உடைத்து முன்னேற முடியாது. ஒரே நேரத்தில் மூன்று திசைகளிலும் உடைத்து உள்நுழைய வேண்டும். அப்போதுதான் அவர்களின் சங்கிலித்தொடர் காப்புமுறையைச் செயலிழக்கச் செய்ய முடியும். அதே நேரத்தில் பொய்க்கூடாரங்களை நோக்கிக் குறிவைத்துத் தாக்க வேண்டும்” என்று சொன்னவன் அம்பு ஒன்றை எடுத்துத் தரையில் கீறி, மூஞ்சலின் வரைபடத்தை உருவாக்கினான்.

``மூன்று திசைகளிலிருந்தும் மூஞ்சலை ஒரே நேரத்தில் தாக்கி முன்னேறுவோம். முடியன் இடதுபுறமும் உதிரன் வலதுபுறமும் மூஞ்சலின் தடுப்பரணை உடைக்கட்டும். நான் நேர்கொண்டு தாக்கி உள்நுழைகிறேன். மற்ற இருவரும் மூஞ்சலை உடைத்த இடத்திலிருந்து உள்நுழையாமல் ஆயுதங்களாலும் வீரர்களாலும் காக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வட்டவடிவ வெளிப்புறச் சுவரை முற்றிலும் அழிக்கும் வேலையைச் செய்யவேண்டும். நான் எனது குதிரைப்படையோடு உள்நுழைகிறேன். உள்ளே நுழைந்ததும் எனது படை மூன்றாகப் பிரியும். பிடறிமான் தலைமையிலான பிரிவு, பொய்க்கூடாரங்களில் உள்ளவர்களை மட்டும் தாக்கும். கரிணி தலைமையிலான பிரிவு, உள்ளுக்குள் காத்து நிற்கும் அகப்படை வீரர்களை மட்டும் தாக்கும். எனது தலைமையிலான பிரிவு, நீலனின் கூடாரத்தை நோக்கி முன்னேறி அவனை மீட்கும். இந்தத் தாக்குதலின்போது எதிரிகளின் முழுக் கவனமும் மூஞ்சலை நோக்கிக் குவியாமலிருக்க மூஞ்சலை விட்டு மிகத்தள்ளி, களத்தின் மையப்பகுதியில் வலிமைமிகுந்த தாக்குதலைத் தேக்கனும் ஈங்கையனும் நடத்தவேண்டும்” என்றான்.
 
``ஓரளவுக்கு சரியான திட்டம்தான். இதில் இருக்கும் பிழை என்ன? இதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள  சிக்கல் என்ன?” என்று கேட்டான் தேக்கன்.

``பிழை ஏதும் இருப்பதாக நினைக்கவில்லை. சிக்கல் என்பது பிடறிமானும் கரிணியும் இந்தத் திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். கூடாரத்தைச் சுற்றிக் காத்து நிற்கும் கவசவீரர்களைத் தாக்கவும் பொய்க்கூடாரங்களில் குவிந்திருக்கும் வீரர்களைத் தாக்கவும் இரு வேறு தாக்குதல் உத்திகளைப் பின்பற்ற வேண்டும். அதற்கான தெளிவான பயிற்சி வேண்டும்” என்றான் இரவாதன்.

முடியன் சொன்னான், ``உதிரன் விற்படை மூஞ்சலை விட்டு மிகத்தள்ளி நின்றால்தான் எதிரிகளின் பெரும்படை மூஞ்சலை விட்டு விலகி நிற்கும். அவர்களின் கவனமும் இருகூறாகப் பிரிந்திருக்கும். எனவே, உதிரனை வெளியில்தான் வைத்திருக்க வேண்டும்” என்றான்.

``சரி. அப்படியென்றால் ஈங்கையனின் தலைமையிலான படையை மூஞ்சலில் வலதுபுறத் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாமா?” எனக் கேட்டான் இரவாதன்.

``போரில் யாரை, எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் மிக முக்கியம்” என்று சொல்லியபடி அடுத்த வாழைமட்டையை எடுத்தான் தேக்கன்.

முடியனோ தேக்கன் சொல்லப்போவதைக் கேட்காமல் தரையில் வரையப்பட்ட வரைபடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். இரவாதனோ தேக்கன் ஏன் இப்படிச் சொல்கிறான் என்ற வியப்போடு அவனைப் பார்த்தான். தேக்கன் சொன்னான், ``இத்தனை நாள் போரிலும் ஈங்கையன் சொல்லிக்கொள்ளும்படியான எந்தத் தாக்குதலையும் நடத்தி முன்னேறவில்லை. படைக்குத் தலைமையேற்று முன்னேறுவதற்குரிய பயிற்சியும் ஆற்றலும் அவனுக்கு இல்லை என நினைக்கிறேன்.”

சற்றே வியப்போடு இரவாதன் கேட்டான், ``சோழப்படையை வீறுகொண்டு தாக்கி அழித்தவன் என்று அவனையும் அவனுடன் உள்ள வீரர்களையும் பற்றி நீலனும் உதிரனும் சொன்னார்களே!”

``இருக்கலாம். அது தாக்குதல் போர் என்பதால், அவர்கள் பெரும்வீரத்தை வெளிப்படுத்தி எதிரியை ஓடச்செய்திருக்கலாம். ஆனால், படைப்பிரிவினூடாக முன்னேறும் போர் என்பது அவர்களுக்கு வசப்படவில்லை என நினைக்கிறேன்” என்றான் தேக்கன்.

p83d_1537281398.jpg

வரைபடத்திலிருந்து கண்களை அகற்றாமலேயே முடியன் சொன்னான், ``தேக்கனும் ஈங்கையனும் பின்களத்தில் நிற்கட்டும். உதிரன் தட்டியங்காட்டின் இடதுபுறமிருந்து எதிரியை நோக்கி முன்னேறட்டும். நாளைய போரில் தேர்ப்படைத் தளபதி கூழையனுக்குப் பதில் விண்டன் களமிறங்க இருக்கிறான். நீ சொன்ன திட்டப்படியே அவனும் நானும் நீயும் மூஞ்சலுக்குள் நுழைவோம்” என்றான்.

இரவாதனின் முகத்தில் சுடரின் ஒளி பரவி நின்றது. விண்டன், அவனது வயதொத்த இளம்வீரன். பாரி தனிப் பயணம் மேற்கொள்ளும் போது தேக்கனால் மறை பாதுகாப்புக்காக அனுப்பப்படுபவர்களில் ஒருவன். அவனும் நானும் தந்தையோடு இணைந்து போரிட்டால் மூஞ்சலை உடைத்து நீலனை மீட்கலாம்.

இந்தமுறை எடுத்த வாழைமட்டையைச் சுடரில் பற்றவைக்கவில்லை; கலயத்தில் இருந்த மூலிகைச்சாற்றில் நனைத்து இதுவரை சுட்டுத்தீய்த்த பகுதியின் மீது ஒட்டவைத்தான். ``நாளை நாம் தாக்குதல் போரை நடத்த வேண்டாம். உதிரனின் விற்படையும் குதிரைப்படையும் இன்றைய போரில் பேராற்றலை வெளிப்படுத்தி யிருக்கின்றன. அவர்களுக்கு சற்று இளைப்பாறுதல் தேவை. அப்போதுதான் நாளை மறுநாள் மூஞ்சலின் மீதான தாக்குதலை முழு வலிமையோடு நடத்த முடியும்” என்றான்.

சரியென ஏற்றுக்கொண்ட இரவாதன், ``ஆமாம். பிடறிமான், கரிணி ஆகிய இருவர் தலைமையிலான படைக்கும் தனித்த பயிற்சிகள் தேவை. இன்று மிகவும் களைத்துப்போய் இருப்பார்கள். நாளை இரவு அந்தப் பயிற்சியை முழுமையாக எடுத்துக்கொண்டு நாளை மறுநாள் தாக்குதலைத் தொடுக்கலாம்” என்றான் இரவாதன்.

ஈரமட்டையை விலாவெலும்பின் மேல் போர்த்தியபடி மீண்டும் கட்டிலில் சாய்ந்தான் தேக்கன். இரவாதன் வெளியேறிய பிறகு முடியனும் தேக்கனும் பேசிக்கொள்ளத் தேவையேதுமில்லை. இரவாதனின் பேச்சினூடே பேசவேண்டிய எல்லாம் பேசப்பட்டுவிட்டன.

பொழுது விடிந்தது. தட்டியங்காடெங்கும் சிதறிக்கிடக்கும் பிணங்களின் மீது கதிரவனின் ஒளி படர்ந்தது. இரவெல்லாம் முயன்றும் கொல்லப்பட்டுக் கிடக்கும் தன் வீரர்களின் உடல்களை வேந்தர்படையால் முழுமையாக அகற்ற முடியவில்லை. நேற்று மாலையிலிருந்து குதிரைகளும் மாடுகள் பூட்டிய வண்டிகளும் பிணங்களை எடுத்துச் சென்றபடியே இருந்தன. ஆனாலும் முடிந்தபாடில்லை. முற்றுகைப்போர் என்பதால், பறம்புப்படையினர் அணிவகுக்கும் பகுதிக்குப் பின்புறமும் எண்ணற்ற வேந்தர் படைவீரர்கள் நின்று போரிட்டனர். ஏறக்குறைய அந்தப் படைப்பிரிவினர் முழுக்க அழிக்கப் பட்டனர். எனவே, பறம்புப்பக்கம் எண்ணி லடங்காத வேந்தர்படை வீரர்களின் உடல்கள் கிடந்தன.

p83e_1537281445.jpg

போர்க்களப் பணியாளர்கள், இரவெல்லாம் பந்தங்களின் வெளிச்சத்தில் எண்ணிலடங்கா உடல்களை அப்புறப்படுத்தினர். ஆனால், பொழுது விடிந்த பிறகுதான் தெரிந்தது இன்னும் நெடுந்தொலைவுக்கு வீரர்களின் உடல்கள் கிடக்கின்றன என்பது. அதுவும் எதிரிப்படையினர் நிற்கும் பகுதியில் தன் வீரர்களின் உடல்கள் கிடப்பது அவமானமாகக் கருதப்படும். போர் தொடங்கிவிட்டால் அந்த உடல்கள் எதிரிகளின் கால்களிலோ, அவர்களுடைய குதிரைகளின் கால்களிலோ, தேர்ச்சக்கரங்களிலோ நசுங்கிச் சிதைவது கொடிதிலும் கொடிது. எனவே,  அவற்றை அப்புறப்படுத்த, பணியாளர்கள் விரைந்து செயல்பட்டனர்.

மாடுகள் பூட்டிய வண்டி களிலும் குதிரை பூட்டிய வண்டிகளிலும் அப்புறப் படுத்தியவர்கள், இனி அவ்வாறு செய்து முடிக்க பொழுதில்லை என அறிந்துகொண்டனர். மாளிகையின் தரையில் இருக்கும் பெருவிரிப்புப்போல மரப் பலகைகளைக் கொண்டுவந்து ஒன்றோடொன்று இணைத்துப் பூட்டி பெருஞ்சட்டகத்தை உருவாக்கினர். இறந்துகிடக்கும் வீரர்களின் உடல்களை இழுத்துவந்து சட்டகத்தின் மீது போட்டனர். ஐந்து வண்டிகளில் கொண்டுசெல்லும் பிணங்களை ஒரு சட்டகத்தின் மேலே கிடத்தி இழுத்துச்செல்லலாம்.

ஆனாலும் வேலைகளை வேகப்படுத்துவது எளிதன்று. ஈட்டி பாய்ந்து கிடந்த வீரனின் உடலிலிருந்து ஈட்டியைப் பிடிங்கி எறிந்த பிறகே அந்த உடலைத் தூக்கி மரச்சட்டத்தின் மீது போட முடியும். இல்லையெனில், அடுத்த உடலைத் தூக்கிப்போட அது தடையாக இருக்கும். ஒவ்வோர் உடலில் இருந்தும் ஈட்டியை இழுத்துப் பிடுங்கவேண்டியிருந்தது. எல்லா உடல்களிலும் எண்ணற்ற அம்புகள் தைத்துக்கிடந்ததால் அவற்றை அப்புறப்படுத்துவது எளிய செயலாக இல்லை. அம்பு முனையின் இரு காதுப் பகுதிகளும் மிகக்கூர்மையானவை. தசைகளையும் நரம்புகளையும் இழுத்துக்கொண்டுதான் வெளியில் வரும். மருத்துவனால்கூட அதை எளிதில் வெளியே எடுக்க முடியாது. ஆனால், போர்ப் பணியாளர்களோ கைகளுக்குச் சிக்கியவற்றையெல்லாம் பிடுங்கி எறிந்து உடல்களைத் தூக்கி மரச்சட்டகங்களில் போட்டனர். வேலை வேகவேகமாக நடந்தது. இரண்டு ஆள் உயரத்துக்கு உடல்களைக் குவித்தனர். மரச்சட்டகங்களை இழுத்துச் செல்ல யானைகள் வந்தன.

உடலின் இரு பக்கங்களிலும் கட்டப்பட்ட பெருவடங்களால் மரச்சட்டங்களை யானைகள் இழுக்கத் தொடங்கின. குன்றெனக் குவிக்கப்பட்ட பிணக்குவியல்கள் தட்டியங்காட்டை விட்டு மெள்ள நகர்ந்தன. தனது முதுகுப் பகுதியில் எண்ணிலடங்காத மனித உடல்களைச் சுமந்தபடி நத்தைபோல ஊர்ந்தது மரச்சட்டகம். இழுபடும் மரச்சட்டகங்களிலிருந்து வழுவிய பிணங்களை மீண்டும் இழுத்துப்போட்டு நகர்ந்தனர்.

போர்ப்பணியாளர்கள்தாம், தாக்குதலின் தன்மையைக் கணிப்பவர்கள்; ஒவ்வொரு நாளும் தாக்குண்டு கிடக்கும் ஒவ்வொரு வீரனையும் வைத்து தாக்குவோரின் திறனை மதிப்பிடுபவர்கள். இன்றைய நாளில் வேந்தர்படையின் எண்ணிலடங்காத கவச அணிவீரர்களின் கழுத்துப் பகுதியில் அம்பு பாய்ந்து இறந்துகிடந்தனர். கவச அணிவீரர்கள் ஓரிருவர் கழுத்துப் பகுதியில் அம்பு பாய்ந்து இறக்கலாம். ஆனால், இத்தனை பேர் எப்படி குறிபார்த்து வீழ்த்தப்பட்டார்கள்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அதுவும் கவச அணிவீரர்களின் உடல்களைத் தூக்கி மரச்சட்டகத்தில் போடுவது மிகக்கடினமான ஒன்று. சிலநேரத்தில் மூன்று பேர் சேர்ந்துகூட ஒருவரைத் தூக்கிப்போட முடியாது. ஆனாலும் அந்தப் பணியை வேகமாகச் செய்ய முயன்றனர்.

பிணங்களை இழுக்கும் யானையும் அதன் பாகனும் யட்சினியின் வடிவாகவே பார்க்கப்படுவர். போர் தொடங்கும்போது அழிவின் தேவதை யட்சினிக்காக பவளவந்திகையைப் பலியிட்டனர். அதேபோல போர் வெற்றியுடன் முடிந்தால் போர்க்களத்தில் பிணங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட யானைகளையும் அவற்றின் பாகன்களையும் யட்சினிக்குப் பலியிட்டுக் குளிரூட்டுவர்.

வழக்கம்போல் நாழிகை பரண் நோக்கித் தேரிலே வந்தார் திசைவேழர். ஆனால், தேரை ஓட்டும் வளவனால் குறிப்பிட்ட தொலைவைக் கடந்து தட்டியங்காட்டுக்குள் தேரைச் செலுத்த முடியவில்லை. வீரர்களின் உடல்கள் எங்கும் கிடந்தன. உயிர்த்துடிப்பு முடிவுறாமல் தவித்து மேலெழும் குரல் ஆங்காங்கே கேட்டது. உடல்களைத் தேர்ச்சக்கரங்களால் ஏற்றிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்த வளவனால், ஒருகட்டத்துக்குப் பிறகு தேரைச் செலுத்த முடியவில்லை. கடிவாளத்தை இழுத்துக் குதிரையை நிறுத்தினான்.

தேரை விட்டுக் கீழிறங்கினார் திசைவேழர். மரணத்தின் ஆட்சி நடக்கிற நிலத்தை, கண்கொண்டு பார்க்கவும் கால்கொண்டு கடக்கவும் முடியாமல் அப்படியே நின்றார். என்ன செய்வதென்று தெரியவில்லை. நீண்டுவிழுந்த அவரது நிழல், பொழுதாவதை உணர்த்தியது. வேறு வழியேயின்றி பரண் நோக்கி நடக்கத் தொடங்கினார்.

மூஞ்சல் எங்கும் போர் தொடங்கப்போகும் நேரத்துக்குரிய பரபரப்புடன் இருந்தது. உதியஞ்சேரல் மட்டும் போருக்கான கவச உடை அணிந்து தனது கூடாரத்தை விட்டு வெளியேறினான். மற்ற இரு பேரரசர்களும் இன்னும் கூடாரம் விட்டு வெளிவரவில்லை. மெய்க்காப்பாளர்களும் அகப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

குலசேகரபாண்டியன் கூடாரத்தை விட்டு வெளியேறும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது பொதியவெற்பன் அவரைக் காண வந்தான். நேற்று இரவு நடந்த உரையாடல், அவனுக்குப் பெருங்குழப்பத்தையும் கோபத்தையும் உருவாக்கியிருந்தது. ``மையூர்கிழாருக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? மூவேந்தர்களின் தலைமைத் தளபதியை பாண்டியப் பேரரசர் இருக்கும் அவையில் அவரின் முன் தாக்குதலுக்குத் தகுதியற்ற தளபதி என்று எப்படி அவனால் சொல்ல முடிந்தது?” கொந்தளிக்கும் கேள்விகளை குலசேகரபாண்டியனிடம் முன்வைத்தான் பொதியவெற்பன்.

`இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியவில்லையா?’ என்றதோர் ஏளனமான பார்வையோடு குலசேகரபாண்டியன் சொன்னான், ``நேற்று நமது படை பேரழிவைக் கண்டது. முற்றுகை தகர்க்கப்பட்டு முற்றுகையிட்டவர்கள் பெருந்தாக்குதலைக் காண்பது போர்க்களத்தில் தோல்விக்கு இணையான ஒன்று. எந்த ஒரு மன்னனும் அதன் பிறகு போரிடும் முடிவைத் தொடர விரும்ப மாட்டான். சேரனுக்கும் சோழனுக்கும் நம்மீதான நம்பிக்கை முற்றிலும் சிதையும்படியான நாள் நேற்று. அந்நிலையில் வழக்கம்போல் இரவில் மூவரின் சந்திப்பு அமைந்தால் பேச்சும் முடிவும் நமக்கு எதிரானதாகத் தான் இருக்கும். அதை மாற்ற வேண்டும் எனச் சிந்தித்தேன். மையூர்கிழாரை அழைத்து, `அவையில் மூவேந்தர்களின் அனைத்து தளபதிகளின் மீதும் கடுங்குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசு’ என்றேன்.”

பொதியவெற்பன் வழக்கம்போல் திகைப்புற்றான். குலசேகரபாண்டியன் தொடர்ந்தார், ``ஆனால், மையூர்கிழார் இந்த வாய்ப்பைத் தனக்கானதாக முழுமையாக மாற்றிக் கொண்டான். நானே எதிர்பார்க்காத அளவு இருந்தது அவனது சீற்றம்.”

பொதியவெற்பனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ``ஆனாலும் தலைமைத் தளபதியை அவன் அவ்வாறு சொல்லியிருக்கக் கூடாது” என்று பேச்சைத் தொடர்ந்தபோது குலசேகர பாண்டியன் குறுக்கிட்டுச் சொன்னார், ``அதுவல்ல இப்போது முக்கியம். மகிழ்வூட்டும் செய்தி ஒன்று அதிகாலை என்னை வந்தடைந்தது” என்றார்.

பொதியவெற்பன், வேந்தரின் முகத்தை உற்றுப்பார்த்தபடி அவர் அடுத்து உதிர்க்கப்போகும் சொல்லுக்காகக் காத்திருந்தான். குலசேகர பாண்டியன் சொன்னான், ``இன்று மாலை பொற்சுவை, பாரியைக் காண இரலிமேட்டுக்குச் செல்கிறாள். நம் வீரர்கள் அவள் அறியாதபடி உடன் செல்லவுள்ளனர். நாம் எதிர்பார்த்த நாள் இது.”

திசைவேழரின் கை உயர்ந்ததும் தட்டியங் காட்டின் ஐந்தாம் நாள் போருக்கான முரசின் ஓசை ஒலிக்கத் தொடங்கியது. ஆனால், தட்டியங்காடெங்கும் பிணங்களை அகற்றும் பணி முழுமையாக முடியவில்லை. பெருமரச் சட்டங்களை யானைகள் இழுத்தபடியே இருந்தன. பறம்புவீரர்கள் அணிவகுத்து நிற்பதற்கு முன்பும் பின்பும் இன்னும் உடல்கள் கிடந்தன. ``உடல்களை முழுமையாக அகற்றாமல் நாம் முன்னேறிச் செல்ல வேண்டாம்” என்று கூறினான் முடியன்.

வேந்தர்களின் படையோ வெகுதொலைவில் அணிவகுத்தபடி அப்படியே இருந்தது. பறம்புப்படை முன் நகராததால் அவர்களும் முன் நகரவில்லை. யட்சினி யானைகள், பிளிறலுடன் மரச்சட்டங்களை இழுத்துக்கொண்டிருந்தன.

கருங்கைவாணன் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பேரரசரின் உத்தரவுக்கேற்பச் செயல்படுவோம் எனக் காத்திருந்தான். பேரரசரோ கூடாரம் விட்டு காலம் தாழ்த்தித்தான் வெளியேறி வந்தார். கருங்கைவாணன், அவரின் பார்வையில் நின்றிருந்தான். அவனது முகம் இருண்டிருந்தது. அதைப் பார்த்தபடி தனது இறுக்கத்தைத் தளர்த்தாமலே பேரரசர் சொன்னார். ``தற்காத்து நில். எதிரிகள் முன்னேறிவந்தால் மட்டும் தாக்கு.”

p83f_1537281479.jpg

முடியனும் அதே முடிவில்தான் இருந்தான். விற்படை வீரர்களுக்கு இன்று அதிக வேலை கொடுக்கக் கூடாது. அதேபோல குதிரைப் படையையும் இன்று கடினமான தாக்குதலுக்கு உட்படுத்தக் கூடாது. எனவே, காலாட்படை வீரர் களையும் தேர்ப்படை வீரர்களையும் முன்புறமாக அணிவகுக்கச் செய்தான். தேர்ப்படைத் தளபதியாக விண்டனுக்கு இன்றுதான் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவன் ஏறிச்சென்று தாக்கும் துடிப்போடு இருப்பான். எனவே, அவனிடம் தெளிவான கட்டளைகளைப் பிறப்பித்தான் முடியன்.

தட்டியங்காடெங்கும் பேரமைதி நிலவியது. `மரணத்தின் ஆட்சி கண்டு மனிதன் நிலைகுலைந்து நிற்கிறான்’ என்று திசைவேழருக்குத் தோன்றியது. போர் தொடங்குவதற்கான முரசின் ஓசையைக் கேட்ட பிறகும் இருபக்கப் படைகளும் பாய்ந்து முன் நகரவில்லை. மரணத்தின் பேயுருவுக்கு முன்பு அசைவற்று நிற்கும் காட்சி தெளிவாகத் தெரிந்தது. யட்சினி யானைகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெரும்சட்டகங்களை இழுத்துக்கொண்டிருந்தன. பொழுதாகிக் கொண்டிருந்தது. போர்க்களத்தின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரை கண்களை ஓடவிட்டுத் துல்லியமாகப் பார்த்தார் திசைவேழர். வேறு எங்கிருந்தாவது தாக்கி முன்வருவதற்கான திட்டம் ஏதும் இருக்கிறதா எனக் கவனித்தார். அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

காலாட்படையின் சில அணிகள் முன் நகரத் தொடங்கின. பிற்பகலுக்குப் பிறகு அங்குமிங்குமாக சிறுசிறு மோதல்களைத் தேர்படையினர் நடத்தினர். ஆனாலும் இரு தரப்பும் மொத்தப் படையை முன் நகர்த்தவில்லை. இருபடை தலைமைத் தளபதிகளும் தெரிந்தே ஒரு விளையாட்டை விளையாடுகின்றனர். ஆனால், இறுதி நாழிகையில் பெருந்தாக்குதல் ஒன்று நடக்கும் எனக் கணித்தார் திசைவேழர்.

அந்தத் தாக்குதலின்போது நாம் கவனமாகப் பார்த்தறியவேண்டும். கடைசி நாழிகையைப் பயன்படுத்தி சதியை நிகழ்த்தலாம் என எண்ணினார். எந்தச் சூழலிலும் களத்தின் நடுவில் இருக்கும் இந்தப் பரணில் நிற்கக் கூடாது. படைகளின் போக்கிற்கேற்ப வேந்தர் தரப்பில் இருக்கும் பரண்களின் மீதோ அல்லது பறம்பின் தரப்பில் இருக்கும் பரண்களின் மீதோ ஏறி நின்று உற்றுக்கவனிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால், பிற்பகலிலும் போக்குக்காட்டும் போரைத் தான் இருதரப்பும் நடத்தின. அங்குகொன்றும் இங்கொன்றுமாக ஈட்டிகள் குறுக்கிட்டுப் பாய்ந்தன. அம்புகள் விடுக்கும் ஓசை மிக மெல்லியதாகக் காற்றில் ஏறிவந்தது. இரண்டொரு தேர்கள் அவ்வப்போது விரைந்து கடந்தன. சட்டென நினைவுவந்தவராக திசைவேழர் நாழிகைவட்டிலைக் குனிந்து பார்த்தார். அவரால் நம்பவே முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் முடிய இருந்தது. நீண்ட நிழல் மூன்றாம் கோட்டைத் தொட்டது. அவர் கைகளை உயர்த்தினார். முரசின் ஓசை எங்கும் மேலெழுந்தது. ஐந்தாம் நாள் போர் முடிவுற்றது.

இருதரப்புப் படைகளும் தங்களின் பாசறைக்குத் திரும்பின. கதிரவன், காரமலையின் பின்புறம் இறங்கத் தொடங்கினான். ஒளியின் கைகள் மறையத் தொடங்கின. சேரன், செங்கனச்சோழனின் கூடாரத்துக்குள் வந்தான். குலசேகரபாண்டியனின் கூடாரம் நோக்கி பொதியவெற்பன் விரைந்தான். அனைவரும் எதிர்பார்த்திருந்த இரவு வரத் தொடங்கியது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விண்டன் பொறுப்பேற்கும் முதல் நாள் போர் போரிடாமல் முடிந்து விட்டதே....பார்ப்பம் பாரியிடம் போகும் பொற்சுவை அறிந்து வரும் சுவை எதுவென்று.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.