Jump to content

வீரயுக நாயகன் வேள் பாரி


Recommended Posts

வீரயுக நாயகன் வேள்பாரி - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

83p21.jpg

கொற்றவைக்கூத்தின்  மூன்றாம் நாள். கூட்டத்தின் அளவு பாதிதான் இருந்தது. தரையில் எவரும் உட்காரவில்லை. மூன்று அடிகளுக்குமேல் இருக்கும் திட்டுகளிலும் மரக்கட்டை களிலும்தான் உட்கார்ந்திருந்தனர். இந்த மலையெங்கும் இருக்கும் பாம்புகள், இன்றைய கூத்தைக் கேட்கின்றன என்பது நம்பிக்கை.

ஆடுகளத்தின் முன் ஒரு பனை நீளத்துக்கும் இரு கை அகலத்துக்கும் மரக்கட்டைகளை அடுக்கி, அதில் நெருப்பைப் பற்றவைத்துக்கொண்டிருந்தனர். பற்றிய நெருப்பு, நான்கு முனைகளில் இருந்தும் மெள்ளப் பரவிக்கொண்டிருந்தது.

வழக்கமாகக் கபிலரின் முகக்குறிப்பு அறிந்தே விளக்கம் சொல்லும் பாரி, இமை மூடாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அடுக்கிவைக்கப்பட்ட எல்லா கட்டைகளிலும் நெருப்பு பற்றியது.

 தழல், மேலேறத் தொடங்கியது. சற்று நேரம் கழித்து கபிலர் கேட்டார், “இங்கு என்ன நடக்கிறது?”

“பாம்புக்கு நீர் கொடுக்கும் நாகரவண்டுகள் இன்னும் வந்து சேரவில்லை.”

கபிலர் சுற்றும்முற்றும் பார்த்தார். சூழல் வழக்கம்போல் இல்லை. நாகர்குடி பாணன் ‘பகுளி’ என்ற பறையை இசைக்கத் தொடங்கினான். அதன் ஓசை சன்னமாக வெளிவந்தது. கபிலர், இசைப்பவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு பாரியிடம் கேட்டார், “நாகரவண்டுகள் வந்துவிட்டனவா?”

“அவை வந்த பிறகுதான் ஆட்டம் தொடங்கியது.”83p11.jpg

``எங்கே, யார் ஆடுவது?” எனக் கேட்டார் கபிலர்.

“உற்றுப்பாருங்கள், நெருப்பின் பின்புறம் என்ன நடக்கிறது என்று.”

கபிலர் சற்றே கூர்ந்து கவனித்தார். நெருப்பின் பின்புறம் வளைந்தும் நெளிந்தும் இரண்டு உருவங்கள் ஆடிக்கொண்டிருந்தன. எரியும் தழலுக்குப் பின்புறம் இருளின் அசைவுகள்போல் அவை இருந்தன.

``கை புணர்ந்தாடும் துணங்கை ஆட்டம்” என்றான் பாரி.

``அவர்களை நாம் பார்க்கக் கூடாது என்பதற்காக நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறதா?” என்று கேட்டார் கபிலர்.

``இல்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு, அவர்கள் நெருப்புக்குள் இறங்கி ஆடுவார்கள்” என்றான்.

நெருப்பு எரிந்து முடிந்த பிறகு, கங்குகளின் மீது ஆடத்தான் இந்த ஏற்பாடு எனப் புரிந்துகொண்டார் கபிலர்.

பின்புறம் ஆடுபவர்களின் உடல்மொழி மாறியது. பாம்புத்துள்ளல் தொடங்கியது. நாகக்குடியின் கதையை, பாணன் தொடங்கினான்.

83p3.jpg

ருக்குமலையைச் சேர்ந்த நாகர்கள்தான் இந்த மலைத்தொடரில் மிகவும் பழைமையான குடிகள். ‘நாகம், இவர்களின் சொல் கேட்கும்; இவர்களின் வாசனை அறிந்து விலகிச் செல்லும். இவர்களால் நாகத்தைக் கட்டுப்படுத்த முடியும்’ என இவர்களைப் பற்றி பலவிதமான பேச்சுகள் இந்த மலை முழுவதும் உண்டு.

தேறிமலையின் அடிவாரத்தில் `சேரலர்' என்ற ஒரு குலம் உண்டு. எருக்குமலையும் தேறிமலையும் ஒரே மலைத்தொடரின் இரு வேறு பகுதிகள். எருக்குமலை, தேறிமலையைவிட மிக உயர்ந்து பரந்தது. அந்த மலையின் மீதுதான் நாகர்கள் இருந்தனர். தேறிமலையின் அடிவாரத்தில் சேரலர் இருந்தனர்.

சேரலர் குடி, மலை அடிவாரத்தின் சமதளத்தில் இருந்ததால் வேளாண்மை, வணிகம் என தங்களின் செயல்களை விரைவாகப் பெருக்கியது. வளமும் கூடியது. பெருஞ்சேரல்தான் அந்தக் குலத்தின் தலைவனாக இருந்தான். நீண்டகாலம் அவனது தலைமையில் சேரலர் குலம் தழைத்தது. அவனுக்கு வயது கூடியது. தோலில் சுருக்கம்படியத் தொடங்கியது.

ஒருநாள் அவனது ஊர் மன்றலில் குடிக்கூத்து நடந்துகொண்டிருந்தது. பெருஞ்சேரலும் அவன் குலமக்கள் அனைவரும் அதைக் கண்டு மகிழ்ந்தனர். அப்போது கூத்தாடிய இளம்பெண் ஒருத்தி, கூத்தின் வேகத்துக்கு ஏற்ப கண்களைச் சுழற்றிச் சுழற்றி ஆடினாள். அவளது கண்கள் தன்னைத்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன எனப் பெருஞ்சேரல் நினைத்தான். நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் தெரிந்தது, அவளது கண்கள் சுழன்று வந்து மொய்த்தது தன்னை அல்ல; தனக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கும் வீரனை என்று. அன்று இரவு முழுவதும் சேரலுக்குத் தூக்கம் கொள்ளவில்லை. அழகியின் கண்கள் தன்னைத் தாண்டிப்போன கணத்தை அவனால் தாங்க முடியவில்லை.

`சேரல்குலத்தின் வளம்பெருக்கி, திறன்கூட்டிய மாவீரன்' எனப் புகழப்பட்ட தன்னை, வயோதிகம் வந்து பற்ற நினைப்பதை அவனால் ஏற்க முடியவில்லை. தோலில் ஏற்படும் சுருக்கங்களைக் காண, கண்கள் மறுத்தன. ``சுருக்கம் களைய வழி உண்டா?” எனக் கேட்டு, திசையெங்கும் ஆட்களை அனுப்பினான்.

வடதிசை போனவன் வந்து சொன்னான், “நான் பார்த்த பெருமுனி ஒருவன், இதற்கு வழி உண்டு எனச் 83p4.jpgசொன்னான். ஆனால், என்னவென்று சொல்ல மறுத்துவிட்டான்” என்றான்.

வெகுவிரைவில் அந்த முனி தேறிமலைக்கு வரவழைக்கப்பட்டார். “தேகத்தின் சுருக்கம், மரத்தின் சருகைப்போல உதிரக்கூடியதுதான்” என்றார் அவர்.

“அதற்கான வழியைக் காட்டுங்கள்” என்று பெருஞ்சேரல் வேண்டி நின்றான்.

சிறு குண்டம் அமைத்து, அதில் பலவிதமான மரக்குச்சிகளைப் போட்டுத் தீமூட்டி, அந்தப் புகை நடுவே நின்று அந்த முனி சொன்னார், “நாகங்கள் சட்டையைக் கழற்ற ஒரு மூலிகையை உண்ணும். அந்த மூலிகையை நீ உண்டால், உனது தேகத்தின் சுருங்கிய மேல்தோல் கழன்று யெளவனம் அடைவாய்” என்று.

“அந்த மூலிகையை எவ்வாறு கண்டறிவது?” எனக் கேட்க, “இந்தப் புவிமேல் அந்த ரகசியத்தை அறிந்தவர்கள் நாகக்குடியினர் மட்டுமே.

நீ அவர்களிடம் கேட்டு அந்த மூலிகையைப் பெற்றுப் பயனடைவாய்” என்றார் முனி.

பெருஞ்சேரலின் மனம் குளிர்ந்தது. முனியின் மனம் குளிரச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்து அனுப்பினான்.

எருக்குமலைக்குச் சென்று நாகர் குடியின் தலைவனைக் காணுமாறு, தனது அவையினருக்குப் பெருஞ்சேரல் உத்தரவிட்டான். அந்த உத்தரவை ஏற்று மலையேற, யாரும் முன்வரவில்லை. காரணம், நாகர்களைப் பற்றிய கதைகள் அப்படி. நாகர்குடியின் வயதான முதுமகள் உடுத்தியிருக்கும் ஆடையில் இருந்துதான் விரியன்பாம்புக் குட்டிகள் உதிர்ந்து வெளியேறுகின்றன என அவர்கள் நம்பினர். நாகத்தைப் பற்றி எப்போது பேசினாலும் அதைக் கேட்கும் சக்தி அதற்கு உண்டு என நம்பினர். நாகத்தைப் பற்றிய எந்த ஒரு சொல்லும் நாகத்தின் செவியில்தான் போய்த் தங்கும் என்பது எல்லோரும் அறிந்ததே.

``தங்களின் குலத்தலைவனுக்காகப் போக எவருக்கும் துணிவு இல்லையா?” எனக் கேட்டபோது, பெரியவர் பொறையன் முன்வந்தார். திறன்கொண்ட பன்னிரு வீரர்களின் துணையோடு, தான் போய் வருவதாகக் கூறினார். பெருஞ்சேரல் மகிழ்வுற்றான்.

சற்றே தயக்கத்துடன் பொறையன் கேட்டார். “ஒருவேளை அந்த மூலிகையை அவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டால் என்ன செய்வது?”

“வடதிசை முனி சொன்ன இரண்டாவது வழியில் வேண்டிப் பெறுங்கள்” என்றான் பெருஞ்சேரல்.

சரியென பொறையன் சம்மதித்தார். பன்னிரு வீரர்களுடன், பாம்புக்கடிக்கு வைத்தியம் பார்க்கும் பிடார வைத்தியன் இருவருமாக பதினான்கு பேரை உடன் அனுப்ப முடிவானது. வயதில் மூத்த பிடார வைத்தியனுக்கு, இரு காதுகளும் அறுபட்டிருந்தன. இன்னொருவன் வயதில் இளையவனாக இருந்தான். இருவரும் இருவேறு திசைகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். பொறையனோடு சேர்த்து பதினைந்து பேரிடமும் குடிமுனை வாக்குப் பெற்றான் பெருஞ்சேரல். எந்தச் சூழலிலும் அவர்கள் இந்தக் கட்டளையை நிறைவேற்றாமல் இனி நாடு திரும்ப முடியாது.

பதினைந்து பேரும் எருக்குமலையில் ஏறத் தொடங்கினர். நாகர்குடி அல்லாத வேற்றுக்குடியினரின் காலடி, எருக்குமலையில் இதுவரை பட்டதில்லை. முதன்முதலாக அது நிகழ்ந்தது. எருக்குமலையின் அடிவாரம், காட்டுப்புற்களாலும் குறுமரங் களாலும் நிரம்பியதாக இருக்கும். புற்களை விலக்கி அவர்கள் மலையேறத் தொடங்கினர். புது மனிதர்களின் வாடையை நாகங்கள் நன்கு அறியும். அவர்கள் முன்னால் இருக்கும் புற்களை விலக்கி, கால்களை மிகக் கவனமாக முன்நகர்த்திச் சென்று கொண்டிருந்தனர். மலையின் முதல் குன்றைக் கடந்தபோது நிழல்விரியன் ஒன்று நடந்துகொண்டிருந்த ஒருவனின் நிழலுக்குள் நுழைந்தது.

எந்த மனிதனின் நிழலுக்குள் அது நுழைகிறதோ, அவன் நிழலிலேயே அது ஊர்ந்து வந்துகொண்டிருக்கும். நடந்துசெல்பவன் எவ்வளவு வேகமாக நடந்தாலும், மெதுவாக நடந்தாலும் அதுவும் அதே வேகத்தில் நிழலுக்குள் நெளிந்தபடியே வரும். அதன் உடலில் படிந்த நிழலைவிட்டு அது பிரியாது.

83p5.jpg

இளைய பிடாரனின் நாசி, பாம்பின் வாசனையை நுகர்ந்தது. “யாரும் நின்றுவிடாதீர்கள். ஏதோ ஒரு பாம்பு நம் அருகில் வந்துகொண்டிருக்கிறது” என்றான். எல்லோருக்குள்ளும் அதிர்ச்சி பரவியது; வியர்க்கத் தொடங்கியது. என்ன வாசனை என்பது அவனுக்குப் பிடிபடவில்லை. மூத்த பிடாரனைப் பார்த்துக் கேட்டான், “உங்களின் மூக்கை வாசனை எட்டவில்லையா?”

மூத்த பிடாரன், ‘இவனது செயல் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறதே’ என்று நினைத்தபடியே பதில் ஏதும் சொல்லாமல் நடந்துகொண்டிருந்தான். நடந்துசெல்லும் வீரர்கள் அனைவரும் கையில் ஆயுதங்களுடன் இருந்தனர். மனிதன், பாம்பைப் பற்றி பேசும் கணத்திலேயே அது அவனுக்குள்ளே வந்துவிடுகிறது. வெளியே அவன் எந்த வகை ஆயுதங்களை வைத்திருந்தும் என்னவாகப் போகிறது? உள்ளுக்குள் ஏற்படும் நடுக்கத்தை எவரால் நிறுத்த முடியும்?

நடுக்கமின்றி நடந்துகொண்டிருந்தவன் மூத்த பிடாரன் மட்டும்தான். அவனது நாசி, நீண்ட நேரத்துக்கு முன்பே நாவிப்பூ மணத்தைக் கண்டறிந்துவிட்டது. கருவிரியனுக்கும் நிழல் விரியனுக்கும்தான் இந்த வாடை வரும். கருவிரியனாக இருந்தால் வாடை நுகர்வதற்குள் கடி விழுந்திருக்கும். இது நிழல்விரியன்தான். அதனால்தான் நடக்கவிட்டு வந்துகொண்டே இருக்கிறது. யாருடைய நிழலில் வருகிறது என்பதுதான் அவனுக்குத் தெரியவில்லை.

`மனிதரின் நிழலுக்குள் அது நுழைந்துவிட்டால், அந்த நிழலைவிட்டு விலகாமல் வந்துகொண்டே இருக்கும். நிழலுக்கு உரியவன் அதனிடமிருந்து தப்பிக்க ஒரே வழி, நிற்காமல் நடந்துகொண்டே இருப்பதுதான். மாலையில் கதிரவனின் ஒளி மறைந்து மனித நிழல் அதுவாகச் சிதைந்தால் மட்டுமே அது திக்குத்தெரியாமல் திசை மாறும். இல்லையென்றால், அது வந்துகொண்டேதான் இருக்கும். நடப்பவன் எந்த இடத்தில் நின்று இளைப்பாறுகிறானோ, அந்த இடத்தில் அவனது குதிக்காலைக் கடித்துச் சுற்றும். இதை நாம் சொன்னால், மொத்தக் கூட்டமும் பயந்து சிதறிவிடும். என்ன செய்வது?' என, மூத்த பிடாரன் சிந்தித்தபடியே நடந்துகொண்டிருந்தான். இளைய பிடாரனோ பொறையனிடம் போய்ச் சொன்னான், “பாம்பின் வாடை வருகிறது. இந்த வாடையைக்கூட இந்தக் காது அறுந்தவனால் உணர முடியவில்லை. இவன் பாம்புப் பிடாரன்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது.”

அவனது சொல்லைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் பொறையன். மூத்த பிடாரனைத் திரும்பிப் பார்த்தார். பொறையன் நடையை நிறுத்தியதும் எல்லோரும் நின்றனர். மூத்த பிடாரன் மட்டும் நிற்காமல் நடந்தான். தன்னை இவன் அவமதிக்கிறான் எனப் பொறையன் நினைத்த கணத்தில், இடதுபக்கம் வந்துகொண்டிருந்த வீரன் ஒருவன் கத்திக்கொண்டு கீழே விழுந்தான்.

அன்று இரவு, தனித்த மரம் ஒன்றில் பரண் அமைத்துத் தங்கினர். வீரர்கள், சுழற்சி முறையில் காவல் காத்தனர். உணவு மூடைகளைக்கூட கீழே வைக்காமல் மரத்திலேயே கட்டித் தொங்கவிட்டனர். நடந்ததை மூத்த பிடாரன் விளக்கியபோது, இளைய பிடாரன் வணங்கி மன்னிப்புக் கோரினான்.

மறுநாள் விடிந்தது. ``பாம்பு பெரும்பாலும் காலையிலும் மாலையிலும்தான் இரை மேயும். எனவே, வெயில் நன்கு மேலேறிய பிறகு நடக்கலாம்'' என்றான் மூத்த பிடாரன். அதன்படியே அவர்கள் பொறுத்திருந்து நடந்தனர்.

வீரர்கள் எல்லோருக்குள்ளும் அச்சம் அப்பிக்கிடந்தது. மூத்த பிடாரன் முன் சென்றுகொண்டிருந்தான். வீரர்களுக்கு நடுவில் பொறையனும் இறுதியில் இளைய பிடாரனும் நடந்தனர். பாம்புகளின் விதவிதமான தடங்கள் நெடுகக்கிடந்தன. தொலைவில் இருந்த புதரின் மேல் பெரும்கிளையைப்போல கழுத்தை நீட்டி பறப்பவற்றை மேய்ந்துகொண்டிருந்தது ஏதோ ஒன்று. பின்னால் நடந்துகொண்டிருந்த வீரன் ஒருவன் அதைப் பார்த்துக் கை காட்டினான். இளைய பிடாரன் அதை உற்றுப்பார்த்தான்.

அது கட்டையா அல்லது பாம்பா என்பதை அவனால் உணர முடியவில்லை. ஒரு கல் எடுத்து அதை நோக்கி வீசினான். அது மெள்ளத் திரும்பியது.

முன்னால் போய்க்கொண்டிருந்த மூத்த பிடாரனிடம் சத்தம்போட்டுச் சொன்னான், “உனது காதுகளை அறுத்தால் ஒழிய உனக்குப் புத்தி வராது.’’

அப்போதுதான் புரிந்தது. அவன் ஏற்கெனவே அதைப் பார்த்துவிட்டான் என்று. பதில் சொல்லியபடியே நடக்கும் வேகத்தை இரு மடங்கு கூட்டினான் மூத்த பிடாரன். ஏதோ ஓர் ஆபத்து வரப்போகிறது என்பதை எல்லோரும் புரிந்து, வேகம்கொண்டனர்.

இளைய பிடாரன், வீரர்களைக் கடந்து சற்று உள்ளே போய்விட முயன்றபோது, அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வீரர்கள், ``காலிலே குச்சியாலேயே குத்திவிட்டது'' என்று சொல்லி கீழே உட்கார்ந்தனர். அவ்வாறு உட்கார்ந்த நான்கு பேரும் அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை.

“ஒரு கட்டைவிரியன் இருந்தால், அதைச் சுற்றி எண்ணற்றக் குறுவிரியன்கள் இருக்கும் என்பதுகூடவா உனக்குத் தெரியாது? தேன்கூட்டைக் கலைப்பதுபோல புதரில் கிடந்தவற்றைக் கல் வீசிக் கலைத்துவிட்டாயே!” என்று சொல்லிக்கொண்டே இளைய பிடாரனது காதோரத்தின் சிறு பகுதியை அறுத்தான் மூத்த பிடாரன்.

இளைய பிடாரன் வலியால் கத்தினான். ஆனால், நான்கு வீரர்களின் மரணத்துக்கு, தான் 83p6.jpgகாரணமாகிவிட்டதால் தண்டனையை ஏற்றான்.

இதுபோன்ற காரணங்களுக்காகச் சிறுகச் சிறுக அறுத்து இரண்டு காதுகளையும் முழுமையாக இழந்து நிற்பவன்தான் மூத்த பிடாரன். காதுகள் அற்ற அவனது தோற்றத்துக்குப் பின்னால், எத்தனை வகையான பாம்புகளைப் பற்றிய அறிவு இருக்கும் என்பதை இளைய பிடாரன் அப்போதுதான் உணர்ந்தான்.

மூன்றில் ஒரு பங்கு வீரர்களை இரண்டாம் நாளிலேயே இழந்தனர். `நாகக்குடியினரின் வாழ்விடத்துக்கு என, ஆறு நாள்கள் ஆகும்’ என்று முன்னோர் சொல்லக் கேட்டுள்ளனர். அங்கு சென்று சேரும்போது எத்தனை பேர் உயிரோடு இருப்போம் என்ற அச்சம் எல்லோரையும் ஆட்கொண்டது.

மூன்றாம் நாள் காலைப்பொழுது கழிந்த பிறகு நடக்க ஆரம்பித்தனர். ஒருவருக்கொருவர் எந்தவிதப் பேச்சும் பேசவில்லை. சற்றே பெரும் மரங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் காடு அது. வழக்கத்தைவிடக் கூடுதல் அச்சம் உள்ளுக்குள் ஆட்டிக்கொண்டிருந்தது. ஐந்து பேர் மரணித்துள்ளனர். வாயில் நுரைதள்ளி, உடல் நீலம்பூத்து, கால் விரல் சுருண்டு இழுத்து... என மரணத்தின் இறுதி வடிவங்கள் நினைவிலிருந்து அகல மறுத்தன.

முன்னால் நடந்துகொண்டிருந்த மூத்த பிடாரன், கீழே பதிந்துகிடக்கும் தடத்தைப் பார்த்ததும் நடையை நிறுத்தினான். எல்லோரும் இடம்விட்டு அசையாமல் அப்படியே நின்றனர். அவன் குனிந்து மண்ணில் இருக்கும் நெளிவுகளை உற்றுப்பார்த்தான். பின்னால் இருப்பவர்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. நின்றால் நிழல்விரியன் குதிக்காலைக் கவ்வும், பேசினால் குறுவிரியன் செவிக்கு எட்டும். என்ன செய்வது எனப் புரியவில்லை. ஆயுதங்களின் பிடி வழுக்கும் அளவு வீரர்களின் உள்ளங்கை வியர்த்தது.

மூத்த பிடாரன், அந்தத் தடத்தைப் பார்த்தபடி அது போன திசையில் இன்னும் சிறிது தொலைவு புற்களை விலக்கி உள்ளே போனான். அவன் எதுவும் சொல்லாததால் பதற்றத்தின் வேகம் கூடிக்கொண்டே இருந்தது. பின்னால் நின்று இருந்த இளைய பிடாரன், ``நான் அங்கு வரவா?” என்று கேட்க வாயெடுத்தபோது, கை மீறிக் காதைத் தடவிப் பார்த்துக்கொண்டது.

மூத்த பிடாரனின் முகம் இன்னும் தெளிவடையாமல் இருப்பதைப் பொறையன் கவனித்தார். சின்னதாக அச்சம் அவருக்குள் ஏற ஆரம்பித்தது. மூத்த பிடாரன் தடத்தைப் பார்த்தபடியே அங்கு இருந்த பாறை விரிசலை நோக்கி நகர்ந்துபோனான்.

`எந்தப் பாம்பின் தடத்தையும் தொலைவில் இருந்தே சொல்லக்கூடியவன் மூத்த பிடாரன். இந்தத் தடம் பற்றி மட்டும் ஏன் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறான்?' என்று பொறையன் குழம்பிக்கொண்டிருக்கையில், மூத்த பிடாரன் சொன்னான், “மலஞ்சாரைப் புரண்டிருக்கிறது”.

அவன் சொல்வது மற்றவர்களுக்குப் புரியவில்லை.

“பாம்புகள், வளைந்து வளைந்து போகக்கூடியவை. பாம்புகளின் இனத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப வளைவுகளின் அகலம் மாறுபடும். பாம்புகளுக்கு வயது ஆக ஆக வளையும் ஆற்றல் குறையும். அதனால் அவற்றின் வேகம் குறையும். இந்த நிலையிலேயே பெரும்பாலான பாம்புகள் இறந்துவிடும். ஒருசில பாம்புகள்தான் இவற்றைத் தாண்டியும் வாழும். முடிந்தவரை நெளிவுகொடுத்து நகர்ந்துபோகும். மிகவும் வயதானால், அதாவது, மனிதன் நூறு வயதை எட்டுவதைப்போல பாம்பும் பெரும் வயதை அடைந்தால், அதன் உடல் பாதி அளவுக்குச் சுருங்கிவிடும். அதனால் நெளிந்தபடி நகர முடியாது. உடலை முறுக்கிப் புரளத் தொடங்கும். அப்படியே இடதுபுறமும் வலதுபுறமுமாகப் புரண்டு புரண்டுதான் இடத்தைக் கடக்கும். மனிதன் வயோதிகத்தில் உட்கார்ந்து உட்கார்ந்து போவதைப்போலத்தான் அதுவும். இந்த இடத்தில் மலஞ்சாரை ஒன்று புரண்டுபோயிருக்கிறது” என்றான் மூத்த பிடாரன்.

அவன் சொல்வதை அனைவரும் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

மூத்த பிடாரன் தொடர்ந்தான், “இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்தக் குன்றில் வேறு எந்தப் பாம்பும் இருக்காது.”

எல்லோரையும் ஆச்சர்யம் தொற்றியது.

`` `பாம்பு புரளும் மண்ணில் பிற பாம்புகள் தங்காது’ என்பது முன்னோர் வாக்கு. எனவே, இன்று இந்தக் குன்றைக் கடக்கும் வரை உங்களுக்கு அச்சம் தேவையில்லை” என்றான் மூத்த பிடாரன்.

வீரர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. “அப்பாடா!'' என்று பெருமூச்சு விட்டனர். அச்சமற்ற அடிகளை கால்கள் எடுத்துவைத்தன. நடையின் வேகம் கூடியது. பேச்சு தொடங்கியது. பாம்புகளைக் கையாள்வதில் உள்ள நுட்பங்களைப் பற்றி பேசினர்.

“பாம்புகள், மனிதனைக் கண்டு அஞ்சித்தானே ஓடுகின்றன. பின்னர் ஏன் மனித மனம் பாம்பைக் கண்டு பதறுகிறது?” என்று கேட்டான் வீரன் ஒருவன்.

அசட்டுச் சிரிப்புடன் மூத்த பிடாரன் சொன்னான், “மனிதன், பாம்பின் ஓட்டத்தைப் பொய்யாகப் புரிந்துகொண்டான் என்று பொருள்.”

“அது அஞ்சி ஓடவில்லை என்கிறீர்களா?”

“அதைக் கண்டு நாம் அஞ்ச, அதனிடம் நஞ்சு இருக்கிறது. நம்மைக் கண்டு அது அஞ்சி ஓட, என்ன இருக்கிறது நம்மிடம்?”

வீரனிடம் பதில் இல்லை.

83p7.jpg

``ஒவ்வொரு பாம்பும் தனது இனத்தின் எண்ணற்றப் பாம்புகளைத் தின்றுவிட்டுத்தான் உயிர்வாழ்கிறது. மனிதனைப்போல் ஓர் உடம்புக்குள் வாழும் ஓர் உயிர் அல்ல; எண்ணிலடங்காத உயிர்கள் வாழும் ஓர் உடல். அது தின்ற உயிருக்கு ஏற்ப அதன் கால்கள் அமைகின்றன.”

மூத்த பிடாரனின் பேச்சு, அச்சமூட்டுவதாக இருந்தது. பாம்பை விடுத்து வேறு எதையும் பேசும் சூழல் இல்லை. இன்னொரு வீரன் நாகர்களைப் பற்றி கேட்டான். ``நாகர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானா அல்லது அவர்களுக்குத் தனித்த அடையாளம் ஏதும் உண்டா?”

“நம்மைப் போன்ற மனிதர்கள்தான். ஆனால், தனித்த அடையாளங்களும் உண்டு.”

“என்னென்ன?”

``நாகர்குடியின் ஆண்களை நீங்கள் கண்டறிய வேண்டும் என்றால், அவர்களின் கால்களை வைத்துத்தான் கண்டறிய முடியும். குதிக்காலில் நமக்கு மேலும் கீழுமாக வெடிப்புகள் இருக்கும். அவர்களுக்கோ, செதில் செதிலாகப் பக்குகள் இருக்கும். அதேபோல கைவிரல் நகக்கண்ணில் தோல் நமக்கு மேலும் கீழுமாக உரியும். அவர்களுக்கோ செதில் செதிலாகத்தான் உரியும். உற்றுப்பார்த்தால் நகம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதே தெரியாது” அவ்வளவு நேரம் உற்சாகமாக இருந்த பேச்சொலி, இப்போது சற்றே அமைதிகொள்ளத் தொடங்கியது.

இன்னொருவன் கேட்டான், “நாகர்குடிப் பெண்களை எப்படிக் கண்டறிவது?”

“காமம் கொள்கையில்” என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டான் மூத்த பிடாரன்.

“எப்படி?” என்று மீண்டும் அழுத்திக் கேட்டான் அவன். இந்தப் பதிலை அறிய, எல்லோரும் மிக ஆவலுடன் இருந்தனர். சிறு சத்தம்கூட எழுப்பாமல் கால்கள் நடந்துகொண்டிருந்தன.

மூத்த பிடாரன் சொன்னான், “காமம் கொள்கையில் விம்மும் கொங்கையின் நாவு படம்போல் விரிந்து அடங்கும். அதை உணரும்போது நாம் மரணித்துக்கொண்டிருப்போம்.”

அந்த இடம் அமைதியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து ஒருவன் கேட்டான், “காமத்தின்போது அவர்கள் இமை மூட மாட்டார்கள் என்றுதானே சொல்வார்கள். நீங்கள் வேறொன்றைச் சொல்கிறீர்களே?”

“எல்லாம் கண்டறியாதவர்கள் சொல்லும் கதைகள்தானே. ஆளுக்கு ஒன்றாகத்தான் இருக்கும்” என்றான் மூத்த பிடாரன். மூன்றாம் குன்றைவிட்டுக் கீழ் இறங்கினர். ``இந்த இடத்தில் இன்று தங்கிவிட்டு, நாளை மீண்டும் பயணத்தைத் தொடங்கலாம்'' என்றார் பொறையன்.

வீரர்கள், தங்குவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். உணவு மூடைகளைத் தூக்கிவந்த ஒருவன், ஆளுக்கு ஒரு கனியை உண்ணக் கொடுத்தான். மூத்த பிடாரனும் பொறையனும் கனியைப் பெற்றுக்கொண்டு சற்றுத் தள்ளியிருக்கும் சிறுபாறையை நோக்கி நடந்தனர்.

பொறையன், பாறையின் மீது ஏறி உட்கார்ந்து கனியைக் கடித்தார். அவருக்கு எதிரில் நின்றபடி மூத்த பிடாரன் கனியைக் கடிக்கும்போதுதான் கவனித்தான். பொறையன் கனியைக் கடிக்கும்போது பற்களுக்கு இடையில் இருக்கும் செதில்களிலிருந்து குருதி வந்துகொண்டிருந்தது.

பொறையன் கனியைக் கடித்துத் தின்றபடியே சொன்னார், “மரணம் ஏதும் இன்றி இன்றைய பொழுது முடிந்தது.''

அவரது சொல்லை அவரே இன்னும் சிறிது நேரத்தில் பொய்யாக்கப்போகிறார் என்பது மூத்த பிடாரனுக்குப் புரிந்துவிட்டது. ‘நேற்று இரவு மூடைகளைக் கட்டித் தொங்கவிட்ட மரத்திலிருந்து அது கனிகளுக்குள் இறங்கியிருக்க வேண்டும்’ என ஊகித்தபடியே பதில் ஏதும் சொல்லாமல், பொறையனையே பார்த்துக்கொண்டிருந்தான் மூத்த பிடாரன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • Replies 127
  • Created
  • Last Reply

வீரயுக நாயகன் வேள்பாரி - 19

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

83p1.jpg

டிக்கணக்கும் நஞ்சுக்கணக்கும் அறிந்த மூத்த பிடாரனின் கணக்குகளைத் தவறாக்கின செத்து விழுந்த வீரர்களின் உடல்கள். பாம்புகள் முன்நகரும் என்று மட்டுமே அறிந்த பிடாரனின் அறிவைப் பொய்ப்பித்தது செம்மண்ணுளி. அது கோடைக்காலத்தில் முன்நகரும்; மழைக்காலத்தில் பின்நகரும். நிலத்தின் வெப்பத்துக்கு ஏற்ப நகரும் இரு வகைச் செதில்களைக்கொண்டது அது.

எரிவிரியனையும் ஊதுசுருட்டையும்  நண்டுதின்னி நாகத்தையும் கண்கொண்டு பார்த்தறிந்தான் இளம் பிடாரன். இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்தபடி ஆறாம் மலை அடிவாரத்துக்கு அவர்கள் வந்தபோது உயிரோடு இருந்தவர்கள், இரு பிடாரன்களோடு ஒரு வீரன் மட்டுமே.

இவர்கள் வந்த செய்தி, நாகர் குலத் தலைவனுக்கு எட்டியது. அழைத்துவந்து விசாரித்தான். தலைவனைக் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர் மூவரும். பெருஞ்சேரலின் வேண்டுதலைச் சொன்னான் மூத்த பிடாரன்.

“தோலை உரிப்பதற்காக பாம்பு தின்னும் மூலிகையை, சேரல் குலத் தலைவனுக்கு நீங்கள் தந்துதவ வேண்டும்.”

நாகர் குலத் தலைவன் மிக இளவயதுக்காரன்போல் தெரிந்தான். அசட்டையான பார்வையோடு கேட்டான், “ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொருவிதமான மூலிகையைத் தின்னும். நீ எந்த மூலிகையைக் கேட்டு வந்துள்ளாய்?”

மூத்த பிடாரனுக்கு இந்தக் கேள்வி பெரும்வியப்பைத் தந்தது. பாம்பு தின்னும் ஏதாவது ஒரு மூலிகையை அறிந்துவைத்திருப்பதே அரிதானது. இவர்கள் ஒவ்வொரு பாம்புக்குமான மூலிகையை அறிந்துவைத்திருக்கின்றனர்.

“எந்த மூலிகையைத் தின்றால், மனிதனின் மேல் தோல் உரியும்?” எனக் கேட்டான் மூத்த பிடாரன்.

“நாங்கள் அதைத் தின்றதில்லை” என்றான் நாகர் குலத் தலைவன்.

மூத்த பிடாரனுக்கு, அடுத்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. பெருஞ்சேரல் சொல்லி அனுப்பிய இரண்டாவது வேண்டுகோளை முன்வைக்க முடிவுசெய்தான்.

கொண்டுவந்த கோணிப்பையில் இருந்து வெண்ணிறத் துணி ஒன்றை எடுத்து, நாகர் குலத் தலைவனை நோக்கி நீட்டியபடி, “இந்தத் துகிலை, புணரும் நாகங்களின் மீது போத்தி எடுத்துத் தர வேண்டும்” என்றான்.

`நாகங்கள் புணர்கையில் அவற்றின் மீது போத்தப்பட்ட துணியால் மனிதனுக்கு நீடித்த  ஆயுளும் அதிர்ஷ்டமும் கைக்கூடும்' என்பது வடதேசத்து முனியின் வாக்கு. அதனால்தான் இதைக் கொடுத்து அனுப்பினான் பெருஞ்சேரல்.

83p2.jpg

``நாகங்கள் புணர்வதைக் கண்டவர் யாரும் இல்லை” என்றான் நாகர் குலத் தலைவன்.

“நாகங்கள் பின்னிக்கிடப்பதை ஊரெங்கும் உள்ள மக்கள் பார்த்திருக்கின்றனர். நீங்கள் பார்த்ததில்லை என்பது நம்பும்படியாக இல்லையே” என்றான் மூத்த பிடாரன்.

“நாகங்கள் பின்னிக்கொள்வது அவற்றின் காதல் விளையாட்டு. அதை எல்லோரும் பார்க்கலாம். ஆனால், நாகங்கள் புணர்வதைத்தான் யாரும் பார்க்க முடியாது.”

இவை இரண்டும் வெவ்வேறு வகையான செயல்கள் என்பதை இப்போதுதான் மூத்த பிடாரன் கேள்விப்படுகிறான்.

நாகர் குலத் தலைவன் சொன்னான், ``நாகத்துக்கு காமம் பெருகும் காலங்களில் மெல்லிய நீரொன்று உடலெங்கும் ஊறி, அதன் கண்களை மறைக்கத் தொடங்கும். மனிதரைப் போலத்தான் அதற்கும் காமம் கண்களைக் கட்டும். அதற்குரிய மூலிகையைத் தின்ற பிறகு, நாகம் தனது மூக்கு நுனியின் வழியே அந்த நீர்த்தோலைக் கழற்றத் தொடங்கும். கண்களின் மேல் படர்ந்த காமத்திரையை அகற்றும். முழு உடலையும் உருவிப் புத்துடல்கொள்ளும். அதன் பிறகு அது எட்டு நாள்களுக்கு வெளியே வராது. எங்கு, எப்படி இருக்கும் என்பதை இதுவரை யாரும் அறிந்ததில்லை. தன் இணையோடின்றி, தனித்து நாகம் தோல் உரிப்பதில்லை.

புத்துடல்கொண்ட கணத்திலிருந்து அது இணை சேரத் தொடங்கும். ஒவ்வொரு செதிலாலும் தன் இணையின் ஒவ்வொரு செதிலுடன் கலந்து மீளும். திருகி, புரண்டு, இறுகி, மேல் தோல் கனிந்து முதிர்ந்த பிறகுதான் இணையைப் பிரிந்து வெளியேறும். தன் பழைய உடலின் வழியே இணை கூடாத ஒரே உயிரினம் அது மட்டும்தான்” எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாகனின் கருவிழிகளில் நீல நிற வளையம் ஒன்று பூத்து அடங்கியது.

நாகன் மேலும் சொன்னான், “புதிய மேனிகொண்டு மட்டுமே தழுவி வாழும் காதல் வாழ்க்கை நாகத்தினுடையது. இந்தப் புவியில் எந்த உயிரும் இன்புற்றிராத அபூர்வக் காதல் அது.”

மூத்த பிடாரன், வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான். ‘காமம்கொள்கையில் மனிதன் நாகங்களைப் போல பின்ன ஆசைப்படுவது அதனால்தானா?’ என்ற எண்ணம் ஓடியது. சற்றே நிதானித்தான். தனது இரண்டு வேண்டுதல்களும் அர்த்தமற்றதாகிவிட்டன என்பதை உணர்ந்தான். அடுத்து என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்.

“வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?”

``நீங்கள் வணங்கும் நாகதேவதையை நாங்கள் வணங்கி விடைபெற எண்ணுகிறோம்.”

``பொழுது சரிந்துவிட்டது. நாளை உங்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறேன். இன்றிரவு குடிலில் தங்குங்கள். எக்காரணம்கொண்டும் குடிலைவிட்டு வெளியே வரக் கூடாது.”

“சரி” என்று சம்மதித்தான் மூத்த பிடாரன்.83p3.jpg

தனித்து இருந்த குடில் ஒன்றில், அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். இரவு கூடியது. `மகுளி'ப் பறை இசைக்கும் ஓசை கேட்டது. இன்று நாகர்களின் விருப்ப நாள். வந்துள்ளவன் பிடாரன் எனத் தெரிந்தும் அவனிடம் கனிவுகாட்டியதற்கு அதுதான் காரணம்.

குலத்தின் வழக்கப்படி புதிய இணையர்கள் விரும்பிக்கூடும் நாள் இது. நாகர்குடி முழுவதும் மந்தையைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தது. நடுவில் பெரும்வட்டத்தில் நெருப்பு மூட்டியிருந்தனர்.

குடிலுக்குள் அடைபட்டிருந்தனர் மூவரும். வீரனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவன் படுக்க தலை சாய்த்தான். பிடாரன்கள் இருவரும் வெளியே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தவியாய்த் தவித்தனர். இசையின் ஓசை கூடிக்கொண்டே இருந்தது.

இளம் ஆண்களும் பெண்களும் தங்களின் இணையைத் தேர்வுசெய்யத் தொடங்கினர். மூத்த பிடாரன், ஓலை வேய்ந்த குடிலில் மிகவும் பக்குவமாக சிறுதுளையை உருவாக்க முயன்றுகொண்டிருந்தான். நாகர்கள் வேய்ந்த குடிலில் ஆபத்து நிறைந்திருக்கும் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது. எனவே, மிகவும் கவனமாக அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தான்.

இளம்பெண்கள் அமர்ந்திருக்க, இளம் ஆண்கள் அவர்களின் அருகில் வந்து இரு கைகளையும் பற்றி உள்ளங்கையை ஒன்றோடொன்று உரசினர். சாரைப்பாம்பின் அடிவயிறு வழவழப்பானதாக இருக்கும். நல்லபாம்பின் அடிவயிறு சொரசொரப் பானதாக இருக்கும். அது மரம் ஏறக்கூடியதால், அந்தத் தன்மை வாய்ந்தது.

ஆண், பெண் இருவரிலும் இந்த இரு இனங்களும் உண்டு. எதிரெதிர் தன்மை உள்ளவர்கள் கைகளை இறுகப் பற்றினர். அவ்வாறு இல்லாதவர்களின் கைகள், விலகி மறு கை பற்றின. வழவழப்பான சாரையின் அடிவயிற்றை, சொரசொரப்பான உள்ளங்கைகள் சூழத்தொடங்கின.

மூத்த பிடாரன் பக்குவமாகத் துளையிட்டு தொலைவில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். இளைய பிடாரனும் அதே போல துளையிட முயன்றான். கைகளைப் பற்றியவர்களின் ஆட்டம் தொடங்கியது. கை புணர்ந்து ஆடும் துணங்கைக் கூத்து. நாகத்திடமிருந்து மனிதன் கற்ற காதற்கலை இது. சுழிவும் பின்னலுமாக நெருப்பின் தழல் போல் உடல்கள் ஒன்றின் மேல் ஒன்று படர்ந்து மேலேறின. இசை கூடியது. நாகம் படம் விரிக்கையில், மயில்தோகையில் பல வண்ணம் சட்டெனத் தோன்றி மறையும். நாகர் குலப் பெண்களின் முகங்கள் தழல் படர்ந்த வெளிச்சத்தில் அவ்வாறே தோன்றின.

மூத்த பிடாரன் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கையில், “ஐயோ..!'' எனக் கத்தியபடி கீழே சரிந்தான் இளம் பிடாரன். வேகமாக வந்து அவனைத் தாங்கிப்பிடித்தான் மூத்த பிடாரன். அவனது கண்களின் ஓரம் சிறியதாக நீண்டிருந்தது உள்ளே சென்றதன் வால் பகுதி.

அதிர்ந்துபோனான் மூத்த பிடாரன். கொத்தும் பாம்புகளைத்தான் இதுவரைப் பார்த்துள்ளான். தீண்டிய வேகத்தில் உள்நுழையும் நாகத்தை இப்போதுதான் பார்க்கிறான். தாங்கிப் பிடித்தவனின் கை நடுங்கியது. இனி அவனைக் காப்பாற்ற முடியாது எனத் தெரிந்ததும் அப்படியே தரையில் படுக்கவைத்தான். ‘நாகர்கள் வேய்ந்த ஓலையில் எல்லாம் இருக்கும் என்பதை அறியாது அவசரப்பட்டு விட்டானே’ என்று மூத்த பிடாரன் கவலைகொண்டான்.

அதன் பிறகு துளையில் எட்டிப்பார்க்க மனம்வரவில்லை. இசை கேட்டுக்கொண்டே இருந்தது. நாகங்களுக்கு நெருப்பு ஆகாது. இவர்கள் ஏன் நெருப்பை மூட்டி ஆடுகின்றனர் என்பதை அறியவேண்டும் என ஆவலிருந்தது. ஆனால், கண்ணுக்குள் நுழைந்ததைப் பார்த்த பிறகு எல்லாம் வடிந்துவிட்டன.

மறுநாள் காலை நாகர்குடி இளைஞன் ஒருவன் வந்து, இருவரையும் நாகதேவதையின் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றான். செல்லும்போது வீரன் கேட்டான், “இளைய பிடாரன் ஏன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான்?”

``எழுந்திருக்க முடியாததால்” என்றான் மூத்த பிடாரன்.

83p4.jpg

நாகதேவதையின் இருப்பிடத்தை அடைந்தனர். மர அடிவாரத்தில் சிறு சிறு கற்களும் பாம்பு உரித்த தோல் ஒன்றும் இருந்தன.

நாகங்களைப் படமெடுக்கச் செய்து, அவற்றின் தலையில் சிறு கல் வைத்து அழைத்துவருவாள் குலத்தின் முதுமகள் எனக் கேள்விப்பட்டுள்ளான் பிடாரன். அங்கு இருக்கும் கற்கள் எல்லாம் தலைமுறை தலைமுறையாக அவ்வாறு கொண்டுவரப்பட்ட கற்களாக இருக்கும் என யூகித்தான் மூத்த பிடாரன். ஆனால், ``பாம்பு கழற்றிய அந்தத் தோலை வைத்து ஏன் வணங்குகின்றனர், அதன் காரணம் என்ன?'' என்று கேட்டான்.

அழைத்து வந்த நாகர்குடி வீரன் சொன்னான், “அது வெண்சாரைக் கழற்றிய தோல்.”

இரண்டு நாள்களில் அடைந்திராத பேரதிர்ச்சியை மூத்த பிடாரன் இப்போது அடைந்தான்.

“வெண்சாரையைப் பார்ப்பது தெய்வத்தைப் பார்ப்பதற்குச் சமம் என்பார்கள். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”

“எங்கள் முன்னோர்கள் பார்த்திருக்கிறார்கள்” என்று மட்டும் சொன்னான் நாகன்.

சேரலின் அவையில் நடந்தவற்றை விளக்கினான் மூத்த பிடாரன். வரும்போது நாக வீரன் எங்களை கீழ்மலையின் அடிவாரம் வரை அழைத்து வந்தான். உயிரிழப்பு இன்றி இருவரும் வந்து சேர்ந்தோம்” என்றான்.

“நாம் கேட்ட இரண்டையும் அவர்கள் கொடுக்காமல், கவனமாகப் பேசி உங்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்” என்றான் சேரல்.

“கவனம் பேச்சில் இருந்து என்ன செய்ய, செயலில் வேண்டும்” என்றான் மூத்த பிடாரன்.

அவன் சொல்வது அவையோருக்குப் புரியவில்லை.

“நாகம், என்றுமே மனிதனின் எதிரிதான். அதனிடம் இரந்து பயன் ஏதுமில்லை. அதை அழித்தால் மட்டுமே மனிதன் பயனடைவான். நாகர்கள் அதனினும் கொடிய அழிவுசக்திகள். அவர்களைக் கூண்டோடு அழித்தாக வேண்டும். அவர்கள் இறங்கி வர முடிவெடுத்தால், ஒரே நாளில் சேரல் குலம் அழிந்துபோகும்”.

அந்தக் கணம், பெருஞ்சேரலின் உடல் நடுங்கி அடங்கியது.

“என்ன உளறுகிறாய்?”

“நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டது, நீங்கள் தர முன்வந்த செல்வத்துக்காக அல்ல. பிடாரன்களின் வாழ்நாள் வைராக்கியம், நாகங்களை வெல்வதே. கரும்பருந்திடம் நாங்கள் அளித்துள்ள வாக்கும் அதுதான். நாகர்களின் ஆற்றலை அறியவே எருக்குமலை ஏறினேன். என்னை யாரென அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால், அவர்களை நான் கண்டறிந்துவிட்டேன். மிகச் சிறியதொரு கூட்டம் அது. பெரும்சக்தி வாய்ந்த சேரலர் அவர்களை ஏன் இன்னும் விட்டுவைத்திருக்கிறீர்கள் எனப் புரியவில்லை.”

“என்ன செய்யலாம் எனச் சொல்கிறாய்?”

``நீங்கள் உதவ முன்வந்தால், அவர்களைக் கூண்டோடு அழித்துவிடலாம்.”

``ஆறு மலைகளைத் தாண்டி அவர்களின் இருப்பிடம் உள்ளது. எப்படி அழிக்க முடியும்?”

“இந்தத் திசையில் போனால்தான் ஆறு மலைகளைத் தாண்ட முடியும். நாட்டின் வட எல்லையில் கடலோடு இணைந்த மலைமுகடு ஒன்று உள்ளது அல்லவா? அந்தத் திசையில் நுழைந்தால், முதல் குன்றின் மீதுதான் நாகக்குடியின் இருப்பிடம் உள்ளது. இந்தப் பயணத்தில் நான் கண்டறிந்த உண்மை அதுவே.”

பெருஞ்சேரல் மூத்தமகன் பதுமன், “அப்படியென்றால், தாக்குதலை இன்றே தொடங்கலாம்” என்றான் படுஉற்சாகமாக.

பெருஞ்சேரலோ, நிதானம் தவறாமல் இருந்தான். 83p5.jpg

“நாகர்களை நம்மால் எப்படி வெல்ல முடியும்?”

``நீங்கள் படைகளைத் தாருங்கள். நான் வெற்றியைத் தருகிறேன்.”

‘பிடாரனின் சொல்லை நம்பலாமா?’ என்ற சிந்தனையில் இருந்தான் பெருஞ்சேரல்.

“நாம் வென்றால், வளம்மிக்க மலைக்குன்றுகள் நம் நாட்டுடன் இணையும். அதுமட்டுமன்று, நாகர்களையே வென்றவர்களாக சேரலர் அறியப்படுவர். அதன் பிறகு, யார் மீது நாம் போர் தொடுத்தாலும் நமது ஆயுதங்கள் தாக்கும் முன் நாம் வென்ற நாகர்களின் கதைகள் அவர்களைத் தாக்கி பலம் இழக்கச் செய்யும்” என்றான் பதுமன்.

பெருஞ்சேரல் மூத்த பிடாரனைப் பார்த்துக் கேட்டான், “படைகள் எப்போது புறப்பட வேண்டும்?'’

``எனக்கான ஆயுதங்களை நான் சேகரிக்க, சில மாதங்கள் ஆகும். அதன் பிறகு புறப்படலாம்.”

டதிசை மலைமுகட்டின் அடிவாரத்தில், சேரலர் படை அணிவகுத்து நின்றது. தளபதிகள் இரண்டு நிலைகளாகப் படைகளை நிறுத்தியிருந்தனர். காலாட்படையும் விற்படையும் எருக்குமலையை நோக்கி நின்றன. படைகளுக்குப் பின்னால் முகட்டின் மேல்புறத்திலிருந்து பெருஞ்சேரல் களத்தைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்.

பெருஞ்சேரலின் படை அடிவாரத்தில் திரண்டிருப்பதை அறிந்த நாகர்கள், எதிர் தாக்குதலுக்கு ஆயத்தமானார்கள்.

மூத்த பிடாரன் மூன்று மாதங்களாகச் சேகரித்த ஆயுதங்கள் எல்லாம் நான்கு கூட்டு வண்டிகளில் இருந்தன. அவை என்ன ஆயுதங்கள் என்பதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. போரின் போக்குகளுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்தலாம் என்ற முடிவோடு, நாகர்களின் தாக்குதல் உத்தியைக் கவனித்துக்கொண்டிருந்தான். அவனோடு பெருஞ்சேரல் மகன் பதுமன் நின்றிருந்தான்.

விரிசங்கு ஊதி போரைத் தொடங்கினான் பெருஞ்சேரல். அவன் படைவீரர்கள் ஆயுதங்களோடு மெள்ள முன்நகர்ந்தனர். மலையின் மீதிருந்து நாகர் படைத் தளபதியின் கொம்போசை கேட்டது.

நாகர்களின் தாக்குதல் எப்படி இருக்கும் என இதுவரை யாரும் பார்த்ததில்லை. எனவே, வீரர்கள் பெரும் நடுக்கத்தின் வழியேதான் ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டு முன்னேறினர். சேரலர் படை எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தது. அதில் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாகத்தான் நாகர் குடியினர் இருப்பார்கள் எனக் கணித்திருந்தான் மூத்த பிடாரன். எனவே, இந்தப் போர் உச்சிப் பொழுதுக்குள் முடிந்துவிடும் என்பது அவனது எண்ணம்.

சேரல வீரர்கள் முன்னோக்கிச் சென்றபோது நாகர்களும் மூன்று அணிகளாக இறங்கி வந்தனர். ஒவ்வோர் அணியிலும் மிகக் குறைவான வீரர்களே இருந்தனர். அதைக் கண்ட சேரல வீரர்களுக்கு பெரும் நம்பிக்கை பிறந்தது. அவர்கள் இறங்கி வருவதில் ஏதோ மாறுபட்டத்தன்மை இருக்கிறதே என உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் மூத்த பிடாரன்.

நாகர்களின் இடதுபுறக் குழு குறுவளைவு கொண்டு இறங்கியது. வலதுபுறக் குழு பெரும்வளைவு கொண்டு இறங்கியது. நடுவில் வந்த குழு, வளைவுகளற்று நெட்டுவாக்கில் படுவேகமாக இறங்கியது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் எனக் கணித்துக்கொண்டிருக்கும்போதே சேரலர் படை நாகர்களை நோக்கி அம்புகளை வீசியது.

நடுவில் நெட்டுவாக்கில் வந்த நாகர் படையின் முன்வரிசையினர் மண்டியிட்டு அமர்ந்து அம்பை நாணில் ஏற்றினர். வழக்கமான நேரத்தைவிட அவர்கள் நாண் ஏற்ற மும்மடங்கு நேரமானது. ``போர்ப் பயிற்சி அற்றவர்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது'' என்றான் பதுமன்.

நாகர்கள் தொடுத்த நாணில் இருந்து அம்புகள் பறந்து வரும்போதுதான், அம்போடு சேர்த்து மற்றொன்று நெளிந்துகொண்டு வருவது தெரிந்தது. கண நேரத்துக்குள் சேரலர் படை கதிகலங்கியது.

அம்போடு வந்து இறங்கிய சாரைகள் நான்கு புறங்களிலும் விழுந்து நகர, படைவீரர்கள் திசையெங்கும் தெறித்து ஓடினர்.

நாகர்களின் இந்தத் தாக்குதலை எதிர்பார்த்திருந்தான் மூத்த பிடாரன். “முதலிலே சொன்னால், படைவீரன் ஒருவன்கூட களத்தில் நிற்க மாட்டான். அதனால்தான் சொல்லவில்லை” என்று பதுமனிடம் கூறினான்.

“நடுவில் நெட்டுவாக்கில் இறங்கியது சாரைப்பாம்பு உத்தி. இடதுபுறம் குறுவளைவு கொண்டு இறங்கியது எரிவிரியன் உத்தி. வலதுபுறம் பெருவளைவுகொண்டு இறங்கியது நல்லபாம்பு உத்தி. பாம்புகளின் தடத்துக்கு ஏற்ப உத்தி வகுத்துள்ளனர். அவர்கள் இப்போது சாரைப் பாம்பை மட்டுமே பயன்படுத்தி அம்பு எய்துள்ளனர்” என்றான் பிடாரன்.

பதுமனுக்கு, உடல் நடுக்கம்கொள்ளத் தொடங்கியது.

“இதைத் தடுக்க வழி என்ன?”

கேட்டுக்கொண்டிருக்கும்போதே தனது கூட்டு வண்டியின் மேல்கூடாரத்தைத் திறந்துவிட்டான் மூத்த பிடாரன். கரும்பருந்துகளும் பாம்புப் பருந்துகளும் படபடத்து வெளியேறின. காற்றில் ஏறிய பருந்துகளின் ஓசை, எங்கும் எதிரொலித்தது. பருந்துகளின் விரல்கள் களத்தில் நெளியும் சாரைகளைக் கவ்வி மேலேறின. அந்தக் காடு முழுவதும் பருந்துகள் வட்டமடிக்கத் தொடங்கின. பருந்தின் கண்கள் பாம்பைக் காணும் முன் அதை பாம்பு கண்டுணர்ந்துவிடும்.

83p6.jpg

“இனி எந்தப் பாம்பும் வெளியே நிலைகொள்ளாது. அனைத்தும் தன் இருப்பிடத்தை நோக்கி ஓடிவிடும். அவர்களால் அதைக் கையில் எடுத்து அம்பில் பொருத்தி அனுப்ப முடியாது” என்றான் பிடாரன்.

பதுமனுக்கு, மேலெல்லாம் வியர்த்திருந்தது.

பிடாரனின் இந்த உத்தியை எதிர்பார்த்து இருந்தவனைப் போல நாகர் குலத் தளபதி குறுஞ்சிரிப்பு ஒன்றை உகுத்தான்.

“முகட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டிருக்கும் அடுத்த படைப் பிரிவை முன்னகர்ந்து வரச் சொல்” என்று கத்தினான் மூத்த பிடாரன்.

பதுமன் அதற்கான உத்தரவைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும்போதே, நான்காவது கூட்டுவண்டியின் கதவைத் திறந்தான் மூத்த பிடாரன். மரப்பெட்டிகள் நிறைந்திருந்தன. “வீரர்களிடம் பெட்டியை எடுத்துக்கொண்டுபோய், எதிர்திசையில் பகுதிக்கு ஒன்றாகத் திறந்துவிடச் சொல்'' என்றான் மூத்த பிடாரன். பதுமன் உடனடியாக அதற்கான உத்தரவை இட்டான்.

வீரர்கள், பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடினர்.

“பெட்டிகள் முழுக்க எண்ணற்ற பாம்புக்கீரிகளும் கருங்கீரிகளும் இருக்கின்றன. அவை முக்கியம் அல்ல. எட்டு பழந்தின்னிக் கீறிகள் இருக்கின்றன. அவற்றின் வாடை காற்றில் மிதந்தாலே போதும், இந்தத் திசைவிட்டே பாம்புகள் வெளியேறிவிடும்” என்றான் மூத்த பிடாரன்.

சேரலர் படை, மறுமுறை அணிவகுத்தது. இப்போது பின்வரிசையில் கம்பீரமாக நிலைகொண்டது யானைப்படை. அதற்கு முன்னால் விற்படையும் காலாட்படையும் அணிவகுத்தன. முதலில் இருந்ததைப்போல இருமடங்கு வீரர்கள். உத்தரவு கிடைத்ததும் முன்னேறினர்.

நாகர் குலத் தளபதி கை அசைத்ததும் நாகர்களின் அம்புகள் நாணில் இருந்து விடுபட்டு, காற்றில் பாய்ந்தன. இப்போது அம்போடு நெளிந்து வளையும் பாம்புகள் எவையும் தென்படவில்லை. சேரல வீரர்கள் உற்சாகத்துடன் முன்னேறினர். பதுமன், மூத்த பிடாரனைத் தழுவிப் பாராட்டினான். “இனி வெற்றி உறுதி!” என்று சொல்லி மகிழ்ந்தான் பதுமன்.

சிறிது நேரத்தில் முன்கள வீரர்களிடம் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டன. என்னவென்று அறியும் முன்பே வீரர்கள் பின்னோக்கி ஓட ஆரம்பித்தனர். சருகில் தீப்பற்றுவதைப் போலத்தான் போர்க்களத்தில் ஓட ஆரம்பிப்பது. ஒருவன் ஓட ஆரம்பித்தால், அந்த அச்சம் கண நேரத்துக்குள் ஒட்டுமொத்த படையிலும் பரவும். யானைப்படைத் தளபதி சட்டென அனுமானித்து, களத்தைவிட்டு வெளியேற உத்தரவிட்டான்.

மூத்த பிடாரனுக்கு, நடப்பது எதுவும் புரியவில்லை. நாகர்கள், அம்பு எய்தியபடி முன்னோக்கி வந்துகொண்டிருந்தனர். சேரலர் படை, களம்விட்டு ஓடிக்கொண்டிருந்தது. பிடாரன் நடப்பதை அறியாமல் திகைத்து நின்றான்.

வீரர்கள், உயிர்பிழைக்க வெறிகொண்டு ஓடினர். என்ன என்பது விளங்கவில்லை. `தாமதிக்கக் கூடாது' என முடிவெடுத்த மூத்த பிடாரன், முன் களத்தை நோக்கி விரைந்தான். பதுமன் அடுத்து என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல் தந்தை இருக்கும் இடம் நோக்கி மேலேறினான்.

பெருஞ்சேரல், முகட்டின் மேல் இருந்தபடி களத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது படை பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்தது. சின்னஞ்சிறிய நாகர் கூட்டம் முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. பதுமன் வந்து தந்தையோடு இணைந்தான். எந்தவித முடிவும் எடுக்காமல் மூத்த பிடாரனுக்காக அவர்கள் காத்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து மூச்சிரைக்க ஓடிவந்தான் மூத்த பிடாரன். மேலெல்லாம் அலங்கோலமாய் இருந்தது. “எள்ளுச்செடியில் உற்பத்தியாகும் கண்ணுக்குத் தெரியாத கொடும்நாகம் ‘குருதிப்பனையன்’. அம்புகளோடு இணைந்து அவை வந்துகொண்டிருக்கின்றன” என்று தன் மீது பாய்ந்த அம்பை கையில் ஏந்தியபடி கூறினான்.

பெருஞ்சேரலன் நடுங்கிப்போனான்.

“இப்போது என்ன செய்யலாம்?”

பதில்  சொல்லும் ஆற்றல் குறைந்துகொண்டிருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் பாயும் நஞ்சின் வேகத்தை கணித்துக்கொண்டிருந்தான் மூத்த பிடாரன். அப்போது பாய்ந்து வந்த அம்பு ஒன்று, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் குத்தியது.

மூத்த பிடாரன் சொன்னான், “இந்தக் குன்றில் மட்டுமே அவர்களின் குடி இருக்கிறது. இன்று இரவோடு இரவாகக் குன்றைச் சுற்றிவளையமிட்டுத் தீயிடுங்கள். தீயில் இருந்து மீள, அவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. நாகர் இனம் முழு முற்றாக அழியும்.”

பெருஞ்சேரல் சற்றே தயங்கிச் சிந்தித்தான்.

மூத்த பிடாரன் சொன்னான், “ஒருமுறை தாக்கிவிட்டுப் பாதியில்விட்டால், அவர்கள் உங்களை அழிக்காமல் விட மாட்டார்கள். எனவே, முழுமையும் அழித்துவிடுங்கள்.”

பெருஞ்சேரலின் உடலெங்கும் அச்சம் பரவியிருந்தது. அவனது தயக்கத்தைக் கணித்தபடி பிடாரன் வாய் குழறிச் சொன்னான், “இவர்களை அழித்தால் மட்டுமே உங்கள் இரண்டாவது மகனின் ஆட்சிக்காலம் நிலைத்திருக்கும்.”

‘முதல் மகன் பதுமன் இருக்கும்போது ஏன் இவன் இரண்டாவது மகனைப் பற்றிச் சொல்கிறான்?’ என்ற அதிர்ச்சியோடு பெருஞ்சேரல் திரும்பி பதுமனைப் பார்த்தான்.

பெருஞ்சேரலின் கதறல், காதில் சன்னமாக விழுந்தது. கேட்டபடியே மண்ணில் சரிந்த மூத்த பிடாரனின் வாய் முணுமுணுத்தது, “ஒரு முழம் அளவில் கிளைகளில் தொங்கியபடி வாய் பிளந்து இருக்கும் மனிதனைக் கண்டால் தாவிக் கடிக்கும் உச்ச நஞ்சுகொண்ட பச்சிலை விரியன், சிறிது நேரத்துக்கு முன் பாய்ந்து வந்த அம்பிலிருந்து விலகித் தாவி பதுமனின் தொண்டையைக் கவ்வியது.”

வாயில் நுரை தள்ளியபடி இருந்தது. ஆனாலும் மூத்த பிடாரனின் உடலில் இருந்த நச்சுமுறி மருந்துகள் அவனை விரைவில் சாகவிடவில்லை.

அன்று இரவு எருக்குமலையைச் சுற்றி தீ மூட்டப்பட்டது. மூத்த பிடாரனின் கண் முன் எருக்குமலை முழுமுற்றாக எரிந்தது. அதன் மஞ்சள் வெளிச்சத்தில் நாகர்கள் துடிதுடித்துச் செத்தனர். நாகர்களின் அழிவோடு பிடாரனின் வாழ்வும் முடிந்தது.

தை கேட்டுக்கொண்டிருந்த கபிலருக்கு, உயிர் உறைந்துவிடுவதுபோல் இருந்தது. ஆனால், கதையைவிட அவரை உலுக்கியது கண்ணுக்கு முன்னால் காணும் காட்சி. நெருப்பு அணைந்த பிறகு கங்குகளின் மீதுதான் இறங்குவார்கள் என்றுதான் அவர் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், புதிதாக இரண்டு காதல் இணையர்கள் கை புணர்ந்து ஆடியபடி நெருப்பை நோக்கி நகர்ந்தனர்.

நெருப்பின் அனலில் நின்றாடப்போகிறார்கள் எனக் கபிலர் நினைத்துக்கொண்டிருந்தபோதே, அவர்கள் எரியும் நெருப்புக்குள் நுழைந்தனர். கபிலருக்கு குருதியோட்டமே நின்றுவிடுவதுபோல் இருந்தது.

மனிதர்கள் உயிரோடு நெருப்புக்குள் இறங்குவதை, கண்களால் காண முடியவில்லை. நெருப்புக்குள் இறங்கியவர்கள் சுழன்று கைகளை வீசியபோது, உள்ளிருந்து தீப்பொறிகள் நான்கு புறங்களிலும் தெறித்தன. அவர்கள் ஆடுகின்றனரா... எரிகின்றனரா? புரியாத நிலையில் கண்ணிமை செருக, மயங்கிச் சரிந்தார் கபிலர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

83p1.jpg

து ஆதி பழங்காலம். எந்த ஆண்டிலும் இல்லாதவாறு கோடைவெயில் உக்கிரம்கொண்டிருந்தது. எங்கும் இலை, தழைகள் காய்ந்து சருகாகக் கிடந்தன. நிலத்தின் வெக்கை, எலிவளைக்குள்கூட நாகங்களை இருக்கவிடவில்லை. மனிதர்களின் பாடு அதனினும் மோசமாக இருந்தது. ஒரு கொடும்பகலில் எருக்குமலையின் தென்திசையில் காட்டுத் தீ பற்றியது. பற்றிய வேகத்தில் மலையின் அடிவாரம் முழுவதும் நெருப்புப் பரவியது. மலையின் மேல்புறத்தில் குடியிருக்கும் நாகர்கள் பரவிவரும் நெருப்பை பகல் முழுவதும் அறியவில்லை. சூரிய வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு இருந்ததால், அவர்கள் பகலில் குடிலைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். அனல் அலையலையாக மேலேறி வர, அது வழக்கமான ஒன்றுதான் என்று நினைத்தனர்.

சூரியன் இறங்கிய பிறகே அவர்கள் வெளியேறி வந்தனர். கரும்புகை விண்ணை நோக்கி எழுந்தவண்ணம் இருந்தது. எருக்குமலையின் நாலாபுறங்களில் இருந்தும் சருகுகள் பற்றி எரிய, தீயின் நாவுகள் சுழன்று மேல்நோக்கிப் பாய்ந்துவந்தன. மலையின் எந்தத் திசை வழியாகவும் வெளியேற முடியாத நிலை உருவாகிவிட்டது. இருக்கும் ஒரே வழி, மலையின் மேற்கு முகப்பிலே இருக்கும் கரும்பாறை மடிப்புகளும் அவற்றில் ஆங்காங்கே இருக்கும் குகைகளும்தான். நாகர்கள் எல்லோரும் குடிலைவிட்டு அகன்று குகைகளில் நுழைந்தனர்.

83p2.jpg

உயிர் தப்பிய மகிழ்வு யாரிடமும் இல்லை. மலை முழுவதும் இருந்த நாகங்கள் நெருப்பில் அழிந்திருக்குமே, அவற்றைக் காப்பாற்ற முடியாமல் நாம் மட்டும் பிழைத்து என்ன ஆகப்போகிறது என்ற மனநிலைதான் எல்லோருக்கும். காட்டுத் தீ ஆறு நாட்கள் எரிந்தது. காற்று வீச வீச நெருப்பின் வெக்கை நாலாபுறங்களிலும் சீறிக்கொண்டிருந்தது. கரும்பாறைகள் பிளவுண்டன.

இரவும் பகலும் நாகர்கள் அழுகையை நிறுத்தவே இல்லை. ஒரு நள்ளிரவில் முதுமகள் ஒருத்தி குகையைவிட்டுச் சற்றுத் தள்ளிப்போய், பாறையின் மீது அமர்ந்து நெருப்புக்கோளமாகத் தகதகத்துக்கிடக்கும் காட்டைப் பார்த்தபடி இருந்தாள். அந்த இடத்தின் சூட்டில் யாரும் ஒரு கண்ணிமைப்பொழுதும் நிற்க முடியாது. அவள் எப்படி இவ்வளவு நேரம் நிற்கிறாள் என மற்றவர்களுக்குப் புரியவில்லை.

அவள் கண்களில் உயிர் இல்லை. எங்கும் தகிக்கும் கங்குகளே இருந்தன. நிலைகொண்ட மரங்கள் எவையும் இல்லை. நெருப்பு, மரங்களை முறுக்கித் திருகியது. இரவில் எரிந்து சரியும் மரங்களைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அங்குமிங்குமாக மரங்கள் வெடிக்கும் ஓசை நின்றபாடில்லை. கருநாகத்தின் சீற்றம் என வெடிப்புற்ற மரங்கள் நெருப்பைக் கக்கின.

முதுமகள், அழும் கண்களைத் துடைத்தபடி பாறையைவிட்டு எழுந்தாள். எழும்போது தொலைவில் தகித்துக்கொண்டிருக்கும் நெருப்பின் பரப்பில், ஏதோ ஒரு வேறுபாட்டை உணர்ந்தாள். அது என்னவென்று அவளுக்குப் பிடிபடவில்லை. அந்த இடத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஒன்றும் தெரியவில்லை. எங்கும் கங்குகள் கண் விழித்திருந்தன. இந்தக் கொடும் இரவில் எதைப் பார்த்து என்ன ஆகப்போகிறது என்ற நினைப்போடு எழுந்தாள். மீண்டும் அந்த இடத்தில் ஏதோ ஓர் அசைவு தெரிந்தது. கண்களைக் கூர்மையாக்கி உற்றுப்பார்த்தாள். கங்குகளின் உள்நெருப்பு காற்றின் போக்குக்கு ஏற்ப கூடிக் குறைவதால் ஏற்படும் அசைவுகள் நம்மைத் தொந்தரவு செய்கின்றன என்று நினைத்தபடி, குகையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

83p3.jpg

சிறிது தொலைவு நடந்தவள், மனம் பொறுக்காமல் மீண்டும் திரும்பிவந்து அந்த இடத்தை உற்றுப்பார்த்தாள். கங்குகளின் மீதான அசைவுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படத் தொடங்கின. அவளின் கண்கள் இமைகளை இறக்காமல் உற்றுப்பார்த்தபடியே இருந்தன. நம்பவே முடியாத பேரதிசயம் ஒன்றை அவள் உணரத் தொடங்கினாள். உடலெங்கும் வியர்த்து அடங்கியது. அது உண்மைதானா என்ற கேள்வியை மனம் மீண்டும் மீண்டும் எழுப்ப, அசையாமல் பார்த்தாள். உண்மைதான். `என் கண்கொண்டுதான் அதைப் பார்க்கிறேன்’ என்பதை அவள் நம்பத் தொடங்கினாள்.

நெருப்பு எரிவது அடங்கி, கங்குகள் மட்டும் கனன்றுகொண்டிருந்த ஓர் இடத்தில், சாம்பல் படிந்த கங்குகளின் மீது ஒரு நாகம் ஊர்ந்து போவதுபோல் இருந்தது. உற்றுப்பார்த்தாள் அவள். கண்ணிமைக்கும் நேரத்தில் கங்குகளைக் கடந்து, நெருப்பு அணைந்த இருள் பகுதிக்குள் நுழைந்தது அந்த நாகம்.

முதுமகள், குகையை நோக்கி ஓடினாள். கத்தியபடி இந்த உண்மையைச் சொன்னாள். `இந்தக் 83p4.jpgகொடும்நெருப்பால் ஆறு நாட்கள் சூழப்பட்ட இந்த நிலையில் எல்லோரும் மனம் சிதைந்தே இருக்கிறோம். முதுமகள், அதிகச் சிதைவுக்கு உள்ளாகிவிட்டாள்’ என்று மற்றவர்கள் நினைத்தனர்.

அவளோ, `‘இல்லை நெருப்பின் மீது நாகம் ஊர்ந்து செல்வதை நான் பார்த்தேன்'’ எனக் கத்தி முறையிட்டாள். எல்லோருக்குமான ஆசையே, `‘மண்ணின் அதிசய உயிரினமான நாகங்கள் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதுதானே. குலத்தின் முதுமகளுக்கு அது இருக்காதா?’' என்று ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லினர்.

முதுமகள் ஆறாத சினம்கொண்டாள். மறுநாள் இரவு எல்லோரையும் அவள் அமர்ந்திருந்த பாறைக்கு அழைத்துவந்தாள். தாங்க முடியாத வெக்கைக்கு நடுவே இரவு முழுவதும் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். நேற்றுபோல் கங்குகள் பெரும் அனலோடு இல்லை. சற்றே குறைந்திருந்தது. ஆனாலும் உள்நெருப்பு இரவானதும் கண்கள் விழித்துத் தகித்தது. ஊரே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. கரும்புகை விடாது வந்து முகத்தில் அறைந்தது.

பொழுது, நள்ளிரவைத் தாண்டியது. அவர்கள் தலைமுறைத் தலைமுறையாக வாழும் காட்டைச் சுழற்றித் தின்ற நெருப்பு, இப்போது சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது.

`‘இந்தக் கொடும்காட்சியை இரவும் பகலுமாகப் பார்த்துக்கொண்டிருந்தால் எல்லோருக்கும் மனம் சிதைந்துதான்போகும், வாருங்கள் குகைக்குள் ஒடுங்குவோம்” என்று சொல்லி, பெரியவர் ஒருவர் எழுந்தவுடன் அனைவரும் எழுந்து குகை நோக்கிப் புறப்பட்டனர்.

முதுமகளுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இனி இவர்களை நிறுத்த முடியாது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. அவளும் உடன் நடக்கத் தொடங்கினாள். எல்லோரும் பாறைவிட்டு அகன்ற பிறகு, ஒரு சிறுவன் மட்டும் எதிர்திசையில் பார்த்தபடி அசையாமல் நின்றுகொண்டிருந்தான். மற்றவர்கள் அவனைச் சத்தம்போட்டு அழைத்தபடி குகை நோக்கி நடந்தனர்.

சிறுவனின் குரல் மெல்லியதாகத்தான் கேட்டது. எல்லோரும் அருகில் வந்து அந்தத் திசை நோக்கிப் பார்த்தனர். வியப்பால் விழிகள் பிதுங்கிக்கொண்டிருந்தன. கூட்டத்தினர் மூச்சு விடும் சத்தம்கூடக் கேட்கவில்லை. உறைந்துபோன நிலையில் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். கண்ணீரைத் துடைத்தபடி முதுமகள் மட்டும் குகையை நோக்கி நடந்தாள்.

அதன் பிறகு, பலகாலம் அந்த ரகசியத்தைக் கண்டறிய முடியாமல் நாகர்கள் தவித்துப்போயினர். கங்குகளின் மீது பாம்புகளால் எப்படி ஊர்ந்துபோக முடிந்தது? விடை தெரியாமல் இருந்த கேள்விக்கு முதுமகள்தான் ஒருநாள் விடை கண்டாள். அந்த மலையின் தென்திசைப் பாறை இடுக்குக்குள் ஓர் இடத்தில் ‘தீக்களி’ உள்ளது. அதில் புரண்டு, மேனி எல்லாம் தீக்களி அப்பியபடி நாகங்கள் நெருப்பைக் கடந்துள்ளன என்று அறிந்தாள்.

அது உண்மையா என்பதை அறிய முதலில் தானே உடல் எங்கும் தீக்களி பூசியபடி நெருப்புக்குள் இறங்கப்போவதாகச் சொன்னாள். முதுமகள் வாக்கைத் தட்ட முடியாமல் பெரும்மரங்களை வெட்டி வீழ்த்தி தீயை உருவாக்கினர். ஆடை துறந்து உடல் எங்கும் தீக்களி பூசியபடி நெருப்பினுள் நுழைந்தாள் முதுமகள். நாகர் கூட்டத்தின் உயிர்நாடி ஒடுங்கியது. அவள் உள்நுழைந்தபோது வீசிய காற்று, தழலைக் கிளர்ந்தெழச் செய்தது. குலத்தின் முதுமகள் நெருப்பில் மறைந்தாள்.

கணநேரத்தில் பதறிய ஆண்கள், “தண்ணீர்கொண்டு ஊற்றி நெருப்பை அணையுங்கள்” என்று கத்த, பெண்களோ, “முதுமகள் வாக்கை மீற அனுமதிக்க மாட்டோம்” என்று தீயைக் காத்து நின்றனர். சூழ்கொடி எனப் படர்ந்திருந்த நெருப்பின் கிளைகளை விலக்கி வெளியே வந்தாள் அவள்.

உறைந்து நின்றனர் நாகர்கள்.

``எண்ணெய்க்குள் நீர் நுழைய முடியாததைப்போலத்தான் இந்தத் தீக்களியைத் தாண்டி தீ நுழைய முடியாது” - சொல்லியபடி நடந்தாள் முதுமகள்.

நிர்வாண நிறைச்சுடரை அழைத்துக்கொண்டு நீராடச் சென்றனர் நாகினிகள். நடக்கும்போது அவள் சொன்னாள், “நெருப்பு, கண்ணுக்குள் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது கண்கள் திறந்தால் போதும்.”

83p5.jpg

அவளின் குரலை, கண்விழித்துக் கேட்டுக்கொண்டிருந்தன நாகங்கள்.

தழல்மாலை சூடி வந்தவளின் மேனி எல்லாம் நீரூற்றி நீர்மாலை சூடினர்.

பெருஞ்சேரலின் படை எருக்குமலையைச் சூழ்ந்து எரியூட்டியபோது நாகர்கள் பலரும் போரிட்டு மாண்டுள்ளனர். மிஞ்சியவர்கள் உடல் எங்கும் `தீக்களி’ பூசி அந்த நெருப்பில் இருந்து வெளியேறி பறம்புமலை வந்து சேர்ந்தனர்.

அப்போதிருந்து, அவர்களின் குலவழக்கப்படி கொற்றவைக் கூத்தில் கை புணர்ந்தாடும் துணங்கைக் கூத்து நிகழ்கிறது. புதிய இணையர்கள் தங்களின் மேனி எங்கும் ‘தீக்களி’ பூசியபடி நெருப்புக்குள் நுழைந்து, `தழல்மாலை சூடுவர்.

பிலரின் உடல்நிலை ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தது. நேற்றைய இரவுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமானது. பகல் முழுக்க தனது மாளிகையில் படுத்தபடி ஏதேதோ பிதற்றினார். உடல் மிகவும் சூடேறியிருந்தது. செய்தியைக் கேள்விப்பட்டு பாரி வந்தான். மருத்துவர்கள் மருந்துகள் தந்தனர். அவர்கள் போன பிறகு பாரி ‘தழல்மாலை சூடும்’ நிகழ்வை விளக்கிச் சொன்னான். அதை முழுமையாக அறிந்த பிறகுதான் கபிலரின் மனம் நிதானமடைந்தது.

`` `மூன்றாம் நாள் சற்றே அச்சமூட்டுவதாக இருக்கும். நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னேன். நீங்கள்தான் செவி சாய்க்கவில்லை” என்றான் பாரி.

“எனது உடல் ஈடுகொடுக்க மறுக்கிறது; மனம் உடலைப் பொருட்படுத்த மறுக்கிறது.”

அவர் சொன்னதைப் பற்றி பாரி சிந்தித்துக்கொண்டிருந்தான். கபிலர் தொடர்ந்தார்.

``எத்தனையோ தலைமுறைக்கு முன்னால் அழிந்த குலங்கள் பற்றி நான் கேள்விப்பட்ட கதைகள் இங்கு உயிர்கொள்கின்றன. மனிதர்கள் வரலாற்றுக்குள்ளிருந்து இறங்கிவருகிறார்கள். இந்த மண்ணெங்கும் சிந்தப்பட்ட குருதியும் கண்ணீரும் உலராமல் உனது உள்ளங்கையில் இருக்கின்றன பாரி” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கபிலரின் குரல் உடைந்தது.

பாரிக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. 83p6.jpg

“அந்தக் கண்ணீருக்கும் குருதிக்கும் பறம்பு கடமைப்பட்டுள்ளது” என்று மட்டும் சொன்னான்.

சிறிது நேரம் பேச்சற்ற அமைதி நீடித்தது.

“நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். நான் பிறகு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்தான் பாரி.

“உன்னிடம் இன்னொன்று கேட்க வேண்டும்?”

“என்ன?” என்றான் பாரி.

“நான் முதன்முதலாகக் கொற்றவைக் கூத்து பார்க்கிறேன். தழல்மாலை சூடலைப் பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லை. ஆனால், நீ காலங்காலமாக அதைப் பார்த்துக்கொண்டி ருப்பவன். அப்படியிருக்க அவர்கள் நெருப்புக்குள் இறங்கும்போது உனது உடல் நடுங்கியது ஏன், உனது கண்கள் ஏன் கலங்கின?”

கபிலரின் கேள்வி, பாரிக்குப் பெரும்வியப்பைக் கொடுத்தது. நெருப்பாடல் கண்டு கூட்டமே உறைந்துபோயிருந்த வேளையில், தன்னை எப்படி இவ்வளவு கூர்மையாகக் கவனித்தார்?

எழுந்த பாரி, கபிலரின் அருகில் உட்கார்ந்தான். அவனது முகத்தில் இவ்வளவு நேரம் இல்லாத ஓர் இளஞ்சிரிப்பு ஓடி மறைந்தது.

பாரி சொன்னான், ``நேற்று தழல்மாலை சூட மூன்று இணையர்கள் நெருப்புக்குள் இறங்கினர் அல்லவா? நெருப்புக்குப் பின்புறம் இருந்து உடல் எல்லாம் தீக்களி பூசிக்கொண்டு இறங்குபவர்களை, நெருப்புக்கு முன்புறம் உட்கார்ந்திருக்கும் நம்மால் எளிதில் அடையாளம் காண முடியாது. நேற்றும் அப்படித்தான். ஆனால், மூன்றாவது இணை உள்ளிறங்கும்போது அந்த ஆண்மகன் யார் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பெண்மகள் யார் என்று எனக்குத் தெரிந்தது. கணநேரத்தில் கண்டறிந்தேன்.”

சற்றே அமைதி காத்த பிறகு பாரி சொன்னான், “அவள் என் மூத்தமகள் அங்கவை.”

அதிர்ந்தார் கபிலர்.

பாரி தொடர்ந்தான், “சிறுவயதில் இருந்து தழல்மாலை சூடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நெருப்பால் தீக்களியை மீறி ஒன்றும் செய்துவிட முடியாது என்று நன்றாகத் தெரியும். ஆனால், உள்ளிறங்கியது அங்கவை எனத் தெரிந்த கணத்தில் எனது உடல் நடுங்கியது.

அவள் ஆட்டத்தில் சிறந்தவள். தனது இணையோடு நெருப்பில் இறங்கி ஆடுகிறாள். ‘காதல்கொண்டு நெருப்பில் குளிக்கும் உன் மகளைப் பார்’ என ஒருபக்கம் மனம் துள்ளிக் குதித்தது. இன்னொரு பக்கமோ தழலுக்குள் இறங்குவது என் தசை எனத் துடித்தது.

உடலும் மனமும் இரு கூறுகளாப் பிளவுண்டதாக நீங்கள் சொன்னீர்களே, எனக்கோ மனமே இரு கூறுகளாகப் பிளவுண்டது.”

கலங்குவதிலும் கலங்கி மீள்வதிலும் பாரியே உதாரணமாக இருக்கிறான் என கபிலருக்குத் தோன்றியது.
 
“அவள் காதல்கொண்டது உனக்குத் தெரியுமா?”

``அவள் காதல் கொண்டுள்ளாள் என்பதை நான் முன்பே கணித்துவிட்டேன். ஆனால், யாரைத் தேர்ந்தெடுத்துள்ளாள் என்றுதான் தெரியாமல் இருந்தது.

``இப்போது தெரிந்ததா?’’

``இல்லை. நெருப்பில் நம் தசையைத்தானே நாம் உணர முடியும். அந்த இளைஞன் யார் எனத் தெரிந்துகொள்ள ஆசையோடிருக்கிறேன். அவளே சொல்லட்டும். அவள் காதல்கொண்டுள்ளாள் என்றால், அவன் மாவீரனாகத்தான் இருப்பான். இவளின் காதலைப் பெற முடிந்த ஒருவன், வீரத்தைத் தாண்டிய அரும்குணங்களைக் கொண்டிருப்பான். காத்திருக்கிறேன். அவனின் கைப்பற்றி எனக்கு எதிரில் வந்து அவள் நிற்கும் நாளுக்காக.”

மகிழ்ச்சி பொங்க கபிலர் கேட்டார்... 83p7.jpg

``ஆதினிக்குத் தெரியுமா?”

சிரித்தான் பாரி.

``அவளுக்குத் தெரியாமலா இருக்கும்? தனக்கும் அவனுக்கும் ஏற்பட்டுள்ளது காதல் என்று அங்கவை உணரும் முன்பே அவள் அறிந்திருப்பாள். அவள், தாய் அல்லவா?”

கலங்கினார் கபிலர். மண்ணை வேர் ஊடுருவுவதுபோல மனங்களை ஊடுருவுகிறான் பாரி. தன்னையும் அவன் ஊடுருவிக்கொண்டிருப்பான்.

“அப்படி எனில், வேளீர் குலம் நாகர் குலத்தோடு கலக்கப்போகிறது அல்லவா?”

“கலவையில்தானே புதுமைகள் பூக்கும். வேடர்குலமும் கொடிக்குலமும் இணைந்ததில்தானே வேளீர்குலம் பிறந்தது. வேளீர்குலத்தில் கலந்துள்ள கலவைகள் எத்தனை எத்தனை! என் தாய் சொல்வாள்... `உன் பாட்டன் திரையர் பெண்ணை மணந்தான்’ என்று. `காட்டெருமையை அடக்கும் வலு எனது தோள்களுக்கு வாய்த்தது அதனால்தான்' எனப் பலமுறை நினைத்திருக்கிறேன். திரையர்போல் திடம்கொண்ட ஒரு குலம் இந்த மண்ணில் வேறு எது? நாளை என் பேரக்குழந்தையின் கண்களில் நீல வளையம் பூத்து மறையும் அழகைப் பார்க்க இப்போதே தயாராகிவிட்டேன்” - சொல்லும்போதே பாரியின் முகம் எல்லாம் பூத்து மலர்ந்தது.

கபிலரின் உடற்சூடு குறையவில்லை. மாலை ஆனதும் அதிகமாகத் தொடங்கியது. நீலன், திசைக்காவல் வீரன். ஆதலால், கொற்றவைக் கூத்து முடிந்ததும் அவன் வேட்டுவன் பாறைக்குச் சென்றாக வேண்டும். எனவே, கபிலருக்கு உதவ உதிரனை அனுப்பிவைத்தான் பாரி.

இளம்வீரன் உதிரன், கபிலரின் மாளிகைக்கு மாலையில் வந்துசேர்ந்தான். அந்தப் பெருங்கவியை விழுந்து வணங்கினான். இருக்கையில் அமர்ந்தபடி அவனுக்கு வாழ்த்து சொன்னார் கபிலர். கொண்டுவந்த பச்சிலை உருண்டைகளை அவர் கையில் கொடுத்து, வாயில் போட்டுக்கொள்ளச் சொன்னான்.

“எனது உடற்சூடு குறைந்துள்ளதாக உணர்கிறேன்.”

குடிக்க நீரைக் குவளையில் நீட்டியபடி உதிரன் சொன்னான், “இன்னும் குறையவில்லை?”

உதிரனை உற்றுப்பார்த்தார் கபிலர்.

“உங்களின் கால் தொடும்போது அறிந்தேன். நீங்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி அனுப்பியுள்ளனர்” என்றான் உதிரன்.

பெரியவர்கள் சில வேலைகளைச் செய்ய மறுப்பார்கள். அதற்கான காரணங்கள் அவர்களிடம் இருக்கும். அதுதான் சரி என உறுதியாக நம்புவார்கள். அதை மீறி அவர்களைச் செய்யவைக்கச் சிறந்த வழி, வயதில் மிகச் சிறியவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதுதான். இறங்கிவந்து அவர்களால் வாதாட முடியாது. அவர்களைக் கொண்டே அவர்களின் தரப்பை வீழ்த்தும் முயற்சி. பாரி அதையே செய்தான்.

உதிரன், ஒரு பெருங்கவியைக் குழந்தைவடிவில் கண்டுகொண்டிருந்தான். அவர் இரவானதும், “கொற்றவைக் கூத்துப் பார்க்க அழைத்துப் போ” என்று நச்சரிக்கத் தொடங்கினார். அவனோ அவரை மாளிகையின் மேலே அழைத்துச் சென்றான். காற்றில் மிதந்துவரும் இசையை வைத்தே, அன்றைய கூத்து யாருடையது என்று அவருக்குச் சொல்லத் தொடங்கினான்.

நான்காம் நாள் கூத்துக்கான சல்லென்ற ஓசையுடைய சல்லிகையின் ஓசை கேட்டது. மறுநாள் மலைத்தெய்வம் சாத்தனுக்காக முழங்கப்படும் இசைக்கருவியான ‘அடக்கத்தின்’ ஓசை கேட்டது. ஆறாம் நாள் பலாமரத்தினால் செய்யப்பட்டு கரடி கத்துவதுபோல் ஓசை எழுப்பக்கூடிய ‘கரடிகை’யின் ஓசை கேட்டது.

இப்படி ஒவ்வொரு நாளும் கேட்கும் ஓசையை வைத்தே அன்றைய கூத்தில் பாடப்படும் கதையை அவன் கூறினான்.

எட்டாம் நாள் இசையின் சத்தமே இல்லாமல் விட்டு விட்டு மனிதர்கள் கத்தும் ஓசை மட்டும் கேட்டது. ``இது கூவல் குடி'’ என்றான்.

``ஒலிக் குறியீடுகளை உருவாக்கி, காட்டைத் தங்களின் குரல்வளையால் பின்னி, தொடர்புகளை உருவாக்கும் வித்தை தெரிந்தவர்கள்'’ என்றான். மறுநாள் கொம்பன் குடியைப் பற்றிக் கூறினான். இடையில் சற்றே உடல் நலம் சரியான கபிலர் கொம்பன் குடியின் கதையைக் கேட்ட நாள் அன்று முற்றிலும் தூக்கம் தொலைத்தார். கதைகள் பல நேரம் குருதியை உறையவைக்கக்கூடியனவாக அமைந்துவிடுகின்றன.

கதை, சொல்லும்போது பெருகக்கூடியது; நினைக்கும்போது திரளக்கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக்கூடியது. வடிவமற்ற ஒன்றின் அதீத ஆற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.

மறுநாள் கடும் மழை இறங்கியது. கார்காலத்தின் தொடக்க நாள்கள். காட்டின் குணம் மாறத் தொடங்கியது. இரவில் மழையின் ஒலியே எங்கும் கேட்டது. இசைக்கருவிகளின் ஓசை எதுவும் கேட்கவில்லை. முதல் இரண்டு நாள்கள் இரவில் விட்டுவிட்டுப் பெய்த மழை, அதன் பிறகு, முழு இரவும் கொட்டித் தீர்த்தது. மீதம் இருக்கும் நாள்களின் கதைகளைச் சொல்லும்படி கபிலர் கேட்டுக்கொண்டே இருந்தார்.

மூன்று கதைகளைச் சொன்னான் உதிரன். பதினைந்து கூடையில் பழங்கள் வைக்கப்பட்டு, தெய்வவாக்கு விலங்குக்காகக் காத்திருப்பது கபிலருக்கு நன்கு தெரியும். எனவே, மீதமுள்ள நான்கு நாள்களுக்கான கதைகளை கேட்டுக்கொண்டே இருந்தார். உதிரன், ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்துப் பார்த்தான்.

“நான் ஒன்றும் சிறுபிள்ளை அல்ல” என்று சற்றே கோபித்தார் கபிலர்.

உதிரன் மனம் கலங்கிச் சொன்னான், “என்னை மன்னித்துவிடுங்கள். அந்தக் கதைகளைச் சொல்லும் வலிமை எனக்கு இல்லை.’’

சொல்லும்போதே அவனது உடல் நடுங்கியதைக் கபிலர் உணர்ந்தார். மறுநாள் கபிலரைப் பார்க்க வந்த மருத்துவர்களிடம் அவனும் மருந்து வாங்கிக்கொண்டான்.

``இன்று பதினேழாம் நாள் எவ்வளவு கடும் மழை பெய்தாலும், அதையும் மீறி இசையின் ஓசை கேட்கும்’’ என்றான்.

“காரணம் என்ன?” எனக் கேட்டார் கபிலர்.

``இன்றைய நாள் வேளீருக்கு உரியது. வந்துள்ள அத்தனை குடிப் பாணர்களின் இசைக்கருவிகளும் ஒருசேர முழங்கும். காடு கிடுகிடுக்க, காண்போர் நடுநடுங்க களமிறங்கி ஆடுபவன் வேள்பாரி. கொற்றவைக்கு முன் காட்டெருமையைப் பலியிட்டு, மேலெல்லாம் குருதி பூசி நிலம் நடுங்க ஆடுவான். பறம்பின் எல்லைக்குள் வந்த குலங்களின் கண்ணீர் துடைக்க உயிரையும் தரச் சித்தம் என உருகிச் சொல்லும் பெருநாள் இது.''

சொல்லிக்கொண்டிருக்கும் உதிரனின் உடல்மொழியைக்கொண்டே பாரியின் ஆட்டத்தை உணர்ந்தார் கபிலர். போர்த் தெய்வமான கொற்றவையின் முன், வாளேந்தி ஆடும் அமலையின் ஆட்டத்தை ஆடுவான் வேள்பாரி!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

83p1.jpg

பாகம் 2

ளமருதன், குதிரையின் மீது ஏறி அமர்ந்தான். அவனது குதிரைக்கு ‘ஆலா’ எனப் பெயர். ஆலாப்பறவை ஓய்வின்றி நாள் முழுவதும் பறந்துகொண்டிருப்பதைப்போல, அவனது குதிரையும் நாள் முழுவதும் நிற்காமல் ஓடக்கூடியது. ‘ஆலாய்ப் பறக்கிறான் இளமருதன்’ என்ற பேச்சு, எங்கும் பரவியிருந்தது.

குதிரை, தன் வேகத்தைவிட இளமருதனின் குறிப்பு அறிந்து செயல்படும்விதம்தான் வியப்பூட்டக்கூடியது. ஆலாவின் முன்தலையை விரல்களால் வருடியபடி அதனுடன் பல நேரம் பேசிக்கொண்டிருப்பான். அது தலையை மெள்ள ஆட்டிக் கேட்டுக்கொண்டிருக்கும். அவன் சொல் கேட்டுத் தலையாட்டுகிறதா அல்லது விரல்கள் நீவுவதால் இன்புற்றுத்  தலையசைக்கிறதா என்பது, காண்போருக்குப் புரியாது. அது அவர்கள் இருவரின் மனவோட்டத்தோடு தொடர்புடையது. மேலே அமர்ந்திருக்கும் வீரனின் எண்ணத்தோடு குதிரையின் மனவோட்டமும் இணையும்போதுதான் வேகத்தை ஆளும் ஆற்றலைப் பெற முடிகிறது.

இளமருதனுக்கு இந்த உலகிலேயே மிகவும் பிடித்த செயல் ஆலாவின் மீது அமர்ந்து, பாய்ந்து செல்வதுதான். நிலத்தை ஆலாவின் காலடியில் அழுத்தி விண்ணில் குதிக்கும் அந்தக் கணம் மனதில் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை இன்னொன்று ஏற்படுத்தாது. எனவே, கடிவாளத்தைச் சுண்டியதும் குதிரை பாயத் தொடங்கும் அந்த முதற்கணத்துக்காக எப்போதும் காத்திருப்பான்.

அதனாலேயே இந்த நீண்ட பயணம் அவனுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. புறப்படும் நாளுக்காக ஆவலோடு காத்திருந்தான். அவன் தந்தை மையூர்கிழார், வெங்கல்நாட்டுத் தலைவன்; பாண்டிய வேந்தனுக்குக் கட்டுப்பட்ட சிறுகுடி மன்னன்.
பாண்டிய மாவேந்தன் குலசேகரப் பாண்டியனின் ஆளுகைக்குக் கீழ் எண்ணற்ற சிறுகுடி மன்னர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் வெங்கல்நாட்டுத் தலைவனுக்குத் தனித்த ஓர் இடம் உண்டு. அதனால்தான் இளவரசர் பொதியவெற்பனின் மணவிழாவுக்கான சிறப்பு அழைப்பு அவருக்கு வந்திருக்கிறது.

பாண்டியநாட்டு இளவரசனின் மணவிழா, நான்கு நிகழ்வுகளாக இரு மாதகாலம் நடைபெறுகிறது. நிறைவாக நடக்கும் திருமாலை அணியும் விழாவுக்குத்தான் சிறுகுடி மன்னர்கள் அனைவருக்கும் அழைப்பு. மற்ற விழாக்களுக்கு அவர்களுக்கு அழைப்பில்லை. மாமன்னரின் மனதில் தனித்து இடம்பிடித்த சிறுகுடி மன்னர்கள் எண்மருக்குத்தான் இந்த முழு விழாவுக்கான அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று வெங்கல்நாடு.

புறப்படுவதற்கு இன்னும் காலம் இருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் அரண்மனையிலிருந்து அவசர ஓலை. `மணவிழாவுக்காகப் புதிய மாளிகைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் பணிகளை வேகமாக முடிக்கவேண்டியுள்ளதால், தேர்ந்த சுதை வேலைகள் செய்யும் ‘மண்ணீட்டாளர்களை’ அனுப்ப வேண்டும்' என்னும் ஓலையைக் கொண்டுவந்தான் அரண்மனையின் முதன்மை அலுவலனான செவியன்.

வெங்கல்நாடு, மதுரைக்கு வெகுதொலைவில் பச்சைமலையின் தென்புற அடிவாரத்தில் உள்ளது. `பாண்டியநாட்டின் வடமேற்கு எல்லை இது' எனச் சொல்லலாம். செழிப்பான நிலப்பகுதிகளைக் கொண்டது. சரிபாதி மலை வளத்தையும் மீதிப்பாதி மருத நிலத்தையும் கொண்டது. எனவே, வனத்தின் செல்வமும் உழவின் செல்வமும் ஒருங்கே கிடைத்தன. அதனாலேயே வெங்கல்நாடு செழிப்புற்று விளங்கியது.

மரவேலைப்பாடுகளும் மண் வேலைப்பாடுகளும் சிறப்புறச் செய்யும் எண்ணற்ற கலைஞர்கள் இங்கு உள்ளனர். கட்டடங்கள் கட்டியெழுப்பும் கொற்றர்களுக்கு இது தாய்நிலம். பெரும்கட்டடங்கள், இவர்களின் கரம்கொண்டே மேலெழும்பின. அதன் தொடர்ச்சியாக, நுட்பமான சுதை வேலைப்பாடுகளைச் செய்யும் மண்ணீட்டாளர்களும் உருவாகினர். தலைநகர் மதுரையின் கட்டடத் தேவைகளுக்கான கலைஞர்களைத் தருவதில் வெங்கல்நாடு முதன்மையாக விளங்கியது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மதுரையை இப்போதுதான் பார்க்கப்போகிறான் இளமருதன். மணவிழாவுக்கு, வெங்கல்நாட்டின் சார்பில் தரவேண்டிய சிறப்பான பரிசுப்பொருளைத் தேர்வுசெய்வதில்தான் கடந்த சில மாதங்களாக இவர்கள் மும்முரமாக இருந்தனர். நடக்கப்போவது இந்தப் புவியின் மாபெரும் விழா. இந்த விழாவில் கலந்துகொள்ள, உலகெங்கிலும் இருந்து அரசக் குடும்பத்தினர் வந்து இறங்கப்போகின்றனர். தனது வாழ்நாளில் இப்படியொரு பெருவிழாவை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கப்போவதில்லை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் மையூர்கிழார். எனவே, தாங்கள் தரும் பரிசுப்பொருளை மாமன்னரும் இளவரசனும் கண நேரமாவது கண்கொண்டு பார்க்க வேண்டும் என்பதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்டனர்.

எத்தனையோ பொருள்கள் தயாராகிக் கொண்டிருந்தன. ஆனால், மையூர்கிழார் பெரிதும் கவனம் செலுத்திக்கொண்டிருப்பது ஒரு பொருளின் மீதுதான். அரண்மனையில் புதிதாகக் கட்டப்படும் மாளிகைகளைப் பற்றிய விவரம் மற்றவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, மையூர்கிழாருக்கு நன்கு தெரியும். ஏனென்றால், மதுரைக்கு அதிகமான கொற்றர்களை அனுப்பிவைப்பது இவர்தானே!

புதிய கட்டுமானத்தில் பேரெழிலோடு எழுப்பப்பட்டுவருவது ‘பாண்டரங்கம்’. அரசக் குலத்தினர் மட்டும் ஆடி மகிழும் கலைக்கூடம். அதுவும் இந்தப் பாண்டரங்கம், இளவரசரின் மணவிழாவுக்காகக் கட்டப்படுகிறது. பொதிய வெற்பனின் அந்தரங்க அவை அது. அங்கு கண்ணில்படும் பொருள், அதன் பிறகு ஒருபோதும் மறையாது. நாம் தரும் பரிசுப்பொருள் பாண்டரங்கத்தில் இடம்பெற வேண்டும். அதற்குச் செய்யவேண்டியது என்ன என்பதைத்தான் பல மாதங்களாகச் சிந்தித்துக்கொண்டிருந்தனர்.

மணமக்கள் பொற்காசுகளை அள்ளி எறிய, மதுரையின் வீதியெங்கும் பொன்னொளி வீசப்போகும் திருவிழா. இந்த விழாவில் சிறுகுடி மன்னன் ஒருவன் தரும் பரிசுப்பொருள் நினைவில் நிற்கவேண்டுமென்றால், அது இயலாத காரியம் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ஆனால், மையூர்கிழார் விடாமல் முயற்சி செய்துகொண்டிருந்தார். செல்வத்தை விஞ்சும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. செல்வத்தின் திளைப்பில் மிதக்கும் கண்களை, அதைவிட அதிகமான செல்வத்தைக் கொட்டுவதன் மூலம் கவனம் பெறவைக்க முடியாது. ஆனால், கலையின் நுணுக்கம் கண்களை அசைவற்று நிறுத்தும்.

மனிதன், கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனைக் குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது. மையூர்கிழார் பாண்டரங்கத்தில் வைப்பதற்கு ஏற்ற பொருளை ஆயத்தம்செய்வது என முடிவுக்கு வந்தார். அப்போதுதான் அதிலிருக்கும் இன்னொரு சிக்கல் தெரியவந்தது.

83p2.jpg

நடக்கும் திருமணம் பாண்டியநாட்டு இளவரசருக்கு என்பதைவிட மிக முதன்மையானது, அவர்கள் பெண் எடுக்கும் இடம் பற்றியது. இந்த மணவிழாவுக்கு, உலகில் உள்ள கலைப்பொருள்கள் அனைத்தையும் கொண்டுவந்து கொட்டுவர் என்பதை எண்ணியபோதுதான் மையூர்கிழாருக்கு சற்றே அவநம்பிக்கை ஏற்பட்டது. அந்தக் கலைப்பொருள்களோடு நாம் ஈடுகொடுக்க முடியாது என்று எண்ணி சோர்வுற்றார்.

அப்போது பொற்கொல்லர் அவையில் இருந்த இளைஞன் `காராளி’ சொன்னான், ‘`வாசல் வரை வந்து வழுக்கி விழக் கூடாது. அந்த வழியிலேயே காலெடுத்து வைத்து முன் நகர்வோம்.'’

“பாண்டரங்கம் முழுவதும் இடம்பெறப்போவது, யவனர்களின் மிகச்சிறந்த கலைப் படைப்பான `பாவை விளக்கு'தான். அது இருக்கும் அவையில் வேறு எந்தப் பொருளும் கவனம்பெற முடியாது” என்று மையூர்கிழார் சோர்வடைந்தபோது காராளி சொன்னான், `‘யவன பாவை விளக்கை விஞ்சும் விளக்கொன்றை நம்மால் உருவாக்க முடியும்.”

`‘உறுதியாக முடியாது” என்று சொன்ன மையூர்கிழார், காராளியிடம் கேட்டார்

`‘நீ யவனர்களின் பாவை விளக்கைப் பார்த்திருக்கிறாயா?”

“இல்லை மன்னா.”

“அதனால்தான் எளிதில் சொல்லிவிட்டாய்.”

“நீங்கள் எவ்விடம் பார்த்தீர்கள் மன்னா?”

“வேந்தனின் அரண்மனை முழுவதும் இப்போது யவனர்களின் பாவை விளக்குகள்தானே கண்ணில்படுகின்றன. அரசவை மாடத்தில் சுடர் ஏந்தி நிற்கும் அந்த விளக்குகளைக் காண்பவர் வியந்துபோய் நிற்பர்.”

சற்றே இடைவெளிவிட்டு காராளி சொன்னான், `‘அரசவை மண்டபம், அரண்மனை மாடங்கள் என எங்கும் பார்த்துப் பழகிய ஒரு கலைப்பொருள், அந்தரங்கமான இடத்தில் கூடுதல் கவனத்தைப் பெறுமா?”

காராளியின் கேள்வி, மையூர்கிழாருக்கு வழிகாட்டத் தொடங்கியது. அவன் மேலும் சொன்னான், “அது மணமக்கள் கூடிக்குலவும் அரங்கு. அங்கே கண்களுக்குத் தேவை புதுமை. அதுவும் காதலுக்கு அப்பாற்பட்ட புதுமை அன்று; காதலுக்குள்ளே மூச்சுமுட்ட இழுத்துச் செல்லும் ஒரு புதுமை. அதை நாம் கலைவடிவாக்கலாம்.”

“என்ன செய்யலாம் என்கிறாய்?”

“காமன் விளக்கு செய்வோம்.”

பொற்கொல்லர் அவையில் இருந்த அனைவரும் வியப்புற்று நின்றனர். `மிகச் சிறப்பான சிந்தனை' என மையூர்கிழாருக்குப் பட்டது.

அவன் அடுத்துச் சொன்னான், “காமன் விளக்கு மட்டும் போதாது. நாம் வழக்கமாகச் செய்யும் நாக விளக்கு இரண்டையும் சேர்த்துச் செய்யவேண்டும். அதுதான் காமன் ஏற்படுத்தும் கனவுக்கு உருவம் கொடுக்கும்'’.

எல்லோரும் வாயடைத்துப்போனார்கள். இரண்டு நாகங்கள் பின்னியபடி மேலெழுந்து தலை நீட்ட, அதன் உச்சந்தலைச் சிறு குழியின் முன் விளக்கின் நாக்கும் நாகங்களின் நாக்குகளும் ஒன்றாக நீட்ட, சுடர் எரியும் வடிவுகொண்டது நாக விளக்கு.

நாகம் கொண்டு காமம் கவர்கிறான் இளைஞன் எனப் பூரித்து நின்ற மையூர்கிழார் கேட்டார், “வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்கள் இருக்கும் இந்த அவையில், யாருக்கும் தோன்றாத சிந்தனை உனக்கு எப்படித் தோன்றியது?”

மெல்லிய சிரிப்போடு காராளி சொன்னான், ‘`அவர்கள் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள். எனவே, அனுபவத்தின் கண்கொண்டு பார்க்கின்றனர். அனுபவம், அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது. நான் அடைந்திராத அனுபவத்தின் கண்கொண்டு பார்த்தேன்.”

மையூர்கிழார் வியந்துபோனார். அவனது சொல், அவரை மயக்கியது. பணிகள் தொடங்கின.

காமன் விளக்கை எப்படிச் செய்வது? காமத்துக்கு வடிவம் கொடுக்க முடியுமா? அது காட்சிவயப்பட்டதன்று, கனவு வயப்பட்டது. பூவின் மலர்தலில் வெளியேறும் மணம்போல, மனித மலர்தலில் உள்ளுருகும் நிகழ்வு அது.

கனவைக் கண்கொண்டு பார்க்க நினைப்பது அறியாமை. அது கண்ணுள் பார்க்கவேண்டியது. எனவே, தங்களுக்குள் மூழ்கும் எண்ணங்களுக்கு வாசல் திறக்கும் வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்கலானான் காராளி.

சட்டகங்களால் எல்லா திசைகளிலும் இழுத்துப்பிடிக்கப்பட்டிருக்கும் தோலில் ஓவியத்தை வரையத் தொடங்கினான். காதல் பரவசத்தில் நிற்கும் ஒரு பெண், தன் வலதுகையை பக்கவாட்டில் சற்றே உயர்த்திப் பிடித்திருக்கிறாள். அந்த உள்ளங்கையில் தீபத்துக்கான அகல் இருக்கிறது. இடதுகையை மார்போடு அணைத்தபடி வைத்திருக்கிறாள். அந்தக் கை, ஒரு மலரைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அவளின் பேரழகில் மயங்கிய காதலன், அவளின் முகம் பார்த்தபடி மிகவும் அணுக்கமாகக் கிறங்கி நிற்கிறான்.

காராளி வரைந்த இந்த ஓவியத்தைப் பார்த்தவர்களுக்கு, சற்றே ஏமாற்றம் ஏற்பட்டது. “இந்தப் படம் மிக அழகாக இருக்கிறது. ஆனால், இதில் என்ன புதுமை இருக்கிறது?” எனக் கேட்டனர்.

83p4.jpg

“ஓவியத்தைச் சிலையாக்கினால்தான் இதில் உள்ள புதுமை தெரியும்” என்றான் காராளி.

அவன் வரைந்ததுபோலவே, அழகும் உணர்வும் கொப்புளிக்கும் சிலை வடிக்கப்பட்டது. வலதுகையில் விளக்கு ஏந்தி, இடதுகையில் மலரை மார்போடு அணைத்து நின்றாள் அந்தப் பெண். காதல் பேருணர்வில் அவளின் முகத்தருகே வியந்து நின்றான் ஆண்.

பெரும் எதிர்பார்ப்புடன் வந்து வார்ப்புச்சிலையைப் பார்த்த மையூர்கிழாரின் முகம் சற்றே வாடியது, “அழகாய் இருக்கிறது. ஆனால், புதுமை இல்லையே!” என்றார்.

காராளி சொன்னான், “அவளின் கையில் இருக்கும் அகலில் விளக்கேற்றிப் பாருங்கள். புதுமை துலங்கும்.”

அந்தப் புதிய விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினர். தீச்சுடர் எரியத் தொடங்கியது. எல்லோரும் கவனமாகப் பார்த்தனர். விளக்கின் ஒளி, இருவரின் கன்னங்களிலும் பட்டுத் தெறிப்பதை கண்கள் உற்றுப்பார்க்கையில் காராளி கூறினான், “பின்புறம் நீளும் நிழலைப் பாருங்கள்.”

பக்கவாட்டில் ஏந்தி நின்ற வலதுகையில் தீபம் எரியத் தொடங்கியதும், இருவரின் நிழல்களும் ஒன்றின் மேல் ஒன்றாகப் படர்ந்து ஒற்றை நிழலாக நீண்டன. ஏந்தி நிற்கும் விளக்கின் உயரத்தையும் நிழல்கள் படரும் கோணத்தையும் அவ்வளவு துல்லியமாக வடிவமைத்திருந்தான் காராளி. அதைப் பார்த்த அனைவரும் மெய்ம்மறந்து நின்றனர்.

காராளி சொன்னான், “அந்தரங்க அவையில் காமன் விளக்கில் சுடர் ஏற்றியதும் அவர்கள் ஒளியின் வழியே நிழலுள் கரைவர். தனது நிழல் எது எனப் பிரித்தறிய முடியாத தவிப்பு, இரவு முழுவதும் அவர்களைச் சூழும். காமம், ஒளியால் அல்ல... ஒளி ஏற்படுத்தித்தரும் இருளுக்குள்தான் மலரத் தொடங்கும். நீர்மநிலையில் இருக்கும் எண்ணெய் நெருப்பாய் மாறி சுடர்வதைப் போலத்தான் தங்களுக்குள் இருக்கும் உயிர் பற்றி எறிய... ஓர் உயிராய் ஒடுங்குவர்.”

அனைவரும் வாயடைத்துப்போனார்கள். காராளி தொடர்ந்தான், ``நிழலை, இன்னும் கூர்ந்து கவனியுங்கள்.”

அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்கள், கண்களை அகலத் திறந்தபடி உற்றுப்பார்த்தனர். தீச்சுடர் அசையும்போதெல்லாம் நீண்டு கிடந்த நிழல்கள் அசைந்து நெளிந்தபடி இருந்தன. இறுக அணைத்துப் புரளும் உருவங்களை அவை நினைவுபடுத்தின. உருவ அசைவுகள் ஆளுக்கொன்றாகத் தோன்றத் தொடங்கின. கனவு ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

எவரும் பேசிக்கொள்ளவில்லை. ஏறக்குறைய உறைநிலையை அடைந்தனர். “காண்பவரின் கண்ணுக்குள் கனவை நிகழ்த்துவதுதான் கலை.”

காராளி, தான் முன்னர் சொன்ன சொற்களை மனதுக்குள் அசைபோட்டபடி நின்று கொண்டிருந்தான்.

பேச்சற்று நின்றிருந்த மையூர்கிழார் நேரம் கழித்துச் சொன்னார், “இந்த விளக்கு, எனது வாக்கைக் காப்பாற்றியது; உனது வாக்கை அழித்துவிட்டது.”

அவர் சொல்வதன் பொருள் யாருக்கும் புரியவில்லை. `என்ன தவறிழைத்தான் காராளி?' என, மற்றவர்கள் சிந்திக்கலாயினர்.

மையூர்கிழார் சொன்னார், “மிகச்சிறந்த பரிசுப்பொருளைக் கொண்டு செல்வேன் என்ற எனது வாக்கை, இந்தச் சிலை காப்பாற்றிவிட்டது. ஆனால், அனுபவமில்லாதவன் என்ற உனது வாக்கை இது பொய்யாக்கிவிட்டது.”

அரங்கம், சிரிப்பால் நிரம்பியது. காராளி, சற்றே தலைவணங்கி நின்றான். இந்தச் சிலையின் சிறப்பு, வலது கையில் ஏந்தி நிற்கும் விளக்கன்று; இடதுகையில் பிடித்திருக்கும் மலர்தான். ஆனால், அது யார் கண்ணுக்கும் படவில்லை. யாரும் அதைப் பொருட்படுத்திப் பார்க்கவில்லை. பெரும்படைப்பை உருவாக்கும் கலைஞனுக்கு ஏமாற்றமே மிஞ்சும். காராளிக்கும் அதுவே மிஞ்சியது. ஆனாலும் யாரேனும் ஒருவரின் கண் அந்தச் சிறப்பைக் கண்டறியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
அகம் மகிழ்ந்து பாராட்டினார் மையூர்கிழார். ``மெருகேற்றும் பணியை விரைவில் முடியுங்கள்'' என்று உற்சாகமாகச் சொல்லிச் சென்றார். வேலைகள் முன்னிலும் வேகமாக நடந்தன.

இந்த நிலையில்தான் மதுரையிலிருந்து செவியன் ஓலை கொண்டுவந்தான். `கொற்றர்களை அழைத்துக்கொண்டு உடனே வரவேண்டும்' என்று.

ஐம்பது கொற்றர்களோடு இளமருதன் மறுநாள் புறப்படுவதாக முடிவாயிற்று. காராளி செய்துகொண்டிருக்கும் காமன் விளக்கின் பணிகள் முடிவடைய, இன்னும் ஒரு வார காலம் ஆகும். ஆனால், நாளை தனது மகன் வெறுங்கையோடு போனால் நன்றாக இருக்காது. ஏதாவது பரிசுப்பொருள் கொண்டுபோக வேண்டுமே என எண்ணினார் மையூர்கிழார். ஒன்றும் பிடிபடவில்லை. தனித்துவம் இல்லாத பொருளைக் கொடுத்துவிடுவதை மனம் ஏற்கவில்லை. ‘சரி, விடியட்டும் பார்க்கலாம்’ என முடிவுசெய்தார்.

றுநாள் அதிகாலை, மலையடிவாரத்தில் உள்ள தனது நிலத்தின் விளைச்சலைப் பார்க்க மூன்றேர் உழவன் சென்றான். காட்டாற்றின் அக்கரையில் இருந்தது அவனது விளைநிலம். இரவு கடும் மழை பெய்திருந்தது. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்க வேண்டும். இப்போது சற்றே குறைந்திருந்தது. ஆனாலும் ஆற்றைக் கடக்க முடியாது. கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அடித்துவரப்பட்ட பெரும்மரத்தின் தூர்ப்பகுதி கரையில் இருந்த பாறையின் இடுக்கில் செருகி நின்றது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனின் கண்களுக்கு, மரத்தின் மேல் ஈரத்தில் நடுங்கியபடி அமர்ந்திருந்த இரண்டு சிறு உயிரினங்கள் தெரிந்தன.

83p3.jpg

அருகில் சென்று உற்றுப்பார்த்தான். அவை என்ன உயிரினம் எனப் புலப்படவில்லை. இதற்கு முன்பு இவற்றைப் போன்ற ஒன்றைப் பார்த்ததில்லை. அவை ஈரத்துக்கு நடுங்கியபடி இருந்தன. பார்க்கவே மிகவும் கவலையாக இருந்தது. அவை இரண்டும் குழந்தைகளைப்போல கண்களால் மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தன. நீரின் போக்கு, அவற்றை பெரும் அச்சம்கொள்ளச் செய்தது. அவற்றால் சிறிதும் நகர முடியவில்லை. சற்றே நகர்ந்தாலும் நழுவி நீருக்குள் விழுந்துவிடும் ஆபத்து இருந்தது.

உழவன், அருகில் சென்று அவற்றைக் காப்பாற்றலாம் என எண்ணினான். ஆனால், அருகில் சென்றால் கடித்துவிடுமோ என்ற அச்சம் வந்தது. அவை கொடிய நஞ்சாக இருந்தால் என்ன செய்ய முடியும்? எனவே, இறங்கிப் போய்ப் பிடிக்க வேண்டாம். அவையாகக் கரைக்கு ஏறுவதைப்போல ஒரு பெரிய கட்டையை எடுத்து கரைக்கும் அவை இருக்கும் கொப்புக்கும் இடையில் பாலம் அமைத்தான். ஆனால் அவையோ, அச்சத்தில் நடுங்கியபடி சிறிதும் நகராமல் அப்படியே ஒண்டிப்போய் நின்றன.

துணிந்து நீருக்குள் இறங்கி, அவற்றின் அருகில் சென்றான். அவை இரண்டும் பயந்து பம்மின. அவற்றைப் பிடித்துக்கொண்டு கரைக்கு வந்தான். அவை ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்தன. விசித்திர வடிவம் தாங்கிய விலங்கை அவன் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தான்.

குடித்தலைவர் மையூர்கிழாரிடம் கொண்டுபோய்க் கொடுப்போம் என முடிவுசெய்து, கிழாரின் மாளிகைக்கு வந்தான். அவரோ மகனை, கொற்றர்களுடன் மதுரைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். வாழ்த்துச் சொல்ல வந்த பாணர் கூட்டம் ஒன்று, அங்கு காத்திருந்தது.

மாளிகையின் உள்ளே வந்த உழவன், “இந்தப் புதுமையான விலங்கைப் பாருங்கள்” என்று சொல்லி, அவற்றை வெளியே எடுக்க முயன்றான்.

அவை உழவனைவிட்டு வெளியே வராமல் அவனது ஆடைக்குள் ஒடுங்கிப் பம்மின. அவன், இடுப்பைப் பிடித்து இழுத்து வெளியே விட்டான். வட்டவடிவக் கண்களால் மிரண்டு மிரண்டு விழித்தன. மையூர்கிழாரும் உடன் இருந்த அனைவரும் இந்த விலங்கை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். யாரும் இதற்கு முன் இவற்றைப் பார்த்ததில்லை. இவை என்ன வகை விலங்கு என, ஆளுக்கொரு விளக்கத்தை அளித்துக் கொண்டிருந்தனர். சற்றுத்தள்ளி நின்ற பாணர் கூட்டத்தின் முதியோன் ஒருவன் எட்டிப்பார்த்தபடி சொன்னான், “இது பறம்புநாட்டின் தெய்வவாக்குச் சொல்லும் விலங்கு. பெரும்மழையில் அடித்து, தரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.”

பாணனின் குரல், வியப்பை ஏற்படுத்தியது. அவற்றின் மீதான வியப்பு இன்னும் அதிகமானது. அதுவரை தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த மையூர்கிழார், இப்போது அருகில் வந்து அவற்றைத் தொட்டுத் தூக்கினார். அவை அஞ்சி மிரண்டன.

புறப்படவேண்டிய நேரம் வந்துவிட்டதை நினைவுபடுத்த, அவரைத் தேடி வந்தான் இளமருதன். தந்தையின் கையில் புதுமையான விலங்குகள் இருப்பதைப் பார்த்தான். அவை என்ன விலங்கு என அவனுக்குப் புரியவில்லை. அவற்றின் தோற்றம், சற்றே அருவருப்பை ஏற்படுத்துவதுபோல் இருந்தது.

மையூர்கிழார் சொன்னார், “மகனே நீ எடுத்துச் செல்லவேண்டிய பரிசுப்பொருள்கள் தாமாக வந்து சேர்ந்திருக்கின்றன.”

“இவற்றையா… அருவருப்புக்கொண்ட இந்த விலங்குகளையா எடுத்துச்செல்லச் சொல்கிறீர்கள்?”

``ஆம். பாண்டிய வேந்தன் நிமித்தம் பார்ப்பதில் மிகுந்த நம்பிக்கையுள்ளவன். இளவரசனின் மணவிழாவின்போது பறம்புநாட்டின் தெய்வவாக்கு விலங்கு மதுரைக்கு வந்து சேர்வதை மிக நல்ல நிமித்தமாக நினைப்பான். எவராலும் கொடுக்க முடியாத பரிசுப்பொருளை இத்தனை மாதங்களாகத் தேடிக்கிடந்தோம் அல்லவா? இதோ உரிய நேரத்தில் தானாக வந்து சேர்ந்திருக்கின்றன. இவற்றை நீ கொண்டு செல். இரு வாரங்கள் கழித்து, மணவிழாவுக்கு காமன் விளக்கோடு நான் வந்து சேர்கிறேன்.”

சுற்றி இருந்த அனைவரும் வாயடைத்துப் போனார்கள். மையூர்கிழாரின் குரலில் இருந்த உற்சாகம் இளமருதனையும் தொற்றியது.

இரட்டைக் குதிரைகள் இழுத்துச் செல்லும் ஐந்து பெருவண்டிகள், மதுரையிலிருந்து வந்திருந்தன. அவற்றில் கொற்றர்கள் ஏறி அமர்ந்தனர். அவர்களுக்கு இடையில் சதுரவடிவக் கூண்டுக்குள் மிரட்சி விலகாமல் அவை இருந்தன. ஆலாவைச் சுண்டியபடி மதுரை நோக்கிப் புறப்பட்டான் இளமருதன்.

வெங்கல்நாட்டு மன்னனின் வளாகம் முழுவதும் இதுவே பேச்சாக இருந்தது. வேந்தனை வியக்கவைக்கும் பரிசுப்பொருள்களோடு மகனும், இளவரசனை வியக்கவைக்கும் பரிசுப் பொருளோடு தந்தையும் மதுரைக்குள் நுழைய உள்ளனர். இது வெங்கல்நாட்டுக்கு நல்ல பலனைத் தரும் எனக் கருதினர்.

மையூர்கிழாரைப் பார்த்துப் பாட வந்த பாணர்கள், பாடாமலேயே பெரும்பொருளைப் பரிசாகப் பெற்றனர். “நீங்கள் சொன்ன செய்தி ஏற்படுத்தியதைவிட பெரும்மகிழ்வை உங்கள் பாடலால் ஏற்படுத்திவிட முடியாது” என்று கூறியபடி மையூர்கிழார் அள்ளி வழங்கினான்.

அவர்கள், அவை நீங்கி வெளியேறினர். முகத்தில் கவலையின் ரேகை படர்ந்திருந்தது. அன்றைய பகல் முடியும் முன் வெங்கல்நாட்டின் எல்லையைக் கடந்தனர். பேச்சற்ற நெடும்பகலாக அது இருந்தது.

நீண்டபொழுதுக்குப் பிறகு இளம் பாணனைப் பார்த்து மூத்த பாணன் கேட்டான், ``பறம்புநாட்டின் தெய்வவாக்கு விலங்கு தரை வந்து சேர்ந்ததைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

``பாரி, இனி தனது ஆற்றலை இழக்கத் தொடங்குவான்.”

பதில் கேட்ட மூத்த பாணன், சற்றே அமைதியோடு நடந்தான்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்ட இளம் பாணனின் கேள்வி முடியும் முன் மூத்த பாணன் சொன்னான்,

``இறங்கி அடிக்கப்போகிறான் வேள்பாரி.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 22

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

83p1.jpg

துரைக் கோட்டையின் மேற்கு வாசலை நோக்கி சூரியக்கதிர்கள் தகதகத்து இறங்கிக்கொண்டிருந்தன. வாங்கிய ஒளியை அதைவிட வேகமாக வெளியில் உமிழ்ந்தன கதவுகள். அந்த நெடுங்கதவுகள் முழுக்க பொன்னாலான பூச்சுகொண்டவை. அவற்றின் குமிழ்களின் மேல் மணிக்கற்கள் பொதிந்திருந்தன. பச்சை நிறப் பெருங்கல் ஒன்று தன்னை நோக்கிவந்த செம்மஞ்சள் நிற ஒளியை, சூற்குடத்தில் உள்வாங்கி சுட்டுக் கருக்கி வெளியேற்றியது. அருவியில் நீர் விழுந்து தெறிப்பதைப்போல, பொன்பூச்சில் விழுந்து சிதறின செஞ்சூரியனின் ஒளிக்கதிர்கள்.

பொழுது மறையும் முன்னர் கோட்டைக்குள் நுழைந்தால்தான் உண்டு. அதன் பின்னர், கதவுகளைத் திறக்கவைப்பது எளிது அல்ல. காவல் வீரர்களின் கடுமை இரும்பினும் இறுகியது. பகற்பொழுதின் முப்பதாம் நாழிகை முடிந்ததும், நாழிகைக் கணக்கன் நிலைமாடத்தின் மணியோசையை எழுப்புவான். அந்த ஓசை கேட்டதும் நெடுங்கதவுகளின் குறுக்குத்தடிகளை யானையைக்கொண்டு தூக்கிச் செருகுவர். அதன் பின், மறுநாள் காலை மீண்டும் யானையைக் கொண்டுவந்தே குறுக்குத்தடிகளை விலக்குவர்.

கோட்டையின் கதவுகள் மூடப்பட்ட பின் அவற்றைத் திறக்கவைப்பதெல்லாம் இயலாத  செயல். அதை உணர்ந்தே விரைந்து பயணித்தான் செவியன். அவன் குதிரைதான் முன்னால் போய்க்கொண்டிருந்தது. அதை அடுத்து இளமருதனின் குதிரை. தொடர்ந்து சற்றுத் தொலைவில் ஐந்து வண்டிகள் வந்தன. இளமருதன் சிறுவயதில் பார்த்த மதுரையை இப்போது மீண்டும் பார்க்கப்போகிறான். தொலைவிலேயே கோட்டைச்சுவர் தெரியத் தொடங்கியது. மதுரையை அடைத்து நின்றது செம்பொன் நிறத்தாலான நெடுங்கோட்டை. அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து வாய் பிளந்தபடி வந்துகொண்டிருந்தனர். கோட்டை வாயிலில் வந்து அவர்கள் நிற்கும்போது முழுமையாக இருள் சூழ்ந்துவிட்டது. நெடுங்கதவுகள் அடை பட்டிருந்தன. தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் பொன்பூச்சு மின்னியது.

மேற்கு வாசலின் தளபதியை அழைத்துவரச்சொல்லி, பெருங்குரலில் கத்தினான் செவியன். கோட்டை வாயிலின் மேல்மாடத்தில் நின்றிருந்த காவலர்கள் வியந்து பார்த்தனர். வருகிறவர்கள் கோட்டைக் கதவுகளைத் திறக்கச்சொல்லி முறையிடுவார்கள். ஆனால், இவனோ தளபதியை அழைத்து வரச்சொல்லி ஆணை பிறப்பிக்கிறான். வந்திருப்பவன் மதுரையின் நிர்வாகத்தை நன்கு அறிந்துள்ளான் என்பதை அவனது குரலே சொல்கிறது. மறுசொல் கூறாமல் தளபதியை அழைக்கப் போனார்கள்.

இளமருதன் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். யானையின் மீது வீரன் அமர்ந்து கொடியைத் தாழ்த்தாமல் உள்நுழையக்கூடிய அளவு உயரம்கொண்ட கோட்டை வாயில். காற்று புகாவண்ணம் அடைப்பட்டிருக்கும் அந்த நெடுங்கதவுகளின் பொன்பூச்சில்தான் எவ்வளவு வேலைப்பாடுகள். குமிழ்களின் மேல் கால் பதித்து மயில் ஒன்று நிற்கிறது. அதன் தோகை ஒரு பாதி விரிந்திருக்க, இடப்புறமாகத் திரும்பி வாயிலில் நிற்பவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது மயில். என்ன அழகான வேலைப்பாடு. இந்தக் கதவுகள் முழுக்க எவ்வளவு நுட்பங்கள். ஒரே ஒரு பரிசுப்பொருளை உருவாக்க நமக்குப் பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், வாயிற் கதவுகளிலேயே எவ்வளவு வேலைப்பாடுகள்.

இளமருதனின் மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, மேல்மாடத்தில் வந்து நின்ற மேற்குவாசல் தளபதி மாரையனிடம், தாங்கள் யார் என செவியன் சொல்லி முடித்தான். ‘கட்டுமானப் பணிக்கு அழைத்துவரப்பட்டிருக்கும் கொற்றர்களை உடனடியாக உள்ளே அனுப்ப வேண்டும். அரண்மனையில் பணிகள் இரவு பகலாக நடக்கின்றன. இவர்களை நாளை பகல் வரை வெளியில் நிறுத்தினால், நாம் தண்டிக்கப் பட்டுவிடுவோம்’ என்பதை உணர்ந்தான் மாரையன். ஆனால், கோட்டைத் தளபதியின் உத்தரவு இல்லாமல் நெடுங்கதவைத் திறக்க இயலாது. உடனடியாக அவரைக் காண விரைந்தான். உடன் இரு வீரர்களும் சென்றனர்.

மதுரைக் கோட்டையின் நான்கு வாசல்களுக்கும், வாசலுக்கு ஒருவர் என நான்கு வாயில் தளபதிகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கோட்டைத் தளபதிக்குக் கட்டுப்பட்டவர்கள். மாலையில் கோட்டைக் கதவுகள் மூடப்பட்ட பின் கோட்டைத்தளபதி உத்தரவு இல்லாமல் அவற்றை மீண்டும் திறக்க முடியாது. பகலிலும் இந்த நெடுங்கதவை முழுமையாகத் திறந்து மூடும் அதிகாரம் அவரிடமே இருந்தது. கதவின் கீழ்ப்புறத்தில் மனிதர்கள் வந்துபோக ஏற்றதாகச் சிறிய அளவில் உள்ள ‘பிள்ளைக்கதவுகளை’த் திறந்து மூடும் அதிகாரம் தான் வாயில் தளபதிகளுக்கு உண்டு.

83p2.jpg

மதுரையின் கோட்டைத் தளபதி சாகலைவன். வீரத்துக்கும் தந்திரத்துக்கும் பெயர் எடுத்தவன். அவன் கோட்டையின் எந்தத் திசையில் இருப்பான் என்பதை,   கீழ்நிலையில் இருக்கும் அதிகாரிகளால் கண்டறிந்துவிட முடியாது. அதுவும் இந்த விழாக்காலத்தில் அவனைக் கண்டறிவது எளிது அல்ல. 

மாரையனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மாலையில் கிழக்கு வாசலில் சாகலைவனைப் பார்த்ததாக ஒருவர் கூறினார். இங்கிருந்து கிழக்கு வாசலுக்குச் செல்வது மிகக் கடினம், நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுவிட்டது. யவனர்கள் இன்றிரவு வந்து இறங்கப்போகிறார்கள். வணிக வீதிகளில் எள் விழ இடம் இல்லை. எங்கும் பெருந்திரள் கூட்டம். குதிரையை விரட்டிச் செல்ல முடியாது. கூட்ட நெரிசலில் சிக்கினால் கிழக்கு வாசலை அடையும் முன்னே விடிந்துவிடும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றான் மாரையன். அவனால் நிற்கவும் முடியவில்லை; நகரவும் முடியவில்லை.

யோசித்தபடியே கூட்டம் குறைவான தென்புற வீதியில் நுழைந்தான். அந்த வீதி திரும்பும் இடத்தில் இரு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் ஒன்று கண்ணில் பட்டது. முன்னால் நான்கும் பின்னால் நான்குமாக எட்டு குதிரை வீரர்கள் ஈட்டியை ஏந்தியபடி சென்றுகொண்டிருந்தனர். போய்க்கொண்டிருப்பது அரசின் உயர் அலுவலர் என்பது புரிந்தது. யாராக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள விரைந்து சென்றான். அவர் அரசாங்கத்தின் களஞ்சியத் தலைவர், ‘வெள்ளி கொண்டார்’. இந்தப் பேரரசின் செல்வத்தைக் கட்டிக்காக்கும் மாமனிதர்.

அவரைக் கண்டதும் குதிரையைவிட்டு இறங்கி வணங்கினான். மேற்கு வாயில் தளபதியைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டார் அவர். என்ன என்று விசாரிக்க,  சூழலை விளக்கிச் சொன்னான் மாரையன். எந்த ஒன்றையும் காதுகொடுத்துக் கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்பது, கேட்ட பின்புதான் புரியும். வெள்ளிகொண்டாரின் நிலைமை அதுவே. அவரைப் போன்ற உயரிய இடத்தில் இருப்பவர்களின் கவனத்துக்கு ஓர் இக்கட்டு வந்த பின், அதற்குத் தீர்வுகாணும் பொறுப்பும் இயல்பாக அவர்களையே வந்துசேருகிறது.

வெள்ளிகொண்டார் போகும் வேலைக்குக் குறுக்கே, கோட்டைத் தளபதியைக் கண்டறியும் வேலையும் வந்து நின்றது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். தேரோட்டி திரும்பிப் பார்த்தான். அவரின்  உத்தரவு கிடைக்காததால் தேர் அசைவற்று நின்றது. அருகில் சற்றே இளைப்பாறியபடி நின்றான் மாரையன்

“இந்தப் பெருங்கூட்டத்தில் நீ எங்கு போய்க் கண்டறிவாய். இரவு முழுவதும் தேடிக்கொண்டே இருக்க 83p3.jpgவேண்டியதாகிவிடும். எனது தேரில் வந்து உட்கார்” என்றார்.

சற்றே தயக்கத்துடன் தேரில் ஏறி அவரின் எதிரில் ஒடுங்கி உட்கார்ந்தான். தேர் புறப்பட்டது. முன்செல்லும் குதிரை வீரர்களைக் கண்டதும் கூட்டம் தானாக விலகி இடம்கொடுத்தது.

தென்புறச் சாலையில் இருந்து கிழக்கு முகமாக உள்வீதிக்குள் திரும்பியதும் திகைத்துப்போனான் தேரோட்டி.  கூட்டத்தை விலக்கி தேருக்கு வழியை அமைக்க முடியுமா என்பது ஐயமே. முன்னால் செல்லும் குதிரைவீரர்கள் நால்வரும் ஓசை எழுப்பியபடி சென்றனர். ஆனாலும், தேரின் நகர்வு மிகவும் மெதுவாகத்தான் இருந்தது.

மாரையனின் கண்களில் இருந்து மிரட்சி அகலவில்லை. “இப்போதே இப்படி என்றால் மணவிழா தொடங்க இன்னும் இரு வார காலம் இருக்கிறதே, மதுரை எப்படித் தாங்கும்?” என்றான்.

தேரின் இருக்கையை முழுவதும் அடைத்து உட்கார்ந்திருந்த அந்த அகண்ட மனிதர், வாயில் வெற்றிலை மென்றபடி, “மணவிழா என்றால் மதுரை தாங்கியிருக்கும். ஆனால், இது வெறும் மணவிழா மட்டும் அல்லவே?” என்று சொல்லி நிறுத்திக்கொண்டார். மாரையனுக்குப் புரியவில்லை.

ஆனால், அவரிடம் விளக்கம் கேட்கும் தகுதி அவனுக்கு இல்லை. அதனால் அடக்கமாக அவரது முகம் பார்த்தான். அவனது பார்வையின் பொருள் புரிந்தது. வயிறு பொருமி ஏப்பம் வந்தது. நீண்ட ஒலியோடு ஏப்பம் விட்டார். பெருத்துச் சரிந்திருந்த வயிறு சற்றே உள்வாங்கி இறங்கியது. இரவு உணவு முடித்துவருகிறார். ஆனால், தனக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று மாரையன் நினைத்தபோது, வெள்ளிகொண்டார் தனது நெஞ்சுக்கூட்டை இடதுகையால் அழுத்தித்தடவியபடி, “எல்லாம் இதுவால் வந்தது” என்று விரல்களில் சிக்கிய முத்துமாலையை தொட்டுத் தடவிக்கொண்டே சொன்னார்.

“கொற்கை முத்து இப்போது யவன தேசத்தின் கனவுப்பொருளாக மாறிவிட்டது. சேரனின் மிளகுக்கு இணையான வணிகப்போட்டிக்கு எதுவுமில்லை என்ற நிலை உடைந்துவிட்டது. மிளகும் முத்தும் யவன வணிகத்தில் இணையான இடத்தைப் பிடித்தன. அதுதான் நேற்று வரை இருந்த நிலை. ஆனால், இந்தத் திருமணம் வணிக நிகர்நிலையை உடைத்து பாண்டியனை முதல் நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

பாண்டிய இளவரசன் பொதியவெற்பன் மணமுடிக்கப்போவது இன்னொரு வேந்தன் மகளாக இருந்திருந்தால், இந்தத் திருமணம் இரு நாடுகளின் திருவிழாவாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இன்று அப்படி அல்ல. இந்தப் புவியின் பெருவிழாவாக இது மாறிப்போனது. கடலையும் காற்றையும் அறிந்து இந்தப் புவியெங்கும் வணிகம் செய்துகொண்டிருப்பவர்கள் நூற்றியிருபது வணிகர்கள். அவர்கள் தங்களுக்கு என்று ‘சாத்துக்கள்’  என்ற அமைப்பை வைத்துள்ளனர். பேரரசுகளை விஞ்சும் செல்வத்தின் நாயகனாக சாத்துக்கள் அமைப்பின் தலைவன் இருக்கிறான். அந்தத் தலைவனை ‘சூல்கடல் முதுவன்’ என்ற பெரும்பெயர் கொண்டு அழைக்கின்றனர். அந்தச் சூல்கடல் முதுவனின் மகள்தான் மதுரையின் இளவரசனை மணக்கப்போகிறவள். அவளின் பெயர் ‘பொற்சுவை’.

ஓய்வறியா அலைகடலின் பாய்மரங்கள் வைகைக் கரை நோக்கியே வலசை வந்து கொண்டிருக்கின்றன. கடற்பரப்பு எங்கும் மிதந்துகிடக்கும் நாவாய்கள் இப்போது கொற்கைத் துறையில் நங்கூரம் இறக்கிவிட்டன. இப்படி ஒரு தகுதி இந்த மண்ணில் இதுவரை எந்தப் பேரரசுக்கும் கிடைக்கவில்லை. இந்தத் திருமணம் பாண்டியப் பேரரசு கடல் வணிகத்தில் முதல்நிலையைப் பெற்றதைப் பறைசாற்றும் அரசியல் நிகழ்வு. இதனால், இந்தப் பேரரசு காணப்போவதோ கரைபுரளும் செல்வச்செழிப்பு.

தன் இரண்டு மகன்களையும் கடற்புயலில் இழந்தவன் சூல்கடல் முதுவன். அவனின் ஒரே மகள் பொற்சுவை இப்போது மதுரைக்கு மணமகளாக வரப்போகிறாள். உலகெங்கும் இருந்து வணிகத்தால் நிரப்பபட்ட பெருஞ்செல்வம் நெடும்படி தாண்டி பாண்டியனின் கருவூலம் வந்துசேரவுள்ளது.

பொற்சக்கரங்கள் பூட்டப்பட்ட சாத்துக்களின் வண்டிகள்,  மதுரையின் பெருந்தேர் சாலைகளில் தடம்பதிக்க இருக்கின்றன. பொற்குவியலில் திணறப்போகிறது இந்த மாமதுரை. யவனம் முதல் சாவகம் வரை கண்டறியப்பட்ட அதிசிறந்த கலைப் படைப்புகள் இந்த நகரின் நெடுவீதி எங்கும் நின்று மிளிரப்போகின்றன.

வணிக சாத்துக்களின் வரைவில்லா செல்வத்தைவிட இந்தப் பேரரசே செழிப்புமிக்கது என்பதைக் காட்ட வேண்டிய தேவை நம் பேரரசருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கக் கருவூலத்தில் குவிந்துகிடக்கும் செல்வம் எல்லாம் மதுரையின் வீதிகளில் அள்ளிவீசப்பட உள்ளன.

இந்த இருவரும் இணையும்  இந்த வேளையை மிகுந்த கவனத்தோடு பயன்படுத்தக் களமிறங்கிவிட்டனர் யவனர்கள். பேரரசர் குலசேகரப்பாண்டியனையும் சூல்கடல் முதுவனையும் ஒருசேரத் திகைப்பில் ஆழ்த்த அவர்கள் தயாராகிவிட்டனர். இந்த மணவிழாவுக்கான பரிசுப்பொருள்களை கப்பல் நிறைய எடுத்து வந்துள்ளனர். யவனத் தேறல் மட்டுமே ஆறு திறளி மரப்படகில் கரை வந்து சேர்ந்தது என்று செய்தி.

இந்தத் திருமணத்தின்  வழியாக யவனர்களுக்கு ஒரு செய்தி தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. அவர்களும் அதைப் புரிந்துகொண்டார்கள். இனி யவன அரசர்கள் இந்த நாவலத்தீவின் முதற்சிறப்பை பாண்டியருக்கே செய்வார்கள். அதன் அறிகுறிகளும் தொடங்கிவிட்டன.

இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கின்றன. மதுரை விழாக்களின் நகரம். இந்த மாநகரின் 83p4.jpgமண்ணடுக்கு விழாக்களில் ஏற்றப்படும் தீபப் புகையால்தான் சாம்பல் நிறம்கொண்டுள்ளதோ என்று நான் பலநேரம் நினைத்தது உண்டு. ஆனால், இப்போது நடைபெறப்போகும் இந்த மணவிழாதான் அதன் உச்சம். இந்த உச்சத்தை மதுரை இனி எந்தக் காலத்தில் எட்டும் எனத் தெரியாது. இன்று நள்ளிரவுக்குப் பிறகு விற்பனைக்கான பொருள்களை மட்டும் யவனர்கள் நகரத்தின் வணிக வீதிக்குக் கொண்டுவர உள்ளனர். அதை வாங்கத்தான் மக்கள் பெரும் ஆர்வத்தோடு திரண்டுள்ளனர். திருமணத்தை முன்னிட்டு எல்லா குடும்பங்களும் அலங்காரத்துக்குத் தயாராகி வருகின்றன. யவனர்களே அலங்காரப் பொருளின் அடையாளமாகிவிட்டார்கள்.

கோட்டையின் கிழக்கு வாசலுக்கு வெளிப்புறத்தில் இரு காதத் தொலைவில் இருக்கிறது யவனச்சேரி. இன்று மாலைதான் கொற்கையில் இருந்து பொருள்கள் எல்லாம் அங்கு வந்துசேர்ந்தன. அதில் விற்பனைக்கான பொருள்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து, நள்ளிரவுக்குப் பின்னர் வணிக வீதிக்குக் கொண்டுவருவார்கள். எனவே, இரவின் பதினைந்தாம் நாழிகையின்போது  கோட்டையின் கிழக்கு வாசல் திறக்க இருக்கிறது. அப்போது கோட்டைத் தளபதி சாகலைவன் அங்கிருப்பான். அதுவரை அவன் எங்கிருப்பான் என்பதுதான் கேள்வி.”
 
அவர் சொல்லியதை மாரையன் வாய்பிளந்து கேட்டுக்கொண்டு வந்தான். தேர் கிழக்குப் பக்கமாகவோ, வணிக வீதியின் பக்கமாகவோ செல்லாமல் வட திசையின் தனித்த மாளிகையை நோக்கிப் போனது. இந்தப் பக்கம் எதற்குப் போகிறது என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்க முடியாமல் சுற்றும்முற்றும் பார்த்தபடி வந்துகொண்டிருந்தான்.

மாளிகையின் வாசலில் வந்து நின்றது தேர். முன்னால் இருந்த குதிரை வீரன் ஒருவன், வேகமாக வந்து அவர் தேரை விட்டு இறங்கக் கைப்பிடித்து நின்றான். தொடர்ந்து மாரையன் இறங்கினான். மாளிகை, அலங்காரத்தால் மின்னியது. எங்கும் தீபங்கள் ஏற்றப்பட்டுக் கண்சிமிட்டியபடி இருந்தன. வெள்ளிகொண்டார் வந்ததை அறிந்து உள்ளிருந்த இளம்பெண்கள் இருவர் ஓடோடி வந்து, அவரது கைப்பற்றி வாசல் படி கடந்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

மாரையன் முன்னறையில் அமரவைக்கப்பட்டான். பட்டுத் திரைச்சீலைகள் காற்றில் அசைந்தபடி இருக்க, முகங்கள் இங்குமங்குமாக நழுவி மறைந்தன. இளமஞ்சள் நிறத்தில் ஒளிரும் தீபத்தின் விளிம்பில் எப்போதும் ஒரு செந்நிறம் கலந்திருக்கும். இயற்கை எந்த ஓர் அழகையும் முழுமைகொள்ள அதன் விளிம்பில் அடர்வண்ணம் பூசுகிறது. திரைச்சீலைகளின் விளிம்பில் அடர்வண்ண முகங்கள் மறைந்து மறைந்து தெரிந்துகொண்டிருந்தன. காமக்கிழத்திகள் பற்றிய  சொல்லோவியங்களைப் பொய்யாக்கின அந்த முகங்கள். எந்தச் சொல்லாலும் இந்த அழகைச் சொல்லிவிட முடியாது என்று மாரையனுக்குத் தோன்றியது.

கோட்டையின் மேல்மாடத்திலிருந்து இரவு முழுக்க வெளிப்புற இருளை வெறித்துப்பார்த்துப் பழகிய அவனின் கண்கள், மின்னும் ஒளிவிளக்கில் பொன்முகங்கள் மிதந்துபோவதைப் பார்த்துத் தடுமாறிக்கொண்டிருந்தன.

`இந்தப் பேரழகிகளிடமிருந்து வெள்ளிகொண்டார் மீண்டு வந்து அதன் பின் நாம் தளபதியைத் தேடிப்பிடிப்பதற்குள் விடிந்துவிடும்’ என்று அவன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தபோது யானைக் கட்டுத்தறியின் தலைவனுக்கு சாகலைவன் எழுதிய ஓலையை, பெண்ணொருத்தி கொண்டுவந்து கொடுத்தாள். ஓலையை வாங்கிப் படித்த மாரையன் அதிர்ந்துபோனான்.

83p5.jpg

“கோட்டைத் தளபதியும் இங்குதானா?”

‘குறித்த நாழிகைக்குள் எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்று கோட்டைத் தளபதி அடிக்கடி சொல்வது இதைத்தானா?’ - கேள்வியோடு அந்த இடம் விட்டு நீங்கினான்.

கோட்டை மேற்கு வாசலின் வெளிப்புறம் அவர்கள் காத்திருந்தனர். செவியன் சற்றே பொறுமையிழந்திருந்தான். இளமருதனுக்கு அங்கு வியந்துபார்க்க நிறையவே இருந்தன. அகழியில் முதலைகள் தெரிகிறதா என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் மண்ணீட்டாளர்கள். தாமரை மொட்டுகளும் ஆம்பல் மலர்களும் நீர் எங்கும் நிறைந்திருந்தன. பொழுது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.

கோட்டைத் தளபதியிடம் வாங்கிய ஓலையைக் கட்டுத்தறியின் தலைவன் அல்லங்கீரனிடம் கொண்டுவந்தான் மாரையன். அல்லங்கீரனுக்கு வயது அறுபதைக் கடந்திருக்கும். யானைகளின் குணம் காண்பதில் இவருக்கு இணை யாரும் இல்லை. அந்த வயதான பெரியவரை எழுப்பினான் மாரையன். ‘நள்ளிரவு வந்து எழுப்புவதைக்கூட மன்னிக்கலாம். ஆனால், எழுந்தவனிடம் எழுத்தைக் காட்டிப் படிக்கச் சொல்பவனுக்கு மன்னிப்பே கிடையாது’ என்று புலம்பியபடியே ஓலையை வாங்கிப் படித்தார்.

அவருக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.

“இங்கு இருப்பவை எல்லாம் பாசறையில் இருக்கும் இளவயது யானைகள் என்று நினைத்தாயா? ஐம்பது வயதைக் கடந்த யானை களைத்தான் கட்டுத்தறிக்குக் கொண்டுவருகிறோம். இவற்றை நீங்கள் சொல்லும்போதெல்லாம் வேலைவாங்க முடியாது. அதுவும் இரவு முழுநிலை உணவு மூன்று சுற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பாரம் புல்லும் நான்கு ஆடகம் அரிசியும் அரைக் குடுபம் எண்ணெயும் பத்து பலம் வெல்லமும் பத்து பலம் உப்பும் கலந்து கொடுத்துள்ளோம். வயிறார உண்டுவிட்டு அயர்ந்திருக்கின்றன. இப்போது அவற்றை எழுப்பி வேலை வாங்குவது இயலாத செயல் மட்டுமன்று; ஆபத்தானதும்கூட.”

மாரையனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால், அவசர வேலைக்காக அழைத்துவரப்பட்டவர்கள் கோட்டைக்கு வெளியே காத்திருக்கிறார்கள். அவர்களை எப்படியாவது உள்ளே அனுமதிக்க வேண்டும். அதற்காகத் தொடர்ந்து வேண்டினான்.

“கோட்டைத் தளபதி எங்கே?’’ என்று கேட்டார் அல்லங்கீரன்.

மாரையன் பதில் சொன்னான்.

“அவசரத்துக்கு அவனால் எழுந்துவந்து உன்னிடம் ஓலை கொடுக்க முடியவில்லை அல்லவா? யானையை மட்டும் உடனே எழுப்பு என்றால் என்ன பொருள்?”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், பெரியவரின் கேள்வி பொருத்தமானது என்று தோன்றியது.

பிரச்னை வந்து நிற்பது மாரையனுக்கு முன்னால் நாளை விசாரிக்கப்பட்டால், அவன்தான் பதில் சொல்லவேண்டியிருக்கும்.  எனவே, அவன் அந்த இடத்தைவிட்டு அசைவதாக இல்லை. பெரியவர் அல்லங்கீரனுக்கும் வேறு வழி இல்லை. நீண்ட நேரம் கழித்து யானையை எழுப்ப பாகனுக்கு உத்தரவிட்டார்.

83p6.jpg

மாரையன் தன்னுடன் வந்த வீரர்களோடு வெளியில் காத்திருந்தான். சிறிது நேரத்தில் யானை வெளியேறி வந்தது. பொழுது நள்ளிரவைக் கடந்தது. தனது கால் பெருவிரலால் அதனுடைய காதின் பின்பக்கத்தை ஊன்றி உந்தினான் பாகன். ஆனாலும், அது மெள்ளவே முன்னகர்ந்து சென்றது.

பக்கவாட்டில் குதிரையில் இருந்தபடியே பாகனைப் பார்த்து மாரையன் சொன்னான், “இந்த வேகத்தில் நடந்தால், வாசலை அடைவதற்குள் விடிந்துவிடும். வேகமாக நடத்து.”

பாகன் சொன்னான்... “எனது தொடை நடுக்கத்தை நீ உணர மாட்டாய். யானைக்கு மிக மோசமான வயது ஐம்பது. இளமைக்கும் முதுமைக்கும் நடுவில் இருப்பது. அது என்ன நினைக்கிறது என்பதை நாம் கணிக்க முடியாது. இந்த வயதுடைய யானைக்கு நிலையுணவு கொடுத்து, நள்ளிரவு எழுப்புவது ஆபத்தை விலைக்கு வாங்குவதைப் போன்றது. இதுவரை இல்லாத செயலை இது இப்போது வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.”

“ஒழுங்காகத்தானே போய்க்கொண்டிருக்கிறது. இதில் என்ன சிக்கல்?”

“எழுப்பியதிலிருந்து துதிக்கையைத் தந்தத்தில் சுற்றியபடியே வருவதைப் பார்த்தீரா? தந்தத்தில் அது கொடுக்கும் அழுத்தத்தை எனது அடித்தொடையில் உணர முடிகிறது.”

மாரையன் சற்றே அதிர்ந்து பார்த்தான்.

“எனக்குச் சொல்லப்பட்ட உத்தரவை நான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். ஆனால், எனது உத்தரவை யானை எந்தக் கணமும் மறுக்கலாம்.”

மாரையன் குதிரையை வேகப்படுத்தி முன்னால் நகர்ந்தான். நள்ளிரவின் மணியோசையை நாழிகைக் கணக்கன் எழுப்பினான். கோட்டையின் கிழக்கு வாயிலில் முரசுகள் முழங்கத் தொடங்கின. வணிகவீதியில் மக்களின் ஆரவாரம் எங்கும் எதிரொலித்தது.

யானை, கோட்டையின் மேற்கு வாசல் குறுக்குக்கட்டையைத் தூக்கி எடுத்தது. அப்படியே வலதுபுறம் திரும்புவதற்காக இடதுபாத முனையால் இடப்பாக காதின் அடியை மெள்ளத் தட்டினான் பாகன். அது அசைந்து திரும்பியது.

மாரையன் மகிழ்ச்சியோடு கதவைத் திறக்க உத்தரவிட்டான். வீரர்கள் நெடுங்கதவை இழுத்துத் திறந்தனர். இளமருதன் குதிரையைவிட்டு இறங்கி தனது ஆலாவைப் பிடித்தபடி மதுரைக்குள் நுழைந்தான். வண்டிகள் ஐந்தும் ஒவ்வொன்றாக உள்நுழைந்தன. கடைசி வண்டியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கிடையில் மரச்சட்டகத்தால் ஆன கூண்டு ஒன்று இருப்பதைப் பார்த்த காவல் வீரனொருவன்  கேட்டான்.

83p7.jpg

“என்ன அது?”

“தெய்வவாக்கு விலங்கு’’ என்றான் ஒருவன்.

இன்னொருவன், “தேவாக்கு விலங்கு’’ என்றான்.

காவல் வீரனுக்கு அவன் சொல்வது புரியவில்லை.

“என்ன பெயர் சொல்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்டான்.

“தேவாங்கு” என்றான் இன்னொருவன்.

கோட்டைக்குள் நுழைந்ததும்  அவை இரண்டும் மிரண்டுபார்த்து கண்களை உருட்டின. எல்லோரும் உள்நுழைந்த உற்சாகத்தில் இருந்தனர்.

மாரையன் பெருமூச்சுவிட்டான்.

பாகனுக்கு உள்நடுக்கம் பல மடங்கு அதிகமானது. குறுக்குக்கட்டையைத் தூக்கிய பின் அது அமைதியாக நடந்துகொண்டே இருந்தது. அவனது கால்கள் இரு காதுகளுக்கு அடியில் அனைத்து உத்தரவுகளையும் கொடுத்துவிட்டன. அது எதையும் பொருட்படுத்தாமல் சென்றுகொண்டே இருந்தது. அந்தப் பெரும் குறுக்குத்தடி அதன் தந்தங்களின் மேல் வாகாக உட்கார்ந்திருந்தது. துதிக்கையை வலப்புறமும் இடப்புறமும் முழுமையாக வீசி நடந்தது. பாகன் நடுங்கினான்.

“இந்நேரம் கோட்டையின் கிழக்கு வாசலுக்குள் யவனப்பொருள்களைக் கொண்டுவந்திருப்பர்’ என்று எண்ணியபடியே நெடுங்கதவை மூட உத்தரவிட்டுவிட்டான் மாரையன். வீரர்கள் கதவை இழுத்து அடைத்தனர். குறுக்குத்தடியை பொருத்தச் சொல்வதற்காக மாரையன் திரும்பிப் பார்த்தான். தடியைச் சுமந்தபடி யானை இடப்புறம் உள்ளே போய்க்கொண்டிருந்தது. குறுந்தடியைக்கொண்டு கதவை மூடாமல் அதை எடுத்துக்கொண்டு ஏன் உள்ளே போகிறது என்று பதறிய மாரையன் அதை நோக்கி குதிரையில் விரைந்தான்.

வலப்புறம் போன வண்டியில் இருந்த தேவாங்குகள் வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசிப் பதுங்கின. கிழக்கு வாசலின் வழியே பெரும் உற்சாகத்தோடு யவன வண்டிகள் உள்நுழைந்தன. தனது உத்தரவை மறுக்கும் யானை என்ன செய்யப்போகிறது எனத் தெரியாமல் பாகன் பதைபதைத்துக்கொண்டிருந்தபோது, யானைக்குப் பின்னாலிருந்து விரைந்து வந்த மாரையன் சற்றும் எதிர்பாராமல் குறுக்கிட்டான். அதிர்ந்த பாகனின் முகத்துக்கு நேரே ஓங்கிய துதிக்கை வந்துசென்றது!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 23

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

83p1.jpg

ள்ளறை ஒன்றில் படுத்திருந்த இளமருதன் கண்விழித்தபோது, விடிந்து நெடுநேரமாகியிருந்தது. அவன் அழைத்துவந்த கொற்றர்களுக்கு வேலைகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் தங்களுக்குரிய இடத்துக்குச் சென்றுவிட்டனர். தன்னை அழைத்துவந்த செவியன் எங்கே எனத் தேடியபடி வெளியே வந்தான் இளமருதன். அவனின் கண்கள் வியப்பில் மூழ்கின. தாமரை மொட்டுபோல அடுக்கடுக்காகக் குவிந்து நிற்கும் புதிய மாளிகைகள், கதிரவனின் ஒளிபட்டு வெண்பஞ்சுபோல் ஒளிர்ந்துகொண்டி ருந்தன. வியப்புற்று நின்ற அவனருகே வந்து தோள் தொட்டான் செவியன்.

“இந்தப் பகுதியில் மூன்று பெரும்மாளிகைகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. கட்டட வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. மர வேலைப்பாடுகளும் ஓவியப் பணிகளும்தான் நடக்கின்றன. மாளிகைக்குப் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பூந்தோட்டத்தில், ஒருசில பணிகளும் நடைபாதை, சுற்றுச்சுவர் போன்ற சிறுசிறு வேலைகளும்தான் மிச்சமிருக்கின்றன. நாம் அழைத்துவந்த கொற்றர்களை அங்கு அனுப்பியாகிவிட்டது” என்றான் செவியன்.

மலைப்பில் இருந்து மீளாமல் கேட்டுக்கொண்டி ருந்தான் இளமருதன். மேல்மாடத்தின் வெளிப்புற விளிம்பில், கடல் அலைகளின் வளைவுகள் சுழன்று பொங்கியபடி இருந்தன. அதைப் பார்த்தபடி கேட்டான், “எப்படி இவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்க முடிந்தது?”

செவியன் சொன்னான்... “அலைகள் பொங்கும் கடல்போல் மாடத்தின் விளிம்புகள் வடிவமைக்கப்பட்டிருப்பதன் காரணம், உள்ளிருக்கும் மாளிகையின் மொத்த வடிவம் சிப்பி போன்றது. சிப்பிக்குள் இருக்கும்
ஆதி இருளுக்குள்தானே வெண்முத்து சூல்கொள்ளும்?”

புரியாமல் விழித்தான் இளமருதன்.

“இதுதான் மணமக்களின் பள்ளியறை. இந்தப் பேரரசின் வம்சக்கொடி வேர்பிடித்து மலர வேண்டிய மாளிகை.”

அசைவுறா கண்கள் திரும்ப மறுத்தன.

“வாருங்கள் உள்ளே போய்ப் பார்ப்போம்’’ எனச் சொல்லி மாளிகைக்குள் அழைத்துச் சென்றான் செவியன்.

உள்ளே மகதநாட்டு வினைஞர்கள் நெடுங்கதவுகளை இழைத்துப் பொருத்தும் பணியைச் செய்துகொண்டிருந்தார்கள்.

காற்று எங்கும் நுண்ணிய மரத்தூள்கள் மிதந்துகொண்டிருந்தன. சந்தனத்தின் வாசனை மாளிகைக்குள் நுழையும் முன்னரே இளமருதனின் மூக்கில் ஏறியது. உள்நுழைந்த இளமருதன், வடிவிலும் வாசனையிலும் வண்ணத்திலும் நிலைமறந்து நின்றான்.

பெரும் வட்டவடிவில் ஒன்பது தூண்கள் நின்றுகொண்டிருந்தன. தூண்களின் மடிப்புகளும் வேலைப்பாடுகளும் இணை சொல்ல முடியாதவை. அந்தத் தூண்களின் மேல் குவிமாடம் இருந்தது. மாடத்தின் மேற்கூரை முழுவதும் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. இரவு நேரத்து வானம். நிலவு ஒளிர்ந்துகொண்டிருக்க, எங்கும் விண்மீன்கள் மின்னிக்கொண்டிருக்கும் காட்சி அதில் இருந்தது. அண்ணாந்து பார்த்தபடி மேற்கூரையின் முழுவட்டத்தையும் நோக்கினான்.

83p2.jpg

“ஓவியர்கள், வேலையை முடித்துவிட்டார்கள். ஆனால், குறித்துக்கொடுத்த அந்துவன் வந்து பார்த்து `சரி' எனச் சொன்னால்தான் சாரத்தைப் பிரிக்க முடியும். இன்று நற்பகல் அவர் வந்துவிடுவார்” என்று சொல்லியபடி, “வாருங்கள் இன்னொரு பள்ளியறைக்கு” என்று அழைத்தான் செவியன்.

“இன்னொரு பள்ளியறையா?”

“ஆம், இது கார்காலப் பள்ளியறை. கீழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த தூண்களும் மரவேலைகளும் இதில் அதிகம். இன்னொன்று வேனிற்காலப் பள்ளியறை. அது மேல்மாடத்தில் கட்டப்பட்டுள்ளது. வைகையின் காற்று எல்லா திசைகளிலிருந்தும் உள்நுழைவதைப்போல வடிவமைக்கப் பட்டிருக்கும்” என்று சொல்லியபடி அங்கு அழைத்துச் சென்றான். அங்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. வேலைசெய்பவர்கள் யவனத் தச்சர்கள். வேனிற்கால வெக்கையைக் காதலின் கவசமாக மாற்றும் வித்தையைச் செய்துகொண்டிருந்தனர். விதவிதமான கைக்கருவிகளை வைத்துப் பணியாற்றினர். இளமருதன் கண்களை எங்கும் ஓடவிட்டான். அங்கு நெருக்கமாக அமைக்கப்படாமல் விலகி நிற்கும் தூண்கள், சாளரத்திலிருந்து தன்னியல்பிலே வந்து தழுவிச்செல்லும் காற்று என, இரண்டு மாளிகைகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தன. மேற்கூரை ஓவியம் மட்டும்தான் ஒன்றுபோல இருந்தது. இரவு நேரத்து விண்மீன்களும் நிலவும் ஒளிவீசியபடி.

“இந்த இரண்டை ஒன்றுசேர்த்தாலும் ஈடாக முடியாத பெரும் மாளிகை ஒன்று கட்டப்பட்டு வருகிறது” என்று சொல்லி பாண்டரங்கத்துக்கு அழைத்துச்சென்றான் செவியன்.

அங்கே வைப்பதற்காகத்தான் அவன் தந்தை காமன்விளக்கு செய்துகொண்டிருக்கிறார் என்பதால், அந்த அரங்கு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவலுடன் போனான் இளமருதன். பளிங்குக்கற்கள் பாவப்பட்டு, நிலைச்சுவரிலும் தந்தரையிலும் பளபளப்பு ஏறியிருந்தது. ஓவியங்களும் மரவேலைப்பாடுகளும் மனிதக் கற்பனைக்கு எட்டாத பேரழகுகொண்டு விளங்கின. கலை வேலைப்பாடுகளின் உச்சம் என இந்த அரங்கைச் சொல்லலாம். நடுவில் ஆடுகளம். அதைச் சுற்றி இசைக்கவும் பாடவும், பார்த்து ரசிக்கவும் ஏற்றவாறு ஒவ்வொன்றுக்கும் தகுந்த மேடைகள். எல்லா தூண்களிலும் சிற்ப வேலைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. சுவர்களில் சுதை வேலைப்பாட்டுக்கும் வண்ணங்கள் பூசப்பட்டுவிட்டன. மேற்கூரை ஓவியமும் முடிந்துவிட்டது. அந்துவன் வந்து பார்த்துவிட்டால் எல்லாம் முற்றுபெற்றுவிடும்.”

நிலைமறந்து பாண்டரங்கத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் இளமருதன்.

“வாருங்கள், அந்துவன் வருவதற்குள் நாம் உணவருந்திவிட்டு வந்துவிடுவோம்” என்று சொல்லி அழைத்துச்சென்றான் செவியன்.

கோட்டைக்கு தெற்கே மதுரையின் இடுகாடு இருந்தது. இறந்துபோன மேற்கு வாசலின் தளபதி மாரையனின் உடல் அங்குதான் கொண்டுவரப்பட்டது. வீரர்கள் உடலேந்தி வந்தனர். நேற்று நள்ளிரவு யானையைக் குறுக்கிட்ட மாரையனை, சற்றும் எதிர்பாராமல் துதிக்கையால் சுழற்றி அடித்தது. குதிரையின் முதுகெலும்பு நொறுங்கி, கீழே சரிந்தான் மாரையன். பின்னங்கால்களால் அவனை மிதித்துக் கடந்தது யானை. பின்புறம் வந்த வீரர்கள் நிலைமையை உணர்ந்து யானைக் கட்டுத்தறியின் தலைவன் அல்லங்கீரனிடம் செய்தி சொல்ல ஓடினர்.

83p3.jpg

மேலே உட்கார்ந்திருந்த பாகனுக்கு, இப்போதுதான் விஷயம் பிடிபட்டது. யானைக்கு மதம்கொள்ளவில்லை. மதம் பிடித்திருந்தால் இந்நேரம் தான் உயிரோடு இருக்க மாட்டோம். தந்தத்தில் தாங்கிப் பிடித்திருக்கும் குறுக்குக்கட்டையால் இந்த இடத்தையே தகர்த்திருக்கும். முழுநிலை உணவு மூன்று சுற்று கொடுக்கப்பட்ட பிறகு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அதை எழுப்பி வேலைவாங்கியதில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது. தளபதி மாரையன், அவசரப்பட்டு இடையில் வந்து குறுக்கிட்டுவிட்டார். `இது வேறு திசை போகாமல் வந்த வழியே கட்டுத்தறி நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது' என்று நினைத்தபடியே அதன்மேல் அமர்ந்திருந்தவன் குத்துக்கோலை (அங்குசம்) வலது காதின் பின்புறம் செருகிவிட்டு, சட்டென யானையின் மேல் இருந்து பக்கத்து மாளிகைச் சுவரின் மேல் தாவினான். அல்லங்கீரனைப் பார்த்துத் தகுந்த ஏற்பாடு செய்வதற்காக அவரை நோக்கி ஓடினான்.

மாரையனின் வீரர்கள்தான் முதலில் கட்டுத்தறியின் தலைவனை வந்தடைந்தனர். வீரர்கள் ஓடிவரும் வேகத்தைப் பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டார் அல்லங்கீரன்.

``தளபதியை மிதித்துக் கொன்றுவிட்டது'' என, பதைபதைக்கச் சொன்னார்கள். உடனடியாக மூன்றாம் தறியில் இருந்த யானைகளை எழுப்ப உத்தரவிட்டான்.

எத்தனை நூறு யானைகளைப் பழக்கியவன் அல்லங்கீரன். போர்க்களத்தில் எதிரிகளின் யானைப் படையைச் சிதைக்க எத்தனையோ முறை வழிவகுத்தவன். வயதாகிவிட்ட காரணத்தைச் சொல்லி யானைப்படை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, வாரக்கணக்கில் உணவெடுக்காமல் பட்டினிகிடந்து துயரத்தைக் கடந்தவன். யானைகளுடனே வாழ்வைக் கழித்தவன். வயதான யானைகள் இருக்கும் கட்டுத்தறி, இப்போது இவன் வசம்.

யானைகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பொழுதுகளில் அவனது ஆளுமையைக் கண்டு 83p4.jpgநாடே நடுங்கியிருக்கிறது. இப்போது உடல் மிகவும் தளர்ந்துவிட்டது. ஆனாலும் சவாலைச் சந்திக்கத் தயாரானான்.

நிலைப்படை வீரர்கள்,  அலையலையாக யானையின் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.  அவர்கள் கோட்டையின் உள்பக்கமாகப் போகாமல் கட்டுத்தறியை நோக்கியே நடந்தனர். வீரர்கள், பாதுகாப்பான தொலைவில் பின்தொடர்ந்தனர்.

குறுக்குத் தெருக்களின் வழியாக விரைந்தோடி வந்த பாகன் கட்டுத்தறியை அடைந்தபோது அல்லங்கீரன் அங்கு இல்லை. செய்தியைக் கேட்டு யானையை மறிக்கப் போய்விட்டார் என்பதை உணர்ந்தான். அவர் போன திசை நோக்கி ஓடினான். யானைக்கு மதம் பிடிக்கவில்லை. கட்டுப்பட மறுக்கிறதே தவிர, கட்டுப்பாட்டை மீறவில்லை. வலது காலில் இருக்கும் காயங்களை நோக்கிக் கட்டுகளை வீசி இறுக்கிவிட்டால்,
அது அசையாமல் நின்றுவிடும். இதை அவரிடம் சொல்லத்தான் விரைந்து வந்தான். ஆனால், அதற்குள் எல்லோரும் போய்விட்டார்கள். அதற்கு மதம் பிடித்துவிட்டது எனக் கருதி அதை வீழ்த்தப்போகிறார்கள். எப்படியாவது அந்தச் செயலைத் தடுக்க வேண்டும் எனப் பதறியடித்து யானையை நோக்கி ஓடினான் பாகன்.

யானை வந்துகொண்டிருக்கும் வீதியை அடைந்தான் அல்லங்கீரன். கொடுக்குப்போல் மேல்தூக்கி இருந்த அதன் அடிவாலைக் கொண்டுதான் மதத்தைக் கணக்கிட முடியும். வந்தவுடன் அடிவாலைப் பார்க்க முயன்றபோது, மேலே பாகன் இல்லை என்பது தெரிந்தது. அவனை, யானை கொன்றுவிட்டது என்ற முடிவுக்கு அவர் போனதால், மேல்தூக்காமல் இருந்த அடிவாலை அவரது கண்கள் காணவில்லை.

மதயானையை எதிர்கொள்வதற்காகவே பயிற்சிபெற்ற வீரர்கள், துல்லியமான தாக்குதலை முன்னெடுத்தார்கள். பாண்டியப் பேரரசு, யானைப் போர்களிலும் மதயானையை அடக்கும் உத்திகளிலும் நிகரற்று விளங்கியது.

மதுரையில் மாபெரும்விழா நடக்கும் நேரம். சற்றே பிசகு ஏற்பட்டாலும் பெரும் இழப்பில் முடிந்துவிடும். எனவே, தாமதிக்க வேண்டாம் என முடிவெடுத்தார் அல்லங்கீரன். அதைப் போகவிட்டு சரியான ஒரு நாற்சந்தியில் யானைகளோடு மறித்தார். ஒரே நேரத்தில் யானைகள் நான்கும் பிளிறிக்கொண்டு துதிக்கையைத் தூக்கியபடி அதை நோக்கி முன்நகர்ந்தன. அவற்றின் தந்தங்களின் முனைகளில் பளிச்சிடும் பூண்களும் குத்தீட்டிகளும் மாட்டப்பட்டிருந்தன. அந்த அடர் இருட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் புரியவில்லை. பிளிறலின் பேரொலி மேலெழுந்தபோது அது குறுந்தடியோடு மண்ணில் சரிந்தது.

மற்ற நாள்களில் இது நடந்திருந்தால், இந்தப் பேரோசை கேட்டு மொத்த நகரமும் விழித்திருக்கும். ஆனால், விழாக் கொண்டாட்டத்தில் நகரம் திளைத்துக்கொண்டிருந்ததால், எங்கும் எதிரொலிக்கும் பேரொலிக்கு நடுவில் யானைகளின் பிளிறல், கொண்டாட்டத்தின் பகுதியாகக் காற்றில் கரைந்தது.

தலைமை அமைச்சர் முசுகுந்தருக்கு, முதலில் செய்தி சொல்லப்பட்டது. இந்த மாநகரை வகுக்கப்பட்ட 83p5.jpgவிதிகளின் வழியே கட்டிக்காப்பவர் அவர்தான். மணவிழா திருநாளுக்காக எங்கும் மங்கலப் பேரொலி நிரம்பியிருக்கும் நாளில், இப்படி ஒரு செய்தியைக் கேட்டு மனிதர் நடுங்கிப்போனார். இந்தச் செய்தி பரவாமல் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவந்தார். விடிவதற்குள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

பெரும் மரவண்டியில் யானையை இழுத்து ஏற்றினர். முன்னும் பின்னுமாக யானைகளே அந்த வண்டியை இழுத்தும் தள்ளியும் கொண்டுசென்றன. அந்த இடத்தில் மண்ணைக் கொட்டிக் குருதியை மூழ்கடித்தனர். இரவோடு இரவாக வேலையை முடித்தனர். ஆனாலும், விதிகளின்படி விசாரணை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.

ரண்மனையின் நாள்களையும் கோள்களையும் கணித்துச் சொல்லும் தலைமைக் கணியனின் பெயர்தான் அந்துவன். காலம் கணிக்கும் கணியனான அந்துவனின் சொல்லுக்கு மறுசொல் இல்லை இந்த மாநகரில். அவன் கணித்துச்சொல்லும் சொல்லே பேரரசின் சொல்லாகிறது. சிறுகோல் ஒன்றை எப்போதும் கையில் வைத்திருக்கும் அவன், தடித்த கோல்போலவே உடல்கொண்டவன். பொதிகை மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் பாண்டிய நாட்டின் பெருங்கணியர் திசைவேழருக்கு மாணவன்.

திருமணத்தை முன்னிட்டுப் புதிதாக மூன்று மாளிகைகள் கட்டப்படுவதை அறிந்ததும், அதன் மேற்கூரையில் என்ன ஓவியம் இருக்கலாம் என்று முடிவுசெய்ய, பொதிகை மலை சென்று பேராசான் திசைவேழரிடம் கருத்தறிந்து வந்தவன். அவர் சொன்ன அடிப்படையில் வானியல் அமைப்புகளைச் சொல்லி ஓவியர்களை வரையவைத்துள்ளான்.

83p6.jpg

திருமணத்தை முன்னிட்டு நாளை பெருங்கணியர் திசைவேழர் அரண்மனைக்கு வரவிருக்கிறார். அவர் வருவதற்குள் ஓவியப் பணிகளை முடித்து வைக்க வேண்டும். வரையப்பட்டவை எல்லாம் சரியாக இருக்கின்றனவா எனப் பார்ப்பதற்காக அந்துவன் புதிய மாளிகையை நோக்கி வந்துகொண்டிருந்த போது, அவரது வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தனர் செவியனும் இளமருதனும்.

அந்துவன் வந்ததும் இளமருதனை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தான் செவியன். இளமருதன் அவரை வணங்கினான். அவனது வணக்கத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, தலையை மெள்ள அசைத்தபடி நடந்தார் அந்துவன்.

புதிய மாளிகைகள் குறித்து இளமருதன் தனது வியப்பை அவரிடம் வெளிப்படுத்தியபடியே உடன் நடந்தான். மூவரும் கார்காலப் பள்ளியறையை நோக்கி நடந்தனர். கட்டட அமைப்பை, மரவேலைப் பாடுகளை, கலை நுணுக்கங்களை வியந்து சொல்லிக்கொண்டே அவன் வந்தான். மேற்கூரை ஓவியத்தைப் பற்றி ஏதாவது சொல்வானா என, கணியனின் காதுகள் காத்திருந்தன.

அப்போது செவியன் சொன்னான்... “கணியரே மூன்றும் வெவ்வேறு விதமான மாளிகைகள். ஆனால், மேற்கூரை ஓவியத்தை மட்டும் ஏன் ஒன்றுபோல் வரைந்திருக்கிறீர்கள்?”

“மூன்றும் வெவ்வேறானவைதானே” என்றார் அந்துவன்.

“இல்லையே, ஒரே மாதிரிதானே இருக்கின்றன” என்றான் செவியன்.

“வானத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய, சற்றே வானறிவு வேண்டும். வாருங்கள் என்ன வேறுபாடு என்று உங்களுக்குச் சொல்கிறேன்” எனச் சொல்லிக்கொண்டே மாளிகைக்குள் நுழைந்தார் அந்துவன். பின்னாலேயே இருவரும் நுழைந்தனர்.

கார்காலத்து மாளிகையின் மேற்கூரையைக் காட்டிச் சொன்னார்... “இதில் மதி எவ்விடம் இருக்கிறது பார்த்தீர்களா?”

“மேற்கூரையின் இடது பக்கம் இருக்கிறது” என்றான் செவியன்.

“நான் இடம் எனச் சொன்னது காலத்தை, வானில் நிறைமதி எந்த விண்மீன் கூட்டத்தோடு இணைந்து 83p7.jpgநிற்கிறதோ, அந்த விண்மீன் பெயரில்தான் அந்த மாதத்தை அழைக்கிறோம். அங்கு பாருங்கள் ஆறு முத்துக்களைப்போல மின்னிக் கொண்டிருப்பவைதான் கார்த்திகை விண்மீன் கூட்டம். அதோடு மதி நிற்பதால் இது கார்த்திகை மாதம். மதி நிற்கும் இடம், விண்மீன் கூட்டம் இருக்கும் இடமும் பிற கோள்கள் நிற்கும் இடமும் வானியல் கணக்குப்படி அமைக்கப்பட்டுள்ளன. திகிரிக் கணக்கு. அதாவது, வானியல் கணக்கை அறிந்தவர்கள் இந்த ஓவியத்தைப் பார்த்தால் எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாளை இந்த ஓவியம் குறிக்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்கள். மேற்கூரையின் வட்டத்துக்குள் இருப்பது ஓவியம் அன்று, காலம்.

இளவரசர் பொதியவெற்பன் பிறந்தபோது வானத்தில் நாள்மீன்களும் கோள்மீன்களும் இருந்த அமைப்பு இதுதான். படுக்கையில் சாய்ந்து பார்க்கும்போது அவரது கண்கள் நேரடியாக இதைத்தான் பார்க்கும். மதியும் விண்மீன்களும் கோள்மீன்களும் இதே அமைப்புக்கு மறுபடி வர, அறுபது ஆண்டுகள் ஆகும். காலத்தின் முழு வட்டம், எல்லா காலங்களிலும் ஒளிவீசிக்கொண்டுதான் இருக்கப்போகின்றன. அதைப்போல் என்றென்றும் ஒளிவீசக்கூடிய வாழ்வை நீ அமைத்துக்கொள் என்று காலம் அவருக்கு ஒவ்வோர் இரவும் சொல்லும்.”

அந்துவனின் விளக்கத்தைக் கேட்டு மெய்சிலிர்த்து நின்றான் செவியன். மேற்கூரையை அண்ணாந்து பார்த்தபடி இருந்த இளமருதனுக்கு, பேச நா எழவில்லை.

சற்று நேரம் கழித்து அந்துவன் சொன்னார், “வேனிற்கால மாளிகையின் மேற்கூரையில் இருக்கும் கால அமைப்பு, இளவரசியார் ‘பொற்சுவை’ பிறந்தபோது நிலைகொண்டிருந்த வானியல் அமைப்பு.”

மூவரும் அந்த அரங்குக்குள் நுழைந்தனர். மதி முற்றிலும் வேறு ஒரு திசையில் இருந்தது. நாள்மீன்களும் கோள்மீன்களும் வெவ்வேறு இடங்களில் நிலைகொண்டிருந்தன.

மூன்றாவது மாளிகையான பாண்டரங்கத்துக்குள் நுழைந்தனர்.

“இது யார் பிறந்த கால அமைப்பு?” என்று கேட்டான் செவியன்.

“அதுதான் எனக்கும் தெரியவில்லை. நாள்களும் கோள்களும் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என திசைவேழர் குறித்துத் தந்தார். அதன்படி வரைந்துள்ளேன். `இது என்ன அமைப்பு என்று இப்போது வரை எனக்கு விளங்கவில்லை' என்றார் அந்துவன். நாளை அவர் வரவிருக்கிறார். இதில் எத்தனை குறைகள் அவர் கண்களுக்குத் தெரியப்போகின்றனவோ?” என்றவரின் குரலில் பதற்றத்தை உணர முடிந்தது.

``அரண்மனைக் கணியனின் பார்வையில் நடந்துள்ளவற்றில் குறை கண்டறிய முடியுமா என்ன?”

அசட்டையான சிரிப்போடு அந்துவன் சொன்னார்... ``வரையப்பட்ட வானில் எத்தனை விண்மீன்கள் இருக்கின்றனவோ, அத்தனை குறைகளை அவரால் கண்டறிய முடியும். ஏனென்றால், வானில் அவ்வளவு நிறைகண்டவர் அவர். அதனால்தானே பெரும்புலவர் கபிலர், திசைவேழரைப் போற்றி அத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்.”

சொல்லிக்கொண்டே அந்துவன் வெளிமாடத்தைப் பார்த்தபோது அங்கு வட்டவடிவில் செய்துவைக்கப்பட்டிருந்த திகிரி மேடையின் மேல் நாற்சதுரக் கூண்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதைப் பார்த்ததும் பதறிப்போன அவர், ``அதைத் தூக்கிக் கீழே எறியுங்கள்'' எனக் கத்தியபடி அதை நோக்கி விரைந்தார்.

அவ்வளவு நேரம் அவர் சொன்னதை வியந்து கேட்டுக் கொண்டிருந்த இளமருதன், அவர் கத்தியதால் ஓடிப்போய், “அய்யா பொறுத்துக்கொள்ளுங்கள். நான் கொண்டுவந்த கூடுதான் இது” என்று சொல்லிக்கொண்டே கூண்டைத் தூக்கி கீழே இறக்கினான்.

அந்துவனின் கண்கள் சிவந்தன.

83p8.jpg

“என்ன இது அருவருப்பான விலங்கு, இதைக் கொண்டுவந்து ஏன் இதில் வைத்தாய், அது என்ன மேடை தெரியுமா, எதற்காக அமைத்திருக்கிறோம் தெரியமா?  இப்படி இதைக் கறைபடுத்தி விட்டாயே” என்று கோபப்பட்டார்.

இளமருதன் அவரை வணங்கி மீண்டும், மீண்டும் மன்னிப்புக் கேட்டான். பணியாளர்களை வரவழைத்து திகிரி மேடையைத் தூய்மைப்படுத்தச் சொன்னார். அவர்களும் வேகவேகமாகச் செய்தனர்.

செவியனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

``தேவாங்கு இருக்கும் கூண்டை எங்கு வைக்க?'' என்று  இளமருதன் கேட்டபோது, ``மாளிகையைவிட்டு வெளியே தனித்திருக்கும் அந்த மேடையின் மீது வையுங்கள்'' என்று சொன்னது அவன்தான்.

‘வெளியிலிருந்து வந்துள்ள ஒருவன் செய்துவிட்டான் என்பதால், அவரது கோபம் இந்த அளவுக்கு இருக்கிறது. இதை வைக்கச் சொன்னது நான்தான் என்பது தெரிந்தால் அவ்வளவுதான்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, பேச்சைத் திருப்ப, “இந்த அழகிய வட்டவடிவ மேடையை எதற்காக மாளிகையை விட்டு வெளியே அமைத்துள்ளார்கள்?” எனக் கேட்டார்.

சற்றே கோபம் தனிந்த அந்துவன் சொன்னார்... “இது சக்கரவாகப் பறவைக்கான மேடை. `பறவைகளின் இளவரசி சக்கரவாகப் பறவை' என்று சொல்வார்கள். வரப்போகும் பாண்டியநாட்டு இளவரசியார் பொற்சுவையின் செல்லப்பறவை அதுதானாம். இது உண்மையில் பறவைகளின் இளவரசி அன்று... வணிகர்களின் இளவரசி. ஆம்... கால மாற்றத்தைக் கணித்துச் சொல்லும் பறவை அது. கார்காலத்துக்கான காற்று தொடங்கும்போது உலகின் எந்தத் திசையிலிருந்தோ இது வந்துவிடுகிறது. இது வந்துவிட்டால், காற்றின் திசையும் மழையின் தொடக்கத்தையும் கடலில் மிதக்கும் வணிகர்கள் அறிவார்கள். மழையோடு வந்து மழைநீரை மட்டுமே அருந்தி உயிர்வாழும் வியப்புதரும் இந்தப் பறவை, மழைக்காலம் முடிந்ததும் புறப்பட்டு மீண்டும் கடலுக்குள் போய்விடுகிறது.

இளவரசியார் இந்தப் பறவையோடுதான் வந்துகொண்டிருக்கிறாராம். அந்தப் பறவைக்கான கூண்டு வைக்கும் மேடை ஒன்றைச் செய்யச் சொன்னார்கள். அது கார்காலம் முடிந்ததும் பறந்துசெல்லும் திசையை நோக்கி, ஆறு மரங்களால் வட்டவடிவில் அந்த திகிரி மேடையை அமைத்துள்ளேன். அதில் போய் இந்த விலங்கை வைத்துவிட்டீர்களே” என்று கோபப்பட்டவர், தேவாங்கைப் பார்த்தபடியே கேட்டார். “என்ன விலங்கு இது? இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லையே. எதற்கு இதைக் கொண்டு வந்துள்ளீர்கள்?”

``தேவாங்கு'' என்று அதன் பெயரைச் சொன்ன இளமருதன். இதைக் கொண்டுவந்ததன் காரணத்தைச் சொல்ல வாயெடுத்தான். ஆனால், சட்டென அதை நிறுத்திக்கொண்டான். `பாரிக்கு தெய்வவாக்குச் சொல்லும் விலங்கு இது. இதை மாமன்னருக்குப் பரிசுப்பொருளாகக் கொண்டு வந்துள்ளோம். இதைப் பார்த்ததும் மாமன்னர் அடையப்போகும் மகிழ்வு அளவற்றது. இதை மாமன்னரிடம்தான் சொல்ல வேண்டும். இடையில் இருப்பவர்களிடம் சொன்னால், எப்படியும் மாற்றிவிடுவார்கள்’ என்று நினைத்தவன் சட்டென வாயடைத்துக் கொண்டான்.

“உலகமே வியக்கப்போகும் ஒரு திருமணத்துக்கு நீ கொண்டுவந்துள்ள பரிசு இதுதானா?” என்று சொல்லிச் சிரித்தபடி, ``குறுநில மன்னன் ஒருவனின் மகனால் மாமன்னரை இந்தக் காலத்தில் கண்டுவிட முடியுமா என்ன?”

செவியன் சொன்னான்... “வெங்கல்நாட்டின் மீது பேரரசருக்கு நல்ல மதிப்பு உண்டு. எனவே, நேரம் ஒதுக்குவார் என்றுதான் நான் நினைக்கிறேன்.”

“சரி அதையும் பார்ப்போம்” என்று சொன்ன அந்துவன், “இந்த விலங்குக் கூண்டை இனி இங்கு வைக்கக் கூடாது. மாளிகைக்குள் இருக்கும் மேடையில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

இளமருதன் கூண்டை எடுத்துக்கொண்டு பாண்டரங்கத்துக்குள் நுழைந்தான். `இந்த அரங்கில் வைக்கத்தான் தந்தை காமன்விளக்கைச் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், நான் கொண்டுவந்த விலங்கு அதற்கும் முன்னே உள்நுழைந்துவிட்டது' என எண்ணியபடி, அந்தக் கலைமாடத்தின் மேல்புறம் இருக்கும் மேடை ஒன்றின் மீது வைத்தான்.

உள்ளிருந்த இரண்டு தேவாங்குகளும் வட்டக்கண்களை உருட்டி உருட்டி இங்கும் அங்கும் பார்த்தன.

முன்புபோல் இவை அச்சம்கொள்வதில்லையே என இளமருதன் எண்ணிக்கொண்டிருக்கையில், அவை இரண்டும் அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தன. பார்த்த கணத்தில் கத்தியபடி மருண்டு உள்ளொடுங்கின.

முதன்முறையாக அவற்றின் கத்தலைக் கேட்ட இளமருதன், அப்படி என்ன இருக்கிறது மேற்கூரையில் என எண்ணியபடி அண்ணாந்து பார்த்தான். சிதறிக்கிடக்கும் விண்மீன்களுக்கு இடையில் ஓர் ஓரத்தில் நிலவு இருந்தது. காலம், சொல்லவேண்டியதைச் சொல்லிக்கொண்டி ருந்தது. அவனுக்கு அது புரியவில்லை!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

83p1.jpg

கார்காலத்தின் தொடக்க நாளிலேயே மழை கொட்டித்தீர்த்தது. கபிலரின் உடல், சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டது. கபிலர் இருந்த வீட்டில்தான் எந்நேரமும் பாரியின் மகள்கள் இருந்தனர். அங்கவை, சங்கவையோடு சேர்த்து எட்டுப் பேருக்கு எழுத்துகளைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கியிருந்தார் கபிலர். நடுவீட்டில் மரப்பலகையில் மணல் கொட்டி, அதன் மேல் உயிரெழுத்துகளை எழுதச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். சிறிது காலம் கபிலருக்கு உதவியாக அவரோடு இருந்துவிட்டு வருவதாகச் சொல்லி, மயிலா அங்கேயே தங்கிவிட்டாள்.

பறம்புநாட்டின் தென் பகுதி எல்லைக்காவல் பொறுப்பாளன் கூழையனிடமிருந்து தேக்கனுக்குத் தகவல் வந்திருந்தது. குடநாட்டு அமைச்சன் கோளூர் சாத்தனின் கைகளை வெட்டி அனுப்பியதற்குப் பிறகு, குட்டநாட்டு அரசவைக்குக் குடநாட்டின் தூதுவர்கள் சென்றுள்ளனர். `அடுத்து நிகழப்போவதைப் பற்றிய விழிப்போடு இருக்க வேண்டிய வேளை இது!' என அவர் நினைத்தார்.

கொற்றவைக்கூத்து முடிந்து ஒரு வாரத்துக்குப் பிறகு, கபிலரின் உடல் முற்றிலும் குணமானது. ஆனால் மனம், மிகவும் துவண்டே இருந்தது. நீலன் புறப்பட்ட பிறகு, கபிலரின் மனம் நிலைகொள்ள நாளெடுத்துக்கொண்டது. பார்த்த முதல் கணத்திலிருந்து அவனைப் பற்றிய வியப்பு பெருகிக்கொண்டே இருந்தது. வேட்டுவன் பாறையில் பார்த்தபோது, கையில் பிடித்திருந்த அதே வேற்கம்போடு கபிலரிடமிருந்து விலகி காட்டுக்குள் மறைந்தான் நீலன். கண்களைவிட்டுப் பிரியும் வரை கபிலரின் கண்கள் அசைவற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தன.

இப்போது கபிலரோடு எந்நேரமும் உடனிருந்து உதவிகள் செய்பவன் உதிரன். இவனும் நீலனைப் போலத்தான்; துடிப்பேறிய இளைஞன். கபிலரின் தேவைகளை மிகுந்த அக்கறையோடு கவனித்துவருபவன்.

ஒரு பகற்பொழுதில், கபிலரின் வலது காலை தனது தொடையின் மேல் தூக்கி வைத்துக்கொண்டு விரல்நகங்களை நறுக்கத் தொடங்கினான் உதிரன். அவரின் வலதுகால் நடுவிரல் சூம்பிப்போய் சின்னஞ்சிறியதாக இருந்தது. அந்த விரலின் அடிப்பகுதியை விரல்களால் மெள்ள நீவிவிட்டான். சற்றே உயரமான மரப்பலகையின் மேல் உட்கார்ந்திருந்தார் கபிலர். அவரின் எண்ணங்கள் வேறு எங்கோ இருந்தன. உதிரன் நகம் நறுக்குகிறான் என்பது மட்டுமே அவரின் நினைவில் இருந்தது. சூம்பிய விரலுக்கு உணர்ச்சியில்லாததால், அவன் அந்த விரலின் அடிப்பாகத்தை நீவிவிட்டுக் கொண்டிருப்பதை அவரால் உணர முடியவில்லை.

‘பறம்புநாடே ஒரு தாய்போல் இருக்கிறது. அழிந்த இனங்களை, வாழத் துடிப்பவர்களை, எங்கெங்கோ இருந்து வந்து சேர்ந்தவர்களை எல்லாம் அள்ளி அணைத்துக்கொண்டுள்ளது. சேரனின் நாடு, சோழனின் நாடு, பாண்டியனின் நாடு என, மன்னர்களால்தானே நாடுகள் அறியப் படுகின்றன. ஆனால், ஒரு தாயின் குணத்தோடு விளங்கும் நாட்டை ஏன் `தாய்நாடு' எனச் சொல்லக் கூடாது? நாட்டைத் தாயோடு ஒப்பிடும் எண்ணம் இதுவரை யாருக்கும் தோன்றியதில்லை. சில மாதங்களுக்கு முன்னால் இப்படியோர் எண்ணம் தோன்றியிருந்தால், அது எவ்வளவு பொருளற்றதாக இருந்திருக்கும். மண்ணும் நாடும் உடைமையின் குறியீடுகள். அவற்றைப்போய் தாய்க்கு உவமையாக எப்படிச் சொல்ல முடியும்? ஆனால், கொற்றவைக் கூத்தைப் பார்த்த பிறகு, திசையற்றவர்களையும் நிலமற்றவர்களையும் தலைமுறை தலைமுறையாக அள்ளி அரவணைத்து நிற்கும் பறம்புநாட்டைத் `தாய்நாடு' எனச் சொல்வதைவிட வேறென்ன சொல்ல முடியும்?’ என்று கபிலரின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, அவரை அறியாமலே கண்கள் கலங்கின.

ஒருகணம் கண்களை மூடிச் சிந்தித்தார். தனக்குள் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? மேலெல்லாம் ஏன் சில்லிட்டு அடங்கியது? இப்போது நினைவுக்குள் என் தாய் வந்துவிட்டுப் போனாளே எப்படி? நினைவின் வழியே எதையோ கண்டறிந்துவிட நினைத்தபோதுதான் அவர் கால்விரல் நினைவுக்கு வந்தது. மெள்ளக் குனிந்து கீழே பார்த்தார்.

83p2.jpg

அவ்வளவு நேரம் எங்கேயோ பார்த்தபடி இருந்த கபிலர், இப்போது குனிந்து தன்னைப் பார்க்கிறார் என்பதை அறிந்ததும் உதிரன் சொன்னான், “உங்கள் வலதுகால் நடுவிரலில் குருதி யோட்டத்துக்காக அடிநரம்பைச் சற்று அழுத்தி நீவிவிட்டேன். எதுவும் தொந்தரவாகிவிட்டதா?”

‘இல்லை’ என்று தலையாட்ட மட்டும் செய்தார் கபிலர்.

உதிரன் சொன்னான், “நடுவிரல் சூம்பியுள்ளதால், நடக்கும்போது சற்றே இடறினாலும் தசை பிறண்டுவிடும். கூடுமானவரை பாதடியைக் கழற்றாதீர்கள்.”

இப்போது தலையாட்டாமல் அவனையே பார்த்தார் கபிலர்.

“வேட்டுவன் பாறையில் ஏறும்போது நீலன், உங்கள் பாதடியைக் கழற்றச் சொன்னதால்தான் உடனே உங்களுக்குத் தசை பிறண்டிருக்கிறது. காட்டில் பிடித்து நடப்பதைப்போன்ற வடிவில் ஒரு பாதடியைச் செய்துதர ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லியபடி, விரலின் அடிப்பாகத்தை அழுத்தி நீவிவிட்டான் உதிரன்.

கபிலரின் கண்கள் கலங்கின.

அதைக் கவனித்த உதிரன், “வலி ஏற்படுவதுபோல மிகவும் அழுத்திவிட்டேனா?” என்று பதற்றப்பட்டுக் கேட்டான்.

“இல்லை, சிறுவயதில் என் தாய் அந்த விரலின் அடிநரம்பை இளஞ்சூட்டு எண்ணெய் தொட்டு அழுத்தி நீவிவிடுவாள். அப்போது ஏதாவது ஒருகணத்தில் அந்த விரலை நான் உணர்ந்திருக்கிறேன். மற்ற நேரங்களில் அதை நான் உணர்ந்ததேயில்லை. எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன, எவ்வளவோ நிலப்பரப்புகளை நடந்தே கடந்திருக்கிறேன். பல்லாண்டுகளுக்குப் பிறகு, சட்டென இப்போது ஒருகணம் அந்த விரலை நான் உணர்ந்தேன். உணர்ந்த அந்தக் கணம் என் தாய் நினைவுக்கு வந்துவிட்டாள். உடலெல்லாம் சிலிர்ப்பு மேலிடுகிறது” எனச் சொல்லியபடியே உதிரனின் உச்சந்தலையில் கைவைத்தார் கபிலர். ஊறிய கண்ணீர் ஒழுகாமலா இருக்கும்?

சிறிது நேரத்தில், பெண்பிள்ளைகள் மொழி கற்றுக்கொள்ள வீடு வந்தனர். நறுக்கிய நகத்துண்டுகளை எடுத்துக்கொண்டு உதிரன் வெளியேறினான். கபிலர், மொழிக்குள் நுழையத் தொடங்கினார். மழை அதிகமாகத் தொடங்கியது. வாரக்கணக்கில் விடாது கொட்டும் அடைமழை, இன்னும் சில நாள்களில் தொடங்கும். அடைமழை தொடங்கிவிட்டால், அடுத்து கடுங்குளிர்.

தந்தரையிலிருந்து வந்தவர்களால் இந்தக் குளிரைத் தாங்க முடியாது. கடுங்குளிர் தாங்க, கபிலருக்கு எலிமயிர்ப் போர்வையை நெய்யுமாறு பாரி சொன்னான். குளிரிலிருந்து காத்துக்கொள்ள எவ்வியூரில் உள்ளவர்கள் முடியுள்ள தோல் ஆடைகளைப் பயன்படுத்துவர். அது, காட்டில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்குப் போதுமானது. புதியவர்களின் உடலுக்கு அது போதுமானதாக இருக்காது.  அவர்களின் உடற்சூட்டைப் பாதுகாக்கும் மேலாடை தேவை.

காட்டின் மிக உயர்ந்த பகுதிகளில் லவங்கமும் செங்கடம்பும் அடர்ந்துகிடக்கும் இடங்களில் பேரெலி உயிர்வாழும். இது பூனையைவிட அளவில் பெரியது. பஞ்சினும் மெல்லிய மயிர்களை உடையது. பொங்கும் புகைபோல பொசுபொசுவென இருக்கும் இதன் மயிர்களால் உருவாக்கப்படும் போர்வை, உடலுக்கு மிகுந்த கதகதப்பைத் தரும். உடலின் சூட்டை வெளிவிடாமல் காத்துக்கொள்ளும்; கடுங்குளிரையும் உடலோடு அண்டவிடாது.

கபிலருக்கு எலிமயிர்ப் போர்வையை நெய்ய, தேவையான எலிகளைப் பிடித்தாக வேண்டும். உதிரன், பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். கபிலர், தானும் உடன் சென்று வருவதாக பாரியிடம் கூறினார்.

“பேரெலி, உயரமான கரும்பாறை இடுக்குகளில்தான் இருக்கும். இளைஞர்கள் மிக விரைந்து செயல்பட்டால்தான், அதைப் பிடிக்க முடியும். நீங்கள் அவர்களைப் பின்தொடர்வது கடினமாயிற்றே?” என்றான் பாரி.
“நான் என்ன விரட்டியா பிடிக்கப்போகிறேன்? பிடிக்கப்போகிறவர்களைப் பின்தொடரப் போகிறேன்.”

“முன்னேறுவதைவிடக் கடினமானது பின்தொடர்வது.”

“பின்தொடரக்கூட முடியாத அளவுக்கு நான் தளர்ந்துவிடவில்லை; எனக்கு வயதாகிவிடவும் இல்லை.”

சின்ன சிரிப்புடன் பாரி சொன்னான், “மழைக்காலம் அல்லவா, பாறைகள் வழுக்கும் எனச் சொல்லவந்தேன்.”

83p3.jpg

“எப்படிச் சொன்னாலும் நீ சொல்லவரும் செய்தி அதுதானே?” என்றார் கபிலர்.

“நான் பதில் சொல்லவில்லை என்றால், உங்கள் வினாவே விடையாகிவிடும். என் தோழன் அவனது சொல்லாலேயே கண்டறியப்பட்டுவிடக் கூடாதல்லவா?”

“ `எந்தப் பக்கம் போய் மறித்தாலும் தப்பித்துப்போகும் வல்லமைகொண்டது' என்று உதிரன் சொன்னது, பேரெலியை மட்டும்தான் என நினைத்துவிட்டேன்.”

பாரி சிரித்துக்கொண்டே கபிலரைக் கட்டி அணைத்தான். இருவரும் புறப்பட்டனர். ஆதிமலையின் குறிப்பிட்ட திசை நோக்கி இளைஞர்கள் வேகமாகச் சென்றனர். சூரிய ஒளி, நற்பகல் வரைதான் தெரியும். அந்தப் பொழுதுக்குள் பிடித்தால்தான் உண்டு. நாளொன்றுக்கு இரண்டு பிடிப்பதே கடினம். ஒரு போர்வை செய்ய, குறைந்தது இருபது பேரெலிகளையாவது பிடித்தாக வேண்டும். உதிரன், சரசரவெனப் பாறைகளில் ஏறிப் போய்க்கொண்டிருந்தான். மிகச்சிறிய நேரம்தான் அவர்களைப் பின்தொடர்ந்தனர். அதன் பிறகு, பின்தொடர்தலுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பாரியும் கபிலரும் பேசியபடி அவர்கள் சென்ற திசை நோக்கி மலையேறிக்கொண்டிருந்தனர். “பன்மயிர் பேரெலி என்று இந்த எலியைப் பற்றிப் பழம்புலவர் ஒருவர் பாடியுள்ளார்” என்று சொன்ன கபிலர், சட்டென நினைவு வந்தவராகச் சொன்னார், “அங்கவை, கற்றுக்கொள்வதில் அளவற்ற ஆர்வத்துடன் இருக்கிறாள்.”

பாரிக்கு இது புதிய செய்தி அல்ல. ஆனால், கபிலர் வாயால் கேட்பது மகிழ்வைத் தந்தது.

“பொதுவாக, மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேள்வி கேட்பார்கள். அங்கவையோ, அறிந்துகொள்வதற்காகக் கேள்விகள் கேட்கிறாள்.”

இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்பதைப் போலிருந்தது பாரியின் பார்வை.

“மரத்தைத் தெரிந்துகொள்ள மரத்தைப் பார்த்தால் போதும். ஆனால், மரத்தை அறிந்து கொள்ள அதன் வேரைப் பார்க்க வேண்டும் அல்லவா? அதைப்போலத்தான் ‘உயிரெழுத்து பன்னிரண்டு’ என்று நான் சொன்னபோது தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு, ‘என்னென்ன?’ எனக் கேட்பாள் என நினைத்தேன். அவளோ  ‘ஏன் பன்னிரண்டு?’ எனக் கேட்டாள்.

“வினா சரிதானே?”

``சரிதான். ஆனால், விடைக்கான இடம் வினாவில் இருக்க வேண்டுமல்லவா? எத்தனையோ தலைமுறைகளாக நமது முன்னோர்கள் ஒலியை உருட்டி உருட்டி எழுத்தாக்கி வைத்திருக்கிறார்கள். நீர் போன இடத்தில் பதியும் தடம்போல, பேசும் ஒலிக்கு ஒரு தடத்தை உருவாக்க முயன்றிருக்கிறார்கள். இந்தப் பெரும் பட்டறிவுச்சேகரத்தை எனது அறிவால் எப்படி அளந்துபார்த்து விடை சொல்ல முடியும்?”

கபிலரின் விடை, பாரிக்குப் பொருத்தமாகப் பட்டது.

கபிலர் சொன்னார், “முன்பு ஒருமுறை என்னிடம் மொழி கற்ற மாணவி இப்படித்தான் வினாக்களைக் கேட்டுக்கொண்டே இருப்பாள். காலையில் அங்கவை கேள்வி கேட்டதில் அவளின் நினைவாகவே இருக்கிறது” என்று சொன்னபடி எதிரில் இருக்கும் வேங்கை மரத்தைப் பார்த்து அப்படியே அசைவற்று நின்றார் கபிலர். பாரியும் நின்றான்.

வேங்கைமரத்தின் தாழ்வான கிளையில் மயில் ஒன்று அமர்ந்திருந்தது. பேச்சுக் கேட்டு பறந்துவிடக் கூடாது என்பதற்காக, கபிலர் பேச்சை நிறுத்தினார். அது தன் தலையை மட்டும் மேலே தூக்கியது. அதன் அசைவை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர். பாரி, மரத்தின் அடிவாரத்தில் எதையோ உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

மயில் மெள்ள தலையைத் திருப்பி, இருவரையும் பார்த்தபடி கிளையிலிருந்து குதித்து, காட்டுக்குள் மறைந்தது. “இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாதா? வெருகுப்பூனையின் கண்களுக்குள் இருக்குமே நீலமும் பச்சையும் கலந்த கலவை. அதுதானே மயில்தோகையின் கண்களிலும் இருக்கிறது?” என்றார் கபிலர்.

பாரி, மறுமொழி ஏதுமின்றி மரத்தின் அடிவாரத்தை நோக்கி நடந்தான். கபிலர், அந்தக் கிளையை நோக்கிச் சென்றார். மயில், கிளையிலிருந்து தாவி மண்ணில் கால் பதித்த இடத்தில் அதன் காலடி படிந்திருந்தது. அதைப் பார்த்தபடி சொன்னார், “மயிலின் காலடியை நொச்சி இலைக்கு உவமை சொல்வர். வெண்ணொச்சி ஐந்து இலைகளை உடையது. மயிலுக்கு முன்பக்கம் மூன்று விரல்கள்தானே, அதனால் கருநொச்சியைத் தான் உவமை சொல்லியிருக்க வேண்டும். அதற்குத்தான் மூன்று இலை.”

கபிலரின் பேச்சுக்கு, பாரியிடமிருந்து மறுமொழி ஏதும் இல்லை.

“நீ என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” என வினவியபடி பாரியின் அருகில் வந்தார் கபிலர்.

மரத்தின் பட்டையில் ஒட்டியிருந்த செந்நிறத் தடத்தைக் காண்பித்து பாரி சொன்னான், “புலி, தனது வாயில் இருந்த குருதியைத் துடைத்துவிட்டுப் போயிருக்கிறது.”

கபிலரின் கண்கள் குருதியை உற்றுப் பார்த்தன.

“புலியின் வாயில் இவ்வளவு குருதி இருந்திருக்குமேயானால், அது யானையைத்தான் வீழ்த்தியிருக்கும்.”

கபிலரின் கண்கள் பாரியை உற்றுப்பார்த்தன.

“புலி குட்டி போட்டிருக்கும் புதருக்குள் யானை எதிர்பாராமல் நுழைந்ததால், இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம்.”

தடத்தின் வழியே காட்சியை அடுக்கிக்கொண்டேபோனான் பாரி. கபிலரின் மனதுக்குள்ளும் சொற்கள் 83p4.jpgவிரிந்துகொண்டே போயின.

‘கிளையில் தோகை விரித்த மயில்.

அடியில் குருதி துடைத்த புலி.

மயிலின் கால் தடம் நொச்சியைச் சொன்னது.

புலியின் வாய்த் தடம் யானையைக் கொன்றது.


குருதி யுலரா வேங்கையின் அடியில்

தனது இறகு உதிர்க்காமல் சென்றது மயிலே’

என, கபிலரின் மனம் காட்சிகளைச் சரசரவெனத் தொகுத்துக்கொண்டிருந்தபோது, பாரியின் வலதுகை ஈட்டியை இறுகப்பிடித்திருந்தது. ஏனென்றால், குருதியின் ஈரம் காயாமல்தான் இருந்தது. ஒருவேளை அந்தப் புதர் மிக அருகில் இருக்கலாம்.

விழா என்றால், அறுவகைத் தராசும் தரை தட்டும் ஓசை நிற்காமல் கேட்க வேண்டும். அதுவே திருவிழா என்றால், இந்த அறுவகையோடு சேர்ந்து எழுவகை அளவையும் நில்லாமல் நீள வேண்டும். அதனினும் பெருவிழா என்றால், இந்த இரண்டோடு சேர்த்து எண்வகை இன்பத்தில் நகரம் திளைக்க வேண்டும். இதுவே விழாக்களுக்கு இலக்கணம் கண்டோர் சொன்ன சொல்.

மாமதுரையின் வணிகச்சாலையில் குவிந்துள்ள மக்களின் கூட்டம் குறைவதாக இல்லை. மாணிக்கக்கற்களை நிறுத்தும் மிகச்சிறிய மணித்தராசும், தங்க நகைகளை நிறுத்தும் பொன்தராசும், உலோகங்களை நிறுத்தும் உலோகத்தராசும் பண்டத்தராசும் மரத்தராசும் தூக்குத்தராசும் நிலை கொள்ளாமல் இரவு முழுவதும் ஆடியபடியே இருந்தன. தராசுத்தட்டு தரை தட்டும் ஓசை இடைவிடாது ஒலிக்கும் இசை அரங்கம் போல கேட்டுக்கொண்டே இருந்தது. துலா முள்ளின் தலையாட்டல் நின்றபாடில்லை. நிற்காமல் துடிக்கும் வணிகத்தின் வால் அதுதானே.

பண்டகக் காப்போன், எண்ணற்ற கணக்கர்களோடு அமர்ந்து நாள்கணக்கில் கணக்குகளைப் போட்டுக்கொண்டே இருந்தான். இந்தத் திருமணத்துக்கு வரப்போகும் தேர்கள் எத்தனை, ஒரு குதிரை இழுக்கும் தேர், இரு குதிரைகள் இழுக்கும் தேர், நான்கு குதிரைகள் இழுக்கும் தேர் என வகைக்கு ஏற்ப பிரித்துக் கணக்கிட்டனர். குதிரைகள் தவிர, பிற விலங்குகளால் இழுத்து வரப்படும் தேருக்கு மணவிழா முடியும் வரை கோட்டைக்குள் அனுமதி இல்லை. அதேபோல, சிறிய பல்லக்குகளுக்கும் சிவிகைகளுக்கும் அனுமதி இல்லை. நான்கு பேர் சுமக்கும் பெரும்பல்லக்குகளுக்கும் எட்டுப்பேர் சுமக்கும் மணிப்பல்லக்குகளுக்கும் யானையின் மேல் பொருத்தப்பட்ட கூண்டுப் பல்லக்குகளுக்கும் மட்டுமே அனுமதி.

தேர்களின் எண்ணிக்கையை உய்த்தறிந்து அதன் அடிப்படையில் தேர் இழுக்கும் விலங்குகளின் எண்ணிக்கை கணக்கிடப் பட்டது. விலங்குகளுக்குத் தேவையான கூலங்கள் கணக்கிடப்பட்டன. பணியாளர் களின் எண்ணிக்கையையும் விருந்தினர்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டனர். நெல், வரகு, தினை, சாமை தொடங்கி எள், கொள், அவரை, மொச்சை, வரையிலான பதினெட்டு வகைக் கூலங்களையும் நிறுத்தல், முகர்தல், பெய்தல் அளவைகளைக்கொண்டு தேவைகளைக் கணக்கிட்டனர்.

பண்டகக் காப்போனின் அறை முழுவதும் கணக்குகள் நிரம்பி வழிந்தன. இரவும் பகலும் இதே வேலையாக இருந்ததால், ஏடுகளில் எழுதாமலேயே எண்களை ஒப்புவித்துக் கொண்டிருந்தனர்.  ஒரு படிக்கு அவரை 1,800, பயறு 14,800, அரிசி 38,000 இருக்கும் என எண்ணிக்கையை நினைவுகளின் பகுதியாக்கினர்.

குதிரைகளின் கட்டுத்தறிக் கணக்குகள் துல்லியமாகத் தயாராகின. ஆட்டுத்தோல் பிடிகொண்ட கசை எத்தனை தேவை என்பதில் தொடங்கி கண்பட்டி, கடிவாளம் வரை குதிரைக்குத் தேவையான பொருள்கள் எவ்வளவு, கொள், புல், தண்ணீர் வேளை தவறாமல் கொடுக்கவேண்டிய அளவுக்கான மொத்தக் கணக்குகளும் எழுதப்பட்டன. கட்டுத்தறியின் துர்நாற்றத்திலிருந்து நகரத்தைக் காப்பாற்ற கணக்குகளே அச்சாணிகளாக இருந்தன.

எண்ணற்ற விழாக்களையும் திருவிழாக்களையும் கண்ட மதுரை, இப்போது பெருவிழாவுக்குத் தயாராகியது. இன்னும் சிறிது நேரத்தில் மணமகள் வந்திறங்க இருக்கிறாள். அவரை வரவேற்க, நெடுங்கல்சாலை முழுவதும் பேரலங்காரம் பூண்டிருந்தது. எங்கும் அரச குலத்தினர் திரண்டிருந்தனர். வரப்போகும் மதுரையின் குலமகளுக்காக மாமன்னர் குலசேகரப் பாண்டியன் இன்று அதிகாலை வைகையில் நீராடி, பொன்னால் செய்யப்பட்ட தும்பைப்பூவை இருபது மாவீரர் களுக்குப் பரிசாக வழங்கினார்.

83p5.jpg

பொன்னரிமாலையும் நெற்றிப் பட்டமும் சூடிய பட்டத்துயானை முன்னே வந்தது. அதைத் தொடர்ந்து பொன்னால் செய்யப்பட்ட சேண மணிந்த குதிரைகளில் பொன்பூவைச் சூடிய மாவீரர்கள் இருபது பேர் அணிவகுத்து வந்தனர்.

அதற்கு அடுத்து, மின்னும் தலையணிகளும் சங்கு வளையல்களும் செந்நிற வடமும் இடையணியும் அணிந்த அழகுப் பதுமைகள் எண்மர் பொற்கிடுகு மேயப்பட்ட சிறு பல்லக்கைத் தூக்கி வந்தனர்.

பெண்கள் பல்லக்குத் தூக்கி வருவதை, மதுரை முதன்முறையாகக் கண்டது. நெடுங்கல்சாலையில் விலக முடியாத பெருங்கூட்டம் நின்றது. இளமருதனும் செவ்வியனும் கூட்ட நெரிசலில் திணறியபடி நின்றுகொண்டிருந்தனர். இந்த அரிய காட்சி என்றைக்குக் கிடைக்கும்? எவ்வளவு நெரிசல் இருந்தாலும் வந்து இறங்கும் இளவரசியாரைப் பார்க்காமல் போவதில்லை என்ற முடிவோடு இருவரும் நின்றிருந்தனர்.

நெடுங்கல்சாலையின் திருப்பத்தில்தான் அவர்கள் நின்றிருந்தனர். அங்கிருந்து பார்த்தால், தொலைவில் பல்லக்கில் வந்து இறங்கி அரண்மனையின் நெடும் படி ஏறி உள்ளே செல்வதைப் பார்க்க முடியும்.

பொன்னால் ஆன தும்பைப்பூ சூடிய வீரர்களின் அணிவகுப்பைத் தொடர்ந்து பெண்கள் எண்மர் தூக்கி வரும் சிறு பல்லக்கு முதலில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கப்போவது யார் என எல்லோரும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர். ஆனால், அந்தப் பல்லக்கிலிருந்து யாரும் இறங்கவில்லை.

முன்னால் இருப்பவன் அடைத்து நின்றதால், இளமருதனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. “யார் இறங்குவதென்று தெரியவில்லை. சற்றே விலகுங்கள்’' என்று கூறினான். அதற்கு அடைத்து நின்ற அந்த மனிதன் சொன்னான், “அந்தப் பல்லக்கில் இருந்து யாரும் இறங்க மாட்டார்கள்.”

செவியன் அவனை உற்றுப்பார்த்தான். தோற்றமே அவனொரு வணிகன் என்பதைச் சொல்லியது. சாத்துகளின் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதை, பிற அடையாளங்களைக்கொண்டு அறிந்தனர். அவன் பல செய்திகளையும் அறிந்திருப்பான் என உய்த்தறிந்த செவியன் கேட்டான்.

“அந்தப் பல்லக்கில் யாரும் வரவில்லையா?”

“அது பொற்கிடுகு வேய்ந்த பல்லக்கு. சாத்துகளின் விழாக்களில் அதற்குத்தான் முதல் இடம்.”

“அந்தப் பல்லக்கில் யார் இருப்பார்?”

“செல்வத்தின் இளவரசி இருப்பாள்.”

அவன் சொல்வது புரியாமல் இருவரும் முழித்தபோது அவன் மேலும் சொன்னான், “அது சக்கரவாகப் பறவையைக் கொண்டுவரும் பல்லக்கு.”

அந்தக் கணம் இளமருதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இப்பெரும்விழாவில் தலைமரியாதை கொடுத்துப் பொற்பல்லக்கில் எடுத்துவரும் பறவைக்காகச் செய்யப்பட்ட மேடையிலா நான் ஈச்சமரச் சட்டகங்களால் செய்யப்பட்ட தேவாங்கின் கூட்டை வைத்திருந்தேன். அந்துவன் கோபப்பட்டதன் நியாயம் இப்போது விளங்குகிறது’ என எண்ணிக்கொண்டிருக்கும்போதே செம்மணிகள் பதிக்கப்பட்ட மகரப்பல்லக்கு வருவது தொலைவில் தெரிந்தது. சூரிய ஒளி மின்னி மேலெழும் அழகு எல்லாவற்றையும் சொன்னது.

“எட்டு அண்ணகர்கள் தூக்கி வருகிறார்களே, அதுதான் இளவரசியாரின் பல்லக்கு” என்றான் அந்த வணிகன்.

‘அவன் சொல்லாமலே அதுதான் இளவரசியாரின் பல்லக்கு என்பது தெரிந்தது. ஆனால், தூக்கி வருபவர்களை அண்ணகர்கள் எனச் சொல்கிறானே!?’ என எண்ணியவாறே, அவர்கள் யாரெனக் கேட்டான் இளமருதன்.

“விதை எடுக்கப்பட்டவர்கள்” என்றான் வணிகன்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இசைக் கருவிகளின் முழக்கம் எங்கும் கேட்கத் தொடங்கியது. அரண்மனைப் பெண்கள் மங்கலக் குலவையிட்டனர். இளவரசியாரை வரவேற்க, பழையன்மாதேவி படி இறங்கி வந்தார். மலர்க்குவியலும் மஞ்சள் அரிசியும் பொன்வட்டில் எடுத்தபடி சேடிப்பெண்கள் உடன்வர, அவர் வந்து நிற்பதும் பொற்பல்லக்கு மாளிகை நெடும் படியின் எதிரில் வந்து நிற்பதும் ஒரேபொழுதில் நிகழ்ந்தன.

தொட்டியில் தண்ணீர் இறங்குவதைப்போல பல்லக்கை சிறு அசைவுகூட இன்றிக் கீழிறக்கினர் அண்ணகர்கள். தங்களின் கால் பார்த்தபடியே வணங்கி பின் நகர்ந்து நின்றனர்.

இசைக்கருவிகளின் ஓசை எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மாடங்களிலிருந்து பூக்கள் சொரியப்பட்டுக்கொண்டிருந்தன. பல்லக்கிலிருந்து இறங்கும் இளவரசியைப் பார்க்க, கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இளமருதன் எக்கி, வணிகனின் தோள்பட்டையைத் தாண்ட முயன்றான்.

மகரப்பல்லக்கின் செம்மணிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லி, அவற்றின் நிறப்பெருமையையும் அவை எடுக்கப்பட்ட நிலங்களின் தன்மையையும் அவை தாங்கி வந்துள்ள இளவரசியாரின் சிறப்பையும் இணைத்து இணைத்துச் சொல்லி மகிழ்ந்தான் வணிகன். அவளுடைய வார்த்தைகளில் வணிகர்குலம் பெருமிதம் பொங்கியது. எல்லோரின் கண்களும் இறக்கப்பட்ட பல்லக்கையே பார்த்துக்கொண்டிருந்தன. மேளதாளங்களின் ஓசையாலும் தூவப்படும் வண்ணமலர்களாலும் நெடுங்கல்சாலை திணறியது.

பழையன்மாதேவி வந்து நின்றபின்னும், பல்லக்கிலிருந்து யாரும் இறங்கவில்லை. பெருகும் உற்சாகத்துக்கு நடுவே, மிகச்சிலரின் கண்கள் தாமதமாகும் அந்தக் காலத்தைக் கணித்துக் கொண்டிருந்தன.

பல்லக்கின் உள்ளே இருந்தவள் யோசித்துக் கொண்டே இருந்தாள். ‘இந்தத் தயக்கம் எனது வாழ்வின் எல்லா உண்மைகளையும் சொல்லும்.’ கண் மூடி அந்தக் கணத்தைக் கடந்தாள். நெஞ்சின் அழுத்தத்தை மூச்சுக்காற்று வெளியேற்றியது. மூடிய கண்களைத் திறந்தாள். இடக்கை விரல்களால் செம்பட்டுத் திரைச்சீலையை மெள்ள விலக்கினாள். மதுரையின் மண் அவள் கண்களில்பட்டது. சற்றுநேரம் மண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தவள், காலடியை மதுரையில் வைத்தாள்.

கூட்டத்தின் ஆரவாரமும் இசை முழக்கமும் வாழ்த்துச்சொல்லும் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இளமருதன் நின்ற இடத்திலிருந்து நெரிபடும் கூட்டத்துக்குள் தலைதூக்கிப் பார்த்தான். தூவப்படும் மலர்களுக்கு இடையில் கண்கொள்ளாப் பேரழகு நகர்ந்துகொண்டிருந்தது. இளமஞ்சள் வெயிலில் கண நேரத்தில் மறைந்த அவளது வடிவு கண்டு அவனை அறியாமலேயே, “உலகின் பேரழகி” என்று வாய் முணுமுணுத்தது.

முன்னால் நின்றிருந்த வணிகனின் காதில் அந்த முணுமுணுப்பு கேட்டது. அவன் சற்றே திரும்பிச் சொன்னான், “அந்த அழகையும் விஞ்சும் பேரறிவுகொண்டவள் பொற்சுவை.”

இளமருதனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வணிகனைப் பார்த்தான். அவன் மேலும் சொன்னான், “பெரும்புலவர் கபிலரிடம் கல்வி பயின்றவள் அல்லவா?”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நவீனன்..... விறுவிறுப்பாகப் போகின்றது தொடர்.....! tw_blush:

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 25

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

யது பழுத்த முதுகிழவர். தோளிலே விழுந்து புரளும் நரைமுடி. பற்கள் உதிர்ந்துவிட்டன. ஆனாலும் கண்பார்வை மட்டும் அப்படியே. அதுவும் இரவாகிவிட்டால் கண்களின் ஒளி மெருகேறிவிடும்போல. அரண்மனைத் தாழ்வாரத்தின் வழியே தளர்ந்து நடந்துவரும் திசைவேழரைச் சுற்றி தலைமை மாணாக்கர்கள் நால்வர் வந்தனர். நேற்று இரவே அரண்மனைக்கு வந்து சேர்ந்த அவர், நண்பகலில்தான் புது மாளிகையில் வரையப்பட்ட காலக்கணக்கைப் பார்க்க வருகிறார்.

அவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அந்துவன். அரண்மனையின் தலைமைக் கணியன் அவன்தான். ஆனாலும் ஆசான் வருகை உள்ளுக்குள் சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியபடி இருந்தது. அந்துவனுக்குப் பக்கத்தில்  அவன் உதவியாளர்கள் நின்றிருந்தனர்.

ஆணை மணி ஓசையெழுப்பியபடி பணியாளன் முன்நடந்து வந்தான். அரண்மனையின் பேரதிகாரம் பெற்றவர்கள் வரும்போது, அவர்களுக்கு முன் இந்த ஓசை எழுப்பப்படும். திசைவேழர், கோலூன்றி நடந்து வந்தார். அரண்மனைக்கு அவர் வந்து எட்டு ஆண்டுகள் ஆயிற்று. சென்றமுறை அவர் வந்தபோது அவரோடு கபிலரும் வந்திருந்தார். இருவரும் இருமாத காலம் இங்கு தங்கியிருந்தனர். விண்ணையும் மண்ணையும் பற்றி இரவு பகலாகப் பேசிக் களித்தனர். ஒரு வைகறைப்பொழுதில் வைகையின் நிலை மண்டபத்தில் அமர்ந்த கபிலர், அந்த முழு நாளும் எழுந்து வராமல் எழுதிக்கொண்டே இருந்தார். அத்தனையும் திசைவேழரின் பேரறிவைப் போற்றிப் பாடிய பாடல்கள்.

p83a.jpg

அந்த நாள்களின் எண்ணங்கள் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. பட்டியக்கல்லைப் பார்த்தபடியே ஊன்றுகோலை எடுத்துவைத்து நடந்தார். கார்கால மாளிகையின் வாயிலில் நின்ற அந்துவன் வணங்கி வரவேற்றான். சொற்கேட்டு  தலை ஆட்டினார். முகம் பார்க்கவில்லை. மாளிகையின் நடுவில், சின்ன அடையாளம் ஒன்றை வைத்திருந்தனர். நேராக அந்த இடம் வந்து நின்றார். நெஞ்சுக்கு நேராக ஊன்றுகோலை ஊன்றி இரு கைகளாலும் இறுகப்பிடித்தார். தலையை முன்சாய்த்து கண்கள் மூடியவர், சிறிய கால இடைவெளியில் தலையை அப்படியே பின்னால் சாய்த்தார். படுத்துக் கிடப்பவனைப்போல முகம் கிடைமட்டத்திலிருந்து  மேற்கூரையைப் பார்த்தது. கண்களைத் திறந்தார். கருவிழிகள் காலத்துக்குள் நுழைந்தன. பொதியவெற்பன் பிறந்தபோது இருந்த நாள்மீன்களும் கோள்மீன்களும் அவரின்  நினைவுக்கு வந்தன.  மேற்கூரையில் உள்ளொடுங்கிய விண்மீன்களுக்குள் கண்கள் செருகின.

உடலையோ கழுத்தையோ சுற்றாமல் கருவிழிகளைச் சுழற்றி மேற்கூரையின் முழுவட்டத்தையும் பார்த்து முடித்தார். தலை முன்வணங்கி கோல் நோக்கிக் கவிழ்ந்தது. என்ன சொல்லப்போகிறார் என்பதறிய அந்துவன் ஆவலோடு இருந்தான்.

அமைதியான அந்த மாளிகையில் மெள்ள ஒலித்தது திசைவேழரின் குரல். “பொதியவெற்பன் பிறந்தநாள் என்ன?”

அந்துவனுக்கு விடை உடனே நினைவுக்கு வரவில்லை. சற்றே நிதானித்துச் சொன்னான், “வளர்பிறையின் எட்டாம் நாள்.”

“எந்தப்பொழுதில் பிறப்பு நிகழ்ந்தது?”

“அதிகாலையில்.”

“நீ செய்திருக்கும் பிழை என்ன?”

விளக்கம் அளிக்கும் வாய்ப்பு எதுவும் இந்த வினாவில் இல்லை. அடுத்த பிழையைத் தவிர்க்க மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்துவன் அதிர்ச்சிக்குள்ளானான். கண்களை அகலத் திறந்து மேற்கூரையைப் பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை.

“வளர்பிறை நாள்களில் கதிரவன் எழுவதற்கு முன்பே நிலவு மறைந்துவிடும். கதிரவனும் நிலவும் இல்லா புலர் காலைப்பொழுதில்தான் பொதியவெற்பன் பிறந்தான். ஆனால், நீ வானத்தின் மேற்கு விளிம்பில் எட்டாம் நாள் நிலவை வரைந்து வைத்திருக்கிறாய். இதன் பொருள் என்ன தெரியுமா?”

உறைந்துபோய் நின்ற அந்துவனுக்கு, விடை சொல்ல நா எழவில்லை.

``ஓவியம் குறிப்பது, வளர்பிறையின் எட்டாம் நாள் அல்ல.”

அந்துவனுக்கு வியர்த்துக்கொட்டியது.

“மற்றவற்றில் தவறுகளின் அளவைப் பொறுத்து பாதிப்பின் தன்மை இருக்கும். ஆனால், காலக்கணக்கில் அப்படி அன்று. பெரியதோ, சிறியதோ பிசகு பிசகுதான். கணப்பொழுதில் எல்லாம் குலைந்துவிடும்.”
சொல்லியபடியே வேனிற்காலப் பள்ளியறையை நோக்கி நடந்தார். அது மேல்மாடத்தில் இருக்கிறது. ஏறிச்செல்ல தன் மாணவர்களைத்தான் அனுப்புவார் என்று நினைத்திருந்தான் அந்துவன். ஆனால், திசைவேழரின் கால்கள் படியேறிக் கொண்டிருந்தன.

லைமை அமைச்சர் முசுகுந்தரின் முன் யானைப்பாகன் நிறுத்தப்பட்டிருந்தான். “பாண்டியநாட்டின் பெருவிழா நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தச் சிக்கல் தொடர்பாக விசாரிக்கத் தாங்கள் வரவேண்டுமா?” என்று முசுகுந்தரிடம் அரசாங்கத்தின் களஞ்சியத் தலைவர் வெள்ளிகொண்டார் கேட்டார்.

“இப்படி ஒரு கோர நிகழ்வு நடந்துள்ளது என்பது நம்மினும் மேலுள்ளவர்களுக்குத் தெரியாது. ஆனால், கீழ்நிலை வீரர்கள் காதோடு காதாக இதைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். இப்போதே இதுகுறித்து விசாரித்து தண்டனை வழங்கினால், அந்த வீரர்களின் காதுகளில் தானாகப் போய்ச்சேரும். விழாக்காலத்தில் ஒழுங்கை உறுதிப்படுத்துவது முக்கியம். அதற்குத் தேவையான அச்ச உணர்வை ஊட்ட இது நல்ல வாய்ப்பு. அதை ஏன் தவறவிட வேண்டும்?”

நிர்வாகத்தை நடத்திச்செல்லும் மூதறிவாளர் முசுகுந்தர் என்பது அவரது ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுவதாக எண்ணி மகிழ்ந்தார் வெள்ளிகொண்டார்.

தனித்திருந்த அந்த மாளிகைக்கு இருவரும் வந்தபோது, கோட்டைத்தளபதி சாகலைவனும் யானைக் கட்டுத்தறியின் பொறுப்பாளன் அல்லங்கீரனும் அங்கு இருந்தனர். விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட மற்ற நான்கு வீரர்களும் பாகனுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தனர்.

பாகனின்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை, தளபதி சாகலைவன் தடித்த குரலில் கூறினான் “யானையைவிட்டுப் பாகனும், கப்பலைவிட்டு மீகானும் (மாலுமி) தப்பிக்க அனுமதியில்லை. இது பாண்டியநாட்டின் விதி. அதை நீ மீறியிருக்கிறாய்.”

p83b.jpg

“நான் என்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தப்பவில்லை. அதைக் காப்பாற்றவே முயன்றேன்.”

“மதம்கொண்ட யானையை எப்படிக் காப்பாற்ற முடியும்?”

“அதற்கு மதம் பிடிக்கவில்லை.”

“தளபதி மாரையனை அது ஏன் கொன்றது?”

“என்னை ஏன் அது கொல்லவில்லை?”

எதிர்க்கேள்வி, எரிச்சலை உண்டுபண்ணியது. கேள்விக்குள் இருக்கும் உண்மை, பதற்றத்தைக் கூட்டியது.

“அரை இருட்டுக்குள்ளிருந்து குதிரை பாய்ந்து கண்ணெதிரே வந்தால், எந்த விலங்குதான் அச்சங்கொள்ளாது? அச்சத்தால்தான் அது அடித்தது. மதத்தால் அல்ல.”

“உனது விளக்கம், தளபதியின் மரணத்தை நியாயப்படுத்தப் போதுமானதாக இல்லை. அதுவும் இந்தப் பெருவிழா நடந்து கொண்டிருக்கும்போது. ஒருவேளை யானை நெடுந்தெருவுக்குள் நுழைந்திருந்தால் இழப்பு என்ன ஆகியிருக்கும்?” 

“என் உத்தரவுகளை அது ஏற்கவில்லையே தவிர, அதற்கு மதம் பிடிக்கவில்லை. அதனால்தான் அது கட்டுத்தறியை நோக்கிப் போனது. மூன்று திருப்பங்களிலும் சரியாகத் திரும்பி நடந்தது. மேற்குவாசல் தளபதி சட்டென எதிரில் வந்துவிட்டார். இருட்டில் அவரின் வருகையை நானே பார்க்கவில்லை. அது வேகம் கொள்ளாமல்தான் அடித்தது. பின்னங்காலில் மிதிபட்டதால் அவர் செத்தார். அது நிற்காமல்... ஆனால், சரியான திசைநோக்கிப் போனதால்தான் குத்துக்கோலைக் (அங்குசத்தை) காதோரம் செருகிவிட்டு இறங்கினேன். அதை எளிதில் பிடித்திருக்க முடியும். ஆனால், அவசரத்தில் எல்லாம் தவறுதலாக நடந்துவிட்டன.”

“நீ நடந்துகொண்டதுதான் தவறு. அதை ஏற்காமல் எல்லாவற்றின் மீதும் பழிசுமத்தாதே.”

பாகனின் எதிர்க்கூற்றைக் கேட்டுக் கொண்டிருந்த முசுகுந்தர் சொன்னார், “பாண்டிய நாட்டின் பெருவிழா நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் மற்றவர்களுக்குத் தெரியாமல்  விசாரித்துக்கொண்டிருக்கிறோம். விசாரணையைக்கூடக் குற்றத்தின் பகுதியாக நீ மாற்றிவிட்டாய். நீ இழைத்த குற்றம் அன்றோடு நிற்கவில்லை. இன்றும் தொடர்கிறது.”

முசுகுந்தரின் சொல்லால் அதிர்ச்சியடைந்த அல்லங்கீரன், இனியும் பேசாமல் இருப்பது முறையல்ல என்று முடிவுசெய்தார்.

வேனிற்கால மாளிகைக்குள் நுழைந்தார் திசைவேழர். சுற்றுச்சுவர் முழுக்க செடிகொடிகளால் ஆன வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. பச்சைநிறப் பரப்பாய் மதில்கள் காட்சி தந்தன. மாளிகையின் நடுவே போன திசைவேழர் வழக்கம்போல் கோலை ஊன்றி தலையை மேலேற்றி அண்ணாந்து பார்த்தார்.

சிறுபுலி கண்போல் அறுவை (சித்திரை) இருமீன் மேற்கூரையின் உச்சியில் இருந்தது. அதன் இடப்புறம் மூன்றாம்பிறை நிலவு இருந்தது. அதற்கு நேர் கீழே செவ்வாயும், அதற்கு எதிரே காரியும் (சனி) இருந்தன. அண்ணாந்த திசைவேழரின் தலை சற்றே கூடுதல் நேரம் எடுத்தது. அதேபோல அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த அந்துவனுக்குப் பிடரி பிடிப்பதைப்போல இருந்தது.

தலை இறக்காமலே  கேள்வி வந்தது. “செவ்வாய்க்கோளுக்குப் பூசியுள்ள செந்நிறத்துக்கான வண்ணத்தை எதிலிருந்து எடுத்தாய்?”

“வெடவேலம் பட்டையிலிருந்து எடுத்தேன்.”

“அதுதான் இளஞ்சிவப்பாக இருக்கிறது. செவ்வாய் அடர்சிவப்பு நிறம் அல்லவா? அதனால்தானே இந்த அழகிய பெயரை நம் முன்னோர்கள் சூட்டினர். நுணாமரக் கட்டையிலிருந்து சாறு எடுத்துப் பூசு. அதுதான் அடர்சிவப்பைத் தரும்.”

‘சரி’யென்று வேகமாகத் தலையாட்டினான் அந்துவன்.

``விண்மீன்கள் அனைத்தும் இமைக்கும் ஒளி உடையவை. அவற்றுக்குக் கோள்மீன்களைப்போல வெறும்வண்ணம் பூசாதே. சிப்பியைத் தட்டியோ, சுக்கான் துகளைக் கலந்தோ பூசு. அப்போதுதான் இமைக்கும் தன்மை கிடைக்கும்.''

‘சரி’யென்று மீண்டும் தலையசைத்தான். `நல்லவேளை பெரிய தவறு எதுவும் இதில் இல்லை' என்று மனம் சற்று நிம்மதியடைந்தது.

திசைவேழர் திரும்பி நடக்கத் தொடங்கினார். எதிரே இருந்த சுவர் ஓவியத்தின் கீழ்ப்புறம் அவர் கண்ணில்பட்டது. நடக்கத் தொடங்கிய கால்கள் நின்றன. மற்றவர்களும் நின்றனர். எல்லோரின் கண்களும் எதிர் சுவரைப் பார்த்தன. வேனிற்கால மாளிகையாதலால் செடிகொடிகள் பின்னிக்கிடக்கும் பச்சை வண்ணக் காட்சி வரையப்பட்டிருந்தது.

எதைப் பார்த்து நிற்கிறார் என்பது மற்றவர்களுக்குப் புரியவில்லை. சற்றே உற்றுப்பார்த்தார். பின்னிக்கிடக்கும் கொடிகளுக்குக் கீழே தரையோடு இருக்கும் ஒரு செடியில் பூ வரையப்பட்டிருந்தது. ஊன்றுகோலை நோக்கிக் காட்டி “இது என்ன பூ?” என்று கேட்டார்.

என்ன  விடை சொன்னாலும் அது தவறாகத்தான் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், அது தவறாக வரையப்பட்டதால்தான் இந்தக் கேள்வியே பிறந்திருக்கிறது என்று எல்லோரும் நம்பினர்.  விடையேதும் வரவில்லை.

“யாருக்குமே இது என்ன பூ என்று தெரியவில்லையா?” என, சற்றே குரல் உயர்த்திக் கேட்டார்.

ஈட்டிபோல் புற இதழ்களையும், விசிறிபோல் அக இதழ்களையும் உடைய பொன்மஞ்சள் வண்ணம் கொண்ட அந்தப் பூவை உற்றுப்பார்த்து ஒரு மாணவன் சொன்னான், “நெருஞ்சிப் பூ.”

அந்துவனும் அதைத்தான் நினைத்தான். ஆனால், தவறு ஏதும் வந்துவிடக் கூடாது என்பதால் சொல்லவில்லை.

p83c.jpg

“நெருஞ்சிப் பூவுக்கு இன்னொரு பெயர் ஞாயிறுதிரும்பி. கதிரவன் எழுவதிலிருந்து மறைவது வரை அதைப் பார்த்தபடி திரும்பக்கூடிய விந்தையான மலர். அதனால் இதைக் கதிரவன் மேல் காமம்கொண்ட மலர் என்று சொல்வார்கள்” என்றார் திசைவேழர். எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால், புதிதாகக் கேட்பதைப்போலக் கேட்டனர். விடையின்றித் தலை தாழ்த்தி நிற்கும் மாணவனே ஆசானின் அகங்காரத்துக்குச் சுவையூட்டுகிறான். 

“பள்ளியறையில் நெருஞ்சிப் பூ வரைதல் மிகப்பொருத்தம்” என்று பாராட்டினார் திசைவேழர்.

தங்கள் ஆசானுக்குப் பாராட்டக்கூடத் தெரியும் என்று பல மாணவர்கள் அன்றுதான் அறிந்தார்கள். `இவர் பாராட்டுவார் எனத் தெரிந்திருந்தால், நாமே சொல்லியிருக்கலாமே!' என்று அந்துவனுக்குத் தோன்றியது.

அடுத்த கணம் கேட்டார், “இதில் இருக்கும் பிழை என்னவென்று சொல்லுங்கள்?”

வழக்கம்போல் அனைவரும் திகைத்தனர். பூவின் இதழ்களையும் அதன் வடிவத்தையும் உற்றுப்பார்த்தான் அந்துவன். `எல்லாம் சரியாகத்தானே இருக்கின்றன. இதில் என்ன பிழை கண்டார்?' எனச்  சிந்தித்தான்.

யாருக்கும் எதுவும் பிடிபடவில்லை.

அவரே சொன்னார். “நெருஞ்சிப் பூ எத்திசை நோக்கி இருக்கிறது?”

“நேராக மேல்வானத்தை நோக்கி இருக்கிறது.”

“அப்படியென்றால் நண்பகல் என்று பொருள். மாளிகையின் மேற்கூரையில் பின்னிரவு விண்மீன்கள் மின்னுகின்றன. மாளிகையின் சுவரில் பகல் வெயில் சுடுகிறது. என்ன வானியல் இது?”

மாணவர்கள் உறைந்துபோனார்கள். அவர் யாரையும் பார்க்காமல் ஊன்றுகோலை நகர்த்தியபடி முன் நடந்தார்.

ருகாலமும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கா பெருங்கிழவன் அல்லங்கீரன். அவன் பேச ஆரம்பித்ததும் விசாரணையின் சூழலே மாறியது.

“வந்திருக்கும் மண்ணீட்டாளர்கள் அவசரமாக அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மாரையன் உணர்ந்திருந்தான். ஆனால், கோட்டைக் கதவை அவனால் திறந்துவிட முடியவில்லை. எல்லா அதிகாரங்களையும் காமக்கிழத்தின் படுக்கை அறைக்குள் வைத்துக்கொண்டு நீ இருந்தாய். அதுதான் சிக்கலுக்குக் காரணமே.”

அல்லங்கீரனின் குற்றச்சாட்டு சாகலைவனின் முகத்துக்கு நேர் எகிறியது.

“அவனுக்குக் கதவைத் திறக்கும் அதிகாரம் இருந்திருந்தால், இரவு நிலையுணவு கொடுப்பதற்கு முன்பே கட்டுத்தறிக்குச் செய்தி சொல்லி யிருப்பான். யானையும் கதவைத் திறந்து விட்டிருக்கும். எந்தச் சிக்கலும் ஏற்பட்டிருக்காது.”

“ஒரு மரணத்தை வைத்து நிலைநிறுத்தப்பட்ட அதிகாரத்தைக் கேள்வி கேட்காதீர்கள்” என்றார் வெள்ளிகொண்டார்.

p83e.jpg

“மாரையன் கதவைத் திறக்க அவ்வளவு முயன்றபோதும், சாகலைவன் காமக்கிழத்தியின் கட்டிலைவிட்டு அகலாமல் இருந்ததுதான் அதிகாரத்தின் கோரவடிவம். நான் அதைத்தான் கேள்வி கேட்கிறேன்.”

“எல்லாவற்றையும் அறிந்துதான் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை கேள்விக்கு உட்படுத்தும் அதிகாரம் யாருக்கும் வழங்கப் படவில்லை” என்றார் வெள்ளிகொண்டார்.

“அறிவாலும் குணத்தாலும் எடுக்கவேண்டிய முடிவை, விதிகளாலும் கட்டளைகளாலும் எடுக்க முடியாது. மனிதன் எடுக்கவேண்டிய முடிவைச்  சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம்.”

அவ்வளவு நேரமும் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த முசுகுந்தர், சற்றே ஆவேசத்தோடு தலையிட்டார், “கட்டளைகளால் கட்டியெழுப்பப்படுவதுதான் அரசாட்சி. அதன்  உறுப்புகள்  அனைத்தும் உத்தரவுகளால் மட்டுமே இயங்க வேண்டும். முடிவெடுக்கும் அதிகாரத்தை இழப்பதன் மூலமே எல்லோருக்குமான சிறந்த முடிவு கிடைக்கிறது. எல்லோர் கைகளிலும் அதிகாரம் இருந்தால் எல்லாம் அழியும்.”

“மனிதனைவிட உயர்ந்த இடத்தை விதிகளுக்கு எப்படித் தர முடியும்?” என்று சொன்ன அல்லங்கீரன் சற்றே மூச்சுவாங்கிவிட்டுச் சொன்னார் “உங்களைப்போல உயரத்தில் இருக்கும் மனிதர்களுக்கு அதுதான் வசதியாக இருக்கிறது. ஏனென்றால், உங்களின் கையில்தான் சட்டவிதிகள் இருக்கின்றன. அவற்றுக்குத்தான் கண், காது என எதுவும் இல்லையே. கையில் எடுப்பவனுக்குத் தகுந்த கையுறைகள்தானே சட்டவிதிகள்.”

`கிழவனை இன்னும் பேசவிடக் கூடாது' என முசுகுந்தனுக்குத் தோன்றியது.

“இந்த மாநகரம் சட்டவிதிகளால் பதப்படுத்தப் பட்டது. அதன் பக்குவத்தைக் குலைக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது.”

``முளைத்தது விளையும்... விளைந்தது கனியும். அதற்கு எதிராக எதுவொன்றையும் பக்குவப் படுத்தி விளையவைக்கவும் முடியாது; பதப்படுத்தி கனியவைக்கவும் முடியாது. அதுதான் இயற்கை.”

“இயற்கையை ஆள்வதற்காகத்தான் வெல்ல முயல்கிறோம். வெல்வதற்காகத்தான் அழிக்க முயல்கிறோம். அந்த அழிவுதான் அரசாட்சியின் சாட்சி” குரல் கணீரென எதிரொலிக்க, இருக்கையிலிருந்து எழுந்தார் முசுகுந்தர்.

அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்பது அல்லங்கீரனுக்கு நன்கு தெரியும். அதனால் சற்றே முந்திக்கொண்டு சொன்னார், “மதமற்ற யானையை நான் கொன்றேன். மேல் தூக்காத அதன் வாலைக் கவனிக்காது பெரும் தவறிழைத்தவன் நான்தான். எனக்கான தண்டனையையும் சேர்த்துச் சொல்லிவிடுங்கள்.”

“நீதான் விதிகளின்படி முடிவைச் சிறப்பாக நிறைவேற்றியவன். தனித்து வந்த யானையை கண நேரத்தில் வீழ்த்தினாய். மணநாளில் மாமன்னர் சிறந்தோருக்கு வழங்கவிருக்கும் பொற்றாமரைப் பூவை உனக்கும் வழங்க ஏற்பாடு செய்கிறேன்.” 

“தவறுகளைச் ‘சிறப்பு’ என்று நீங்கள் பாராட்டுவதன் காரணம், சிறப்பானவற்றைத் தவறானதாக மாற்றிவைத்திருக்கும் உங்களின் அதிகாரம்தான்.”

திசைவேழர் பாண்டரங்கத்துக்குள் நுழைந்தார். மாணவர்கள் பின்தொடர்ந்தனர். இதுவரை பார்த்த இரு பள்ளியறையை இணைத்தாலும் இதன் அகலம் வராது. பார்வையின் எல்லை மேற்கூரையைத் தொடும்போது மனம் விரிந்து அடங்கும். ஆனால், ஆசானுக்கு அப்படி இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும்.

உள்ளே நுழைந்ததும் அனைவரின் முகத்திலும் ஏற்பட்ட வியப்பு அளவு கடந்ததாக இருந்தது. ஆனால், அந்துவனின் முகம் எதையும் காட்டிக்கொள்ளாமல் மிக அமைதியாக இருந்தது. ‘இவ்வளவு பெரிய மேற்கூரையில் எல்லாமே மிக நுணுக்கமாக வரையப்பட்டுள்ளன. வானியல் வரையப்பட்டதில் மிகப்பெரிய மேற்கூரை இதுதான். இதைச் சரியாக வரையத்தான் மாதக்கணக்கில் பணி செய்தேன். இதைப் பார்த்து ஆசிரியன் சொல்லப்போகும் அந்தப் பாராட்டுச் சொல் போதும் வாழ்வுக்கு’ என்று காத்திருந்தான் அந்துவன்.

திசைவேழர் மண்டபத்தின் நடுவில் கோல் பிடித்து நின்று, மெள்ள தலையைத் தூக்கினார். அவர் கண்விழித்துப் பார்க்கும் அந்த முதற்கணம் அவர் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியைப் பார்க்க ஆவலோடு இருந்தான் அந்துவன். அவர் தலையைப் பின்புறம் கவிழ்ந்து கண்விழிக்கப்போகும் நிலையில் அந்துவனுக்குச் சட்டென நினைவுக்கு வந்தது தேவாங்கு இருக்கும் மரக்கூண்டு. ‘இளமருதன் இங்குதானே வைத்திருந்தான்.

எடுத்துவிட்டானா அல்லது இன்னும் இங்குதான் இருக்கின்றனவா?’ என்று சுற்றியிருக்கும் மேடைகளைப் பார்த்தான். அவன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு பாதி மேடைகள்தான் தெரிந்தன. பெருந்தூண்கள், மேடைகளை மறைத்து நின்றன. இரண்டு அடிகள் முன்னும் பின்னுமாகப் போய், கண்களை ஓடவிட்டான். இடப்புறம் இறுதித்தூணுக்குப் பின்புறம் ஒரு மரக்கூண்டு இருப்பதன் சிறு பகுதி தெரிந்தது.

கூண்டுக்குள் இருக்கும் அந்த விலங்கைப் பார்த்தால், ஆசான் என்ன சொல்வாரோ என்று எண்ணிய கணத்தில்தான் அவர், வரையப்பட்ட  மேற்கூரையை நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது. சட்டென அவரை நோக்கித் திரும்பினான். அவர்  மேற்கூரையைப் பார்த்து முடித்துவிட்டு தலையை முன்சாய்த்தார்.

‘அவரின் முகக்குறிப்பைப் பார்க்க முடியவில்லையே, என்ன சொல்லப்போகிறாரோ!' என்று பதற்றம் கூடியது. அவர் குறித்துக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. குதிரையின் தலைபோல் இருக்கும் ஆறு புரவிகளும் (அசுவினி) இடப்புறம் இருந்தன.  குமிழ்போல் மூன்று புள்ளிகளாக இருக்கும் அடுப்பு (பரணி) அதன் நேர்மேலே இருந்தது. பொற்கால் கட்டில்போல் இருக்கும் கணை (பூரம்) சற்றே கீழிறங்கி இருந்தது. ஒவ்வொரு விண்மீன் கூட்டமும் நினைவுக்கு வந்தது. மனக்கண்ணில் எல்லாவற்றையும் நினைத்து மீண்டும் மேலே பார்த்தான் எல்லாம் சரியாகத்தான் வரையப்பட்டிருந்தன. ஆனால், ஆசான் இன்னும் வாய் திறக்கவில்லை.

அமைதி எல்லோரையும் பீடித்தது. மெல்லிய செருமல் வந்தது. என்ன சொல்லப்போகிறார் என்ற ஆர்வத்தோடு இருந்தனர்.

“இந்த வானியல் அமைப்பு எதைக் குறிக்கிறது?”

குரல் இறுக்கமாக இருந்ததை ஒருசிலர் மட்டும் உணர்ந்தனர்.  வினாவுக்கான  விடை யாரிடமும் இல்லை. மற்றவர்கள் அந்துவனையே பார்த்தார்கள். தயங்கியபடி அந்துவன் சொன்னான்  “பேரரசரின் பிறந்தநாள் அமைப்பு இதுவன்று. பேரரசியாரின் பிறந்தநாள் அமைப்பும் இதுவன்று. வேறு யாருடையது என்று என்னால் உய்த்தறிய முடியவில்லை ஆசானே.”

“மனிதனுக்குரிய நாளை நினைவுபடுத்துவது மட்டுமா வானியலின் வேலை? அது இயற்கையின் காலமானி அல்லவா?”

அவரின் சொல், புதிய திறப்பை உருவாக்கியது. வியப்போடு தலைநிமிர்ந்து மேலே பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை.

ஆசானின் குரல் கணீரென ஒலித்தது. “இது மேற்கு மலையில் பெருமழை பெய்து வைகையில் வெள்ளம் பெருகும் கோள்நிலை. பாண்டரங்கத்தில் ஆடலும் பாடலும் செழிக்க, பாண்டியநாட்டில் உழவும் வணிகமும் தழைக்க இந்தக் கோள்நிலையே அடிப்படை. இது பிறந்த காலத்தைக் குறிப்பதன்று, இந்தப் பேரரசின் சிறந்த காலத்தைக் குறிப்பது.”

வாயடைத்துப்போனார்கள் அனைவரும். வானியல் பேராசானின் அறிவுகண்டு மெய்ம்மறந்து நின்றபோது, அவரின் குரல் அதைவிட கனத்து ஒலித்தது,  “இதில் நீ செய்த பிழை என்ன தெரியுமா?”

அடித்தொண்டையிலிருந்து வந்தது கேள்வி. அந்துவனின் உடல் உதறியது. அவன் நிமிர்ந்து பார்த்தான். மேற்கூரையைக் கண்கள் சுற்றின, தலையும் சுற்றியது.

ஆசானின் குரல் வெளிவந்தது. “வெள்ளி வெறும் கோளன்று... மழைக்கான கோள். ஆனால், அது தெற்கே விலகி இருப்பது மழையின்மைக்கு அறிகுறி. நீ எங்கே வரைந்து வைத்திருக்கிறாய் பார்.”

அந்துவன் திரும்பி மேற்கூரையைப் பார்த்தான். வெள்ளி தெற்கே விலகி இருந்ததைப் பார்த்த கணத்தில் உச்சந்தலையைத் தாக்கியது ஆசானின் ஊன்றுகோல். துவண்டு விழுந்தான் அந்துவன்.

“பாண்டரங்கத்தைப் பாழுமரங்காக்கப் பார்த்தாயா?”

குரல் கேட்டு நடுங்கினான் அந்துவன். “மன்னியுங்கள் ஆசானே, என்னை மன்னியுங்கள். உடனடியாகச் சரிப்படுத்துகிறேன். பொறுத்தருளுங்கள்.”

அந்துவனைவிட அதிக நடுக்கம் இருந்தது ஆசானின் கைகளில்தான். “காலத்தைக் கணித்தல் எளிதன்று; கணநேரத்தில் எல்லாம் மாறிவிடும்.

நீ என் தலைமாணவன் என்பதால்தான் உன்னை அரண்மனைக்கு அனுப்பினேன்.”

அந்துவன் பாய்ந்துவந்து காலைப் பிடித்தான். அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்பதை அவனால் உய்த்தறிய முடிந்தது. “ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஆசானே, மறுபடியும் பொருத்தமாக வரைந்து காட்டுகிறேன்.”

அந்துவனின் கதறல் ஓசை கேட்டுக்கொண்டே இருக்க, திசைவேழர் பாண்டரங்கத்தைவிட்டு வெளியேறினார்.

கோட்டையின் வெளிப்புறம் இருக்கும் காட்டரண் அது. அங்குதான் யானைகளுக்கான வட்டரங்கு இருக்கிறது. முசுகுந்தரின் தீர்ப்பை நிறைவேற்ற எல்லோரும் வந்திருந்தனர்.

முதலில் பாகன் அரங்குக்குள் அனுப்பப் பட்டான். இன்னும் சிறிது நேரத்தில் யானை உள்ளே நுழையும்.

சுழல் அரங்கில் யானையிடம் தப்பி பாகன் ஓடவேண்டும். அவன் ஓடித் தப்பித்தால் குற்ற மற்றவன். மிதிபட்டுச் செத்தால் பாவமற்றவன். இதுதான் போட்டியின் விதி.

போட்டி தொடங்க இன்னும் நேரமிருந்தது. அதேசமயம், முடிவு எல்லோருக்கும் தெரிந்தேயிருந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வீரயுக நாயகன் வேள்பாரி - 26

 
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

பாண்டரங்கத்தின் மேற்கூரையில் புதிதாக ஓவியம் வரையும் பணி தொடங்கியிருந்தது. ஆசான் சொன்ன பிழையை மட்டும் திருத்தலாம் என்று ஓவியர்கள் சொன்னார்கள். ஆனால், அந்துவன் அதை ஏற்கவில்லை. “தெற்கே விலகியிருக்கும் வெள்ளியைப் பொருத்தமான இடத்தில் வரையலாம். ஆனால், உறுதியாக அது நிற வேறுபாட்டை வெளிப்படுத்தும். ஏற்கெனவே, வரையப்பட்ட ஓவியத்தின் வண்ணத்திலிருந்து புதிதாக வரையப்பட்ட பகுதி வேறுபட்டே தெரியும். இன்னொரு முறை ஆசானின் கோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை. எனவே, மேற்கூரையில் வரையப்பட்ட முழு ஓவியத்தையும் கருநீல வண்ணம் பூசி மறைக்கச் சொன்னான்.

அதன் மீது நாள்மீன்களையும் கோள்மீன்களையும் புதிதாக வரைந்துவிடலாம் எனச் சொல்லிவிட்டான். ஓவியர்கள், அந்துவன் சொன்னபடி பணியைத் தொடங்கினர்.

p89a.jpg

செவியன் மூலம் செய்தியைக் கேள்விப்பட்ட இளமருதன், சற்றே நடுங்கிப்போய் இருந்தான். ஆசான் வரும்போது தேவாங்கின் கூட்டை எடுத்து வேறு அறையில் வைத்துவிட வேண்டும் என்று அன்றே அந்துவன் சொல்லியிருந்தான். ஆனால், கடைசி நேரத்தில் எல்லோருக்கும் அது மறந்துவிட்டது. `பிரச்னைக்கு ஏதோ ஒருவகையில் தானும் காரணமாகிவிட்டோமோ!' என்று அஞ்சியபடி தேவாங்கின் கூட்டை வேறு இடம் மாற்றிவிடலாம் என முடிவுசெய்தான் இளமருதன். ஓவியர்கள் எல்லோரும் உணவருந்தப் போன நேரம் பார்த்து பாண்டரங்கத்துக்குள் நுழைந்தான்.

இடப்புறம் கடைசித் தூணுக்குப் பின்னால் இருந்த கூண்டை நோக்கிப் போனான். யாரோ ஒருவன் அதன் அருகில் உட்கார்ந்திருந்தான். அருகில் போன பிறகுதான் அவன் அந்துவன் என்பது தெரிந்தது.

“தவறிழைத்துவிட்டேன் மன்னியுங்கள்” என்றான் இளமருதன்.

“நீ ஏன் மன்னிப்புக்கோருகிறாய்? நீயா வெள்ளியைத் தென்புறம் நகர்த்தியது?” என்று கேட்டான் அந்துவன்.

இளமருதனுக்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியவில்லை.

சற்று அமைதியாக இருந்துவிட்டு, “நான் இந்தக் கூண்டை இங்கிருந்து எடுத்துக்கொண்டு போய்விடுகிறேன்” என்று சொல்லி, தேவாங்கின் கூண்டை எடுக்க முற்பட்டான்.

“வேண்டாம்'' என்று தடுத்த அந்துவன் சொன்னான், “மேற்கூரையில் ஓவியப்பணி முழுமையாக முடியும் வரை நான் இந்த அரங்கத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை. இந்த அரங்கத்துக்குள்தான் நாள்கணக்கில் இருக்கப்போகிறேன். எவ்வளவு நேரம்தான் அண்ணாந்து மேற்கூரையையே பார்த்துக்கொண்டிருக்க முடியும்? அவ்வப்போது குனிந்து கூண்டுக்குள் இவற்றின் விளையாட்டைப் பார்த்து மகிழ்வதுதான் என் ஒரே பொழுதுபோக்கு. எனவே, நான் இங்கு இருக்கும் வரை இவையும் இருக்கட்டும். பணிகள் முடிந்ததும் சொல்கிறேன். அதன் பிறகு, நீ வந்து எடுத்துச் செல்” என்று சொல்லி இளமருதனை அனுப்பிவைத்தான்.

p89.jpgஇளமருதனால் மறுப்புச் சொல்ல முடியவில்லை. ‘சரி’ எனத் தலையாட்டியபடி வெளியேறினான்.

அந்துவன் இலந்தைப்பழங்களை உள்ளே உருட்டிவிட்டபடி கூண்டையே பார்த்துக்கொண்டிருந்தான். தேவாங்குகள் இரண்டும் தலையை மெள்ள நீட்டி பழத்தை நோக்கி வந்தன.

அரண்மனையின் வளாகத்தில் மிகப் பழைமையான மாளிகை ஒன்று உண்டு. அதன் பெயர் `பாசிலை அரங்கு'. பச்சைநிற மணிக்கற்கள் பதிக்கப்பட்ட அரங்கு. எந்த ஒரு நற்செயலையும் பாண்டியர்குடி அங்குதான் தொடங்கும். இந்தத் திருமணத்தின் முதல் நிகழ்வும் அங்குதான் தொடங்கவிருந்தது.

அரச குடும்பத்தினர் மட்டுமே இந்தக் கூடுகையில் பங்கெடுத்தனர். வேறு எவருக்கும் அனுமதியில்லை. குடும்பத்தினர் அல்லாத ஒரே ஒருவர் திசைவேழர் மட்டுமே. காலம் குறித்த அச்சம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கத்தானே செய்கிறது. காலத்தை அறிந்தவனுக்கு அதிகாரத்தின் எல்லா கதவுகளும் திறக்கத்தானே செய்கின்றன.

அரச குடும்பத்துப் பெண்களும் ஆண்களும் பேரலங்காரத்துடன் அரங்கை நிறைத்திருந்தனர். வணிகக் குடும்பத்தினரின் அணிகலன்கள் மேலேறி மின்னிக்கொண்டிருந்தன. ஒருவரைப் பார்த்து ஒருவர் வியப்புற்றபோது, மாமன்னர் குலசேகர பாண்டியனும் சூல்கடல் முதுவனும் இணைந்து அரங்குக்குள் நுழைந்தனர்.

இருவருக்கும் வயது ஐம்பதைக் கடந்திருக்கும். நெடு உயரமும் உடல் வலிமையும் தோளில் புரளும் வெண்முடியும் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்தாலும், முக அமைப்பு இருவேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெளிவாகச் சொன்னது. ஆழ்கடலின் உப்பங்காற்று காலம் முழுவதும் படிந்ததன் அடையாளத்தோடு இருந்தது சூல்கடல் முதுவனின் முகம். இளம்வயதில் செங்கணூர் முற்றுகையின்போது வெட்டப்பட்ட கீழ் உதட்டின் தழும்புகள் இன்று வரை மறையவில்லை குலசேகர பாண்டியனுக்கு. இருவரும் முழுநிலை அலங்காரத்துடன் அரங்கினுள் நுழைந்தனர். மனம் குவிந்து, உடல் விழுந்து, வணங்கி எழுந்தனர் அனைவரும். சமமான உயரத்தில் இருவிதமான அடையாளங் களுடனான இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.

மணமகன் பொதியவெற்பன் வந்து, தந்தையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். எல்லோரும் மணமகளுக்காகக் காத்திருந்தனர். சூல்கடல் முதுவனின் கண்களில் ஒரு செருக்கு மேலேறியது. உள்நுழையும் தன் மகளின் பேரழகு கணநேரத்தில் இந்த அவையைச் சுழற்றிவிடும் என்பது அவருக்குத் தெரியும். அவள் வரும் திசையைப் பார்த்திருந்தனர்.

தோழிகள் சூழ, பொற்சுவை உள்நுழைந்தாள். ஒன்பதுவிதமான மணிகளை வரிசையாகப் பொருத்தி, ஒற்றைக்கொடிபோல உச்சந் தலையிலிருந்து முன்சரிந்திருந்தது தலைப்பாளை. நீலநிறக் கச்சை அணிந்திருந்ததால், இப்படி ஒரு வண்ணத்தில் மெல்லிய துணியை இதுவரை யாரும் கண்டதில்லை. காலடியில், ஒளி பட்டு மின்னும் பொற்சலங்கையிலிருந்து கசியும் வண்ணம்போல் இருந்தது செவ்வண்ணப்பூச்சு. கண்டவர் கருவிழிகள் நகர முடியாமல் நின்றன. பொற்சுவை மட்டும் நகர்ந்து கொண்டிருந்தாள். அவள் சற்றே தலை தாழ்த்தித்தான் நடந்து வந்தாள். அலங்காரங்களைக் கடந்து அவளது ஆழ்மனதைப் பார்க்கக்கூடியவர் எவரும் இல்லை அந்த அவையில்.

p89b.jpg

தந்தையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் அதிக ஆபரணங்கள் அணியவில்லை. ஆனால், அணிந்திருந்த எந்த ஒன்றையும் இதற்கு முன் எவரும் பார்த்ததில்லை. பாண்டியன்மாதேவியின் தோழிகள் பேசிக்கொண்டார்கள், “பெரும்வணிகன் மகள். ஆனால், அவள் கழுத்தில் ஒற்றை அணி மாலையே அணிந்திருக்கிறாள். அதிலும் ஒற்றை முத்து மட்டுமே இருக்கிறதே ஏன்?”

``இடம்புரி சங்கு ஆயிரம் சூழ்ந்தது வலம்புரி சங்கு. வலம்புரி சங்கு, ஆயிரத்தில் ஒன்றுதான் வளைநிலை வடிவில் இருக்கும். அதுகொண்டுதான் அணிசெய்ய முடியுமாம். அந்தச் சிறப்புகொண்ட வலம்புரி சங்கு, இதுவரை இரண்டு மட்டும்தான் எடுக்கப்பட்டுள்ளனவாம். அதில் ஒன்று, யவன அரசியாரின் தலைமுடியில் இருக்கிறதாம். இன்னொன்று, பொற்சுவையின் கழுத்தில் இருக்கிறதாம்” அவளின் மறுமொழி காதோடுக் காதாகச் சுற்றிவந்தது. அதன் பிறகு, அரங்கு பேச்சற்றுப்போனது.

பாண்டியர்குல முதியவள், மின்னும் வெண்தட்டை எடுத்துவந்து பேரரசனிடம் கொடுத்தாள். அதில் மஞ்சள்கிழங்கு வட்டவடிவில் இருந்தது. நடுவில் வெற்றிலை வைக்கப்பட்டிருந்தது. குலசேகரபாண்டியன் அதைச் சூல்கடல் முதுவனிடம் வழங்கினான். அதைப் பெற்றுக்கொண்ட சூல்கடல் முதுவன், தங்களின் வழக்கப்படி பொன்நிறத் தட்டை வழங்கினான். அதிலும் மஞ்சள் சூழ நடுவில் வெற்றிலை இருந்தது. முன்னோர் மரபுப்படி இருவரும் வெற்றிலை மாற்றி மணமுடி வாக்களித்தனர். முறைப்படி மணவிழா இந்தக் கணத்திலிருந்து தொடங்குகிறது. இரண்டு மாதங்களில் ஆறு நிகழ்வுகளாக அது நிகழும். நிறைவாக, மணமாலை சூடலுடன் விழா நிறைவுறும்.

வீசிய ஈட்டி, கருங்கல்லில் பட்டுத் தெறித்தது. உதிரன் விடுவதாக இல்லை. பேரெலி, பாறை இடுக்குகளுக்குள் விரைந்து பதுங்கியது. கண்ணில் படாத வரைதான் அது தப்பித்து வாழும். கண்ணில் பட்டுவிட்டால், அது எந்தப் பாறைக்குள் நுழைந்து எவ்வளவு ஆழம் போனாலும் தப்ப முடியாது. அது உள்நுழைந்த கருங்கல்லை வீரர்கள் நால்வர் சேர்ந்து புரட்டிக்கொண்டிருந்தனர். அது தப்பி வெளியேறினால் குத்தித் தூக்க, உதிரனும் மற்றொரு வீரனும் தயாராக இருந்தனர்.
பாறைக்குச் சற்று மேலே இருந்தபடி பாரியும் கபிலரும் இதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். வீரர்கள் கரும்பாறையைப் புரட்டிக் கீழே தள்ளினர். உள்ளே எலியும் இல்லை; எந்தத் துளையும் இல்லை.  `அதற்குள் எங்கே போனது?' என அனைவரும் உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். ‘எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையில் அது எப்படித் தப்பிப் போயிருக்க முடியும்?’ என்று எண்ணிக்கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராமல் வேறொரு திசையிலிருந்து குத்தித் தூக்கினான் உதிரன்.

அதன் கீச்சொலியோடு எல்லோரின் உற்சாக ஒலியும் கலந்தது. இந்தச் செயலைக் கண்டு தன்னையும் அறியாமல் சீழ்க்கை அடித்தான் பாரி.

பிடிபட்ட பேரெலியைச் சிறு கூடையில் போட்டுக்கொண்டு அடுத்த பாறையை நோக்கி நகர்ந்தனர். வழக்கம்போல் வீரர்கள் முன்னால் போக, பாரியும் கபிலரும் பின்னால் வந்துகொண்டிருந்தனர்.

பாறைகளுக்கு இடையில் இருக்கும் செடி கொடிகளைக் கிண்டியபடி வீரர்கள் நகர்ந்து கொண்டிருந்தனர். உதிரனின் கவனம் சற்றே சிதறத் தொடங்கியது. பாரியின் கண்கள் தன்னை ஊடுருவுவதை அவன் இரண்டு, மூன்று முறை கவனித்துவிட்டான். ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. பாரி உடன் வருவது கபிலருக்காக என்றுதான் உதிரனும் முதலில் நினைத்தான். ஆனால், இந்த இரண்டு நாள்களும் பாரியை உற்றுக்கவனித்ததிலிருந்து அவனுக்குச் சந்தேகம் வர ஆரம்பித்தது.

தனது திறனையும் திட்டமிடலையும் ஆராய்வதற் காகத்தான் இது நடந்துகொண்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது. நீலனுக்குப் பிறகு, கபிலருடன் இருக்கும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நான் அதற்குத் தகுதியானவன்தானா என்று கவனித்துக்கொண்டிருக்கிறாரா?

பாரியைப் பற்றி எண்ணற்றக் கதைகளைச் சிறு வயது முதல் கேள்விப்பட்டுள்ளான் உதிரன். `பாரியின் அறிவுநுட்பம் யாருக்கும் வாய்க்காது!' எனச் சொல்வார்கள். மற்ற வீரர்கள் எல்லோரும் பேரெலி வேட்டையைத் தான் பாரி பார்த்து க்கொண்டிருக்கிறான் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாரியின் கவனம் வேறொன்றாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று உதிரனுக்குத் தோன்றியது.

உதிரன் துல்லியமாகக் குத்தித் தூக்கியதை வியந்து பாராட்டியபடி வந்துகொண்டிருந்தார் கபிலர். பாரி மறுமொழி சொல்லாமல் நடந்து வந்தான்.

“அப்போது சீழ்க்கை அடித்துவிட்டு, இப்போது எதுவும் சொல்லாமல் வருகிறாய்?” எனக் கேட்டார் கபிலர்.

“நான் சீழ்க்கை அடித்தது உதிரனுக்காக அல்ல, பேரெலிக்காக.”

“என்ன சொல்கிறாய்?”

“தடித்த உடலைக்கொண்டதால் பேரெலியால் வேகமாக ஓடவோ, சிற்றிடுக்கு களுக்குள் நுழையவோ முடியாது. அப்படியிருந்தும் எத்தனையோ விலங்கு களிடமிருந்து அது தப்பி உயிர் வாழ்கிறது என்றால், அதன் தந்திரம்தான் காரணம். சமவெளியில் இருக்கும் நரியின் தந்திரத்தைவிட, மலைமுகட்டில் இருக்கும் பேரெலியின் தந்திரம் வியக்கக்கூடியது.”

“அப்படியென்ன அங்கே நிகழ்ந்தது? நீ எதைக் கண்டு சீழ்க்கை அடித்தாய்?”

“பாறையில் இருந்து வெளியேறி வந்த எலியும், உதிரன் குத்தித் தூக்கிய எலியும் வெவ்வேறு எலிகள். உள்ளிருந்து வந்தது வலப்புறம் ஓடிய வேகத்தில், அந்தச் சிறு புதருக்குள் இருந்த இன்னொன்று எதிர்பாராமல் வெளியேறியது. அதைத்தான் உதிரன் குத்தித் தூக்கினான். அவனது காலடியின் அருகில்தான், வெளியேறி வந்த எலி பதுங்கி இருந்தது.”

“நீ ஏன் அதைத் தெரிவிக்கவில்லை?”

“அது எனக்குத் தப்பித்தலைக் கற்றுக்கொடுக்கிறது. நான் எப்படி அதைக் காட்டிக்கொடுப்பேன்?”

எதிர்பாராத மறுமொழியாக மட்டுமல்ல, வேட்டையின் ஒழுங்குக்கு எதிரான மறுமொழியாகவும் இருப்பதாக, கபிலருக்குத் தோன்றியது.

“வேட்டைக்குப் பொருள் என்ன பாரி?”

“தாக்குதலும் தப்பித்தலும். நீங்கள் எந்தப் பக்கம் இருந்தும் இந்த விளையாட்டைப் பார்க்கலாம்.”

“நீ எந்தப் பக்கம் இருந்து இதைப் பார்த்தாய்?”

“வேட்டையை நான் எப்போதும் தப்பிச் செல்லும் விலங்கின் பக்கம் இருந்துதான் பார்ப்பேன். இந்த வேட்டையில் உதிரனின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கிறது. எனவே, நான் எந்தப் பக்கமும் சாராமல் இருக்கிறேன்.”

“ஏன் அப்படி?”

“உதிரனின் செய்கை அப்படி. அவன் வேண்டுமென்றே தப்பிக்க முடியாத பேரெலியாகப் பார்த்து வேட்டையாடுகிறான். அந்த எலிகொண்டு உங்களுக்கு ஆடை நெய்ய எண்ணுகிறான்.”

பாரி சொல்வதன் விளக்கம், கபிலருக்குப் புரியவில்லை.

“தப்பிக்க முடியாத பேரெலியைக்கொண்டு மட்டும் ஆடை நெய்வதன் பொருள் என்ன?”

“புரியவில்லையா? என்றென்றும் உங்களைப் பறம்பு நாட்டிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.”

சொல்லிவிட்டு, பாரி நடந்துகொண்டிருந்தான். கபிலர் அப்படியே நின்றுவிட்டார்.

ஒரு கணம் கழித்துக் கேட்டார், “நீங்கள் இருவரும் என்னைத்தான் வேட்டையாடிக்கொண்டிருக்கிறீர்களா?”

“நிச்சயம் இல்லை” என்று சொன்ன பாரி, சற்றே இடைவெளிவிட்டுச் சொன்னான் “பிடிபட்ட பிறகு எவராவது வேட்டையாடுவார்களா?”

பதில் கேட்டு அடங்காச் சிரிப்பை வெளிப்படுத்திய கபிலர் சொன்னார், “கூடு என்பது, பறவைக்கான தங்கும் இடம். வானம்தான் வாழ்விடம்.”

“உண்மைதான், ஒருநாள் உங்களின் வானமே நாங்களாக விரிந்திருப்போம்.”

பாரியின்  தோழமை  எல்லை கடந்து விரிந்துகொண்டிருந்தது. மலையின் கீழ்த்திசையில் ஊசிப்புகை மேலெழுந்து கொண்டிருந்தது. வேட்டையாடிக்கொண்டிருந்தவர்கள் பாறையின் இடப்புறம் இருந்ததால், அதைப் பார்க்கவில்லை. பாறையின் மேலே பாரி நின்றதால், அதைப் பார்த்தான்.

அந்தத் திசை நோக்கி அப்படியே நின்றான். அதைக் கவனித்தபடி கபிலரும் நின்றார். மிகத்தொலைவில் கீழ்க்காட்டின் நடுவில் இருந்து ஊசிபோல் மெல்லியப் புகை மேல் நோக்கி போய்க்கொண்டிருந்தது. காற்று வீசவில்லை என்பதால், புகை கலையாமல் உச்சிக்குப் போனது.

உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த பாரியைப் பார்த்துக் கபிலர் கேட்டார், “என்ன அது? காட்டின் ஊடேயிருந்து புகை வரக் காரணம் என்ன?”

“அங்குள்ளவருக்கு உதவி தேவைப்படுகிறது” என்று சொல்லிவிட்டு, இடப்புறம் திரும்பிப் பார்த்தான். பாறையின் இடப்புறம் பேரெலி வேட்டையில் உதிரன் குழு மிகவும் கவனமாக இருந்தது. பாறை மறைத்திருந்ததால் எழும் ஊசிப்புகையை அவர்கள் பார்க்கவில்லை.

p89c.jpg

“காட்டுக்குள் இருக்கும் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், படர்ந்து கிடக்கும் சென்றிக்கொடியைப் பறித்துத் தீக்கற்களால் தீ மூட்டுவார்கள். அந்தக் கொடியில் தீப்பற்றி எரியாது; புகை மட்டுமே வரும். அவ்வாறு கசியும் புகை, கீழே படராது; அறுந்துவிடாமல் மேலெழும்பிக்கொண்டே இருக்கும். எங்கிருந்து பார்த்தாலும் உச்சிநோக்கி விடாமல் மேலெழும் ஊசிப்புகையைப் பார்த்துவிட முடியும். உடனே அவருக்கு உதவி செய்ய மக்கள் போய்விடுவார்கள்” என்றான் பாரி.

“அப்படியென்றால், அவர்களுக்கு உதவி செய்ய வீரர்களை அனுப்பாமலிருப்பது ஏன்?”

“தொலைவைக் கணக்கிட்டால், நாம் இருக்கும் இடத்தைவிட குறைவான தொலைவில் தென்திசையில் ஊர் ஒன்று உண்டு. அங்கிருந்து மக்கள் புறப்பட்டுப் போயிருப்பார்கள். இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.”
“எப்படி?'' எனக் கேட்டார் கபிலர்.

“அதோ பாருங்கள்” என அந்தத் திசையைச் சுட்டிக்காட்டினான் பாரி.

ஏற்கெனவே மேலெழுந்த ஊசிப்புகையின் அருகே இன்னோர் ஊசிப்புகை மேலெழுந்து கொண்டிருந்தது.

“மற்றொரு புகை மேலெழுந்தால், உதவிக்கு ஆள்கள் போய்விட்டார்கள். வேறு யாரும் வரவேண்டியதில்லை என்று பொருள்” என்றான் பாரி.

பாறைகளைச் சூழ்ந்தபடி பேரெலியை விரட்டிக்கொண்டு இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர் வீரர்கள். இன்று நான்கு பேரெலியையாவது பிடித்துவிட வேண்டும் என்று உதிரன் மிகத்தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
“காட்டுக்குள் பிறவற்றிலிருந்து தப்பித்தலைப் போல, பிறருக்குத் தன்னைக் காட்டிக்கொள்வதும் சம முக்கியத்துவம் உள்ள கலைதான். ஒவ்வோர் உயிரினமும் இந்த இரண்டு வித்தைகளையும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன” என்று பேசியபடி வீரர்களை நோக்கி பாரியும் கபிலரும் வந்துகொண்டிருந்தனர்.

பெரும்புதருக்குள்ளும் கரும்பாறை இடுக்குகளுக்குள்ளும் வீரர்கள் விடாமல் தேடினர். கண்களில் ஒன்றும் அகப்படவில்லை. உச்சிப்பொழுது கடந்துகொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரம்தான் வேட்டைக்குக் கிடைக்கும். அதன் பிறகு, இடுக்குகளில் மறைந்து வாழும் உயிரினங்களைக் கண்டறிவது இயலாத காரியம்.

கபிலர் நடப்பதற்கு ஏற்ப வழிகளைத் தேர்வுசெய்து அவரை அழைத்து வந்து கொண்டிருந்தான் பாரி. வீரர்கள் பாறை இடுக்குகளைக் கிளறிக்கொண்டிருக்க, உதிரன் மட்டும் தனியாகக் கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். சற்று தொலைவில் இருந்தே அதைக் கவனித்தான் பாரி. உதிரன் போய்க்கொண்டிருந்த திசையில் தனித்த மரம் ஒன்று இருந்தது. அதை நோக்கித்தான் அவன் போகிறான் என்பது தெரிந்தது.

தொலைவில் இருந்து பார்க்கையில் அது என்ன மரம் என்பது யாருக்கும் பிடிபடவில்லை. போய்க்கொண்டிருந்த உதிரன், மரத்தின் அருகில் போகாமல் சற்று தொலைவிலேயே நின்றுவிட்டான்.

அனைவரும் அவனை நோக்கி இறங்கி வந்தனர். பாரியின் கண்கள் அவற்றைக் கண்டறிந்தன. கபிலரிடம், “நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள்” என்று பாறை ஒன்றின் மேல் உட்காரவைத்துவிட்டு அந்த இடம் போனான்.

p89d.jpg

தொலைவிலேயே கபிலரை உட்கார வைத்துவிட்டு தனித்து வரும் பாரியைப் பார்த்த உதிரன், இது என்ன மரம் என்பதை அங்கிருந்தே பாரியின் கண்கள் கண்டறிந்துவிட்டன என்று தெரிந்துகொண்டான்.

உதிரன் இருக்கும் இடத்துக்கு எல்லோரும் வந்து சேர்ந்தனர். தனித்திருக்கும் அந்த மரத்தின் அடிவாரத்தில் அங்குமிங்குமாக வண்டுகள் செத்துக்கிடந்தன. எறும்புகளோ கறையான்களோ அவற்றை உண்ணவில்லை. அங்கு வந்து நின்ற எல்லோரின் கண்களும் கீழே கிடப்பனவற்றை உன்னிப்பாகப் பார்த்தன.

அது வண்டுகடி மரம். அந்த மரத்தின் இலைகளுக்குள் வண்டு பறந்தாலோ, கிளைகளின் மீது உட்கார்ந்தாலோ சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்துவிடும். அதன் பிறகு, மயக்கம் தெளியாமலேயே இறந்துவிடும். இறந்ததை மொய்ப்பதற்குக்கூட எதுவும் அருகில் வராது. காட்டின் மிக அரிதான மரங்களில் வண்டுகடி மரமும் ஒன்று.

காட்டுக்குப் பழக்கப்படாத புதியவர்களின் மீது இதன் வாசனை பட்டாலே உடலெல்லாம் வீங்கிவிடும். மூக்கில் ஏற்படும் எரிச்சல் தாங்க முடியாது. அதனால்தான் கபிலரைத் தொலைவிலேயே உட்காரவைத்துவிட்டு வந்தான் பாரி. கபிலர் வந்ததிலிருந்து, ‘வண்டுகடி மரம் கண்ணில் படாதா?’ என்று பலமுறை எண்ணியுள்ளான். ஏனென்றால், வண்டுகடி மரத்தின் பட்டையை அறைத்துத் தேய்த்தால், காட்டுப்பூச்சிகள் எவையும் அண்டாது.

பறம்பிலேயே பிறந்து வாழ்பவர்களுக்கு இது தேவையில்லை. ஆனால், வெளியிலிருந்து வருபவர்களுக்கு, அதுவும் குறிப்பாக மழைக் காலத்தில் வந்து தங்குபவர்களுக்குப் பெரும்பாதுகாப்புக் கவசத்தை இதுவே அளிக்கும்.

அந்த மரப்பட்டையை உரிப்பது கடினமான பணி. அருகில் போய்ப் பிய்த்து எடுக்கவெல்லாம் முடியாது. அதன் வாசனை எந்த நேரமும் மயக்கத்தை உருவாக்கும். என்ன செய்யலாம் எனச் சிந்தித்தனர். உதிரன்தான் தனது ஈட்டியை மரத்தின் அடிவாரத்தை நோக்கி வீசி எறிந்தான். அது மரத்தின் தூர்ப் பகுதியின் விளிம்பில் குத்தி நின்றது. படுவேகமாக ஓடி, அதனருகே போன வேகத்தில் ஈட்டியின் முனையோடு பெரும் பட்டையைப் பிய்த்து எடுத்து எதிர்புறம் வெளியேறினான். முதன்முறையாக அவனது வேகம் பாரியைப் பொருள்படுத்திப் பார்க்கவைத்தது.

அன்றைய வேட்டையை அத்துடன் முடித்துப் புறப்பட்டனர். இன்று சிக்கியதென்னவோ ஒரு பேரெலிதான். ஆனால், பாரி அளவற்ற மகிழ்வில் இருந்தான்.

“என்னை ஏன் தனியே உட்காரவைத்துவிட்டுப் போனீர்கள்?” என்று கபிலர் கேட்டதற்கு, பாரி பதில் சொன்னான்.

அளவற்ற மகிழ்வோடு இருந்தது பாரியின் பதில்.

“பறம்பில் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு பொழுதும் என் மனம் பதற்றத்தில்தான் இருந்தது. அதுவும் கார்காலம் தொடங்கிய பிறகு, என் பதற்றம் அளவற்றதாகிவிட்டது.

எண்ணற்றப் பூச்சிகள், உயிரினங்கள் வாழும் இந்தக் காட்டில் கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகூட பெரும் நஞ்சை உட்செலுத்திவிடும். அதன் பிறகு, நஞ்சுமுறி கொடுக்கும் வரை உங்களின் உடல் அதைத் தாங்குமா என்பது தெரியாது. எனவே, என் பதற்றம் அதிகமாகிக் கொண்டேதான் இருந்தது. வண்டுகடி மரப்பட்டையை அறைத்து உடலெங்கும் தேய்த்து விட்டால், பிறகு எந்த ஒரு பூச்சியும் உங்களை அண்டாது. அதனால்தான் இந்த மரம் கண்ணில் படாதா என்று காத்திருந்தேன். உதிரன் கண்டறிந்து விட்டான்” எனச் சொல்லி, மகிழ்வோடு கபிலரை அழைத்துவந்தான் பாரி.

“நான் பறம்புக்கு வந்து இத்தனை நாள்களாகி விட்டன. இன்னும் என்னை ஆயத்தப்படுத்தும் வேலை முடியவில்லை போலும்?”

சிரித்துக்கொண்டே பாரி சொன்னான், “வந்து செல்பவர்களுக்கு இவ்வளவு தேவையில்லை. வந்தவர்களுக்கு மட்டும்தான் இவ்வளவும் தேவை.”

p89e.jpg

மறுமொழிக்குள்ளிருக்கும் சூட்சுமம் கபிலருக்குப் புரிந்தது.

“வேட்டை இன்னும் முடியவில்லையா?” என்று கேட்ட கபிலர், “இந்த வேட்டையில் நீ எந்தப் பக்கமும் சாராமல் இருப்பதாகச் சொன்னாய். ஆனால், உன் மகிழ்வு வேட்டை யாடுபவனின் மனநிலையை நீ சார்ந்துவிட்டதைச் சொல்கிறது.”
“ஆம், அளவற்ற மகிழ்வின் மூலம் என்னை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன். அதன் மூலமே என் எண்ணத்தை வெளிப்படுத்தி விடுகிறேன் அல்லவா?”

பாரியின் ஒவ்வொரு சொல்லும் செயலும் கபிலரின் மீதான பேரன்பைக் கொட்டித்தீர்த்தன.

இருவரும் சிறிது நேரம் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், ஆழ்மன உரையாடல் நின்றபாடில்லை. மனதை இந்த எண்ணங்களிலிருந்து வேறொன்றுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கபிலருக்குத் தோன்றியது. அமைதியைக் கலைத்து பாரியிடம் கேட்டார், “அன்றொரு நாள் உன் முப்பாட்டன் ஒருவன் திரையர் பெண்ணை மணந்தான் என்று கூறினாய். அதைப் பற்றி பின்னர் பேசுவோம் என்றாயே, யார் அந்தத் திரையர்கள்?”

கபிலரின் கேள்வி, பாரிக்கு வியப்பை ஏற்படுத்தியது.

“நீங்கள் திரையர்களை அறிந்ததில்லையா?”

“இல்லை.”

“அவர்கள் குலம்தானே வெற்றிலையை முதன் முதலாகக் கண்டறிந்தது. இந்த மலைத்தொடரின் மாவீரர்கள் என்றால், அது அவர்கள்தானே!”

வெண்ணிறத் தட்டையும் பொன்னிறத் தட்டையும் மாற்றிக்கொண்ட குலசேகர பாண்டியனும் சூல்கடல் முதுவனும் மாற்றப்பட்ட தட்டுகளில் இருந்த வெற்றிலையை எடுத்து மெல்லத் தொடங்கினர். வெற்றிலையை மென்ற இருவர் நாவிலும் அதன் சாறு ஊறிப் பரவியது.

வெற்றிலையைக் கண்டறிந்த மாவீரர்களான திரையர்களின் கதை, பாரியின் நாவெங்கும் பொங்கி வெளிவந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 27

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

 

p83b.jpg

“எட்டு முதல் பதினைந்து வயதுடைய பறம்பின் ஆண்மக்கள் அனைவரும் ‘காடறிய’ப் புறப்படுகின்றனர். மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கும் பயணம் அது. பயணத்தில் வழிகாட்டி அழைத்துச் செல்பவனே தேக்கன். ‘தேக்கன்’ என்பது பெயர் அன்று, காடு அறிந்த ஆசானை அழைக்கும் பட்டம். அவனை நம்பியே பிள்ளைகள் அனுப்பப்படுகின்றனர்.  

‘சாமப்பூ’ ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது. ஒவ்வொரு முறை அது பூக்கும்போதும் எட்டு வயதைக் கடந்த அனைத்து ஆண் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, காட்டுக்குள் நுழைவான் தேக்கன். பயிற்சி முடிந்து திரும்பிய  பின், அடுத்த முறை சாமப்பூ பூக்கும் வரை தேக்கன் ஊரில் இருப்பான். மறுமுறை பூ பூத்த பின் மீண்டும் புறப்படுவான். 

p83a.jpg

பறம்பின் ஒவ்வோர் ஆணும் காடு பற்றிய எல்லா விதமான அறிவுகளையும் பெற்று, காட்டின் சவால்களை எதிர்கொள்ளும்  ஆற்றல் உடையவனாக மாறுவதுதான் காடு அறிதல். வெறுங்கையுடன் காட்டுக்குள் நுழையும் சிறுவர்கள்  பெரும் வனத்துக்குள் தன்னந்தனியாக முழுவாழ்வையும் வாழக் கற்றுக்கொள்கின்றனர்.

இந்தப் பயிற்சி எண்ணற்ற ஆபத்துகளை உடையது.   சிறுவர்கள் சிலர் இதில் இறக்கின்றனர். சிலருக்குக் கை கால்கள் சிதைகின்றன. சிலர் காட்டுக்குள் தொலைந்துவிடுகின்றனர்.  அவர்களுள் பலர் வீடு திரும்புவதே இல்லை. ஆண்டுகள் பல கழிந்த பின்னர், சிலர் வீடு திரும்பியுள்ளனர்.

காடு அறிய அழைத்துச்செல்லப்படும் சிறுவர்கள் கடும் சவால்களைத் தொடர்ந்து  எதிர்கொள்ள நேரும். இயற்கை ஒவ்வொரு கணமும் சவால்களை உருவாக்கியபடியேதான் இருக்கும்; ஆனால், அவை எல்லாம் தேக்கனின் கணக்குக்குள் வராது. ஒவ்வொரு நாளும் தேக்கன் உருவாக்கும் சவால்கள் தனி ரகம். அவற்றை மாணவர்கள்  எதிர்கொண்டு மீடேற வேண்டும். இவ்வாறு முன்பொரு முறை தேக்கன் அழைத்துச்சென்ற குழுவில் என் முன்னோன் சூலிவேளும் இடம்பெற்றிருந்தான்” என்றான் பாரி.

அவன் சொல்லும் கதையை மிகவும் கவனத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.

“அது கார்காலம். மழை விடாது கொட்டித் தீர்த்தது. தேக்கனும் மாணவர்களும் சிறு குகை ஒன்றில் ஒண்டியபடி இருந்தனர். நாள் முழுவதும் மழை நின்றபாடில்லை. மாணவர்களுக்குக் கடும் பசி. ஆனால், தேக்கன் உணவுக்கான உத்தரவைக் கொடுக்கவில்லை. அவர் உத்தரவு கொடுத்த பின்தான் நெருப்பை மூட்டி கைவசம் இருக்கும் கிழங்குகளைச் சுட்டுச் சாப்பிட வேண்டும். மழையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான் தேக்கன். பொறுத்துப் பார்த்த மாணவர்கள் ஒருகட்டத்தில் பொறுமை இழந்து வாய்விட்டுக் கேட்டனர். 

p83c.jpg

``சரி, சுட்டுச் சாப்பிடுங்கள்” என்றான் தேக்கன். மாணவர்கள் மகிழ்ந்தனர்.  முந்தைய நாள் காலை உணவுக்குப் பின் யாரையும் சிறுபழம்கூடச் சாப்பிட அனுமதிக்கவில்லை. இப்போது அனுமதி கொடுத்தவுடன் வேலைகளை வேகமாகத் தொடங்கினர். குகைக்குள் இருந்த இடுக்கில் இரண்டு கட்டைகள் கிடந்தன. அவற்றைப் பயன்படுத்தி கிழங்கைச் சுட்டுவிடலாம் என்று முடிவுசெய்தனர்.

குகைக்கு வெளியே மழை கொட்டியது. கைவசம் இருக்கும் தீக்கல்லை வைத்து மாணவன் ஒருவன் தீ மூட்ட முனைந்தபோது தேக்கன் குகையை விட்டு வெளியேறினான்.

மழையில் நனைந்தபடி தேக்கன் வெளியேறியதன் காரணத்தை அறியாமல் மாணவர்கள் விழித்தனர். “அவர் நனைந்தபடி வெளியில் நின்று கொண்டிருக்கிறார். நாம் சாப்பிடப்போவது அவருக்குப் பிடிக்கவில்லையா? அவரிடம் கேட்டுத்தானே நாம் அனல் மூட்ட முயல்கிறோம்” என்று புலம்பியபடி இருந்தனர். பசி அதிகமாகிக்கொண்டே இருந்தது. ‘சாப்பிட்ட பின் என்னவென்று கேட்டுக்கொள்வோம்’ என நினைத்த ஒருவன், அனல் மூட்ட முயன்றான். அப்போது சூலிவேள் அவனைத் தடுத்தான்.

‘மாணவர்களில் மிகத் திறன்வாய்ந்தவன்’ என தேக்கன் கருதுவது சூலிவேளைத்தான். “அவரிடமே காரணம் கேட்போம்” என்றான் சூலிவேள்.
 
“சரி” என்றார்கள் மாணவர்கள்.

“நாங்கள் நெருப்பு மூட்டும்போது நீங்கள் ஏன் வெளியில் சென்றீர்கள்?” எனச் சத்தமாகக் கேட்டான் சூலிவேள்.

“உங்களை எப்போது சாப்பிடச் சொல்ல வேண்டும் என எனக்குத் தெரியாதா?”

“பசி தாங்காமல்தான் கேட்டோம்.”

“அப்படி என்றால் சுட்டுச் சாப்பிடுங்கள்.”

“நீங்கள் ஏன் வெளியில் போய் மழையில் நிற்கிறீர்கள்?”

“இரண்டு ஆண்டுகள் முடியப் போகின்றன. இன்னும் உங்களால் இதைக் கண்டறிய முடியவில்லையா?”

மாணவர்கள் எல்லோருக்கும் அப்போதுதான் இதில் ஏதோ சிக்கல் இருப்பது புரிந்தது.

என்னவாக இருக்கும் எனச் சிந்தித்தார்கள். ஒன்றும் புரிபடவில்லை. சிறிது நேரத்துக்குப் பின் சூலிவேள்தான் கண்டறிந்தான். தாங்கள் தீமுட்ட முயன்ற கட்டை தில்லைமரத்தினுடையது. “தில்லைமரக் கட்டையின்  புகை கண்ணிற்பட்டால் பார்வையை இழக்க நேரிடும். அதனால்தான் தேக்கன் உடனடியாக வெளியேறி யிருக்கிறார்” என்றான் சூலிவேள்.

p83d.jpg

மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேக்கனிடம் மன்னிப்புக் கோரினர்.  

“பசி கண்ணை மறைக்கலாம். ஆனால், கண்ணைக் கெடுத்துவிடக் கூடாது” என்றான் தேக்கன்.

பொறுத்திருந்தனர். சிறிது நேரத்தில் மழை நின்றது. குகைவிட்டு மாணவர்கள் வெளிவந்தனர். பக்கத்துக் குகையிலோ, பாறை இடுக்குகளிலோ காய்ந்த கட்டை இருக்கிறதா எனத் தேடப் போனார்கள். ஆனால், தேக்கன் ``வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டான்.

இப்போது இதற்கான காரணம் தெரியாமல் விழித்தார்கள்.

``குகைக்கு வெளியில் வைத்து தில்லைமரக்கட்டையைக் கொண்டே தீ மூட்டுங்கள். புகை கண்ணிற்படாமல் கிழங்கைச் சுட்டெடுங்கள். இதுவும் தேவைப்படும் ஒரு பயிற்சிதான்’’ என்றார்.

இருந்த பசி எங்கு போனது என்றே தெரியவில்லை. யாரும் தீ மூட்ட ஆயத்தமாகவில்லை. எல்லோரும் அப்படியே நின்றுகொண்டிருந்தனர்.

சூலிவேளை அழைத்தார் தேக்கன். ஒருவேளை யார் கண்ணையாவது புகை தாக்கிவிட்டால், உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்று என்ன என்பதை அவனிடம் சொன்னார். அதன் பிறகு, மாணவர்கள் துணிந்து
தீ மூட்டத்  தொடங்கினர்.

நன்றாக முகம் விலக்கி, அனற்கல்லை உரசிப் பற்றவைத்தான் ஒருவன். தில்லைமரக்கட்டையில் தீப்பிடித்தது. புகை தாக்கிவிடக் கூடாது என்ற மிகுந்த எச்சரிக்கையோடு கிழங்கைச் சுட்டனர். குகைவாசலில் உட்கார்ந்தபடி மாணவர்கள் கிழங்கு சுடுவதைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் தேக்கன். புகை மேல்நோக்கி எழுந்தபடியே இருந்தது. சிலர் கிழங்கைக் கருகவிட்டனர்.

சிலர் கிழங்கை நெருப்பின் அருகே கொண்டுபோகவே பெரும்பாடுபட்டனர். அணைவதற்கும் அகல்வதற்குமான  தொலைவை யாராலும் மதிப்பிட முடியவில்லை. புகையைக் கண்டு அஞ்சியவர்கள் கூடுதலாக விலகினர். மற்றவர்கள் விலகவேண்டிய அளவை எழும் புகை முடிவுசெய்தது. அனைத்தையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த தேக்கன் மனதில், ‘இவர்கள் யாருடைய கண்ணிலாவது புகைபட்டுவிட்டால் சூலிவேள் உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்றைச் செய்கிறானா என்று பார்த்துவிடலாம்’ என எண்ணிக் கொண்டிருந்தார்.

மாணவர்கள் காற்றின் சிறிய அசைவுக்குக்கூட உடல்விலக்கி மிகக் கவனமாகக் கிழங்கைச் சுட்டுக் கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ பெருங்காற்று வீசியது. சட்டென மாணவர்கள் கண்களை மூடி தரையோடு தரையாகப் படுத்துவிட்டார்கள்.

அடித்த காற்று, புகையைக் கொண்டுபோய் குகையோடு சேர்த்து தேக்கன் மீது அப்பியது. கண்களை மூடிய கணத்தில் தேக்கன் உணர்ந்து விட்டான், புகை இமைகளுக்குள் சூழ்ந்துவிட்டது என்று.

“சூலிவேள் உடனடியாக என்னை தூக்கிச் செல்” என்றான்.

தேக்கனைத் தோளில் தூக்கியபடி மலைச்சரிவில் இருக்கும்  ஆற்றை நோக்கி இறங்கினான் சூலிவேள். மற்றவர்கள் பின்தொடர முடியாதபடி இருந்தது அவனது வேகம். மழை மீண்டும் பெய்யத்தொடங்கியது. சரிந்து விழுந்துவிடாமல் கவனமாக நடக்க வேண்டும் என்பது எல்லாம் சூலிவேளுக்குப் புலப்படவில்லை. அவனது தோள்களின் பலமும் காலடியின் பிடிமானமும் அபார மானவை.  நெடிதுயர்ந்த தேக்கனைத் தூக்கிக்கொண்டு விரைந்து இறங்கினான் சூலிவேள்.

ஆற்றங்கரையை அடைந்ததும் தேக்கனைப் படுக்கவைத்துவிட்டு உள்ளே குதித்தான். தேக்கன்  சொல்லியிருந்தபடி ஆற்றில் முங்கி அதன் ஆதிக்களியை  அள்ளி வந்தான். தேக்கனைச் சுற்றி மாணவர்கள் உட்கார்ந் திருந்தனர். அள்ளி வந்ததைக் கொடுத்தான். அவரது இரு கண்களின் மேலும் அந்தக் களியை அப்பினர். அவர் இமைகளுக்குள் குளுமையை உணரத் தொடங்கினார்.

“இன்னும் அள்ளி வருகிறேன்” என்றான் சூலிவேள். “இதுவே போதும், சிறிதுநேரத்தில் சரியாகிவிடும்” என்று தேக்கன் சொல்லியபோது  ஆற்றின் நடுவில் நீந்திக்கொண்டிருந்த சூலிவேள்,  பொருத்தமான இடம்பார்த்து நீரில் மூழ்கினான். அடிமரம் ஒன்றை இழுத்துக்கொண்டு சடசடவெனக் கீழிறங்கியது பெருவெள்ளம். மாணவர்கள் உடனடியாகத் தேக்கனைத் தூக்கிக்கொண்டு மேலேறினர். கணநேரத்துக்குள் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. வெள்ளத்தின் வேகம் மலையேறுபவர்களின் கால்களைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தது. தேக்கனைத் தூக்கியபடி விரைந்து மேலேறி உயிர் தப்பினர்.

மேலே ஏறியதும், தேக்கன் கண்களைக் கசக்கியபடி திறந்தான். கொட்டும் மழையில் வெள்ளம் இரு பனைமரம் உயரத்துக்கு போய்க்கொண்டிருந்தது. கண்களுக்குள் எரிச்சல் இல்லை. ஆனால், துயரம் தாங்க முடியவில்லை. சூலிவேளை நினைத்து “ஓ” எனக் கத்தி அழுதான் தேக்கன்.

வெள்ளம் புரட்டி எடுத்துக்கொண்டு சென்றது. நீந்திக் கடப்பது இயலாத செயல். உயிரைத் தக்கவைத்தபடி வெள்ளத்தின் போக்கில் போவது என முடிவெடுத்தான் சூலிவேள். அடித்து, இழுத்துப் புரட்டிக்கொண்டுபோனது. கைகளில் சிக்கும் மரங்களைப் பற்றியும் அதில் இருந்து நழுவியும் இழுத்துச்செல்லும் நீருடன் சென்றுகொண்டிருந்தான். 

p83e.jpg

குறுக்கிட்டு நீந்திக் கரையை அடைய நீரின் வேகம் குறையும் தருவாய்க்காகக் காத்திருந்தான். ஆனால், அது நிகழும்போது அவன் அரை மயக்கத்தில் இருந்தான். இரவு, பகல் கடந்த பின் நீர் அவனைப் பாறையின் இடுக்கு ஒன்றில் அடித்துச் செருகியது. 

ஆற்றங்கரையோரம் வந்த சிலர் பாறை இடுக்கில் சிக்கிக்கிடப்பவனை எட்டிப் பார்த்தனர். உயிர் இருக்கிறதா என்பது அறிய முடியவில்லை. கூட்டத்தில் இருந்த பெரியவர் இடுக்குக்குள் நுழைந்து அவனைப் பார்த்தார். வலது கால் உள்ளே செருகிக்கிடந்தது.  இடது கால் எலும்பு ஒடிந்துகிடந்தது. ஒரு கை திரும்பிவிட்டது. மேல் எல்லாம் பாறைகளில் அடிபட்டுச் செதில்செதிலாகப் பிளந்துகிடந்தது. “இவனை வெளியில் தூக்கி உயிரைக் காப்பாற்றினாலும் இவன் வாழத் தகுதியற்ற வனாகத்தான் கிடப்பான்” என்றார் அந்தப் பெரியவர்.

கூட்டத்தினர் பெரியவர் சொல்கேட்டு விலகினர். உள்ளிருந்த `தூதுவை’க்கு அவ்வாறு விட்டுச்செல்ல மனம் இல்லை. பெரியவரோடு வாதிட்டாள். ஆனால், அவனது நிலைமை படுமோசமாக இருந்ததாலும் பாறையின் இடுக்கைவிட்டு வெளியில் எடுக்க முடியாதபடி, அவன் உடல் செருகிக்கிடந்ததாலும், மற்றவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கூட்டம் நகரத் தொடங்கியது.

இறுதியாக ‘தூதுவை’ சொன்னாள்... “பாறையிடுக்கில் கிடப்பவனை எடுத்து வெளியில் போட்டுவிட்டாவது போவோம். திறன் இருந்தால் பிழைக்கட்டும்” என்றாள். ‘சரி’ என்று ஒப்புக்கொண்டு பெருமுயற்சி செய்து, அவனை வெளியில் எடுத்து கரை மீது கிடத்தினர். நீர் நிறைய குடித்திருந்ததால் வயிறு ஊதிப்போய் இருந்தது. வெட்டுப்பட்ட எந்தப் பிளவின் வழியேயும் குருதி கசியவில்லை. வெளிறித்தான் கிடந்தது எல்லாம். இன்று இரவு தாங்க மாட்டான் எனச் சொல்லிவிட்டு நடந்தார் பெரியவர். மற்றவர்களும் உடன் நடந்தனர்.

காற்று இரவெல்லாம் உடலை உலர்த்திக் கொண்டே இருந்தது. அடர்வனத்தில் ரீங்கரிக்கும் சில்வண்டுகளின் ஓசை செவிக்குள் துளையிட்டு நுழைந்தது. கானகத்தின் பல்வேறு ஓசைகளும் நினைவின் ஆழத்தைத் தொட்டுத் திரும்பின. கண்ணுக்குத் தெரியாத சிறுபூச்சி ஒன்று, வெட்டுப்பட்ட பிளவின் நடுவில் உட்கார்ந்து ஊசிக்கொடுக்கால் கொத்தி வெளியில் எடுத்தபோது அவனது உடல், வலியை நினைவுகொள்ளத் தொடங்கியது.

பொழுது புலர்ந்தது. சூலிவேள் மெள்ளக் கண் விழித்தான். தனக்கு உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்தான். கை, கால்களை அசைக்க முடியவில்லை. அங்கேயே கிடந்தான். தன்னை இழுத்து வெளியில்போட்டவர்கள் பேசிய பேச்சு அரைகுறையாக நினைவில் இருந்தது. தனக்கு என்னவெல்லாம் ஆகியிருக்கிறது என, அந்தப் பெரியவர் சொன்னதைவைத்து தனது உடலை மதிப்பிட்டான். அது தேக்கனின் குரல் என அவனுக்குத் தோன்றியது.

இந்த நிலையில் தேக்கன் இதைத்தான் செய்திருப்பார். ‘மற்றவற்றை எல்லாம் நீதான் சரிசெய்ய வேண்டும். இதுதான் பயிற்சி என்பார்.’ தேக்கனின் குரல் எப்போதும் சவால்களையே உருவாக்கும். எனவே, சவால்கள் உருவாகும் போதெல்லாம் தேக்கனின் நினைவு வருகிறது. அதில் மாறுபட்டு ஒலித்தது ஒரு பெண்ணின் குரல். அந்தக் குரலில் இருந்த நம்பிக்கை இப்போது மனதுக்கு மிகவும் தேவையாக இருந்தது. தனக்காக வாதிட்ட அந்தக் குரலை மெய்ப்பிக்க வேண்டும் எனத் தோன்றியது.

கதிரவன் மேலே ஏறிவந்தான். படுத்துக்கிடந்த சூலிவேளால் உட்கார மட்டுமே முடிந்தது. இரண்டு நாள்களாக எந்த உணவும்  உண்ணாததால் கைகால்கள் உயிரற்று இருந்தன. எதையாவது சாப்பிட வேண்டும் எனத் தோன்றியது. வலது கால் வலி மரத்துக்கிடந்தது. அதை எல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். அடர்காட்டின் நடுவே சீறிப்பாயும் ஆறு. ஆற்றின் போக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தான். சட்டென நினைவுக்கு வந்தது. இடுப்பில் கைவைத்தான். இறுகிக்கட்டப்பட்ட நார்க்கயிறு இருந்தது. நார்க்கயிற்றில் போடப்பட்ட முடிச்சை அவிழ்த்தான். உள்ளே கொல்லிக்காட்டு விதை ஒன்று இருந்தது.

பயிற்சியின்போது அகாலத்தில் அகப்பட்டுக் கொண்டால், பயன்படுத்தச் சொல்லி தேக்கன் கொடுத்த கொல்லிக்காட்டு விதை. விதையை விரல்களால் திருகி உடைத்தான். அதில் சிறுபகுதியை கையோரமாக மண்ணில் தூவிவிட்டு, மீதியை முடிச்சிட்டான். படபடத்து வந்திறங்கின இரண்டு பறவைகள். அவை விதையின் வாசனையை நுகர்ந்தபடி அருகில் வந்தன. சூலிவேள் அவற்றைப் பிடிக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். சற்றுநேரத்தில் பெருங்காடை ஒன்று இறங்கிய வேகத்தில், அந்தப் பறவைகள் இரண்டும் விலகிக்கொண்டன. கொல்லிக்காட்டு விதையை தனியொரு காடை கொத்தித் தின்றது. அது தின்று முடிக்கும்போது, சூலிவேள் கையை அருகில் கொண்டுபோனான். கையோடு அது சாய்ந்து படுத்தது.

இரவு எல்லாம் மனம்பொறுக்காமல் தூக்கம் தொலைத்துக்கிடந்த தூதுவை, காலையிலேயே தன் தோழியை அழைத்துக்கொண்டு சூலிவேளிடம் வந்துவிட்டாள். அவள் வரும்போது அவன் எழுந்து உட்கார்ந்திருந்தான். மரணத்தை நோக்கி விட்டுச்சென்ற ஒருவன், அதற்கு எதிர் திசையில் எழுந்து அமர்ந்திருப்பதைப்போல இருந்தது. பெரும்வியப்போடு அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று, அவன் கைகளில் வந்து படுத்துக்கொண்டது. தான் கண்ணால் பார்ப்பதை அவளால் நம்ப முடியவில்லை. என்ன நடக்கிறது எனத் தோழிக்கும் புரியவில்லை.

கையில் சிக்கிய பறவையைச் சுட்டுத்தின்ன  ஆயத்தமானான். இறகுகளை வேகவேகமாகப் பிய்த்தெடுத்தான். அப்படியே கடித்துத் தின்னப்போகிறான் எனப் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் இருவரும் எண்ணினர்.

இறகுகளை உரித்து முடித்த சூலிவேள், நெருப்பு மூட்ட வழி என்னவென்று சுற்றும்முற்றும் பார்த்தான். கொட்டித்தீர்த்த மழையும் விடாது புரண்டுசென்ற வெள்ளமும் எங்கும் நீரை ஊறவைத்திருந்தன. உலர்ந்தவை ஒன்றும் இல்லை. கரையின் சரிவில் எடுக்கும்  தொலைவில் அனற்கற்கள் கிடந்தன. ஆனால், அவற்றை வைத்து எதை எரிப்பது எனச் சிந்தித்தபடியே கண்களை எங்கும் சுழலவிட்டான்.

அவனால் நம்ப முடியாத ஒன்று அவனது கண்களுக்கு முன்னால் இருந்தது. அவன் செருகிக்கிடந்த பாறையை ஒட்டி ‘பால்கொறண்டி’ செடி ஒன்று தழைத்திருந்தது. அதன் தூர்ப்பகுதி நீரில் மூழ்கியிருந்தது.

சூலிவேளுக்கு மகிழ்ச்சி உடல் எங்கும் பரவியது. காய்ந்த சருகைவிட அதிவேகமாகப் பற்றி எரியும் பச்சையான பால்கொறண்டி.  அது வியப்புக்கு உரிய செடி. செடிகள் எல்லாம் வியக்கத்தக்கவைதான். நமக்குத்தான் அதைக் கண்டுணரத் தெரிய வேண்டும்.
கால்களை மெள்ள அசைத்தபடி கரையின் மேலிருந்து கீழ்நோக்கிச் சரிந்தான் சூலிவேள். கரையைத் தாண்ட மேல்நோக்கி ஏறுவதாக இருந்தால், ஒருவேளை முடியாமல் போயிருக்கும். ஆற்றின் ஓரமாகக் கீழே இருந்ததால் எளிதாகிவிட்டது. உடலை இழுத்தபடி கீழே வந்துசேர்ந்தான்.

‘ஏன் ஆற்றை நோக்கிச் சரிகிறான்?’ எனப் பதறிய  தூதுவையும் தோழியும் சற்றே முன்னால் வந்து எட்டிப்பார்த்தனர்.

சூலிவேள் பால்கொறண்டியின் இலைகளை ஒட்டி அனற்கல்லை உரசினான். உடலில் எங்கெங்கோ இருந்து வலி மேலே ஏறி வந்துகொண்டிருந்தது. இரு கற்களையும் அழுத்திப் பிடித்து உரசும் வலிமையை, இறகு உறிக்கப்பட்ட பறவையே கொடுத்துக் கொண்டிருந்தது. கல்லுக்குள் இருந்து தெறிக்கும் ஒற்றைத் தீப்பொறியை உருவாக்க மொத்த உடலிலும் விசை ஏற்றவேண்டியிருந்தது. விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிசெய்தான். உடல் முழுவதையும் தனது விசையோடு இணைத்தான். அறுந்த நரம்புகள் எல்லாம் அவனது எண்ணங்களோடு இணைந்தன.

தண்ணீரில் இருக்கும் செடியில் போய் அனற்கற்களை ஏன் தட்டிக்கொண்டிருக்கிறான் என்பது இருவருக்கும் புரியவில்லை. குழம்பிப்போய் மிகவும் முன்நகர்ந்து வந்து பார்த்தனர்.

சட்டெனத் தெறித்த தீப்பொறி பால்கொறண்டியில் பட்டவுடன் பற்றி மேலே ஏழுந்தது. எண்ணெயில் ஊறித் திருகி நிற்கும் திரியைப்போல, ஒவ்வோர் இலையும் நெருப்பை மேல்நோக்கி ஊதின. சடசடத்து நாலாபுறமும் பற்றியது நெருப்பு. நன்றாக இறங்கிவந்து நீருக்குள் கால் நுழைத்து, பறவையைப் பால்கொறண்டியின் நடுத்தண்டில் செருகினான் சூலிவேள்.

செடியின் அடிவாரத்தில் சூழ்ந்திருந்த நீரில் நெருப்பின் ஒளி கங்குபோல் தகதகத்தது. தீயின் நிழலுக்குள் கால்நுழைத்தபடி பறவையின் உடலை முன்னும் பின்னுமாகத் திருப்பிக் கொண்டிருந்தான் சூலிவேள். 

அவனது கால்களில் இருந்து நீரின் வழியாக நெருப்பு ஏறியதைப் பார்த்த தூதுவைக்குத் தலை சுற்றுவதுபோல் இருந்தது. ஆனால், அவளுக்கு முன்னரே கண் செருகினாள் தோழி.

ர் மாடத்தில் வந்து தூதுவை சொன்னபோது யாரும் நம்பவில்லை.

“அவன் உயிரோடு மீள்வான் என்பதே நம்ப முடியாத செய்தி.

நீ என்னென்னவோ சொல்கிறாய்” என மறுத்தான் கிழவன்.

தூதுவையும் தோழியும் சொல்வதைப் பார்த்தால் பேயோ, அணங்கோ, வனத் தாதனாகவோதான் இருக்க வேண்டும் என முடிவெடுத்து பூசாரியையும் கையோடு அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்.

நற்பகலுக்குப் பின், அவர்கள் சூலிவேள் இருக்கும் இடத்துக்கு வந்துசேர்ந்தனர். அவன் கரையேற முடியாமல் அப்படியே நீரில் கால் நனைத்தபடியே உட்கார்ந்திருந்தான். ஆனால், கொழுத்த பறவையைத் தின்றதால் முகம் தெளுச்சியாக இருந்தது.
பெரும்கூட்டம் ஒன்று வந்து நிற்பதை உணர்ந்து, பின்னால் திரும்பிப் பார்த்தான். வந்திருந்தது பெரும்கூட்டம் அன்று, சிறுகூட்டம்தான். ஆனால், ஒவ்வொரு மனிதனும் மூன்று மனிதர்களுக்கு இணை. விரிந்த மார்பும் திரண்ட சதையுமாக வந்து நின்றனர் அவர்கள்.

திரண்ட மனிதர்களை விலக்கி முன்வந்த பெரியவர் கேட்டார், “எங்களின் கண் முன் உனது மாயவித்தைகளைக் காட்டு?”

p83f.jpg

“எனக்கு எந்த மாயவித்தையும் தெரியாது.”

“இல்லை, நீ செய்த வித்தைகளை நாங்கள் கண்கொண்டு பார்த்தோம்” என்றது தூதுவையின் குரல்.

ஒரு கணம் கண்ணை மூடினான் சூலிவேள். ‘நேற்று எனக்கு நம்பிக்கை தந்த அந்தக் குரல். இந்தக் குரலை மெய்ப்பிக்கவே நான் போராடிக் கொண்டிருக்கிறேன்’ நினைத்தபடியே கண் திறந்தான். தூதுவை வந்து எதிரில் நின்றாள். பார்த்த பின் பேச்சு எதுவும் வரவில்லை.

வந்தவர்கள் கேட்டார்கள்...

“கால்கள் நீட்டி நீரின் வழியாக பச்சை இலையைச் சுட்டு எரித்தாயாமே உண்மையா?”

சூலிவேள் மறுமொழி சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவர்கள் மீண்டும் கேட்டார்கள். பெரும் உடல்வாகுகொண்ட அந்த மனிதர்களை வியந்து பார்ப்பதைப்போலவே சின்னஞ்சிறு கண்கொண்ட தூதுவையையும், தன்னை மறந்து பார்த்துக்கொண்டே இருந்தான் சூலிவேள்.

அவர்கள் மீண்டும் கேட்டபோது, அனற்கல்லைக் கொடுக்க கைநீட்டினான். சிறுவன் ஒருவன் போய் அதை வாங்கினான். கரையின் இடப்புற உச்சியில் தனித்து நின்றுகொண்டிருந்தது பால்கொறண்டி ஒன்று. ``அதைப் போய்த் தீ மூட்டு’’ என்றான். அந்தச் சிறுவனும் அவ்வாறே போய்த் தீ மூட்ட, அடுத்த கணம் பற்றி எரிந்தது பால்கொறண்டி.

அந்தச் செடியின் ஆற்றலை விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தான். பசும்செடி பற்றி எரியும் என்பதை அவர்கள் நம்பாமல்தான் பார்த்தார்கள். தூதுவையைப் பார்க்கும் வரை உள்ளுக்குள் நெருப்பின்றி எரியும் தீயைப்பற்றி யாராவது சொல்லியிருந்தால், சூலிவேளும் கூடத்தான் நம்பியிருக்க மாட்டான்.

“பறவை எப்படித் தானாக வந்து அமர்ந்தது?” எனக் கேட்டார்கள். இடுப்பிலிருந்த விதையின் சிறுபகுதியைக் கொடுத்துக் கரையில் போடச் சொன்னான். பறவைகள் வந்து தின்றன.  தின்று முடித்துப் பறக்கத் தொடங்குகையில் சிறகை ஈரடி அடித்து மண்ணில் சரிந்தன.

“பறவை மயங்குமா?” எனக் கேட்டனர்.

தன் மயக்கம் மீளாமல் இருந்த அவனுக்கு தன்னையே எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. அவளைப் பார்த்தபடியே, வேண்டாம் என நிறுத்திக் கொண்டான்.

“அது என்ன காய்... எங்கு விளைகிறது?”

எனக் கேட்டனர்.

“வெளியே சொல்லக் கூடாது என்பது எங்கள் குலநாகினியின் வாக்கு” என்றான்.

பெரும்வியப்புக்கு உரிய ஒருவனாக அவன் இருந்ததைப் பார்த்தபடி நின்றிருந்தனர்.

“பாறைகளின் இடுக்கில் செருகிக்கிடந்த என்னை எப்படி வெளியில் எடுத்தீர்கள்?” எனக் கேட்டான்.

“இந்தப் பாறையை நகர்த்தி எடுத்தோம்” என்றார் பெரியவர்.

ஒருகணம் திரும்பி அந்தப் பாறையைப் பார்த்தான். இரண்டு ஆள் உயரம்கொண்ட இரண்டு பெரும்பாறைகள் ஒன்றுடன் ஒன்று உரசியபடி நின்றுகொண்டிருந்தன.

“இவ்வளவு பெரும்பாறையை நகர்த்தினீர்களா? எப்படி முடிந்தது... யார் நீங்கள்?” என்றான்.

வந்தவர்கள் சொன்னார்கள், “நாங்கள் திரையர்கள்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 28

 
 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

முறிந்த காலிலும் திருகிய கையிலும் கட்டுப்போடப்பட்ட அவன், ஊர் மந்தையில் படுக்கவைக்கப்பட்டிருந்தான்.

‘இரு மாதங்கள் கடந்துவிட்டன. இதுவே பறம்பின் வைத்தியனாக இருந்தால், பாதி நாள்கள்கூட ஆகியிருக்காது. திரையர்கள் உடல்வலிமையில் இணையற்றவர்கள்தான். ஆனால், அறிவுநுட்பத்தில் பறம்பு மக்களுக்கு ஈடுசொல்ல முடியாது’ என்று தோன்றியது சூலிவேளுக்கு.

p83a.jpg

கட்டுகள் கழட்டப்படும் நாளுக்காகக் காத்திருந்தான். தூதுவையின் குரல் அவனுக்கு மிகவும் தேவைப்பட்டது. அவள் அருகில் வரும்போதெல்லாம் தேக்கன்தான் நினைவுக்கு வந்தான். காட்டில் மனிதன் எந்தச் சவாலையும் எதிர்கொண்டு வாழும் பயிற்சியை அளித்தது தேக்கன்தான். எந்தச் சூழலையும் வெல்லும் வித்தையை அவன்தான் கற்றுக்கொடுத்தவன்.  ஆனால், தன்னைச் சுற்றி எதுவும் நிகழாமல் மனம் ஏன் ஒடிந்து விழுகிறது. சிதைந்த மனம் கணநேரத்தில் எப்படித் துளிர்த்தெழுகிறது? இதைப் பற்றி தேக்கன் எதையும் சொல்ல வில்லையே! இயற்கையின் ஆதிரகசியத்தை, செடிகொடிகளிலிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா? வழுக்குப்பாறையாக பார்வை மாறினால், பற்றி ஏற விழுது ஏது? நினைவு ஏன் கட்டுப்பட மறுக்கிறது? செடிகொடிகளுக்கும் விலங்குகளுக்கும் இப்படித்தான் நிகழுமா அல்லது மனிதனுக்கு மட்டுமானதா? மனதுக்குள் அடர்ந்துகிடக்கும் காதலின் ரகசியங்களை யார் சொல்லித்தருவது? வினாக்கள் வினாக்களாகவே இருந்தன.

திரையர்களின் உடல்வாகு, கண்களுக்கு எப்போதும் மிரட்சியை உருவாக்குபவையாகவே இருந்தது. அவர்களின் பல செயல்களை சூலிவேளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனுக்குள் என்ன நடக்கிறது என்பதையே அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் எப்படி திரையர்களைப் புரிந்துகொள்வான்.

இடையிடையே ஊரின் நினைவு வந்து போய்க்கொண்டிருந்தது. நடுகாட்டுக்குள்தான் இப்போதும் இருக்கிறோம். ஆனாலும், `நம் காடு' என்று தோன்றாமல் இருக்கிறது. `தேக்கனும் மற்றவர்களும் பயிற்சி முடித்து எப்போது ஊர் திரும்புவார்கள்? நாம் அதற்கு முன் திரும்பி விடுவோமா?' என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது, பெரும் சத்தத்துடன் ஓர் இளைஞனைத் தோளில் வைத்துத் தூக்கி வந்தனர்.  மேலெல்லாம்  குருதி சிந்தியபடி இருந்தது. அவன் கைகளில் ஏதோ ஓர் இலையை வைத்திருந்தான். மந்தையில் பெரியவர்கள் உட்கார்ந்தனர். ஊரே கூடியது.  உள்ளே என்ன நடக்கிறது என்று சூலிவேளுக்குத் தெரியவில்லை. ஆனால், எல்லோர் முகங்களிலும் பெருமகிழ்ச்சி இருந்தது. நல்ல செயல் நடைபெறுகிறது என நினைத்துக்கொண்டான். 

மறுநாள் காலையில் தூதுவை அவனைப் பார்க்க வந்தபோதுதான் சொன்னாள், “அவன் காட்டெருமையை வீழ்த்தி, வெற்றிலையைப் பறித்துவந்தான். அதனால் ஊரே அவனைக் கொண்டாடியது.”
“எத்தனை பேர் சேர்ந்து வீழ்த்தினார்கள்?” எனக் கேட்டான்.

“ஒரே ஆள்தான் வீழ்த்தினான்” என்று சொன்னாள். 

“ஒரே ஆள், ஒரு காட்டெருமையை எப்படி வீழ்த்த முடியும்? நீ சொல்வது நம்பும்படியாக இல்லையே” என்றான்.

“எந்த ஆயுதமும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், தனியொருவனாகக் காட்டெருமையை வீழ்த்தி, மலைமுகட்டில் இருக்கும் வெற்றிலையைப் பறித்து மந்தைக்கு வந்து சேரும் வீரனைத்தான் திரையர் குலப்பெண் ஏற்றுக்கொள்வாள். இல்லையென்றால், எந்தப் பெண்ணும் அவனை ஏற்க மாட்டாள்” என்றாள்.

சூலிவேளால் நம்ப முடியவில்லை. “தனியொருவனாக எப்படி காட்டெருமையை வீழ்த்த முடியும்? நீ பொய் சொல்கிறாய்” என்றான்.

p88a.jpg

“இதே மந்தையில்தான் நான் வந்து சொன்னேன், `ஒருவன் பச்சைச்செடியை எரியவைக்கிறான்', `பறவையை மயங்க வைக்கிறான்' என்று. `நம்பும்படியாகவா இருக்கிறது?' ” என்று கேட்டார்கள். அதுதானே உண்மை. அதேபோல்தான் இதுவும். அப்போது அவர்கள் நம்ப மறுத்தார்கள். இப்போது நீ நம்ப மறுக்கிறாய்” என்றாள்.

சூலிவேளால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `எவ்வளவு வலிமை வாய்ந்தவனாக இருந்தாலும், தனியொருவனாக எப்படி காட்டெருமையை அடக்க முடியும்?' என்று தன்னைத்தானே மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தான்.

நீண்டநேரம் கழித்து, அவள் மண்வட்டியில் ஊன்சோறு கொண்டுவந்து கொடுத்தாள். மலையரிசிச் சோற்றுக்கு ஊடே பெரும்பெரும் கறித்துண்டங்கள் கிடந்தன. மிகவும் சுவைத்துச் சாப்பிட்டான்.

“சோற்றுக்குள் கிடப்பது அவன் வெற்றிகொண்ட காட்டெருமையின் கறி” என்றாள்.

அவள் சொன்ன உண்மை, சூலிவேளின் வயிறு வரை வந்து சேர்ந்தது. ஆனாலும், அவனால் நம்ப முடியவில்லை. ‘காட்டெருமைகளிடமிருந்து விலகிச் செல்லவும், விரட்டினால் தப்பிக்கவும்தானே நமக்குத் தெரியும். அதை எப்படி வீழ்த்த  முடியும்?’ என்று காட்டெருமையின் கறியைச் சாப்பிட்டுக்கொண்டே சிந்தித்தான். சாப்பிட்டு முடித்ததும், அவள் தான் கொண்டுவந்த வெற்றிலையைக் கொடுத்தாள்.

“காட்டெருமையைச் சாப்பிட்டால் அதைப்போலவே நாமும் இலை, தழைகளைச் சாப்பிட வேண்டுமா?” எனக் கேட்டான்.

“காட்டெருமையின் கறி மிகவும் வலிமை வாய்ந்தது. அது செரிக்க வேண்டுமானால், வெற்றிலையை உண்ண வேண்டும்” என்று சொல்லியபடி நீட்டினாள். வெற்றிலையை வாங்கி மெல்லத் தொடங்கினான்.
அதன் காரச்சுவை மிகவும் பிடித்துப்போனது. அவன் மெல்வதை நிறுத்தவேயில்லை. கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். அவனுக்குக் கொடுப்பதில் அவளுக்குள் ஒரு மகிழ்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாகச் சிவக்கத் தொடங்கும் அவன் உள்ளுதடுகளைப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்தன அவள் கண்கள்.

அவன் மீண்டும் மீண்டும் கை நீட்டினான். “காட்டெருமையைவிட அதிகமாகவே தின்றுவிட்டாய்... போதும்” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

டல் நன்கு தேறிவிட்டது. எழுந்து நடக்கவும் ஓடவும் தாவிக்குதிக்கவுமாக உடலைத் தயார் செய்தான். உள்ளம்தான் அதற்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. தில்லைமரத்தின் புகை இல்லாமலே காதல் கண்ணைக் கட்டியது. ஒரு மாலை வேளையில், தான் வந்துசேர்ந்த அந்தப் பாறையைப் பார்த்தபடி ஆற்றோரம் உட்கார்ந்திருந்தான். தூதுவையும் அந்த இடத்துக்கு வந்தாள். 

இருவரும் பேசிக்கொள்ளாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தனர்.  அமைதி, பெரும்பாறையாக உருத்திரண்டு நின்றது. இப்போது இருவரும் அதன் இடுக்கில் சிக்கியிருந்தனர். பாறையை நகர்த்தி வெளியேற, இருவருக்கும் விருப்பமில்லை. எண்ணங்கள் எங்கெங்கோ போயின. அதுவும் சுகமாகத்தான் இருந்தது. பேசிக்கொள்ளாமலேயே அவள் எழுந்தபோதுதான் அவன் கவனித்தான், அவளின் வலது தோள்பட்டையின் மேல்புறத்தில் உள்ளங்கை அளவுக்குக் கரும்பச்சை நிற மச்சம் ஒன்று இருந்தது. அதன் ஒரு பகுதியை அவளது மேலாடை மறைத்திருந்தது. அதைப் பார்த்தபடி, “என்ன இது?” என்று கேட்டான்.

“அதுவா... `வெற்றிலை மச்சம்' என்று சொல்வார்கள். எங்கள் குலத்தில் நிறைய பேருக்கு இது இருக்கும்” என்று சொல்லியபடி அவள் புறப்பட்டாள். மனதுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் உரையாடலை, பேச்சுக் கொடுத்துக் கலைக்க அவள் விரும்பவில்லை.

நாள்கள் சென்றன. அடுத்த இளைஞன் காட்டெருமையை வேட்டையாடுவதைப் பார்க்க வேண்டும் என்று அவன் காத்திருந்தான். அந்த நாளும் வந்தது. ஊராரோடு சேர்ந்து அவனும் காட்டின் உச்சிப் பகுதிக்குச் சென்றான். எல்லோரும் முகட்டின்மேல் இருந்த பாறையில் ஏறி உட்கார்ந்தனர்.

இரு மலைகள் சரிந்து இணையும் பகுதி, நடுவில் நீர் சிறுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதில் தண்ணீர் குடிக்கக் காட்டெருமை வரும் என்று ஓடைக்கரையில் அந்த இளைஞன் காத்திருந்தான். நீண்ட நேரத்துக்குப் பிறகு, காட்டெருமை ஒன்று ஓடை நோக்கி வந்துகொண்டிருந்தது.

மலைமுகட்டிலிருந்து ஊராரோடு சேர்ந்து சூலிவேளும் அதைப் பார்த்தான். உண்மையிலேயே தனித்தொருவன் காட்டெருமையின் அருகில் போய்க்கொண்டிருக்கிறான் என்பதை அவன் கண்கள் நம்பவில்லை. போகிறவனின் இடுப்பில் இருபெரும் ஆயுதங்கள் இருந்தன. அவன் காட்டெருமையை நீர் குடிக்கவிடாமல் குறுக்கே போய் மறிக்க முயன்றான். பார்த்துக்கொண்டிருந்த சூலிவேளுக்கு மெய் சிலிர்த்தது.

p88b.jpg

அந்தக் காட்டெருமையின் உயரம் மலை முகட்டிலிருந்து பார்க்கும்போதே அச்சம் தருவதாக இருந்தது. திருகியிருக்கும் அதன் கொம்புகள் பாறையை நொறுக்கக்கூடியன. அதன் முன்நெற்றி எந்த மரத்தையும் முட்டிச் சாய்க்கும் வலுக்கொண்டது. அதை ஒருவன் தன்னந்தனியனாகச் சந்திக்கப்போகிறான். சூலிவேளால் நிற்க முடியவில்லை.

அதன் பாதையில் குறுக்கிட்ட அந்த இளைஞன் ஏதோ ஒன்று செய்து அதைச் சீண்டினான். அது அவனை விரட்ட, பாயத் தொடங்கியது. நீரோடையைத் தாண்டி மலையின் எதிர்புறம் ஓடத் தொடங்கினான். அது நான்குகால் பாய்ச்சலில் வீறுகொண்டது. அவன் மலைப்புதருக்குள் படுவேகமாக மேலேறினான். காட்டெருமையின் ஓட்டத்தைவிட அவனுடைய ஓட்டத்தின் வேகம் கூடுதலாக இருந்தது. அது காட்டெருமையை மேலும் வேகப்படுத்தியது.

சூலிவேளால் பார்க்கும் காட்சியை நம்ப முடியவில்லை. ஒருவன் காட்டெருமையைவிட வேகமாக ஓடுகிறான். அதுவும் மலைச்சரிவில் மேல்நோக்கி ஓடுகிறான். அதுவும் பாதை இல்லாமல் புதர்களுக்குள் பிய்த்துக்கொண்டு ஓடுகிறான். எப்படி இது முடிகிறது? நம்பவே முடியவில்லை.

பலமுறை பார்த்துப் பழக்கப்பட்ட ஒன்றை, திரையர்கள் இயல்பாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். சூலிவேளால் ஒரு கணம்கூட தாங்க முடியவில்லை. திரையர்களின் உடல்பலத்தையும் வேகத்தையும் வந்த நாள் முதல் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான். ஆனால், மலையில் விலங்கைப்போல செடிகொடிகளுக்கு இடையில் அறுத்தெறிந்து எப்படி ஓட முடிகிறது? அவன் அருகில் இருக்கும் திரையர்களின் உடல் அமைப்பை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினான். அவர்களது  காலடி, ஒரு சுளகுபோல விரிந்து இருந்தது; சூலிவேளின்  காலடியைவிட இருமடங்கு அகலமாக இருந்தது.

வேகமாக மேலே ஏறிக்கொண்டிருந்தவன், சட்டென ஓரிடத்தில் வளைவுகொண்டு கீழ்நோக்கித் திரும்பி சரசரவென ஓடைநோக்கி இறங்கினான். காட்டெருமையின் ஆத்திரம் இன்னும் அதிகமானது. இறங்கத் தொடங்கியதும் அதன் வேகம் கூடுவதுபோலிருந்தது. இரண்டாவது முறை குதித்து பெரும்புதரைத் தாண்டி அவன் முதுகுக்கு நேராக அதன் தலை இறங்கிக்கொண்டிருந்தது. எந்தக் கணம் அதைவிட அதிகமான தொலைவை அவன் தாவிக் கடந்தான் என்பதை சூலிவேளின் கண்கள் கண்டுணரவில்லை. மிக வேகமாக முன்னால் வந்து ஓடையைத் தாண்டி எதிர்புற மலையின் மீது ஏறினான்.

அதன் மூச்சில் அனல்காற்று சீறியது. கொம்புகளில் அடிபட்டு மரக்கிளைகள் முறிந்துகொண்டிருந்தன. அவன் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தான். நம்ப முடியாத காட்சிகளை வாழ்க்கை சூலிவேளுக்குக் காண்பித்துக்கொண்டிருந்தது. திரையர்கள் உற்சாக ஒலியெழுப்பியபடி இருந்தனர்.

அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் வீரவிளையாட்டு, சூலிவேளின் அறிவுக்குப் புலப்படவில்லை. ஓடுபவன் மேலும் கீழுமாக மூன்றுமுறை ஓடையைக் கடந்து ஓடினான். காட்டெருமையும் வெறிகொண்டு ஓடியது. அவனைத் தாக்கப்போகும் கணமும் தப்பிக்கும் கணமும் மிகமிக அருகில் இருந்தன.

ஓடையை நோக்கி வேகமாக இறங்கிக் கொண்டிருந்தபோது, ஏதோ ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துப் போக்குக்காட்டி ஒரு சுற்று சுற்றினான். அது குதித்துக் கீழே இறங்கிக்கொண்டிருந்தது. அவன், அதன் பின்புறம் இறங்கிக்கொண்டிருந்தான். புதர் அசைவில் என்ன நிகழ்ந்தது எனத் துல்லியமாகத் தெரியவில்லை. அவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த திரையர்கள், எழுந்து நின்று உற்சாக ஒலியெழுப்பினர்.

அவன் மீண்டும் முந்திக்கொண்டு ஓடையைக் கடந்து மேலே ஏறத் தொடங்கினான். வந்த வேகத்தில் அது ஓடையைக் கடந்து மேலே ஏற முடியாமல் தவித்தது. அதன் ஓட்டம் குறையத் தொடங்கியது.

திரையர்களின் கூச்சல் ஒலி பெருகியது.

ஒருகட்டத்தில் காட்டெருமையின் ஓட்டம் முழுமுற்றாக நின்றது. இப்போது அவனும் ஓட்டத்தை நிறுத்திவிட்டு, இடுப்பில் இருந்த இரண்டு ஆயுதங்களையும் கைகளில் ஏந்தத் தொடங்கினான். ஒரே இடத்தில் நின்றபடி அது அவனை நெருங்கவிடாமல் குத்த தலைப்பட்டது. அவன் விலகி விலகி, சரியான வேளைக்காகக் காத்திருந்தான்.

திரையர்களின் கூட்டம் பேரொலியோடு ஓடையை நோக்கி இறங்கத் தொடங்கியது. என்ன நடக்கிறது என்று சூலிவேளுக்குப் புரியவில்லை. அவனும் சேர்ந்து இறங்கினான். அவர்கள் அந்த இடத்தை அடையும்போது, அவன் காட்டெருமையை முழுமையாக வீழ்த்தியிருந்தான். வந்த வேகத்தில் ஒரு கூட்டம் அவனைத் தோளில் தூக்கியது. மேலெல்லாம் மரக்குச்சிகளும் கொடிகளும் விளார்விளாராக சீவியிருந்தன. அவன் கதிரவனைப் பார்த்து நரம்பு முறுக்கிச் சிலிர்த்தான்.

வெற்றிலையைப் பறிக்க அவன் தன் தோழர்களோடு போனபோது, மற்றவர்கள் காட்டெருமையை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டெருமையை அடக்கியவன், மாலைக்குள் மந்தையில் வெற்றிலையை வைத்து மணமுடிக்க வேண்டும். எனவே, அடுத்தகட்ட வேலைகள் வேகமாக நடந்தன.

பொழுது சாய்வதற்குள் ஊர் மந்தைக்கு வந்து அவன் வெற்றிலையை வைத்தான். பெரியவர்கள் என்னவென்று கேட்டார்கள். அவனுக்குரியவளைச் சொன்னான். அவளும் வெற்றிலையோடு மேலேறினாள். ஊர்வட்டியில் இருவரும் வெற்றிலையை மாற்றி எடுத்துக் கொண்டனர். ஊன் தயாரானது. கொண்டாட்டம் தொடங்கி இரவு முழுவதும் நீண்டது.

வழக்கம்போல் மந்தையில் இருந்த அவனுக்கு ஊன்சோறும் வெற்றிலையும் கொண்டுவந்தாள் தூதுவை. அவன் எதுவும் சொல்லாமல் வாங்கிச் சாப்பிட்டான். “நான் சொன்னதை, நேரில் பார்த்த பிறகுதான் ஊர் நம்பியது. நீயும் அப்படித்தானே?” என்று கேட்டாள்.

அவன் பதிலேதும் சொல்லாமல் இருந்தான். வாழ்வில் முதன்முறையாகத் தன்னால் ஒன்றைச் செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் அவன் தடுமாறிக்கொண்டிருந்தான். அந்தத் தடுமாற்றத்தை அவள் உணர்ந்தாள். ஆனாலும் அவளின் நம்பிக்கையை, வெற்றிலையைக் கொடுக்கும்போது கை தொட்டுக் கடத்திவிட்டுத்தான் எழுந்தாள்.

நாள்கள் சென்றன. அந்த மலைச்சரிவுக்குப் பல நாள்கள் போய் வந்துகொண்டிருந்தான். எப்போதாவது காட்டெருமைகள் வந்து நீர் குடிப்பதைத் தொலைவிலிருந்து பார்ப்பான். அதன் உருவ அமைப்பும் வலிமையும் முன்னெற்றியில் திரண்டிருக்கும் எலும்பின் திரட்சியும் பார்க்கவே அச்சம்தருவனவாக இருந்தன.

ஒருமுறை அதைச் சீண்டிப்பார்க்க அருகில் போக முடிவெடுத்த கணமே அது விரட்டத் தொடங்கி, படுவேகமாக மலைமேல் ஏறினான். அதன் வேகம் என்ன என்பது அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. மேல்நோக்கி ஏறும்போது அதன் வேகம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. ஏதேதோ வித்தைகாட்டி இறுதியில் உயிர்பிழைத்து ஊர்வந்து சேர்ந்தான்.

மேலெல்லாம் செடிகளும் கொடிகளும் குச்சிகளும் கிழித்து எடுத்திருந்தன. வரும்போதே பச்சிலைகளைப் பறித்துக் கொண்டு வந்தான். அறைத்துப் பூசிக்கொண்டு படுத்தான். மனம் முழுவதும் காட்டெருமையின் பாய்ச்சலும் தூதுவையின் மீதான காதலும் சரிசமமாக இருந்தன.

கிழவி ஒருத்தி அவன் அருகே வந்து உட்கார்ந்தாள். “காட்டெருமையை வீழ்த்தப் போகிறவர்கள் வெற்றிலையோடு வருவார்கள். நீ என்ன பச்சிலையோடு வந்திருக்கிறாய்?”

அவமானப்படுதல் அவனுக்கு அறிமுகமாகிக் கொண்டிருந்தது. “பால்கொறண்டியை எரிக்கவும் பறவையை மயக்கவும் வித்தை தெரிந்தால் போதும். இதற்கு வீரம் வேண்டும்'' என்றாள்.தொடர்ந்து மனம் சீண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இடம் கடந்துபோன தூதுவை, கிழவி இவனோடு இருந்ததைப் பார்த்து சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுப் போனாள்.

இவனது கோபம் மேலும் கூடியது. கிழவியும் விடுவதாக இல்லை. “காட்டுக்கோழியைக்கூடப் பிடிக்க முடியாதவன், காட்டெருமையை எப்படிப் பிடிப்பான்?” என்று அவளாகக் கேள்வி கேட்டுவிட்டு, எழுந்து போய்விட்டாள்.

இவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மறுநாள் அந்த மலைச்சரிவை நோக்கி மீண்டும் போனான். காட்டுக்கோழிகளின் கூவல் சத்தத்தைக் கடந்த அவனுக்குக் கிழவி சொன்னது நினைவுக்கு வந்தது. `ஏனோ காட்டுக்கோழியைப் பிடித்துப் பார்ப்போம்' என்று தோன்றியது.

மரக்கொப்புகளின் மீதேறி தாவி சென்று கொண்டிருந்தது. அது மீண்டும் பறக்கும் வேளைக்காகக் காத்திருந்தான் சூலிவேள். படபடத்து மேலெழுந்த  காட்டுக்கோழி, அவன் வீசிய கல்லால் சுருண்டு விழுந்தது. அதைப் போய்ப் பார்த்துவிட்டு எடுக்காமல் போய்விட்டான்.

‘கிழவி நம்மை இவ்வளவு எளிதாக நினைத்துவிட்டாளே!’ என்று தோன்றியது. மாலையில் மந்தைக்குத் திரும்பியதும் கிழவி அவன் அருகில் வந்தாள்.

“கோழி எங்கே?” என்று கேட்டாள்.

` ‘நான் கோழியை அடித்துவிட்டேன்' என்று சொல்வது வீரனுக்கு அழகல்ல. அதே நேரத்தில் ‘கோழியைக்கூடப் பிடிக்க முடியாதவன்’ என்று இவள் நம்மை பற்றி நினைத்திருப்பதையும் மாற்ற வேண்டும், என்ன செய்வது?’ என்று சிந்தித்தான். 

“எறிந்த இடத்தில் கிடக்கிறது. வேண்டுமென்றால், போய் எடுத்துக்கொள்” என்றான்.

“எடுக்கவேண்டியது நீதான். ஏன் எடுக்காமல் வந்தாய்?” எனக் கேட்டாள்.

அவளது கேள்வியின் நோக்கம் அவனுக்குப் புரியவில்லை.

“அதன் கால்களைப் பார்த்தாயா?” என்றாள்.

“காட்டுக்கோழியின் காலின் பின்புறம் சிறுவிரல் ஒன்று இருக்கும். அதைப்போலவே  காட்டெருமையின் பின்னங்கால் குளம்பின் பின்புறம் சிறுதசை ஒன்று வளர்ந்திருக்கும். சரியாக அந்தத் தசையை அடித்துவிட்டால், அதன் பின்னங்கால் நரம்புகள் இழுத்துக்கொள்ளும். அதனால் காலை நகர்த்த முடியாது. இருந்த இடத்தில் இருந்துதான் போராடும். அதன் பிறகு, அதை ஆயுதம்கொண்டு வீழ்த்திவிடலாம்” என்று குறிப்பு சொன்னாள் கிழவி.

சூலிவேள் அன்று பார்த்த காட்சியை நினைத்தான். ‘மூன்றுமுறை மலைச்சரிவின் மேலும் கீழுமாக ஓடியவன், மூன்றாம்முறை இறங்கும்போது சட்டென ஓரிடத்தில் விழுதைப் பிடித்து சுழன்று காட்டெருமையின் பின்புறம் தாக்கியது இதைத்தானா?’ எனத் தோன்றியது. அவனின் கோபத்தைக் கிழவி தூண்டியபோது தூதுவைச் சிரித்துக்கொண்டே போனதற்கான காரணம் இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது.

றுநாள் பொழுது மறைவதற்குச் சிறிது நேரத்துக்கு முன், சூலிவேள் மந்தையை நோக்கித் தட்டுத்தடுமாறி நடந்து வந்தான். அவன்மேல் பழையபடி கீறல் காயங்கள் இருந்தன. குருதி கசிந்துகொண்டிருந்தது. ‘மீண்டும் ஆற்றில் விழுந்து, பாறையில் அடிபட்டு வருகிறானா?’ என்று பார்ப்பவர்கள் எண்ணினர். ஆனால், அவன் கைகளில் வெற்றிலை இருந்தது. ‘இதை ஏன் பறித்து வருகிறான்?’ என்பது புரியவில்லை.

வந்தவன் மந்தையில் ஏறி அமர்ந்தான். ஊர்வட்டியில் வெற்றிலையை வைத்தான். எல்லோரும் கூடினர். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘வெற்றிலையைப் பறிக்கப்போய் ஏன் இவ்வளவு காயங்களுடன் வந்திருக்கிறான்?’ என்று  ஒருவர்  மாற்றி  ஒருவர்  கேட்டுக்கொண்டிருந்தனர். மூன்று இளைஞர்கள் மந்தை நோக்கி வந்து சொன்னார்கள், “அவன் காட்டெருமையை வீழ்த்தி, வெற்றிலையைப் பறித்து வருகிறான்” என்று.

ஊர் அதை நம்பவில்லை. “நீங்கள் சொல்வது உண்மையா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டனர். அந்த இளைஞர்கள் சொன்னார்கள், “நாம் பலமுறை மேலும் கீழும் ஓடவிட்டுத்தான் காட்டெருமையின் பின் நரம்பை அடிப்போம். இவனோ முதல்முறையே அடித்துவிட்டான்.”

ஊரார் அதிர்ந்துபோனார்கள்.

p88c.jpg

சூலிவேள் ஊர்வட்டியில் வெற்றிலையை வைத்தபடி பேசாமல் இருந்தான். ஊராருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சூலிவேள் எதுவும் பேசவில்லை.

‘இவன் என்ன கேட்க வருகிறான்?’ என்பதும் ஊராருக்குப் புரியவில்லை. ஊரின் வயது முதிர்ந்த கிழவன் கூட்டத்தை விலகச்சொல்லி உள்ளே வந்தார். அவன் ஊர்வட்டியில் வைத்திருந்த வெற்றிலை ஒன்றை எடுத்து திருப்பிப் பார்த்தார். அவர் கண்கள் வியப்புக்கொண்டு விரிந்தன. அடுத்த வெற்றிலையை எடுத்து பின்புறம் திருப்பிப் பார்த்தார். ஊரார்கள் அவரையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ அவன் வைத்த அனைத்து வெற்றிலைகளையும் எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டார்.

“இவன் முன்வைத்துள்ளது அனைத்தும் ஆண் வெற்றிலை” என்றார். திரையர்கள் திகைத்துப்போனார்கள். மிகச்சிலருக்கு மட்டும்தான் வெற்றிலையில் உள்ள வேறுபாடுகள் தெரிந்தன. வெற்றிலையின் பின்புறம் இருக்கும் நரம்புகள் மூன்றும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒன்றுபோல் இறங்கியிருந்தால், அது ஆண் வெற்றிலை. மேலே இருப்பது இறங்கியும் மற்ற நரம்புகள் விலகியும் இறங்கியும் இருந்தால்
அது பெண் வெற்றிலை.

சூலிவேள் ஊர்வட்டிலில் ஆண் வெற்றிலைகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டான். இப்போது எதிர் வெற்றிலையாக, பெண் வெற்றிலையை ஊர் வைத்தே ஆக வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தனர். இனி புறப்பட்டு வெற்றிலைக்கொடி இருக்கும் மேல் காட்டுக்குப் போவதற்குள் இருட்டிவிடும். அதன் பிறகு, பெண் வெற்றிலையாகத் தேடிப் பறித்து வருவதெல்லாம் இயலாத செயல். ஆனால், பொழுது மறைவதற்குள் எதிர் வெற்றிலையை வைக்க வேண்டும் என்பது ஊரின் மரபு. என்ன செய்யலாம் என்பதறியாது எல்லோரும் திகைத்துக்கொண்டிருக்கையில், தூதுவை மந்தை நோக்கி வந்தாள்.

இவள் ஏன் உள்ளே வருகிறாள் என்பது யாருக்கும் புரியவில்லை. அனைவரையும் விலகச் சொல்லியபடி நடுமந்தைக்கு வந்த அவள், ஊர்வட்டிலில் எதிர் வெற்றிலையை வைக்கவேண்டிய இடத்தில் கால் மடக்கி அமர்ந்தாள்.

வலது தோள்பட்டையில் கிடந்த ஆடையை மெள்ள விலக்கியபடி சூலிவேளின் கண்களை நேர்கொண்டு பார்த்தாள்.

அவளின் தோளில் கரும்பச்சை நிற வெற்றிலை மச்சம் இருந்தது. அதற்குள் ஓடிய நரம்புகள் ஒன்றுபோல் இல்லாமல்தான் இருந்தன.  வியப்படைந்த கண்களில் மகிழ்ச்சி பூக்கத் தொடங்கியது. ஊருக்கு, பின்னங்கால் நரம்பில் அடிவிழுந்து சரிந்ததுபோல் இருந்தது. எல்லோருக்கும் செய்தி புரிந்தது.

திரையர்களுக்கு இணையான வீரன் என்பதை சூலிவேள்  மெய்ப்பித்துவிட்டான். இனி மறுத்துச் சொல்வதற்கு எதுவும் இல்லை. கொண்டாட்டம்  தொடங்கியது. காட்டெருமையின் கறியை ஊன்சோற்றில் பிசைந்தனர் திரையர்கள்.

அந்தப் பெருங்கிழவன் மட்டும் கிழவியை முறைத்துப் பார்த்தபடி போனான். காட்டெருமையோ வெற்றிலையோ பின்னால் இருக்கும் நரம்பில்தான் எல்லாம் இருக்கிறது என்று சொல்லிக்கொடுத்தவள் அவளாகத்தான் இருக்கும் என்பது அவருக்குப் புரிந்திருந்தது.

ஊன்சோறு பரிமாறப்பட்டது. பச்சைக்கொடி பற்றி எரிய, பறக்கும் பறவைகள் மயங்கிச் சரிய, அந்த இரவு முழுவதும் பெண் வெற்றிலையை விரும்பி உண்டான் சூலிவேள். ஆண் வெற்றிலையின் காரம் தூதுவைக்கு மிகவும் பிடித்திருந்தது. நாக்குக்குள் சுழலும் வெற்றிலை நாக்குகளைச் சுழற்றியது. சிவப்பேறிய இதழ்களுடன் பல இரவுகளைக் கடந்து, ஒரு நற்பகலில் எவ்வியூர் வந்தடைந்தனர்.

பாரி, கதையை முடித்தபோது இருள் சூழ்ந்து இறங்கத் தொடங்கியது. அவர்கள் எவ்வியூருக்குள் நுழைந்தனர். “திரையர்களின் கதைதான் இவ்வளவு வேகமாக இழுத்துவந்தது. இல்லையென்றால், நாம் ஊரடைய நள்ளிர வாகியிருக்கும்” என்றான் பாரி. கதையின் மயக்கத்திலிருந்து மீளாதவராக கபிலர் இருந்தார்.

பாரி சொன்னான், “இது எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் நடந்த கதை. அதன் பிறகு, திரையர்களுக்கும் வேளீருக்குமான திருமண உறவுகள் பெரிதாக நடக்கவில்லை. காரணம், அவர்களின் நாடு இந்த மலைத்தொடரின் ஏதோ ஓர் எல்லையில் இருக்கிறது. எப்போதாவது ஒருமுறை ஊர்வழிபாட்டுக்கு வந்து அழைத்துச் செல்வார்கள் என்று என் தந்தை சொல்வார். அதுவும் அவரின் தந்தையார் காலத்துக்குப் பிறகு வரவில்லை என்பார்.”

“நிலப்பரப்பால் ஏற்பட்ட இடைவெளி அல்லவா?”

p88d.jpg

“ஆம். ஆனால் உயிருக்குள் கலந்துவிட்டால், நிலவியல் இடைவெளியால் என்ன செய்ய முடியும்?” என்றான் பாரி.

அவன் சொல்லவருவது கபிலருக்குப் புரியவில்லை.

“இளையவளை நன்கு கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டான்.

“சங்கவையையா?”

“ஆம்.”

“என்ன?”

சின்ன புன்னகையுடன் பாரி சொன்னான், “அவளின் வலது தோள்பட்டையின் முன்புறம் கரும்பச்சை மச்சம் ஒன்று இருக்கிறது. அவள் வளர்ந்து பெரியவளானால், அது வெற்றிலையின் வடிவம்கொள்ளும்.”

கபிலர் திகைத்துப்போனார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. வாய் மட்டும்  முணுமுணுத்தது. “கதைகள் ஒருபோதும் முடிவதில்லை.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிலையின் நரம்புகள் ஒரே இடத்தில் சேர்ந்திருந்தால் அது பெண் வெற்றிலை என்றும், தெல்லு மாறி இருந்தால் அது ஆண் வெற்றிலை என்றும்தான் நான் அறிந்திருந்தேன். ஆனால் இந்தக் கதையில் அது மாறி இருக்கின்றது. 

முன்பு செட்டியார்கள் ஒரு வெள்ளி வெத்திலைப் பெட்டி எப்போதும் கூடவே வைத்திருப்பார்கள். அதில் நல்ல கொழுந்து வெற்றிலையாக பெண் வெற்றிலையே வைத்திருப்பினம். ( இக் கதையில் வரும் ஆண் வெற்றிலை). அது லட்சுமி கரம் என்று சொல்வார்கள். அநேகமாய் மாய் போட்டுப் பார்ப்பது மற்றும் சில விசேஷ காரியங்களுக்கு பெண் வெற்றிலையே பயன்படுத்துவார்கள்.

அதுபோல் அரசம் இலையிலும் ஒரு விசேஷம் உண்டு. அதன் நரம்புகள் இலையின் உள்பக்கமே புடைத்திருக்கும். மற்ற இலைகளுக்கு புறப் பக்கத்தில் இருக்கும்......! tw_blush:

Link to comment
Share on other sites

On 28.4.2017 at 0:38 PM, suvy said:

வெற்றிலையின் நரம்புகள் ஒரே இடத்தில் சேர்ந்திருந்தால் அது பெண் வெற்றிலை என்றும், தெல்லு மாறி இருந்தால் அது ஆண் வெற்றிலை என்றும்தான் நான் அறிந்திருந்தேன். ஆனால் இந்தக் கதையில் அது மாறி இருக்கின்றது. 

முன்பு செட்டியார்கள் ஒரு வெள்ளி வெத்திலைப் பெட்டி எப்போதும் கூடவே வைத்திருப்பார்கள். அதில் நல்ல கொழுந்து வெற்றிலையாக பெண் வெற்றிலையே வைத்திருப்பினம். ( இக் கதையில் வரும் ஆண் வெற்றிலை). அது லட்சுமி கரம் என்று சொல்வார்கள். அநேகமாய் மாய் போட்டுப் பார்ப்பது மற்றும் சில விசேஷ காரியங்களுக்கு பெண் வெற்றிலையே பயன்படுத்துவார்கள்.

அதுபோல் அரசம் இலையிலும் ஒரு விசேஷம் உண்டு. அதன் நரம்புகள் இலையின் உள்பக்கமே புடைத்திருக்கும். மற்ற இலைகளுக்கு புறப் பக்கத்தில் இருக்கும்......! tw_blush:

நீங்கள் எழுதியபின்தான் நான் அறிந்து கொண்டேன் வெற்றிலையில் ஆண், பெண் என்று இருக்கு என்று.

அது என்ன மாய் போட்டு பார்ப்பது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நவீனன் said:

நீங்கள் எழுதியபின்தான் நான் அறிந்து கொண்டேன் வெற்றிலையில் ஆண், பெண் என்று இருக்கு என்று.

அது என்ன மாய் போட்டு பார்ப்பது?

"மை" போட்டுப் பார்ப்பது, தட்டும்போது எழுத்துப் பிழையாகி விட்டது....!

முன்பு மை போட்டு பார்ப்பவர்கள் சில இடங்களில் இருப்பார்கள்.  ஒரு பொருள் தொலைந்தால், ஆடு,மாடு காணாமல் போனால் இவர்களிடம் போய் கேட்பார்கள். அப்போது இவர்கள் இந்த மாதிரி வெற்றிலை எடுத்து அதில் மை பூசி பார்ப்பார். அது தற்போதைய ட்றோன்னில்  பொருத்திய கமரா போல் அங்க இங்க அலைந்து அவை இருக்கும் இடத்தை அவருக்கு காட்டிக் கொடுத்து விடும்.

பி.கு: இதனால் அறிவது யாதெனில் இன்றைய ட்ராண் கேமராவுக்கு முன்னோடி அன்றைய மை பூசிய வெற்றிலையாம்......!

கணவனே கண்கண்ட தெய்வம், தங்கமலை ரகசியம் போன்ற பழைய சினிமாக்களிலும் இது போன்ற காட்சிகளைக் காண முடியும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

 மை போட்டு பார்ப்பது என்று கேள்விபட்டு உள்ளேன்.

 நீங்கள் மாய் என்று எழுத நான் இது என்ன என்று குழம்பிவிட்டேன்..:rolleyes:

On 30.4.2017 at 11:07 PM, suvy said:

"மை" போட்டுப் பார்ப்பது, தட்டும்போது எழுத்துப் பிழையாகி விட்டது....!

முன்பு மை போட்டு பார்ப்பவர்கள் சில இடங்களில் இருப்பார்கள்.  ஒரு பொருள் தொலைந்தால், ஆடு,மாடு காணாமல் போனால் இவர்களிடம் போய் கேட்பார்கள். அப்போது இவர்கள் இந்த மாதிரி வெற்றிலை எடுத்து அதில் மை பூசி பார்ப்பார். அது தற்போதைய ட்றோன்னில்  பொருத்திய கமரா போல் அங்க இங்க அலைந்து அவை இருக்கும் இடத்தை அவருக்கு காட்டிக் கொடுத்து விடும்.

பி.கு: இதனால் அறிவது யாதெனில் இன்றைய ட்ராண் கேமராவுக்கு முன்னோடி அன்றைய மை பூசிய வெற்றிலையாம்......!

கணவனே கண்கண்ட தெய்வம், தங்கமலை ரகசியம் போன்ற பழைய சினிமாக்களிலும் இது போன்ற காட்சிகளைக் காண முடியும்....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 29

 
 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

ருநீலத்தில் ஏறியிருக்கும் மெல்லிய வெண்ணிறம் போதுமான அளவுக்கு இல்லை. சற்றே அதிகப்படுத்தச் சொன்னான் அந்துவன். அவன் சொன்னபடி ஓவியர்கள் நிறத்தைக் கூட்டிக்கொண்டிருந்தனர். அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தவன், இளைப்பாறலாம் என த் தேவாங்கின் கூண்டு அருகே உட்கார்ந்து சிறுகுச்சியால் அவற்றை அடிக்கப்போவதைப்போல் ஓங்கினான். அவை இங்குமங்குமாக ஓடி அலைக்கழிந்தன. மீண்டும் மீண்டும் அப்படியே செய்தான்.  

p85a.jpg

அந்துவனின் மனம் அமைதியற்று இருந்தது. மீண்டும் அண்ணாந்து பார்த்தான். ஓவியர்கள் அவன் சொன்னதைப்போல வெண்ணிறத்தைச் சற்றே கூட்டியிருந்தனர். ஆனாலும், அவனுக்கு நிறைவாயில்லை.
மனம் தத்தளித்துக்கொண்டிருந்தது.

இந்தப் பெருவிழாவின் முதல் நிகழ்வான வெற்றிலை மாற்றி மணமுடிக்க வாக்களிக்கும் நிகழ்வில், அரண்மனைக் கணியனான தான் இல்லாததை அந்துவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனம் அலைமோதியது. கூண்டுக்குள் இருக்கும் தேவாங்குகளையும் அதேபோல அலைமோதவைத்தது. ‘அரண்மனைக் கணியன் ஏன் வரவில்லை?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டிருக்குமா அதற்கு திசைவேழர் என்ன பதில் சொல்லியிருப்பார் எனச் சிந்தித்தான். மனதின் வலியும் புறக்கணிப்பின் வேதனையும் இன்னும் அதிகமாகின.

“வலியையும் வேதனையையும் வெளிக் காட்டாமல் வாழ்வதுகூட ஒருவிதமான கலைதான்” என்றாள் பொற்சுவை.

தோழி சுகமதிக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. பொற்சுவையை முழுமையும் அறிந்தவள் அவள் மட்டும்தான். எனவே, இந்தக் கூற்றை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. கண்கள் கலங்கின. வெளிக்காட்டாமல் இறுகிக்கொண்டாள்.

“வணிகர் குலத்தில் பெண்ணாகப் பிறக்கக் கூடாது சுகமதி. அதுவும் அளவற்ற செல்வம்கொண்ட ஒரு குடும்பத்தில் பிறக்கவே கூடாது. இணையற்ற பொன்னொளியில் திரளும் கண்ணீர் எவர் கண்களிலும் படாது. வழிந்தோடுவது நம் கண்ணீர்தான் என்பதை சிலநேரம் நம்மாலேயே உணர முடியாமல் போய்விடும்.”

என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்தாள் சுகமதி. பொற்பல்லக்கில் கொண்டுவரப்பட்ட கூண்டு அப்படியே இருந்தது. ‘பாண்டரங்கத்தில் வேலைகள் முடிந்ததும், அதன் எதிரில் கட்டப்பட்டுள்ள திகிரி மேடையில் வைத்துக்கொள்ளலாம். அதுவரை இங்கேயே இருக்கட்டும்’ எனச் சொன்னதால் சக்கரவாகப் பறவையைப் பொற்சுவையின் அறையிலேயே வைத்திருந்தனர். அதைப் பார்த்துக்கொண்டேதான் பொற்சுவை கேட்டாள்.

“என் மண நாளுக்குள் இது பறந்துவிடுமா சுகமதி?”

விடையின்றித் தத்தளித்தாள் சுகமதி.

பொற்சுவையின் குரல் உடைந்துவிடாமல் மிக நிதானமாக இருந்தது.

``கார்காலத்தின் இறுதி மழைத்துளியை ஏந்தியபடி இது பறந்தபின் என் கண்கள் பார்த்திருக்க என்ன இருக்கிறது இந்த அரண்மனையில்?”

பொற்சுவையின் மனதை ஆற்றுப்படுத்த ஒற்றைச் சொல்லின்றித் தவித்தாள் சுகமதி.

கூண்டுக்குள் விரல்களைவிட்டு சக்கரவாகப் பறவையின் உதிர்ந்த இறகு ஒன்றை எடுத்தாள். “என்ன ஓர் உறுதி இந்தப் பறவைக்கு, ‘மழைநீரை மட்டுமே அருந்துவேன்!’ என. நம்மால்தான் எந்த உறுதிப்பாட்டையும் கொண்டிருக்க முடியவில்லை.”

சுகமதி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். உள்ளுக்குள் கிடக்கும் ஓராயிரம் சொற்களை வெளியில் கொட்டுவதுதான் பொற்சுவைக்கு இப்போது தேவை. எனவே, அவள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேசட்டும் எனக் காத்திருந்தாள் சுகமதி.

“நானும் உறுதி ஏற்றிருப்பேன்... கடற்புயல்  மட்டும் என் அண்ணனைக் காவுகொள்ளாமல் இருந்திருந்தால்! அவன் இன்றி நான் யாரை நம்பி உறுதி ஏற்பது?”

சுகமதி எவ்வளவோ முயன்றும் அவளுடைய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், மறைத்துக்கொள்ள முடிந்தது.

p85b.jpg

“என் தாயின் மரணம்கூட எனக்கு நினைவில்லை. அப்போது நான் சிறுபிள்ளை. ஆனால், விரல்பிடித்து எனக்கு வாழ்வைச் சொல்லிக்கொடுத்தவன் என் அண்ணன் தான். நான் காதல் கொண்டதை அவனிடம் சொன்னபோது அவனுக்குள் ஏற்பட்ட மகிழ்வை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

“சாவகப் பயணம் முடித்து வந்ததும் நானே தந்தையிடம் சொல்லி இதற்கான ஒப்புதலைப் பெறுவேன்” என்றான்.

ஆனால், எல்லாவற்றையும் ஒரு புயல் அடித்துக்கொண்டு போனது.

சுகமதி எதுவும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

`நான் அமைதியைக் குலைக்காமல் இருப்பதுதான் சரி, ஏனென்றால், பொற்சுவை பேசிக்கொண்டிருப்பது என்னோடு அல்ல... அவளின் ஆழ்மனதோடு. இந்த உரையாடல் ஏதோ ஒருவகையில் அவள் மேலெழுந்து வர உதவியாக இருக்கும்’ என எண்ணினாள்.

“நான் மிகவும் உறுதியானவள் எனச் சிறுபிள்ளையில் இருந்து பாராட்டப் பட்டுள்ளேன். என் உறுதியின் மீது எனக்கு நம்பிக்கை வரவைக்க ஏதாவது வழி உண்டா சுகமதி?”

பேசவேண்டிய இடம் இதுதான் என, சுகமதிக்குத் தோன்றியதும் பதில் சொன்னாள்...

“உண்டு இளவரசி.”

“என்ன?”

“உங்களைக் கலங்கடிக்கும் எதையும் உங்களுக்குள் அனுமதிக்காதவர்தான் நீங்கள். அதனால்தான், காதலையும் உங்களுக்குள் எளிதில் அனுமதிக்கவில்லை. ஓர் ஆண் உங்களின் காதலைப் பெற எவ்வளவு காலம் ஆனது என்பதை நான் அறிவேன். இப்போதும், அதேபோல உங்களைக் கலங்கடிக்கும் எதையும் உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள்.”

அசட்டுச் சிரிப்போடு கேட்டாள்...

“பொதியவெற்பனை அனுமதிக்காதே என்கிறாயா?”

சுகமதி ஒரு கணம் நடுங்கிப்போனாள்.

“நான், எண்ணங்களைச் சொல்கிறேன். அலைக்கழிக்கும் நினைவுகளைச் சொல்கிறேன். எந்த இடத்திலும் உங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொள்ளும் வல்லமைவாய்ந்தவர் நீங்கள். இசையும் இலக்கியமும் இருக்கும் வரை உங்களுக்கான உலகை யாராலும் தட்டிப் பறித்துவிட முடியாது.”

“காதல் எல்லாவற்றையும் தட்டிப்பறித்துவிடும் சுகமதி. அதுவும் பறிக்கப்பட்ட காதலின் ஆவேசம் எளிதில் அடங்காது. பூவுக்குள் இருந்து விதை முளைவிடுவதைப்போல, இன்னொரு முறை காண முடியாத அதிசயக் கனவு. அது என்னைவிட்டு ஒருபோதும் பிரியாது. அந்த நினைவுக்குப் பிறகு, என் இளமை முகிழ்ந்த கணம் இருக்கிறது. பற்றி எரியும் காமம் இருக்கிறது. சிறுமுலைகொண்டு பெருஞ்சினம் தீர்த்த பொழுதுகள் மறைந்து கிடக்கின்றன. நான் என்ன செய்வேன் சுகமதி?

தட்டுகளை மாற்றி தாம்பூலம் தரித்தபின் என்னிடம் சொல்ல என்ன இருக்கிறது என நினைத்துவிட்டார்கள். அண்ணகர்கள் பல்லக்கைக் கீழிறக்கிய இடத்தில் நான் இறங்கிவிடலாம்; ஆனால், எனது மனம் ஒருபோதும் கீழிறங்காது. அது, இந்த உலகின் அரிய காதலைத் தன்வயம் கொண்டது. நானே நினைத்தாலும் தனது நினைவு களைவிட்டு அது விலகாது.”

நினைவுகளைவிட்டு ஒருபோதும் அகலாத நாளாக இந்த நாள் இருக்கப்போகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், இந்த மண்ணில் நடக்கும் ஒரு திருமணத்துக்கு யவனர்கள் பெரும் ஏற்பாட்டோடு வந்து, பரிசுகள் வழங்கி, மரியாதை செய்வது இதுவே முதன்முறை.

நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வணிகத்தில் இன்றைய நாள் மிகவும் முக்கியமானது. யவனப் பெருவணிகன் வெஸ் பானியன் தலைமையில் அவர்கள் அணிதிரண்டு வந்துள்ளனர். அரசப் பிரதிநிதிகள், வணிகர்கள், துறைமுகப் பொறுப்பாளர்கள் எனப் பலரும் ஆறுக்கும் மேற்பட்ட நாவாய்களில் வந்து இறங்கினர். மிக முக்கியமாக ஹிப்பாலஸ் வந்துள்ளான். கடல்பயணத்தின் சாகசத் தளபதி என யவனர்களால் கொண்டாடப்படுபவன். அவன் வருகை துறைமுகங்களில் தனித்த விழாவாகக் கொண்டாடப்படும் என்று  கடலோடிகள் சொல்வார்கள்.

கொற்கையில் வந்து இறங்கிய எல்லோரும் மதுரைக்கு அருகில் உள்ள யவனச் சேரியில் நன்றாக ஓய்வெடுத்து, தங்களின் முறைப்படி இந்தத் திருமணத்தைக் கொண்டாடிக் களிக்க அரச மாளிகைக்குள் நுழைந்தனர்.

வட்டுடை வீரர்கள் புடைசூழ, யவனப் பேரழகிகள் கைகளில் பரிசுத்தட்டை ஏந்திவர வெஸ்பானியன், ஹிப்பாலஸ், கால்பா, பிலிப், எபிரஸ், திரேஷியன் எனப் பலரும் வந்தனர். அரண்மனையின்  நடுமண்டபத்தில் அவர்களின் வருகையை எதிர்பார்த்து, பேரரசரும் சூல்கடல் முதுவனும் வீற்றிருந்தனர்.

மதுரையின் எல்லா திசைகளிலும் இரவு, பகலாகக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. யவனர்கள் வந்து இறங்கிய திலிருந்து கொண்டாட்ட பேரொலியைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால், இவையெல்லாம் அரண்மனைக்குள் நடக்கும் கொண்டாட்டத்துக்கு ஈடாகுமா? அவர்கள் நுழைந்த கணத்திலிருந்து இன்றைய நாள் கொண்டாட்டம் தொடங்கியது.

p85c.jpg

தங்களுக்கான வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின் வெஸ்பானியன் அறிவித்தான்...

“இந்தத் திருமணத்தை முன்னிட்டு எம் அரசர் பொன் நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளார். உங்களின் அதிசிறந்த உயிரினமான யானையை அதில் பொறித்துள்ளார். அந்த நாணயத்துக்கு ‘மீனாள்’ எனப் பெயர்சூட்டி இந்தப் பாண்டிய அரசைப் பெருமைப்படுத்தியுள்ளார்” என அறிவித்து, தங்கத் தட்டிலிலுள்ள நாணயங்களைப் பேரரசரின் முன்னும், சூல்கடல் முதுவனின் முன்னும் நீட்டினார். அவர்கள் வியப்பு குறையாமல் அதை நீண்டநேரம் பார்த்தனர்.

நாற்சதுர வடிவின் நடுவே அச்சுப்பதிக்கப்பட்ட யானை ஒன்று ஒளிவீசி மின்னியது. அதன் மேல் `மீனாள்’ என யவனத்தில் எழுதியிருந்ததை, சூல்கடல் முதுவன் வாசித்துச்சொல்ல அகமகிழ்ந்தார் பேரரசர். அந்த நாணயங்களைத் தன் இருகைகளாலும் அள்ளி அவையை நோக்கி வீசினார். உற்சாகப் பேரொலி எங்கும் எதிரொலித்தது.

நூறுகால் மண்டபத்தின் ஆடலரங்கு இதுவரை இல்லாத பேரலங்காரத்தைக் கொண்டிருந்தது. விருந்தினர்கள் முப்புறமும் இருந்து மேடையைப் பார்த்தபடி அமர்ந்தனர். மேடையின் முன்நெற்றியில் நால்வகை முரசுகள் வைக்கப்படுவதற்கான கட்டில்கள் முதலில் கொண்டுவரப்பட்டன. அதன்பின், வட்ட வடிவ முறிகள் கொண்டு வரப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து முரசங்களை எடுத்துவந்தனர்.

தன்னந்தனியாக ஒற்றை மனிதன் ஒழுங்கற்ற ஆடையை அலங்காரமாகப் போத்திக்கொண்டு உள்நுழைந்தான். உள்நுழையும் கட்டியங்காரனைப் பற்றி மொழிபெயர்ப்பாளர்கள் யவனர்களுக்கு அறிமுகம் செய்தனர். அரங்கில் நுழைந்தவன், நான்கு முரசுகளும் வைக்கப்பட்டிருந்த கட்டில் கால்கள் எந்தெந்த நாட்டின் காவல் மரங்களை வெட்டியெடுத்துச் செய்யப்பட்டவை எனப் பட்டியலிட்டான். பேரரசின் வீரம் போற்றும் வரலாறு, முரசுக்கட்டிலின் கால்களிலிருந்து தொடங்கியது. கூட்டத்தினரின் உற்சாகப் பேரொலி எங்கும் எதிரொலித்தது. திரி முறுக்கிக் கட்டப்பட்ட வட்டவடிவ முறிகட்டில் கால்களின் நடுவில் வைக்கப்பட அதன் மீது முரசின் அடிப்பகுதி பொறுத்தப்பட்டது.

எத்தனை நாட்டு அரசியர்களின் கூந்தலை அறுத்துத் திருகிய முறி இதுவெனக் கட்டியங்காரன் சொன்னபோது அரங்கு அதிர்ந்து குலுங்கியது. அவன் சொல்லும் பெயர்ப்பட்டியல் நீண்டபடியே இருக்க, அரங்கின் அதிர்வோசை மேலும் மேலும் கூடியது. அந்தப் போர்களின் வெற்றிகளுக்குப் பின்னர், நிகழ்ந்த கொண்டாட்டங்கள், அரங்கினுள் மீண்டும் நிகழத்தொடங்கின.
 
மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, முரசு, கொடி, ஆணை எனப் பாண்டியப் பேரரசின் பத்து பெரிய அடையாளங்களுக்கான திருப்பெயர்களை வரிசைப்படுத்தி வணங்கினான் கட்டியங்காரன்.

சூல்கடல் முதுவனுக்கு ஆடல்களைக் காண்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை. வந்ததிலிருந்து பாண்டிய நாட்டின் மகா கணியன் திசைவேழரைச் சந்தித்து உரையாட வேண்டும் என்பதில் விருப்பத்தோடு இருந்தார். தாம்பூலம் தரித்த நாள் அன்று சந்தித்து வணங்கிக் கொள்ளத்தான் நேரம் கிடைத்தது. பேசிக்கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தை அதற்குப் பயன்படுத்தலாம் என எண்ணியவர், உதவியாளர் களிடம் அவரின் மாளிகைக்கு அழைத்துச்செல்ல உத்தரவிட்டார்.

p85d.jpg

அரண்மனையின் தென்திசை மாளிகையில் தான் அவர் தங்கியிருந்தார். மாளிகையின் மேல்மாடத்தில் ஒளிரும் விண்மீன்களைப் பார்த்தபடி இருந்த திசைவேழரை, மேல்மாடம் சென்று வணங்கினார் சூல்கடல் முதுவன்.

திசைவேழர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். “ஆடல் அரங்கில் இருக்கவேண்டிய நேரத்தில் என்னைக் காண வந்திருக்கிறீர்கள்?” என்றார்.

“ஆடல் மகளிரை எங்கும் பார்க்கலாம். திசைவேழரை இங்கு மட்டும்தானே பார்க்க முடியும்.”

புன்முறுவல் பூத்தபடி இருவரும் இருக்கையில் அமர்ந்தனர்.

“இந்த விரிந்த வானத்தை எங்கும் பார்க்கலாம். ஆனால், இத்தனை கலைஞர்கள் பங்கெடுக்கும் ஆடல் நிகழ்வை இந்த அரங்கில்தானே பார்க்க முடியும். நீங்கள் ஏன் அங்கு வராமல் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்?” என எதிர் வினாவை எழுப்பினார் சூல்கடல் முதுவன்.

திசைவேழரின் உதட்டில் மெல்லிய சிரிப்பு ஓடியது. இருவரும் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

“எங்கிருந்தும் வானத்தைப் பார்க்கலாம். ஆனால், எங்கிருந்து பார்க்கிறோம் என்பதுதானே முக்கியம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வானத்தைப் பார்க்கும் கோணமும் நான் இருக்கும் இடத்திலிருந்து வானத்தைப் பார்க்கும் கோணமும் வெவ்வேறானவை. கடல் அதன் அலைகளின் வழியாக அறியப்படுவதைப்போல வானம், அதைக் காணும் கோணத்தின் வழியாகத்தான் காட்சிப்படுகிறது.”

“இதற்குத்தான் நான் உங்களைப் பார்க்க வந்தேன். பாண்டிய நாட்டில் நிலைகொண்டுள்ள வானியல் அறிவைப் பற்றியும், உங்களைப் பற்றியும் பெரும்புலவர் கபிலர் பாடியுள்ள பாடல்களைக் கேட்டுள்ளேன். அதனாலே உங்களோடு உரையாட விரும்பி வந்தேன்.”

 “கபிலர் நம்மொழியின் பெருங்கவி. அவருக்கு ஏனோ வானியல் மட்டும் வசப்படவே இல்லை. கோள்மீன்களையும் நாள்மீன்களையும் பற்றி நானும் எவ்வளவோ சொல்லியுள்ளேன். ஆனாலும், அவரது ஐயங்கள் தீர்ந்தபாடில்லை. ஆனால், அவர் படைத்த கவிதைகளைக் கொண்டுதான் பலரும் என்னை அறிந்து கொள்கின்றனர். அறியாதவரைக் கொண்டு அறியப்படுதல் சற்றே நாணச் செய்கிறது” என்றார் திசைவேழர்.

‘கபிலர் மூலம் உங்களை அறிந்தேன்’ எனச் சொல்வது அவருக்கு மகிழ்வைத் தரும் என்று அல்லவா நினைத்தேன். இப்படி ஆகிவிட்டதே எனச் சற்றே அதிர்ச்சி அடைந்தார் முதுவன். ஆனாலும், வெளிக்காட்டிக்கொள்ளாமல் சொன்னார், “நான் செல்லும் எல்லா நாடுகளிலும் காலக்கணியர்கள் இருக்கிறார்கள். அரசரின் அவையில் பெரும் தகுதியோடு அவர்கள் வீற்றிருப்பதை எங்கும் பார்க்கிறேன். அந்தக் கணியர்கள் யார், அவர்களின் கணிப்பு முறை என்ன, அவர்கள் நிலவை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணிக்கின்றனரா, அல்லது கதிரவனை அடிப்படையாகக்கொண்டு காலத்தைக் கணிக்கின்றனரா, அவர்களின் கோணம் எப்படிப்பட்டது... என உரையாடத் தோன்றியதே இல்லை. காலம் முழுக்கக் கடலில் கிடக்கும் நமக்கு, அரண்மனைவாசிகள் சொல்ல ஒன்றுமில்லை என்றுதான் தோன்றும். ஆனால், பாண்டியப் பேரரங்கில், எண்ணிலடங்காத கலைஞர்கள் சுழன்றாடும் ஆடல் நிகழ்வை விட்டுவிட்டு உங்களைக் காண என் மனம் உந்தித்தள்ளியதற்குக் காரணம், கபிலர் பாடிய பாடல்கள்தான். அவருக்கு வானியலைக் கணிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், உங்களைச் சரியாகக் கணித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.”

சட்டென திசைவேழரிடமிருந்து மறுமொழி வந்துவிடவில்லை. சிறிது நேரத்துக்குப் பின் சொன்னார்...

“நம் மொழி ஆசான்கள் எல்லோருமே வானியல் ஆசான்களாக இருந்துள்ளனர். கோள்களின் பெயரையே நாள்களின் பெயராகச் சூட்டினர். விண்மீன் கூட்டங்களுக்குச் சூட்டிய பெயரையே மாதங்களுக்கும் சூட்டினர். இது வெறும் பெயர்சூட்டல் அல்ல. அபாரமான வானியல் அச்சை வாழ்வுக்குள் பொருத்தும் செயல். இந்தப் பெரும் காலச்சுழற்சிக்குள்தான் நமது ஒவ்வொரு நாளும் சுழல்கிறது என்ற உண்மையை நாள் தவறாமல் எடுத்துச்சொல்லும் பேரறிவு. இயற்கையின் சுழல்தட்டில் அமர்ந்து புதுவிசைகொண்டு சுழலும் உயிரினம் நாம்.

இந்தப் பேரறிவின் தொடர்ச்சியைப் பாணர்களிடம் நான் காண்கிறேன். ஆனால், எழுத்து கற்ற புலவர்களிடம் இது இல்லை. காலத்தின் அறிவு கணியர்களுக்கானது எனப் புலவர்கள் நினைக்கின்றனரோ எனத் தோன்றுகிறது. அதுதான் எனது கவலை” என்றார்.

திசைவேழரின் மறுமொழி முற்றிலும் வேறு ஒரு பார்வையைக் கொண்டிருந்தது. அது சூழ்கடல் முதுவனை, மேலும் சிந்திக்கத் தூண்டியது.

ர்ப்பரித்து எழும் பெரும் குரல் அடங்கவே இல்லை. நூறுகால் அரங்கு திணறியது. கட்டியங்காரனின் குரல் அனைவரையும் துடிப்பு நிலைக்கு மேல் ஏற்றிக்கொண்டிருந்தது.

ஆடை, அணி, உண்டி, தாம்பூலம், நறுமணம், காமம், இசை, கொண்டாட்டம் என்னும் எண்வகை இன்பத்தில் திளைக்கத் தொடங்கியது அரண்மனை வளாகம். இந்த இரவு பேரின்பத்தின் இரவு. இந்த இரவின் தொடக்கம், இந்த அரங்கின் கொண்டாட்டத்தின் வழியே தொடங்கியது.

p85e.jpg

எழுவகை முழவுகள் மேடையின் இடது புறம் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. ஆடல் கற்பிப்போன், இசையோன், பாடலாசிரியன், குழலோன், யாழ்வல்லுநர்கள்... என எண்ணற்ற கலைஞர்கள் மேடையில் நிறைந்தனர். கட்டியங்காரன் தன் குரலை உயர்த்திச் சொல்லவும் திரைச்சீலைகள் அகலத் தொடங்கின. எல்லோரின் கவனமும் மேடையில் குவிந்தது. ஏற்றப்பட்ட சிறுவிளக்கின் வழியே பொன்நிற ஒளி சிந்திக்கொண்டிருந்தது. நூறு நரம்புகள்கொண்ட மூன்று யாழ்கள் மேடையின் மூன்று புறமும் இருந்தன. யாழை மீட்ட அருகே வந்த பெண்கலைஞர்கள் நரம்பின் மீது தம் விரலை மெள்ள நகர்த்தினர். அதிரும் நரம்பின் வழி இசை கசியத் தொடங்கியது.

கூட்டத்தின் ஆர்ப்பரிக்கும் குரல் மெள்ள ஒடுங்கத் தொடங்கியபோது நடனமங்கைகள் எழுவர் வந்து நடுக்களம் இறங்கினர். ஒரு மெல்லிய வட்டமடித்து அறுவரும் உட்கார, நடுவில் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள். யாழிசை நின்றுவிட்டது. பிற இசைக்கருவிகள் எவையும் இசைக்கப்படவில்லை. விளக்கின் நாவுகள் தவிர, மேடையில் அசையும் பொருள் எதுவும் இல்லை. நடுவில் நிற்பது சிலையாகப் புலப்பட்டது. பார்வையாளர்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். யவனர்களுக்கு விளக்கிச் சொல்ல எதுவும் தேவைப்படவில்லை.

சற்று இடைவெளிக்குப் பின். சிலை மெள்ள அசைந்து, வலது காலைத் தூக்கி மேடையின் முன்புறம் சட்டென எவ்விக் குதித்தது. குதித்த அந்தத் துள்ளலுக்குள் அறுபது இசைக்கருவிகளும் இணைந்தன. யாழின் நரம்பும் முழவின் தோலும் பறையின் முகமும் ஏககாலத்தில் அதிர்ந்தன. குதித்த அவளின் காலடி தரைதொடும்போது நிலம் வெடிப்புறுவதைப்போல பேரோசை எழுந்தது. எழுந்த பேரொலின் மீது கூட்டத்தினரின் ஆர்ப்பரிப்பு விசைகொண்டு மோதியது.

இன்னும் அவளின் விழிகள் சுழலத் தொடங்க வில்லை. அதற்குள் நூறுகால் மண்டபத்தின் தூண்கள் ஆரவார ஓசையால் தள்ளாடத் தொடங்கின.

யதானதால் திசைவேழரின் நடையில் மட்டுமே தள்ளாட்டம் தெரிந்தது. அவரது கருத்தில் இருக்கும் உறுதி காலத்தால் அசைக்க முடியாததாகத் தோன்றியது. அவரிடம் கேட்க எவ்வளவோ இருந்தும்.

மிகமுக்கியமான கேள்வியை மட்டும் கேட்டார் சூல்கடல் முதுவன்.

“யவனர்கள் ஒரு நாளை 24 பகுதியாகப் பகுக்கின்றனர். காலவட்டத்தை 12 ஆண்டுகள் என  வகுக்கின்றனர். நாமோ ஒரு நாளை 60 நாழிகைகளாகப் பகுக்கிறோம். கால சுழற்சியின் வட்டத்தை 60 ஆண்டுகள் என வகுத்துக் கொண்டுள்ளோம். இதில் எது சரியானது?”

சற்று அமைதிக்குப் பின் திசைவேழர் பேசத் தொடங்கினார், “எது சரி, எது தவறு, என்று ஏன்  வரையறுக்க நினைக்கிறீர்கள்? காலத்தை ஒருபோதும் வரையறுக்க முடியாது. தட்டின் மீது உட்கார்ந்துகொண்டு தராசை எப்படி எடைபோடுவீர்கள்? பகுக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். 

சனிக்கோளும் நிலவும் பிற விண்மீன் கூட்டங்களும் ஒரே அமைப்புக்கு மீண்டும் வந்து சேர 60 ஆண்டுகள் ஆகின்றன என்பதை நம் முன்னோர்கள் கணித்துள்ளனர்.  அதனால்தான் காலச்சுழற்சி வட்டத்தை 60 ஆண்டுகள் என வரையறுத்தனர். அதே அளவு வட்டத்தை ஒவ்வொரு நாளும் கொண்டுள்ளது என வரையறுத் தார்கள். எனவே, ஒரு நாளை 60 நாழிகைகளாகப் பகுத்துள்ளனர்.

எனக்கு யவனர்களின் கால அளவீடு தெரியாது. ஆனால், நீங்கள் சொன்ன குறிப்பில் இருந்து எனக்குத் தோன்றுவது. அவர்கள் வியாழன் கோளை அடிப்படையாகக்கொண்டு கால அட்டவணையை உருவாக்கியிருக்கலாம். வியாழன் ஒரு சுழற்சியை முழுமைகொள்ள 12 ஆண்டுகள் ஆகின்றன. அதையே சுழற்சி வட்டமாக வரையறுத்திருக்கலாம். அதன் அடிப்படையிலே பகலை 12 பகுதிகளாகவும் இரவை 12 பகுதிகளாகவும் பிரித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.”

“இதில் எதைப் பின்பற்றுவது பொருத்தம்?”

“உனக்கு எது தேவைப்படுகிறதோ, அதை எடுத்துக்கொள். உழவனுக்குக் கதிரவனும் வணிகனுக்கு விண்மீனுமே அதிகம் தேவைப் படுகின்றன. இது பொதுவானது. எல்லா வணிகனின் தேவையும் ஒன்று அல்லவே, கடல் வணிகனின் தேவை இன்னும் அதிகத் துல்லியத்தை எதிர்பார்க்கக் கூடியது. எனவே உங்களுக்கானதை நீங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள்.”

02.jpg

திசைவேழரின் மறுமொழி கேட்டு முதுவன் மெய்சிலிர்த்தான். என்ன ஒரு பரந்த அறிவு. இயற்கைக்கு முன் குறுகிநிற்கும் தன்னடக்கம். உண்மை எங்கிருந்தாலும் ஏற்கும் மனநிலை. அதுதான், இவரைப் பேராசானாகப் போற்றச் சொல்கிறது.

ளவரசன் பொதியவெற்பனைப் போற்றித்தான் அந்தப் பாடல்கள் அமைந்திருந்தன. ஆனால் ஆடல், பாடல், அழகு என மூன்றிலும் இணைசொல்ல முடியா ஒருத்தி அதைக் கலை என நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது அது கிளர்த்தும் உணர்வுக்கு அளவு ஏதும் இல்லை.

வழக்கமான வார்த்தைகள் எதுவும் இல்லாத புதுப்பொலிவுகொண்டிருந்தன; அவள் உச்சரிக்கும் வார்த்தைகள். சற்றே குள்ளமான பொதியவெற்பனின் உருவம் கூடலில் எவ்வளவு வாகானது என அவள் பாடும்போது, அவனால் இருக்கையில் எப்படி உட்கார்ந்திருக்க முடியும்.

அவன் இதுவரை நுகராத வாசனை அவன் மூக்குக்கு அருகில் மணம் வீசிச் சுழன்றாடிக் கொண்டிருந்தது. பொதியவெற்பனின் கண்கள் செருகின. இந்த உண்மைகள் எப்படி இவளுக்குத் தெரியும் எனத் தோன்றியது. மறுகணமே தனக்கு எப்படி இவள் தெரியாமல்போனாள் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அடுத்த கணம் இவ்வளவு பேருக்குத் தெரிவதைப்போல இவள் ஏன் ஆடிக்கொண்டிருக்கிறாள் எனக் கோபம் வந்தது.

அவள் ஆடினாள்; அவன் அடங்கினான்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 30

 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

நண்பகலுக்குப் பின்னர்தான் எல்லோரும் படுக்கையைவிட்டு எழுந்தனர்.  முந்தையநாள் கொண்டாட்டம் முடிந்ததென்னவோ அதிகாலையில் தான். உறங்கிய பிறகு, கனவில் தொடர்ந்த ஆட்டங்கள் எப்போது முடிந்திருக்குமோ யார் அறிவார்?. மாலை நேரம் நெருங்கும் வேளையில் சித்திர மாளிகைக்கு ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.

பேரரசர் வரும் நேரம் அறிந்து ஏற்பாடுகள் ஆயத்தமாயின. பாண்டிய நாட்டின் பெரும்படைத் தளபதி கருங்கைவாணன் நேற்றுதான் தலைநகர் திரும்பியிருந்தான்.

p88a.jpg

கருங்கைவாணனைப் போன்ற ஒரு மாவீரன் எப்பேரரசுக்கும் தளபதியாய் அமைந்ததில்லை என்றே சொல்கின்றனர். அவன் தளபதியாக வழிநடத்திச் சென்ற எல்லா போர்களிலும் இணையற்ற வெற்றிகளே கிடைத்துள்ளன. பேரரசுக்கு வெற்றி கிடைப்பது அரிய செய்தியல்ல. ஆனால், அவனடைந்த வெற்றிகள் அனைத்தும் சோதித்துப் பார்த்து அடைந்த வெற்றிகள்.

எதிரிகள் வீசும் அம்புகளுக்கு இடையில் போர்க்கலையின் பயிற்சியை நிகழ்த்த அளவற்ற திறன் வேண்டும். அவன் எதிரிகளை வைத்துப் போரினை அறியவே முயல்கிறான். போர் தொடங்கிய சில நாழிகைகளிலேயே களத்தின் ஒவ்வோர் இயக்கமும் அவனால்  கணிக்கப்பட்ட வடிவத்துக்குள் வந்துவிடுகிறது. எதிரிகள் அவன் சொற்பேச்சைக் கேட்டு வந்துசேருவதைப் போலத்தான் அவனது திட்டத்துக்குள் தலை நுழைத்து எட்டிப்பார்க்கின்றனர். பார்த்துக் கொண்டிருக்கும்போதே தலைகள் உடலைவிட்டு தள்ளிப்போய் விழுகின்றன.

நாடுகளைப் பிடிப்பதென்ற நிலையைக் கடந்து குறிப்பிட்ட மக்கள்குலங்களைத் தேடித்தேடி வேட்டையாடுகின்றனர். எல்லாவிதத் திறன்களையும் சேகரித்துக்கொள்ள வேண்டியது ஒரு பேரரசின் தேவையாக இருக்கிறது. இப்போதுகூட குறிப்பிட்டதொரு குலத்தை வெற்றிகொண்டுதான் திரும்பியிருக்கிறான். இத்திருமணத்தை முன்னிட்டு சூல்கடல் முதுவனுக்கு மிகச்சிறந்த பரிசைத் தர பேரரசர் விருப்பப்பட்டார்.

அதற்காகவே, பெரும்தாக்குதல் நடத்தப்பட்டது. சிலநூறு பேரைப் பிடிக்க பல்லாயிரம் வீரர்கள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல். வழக்கமாக தாக்குதல் முடிந்து படைகள் பாசறைக்குத் திரும்பினால், தலைநகர் முழுவதும் அவர்களின் வீரக்கதைகள்தான் பேசப்படும். ஆனால்,  இப்போது அதையெல்லாம் பேச யாருமில்லை.  முந்தையநாள் பெருவிருந்தில் யார் எங்கே குடைசாய்ந்தனர் என்பதுதான் பேச்சாக இருக்கிறது.

ந்திறங்கிய யவன அழகிகளைப் பற்றிப் பேசாதவர்கள் யாருமில்லை. ஒளிகுன்றாப் பேரழகு என்று பார்த்தோர் சொல்கின்றனர். யவனத் தளபதிகளும் பாண்டிய நாட்டைப்பார்த்து வியந்துபோயிருந்தனர். மேற்கூரை மூடப்பட்ட நூற்றுக்கால் அரங்கே அவர்களைப் பெருவியப்பில் ஆழ்த்தியதாக மொழிபெயர்ப்பாளர்கள் கூறினர். அவர்கள் நாட்டில் உள்ளதெல்லாம் மூடப்படாத திறந்தவெளி அரங்குகள்தானாம்.

பேச்சினூடே ஒவ்வொருவராகச் சித்திர மாளிகைக்கு வந்து சேர்ந்தனர். வணிகர்குலத் தலைவர்கள் நால்வர் உள்ளே நுழைந்தபோது இளவரசனும் கருங்கைவாணனும் சாகலைவனும் அங்கே இருந்தனர். முசுகுந்தரும் வெள்ளி கொண்டாரும் உள்நுழைந்தனர். இன்னும் சற்றுநேரத்தில் பேரரசரும் சூல்கடல் முதுவனும் வந்துவிடுவார்கள் எனச் செய்தி சொன்னார்கள். பணியாள்கள் பளிங்குக் குவளைகளில் தேறலை ஊற்ற  ஆயத்தமாயினர்.

“நேற்றைய கொண்டாட்டத்தில், மேற்கூரையிலிருந்து தொங்கும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் ஒருத்தி ஆடினாளே, இப்போதும் என்னால் அதை நம்ப முடியவில்லை” என்றான் சாகலைவன்.
“அவள் தந்தரையில் ஆடினால்கூட நமது கண்களால் நம்பமுடியாமல்தான் இருந்திருக்கும்” என்றார் கருங்கைவாணன்.

p88b.jpg

பேசிக்கொண்டிருக்கும்போது வெள்ளி கொண்டார் கேட்டார், “அந்த ஆட்டம் எப்பொழுது நிகழ்ந்தது?”

எல்லோரும் சிரித்தனர்.

“உங்களின் ஆட்டம் தொடங்கிய பின்னால் தான்” என்றான் சாகலைவன்.

“அவளாவது கயிற்றைப் பிடித்து ஆடினாள். நீங்களோ காற்றைப்பிடித்தே ஆடினீர்கள்” என்றார் முசுகுந்தர்.

சிரிப்பு அரங்கை நிறைத்தது.

பேரரசர் வரும் அறிவிப்பு ஓசை கேட்டது. சிரிப்பொலியை அடக்கி, வாயில் நோக்கி வணங்கி நின்றனர்.

தேறல் மட்டுந்தான் அருந்தும்போது தரும் மயக்கத்தை, அதன் மணத்தை நுகரும்போதே தந்துவிடும் சிறப்பைக்கொண்டது. அதனாலேயே குவளையில் ஏந்தியபடி மோந்தும் விலக்கியுமாக ஒரு விளையாட்டை விளையாடுவர். 
 
மூக்கில் ஏறும் மயக்கம் கணநேரத்திலேயே நடு உச்சியைத் தொட்டுத் திரும்புகிறது. கலையாமல் இருக்கும் மேகம்போல அது உச்சந்தலையில் நீண்டு நிலைகொள்ளும். எப்போது குடிக்கத் தொடங்குகிறீர்களோ அதன்பின், அது வயிற்றோடும் எரிகொள்ளும் மயக்கத்தோடும்  தொடர்புடையதாகிவிடுகிறது. எனவே, முதல் மிடறை அருந்தும் வரை மயங்கும் காலத்தை நீட்டித்துச் செல்பவன்தான் தேறலில் தேர்ந்தவனாகிறான்.

இங்கிருப்பவர்கள் எல்லோரும் தேர்ந்தவர்கள் தான். ஏந்திய குவளையை மூக்குகள் நுகர்ந்தபடி பேச்சுக்கள் மட்டுமே சுழன்றுகொண்டிருந்தன. அரங்கின் ஆட்டம் பற்றிப் பேசுதல் மிதக்கும் மனநிலைக்கு மெருகேற்றியது. “திரைச்சீலை விலக மறுத்த கணத்தில் பணியாளன் ஒருவன் ஓடிப்போய் அதனைச் சரிசெய்தான். அது தற்செயலான நிகழ்வு என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால், அரங்கினரின் கவனம் முழுவதையும் திரைச்சீலையில் நிறுத்தி, தனது சீலையை மாற்றி சுழன்று உள்நுழைந்தாளே அவள். அந்தக் கணம்தான் நேற்றைய ஆட்டத்தின் உச்சம்” என்றார் முசுகுந்தர்.

தேறலை அருந்தியபடி பொதியவெற்பனின் வாய் முணுமுணுத்தது, “உச்சத்தை அறிந்தவன் நான் மட்டுமே!”

எல்லோரும் ஆடல் அரங்கையே பேசிக் கொண்டிருக்க, சூல்கடல் முதுவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்துப் பேரரசர் கேட்டார்... ”நீங்கள் பேரரங்கில் கலந்துகொள்ளவில்லையா?”

“இல்லை அரசே. நான் திசைவேழரைக்  காணப் போயிருந்தேன். மிகப்பயனுள்ள பொழுதாக அது அமைந்தது.”

“நீங்கள் அடைந்த பயனை எங்களோடு பகிர்ந்துகொள்ளலாமா?”

“யவனர்களுக்கும் நமக்குமான வானியல் வேறுபாட்டைப் பற்றி, பொருத்தமானவரிடம் உரையாட வேண்டும் என நீண்டநாள் நினைத் திருந்தேன். அது நேற்றுதான் நிறைவேறியது.”

“திசைவேழர் வானியலின் பேராசான். நீங்களோ கடல் வணிகத்தின் பெருமுதுவன். இருவரும் உரையாடினால் எவ்வளவு அறிவார்ந்த உரையாடலாக அது இருந்திருக்கும். எனக்குக் கேட்க வாய்ப்பின்றிப் போய்விட்டதே.”

பேரரசரின் இச்சொல் சூல்கடல் முதுவனை நாணச்செய்தது.

“யவனர்கள் பெரும்பேரரசை ஆண்டு கொண்டிருப்பவர்கள். நம்மை அவர்களோடு ஒப்பிட முடியாது. ஆனாலும், இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அப்படித்தானே முதுவரே?” என்று கேட்டார் முசுகுந்தர்.

p88c.jpg

"ஆம்” என்றார் முதுவன். “கொள்வதற்கு விலையில்லாச் செல்வம் அவர்களிடம் உண்டு, கொடுக்கவோ ஒப்பிடமுடியா வளம் நம்மிடம் உண்டு. இப்பெரும் வணிகம் நடக்கும் கடலை நாம் ‘நேமி’ என்கிறோம்; அவர்களும் இதைப்போன்றே சொல்கின்றனர். நாம் வட்டத்தை ‘திகிரி’ என்கிறோம்; அவர்களோ ‘டிகிரி’ என்கின்றனர். காலத்தின் அளவீடுகளை நாம் ‘ஓரை’ என்கிறோம்; அவர்களோ ‘ஹோவர்’ என்கின்றனர். வெம்மையைக் குளுமையாக்கும் அதிசய மரமாக நமக்கு ‘வேம்பு’ இருக்கிறது; அவர்களுக்கோ ‘ஆலிவ்’. இரண்டின் இலையிலும் இருப்பது ஒரே கசப்பு. இரண்டின் நிழலிலும் இருப்பது ஒரே குளுமை. நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வணிகத்தால் எவ்வளவோ கொடுக்கல் வாங்கல் நடந்திருக்கிறது”. 
 
”இவ்வணிகம் அவர்களின் தேவையில் இருந்துதான் தொடங்கி வளர்ந்தது. அதற்கான மாற்று ஈடாகத்தான் நாம் பலவற்றைப் பெற்றுக்கொள்கிறோம். அந்தத் தொடக்க கட்டத்திலிருந்து நாம் வெகுதூரம் முன்னோக்கி வந்துவிட்டோம். இப்போதைய நிலையில் கடல் வணிகத்தில் நமது கை ஓங்க வழியென்ன?” எனக் கேட்டார் முசுகுந்தர்.

கற்பனைக்கான மயக்கத்துக்கு இப்போது தேறலோ, நேற்றைய ஆட்டத்தின் நினைவோ தேவைப்படவில்லை; வணிகத்தின் பெருங்கனவே போதுமானதாக இருந்தது.

 “கனவென்பது உண்மையின் மீது அகலாத திரையைப்போலப் படிந்தே கிடக்க வேண்டும். காதலுக்குத்தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு. அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெருந்தண்டனையைக் கனவுகளே அளிக்கின்றன” என்றாள் பொற்சுவை.

வைகையின் கரையோரம் பூவிலி மன்றத்தில் இருந்து ஓடும் நதியைப் பார்த்துக்கொண்டே பொற்சுவை கூறியது சுகமதிக்கு அதிர்ச்சியைத் தந்தது.

சக்கரவாகப்பறவை கடலின் குறியீடாக மட்டுமல்ல, காதலின் குறியீடாகவும் இருக்கிறது. எனவே, அவ்விடம்விட்டு வெளியில் வருதல் நலம் எனத் தோன்றியதால், வைகைக்கரைக்கு அழைத்துவந்தாள் சுகமதி.

``நதி கனவோடும் காதலோடும் கலந்த ஒன்றல்லவா? அதுவும் வைகை, காதலர் திருவிழாவைக் காலங்காலமாகத் தனது உள்ளங்கையில் வைத்துக்கொண்டாடும் நதியல்லவா? இங்கு வந்தால் வேறு எதன் நினைவு வரும் என்று நீ நினைத்தாய்?” எனக் கேட்டாள் பொற்சுவை.

”வைகையைத் தமிழ்நதி என்றுதானே புலவர்கள் அழைக்கின்றனர். அதனால் உங்களின் நினைவு இலக்கியத்தின்பால் செல்லும் என நினைத்தேன்” என்றாள் சுகமதி.

 “இலக்கியமும் காதலும் வெவ்வேறா சுகமதி?” எனக் கேட்டவள் கூறினாள், “நீ கப்பலுக்குள் இருக்கும் நீரணி மன்றத்தில் நாட்டியம் பார்த்திருக்கிறாயா?”

 “ஒரே ஒரு முறை, மணிவாய்த்தீவுக்குப் போகும்போது உங்களோடு சேர்ந்து பார்த்திருக்கிறேன்”.

“அப்போது என்ன நடந்தது என்று  நினைவுபடுத்திப் பார். நடனமாடுபவளின் கால்களை நாம் வியந்து பார்த்துக் கொண்டி ருப்போம். ஆனால், அதைவிட அதிகமாக நாம் ஆடிக்கொண்டிருப்போம். எது நடனம் என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். இலக்கியமும் காதலும் அப்படித்தான். எது இலக்கியம், எது காதல், என்பதைப் பிரித்தறிய முடியாது. ஒன்றின் நிழலாக இன்னொன்று இருக்கும். ஆனால், எது நிழல் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.”

p88d.jpg

சுகமதி வாயடைத்துப்போனாள்.

வைகையின் சிற்றலைகள் அடுத்தடுத்து வந்து பொற்சுவையின் கால்களை நனைத்து போயின. ஆடையின் கீழ்விளிம்பு முழுவதும் ஈரமானது.

“நேற்று ஆடலரங்குக்கு நீங்கள் ஏன் வரவில்லை என்றும், ‘நீயாவது சொல்லி அழைத்துவர வேண்டாமா?’என்றும் பலர் என்னைக் கேட்டனர்”.

“நீ என்ன சொன்னாய்?”

“பொற்சுவை மிகச்சிறந்த நடனமங்கை. யாருடைய ஆட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று அவருக்குத் தெரியாதா?” எனப் பதிலுக்குக் கேட்டேன்.

மறுமொழியால் மகிழ்ந்த பொற்சுவை கேட்டாள், “நான் சிறந்த நடன மங்கையா சுகமதி?”

“இதில் என்ன ஐயம்? நீங்கள் ஆடிய ஆட்டத்தைக் கண்டு மயங்கியவன்தானே அந்த மாவீரன்.”

கேலிச் சிரிப்பொன்றை உதிர்த்தபடி பொற்சுவை கேட்டாள், ``நீ எதற்காக என்னை வைகைக்கரைக்கு அழைத்து வந்தாய்? இப்போது எதை நினைவூட்டுகிறாய் எனக்  கவனித்தாயா?”

அப்போதுதான் சுகமதிக்கு தான் செய்த தவறு புரிந்தது. நாக்கை மடக்கிக் கடித்தாள்.

“தப்பிக்க முடியாது சுகமதி. நானும் நீயும் காதலைவிட்டு ஒருபோதும் தப்பிக்க முடியாது. ஆடையின் கீழ்விளிம்பை நதிநீரும், கழுத்தின் மேல்விளிம்பைக் கண்ணீரும் கடந்து கொண்டிருக்கின்றன. நாம் என்ன செய்ய முடியும்?”

“இப்படியொரு மயக்கம் உள்ளுக்குள் சுழல ஆரம்பித்தால் யார்தான் என்ன செய்ய முடியும்?” தேறலின் சுவையை இதழ்கள் பருகத் தொடங்கிய நேரத்தில் சூல்கடல் முதுவன் பேசத் தொடங்கினான்.

“யவனத்தேறல் இதனினும் கடுஞ்சுவைகொண்டது. ஆனால், மணமற்றது. பாண்டிய நாட்டுத் தேறலின் தனிச்சுவையே மணத்தாலேயே மயக்குதல்தான்.”

“யவனத்தேறல் மணமற்றுப் போகலாம். ஆனால், யவன அழகிகள் பார்த்தாலே மயங்கவைக்கும்p88e.jpg மாயங்களன்றோ,  அவர்களை என்ன சொல்வது?”

ஏளனமாய் ஒரு சிரிப்புச் சிரித்தார் முதுவன்.

“இதில் சிரிக்க என்ன இருக்கிறது?” எனக் கேட்டார் முசுகுந்தர்.

“நீங்கள் பேரழகிகள் என்று வர்ணித்து மயங்குகிறீர்களே, அவர்களில் பெரும் பான்மையோர் யவன அழகிகள் அல்லர்.”

அவையிலிருந்த எல்லோருக்கும் உச்சியில் ஏறிய மயக்கம் சட்டெனக் கீழிறங்கியது. பேரரசர் திகைத்துப் போனார்.

முதுவன் அதனைக் கண்டுகொள்ளாமல் தேறலைப் பருகினான்.

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? அவர்கள் யவன அழகிகள் இல்லாமல் வேறு யார்?”

“அவர்கள் எல்லோரும் பாப்ரிகோன் அழகிகள். ஒரு சாயலில் யவன அழகிகள்போல் இருப்பார்கள். அவர்களைத்தான் கப்பலில் வந்து இறக்குகின்றனர். எங்களுக்கு உண்மை தெரியும் என்பதால், இம்முறை மூன்று பேரை மட்டும் யவனத்திலிருந்தும் மீதம் இருபதுக்கும் மேற்பட்டோரை பாப்ரிகோனிலிருந்தும் அழைத்துவந்து பரிசளித்தனர்”.

எல்லோரும் அதிர்ந்துபோனார்கள். சற்றே பதற்றமும் உருவானது.

“பரிசளிக்கப்பட்டவர்களில் மூவர் மட்டுந்தான் யவன அழகிகள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார் வெள்ளி கொண்டார்.

குவளையை மாற்றி, நிரப்பிய தேறலைக் கையிலேந்தியபடி முதுவன் சொன்னான், “நாங்கள் வணிகத்தில் பெரும்பொருள் ஈட்டு பவர்கள் மட்டுமல்ல; பெரும்பொருள் இழப்பவர்களும்தான்”

பேரரசருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.

“இந்த ஏமாற்றம் ஒரு தரப்புக்கு மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். இருதரப்புக்கும்தான் நிகழ்கிறது” என்றார் முதுவன்.

அந்தத் தரப்புக்கு என்ன நிகழ்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வத்தோடு இருந்தனர்.

“இங்கே வாங்கும் முத்துகளை பலநூறுமடங்கு விலைக்கு அவர்களின் சொந்தநாட்டினரிடம் விற்பனை செய்கின்றனர். உங்களுக்குத்  தருவனவற்றில் நிறமும் மூக்கும்தான் வேறுபடுகின்றன. அவர்களுக்குத் தருவனவற்றில் நூற்றுக்கு நூறு வேறுபடுகின்றன.”

எல்லோரும் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

முதுவன் சொன்னான், “இதுதான் வணிகத்தின் நியதி. விற்கப்படும் இடத்தில் முடிவாகும் விலை, பொருளுக்கு மட்டுமல்ல; அதைப் பற்றிய அறியாமைக்கும் சேர்த்துத்தான்”.

“பலநூறு மடங்கு அதிகப்படுத்தி விற்கிறார்கள் என்றால், அதை ஏன் அவர்கள் மட்டும் பெற வேண்டும்?”

“இவ்வணிகப்பாதையின் கட்டமைப்பைக் கையில் வைத்திருப்பது அவர்கள்தானே.”

“அவர்கள் வைத்துள்ள கட்டமைப்பு என்ன என்பதனைச் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள். அதன்பின், நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சிந்திக்கலாம்” என்றார் முசுகுந்தர்.

“இனிமேல் சிந்திக்க என்னடி இருக்கிறது. எல்லாம் முடிந்துவிட்டது.”

“என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. எதனால் தங்கள் தந்தை இந்த முடிவை எடுத்தார்?”

“பாண்டிய நாட்டு முத்துகள் நூறுமடங்கு அதிக விலைக்கு யவனத்தில் விற்பனையாவதை அறிந்துதான்.”

“அதற்காகவா எடுத்திருப்பார்?”

p88f.jpg

“வேறு எதற்காக எடுத்தார்? மிளகின் விலை இதைவிட அதிகமாக இருந்திருக்குமேயானால் இத்தனை கப்பல்களும் முசிறியில்தானே நங்கூரம் பாய்ச்சியிருக்கும். இந்நேரம் நாம் இருவரும் பேரியாற்றின் கரையில் பேசிக் கொண்டிருந்திருப்போம்.”

சுகமதி திகைத்தபடி நிற்க, பொற்சுவை தொடர்ந்தாள்... “யவனர்கள் எண்ணற்ற அழகிகளைக் கொண்டுவந்துள்ளதாகக் கூறினாயே, அதற்கு என்ன காரணமோ, அதே காரணம்தான் என் தந்தை என்னைக் கொண்டு வந்துள்ளதற்கும்.”

சுகமதி உறைந்து நின்றாள்.

வைகையைப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தாள் பொற்சுவை. “ஓடும் நீருக்குள் உறங்கும் நதி” என்று மனதுக்குள் ஒரு வரி தோன்றியது. அதுதான் பெண் எனவும் தோன்றியது”.

சுகமதி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

பொற்சுவை சுகமதியைப் பார்த்துக் கேட்டாள், “என்ன சுகமதி பேச்சற்றுப் போனாய்?”

“இல்லை… ஒன்றுமில்லை…” எனச் சொல்லி தனது உணர்வை மறைக்கப் பார்த்தாள்.

“நீயும் நானும் மட்டுமல்ல, இப்பூவிலி மன்றத்தில் வந்து நின்ற எல்லா பெண்களின் கண்களும் இப்படிக் கலங்கித்தான் இருந்திருக் கின்றன. அதை வைகை அறியும். நேற்று மணமுடி கொடுத்து வெற்றிலை மாற்றும் அரங்கில் என்னவெல்லாம் இருந்தன என்பதை நீ கவனித்தாயா?”

எல்லாவற்றையும் சுகமதி பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால், பொற்சுவை எதைக் கேட்கிறாள் எனத் தெரியவில்லை.

“அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தட்டுகள் முழுவதிலும் பூக்களும் கனிகளும் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. வேர்களும் தண்டுகளும் வைக்கப்படுவதில்லை. ஏன் தெரியுமா?”

கேள்விக்குப் பிறகுதான், சுகமதி சிந்திக்கத் தொடங்கினாள் அதற்கான காரணம் தெரியவில்லை.

“வேர்களும் தண்டுகளும் தம்மைப் பெருக்கிக் கொள்வன. பூக்களும் கனிகளும்தான் தம் இனத்தைப் பெருக்குவன. அலங்கரித்த தட்டில் வைத்து கனி மாற்றப்பட்டதன் காரணம்தான் நான் மாற்றப்படுவதும்.”

ஓரளவு கல்வியறிவுகொண்டவள்தான் சுகமதி. வணிக குலத்திலிருந்து வந்தவள்தான் அவளும்; அதனால்தான் பொற்சுவை பேசும் பொருளின் ஆழம் அவளுக்குப் புரிந்தது. ஆனால், அதைஎதிர்கொள்ளும் மனவலிமை அவளிடம் இல்லை. மனமாற்றத்துக்குத்தான் வைகைக் கரைக்குப் போவோம் என்று சொல்லி அழைத்துவந்தாள். ஆனால், இங்கு நடப்பது தழைகீழாக இருந்தது. வைகைக் கரையைவிட்டு விரைவில் அகலமாட்டோமா என்று தோன்றியது சுகமதிக்கு.

“அதுவும் தட்டில் என்னென்ன கனிகள் வைக்கப்பட்டிருந்தன என்று பார்த்தாயா?”

நினைத்துப்பார்த்து சுகமதி சொன்னாள், “பலாவும் மாதுளையும் இருந்தன.”

“இவை இரண்டும்தான் கனிகளா? எல்லோருக்கும் பிடித்த மாங்கனி ஏன் வைக்கப்படவில்லை? இவ்வளவு பெரிய பாண்டிய நாட்டில் ஒரு மாங்கனி கூடவா கிடைக்கவில்லை? ”

சுகமதிக்குக் காரணம் புலப்படவில்லை.

பொற்சுவை சொன்னாள், ``பலாவும் மாதுளையும் பல வித்துக்களைக்கொண்ட கனிகள். ``மா” ஒற்றை விதையைக்கொண்ட கனி.”

சொல்லவருவதன் பொருள் புரிந்தபோது திகைத்துப்போனாள் சுகமதி. சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் நடுங்கச் செய்வனவாக இருந்தன.

p88g.jpgபொற்சுவை மேலும் சொன்னாள், “என் உடல் எக்கனியாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், என் மனமோ ஒற்றை விதையுடைய மாங்கனி. அதில் இன்னொரு விதைக்கு இடமில்லை.”

“இன்னும் வயிற்றில் இடமிருக்கிறதா?” எனக் கேட்டபோது, சூல்கடல் முதுவன் சொன்னார், “நாங்கள் கடற்குடிகாரர்கள். நீரில் மிதப்பதும் நீரால் மிதப்பதும்தான் எங்களின் வாழ்வு.”

முதுவனின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தனர் எல்லோரும். அவர் வணிகப்பாதையின் கட்டமைப்பைப் பற்றி சொல்ல  ஆயத்தமானார். அதைக் கவனித்த பேரரசர் கூறினார், “இவ்வுரையாடலின்போது திசைவேழரும் இருந்தால் பொருத்தமாக இருக்கும். அவரை அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டதும், பணியாளர்கள் ஓடினர்.

“அவர் வந்ததும் இதைப்பற்றிப் பேசுவோம்” என்றார் பேரரசர்.

‘திசைவேழர் தென்திசை மாளிகையில் இருக்கிறார். இங்கிருந்து போய் அவரை அழைத்து வந்துசேர நேரமாகும். முதுவன் சொல்லத் தொடங்கும்போது தந்தை ஏன் இப்படிச் செய்துவிட்டார்?’ என மனதுக்குள் புலம்பினான் இளவரசன்.

‘பெருங்குவளை மூன்றைக் கடந்துவிட்டால் நினைவை நமது கட்டுப்பாட்டின் வழியே ஒழுங்குபடுத்த முடியாது. இவ்வளவு  முதன்மையான செய்தியை உளறலாகப் பேசிவிடக்கூடாது. அது மட்டுமல்ல, உடன் மூன்று வணிகர்களை வைத்துக்கொண்டு பேசுவது அறிவுடைமையல்ல. எனவே, நாளை நிதானமாகப் பேசலாம்’ என்று முடிவெடுத்த பேரரசர் சற்று நேரங்கடத்துவதற்குத்தான் இதைச் செய்தார். முசுகுந்தருக்கு மட்டும் இது புரிந்தது.

“சொல்ல மறந்துவிட்டேன். திசைவேழர் வந்ததும், அவரிடம் யாரும் கபிலரைப் பற்றி சொல்லிவிடாதீர்கள், கோபப்பட்டுவிடுவார்” என்று சொல்லிச் சிரித்தார் முதுவன்.

முதற் குவளையைக் கடக்காமல் இருந்த முசுகுந்தர் கேட்டார், “பெருங்கவி இன்னும் ஏன் மணவிழாவுக்கு வந்து சேரவில்லை?”

“மணமுடி நிகழ்வுக்கு முன்னதாக வந்துவிடுவார் என நினைத்தேன். தாம்பூலம் தரிக்கையில் அவர் இல்லாதது மனதைக் கவலைகொள்ளச் செய்தது” என்றார் பேரரசர்.

“இத்திருமணம் பற்றிய செய்தி தெரியாத இடமேயில்லை. தெரிந்தால் அவர் வராமல் இருந்திருக்க மாட்டார்.”

“ஒருவேளை நெடுந்தொலைவுள்ள தீவு எதற்கேனும் போயிருந்தால் செய்தி எட்டாமல் போயிருக்கலாம் அல்லவா?”

முதுவன் சொன்னான். “இல்லை. எல்லா தீவில் இருந்தும் வணிகர்கள் வந்துவிட்டனர். இத்திருமணச் செய்தி தெரியாத பகுதி நிலப்பரப்பில் எங்கேனும் இருக்கலாம். தீவுக்குள் எங்கும் இல்லை.”

“கடலும் கடல்சார் வாழ்வும்தானே உங்களுக்கு அமைந்தது. நீங்கள் எப்படி செடி, கொடி, காய், கனிகளைப்பற்றியெல்லாம் இவ்வளவு அறிந்தீர்கள்?” வைகையில் இருந்து மாளிகை திரும்பு வழியில் சுகமதி கேட்டாள்.

மறுமொழியின்றி அமைதியாக வந்தாள் பொற்சுவை. தேர்ச்சக்கரம் உருளும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

“நான் எதுவும் தவறாகக் கேட்டுவிட்டேனா?”

“இல்லை. மனம் ஆசானிடம் போய்விட்டது. அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தது ஏராளம். அவரைப் பார்க்கக் கண்கள் ஏங்குகின்றன.”

“அவர் ஏன் இன்னும் மணவிழாவுக்கு வராமல் இருக்கிறார்?”

“அதைப்பற்றி நான் சிந்திக்கவில்லை.

அவரைப் பார்த்தால் அந்தக்கணமே உடைந்து அழுதுவிடுவேன். அவரை நினைத்தாலே மனதில் பதற்றம் பற்றிக்கொள்கிறது. அதனாலே நினைக்காமல் இருக்கிறேன். இப்போது நீ அவரை நோக்கிய நினைவைக் கிளறி விட்டுவிட்டாய்.”

“இன்னும் சிலநாள்கள்தானே இருக்கின்றன. அதற்குள் வந்துவிடுவார் என நினைக்கிறேன்.”

“வருவதாக இருந்திருந்தால் எப்போதோ வந்திருக்க வேண்டும். அதற்கான நாள்கள் கடந்துவிட்டன. இனி அவர் வரமாட்டார்.”

p88h1.jpg

“பாண்டியப் பேரரசின் போற்றுதலுக்குரிய பெருங்கவி உங்கள் பேராசான். பின் எப்படி வராமல் இருப்பார்?”

“இம்மணவிழா பற்றிய செய்தி தெரிந்தால்தானே வரமுடியும்?”

“வேந்தர்கள் அனைவருக்கும், சிற்றரசர்கள் எல்லோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தீவுக்கூட்டங்கள் எங்குமிருந்து வணிகர்கள் வந்துள்ளனர். பின், அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லையே?”
உதட்டோரம் சின்னதாய் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டுப் பொற்சுவை சொன்னாள், “அவர் பறம்பு நாட்டுக்குப் போயிருந்தால் எப்படித் தெரிந்திருக்கும்?”

சுகமதியின் கண்கள் இமைக்காமல் நிலை கொண்டன.

பொற்சுவை தொடர்ந்தாள், “இதுபோன்ற செய்திகள் சென்றடையாமல் இருக்கும் ஒரே நிலப்பகுதி அதுவாகத்தான் இருக்க முடியும். ஆசானும் அங்கே போக வேண்டும் என்று பல ஆண்டுகள் விருப்பத்தோடு இருந்தார். அது இப்போது நிகழ்ந்திருக்க வேண்டும்.”

சற்று இடைவெளிவிட்டுச் சொன்னாள், “என் கண்ணீர் அவரை வெகுதொலைவிலே நிறுத்திவிட்டது சுகமதி”.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 31

 

 

டது புறம் குதிரைத்தலையைப் போலிருக்கும் `ஆறு புரவி'(அசுவினி) விண்மீன் கூட்டம் முன்பைவிடத் துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்தது. அதையே நீண்டநேரம் பார்த்தபடி இருந்தான் அந்துவன். அவனை அறியாமலேயே மனம் மகிழ்வை உணர்ந்தது. அவனது கண்கள் வரையப்படும் விண்மீன் கூட்டத்தையும், பின்னர் கூண்டுக்குள் இருந்த தேவாங்குகளையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே இருந்தன. விண்மீன் கூட்டங்களுக்கு இடையில் உலவித் திரியும் விலங்கினைப்போல அத்தேவாங்குகள் தோன்றின.

வாயும் மூக்கும் சிறிது நீண்டிருப்பதால் பறவைகளின் கைப்பிள்ளைபோல இருப்பதாக அந்துவன் எண்ணினான். மேற்கூரையின் வேலைகள் முடியும் தருவாயில் இருக்கின்றன. விரைவில் பாண்டரங்கை விட்டு வெளிச்செல்ல காத்திருந்தான் அந்துவன்.

p75a.jpg

அன்றைய நாளின் காலை நேரத்திலேயே கலந்துரையாடல் அரங்குக்கு ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர். ஏமாற்றம் எதில் நடக்கிறது என்பதைப் பொருத்துத்தான் மனித மனம் எப்படி அதை எடுத்துக்கொள்கிறது என்பது தெரியவருகிறது. தங்களின் அந்தப்புரத்தில் இருப்பவரெல்லாம் யவன அழகிகள் அல்ல என்று முதுவன் சொன்னபோது பேரரசரின் மனம் பேரதிர்ச்சிக்கு உள்ளானது. நேற்றிரவு விருந்தில் மற்றவர்கள் கவனிக்காதபோது முதுவனிடம் பேரரசர் கேட்டார். “நீங்கள் கிளாசரினாவை பார்த்திருக்கிறீர்களா?”

இந்தக் கேள்விக்கு என்ன பொருள் என்பது முதுவனுக்குப் புரிந்தது.

“மணமுடி நிகழ்வில் பார்த்தேன் அரசே. அவள் யவன அழகியல்லவா? அதனால்தான் தனித்துவத்தோடு இருக்கிறாள். இமைகள் கவிழும்போதுகூட அவளின் கண்களைப் பார்க்கத் தோன்றுகிறது.”

பேரரசருக்கு எதிர்பார்த்த பதில் கிடைத்தது. ஆனாலும், சற்றே பதற்றமானார். ‘மணமுடிவாக்கு கொடுக்கும் நிகழ்வில் அரங்கின் இடதுபுற மூலையில் அவள் அமர்ந்திருந்தாள். முதுவன் உட்கார்ந்திருந்ததோ தனக்கருகில். எப்படி இவ்வளவு தொலைவில் கவிழும் இமைகளைக் கண்டறிந்தான்? சில பாதைகளில் பயணிக்கத் தொடங்கினால் பதற்றம் கூடத்தான் செய்யுமே தவிர குறையாது’ என்று எண்ணங்கள் ஓடியபடி இருக்க ஆலோசனை மாடத்தை நோக்கி நடந்தார் பேரரசர்.

அங்கு இளவரசன் பொதியவெற்பனும், சூல்கடல் முதுவனும், திசைவேழரும் வீற்றிருந்தனர். இவர்கள் வருவதற்கு முன்பே தலைமை அமைச்சர் முசுகுந்தரும் தளபதி கருங்கைவாணனும், வெள்ளிகொண்டாரும் வந்துவிட்டனர். இன்று நடைபெறப்போகும் உரையாடல், பாண்டிய நாட்டின் எதிர்காலத்தில் பெரும்மாற்றத்தை நிகழ்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. “நேற்று தற்செயலாக நிகழ்ந்த ஓர் உரையாடல் இவ்வளவு ஆக்கபூர்வமான இடத்துக்கு வருமென்று நான் நம்பவில்லை” என்று வெள்ளிகொண்டார் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், இது தற்செயல் அன்று என்பது, சிலருக்கு மட்டும் தெரிந்திருந்தது  பேரரசர் வந்ததும் பேச்சுத் தொடங்கியது. தோல் வரைபடம் ஒன்றை மரப்பலகையில் விரித்தார் முதுவன். எல்லோரும் அதைச் சுற்றி நின்றனர். பார்த்தவுடன் புரிந்தது அது யவனர்களின் வரைபடம் என்று.

“இவ்வணிகப் பயணம் மூன்று இடங்களில் ‘தங்கல்’களைக் கொண்டது. கொற்கையிலிருந்து புறப்பட்டால் முதல் `தங்கல்’ சிந்து ஆறு கடலிற்புகுமிடத்தில் இருக்கும் பாப்ரிகோனில். அங்கு ஓய்வெடுத்துக்கொண்டு தேவைப்பட்டால் அடிமைகளை மாற்றிக்கொண்டு கப்பல் புறப்படும். அங்கிருந்து செங்கடலின் முனையில் இருக்கும் பெர்னிகே துறைமுகத்துக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து பொருள்களைக் கழுதைகளின் மீதேற்றி நடத்தி மணற்பரப்பைக் கடந்து நீல ஆற்றங்கரை(நைல்நதி)யில் இருக்கும் கோபடஸ் துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து மீண்டும் கப்பல் மூலமாக யவனத்தை அடைய வேண்டும்.

யவனர்கள் தமிழ்நிலத்தில் இரு கோட்டை களைக் கட்டி வீரர்களையும் எண்ணற்ற அடிமைகளையும் வைத்துள்ளனர். தங்களின் நாவாய்களைப் பழுதுபார்க்கத் தேர்ந்த தச்சர்களையும் வைத்துள்ளனர். இதேபோன்று பாப்ரிகோன், பெர்னிகே, கோபடஸ் ஆகிய மூன்று இடங்களிலும் கோட்டைகள் அமைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துவைத்துள்ளனர்.

இப்பெரும் பயணத்தில் மேலிமேடும் மங்களகிரியும் கடற்கொள்ளையர்கள் அதிகமுள்ள பகுதி. அதேபோலச் செங்கடலில் இருந்து பெர்னிகே செல்லும் வழியில் பாலை மணற்பரப்பில் கருங்கொள்ளையர்களின் தாக்குதல் அதிகம் நிகழும். அவற்றைச் சமாளிப்பதில் சிறு தவறு நடந்தால்கூட எல்லாம் அழியும்; அதனால்தான் தேர்ந்த படைவீரர்கள் கப்பலின் பாதுகாப்புக்கு இருப்பதும், ஒன்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் மொத்தமாகப் போவதும் முக்கியமாகிறது.”

இவையெல்லாம் தெரிந்த செய்திகள்தான்.  இவற்றில் முதன்மையானது ஒவ்வொரு கோட்டையிலும் எத்தனை வீரர்கள், எத்தனை அடிமைகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான்.

“பெர்னிகேவைத் தாண்டி நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இங்கிருந்து பெர்னிகே வரையிலான பயணத்துக்கு நாம் சில தங்கல்களை ஏற்படுத்த முடியுமல்லவா?” எனக் கேட்டார் முசுகுந்தர்.

“நமது நாட்டில் யவனச்சேரியை அவர்கள் அமைத்துள்ளதைப்போல பாப்ரிகோனிலும் பெர்னிகேவிலும் ஒப்பந்தம் செய்துகொண்டு நாம் தங்கல்களுக்கான கோட்டைகளை அமைக்கலாம்” என்றார் வெள்ளிகொண்டார்.

p75b.jpg

``யவனர்களால் தங்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள், அடிமைகள் ஆகியோரின் எண்ணிக் கையைவிட இருமடங்கு எண்ணிக்கையில் நம்மால் தங்கவைக்க முடியும்.” என்றான் கருங்கைவாணன்.

பேரரசர் அவனது கூற்றை உற்றுநோக்கினார்.

“மேலிமேட்டிலும் மங்களகிரியிலும் கடற்கொள்ளையை நடத்திக் கொண்டிருப் பவர்கள் யாரென நமக்குத் தெரியும். அவர்களை எப்படி அடக்குவதெனவும் நமக்குத் தெரியும்” என்று சற்றே ஆணவத்தோடு சொன்னான் கருங்கைவாணன்.

இன்று மணச்சடங்கின் முதல் நிகழ்வான ‘சிலம்புக் கழிதல்’ நிகழ்வு. பெண்ணின் வாழ்வில் சிலம்பு அணிதலும் சிலம்பு கழற்றலும் முதன்மையான நிகழ்வுகளாகும். குழந்தைமை நீங்கி இளம்பருவத்துக்குள் நுழையும்போது பெண்ணுக்குச் சிலம்பை அணிவித்தல் பெருவிழாவாக நடத்தப்பெறுகிறது. அதன்பின், அவளுக்கு மணமாகும்போது சிலம்பு அவளின் கால்களில் இருந்து கழற்றப்பெறுகிறது.

மாடத்தில் அரசகுலப்பெண்கள் அமர்ந்திருந்தனர். எல்லோரும் பொற்சுவைக்காக காத்திருந்தனர். அவள் தனது அறையிலிருந்து புறப்பட விருப்பமின்றி இருந்தாள். `எல்லோரும் அரங்குக்கு வந்துவிட்டார்கள்' எனச் சொல்லி சுகமதிதான் அவளை வேகப்படுத்தினாள். அவளோ அதைப் பொருட்படுத்தவே இல்லை.

சிலம்பு அணிவிக்கப்பெற்ற முதல்நாள் நினைவுகளுக்குள் அவள் மனம் மூழ்கிக்கிடந்தது.  தன் கால்களிலிருந்து எழும் ஓசையைக் கேட்க அவ்வளவு ஆசைப்பட்ட காலமது. ஓசைக்காகவே ஓடிப்பார்த்தது எத்தனை முறை. எத்தனை விதத்தில் கால்களை தரைத்தட்டி பழக்கினோம்! தூங்கும்போதும் ஆடிய கால்கள். தூரியில் தொங்கிக்கொண்டே ஆடிய கால்கள். ஓசை எழுப்பும் கால்கள் வாய்த்தன என எண்ணி மகிழ்ந்த நாள்கள்தான் எத்தனை, எத்தனை! பறவைகள் சிறகுக்குள் தலைநுழைத்து கோதிக்கொண்டே இருப்பதைப்போல, குனிந்து இருகைகளாலும் சிலம்பைத் தொட்டு அசைத்துக் கொண்டே இருந்தது ஒரு காலம்.

சிலம்பு அணிதலுக்குத் தந்தை நாள்குறித்தபோது, அண்ணன்தான் கேட்டான். “என்ன பரல் கொண்டு சிலம்பு செய்யப்போகிறீர்கள்?”

“நீயே சொல். உன் தங்கையின் காற்சிலம்புக்கு என்ன பரல் வேண்டுமென்று?”

“நாளை சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்.

மறுநாள் இல்லத்தின் முற்றத்தில் அனைவரும் அமர்ந்திருக்கும்போது உள்ளே வந்தவன் தந்தையைப் பார்த்துக் கேட்டான், “தந்தையே, என்றென்றும் வெல்ல வேண்டும் என்பதற்காகத் தங்களின் மணிமுடியில் அரசர்கள் பதிக்க விரும்புவது எந்த வகை மணிக்கற்களை?”

“இளஞ்சிவப்பு நிற மாணிக்கக் கற்களைத் தங்களின் மணிமுடியில் பதித்தால் எப்போரிலும் வெல்லலாம் என்று சொல்வார்கள்.”

``அப்படியென்றால் இளஞ்சிவப்பு நிற மாணிக்கக்கல்லைக் கொண்டு என் தங்கையின் கால்களுக்குச் சிலம்பு செய்யுங்கள்.”

“அவள் எந்தப் போரை வெல்லப் போகிறாள் மகனே?”

“அவள் ஒரு பேரழகி. நாளை அவளுக்காகவே போர் நடக்கலாம் அல்லது அவளே ஒரு போரை நடத்தலாம். யார் அறிவார்?”

தந்தை அதிர்ந்துபோனார். தயக்கம் நீங்க நேரமானது. ‘நாம் வணிகர்குலம் என்பதை இவன் அடிக்கடி மறந்துவிடுகிறான், அதுவும் தங்கை என்று வந்துவிட்டால், இவனது எண்ணம் கட்டுக்குள்ளே இருப்பதில்லை’ என்று எண்ணியபடி, “எங்கிருந்து கிடைக்கும் அவ்வளவு கற்கள்? எனக் கேட்டார்.

“பெருவணிகர் நீங்கள். எங்கு கிடைக்குமென உங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

தந்தை பெரும்குழப்பத்துக்கு உள்ளானார்.

வணிகர்கள் உருவாக்கிய கதைக்குள் இப்போது பெருவணிகர் ஒருவரே மாட்டிக்கொண்டார். அந்தக் குறிப்பிட்ட தீவு எதுவெனத் தந்தை அறிவார். அவரே புறப்பட்டுப் போனார்.

கப்பல் நீர்கிழித்துப் போனது. நில்லாது அசையும் அலைபோல, அதன் பின், ஓசை நில்லாது ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும் இளஞ்சிவப்பு நிற மாணிக்கக்கல் கொண்ட சிலம்பு பொற்சுவையின் காற்சிலம்பானது.

பிற மூன்று இடங்களிலும் யவனர்கள் உருவாக்கியுள்ள கோட்டைகளில் எத்தனை வகையான பொறிகள் இருக்கின்றன என்று வரிசைப்படுத்தினார் சூல்கடல் முதுவன். அதுவரை அவ்விடங்களில் உள்ளவை மிகப் பாதுகாப்பான கோட்டைகள்; அவற்றினுள் வீரர்கள் உள்ளனர் என்று மட்டு்ம்தான் தெரியும்.  ஆனால், யவனர்களின் வலிமை கோட்டையிலும் வீரர்களிடமும் மட்டுமில்லை; எண்ணற்ற பொறிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அவைதான் அவர்களின் வலிமைக்கு அடிப்படை” என்று கூறியபடி பொறிகளைப் பட்டியலிட்டார்.

“பெரும் தோல்கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டு, கவட்டைபோல் இரும்புக் கம்பிகள் நீண்டபடி கோட்டைமதிலில் நிறுத்தப்பட்டுள்ள ‘எந்திர வில்’. அதை இயக்க ஒருசிலர் போதும். அதிலிருந்து ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான அம்புகள் பாய்ந்து வெளிவரும். இரண்டு எந்திர வில்கள் இருந்தால் கோட்டையை எதிரிகள் நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

நூற்றுக்கணக்கான கற்களை உமிழும்  ‘கவண்பொறி.’ இரும்பால் செய்யப்பட்ட  சிற்றூசி உருளைகளை வீசி எறியும் ‘கூடைப்பொறி.’ கோட்டைமதிலை நெருங்கும் பகைவரின் உடலைக் கொத்தித்தூக்கும் ‘தூண்டிற் பொறி.’ அதையும் மீறி மேலேறுபவரை அகழியை நோக்கித் தள்ளும் ‘கவைப் பொறி’” என்று வரிசையாகத் தாக்கவும் தடுக்கவும் யவனர்கள் பயன்படுத்தும் பொறிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே வந்தார். கடைசியாக மூன்று பொறிகளைப் பற்றிச் சொல்லியபோது எல்லோரும் வாயடைத்துப் போனார்கள்.

சிறிதுநேரம் எந்தப் பேச்சும் இல்லை.

பொற்சுவையின் வருகைக்காக எல்லோரும் அரங்கில் நெடுநேரமாக உட்கார்ந்திருந்தனர். அவளோ நினைவுகளில் மூழ்கியவளாக அறையைவிட்டு அகலாமல் இருந்தாள். அரச குடும்பத்தின் மூத்தபெண்மணிகள் காரணம் அறியாமல் திகைத்தனர். “இன்னும் சிறிதுநேரத்தில்  பேரரசியார் வந்துவிடுவார். அதற்குள் அழைத்து வாருங்கள்” என்று ஆள் மாற்றி ஆள் அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
`ஒப்பனை இன்னும் முடியவில்லை' என்று இடைவிடாமல்  மறுமொழி சொல்லிக்கொண்டே இருந்தாள் சுகமதி. பொழுதாகிக்கொண்டே இருந்தது. நிலைமையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்த சுகமதிக்கு ஓர் எண்ணம் பிறந்தது.

பொற்சுவையை அழைத்துவர அனுப்பப்பட்ட பணிப்பெண்களிடம் பெரும் கூடையைக் கொடுத்துவிட்டாள். அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அரங்குக்கு வந்தனர். அரங்கில் இருந்த மற்றவர்கள் என்னவென்று புரியாமல் திகைத்தபோது, பணிப்பெண்கள் சொன்னார்கள்.  “சிலம்பு கழற்றும் விழாவுக்காகச் சாவகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாம்” என்று சொல்லியபடி, பெட்டியில் இருந்த பனை விசிறியை எடுத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தனர்.

‘பனைவிசிறியா!’ என்று சற்றே முகம் சுழித்தபடி வாங்கியவர்கள் அதை விரிக்கத் தொடங்கினர். விரியும் பனையோலை முழுவதும் அழகு நிரம்பிய ஓவியங்கள். அத்துணையும் இணையற்ற எழில்கொண்டவை. அனைவரின் கண்களும் ஓவியங்களை உற்றுப் பார்க்கும்போதுதான் தெரிந்தது, பனைவிசிறியின் மேல்முனையில் முத்துகள் பதிக்கப்பட்டிருந்தது. வாங்கியவர்கள் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தனர். பறவையின் சிறகுபோல விசிறியை விரிக்கும்போது ஓவியங்களின் அழகும் முத்துகளின் ஒளியும் மெய்ம்மறக்கச் செய்தன.

ஒருவர்கூட விசிறியை விசிறாமல் கண்ணாடியைப்போல் முகத்துக்கு நேராக வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கையில் ஒருத்தி மட்டும் சொன்னாள், “விசிறிக்கே இவ்வளவு வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளபோது, இளவரசிக்கு ஒப்பனை செய்ய பொழுதாகாமல் என்ன செய்யும்?”

நமது கலங்களைவிட யவனர்களின் நாவாய்கள் சிறப்புமிக்கவையா? இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?

p75c.jpg

இளவரசனின் வினாவுக்கு சூல்கடல் முதுவன் சொல்லப்போகும் விடை கப்பலின் இயங்கு பொறிகளைப் பற்றியதாக இருக்குமென நினைத்தனர். ஆனால், அவர் வேறு ஒரு விடையைச் சொன்னார்.

“கடற்பயணத்தின் வலிமை என்பது கப்பலோடு  தொடர்புடையதல்ல; கணிதத்தோடு  தொடர்புடையது. வானியலும் நிலவியலும் பற்றிய கணித அறிவே கடற்பயணத்தின் வெற்றி தோல்வியை முடிவுசெய்கிறது.”
``இவ்விரண்டிலும் நமது அறிவு வலிமைமிக்கதுதானே.”

முசுகுந்தரின் கூற்றுக்கு, முதுவன் மறுமொழி சொன்னார், ``நமது வலிமையை யவனர்களோடு ஒப்பிட்டால் யார் வலியவர், யார் வலிமை குற்றியவர் என்பதைப் பற்றிப் பேச முடியும். ஆனால், கடல் பயணத்தில் வலிமையை ஒப்பிடவேண்டியது பிற கடலாடிகளோடு அல்ல; எழும் அலைகளுடனும் வீசும் காற்றுடனும் இழுத்துச் செல்லும் நீரோட்டங்களுடனும்தான். அவற்றோடு ஒப்பிட என்ன இருக்கிறது நம்மிடம்?”
இந்த மறுமொழியின் தொடர்ச்சியை அனைவரும் திசைவேழரிடம் எதிர்பார்த்தனர். அவரோ அமைதியாக உரையாடலைக் கவனித்துக்கொண்டிருந்தார்.

“கடலையும் காலத்தையும் புரிந்துகொள்வதில் நமக்கும் யவனர்களுக்குமே வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப்பற்றி பேசத்தான் நேற்றைக்கு முன்தினம் திசைவேழரைப் போய்ப் பார்த்தேன். நாம், ஆண்டை 12 மாதங்களாகப் பிரிக்கிறோம்; யவனர்களோ 10 மாதங்களாகப் பிரிக்கின்றனர். ஆனால், நாள்களின் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு இல்லை.

அவர்கள் ஒரு நாளை 24 மணிகளாகப் பிரிக்கின்றனர். நாமோ 60 நாழிகைகளாகப் பிரிக்கிறோம். நேரத்தை அவர்களைவிட மிகத்துல்லியமாக நம்மால் கணிக்க முடிகிறது. ஆனால், நிலவியலைப் பொருத்தவரை அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அவர்கள் நிலப்பரப்பை ‘டிகிரி’ கணக்கில் 360 பாகங்களாகப் பிரிக்கின்றனர். அது நமது முறையைவிடத் துல்லியமான குறிப்புகளை அவர்களுக்குத் தருகிறது. இருவரும் இருவேறு விதத்தில் காலத்தையும் திசையையும் அறிகிறோம். ஆனாலும், கடலெனும் பேரியக்கத்தைக் கண்டு அஞ்சி நடுங்கியபடி ஓரத்தில் பதுங்கிக்கடக்கும் சிற்றெலிகள்தான் நமது கப்பல்களும் யவன நாவாய்களும்.p75d.jpg

இவ்வணிகத்தில் நாம் கோலோச்ச வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை `தங்கல்’ முகாம்களில் கோட்டைகள் அமைப்பதும் அங்கு வீரர்களை இறக்குவதுமல்ல, காலத்தையும் இடத்தையும் பற்றிய அறிவில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை அடைவதால் மட்டுமே நிகழும்.

சுகமதி எவ்வளவு சொல்லியும் பொற்சுவை புறப்படுவதாக இல்லை. உண்மையில் பொற்சுவையும் தனக்குள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால், மனம் கேட்க மறுத்துக்கொண்டே இருந்தது. மனம் உண்மையைப் பற்றி நிற்கும் விலங்கு. அதைச் சூழலுக்குப் பழக்குதல் எளிதல்ல.

சிலம்பிலிருந்து தெறிக்கும் மாணிக்கப் பரல்களின் ஓசையைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொற்சுவை, முதன்முறையாகக் காதலனால்  பாதம் தொடப்பட்ட கணத்தில்தான் அமைதி அடைந்த சிலம்பின் பரல்களை ரசித்துப் பார்த்தாள்.

அந்தப்பார்வையில் இருந்து விலக முடியாமல் சிலம்பைத் தொட்டுப் பார்த்தபடி அவன் கேட்டான், “பெண்பிள்ளைகளுக்கு ஏன் சிலம்பு அணிவிக்கிறார்கள் தெரியுமா?”

அவனின் சிறுதொடுதல்கள் சிலம்பின்  மாயவோசையை உள்ளுக்குள் கடத்திக் கொண்டிருந்தன. அவள் விடையின்றி நின்றாள்.

அவன் சொன்னான், “பெண் தன் காதலனின் அழைப்பை ஏற்று ஊர் உறங்கும் வேளையில் ஓசையின்றி அவனோடு சென்றுவிடக்கூடாது. அதற்காகத்தான் அவள் எங்கு சென்றாலும் ஓசையோடு செல்லும் ஏற்பாட்டைச் செய்தார்கள்.”

அவனால் ஏற்பட்ட மயக்கத்தை அவனின் மறுமொழியே தெளிவடையச் செய்தது.

அவன் மேலும் சொன்னான்,  “அதனால்தான் இளம்பருவத்தில் சிலம்பு அணிதலும் திருமணத்துக்கு முன்சடங்காக சிலம்பைக் கழற்றலும் நடக்கிறது. சிலம்பின் வேலை கால்களுக்கு அழகூட்டுவதோ, மனதை மகிழ்விப்பதோ அல்ல; காதுகளுக்கு ஓசையைக் கடத்துவது மட்டுமே. ஓசை தேவையில்லாதபோது அதைக் கழற்றிவிடுகிறார்கள்.”

அவன் சொன்னதைக் கேட்டபோது, `அன்றே அதைக் கழற்றிவிட வேண்டும்' என்று தோன்றியது. ஆனால், அண்ணனின் மேல் இருந்த வாஞ்சையால் அது இவ்வளவு காலம் காலிலே இருந்தது. `இப்போதுதான் அண்ணனும் இல்லை; என்னவனோடு நானும் இல்லை. இச்சிலம்பு மட்டும் ஏன் இருக்க வேண்டும்?'

எண்ணம் தோன்றிய கணத்தில் சிலம்பைக் கழற்ற அரங்கு நோக்கி விரைந்தாள் பொற்சுவை.

சூல்கடல் முதுவன் வரைபடத்தை வைத்துச் சொன்னான். குமரிமுனை திரும்பியப்பின் பாப்ரிகோன் போவது வரை எந்த இடையூறும் இல்லை. நேரடியான வடக்கு நோக்கிய பயணம் அது. கரையின் பார்வையிலிருந்து விலகாமல் இரவு பகலாகப் பயணத்தைத் தொடரலாம். சற்றே திசைமாறி ஆழ்கடலுக்குள் கப்பல்கள் போய்விட்டாலும் மறுநாள் காலை கதிரவனைப் பார்த்துக் கலத்தைச் செலுத்தினால் கரையோரம் வந்துவிடலாம்.

இப்பயணத்தின் பெரும் சவால் நிறைந்த பகுதியே பாப்ரிகோனிலிருந்து பெர்னிகே வரையிலான பகுதிதான். மேற்கு நோக்கி வளைந்து செல்லும் நெடும்பயணம். கரையின் பார்வையைத் தவறவிட்டோம் என்றால், நாம் பெரும்சிக்கலில் மாட்டிக்கொள்வோம். இரவில் விண்மீன்கள் எல்லா காலங்களிலும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. எல்லா விண்மீன்களும் ஆண்டு முழுவதும் தெரிவதும் இல்லை. அவற்றை நம்பமுடியாது. எனவே, பகலில் மட்டுமே பயணிக்க முடியும். அதுவும் தெளிவான வானியல் காலம்தான் பயணத்துக்குப் பாதுகாப்பானது. சற்றே திசைமாறினாலும், நாம் எந்தத் திசைவழி மீள வேண்டும் என்பது பற்றி யாருக்கும் தெளிவான புரிதல் இல்லை. யவனக் நாவாய்கள் பலவும் நம்முடைய கப்பல்கள் பலவும் மறைந்து கொண்டேதான் இருக்கின்றன.

பாப்ரிகோன் முதல் பெர்னிகே வரையிலான பகுதிக்குத் துல்லியமான திசை அறிதலுக்கான வடிவம் ஒன்றை நாம் கண்டடைந்தால் கடற்பயணத்தின் பெரும்சாதனையாக அது அமையும்” வரைபடத்தைக் காட்டி நிலைமையை முழுமையாக விளக்கினார் சூல்கடல் முதுவன்.

அதன்பின், எல்லோரும் திசைவேழரைப் பார்த்தனர். பார்வைக்கான பொருள் அவருக்குப் புரிந்தது. ஆனால், அவர் எதுவும் பேசாமலே வரைபடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

p75e.jpg``பாப்ரிகோன் முதல் பெர்னிகே வரையிலான பயணத்தில் கடைசியாகக் கப்பல்கள் எப்போது மறைந்தன?”

மூன்று மாதங்களுக்கு முன்பு மூன்று நாவாய் களும் இரு கப்பல்களும் மறைந்துவிட்டன.

சற்றே சிந்தித்தபடி இருந்தவர் சொன்னார்.  “மூன்று மாதங்களுக்கு முன்பு மேலைக்காற்று உச்சங்கொண்டிருந்த காலம். அப்போது தவறிய கப்பல்கள் நடுகடல் நோக்கிப் போகமுடியாது. அதற்கு எதிர்த்திசையில்தான் காற்று தள்ளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பாகக் கரை ஒதுங்கியிருப்பார்கள்.”

“அப்படி எதுவும் நிகழ்வில்லையே!”

“அப்படி என்றால், நீ வைத்துள்ள வரைபடம் தவறு. இதில் உள்ள திசை தவறு.”

சூல்கடல் முதுவன் மறுமொழியின்றி நின்றார்.

“தவறான ஒன்றை வைத்துக்கொண்டு சரியானதற்கான வழியைக் கண்டறிய முடியாது.”

“அப்படியென்றால் சரியானதென்று எதைச் சொல்கிறீர்கள்?”

“வரைந்த கோடுகளை அடிப்படையாக் கொண்டு திசையறிய முடியாது. நாள்மீன்களையும் கோள்மீன்களையும் கொண்டு திசையறியலாம். அதையும் அறியமுடியாமல் செய்யும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு. எனவே, இவற்றைக் கடந்த வழிமுறைகள் உண்டா என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.”

“அது எப்படிச் சாத்தியமாகும்?”

“ஏன் ஆகாது. கதிரவனின் நிழலை மட்டுமா நம்பி பொழுதளக்கிறோம். நீர் வட்டிகளைக் கொண்டும் மணற்குடுவைகளைக் கொண்டும் பொழுதளக்கிறோம் அல்லவா? சின்னஞ்சிறு கருவியைக்கொண்டு கதிரவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொழுதை நம்மால் அளக்க முடிகிறது. பகலையும் இரவையும் நமது கணக்குகளுக்குள் அடக்க முடிகிறது. அதேபோலக் கதிரவனையும் விண்மீன்களையும் பார்க்க முடியாவிட்டாலும் திசையைக் கண்டறியும் வழிமுறை ஒன்றை நாம் கண்டறிய வேண்டும். அதுதான் இதற்கான தீர்வைத் தரும்.”

“அப்படி ஒன்றை நம்மால் உருவாக்க முடியுமா?”

p75f.jpg

“நம்மால் உருவாக்க முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். இயற்கை ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும். நாம் அவற்றைக் கண்டறிய வேண்டும்.”

“எப்படி?”

“அதுதான் அதன் ரகசியம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 32

´
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,

 

பிலரின் மீது, வண்டுகடி மரத்தின் பட்டையை அறைத்து மூன்று நாள் பூசினர். உடலின் எரிச்சல் சற்றே அதிகமாக இருந்தது. ``இப்படித் தொடர்ந்து பூசினால், கைகால்களில் உள்ள முடிகள் கருகிவிடப்போகின்றன” என்றார் கபிலர்.

உதிரனும் மற்ற இரு பெரியவர்களும் தேய்த்து விட்டுக்கொண்டு இருந்தனர். எதிரில் இருந்த கல்லில் உட்கார்ந்தபடி தேக்கன் சொன்னான், “உங்களின் கவலை அப்படி இருக்கிறது; எனது கவலையோ வேறு மாதிரி இருக்கிறது”

“என்ன அது?”

“இப்படித் தொடர்ந்து தேய்ப்பதன் மூலம் முடிகள் சடைபிடித்து வளர்ந்துவிட்டால் என்ன செய்வது?”

தேய்த்துக்கொண்டிருந்த பெரியவர்களுக்கு சிரிப்புத் தாங்கமுடியவில்லை.  கபிலருக்கோ சற்றே அதிர்ச்சியாக இருந்தது. “ஏன்? இதற்கு முன்னால் தேய்த்து விடப்பட்டவர்களுக்கு அவ்வாறு வளர்ந்ததா?”

“அதுதானே தெரியவில்லை. நாங்கள் கேள்விப்பட்டவரை வெளியில் இருந்து வந்த யாரும் பறம்பில் காலவரையின்றித் தங்கவில்லை. எனவே, மற்றவர்களுக்கு இதனைத் தேய்த்துவிடும் பேச்சே எழவில்லை.”

“நான்தான் சோதனை உயிரியா?”

p67a.jpg

“உங்களை ஒருபோதும் நாங்கள் சோதிக்க மாட்டோம். உங்களுக்காக எல்லாச் சோதனை களையும் நாங்கள் ஏற்போம்” என்று சொல்லியபடி உதிரனின் தோளைத் தொட்டான் தேக்கன்.

கபிலர் அவனைப் பார்த்தார். உதிரன் இருவரையும் பார்த்தபடி நின்றான்.

தேக்கன் சொன்னான், “நான்கு முறை நான் காடறிய பிள்ளைகளை அழைத்துப்போய்  வந்துவிட்டேன். காட்டின் எல்லாச் சவால்களையும் எதிர்கொண்டு மீளத்தான் அப்பயணத்தை மேற்கொள்கிறோம். ஆனால், அப்பொழுதுகூட வண்டுகடி மரத்தின் அடியில் யாரையும் அனுப்பியதில்லை. அதன் வாடை கணநேரத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடியது. அடுத்தவனை அனுப்பி, அவனைத் தூக்கிவருவதற்குள் இவனும் மயங்கிவிடுவான். இப்படிப் போகிறவர்கள் எல்லாம் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு அதில் அதிகம். அது நம்மை எளிதில் ஏமாற்றி, உயிர்கொல்லும் மரம். அந்த மரத்தின் பட்டையை ஒருவன் துணிந்துபோய் உரித்தான் என்பதும், அதனைப் பாரி அனுமதித்தான் என்பதும் உங்களுக்காகத்தான். உங்களின்பொருட்டு நாங்கள் எச்சோதனையையும் எதிர்கொள்வோம்.” சொல்லும்போது, தேக்கனின் குரலில் இருந்த உறுதி கபிலரை உலுக்கியது.

தேய்த்த மருந்தோடு குறிப்பிட்ட நேரம் வரை அமர்ந்திருந்த கபிலர், பின்னர் குளித்துவிட்டு வந்தார். தேக்கனும் அவரும் பொழுதெல்லாம் பேசினர். தேக்கனைப்பற்றியும் காடறிதலைப் பற்றியும் கபிலருக்குத்  தெரிந்துகொள்ள வேண்டியவை நிறைய இருந்தன. எல்லாவற்றையும் பேசிக் கழித்தார்.

ஒரு வாரம் கழிந்தது. மூன்று குழுக்கள் சென்று, இருபது பேரெலிகளைப் பிடித்துவிட்டன. இன்னும் இரண்டு தேவையாக இருந்தது. தோழர்களோடு உதிரன் புறப்பட்டபோது கபிலரும் புறப்பட்டார். “இத்தனை நாள் நான் ஓய்வில்தானே இருந்தேன்” எனச் சொல்லிப் புறப்பட்டார். அவர் புறப்பட்டால் பாரியும் வந்துவிடுவான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், கபிலர் வராமல் இருந்த நாட்களிலும் பாரி வேட்டைக்கு வந்தான். அதுதான் ஏன் என்று புரியாமல் வீரர்கள் திகைத்தனர். பறம்புமலையின் மேற்றிசைக் குன்றுகளிலே அவர்கள் அதிகம் அலைந்து திரிந்தனர்.

வழக்கம்போல் குழு புறப்பட்டது. வடகிழக்குத்திசை நோக்கிச் செல்லலாம் என்று அவர்கள் முடிவுசெய்தபோது, அதற்கு நேரெதிராக தென்மேற்குத்திசை நோக்கிப் போகுமாறு பாரி சொன்னான். உதிரனுக்கும் மற்ற வீரர்களுக்கும் அதற்கான காரணம் புரியவில்லை. அவர்களை அனுப்பிவைத்த தேக்கனால் உய்த்தறிய முடிந்தது.

அவர்கள் எவ்வியூரின் தென்மேற்குத் திசையில் போனார்கள். ‘இப்பகுதியில் புலிகள் மிக அதிகம். அவற்றிடம் தப்பித்தான் பேரெலிகள் உயிர்வாழவேண்டும். பிற பகுதியோடு ஒப்பிட்டால், மிகமிகக் குறைவாகத்தான் இப்பகுதியில் பேரெலிகள் இருக்க வாய்ப்புண்டு. பின் ஏன் பாரி இத்திசையில் போகச் சொன்னான்?’ என்று எண்ணியபடியே நடந்தான் உதிரன். பாறை இடுக்குகளைக் கிண்டிக் கிளறியபடி போய்க்கொண்டிருந்தான். பேரெலியின் எச்சங்கள் எவையும் தென்படவில்லை. நடுப்பகல் வரை அவர்களின் கண்களுக்கு எதுவும் தட்டுப்படவில்லை.

p67b.jpg

இன்னொரு நாள் வரவேண்டியிருக்கும்போல என்று உதிரனுக்குத் தோன்றியது. நெடும்பொழுது கடந்தது. வீரர்கள் இருகூறாகப் பிரியலாம் என்று கருத்துச் சொன்னார்கள். ‘`சரி'’யென்றான் பாரி.

பிரிந்தவர்கள் நாலு எட்டு வைப்பதற்குள், மழை பொழியத் தொடங்கியது. சடசடவென இறங்கிய கணத்திலேயே அதன் வேகம் எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. அனைவரும் அருகிலிருந்த மலைப்பொடவிற்குள் போய் ஒடுங்கினர்.

மேனியில் இருந்த நீர்த்துளிகளை உதறியபடி, “மழைத்துளிகள் ஒவ்வொன்றும் வேப்பமுத்து அளவு இருக்கிறது” என்றார் கபிலர்.

“கார்காலத்தின் முதுநாள் தொடங்கப் போகிறது. இனி, அதன் வேகம் இணையற்றதாகத்தான் இருக்கும்” என்றான் பாரி.

மழைக்கான பருவத்தில்தான் மழை பெய்கிறது. ஆனால், அதன் பொழிவு வெவ்வேறு தன்மைகளைக் கொண்டது. தொடக்க நாட்களில் பெய்யும் மழை என்பது மேகம் உதிர்க்கும் தூசி போன்றது. காற்றில் அலைஅலையாய் இறங்குவதும், நிலம் ஈரமாகுமுன் மறைவதும், காற்றுக்குள்ளே கரைந்துபோகும் கன அளவு கொண்டதுமாக இருக்கும்.

தூசிப் பருவம் முடிந்து, தும்மல் பருவம் தொடங்கும். எதிர்பாராத நேரத்தில் சட்டென அடித்துவிட்டுப் போய்விடும். போய்விட்டது என நினைக்கும்போது திரும்பி அடிக்கும். நம்மால் கணிக்க முடியாத ஒரு விளையாட்டை விளையாடும். அப்போது பெய்யும் மழையில் நீர்த்துளிகள் நீள்வடிவிலே இறங்கிவரும்.

மூன்றாம் கட்டம், முகில்கள் கூடல்கொள்ளும் பருவம். இதுநாள்வரை நீரை உதிர்த்துக் கொண்டிருந்த மேகங்கள் இப்போது கூடலில் மயங்கி உருக ஆரம்பிக்கும். இணைமேகங்கள் சூழ வலம்வந்து வானில் இடைவிடாமல்கூட, காதல் கசிந்து காட்டாறாய் உருகி ஓடும். மழைத்துளிகள் வேப்பமுத்து அளவினைக் கொண்டிருக்கும்.

நான்காம் பருவத்தில் மோகம்கொண்ட முகில்கள் தரைவந்து தங்கும். நிலம் வானுக்குள் நுழையும். மரத்தின் உச்சிக்கிளை மேகத்தின் வெளிப்புறம் நீண்டிருக்க, வேரில் மழைநீர் பாய்ந்தோடிக்கொண்டிருக்கும். அது இயற்கையின் அதிசய காலம். வானுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் ஏணி விலகிக்கொள்ள, மேகக்கூட்டம் மரம், செடி, கொடிகளுக்கிடையே மீனைப்போல நீந்திப்போகும். ஒருவரை ஒருவர் பிடித்தும் விலகியும் கரைந்தும் உருகியும் காதல்கொள்ளும் காலம். இதுவே கார்காலத்தின் முதுநிலைப்பருவம்.

இப்போது அது தொடங்கியிருக்கிறது. இறங்கிய மழை, இரவு வரை நிற்கவில்லை. குகையைவிட்டு வெளிவரும் எண்ணமே பிறக்கவில்லை. முன்னிரவில் குறையத் தொடங்கிய மழை, நள்ளிரவில்தான் நின்றது. வீரர்கள் பின்னிரவானதும் இருவேறு குழுக்களாகப் பிரிந்து போகலாம் என்று முடிவுசெய்தார்கள். நாம் எந்தக் குழுவோடு போவது என்று கபிலர் சிந்தித்துக் கொண்டிருக்கையில், பாரி அவரை அழைத்தபடி குகையைவிட்டு வெளியேறினான்.

“அவர்கள் பேரெலியைப் பிடித்து வந்து சேரட்டும். நாம் வேறொரு திசை வழியே போவோம்” என்றான்.

பாரியின் இந்த முடிவை எதிர்பார்க்காத கபிலர் சற்றே திகைத்தபடி பின்னால் நடக்கத் தொடங்கினார். மேகத்தைக் கொட்டித்தீர்த்த வானம் விண்மீன்களால் பூத்துக்கிடந்தது. தேய்நிலவு கொடிபோல் மெலிந்திருந்தது. மெல்லிய நீலநிற வெளிச்சம் தரையில் பரவிக்கிடக்க, கபிலரை அழைத்துக்கொண்டு பாரி மலைமுகட்டை நோக்கி நடந்தான்.  எங்கும் நீரோடும் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. “வண்டுகடி மரப்பட்டையைத் தேய்த்ததால்தான் உங்களைத் துணிந்து அழைத்துச் செல்ல முடிகிறது’’ என்று சொல்லியபடி, பாறையின் மீதேறி நின்று பார்த்தான். ஒளிரும் எண்ணிலடங்கா விண்மீன்களைக்கொண்டு வானம் வித்தை காட்டிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு நேரெதிரில் வடிவுகொண்டு வளைந்திருந்தது கார்த்திகை விண்மீன் கூட்டம்.

விண்மீன் பார்த்துத் திசை அறிந்தபடி முன்நடந்தான் பாரி. தொடர்ந்து வந்த கபிலரிடம் கேட்டான், “அவ்விண்மீன் கூட்டத்தைக் கவனித்தீர்களா?”

“எதைக் கேட்கிறாய்? கார்த்திகைக் கூட்டத்தையா?”

“ஆம்.”

“பார்த்தேனே” என்றார்.

பாரி வேறெதையும் கேட்காமல், அமைதியாக நடந்து சென்றான்.

கபிலரும் பாரியைத் தொடர்ந்து நடந்து வந்துகொண்டிருந்தார். அவருக்குப் பாரியின் கேள்வி உறுத்திக்கொண்டிருந்தது. ‘இதை ஏன் கேட்டான் பாரி? கார்த்திகைக் கூட்டம் பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரியும் எனப் பேசிப்பார்க்க நினைத்தானோ?’ என்று தோன்றியது. பெருங்கணியர் திசைவேழரிடம் உட்கார்ந்து நாள்கணக்கில் கார்த்திகை விண்மீன் கூட்டத்தைப் பற்றிப் பேசியது நினைவுக்குள்ளிருந்து அலைஅலையாய் மேலெழுந்து வந்தது. கபிலர் பாரியை நோக்கிக் கேட்டார், “கார்த்திகை விண்மீன் கூட்டத்தைப் பற்றி எதையோ கேட்கவந்து நிறுத்திக்கொண்டாயே, ஏன்?”

கார்த்திகை விண்மீன் கூட்டத்தைப் பற்றி பாரி கேட்கும் விளக்கத்துக்கு விடை சொல்லும் ஆர்வத்திலிருந்துதான் கபிலரின் கேள்வி பிறந்தது. இவ்வழகிய விண்மீன் கூட்டம் கபிலரை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு மாதத்திலும் அதன் நகர்வைப் பற்றி மிக நுட்பமாகத் தெரிந்துவைத்திருந்தார். அதனையெல்லாம் பாரியிடம் பகிர்ந்துகொள்ளும் ஆர்வமே அவரை உந்தித்தள்ளியது.

முன்னால் நடந்தபடி இருந்த பாரி கேட்டான், “அவ்விண்மீன் கூட்டத்திற்குக் கார்த்திகை என்று பெயர் சூட்டியது யார் தெரியுமா?”

கேள்வி கபிலரை திடுக்கிடச் செய்தது. நடுங்கி நின்றார் கபிலர். தாக்குதலைக்கடந்து வார்த்தை மேலெழவில்லை. நேரங்கழித்தே சொல் வெளிவந்தது... “என்ன கேட்டாய்?”

“அவ்விண்மீன் கூட்டத்திற்குப் பெயர் சூட்டியது யாரெனக் கேட்டேன்?”

p67c.jpg

‘பதில் இருக்கட்டும்; இப்படியொரு கேள்வியே ஒருபோதும் எனக்குத் தோன்றவில்லையே? திசைவேழருக்குக்கூட இக்கேள்வி தோன்றியிருக்காது என்றே நினைக்கிறேன். விண்மீன்கள் பற்றி எண்ணற்ற கேள்விகள் கேட்டுள்ளேன். உன் ஐயங்கள் தீரவே தீராதா என்று திசைவேழர் பலமுறை சலித்துக்கொண்டுள்ளார். ஆனாலும், இப்படியொரு கேள்வி ஏன் இதுவரை எனக்குத் தோன்றவில்லை? திசைவேழருக்கு இதுபற்றித் தெரிந்திருந்தால் என்னிடம் அவர் அதைப் பகிர்ந்துகொண்டிருப்பார். அவருக்கும் தெரியாதென்றே நினைக்கிறேன்...’ - எண்ணங்கள் ஓடியபடி இருக்க, பேச வார்த்தையின்றித் தடுமாறினார் கபிலர்.

“எதுவும் பேசாமல் வருகிறீர்களே... ஏன்?”

“உனது கேள்வி ஆதிகாலத்தைப் பற்றியதாக இருக்கிறது. மனிதன் பொருளின்மீது மொழியைப் பொருத்தத் தொடங்கிய காலத்தைப் பற்றி நீ கேள்வி கேட்கிறாய். நாங்கள் தற்காலத்துக்காரர்கள். மனிதர்களை ஆசானாக ஏற்று, கற்று வளர்ந்தவர்கள். இயற்கையை இரண்டாம் நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டோம். எங்களது கற்றல்முறை ஆழமற்றதெனத் தெரிகிறது.” பதிலுக்காகச் சொற்களைத் தேடினார் கபிலர்.
கேட்டபடி நடந்துகொண்டிருந்த பாரி, “பெரும்புலவர் விடைசொல்லாமல், விளக்கம் சொல்வது ஏன்?”

“விடை சொல்லாவிட்டால் விட்டுவிடும் கேள்வியை நீ கேட்கவில்லை. நான் விடை p67d.jpgசொல்லமுடியாததற்கான சரியான காரணத்தை முன்வைக்க முடியவில்லை என்றால், உனது கேள்வி எனது அறிதலின் அச்சையே நொறுக்கிவிடக்கூடியது. அதனால்தான் எனக்குள் இப்பதற்றம் உருவாகிவிட்டது என்று நினைக்கிறேன்.”

மழை நின்ற நள்ளிரவில், நீரோடைகளின் சலசலப்பில், மயக்கும் இளநீல ஒளியில் நிலம் பூத்துக்கிடக்க, மின்னிச்சிரிக்கும் விண்மீன் கூட்டத்தைப் பார்த்தபடி பாரி சொன்னான், “கார்த்திகை விண்மீன் கூட்டத்தைக் கண்டறிந்து பெயர் சூட்டியவன் முருகன்.”
எதிர்பாராத பதிலாக இருந்தது. நடையை நிறுத்தினார் கபிலர். “முருகன்தான் இவ்விண்மீன் கூட்டத்திற்குப் பெயர் சூட்டினான் என்று எப்படிச் சொல்கிறாய்?”

சற்றே சிந்தித்த பாரி, “நீங்கள் பச்சை மலைத்தொடரில் ஏறத்தொடங்கிய முதல்நாளில் நாக்கறுத்தான் புற்களைக் கடக்கும்போது நீலன் உங்களுக்கு முருகனின் கதையைச் சொன்னான் அல்லவா?”

“ஆம்.”

“அவன் கதையை எத்துடன் முடித்தான்?”

“அது எனக்குத் தெரியாது. சந்தனவேங்கையின்மீது பரண் அமைத்து, முருகனையும் வள்ளியையும் அதில் தங்கவைத்த எவ்வி, அதன்பின் குடில் திரும்பி பூண்டுப்பானத்தைக் கலக்கிக் கொடுத்து யாரையும் அப்பக்கம் போகவிடாமல் செய்தான் என்பது வரை எனக்கு நினைவிருந்தது. தனை மயக்கி மூலிகையைக் கொடுத்ததால், அதன் பிறகு அவன் சொன்ன கதைகள் எவையும் எனக்கு நினைவில்லை.”

நேரெதிரே கார்த்திகை விண்மீன் ஒளிவீசிக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்த பாரி, மீதிக்கதையைச் சொல்லத் தொடங்கினான். 

பச்சை மலையில், யானைப் பள்ளத்தின் தென்திசை முகட்டில் தனித்திருந்த வேங்கை மரத்தின்மீது சந்தனக்கட்டை கொண்டு சிலாக்கொடியால் பிணைத்துக் கட்டிய பரண்விட்டு, மறுபகல் இறங்கினர் முருகனும் வள்ளியும்.

p67e.jpgஆணும் பெண்ணும் தங்களை அறியத்தொடங்கிய தலைநாள் இரவது. இவ்விரவின் குணம் பல பருவங்களுக்கும் நீடிக்கும். இயற்கையின் எல்லா மாற்றங்களின் வழியேயும் தங்கள் இணையின் மீதான காதலை நெய்யத்துடிக்கும் உயிராற்றல் பெருகியபடி இருக்கும். காதல் அறியும்பொழுதுதான் அடுத்த இடத்துக்கு அழைத்துச்செல்லும்; அறியாதவன் அதுவே காதல் என்று நின்றுவிடுவான்.

காதலின் அழைப்பை ஏற்று இருவரும் செல்லத் தொடங்கினர். கார்காலத்தின் தூசிப்பருவம் தொடங்கியது. காற்றில் மெல்லிய சாரல் மிதந்துவந்து வள்ளியின் முகத்தில் நீர்பூசிச் சென்றது. அவள் கைகொண்டு அதனைத் துடைக்காமல் நடந்தாள். முருகன் முன்னால் சென்றுகொண்டிருந்தான்.

மேகத்தின் தூசி இருவர் மீதும் விடாமல் படர்ந்தது.  இக்கானகத்தில் எம்மலர்களுடனும் ஒப்பிட முடியாத பேரழகுகொண்டு மிளிர்ந்தது வள்ளியின் முகம். பார்வையை விலக்கி நடக்க முடியாது என்று முருகனுக்குத் தோன்றியது. தனது விரல்கொண்டு அவளது முகத்தைத் துடைக்க எண்ணினான். அப்போது வள்ளியின் கைகள் முருகனின் முகத்தைத் துடைத்துக்கொண்டிருந்தன.

முருகனின் முகத்தில் கைதொட்ட கணத்தில் வள்ளியின் முகத்தில் இருந்த நீர்த்துளிகள் மறைந்தன. முருகனின் கை அவளது கன்னம் தொடும்போது நீர்த்துளி அற்று இருந்தது வள்ளியின் முகம்.
“எனது விரல் தொடுவதற்குள் நீர்த்துளிகள் எப்படி மறைந்தன?” எனக் கேட்டான் முருகன்.

“என் விரல்கள் உனது முகம் தொட்டதனால்.”

முருகன் திகைத்து நின்றான்.

வள்ளி சொன்னாள், “தொடுதலில் கடந்துவரும் ஆற்றல் என்னையே உருக்குகிறது. சின்ன நீர்த்துளிகள் என்ன ஆகும்?”

‘தொடுதலின் மூலம்தான் ஆணின் ஆற்றல் கடக்கிறது. ஆனால், தொடாமலே பெண் கடத்தும் ஆற்றலுக்கு இணை சொல்ல என்ன இருக்கிறது’ என்று  எண்ணியபடி, முருகன் முன்னே நடந்துகொண்டிருந்தான்.

அவள் பேச்சேதுமின்றிப் பின்தொடர்ந்தாள். தூசிக்காற்று எதிர்வீசியபடி இருந்தது.

வள்ளி கேட்டாள், “வேங்கை மரத்தின் சந்தனப்பரண்விட்டு ஏன் அகல்கிறோம்?

“அது எவ்வி உருவாக்கியது. நமக்கான இடத்தை நம் கனவால் உருவாக்க வேண்டும்.”
 
வள்ளிக்கும் ‘சரி’தான் என்று தோன்றியது.

“சென்ற முறை ஏழிலைப்பாலை நோக்கி நான் அழைத்துச் சென்றேன். இம்முறை நீ அழைத்துச் செல்” என்றான் முருகன்.

அவனது சொல்சுமந்து முன்நடந்தாள் வள்ளி. இணையற்ற இடம்நோக்கி அழைத்துச் செல்கிறாள் என்பதை, பூரிக்கும் அவளுடைய முகம் சொன்னது.

பின்நடந்து வந்த முருகனின் மயக்கம் மேலும் அதிகமானது.

“மானிலும் மயிலிலும் மட்டுமே ஆண் அழகு” என்றான் முருகன்.

“நானும் அப்படித்தான் நம்பினேன்... உன்னைக் காணும் வரை” என்றாள் வள்ளி.

இருவரும் வெட்கம் கலைந்து சிரித்தனர். தூசிக்காற்று நின்று பொழிந்தது.

முன்சென்ற வள்ளியின் கண்களுக்குச் சற்றுத் தொலைவில், விளைந்த பயிர் தெரிந்தது. அதனருகே போனாள். யானை படுத்துறங்கும் அளவு நிலத்தில் அப்பயிர்கள் விளைந்திருந்தன. அந்தக் கதிரை கைகளால் உருவியபடியே வள்ளி சொன்னாள், “இது அரிதான நெற்பயிர். அன்னமழகியரிசி என்று இதனைச் சொல்வோம். மற்ற பயிர்களெல்லாம் பசியைப் போக்கும். ஆனால், இதுமட்டுந்தான் பசி நீக்குவதோடு, உடலை மலரவைத்துச் சுகம் தரும். மனம்தான் பெரும்பாலும் மகிழ்வை உணர்கிறது. உடல் தேவையை மட்டுமே உணர்கிறது. ஆனால் இப்பயிர்தான் உடலை மகிழவும் வைக்கும்.” சொல்லிக்கொண்டே, கைப்பிடி அளவு கதிர் பறித்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதனை முருகனுக்குக் கொடுத்தாள்.

முருகன் அதனை வாங்கி உட்கொண்டான். ‘ஏற்கெனவே என் உடலும் மனமும் மகிழ்வால் திணறிக்கிடக்கின்றன. இதில் இதுவும் சேர்ந்தால், நிலைமை கட்டுக்கடங்காமல் போகுமோ?’ என்று அவனுக்குத் தோன்றியது.

வள்ளியும் வாயில் போட்டு மென்றபடி நடந்துவந்தாள். சிறிது தொலைவு சென்றபின், வள்ளிக்கு விக்கல் வந்தது. அருகில் நீரோடை எதுவும் இல்லை. கார்காலம் இப்போதுதான் தொடங்குகிறது, நீர் புரண்டோட இன்னும் நாளாகும். குட்டை எதுவும் இருக்கிறதா என்று பார்த்தான் முருகன். எதுவும் தென்படவில்லை.

வள்ளிக்கு உடனடியாகக் குடிக்க நீர் தேவைப்பட்டது. ஆனால், அவ்விடம் கிடைக்காது எனத் தெரிந்தது. அருகிருந்த சிறு பாறையின் மீதேறி, நாற்புறமும் பார்த்த முருகன், ஒரு திசை நோக்கி ஓடினான்.

நீர்நிலையைக் கண்டறிந்துவிட்டானோ என்ற எண்ணத்துடன் பின்தொடர்ந்து ஓடினாள் வள்ளி. அங்கு கானவெள்ளெருக்கொன்று செழித்திருந்தது.

“இங்கு ஏன் ஓடி வந்தீர்கள்?” எனக் கேட்டாள் வள்ளி.

“நீர் எடுக்கத்தான்” எனச் சொல்லியபடி, வெள்ளெருக்கின் அடிவாரமிருந்த சிறுசிறு கற்களை நகர்த்தி, குழியை உருவாக்கினான்.

“இவ்விடத்தில் நீர் இருக்கும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”

``கானவெள்ளெருக்கின் விதையைக் காற்று எங்கும் தூவிவிட்டிருக்கும். ஆனால், இங்கு மட்டுந்தான் அது முளைத்துள்ளது, அது நீர் உறிஞ்சும் செடியல்ல; நீர் குடிக்கும் செடி. அதிக நீர் இருப்பதால்தான் இவ்விடத்தில் வளர்ந்திருக்கிறது'' சொல்லிக்கொண்டே கற்களை விலக்கி, குழியை ஆழப்படுத்தினான்.

“வெள்ளெருக்கின் வேர் இரு முழத்தைத் தாண்டாது. எனவே அந்த அளவுக்குள்தான் நீர் இருக்க வேண்டும்” என்று முருகன் சொல்லும்போதே பாறையின் இடுக்கில் கசிந்தோடியது நீர்.

இரு கைகளையும் அதன் அடியில் நுழைத்து, நீர் அள்ளிப் பருகினாள் வள்ளி. நீரின் குளிர்ச்சி உடலெங்கும் பரவியது. 

முருகன் சொன்னான், “மண்ணுக்குள் நீர் இருப்பதும் மனதிற்குள் நீ இருப்பதும் முகம் பார்த்தால் தெரியாதா என்ன?''

குளிர்ச்சி நீரின்றியும் பரவியது.

p67f.jpg

முருகன் மீண்டும் சொன்னான், “காதல் சற்றே தலைகீழானது. நீர் இருக்கும் இடத்தில் தழைக்கும் வேரல்ல; வேர் இருக்கும் இடத்தில் சுரக்கும் நீர்.” சொல்லிக்கொண்டே, சிறு கற்களை குழிநோக்கி நகர்த்தி மூடினான் முருகன்.

வள்ளி மீண்டும் நடக்கத் தொடங்கினாள். அவள் அழைத்துச் செல்லும் இடம் காண முருகனுக்குள் பேரார்வம் மேலெழுந்தபடி இருந்தது. அவர்களின் கண்படும் தொலைவில் பன்றிக்கூட்டம் ஒன்று எதிர்சென்றது. இருவரின் கண்களும் அதனைப் பார்த்தன.
‘நான் விரட்டிச்சென்று அம்பெய்திய பன்றிக்கூட்டம் இதுதானா?’ எனக் கேள்வி எழுந்தது முருகனுக்கு.

‘இவற்றை விரட்டி வந்ததால்தான் நான் வள்ளியைக் கண்டேன். எனக்குக் காதலைத் தந்த இவற்றுக்கு நான் அம்பெய்திக் காயத்தை அல்லவா தந்துள்ளேன்?’ எனத் தோன்றியது. சட்டென பின்திரும்பி ஓடினான் முருகன். வெள்ளெறுக்கஞ்செடியின் அடிவாரத்தில் மூடிய கற்களை மீண்டும் கிளறி அகற்றி, பன்றிகள் நீர் அருந்த வழிசெய்துவிட்டு ஒதுங்கினான்.

பன்றிக்கூட்டம் நீர் நோக்கி நகர்ந்தது. அதன் குவிவாய் நீர்தொட்டு உறிஞ்சின. பார்த்துக் கொண்டே வள்ளியின் அருகில் வந்தான் முருகன். அவள் கேட்டாள், “இவற்றின் முதுகில் செந்தாது படிந்திருப்பதைப் பார்த்தீர்களா?”

“இவற்றின் உடலில் காயம் இருக்கிறதா என்பதைத்தான் எனது கண்கள் தேடின. வேறெதையும் நான் கவனிக்கவில்லை.”

“கார்காலத்தில் முதலில் மலரும் செங்கடம்பு மலரத் தொடங்கிவிட்டது. அம்மர அடிவாரத்தில் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள்பாவிய செந்நிறப் பூக்களின் மீதுதான் இவை படுத்தெழுந்து வருகின்றன. அதனால்தான் இவற்றின் மேலெல்லாம் செந்தாது ஒட்டியிருக்கிறது.”

அவள் சொன்ன பிறகுதான் அதனைக் கவனித்தான். உடலில் இருக்கும் மயிர்க்கால்களில் செந்தாது பூசியிருந்தது. ஒன்றினை ஒன்று உரசியபடி நீர் அருந்த, குழிநோக்கி முண்டின.

பார்த்துக்கொண்டே வள்ளி சொன்னாள், “மரத்திலே மாலைபோலத் தொங்கும் செங்கடம்ப மலரெடுத்து உனது மார்பில் சூடும்படி அவை எனக்குச் சொல்கின்றன”

“அது கொத்துப்பூ. அதை எனது மார்பில் சூடுவதைவிட, உனது கூந்தலில் சூடுவதுதான் அழகு!”

“அக்கொத்துப்பூவின் இதழ்கள் எவ்வளவு அசைத்தாலும் உதிராதது. அசையா மணம்கொண்டது. அதனால்தான் உனது மார்பிற்சூட ஆசைப்படுகிறேன்.”

`உதிராத பூக்களை எனது மார்பிற்சூட ஏன் ஆசைப்படுகிறாள்?' என முருகன் நினைத்துக் கொண்டிருக்கும்போது, வள்ளி சொன்னாள், “அசைத்தால் உதிராதது, அணைத்தாலும் உதிராதல்லவா?”

முருகன் திகைத்தான். செங்கடம்பின் அடிவாரத்தில் மனம் புரண்டு எழுந்தது. நீள்வாய் கொண்டு நீருறிஞ்சும் ஓசை பின்னணியில் கேட்டுக்கொண்டிருந்தது. மனம் அதனை நோக்கித் தாவியது.

``நான் கூந்தலில் சூடுவது ஒருவருக்கானதாகிறது. நீ மார்பில் அணிவது இருவருக்குமானதாகிறது.” சொல்ல நினைக்கும் சொற்களைச் சொல்லாமலே நடந்தாள் வள்ளி.

சொல்லாத சொற்களைச் சுவைத்துதான் காதல் வளர்கிறது. வெள்ளெருக்கின் வேர்போல மனதின் ஆழத்தில் இருந்து நீர்குடித்துப் பழகியது காதல். அதற்குச் சொல் சொல்ல மலர்வாய் தேவையில்லை. அதனினும் ஆழ்ந்த அன்பைக் குடித்து வளரவே வாய்முகப்பின் ஈரிதழ்களும்.  

p67g.jpg

சுரந்துகொண்டிருக்கும்போதே அருந்திக் கொண்டிருக்கும் அதிசயத்தை இதழ்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தன. முருகனின் மனதில் மலர்ந்தது சொல், “நான் அகழ்ந்து கண்டறிந்ததை, நீ அணைத்துக் கண்டறிந்தாய். நான் கண்டறிந்தது ஒருவருக்கானது; நீ கண்டறிந்தது இருவருக்குமானது.” சொல்லாத சொல்லேந்தி இப்பொழுது முருகன் நடந்துகொண்டிருந்தான்.

முன் நடந்த வள்ளி, பாறை இடுக்குகளின் வழியே உள்நுழைந்தாள்.  இருட்பிளவின் வழியே எங்கே அழைத்துச் செல்கிறாள்?’ என்று சிந்தித்தபடியே பின்தொடர்ந்தான் முருகன்.

ஒரு பெரும்பாறையின் முனை திரும்பினாள் அவள். பின்னால் வந்தவன் அதேபோலப் பாறை கடந்ததும் முனை திரும்பினான். திரும்பிய கணத்தில் அவன் கண்கள் பார்த்த காட்சி, அவனை அசையவிடாமல் அப்படியே நிறுத்தியது. இமைகொட்டாமல் பார்த்தான் முருகன், தான் வாழ்வில் இதுவரை பார்க்காத ஒன்றை.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 33

குறுவழியில் உள்நுழைந்து புதுநிலப்பகுதியைப் பார்த்த கணத்தில் மெய்மறந்து நின்றான் முருகன். பெருவட்ட வடிவில் மலைகள் சூழ்ந்திருந்தன. உயர்ந்து நிற்கும் அடர்மரங்களைக்கொண்ட அந்த மலைவளையத்தின் நடுவே பரந்து விரிந்த நிலப்பரப்பு. அந்நிலப்பரப்பு முழுவதும் கழுத்தளவிற்கு விளைந்து நிற்கும் புல்வெளி. பார்க்கும்தோறும் அதன் அழகு பெருகிக்கொண்டே இருப்பதுபோல் உணர்ந்தான். சூழலில் மிதக்கும் மனம் மெல்லிய மயக்கத்தை ஏற்படுத்தியது.

“இந்த அழகைவிட்டுப் பார்வை பிரியாது” என்றாள் வள்ளி.

குரல் கேட்டுத் திரும்பாமலே முருகன் கேட்டான், “புலனறிய முடியாத மயக்கம் சூழ்கிறது. என்ன இருக்கிறது இவ்விடத்தில்?”

p67a.jpg

“நமது கண்களுக்கு முன்னால் விளைந்து நிற்பது நரந்தம் புல். இதன் நறுமணம் யாரையும் மயக்கிவிடும். மயிலம் மலர் போலத்தான் இதுவும் காயக்காய நறுமணம் அதிகமாகிக்கொண்டே இருக்கும். காய்ந்த சருகுகள் வெளிப்படுத்தும் வாசனைக்கு அளவேதுமில்லை. நீலக்கடலுக்குள் உப்பு தேங்கிக்கிடப்பதைப் போல, இந்நரந்தம் புல்வெளியில் நறுமணம் தேங்கிக் கிடக்கிறது.”

சொல்லியபடி முருகனின் கைப்பிடித்து புல்வெளிக்குள் நுழைந்தாள் வள்ளி. புற்களைக் கையால் விலக்கி, காலால் மிதித்து நடக்கையில் கிளர்ந்த நறுமணம் இருவரின் மனத்தையும் மயக்கிச் சுழற்றியது. ஏற்கெனவே உட்கொண்டிருந்த அன்னமகிழரிசி உள்ளுக்குள் மலர்த்தலைத் தொடங்கியது. உடலும் மனமும் காற்றாய் மிதக்க காதல் கனிவாய் உருகி மனமாய் பெருகியது.

அவர்களின் பார்வைக்குமுன் பறவைகளும் விலங்கினங்களும் குறுக்கும் நெடுக்குமாகக் கடந்தபடி இருந்தன. பார்வையில் கடக்கும் அவற்றின் மீது எண்ணங்கள் நிலைகொள்ளவில்லை. மயக்கத்தின் முழுநிலையில் இருந்தான் முருகன். ஆனால் காதலின் துடிப்பு உள்ளத்தில் விசையைக் கூட்டியபடி இருந்தது.

முருகனின் ஆழ்மனம் விழித்திருந்தது. ‘இது வெறும் மயக்கம் என்றால், நாம் எப்பொழுதோ நினைவைத் தவறவிட்டிருக்க வேண்டும். ஆனால் இப்பொழுதும் நினைவிருக்கிறது. மயங்கிய மனம் காதலைத்தவிர, வேறெதிலும் நிலைகொள்ள மறுக்கிறது, என்ன நிகழ்கிறது இங்கு?’

வள்ளி கைப்பிடித்து முருகனை அழைத்துச்சென்றாள்.  மயக்கம் தெளியத் தெளிய ஆழ்மயக்கத்துக்குள் அவர்கள் நுழைந்தனர். புல்வெளியின் நடுவில் இருந்த சிறுமேட்டில் அமர்ந்தாள் வள்ளி. அமர்ந்த கணம் அவள் மடிதனில் சாய்ந்தான் முருகன்.

தனது மடியில் அவன் முகம் ஏந்தியபடி எதையோ சொல்ல வாயெடுத்தாள். சொல்லின்றி அமைதியானாள். அவள் முகம் பார்த்த முருகனுக்கு எல்லாம் புரிந்தது. ‘கணநேரம் ஏழிலைப்பாலையின் அணுக்கத்தில் நிறுத்தி மலரவைத்தேன். நீயோ காலம் முழுவதும் மலரவைக்க வழிசெய்கிறாய். நிலமகள் நீ. உனது ஆற்றல் எனைநோக்கிக் கடத்தும் ‘காதல்’ எதிர்கொள்ள முடியாததாக இருக்கிறது; உள்நுழைந்த நறுமணமாய் உனக்குள் மறைகிறேன் நான்.'

நறுமணம் சூல்கொண்டிருக்கும் கருப்பைதான் அம்மலைக்குடுவை. அதன் நடுவில் இருந்த சிறுமேட்டில் வானம் பார்த்துப் படுத்திருந்தனர் இருவரும். நிறையிருள்கொண்டு வானம் கருத்திருக்க எங்கும் விண்மீன்கள் ஒளிவீசின.

காதலில் தெளியும்பொழுதுதான் மயக்கத்தின் ஆழம் புரிகிறது. ஆழத்தை அறியும்பொழுதுதான் அது அறியமுடியாத இடமென்ற உண்மை உரைக்கிறது. அன்னமகிழரிசி உடலை மலர வைத்தது. நரந்தம் புல் மனதை மலரவைத்தது. வள்ளியின் அணுக்கம் மலர்தலில் வாழவைத்தது.

வள்ளி சொன்னாள்,  “இவ்விடத்தில் இணையோடு இருக்கும் உயிரினங்கள் மட்டுமே தங்க முடியும். நரந்தம் புல் கிளர்த்தும் மனவெழுச்சி தனித்த உயிரினத்தை விரட்டிவிடும். பறவைகளும் விலங்கினங்களும் நீங்காத மயக்கம்கொண்டு காதலில் திளைத்திருக்கின்றன.”

“பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன். புலிகளுக்குமுன் இணைமான்கள் மலர் உண்ணுகின்றன. மான் உண்ணாத மலரில் வண்டுகள் நிலைகொள்கின்றன. ஆண்மலரின் மகரமும் பெண்மலரின் சூலகமும் இதழின்றி மலர்கின்றன. இவ்வியப்பு வேறெங்கு நிகழும்?”

விண்மீன்களைப் பார்த்தபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இரவு நகர்தலற்று நிலைகொண்டிருந்தது. முருகனின் கண்கள் வானத்தைப் பார்த்து, குறிப்பிட்ட விண்மீன் கூட்டத்தையே உற்றுநோக்கின.
“வளைந்தோடும் ஆறுபோல இருக்கும் அவ்விண்மீன் கூட்டத்தைப் பார்” என்றான் முருகன்.

“எங்கே?” என்று கேட்டபடி வள்ளியின் கண்கள் தேடின. விரல் நீட்டி அதன் வளைவுகளைச் சொல்லிக்கொடுத்தான். ஆறு புள்ளிகள் வளைவுகொண்டு மின்னின. நீண்டநேரம் அதனையே பார்த்தாள் வள்ளி.

முருகன் செங்கடம்பின் மாலை அணிந்தபடி படுத்திருந்தான். வள்ளியின் மேனியெல்லாம் அதன் மனம் வீசியபடி இருந்தது. மாலையில்லாத தனது உடலில் மணக்கும் செங்கடம்பின் வாசனையை நுகர்ந்தபடி இடப்புறம் திரும்பினாள். முருகனின் மேனியில் உதிராத இதழ்களோடு அவை இருப்பதைப் பார்த்தபடி புன்னைகையோடு சொன்னாள். “மாலை மார்பன்.”

மனதுக்குள் பொங்கும் காதலோடு முருகன் சொன்னான் “மாமலர்க் கோதை.”

கூடிய வெட்கத்தோடு குழைந்து சொன்னாள், “அழகின் வடிவு நீ.”

p67b.jpg

இதழ் முத்தம்போல வாங்கியவற்றையே வழங்கினான், “வடிவின் அழகு நீ.”

சிதறிய சிரிப்போடு மீண்டும் தலைசாய்த்து விண்ணைப்பார்த்தாள். சொல் சுழல பொருளும் சுழன்றது. செங்கடம்ப மாலை இப்பொழுது வள்ளியின் மேல் படர்ந்திருந்தது. இமை சொருகினாள்.

“அவ்விண்மீன்களின் வளைவை என்மீது சுற்றுவதுபோல் இருக்கிறது உனது விரல்களின் தொடுதல்.”

முருகனின் மூச்சுக்காற்று மட்டுமே மறுமொழியாய் இருந்தது.

காற்றிலே வந்த மறுமொழி கண்டு வள்ளி சொன்னாள், “அனலெரியும் காதல் ஒளியுருக்கி ஊற்றுகிறது. அச்சம்கொள்ளவைக்கும் அணைப்பு.”

அணைப்பு நீங்கி முருகன் மொழிந்தான், “மலைமகள் அச்சம் காணாள்.”

மூடிய இமை திறக்காமலே சொன்னாள், “வேலன் மிச்சம் காணான்.”

சொல்கிளர்த்தும் மகிழ்வோடு சொன்னான், “காதலில் நான் வேலன் அல்ல.”

“வேட்டையில் மறைந்து கொள்வது உனக்கு புதிதல்ல.”

வள்ளியின் சொல்லுக்கு மறுசொல் வரவில்லை.

சிலகணம் கழித்து முருகன் சொன்னான், “நான் உன்னுள் மறைந்து கொள்கிறேன். எனை நீ கண்டறியாதே.”

“சரி, ஆனால் என்னைக் கண்டறிய உன்னைப் பின்தொடர்வேன். மறைப்புகள் விலக்கி உன்னுள் புதைந்தெழுவேன்.”

பதிலின்றி இருந்தான் முருகன். அதுவே பதிலாய் அமைந்தது. மறைதலும் தேடலும் கார்காலம் முழுவதும் தொடர்ந்தன. புதைந்தவள் மீண்டாள்; மீண்டவன் புதைந்தான். மேகத்தில் தூசி மாறி தும்மல்கொண்டது. பின்னர் கூடும் முகில்களின் கொட்டம் தொடங்கியது. வேப்ப முத்து அளவினைக்கொண்ட மழைத்துளிகள் கொட்டித்தீர்ந்தன. ஒவ்வொரு துளி நீருக்குள்ளும் நரந்தம் புல்லின் மணம் மேலேறியது. மணமேறிய நீரின் துளிகள் வள்ளிமுருகனின் வாசனையைக் கொண்டிருந்தன.

புல்வெளியின் பெரும்பரப்பைச் சுற்றியிருந்த மலைமுகடுகளில் எண்ணிலடங்காத பூக்கள் பூத்துக் குலுங்கின. கொடிமலர்களும் கொத்து மலர்களும் வண்ணம்வீசி வளைய வந்தன. வேங்கை மரத்தின் கொத்துப்பூக்கள் கரும்பாறையெங்கும் கொட்டிக்கிடந்தன. உதிரவேங்கையும் மணிமுத்து வேங்கையும் பூத்தவேங்கையும் பாயாவேங்கையும் கொட்டும் மழைத்துளிக்கு இணையாக பூக்களைச் சொரிந்தன.

நெருப்பையொத்த எறுழம்பூக்களும் சிறுவட்ட இதழ்கொண்ட எருவைப்பூக்களும் வெண்ணிறக் கூதாளிமலரும் பருத்து பேரழகோடு மலரும் புழுகுப்பூக்களும் சூல்வட்ட மலையை வண்ணக்குவளையாக மாற்றின.
கொட்டும் மழையில் பாறைக்குகைகளில் இருந்த முருகனும் வள்ளியும் மழை நின்ற பொழுதுகளில் நரந்தம் மேட்டில் வந்தமர்வர். மழை நின்ற இரவுகளில் வெளிர்வானில் மின்னும் விண்மீன்களின் அழகு சொல்லிமாளாது. முருகனின் கண்கள் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தன.

வளைந்து கிடக்கும் ஆறு புள்ளிகொண்ட அந்த விண்மீன் கூட்டத்துக்குள் நிலவு சிக்கியிருந்தது. விண்ணில் தெரியும்  வியத்தகு ஒளி இணையாய் அது இருந்தது. அவ்விணை கூடியதும் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து நிலம் நோக்கிச் சரிந்தன. கொட்டும் மழை பொழிய விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைவெளியின்றி இருந்ததால், ஊற்று கசிவதைப்போல மேகத்திலிருந்து உருகி மண்ணில் ஓடியது மேகநதி.

எத்தனை பகலிரவு இப்படிக் கடந்ததெனத் தெரியாது. மேகம் விலகிய நள்ளிரவுகளில் முருகனின் கண்கள் ஆறு விண்மீன் கூட்டத்தைக் கடந்து பயணிக்கும் நிலவின் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தன.
ஓர் அதிகாலை மழைநின்றவுடன் குகைவிட்டு வெளிவந்த வள்ளியின் கண்களில் முதலிற்பட்டன பூத்து நின்ற செங்காந்தள் மலர்கள். செவ்வொளி வீசும் ஆறு இதழ்களோடு அவை இருப்பதைப் பார்த்தபடி முருகனை அழைத்துக் காண்பித்தாள்.

“அவ்விண்மீன் கூட்டத்தின் சுடர்போல் இம்மலர் ஆறு இதழ்களைக் கொண்டுள்ளது” என்றாள்.

செவ்விதழ்களை உற்றுப்பார்த்தான் முருகன். இதழின் அடியில் இளம்பசுமை நிறமிருந்தது. நடுவில் மஞ்சள் மேவி பின்னர் வெண்மையில் கரைந்தது. மேற்பகுதி இளஞ்சிவப்புப் பூண்டுமுனை அடர்சிவப்பாய் மிளிறியது. இதே நிறவாகு அவ்விண்மீன் கூட்டத்தில் உள்ளதை முருகனின் கண்கள் பல இரவுகளில் பார்த்துள்ளன.

“ஆறுவிண்மீனின் அதே குணம் இம்மலரின் ஆறு இதழ்களிலும் இருக்கின்றன” என்றான் முருகன். “அப்படியா!” என்று அவள் கேட்பதற்குள் சொன்னான், “இந்நிறங்கள் அனைத்தையும் காதலில் திளைக்கும் வேளையில் உன்னிடமும் கண்டுள்ளேன்.”

வியப்புற்று வள்ளி கேட்டாள், “நீ விண்ணைக் காணும்பொழுதும் என்னைத்தான் கண்டாயா?”

“நீயின்றி நான் காண விண்ணேது? மண்ணேது?”

சொல்லியபடி செங்காந்தள் மலர்பறித்து வள்ளியின் கூந்தலிற் சூட்டினான். அடர்வானம்கொண்டு கொட்டித் தீர்த்த கார்காலத்து அடைமழை விலகத் தொடங்கியது. விரிவானம் மேகமற்று மிதக்க, அவ்விண்மீன் கூட்டம்விட்டு நிலவு நகர்ந்தது.

நரந்தம் புல் பரப்பில் இருந்து விலகத்தொடங்கினான் முருகன். செங்காந்தள் சூடியபடி அவனுடன் நடந்தாள் வள்ளி. புது இடம் நோக்கி அவளை அழைத்துச்சென்றான் முருகன்.

மலையுச்சியிலிருந்து அடிவாரக் காட்டுக்கு கீழிறங்கி வந்தனர். அடைமழையின் கூதிர்ப்பருவம் முடிந்து முன்பனி தொடங்கியது. நடுக்கம் அதிகமாகும் முன்பனிப்பொழுதில் தங்குவதற்குக் கொன்றை மரங்கள் அடர்ந்து கிடக்கும் இடுக்கினைப் பயன்படுத்தினான். குளிர் சற்றே குறையும் பின்னரவில் படுத்துறங்க கருங்கொன்றையின் உச்சியில் பரண் அமைத்தான்.

பனி நடுக்கம் தாளாமல் முயல்கள் கொன்றை மரயிடுக்கில் பதுங்கின. அவ்விடுக்கின் உள்ளே கால்களை இறுகணைத்து அமர்ந்திருந்தாள் வள்ளி. வள்ளியின் கணப்பில் அண்டின முயல்கள்.

இரைதேடி வேட்டைக்குப் போன முருகன் திரும்பி வந்தபோது வள்ளியின் கணப்பில் முயல்கள் அண்டியிருப்பதைப் பார்த்தான். நீள்காது அசைய அவை வள்ளியை நோக்கித் திரும்பின. வள்ளியின் முகத்தில் புன்முறுவல் இருந்தது.

முருகன் முயல்களைப் பார்த்து சொன்னான், “அவ்விடம் அணையாதீர்கள். பின்னர் ஒருபோதும் விலகமாட்டீர்கள்.”

சொல்லுக்குள் பொறாமை வெளித் தெரியாமல் பார்த்துக்கொண்டான். ஆனால் பார்வையே அதனைச் சொல்லியது. அதன்பிறகுதான் சில முயற்குட்டிகள் வள்ளியின் மேலேறிப் பதுங்கின.

நீண்ட கொன்றைக்காயின் விதைகளை ஒருபக்கம் துளையிட்டு எடுத்துவிட்டு இசைபாடும் குழலாய் மாற்றினான். பொழியும் பனியின் ஊடே பரணில் படுத்தபடி நகரும் ஆறு விண்மீன்களைப் பார்க்க அவன் தவறுவதில்லை.

p67c.jpg

குருவிக்குஞ்சுபோல் வெண்மை திரண்டு பூக்கும் முன்பனியின் புதுமலரான ஈங்கை மலர் பறித்து வள்ளியின் கூந்தலில் சூட்டிய நாளன்று அவன் காடுவிட்டு வெளியேறப் போகிறான் என அவளுக்குப் புரிந்தது.

கீழுதடு நடுங்கும்படி பின்பனி கொட்டும் அந்த நாட்களில் அவனோடு வயல்வெளியின் ஊடே நடந்து வந்தாள் வள்ளி. தவளைச் சத்தம் விடாது கேட்க, மூக்கெங்கும் ஈரப்பதம் ஏறியிருந்தது. தாமரை படர்ந்துகிடக்கும் குளக்கரையில் மருதமரத்தின் மீது பரண் அமைத்தான்.

“எங்கு போனாலும் பரண் மீதே தங்குவதேன்?” எனக் கேட்டாள் வள்ளி.

“இது காதல் வாழ்க்கை. தரையில் தங்கினால் இறுகிய நிலத்தில் கூடலின் வளம் முழுமை கொள்ளாது. வானில் மிதந்தால் கூடலின் இறுக்கம் வலிமை கொள்ளாது. இரண்டும் கலந்த பரணில்தான் நிலம் அசைய, வான் நகர, நடுவில் நாம் மூன்றிலும் கலப்போம்.”

அதன்பின் மறுமொழி சொல்ல ஒன்றுமில்லை வள்ளிக்கு.

பகலும் இரவும் பரண்மேல் மலரும் காதல் கண்டு பறக்கும் நாரைகள் இறகுதிர்த்துப் போயின. காற்றில் மிதந்துவரும் வெண்சாம்பல் இறகுகளைச் சேகரித்து, கொடிகொண்டு முடிச்சிட்டு வள்ளியின் தலையில் மகுடமெனச் சூட்டினான் முருகன்.

“காலநேரமின்றி மிதந்து கொண்டிருக்கிறேன். இதில் நாரைகளின் இறகுகளை தலையில் அணிவித்தால், பறத்தல் நிறுத்தி ஒருபோதும் தரையிறங்காமல் போவேன்” என்றாள் வள்ளி.

“உனது அணைப்பில் மீளமுடியா மயக்கத்தில் கிடந்த எனக்கு, அன்னமழகியரிசி கொடுத்து உடலையும், நரந்தம்புல் கொண்டு மனதையும் தெளிவடைய முடியாத திகைப்பில் வீழ்த்தினாயே, அதைவிடவா?”

முருகனின் வினாவிற்கு விடையேதும் சொல்லவில்லை வள்ளி. இக்கைமாறில்தான் காதல் கனல் நீங்கா வெக்கை கொள்கிறது. அணுக்கள்தோறும் துடிப்படங்கா தவிப்பு கொள்கிறது.

தவிப்பு நீங்கா அதிகாலையில் பின்பனிப் பருவத்துப் புதுமலரான கமுகின் சிறு பூ எடுத்து வள்ளிக்குச் சூட்டினான். வயல் தாண்டி கடல் நோக்கி புறப்பட்டனர் இருவரும்.

p67d.jpg

கடற்காற்று மேலேறி வந்து தாழை மரங்களுக்கு இடையில் கட்டிய ஊஞ்சல் பரணை ஆட்டிவிட்டுச் சென்றது.

பரண்மீது ஆடிக்கொண்டே வள்ளி சொன்னாள், “கரையில் இருந்தும் அலையில் மிதக்கிறோம்.”

“மலையிலும் காட்டிலும் வயலிலும் நாம் மிதக்கத்தானே செய்தோம்.”

“ஆனால் இப்பொழுதுதான் உப்பேறிய காற்று உடல் தழுவிச்செல்கிறது. இளவேனில் ஒளிக்கதிர்களால் உடல் சுடுகிறது. இவை அனைத்தும் இவ்வளவு நாளும் உள்ளுக்குள் மட்டுமே நிகழ்ந்தன” சொல்லி மகிழ்ந்தாள் வள்ளி.

இருவரும் ஆடும்பரணில் படுத்தபடி கடல் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

நீண்ட நேரத்துக்குப் பின் வள்ளி கேட்டாள், ``கடல் ஏன் கரையோடு நிற்கிறது?”

“கரை மீது கொண்டுள்ள காதலால்.”

மறுமொழி அவளை ஏதோ செய்தது. சட்டென அவனை நோக்கித் திரும்பியபடி கேட்டாள். “அப்படியென்றால், இவ்வளவு தழுவல்கொண்ட காதலர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா?” கேள்வி கேட்ட கணத்திலே மனம் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் திணறியது.

முகக்குறிப்பறிந்து முருகன் கேட்டான், “என்ன ஆனது?”

சொல்லமுடியாமல் திணறிய வள்ளியை முருகனின் கைகள் சூழ்ந்தபோது கடலும் கரையும் பரணில் இருந்தன.

இரவு நெடுக அலைகளின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்ததது. அவ்வப்பொழுது தெறித்த நீர்த்துளிகள் காற்றில் வந்தன. விண்மீன்களைப் பார்த்தபடி இருந்த அவர்களது நாவிலிருந்து சுடுமீனின் வாசனை விலகவேயில்லை.

இளவேனிற்காலத்துச் சுடுவெயில் உச்சத்தில் இருந்த பொழுது, கடற்கரை மணல்வெளியில் முள்ளி மாமலர் பூக்கத் தொடங்கியது. அந்நீலநிறப் பூவைப்பறித்து பரண் நோக்கி முருகன் வந்தான். அவள் பாலை நிலம் நோக்கிப் புறப்பட ஆயத்தமாக இருந்தாள்.

p67e.jpg

கொடும்பாலையில் அளவில்லாத தொலைவு நடந்தனர் இருவரும். வற்றிய சுனையில் ஒளி மேவிக்கிடந்தது. பறந்து கடக்கும் கழுகுகளின் நிழல்கள் மட்டுமே மண்ணில் ஊர்ந்தன. வள்ளியின் பாதங்களில் கொப்பளங்கள் பூத்தன. ஆனாலும் விடாது நடந்தாள். பாலை நிலத்தின் பின்கோடை வெயில் எண்ணிலடங்காத தாவரங்களை மலரச்செய்கிறது. சுட்டெரிக்கும் மண் மீது ஏதோ ஒரு மூலையில் சிறுமலரொன்று இதழ் விரித்திருப்பதைப் பார்க்கும் பொழுதெல்லாம் வள்ளியின் முகம் மலர்ந்தது.

அழிச்சியும் அலரியும் சுள்ளியும் எருக்கும் இங்குமங்குமாகப் பூத்திருந்தன. இரும்பைப்பூவின் இனிப்பு பறவைக்கூட்டங்களை ஈர்த்தது. வேப்பம் பழத்தைத் தின்ற கைப்புச்சுவை மாற வெளவால்கள் இலும்பை மரத்தைவிட்டு நீங்காமற் கிடந்தன. பொன்நிற தனிப்பூவை கோங்கு உதிர்த்தபொழுது அணிலின் முதுகின் மேல் இருக்கும் வரிகளைப் போன்ற ஊகம்பூவும் இணைந்தே கிடந்தது.

எப்பொழுதோ வீசும் காற்றில் பறக்கும் மலர்கள் மீண்டும் மண் தொடும்போது சருகின் ஓசையுடனேயே சரிந்தன. மண்ணும் மரமும் காற்றும் சுடுவெயில் ஏந்தி நின்றன. ஏந்திய வெயிலின் இறங்காத சூடு மண்ணெங்கும் நிலைகொண்டது. வலிமையிழந்த புலிகள் பதுங்கிய இடத்தைவிட்டு எழ முடியவில்லை. நீரின்றி அலைந்த செந்நாய்களின் கால்தடங்கள் மட்டுமே மிஞ்சின. எப்புறமும் சுடுவெயில் சூழ்ந்த பாலையின் நடுநிலம் நோக்கி நகர்ந்தனர் வள்ளியும் முருகனும்.

வள்ளியின் உதடுகள் வெப்பக்காற்றில் வெடித்துக்கிடந்தன. முதுவேனிலின் சுடுபழத்தைச் சுவைத்து உண்டதன் அடையாளங்கள் அவை. எங்கும் பட்டமரங்களே நின்றிருந்தன. சிறுபாறையோரம் தனித்திருந்த வாகை மரத்தின் மீது பரண் அமைத்தான் முருகன்.

பகல் மங்கியபொழுது பரணேறிச் சாய்ந்தனர் இருவரும். இரவானதும் வானமும் சுடுமோ என்று அஞ்சவைத்தது பகலின் நினைவு. முருகனின் கண்கள் விண்மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. வளைவுகொண்ட அந்த ஆறு விண்மீன்களும் வானில்  தெரியவில்லை.

p67f.jpg

“அவை வான்விட்டு எங்கு போயின?” எனக்கேட்டாள் வள்ளி.

“எந்த ஒரு வளைவிலும் மறைவுகள் இருக்குமல்லவா? அதேபோல அந்த ஒளி வளைவின் மறைவிடத்தில் நாம் இருக்கிறோம். அதனால் பார்வையில் இருந்து தப்பியுள்ளது” என்றான் முருகன். அதன் பிறகு அது பற்றி அவள் கேட்கவில்லை.

அவை தவிர்த்து எண்ணிலடங்காத விண்மீன்கள் வான்வெளியைப் பூக்காடாய் மாற்றியிருந்தன. எங்கும் சிதறிக்கிடக்கும் வான்பூக்களைப் பார்த்தபடி வள்ளி கேட்டாள், “மழை கொட்டித்தீர்த்த கார்காலத்தில் நிலமெங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கின. அதன் பிறகு இம்முதுகோடையில்தான் எண்ணிலடங்காத பூக்கள் பூக்கின்றன. மற்ற பருவங்களில் இவ்வளவு பூக்கள் பூக்கவில்லையே ஏன்?”

முருகனின் முகத்தில் மெல்லிய சிரிப்பொன்று ஓடி மறைந்தது. அவன் சொல்லப் போகும் மறுமொழிக்காக காத்திருந்தாள். மறுமொழியேதும் வராமல் நேரம் கடந்தது.

முருகனின் சிந்தனை வேறெங்கோ இருக்கிறது என நினைத்த வள்ளி தனது கேள்வியில் இருந்து  எண்ணத்தை விலக்கினாள்.

சற்று பொழுது கடந்து முருகன் சொன்னான், “எல்லாவற்றிற்கும் காரணம் ஆறு விண்மீன் கூட்டம்தான்.”

முருகனின் விடை எதிர்பாராததாக இருந்தது. திகைப்புற்ற வள்ளி கேட்டாள், “எப்படி?”

“அந்த ஆறுவிண்மீன் கூட்டத்தோடு நிலவு இணைந்திருந்த காலத்தில்தான் கார்மேகங்கள் வானம் எங்கும் நிறைந்திருந்தன. பெருமழை விடாது கொட்டித்தீர்த்தது. அதேபோல அந்த ஆறு விண்மீன் கூட்டத்தோடு கதிரவன் இணைந்திருக்கும் இக்காலத்தில் சுடுவெயில் தீயென விடாது பொழிகிறது. நீரும் ஒளியும்தான் மலரென வடிவம் கொள்கின்றன. அதனால்தான் பிறகாலங்களைவிட இவ்விரு காலங்களிலும் மலர்கள் அதிகமாக மலர்கின்றன. இம்மலர்தலுக்கு காரணம் வளைவுகொண்ட அந்த ஆறுவிண்மீன்கள்தான்.”

முருகனின் விடை முற்றிலும் புதிதாய்த் தோன்றியது. அதனை உள்வாங்கி மறுவினா தொடுக்க சற்று நேரமானது. அவள் கேட்டாள், “அவ்விண்மீன் கூட்டத்தோடு நிலவு இருந்ததை நாம் பார்த்தோம். இப்பொழுது கதிரவன் அக்கூட்டத்தோடு இருக்கிறான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”

“விண்மீனின் நகர்வுகளைக் காலம் முழுவதும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். வானின் ஒவ்வொரு பகுதியிலும் அது நகர்ந்து செல்லும் வழித்தடம் எனது மனக்கண்ணில் இருக்கிறது. இப்பொழுது அவற்றோடு இணைந்தே கதிரவன் பயணிக்க வேண்டும். பகல் பயணம் அது. அதனால்தான் இரவில் அவ்விண்மீன் கூட்டம் நம் கண்களுக்குத் தெரியவில்லை. காலச்சுழற்சியின் பாதை அதுவே.”

பதிலுரையால் உறைந்து நின்றாள் வள்ளி. அடுத்த சொல் சொல்ல நா எழாமல் இருந்தது. அதனைக் கவனித்தபடி முருகன் சொன்னான், “உனது முதுகுப்புறத்தை நீ பார்க்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் உன்னால் உணரமுடியும் அல்லவா? அதுபோல்தான் இதுவும்.”

இவ்வுவமைக்குப்பின் சொல்ல எதுவும் இல்லை என்று தோன்றியது. ஆனால் இவ்வுவமையே பல சொற்களைச் சொல்லவும் தூண்டியது.  வேண்டாம் என்று கட்டுப்படுத்தினாள் வள்ளி. ஆனாலும் உருக்கொண்ட வார்த்தைகள், தனக்குத்தானே ஒருமுறையாவது சொல்லிக்கொண்டால் மட்டுமே அமைதிகொள்ளும்.

“எல்லா அணைப்புகளிலும் சூழ்ந்த உனது கைகள் எனது முதுகினையே பற்றியது. காதல் அதனால்தான் இவ்வளவு வெக்கை கொண்டுள்ளதா? சுட்டெறிக்கும் அனல், காதலைவிட்டு எப்பொழுதும் நீங்காமல் இருப்பது அதனால்தானா?” சொற்கள் வேள்விகளாய் உருத்திரண்டபடி இருக்க, அனைத்தையும் விழுங்கிவிட்டு ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்டாள், “எல்லா இரவுகளிலும் வான்நோக்கி பரண் அமைத்தது காதலில் மூழ்கத்தான் என நினைத்தேன். ஆனால் காலத்துள் மூழ்கத்தான் அதனைச் செய்தாயா?”

p67g.jpg

அழகிய சிரிப்போடு முருகன் சொன்னான், “நான் காலத்துள் மூழ்கும்போதெல்லாம் காதலுக்குள்தான் மூழ்கினேன். காதல்தானே காலச்சுழற்சியின் அடையாளம். நிலவும் கதிரும் இயற்கைக்குப் பாலூட்டும் இருமார்புகள். கருணையும் காமமும் சமமாய்ச் சுரக்கும் அவ்வழகிய தனங்களைவிட்டு நான் எக்காலமும் அகலாமல்தானே இருந்தேன். அணைப்பு நீங்காமல் அதனை அறிந்தவள் நீதானே.”

சொல்கிளர்த்தும் காதல் உடலெங்கும் பொங்க, செய்வதறியாமல் நின்றாள் வள்ளி. அவளது முகத்தை தனது கைகளில் ஏந்தியபடி முருகன் சொன்னான், “கார்மேகம் மழையைக் கொட்டித் தீர்ப்பதற்கும், தீயாய் வெயில் சுட்டெறிப்பதற்கும் அவ்விண்மீன் கூட்டமே காரணம். எனவே அதனைக் கார்த் தீ என அழைக்கலாமா?”

“உனது கைகள் எனது முகமேந்திய கணத்தில் உடலெங்கும் கார்காலக் குளுமை பரவியது. ஆனால் அணைக்காமல் விலகி நிற்கும் இவ்விடைவெளியில் பாலைத் தீ பற்றி எரிகிறது” வள்ளி வார்த்தையை முடிக்கும் முன்னே இறுக அணைத்தான் முருகன். கார்காலக் குளுமையின் மீது பற்றியெறிந்தது தீ. கார்த் தீ!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 34

ருளுக்குள் நடந்துகொண்டே கார்த்திகையின் கதையைச் சொல்லி முடித்தான் பாரி. கதை கேட்டபடி பின்னால் வந்துகொண்டிருந்தார் கபிலர். திசைவேழரின் காலக்கணிதம், பேரரசுகளின் வானியலறிவு ஆகியன பற்றி கபிலருக்கு இருந்த எண்ணங்கள், பாரி சொன்ன ஒற்றைக்கதையால் தள்ளாடத் தொடங்கின. `நான்கு ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஒளிவாளினை இவ்வளவு துல்லியமாகக் கணித்துவைத்திருக்கும்போதே, மலைமக்களின் வானியலறிவைப் புரிந்துகொள்ள கூடுதலாக முயன்றிருக்க வேண்டும்’ எனத் தோன்றியது.

பேச்சற்று வந்துகொண்டிருந்த கபிலரைப் பார்த்து பாரி, “முருகன், கார்த்திகை விண்மீன் கூட்டத்துக்குப் பெயர் சூட்டிய கதையை மட்டும்தானே சொல்லியுள்ளேன். இன்னும் எவ்வளவோ இருக்கின்றனவே” என்றான்.

“இன்னும் எவ்வளவோ என்றால், முருகனைப் பற்றியா... விண்மீன்களைப் பற்றியா?”

“காலத்தைப் பற்றி”

p85a.jpg

‘என்ன சொல்லவருகிறான் பாரி?’ என்ற திகைப்பு வாயடைக்கச் செய்தது கபிலரை.

பாரி சொன்னான், “அந்த ஆறு விண்மீன்களின் அடிப்படையில்தான் காலமும் ஆறு கூறுகளாகப் பகுக்கப்பட்டன. கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என ஆறு பெரும்பொழுதுகளும், வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என ஆறு சிறுபொழுதுகளும் இதன் அடிப்படையில்தான் பகுக்கப்பட்டதாகச் சொல்வார்கள்.”

இருள் சூழ்ந்துள்ள ஒற்றையடிப்பாதையில் பின்னால் வருகிறவர் சிறு ஓசைகூட எழுப்பாமல் வரக் கூடாது என்பது கபிலருக்குத் தெரியும்.  ஆனால், தெரிந்தவை எல்லாம் தெரியாதவற்றின் பின்புலத்தில் போய் மறைகின்றன. பின்னணிக் கதைகள் காலத்தையே புரட்டுகின்றன. கபிலர் என்ன செய்வார்?

மனம் புரண்டு எழுந்து உண்மையைப்பற்ற நினைத்தபோது குறுக்கிட்ட கதை, ‘அது உண்மையா?’ என்ற கேள்வியை எழுப்பியது. திகைத்து நின்றவரிடம் புதிதாய் வினா ஒன்று மேலெழுந்தது.

“வேளிர்குலத் தலைவன் உருவாக்கியதால்தான் பொழுதை அறிய `வேளை’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோமா? காலை வேளை, மாலை வேளை என அழைப்பதன் காரணம் அதுதானா?”

கபிலரின் வினாவுக்கு, பாரியிடம் விடை இல்லை.

சற்றுநேர இடைவெளியில் மீண்டும் கபிலர் கேட்டார், ``காலச்சுழற்சியை அறுபது ஆண்டுகளாக வகுத்ததற்கும், ஒரு நாளை அறுபது நாழிகைகளாகப் பிரித்ததற்கும் இந்த ஆறுதான் அடிப்படையா?”

பாரியிடமிருந்து மறுமொழி எதுவும் வரவில்லை. ஆனால், கபிலரின் உள்ளத்துக்குள் உருக்கொண்ட வினாக்கள் நின்றபாடில்லை.

“சற்றே நில்” என்றார் கபிலர்.

முன் நடந்துகொண்டிந்த பாரி நின்றான்.

“அன்று அங்கவை கேட்ட வினாவை உன்னிடம் சொன்னேனே நினைவிருக்கிறதா?”

எதுவென்று பாரி யோசித்துக் கொண்டிருந்தான். அந்தப் பொழுதுகூட கபிலரால் காத்திருக்க முடியவில்லை. “ `உயிரெழுத்துகள் ஏன் பன்னிரண்டு?’ என்று கேட்டாளே” என்றார்.

“ஆம்” என்றான் பாரி.

“உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு எல்லாம் ஆறின் மடங்குகளாகவே இருப்பது அதனால்தானா? ஆறு என்ற அச்சின் மீதுதான் எம்மொழி நிலை கொண்டுள்ளதா? ஆறு என்பது எண்ணாகவும், நதியாகவும், மொழியாகவும், காலமாகவும் விரிவுகொண்டதா?” என, கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார் கபிலர்.

அமைதியாய் நின்ற பாரி சொன்னான், “ இந்த வினாக்களுக்கு விடைகூற வேண்டியவர் நீங்கள்தானே, என்னிடம் கேட்கிறீர்கள்?”

``விடையை யாரும் சொல்லிவிடலாம். வினாக்கள் உருத்திரள்வதுதான் முக்கியம். பறம்பின் மீது ஏறத் தொடங்கியதிலிருந்து நான் முக்கியமாகக் கண்டடைந்தது விடையை அல்ல, வினாவைத்தான்.”
பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துதான்  வெளிவருகின்றன. கபிலர், கேள்விகளுக்குள் தலை நுழைத்துக் கொண்டிருந்தார்.

“காலத்தைப் பற்றி வேறென்ன சொல்ல வந்தாய்?”

“முருகன் அளவுக்கு இயற்கையின் ஒவ்வோர் அசைவையும் நுட்பத்தையும் புரிந்துகொண்ட இன்னொரு தலைவன் இல்லை. முருகனோடு இரண்டு பறவைகளைப் பற்றிய கதைகளை இணைத்தே மக்கள் சொல்வர். கேட்டிருக்கிறீர்களா?”

“நான் கேள்விப்பட்ட கதைகள் எல்லாம் இங்கு தலைகீழாக மாறிவிடுகிறதே! நீ எந்தப் பறவைகளைச் சொல்கிறாய்?”

``சேவலையும் மயிலையும்தான்.”

p85b.jpg

இந்தப் பறவைகளுக்கும் காலத்துக்கும் இருக்கும் உறவைப் பற்றி கபிலர் சிந்தித்துக்கொண்டிருந்தபோது பாரி சொன்னான், ``சேவல், கதிரவன் விரும்பி; செந்நிற ஒளியின் முதல் கீற்று வானில் மேலெழத் தொடங்கியவுடன் குதூகலித்துக் கொக்கரிக்கத் தொடங்கிவிடும். அதன் மகிழ்வுக்கு அளவு ஏதுமில்லை. அதேபோலத்தான் மயிலும். அது, மழைவிரும்பி; கார்மேகங்கள் கூடத் தொடங்கியதும் குதூகலிக்கத் தொடங்கும்; இறகு விரித்து தனது மகிழ்வைக் கொண்டாடும். நெருப்பும் நீரும்போலத்தான் கார்த்திகையின் இன்னொரு குறியீடு இவை இரண்டும்.”

சேவலின் கொக்கரிப்பையும் மயிலின் தோகை விரிப்பையும் கார்த்திகையோடு இணைத்து பாரி சொன்ன கணத்தில், உடல் சிலிர்த்து அடங்கியது. `காலத்தின் எதிரெதிர் முனைகளை வைத்துதான் முருகனைப் பற்றிய எல்லாக் கதைகளும் பின்னப்பட்டுள்ளன’ எனத் தோன்றியபோதே அறுபதாங்கோழியின் நினைவுவந்தது. “முருகனுக்கு மிகவும் பிடித்தது அறுபதாங்கோழி என்றுதானே பறம்பு மக்கள் சொன்னார்கள்?”
இளஞ்சிரிப்பு மாறாமல் பாரி சொன்னான்,“சேவலும் மயிலும் காலத்தின் குறியீடு என்றால், அறுபதாங்கோழி காதலின் குறியீடு. அது முழுநிலா நாளில் வானம் பார்த்து தனது மெல்லிய குரல்கொண்டு ஒலியெழுப்பும். சேவல்போல தனது அலகு திறந்து கூவாது. மூடிய வாயின் முணுமுணுப்பாய் வெளிவரும் இசை. வண்டுகளின் ரீங்காரம்போல மெல்லொலி எழுப்பும்.  வள்ளியும் முருகனும் நரந்தம்புல்லின் நடுமேட்டில் இருந்த காலமெல்லாம் காற்றில் மிதந்த ஓசை அதனுடையதுதான். அந்த ஓசை, காதலர்கள் உயிர் சுருண்டு ஓருடல்கொள்ள வழிசெய்யும்.

கார்காலமும் வேனிற்காலமும் இணைந்ததன் அடையாளமாகக் கார்த்திகை இருப்பதைப்போல, ஆணும் பெண்ணும் இணைந்த காதல் அடையாளம்தான் அறுபதாங்கோழி. ஒருவகையில் எரியும் நீரும் குளிரும் நெருப்புதான் அதுவும்.”

``காலத்தையும் காதலையும் வைத்து வள்ளியுடன் நடத்திய விளையாட்டு வள்ளிமுருகனைப் பற்றிய எல்லாக் கதைகளிலும் நிகழும்போலும்” என்றார் கபிலர்.

``காலத்துடனும் காதலுடன் விளையாடிப் பார்க்க விருப்பமில்லா மனிதன் யார்? மனிதனின் அடிப்படையான விருப்பம் இவை இரண்டும் தானே.  அதனால்தான் எல்லோருக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது. அதை விளையாடித் தீர்த்த வள்ளிமுருகனையும் பிடித்திருக்கிறது.” 

வள்ளிமுருகனின் கதையை அசைபோடுதல், காலத்தையும் காதலையும் மறுபடி நிகழ்த்திப்பார்த்தல்போலத்தான். அந்த நிகழ்வு மனதுக்குள் நிகழும்போது வெளிப்பேச்சுக்கு வேலையென்ன? பாரியும் கபிலரும் இருவேறு உலகுக்குள் நீந்தியபடி  நடந்து சென்றனர்.

இருளின் அடர்த்தி குறையத் தொடங்கியது. மழை நின்ற இரவு, கிழக்கே மேலெழும் புத்தொளிக்காகக் காத்திருந்தது. பறவைகளின் குரலொலி கேட்டபடி இருவரும் நடந்தனர். நீண்டநேரம் கழித்து கபிலர் கேட்டார், “முருகன் கண்டறிந்தவை வேறு என்னென்ன?’’

“நிறைய இருக்கின்றன. ஆனால், சொல்ல முடியாதவைகளாக இருக்கின்றன.”p85d.jpg

“என்னிடம் சொல்ல முடியாதவையா?”

“ஆம், தம் குலம் அல்லாதவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாதவை, குலங்களில் நிறைய உண்டல்லவா?”

நீண்டநேரம் கழித்து கதைகளிலிருந்து மீண்டு தன்நிலைக்கு வந்தார் கபிலர். எவ்வளவு ஒன்றினாலும் விலகவேண்டிய இடம் உண்டு என்பதை உணரும் நேரம் சற்றே கடுமையானது.

“ஆனாலும் அவை குறித்து நீங்கள் ஏற்கெனவே கேள்வி எழுப்பிவிட்டீர்கள். உங்களது கேள்வியால் திகைத்துப்போய் நின்றது அன்றுதான்” என்றான் பாரி.

`எதைச் சொல்கிறான் பாரி?’ என யோசித்துக் கொண்டிருந்தார் கபிலர். பாரி சொன்னான், ``ஒளிவாளினைப் பார்க்க குன்றுக்கு மேல் உங்களை நான் அழைத்துச் சென்றபோது நீங்கள் கேள்வி ஒன்று கேட்டீர்கள்.”
கபிலர் சிந்தித்தபடியே சொன்னார், “பாழி நகர் பற்றிக் கேட்டேன். `அங்கு வேளிர்களின் செல்வங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளனவா?’ என்று கேட்டேன்.’’

பாரி சொன்னான் ``குமரிக்கடல் முதல் வட திசையின் எல்லை வரை இருக்கும் இந்தப் பச்சைமலைத்தொடரில் இருப்பவர்கள் ஈரேழு பதினான்கு வேளிர்கள். இந்த வேளிர் கூட்டம், தங்களுக்குக் கிடைக்கும் பெரும்செல்வம் எதுவானாலும் அதைப் பாழி நகரில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னோர்கள் விதிசெய்தனர். அந்தப் பாழி நகரை உருவாக்கியவன் முருகன்.”

தான் அன்று கேட்ட வினாவுக்கு, இன்று பாரியிடமிருந்து விடை வந்தது.

“அந்நகரை வேளிர் மட்டுமே அறிவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.”

“ஆம்” என்றான் பாரி.

``பிறரால் அறிய முடியாத நகரம் மண்ணில் எப்படி இருக்க முடியும்?”

“மண்ணின் மேல் இருக்க முடியாது. மண்ணுக்குள் இருக்க முடியுமல்லவா?”

கபிலர் மிரண்டு நின்றார். பாரி சொன்னான், “அது மண்ணுக்குள் வடிவமைக்கப்பட்ட அமைப்புகளைக்கொண்டது. அங்குதான் ஆதிகாலந்தொட்டு வேளிர்களின் செல்வங்கள். அதாவது பச்சைமலையின் வியக்கத்தகு செல்வங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. அந்தப் பாழி நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை எவ்வியிடம் ஒப்படைத்தான் முருகன். அன்றிலிருந்து பறம்பின் மக்கள் அதைப் பாதுகாத்துவருகிறார்கள்.”

“மற்ற வேளிர்கள் அந்த இடத்துக்கு வந்து செல்கின்றனரா?”

“ஆம், பாதுகாப்பது மட்டும்தான் எங்களின் பணி. மற்ற அனைத்து வேளிர்களுக்கும் அந்த இடம் எங்கு இருக்கிறது என்ற உண்மை தெரியும்.”

“ எவ்வியூரிலிருந்து மலைப்பாதையின் வழியே போனால், பாழி நகர் போய்விடலாம் என்று நீ சொன்னாயே!”

கபிலர் முடிப்பதற்குள் பாரி சொன்னான், ``அது வெளித்தோற்றத்துக்காக நாங்கள் அமைத்துள்ள சிறுபாழிக்கான பாதை. பெரும்பாழி இருக்கும் இடம் வேறொன்று.”

முடிச்சோடு நின்றது பாரியின் மறுமொழி. `இதை நேரடியாகக் கேட்க முடியாது. ஆனால், கேட்காமல் இருக்கவும் முடியாது. என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்தபடியே கபிலர் கேட்டார், ``மலைப்பகுதியில் மண்ணுள் இருக்கும் ஓர் இடத்தை எல்லாக் காலங்களிலும் பாதுகாத்துவிட முடியுமா? கால ஓட்டத்தில் எளிதில் அழிந்துவிடாதா?”

எவ்வளவு நிதானத்துடனும் கூர்மையுடனும் கபிலர் பாழி நகரை நெருங்குகிறார் என்பதை, பாரி கவனித்தபடியே சொன்னான், “அந்த நகரை இப்போது மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் மண்ணுள் எவ்வளவு ஆழம் புதைந்தாலும் வேளிர் குலத்தவரால் கண்டுபிடித்துவிட முடியும்.”

“ `எப்படிக் கேட்பது, பாரிக்கு இக்கட்டான நிலையை உருவாக்கிவிடும்’ என்று கபிலருக்குத் தோன்றியது. `ஆனால், கேட்காமல் இருப்பது, உருவாகும் எண்ணத்தை மறைக்கும் செயல். மறைக்க முயல்வது தோழமையன்று’ என்று எண்ணியபடியே கபிலர் சொன்னார், “எப்படி என்பதை நீ வெளிப்படுத்தத் தேவையில்லை.”

கபிலரின் சொல்லாற்றல் கண்டு வியந்து நின்றான் பாரி. எவ்வளவு திறனோடு என்னை முன்னகர்த்தி அவர் பின்வருகிறார் என்று எண்ணியபடியே பாரி சொன்னான், ``அந்த நகருக்கான அடையாளங்களை உருவாக்கியவன் முருகன். அந்த அடையாளங்கள் மண்ணில் இருந்தால், அவை கால ஓட்டத்தில் மறைந்துபோகலாம். விண்ணில் இருந்தால்?”

பாரியின் வினா, கபிலரை இழுத்து நிறுத்தியது. பாரி தொடர்ந்தான், “இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும், விண்மீன்களின் இருப்பிடங்கள் மாறவா போகின்றன?”

“இல்லை.”

“பாழி நகருக்கான குறிப்புகள் விண்மீன்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் எவ்வளவு காலம் கழிந்த பின்னும், மாதங்களின் நாள் வரிசையும் விண்மீன்களின் இட வரிசையையும் தெரிந்தவன் அந்த நகரை எளிதில் கண்டறிந்துவிடுவான்.”

திகைப்பின் அடுத்தகட்டம் அரங்கேறிக் கொண்டிருந்தது. ‘மலைமக்கள், அறிவின் சிறந்த தொடக்கத்தை உருவாக்கியவர்கள். சமவெளியில் உருவான அரசுகள் அதை அடுத்தகட்டத்துக்கு வளர்த்தெடுத்துள்ளன’ என்றுதான் இதுநாள் வரை கபிலர் நினைத்திருந்தார். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் தொலைந்து போனவையே அபார ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன. விண்மீன்களை வைத்து திசை அடையாளங்களையும் நேர அடையாளங் களையும்தான் கணியர்கள் உருவாக்கியுள்ளனர். ஆனால் இங்கோ, விண்மீன்களை வைத்து நிலம் அடையாளப்படுத்தப்படுகிறது. அறிவு வளர்ச்சியின் ஆதிவிதைகள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

கபிலரின் எண்ண ஓட்டங்களை இடைமறித்து பாரி சொன்னான், “முதுவேனிற்காலத்தில் கார்த்திகை விண்மீன் கூட்டத்தோடு கதிரவன் இருப்பதை விண்மீன்களின் சுழல்வட்டக் கணக்கின் அடிப்படையில் முருகன் கண்டறிந்தான் எனச் சொன்னேன் அல்லவா?”

“ஆம்’’ எனத் தலையசைத்தார் கபிலர்.

“அவ்வாறின்றி, வேறொரு முறையில்தான் அதை முருகன் கண்டறிந்தான் எனச் சொல்பவர்களும் உண்டு.”

“அது என்ன முறை?”

p85c.jpg

பாரி சற்றே அமைதிகொண்டு நடந்தான். `சொல்லலாமா?’ என்ற வினாவை எழுப்பி மனதை விடை சொல்ல ஆயத்தம் செய்கிறான் என்பது கபிலருக்குப் புரிந்தது.

பாரி சொன்னான், “இம்மலைத்தொடரில் உள்ள பத்து பேரதிசயங்களில் ஒன்று கருநெல்லி.”

கபிலர், பாரி உச்சரிக்கும் வார்த்தையை மிகக் கவனமாகக் கேட்டார்.

பாரி சொன்னான், “ `அதிசயக்கனியான கருநெல்லியை உண்டால், பகலிலும் விண்மீன் கூட்டத்தைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. முருகனுக்கு நெல்லிக்கனி மிகவும் பிடித்தது. அவன் கருநெல்லி உண்டுதான் பகலில் விண்மீன் நகர்வைப் பார்த்தறிந்தான்’ என்று குலநாகினிகள் கதை சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.’’

கபிலர், திகைப்பிலிருந்து மீள வழியில்லாமல் இருந்தார். எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் ஓடின. மேலேறிய கதிரவனின் ஒளி, காடெங்கும் நிலைகொண்டிருந்த இருளை மஞ்சள் நிற ஆடைகொண்டு போத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. முன்னால் சென்றுகொண்டிருந்த பாரி, பாறை இடுக்கின் வழியே உள்நுழைந்து மறைந்தான்.

‘அதற்குள் உள்ளே மறைந்துவிட்டானே. அவ்வளவு அடர்ந்த இடுக்குப்பாதையா இது!’ என்று நினைத்தபடியே கவனமாகக் கால் தூக்கிவைத்து உள்நுழைந்தார். இருள் சூழந்த பாதை நீண்டிருந்தது.

சற்று தொலைவு நடந்தான். பெரும்பாறை ஒன்று பாதையில் குறுக்கே நிற்பது தெரிந்தது. அதன் பின்புறமிருந்து காலைக் கதிரவனின் ஒளி, தெறித்துச் சிதறிக்கொண்டிருந்தது. `எத்தனை முறை பார்த்தாலும் இருளுக்குள் பாய்ந்து நுழையும் ஒளிக்கதிருக்கு இணை சொல்ல எதுவுமில்லை’ என நினைத்தபடியே பாறையின் அருகில் வந்து முன்புறம் திரும்பினார் கபிலர்.

திருப்பத்தில்தான் எல்லாம் இருந்தன. `இணை சொல்ல முடியாதவை’ என்ற சொல்லின் முழுமையை இயற்கை அவருக்குக் காண்பித்தது. வட்டவடிவ பசுங்குடுவையைப்போல் கண்ணுக்கெதிரே பரந்து விரிந்த புல்வெளி. இரு கைகொண்டு அணைத்துப் பிடித்தபடி சுற்றிக்கிடக்கும் மலைக்குன்றுகள். கதிரவனின் ஒளி பொழியத் தொடங்கும்போது கலையத் தொடங்கிய இணைப் பறவைகளின் ஓசை. காற்றெங்கும் மிதந்த நரந்தம்புல்லின் மணம்.

p85e.jpg

உறைந்து நின்றார் கபிலர். சற்றே விலகி நின்று அவர் முகம் பார்த்து மகிழ்ந்தான் பாரி.

கார்காலத்தின் முதுமழை கொட்டத் தொடங்கியது. இன்னும் சில நாள்களில் அடைமழை தொடங்கும். மழைநீரின் கனம் தாங்காமல் இலையும், இரவின் குளிர் தாங்காமல் மலையும் நடுங்கியபடி இருக்கப்போகின்றன. கபிலருக்கு எலிமயிர்ப் போர்வை நெய்யும் பணி முடியப்போகிறது.

தப்பிச்செல்ல முடியா பேரெலியின் மயிர்தோல்கொண்டு தொல்புலவன்  போத்தப்பட இருக்கிறான். அந்த நாளுக்காகக் காத்திருந்தனர் எல்லோரும். கபிலரின் மனமோ, நரந்தம்புல் மேட்டிலும் கார்த்திகையின் கணக்குகளிலும் மொழியின் புதிர்களிலும் போய் மாட்டி நின்றது. அவற்றின் ஆழம் வசப்படவில்லை. எனவே, அதிலிருந்து மீள முடியவில்லை. நீலன், தனைமயக்கி மூலிகை கொடுத்து கதையை மறக்கவைத்தான். பாரியோ, கதையைச் சொல்லி மீதமுள்ள எல்லாவற்றையும் மறக்கவைத்தான். மறதிக்கும் நினைவுக்கும் நடுவில் பெரும்வேட்டையைத் தன்னந்தனியாக நடத்திக்கொண்டிருந்தார் கபிலர்.

மீளமுடியா அந்த மனநிலையோடுதான் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்தினார். அங்கவையின் வினாக்கள் வழக்கம்போல் அறிதலின் வழியேதான் இருந்தன. மற்றவர்களும் ஆர்வமுடன் பாடம் பயின்றனர். மயிலா புறப்படவேண்டிய நாள் வந்துவிட்டது. அவள் நீலனைப் பார்க்காமல் நீண்டநாள் விலகியிருந்தது இப்போதுதான். ஆனாலும் தனது பெயரையும் நீலனின் பெயரையும் அவள் எழுதக் கற்றிருந்தாள். அது அளவற்ற மகிழ்வை உருவாக்கியிருந்தது. அவனின் ரகசியம் ஒன்று தனக்குள் அடங்கிவிட்டதாக அவள் நினைத்தாள். தனது விரல்களின் வழியே நீளும் கோடுகளுக்குள் அடங்கிய அவனை நினைத்து மகிழ்ந்தாள்.

வேட்டூர் பழையனோடு சேர்ந்து அவள் புறப்படுவதாகத்தான் முடிவுசெய்திருந்தனர். ஆனால், தேக்கன் இன்னும் சில நாள்கள் பழையனை இருக்கச் சொல்லிவிட்டார். அதனால் வீரர்கள் சிலருடன் மயிலா மட்டும் எவ்வியூர்விட்டுப் புறப்பட்டாள். அவளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியின் வழியே கபிலர், நீலனைப் பார்த்துக்கொண்டிருந்தார். குன்றுகளுக்கு இடையில் ஆடும் ஊஞ்சல் அவரின் பார்வைக்குத் தெரிந்தது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சாமப்பூ அரும்புவிடத் தொடங்கியிருந்தது. தேக்கன் புதிய மாணவர்களை அழைத்துக்கொண்டு காடறியப் புறப்படவேண்டிய காலம் வந்துவிட்டது. அதனால்தான் சில செய்திகளைப் பேசுவதற்கு வேட்டூர் பழையனை இருக்கச் சொல்லியிருந்தார் தேக்கன்.

தென்திசை தளபதி கூழையன் அனுப்பும் தகவல்கள், பறம்புக்கான ஆபத்து நெருங்குவதைச் சொல்லிக்கொண்டே இருந்தன. கோளூர் சாத்தனின் கைகளை முடியன் வெட்டியதால் சேரகுடிகள் ஒன்றுசேர நாம் வழிவகுத்துவிட்டோம். பாண்டியனையும் சோழனையும்போல தொலைவில் இருப்பவர்கள் அல்ல சேரர்கள். மலைத்தொடரின் அடுத்த குன்றில் அவர்களது காலடி கிடக்கிறது. சேரர்குடி இருவரும் இணைந்து பறம்பு நோக்கி படைகள் வருவதற்கு ஒரு சில குன்றுகளில் பாதை அமைத்துவருகின்றனர். நாம் மிகுந்த கவனத்தோடு இருக்கவேண்டிய நேரம். 

இந்தச் செய்திகள் வந்தபிறகுதான், பேரெலி வேட்டைக்குப் பாரி ஏன் தொடர்ந்து வந்தான் என்பது தெரியவந்தது. பேரெலி அதிகம் இருக்கும் இடங்களை விட்டுவிட்டு மலைகளின் பல திசைவழியாக ஏன் பயணப்பட வைத்தான் என்றும் இப்போதுதான் புரிந்தது. `சேரர்கள் எந்தெந்தக் குன்றுகளின் வழியே நுழைந்து பாதை உருவாக்க முயல்கின்றனர்?’ என்று பாரி சொன்னதாகத் தேக்கன் சொன்னபோது உதிரன் உறைந்துபோனான்.

கழுகின் மூக்கைப்போன்றது பாரியின் கவனிப்பு. கழுகு, வானுச்சியில் பறந்தாலும் நிலத்தில் கிடக்கும் பறவையின் வாடையை எளிதில் நுகர்ந்துவிடும். அதுபோலத்தான் பாரியும். எவ்வியூரில் இருந்தாலும் பறம்பு மலையின் எண்திசையிலும் நிகழும் மாற்றங்களைத் துல்லியமாகக் கவனித்துவந்தான். p85f.jpg

கூழையன் அனுப்பிய செய்தியும் பாரியின் அவதானிப்பும் ஒன்றுபோல இருந்தன. சேரன் ஏறிவர எல்லா வகைகளிலும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.

“இச்சூழலில் எவ்வியூரின் ஆசான் தேக்கன், பயிற்சிக்காகப் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு காடறியச் செல்ல வேண்டுமா? புதிய ஆசானை அனுப்பினால் என்ன?” என்று சிலர் கேட்டார்கள்.

``அதை முடிவுசெய்யவேண்டியது தேக்கன் தான்’’ என்றான் பாரி.

தேக்கனோ, “அம்முடிவை சாமப்பூவின் அரும்பு துளிர்க்கும் முன் எடுத்திருக்க வேண்டும். எனக்கான வாசனையை அது வழங்கிவிட்டது. நான் அதன் அனுமதியை நுகர்ந்துவிட்டேன். பிள்ளைகளை அழைத்துக்கொண்டு காடறியும் எனது பயணத்தை இனி நிறுத்த முடியாது” என்றார்.

பழையனிடம் பகிர்ந்துகொள்ள நிறைய இருந்தன. பறம்பு நாட்டின் மிக மூத்த வீரனென்றால், அது வேட்டூர் பழையன்தான். பறம்பில் உள்ள ஊர்களின் நிலையும் தன்மையும் வீரர்களின் திறனையும் முழுமையும் அறிந்துள்ளவன் பழையன்தான். எனவே, அவனை இருக்கச் சொல்லி நாள்கணக்கில் பேசினான் தேக்கன்.

பழையனின் மனநிலை முற்றிலும் வேறானது. ``திட்டமிடல், முன்தயாரிப்பு இவற்றைக்கொண்டு நிகழ்த்தப்படும் போர்கள் அரச முறையைச் சார்ந்தவை. நாம் ஏன் அதுபோல் சிந்திக்க வேண்டும்? நமது போர்முறை முற்றிலும் வேறானது. அது போர் தொடங்குவதற்கு ஏற்ப வடிவம்கொள்ளக்கூடியது.

போர் என்பது, நிகழும் இடம், தன்மை, சூழல் இவற்றைக்கொண்டு நடத்தப்படுவதுதானே தவிர, வீரர்களைக்கொண்டு மட்டும் நடத்தப்படுவதல்ல. எனவே, அந்தக் கணத்தில் எடுக்கவேண்டிய முடிவை முன்கூட்டி எடுப்பது அறியாமையாகும்” என்றார் பழையன்.

p85g.jpg

``பேரரசுகளால் சூழப்பட்டுள்ளோம். நமது பாரம்பர்ய முறைப்படி நாம் போரிடுவோம். ஆனால், அவர்களின் போர் உத்திகளைக் கணித்து அதற்கு ஏற்ப ஆயத்தமாக வேண்டிய தேவையிருக்கிறது” என்று வாதிட்டார் தேக்கன்.

முன்தயாரிப்பின் வழியே போரை அணுகும் முறைக்கு பழையனால் பொருந்த முடியவில்லை. “இப்பணியைக் கூழையனிடம் ஒப்படைத்துவிடு. போர் தொடங்கிய பிறகு எனது பணியை முடிவுசெய்துகொள்ளலாம்” என்றான் பழையன்.

``நீ சொல்வதற்கும் நான் சொல்வதற்கும் இடையில் அதிக நாள் இல்லை” என்றான் தேக்கன்.

“இரண்டுக்கும் இடையில் ஒருநாள் இருந்தாலும், நான் ஏன் முன்கூட்டியே ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு ஆற்றலை வீணாக்க வேண்டும்?”

பழையனோடு பேச்சில் மட்டுமன்று, எதிலும் வெல்ல முடியாது எனத் தேக்கனுக்குத் தெரியும். உண்மையில் தேக்கன் நடத்தும் போராட்டம் இந்த விடாப்பிடியான மனநிலையோடுதான். நன்கு திட்டமிட்ட போர்முறையை, எதுவுமில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. இயற்கையின் பல அமைப்புகள், திட்டமிட்ட ஒருங்கிணைப்பைக் கொண்டு தாக்குதல் தொடுக்கின்றன. இந்த எடுத்துக்காட்டை நாம் சொன்னால், இதற்கு மாற்றான ஓராயிரம் எடுத்துக்காட்டுகளை பழையன் சொல்வான். எனவே, மறுமொழியின்றி அமைதியானான் தேக்கன்.

ஆனால், சூழலில் இந்த அமைதி இல்லை.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 35

 

 

பாண்டரங்கத்தின் பணி முழுமையாக முடிந்தது. மேற்கூரையில் திசைவேழர் சொன்ன குறிப்பின் அடிப்படையிலான ஓவியம் மிகச் சிறப்பாக வரையப்பட்டுவிட்டது. மரச்சாரங்கள் அனைத்தையும் கழற்றிவிட்டுப் பார்க்கும்போது முன்பைவிட மிகத் துல்லியமான அளவுகளில் விண்மீன் கூட்டங்கள் ஒளிவீசின. வெள்ளியின் இருப்பிடம் மட்டுமல்ல, வரையப்பட்ட வானத்தில் கோள்கள் அனைத்தின் இருப்பிடங்களும் பொருத்தமாக இருந்தன. அந்துவன், பாண்டரங்கத்தின் எல்லா திசைகளிலும் நின்று மேற்கூரையைப் பார்த்துக்கொண்டே இருந்தான். ‘நாம் கவனமாக வேலைசெய்யும்போதுதான், வேலை சிறப்பாக அமையும். ஆனால், நம்மையும் மீறி அதி சிறந்த இடத்தை அடைவது எப்போதாவதுதான் நிகழும். அதுதான் இப்போது நிகழ்ந்திருக்கிறது’.

மனமும் கண்களும் சலிப்படையும்வரை பார்த்தான். `பின் கழுத்துப் பிடித்துக்கொள்ளும்’ என மற்றவர்கள் கூறியபோதும், அவன் அண்ணாந்து பார்த்து மகிழ்வதை நிறுத்தவில்லை. ஊன்றுகோலைத் தூக்கி வீசி ஆசான் ஏற்படுத்திய அவமானத்தைத் துடைக்க மனம் மேலெழுந்து கொண்டிருந்தது.

“ஆசானை அழைத்து வாருங்கள்” என்றான்.

p88a.jpg

பணியாள்கள் விரைந்தனர். தான் செல்லாமல் பணியாள்களை அனுப்பியதிலிருந்தே ஒரு செய்தியை அவன் சொல்ல முயன்றான்.

அறிவுச்செருக்கின் செயல்பாடு இதுவென ஆசானுக்குத் தெரியும். மாணவர்களிடம் அவர் எதிர்பார்ப்பது இதைத்தான். ஆனால், அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்துவிட்டால், விளைவு அப்படியே தலைகீழாக மாறிவிடும். அதன் பிறகு, வாழ்வில் மறக்க முடியாத நாளாக அது மாறும். இதை மாணவர்கள் அறிவர். எனவே, அறிவுச்செருக்கை வெளிக்காட்டி அவரை மகிழ்விக்கும் ஆபத்தைச் செய்ய யாரும் துணிய மாட்டார்கள். ஆனால், அந்துவன் துணிந்தான். மேற்கூரையில் பரந்துவிரிந்து கிடந்த வான்வெளி, அவனை ‘துணிந்து நில்’ எனச் சொல்லியது. ‘காலம் கைகூடும் கனவு இது!’ என அவனது மனம் துணிந்தது.
இந்தக் காலம் முழுவதும் தன்னோடு இருந்த தேவாங்குகளுக்கு நன்றி சொல்லும்வகையில் அந்தக் கூண்டுக்கு அருகில் வந்து அவற்றுக்குப் பிடித்த பல்லி முட்டையை உள்ளே உருட்டினான். வழக்கம்போல் சிறிது நேரத் தயக்கத்துக்குப் பிறகு இரண்டும் அந்த முட்டையை நோக்கி வந்தன. ஒன்று, அதை எடுத்துக்கொண்டு ஓர் ஓரத்தில் போய் உட்கார்ந்தது. இன்னொன்று, அவனைப் பாவமாகப் பார்த்தது. அடுத்த முட்டையை உருட்டிவிட்டான். இன்னொன்று அதை எடுத்துச் சென்றது. அதன் மகிழ்ச்சியைக் கவனித்தான். சற்றே மாறுபட்ட ஒன்று, அவன் கண்களில்பட்டது. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அடுத்தடுத்த முட்டைகளை உருட்டிவிட்டான். அவை இரண்டும் எடுத்துத் தின்றன. முன்னர் அவன் கண்களில்பட்ட அதே செயல் மீண்டும் பட்டது. இது தற்செயலாக இருக்கும் என நினைத்தான். அடுத்தும் பல்லி முட்டைகளை உருட்டிவிட்டான். மீண்டும் அதுவே நடந்தது. அவன் சற்றே அதிர்ச்சியடைந்தான்.

`அப்படியிருக்காது’ என நினைத்தவன், பல்லி முட்டைகளை உருட்டுவதை நிறுத்திவிட்டு, சிறு கம்பு ஒன்றை எடுத்தான். அவ்வளவு நேரம் முட்டையைத் தின்ற அவற்றைக் குச்சிகொண்டு விரட்டினான். அவை  அஞ்சி உள்ளொடுங்கின. அப்போதும் அவற்றின் செயல் ஒன்றுபோலவே இருந்தது. மீண்டும் அவன் குச்சியை ஓங்கினான். உள்ளே போய் ஒண்டியவை, வேறு இடம் நகராமல் அங்கேயே பதுங்கின. அவன் குச்சியால் சற்றே அடித்து அவற்றைக் கலைத்தான். அவை கத்தியபடி அந்த இடம்விட்டு நகர்ந்து, கூண்டின் இன்னொரு பக்கம் வந்தன. அவன் கண்கள், நம்ப முடியாத ஒரு வியப்பைக் கண்டு கொண்டிருந்தன. ‘நான் காண்பது உண்மைதானா?’ என அவன் தன்னை மீண்டும் மீண்டும் கேட்டபடி அந்தச் சோதனையை நடத்திக்கொண்டே இருந்தான்.

பார்த்துக்கொண்டிருந்த பணியாளர்களுக்கு, என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. `மகிழ்ச்சியாக இருந்த இவர், திடீரென அந்த விலங்கை ஏன் இந்தப் பாடுபடுத்துகிறார்?’ எனப் புரியாமல் திகைத்தனர்.
ஆசானை அழைக்கச் சென்ற பணியாளன், `மூன்று நாழிகைக்குப் பிறகு வருவார்’ என்ற செய்தியோடு திரும்பியிருந்தான்.

p88b.jpg

அந்துவனோ, தேவாங்கின் மீதான சோதனையைக் கைவிடுவதாக இல்லை. அடித்தும் அச்சமூட்டியும் அவற்றை ஓடவிட்டுக்கொண்டே இருந்தான்.  ஒருநிலையில் பாண்டரங்கத்தின் வெளிக் கதவையும் மேல்மாடக் கதவுகளையும் பூட்டச் சொல்லிவிட்டு, கூண்டைத் திறக்கச் சொன்னான். பணியாளர்கள், கூண்டைத் திறந்து அவற்றை வெளியே விட்டனர். ஓங்கிய அவனது கம்பைப் பார்த்து அஞ்சி, அவை அரங்கின் எல்லா திசைகளிலும் ஓடின. அவன் அவற்றை விரட்டியபடி இருந்தான். அவற்றின் செய்கை, அவன் எண்ணத்தை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. அவை கத்திக்கொண்டு தூண்களைப் பற்றி ஏற முயற்சித்தன. பிடி நழுவி விழுந்தன. சிறு சிற்பங்களின் மேல் ஏறி மறைய முயன்றன. அவன் விடுவதாக இல்லை. எல்லா திசைகளிலும் அவற்றை விரட்டினான். தன் கண் முன்னால் காண்பது உண்மை என்பதை அவன் முழுமையாக நம்பும்வரை, அவற்றை விரட்டிக் கொண்டே இருந்தான்.

பணியாளர்கள், என்ன நடக்கிறது எனப் புரியாமல் திகைத்துப்போய் நின்றனர். அவை கத்துவதும், பாவமாகப் பார்த்து அலைக்கழிவதும் அவர்களது மனதை உருக்கின. அந்துவனின் மனமோ மகிழ்வில் திளைத்தது. அவற்றின் ஒவ்வொரு துள்ளலிலும் அவன் கண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

‘இத்தனை நாள் இதை எப்படி நான் கவனிக்காமல் இருந்தேன்?’ என்று புலம்பியவாறே “இதைப் பிடித்துக் கூண்டில் அடையுங்கள். நான் போய் ஆசானை உடனடியாக அழைத்துவருகிறேன்” என்று சொல்லி p88c.jpgபுறப்பட்டான்.

திசைவேழரின் தென்திசை மாளிகையின் முன் வந்து இறங்கினான் அந்துவன். வேலையாள்கள், அவன் குதிரையை வாங்கிக்கொண்டனர். உள்ளே நுழைந்தான். தொலைவிலேயே அவன் வருவதைப் பார்த்துவிட்டார் திசைவேழர். ‘அறிவுச்செருக்கு சரிந்துவிட்டது’ என அவரது மனம் சொன்னது. ‘இன்னொரு முறை பாண்டரங்கத்தில் பிழை நிகழ்த்தியிருக்கிறான். நான் சொல்லி அனுப்பிய நேரத்துக்குள் பதற்றமாகி அவனே வந்துள்ளதன் காரணம், வேறு என்னவாக இருக்க முடியும்?’ என்று எண்ணியபடியே அவனை உள்ளே அழைத்தார்.

“உடனடியாகப் புறப்பட்டு வரவேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைத்தான்.

அவர் எந்தவிதக் காரணமும் கேட்கவில்லை. சற்று நேரத்தில் புறப்பட்டார். அவர் காரணம் கேட்காதது குறித்து, அந்துவன் கவலைகொள்ளவில்லை. அவர் புறப்படும்வரை காத்திருந்து அவரை அழைத்துவந்தான்.
பாண்டரங்கத்துக்குள் இருவரும் நுழைந்தனர். வழக்கம்போல் அவர் மாளிகையின் நடுவில் நின்று, அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தார். அவர் நினைத்ததைவிட மிகச் சிறப்பாக அது வரையப் பட்டிருந்தது. அந்துவனைப் பாராட்டலாம் என நினைத்துத் திரும்பியபோதுதான் கவனித்தார். அவன் அருகில் இல்லை. சற்று தொலைவில் தூண்களுக்குப் பக்கத்தில் இருந்த தேவாங்குகளின் கூண்டுக்கு அருகில் நின்றிருந்தான்.

“என்ன அங்கே நிற்கிறாய்?”

“நான் உங்களைக் காண வருமாறு அழைத்தது,  இந்த விலங்கைப் பார்க்கத்தான்.”

“என்ன இது?”

`இதன் பெயர் தேவாங்கு’ எனச் சொல்ல வாயெடுத்தவன், “இயற்கையின் அதிசயம்” என்றான்.

`என்ன சொல்கிறான் இவன்?’ என்று சிந்தித்தபடியே கூண்டருகில் வந்து, உற்றுப்பார்த்தார்.  அவை உள்ளொடுங்கி நின்றன.

“இது ஒரு வானியல் விலங்கு” என்று சொல்லியபடி, கையில் இருந்த குச்சியை அவரின் கையில் கொடுத்தான்.

அவர் அதைக்கொண்டு கூண்டுக்குள் இருந்தவற்றைச் சற்றே தொந்தரவு செய்தார். அவை இங்கும் அங்குமாக நடந்து அலைமோதின. அவற்றின் கண்கள், உடல்வாகு, காது விடைக்கும் தன்மை என எல்லாவற்றையும் உற்றுக் கவனித்தபடியே இருந்தார். அவருக்குப் புதிதாக எந்த ஒன்றும் தெரியவில்லை.

“என்ன புதிதாய்க் கண்டாய்?”

“உங்களின் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லையா?”

அவன் கேட்பது திசைவேழருக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது. வழக்கமாக, மாணவர்களிடம் அவர் கைக்கொள்ளும் முறை இது. `என் சொற்கள், என்னிடமே திரும்ப வருகின்றன’ என்று சிந்தித்தபடியே அந்த விலங்கை உற்றுப்பார்த்தார். மாறுபாடுகள் எதுவும் கண்ணில் படவில்லை. சற்றே திரும்பி அந்துவனைப் பார்த்தார்.

அந்துவன் சொன்னான், “அவை எந்தத் திசைநோக்கி உட்காருகின்றன பாருங்கள்.”

திசைவேழர் அவற்றைக் கூர்ந்து கவனித்தார். அவை வடக்கு திசை நோக்கி உட்கார்ந்திருந்தன. தன் கையில் இருந்த குச்சியால் அவற்றைச் சீண்டினார். அவை எழுந்து இன்னொரு பக்கம் சென்று வடக்கு திசை நோக்கி உட்கார்ந்தன. மீண்டும் விரட்டினார். மீண்டும் அவை அவ்வாறே உட்கார்ந்தன. கூண்டைத் திறக்கச் சொல்லி வெளியே விரட்டினார். பாண்டரங்கம் முழுவதும் அவை சுற்றிச் சுற்றி வந்தன. ஆனால், எப்போதெல்லாம் தரையில் உட்கார்ந்தனவோ, அப்போ தெல்லாம் அவை வடக்கு திசை நோக்கியே உட்கார்ந்தன.

திசைவேழர் அதிர்ந்துபோனார். ``நான் காண்பது உண்மையா?” என்றார்.

``உண்மை ஆசானே! பலமுறை பரிசோதித்துவிட்டேன். இந்த விலங்கு இயற்கையின் அதிசய ஆற்றல் ஒன்றை தன்னகத்தே கொண்டுள்ளது” என்றான் அந்துவன்.

“என் கண்களை நம்ப முடியவில்லையே!’’ என்று கூறியபடி அவற்றின் பின்னால் ஓடினார். அவை இயல்பாக உட்காருவதைக் கவனித்தார். விரட்டினால் பதற்றமடைந்து உட்காருவதைக் கவனித்தார். எப்போது உட்கார்ந்தாலும் அவை வடக்கு திசை நோக்கியே உட்கார்ந்தன. அவை உட்காரும்போதெல்லாம் அவரது மனம் வியப்பிலும் மகிழ்விலும் துள்ளியது. “என் கண்கள் பொய்யேதும் சொல்லவில்லையே!” என்று அந்துவனைப் பார்த்துக் கேட்டார்.

அந்துவன் சிரித்தான்.

“நீ என் தலை மாணாக்கன் என்பதை மீண்டும் மெய்பித்துவிட்டாய்” என்று சொல்லியபடி வாரி அணைத்தார் அந்துவனை. அவரது சொல், வரையப்பட்ட வான் மண்டலம் முழுவதும் எதிரொலித்தது.

இளமருதனுக்கு, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ``ஆலோசனை மாடத்துக்கு என்னை அழைத்துச்சென்று தேவாங்கைப் பற்றி இவ்வளவு கேள்விகள் ஏன் கேட்க வேண்டும்? நான் செய்த பிழை என்ன? பாண்டரங்கத்திலிருந்து தேவாங்கின் கூண்டை நான் வெளியே எடுத்தபோது அந்துவன்தானே `உள்ளேயே இருக்கட்டும்’ எனச் சொன்னார். இப்போது அதில் என்ன பிரச்னை?” என்று மாடத்தின் வெளியே நின்று புலம்பினான். சற்று நேரம் கழித்துத்தான் செய்தி தெரிந்தது,  `வெங்கல்நாட்டு சிறுகுடி மன்னன் மையூர்க்கிழாரை அழைத்துவரச் சொல்லி அரண்மனையிலிருந்து ஆள் அனுப்பட்டுள்ளது’ என்று. இளமருதன் இன்னும் பதறிப்போனான். தன்னைப் பெரிய இடரில் யாரோ மாட்டிவிட்டுவிட்டார்கள் என அஞ்சினான். தேவாங்கின் முகம் நினைவுக்குவந்தது. அதனுடைய பயம் தன்னிடம் ஒட்டிக்கொண்டதோ எனத் தோன்றியது.

ஆலோசனைக் கூடத்துக்குள் பேரரசர், சூல்கடல் முதுவன், திசைவேழர், இளவரசர்,  தலைமை அமைச்சன் முசுகுந்தர், அந்துவன் ஆகியோர் இருந்தனர். மனம் நம்ப மறுக்கிற ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசியும் கண்களால் பார்த்தும் நம்பத் துணிந்தனர்.

பொன்பூச்சுக்கொண்ட உள்ளரங்கில் பேரரசர் அமரும் இடம்தனில் மிதித்து, நின்று, உட்கார்ந்து கடந்தது தேவாங்கு. அதை ஓடவிட்டும் உட்காரவிட்டும் பார்த்துக்கொண்டே இருக்க மீண்டும் மீண்டும் முயன்றனர். அதைவிட்டு பார்வையை விலக்காமலேயே முசுகுந்தர் கேட்டார் “இந்த விலங்கு வேறு இடத்திலும் இருக்குமல்லவா?”

திசைவேழர் சொன்னார், “பொதியமலையில் உண்டு. நானே பார்த்திருக்கிறேன். ஆனால், குறிப்பிட்ட திசை நோக்கி உட்காரும் தன்மை அதற்கு இல்லை.”

p88d.jpg

“இதற்கு மட்டும் இருப்பதற்குக் காரணம்?’’

“இது ஒரு மரத்து விலங்கு. குறிப்பிட்ட மரத்தில் மட்டுமே இந்த விலங்கு கூட்டமாகத் தங்கி உயிர்வாழும். பறம்புமலையில் இந்த விலங்கு இருந்த அந்த மரத்தின் அமைப்பு இந்தப் பழக்கம் உருவாகக் காரணமாக இருந்திருக்க வேண்டும். பல நூறு தலைமுறைகளாக அந்த இடம் இருப்பதால், இந்தப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கும்” திசைவேழரின் விவரிப்பு, மேலும் வியப்பைக் கூட்டியது.

“அந்த மரத்தில் எத்தனை தேவாங்குகள் இருக்கின்றன என்ற செய்தி ஏதேனும் உண்டா?”

“திருமணத்துக்கு வந்துள்ள பாணர்களிடம் விசாரித்ததில் பலநூறு தேவாங்குகள் அந்த மரத்தில் உண்டு” என்று அந்துவன் சொன்னான்.

தேவாங்கையும் அதன் எண்ணிக்கையைப் பற்றிய செய்தியையும் அறிந்ததிலிருந்து பொதியவெற்பனுக்கு மகிழ்வு தாங்க முடியாத அளவு இருந்தது. தன் திருமணத்தை முன்னிட்டு நடந்த ஓர் உரையாடலின் தொடர்ச்சியாக இப்படி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது என்று அவன் மனம் கூத்தாடியது.

சூழ்கடல் முதுவனுக்கோ அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் திக்குமுக்காடச் செய்தன. தான் காண்பது உண்மையா என்பதை நம்ப, அவர்தான் அதிக நேரம் எடுத்துக்கொண்டார். திசைவேழர் போன்ற பெரும்வானியல் அறிஞன் சொல்லும்போது ஐயப்படுவது அழகன்று. ஆனாலும் இப்படியொரு செயலை மனம் எளிதில் நம்பிவிடுவதில்லை.

அதன் முழு நடவடிக்கையையும் பார்த்துவிட்டு, சூழ்கடல் முதுவன் ஒற்றைவரியில் சொன்னான், “இனி, கடல் வணிகத்தை நாம் ஆளலாம்.”

இந்தச் சொல்லைச் சொன்னதும், பேரரசர் அவரைக் கட்டி அணைத்தார்.  ``முன்னர் நடந்த கூட்டங்களில் கடல் கண்டு அஞ்சிவந்த தங்களின் சொற்கள், இப்போது முற்றிலும் மாறிவிட்டன. இந்தத் திருமணம் பல புதிய வாய்ப்புகளை நமக்கு உருவாக்கும் என நான் உறுதியாக நம்பினேன். ஆனால், அந்த வாய்ப்பு இவ்வளவு சிறந்ததாக இருக்கப்போகிறது  என நான் எதிர்பார்க்கவில்லை” என்றார் பேரரசர்.

சூழ்கடல் முதுவன் சொன்னான், “என் வாழ்வில் இன்று அடைந்துள்ள வியப்பும் மகிழ்வும் கலந்த ஓர் உணர்வை இதுவரை அடைந்ததில்லை. திசை அறிய முடியாமல் எவ்வளவு இழப்புகளை நாங்கள் கண்டுள்ளோம். எத்தனை மனிதர்கள், கப்பல்கள், பொருள்களை எல்லாம் கடல் கொண்டுபோனது. திசையைத் தவறவிட்டதால்தான் என் இரண்டு மகன்களையும் பறிகொடுத்தேன். கடல் பயணத்தில் திசையறிதல் என்பது, கடலை வெல்வதற்கு இணையானது. இது தேவாங்கன்று; உண்மையில் இதுதான் தேவவாக்கு விலங்கு” என்று சொல்லி, அதைத் தொட்டுத் தூக்கிக் கொஞ்சினார்.

இரவு நெருங்கிக்கொண்டிருந்தது. வெளியே உட்கார்ந்திருந்த இளமருதனுக்கு நேரம் ஆக ஆக பதற்றம் கூடிக்கொண்டேபோனது. சிறிது நேரத்தில் செவியன் அங்கு வந்து சேர்ந்தான். காலையில் திசைவேழர் இந்த உண்மையைக் கண்டறிந்த பிறகு, முதலில் பேரரசரிடம் சொல்லியுள்ளனர். பிறகு, இளவரசனையும் முசுகுந்தரையும் அழைத்துக் காண்பித்திருக்கின்றனர். அதன் பிறகுதான் சூழ்கடல் முதுவனுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இடைப் பட்ட நேரத்தில் இது தொடர்பானவர்களைத் தனித்தனியே அழைத்து விசாரித்துள்ளனர்.

p88e.jpg

செவியனும் விசாரிக்கப்பட்டான். இந்த விலங்கைப் பற்றி அவனுக்குத் தெரிந்ததை யெல்லாம் அவன் சொல்லியுள்ளான். அதன் பிறகுதான் மையூர்கிழாரை அழைத்துவர ஆள் அனுப்பப்பட்டது. இவை எல்லாம் ஏன் நடக்கின்றன என்பது அவனுக்கு விளங்கவில்லை. `இளமருதனைக் கண்டு என்ன நடந்தது எனக் கேட்டுப் போகலாம்’ என்று வந்துள்ளான். இளமருதனோ பதற்றத்தில் நடுங்கிப் போயிருந்தான். “நான் அந்துவனிடம் ஒப்படைத்துவிட்டுப் போனதோடு சரி. அதற்குப் பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை” என்றான்.

செவியனுக்கும் மிகவும் குழப்பமாக இருந்தது. “அரண்மனை நிர்வாகத்தை நன்கு அறிந்தவர்தானே நீங்கள். உங்களுக்கும் இதற்கான காரணம் புரியவில்லையா?” எனக் கேட்டான் இளமருதன்.
``என்னால் எதுவொன்றையும் தொடர்பு படுத்தவே முடியவில்லை. ஒரே ஒரு செய்தி கேள்விப்பட்டேன். ஆனால், அதற்கு இவ்வளவு நாள் கழித்து ஏன் விசாரிக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை” என்றான்.

“என்ன செய்தி அது?”

``நாம் அன்று நள்ளிரவுக் கோட்டைக்குள் நுழைந்தோமல்லவா, அப்போது கதவைத் திறந்தவிட்ட யானை மதம்பிடித்து கோட்டைத் தளபதியைக் கொன்றுவிட்டது. இந்தச் செய்தி வெளியே யாருக்கும் தெரியாது. திருமணக் காலத்தில் தலைநகருக்குள் நிகழ்ந்த மரணம் என்பதால், வெளியே தெரியாமல் எல்லா வற்றையும் முடித்துவிட்டார்கள். அது தொடர்பாகக் கோட்டைவாசலில் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அப்போது ஒருவன் மட்டும் சொல்லியிருக்கிறான், ‘பார்க்கவே அருவருப்பாக இருந்த ஒரு விலங்கை உள்ளே எடுத்துவந்தனர். அதைக் கண்ட பிறகுதான் அந்த யானை மிரட்சிக்குள்ளானது’ என்று.”

இளமருதன் நடுங்கிப்போனான்.

செவியன் சொன்னான், “அப்போது நடந்ததற்கு, இப்போது ஏன் விடாமல் விசாரிக்கின்றனர் என்பதுதான் புரியவில்லை.”

இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தனர். நீண்ட நேரம் கழித்து, சக்கரவாகப் பறவையைக் கொண்டுவரப் பயன்படுத்தப்படும் பொற்பல்லக்கு ஒன்றை, பணியாளர்கள் மாளிகைக்குள் தூக்கிச் சென்றனர். இதை ஏன் தூக்கிச் செல்கின்றனர் என்பது தெரியாமல் விழித்த செவியன், தனக்கு நன்கு தெரிந்த அரண்மனைப் பணியாளனிடம் தனியே போய் விசாரித்தான். “ஏதோ புதிய விலங்கொன்று வந்திருக்கிறதாம். அதை வைக்க” என்றான் அவன்.

அதிர்ச்சியானார்கள் இரண்டு பேரும். ``அன்று சக்கரவாகப் பறவையின் கூண்டு வைக்கப்படும் மேடையின் மீது இதை வைத்ததற்குத்தான் அந்துவன் அவ்வளவு கோபப்பட்டான். `தூக்கி வீசிவிடுங்கள்’ என்றான். இன்றோ சக்கரவாகப் பறவை கொண்டுவரப்பட்டப் பொற்பல்லக்கை இதற்குக் கொண்டுபோகின்றனர். என்ன நடக்கிறது?”

செவியன் சொன்னான், “இளமருதா, இது நீ அச்சம்கொள்ளவேண்டிய  நிகழ்வன்று. வேறு ஏதோ முக்கியமானதொரு நிகழ்வு.”

அப்போதுதான் இளமருதனுக்குத் தோன்றியது, ‘பாரிக்கு தேவவாக்குச் சொல்லும் விலங்கு. இதன் சிறப்பைச் சொல்லி நாம் அல்லவா பேரரசரிடம் பாராட்டைப்பெற வேண்டும் என்று இருந்தோம். இப்போது யாரோ உள்ளே புகுந்து நாம் அடையவேண்டிய நற்பெயரை அவர்கள் அடையப்பார்க்கின்றனர். இதை விடக் கூடாது.அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம்.’p88f.jpg

“இந்தத் திருமணத்துக்கு எல்லோரும் வந்திருக்கின்றனர். சேரனுக்கும் சோழனுக்கும் செய்தி சொல்லும் எண்ணற்றோர் இந்த விழாவுக்கு வந்துள்ளனர். அதேபோல யவனர்களின் பெரும்தளபதிகள் இங்கு வந்துள்ளனர். எனவே, இதைப் பற்றிய செய்தி எதுவும் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார் முசுகுந்தர்.

“சரி, அந்த விலங்கை, பறம்பு மலையிலிருந்து கொண்டுவர வழி என்ன?” எனக் கேட்டான் பொதியவெற்பன்.

இவ்வளவு நேரம் அளவற்ற மகிழ்சியில் நடந்துகொண்டிருந்த ஓர் உரையாடல் சற்றே இறுக்கமாக மாறத் தொடங்கியது.

``நாம் ஒரு குழுவை அனுப்பி பாரியிடம் பேசி, அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்” என்றார் சூழ்கடல் முதுவன்.

“வணிகப் பேச்சுக்காகப் போன கோளூர் சாத்தனின் கதை, உங்களுக்கு தெரியாதா?” எனக் கேட்டான் பொதியவெற்பன்.

“கேள்விப்பட்டேன். ஆனால், அதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டல்லவா? இது மிகவும் வியத்தகுத்தன்மைகொண்ட விலங்கு. கடல் பயணத்தில் இது அபாரமான ஆற்றலைத் தரவல்லது. நமது வணிக வலிமையை இது பல மடங்கு உயர்த்தக்கூடியது. இதை எடுத்துச்சொல்லி, `இதற்கு ஈடாக நல்லதொரு பரிமாற்றத்துக்கு  பாண்டியநாடு தயாராக இருக்கிறது’ எனச் சொன்னால், பாரி ஏற்பான் என்றே நினைக்கிறேன்” என்றார் சூழ்கடல் முதுவன்.

p88g.jpg

“பறம்புநாட்டின் மீது ஓரளவு நெருக்கமாக இருந்தவர்கள் குட நாட்டினர்தான். ஆனால், அவர்களின் அமைச்சகன் வணிகம் பேசப்போனதற்கே கைகளை வெட்டி அனுப்பி யுள்ளான். பாண்டியநாட்டுத் தூதுவர்கள் போனால் உள்ளேயே அனுமதிக்க மாட்டான். அதை மீறி உள்ளே போனால், அவர்கள் திரும்பி வர மாட்டார்கள்.”

“அப்படியென்றால் இதற்கு என்ன வழி?” எனக் கேட்டார் சூழ்கடல் முதுவன்.

“தளபதி கருங்கைவாணனை வரச்சொல்லி உத்தரவிடுங்கள்” எனப் பேரரசரை வேண்டினான் பொதியவெற்பன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்..

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 36

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

 

தேவாங்கைக் கொண்டுவருதலுக்கான பேச்சுகள் அனைத்தும் பறம்பின்மீது படையெடுப்பதைப் பற்றிய பேச்சாகவே முடிகின்றன. அதுவன்றி வேறுவழிகளைப்பற்றி அக்கறையோடு விவாதித்தனர் முசுகுந்தரும், சூல்கடல் முதுவனும். அதே கருத்துதான் திசைவேழருக்கும். ஆனால், இவர்களால் மாற்றுவழியைச் சொல்ல முடியவில்லை. எனவே, எல்லா உரையாடல்களும் இயல்பாகக் கருங்கைவாணனிடம் போய் முடிந்தன.

p83a.jpg

கருங்கைவாணனும் பொதியவெற்பனும் குரல் உயர்த்திப் பேசுவதற்கான வாய்ப்பை இவை வழங்கின.

“பாரி இவ்விலங்கை வைத்து என்ன செய்யப்போகிறான்? நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடையிலிருந்து பழம் பொறுக்கத்தான் பயன்படுத்துவான் என்றால், அது எவ்வளவு பெரிய அறியாமை. நாம் அவனிடம் எடுத்துச் சொல்லலாம். இவ்விலங்கின் வலிமை, கடலில்தான் இருக்கிறது. கடற்பயணத்தில் காற்றை வெல்லவும் கரையைச் சொல்லவும் ஆற்றல்கொண்ட ஒன்றை அதற்குரிய இடத்தில் பயன்படுத்துதலே முறை, இதனை உரியவர் மூலம் பாரியிடம் சொல்லவைப்போம்” என்று வாதிட்டார் முசுகுந்தர்.

“உரியவர் என்றால் யார்?”

“வழக்கம்போல அரசு அமைச்சர்களை அனுப்பாமல், பாரி பெரிதும் மதிக்கிற மனிதர்களை அனுப்பிவைப்போம்.”

“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்?”

“கபிலர் போன்ற பெரும்புலவர்களை அனுப்பிப் பேசச்சொல்லலாம் என்கிறேன்.”

“பெரும்புலவர் கபிலர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. திருமணத்துக்கே இன்னும் வந்து சேரவில்லையே. அவரை எங்கே போய்த்தேடுவது?”

“அது ஒன்றும் கடினமான செயல் அல்ல; நாம் நினைத்தால், அவரைக் கண்டடைந்துவிடலாம்.”

“ஆனால், அதற்கு மாதக்கணக்கில் ஆகும். அதுவரைப் பொறுத்திருக்க முடியுமா?”

பேச்சின் போக்கு பொதியவெற்பனுக்குப் பிடிக்கவில்லை.  உரையாடல்களைப் பெரும்பாலான நேரங்களில் உணர்வுகளே முடிவுசெய்கின்றன. பொதியவெற்பன் உணர்வின் கொந்தளிப்பில் இருந்தான். பொதுவாகத் திருமணக் காலங்களில் போர்தொடுத்தல் விரும்பத்தக்கதல்ல. ஆனால், இப்பொழுது உள்ள சூழல் இத்திருமணமே போரின் வாசலை வேகமாக திறந்துவிடுவதாக இருக்கிறது.

பேரரசர் குலசேகரப்பாண்டியனின் ஆற்றலே, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் எவ்வளவு வலியுறுத்திச் சொன்னாலும், அதன் உள்ளுண்மையை  மட்டுமே கண்டுணரும் அறிவுதான். அதனால், பொதியவெற்பன் எவ்வளவு குரல்கொடுத்தும் அவர் ஏற்றுக்கொள்வதற்கானச் செய்திகள் கிடைக்காமலே இருந்தன.

பொதியவெற்பன் சொன்னான், “படைகளைப் பெருக்குதல், பிறவேந்தர்களை திறைசெலுத்தச் செய்தல், பகைவரை அழித்தல், நிலப்பகுதியை மேன்மேலும் அதிகப்படுத்துதல், குடிகளை நன்கு காத்தல் இவைகளே அரச நியதி. இந்நியதியை நிலைநாட்டியே நமது முன்னோர்கள் இப்பேரரசைக் கட்டியெழுப்பினர். நாம் அவ்வழிச் செல்லுதலே முறை.”

பொதியவெற்பன் ஒருவகையில் பேரரசரை சீண்டும் வேலையைத் தொடங்குகிறான் எனத் தலைமை அமைச்சருக்குப் புரிந்தது. ஆனால், பேரரசர் எடுக்கவேண்டிய முடிவில் தெளிவாக இருப்பார் என்று யாவருக்கும் தெரியும்.

அவர் உரையாடலின் தன்மையைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார். திருமணவிழாக் கொண்டாட்டம்  பெருகியபடி இருந்தது. ‘மணவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மலரணிதல் சடங்கு இன்னும் சில  நாழிகைகளில் நடக்க இருக்கிறது. நமது மனநிலையை வேறு ஒன்று ஆட்சி செய்கிறது. இதுவோர் அரிய வாய்ப்பு. கடல் வணிகத்தில் பிற பேரரசுகளை வெல்லுவது மட்டுமல்ல, யவனர்களையே நம்மைக்கண்டு மிரளச்செய்யலாம். கிழக்குக் கடலையும் மேற்குக்கடலையும் நமது கப்பல்கள் ஆளும். அது நமது அரசியல் வலிமையை மேலும் பலமடங்கு அதிகப்படுத்தும். இதனைப் பிறர் அறியாமல் செய்யும்முறையே சிறந்தது. போர்தொடுத்தல் இக்காரணத்தை வெளிப் படுத்தும். அதன் இறுதி அழிவில் அவ்விலங்கினங்களேகூட அழிந்துவிடும் ஆபத்தும் உண்டு. எனவே, சற்று நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்யவேண்டும்’ என்று நினைத்தார்.

வெங்கல் நாட்டு சிறுகுடி மன்னன் மையூர்கிழார் வரும்வரை முடிவெடுப்பதைத் தள்ளிப்போட்டார்.

றுநாட்களுக்குப் பின் மையூர்கிழார் வந்து சேர்ந்தார். மறுநாள் காலைச்  சிற்றரங்கிற்கு அவர் அழைத்துவரப்பட்டார். கையில் காராளி செய்த காமன் விளக்கோடு வந்தார். பேரரசரைப் பார்த்ததும் அதனை அவரிடம் கொடுத்து அதன் சிறப்பைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினார்.

மலரணியும் நிகழ்வுக்குப் புறப்படத் தயாராயிருந்த பேரரசருக்கு மையூர்கிழார் வந்துள்ள செய்தி சொல்லப்பட்டது. உடனே சந்திக்க ஏற்பாடானது. அவர் அளித்த காமன்விளக்கைப் பெற்றுக்கொண்டார். அதன் சிறப்பை விளக்கிச்சொல்வதற்கான சூழல் வாய்க்கவில்லை. பாண்டரங்கத்தில் வைக்கவே தனிக்கவனம் செலுத்திச் செய்தது என்று மட்டுமே சொல்லமுடிந்தது.

p83b.jpg

கருங்கைவாணன் நேரடியாகப் பேச்சைத் தொடங்கினான். பறம்பின் மீது போர் தொடுப்பது பற்றிய வினாக்கள் அவரின் முன் வைக்கப்பட்டன.

முற்றிலும் எதிர்பாராத கேள்வியை எதிர் கொண்டு திகைத்துப்போனார். மணவிழாவுக்குத் தான் முன்கூட்டியே அழைக்கப்பட்டுள்ளோம் என நினைத்துப் பெருமகிழ்வோடு வந்த அவருக்கு இக்கேள்வி பெருங்கலக்கத்தை உருவாக்கியது. பாண்டிய நாட்டின் கடைசி எல்லை வெங்கல் நாடு. அதனை அடுத்து பச்சைமலைத்தொடர் தொடங்குகிறது. எனவே இப்போரில் வெங்கல்நாடு முக்கிய பங்காற்ற வேண்டியிருக்கும். ஆனால், இவ்வளவு அவசரமாக திருமணக்காலத்தில் போர்புரிதல் பற்றிப் பேசவேண்டிய தேவை என்ன என்பது அவருக்கு விளங்கவில்லை.

அவர் அதிர்ச்சியடைவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். எனவே, மற்றவர்கள் அவரின் அதிர்ச்சியைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. பேரரசரின் முன் நடக்கும் கலந்துரையாடல்களில் வினா எழுப்புவதற்கான இடமில்லை. தன்னை நோக்கி எழுப்பப்படும் வினாவிற்கான விடையைப் பணிவோடு முன்வைக்க மட்டுமே அனுமதியுண்டு.

மையூர்கிழாருக்குச் சூழல் பிடிபடவே நேரமானது. போரின் தேவை பற்றித் தெரிந்துகொள்வது நமது வேலையல்ல, போரின் தன்மை பற்றி தனது அறிவுக்குப்பட்டதைச் சொல்லிவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தார்.
தளபதி கருங்கைவாணன் கேட்டான், “பறம்பு நாட்டில் மொத்தம் எத்தனை ஊர்கள் உள்ளன?”

“நானூறுக்கும் மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.”

``மலையில் அமைந்துள்ள ஊரின் பரப்பும் மக்களின் எண்ணிக்கையும் மிகக்குறுகிய அளவுதானே இருக்கும்.’’

“ஆம்” என்றார் மையூர்கிழார்.

“ஆண், பெண், குழந்தைகள் என எல்லாம் சேர்த்து பறம்புநாட்டில் எவ்வளவு பேர் இருப்பார்கள்?”

‘இவ்வினாவிற்கு எப்படி விடை சொல்லமுடியும். பறம்பு நாட்டின் ஓர் ஊரைக்கூட நான் கண்களால் பார்த்ததில்லை. ஒருசில மனிதர்களை மட்டுமே பார்த்துள்ளேன். பின் எப்படி இதற்கு விடை சொல்வது?’ என்று தயங்கிக்கொண்டிருக்கையில் கருங்கைவாணன் சொன்னான். “பாண்டியப் பேரரசின் நிலைப்படையின் எண்ணிக்கையில் பாதிகூட பறம்புநாட்டு மக்களின் எண்ணிக்கை இருக்காது.”

தளபதி சொல்லும் கணக்கு சரியாக இருக்கவே வாய்ப்புள்ளது. ஏனென்றால், பாண்டிய நாட்டு நிலைப்படையின் வலிமை அப்படி. இந்தக் கணக்குச் சொல்லப்படுவதற்கான காரணம் எல்லாரும் அறிந்ததே. ஆனால், போர் என்பது எண்ணிக்கையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அதைப் பேரரசர் அறிவார். எனவேதான் தளபதியின் சொல்லைவிட மையூர்கிழாரின் சொல்லை அவர் மிகக்கூர்மையாகக் கவனித்து வந்தார்.
மிக உறுதியாக முன்வைக்கப்படும் தளபதியின் வார்த்தையை எதிர்கொள்ளமுடியாமல் அமைதிகாத்தது அவை. தலைமை அமைச்சர் முசுகுந்தர் என்ன சொல்லப்போகிறார் என்று மற்றவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதற்குமேல் போர் அற்ற ஒரு பேச்சுக்கான இடம் அங்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததனால் அமைதி நீடிக்கவே செய்தது.

தளபதியிடமிருந்த உறுதியும் நம்பிக்கையும் பொதியவெற்பனின் முகத்தில் மகிழ்வாய் எதிரொலித்தது. மற்றவர்களும் அதனைக் கவனித்தபடி இருந்தனர். இந்நிலையில் “நீ சொல்ல வருவதென்ன?” என்று மையூர்கிழாரைப் பார்த்து பேரரசர் கேட்டார்.

மையூர்கிழாரின் முகக்குறிப்பறிந்து பேரரசர் கேட்கிறார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், தலைதாழ்த்தி நின்றிருந்த மையூர்கிழாருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ஆனால், தான் எதையோ சொல்லவேண்டுமென்று பேரரசர் விரும்புகிறார் என்பது மட்டும் புரிந்தது.

சின்னச் செருமலோடு பேசத்தொடங்கினார் மையூர்கிழார். ``நான் நேற்று வந்ததில் இருந்து பலவற்றையும் தெரிந்துகொண்டேன். என் மகன் இளமருதன் சற்றே பதற்றத்தில் இருந்தான். அழைத்துவந்த செவியனிடமும் விசாரித்தேன். ஆளுக்கு ஒன்றாய்ச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்னதற்கும் உள்ளே நடக்கும் நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதலில் தோன்றியது. இப்பொழுதோ தொடர்பு இருக்குமெனத் தோன்றுகிறது.”

மையூர்கிழார் சொல்வது சற்றே குழப்பமாய் இருந்தது.

“நீ எதைச்சொல்ல வருகிறாய்?” எனக்கேட்டார் முசுகுந்தர்.

“மதங்கொண்ட யானையை நீங்கள் கையாண்ட முறையை” என்றார் மையூர்கிழார்.

அதிர்ந்துபோனார் முசுகுந்தர். `பேரரசருக்குத் தெரியாமல் நடந்த ஒன்றை இப்படி அவையில் போட்டு உடைத்துவிட்டானே?’

“எந்த மதயானை? என்ன நடந்தது?” வியப்புற்ற குரலில் இருந்தது பேரரசரின் கேள்வி.

முசுகுந்தர் நடந்ததை விளக்கிச் சொன்னார். “திருமணக்காலத்தில் இப்படியொரு தீய நிகழ்வு தங்களுக்குத் தெரியவேண்டாம் என்பதால், இதனை சற்று மறைவாக விசாரித்து முடித்தோம்” என்றார்.

“எனக்குத் தெரியாது என்று எப்படி நீ நம்பினாய்?” எனக் கேட்டார் பேரரசர்.

“பேரரசருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், இது ஒற்றர்களின் மூலம் மெல்லிய குரலில் உங்கள் காதுகளில் பட்டும்படாமலும் விழவேண்டிய செய்தி என்று நான் நினைத்தேன். அதனால்தான் நான் உங்களிடம் தெரிவிக்கவில்லை.”

முசுகுந்தரின் விடை பேரரசருக்கும் அவருக்குமிருந்த ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தியது. மற்றவர்கள் வியப்படைந்தனர்.

இதனை நினைவுபடுத்தியதன் மூலம் மையூர்கிழார் சொல்லவரும் செய்தி என்ன என்பதுதான் முசுகுந்தருக்குப் பிடிபடாமல் இருந்தது.

மையூர்கிழார் கேட்டார், “எத்தனை வீரர்கள்கொண்டு அந்த மதயானையை மறிக்கச்செய்தீர்கள்?”

“வீரர்கள் எண்ணற்றோர் முன்னும் பின்னுமாக ஆயுதங்களோடு சென்றனர். ஆனால், யாராலும் நெருங்கமுடியவில்லை. அல்லங்கீரன் யானைகளின் குணங்களைக் கண்டறிவதில் தேர்ந்தவன். அவன்தான் இதற்கெனவே பயிற்சி பெற்ற நான்கு யானைகளைக்கொண்டு மோதி அதனை வீழ்த்தினான்” என்றார் முசுகுந்தர்.

p83c.jpg

பேரரசரின் காதுகளுக்கு எது போகக்கூடாது என நினைத்தோமோ, அந்தச் செய்தியைத் தானே சொல்லவேண்டியதாகிவிட்டதே என்று மனம் கூசினார். யானையைக் குத்திக்கொல்வதென்பது கொடும்நிகழ்வு. அது மணவிழாக்காலத்தில் நடந்ததென்பது பெரும் இக்கட்டை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், முசுகுந்தர் அந்நிகழ்வை விளக்கிக்கொண்டிருந்த இந்தக் கணத்தில் எல்லோரின் எண்ணமும் இதனைவிடக் கொடும்செயல் அரங்கேறும் போரின் மீதுதான் இருந்ததே தவிர, மணவிழாவின் மீது இல்லை.

மையூர்கிழார் சொன்னார் “எங்களின் வெங்கல் நாட்டில் நடந்த நிகழ்வொன்று. அப்பொழுது நான் இளைஞனாக இருந்தேன். எனது தந்தைதான் ஆட்சி நடத்தினார். நாட்டின் தலைநகர் இப்பொழுது இருக்கும் இடத்தில் கிடையாது. பச்சைமலையின் அடிவாரத்தில் இருந்தது. ஓர் அதிகாலையில் அரண்மனையின் பக்கத்திலிருந்த சித்தூரிலிருந்து பெரும்கூச்சல்  கேட்டது. என்ன என்று பார்க்கப்போன வீரர்கள் பதறியடித்து ஓடிவந்தனர். மதயானை ஒன்று ஊருக்குள் புகுந்துவிட்டது. கட்டடங்களை முட்டிச்சாய்க்கவும் மரங்களைப் பிடுங்கி எறியவுமாக இருக்கிறது என்றனர்.

தந்தை உடனே வீரர்களை அழைத்துக்கொண்டு அவ்விடம் சென்றார். நானும் உடன் சென்றேன். என் வாழ்வில் மறக்கமுடியாத நாளது. அந்த யானையின் உயரமும் ஆவேசமும் இன்னும் என் மனக்கண்ணைவிட்டு அகலவில்லை. அவ்வளவு ஆத்திரம்கொண்ட யானையை இன்றுவரை நான் பார்த்ததில்லை. மதயானை முட்டி மரம் சாய்வதைத்தான் நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் முட்டிய வேகத்தில் பெரும்மரங்கள்கூட நொறுங்கிச் சரிந்ததை அன்றுதான் பார்த்தேன்.

துதிக்கையில் மண்ணள்ளி வீசிக்கொண்டு அது திடுதிடுவென வந்த வேகம் இன்னும் எனக்குள் பேரச்சத்தை உண்டு பண்ணுகிறது. பெரும்பெரும் ஈட்டிகளோடும் வில் அம்புகளோடும் வீரர்களைத் துணிந்து முன்னகரச் சொன்னார் தந்தை. ஓசையெழுப்பும் மத்தளங்கள் இசைக்கப்பட்டன. ஆனால், அவ்வானை  எதையும் பொருட்படுத்தவில்லை. வீரர்களின் ஆயுதங்கள் காற்றெங்கும் பறந்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இனி இந்த ஊரைக் காப்பாற்றமுடியாது என்று முடிவுசெய்து எல்லோரும் அவ்விடம்விட்டு அகலுமாறு உத்தரவிட்டார். இவ்வுத்தரவுக்காகக் காத்திருந்த வீரர்கள் குதிரையைத்தாண்டி முன்னால் ஓடினர்.

எல்லோரும் அரண்மனைக்கு வந்த பின்புதான் சிந்தித்தோம். அந்த மத யானை இங்குவந்தால் என்னசெய்வது? அரண்மனைக்கோட்டை திடமானதுதான். ஆனால் யானைமுட்டலில் நொறுங்கிய மரத்தின் உறுதி இதற்கு இருக்காது. எனவே, எப்பாடுபட்டாவது அதனை நெருங்கவிடாமல் தடுக்கவேண்டும் என முடிவுசெய்து முழுவீரர்களையும் அணிவகுக்கச்செய்த ஆயத்தநிலையில் இருந்தார் தந்தை.

சித்தூரைச் சூரையாடிவிட்டு அது எங்களை நோக்கி வரத்தொடங்கியது. வீரர்களின் கால்நடுக்கத்தில் தரையே ஆடியது என்றுதான் சொல்லவேண்டும். அது மனித ஓசைகேட்டு வெறியேறியபடி எங்கள் திசைநோக்கித் திரும்பியது. 

இந்தக் காட்சியைப் பச்சைமலைக் குன்றின்மேல் இருந்த பெண்ணொருத்தி பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறாள். அவள் பறம்புநாட்டுக்காரி. சித்தூரைச் சூறையாடிய யானை அடுத்துள்ள பெரிய ஊரினை நோக்கி நடக்கத்தொடங்கியதும் அவளுக்குக் கவலை அதிகமாகியுள்ளது. ஏனென்றால், இங்கு மக்கள் கூட்டம் அதிகம். இழப்பு அதிகமாகிவிடும் என்று முடிவுசெய்து அவள் வேகவேகமாகக் குன்றினைவிட்டு கீழிறங்கியிருக்கிறாள்.

எங்களின் கண்களுக்கு எதிரே நிலம்நடுங்க பிளிறியபடி யானை வந்துகொண்டிருந்தது. நாங்கள் உருவாக்கிய தடுப்புகள் காற்றில் பறந்துகொண்டிருந்தன. எத்தனை வீரர்கள் தூக்கிவீசப்பட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவையெல்லாம் அதனுடைய போக்கினை மறிக்க எந்தத் தடையையும் ஏற்படுத்தவில்லை.

மதயானை ஓரிடத்திலிருந்து நகரும்போது நான்கு திசையிலும் சம அளவிலான அழிவினை ஏற்படுத்தியபடியே நகரக்கூடியது. வீடுகள் இடிந்து சரிந்து நொறுங்கிக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்திற்குப் பின் நாய்கள் குரைப்பொலியை முழுமுற்றாக நிறுத்தின. அதன்பின் எங்களின்  அச்சம் பலமடங்கு அதிகமானது. நாங்கள் அரண்மனைக்குள் நுழைந்து கோட்டைக்கதவினைத் தாழிட்டோம். அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வலிமை இங்குள்ள எந்தக் கட்டுமானத்துக்கும் இல்லை என்பதை எல்லோரும் உணர்ந்தோம். ஆனாலும் அரண்மனைக்குள் அண்டுவதைத்தவிர வேறுவழியில்லை. நான் கோட்டையின் மேலேறி தந்தையின் அருகில் நின்று பார்த்தேன்.

செம்மண் குலைத்துக்கட்டப்பட்ட கோட்டைச்சுவர் அதன் கண்களை உறுத்துவதாக இருந்திருக்க வேண்டும். அது வேகமாகக் கோட்டையை நோக்கி வந்துகொண்டிருந்தது. மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களின் கூக்குரல் வானம் தொட்டது.

அப்பொழுதுதான் இடப்புற மலையடிவாரத்திலிருந்து ஒரு பெண் கோட்டையை நோக்கி வருவதைப் பார்த்தேன். அவள் வேகவேகமாக வந்துகொண்டிருந்தாள். மதயானை ஒன்று எதிர்திசையில் வந்துகொண்டிருக்கிறது, அதனை அறியாது பெண் ஒருத்தி வந்துகொண்டிருக்கிறாளே என்று பதறினேன். அவளோ எதனையும் பொருட்படுத்தாமல் வந்துகொண்டிருந்தாள். தனது குழந்தையைப் பின்புறம் முதுகோடு சேர்த்து மேல்துணியால் கட்டியிருந்ததும் தெரிந்தது.

நெருங்கி வரவர மதயானையின் பிளிறல் பேரச்சம் தருவதாக இருந்தது. என்ன நடக்கப்போகிறதோ, என்ற அச்சத்தால் நாங்கள் உறைந்து போயிருந்தோம். ஆனால், எவ்வித அச்ச உணர்வுமின்றி அவள் எதிரில் நடந்துவந்துகொண்டிருந்தாள். முதுகுப்புறம் இருந்த குழந்தை அழுதிருக்க வேண்டும். முன்புறம் போட்டு மார்பில் பால்குடிப்பதற்கு ஏற்ப துணியைக் குழந்தையோடு இறுக்கக்கட்டினாள். ஆனாலும், அவள் நடையின் வேகம் குறைந்தபாடில்லை.

p83d.jpg

அவள் கையில் ஏதோ ஒரு செடி ஒன்றை வைத்திருப்பது மட்டும் தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது தெரிந்தது. அவள் அரண்மனை வாசல்நோக்கி உதவிகேட்டு வருகிறாள் என்றுதான் முதலில் நினைத்தேன். அவளோ இப்பக்கம் வராமல், மதயானை வந்துகொண்டிருக்கும் திசைநோக்கிப் போனாள்.

மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த எங்களால் அக்காட்சியை நம்பவே முடியவில்லை. ‘என்ன ஆனது இந்தப் பெண்ணுக்கு, தன்னந்தனியாக மதயானையை நோக்கிப் போகிறாளே!’ என்று அஞ்சினோம்.

பெரும்படையையே சிதறடித்த வெறிகொண்ட அந்த யானையை நோக்கி சிறிதும் அச்சமின்றி அவள் போய்க்கொண்டிருந்தாள். ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது. நாங்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவள் கைகளில் இருந்த செடியை நீட்டியபடி மதயானையை நெருங்கிக்கொண்டிருந்தாள். அவளின் வேகம் அதிகமானபடியிருந்தது. மதயானையின் வேகம் குறைவதுபோல் இருந்தது. நாங்கள் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தோம். அதன் பிறகு நடந்தவைகளை எங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாது. அத்தனை நூறு வீரர்களை வீசியெறிந்து, குத்தீட்டிகளையும் வேல்கம்புகளையும் சிதறடித்து, எதிரில் பட்டதையெல்லாம் முட்டித்தள்ளி மண்ணோடு மண்ணாக்கிய அந்த மதயானை, மேய்பனின் முன் பணியும் கிடை ஆடுபோல அவளின் சொல்கேட்டுப் பணிந்தது.

அந்த இலையின் வாசனையை நுகர நுகர அதன் மதம் ஒடுங்கி பின்னகரத் தொடங்கியது. அவள் தன்னந்தனியாக சிறுகுச்சியைக்கொண்டு விரட்டுவதைப்போல யானையை விரட்டிக்கொண்டு மலையிலே ஏற்றிவிட்டாள்.

எங்களின்  உயிரச்சம் கலைய நீண்ட பொழுதானது. நாங்கள் கோட்டைக்கதவைத் திறந்து அவளை நோக்கி ஓடினோம். அவள் மலைக்குள் போவதற்குள் அவளைச் சென்றடைந்தோம். பால்குடித்து முடித்த குழந்தையைப் பின்தோளிலே போட்டாள். எனது தந்தை கண்ணீர் மல்க அவளை வணங்கினார்.  “பலநூறு பேரின் உயிர்காத்த தேவி நீ” என்றார். அவள் மறுமொழியேதும் சொல்லவில்லை. அவள் கையில் இருந்தது கரந்தைச் செடி என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் கரந்தையில் எண்ணற்ற வகையுண்டு. அது எந்த வகைக் கரந்தை என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

அந்தச் சூழலில் அவளிடம் அதனைக் கேட்கவும் முடியாது. கேட்டாலும் பறம்பின் மக்கள் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்பது தெரியும். எங்களைக் காத்தருளிய அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தந்தை துடித்தார். அவள் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களின் உயிரைக்காப்பாற்றிய அவளின் காலடியில் பணிந்து “பறம்புக்கும் பறம்பின் மக்களுக்கும் எதிராக சிறுதீங்கும் நாங்கள் என்றும் செய்யமாட்டோம்” என்றார் தந்தை.

மையூர்கிழார் சொன்ன கதையை அவை மிகக்கவனமாகக் கேட்டது. போருக்கான கருத்தைக் கேட்ட பேரரசரிடம், ‘நான் கருத்தை மட்டுமே வழங்க முடியும். போரிலே பங்கெடுக்க முடியாது’ என்று எவ்வளவு அழுத்தமாகச் சொல்ல முடிந்தது மையூர்கிழாரால். வயதும் பட்டறிவும்கொண்ட மூத்த மனிதர்கள் இக்கட்டானச் சூழலை எவ்வளவு நுட்பமாகச் செயல்படுகிறார்கள் என்பதை எண்ணி மனதுக்குள் வியந்தார் முசுகுந்தர்.

அவையில் நீடித்த அமைதி கலைய நேரமானது. இவ்வமைதி அவ்வளவு நேரம் வாதிட்ட தளபதி கருங்கைவாணனின் கருத்துக்கு எதிரானதாக உருத்திரண்டிருந்தது. எனவே, அதனை உடைக்கவேண்டிய பொறுப்பும் தளபதியையே சார்ந்தது.

“போரிலே பங்கெடுக்க மாட்டேன் என்பதைச் சொல்லத்தான் இங்கு வந்தீர்களா?”

p83e.jpg

கருங்கைவாணனின் வினாவிற்குச் சற்றும் இடைவெளியின்றி மையூர்கிழார் விடை சொன்னார், “இல்லை. அதற்கு இவ்வளவு விரிவான கதையை நான் சொல்லவேண்டியதில்லை. என் தந்தை அளித்த வாக்குறுதியை மட்டும் சென்னாலே போதுமே.”

“வேறென்ன சொல்ல வந்தீர்கள்?”

“நீங்கள் சொன்ன கணக்குத் தவறானது என்று சொல்ல வந்தேன்.”

தளபதிக்குப் புரியவில்லை. மற்றவர்களுக்கும் புரியவில்லை. “விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றனர்.

“ஒரு பேரரசுக்கு, மதங்கொண்ட யானையை அடக்க பலநூறு வீரர்களும் பயிற்சிகொண்ட நான்கு யானைகளும் காலமெல்லாம் யானைப் படையில் பணியாற்றிய கட்டுத்தறியின் பொறுப்பாளனும் தேவைப்பட்டுள்ளனர். ஆனால் பறம்பின் மக்களுக்கு அப்படியல்ல, ஒரு பெண்ணும் கையில் ஒரு செடியும் இருந்தால் போதுமானதாக இருக்கிறது. அவள் ஒருத்தி நீங்கள் சொன்ன இத்தனை நூறு வீரர்களுக்குச் சமம் என்றால், பறம்பில் இருக்கும் மக்களையும், செடி கொடிகளையும் கணக்கிட்டு நம் பேரரசில் இருக்கும் நிலைப்படை வீரர்களின் எண்ணிக்கையைச் சொல்லுங்கள் பார்ப்போம்?”

மையூர்கிழார் எழுப்பிய வினாவைக்கேட்டு அவையின் நாவு துடிப்படங்கி ஒடுங்கியது.

“மற்ற நாடுகளின் ஆற்றல் அங்குள்ள வீரர்களைப் பொறுத்தது. ஆனால் பறம்பின் ஆற்றல் மனிதர்களை மட்டும் சார்ந்ததல்ல, எனவே வெறும் மனிதர்களைக்கொண்டு படைநடத்திப் போனால், பறம்பு நாட்டின் சிறுகுன்றினைக்கூட கடந்து உள்நுழைய முடியாது” மையூர்கிழாரின் குரல் கணீரென அரங்கு முழுவதும் ஒலித்தது. சிறுசெடிக்கு ஒடுங்கிய மதயானைபோல் அவரின் குரல்கேட்டு ஒடுங்கியது அவை.

பறம்பின்மீது படைதிரட்டிப் போர்புரிவதில் பேரரசரின் மனம் உடன்பாடு கொள்ளாமல் இருந்தது. போரில் ஒருமுறை தோல்வி ஏற்பட்டால், அது அரசின் அச்சாணியையே அசைத்துப் பார்க்கும் என்பதைக் குலசேகர பாண்டியன் நன்கு அறிவார். அதனால்தான் இவ்வுரையாடலை இவ்வளவு தொலைவு வளரவிட்டு அமைதி காத்தார். அவர் எண்ணிய கருத்தே அவையிலும் நிலைநிறுத்தப்பட்ட கணத்தில் சட்டென எழுந்தார். எல்லோரும் பதறி எழுந்தனர்.

“மலரணியும் சடங்கிற்குப் பொழுதாகிவிட்டது” என்று சொல்லியபடி அவை நீங்கினார்.

p83f.jpg

பொதியவெற்பன் அவருக்கு முன்பே போய் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வுரையாடலை இந்தத் தன்மையில் விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை. ஆனால், வேறு வழியே இல்லை. மனமின்றிப் புறப்பட்டுப் போனான். பொற்சுவையும் அவ்வாறே அங்குவந்து காத்திருந்தாள்.

டங்கு முடிய இரவானது. பேரரசர் தனது பள்ளியறைக்குத் திரும்பும்பொழுது, “தளபதி உடனடியாகக் காணஅனுமதி கேட்கிறார்” என்று பணியாளன் தெரிவித்தான். வரச்சொல்லி அனுமதி கொடுத்தார் பேரரசர்.
நள்ளிரவு வரை அவர்கள் பேசினர். முற்றிலும் புதியதொரு திட்டத்தைத் தளபதி கொண்டு வந்திருந்தார். அது பேரரசருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. அதுபற்றி மிக விரிவாக அவர் வினாக்களை எழுப்பினார். அத்திட்டத்தை முழுமையாகக் கருங்கைவாணன் விளக்கினான். இதுவரை ஏற்படாத நம்பிக்கை இப்பொழுது ஏற்பட்டது. இன்றைய நாள் மிகச்சிறந்த நாள் என்று மனதில் எண்ணம் தோன்றிய கணத்தில் அத்திட்டத்துக்கான அனுமதியை வழங்கினார் பேரரசர்.

தேவாங்கைக் கொண்டுவர வழியின்றிப் போய்விடுமோ என்ற தவிப்பு நீங்கிய மகிழ்வோடு தனது பள்ளியறைக்குள் நுழைந்தார் பேரரசர். அதனைவிட பலமடங்கு மகிழ்வோடு புறப்பட்டுப் போனான் கருங்கைவாணன்.
 
- பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வீரயுக நாயகன் வேள்பாரி - 37

 

 

கூழையன் எவ்வியூருக்குள் அதிகாலையில் வந்துசேர்ந்தான். வழக்கமாகக் காட்டுப்பாதையில் நடந்து வருபவன் இம்முறை குதிரைப்பாதையில் மூன்று வீரர்களோடு வந்திறங்கினான். அதுவே அவன் வந்துள்ள வேலையின் அவசரத்தைச் சொன்னது.

p83a.jpg

“உதியஞ்சேரல் கீழ்மலையில் புதர்விலக்கிப் பாதை உருவாக்கியிருக்கிறான். அதற்கு அடுத்து பறம்புமலைத் தொடங்குகிறது. நம் பகுதியில் நுழையவில்லை. மிகக் கவனமாகத் திட்டமிட்டுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். கடற்கரைப் பகுதியிலிருந்து மூங்கில் நார்க்கொடிகளை எண்ணற்ற வண்டிகளில் கொண்டுவந்து தொடர்ந்து இறக்குகின்றனர். அது ஏன் என்று தெரியவில்லை” என்று தென்திசை நிலைமையை விளக்கினான் கூழையன்.

பாரியோடு தேக்கனும், வேட்டூர் பழையனும், முடியனும் அவையில் வீற்றிருந்தனர். எப்பொழுதும் விழிப்போடு இருப்பது கூழையனின் இயல்பு. “உரிய நேரத்தில்தான் விழிப்போடு இயங்கவேண்டும், மற்ற நேரத்தில் இயல்போடு இயங்க வேண்டும் என்று அவனுக்குப் பலமுறை சொல்லியாகிவிட்டது. ஆனாலும், கேட்க மறுக்கிறான்” என்று சலித்துக்கொண்டார் வேட்டூர் பழையன்.

ஆனால், தேக்கனுக்கோ நிலைமையை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றியது. சேரனின் வன்மம் மிக ஆழமானது. பத்தாண்டுகளுக்கும் மேலாக அவன் காத்திருக்கிறான். இப்பொழுது குடநாடு அவனுக்கு வாய்ப்பாக வந்தவுடன் செயலிலே இறங்கிவிட்டான் என்று தோன்றியது.

தேக்கன் என்ன சொல்லப்போகிறார் எனக் கூழையன் கவனித்துக்கொண்டிருந்தபொழுது பாரி சொன்னான். ``கீழ்மலைப் பாதையில் நமது எல்லைக்குள் வராமல் கவனமாக நிறுத்தியிருக் கிறான் என்றால், வேறு ஏதோ பகுதியில் பாதை ஊடுருவிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அவன் கூழையனை நன்கு புரிந்து வைத்திருக்கிறான்” என்றான் பாரி.

பழையன் சொல்லியதைத்தான் பாரி வேறுவிதத்தில் சொல்கிறான் என்பது அனைவருக்கும் புரிந்தது.

“உதியஞ்சேரல் இம்முறை குடநாட்டைத்தான் முதலிலே உள்ளிறக்கிவிடுவான். நம் மீது கொண்டுள்ள பகையால் நடக்கும் இப்போரில் அவனது முதல் தந்திரம் சகக் கூட்டாளியைக் காவு கொடுப்பது” என்றான் பாரி. 

உதியஞ்சேரல் எப்படிச் சிந்திப்பான் என்பதை நன்கு உணர்ந்தவன் பாரி. அவனது கருத்து முற்றிலும் சரியென்று எல்லோருக்கும் தெரியும். உரையாடலின் இறுதியில் பறம்பு நாட்டின் வடமேற்கு எல்லைப்பகுதிக்குச் செல்ல முடியனுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. ஆனாலும், அனைவரும் வலியுறுத்தியதென்னவோ தேக்கனின் செயலைத்தான். காடறிய இப்பொழுது போகும் முடிவைப் பற்றி மீண்டும் யோசியுங்கள் என்று சொன்னார்கள். கூழையன் மிகக் கடுமையான கோபத்தைத் தேக்கனின் மீது வெளிப்படுத்தினான்.

இறுதியில் தேக்கன் தனது நிலையிலிருந்து சற்றே இறங்கி வந்தான். “முழுநிலவுக்கு இன்னும் மூன்று வாரங்கள்  இருக்கின்றன. அதற்குள் பகரியின் ஈரலைக் கொண்டுவர பறம்பின் மக்களுக்கு நீ உத்தரவிடு. யாராவது கொண்டுவந்துவிட்டால் அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறேன்” என்றான்.

தேக்கன் தனது நிலையில் இருந்து இறங்கிவந்தது நல்லது; ஆனால், மூன்று வாரத்துக்குள் பகரியை வேட்டையாடுவதெல்லாம் நடக்காத செயல். ஆனால் வழக்கத்தை மீற முடியாததால், வேறு வழியின்றி ஒப்புக்கொண்டனர்.

மறுநாள் கூழையன் தென்திசைக்கும், முடியன் வடமேற்குத் திசைக்கும் புறப்பட்டனர். பறம்புநாடு முழுவதும் பகரி வேட்டை அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகள் எல்லாம் கபிலருக்குப் பின்னர்தான் தெரியவந்தன. பகரிதான் பறவைகளின் தலைவன். அதன் வேகத்தையும் நுட்பத்தையும் வேறெந்தப் பறவைக்கும் ஈடுசொல்ல முடியாது. அது முட்டை போட்ட அன்றே குஞ்சு பொரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. பிற பறவைகள் பல நாட்கள் அடைகாத்து உடற்சூட்டை முட்டைக்கு இறக்கி குஞ்சு பொரிக்கின்றன. ஆனால் பகரி அப்படியன்று, தனது உடலின் வழி பெருவெப்பத்தைக் கடத்தக்கூடியது. பகரியின் ஈரலைச் சாப்பிட்ட மனிதனை எந்த விலங்கு தீண்டினாலும் அதன் நஞ்சு அவனை ஒன்றும் செய்யாது. சில நேரம் தீண்டிய விலங்கு பாதிப்புக்கு உள்ளாகும்.

பகரியைக் கண்ணிற்பார்ப்பதும் அதனை அடித்து வேட்டையாடுவதும் எளிதான செயலல்ல. பகரியின் ஈரல் உண்டவனே எவ்வியூரின் தேக்கனாகிறான்.

p83b.jpg

கொடிய பாம்புகளாலும், பூச்சிகளாலும், செடிகொடிகளின் சுணைகளாலும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத மனிதனே காடறியும் ஆசானாகச் செயல்பட முடியும். அவனை நம்பியே பறம்பின் பிள்ளைகளைக் காட்டுக்குள் அனுப்ப முடியும். இல்லையென்றால், இவ்வடர் காட்டில் என்ன நடக்குமென அனுமானிக்கவே முடியாது. பகரியைத் தேடி பறம்பின் கண்கள் வானமெங்கும் பறந்துகொண்டிருந்தன.

நாட்கள் நகர்ந்தன. அடர்மழை கொட்டித் தீர்க்க, பகற்பொழுது மிகக்குறுகியதாகவே இருந்தது. அதில் p83c.jpgபகரியைப் போன்றதொரு வீறுகொண்ட பறவையைப் பார்ப்பதே மிகவரிது. பின் எங்கே வேட்டையாடுவது? பறம்பு மலையின் எல்லா முகடுகளிலும் மக்கள் ஏறி இறங்கினர். தன்னியல்பில் எப்பொழுதோ கண்ணிற்படும் ஒரு பறவையை, தனித்து வேட்டையாடி பிடிக்குமளவிற்கு மனிதரின் கைக்குள் இயற்கை சுருங்கி விடவில்லை.

பறம்பின் மக்கள் அச்சிறு பறவையிடம் தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ளும் கடைசிப்பகலும் முடிவுக்கு வந்தது. இன்றிரவு முழுநிலவு நாள். வேட்டூர் பழையன், செய்திக்காக முன்னிரவுவரை காத்திருந்தான். எங்கிருந்தும் செய்தி வரவில்லை. பகரி அகப்படவில்லை என்பது முடிவானது. இனித் தேக்கன் காடறியப் புறப்படுதலைத் தடுக்க முடியாது எனத் தெரிந்ததும் பழையன் வேட்டுவன்பாறை நோக்கி புறப்பட ஆயத்தமானான்.

முன்னிரவில் தேக்கனைக் கண்டு பேசினான். “பிள்ளைகளை நல்லபடியாகப் பயிற்றுவித்துக் கொண்டு வா. மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். அவனோடு இளம் வீரர்களும் உடன் வந்தனர். அவர்கள் அடர்வனம் நோக்கி நடந்தனர். நள்ளிரவுக்குள் புலிவால் குகைக்குப் போய்விடலாம். அங்கு படுத்தெழுந்து பயணத்தைத் தொடரலாம் என்பது திட்டம்.

பெருகியோடும் வைகையின் இருளகற்றி சூரியக் கதிர்கள் மதுரையை எட்டிப்பார்க்கத் தொடங்கின. இருமாத காலம் விழாக்களில் மூழ்கிக்கிடந்த மதுரை, இன்று அதன் உச்சநிகழ்வைக்  காணத்தயாராகிக்கொண்டிருந்தது. மணமாலை சூடும் இந்நாளுக்காகத் தான் அவ்வளவு பெரும் கொண்டாட்டங்களும் நடந்து முடிந்துள்ளன.

கருங்கைவாணனின் திட்டம் துல்லியமாக நடைமுறையானது. அவனுக்கு வந்துள்ள தகவல்கள் மிக நல்ல செய்தியைச் சொல்லு கின்றன. இன்று பாண்டியப் பேரரசின் திருநாள். இந்நன்னாளில் பேரரசரின் முன் சொல்லப்படும் முதற்செய்தியாக இது இருக்க வேண்டும் என்று அதிகாலையே பேரரசரைக் காண வந்துவிட்டான் தளபதி கருங்கைவாணன்.

பள்ளியறையைவிட்டு எழுந்து வந்த பேரரசரை வணங்கிச் சொன்னான், “நமக்கு வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் நம்மால் அனுப்பப்பட்டவர்கள், பச்சைமலைக்குள் வெற்றிகரமாக நுழைந்துவிட்டனர். இலக்கை அடையும் காலம் நெருங்கிவிட்டது.”

அவனைக் கட்டித்தழுவினார் பேரரசர். “மணநாளின் மகிழ்வை விஞ்சும் ஆற்றல்கொண்ட செய்தியை அளித்தாய்” எனப் பாராட்டி மகிழ்ந்தார்.

“பொதியவெற்பனுக்கும் தெரிவித்துவிடு. இந்நாளின் சிறப்பை முன்பே நமக்குச் சொன்ன திசைவேழருக்கும் சொல். சூல்கடல்முதுவனுக்கும் சொல். மணவிழாவின் மகிழ்வு எல்லையற்றதாய்ப் பெருகட்டும்.”

வணங்கி விடைபெற்றான் கருங்கைவாணன்.

p83d.jpg

பள்ளியறைத் திரைச்சீலையை விலக்கி வெளியேறி வந்த பொற்சுவை, நீராழி அரங்கிற்குள் நுழைந்தாள்.  நீள்வட்டப் பளிங்கு நீர்க்குடுவை அவளுக்காகக் காத்திருந்தது. அதில் நாற்பத்தி ரெண்டு நறுமணப்பொருட்கள் கலக்கப்பட்ட மணநீர் நிரப்பப்பட்டிருந்தது.

பொற்சுவை அருகில் வந்தாள். சுற்றிலும் சேவைப்பெண்கள் நின்றிருந்தனர். பக்கவாட்டில் அமைந்திருந்த படிமேல் ஏறி வலதுகால் நீட்டி பெருவிரல் கொண்டு நீரினை அசைத்தாள். சிற்றலைகள் விளிம்பிற்போய் முட்டித்திரும்பின. அந்நீரலைகளைப் பார்த்தபடி கால் நுழைத்து கழுத்துவரை உள்ளிறங்கினாள்.

நீர் மெல்லிய சூடு கொண்டிருந்தது. அதிகாலைக் குளிருக்கு இதம் தர இதைவிட வேறென்ன இருக்கிறது. ஆனால், உடல்தொடும் எதுவும் சுகம் தருவதாக மாறிவிடுவதில்லை. சிந்தித்தபடியே மேலாடையைக் கழற்றி இடக்கையில் நீட்டினாள். சேவைப்பெண் அதனைப் பணிந்து பெற்றுக்கொண்டாள்.

மணநீரின் வாசனை எங்கும் பரவி மூச்சடைக்கச் செய்தது. நறுமணக்குளியல் பழகிய ஒன்றுதான். ஆனால், யவன நறுமணங்கள் மூக்கிற்குச் சற்றே கடுமையூட்டக்கூடியவை. அவற்றை அதிகமாக ஊற்றியிருக் கிறார்கள் எனத் தோன்றியது. இந்தக் கலவையை ஆண் உருவாக்கியிருக்க வேண்டும். பெண்ணின் கைப்பக்குவம் இப்படி இருக்காது. 

p83e.jpgஆனால், எல்லா ஆண்களும் இதுபோல் கடுமைகொண்ட கலவையை உருவாக்கி விடுவதில்லை. எவ்வித நறுமணப் பொருட்களும் இன்றி அவனோடு சேர்ந்து சுனை நீராடியபொழுது எழுந்த மணமும் இன்பமும் வேறொன்றிலும் ஏற்பட்ட தில்லை. கலவை, நறுமணப் பொருளோடு மட்டும் சம்பந்தப் பட்டதல்ல. ஈடற்ற இன்பத்தை உருவாக்க விரல்கள் மட்டுமே போதுமானவை. விரல்தான் உடலின் கண்களைத் திறக்க வல்லது. பாலாடையின் மீது ஊர்ந்துபோகும் சிற்றெறும்பின் கால்தடம் போலத்தான் விரல்கள் ஏற்படுத்தும் வடுக்களும். வடுக்கள் பதிந்த பள்ளத்தின் வழியேதான் நினைவின் ஊற்று கசிந்துகொண்டே இருக்கும். கண்ணுக்குத் தெரியாமல் நினைவிற் படரும் அந்நறுமணத்துக்கு ஈடுசொல்ல என்ன இருக்கிறது?

`சுனைநீரின் குளுமையை நீ அறிய வேண்டும் என்று சொல்லித்தான் அவன் அழைத்துச் சென்றான். நீர் மேனியெங்கும் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது. நீரோடும் பாறை சுடும் என்று சொன்னால், யார் நம்புவார்கள். நீர் தழுவும் எனது மேனியின் சூட்டை நான் உணர்ந்தபொழுதுதான் அந்த உண்மை உரைத்தது. சிறு மணலை அள்ளி எனது கையிற்கொடுத்து ‘பூசிக்கொள்’ என்றான். நான் மேலெல்லாம் பூசினேன். மென்மலர் மேனியில் சிறுவுராய்வுகளையும் கீறலையும் மணற்துகள்கள் ஏற்படுத்தின. மீண்டும் நீரில் மிதந்தேன். சிற்றெறும்பு கடித்ததைப் போன்ற அக்காயங்களை குளிர்நீருக்குள் உணர்ந்துகொண்டிருந்தபோது அவன் நீருள் இறங்கினான்.

மாமரத்து அடிவாரமிருக்கும் செவ்வெறும்பு கடிப்பதைப்போல உணரத் தொடங்கினேன். கடிகாயங்கள் காமத்துக்குள் மறைந்து கொண்டிருந்தபொழுதே புதிதாகத் தோன்றிக்கொண்டும் இருந்தன. சீற்றம்கொண்டு தாக்கப்படுதலின் சுவையைக் காயங்களே கற்றுக்கொடுத்தன.

நீருக்குள் நுழையும் கைகள் எவ்வளவு இழுத்தணைத்தாலும் வலிமை கூடாது. நீர் தன்னுள் விளையாடுபவர்களோடு தானும் சேர்ந்து விளையாடும். அதற்கான இடத்தைத் தந்தே ஆகவேண்டும். நீர்புகும் முழு இடத்திலும் விளையாட மனிதனால் ஒருபோதும் இயலாது.  நீருலகின் நியதி வேறு.  நிலத்தில் காதல்கொள்கையில் காற்று விலகிக்கொடுக்கும். நீரில் காதல்கொள்கையில் அது விலகிக் கொடுப்பதில்லை. நம்முள் நுழையவே பார்க்கும். சக ஆட்டக்காரனைப்போல அதுவும் பங்கெடுக்கும். நமது பொறாமையை மெல்லத் தூண்டும். நமது இயலாமையைக் காட்டிக்கொடுக்கும். 

பஞ்சுப்படுக்கையே காதலுக்கு சிறந்ததென நினைப்பவர்கள் நீர்ப்படுக்கையை அறியாதவர்களே. நீர் மட்டுமே உடலோடு உடல் கிடத்த, சாய்ந்த நிலையைக் கோருவதில்லை. அது இயற்கை மனிதனுக்கு வழங்கிய அதி சிறந்த காதற்களம். காதலில் மூழ்கித்திளைத்த மனம் தன் துணையின்றி நீர் இறங்கும் துணிவைப் பெறுவதில்லை.’

இச்சிந்தனை உருவான கணத்தில் நறுமணத்தொட்டியில் இருந்து மேலேறினாள் பொற்சுவை. தோழிகள் பதறினர். ``ஒரு பொழுதாவது மணநீருக்குள் இருக்க வேண்டும் இளவரசி” என்று வேண்டினர். எச்சொல்லும் உள்நுழைய முடியாத இறுக்கம்கொண்டிருந்தாள் அவள்.

`நாற்பத்திரெண்டு நறுமணங்களையும் விஞ்சிய வாசனை என்னுள் உண்டு. அதை நுகரக்கூடியவனை நுகர்ந்தவள் நான்’ சொற்களை மனம் உச்சரிக்கும்பொழுது உள்ளுக்குள் இருந்து வாசனை மேலெழுந்து வந்தது. மேலேறும் வாசனை நினைவுக்காட்சிகளைக் கொட்டிக்க விழ்த்தது.

ஆடை அலங்காரத்துக்கும் மலர் அலங்காரத்துக்கும் எல்லோரும் தயாராக இருந்தனர். ஈரம் உலராத பொற்சுவை, இருக்கையில் வந்து அமர்ந்தவுடன் சேவைப்பெண்கள் அருகில் வந்தனர்.

கைகளில் ஆடைகளை வைத்துக்கொண்டு அவளின் உடல் துடைக்க ஆயத்தமாக இருந்தனர். அவள் நிமிரவேயில்லை. அவளது அனுமதியின்றி யாரும் தொட்டுவிடமுடியாது. சேவைப்பெண்கள் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர்.

பொற்சுவையின் எண்ணம் நீர்நிலைவிட்டு அகலாமல் இருந்தது. சுனைநீரிற் குளித்து மேலேறியவள் சொன்னாள். ``ஈரத்தை உடல்வெப்பத்தால் மட்டுமே உலரவைத்து விடுகிறது உனது  நெருக்கம்.”

உடல் உலர்ந்துவிடும். ஆனால், இதழ்கள் அப்படியல்ல; நெருக்கத்தில்தான் சுரக்கத் தொடங்கும்.

இதழ் சுரந்துகொண்டிருந்தபொழுது உடல் உலர்த்துகொண்டிருந்தது. நீருள் மூழ்குதல் மீண்டும் தொடங்கியது. நெடுநேரம் கழித்து அவன் உலர்ந்து வீழ்ந்தான். ஆனால், உடலெங்கும் ஈரம் பூத்திருந்தது.

“உள்ளும் புறமுமாக நீரைச் சுழலவிட்டு விளையாடுதலே நீர்விளையாட்டாகிறது. ஆனால், இது தெரியாத பலரும் நீரில் விளையாடுதலையே நீர்விளையாட்டு என்று நினைத்துக் கொள்கின்றனர்” என்று அவன் சொன்னபொழுது, அவள் சொன்னாள். ``இப்பொழுதாவது நான் ஆடைகொண்டு துடைத்து உடலை உலர வைக்கிறேன். நீ அருகில் வராதே.”

அவள் தலைநிமிர்ந்தபொழுது கண்பார்வையைப் புரிந்து சேவைப்பெண்கள் அருகில் வந்து மேனி துடைத்தனர். கூந்தல் உலர்த்த, நறுமணப் புகை தூவ, மேனி துடைக்கவென ஆளுக்கொன்றாய்ப் பணியாற்றினர். வணிகர்குல அலங்காரம் முடிவுக்கு வந்தது. பாண்டியர்குல வழக்கம் தொடங்கியது.

உச்சந்தலையில் மஞ்சள் மின்னும் சூடிகையை அணிவித்தாள் ஒருத்தி. அதனைத் தொடர்ந்து சூடாமணியும் கோதைச்சரமும் சூட்டப்பட்டன. கழுத்தில் கண்டிகையும், மணியாரமும் அணிவித்தனர். அவற்றின்கீழ் தாழ்வடங்கள் நூலளவுத் தொடங்கி விரல் அளவு வரை கனம்கொண்டு இறங்கின. எவ்வொளியையும் உள்வாங்கி பலவண்ணமாய் வெளி கக்கும் செவிப்பூ சூடினர் காதுகளுக்கு. ஆடகமும், வால்வளையும், மகரவாய்க்கட்டும் முன்கை மணிக்கட்டில் தொடங்கி சுற்றிச்சுற்றி மேலேறிக் கொண்டிருந்தன. விரல்களில் மணியாழியும் இடையில் எண்வகை வடமும் சூட்டினர்.

அவளது கண்கள் சுகமதியைத் தேடின. அலங்காரம் நடக்கட்டும் என்று விலகி நின்ற அவள், பொற்சுவையின் கண்கள் தேடுவதைக் கண்டாள்.

அலங்காரப் பணியாளர்களை விலக்கி அருகில் வந்த சுகமதியின் காதோடு சொன்னாள். “எனது உடல் திருமணத்திற்குத் தயாராகிவிட்டது சுகமதி.”

p83f.jpg

தேக்கன் பதினோரு சிறுவர்களோடு புறப்படத் தயாரானான். சிறுவர்களைக் காடறிய அனுப்பும் நாள் எவ்வியூரின் உணர்ச்சிப் பெருநாள். தன் மகனைக் காட்டுக்குக் கொடுத்தனுப்பும் பெண்களின் ஆவேசம் அடங்கா எழுச்சி கொள்ளும். குலவை யொலியால் காடு கிடுகிடுக்கும். பறம்பின் தலைவன் குருதிப்பலி ஈந்து சிறுவர்களை அனுப்பினான். பாரியின் மனை நீங்கி குலநாகினிகளின் முன்வந்து அமர்ந்தனர் சிறுவர்கள். 

உடல்வலுவிலும் வயதிலும் மூத்தவனாக கீதானி முன்னிருந்தான். அவனை அடுத்து குறுங்கட்டி, முடிநாகன், அவுதி, மடுவன், இளமன் என வரிசையாக இருந்தனர். வயதில் மிகச்சிறியவன் அலவன்தான்.

ஆனாலும், அவனின் வேகம் இணைசொல்ல முடியாது. எல்லோருக்கும் குலநாகினி பச்சிலைச்சாறு கொடுத்தாள். குடித்து முடித்தனர். அதன்பின் கீதானியை உள்தாழ் வாரத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

குலநாகினி சிறுகுடுவை ஒன்றை எடுத்துவந்தாள். அதன் உள்ளே மிகக்கெட்டியான வடிவில் ஏதோ இருந்தது. மலைவேம்பின் இலையைப் பறித்துவைத்திருந்தனர். அந்த இலையைக் குடுவைக்குள் நுழைத்தாள். அதன் சாறு இலையில் படிய அவ்விலையைக் கையில் எடுத்தாள். கீதானியை நாக்கை நீட்டச்சொன்னாள். அவன் `ஆ’ வென வாய் பிளந்து நாக்கை நீட்டினான். “போதாது” என்று சொல்லி தலையை மறுத்து ஆட்டினாள். இன்னும் வாய் பிளந்து நாக்கை நீட்டினான். மீண்டும் மறுத்து தலையை ஆட்டினாள். இன்னும் முயற்சித்தான். வாயோரத்து தசை கிழிந்துவிடும்போல் இருந்தது. அடித்தாடை வலித்தது.

“இன்னும் நாக்கை நீட்டு” என்று சொல்லிக்கொண்டே அந்த இலையைச் சாறோடு எடுத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் அடிநாக்கில் வைத்து இருகையாலும் வாயை இழுத்து மூடிப் பிடித்துக்கொண்டாள். மற்ற நாகினிகள் அவனது கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் பல்லைக்கடித்து, துடித்துத் துள்ளினான். ஏதேதோ செய்து பார்த்தான். சிறு சத்தங்கூட வெளிவராத அளவிற்கு வாய்த்தாடையை அடைத்து அமுக்கி இருந்தாள் குலநாகினி. தாழ்வாரத்தின் வெளியில் நின்றிருந்த மற்ற சிறுவர்களுக்கு உள்ளே ஒருவன் துடியாய்த் துடிப்பது சிறிதும் தெரியாது.

இலையோடு உள்ளே வைக்கப்பட்ட சாறு என்னவென்று குலநாகினிகள் வெளியே சொல்வதில்லை. செடிகொடிகளில் விளையும் மொத்தக்கசப்பும் கலக்கப்பட்டச் சாறு என்று சிலர் கருதுகின்றனர், பதப்படுத்தப்பட்ட பாம்பின் நஞ்சு என்று சிலர் சொல்லுகின்றனர். நாகப்பச்சை வேலியின் நச்சுக்கொடிகள் கக்கும் பிசின் என்று சொல்லுகின்றனர். எது உண்மை என்று தெரியாது. இந்தச் சாறு கசிந்து, உணவுக்குழல் முழுவதும் இறங்கி முடியும்வரை அவன் கைகளின் பிடி தளர்த்தப்படுவதில்லை.

நாவின் சுவை நரம்புகள் முழுவதும் நஞ்சுக்கசப்பின் சாறு உள்ளிறங்கிய பின்னே அவன் வாய்திறந்து மூச்சுவிட அனுமதிக்கப் படுகிறான். நரம்பில் தேங்கிய கசப்பு நீங்க மாதங்கள் ஆகும். மேல்தோலில் விழும் தழும்பு மறையாததைப்போல அடிநாக்கில் நிலைகொண்ட கசப்பு எளிதில் மறையாது. அவனது நாவு சுவையுணவு தேட இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.

அறுபதாங்கோழிக்கறி முதல் அத்திமது வரை அனைத்தின் சுவையும் துளியாவது நாக்கில்பட்டு வளர்த்த இவர்களின் நினைவில் இருந்தே சுவை அகலும். காடறிந்து வீடுவந்த பின்னும் சில ஆண்டுகள் ஆகும் இக்கசப்பு மறைய.

இக்கசப்பின் வாடை காட்டுப்பயணத்துக்கு மிக முக்கியமானது. காட்டின் எல்லா விலங்குகளும் இவ்வாடையை அறியும்.  சிறுவர்கள் பேசியபடி நடந்து செல்ல இவ்வாடையை நுகர்ந்து அவை விலகிச்செல்கின்றன. விலங்குகளை விலக்க இக்கசப்பின் மனமே மொழியாகிறது.

பதினோறு பேரும் மலைவேம்பின் இலையை  விழுங்கி, துடித்து அடங்கினர். அதன்பின் அவர்கள் புறப்பட்டனர். யாரிடமும் பேச அவர்கள் ஆயத்தமாயில்லை. வாய்திறந்து பேசப்பேச கசப்பு உள்ளிறங்கும். இக்கசப்புக்குப் பழகி அவர்கள் இயல்பாய்ப் பேசத்தொடங்க சில வாரங்களோ மாதங்களோ ஆகலாம். அதுவரை மிகமிகக் குறைவாகவே அவர்கள் பேசுவர். பேசும் ஒவ்வொரு சொல்லும் ஒரு குடம் வேம்பின் சாற்றைக் குடித்ததற்குச் சமம்.

அடித்தொண்டை முழுவதும் தேங்கிய கசப்பு நிற்க, அதன்பிறகு யாரிடமும் பேசாமல் எவ்வியூர் விட்டு வெளியேறினர். சிலர் வில் அம்பு வைத்திருந்தனர். சிலர் ஈட்டியை ஏந்திப்பிடித்திருந்தனர். சிலரிடம் கவண்கல் இருந்தது. அவரவர்களுக்கான ஆயுதத்தை எடுத்துவந்தனர். ஆனால், இதுவெல்லாம் தொடக்க நிலைக்குத்தான். அவர்கள் பயன்படுத்த வேண்டிய வலிமை மிகுந்த ஆயுதங்களை இனி அவர்களே காட்டில் உருவாக்கிக்கொள்வார்கள். தங்களுக்கான தனித்துவம்மிக்க ஆயுதம் எதுவென்று அவர்கள் கண்டறியும் வரை இவ்வாயுதம் அவர்களின் கையில் இருக்கும்.

தேக்கன் வழக்கம்போல தனக்கான ஆயுதத்தை வீட்டில் இருந்து எடுத்துவந்தான். அது பன்றியின் கடவாய்க்கொம்பு. இக்காட்டில் மிக வலிமை வாய்ந்த பொருள் எதுவெனக்கேட்டால், அது பன்றியின் கடவாக்கொம்புதான். அதனை உடைக்கவோ, நொறுக்கவோ எதனாலும் முடியாது. அதன் அடிப்பகுதிக்கு என்ன வலிமை இருக்கிறதோ, அதே வலிமை கூர்மை மிகுந்த முனைப்பகுதிக்கும் உண்டு. எனவே, முனையின் கூர்மை ஒருபோதும் சிதைவுறாது.

தேக்கன் இருகொம்புகளின் அடிப்பகுதியில் துளையிட்டு அறுந்துபடாத நார்கொண்டு இரண்டு கையின் மணிக்கட்டோடு சேர்த்துக் கட்டியிருந்தான். காடறிதல் பயணக்காலம் முழுமைக்கும் அவன் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் அது மட்டுந்தான்.

மணிக்கட்டில் கட்டி உள்ளங்கைக்குள் மடக்கிக்கொண்டால், இப்படி ஓர் ஆயுதம் இருப்பதே வெளியில் தெரியாது. இதுகொண்டு எந்த மரத்தின் அடிப்பகுதியையும் குத்தி இழுத்தால், நரம்புச் செதில்கள் பிய்ந்து நொறுங்கும். இறுகிய மரத்தின் தூரையே பிய்த்து எடுக்குமென்றால், விலங்குகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

காடறிந்து, சிறந்த போர்வீரனாக விளங்கி, தனது திறமையால் பல வலிமை மிகுந்த பணிகளைச் செய்து இறுதியில் பகரியை வேட்டையாடி ஈரலைத் தின்றவன்தான் தேக்கன் ஆகிறான். எனவே அவன் தனது உடலசைவையோ ஆற்றலையோ துளியும் வீணாகச் செலவிட மாட்டான். எந்தவொரு விலங்கின் தாக்குதலையும் சமாளிக்க மிகச் சில அடிகள் போதும். குத்திக்கொன்று வீழ்த்துவதெல்லாம் வீரர்களின் தொடக்ககால வாழ்வில் நிகழ்த்தும் செயல். ஆனால், வாழ்வு முழுவதும் காடு பார்த்து, பட்டறிவின் உச்சத்தில் நிற்கும் தேக்கனுக்குத் தேவை மிகச்சிறிய சில அசைவுகள்தான். எந்த விலங்கின் நரம்பை எங்கு தட்டினால் போதும் என்று தெரியும். 

p83g.jpg

கைப்பிடி அளவு கோரைப்புற்களின் முனையில் முடிச்சிட்டு, அதனைக்கொண்டு அடித்தால், யானை நகரமுடியாமல் உட்காரும். அவன் மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, மனிதன் எல்லாவற்றையும் நரம்புகள்கொண்டு அறிந்தவனாகிறான். எனவே நரம்புகளின் இயங்குவிசை அவனுக்குப் பிடிபட்டுவிடுகிறது. விலங்குகளின் வலிமை, ஆற்றல் மீதான கருத்தெல்லாம் நினைவில் இருந்தே உதிர்ந்துவிடுகிறது.

காடறியும் நான்காவது பயணத்தை மேற்கொள்ளும் தேக்கனின் முதல்நாள் நினைவில் கடந்தகாலம் எதுவும் வந்து செல்லவில்லை. வழக்கம்போல் இன்றைய நாளின் நிகழ்வு மட்டுமே அவன் மனதில் ஓடியது. சாமப்பூவின் வாசனை வந்துசென்றது.

முன்னால் சென்றவனைத் தொடர்ந்து பதினோறு பேரும் வந்துகொண்டிருந்தனர். யாரும் வாயைத் திறந்து எதுவும் கேட்கவில்லை, வாயைத் திறந்தாலே காற்று உள்ளே போய் ஒருகுடம் நஞ்சை அடிவயிற்றில் கொட்டிக்கவிழ்ப்பதுபோல் இருக்கிறது. எனவே, பேச்சின்றிப் பின்தொடர்ந்தனர் அனைவரும். நீண்டநேரத்துக்குப்பின் சிறியவன் அலவன் கேட்டான், ``எதை நோக்கிப் போகிறோம்?”

நடந்தபடியே தேக்கன் சொன்னான் ``கொற்றவையை வழிபட, கூத்துக்களம் நோக்கிச் செல்கிறோம்.”

 - பறம்பின் குரல் ஒலிக்கும்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.