Jump to content

மொழி கடந்த ரசனை


Recommended Posts

மொழி கடந்த ரசனை 01: இந்திப் பாடல்களினூடே ஒரு யாத்திரை...

 

 
black_and_white_3012401f.jpg
 

இசை மொழியைக் கடந்தது. ஆனால், பாடல்கள் மொழியைச் சார்ந்தது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சுவை, மணம், குணம் எல்லாம் உள்ளன. அதிலும், மக்கள் வாழ்வுக்கு நெருக்கமாக அமைந்த திரையிசைப் பாடல்களில் காணக் கிடைக்கும் வகைமைகள் ஏராளமானவை.

தமிழ்த் திரையில் பாடல்கள் அமைந்த தன்மைக்கும் இந்தித் திரைப்படங்களில் பாடல்கள் அமைந்த விதத்துக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைப் போலவே வேற்றுமைகளும் உள்ளன. இந்தி மொழி தமிழ் மொழி போல் ஒரே பின்புலத்திலிருந்து பிறந்ததல்ல. வேறுபட்ட பல கலாச்சார பின்புலங்களிலிருந்து, உருது, மைதிலி, போஜ்புரி ஆகிய மொழிகளின் புலங்களிலிருந்து வந்த மொழி.

இப்படிப்பட்ட ஒரு மொழியின் கவிஞர்களை உலகம் எப்படி ஏற்றுக்கொண்டு வளம் பெற்றது என்பது பற்றியும், இந்திப் பாடல்களின் பாடுபொருட்களில் உள்ள வித்தியாசமான அம்சங்கள் பற்றியும் அவற்றின் பின்னணியோடு அசைபோடுவதே இந்தத் தொடரின் நோக்கம்.

கலாச்சார வரையறைகள்

இந்தித் திரைப் படங்களின் மையமாக மும்பை என்ற அந்தக் கால பம்பாய் விளங்கினாலும் அதன் அனைத்து அங்கங்களும் மேற்கு வங்காளத்தைத் தாயகமாகக் கொண்ட, ‘பெங்காலி’ என்று பொதுவாக அறியப்பட்ட வங்காளிகளிடம் மட்டுமே இருந்தன. இது அன்று இருந்த தென்னிந்திய, குறிப்பாகத் தமிழ் படங்களின் சூழலுக்கு மாறுபட்ட ஒரு நிலை. அப்போதெல்லாம் தமிழகத்தில் ஸ்டூடியோக்கள் அதிகம் இல்லை. இதனால் பல தமிழ்ப் படங்கள் கல்கத்தாவில் படமாக்கப்பட்டாலும், படங்களின் வசனகர்த்தாக்கள் மற்றும் பாடலாசிரியர்கள் நன்றாகத் தமிழ் கற்ற, தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களாகவே இருந்தனர். எனவே, அவர்கள் எழுதிய வசனங்கள் மட்டுமின்றி பாடல் வரிகளும் தமிழ் கலாச்சார வரையறைக்கு உட்பட்டே இருந்தன.

ஆனால் வங்காளிகள் தயாரித்த இந்தித் திரைப்படங்களுக்குப் பாடல் வரிகள் எழுத வந்த உருதுக் கவிஞர்களுக்கு மேற்கண்ட கலாச்சார வரையறைகள் ஏதுமில்லை. பாரசீக, முகலாயப் பண்பாட்டுத் தரவுகளின் அடிப்படையில் பெண் என்பவள் அழகின் வடிவம் மட்டுமே. போதையூட்டும் அவள் கண்களும் பரவசப்படுத்தும் அவள் கூந்தலும் மற்ற உணர்வுகளைக் கடந்த பாடுபொருளாக அமைய வல்லவை.

தெளிவான புரிதலும் ரசனையும்

இந்த நுட்பமான வேறுபாட்டை அறிந்துகொண்டு அன்றைய இந்திப் பாடல்களை நாம் ரசிக்கும்பொழுது அதை இயற்றிய கவிஞர்களின் ஆற்றல் நமக்குத் தெளிவாகப் புலப்படும்.

சில எளிய உத்திகள், சான்றுகள், இந்தி மொழி பேசுபவர்கள் அதிகமாக அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இந்தி மற்றும் உருதுச் சொற்கள் மூலம் ஆழமான கவிதை சார்ந்த கருத்தை அந்தக் கவிஞர்கள் வெளிப்படுத்திய விதம் அலாதியானது. இந்த வேறுபாட்டை உணர்ந்துகொண்டு அதனை ரசிக்கும்போது அந்த ரசனையே அலாதியானதாக மாறிவிடுகிறது.

காதல், ஏமாற்றம், சோகம் ஆகிய உணர்வுகளுக்கு மட்டும் இடம் தரும் பாடல்கள் மட்டும் என்று இல்லாமல் நாயகியின் அங்க வர்ணனை, இயற்கையுடன் அவளை இணைத்துப் பாடும் மிகைப்படுத்தப்பட்ட வர்ணனையை உள்ளடக்கிய பாடல்கள் ஆகியவையும் இந்திப் பாடல்களில் அதிகம் உண்டு.

காலப்போக்கில் இந்தித் திரையுலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. பாடல்களும் மாறின. பாடுபொருள்களும் மாறின. சுவாரஸ்யமான இந்தப் பயணம் பல விஷயங்களை நமக்குச் சொல்கின்றன.

இவை அனைத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதே இந்தத் தொடரின் நோக்கம். இந்திப் பாடல்களை எழுதிய கவிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு கள் ஆகியவையும் இந்தத் தொடரில் போகிறபோக்கில் இடம்பெறும்.

வாருங்கள் இந்திப் பாடல்களின் கரையோரம் சென்று அந்தக் கடல் நீரில் கொஞ்சம் கால் நனைப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-6-இந்த-இரவு-ஏன்-பாடுகிறது/article9245949.ece?homepage=true

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 02: நயனம் என்ற தோட்டத்திற்கு மெதுவாக வா

 

 
 
  • ஆராம்
    ஆராம்
  • அல்பேலா
    அல்பேலா

அமரத்துவம் பெற்ற பல இந்திப் படப் பாடல்களின் ஆசிரியர்கள் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள். ஆனால் அந்த மொழி அவர்களின் கவித்திறனை வெளிக்கொணர்வதில் பெரும் பங்கு ஆற்றியது. பஞ்சாபி, உருது, போன்ற இந்தி மொழிக்கு நெருக்கமான நடைமுறைகளை உடைய மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட அந்தக் கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மொழியைத் தாண்டிய அகில இந்திய உணர்வுகளை ரசிகர்களுக்கு அளித்தன.

பஞ்சாபி மொழியைத் தாய்மொழியாக கொண்ட ராஜேந்திர கிஷன் என்ற இந்தித் திரைப்படப் பாடலாசிரியர் அப்படிப்பட்ட விளக்கத்துக்கு மிகவும் பொருத்தமானவர். ராஜேந்திர கிருஷன் என்கிற ராஜேந்திர கிஷன் தற்போதைய பாகிஸ்தான் பிரதேசமாக விளங்கும் டுகல் பகுதியில் பிறந்தவர். தேசப் பிரிவினைக்கு முன்னர் அப்பகுதியில் பேச்சு மொழியாக பஞ்சாபியும் இலக்கிய மொழியாக இந்தியும் கவிதை, நாட்டிய மொழியாக உருதுவும் போற்றப்பட்டன. மத, மொழி வேறுபாடு இல்லாமல் விளங்கிய இச்சூழல் மொழி வரையறை இல்லாத கவி உணர்வு பெருகிட ஏற்றதாய் இருந்தது. கிருஷ்ண ஜெயந்தி போன்ற இந்துப் பண்டிகைகளின்போது, பத்திரிகைகள் உருதுக் கவிதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கின.

பணக்காரப் பாடலாசிரியர்

இந்தப் பின்புலத்தில் வளர்ந்த ராஜேந்திர கிஷன், பள்ளி நாட்களிலிருந்தே இந்தி, உருதுக் கவிதைகள் எழுதியதில் வியப்பில்லை. இந்தச் சங்கம உணர்வு பின்னர் அவர் மும்பை சென்று ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும் பாடலாசிரியராகவும் பரிமளிக்க அடிகோலியது.

ராஜேந்திர கிஷனைப் பற்றி, அதிகம் அறிந்திராத ஆச்சரியமான ஒரு தகவலும் சுவையானது. தமிழ் மொழியை நன்கு அறிந்திருந்த ராஜேந்திர கிஷன் 18 தமிழ்த் திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.வி மெய்யப்ப செட்டியார் தயாரிப்பில் உருவான ‘பெண்’, ‘ரத்தபாசம்’, ‘நல்லபிள்ளை’ ஆகியவை இவற்றில் அடங்கும்.

ஒரு சமயம் இவருக்கு லாட்டரியில் கிடைத்த 46 லட்சம் ரூபாய் ராஜேந்திர கிஷனை அக்காலத்திய மிகப் பணக்காரத் திரைப்படப் பாடலாசிரியராக ஆக்கியது.

ராஜேந்திர கிஷன் எழுதிய சில கவித்துவம் மிக்க திரைப் பாடல்கள், அவை இடம் பெற்ற படங்கள், அதற்கு இசை அமைத்தவர்கள், பாடல்களைப் பாடியவர்கள் மற்றும் அவற்றில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பற்றிப் பார்க்கலாம்.

kishan_3021295a.jpg - ராஜேந்திர கிஷன்

திரைப் பயணம்

1940 வரை சிம்லாவில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த ராஜேந்திர கிஷன் பம்பாய் வந்து திரைத் துறையில் நுழைய முயன்ற பொழுது அவருக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு திரைக்கதை எழுதும் பணி. ‘அமர்கஹானி’, ‘படிபஹன்’ போன்ற சில படங்களுக்குத் திரைக்கதை எழுதிய பின்னர் 1951-ம் ஆண்டு அவருக்குக் கிடைத்த ‘அல்பேலா’, ‘ஆராம்’ ஆகிய பாடல் வாய்ப்புக்கள் அவரை அடுத்த 60 வருடங்களுக்கு இந்தித் திரை உலகின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவராக ஆக்கியது.

1951-ல் வெளிவந்த அல்பேலா (வசீகரன்) என்ற இந்தித் திரைப்படம் இன்றுவரை மும்பை மாஹிம் பகுதியில் உள்ள சித்ரா டாக்கீஸ் அரங்கிலும் பூனே நகரின் பல திரை அரங்குகளிலும் மீண்டும் மீண்டும் திரையிடப்படுகிறது. ‘நல்ல பிள்ளை’ என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு, அதன் இசை அமைப்பாளர் ‘சி.ராமச்சந்திரா’ என்று அழைக்கப்பட்ட சித்தால்கர் ராமச்சந்திரா மற்றும் படத்தின் பாடல்களை எழுதிய ராஜேந்திர கிஷன் ஆகியோரே முக்கியக் காரணமாக விளங்கினர்.

மறக்க முடியாத தாலாட்டு

அல்பேலா படத்திற்காக ராஜேந்திர கிஷன் எழுதிய ஒரு பாடல் ‘லோரி’ என்று இந்தியில் அழைக்கப்படும் தாலாட்டுப் பாடல் வகையைச் சார்ந்தது. குழந்தைகளைத் தூங்கவைக்கத் தாய்மார்கள் பாடும் இந்த வடிவத்தில் கதாநாயகனின் திருமணமாகாத தங்கை பாடுவதாக அமைந்தது. எளிய வரிகளில் அமைந்த ஒரு சிறந்த பாடல் இது.

‘தீரே ஸே ஆஜா ரீ நிந்தியா தீரே ஸே ரீ அக்கியன் மே

சுப்கே நயன் கீ பகியன் மே’ என்று தொடங்கும் இப்பாடலை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.

‘மெதுவாக வா தூக்கமே மெதுவாக, கண்களின் மேல் வா

நயனம் என்ற தோட்டத்திற்கு மெதுவாக வா’ என்று தொடங்கி,

‘தூக்கமே, இனிமையான கனவு என்ற கொடியை எடுத்துக்கொண்டு சென்று, சுகம் தரும் பொழுதுகள் என்ற இடத்தில் படர விடு’ என்று தொடருகிறது. ‘இரவு, நட்சத்திரங்களில் ஒளிந்துகொண்டு சந்திரனைத் தாலாட்டும்பொழுது சிரிப்பது உன் தூக்கத்தில் தெரியும்’ என்று போகும் இப்பாடல் எப்பொழுது கேட்டாலும் ரசிக்கத் தக்கது.

இப்பாடலில் வரும் அக்கியான், பகியன் என்ற சொற்கள் பெரும்பான்மையான இந்திப் பாடல்களில் இடம்பெறும் உருதுச் சொற்கள். ஆங்க் –ஆங்க்கே –கண் –கண்கள் என்ற இந்திச் சொல் இல்லாமல் அக்கியான் –நயன் (நயனம்) என்ற சொற்கள் பாடும்பொழுது இசை மெட்டுக்கு மிக ஏற்றதாக விளங்குகின்றன.

(ரசிப்போம்)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-02-நயனம்-என்ற-தோட்டத்திற்கு-மெதுவாக-வா/article9142179.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 3: புரியவைக்க முடியாத உயிர் மூச்சு

எஸ்.எஸ்.வாசன்

 

 
anaarkaLi_3028888f.jpg
 

காலத்தால் அழிக்க முடியாத சில சரித்திர நிகழ்வுகள் திரைப்படங்களாகும் போது அதன் பாடல்களும் இசையும் மிகச் சிறப்பாக அமைய வேண்டும். அப்படி அமையும்போது அந்த வரலாற்றுச் சம்பவங்கள் மட்டுமின்றி அதன் தொடர்புடைய திரைப் பாடல் வரிகளும் இசையும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று அமரத்துவம் அடைகின்றன.

பேரரசர் அக்பரின் மகன் சலீம் சாமானியப் பெண் அனார்கலி மீது தீராத காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். மத வேறுபாடு பார்க்காமல் தன் குடிமக்களை ஆட்சி செய்த மன்னன் அக்பர் இந்தக் காதலை ஏற்கவில்லை. ராஜேந்திர கிஷன் எழுதிய பாடல் வரிகளும் சி. ராமச்சந்திராவின் இசையுமே இந்தச் சோகக் கதையைச் சிறந்த திரைப்படமாக ஆக்கின.

இப்படத்துக்காக ராஜேந்திர கிஷன் எழுதிய மூன்று பாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

“யே ஜிந்தகி உஸ்ஸீ கீ ஹை ஜோ கிஸ்ஸீ கீ ஹோகயா பியார் மே ஹீ கோகயா” என்று தொடங்கும் லதா மங்கேஷ்கர் பாடிய இனிமையான பாடல், மிகவும் ஆழமான பொருள் உடைய எளிய பாடல். தான் பாடியுள்ள பல ஆயிரக்கணக்கான பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்த 50 பாடல்களில் ஒன்றாக அவரே குறிப்பிட்ட இப்பாடலின் பொருள் இப்படிப் போகிறது:

இந்த வாழ்க்கை இவர்களுடைதாகவே (இவர்களுக்கு மட்டுமே சொந்தமானது) ஆகிவிட்டது

எவர் யாருடைவராக ஆகிவிட்டாரோ (சொந்தமாகிவிட்டாரோ)

காதலில் விழுந்து தொலைந்துவிட்டாரோ

‘ஹோகயா’, ‘கோகயா’ ஆகியவை எதுகை மோனைச் சொற்கள். ‘ஹோகயா’ என்றால் ‘ஆயிற்று’ ‘ நடந்தது’ எனப்பொருள். ‘கோகயா’ என்றால் ‘தொலைந்துவிட்டது’ என்று பொருள். இச்சொற்களை இந்திப் பாடல்களில் அதிகம் கேட்கலாம்.

கீஸ்ஸிக்கி ஆர்ஜூ மே அப்னா தில் பேக்ரார் கர்

யே ஜிந்தகி ஹை பேவஃபா, லூட் பியார் கா மஜா

எவருடைய (மற்றவரின்) வேண்டுகோளின்படியோ காதல் நம்முடைய உள்ளத்தை அமைதியில்லாமல் ஆக்கிக்கொள்(கிறது)

இந்த (காதல்) வாழ்க்கை நம்பிக்கையில்லாதது.

(விரைவாக) காதலின் மகிழ்ச்சியைக் கொள்ளை அடித்துக்கொள்(ள வேண்டும்).

‘பேவஃபா’ என்பதும் மீண்டும் மீண்டும் நாம் இந்திப் படப் பாடல்களில் கேட்கும் சொல். இது பாரசீக மொழியிலிருந்து உருது மொழிக்குள் வந்து, இந்திப் படக் காதல் பாடல்களில் தவறாது இடம்பெறும் சொல்லாகிவிட்டது. வஃபா என்றால் நம்பிக்கை, விசுவாசம். அது இல்லாத நிலை ‘பேவஃபா’. பாரசீக- உருது மொழிகளில் ஒரு வார்த்தையின் முன் ‘பே’ என்ற முன்னொட்டு சேர்ந்தால் அது அந்தச் சொல்லின் எதிர்ப்பதமாக அமையும் (கரார் = அமைதி; பேகரார் = அமைதியின்மை. நியாயம் - அநியாயம் என்பதுபோலத்தான் இதுவும்). மெட்டுக்கு இசைவாகவும் பாடுவதற்கு எளிதாகவும் உள்ளதால், இந்தச் சொற்பிரயோகம் இன்றுவரை தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது

உருது மொழிப் பின்னணியிருந்து வந்த ராஜேந்திர கிஷன் முகலாய மன்னன் அக்பர் தொடர்புடைய ‘அனார்கலி’ திரைப்படத்துக்கு எழுதிய மற்ற பாடல்களையும் உருது மொழிக் கவி வடிவத்தில் எழுதியது பொருத்தமாகவும் போற்றத்தக்கதாகவும் அமைந்துள்ளது.

காதலைப் பற்றி ‘அனார்கலி’ படத்தின் நாயகி பீனாராய் பாடுவதாக ராஜேந்திர கிஷன் எழுதிய ‘முகபத் ஐஸீ தட்கன் ஹை, ஜோ சம்ஜா நஹீன் ஜாத்தா ஹை’ என்று தொடங்கும் ஒரு பாடல் உள்ளது. ‘காதல் இப்படிப்பட்ட உணர்வு, புரியவைக்க முடியாத உயிர் மூச்சு எப்படிப்பட்டதோ அப்படி,’ ‘உள்ளத்தின் தடுமாற்றம் வாய்மொழியில் கொண்டுவரப்பட முடியாதது’ `எவருடைய விருப்பமோ அது சொல்ல முடியாததாக உள்ளது’ என்றெல்லாம் அந்தப் பாடலில் வரும்.

‘அனார்கலி’ படத்துக்காக ராஜேந்திர கிஷன் எழுதிய ‘ஜாக் ஜாக் தர்தே இஷ்க்’ (விழித்தெழு விழித்தெழு காதலே) என்ற மற்றுமொரு பாடல் பின்னர் தெலுங்கு மொழியிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ‘அனார்கலி’ படப் பாடலுக்கு மூலப் பாடலாக அமைந்தது. ஹேமந்த் குமார் லதா மங்கேஷ்கருடன் பாடிய இப்பாடல் இந்துஸ்தானி இசையின் பாகேஸ்வரி ராகத்தில் அமைந்துள்ளது.

காதலின் வீச்சை, தாபத்தை தனக்கே உரிய வசீகரக் குரலில் எழுச்சியுடன் ஹேமந்த் குமார் வெளிப்படுத்தினார். ஹேமந்த் குமார் போன்றே தனித்துவமான குரல் வளம் கொண்ட கண்டசாலா ஜிக்கியுடன் இணைந்து ‘அனார்கலி’யில் பாடினார். ‘ராஜசேகரா என் மேல் மோடி (வசியம்) செய்யலாகுமா’ என்ற கர்னாடக இசையின் இந்தோள ராகத்தின் அப்பாடல் ராஜேந்திர கிஷன் கவி வரிகளுக்கு இணையாக தஞ்சை ராமய்யாதாஸ் எழுதிய புகழ் பெற்ற பாடல்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-3-புரியவைக்க-முடியாத-உயிர்-மூச்சு/article9167631.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மொழி கடந்த ரசனை 4: இசைக் கம்பளத்தை விரித்தது யார்?

 
 
nagin_3035718f.jpg
 

ஹேமந்தா என்று வங்காளத்திலும் ஹேமந்த் குமார் என்று இந்தியா முழுவதும் அழைக்கப்பட்ட ஹேமந்தா முகர்ஜி பன்முகம் கொண்ட திரை வித்தகர். ‘ரவீந்திர சங்கீதம்’ என்ற வங்காள இசை முறைக்கு திரைப்படங்கள் வாயிலாகவும் மெல்லிசை மூலமாகவும் புத்துயிரூட்டியவர், வங்காள, இந்தி மொழிப் படங்களின் சிறந்த பின்னணிப் பாடகர், இசை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர். மராட்டி குஜராத்தி போன்ற படங்களுக்கும் இசை அமைத்தவர்.

மராட்டிய மீனவ மக்கள் பாடும் கோலி இசையில் ‘டோல்காரா டோல்காரா தர்யாச்சி’ என்ற பாடல் தினமும் மும்பையில் பாடப்படுவதை இன்றும் கேட்க முடியும். ஆங்கிலப் படத்திற்கு (சித்தார்த்) இசை அமைக்க அழைக்கப்பட்ட முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற புகழுக்குரியவர். இசைச் சேவைக்காக அமெரிக்க அரசு குடியுரிமை வழங்கிச் சிறப்பித்த முதல் இந்தியர். பாரத ரத்னா, பதம விபூஷண் விருதுகளை அடக்கத்துடன் மறுத்தவர்.

இத்தனை சிறப்புக்கள் பெற்றிருந்த ஹேமந்த் குமாரின் இசையமைப்பிலும் குரலிலும் இந்தித் திரைப்படப் பாடலாசிரியர் ராஜேந்திர கிஷன் எழுதிய சில பாடல்கள் இன்றுவரை ரசிக்கப்படுக்கின்றன. அத்தகைய படங்களில் முதலாவதும் முதன்மையானதுமான படம் ‘நாகின்’ (1954) என்ற சூப்பர் ஹிட் படம். பிரதீப் குமார், வைஜெயந்திமாலா, ஜீவன் நடித்துள்ள இது, நடனத்தையும் இசையையும் அடிப்படையாகக் கொண்ட படம். எதிரிகளாக இருக்கும் இரண்டு மலைவாசிக் குழுக்களைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காதலைச் சொல்லும் படம்.

இப்படத்திற்காக ராஜேந்திர கிஷன் எழுதிய 12 பாடல்களும் மிகச் சிறப்பானவை. ‘மன் டோலே, மேரே தன் டோலே. தில் கா கயா கரார் ரே, யே கோன் பஜாயே பாசுரிய்யா’ என்று தொடங்கும் பாடல் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. வெளிவந்து 62 வருடங்களுக்குப் பிறகும் வட இந்தியத் திருமண ஊர்வலங்களில் தவறாது இசைக்கப்படும் பாடல் இது. லதா மங்கேஷ்கர் பாடிய அப்பாடலுக்கு வைஜந்திமாலா ஆடிய பாம்பு நடனத்திற்கு இணையான நளினத்தை அதற்கு முன்போ பின்போ இந்தியப் படங்களில் இடம்பெற்ற எந்தக் கிராமிய நடனத்திலும் காண இயலாது.

அமரத்துவம் பெற்றுவிட்ட இந்தப் பாடலின் பொருள் இதுதான்:

மனம் கிளர்கிறது, என் உடல் கிளர்கிறது. மன அமைதி போய் விட்டது. (அப்படிப்பட்ட) இந்தக் குழல் இசையை யார் வாசிக்கிறார்?’

வசீகரமான ராகத்தின் இனிமையான கனவுகளை (அந்த இசையில்) காண்கிறேன். நாணம் என்ற முக்காட்டை விலக்கிவிட்டு நான் எங்கு தனியாக (அந்த இசையை நோக்கி) செல்கிறேன்?

ஒவ்வொரு அடியிலும் இத்தகு பொன்னெழில் இசை (கம்பளத்தை) விரித்தது யார்? நாகங்களையே வசப்படுத்திய அந்த மகுடிக்காரன் யார்? எனக்குத் தெரியவில்லையே, அவன் யார்?

‘பீன்’ இசை(Been Music) என்று ஆங்கிலத்திலும் ‘புங்க்ரி சங்கீத்’என்று இந்தியிலும் அறியப்படும் ‘மகுடி இசை’ஏறக்குறைய இந்தியா முழுவதும் ஒரே விதமாக இசைக்கப்படும் தொன்மையான கிராமிய இசை வடிவம். “ஆடு பாம்பே நீ ஆடு பாம்பே” என்ற மெட்டில் தமிழகப் பாம்பாட்டிகள் ஊதும் இசையைப் போலவே இந்தியா முழுவதும் இந்த மகுடி இசை ஒலிக்கப்பட்டுவருகிறது.

ஜனரஞ்சகமான இந்த மெட்டை அடிப்படையாகக் கொண்டு ஹேமந்த் குமார் அமைத்த இப்பாடல், லதா மங்கேஷ்கர் மேற்கொண்ட இசைப் பயணத்தின் ஒரு திருப்பமாகவும் விளங்கியது. அப்போது பிரபலமாக இருந்த ஷம்ஷாத் பேகம் பாடுவது போன்று பாடிவந்த லதா மங்கேஷ்கர், தனக்கென்று ஒரு தனிப் பாணியை ஏற்படுத்திக் கொள்ள இப்பாடல் அடிகோலியது.

ராஜேந்திர கிஷன் இப்படத்திற்காக எழுதிய இன்னமொரு பாடலின் மெட்டைக் கேட்காத தமிழ் இசை ரசிகர்கள் இருப்பது அபூர்வம். ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ’ என்று தொடங்கும் ‘கண்கண்ட தெய்வம்’ படத்தின் அப்பாடல் கின்னஸ் சாதனைக்கு பி.சுசிலாவை இட்டுச் சென்ற பாடல்களில் ஒன்று. ஆதி நாரயண ராவ் இசையில் லலிதா ஆடி நடித்த அப்பாடல், இந்தியில் வைஜெயந்திமாலா நாட்டியமாடிய ‘ஊச்சி ஊச்சி, துனியா கீ திவாரே சய்யான் தோடுக்கே’ என்ற பாடலின் மெட்டில் உருவாக்கப்பட்டது.

உயர்ந்த உயர்ந்த மதில்களை உடைத்துக் கொண்டு ஒடி வந்தேன்
அன்பே உனக்காக, ஓடி வந்தேன் உனக்காக உலகத்தையெல்லாம் உதறிக்கொண்டு...
துணை கிட்டியது, அன்பான இணை கிட்டியது, எனக்குப் புதிய வாழ்க்கை கிட்டியது.
இதை நழுவவிட மாட்டேன்,
இந்த இரவு புதிது, இந்த விஷயம் புதிது, அதன் நட்சத்திரங்களின் ஊர்வலம் புதிது,
இவற்றை நழுவவிட மாட்டேன்

என்ற பொருளில் அமைந்த இப்பாடல் வரிகள் பின்னர் பலரால் எழுதப்பட்ட ஏராளமான பாடல்களில் எடுத்தாளப்பட்டன.

ரசிப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-4-இசைக்-கம்பளத்தை-விரித்தது-யார்/article9193120.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 5: எப்படி நான் வீட்டை விட்டுக் கிளம்புவேன்?

எஸ்.எஸ்.வாசன்

 
 
 
  • bw_2_3043101g.jpg
     
  • bw_3043100g.jpg
     
 

திரைப்படப் பாடல்களை இயற்றும் கவிஞர்கள், திரைக் காட்சிக்கு ஏற்ற விதத்தில் தங்கள் கவித் திறனைத் வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் அவசியம். திரைப்படத்தில் நாயகன், நாயகி, வழிப்போக்கன், துறவி, நகைச்சுவை கதாபாத்திரம் என பல கதாபாத்திரங்களைக் காண்கிறோம். காதல், சோகம், மகிழ்ச்சி, விரக்தி, எள்ளல், வியப்பு, வெறுப்பு பச்சாதாபம் என காட்சிக்குப் பொருத்தமான விதத்தில் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளை, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உரிய மொழியில், மெட்டுக்கு ஏற்ற வரிகளில் கருத்தோவியமாக்கும் ரச வித்தை அறிந்த கவிஞர்கள் காலம் கடந்து நிற்பவர்கள்.

தமிழ் மொழியில் இத்துறையில் கண்ணதாசனுக்கு இணையாக எவரையும் கூறுவது கடினம். ஆனால், எண்ணிக்கையிலும் ‘genre’ என்று கூறப்படும் வகைமை என்ற அம்சத்திலும் இந்தித் திரை இசைக் கவிஞர்களில் பலர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்தத் தகுதிக்கும் பெருமைக்கும் உரியவர்கள்.

தாய்மொழி இந்தி அல்ல

நாம் தற்சமயம் ரசித்துக்கொண்டிருக்கும் ராஜேந்திர கிஷன் அப்படிப்பட்ட ஒருவர். ‘பஹலி ஜலக்’ (முதல் பார்வை) என்ற இந்திப் படத்துக்கு அவர் எழுதிய பாடல்கள் இத்தகு பன்முகச் சுவையுடையவை. திரைக்கதை ஆர். வெங்கட்டாசலம், இயக்கம் எம்.வி. ராமன், கதாநாயகி வைஜெந்திமாலா (தமிழ்), கதாநாயகன் கிஷோர் குமார், பாடகர் ஹேமந்த்குமார் (வங்காளி), பிரான் (அறிமுகம்), தாராசிங், ஓம்பிரகாஷ் (பஞ்சாபி), இசை சி. ராமச்சந்திரா, லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே (மராட்டி) என முழுக்க முழுக்க இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டிராத கலைஞர்கள் பங்குபெற்ற படம் இது. தாய்மொழி பஞ்சாபியாக இருந்தாலும், இந்தி, உருது, மராட்டி, தமிழ் ஆகிய மொழிகளை அறிந்த ராஜேந்திர கிஷன் இப்படத்துக்காக இயற்றிய பாடல்கள் அகில இந்திய ரசிகர்களும் போற்றும்படி அமைந்தன.

ஜமீன் சல் ரஹீ ஹை, ஆஸ்மான் சல் ரஹா ஹை, யே கிஸ்கீ இஷாரே ஜஹான் சல் ரஹா ஹை யே ஹஸ்னா, யே ரோனா, யே ஆஷா, யே நிராஷா, சமஜ் ந ஆயே, யே கியா ஹை தமாஷா, என்று போகும் தத்துவப் பாடலின் பொருள் இப்படி அமைகிறது:

பூமி சுழன்று கொண்டிருக்கிறது

ஆகாயம் நகர்ந்து கொண்டிருக்கிறது

எவருடைய சமிக்ஞையின் பேரில்

இவை இப்படி நடந்துகொண்டிருக்கின்றன?

இந்தச் சிரிப்பு, இந்த அழுகை

இந்த ஆசை, இந்த நிராசை

ஒன்றும் புரியவில்லை

இது என்ன வேடிக்கை?

புதிரான சூழல், புரியாத கதை

பொருத்தமற்ற குறிக்கோள்

போய்ச் சேராத இலக்கு

பிறகு எதற்காக இந்த யாத்திரை?

எவர் சமிக்ஞையில் இப்படி?

இதுபோன்ற ஆழமான கருத்துக்களை, எளிய இந்தி வரிகளில் எழுதினார் ராஜேந்திர கிஷன். இசை அமைப்பில் தலைசிறந்தவரா அல்லது பின்னணிப் பாடல் பாடுவதிலா என அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு இசை அறிவும் நகல் செய்ய முடியாத தாபக் குரல் வளமும் கொண்ட ஹேமந்த் குமார் இந்தப் பாடலைப் பாடினார்.

என் அழகை எப்படி மறைப்பது...

இதற்கு முற்றிலும் மாறாக, மராட்டிய லாவணி நாட்டியப் பாடலையும் ராஜேந்திர கிஷன் இப்படத்துக்காக எழுதினார். வசீகரமான வைஜெயந்திமாலாவின் நாட்டிய முத்திரைகளுடனும் லதாவின் இனிமையான குரலுடனும் கூடிய பாடல் இது.

தேக்(கு) கே மேரா ஃகோரா முக்டா,

லோக் கஹே ஹாய் சாந்த் கா துக்கடா,

கர் ஸே நிக்லூம் கைஸே

என்று தொடங்கும் அப்பாடலின் பொருள்:

என் சிவந்த, அழகான முகத்தைப் பார்த்துவிட்டு,

மக்கள் கூறினார்கள், ‘அதோ சந்திரனின் துக்கடா’

நான் எப்படி வீட்டைவிட்டுக் கிளம்புவேன்?

ஐயோ, என் கருங்கூந்தலைப் பார்த்துவிட்டு

தாசி என்றார்கள்,

என் எழில் கண்களைப் பார்த்துவிட்டு

கூரிய முட்கள் என்றார்கள்,

கன்னத்தில் வைத்த திருஷ்டிப் பொட்டைப்

பார்த்துவிட்டு உள்ளம் கொள்ளை போனதே என்றார்கள்.

எப்படி நான் வீட்டை விட்டுக் கிளம்புவேன்?

என் அழகை எப்படி மறைப்பது,

எப்படி இவர்களைச் சமாளிப்பது

என்ற ரீதியில் போகிறது இந்தப் பாட்டு. கோரா என்ற இந்திச் சொல்லுக்கு ‘சிவந்த’ என்று பொருள். அது ‘லால்’ என்று சொல்லப்படும் ரத்தச் சிவப்பு இல்லை. அழகிய சிவந்த பெண் கோரி. பையன் கோரா.

ராஜேந்திர கிஷன் இப்படத்திற் காக எழுதிய இன்னொரு பாடல், பிரச்சாரப் பாடல் வகையைச் சேர்ந்தது.

சரன்தாஸ் கீ பீனேக்கி ஜோ ஆதத் நஹீன் ஹோத்தி

ஆஜ் மியா பாஹர், பீவீ அந்தர் ந சோத்தி

சரன் தாஸுக்கு மது அருந்தும் குடிக்கும் பழக்கம் இல்லாதிருந்தால், இன்று கணவன் வெளியில், மனைவி உள்ளே எனத் தூங்கும் நிலமை வந்திருக்காது

என்று படத்தின் கதாநாயகன், கிஷோர்குமார் எள்ளல் உணர்வு கொப்பளிக்க, கோமாளித்தனமாக ஆடிப்பாடி நடிக்கும் மதுவிலக்குப் பிரச்சாரப் பாடல் இது. ஒரே படத்தில் மூன்று விதமான தளங்களில் பாடல் எழுதும் ராஜேந்திர கிஷனின் ஆற்றலுக்குச் சான்றாக விளங்குகின்றன இந்தப் பாடல்கள்.

இப்படிச் சூழலுக்கு ஏற்ற வடிவிலும் அதற்கு உரிய கவிதை வரிகளிலும் திரைப் பாடல்கள் தமிழிலும் இந்தியிலும் மட்டுமே அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்தது.

ரசிப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-5-எப்படி-நான்-வீட்டை-விட்டுக்-கிளம்புவேன்/article9215566.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 6: இந்த இரவு ஏன் பாடுகிறது?

எஸ்.எஸ்.வாசன்

 

 
பாய் பாய்
பாய் பாய்
 

தமிழ் மொழியில் மட்டுமின்றி இந்திப் படவுலகத்திலும் ஒரு சிறந்த இயக்குநராக போற்றப்பட்ட ஸ்ரீதர் என்ற சாதனையாளருக்கு அறிமுகமும் அங்கீகாரமும் அளித்த ‘ரத்தபாசம்’(1954) என்ற படம் பின்னர் இந்தியில் ‘பாய் பாய்’(1956) என்ற தலைப்பில் வெளிவந்ததது.

மேடை நாடகமாக வெற்றிபெற்று, தமிழ்த் திரைப்படமாகவும் பெற்ற வெற்றியை இந்தித் திரைப்படத்திலும் எட்டிய இந்தப் படத்துக்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதி ஏ.வி.எம். பேனரில் எம்.வி. ராமன் இயக்கிய (தமிழில் திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீதர்) இந்த இந்திப் படத்தின் ஒரு பாடல் மிக வித்தியாசமான ஒன்றாகப் பெரிதும் பாராட்டப்பட்டது. கதையில் நிகழும் சம்பவத்தின் அற்புதமான விளக்கமாகத் திகழும்படி அந்தப் பாடலை எழுதினார் ராஜேந்திர கிஷன்.

மதன்மோகன் என்ற மாபெரும் இசை அமைப்பாளரின் வெற்றியின் தொடக்கமாக அமைந்த அப்பாடலைப் பாடியவர் கீதா தத் என்ற ஒப்பற்ற பின்னணிப் பாடகி. திரையில் இப்பாடலை பாடி ஆடி நடித்த சியாமளா என்ற எழிலும் ஒயிலும் முகத்தை இயல்பாக நிறைத்த துணை நடிகை ஆகியோரே இப்பாடலை என்றும் மறக்காத இனிய அனுபவமாக ஆக்கினர்.

இளவயது மரணம்

முதலில் கீதா தத். காதல், விரக்தி,சோகம், மகிழ்ச்சி ஆகிய பல தரப்பட்ட உணர்வுகளை அனாசமாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவர். ஜமீன் வீட்டுப் பெண்ணாகிய இவருக்கு உரிய இடத்தையும் அறிமுகத்தையும் பெற முடியாமல் மிகுந்த துன்பங்களுக்கு இடையில் 41 ஆவது வயதில் மரணம் அடைய நேரிட்டது பெரிய சோகம். உலகம் இன்று உயரத்தில் வைத்துக் கொண்டாடும் இயக்குநர் குரு தத் இவரது கணவர்.

song_3051402a.jpg
‘யே, தில் முஜே பத்தா தே’ பாடல் காட்சியில் ஷ்யாமளா

கதையின்படி, ஒழுக்கமான நாயகன் பணி நிமித்தம் பம்பாய்க்கு வருகிறான். அந்த சமயத்தில், தன் மேளாளர் மனைவியின் அழகில் மயங்கி மதியிழக்கிறான். இப்படிப்பட்ட சூழலின் பாடலாக இது அமைந்துள்ளது.

‘யே, தில் முஜே பத்தா தே, து கிஸ் பே ஆ கயா ஹை, வோ கௌன் ஹை ஜொ காபோன் மே சா கயா ஹை,’ என்று தொடங்கும் அந்தப் பாடல் ‘ஹைடோன்’ என்று கூறப்படும் உச்சகட்டக் கவர்ச்சிக் குரலில் கீதா தத் பாடி, அந்தக் காட்சியில் நடித்த சியாமளாவின் வெற்றிக்கு அடிகோலியது பாடல்.

ஏ, உள்ளமே எனக்குச் சொல்

நீ எவர் வசம் ஆகிவிட்டாய்?

அது யார் கனவில் வந்து அமர்ந்துகொண்டது?

இந்த இரவு ஏன் பாடுகிறது இன்ப ராகத்தை?

கண்களில் துக்கம் வந்து பிறகு

ஏன் தொலைவில் சென்றுவிடுகிறது?

சிந்தையில் எதோ லயிப்பு இடம் பெற்றுவிட்டது.

ஏ உள்ளமே கவனமாயிரு

அவர் வந்துவிட்டார் போலிருக்கிறது.

காற்று குளிர்ந்துவிட்டது, சூழலும் பூத்துவிட்டது.

மயக்கும் நிலவு, மயக்கும் விண்மீன்...

ஆஹா மெதுவாக யாரோ பாடும் பாடல் கேட்கிறது.

இப்படிப்பட்ட பொருளில் எழுதப்பட்ட இந்தப் பாடலுக்கு திரையில் நடித்த சியாமளாவின் இயற்பெயர் குர்ஷித் அக்தர். மீனாகுமாரி, மதுபாலா நர்கீஸ், நூதன் போன்ற சிறந்த நடிகைகள் ஆட்சி செய்த அக்கால இந்தித் திரையில், கட்டுடலும் கவர்ச்சி மிக்க குறும்புப் பார்வையும் உடைய இந்த அழகி, ‘ஆர்பார்’ போன்ற படங்களின் கதாநாயகியாகவும் நடித்துப் புகழ்பெற்றுத் திகழ இப்பாடல் வழி வகுத்தது.

DUTT_3051403a.jpg - கீதா தத்

மன்மோகன் இசை அமைத்த வெற்றிப் படங்களில் ஒன்றாகத் திகழ்ந்த இப்படத்தில் உள்ள 12 பாடல்களில் கீதா தத் பாடியது இந்தப் பாடல் மட்டுமே. மேற்கத்திய மெட்டின் சாயலில் இசை அமைக்காதவர் என்ற அறியப்பட்ட மன்மோகன் ‘Morning in Portugal’ என்ற மேற்கத்திய மெட்டில் அமைத்த பாடல் இது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-6-இந்த-இரவு-ஏன்-பாடுகிறது/article9245949.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மொழி கடந்த ரசனை 7: போக்க முடியாத காதல் கறை

 

 
song_3060064f.jpg
 
 
 

கஜல் என்ற கவி வடிவம், அதன் பாடு பொருள், ஒரே மீட்டரில் செதுக்கப்பட்ட எளிய வரிகள், மெல்லிய இசை, அதைப் பாடுபவரின் குரல் இனிமை ஆகிய நான்கு அம்சங்களும் சமமாக இணைந்த சங்கமம். இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே, அரேபிய நாட்டில் வழக்கத்தில் இருந்த இந்தப் பாடல் வடிவின் மையப் பொருள், காதலர்களின் அளவில்லாத (நிறைவேறாத) காதல், ஆற்றாமை சார்ந்தே அமைந்திருக்கும்.

பாரசிக மொழியில் தொடக்கத்தில் எழுதப்பட்ட கஜல்கள் பின்னர் உருது மொழியில் வளம் பெற்று தற்போது இந்தியத் துணைக் கண்டம் முழுவதற்கும் பொதுவான பெரும் ரசனைகளில் ஒன்றாக விளங்குகிறது.

இந்தித் திரைப் பாடல்களில் வெகுவாக இடம்பெற்றுள்ள இந்த இசை வடிவம், தமிழ்த் திரையிசையில் இதுவரை சரியான முறையில் அறிமுகம் ஆகவில்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது (இதன் மாற்று வடிவான ‘கவ்வாலி’யை, ‘பாரடி பெண்ணே கொஞ்சம்’ என்ற பாடல் மூலம் இசையமைப்பாளர் வேதா தமிழ்த் திரைக்கு அறிமுகம் செய்தார்).

‘கிங் ஆஃப் கஜல்’ எனப் புகழப்பட்ட தலத் முகமது, கஜல் பாடல்களின் ஜீவனாகத் திகழும் தனித்தன்மையுடைய மிருதுவான குரலை இயல்பாகவே பெற்றவராக விளங்கினார். ‘Silky voice‘ என்று மக்கள் போற்றிய அந்த பட்டுக் குரலில் பொருள் செறிந்த எளிமையான கஜல் வரிகளை அவர் பாடியபொழுது ரசிகர்கள் மெய் மறந்தனர்.

‘தேக் கபீரா ரோயா’ (பார் கபீரா அழுவதை) என்ற திரைப்படத்துக்காக ராஜேந்திர கிஷன் எழுதி, மன்மோகன் இசை அமைத்த ஒரு கஜல் மேற்கூறிய பரவசத்தை நமக்கு இன்றும் அளிக்கிறது. சிறிய சொற்கள் மூலம் ஆழமான உணர்வைக் காட்டும் அப்பாடலை, அசோக்குமார், கிஷோர் குமார் ஆகியோரின் சகோதரர் அமீத்குமார் பாடியிருக்கிறார். மராட்டிய மாநில சைக்கிள் வீராங்கனையாக இருந்து, பிறகு திரையில் கதாநாயகியாக வலம் வந்து, பின்னாளில் கொடுமைக்காரி மாமியாராகத் திரையில் புகழ் பெற்ற சுபா கோட்டேயை நோக்கிப் பாடப்படும் பாடல் இது.

song_2_3060061a.jpg

“ஹம்ஸே நா ஆயா ந கயா,தும்ஸே ந புலாயா ந கயா, ஃபாஸ்லா பியார் மே மிட்டாயா ந கயா” என்று தொடங்கும் அந்த கஜல் பாடலின் பொருள்:

என்னால் எட்ட இயலவில்லை

உன்னால் மறக்க முடியவில்லை,

(நம்) காதலுக்கு நடுவில் இருந்த இடைவெளியை

உன்னைச் சந்தித்த அந்தப் பொழுது

நினைவில் இருக்கிறது

ஒரு சமிக்ஞையில் இரண்டு கைகள்

நீண்டு பேச்சைத் தொடங்கின

பார்த்துக்கொண்டே இருக்கும்போது

பகல் மறைந்து இரவு நுழைந்த

அந்த நிகழ்வின் பொழுதை

இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை

யாருக்குத் தெரியும்

நாம் சந்தித்ததே பிரிவதற்காகத்தான் என்று

நம் விதி ஏற்பட்டதே கெடுவதற்காகவே என்று

காதல் செடியின் கிளை நடப்பட்டதே

வாடுவதற்காகவே என்று

நினைவுகள் (மறையாமல்) நிலைத்துவிடுகின்றன

காலம் கடந்துவிடுகிறது

பூக்கள் பூத்து, பிறகு கருகிவிடுகின்றன

இங்கு எல்லாமே சென்றுவிடுகின்றன

நெஞ்சின் வலி மட்டும் நின்றுவிடுகிறது

நீ ஏற்படுத்திய காதல் கறையைப் போக்க இயலாமல் நான்...

இப்படிப்பட்ட பொருள் தரும் இப்பாடல் மட்டுமின்றி மன்னா டே பாடிய ‘கோன் ஆயா மேரே மன் கே துவாரே’என்ற அமரத்துவப் பாடல், ‘எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது’ என்ற தமிழ்ப் பாடலை நினைவுபடுத்தும், ‘மேரி பீனா தும் பி ரோயே’ (என் வீணை நீ இல்லாமல் அழுகின்றது) என்ற லதாவின் பாடலும் இப்படத்தின் சிறப்பம்சமாகத் திகழ்கிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-7-போக்க-முடியாத-காதல்-கறை/article9275056.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 8: கால் கொண்டு நடந்த கஜல்கள்

 

 
'அதாலத்' படத்தில் நர்கீஸ்
'அதாலத்' படத்தில் நர்கீஸ்
 
 

திரைப்படப் பாடல்களாகவும் அதற்கு அப்பாலும் கஜல் பாடல்கள் இன்றும் உயிர்ப்புடன் விளங்குவதன் அடிப்படை காரணம் உருது மொழி. உருதுச் சொற்கள் இல்லாமல் எந்த மொழியிலும் ஒரு சிறந்த கஜல் பாடலை எழுத முடியாது (தமிழ் மொழியில் கஜல் எழுதப்படாமல் இருப்பதற்கு இது ஒரு காரணம்). குறிப்பிட்ட மாத்திரை அளவில், ஒரே பொருளும் நேர் எதிரான பொருளும் தரக்கூடிய மென்மையான உச்சரிப்புக் கொண்ட பல ஆயிரக்கணக்கான மோனைச் சொற்கள் அம்மொழியில் கொட்டிக் கிடக்கின்றன. இவை, அன்றாட இந்தி மொழிப் பேச்சு வழக்குடன் எவ்வித மொழிக் கலப்புச் சிக்கலும் இன்றி அழகாகப் பின்னிப் பிணைந்து இந்தித் திரைப் படப் பாடலின் இசைக்கும் காட்சிக்கும் மெருகு கூட்டி மேன்மைப்படுத்துகின்றன.

பள்ளிக்கூடக் காலத்திலிருந்தே உருது மொழியில் மிக்க ஆர்வமும் நல்ல பயிற்சியும் கொண்டிருந்த ராஜேந்திர கிஷன், சிதார் வாத்தியம் எழுப்பும் மெல்லிய சோக உணர்வைத் தன் இசையின் ஜீவனாகக் கொண்ட மன்மோகன் என்ற பாரம்பரிய இசை அமைப்பாளருடன் இணைந்தபோது இந்தித் திரை உலகில் கஜல்கள் கால் கொண்டு நடந்தன.

‘அதாலத்’ (நீதிமன்றம்) என்ற திரைப்படத்திற்காக மன்மோகன் இசையில் ராஜேந்திர கிஷன் எழுதிய மூன்று கஜல் பாடல்கள் இந்தித் திரையின் தலைசிறந்த, 100, அல்ல, 50 அல்ல, 20 கஜல்கள் என்று சலித்து எடுத்தாலும் அப்பட்டியலில் இடம்பெறத் தக்கவை.

‘ஜானாத்தா ஹம்சே தூர், பஹானா பனாலியே,

அப் தும் கித்னா தூர், டிக்கானா பனாலியே,

ருக்சாத் கீ வக்த் தும்னே ஜோ ஆசு ஹமே தியே

உன் ஆசு ஸே ஹம்னே ஃபசானே பனே லியே

தில்கோ மிலே ஜோ தாக் ஜிகர் கோ மிலே ஜோ தர்த்

உன் தலௌத் ஸே ஹம்னே கஜானா பனாலியே’ –

இந்தப் பாடலின் தமிழாக்கம் இப்படி அமையும்:

(என்னைத் தவிக்கவிட்டு) விலகுவதற்காகவே,

வேறு ஏதோ காரணம் உனக்கு அமைந்தது

இப்போது நீ எத்தனை தொலைவில் இருக்கிறாய்

என்னை விட்டு நீங்கும்போது

நீ தந்த கண்ணீர் தேங்கியது எனக்குள் ஒரு சோக கீதமாய்

எண்ணத்தில் படிந்த கறை இதயத்தில் எழுந்த வலி,

இந்தச் செல்வங்களே ஆனது என் சுரங்கமாக

நம்மை விட்டு மறைந்துவிட்ட நமது அன்புக்குரியவர்களை நினைத்துப் பாடும் இப்பாடலில் இழைந்தோடும் சோகம், தன்னிரக்கம், ஆற்றாமை, எள்ளல் கலந்த சினம் ஆகிய எல்லா உணர்வுகளையும் மிகச் சிறப்பாக இந்தச் சிறிய கஜல் வெளிப்படுத்துகிறது.

adalat_3067202a.jpg
அதாலத்

‘உன்கோ யே ஷிக்காயத் ஹை கே ஹம் குச் ந கஹதே ஹை, அப்னி தோ யே ஆதத் ஹை, கே ஹம் குச் ந கஹ்தே’ என்று தொடங்கும் இப்படத்தின் இரண்டாவது கஜல், பொதுவாகத் திரையில் நாம் காண இயலாத ஒரு சூழலில் அமைந்த பாடல். சந்தர்ப்பவசத்தால் பாலியல் தொழிலாளியாகக் குற்றம் சாட்டப்பட்ட நாயகியிடம், நடந்த உண்மையைக் கூறும்படி உடனிருப்போர் வலியுறுத்துவார்கள். அப்போது, கழிவிரக்கத்திலும் விரக்தியிலும் ஆட்பட்ட நாயகி பாடுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

அவர்களுக்கு ஆதங்கம்

நான் ஒன்றும் சொல்லவில்லையே என

எனக்குத்தான் பழக்கமாகிவிட்டதே

இப்படி எதுவும் பேசாமல் இருப்பதற்கு

நிர்ப்பந்திக்கிறது உள்ளம் வாயைத் திற என்று

நிதர்சனம் என்னவோ எதுவும் பேசாமல் இருப்பதற்கு

சொல்லுவதன்றால் அதிகம் உண்டு சொல்லுவதற்கு

பொல்லாத இந்த உலகத்தின் கவலை

நான் எதுவும் சொல்லாமல் இருக்க வேண்டுமே என்று

நான் எதையாவது சொல்லிவிட்டால்

இங்கு எல்லாம் புயலாக மாறிவிடும்

வேறு வழி என்ன இதற்கு?

நான் பேசாமல் இருப்பதுதான்

இந்தத் திரைப்படத்தின் மூன்றாவது கஜலாக ராஜேந்திர கிஷன் எழுதிய பாடல், அக்காலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்களின் வீடுகளில் நடைபெறும், ‘முஜ்ரா’ என்ற அறைக்குள் ஆடும் நாட்டிய வகையைச் சார்ந்தது. முக்கிய விருந்தினராக அங்கு வரும் சீமானுக்குத் தன் உள்ளத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்பாடல் வரிகள் அமைந்திருக்கும்.

மேலும் இரண்டு கஜல்களும் உள்ள இந்தப் படத்தில் ‘சோக நாயகி’ நர்கீஸ், நாயகன் பிரதீப் குமார், வில்லன் பிரான் ஆகியோரின் நடிப்பும் பாரட்டத்தக்க வண்ணம் அமைந்திருந்தது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-8-கால்-கொண்டு-நடந்த-கஜல்கள்/article9300662.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மொழி கடந்த ரசனை 9: அதுவும் ஒரு தீபாவளி

 
diwali_3076971f.jpg
 
 
 

எத்தனை நூறு படங்களுக்கு மத்தியிலும் தமிழர்கள் மனங்களில் கல்வெட்டாய் பதிந்த சில படங்கள் உண்டு. அவற்றில் ‘கல்யாணப் பரிசு’ ஒன்று. கால ஓட்டத்துக்கு மாற்றான கதையும் காலத்தால் அழியாத பாடல் வரிகளும் எப்போதும் சலிக்காத பின்னணிக் குரலும் இனிமையான இசையும் மிகச் சிறந்த இயக்கமும் கொண்டதாக விளங்கியது அந்தப் படம். அதை இயக்கிய ஸ்ரீதரே இந்தியிலும் இயக்கினார். கதை, நடிகர், நடிகை, இசை ஆகிய அனைத்தையும் விட, படத்தின் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் எளிய, எழிலான, மனதைத் தொடும் பாடல் வரிகளின் கருத்தையும் உணர்வையும் இந்திப் படத்தில் கொண்டுவருவது இயக்குநருக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கியது.

‘உன்னைக் கண்டு நான் வாட’ என்ற சோகம் இழைந்தோடும் நினைவேக்கத்தையும், ‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி / காளை ஒருவன்’ என்ற கைகூடாத காதல் தந்த விரக்தி உணர்வையும் பாமர மொழியில் நம் நெஞ்சில் பதித்தார் பட்டுக் கோட்டையார். அவரது கவித்திறனையும் மொழி ஆளுமையையும் இந்தி மொழிப் பாடலுக்குள் கொண்டுவருவது எளிதான முயற்சி அல்ல. இந்த மிகக் கடினமான பரீட்சையில் முழு வெற்றி என்று கூற முடியாவிட்டாலும் இந்தி மறுஆக்கத்தின் பாடல்களை எழுதிய ராஜேந்திர கிஷன், முக்கால் கிணறு தாண்டிவிட்டார் எனச் சொல்லலாம். அந்தப் படம் ‘நஜ்ரானா’ (பரிசு / வெகுமதி).

‘உன்னைக் கண்டு நான் வாட’ என்று ஜெமினி கணேசன் திரையில் பாடிய பட்டுக்கோட்டையின் வரிகள், இந்தியில் ராஜ்கபூரின் சோக நடிப்பில் ராஜேந்திர கிஷன் எழுதிய ‘ ஏக் வோ பீ தீவாலி தீ ஏக யே பீ தீவாலி ஹை’என்ற பாடலில் இவ்வாறு எதிரொலித்தது.

அதுவும் ஒரு தீபாவளி, இதுவும் ஒரு தீபாவளி,

அழிந்துவிட்ட தோட்டம், அழுகையில் தோட்டக்காரன்.

வெளியே தீபங்களின் ஒளி, ஆனால் உள்ளத்தில் இருள்

துன்பங்களைக் கொண்டுவரும் விடியலின் முன் வந்த

(இந்த இரவை) இனிமை தீபாவளி இரவாக எண்ணாதே.

எந்தத் தீபத்தை ஏற்றுவேன், என் கருமை படிந்த

இந்தத் தலையெழுத்தை மாற்ற? எவருடைய இதய தீபமும் இப்படி அணைந்திருக்காது. பயணத்தின் பாதியில் பறிகொடுத்த வழிப்போக்கனானேன்.

தமிழ்ப் படத்தின் வெற்றிக் கதாநாயகன் ஜெமினி கணேசன் கவுரவ வேடத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றி நடித்த இந்த இந்திப் படத்தின் இசை அமைப்பாளர் ரவி என்று இந்தித் திரை உலகிலும் ‘பாம்பே ரவி’ என்று மலையாளத் திரை உலகிலும் புகழ் பெற்ற ரவி ஷங்கர் சர்மா. நம் எம்.எஸ். விஸ்வநாதன் போலவே, முத்தான பல பாடல்களைத் தந்த இந்த முன்னாள் மின்சாரப் பணியாளர், பனி பொழியும் மும்பை வெட்ட வெளி இரவுகளில் படுத்துறங்கியவர்.

‘கல்யாணப் பரிசு’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்’ என்ற பாடலுக்கு இணையான பாடலை இந்தியில் முகமது ரஃபி பாடினார். தமிழ்ப் பாடலைப் பாடிய ஏ.எம். ராஜாவின் மானசீக குருவாகக் கருதப்பட்டவர் ரஃபி. தென்னாட்டிலிருந்து சென்று முதன்முதலாக இந்திப் படங்களில் பின்னணி பாடியவர் என்ற பெருமைக்கு உரிய ராஜா, ‘தென்னாட்டு ரஃபி’ என்று அழைக்கப்பட்டர். சீடனின் பாடலை குரு பாடிப் புகழ் பெற்ற அந்தப் பாடல், ‘ஏக் பியாசா துஜே மைக்கானா தியே ஜாத்தா ஹை, ஜாத்தே ஜாத்தே பீ யே நஜரானா தியே ஜாத்தா ஹை’ எனத் தொடங்குகிறது.

அதன் பொருள்:

வேட்கையுடைய ஒருவன் தரும் மதுக்கூடம் இது.

வெகுமதியாய் போகும் பொழுது தரும் பரிசு இது

காதல் சூதில் வெற்றியோ தோல்வியோ (எது அடைந்தாலும்)

எப்படிக் கழிக்க முடிந்ததோ அப்படிக் கழிந்தது துன்ப இரவு

நிறைவேறாத என் ஆசைகளைச் சுவராகக் கொண்ட படகை

நிம்மதியாக இறக்கிவிட்டாள் துன்பச் சுழல்கள் மிகு கடலில்

பயணம் தொடங்கிவிட்டது. பார்த்து என்ன பயன்

திரும்பி உலகத்தார்க்கு என்ன உரைப்பார்

இதையேதான் எப்பொழுதும்

காதல் சூதில் வெற்றியோ தோல்வியோ (எது அடைந்தாலும்)

எப்படிக் கழிக்க முடிந்ததோ அப்படிக் கழிந்தது துன்ப இரவு.

diwali1_3076972a.jpg

தமிழ்ப் பாடலில்…

ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தாள்

அல்லும் பகல் காத்திருந்து பயிர் வளர்த்தாள்

பாசத்திலே பலனைப் பறிகொடுத்தாள்

கனிந்தும் கனியாத உருவெடுத்தாள்

என்ற மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டையாரின் பட்டு வரிகளை, இந்தி கஜலில் பழம் தின்று கொட்டைபோட்ட ராஜேந்திர கிஷனாலும் முழுமையாகக் கொண்டுவர முடியவில்லை.

நிறைவேறாத (என்) ஆசைகளைச் சுவராகக் கொண்ட படகை

நிம்மதியாக இறக்கிவிட்டாள் துன்பச் சுழல்கள் மிகு கடலில்

பயணம் தொடங்கிவிட்டது பார்த்து என்ன பயன் திரும்ப

என்ற அளவுக்குத்தான் சொல்ல முடிந்தது என்பது மக்கள் கவிஞருக்கு என்றும் புகழ் சேர்க்கும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-9-அதுவும்-ஒரு-தீபாவளி/article9332998.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மொழி கடந்த ரசனை 10: நான் மை இருட்டின் காதலன்

 

 
saathi_3091317f.jpg
 
 
 

‘கவால்’ என்ற அரேபியச் சொல்லுக்கு ‘பேசியது—கூறியது’ என்று பொருள். ‘கவ்வால்’ என்றால் (முகமது நபி, ஸல்லல்லாஹு) பேசியதை மற்றவர்கள் மீண்டும் மீண்டும் கூறுவது. அப்படி அந்த இறை வசனங்களை இசையோடு மொழிவதே கவ்வாலி என்று அழைக்கப்பட்டது. ஸுஃபி என்ற சன்மார்க்கத்தினர் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முகலாய இசை வடிவத்தில் தொடக்கத்தில் முழுக்க முழுக்க இறைப் பாடல்களே இடம் பெற்றிருந்தன. பஞ்சாபி, உருது, மொழி மற்றும் கலாச்சாரத் தாக்கம் இந்தித் திரைப்படங்களின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக விளங்கி வந்தன. இதன் பின்னணியில், இந்தித் திரைப்படப் பாடலாசிரியர்கள் காதல் பிரிவு, ஆற்றாமை உணர்வுகளை மக்கள் மிகவும் ரசிக்கும் கவ்வாலி இசை வடிவிற்கேற்ப எழுதிப் புகழ் பெற்றனர்.

கஜல் வடிவத்தின் மென்மையான மெட்டு, மெதுவான ஓட்டம் இவற்றுக்கு நேரெதிராக ஏழெட்டு பேர் வட்டமாக அமர்ந்து தபேலா, டோலக் ஹார்மோனியம் சகிதம் சற்று இரைச்சலுடன் பாடப்படும் திரைப்பட கவ்வாலியின் பாடுபொருள் நம்முடைய எசப்பாட்டு போன்று ஒரு கருத்தின் இரு பக்கங்களை மாறி மாறி இருவர் காட்டுவதாக அமைந்திருக்கும்.

இசை அமைப்பு, பாடுபவர் குரல், காட்சியமைப்பு ஆகியவற்றின் பொருட்டு ஏராளமான இந்தித் திரைப்பட கவ்வாலிகள் ரசிக்கப்பட்டாலும் ஒரு சில கவ்வாலிகள் மட்டுமே மிக ஆழமான பொருட்செறிவு மிக்கதாக விளங்குகின்றன.

‘ஷாதி’ (திருமணம்) என்ற இந்திப் படத்துக்காக ராஜேந்திர கிஷன் எழுதிய ஒரு கவ்வாலி வெளிப்படுத்தும் உணர்வும் பொருளும் சட்டென எவரும் உள்வாங்கிக்கொள்ள இயலாத நுண்பொருள் மிக்கது என்றே கூற வேண்டும்.

“எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன்

விட்டுவிட்டுச் சென்றானடி, இன்று வேறுபட்டு நின்றானடி”

என்ற கண்ணதாசனின் வரிகளை மேலோட்டமாகப் படிக்கும்போது எட்டாத பொருள், ஒரு புதிய கோணத்தில் ஆழ்ந்து ஆராயும்போது பிடிபடும். தத்துவப் பாடல்களின் தன்னிகரற்ற கவிஞன் கண்ணதாசனின் பாடல்களுக்கு இணையான தத்துவ நுண்பொருளை இந்த கவ்வாலி தருகிறது.

கவ்வாலி பாடலுக்குரிய கவர்ச்சிகரமான குரல் வளம் பெற்ற மன்னா டேயும் முகமது ரஃபியும் பாடியுள்ள இப்பாடலின் தொகையறா:

‘ஜிஸ்கோ ஜல்னேக்கே பர்வா நா ஹோ வோ பர்வானா ஹோ, ஷம்மா கீ ஹுஸ்னேக்கே சுன்த்தா ஹை கே பர்வானா ஹை’. பாடலின் தொடக்கத்தில், ‘லோக் தோ பாத் கோ அஃப்சானா பனாத்தா ஹை, அச்சே அச்சே கோ திவானா பனாத்தாய் ஹை’ என்ற அழகான வரிகள் வருகின்றன.

இந்திப் படப் பாடல்களில் நாம் அடிக்கடி கேட்கும், ‘ஷம்மா’ ‘பர்வானா’ ஆகிய இரண்டு சொற்களைப் பற்றிய ஒரு விளக்கம் இப்பாடலின் ஆழ்பொருளைப் புரிந்துகொள்ள உதவியாய் இருக்கும். ஷம்மா என்றால் மெழுகுவர்த்தி. பர்வானா என்றால் விட்டில் பூச்சி. இந்த இரண்டு சொற்களும் காதல் என்ற மெழுகுவர்த்தியில் எரிந்து போகும் காதலனை / காதலியைக் குறிக்கும் விதம் இந்தித் திரைப் பாடல்களில் கையாளப்படுகிறது.

ராஜேந்திர கிஷனின் இப்பாடலின் பொருள் இது:

(தொகையறா)

எது எரிந்துபோவதைப் பற்றி

பொருட்படுத்தவில்லையோ

அதுவே விட்டில் பூச்சி

மெழுகுவர்த்தியின் அழகில்

மயங்கும் பைத்தியம்.

விளைவைப் பற்றி எச்சரிக்கை

இல்லாத பொய்மை.

(பாடல்)

உலகம் வெறும் பேச்சைப் பெரிய கவிதை ஆக்கிவிடுகிறது. நல்ல நல்ல மனிதர்களைப் பைத்தியமாக்கிவிடுகிறது.(மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்த) எழில் மேடை ஒரு நாள் மெழுகுவர்த்தியைக் கேட்டது: ‘உனக்கு அன்பான உள்ளத்தை இறைவன் தரவில்லையா, உன்னைக் கட்டி ஆலிங்கனம் செய்பவர்களையே நீ எரித்துவிடுகிறாய் விரும்புகிறவர்களின் சிரிப்பை போக்கிவிடுகிறாய்’

மெழுகுவர்த்தி தன் தலை மீது அடித்து சத்தியம் செய்வதுபோல ஜுவாலையால் செய்து சொல்லியது: ‘நான் ஒன்றும் விட்டில் பூச்சியை எரிக்கவில்லை. இந்த உலகம் வெறும் பேச்சைப் பெரிய கவிதை ஆக்குகிறது. விட்டில் பூச்சி என் மேல் உயிரை வைத்திருக்கிறது. பழக்க தோஷத்தால் காதலில் போராடுகிறது மகிழ்ச்சி ததும்பும் மன்றமோ, வெற்றிடமோ நான் எங்கெங்கு போகிறேனோ அங்கெல்லாம் இந்தப் பைத்தியம் வந்துவிடுகிறது. ஆயிரம் தடவை, ஆம் ஆயிரம் தடவை புரியவைத்துவிட்டேன். நான் நெருப்பு, என்னுடன் விளையாடாதே; காதல் விஷயத்தில் நான் ஒரு பாம்பு (என).’

விட்டில் பூச்சிக்குத் தெரிந்தது இது ஒன்றே ஒன்றுதான் மெழுகுவர்த்தியின் அழகு நெருப்பு அதை விரும்பும் தனது காதலும் ஒரு நெருப்பு.

(எழில் மேடை) விட்டில் பூச்சியிடம் கேட்டது: ‘வெகுளியாய் ஏன் இப்படி எரிந்து போகிறாய்? அழிவு தரும் பாதையில் ஏன் நடக்கிறாய்? மெழுகுவர்த்தி இதை உணர்த்தவில்லையா? அதன் தீச்சுவாலை உன் பார்வையில் படவில்லையா? வாழ்க்கை மீது உனக்கு ஏன் வெறுப்பு, எத்தகைய வெறுப்பு, ஏன் உனக்கு மெழுகுவர்த்தி மீது இப்படிப்பட்ட பெரும் காதல்?’

(விட்டில் பூச்சி சொல்லியது)

எனக்கு மெழுகுவர்த்தி மீது காதலா? ஒருபோதும் இல்லை. அப்படிப்பட்ட கேவலமான ஆசை எனக்கு எப்போதும் இல்லை. அதனுடைய அழகா? ஒரு கண்ணால்கூடப் பார்க்கத் தகுதியற்றது அது. இந்த மெழுகுவர்த்தி எரிவதைப் பார்த்தால் என் வயிறு எரிகிறது. என்னுடைய காதலியை என்னிடமிருந்து இது பிரிக்கிறது. என்னுடைய எதிரியான இந்த மெழுகுவர்த்தி இரவு முழுவதும் எரிந்து நான் காதலிக்கும் மை இருட்டின் எதிரியாக விளங்குகிறது.

மெழுகுவர்த்தி எனக்கு ஒரு அபாயம் இல்லை. நான் இரவின் காதலன். என் பேச்சை நம்புங்கள். நிரூபிக்க வேண்டுமா, சரி, மெழுகுவர்த்தி பகலில் எரியும்பொழுது அதன் பக்கத்தில்கூட நான் வருவதில்லை. அது எரிவதைப் பற்றி அலட்டிக்கொள்வதும் இல்லை.

நான் மை இருட்டின் காதலன். உலகம் வெறும் பேச்சைப் பெரும் கவிதை ஆக்குகிறது. நல்ல மனிதர்களைப் பைத்தியமாக்குகிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-10-நான்-மை-இருட்டின்-காதலன்/article9382461.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 11: காதல் தடத்தின் சாம்பலைக் கொண்டுவருவேன்

 

 
moazhi_3097853f.jpg
 
 
 

ஒரு திரைப்படத்தின் வெற்றி பல அம்சங்களைச் சார்ந்து நிற்கிறது. புகழ் பெற்ற நடிகர் - நடிகை, இசை, இயக்கம், பாடல்கள் ஆகிய இவையெல்லாம் அந்தப் படத்தின் கதை ரசிகர்களிடம் ஏற்படுத்தும் நீண்ட தாக்கத்தின் மூலமே வலிமை பெறுகின்றன. அவ்விதத் தாக்கம் வாழ்க்கையில் நடப்பதை அப்படியே சித்தரிப்பதால் மட்டும் ஏற்படுவதில்லை. பிரச்சினைகளின் தீர்வாக, மனிதர்கள் ‘விரும்புவதை’ திரைப்படம் காட்ட வேண்டுமேயன்றி உண்மையில் ‘நிகழ்வதை’ அல்ல. இந்த சூட்சுமத்தைக் கைக்கொள்ளத் தவறிய படங்கள், மிகச் சிறப்பான பாடல்கள், இசை நடிப்பு ஆகிய அனைத்தையும் தாண்டித் தோல்வி அடைகின்றன. ஷராபி (குடிகாரன்) என்ற படமும் அதன் பாடல்களும் இதற்குச் சான்று.

குடிப் பழக்கம் இருந்தும் பணக்காரப் பெண்ணின் காதலைப் பெற்ற நாயகன், அப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து, அனைவரின் ஒப்புதலுடனும் காதலியைத் திருமணம் செய்துகொள்ளும் தருணத்தில், தகுந்த காரணம் எதுவும் இன்றி மறுபடியும் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி, எல்லாவற்றையும் இழக்கிறான்.

வித்தியாசமான, ஆனால் யதார்த்தம் நிறைந்த இப்படம் தோல்வி அடைந்ததால், படத்தின் விரக்தி உணர்வை வெளிப்படுத்தும் செறிவான கவிதை வரிகளும், அதை மிகச் சிறப்பாகப் பாடியுள்ள முகம்மது ரஃபியின் மேன்மையும் பிரபலம் அடையாமல் போய்விட்டன.

வேகமான தனது வசன உச்சரிப்பாலும் இடது காலை வளைத்து வளைத்து நடக்கும் வசீகரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற தேவ் ஆனந்த் குடிகாரனாக நடித்த இப்படத்தின் இரண்டு சோகப் பாடல்களும் ‘குடி’யைப் போற்றும் ஒரு மகிழ்ச்சிப் பாடலும் கவனிக்கத் தக்கவை. ராஜேந்திர கிஷன் எழுதிய 41 படங்களின் 287 பாடல்களுக்கு மதன் மோகன் இசை அமைத்திருந்தாலும் அவற்றில் தேவ் ஆனந்த் நடித்த படங்கள் மூன்று மட்டுமே. அந்த மூன்றும் தோல்வியைத் தழுவின.

புறக்கணித்த காதலியை நினைத்து ஏங்கும் விதமாக அமைந்துள்ள இப்பாடலை, வழக்கத்துக்கு மாறான மெதுவான கதியில் பாடியிருக்கும் முகம்மது ரஃபியின் குரல் உருக்கமும் கவித்துவமுமான பல உருதுச் சொல்லாடைகளுடன் கூடிய ராஜேந்திர கிஷனின் பாடல் வரிகளும் தனித்துவம் மிக்க சிறப்பான பாடலாக்கின.

“முஜே லே சலோ ஃபிர் வோ கலி மே, ஜஹான் பஹலே - பஹலே யே தில் லட்காயா” என்று தொடங்கும் இப்பாடலின் பொருள்:

என்னை அழைத்துச் செல்லுங்கள்

மறுபடியும் அந்த இடத்திற்கு

எங்கு முதன் முதலில் இந்த உள்ளம்

பறிபோனதோ, அந்த உலகம்

அந்த என் காதலின் உலகம்

எங்கிருந்து நான் அமைதியின்மையைக்

கொண்டுவந்தேனோ, அந்த இடத்திற்கு

என்னை இட்டுச் செல்லுங்கள்.

எங்கு என் இனிய வாழ்க்கை

உறங்கிக்கொண்டிருக்கிறதோ

எங்கு என் இளமையை

விட்டுவிட்டு வந்தேனோ அங்கு இன்றும்கூட

ஒரு புதிய தோரணம்போல

என் காதலின் சரணாகதி

அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்

எங்கு அவளின் காலடி படுகிறதோ

அங்குதான் என் இன்பமும் துன்பமும் உள்ளன.

அழிந்து போன என் காதல் தடத்தின்

சாம்பலை நான் கொண்டுவருவேன்.

அங்கு ஒரு வண்ணத் திரைக்குப்

பின்னால் அவளின் எழில் கன்னம் இருக்கும்.

அந்த அழகைக் கண்களில் இருத்திக்கொள்வேன்

அது சிறிதாவது உன் உள்ளத்தின்

வலியின் மருந்தாக அமையும்.

என்னை அழைத்துச் செல்லுங்கள்

மறுபடியும் அந்த இடத்திற்கு...

இந்தப் பாடலில் உள்ள ‘சாஜ்டோ’ (தோரணம், குவியம்) ரஹ்குஜார் (பாதை, போக்கு, தடம்) நக்ஷ்-இ-கதம் (காலடி) ருக்காசர், (கன்னம்) இலாஜ்-இ-தில்-இ ஜார், (உள்ளத்தின் வலியின் மருந்து) போன்ற பலர் அறிந்திராத உருது கவித்துவச் சொற்றொடர்கள் இப்பாடலை இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் முழுவதுமாக ரசிக்க முடியாமல் செய்துவிட்டன.

இதற்கு மாறாக எளிய வரிகளில் அமைந்த பாடல், “கபி ந கபி கஹீன் ந கஹீன் கோயி ந கோயி தோ ஆயேகா” என்று தொடங்குகிறது. அதன் பொருள்:

எப்பொழுதாவது, எங்காவது

எவராவது வருவார்கள்

அவர்களில் ஒருவராக என்னை ஏற்று

இதயத்தில் இடம் தருவார்கள்.

எத்தனை நாட்களாகத் தனிமையில் அலைகிறேன்

இந்த மதுசாலாவில்

போதையில் அமர்கிறேன்

எவராவது வருவார் என்

தாகத்தைத் தீர்க்க.

யாரும் என் உள்ளத்தைப் பார்க்கவில்லை

என் துன்பத்தைக் கேட்கவில்லை.

என் பெயரைக் கேட்டே

தறுதலை என்கின்றனர்.

இதுவரை இப்படியே இனிமேலாவது

எவராவது என் அருகில் வந்து

என் கண்ணீரைத் துடைப்பார்.

**

இப்படத்தின் மூன்றாவது பாடல், குடியைப் போற்றுவது போல, வஞ்சப் புகழ்ச்சி பாணியில் அமைந்துள்ளது “சாவன் மஹீனா மே ஏக் ஆக் ஸி ஸீனே மே” என்று தொடங்கும் இந்தப் பாடலின் பொருள்:

யோசிக்கிறேன் குடிப்பதா வேண்டாமா

கிழிந்த மனதைத் தைப்பதா வேண்டாமா

என்ன செய்வேன், வாழ்வதா வேண்டாமா

ஒரு மழை மாதத்தில் உள்ளத்தில்

நெருப்பு எழுவதால் குடிக்கிறேன் கொஞ்சம்

அதனால் வாழ்கிறேன்

ரொம்ப காலமாக அறிவேன்

இந்தப் போத்தலும் தாகமும்

சிறிது குடித்தால்

அது நம்மையே குடித்துவிடும்

நீண்ட வாழ்க்கையைவிட நாம் விரும்பும்

ஒரு பொழுது நன்று (என) கொஞ்சம் குடித்து

பிறகு இந்த உலகத் துன்பத்தை

நினைத்து அஞ்சி

மேலும் குடித்துவிடுகிறேன்.

பருவ கால அழைப்பால் மதுசாலைக்கு வருகிறேன்.

அழகை ரசிக்க எண்ணி அமர்கிறேன்.

பிடிவாதம் பிடிக்கும் காதலியைக் காண

வெட்கப்பட்டுக் குடித்துவிடுகிறேன் கொஞ்சம்

அதனால் வாழ்கிறேன்.

கவித்துவமும் வாழ்க்கை அனுபவமும் இணைந்த இந்தக் கவித்துவமான வரிகளைக் கொண்ட பாடல்கள் வெளியானபோது அதிகம் பேரைச் சென்றடையவில்லை என்பது இந்தக் கதாநாயகனின் வாழ்க்கையைப் போலவே சோகமானதுதான்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-12-காதல்-தடத்தின்-சாம்பலைக்-கொண்டுவருவேன்/article9406191.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மொழி கடந்த ரசனை 12: கண்ணீர் வீணாகப் போயிருக்காது

எஸ்.எஸ்.வாசன்

 

 
jahanara_3104213f.jpg
 
 
 

நவரச உணர்வுகளில், மற்ற உணர்வுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சோக உணர்வுக்கு உண்டு. மகிழ்ச்சி, கோபம், வெறுப்பு ஆகிய உணர்வுகள் பொது வெளியில் வெளிப்படும்போது அவற்றுடன் நம் மனது சட்டென்று தொடர்புகொண்டு நம்மை ஆட்கொள்ளாது. ஆனால் சோகம் மட்டும் எவருக்கு எப்போது, எங்கு ஏற்பட்டாலும், அது நம் உள்ளத்தில் மழையாய்ப் பெய்து கண்களைச் சிறிதாவது ஈரமாக்குகிறது. இதன் பொருட்டே காதலை இழந்து பிரிவின் துன்பத்தில் உழலும் திரைப் பாத்திரங்கள் பாடுவதாக ஒலிக்கும் பாடல் வரிகள், நாம் அடையும் சோகத்தின் வடிகாலாக நின்று ஆசுவாசப்படுத்துகின்றன.

தடையை மீறிய காதல்

‘ஜஹான் ஆரா’ என்ற இந்திப் படத்தின் மூன்று சோகப் பாடல்களும் இதே ரகம்தான். உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலைத் தன் அன்பு மனைவி மும்தாஜுக்காகச் கட்டிய முகலாய மன்னன் ஷாஜஹானின் செல்ல மகள்தான் ஜஹான் ஆரா. பெண்கள் ஆண்களைச் சந்திக்க இருந்த தடையையும் மீறி, அரச வாரிசு அழகி இளவரசி ஜஹான் ஆராவும் மிர்ஜா சையத் செங்கிஜி என்ற சாமானியனும் சந்தித்துக்கொள்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. திருமணம் செய்துகொள்ளத் தீர்மானிக்கிறார்கள்.

இறக்கும் தறுவாயில் இருந்த அரசி மும்தாஜ், தன் அன்பு மகள் ஜஹான் ஆராவை அருகில் அழைத்து அவள் தந்தையும், தன் கணவனுமான ஷாஜஹானை இறுதிவரை பார்த்துக்கொள்ள வேண்டும், அவரை விட்டு எங்கும் செல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொள்கிறாள். தந்தையை விட்டு எங்கும் செல்லக் கூடாது என்ற சத்தியக் கட்டுப்பாட்டால், கூடாத காதலாக ஆகிவிட்டதை எண்ணி ஏங்கி, அவள் காதலன் பாடுவதாக அமைந்துள்ளன இப்பாடல்கள்.

மீண்டும் மீண்டும்

“ஃபிர் வோஹி ஷாம், வோஹி கம், தில் கோ ஸம்ஜானே தேரி யாத் சலீ ஆயி ஹை” என்று தொடங்கும் அந்தப் பாடல், தலத் முகமதுவின் சோக தொனிக்கு ஏற்ற மதன் மோகனின் துயரப் பின்னணி இசையுடன் கூடிய பாடல். பலரும் மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் பாடல் இது.

பொருள்:

மீண்டும் அந்த மாலைப் பொழுது

அதே துக்கம் அதே தனிமை

உள்ளத்தை உலுக்கும் உன் நினைவு வந்துள்ளது.

மீண்டும் உன்னைப் பற்றிய கற்பனைகள்

நிழலாக விரியும்

கடந்து சென்ற அந்தத் தருணங்கள்

பஞ்சுப் பொதியாய்த் திரும்பி வரும்

ஏனெனில், இறுதியில் இருக்கிறதே

உன் உறுதிமொழி

உன் தரிசனம் கிடைக்குமோ இல்லையோ

பாதியில் நின்றுவிட்ட பதிவுகள்

நிறைவு பெறுமோ இல்லையோ

என் இலக்கு உன் இலக்கிலிருந்து

பிரிந்துவிட்டது.

இயலாமையைக் காட்டும் வரிகள்

நமது அன்புக்குரியவர்களின் கண்ணீரைத் துடைக்க இயலாத சமயங்களில் நாம் உணரும் இயலாமை உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்தும் இப்படத்தின் ஒரு பாடல், ‘தேரி ஆங்கோங்கி ஆசு பீ ஜாவும் ஐஸ்ஸி மேரி தக்தீர் கஹான்’ என்ற உருக்கமான வரிகளுடன் தொடங்குகிறது. இதன் பொருள்:

உன் கண்களிலிருந்து வழியும்

கண்ணீரைக் குடிக்கும் பாக்கியம்

எனக்கு எங்கே கிடைக்கப்போகிறது

உன் துக்கத்திற்கு ஆறுதல் சொல்லும்

பாக்கியம் எங்கே கிடைக்கப் போகிறது

ஐயோ ஒருவேளை நாம்

ஒன்றாகக் கூடி அழ முடிந்தால்

இந்தத் துக்கம் கொஞ்சம் லேசாகியிருக்கும்

நம் கண்ணீர் இத்தனை வீணாகப் போயிருக்காது

இதுபோன்ற கறைகள் எளிதாக

நீங்குவதாக இருந்தால்

இத்தனை துன்பங்கள் இருந்திருக்காது

தனிமையின் துக்கம் இதுவரை

எவ்வளவு எனக்குத் தெரியுமோ

இன்னும் அவ்வளவு உள்ளது

இந்த நெடுந்துயரப் பாதையில்

இந்த நிலையைச் சரியாக்கும் பாக்கியம்

எனக்கு எங்கே கிடைக்கப்போகிறது

வினோதமான துக்கம்

தலத் முகமது வெளிப்படுத்தும் மென்மையான சோக உணர்வை மிக அழுத்தமாக எடுத்துக் காட்டும் திறன் முகமது ரஃபியின் கூடுதல் சிறப்பு. அவரின் குரல் வளமும் உச்சரிப்பும் இதன் அடிப்படை.

‘கீஸ்ஸி கே யாத் மே துனியா கோ ஹை புலாயா ஹுவே’ என்று தொடங்கும் அந்த பாடலின் பொருள்:

எவருடைய நினைவுகளிலோ

இந்த உலகம் அழைக்கப்பட்டுள்ளது

நம் எண்ணங்களின் சகாப்தம்

முடிவுக்கு வந்துவிட்டது

அன்பினால் ஏற்படும் துக்கம் வினோதமானது

வெளிப்புறம் அமைதி, எனினும் உள்ளத்தில் காயம்

ஆயிரம் திரைச்சீலைகள், ஆயிரம் கோபுரங்கள்,

ஆயிரம் மதில்கள் ஆகியவை மூலம்

அவள் என் பார்வையில் நிறைந்துள்ளாள்

இந்த உலகத்தை என் முன்

விட்டில் பூச்சியாகச் செய்வதற்கு

எவருடைய அழகின் ஒரு கீற்று போதுமானதோ

அவளுடைய நினைவுகளின் பொருட்டு

இந்த உலகம் அழைக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-12-கண்ணீர்-வீணாகப்-போயிருக்காது/article9428957.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மொழி கடந்த ரசனை 14: தேவதைகளின் உலகத்திலிருந்து...

 

 
 
 
 
rasanai_3107475f.jpg
 
 
 

குறிப்பிட்ட ஒரு திரைப்படத்துக் கான வரவேற்பானது, திரைக்கதை, இசை, நடிப்பு ஆகியவற்றைக் கடந்து, அந்தத் திரைப்படம் வெளியாகும் காலம், பண்பாட்டுச் சூழல், அப்போதைய சமூக நிலை போன்றவற்றையும் சார்ந்தது. பெண்ணியச் சிந்தனையை மையப்படுத்தித் தமிழில் எடுக்கப்பட்டு வெற்றியடைந்த ‘நானும் ஒரு பெண்’ என்ற படம் இந்திக்குப் போனது. தலைப்பு, செட், தயாரிப்பாளர், இயக்குநர், முக்கிய நடிகர்கள், பாடல் வரிகள், மெட்டுக்கள் ஆகிய அனைத்தும் அப்படியே தக்க வைக்கப்பட்டு அதே காலகட்டத்தில் இந்தியில் ‘மே பீ லடுக்கி ஹூம்’ (நானும் பெண்தான்) என்னும் படமாக மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அது அங்கு வெற்றியடையவில்லை.

பாலிவுட்டில் கண்ணதாசன்

ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்திப் படம் தோல்வியடைந்தாலும், அதுவரை இந்தி உலகம் நன்றாக அறியாத, கண்ணதாசனின் கவித்திறனையும் இந்தியாவின் தலை சிறந்த பின்னணிப் பாடகர்களின் ஒருவரான பி.பி ஸ்ரீனிவாஸின் குரல் இனிமையையும், எஸ்.வி. ரெங்காராவின் குணசித்திர நடிப்பாற்றலையும் இந்தியா முழுவதற்கும் இந்தப் படம் எடுத்துக்காட்டியது.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 18 படங்களுக்குக் கதாசிரியராக விளங்கிய, தமிழ் மொழி அறிந்த ராஜேந்திர கிஷன், இந்திப் படத்தின் பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் விளங்கினார். கண்ணதாசன் எழுதி ஆர். சுதர்சனம் இசை அமைத்த ‘கண்ணா கருமை நிறக் கண்ணா’ என்ற காலத்தால் அழியாத பாடலையும் ‘பூப்போல பூப்போல பிறக்கும்’ என்ற மென்மை உணர்வு மிக்க பாடலையும் கருத்தும் உணர்வும் சிதையாமல் இந்தி மொழிக்குள் கொண்டுவருவதில் வெற்றியடைந்தார்.

தன் நெருங்கிய நண்பரான ஏ.ஏஸ்.பி. அய்யர் என்பவரின் வற்புறுத்தலின் பேரில் ‘பொத்து’ என்ற வங்காள நாடகத்தைப் பார்த்த ஏவி மெய்யப்பன், அதன் கதையைத் தழுவி, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் எடுத்த படம் இது.

கருமை என் தவறா?

நாயகி எத்தனை நற்குணங்கள் உடையவளாக இருந்தும் அவளது கறுப்பு நிறத்தால் படும் அவதிகளையும் சொல்லும் படம். எவரும் தன்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாத வேதனையில் விஜயகுமாரி, கருமை நிறக் கண்ணன் எனப் போற்றப்படும் கிருஷ்ண பகவானைப் பார்த்து, ‘கறுப்பாக இருக்கும் உன்னை எல்லோரும் பார்க்க விரும்பும்போது கறுப்பாக இருக்கும் என்னை மட்டும் எவரும் கண் கொண்டு காண ஏன் விரும்பவில்லை?’ என்று கேட்பார். கதைச் சூழலை ஒட்டி எழுந்தாலும் அதையும் கடந்து நிற்கும் கண்ணதாசனின் இந்தச் சிந்தனையை ராஜேந்திர கிஷன் அச்சு பிசகாமல் மொழி மாற்றம் செய்துள்ளார்.

actress_3107476a.jpg

“கிருஷ்ணா ஓ காலி கிருஷ்ணா துனே ஏ க்யா கியா கைஸே பதலா லியே” என்ற, தமிழ்ப் பாடலின் அதே மீட்டரில் அமைந்த இந்திப் பாடலின் பொருள்:

கிருஷ்ணனே ஓ கிருஷ்ணனே

நீ என்ன செய்து விட்டாய்,

இந்த நிறத்தை எனக்குத் தந்து.

எப்படி என்னை மாற்றிவிட்டாய்

எல்லோரும் கருமை நிறக்

கடவுளைப் பூஜிக்கிறார்கள்

ஆனால் கருமை நிற மனிதர்களை

வசை பாடுகிறார்கள்

புல்லாங்குழலின் இசையில் நீ லயித்திரு

யாரோ அநீதியில் ஆட்படுவது

பற்றி உனக்கென்னை?

என் கருமையான முகத்தை

மறைக்க முடியவில்லை

என் உள்ளம் எத்தனை வெள்ளை

என்பதைக் காட்ட முடியவில்லை.

எனக்கு நல்ல உள்ளத்தைத் தந்ததாய்

ஆனால் அதை உணர்ந்துகொள்ளும்

நல்ல பார்வையை

ஏன் உலகத்திற்குத் தரவில்லை?

இரண்டு குரல்கள்

இந்தியில் இந்தப் பாடலை மிகச் சிறப்பாகப் பாடிய லதா மங்கேஷ்கரைவிடத் தமிழ்ப் பாடலைப் பாடிய பி.சுசீலாவின் குரல் அதிக உணர்வுபூர்வமாக இருந்தது. கருமை நிறத்தின் தாக்கம் தென்னிந்தியாவில் அதிகம் என்பதுதான் இதற்குக் காரணமா எனத் தெரியவில்லை.

‘பூப்போல, பூப்போல பிறக்கும்’ என்று தொடங்கும் பாடல் அதே மெட்டில் ‘சந்தா ஸே ஹோகா வோ பியாரா, பூலோ ஸே ஹோகா வோ நியாரா’ என்று இந்தி அவதாரம் எடுத்தது. தமிழில் டி.எம்.சவுந்தர்ராஜனும் பி.சிசீலாவும் பாடிய இந்தப் பாடலை இந்தியில் பி.பி.நிவாஸும் லதா மங்கேஷ்கரும் பாடினார்கள். லதாவுக்கு இணையான பி.பி. ஸ்ரீனிவாஸின் தெளிவான இந்தி உச்சரிப்பு அனைவரையும் வியக்கவைத்தது. தலத் முகமது, முகமது ரஃபி ஆகியோரின் மென்மையான குரல் வளமை இந்திப் பட உலகினரை மயங்கவைத்தது. இந்தப் பாடலின் பொருள்:

சந்திரனை விட எழிலாக இருக்கும்

அது மலர்களை விட மென்மையாக இருக்கும்

ஜம் ஜம்மென்று குதித்து விளையாடும்

நம்முடைய அந்தக் குட்டிக் குழந்தை

மலரும் மொட்டு போல இருக்கும்

அதன் மழலை கிளியின் குரல் போல

அப்பா அம்மா அப்பா என நாம்

அந்த நிலாவைக் கட்டிக்கொள்வோம்

சிப்பிக்குள் உள்ள முத்து போல மறைந்துள்ள

அந்தக் குழந்தை தேவதைகளின் உலகத்திலிருந்து

வந்துகொண்டிருக்கும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-13-தேவதைகளின்-உலகத்திலிருந்து/article9440275.ece

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மொழி கடந்த ரசனை 15: விழிகளின் தாகத்தைத் தீர்ப்பாயா?

RASANAI_3110438f.jpg
 
 
 

தமிழ்த் திரைப்படங்களுடன் ஒப்பிட்டால், இந்தி மொழியில் எடுக்கப்பட்ட முழு நீள நகைச்சுவைப் படங்கள் மிகவும் சொற்பம். அதிலும் வெற்றி அடைந்த நகைச்சுவைப் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழ்த் திரை உலகைப்போன்று, அங்கு உடல் மொழி, வசன உச்சரிப்பு, ஏற்ற இறக்கத் தொனிகள் ஆகிய எல்லா அம்சங்களையும் ஒருங்கிணைத்து நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் திறன் பெற்ற நகைச்சுவை நடிகர்கள் அதிகம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். நகைச்சுவைப் படங்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கும் நடிகர்கள், இசை, பாடல் வரிகள், பின்னணிப் பாடகர்கள் ஆகிய அம்சங்கள் ஒப்பீட்டளவில் தமிழ்த் திரையில் மற்ற எல்லா மொழித் திரைப்படங்களையும்விடச் சிறப்பான இடத்தை வகித்து வருகின்றன.

மறுஆக்க எண்ணிக்கையில் சாதனை

இந்தப் பொதுவிதிக்கு விதிவிலக்காகத் திகழ்கிறது ‘படோசன்’ (அடுத்த வீட்டுப் பெண்) என்ற இந்திப் படம். நாகேஷுக்கு இணையான நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஒரே இந்தி நகைச்சுவை நடிகர் எனக் கருதப்படும் அந்த அற்புத நடிகர் மெஹமூத். இவருடன் நமது ஆச்சி மனோரமா இணைந்து நடித்த ‘குன்வாரா பாப்’ என்ற இந்திப் படத்திலும் இவரது அபாரமான நடிப்பைக் காணலாம். அப்படிப்பட்ட மெஹமூத் தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்த இந்தத் திரைப்படம், அவருக்கு மட்டுமின்றி இந்தித் திரை உலகுக்கும் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது.

எல்லா மொழிகளுக்கும் எப்பொழுதும் பொருத்தமாக இருக்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தின் மூல வடிவம் 1952-ல் எழுதப்பட்ட ‘பாஷர் பரி’ என்ற வங்காளக் கதை. அதே வருடம், அதே பெயரில், 300 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள வங்காளி நகைச்சுவை நடிகர் பானு முகர்ஜியை மைய்யபடுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பின்னர் ‘பக்க இண்டி அம்மாயி’ என்ற ஒரே பெயரில் இரு முறை தெலுங்கிலும் (1953, 1981) ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்ற பெயரில் தமிழிலும் (1960) ‘படோசன்’ என்று இந்தியிலும் (1969) ‘பக்கட மன ஹுடுகி’ என்ற பெயரில் கன்னடத்திலும் வெளிவந்து அனைத்து மொழிகளிலும் வெற்றி அடைந்தது.

ஒரு தமிழ் பாட்டுவாத்தியார்

‘படோசன்’ இந்திப் படத்தில் ‘மதராசி’ என்று அப்போது அழைக்கப்பட்ட தமிழ் பேசும் பாட்டு வாத்தியார் வேடத்தில், மெஹமூத் வெளிப்படுத்திய சற்று மிகையான, ஆனால் அருமையான நடிப்பு, தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவெங்கும் மிகவும் அதிகமாக ரசிக்கப்பட்டது. வட இந்திய நகரங்களில் கர்னாடக இசை கற்றுக் கொடுக்கும் தமிழ்ப் பாட்டு வாத்தியார்களை அசலாகச் சித்தரித்துக் காட்டிய நடிப்பு அது.

வட இந்தியாவில் வாழ்ந்த தமிழர்கள் பலர், இந்தி மொழியைச் சரியாகப் பேசுவதில் மட்டுமின்றி, அம்மொழியை எழுதுவதிலும் படிப்பதிலும்கூட இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவருக்கு இணையாக, சில சமயம் மேலாகவும் திகழ்ந்தார்கள். மெஹமூதின் நடிப்பு தங்களை அவமானப்படுத்தியதாக அவர்கள் கருதினார்கள்.

எனினும், கதைச் சூழலையும் படத்தின் ஜீவனாக விளங்கிய நகைச்சுவை உணர்வையும் கணக்கில் கொண்டு படத்தைப் பார்த்தபோது அந்த எதிர்ப்புணர்வு மெல்ல மறைந்துவிட்டது.

வெற்றியின் பின்னணியில்...

‘படோசன்’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தன. அதுவரை பொது வெளியில் அப்பட்டமாகக் காட்டப்படாத தென்னிந்திய மக்களின் இந்தி உச்சரிப்பை நக்கலடிப்பது அதன் ஒரு அம்சம் மட்டுமே. இன்று அந்தப் படத்தைப் பார்த்தாலும், ‘ஆஹா என்ன அழகு’ என்று வியக்க வைக்கும் கதா நாயகி சாய்ராபானுவின் (கிட்டத்தட்ட நம்மூர் லைலாவைப் போன்ற குழந்தைத்தனமான, கன்னத்தில் குழி விழும்) எழில் வதனம், முரட்டுக் கதாபாத்திரங்களின் முதல் தேர்வு எனக் கருதப்பட்ட சுனில் தத் காட்டிய அசட்டுத்தனமான நகைச்சுவை, இவை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் கிஷோர்குமாரின் பன்முக ஆற்றல் ஆகியவை குறிப்பிட வேண்டியவை.

அடுத்த வீட்டுப் பெண் தமிழ்ப் படத்தில் தங்கவேல் நடித்திருந்த நண்பனின் வேடத்தில் நடித்த கிஷோர் குமார், நடிப்பு மட்டுமின்றி நாயகனுக்காகப் பாடப்பட்ட அனைத்துப் பாடல்களையும் பாடியிருந்தார். கர்னாடக, இந்துஸ்தானி இசையைத் திரையில் பாடுவதில் நிகரற்று விளங்கிய மன்னா டேக்கு இணையாக அவருடன் சேர்ந்து கிஷோர் பாடிய ‘ஏக் சதுர நாரி ஹோ சிங்கார்’ என்ற பாடல் காலத்தைக் கடந்து நின்றது. தொடக்கத்தில் கிஷோருடன் சேர்ந்து பாடத் தயங்கிய மன்னா டே இப்பாடலுக்குப் பிறகு, “குரு” என்று அவரை அன்புடன் அழைக்கத் தொடங்கினார்.

எள்ளல் நகைச்சுவை

அந்தப் பாடல் காட்சியின்படி தமிழ்ப் பாட்டு வாத்தியார் மெகமூதுக்காகப் பின்னணி பாடிய மன்னா டே, நடு நடுவில் ‘அய்யோ, என்னாய்யா’ ‘போடா’ ‘கியாஜி’ என்றெல்லாம் சொல்ல வேண்டும். தமிழ், மலையாளம் எல்லாம் ஓரளவுக்கு நன்கு அறிந்த மன்னா டே இதற்கு இணங்கவில்லை. அதனால் மெகமூதுவே அந்தச் சொற்களைத் தனது பிரத்தியேக எள்ளல் குரலில் பேசிப் படத்தின் சுவையை அதிகப்படுத்தினார்.

காமெடிப் படங்களின் பாடல்கள் பிரபலம் அடைந்தாலும் அவற்றின் கவித்துவம் மக்களால் அதிகம் உணரப்படுவதில்லை. இப்படத்திற்காக ராஜேந்திர கிஷன் எழுதிய எல்லாப் பாடல்களும் கருத்துச் செறிவானவை. குறிப்பாக, ‘மேரே சாம்னே வாலி கிடிக்கிமே ஏக் சாந்த் கீ துக்கடா ரஹத்தா ஹை’ என்ற கிஷோர்குமாரின் பாட்டு, ‘ வாடாத புஷ்பமோ’ என்ற அடுத்த வீட்டுப் பெண் படத்தின் பி.பி னிவாஸின் இனிமையான பாடலுக்கு நிகரானது.

இந்திப் பாடலின் பொருள்:

என்னுடைய எதிர்வீட்டு ஜன்னலில்

நிலாவின் ஒரு அங்கம் இருக்கிறது.

சிக்கல் என்னவென்றால் அது

என்னோடு கொஞ்சம் சிடுசிடுப்பைக் காட்டுகிறது.

என்றைக்கு அவளைப் பார்த்தேனோ

அன்றிலிருந்து என் வீட்டில் விளக்கு ஏற்ற

நான் மறந்துவிட்டேன்.

மனம் தடுமாறி அமர்ந்துவிட்டேன்.

அங்கும் இங்கும் செல்வதையே மறந்துவிட்டேன்.

இப்போழுது, எப்போதும் அவள் எழில் வதனமே

என் கண்களில் நிற்கிறது.

மழைகூட வந்து நின்றுவிட்டது.

மேகங்களும் இடித்துப் பொழிந்துவிட்டன.

ஆனால் அவளின் ஒரு பார்வைக்காக

இந்த அழகு ராஜா தவித்துவிட்டேன்.

எப்பொழுது என் விழிகளின்

தாகத்தைத் தீர்ப்பாள் என்ற துக்கத்தில்

இரவு பகல் காத்திருக்கிறேன்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-15-விழிகளின்-தாகத்தைத்-தீர்ப்பாயா/article9449553.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பதிவு நவீனன்.

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 16: அதை ஏன் சொல்வதில்லை?

 

 
rasanai_3114005f.jpg
 
 

‘கிஸ்மத்’ என்ற துருக்கிய மூலச் சொல்லுக்கு ‘விதி - தலைவிதி’ என்று பொருள். பெர்சிய மொழியிலிருந்து உருது மொழிக்குச் சென்று பின்னர் இந்தித் திரை மொழியில் வெகுவாக பயன்படுத்தப்படும் இந்தச் சொல்லின் ‘கிஸ்மத்’ மிகச் சிறப்பானது. ‘கிஸ்மத்’ என்ற ஒரே பெயரில் 1943,56, 69, 80, 95,98, 2004 ஆகிய வருடங்களில் ஏழு இந்தித் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மற்ற எந்தப் பெயரிலும் எந்த மொழியிலும் இவ்விதம் எப்போதும் நடப்பது சாத்தியமில்லை. இது தவிர இதே பெயரில் மூன்று இந்தித் தொலைக்காட்சித் தொடர்களும் மூன்று நேபாளி படங்களும் எடுக்கப்பட்டு அவை எல்லாமே வெற்றியடைந்தன. அது மட்டுமின்றி, கிஸ்மத் என்ற சொல்லை முன்னோட்டாக அல்லது பின்னொட் டாகக் கொண்டு ‘கிஸ்மத் கா சித்தாரா’ (விதி நட்சத்திரம்) ‘கிஸ்மத் கா கேல்’ (விதியின் விளையாட்டு) ‘ஹமாரி கிஸ்மத்’(நம் விதி) கிஸ்மத்வாலா (அதிஷ்ட்டகாரன்) போன்ற படங்களும் தோல்வியடைந்ததில்லை.

ஒரு சீண்டல் பாடல்

இந்தத் திரை நம்பிக்கையை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியது அர்ஜுன் ஹின்கோரனி எடுத்த மூன்று கிஸ்மத் படங்கள். அவற்றில் முதலாவதாக வந்த ‘கஹானி கிஸ்மத் கீ’(விதியின் கதை). இதுவும் வெற்றிப் படம். தர்மேந்திரா ரேகா ஜோடி சேர்ந்து நடித்த இந்தப் படத்தின் ‘அரே ரஃப்த்தா, ரஃப்த்தா தேக்கோ, ஆங்க் மேரி லடி ஹை, ஆங்க் மேரி லடி ஹை வோ பாஸ் மேரி கடி ஹை’ என்ற ‘டீசர் சாங்’ வகையைச் சார்ந்த சீண்டல் பாட்டு, இன்றளவும் மும்பை மக்கள் கேட்டு மகிழும் வேகமான மெட்டுடைய வித்தியாசமான பாடல்.

பல தரப்பட்ட மொழி பேசும் மும்பை மக்களை அடையாளப்படுத்தி அவர்களை விளிக்கும், பாய்யியோ பஹணோ (உ.பி., ம.பி., பிஹார் வட இந்தியர்கள்) மகன் பாய், சகன் பாய் (குஜராத்தி மார்வாடி) ரகோபா தோன்டுபா (மராட்டிய சாமன்யர்கள்) கர்னல் சிங் ஜர்னல் சிங் (பஞ்சாபி, சீக்கியர்) போன்ற சொற்களுடன் தொடங்கும் இந்தப் பாடல் மும்பை தெருக்களில் படமாக்கப்பட்டது.

ரேகாவின் ‘கேட் வாக்’, தர்மேந்திராவின் எளிய சாமானியனுக்கான உடல் மொழி யோடு, இந்தப் பாடலை இவரைத் தவிர வேறு எவரும் இப்படிப் பாடியிருக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லக்கூடிய பல குரல் மன்னன் கிஷோர்குமாரின் கேலியான தொனி ஆகியவை வெகுவாகக் கவர்ந்தன. கல்யாண் ஆனந்த்ஜியின் இசை அமைப்புக்கேற்ற ராஜேந்திர கிஷனின் பாடல் வரிகள் கொண்ட இப்பாடல் ‘அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு, என் நெஞ்சு குலுங்குதடி’என்ற தமிழ் சீண்டல் பாட்டை நமக்கு நினைவுபடுத்தும். இப்பாடலின் பொருள்:

மெல்ல மெல்லப் பாருங்கள்

என் விழிகளில் விழுந்தவள்

என் எதிரில் எழுந்து நிற்கிறாள்.

எப்பொழுது என்னை அறிந்தாளோ

அப்போதிலிருந்து என்னிடம் மயங்குகிறாள்

நானும் ரகசியமாக அவளை விரும்புகிறேன்.

இவள் என் மனதில் அமர்ந்துவிட்டாள்

நன்றாக வசமாகிவிட்டாள்.

(இப்படி தர்மேந்திரா பாடி ஆடும் பொழுது, ரேகா, ‘யே கியா கஹரஹே ஹோ மை னேத்தோ ஐய்ஸீ நஹீன் கஹாத்தா’ -அட இது என்ன இப்படிச் சொல்லுகிறாய், நான் ஒன்றும் அப்படி ஏதும் சொல்லவில்லை என்று சிணுங்கி வெளிப்படுத்தும் கண் அசைவும் உடல் மொழியும் இந்திப் பட ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொன்டன.)

எனக்குக் காதல் கற்றுக் கொடுத்தது யார்

காதல் கற்றுத்தந்து இவள்தான்

என்னைப் பைத்தியமாக்கியதும் இவளே.

இது காதலின் மகத்துவம். மதுவின் தாக்கம் அல்ல.

நடக்க வேண்டியதே நடந்தது

எவரின் பிழையும் இல்லை.

கரங்களில் சிக்கிக்கொண்டாள் கருத்தில் வசமாகிவிட்டாள்.

அட முதலில் வம்பு செய்தது இவள்தான்.

வம்பு செய்து என்னை வசப்படுத்தியது இவள்தான்.

இவளுக்கு என் மேல் விருப்பம்.

எனக்கு இவள் மேல் விருப்பம்.

உள்ளத்தோடு உள்ளம் கலந்துவிட்டது.

உரையாடல் இங்கு நின்றுவிட்டது.

இதுதான் உண்மை.

இப்படி முடியும் இந்தப் பாடலின் இறுதியில், ‘பைத்தியம் பிடித்துவிட்டதா உனக்கு? நான் ஒன்றும் அப்படிச் சொல்லவில்லை’ என்று பொய்யாகச் சினம் கொள்ளும் ரேகாவை, ‘வெட்கப்படாதே வெட்கப்படாதே’ என்று குழைந்து வசீகரிக்கும் குரலால் மராட்டிய மீனவப் பாட்டு மெட்டில் பாடியிருக்கிறார் கிஷோர் குமார்.

kismat_3114006a.jpg

மதுவின் ‘மகத்துவ’த்தைக் கூறுவது போன்ற இப்படத்தின் இன்னொரு பாடல் இங்கு குறிப்பிடத்தகுந்தது. தமிழ்த் திரையில் கண்ணதாசனைத் தவிர எவரும் எழுதத் துணியாத, எந்த நாயகனும் நடிக்கத் தயங்குகிற பாடல் அது. ‘துனியா முஜ்ஸே கஹ்த்தி ஹை பீனா சோட் தே, யே கியோன் நஹீன் கஹத்தி ஹை ஜாலிம், ஜீனா சோட் தே’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் பொருள்:

இந்த உலகம் என்னிடம் கூறுகிறது

குடியை விட்டுவிடு என்று.

அது என்னிடம் ஏன் கூறுவதில்லை

வாழ்வதை விட்டுவிடு என்று.

என்ன புரியும் இந்த உலகத்திற்கு

என்ன தெரியும் இந்த உலகத்திற்கு.

எத்தனை கடினம் இந்த வாழ்க்கைப் பயணம்.

இறப்பின் கண் ஒவ்வொரு அசைவிலும் தெரிகிறது.

துக்கத்தைக் கண்டு அஞ்சி நான் குடிக்காவிட்டால்

நண்பா சொல் நான் எப்படி உயிர்வாழ்வது?

இந்த உலகம் என்னிடம் கூறுகிறது

குடியை விட்டுவிடு என்று.

அது என்னிடம் ஏன் கூறுவதில்லை

வாழ்வதை விட்டுவிடு என்று.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-16-அதை-ஏன்-சொல்வதில்லை/article9462757.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மொழி கடந்த ரசனை 17: பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுத்த கவிஞர்

 
rasanai_3120215f.jpg
 
 
 

மொழிகளைக் கடந்த ரசனையாக இதுவரை நாம் கண்ட பாடல்கள் யாவும் ராஜேந்திர கிஷன் ஆக்கத்தில் அமைந்தவை. படித்து ரசிக்கும் வண்ணம் பல சிறந்த கவிஞர்களின் பட்டியலைக் கொண்ட இந்தித் திரை உலகில் கவி ராஜா மெஹதி அலிகான் எழுதிய சில பாடல்களை இனி நாம் பார்க்கலாம்.

பாடல்களின் ராஜா

நமது பட்டுக்கோட்டையார் போன்று, இளமையிலேயே இயற்கை எய்திவிட்ட மெஹதி தன் முன்னொட்டாக அமைந்த ‘ராஜா’என்ற அடைமொழிக்கு ஏற்பத் திரை இசைப் பாடல்களின் ராஜாவாகத் திகழ்ந்தவர். 38 வயதில் முடிவுக்கு வந்த அவரின் வாழ்க்கை இந்தித் திரை இசை ரசிகர்களின் மனதில் என்றென்றும் நீங்காத இனிய ராகமாக ஒலித்துக்கொண்டிருக்கும். தற்போது பாகிஸ்தான் பகுதியாக விளங்கும் கர்மாபாத் என்ற ஊரில் 1928-ல் பிறந்த இந்த ஜமீன்தார் வீட்டுப் பிள்ளை, தனது நான்காவது வயதில் தந்தையை இழந்தார். சிறந்த உருதுக் கவிஞர்களாகத் திகழ்ந்த அவருடைய தாய் ஹெபே சாஹேபா மற்றும் குடும்ப நண்பர் ஆலாமா ஆகியோர் மெஹதியின் உருதுக் கவி ஆற்றலை ஊக்குவித்தனர்.

ali_3120216a.jpg

18 வயதில் பாடலாசிரியர்

மெஹதியின் உற்ற தோழனாக இருந்த புகழ்பெற்ற உருது எழுத்தாளர் சாதத் ஹசன் மன்ட்டோவின் ஆதரவில் இந்தித் திரை உலகில் வசனகர்த்தாவாக நுழைந்த மெஹதிக்கு, ஃபிலிமிஸ்த்தான் ஸ்டுடியோ உரிமையாளர் முகர்ஜி, தனது ‘தோ பாயி’ (இரு சகோதரர்கள்) என்ற படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பைத் தந்தார்.

1946-ம் ஆண்டு வெளியான அப்படத்தில் தனது முதல் பாடலை எழுதியபோது மெஹதியின் வயது 18. அடுத்த 20 வருடங்களில் மெஹதி எழுதிய திரை இசைப் பாடல்கள் மட்டும் 380. இது தவிர, தன் நண்பனின் நினைவில், ‘ஜன்னத் ஸே மன்ட்டோ கா ஏக் கத்’ (சொர்க்கத்திலிருந்து மன்ட்டோவின் கடிதம்) என்ற கவிதை உட்பட ஏராளமான உருது ‘திவான்’ (ஒரு வித செய்யுள் நடையில் அமைந்த) சிறுகதைகள் ஆகியவற்றையும் படைத்துவிட்டு 1966 -ம் ஆண்டு மறைந்தார் மெஹதி அலி கான்.

இந்தித் திரைப் பாடல்களில் நாயகன், நாயகியை ‘ஆப்’ (நீங்கள்) என்று விளித்துப் பாடும் பாணியை முதன்முதலில் அறிமுகப்படுத்தி மெஹதி எழுதிய பல பாடல்கள் மூலம் அவர் பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுத்த பெரிய மனிதராக ரசிகர் மனதில் இடம் பெற்றார். இப்படி ‘ஆப்’ என்று தொடங்கும் அவரது அனைத்துப் பாடல்களும் இன்றும் கேட்டு ரசிக்கக்கூடியவை.

குறைந்த வயதில் நிறைந்த சாதனை

இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மன் இசையில் எழுதத் தொடங்கிய மெஹதி, ஏறக்குறைய அப்போதிருந்த அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். கேம்சந்த் பிரகாஷ், எஸ். என் திரிபாதி, ரோஷன், இவரது நெருங்கிய நண்பராக விளங்கிய மதன் மோகன், சி.ராமச்சந்திரா, ஓ.பி நய்யார், லக்ஷ்மிகாந்த் பியாரிலால் போன்ற அதிகம் அறிந்தவர்கள் மட்டுமின்றி, வெளி உலகத்துக்கு அதிகம் தெரியாத, இக்பால் குரோஷி, பாபுல், ராபின் பானர்ஜி, ஆர்.டி. முகர்ஜி போன்றவர்கள் இசையமைத்த திரைப்படங்களுக்கும் தன் பாடல் வரிகளால் புகழ் சேர்த்தார்.

எனினும், மதன்மோகன் இசை அமைப்பில் லதா மங்கேஷ்கர் பாடிய மெஹதியின் சில பாடல் வரிகள், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைப்பில் பி.சுசிலா பாடிய கண்ணதாசனின் சில பாடல் வரிகள் போன்று இனி எக்காலத்திலும் உருவாக முடியாது என்று சொன்னால் அது மிகையல்ல. லதா மங்கேஷ்கர் பாடியுள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களில் மிகச் சிறந்தவை என அவரே தெரிவு செய்த 10 பாடல்களில் ஐந்து மெஹதி அலி கான் எழுதியவை என்பது குறிப்பிடத் தகுந்தது.

குறிப்பாக, ‘வோ கோன் தி’ (யார் நீ என்ற பெயரில் தமிழில் வந்த படம்) என்ற படத்தில், ‘லக் ஜா கலே கீ ஃபிர் யே ஹஸ்ஸின் ராத்’ (‘பொன் மேனி தழுவாமலே’ என்ற கண்ணதாசனின் பொருத்தமான மொழிபெயர்ப்புப் பாடல்) ‘நயனா பர்ஸே ரிம் ஜிம்’ (நானே வருவேன் அங்கும் இங்கும்) ஆகிய பாடல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கேட்டு மட்டுமே உணர முடியும்.

பெயரில் மட்டும் ராஜாவாக இல்லாமல் தனது கொள்கையிலும் அரசனாகத் திகழ்ந்த மெஹதி, பொருளற்ற, மலிவான கருத்துடைய பாடல் எதையும் எழுதவில்லை. அப்படிப்பட்ட பாடல் வாய்ப்பை அறவே மறுத்த மெஹதி, தனது பாடல் ஒவ்வொன்றும், காதல், கோபம், தாபம், நகைச்சுவை ஆகிய மனித உணர்வுகள் மென்மையாக, கவித்துமாக, காலத்தால் அழியாத கற்சிலையாக விளங்கும்படிச் செய்தார் என ஒரு நேர்காணலில் கூறினார் இந்தித் திரைப்பட நடிகர் மெஹமூத்.

மெஹதி அலி கானிடம் கார் டிரைவராக ஒரு சமயம் வேலை பார்த்த நல்வாய்ப்பைப் பெற்றதாக அந்த நேர்காணலில் கூறிய மெஹமூத், மெஹதியின் கார் ஓட்டத்தை மட்டுமின்றி அவரின் கருத்து ஓட்டத்தையும் அறிந்த கலைஞராக இருந்தார் போலும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-17-பெண்களை-மதிக்கக்-கற்றுக்கொடுத்த-கவிஞர்/article9490105.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மொழி கடந்த ரசனை 18: அந்தஸ்தைத் துறக்க வைத்த காதல்!

 

 
 
dutt_3123796f.jpg
 
 
 

திரையுலகு ஏற்படுத்தும் திருப்பங்கள் சுவையானவை. பாடலாசிரியர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் ஆகிய மூன்று வெவ்வேறு துறையைச் சார்ந்தவர்களும் ஒரே திரைப்படத்தின் மூலம் புகழ் அடையும் சாதனையைச் சில திருப்பங்கள் நிகழ்த்துகின்றன.

1947-ல் வெளிவந்த ‘தோ பாயி’ (இரு சகோதரர்கள்) என்ற திரைப்படம் மெஹதி அலி கான் என்ற பாடலாசிரியரையும் எஸ்.டி. பர்மன் என்ற இசையமைப்பாளரையும் கீதா தத் என்ற பின்னணிப் பாடகியையும் இந்தித் திரை உலகம் என்றென்றும் மறக்க இயலாத மாபெரும் நட்சத்திரங்களாக ஆக்கியது.

தன் தாத்தாவின் பெயரையே தன் ஊராகக் கொண்ட மெஹதி அலி கான், திரிபுரா அரச பரம்பரையில் பிறந்த எஸ்.டி. பர்மன், செல்வச் செழிப்பு மிக்க ஜமீன் குடும்ப வாரிசான கீதா தத் ஆகிய மூவரும் சாதாரண திரை ரசிகர்களின் ஆதரவு என்ற நேர்கோட்டில் இணைந்த மூன்று புள்ளிகளாகப் புகழடைந்த அந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் வியப்பூட்டும் சிறப்புடையவை.

இப்படத்தின் ‘மேரா சுந்தர் சப்னா பீத் கயா’ என்று தொடங்கும் பாடல் ஆற்றாமை உணர்வை வெளிப்படுத்துவது. இந்த உணர்வை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திப் பாடிய கீதா தத் 15 வயதுப் பெண். பாடலை எழுதிய மெஹதி அலி 19 வயது இளைஞன். இசையமைத்த எஸ்.டி. பர்மன் கிராமிய இசை அறிந்த அரச வாரிசு. இப்படி நகைமுரண்களால் பின்னப்பட்ட அந்தப் பாடலின் பொருள்:

என் அழகிய கனவுகள் அழிந்துவிட்டன.

நான் காதலில் அனைத்தையும் தோற்றுவிட்டேன்.

மோசமான இந்தச் சமூகம் வென்றுவிட்டது.

ஏன் கருமை மேகங்கள் படர்ந்து

கருகிய மொட்டுக்களாகச் சிரிக்கின்றன.

என் காதல் கதை முடிந்துவிட்டது.

என் ஜீவனின் இசை நின்றுவிட்டது.

ஓ, என்னை விட்டுச் செல்லும் காதலனே

என் இதயத்தை சிதைத்துவிட்டுச் செல்பவனே

என் விழிகள் நான் விடும் கண்ணீரில் மூழ்கிவிட்டன.

மகிழும் காலம் மறைந்துவிட்டது.

என் எல்லா இரவுகளும் தீபாவளி இரவுகளாக இருந்தன.

நான் என் காதலனின் எல்லாமுமாக இருந்திருக்க வேண்டியவள்.

இப்பொழுது அந்த வாழ்வு

அழிந்துவிட்டதே அழிந்துவிட்டதே

என் ஜீவன் என்னை விட்டு அகன்றுவிட்டதே.

பாடலின் பொருளுக்கு முற்றிலும் பொருத்தமில்லாத அந்த மூவரின் பங்களிப்பு, குறிப்பாக கீதா தத்தின் சோகம் இழைந்தோடும் வயோதிகக் குரல், நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையே உள்ள திரை அம்சங்களைத் தெளிவாக எடுத்துக்காட்டியது.

dobhai_3123797a.jpg

‘தோ பாய்’ படத்தின் 8 பாடல்களில் 5 பாடல்கள் சோகம் நிறைந்த பாடல்கள். இவற்றைப் பாடியவர் கீதா தத். இப்படத்தில் இவர் பாடிய இன்னெரு புகழ் பெற்ற பாடல், ‘யாத் கரோகி, யாத் கரோகி, ஏக் தின் ஹம்கோ யாத் கரோகி’. விட்டுப் பிரிந்த காதலனை மட்டுமின்றி எப்போதும் மீண்டும் பார்க்க முடியாமல் நம்மை விட்டுப் பிரிந்த நம் பாச உறவுகள் நம்மை நினைத்து ஏங்குவது போன்ற உணர்வைச் சிறப்பாக எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்துள்ளது. இப்பாடலின் பொருள்:

நினைத்துக்கொள்வாய், நினைத்துக்கொள்வாய்

என்னை ஒரு நாள் நினைத்துகொள்வாய்

மனம் தடுமாறுவாய் மன்றாடுவாய் என்னைக் காண

மாரிக்கால இரவு வரும்பொழுது

மறந்துபோன விஷயங்கள் மறுபடி விழித்தெழும்

இதயம் வலிக்கும் அந்த நினைவுகள்

இனிமேல் நிரந்தரமாகும்படி நினைத்துக்கொள்வாய்

எவரை மனதில் எப்பொழுதும் இருத்தியிருந்தாயோ

அவரைத் தேடுவாய் வனத்திலும் நந்தவனத்திலும்

அழித்துக்கொள்வாய் உன் சுகமனைத்தையும்

உள்ளத்தில் இருத்தி, பிறகு உதறிவிட்டாய்

உன் இல்லத்தையே உடைத்துக்கொண்டுவிட்டாய்

எப்படி, எப்படி அதை நீ மீண்டும் எழுப்புவாய்?

இழந்துவிட்ட என்னை மீண்டும்

அடைய முடியாது

என் இடத்திற்கு நீ வரவும் இயலாது

நினைத்துக்கொள்வாய், நினைத்துக்கொள்வாய்

என்னை ஒரு நாள் நினைத்துக்கொள்வாய்

மனம் தடுமாறுவாய் மன்றாடுவாய் என்னைக் காண.

அந்தஸ்தைத் துறக்க வைத்த காதல்

எளிய வரிகள், ஏக்கம் நிறைந்த குரல் ஆகியவற்றுக்கு இயற்கையான கிராமிய இசை அளித்ததன் மூலம் இந்திப் பாடல்களுக்கு ஒரு புது முத்திரையை அளித்த எஸ்.டி. பர்மன் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியம். தந்தை திரிபுரா அரச பரம்பரையில் வந்தவர். தாய் மேகலாயா அரச பரம்பரைச் சார்ந்தவர். இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பர்மன் இளைமைக் காலம் முதல் இறுதி நாள்வரை கிராமிய வாழ்க்கை, இசை, உணவு ஆகியவை மீது தீராத பற்றுடையவராக இருந்தார்.

sd_burman_3123795a.jpg

தன்னிடம் இசை கற்க வந்த மீரா என்ற சாமானியப் பெண் மீது காதல் கொண்டு அவரை மனைவியாக ஏற்ற பர்மன், அந்தக் காதலிக்காக அரச வாரிசு உரிமையைத் துறந்தார். ரவீந்திரநாத் தாகூர் முன் தும்ரி பாடி தங்கப் பதக்கம் வென்ற பர்மன், மும்பையின் நகர வாழ்க்கை பிடிக்காமல் ஒரு படத்தின் பாதியில் கல்கத்தா சென்றுவிட முடிவு செய்தார். இந்திப் பட உலகின் நல்வாய்ப்பாக அந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டது.

தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் புகழ் அடைந்த ‘ஆராதானா’ படப் பாடல்களுக்கு இசை அமைத்த இந்த இசை ஆராதகரின் பெயரைத்தான் தன் மகனுக்கு வைத்து மகிழ்ந்தார் மராட்டிய எழுத்தாளர் ஒருவர். அவர் பெயர் ரமேஷ் டெண்டுல்கர். மகன் சச்சின் டெண்டுல்கர். எஸ்.டி. பர்மனின் முழுப் பெயர் சச்சின் தேவ் பர்மன்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-18-அந்தஸ்தைத்-துறக்க-வைத்த-காதல்/article9503048.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மொழி கடந்த ரசனை 19: என் நினைவில் கண்ணீர் சிந்தாதே

எஸ்.எஸ். வாசன்

 

 
meenakumari_3127190f.jpg
 
 
 

திரை இசையமைப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர் ஆகிய இருவருக்குமிடையே உள்ள தொழில் சார்ந்த உறவு, சில தருணங்களில் புதிய பரிணாமத்துக்கு அவர்களை இட்டுச் சென்றுவிடும். ‘கெமிஸ்ட்ரி’ என்ற பொதுவான அடைமொழியால் குறிப்பிடப்படும் இந்த விசேஷமான புரிதல்களின் சங்கமம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எல்லா மொழித் திரை உலகிலும் இருந்துவந்திருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் மெஹதி—மன்மோகன் சங்கமம்.

மிகச் சிறந்த கூட்டணி

ராஜா மெஹதி அலி கான் அவர் வாழ்ந்த காலத்திய, சிறிய, பெரிய என்ற வேறுபாடின்றி அனைத்து இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் பங்கேற்ற படங்களுக்கும் சிறந்த வரிகளை எழுதியுள்ளார். ‘ஆன்கேன்’ (விழிகள்) என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கிய மெஹதி—மன்மோகன் கூட்டணி இந்தித் திரை உலகின் பொற்காலத்திற்கு அடித்தளமாக விளங்கியது. மெஹதியும் மன்மோகனும் இணையாத மிகச் சிறந்த பல பாடல்கள் இந்தியில் இருந்தாலும் அவை இந்தக் கூட்டணியின் பங்களிப்புக்கு நிகராகாது. தமிழில் கண்ணதாசன் - விஸ்வநாதன், ராமமூர்த்தி சங்கமம் இங்கு நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.

‘மத்ஹோஷ்’ (புரட்சி) என்ற திரைப்படத்தில் தொடங்கிய இந்த இசைப் புரட்சியின் மூலம் வெளிவந்த பாடல்கள், லதா மங்கேஷகர், தலத் முகமது, முகேஷ், முகமது ரஃபி, மகேந்திர கபூர் ஆகிய பாடகர்களுக்குப் புதிய முகவரியை அளித்தது.

latha_3127191a.jpg

மத்ஹோஷ் படத்தில் தலத் முகமது பாடிய ‘மேரி யாத் மே தும் ஆசு நா பஹானா’ என்று தொடங்கும் பாடல் திரை உருது கஜல்களில் முக்கிய இடத்தைப் பெற்ற பாடல். எளிய உருதுச் சொற்கள், சோகம் ததும்பும் தலத் முகமதுவின் பட்டுக் குரல், பொருத்தமான இசை அமைப்பு, மீனாகுமாரியின் உடல் மொழி ஆகிய பல அம்சங்களின் தொகுப்பாக விளங்கும் இப்பாடலின் பொருள்:

என் நினைவில் கண்ணீர் சிந்தாதே

இதயத் தீயை எரியவிடாதே

என்னை மறந்துவிடு

அழகிய கனவாக இருந்த அந்தத் தருணங்கள்

அகன்றுவிட்டன என்பதை அறிந்துகொள்

என் இலக்கு உன் பாதை இரண்டுமே

விலகிச் சென்றுவிட்டன.

இனி நம் விழிகள் சந்திக்காது.

உன் உலகத்திலிருந்து

தொலைவில் செல்ல வேண்டிய என்னை

உடனே மறந்துவிடு

உன் காதலுக்கு ஏற்றவன் நான் இல்லை என்பதை

உடைந்த என் உள்ளம் அழுது அரற்றுகிறது

என் பெயர்கூட இனி இதயத்தில் வர இடம் தராதே.

என்னை மறந்துவிடு.

என் நினைவில் கண்ணீர் சிந்தாதே.

ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்றான ஜூலியர் சீசர் நாடகக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற லதாவின் மற்றொரு பாடலின் சில வரிகள் பாக்கியலக்ஷ்மி என்ற தமிழ்ப் படத்தின் சுசீலா பாடிய கண்ணதாசனின் வரிகளை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.

‘ஜப் ஆனேவாலா ஆத்தே ஹைன் ஃபிர் ஆகே கியோன் சலே ஜாத்தேன் ஹன்’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் பொருள்:

வருவதற்கு விரும்பி வருபவர்கள்

வந்தவுடன் ஏன் சென்றுவிடுகின்றனர்.

உள்ளத்தில் காதல் தீயை மூட்டிவிட்டு

ஏன் தொலைவில் நின்று சிரிக்கின்றனர்

நெஞ்சில் உன்மீது காதல் உண்டானபோது

ஒரு லட்சம் லட்சியம் என் உள்ளதில் இருந்தன

உன் காதல் கைகூடவில்லை எனினும்

என் இதயத்தில் உன் நினைவு பொங்கி வழிகிறது.

ஏ உலகத்தாரே விதியால் நான் எப்படி வஞ்சிக்கப்பட்டேன்

என்பதைக் காணுங்கள்

நான் அவனுடையவள், என் உள்ளமும் அவனிடமே உள்ளது

இருந்தும் ஏன் என்னை அவன் புறக்கணிக்கிறான்

என்னை அமைதி இல்லாமல் தடுமாற வைத்தவன்

எங்கிருந்தாலும் ஆனந்தமாய் இருக்கட்டும்

இனிமையுடன் இருக்கட்டும்

எனக்கு ஒரே குறைதான் இனி அவனிடம்

ஏன் இன்னும் அவன் உன் நினைவில் உறைகிறான்

விரும்பி வருபவர்கள் வந்தவுடன் ஏன் சென்றுவிடுகின்றனர்.

இந்தப் பாடலி, ‘வருவதற்கு விரும்பி வருபவர்கள் வந்தவுடன் ஏன் சென்று விடுகின்றனர். உள்ளத்தில் காதல் தீயை மூட்டிவிட்டு ஏன் தொலைவில் நின்று சிரிக்கின்றனர்’ என்ற மெஹதியின் வரிகளைப் பாருங்கள். ‘கனவில் வந்தவன் யார் எனக் கேட்டேன்; கணவன் என்றான் தோழி, கணவன் என்றால் கனவு முடிந்ததும் மறைந்தது ஏன் தோழி’ என்ற கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா?

காதலனிடம் காதலை யாசிக்கும் காதலியின் வரிகளாக அமைந்த இப்படத்தின் ‘ஹமே ஹோகயா தும்ஸே பியார் பேதர்தி பால்மா’ என்று தொடங்கும் இன்னொரு பாடலின் பொருள்:

எனக்கு உன் மீது காதல் ஏற்பட்டுவிட்டது அன்பே

இதய காதலை ஏற்றுக்கொள்ள மறுக்காதே

என் காதலுக்கு பதிலாகக் கொஞ்சம் உன் காதலைத் தா

அமைதியற்ற என மனதுக்கு ஆறுதலாக

அன்பே என்று ஒரு தரம் என்னை அழை

நெஞ்சில் பதித்துவிடேன் உன் மீதான காதலை

நீ இல்லாமல் வாழ்வது இனி கைகூடாது

கழுத்தில் இடும் மாலையாய் என்னை செய்வாய்

காதலனே உன் மீது எனக்குக் காதல் ஏற்பட்டு விட்டது

சிதார், பியானோ, கிடார் போன்ற கம்பி வாத்தியங்கள் மூலம் காதல் உணர்வையும் அதன் பிரிவையும் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைப்பதில் நிகரற்று விளங்கிய மன்மோகன் இசைக்குத் தக்க விதத்தில் மெஹதியின் கவிதை வரிகள் அமைந்திருந்தன.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-19-என்-நினைவில்-கண்ணீர்-சிந்தாதே/article9516527.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 20: சூறாவளியிடம் சொல்லுங்கள்

எஸ்.எஸ். வாசன்

 
 
anbath_3130361f.jpg
 
 
 

விழிப்புணர்வு என்ற மருந்தை அதன் கசப்பு தெரியாமல் மக்களுக்கு ஊட்டிவிடும் திறன் பெற்றவை திரைப்படங்கள். அச்செயலில் அவை அடையும் வெற்றியில் அதன் இசை, பாடல் வரிகளுக்கு அதிகப் பங்கிருக்கிறது. சமூக நீதி, மத நல்லிணக்கம், பெண் விடுதலை, பெண் கல்வி முதலான அம்சங்களை மையமாகக் கொண்டு ‘தியாக பூமி’, ‘படிக்காத மேதை’, ‘பாவ மன்னிப்பு’, ‘நானும் ஒரு பெண்’ உள்ளிட்ட பல தமிழ் படங்கள் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய அம்சங்களுக்கு இணையான அந்தஸ்துடன் அவற்றின் மிகச் சிறந்த இசைக்காகவும் வெற்றிபெற்றன. அதேபோல் இந்தியிலும் இம்மாதிரிப் படங்களின் அமோக வெற்றி அதன் பாடல் வரிகளாலும் சிறந்த இசையாலும் மட்டுமே எளிதில் எட்டப்பட்டது.

அன்பை இழக்க வைக்கும் கல்வி

‘அன்பட்’ (படிக்காதவன்/படிக்காதவள்) என்ற பெயரில் 1962-ம் வருடம் வெளிவந்த இந்திப் படம், பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் படம். ஒரு செல்வந்தர் தனது சகோதரியின் விருப்பபடி அவளைப் படிக்க வைக்காமல் மணம் முடித்து வைக்கிறார். படிப்பறிவு இல்லாததால் அந்தப் பெண் படும் இன்னல்களையும் கவிஞராக விளங்கும் அவளது கணவன் மீது அவள் கொள்ளும் காதல் பயனற்றுப் பாழ்படுவதையும் இந்தப் படம் அழுத்தமாகச் சொல்லுகிறது.

இந்தப் படத்துக்காக ராஜா மெஹதி அலி கான் எழுதி மன்மோகன் இசை அமைத்திருக்கும் இரண்டு பாடல்கள், எக்காலத்திலும் ஈடு செய்ய முடியாத, மிகச் சிறந்த இந்தித் திரைப்பாடல்களின் வரிசையில் அடங்கும். இந்தப் புகழுரைக்குச் சான்றாகக் கூறப்படும் ஒரு செய்தி சுவையானது.

‘ஆப் கீ நஜ்ரோனே சம்ஜா, பியார் கீ காபில் ஹூம் மே’ என்று தொடங்கும் ஒரு பாடலையும், ‘ஹை இஸ்ஸீ மே பியார் கீ ஆபுரூ’ என்றும் தொடங்கும் இன்னொரு பாடலையும் கேட்டு மயங்கிய இந்தித் திரையிசை உலகின் ஜாம்பவான் நௌஷாத், மன்மோகனிடம் சென்று, “நான் இசை அமைத்த எல்லாப் பாடல்களையும் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன், அதற்கு பதிலாக இந்த இரண்டு பாடல்களை மட்டும் நீங்களும் மெஹதியும் எனக்கு விட்டுத்தாருங்கள், என் பெயரில் அவை திரையில் வர விரும்புகிறேன்” என்று கூறினாராம்.

mala_3130360a.jpg

டால்டாவை விரும்பாத மாலா

இந்தப் பாடல்களைப் பார்ப்பதற்கு முன், ‘அன்பட்’ படத்தின் வெற்றியில் முக்கியப் பங்காற்றிய அதன் நாயகி மாலா சின்ஹாவைப் பற்றிச் சிறிது குறிப்பிடுவது இங்கு பொருத்தமாக இருக்கும். ‘சோக உணர்வைச் சிறப்பாக வெளிப்படுத்தும் கவர்ச்சியான முகம் கொண்டவர்’ என்று பாராட்டப்படும் மாலா சின்ஹாவின் இயற்பெயர் ‘அல்டா சின்ஹா’. வங்காளக் கிறிஸ்தவத் தந்தைக்கும், மாதேஷ் நேபாளத் தாய்க்கும் பிறந்த இந்த அழகான பெண், நெய் போன்ற மென்மையான சருமத்தின் பொருட்டு, சக பள்ளி மாணவிகளால் ‘டால்டா’ (அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஒரு தாவர எண்ணெய்யின் பெயர்) என்று கேலி செய்யப்பட்டாள். நடிப்பிலும் படிப்பிலும் சுட்டியான அல்டா சின்ஹா, டால்டா சின்ஹா ஆகாமல் இருக்கும் பொருட்டு, தன் பெயரை மாலா சின்ஹாவாக ஆக்கிக் கொண்டார்.

‘ஆப் கீ நஜ்ரோனே’ என்று தொடங்கும் பாடலின் பொருள்:

உண்மை அன்புக்கு நான் தகுதியானவள் என்பதை

உங்களின் விழிகள் உணர்ந்து கொண்டுவிட்டன

ஓ இதயத் துடிப்பே, நில், என் இலக்கு கிட்டிவிட்டது

உங்களின் இந்த முடிவு, எனக்குப் பூரண சம்மதமே

‘ஓ நன்றி பிரபு’ என உரைக்கின்றன என் கண்கள்

மகிழ்ச்சியுடன் உங்கள் வாழ்வில்

மங்கை எனக்கு இடமளித்ததற்கு.

என் இலட்சியம் நீங்கள், உங்கள் இலட்சியம் நான்

என இருக்கும்பொழுது

எனக்கு ஏன் பயம் சூறாவளியால்

சூறாவளியிடம் சொல்லுங்கள்

என்னைக் காக்கும் கரை கிட்டிவிட்டது

நிழலாக என் நெஞ்சில் படர்ந்துவிட்டீர்கள்

மழையாக எங்கும் ஒலிக்கின்றன

மங்கல வாத்தியங்கள்

இரண்டு உலகங்களின் ஆனந்தமும்

இன்று இடம் பெற்றது என் வாழ்வில்.

மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, எழுத்தறிவற்ற ஒரு பெண், தன் கணவன் மீது பாடும் வரிகளாக மட்டும் தெரியும். ஆனால் இப்பாடல் பிறந்த பின்னணி வேறு. பாடலாசிரியர் தன் தகுதிக்கேற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் மேலிட மும்பையை விட்டுத் தன் சொந்த ஊருக்குத் திரும்பிவிட முடிவு செய்தார். அம்முடிவை அறிந்த அவரது குரு, ‘இனி உனக்குப் பொற்காலமே’ என்று தடுத்து, பணியில் தொடரச் செய்தார். அவர் சொல் கேட்டு, பின்னர் பெரும் புகழ் அடைந்த மெஹதி தன் குருவின் மீது எழுதியதே இப்பாடல்.

இப்பாடலைத் திரையில் இடம்பெறச் செய்வதற்குத் தொடக்கத்தில் மறுத்த மெஹதி, பின்னர் குருவின் அனுமதியுடன் அதற்கு உடன்பட்டார்.

குருவை நினைத்து எழுதப்பட்ட இந்தப் பாடல் வைணவ மரபின்படி இறைவனுடன் மனிதன் கொள்ள வேண்டிய சரணாகதித் தத்துவத்தை எடுத்துக் காட்டும்படியும் அமைந்திருப்பதைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம். இத்தகைய பாடல் படத்தின் சூழலுடனும் நன்கு பொருந்திப்போனது இதன் கூடுதல் சிறப்பு.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-20-சூறாவளியிடம்-சொல்லுங்கள்/article9532093.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 21: முடியாத இரவு

 

 
சசிகலா - அன்பட்
சசிகலா - அன்பட்
 
 

காதலனையும் அவன் மீதான காதலையும் இரு அம்சங்களாகக் காணும் விசித்திரமான திரை மரபு அன்றாட யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டது. காதலன் தன்னைத் துறந்தாலும் அவன் காதலை மறக்காத ஒரு பெண் வெளிப்படுத்தும் கவிதை வரிகளாக இந்தியில் எழுதப்பட்டுள்ள பல பாடல்கள், இந்த உணர்வை நன்றாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இடமளிக்காத தமிழ் மனம்

‘அன்பட்’ படத்துக்காக மெஹதி அலி கான் எழுதிய ‘ஹை இஸ்ஸி மே பியார் கீ ஆப்ரு’ என்று தொடங்கும் பாடல் இவ்வகையைச் சார்ந்தது. காதலி கொள்ளும் கழிவிரக்க உணர்வின் உச்சகட்டக் கவிதையாகக் கருதப்படும் இப்பாடல் வரிகள் நமக்கு ஒரு தமிழ்ப் பாடலை நினைவுபடுத்தும். ஆனால், ஒரு சிறிய வித்தியாசம். ‘இது குழந்தை பாடும் தாலாட்டு இது மேற்கில் தோன்றும் உதயம்’ என்ற அந்தத் தமிழ்ப் பாடல் தன்னைப் புறக்கணிக்கும் காதலியை நோக்கிக் காதலன் பாடுவது.

பொதுவாக, இழந்த காதலை எண்ணி, வெளிப்படையாக வருந்தி, காதலி பாடும் பாடல்கள் தமிழ்த் திரையில் அரிது. ஒரு சிறந்த பெண் அல்லது காதலி அவ்வாறு வெளிப்படையாகத் தன் மனக் கிடக்கையை வெளிப்படுத்துவதற்குத் தமிழ்ப் பண்பாட்டுத் தர அளவுகோல்கள் இடமளிக்காது போலும்.

‘அன்பட்’ படத்தின் இந்தப் பாடலின் பொருள் மட்டுமின்றி அதன் சொற்பிரயோகங்களும் மிக அழகானவை. ‘ஆப்ரூ’ என்ற பெர்சிய வேர் கொண்ட உருதுச் சொல், ‘வெகுமதி’ ‘விருது’ போன்ற உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது. ‘ஹை இஸ்ஸீ மே பியார் கீ ஆப்ரூ’ என்ற தொடக்க வரிகள் ‘இதில்தான் இதுவே (காதல் தோல்வி) காதலுக்குக் கிடைத்த வெகுமதி என்ற பொருளைத் தருகிறது.

இதில்தான் உள்ளது காதலுக்குக் கிடைத்த வெகுமதி

உள்ளத்தை நோகடிப்பான் அவன்

உண்மைக் கடமையில் நான்

கடமை பயனில்லை எனில் பகரட்டும் அவனே

என்ன செய்ய, துக்கம்கூட எனக்குத்

துலங்கும் ஒரு சக்தியாக என் அருகில் வந்து

பரிசாக அவன் தந்ததன்றோ

அந்தப் பிரிவுத் துன்பமே இனி என் வாழ்க்கை

எந்த விதத்தில் அதை நெஞ்சிலிருந்து

நான் நீக்க முடியும்

முற்றுப் பெறாத பொருள் தரும்

மொழியின் கருத்து நான்

சற்றும் கழியாத விடியலற்ற

நீள் இரவு நான்

அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது

என் தலையெழுத்து

இப்படியே மெழுகுவர்த்தியாக

எரிந்து அழியும்படி

எவர் உள்ளமும் கொள்ளும்

விருப்பமும் இல்லை நான்

எவர் விழிகளும் காண ஏங்கும்

ஏக்கமும் இல்லை நான்

வசந்தத்தை வரவேற்க வாடி நிற்கும் மலராக நான்.

வசந்தம் வராமல் போனால்

நான் என்ன செய்வேன்

இதில்தான் உள்ளது காதலுக்குக் கிடைத்த வெகுமதி

இப்பாடலின் சிறப்புப் பிரயோகங்களாக விளங்கும் ஆபுரூ, ஜஃபா, வஃபா, அஜீஸ், ஆருஜு, ஜஸ்துஜு போன்ற உருதுச் சொற்கள் எல்லாம் திரை தாண்டிய, உருது பெர்சிய அரபு மொழிகளின் கவிதைகளில் அதிகமாக எடுத்தாளப்படும் எதுகை மோனை ஒலியுடைய பயன்பாட்டுச் சொற்கள். குறிப்பாக வலிமை, சக்தி என்பதான பொருள் தரும் ‘அஜீஸ்’ என்ற சொல்லின் வேர் ஹீப்ரூ மொழியில் உள்ளது. பின்னர் ஹீப்ரூ பேசப்பட்ட பாலஸ்தீனிய பகுதியில் வழக்கில் இருந்த அரபு மொழி, அராமேய்க், துருக்கிய மொழி, புஷ்ட்டு மொழி, குதிரிஷ் மொழி, ஆகிய மொழிகளிலும் பெர்சிய மொழி, உருது மொழி வங்காள மொழி ஆகிய இந்திய துணைக்கண்ட மொழிகளிலும் இன்று வரை ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோன்று, விருப்பம் என்ற பொருள் தரும் ‘ஆருஜு’ என்ற பெர்சியச் சொல் ஏராளமான இந்தித் திரைப்படப் பாடல்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு கவிச்சொல். ஆனால், இதன் இணைச்சொல்லாக விளங்கும் இதே பொருள் தரும் ஜஸ்துஜு உருது சொல்லைக் கவிதைகளில் மட்டுமே அதிகம் காணலாம்.

இப்பாடலின் மற்றொரு சிறப்பு, இது நகை முரண் பாணியில் முழுவதுமாக அமைந்த அரிதான பாடல். ‘துக்கம்கூட ஒரு சக்தி’, ‘பொருள் அற்ற கருத்து’, ‘விடியல் இல்லாத இரவு’ போன்றவை தமிழ் மொழி போல நேரடியாக இல்லாமல், ‘எந்த இரவு விடியாதோ அந்த இரவு நான்’ என்ற முறையில் மட்டுமே இந்தியில் எழுத முடியும். எனவே இசை அமைப்புக்கு இது ஏற்றதாக அமைகிறது.

சிந்திக்கத் தூண்டும் கற்பனை

சோக உணர்வுப் பாடல்கள் பல உள்ள இப்படத்தில் ஒரு பாடல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. ‘சிக்கந்தர் னே போரஸ் ஸே கீ தீ லடாயீ’ தோ மே கியா கரூன்’ என்று தொடங்கும் மகேந்திர கபூர் பாடியுள்ள அந்தப் பாடலின் பொருள் இப்படி அமைகிறது:

சிக்கந்தர் (அலெக்ஸ்சாண்டர்) போரஸ்ஸுடன்

போர் செய்ததற்கு நான் என்ன செய்வேன்.

கவுரவர்கள் பாண்டவர்களுடன் யுத்தம் புரிந்ததற்கு

நான் என்ன செய்வேன்.

p- u- t புட் ஆனால் b-u-t பட் என்று மாற்றி மாற்றிக்

கற்றுக் கொடுப்பதற்கு நான் என்ன செய்ய முடியும்?

பாலில் தண்ணீர் கலந்து விற்பதால்

வெண்ணெய் வராததற்கு

நான் என்ன செய்ய முடியும்

இப்படி இந்த மக்கள் அநீதியைக் கண்டு

எதிர்த்துப் பேசாமல் ஊமையாய் இருப்பதற்கு

நான் என்ன செய்ய முடியும்.

அன்றைய சமூக நிலையையும் சரித்திரத்தையும் சிறுவர்களும் புரிந்துகொள்ளும்படி நகைச்சுவை உணர்வில் எழுதப்பட்ட இந்தப் பாடலை அக்காலத்தில் பஞ்சாப் பகுதியில் இருந்த ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைகளில் பாடிப் பாடம் எடுப்பார்களாம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-21-முடியாத-இரவு/article9546846.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மொழி கடந்த ரசனை 22: இனி வருமோ இந்த அழகான இரவு

 
 
 
mozhi_2_3137197f.jpg
 
 
 

பிரிவினைக்கு முற்பட்ட இந்தியாவில் எடுக்கப்பட்ட அனைத்து சிறந்த திரைப்படங்களும் மூன்று மொழிகளுக்கே உரியவை. வங்காளம், இந்தி, தமிழ் என்ற வரிசையில் அமைந்த அப்படங்கள் மொழிமாற்றம், தழுவல், தாக்கம் ஆகிய ஏதோ ஒன்றின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன. இது இந்தியத் திரை வரலாற்றில் குறிப்பிடத்தக்க பிரத்யேக அம்சம். அப்படி மொழிமாற்றம் செய்யபடும் படத்தின் பாடல் வரிகளும் இசை மெட்டுகளும் மூல வடிவிலேயே இடம்பெயர்வது அரிதாக நிகழும் அபூர்வ நிகழ்வு.

இந்திய விடுதலை வரை, இதில் முன்னணியில் இருந்த வங்காள மொழி, தன் முதன்மை இடத்தை, பின்னர் நிகழ்ந்த வணிக மாற்றங்களால் இந்தி மொழியிடம் இழந்துவிட்டது. சிறந்த வங்காளக் கலைஞர்கள் பம்பாய்க்குக் குடிபெயர்ந்ததன் மூலம் இந்த மாற்றம் நிகழ்ந்தது.

மொழி கடந்த ரசனையாக இப்படி அமைந்த ஒரு திரைப்படம் 1964 -ல் ராஜ் கோஸ்லா இயக்கத்தில் வெளியான ‘வோ கோன் தீ’ (அவள் யாராக இருந்தாள்) என்ற இந்தித் திரைப்படம். குரு தத்தின் சீடராகத் திரை உலகில் நுழைந்த, நல்ல குரல் வளம் மிக்க பாடகர். வித்தியாசமான இயக்குநர்.

ஹாலிவுட் உலகின் ஜார்ஜ் கக்கர் போன்று, பல சிறந்த நடிகைகளை அறிமுகப்படுத்திய இவர், சாதனா, மும்தாஜ், நூதன், வகிதா ரஹ்மான் போன்ற சிறந்த கலைஞர்களின் வெற்றிக்கு அடிகோலியவர். வித்தியாசமான சூழலில் அமைந்த இவரது பல பாடல் காட்சிகளுக்கு இவரது இசைப் பின்புலம் ஒரு காரணமாக விளங்கியது.

பெருமை சேர்த்த படம்

‘வோ கோன் தீ’ என்ற இந்திப் படம் ‘யார் நீ’ என்ற பெயரில் தமிழிலும் ‘ஆமெ எவரு’ என்ற பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ‘உளவியல் திகில்’ வகை சார்ந்த ராஜ் கோஸ்லாவின் மூன்று வெற்றிப் படங்களில் முதலாவது படம் இது. (மற்றவை: மேரா சாயா, அனிதா). இந்தப் படம், நடிகை சாதனா, இசை அமைப்பாளர் மதன்மோகன், பாடகி லதா மங்கேஷ்கர், பாடலாசிரியர் ராஜா மெஹதி அலி கான் ஆகிய அனைவரையும் அகில இந்திய நட்சத்திரங்களாக ஆக்கிய பெருமைக்கு உரியது.

மெஹதியின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றான, ‘லக் ஜா கலே கீ ஃபிர் யே ஹஸ்ஸின் ராத் ஹோ நா ஹோ’, வித்தியாசமான பாணியில் அமைந்த, ‘ஜோ ஹம்னே தாஸ்த்தான் அப்னே சுனாயீ தோ ஆப் கியோன் ரோயீ’, இப்படத்தில் அடிக்கடி ஒலிக்கும் ‘ பர்ஸே நயனே ரிம்ஜிம் ரிம்ஜிம்’ ஆகிய மூன்று பாடல்களையும் பாடியவர் லதா மங்கேஷ்கர்.

இந்தப் பாடல்கள் அதே உணர்வுடன், அச்சு மாறாமல், இசை, குரல் மட்டுமின்றி மொழியிலும் மாற்றம் கண்டது ஒரு விந்தை. அந்த விந்தையை நிகழ்த்தியவர் இந்தி மொழி அறியாவிடினும் தன் சிந்தையின் திறனால் அதைச் செய்து காட்டும் சொல் தச்சன் கண்ணதாசன்.

ஒரே உருவம் கொண்ட இரண்டு பெண்களை மர்மமான சூழலில் மாறிச் சந்திக்கும் நாயகன் குழப்பத்தின் உச்சிக்குத் தள்ளப்படுகிறான். படித்த மருத்துவரான அவன் குழப்பத்தைப் போக்கி அவனைத் தன்வயப்படுத்தும் காட்சிக்காக எழுதப்பட்ட பாடல் இது. காட்சிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதுடன் காட்சியின் பின்புலம் தாண்டியும் வாழ்க்கையின் நிலையை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. பின்னணியில் ஒலிக்கும் வயலின் இசை உட்பட அனைத்து இசை அம்சங்களும் தமிழில் அப்படியே தக்க வைக்கப்படுள்ளன. இந்தி நடிகை சாதனாவுக்கு இணையான அழகுடைய ஜெயலலிதா, மர்மமான, விட்டேத்தியான பார்வையை நன்றாக வெளிப்படுத்தும் மனோஜ் குமாருக்கு இணையான ஜெய்சங்கர் ஆகியவை இப்படத்தின் தமிழ் வடிவான ‘யார் ‘நீ’ படத்தின் சிறப்பு அம்சங்கள்.

mozhi_3137196a.jpg

‘லக் ஜா கலே’ என்றால், (கழுத்தில் படர்ந்துகொள்) என்னைக் கட்டிக்கொள் என்று பொருள். அவ்வரிகளுடன் தொடங்கும் அப்பாடலின் பொருள்:

அணைத்துக்கொள் என்னை அன்பே

அழகான இந்த இரவு இனி வருமோ வராதோ

ஒருவேளை இந்த ஜென்மத்தில் நம் சந்திப்பு

மீண்டும் ஏற்படுமோ ஏற்படாதோ

நல்வாய்ப்பாக இந்த நாழிகை கிட்டியுள்ளது

நன்கு ஆசை தீரப் பார்த்துக்கொள் அருகில் வந்து

பின்பு இந்தப் பேறு உனக்குக் கிட்டுமோ இல்லையோ

ஒருவேளை இந்த ஜென்மத்தில் நம் சந்திப்பு

மீண்டும் ஏற்படுமோ ஏற்படாதோ

வா என் அருகில் வர மாட்டேன் இனி அடிக்கடி

தா உன் தோளை அழுதுகொள்கிறேன்

தாரை தரையாகக் கண்ணீர் வடித்து

இனி என் விழிகளில் அழுவதற்குக் கண்ணீர்

இருக்குமோ இல்லாது போகுமோ

அணைத்துக்கொள் என்னை அன்பே

அழகான இந்த இரவு இனி வருமோ வராதோ

திரைப்படத்தின் பாடல் காட்சிக்கு முழுவதுமாகப் பொருந்தக்கூடிய வரிகளாக விளங்குவதுடன், தனியாகப் பார்க்கும்போதும் வாழ்க்கையின் பிற சூழல்களுக்கும் ஏற்ற கருத்துகளாகத் திகழும் பாடல்களை இயற்றும் திறன் படைத்த ராஜா மெஹதி அலி கானின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இது. படம் வெளிவந்து 53 வருடங்கள் ஆகியும் இன்றும் அநேகமாக தினமும் வானொலியில் ஒலிப்பரப்பாகும் இப்பாடலை லதா மங்கேஷ்கர் தவறாமல் அவரது இசை நிகழ்ச்சிகளில் பாடுவார்.

தமிழில், இந்தப் பாடல், ‘பொன்மேனி தழுவாமல்’என்பதாக அமைந்தது. இந்திப் பாடலின் இசை, வயலின் பின்னணி உட்பட, முழுவதுமாகத் தமிழில் தக்க வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய இசையுடன் கண்ணதாசனின் எழில் வரிகளும் சேர்ந்து இந்தப் பாடலை மறக்க முடியாததாக ஆக்கிவிட்டன.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-22-இனி-வருமோ-இந்த-அழகான-இரவு/article9558627.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 23: பிரவாகமாகக் கொட்டிய கண்ணீர்

 
யார் நீ | படம்: உதவி ஞானம்
யார் நீ | படம்: உதவி ஞானம்
 
 

வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டது ‘வோ கோன் தீ’ என்ற இந்திப் படம். ‘யார் நீ’ என்ற பெயரில் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்ட இந்தப் படம், மிகவும் வித்தியாசமான காட்சிச் சூழலைக் கொண்டது. நாயகன், தான் விரும்பும் பெண்ணை நெருங்கவிடாதபடி அவனைச் சுற்றி திகிலான சூழல் நிலவுகிறது. இதனால் மனம் வருந்தி அவளைப் புறக்கணிக்கிறான். இந்தக் காட்சியை நம் கண் முன் நிறுத்தும்படியான பாடல் வரிகளை எழுதுவது மிகக் கடினமான சவால். இதில் அதிகம் வெற்றி பெற்றது இந்திப் பாடலின் ஆசிரியர் மெஹதி அலி கானா அல்லது தமிழ்ப் பாடல் எழுதிய கண்ணதாசனா என்று வியக்கும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளன அந்த இரு மொழிப் பாடல்களும்.

‘ஜோ ஹம்னே தாஸ்தான் அப்னே சுனாயீ தோ, ஆப் கியோன் ரோயே’ என்று தொடங்கும் இந்திப் பாடலின் பொருள்:

நான் என் கதையைச் சொல்வதைக் கேட்டு

நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?

அழிவு என் உள்ளத்தை ஆக்கிரமித்ததற்கு

நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?

என் இதயத்தின் துக்கம் இது.

நீங்கள் ஏன் இதைச் சகித்துக்கொள்ள வேண்டும்?

இதனால் நான் விடும் கண்ணீர்

உங்கள் கண்களில் ஏன் வழிய வேண்டும்?

துன்பத்தின் தீயை நானே மூட்டிக்கொண்டதற்கு

நீங்கள் ஏன் அழ வேண்டும்?

ஏற்கனவே மிகவும் அழுதுவிட்டேன்

இனியும் அழ மாட்டேன் என் அமைதியை இழப்பதன் மூலம்

உங்களை அமைதி இழக்க விட மாட்டேன்.

பிரளயம் என் மீது கொட்டிய கண்ணீரை

நீங்கள் ஏன் விட வேண்டும்?

உங்களது கண்ணீர் நிற்கவில்லையெனில்

நானும் அழுவேன். நான் விடும் கண்ணீரில்

சந்திரனையும் நட்சத்திரங்களையும் மூழ்கடிப்பேன்

அழிந்து போகட்டும் அழகான இயற்கை எல்லாம்

தன் இசை அமைப்புக்கு நல்ல கவிதை வரிகள் மிக முக்கியம் என வலியுறுத்தும் மதன் மோகன், தயாரிப்பாளர்களிடம் படத்தின் பாடலாசிரியராக மெஹதி அலி கான்தான் இருக்க வேண்டும் எனக் கூறினாராம். இதற்கு இணயாண வரிகளாக அமைந்த, ‘என் வேதனையில் உன் கண் இரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா’ என்ற கண்ணதாசன் எழுதிய பாடலின் தொடக்க வரிகள், தமிழ்த் திரையில் பொதுவாக நாயகி, நாயகனிடம் வெளிப்படுத்தாத உணர்வின் அடையாளமாக அமைந்தன.

‘என் இதயத்தின் துக்கம் இது, நீங்கள் ஏன் இதைச் சகித்துக்கொள்ள வேண்டும்?’ என்பது இந்திப் பாடலின் வரி. ‘ஒருவரே வேறு பார்வை பார்க்கும் பொழுது (நீ) அழுவதேன் கண்ணா’ - இது கண்ணதாசன் . இதே கண்ணதாசன், ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்துக்காக எழுதிய ‘இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா” என்ற வரிகளின் புதிய விளக்கமாகவும் மேற்படி வரிகள் திகழ்கின்றன.

நானே வருவேன்

படத்தின் மூன்றாவது சிறந்த பாடலாக விளங்கும் ‘ நயனா பர்ஸே ரிம்’, படத்தின் கருவைச் சுமந்த பாடல். அதாவது, படத்தில் அடிக்கடி ஒலிக்கும் தீம் சாங். இனிமையான மெட்டில் அமைந்த, லதா மங்கேஷ்கருக்குப் பிடித்த, இப்பாடலின் வரிகள் மற்ற இரண்டு பாடல்கள் அளவுக்கு ஆழமானவையல்ல. இதன் தமிழ் வடிவில் கண்ணதாசன் எழுதியுள்ள வரிகள் இதே சூழலைக் கவித்துவ அழகுடனும் கருத்துச் செறிவுடனும் கையாள்கின்றன.

இந்தப் பாடலின் பொருள்:

கண்கள் பனிக்கின்றன ரிம்ஜிம் ரிம்ஜிம் என

உலர்ந்த உன் ஆசைகளைக் குடித்துவிட்டு

அந்த நாள் என் நினைவில், அந்த நினைவு என் அருகில்

இப்பொழுது வரை என் இதயம் பொங்குகிறது

உன் அழியாத காதலின் துணையால்

நீ இல்லாமல் சூனியமாக உள்ளது சூழல்

தடுமாறுகின்றன உடன் உள்ள தடங்கள்

கண்கள் பனிக்கின்றன ரிம்ஜிம் ரிம்ஜிம் என

விழிகள் நீ இன்றிச் சுழல்கின்றன

காதல் என் கையை விட்டு நழுவுகிறது

வா அருகில் என் விட்டில் பூச்சியே

எரிகிறது கற்பு என்ற மெழுவர்த்தி

வா என் நண்பனே ஏன் பயப்படுகிறாய்

இதே சூழலுக்கு கண்ணதாசன் எழுதிய வரிகளைப் பாருங்கள்:

நானே வருவேன் இங்கும் அங்கும்

யாரென்று யார் அறிவார்

உன் மங்கல மாலைப் பெண்ணாக

உன் மஞ்சள் குங்குமம் மலராக

நான் வந்தேன் உன்னிடம் உறவாட

உன் மாளிகை சொல்லும் கதையாக

சொந்தம் எங்கே செல்லும்

அது வந்து வந்து சொல்லும்

அவன் தந்த உறவல்லவா

மயங்கும் கண்ணைப் பாராமல்

கலங்கும் நெஞ்சைக் கேளாமல்

பிரிந்து செல்ல எண்ணாதே

என் கண்ணீர் பேசும் மறவாதே

மழை வந்த வேளை

மனம் தந்த பாதை

காமன் தந்த உறவல்லவா

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-23-பிரவாகமாகக்-கொட்டிய-கண்ணீர்/article9567858.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 24: என் நிழல் உன்னுடன் இருக்கும்

 

 
 
karpagam_3141744f.jpg
 
 
 

இலக்கின்றிப் பாயும் வெள்ளம் போன்றது இசை. அது மொழி என்ற கரைகள் மூலம் ஆற்றுப்படுத்தப்படும்போது, அது செல்லும் தடத்தில் உள்ள இடங்களுக்கு உரிய பயன்பாட்டை அளிக்கும்.

‘வோ கோன் தீ’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ் கோஸ்லாவின் மற்றொரு திகில் படம் ‘மேரே சாயா’ (என் நிழல்). அதுவும் வெற்றிப்படமே. இசை, பின்னணிப் பாடகரின் குரலினிமை, பாடலின் கருத்துக்கள் ஆகிய மூன்று அம்சங்களிலும் சிறந்து விளங்குகின்றன இப்படத்தின் நான்கு பாடல்கள். அவற்றில் இரண்டு சோக உணர்விலும் இரண்டு மகிழ்ச்சி உணர்விலும் அமைந்தவை.

ஏங்க வைக்கும் பாடல்

ராஜா மெஹதி அலி கான் — மன்மோகன் — சாதனா கூட்டணியில் வெளிவந்த இப்படத்தின் நாயகன் சுனில் தத். மேல்தட்டு வர்க்கத்தின் கம்பீர உடல் மொழியை நன்றாக வெளிப்படுத்தும் திறன் பெற்றவர். வெளிநாட்டிலிருந்து திரும்பிய சமயத்தில் மர்மமான சூழ்நிலையில் இறந்த தன் மனைவியை நினைத்துக் கலங்கும் நாயகனுக்கு ஆறுதல் தரும் விதமாக, இறந்துபோன அவன் மனைவி பாடுவதாக அமைந்த இந்தப் பாடல், ‘து ஜஹான் ஜஹான் சலேகா மேரா சாயா சாத் ஹோஹா’ என்று தொடங்குகிறது. லதா மங்கேஷ்கர் பாடிய தலை சிறந்த பாடல்களில் ஒன்று இது. அன்புக்குரியவர்கள் திடீரென இறந்துவிட்டால் அவர்களை எண்ணிக் கலங்கும் அனைவரும், ‘உண்மையில் அது மாதிரி நடக்கக் கூடாதா’ என ஏங்க வைக்கும் பாடல் வரிகளைக் கொண்டது.

அந்தப் பாடலின் பொருள்:

நீ எங்கு எங்கு சென்றாலும் என் நிழல் அங்கிருக்கும்

என்னை எப்பொழுது நினைத்து உன் கண்களில்

நீர் பெருகினாலும், அங்கு உடனே வந்து

என் கண்ணீர் அதை நிறுத்திவிடும்.

நீ மனம் சோர்ந்து போய்விட்டால்

என் மனமும் சோர்ந்துவிடும்

உன் பார்வையில் தெரிகிறேனோ இல்லையோ,

நான் உன் கூடவேதான் இருப்பேன்.

நீ எங்கு சென்றாலும் நிழலாகத் தொடர்வேன்

ஒரு வேளை நான் ஒரேடியாக விலகிச் சென்றுவிட்டாலும்

நீ வேதனைப்படாதே,

என் மீதான அன்பை நினைத்து

உன் கண்களை ஈரமாக்கிக்கொள்ளாதே.

அப்பொழுது திரும்பிப் பார்த்தால் நான்

உன் நிழலாக அங்கு நிற்பேன்

உன் துக்கத்திலும் வேதனையிலும்

என் துக்கமும் வேதனையும் கலந்து இருக்கும்

அது உன் ஒவ்வொரு பிறவியிலும்

ஒளிவிடும் அகல் விளக்காக விளங்கும்.

நீ எதுவாகப் பிறவி எடுத்தாலும் அதன் நிழலாக

நான் உன்னுடன் இருப்பேன்.

‘பத்லாக்’ என்ற மராட்டியப் படத்தின் தழுவலான இந்த இந்திப் படம், பின்பு ‘இதய கமலம்’ என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்தது. இசை, பாடல் வரிகள், சூழல், என மூன்று மொழிகளுக்கும் எதுவும் பொதுவாக இல்லாவிடினும் வலுவான கதை அமைப்பாலும் பாடல்களாலும் மூன்று மொழிப் படங்களுமே வெற்றிபெற்றன.

mera_3141743a.jpg

முந்திக்கொண்ட வாலி

கடந்த வாரங்களில் நாம் பார்த்த ‘வோ கோன் தீ’ படத்தின் பாடல் வரிகளின் உணர்வு சிதையாமல் அப்படியே, ஏறக்குறைய ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு போல ‘யார் நீ’ படத்துக்காகத் தமிழாக்கியிருந்தார் கண்ணதாசன். ஆனால், ‘மேரா சாயா’ என்னும் படத்தின் பாடல்களை, அப்படத்தின் தமிழ் வடிவமான ‘இதய கமலம்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் எழுதினார். இந்திப் படச் சூழலுடன் இணையாத, ஆனால் என்றும் கேட்கத் தகுந்த அழகான பாடல்களாக மறுவடிவம் செய்தார்.

இறந்த தன் மனைவியை நினைத்துக் கலங்கி, அவள் இடத்திற்கு வந்த பெண்ணைப் புறக்கணிக்கும் நாயகன். ‘கற்பகம்’ படத்தில் இதே போன்ற சூழல் உள்ள காட்சிக்கு, வாலி ‘மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா, உன் உயிராய் நான் இருக்க என் உயிராய் நீ இருக்க’ என்ற பாடலை எழுதினார். ‘மேரா சாயா’ படப் பாடலைக் கேட்கும்போது ‘மன்னவனே அழலாமா’ பாடலும் அதற்கான காட்சியும் உடனே நம் நினைவுக்கு வரும். இப்படம் வெளிவருவதற்கு சில ஆண்டுகள் முன்பே வாலி எழுதிய வரிகள், இப்பாடலின் அச்சு அசலான தமிழ் வடிவமாக விளங்குவது வியப்புக்குரியது.

சோக உணர்வின் மற்றொரு பாடல், நாயகன் சுனில் தத் தன் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து ‘ஆப்கர் பஹலு மே ஆக்கர் ரோ தியே’ என்று கலங்கும் பாடல். பாடியவர் முகமது ரஃபி.

பொருள்:

உன் அருகில் வந்து அழுகிறேன்

என் துக்கத்தின் கதையைச் சொல்லி அழுகிறேன்

வாழ்க்கை என்னைச் சோர்வடையச் செய்யும்போதெல்லாம்

அச்சத்துடன் உன் இலக்கை நோக்கி ஓடி வந்து

மண்டியிட்டு அழுகிறேன்

கண்ணீர் பெருகும் மாலைப்பொழுதில்

எங்கும் வேதனையின் நிழல் படரும் பொழுதில்

நம் நினைவு என்ற தீபத்தை ஏற்றி வைத்து அழுகிறேன்

பிரிவுடன் துக்கம் உடன் செல்வதில்லை

நீ இல்லாமல் நான் வாழ முடிவதில்லை

உன் மீதான அன்பினால் நான்

இழந்து அழுகிறேன், என் துக்கத்தின் கதையை

சொல்லிச் சொல்லி உன்னிடம் அழுகிறேன்.

மூல வடிவான மராட்டியப் படத்தில் இடம்பெறாத இந்த பாடலும் காட்சியும் இந்திப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான ஒரு காரணம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-24-என்-நிழல்-உன்னுடன்-இருக்கும்/article9577937.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 25: இந்தியில் ஒரு ‘எலந்தப் பயம்’

 

 
mozhi_3144285f.jpg
 
 
 

காலத்தால் அலையாத கருத்து மிக்க பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். ஆனால் இது அவர் எழுதிய பாடல்தானா எனப் பலரைக் கேட்கவைத்த பாடல் ‘எலந்தப் பயம், எலந்தப் பயம்’. எல். ஆர் ஈஸ்வரி தன் வசீகர குரலில் பாடியிருப்பார். பணமா பாசமா என்ற படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்த அந்தப் பாடலில் அடித்தட்டு மக்களின் மொழியும் உணர்வும் ஊற்றாகப் பொங்கி வழியும். படித்தவர்கள் மட்டுமின்றிப் பாமரர்களும் ரசிக்கும் விதம் திரைப் பாடல்களை எழுதும் திறன் பெற்றவர்களே சிறந்த திரை இசைக் கவிஞர்கள் என்பதை இந்தப் பாடல் மூலம் எடுத்துக் காட்டிய கண்ணதாசனுக்கு இணையானவர் ராஜா மெஹதி அலி கான்.

lr_eswari_3144286a.jpg

உருது மொழி கலந்த, ஆழமான பொருள் மிக்க மிகச் சிறந்த இந்திப் பாடல்களை எழுதியுள்ள மெஹதி அலி கான், ‘மேரா சாயா’ படத்திற்காக எழுதிய, ‘ஜும்கா கிரா ரே, ரே பரேலி கா பாஜார் மே’ என்று தொடங்கும் பாடல், பல விதங்களில் நம் இலந்த பழம் பாட்டுக்கு நிகரானது. இந்த இந்திப் பாட்டு உத்தர பிரதேசப் பேச்சு வழக்கில் அமைந்த ஒன்று. கிளர்ச்சி தரும் உச்ச ஸ்தாயில் அனாசயமாகப் பாடக்கூடிய எல்.ஆர்.ஈஸ்வரியின் எதிரொலி எனச் சொல்லத்தக்க வகையில் ஆஷா போன்ஸ்லே பாடிய பாடல் இது. ஜிப்ஸி உடையில் எழிலாகத் தோன்றும் சாதனா இளமைத் துள்ளலுடன் ஆடுவது இப்பாடலின் கூடுதல் சிறப்பு.

‘மேரேசாயா’ படம் வெளிவந்து 50 வருடங்களுக்குப் பிறகும் அதே ரசனையை இந்தப் பாடல் நமக்கு அளிக்கிறது. ‘யாஸ்மின்’ படத்தில் வைஜெந்திமாலா பாடி நடித்த ஆடல் காட்சி மட்டுமே சாதனா ஆடிய ஒயில் நடனத்திற்கு இணையாகக் கூறப்படுகிறது. அந்தக் காலச் சூழலின்படி, ஊர்ப் பெரியவர் தலைமையில் கிராம மக்கள் கூடி நிற்கும் திறந்த வெளியில் நடன மங்கை ஆடிப்பாடி மகிழ்விக்கும் இப்பாடலின் இடையிடையே ‘ஃபிர் கியா ஹுவா?’ (அப்புறம் என்ன ஆயிற்று?) என்ற வரிகள் இப்பாடலின் சிறப்பு. சாதனா கூறும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகப் பின்னணி

இசை வாத்தியக்காரர்களும் இறுதியில் ஊர் பெரிசும் கேட்கும்படி அமைந்த இப்பாடலின் பொருள்:

ஜிமிக்கி விழுந்துவிட்டது, ஜிமிக்கி விழுந்துவிட்டது

ரே பரேலி கடைத்தெருவில் ஜிமிக்கி விழுந்துவிட்டது

ஐய்யோ ஐய்யோ ஜிமிக்கி விழுந்துவிட்டதய்யா

காதலன் வந்தான் கண்ணடித்துச் சிரித்தான் களவு போனது வீடு

‘காதில் ஜிமிக்கி போட்டு விடுகிறேன் வாடி அன்பே’ என்றான்

‘வேண்டாம் வேண்டாம் வம்பு பண்ணாதே’ எனச் சிணுங்கினேன்

அவனிடமிருந்து விடுவித்துக்கொள்ள முயன்ற எனது

இடுப்பை விடவில்லை அந்த எமகாதகன்

‘அப்புறம் என்ன ஆயிற்று’ (ஒரு குரல்)

அப்புறமா, அப்புறம், ஜிமிக்கி விழுந்துவிட்டது

எங்களுடைய இருவரின் தள்ளு முள்ளில்.

பின்னர் ஒரு சமயம்

வீட்டின் மாடியில் நின்றுகொண்டிருந்தேன் நான்

வீட்டு எதிர்த் தெருவில் நின்றான் அவன்

‘கீழே வா அன்பே, உடனே கீழே’ எனச் சிரித்தான்

முடியாது என்றால், ‘மோதிரம் வீசிக் காட்டு உன் சம்மதம்’ என்றான்

அடைந்த வெட்கத்தில் அது கேட்டு நனைந்துவிட்டேன் நான்

‘அப்புறம் என்ன ஆயிற்று’ (கூட்டத்திலிருந்து ஒருவர்)

அப்புறமா, அய்யா அப்புறம்

ஜிமிக்கி விழுந்துவிட்டது எங்கள் இருவரின் காதலின் சக்தியில்

(மற்றொரு தருணம்)

சோலையில் நான் சோர்ந்து இருக்கும்பொழுது

சேலைத் தலைப்பைச் சேர்த்து இழுத்துச் சொன்னான்

‘அடியே அன்பே என்னை ஆட்கொண்டுவிட்டாய் நீ’

விழிகளைத் தாழ்த்தி வெட்கத்தில் சிரித்தேன் மெல்ல

காதலன் சீண்டியபொழுது கரங்கள் இணைந்தன

‘அப்புறம் என்ன ஆயிற்று’ (கோரஸாகப் பலர்)

அப்புறமா அப்புறம் ஜிமிக்கி விழுந்துவிட்டது

இதற்கு அப்புறம் என்னத்தைச் சொல்ல

ஜிமிக்கி விழுந்துவிட்டது, ஜிமிக்கி விழுந்துவிட்டது

ரே பரேலி கடைத்தெருவில் ஜிமிக்கி விழுந்துவிட்டது

மிகவும் வித்தியாசமான கிராமிய இசைப் பின்னணியில் அமைந்த இந்தப் பாடலின் வரிகள் அப்போது வட இந்தியாவில் பேச்சு வழக்கில் இருந்த சாமனிய மக்களின் பேச்சு வழக்கில் இருந்த உருது, இந்தி, பெர்சிய மைதிலீ மொழிச் சொற்களை பயன்படுத்தி எதுகை மோனை குறையாமல் எழுதப்பட்டுள்ளது.

‘ஜிமிக்கி விழுந்துவிட்டது’ என்ற சொற்றொடர் அதன் சரியான அர்த்தத்தையும் தாண்டிய காதல் சேட்டையின் ஒரு குறியீடாக இப்பாடலுக்குப் பின்னர் உருவகம் கொண்டது. அதே போன்று ‘ரே பரேலி’ (பின்னர் இந்திரா காந்தியின் தொகுதியாக விளங்கிய) என்ற உத்தரப்பிரதேசத்தின் வர்த்தக நகரம் பல திரைப் பாடல்களில் இடம் பெறும் இடமாக மாறியது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-25-இந்தியில்-ஒரு-எலந்தப்-பயம்/article9587226.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
    • வாலிபத்தில் தவற விட்டவைகளை எண்ணி வயோதிபத்தில் அசை போடுகிறீர்கள் போல. எழுதம் கதை கவிதை எல்லாமே காதல் மயமாகவே உள்ளதே?
    • பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன் பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.