Jump to content

புதிய அரசியலமைப்பு குறித்த தமிழக அரசின் கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியலமைப்பு குறித்த தமிழக அரசின் கோரிக்கை

[24 - January - 2007] [Font Size - A - A - A]

இந்திய அரசியலமைப்பை புதியதாக மீள வரையவேண்டுமென்று தமிழக மாநில அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. தமிழக சட்டசபையின் புதிய சட்டத்தொடரை கடந்த சனிக்கிழமை ஆரம்பித்துவைத்து சம்பிரதாய பூர்வமான உரையை நிகழ்த்திய மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, காலத்தின் தேவைக்கேற்ப இந்திய அரசியலமைப்பை திருத்தியெழுதுவதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

`மாநிலங்களுக்கான அதிகாரப்பரவலையும் மத்திய அரசாங்கத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான அதிகாரப்பகிர்வுப் பட்டியலையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு புதிதாக இயற்றப்பட வேண்டும். அவ்வப்போது தவிர்க்க முடியாத தேவைகளையொட்டி இந்திய அரசியலமைப்பில் இதுவரை சுமார் 100 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது. பல நாடுகளில் அரசியலமைப்புகள் பல தடவைகள் மீள வரையப்பட்டிருக்கின்றன. கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் இந்திய அரசியல் சமூக, பொருளாதாரப் பரிமாணங்களும் உழைக்கும் வர்க்கத்தின் தேவைகளும் முற்றிலும் மாற்றங்கண்டுவிட்டன. பிற்படுத்தப்பட்டோர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் தாங்கள் போராடிப்பெற்ற சமூக நீதியைப் பேணிப்பாதுகாப்பதற்கும் சிறுபான்மையினரின் உரிமை மற்றும் பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக நீதியை உறுதிசெய்வதற்கும் கம்பிமீது நடப்பதைப்போன்று செயற்படவேண்டியிருக்கிறது. உண்மையான கூட்டாட்சித் தத்துவம் நிலைபெறவும் சமூக நீதிச் சக்கரம் தங்குதடையின்றிச் சுழலவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிதாக இயற்றப்பட வேண்டும்' என்று ஆளுநர் பர்னாலா தனதுரையில் தெரிவித்தார். மீள்சிந்தனைக்கும் மறுகணிப்பீட்டுக்குமான நேரம் வந்துவிட்டது என்று முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் சி.என். அண்ணாத்துரை 40 வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டதையும் நினைவு படுத்த ஆளுநர் தவறவில்லை.

அரசியலமைப்புச் சட்டம் புதிதாக வரையப்பட வேண்டுமென்ற தமிழக அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஆளும் தி.மு.க.வின் நேசக் கட்சிகளான காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சிஆகியவை முழுமையான ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான பீற்றர் அல்போன்ஸ், தமிழக அரசாங்கத்தின் கோரிக்கை அரசியலமைப்பை புதிதாக வரைவது தொடர்பில் தேசியளவிலான ஒரு விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது என்றும் இந்த விவகாரத்தின் சகல அம்சங்கள் மீதான ஆரோக்கியமான விவாதம் மக்களுக்கு குறிப்பாக, இளந்தலைமுறையினருக்கு பயனளிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தி.மு.க. அரசாங்கமும் அதன் நேசக்கட்சிகளும் விடுத்திருக்கும் கோரிக்கை தொடர்பாக திருமதி சோனியாகாந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஆராயப்படும் என்று திங்களன்று புதுடில்லியில் காங்கிரஸ் பேச்சாளர் திருமதி ஜெயந்தி நடராஜன் அறிவித்திருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகள் இந்திய அரசியலமைப்பு புதிதாக வரையப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திருப்பதால், கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதித்து அந்த விவகாரம் தொடர்பில் பொருத்தமான கருத்து உருவாக்கப்படும் என்றும் திருமதி நடராஜன் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை இனநெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலமான அரசியல் இணக்கத் தீர்வொன்றை காண்பதற்கான முயற்சிகள் என்று கூறப்படுகின்றவற்றைப் பொறுத்தவரை, கடந்த பல வருடங்களாக இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு என்பவை தொடர்பில் தீவிரமானவாதப் பிரதிவாதங்கள் மூண்ட வண்ணமேயிருக்கின்றன. சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை குறைந்தபட்சமேனும் பூர்த்தி செய்யக்கூடிய தெளிவான யோசனைகள் தொடர்பில் கருத்தொருமிப்புக் காணப்படக் கூடிய ஒரு நிலைக்கு அண்மித்தாகவேனும் வருவதற்கு தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் மானசீகமாக ஒரு போதும் முயற்சித்ததில்லை. ஆனால், பல்வேறு வகையான அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள் குறித்து பேச்சளவிலேனும் ஆராயப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவற்றில் இந்தியாவில் மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் குறித்தும் அடிக்கடி பேசப்படுவதுண்டு. இந்திய மாநிலங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களை விடவும் கூடுதலான அதிகாரங்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்படக் கூடியதான எந்தவொரு ஏற்பாட்டையும் இந்திய அரசாங்கம் ஆதரிக்காது என்று பேசுபவர்களும் இருக்கிறார்கள். இலங்கையில் இடம் பெறுகின்ற அதிகாரப் பரவலாக்கல் தொடர்பிலான வாதப் பிரதிவாதங்களில் இந்திய அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்துப் பரிமாறல்கள் முக்கியத்துவம் பெறு வதன் காரணத்தினாலேயே அரசியலமைப்பை புதிதாக வரைய வேண்டுமென்ற கலைஞர் கருணாநிதி அரசாங்கத்தின் கோரிக்கை எமது கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கூட்டியிருக்கும் சர்வகட்சி மகாநாட்டின் பிரதிநிதித்துவக் குழுவினர் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்து அங்குள்ள அதிகாரப் பரவலாக்கல் குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. பஞ்சாயத்து முறையின் சாதகபாதகங்களுக்கு அப்பால் இந்திய அதிகாரப்பரவலாக்கல் குறித்தோ அல்லது குறைந்தபட்ச கூட்டாட்சி குறித்தோ இந்த பிரதிநிதித்துவக் குழுவினர் அறிந்து கொள்வதில் காட்டிய அக்கறையிலும் பார்க்க அவர்களின் கவனம் பஞ்சாயத்து ராஜ் முறை மீதே விசித்திரமானமுறையில் பெரிதும் குவிந்திருந்தது. சர்வகட்சி மகாநாட்டுக்கு பரிந்துரைகளை செய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் உள்ளவர்களில் பலரும்கூட அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய அமைச்சர் மணிசங்கர் ஐயருடனான பேச்சுவார்த்தைகளின்போது பஞ்சாயத்துமுறை குறித்தே தீவிர கவனம் செலுத்தினர். ஆனால், அந்தப் பஞ்சாயத்து முறைக்கு மேலாக, மாநில மட்டத்திலான அதிகாரப் பரவலாக்கம் அல்லது அதிகாரப் பகிர்வுகூட தற்போதைய கால கட்டத்தின் தேவைகளுக்கு போதுமானவையல்ல என்று விசனமடைந்திருக்கும் தமிழக அரசாங்கம், அரசியலமைப்பை முற்று முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டுமென்று கோரியிருக்கிறது. இதை இலங்கையின் சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவினரும் நிபுணர் குழுவினரும் எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதை அறிய விரும்புகின்றோம்.

சிக்கல்கள் நிறைந்த இலங்கையின் இனநெருக்கடிக்கு உருப்படியான அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு இந்திய மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களின் அடிப்படையிலான யோசனைகள் - ஏற்பாடுகள் போதுமானவையல்ல என்ற கருத்தும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பை மீளவரைய வேண்டுமென்ற கலைஞர் கருணாநிதி அரசாங்கத்தின் கோரிக்கை இந்தக் கருத்து நிலைப்பாட்டை மேலும் வலிமையுடையதாக்குகிறது என்பது எமது அபிப்பிராயம். அரசியலமைப்பு புதிதாக வரையப்பட வேண்டுமென்ற கோரிக்கையையடுத்து இந்தியாவில் மூளக்கூடிய விவாதம் இலங்கையர்களினால் மிகவும் உன்னிப்பாக நோக்கப்பட வேண்டியதாகும்.

நன்றி தினக்குரல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.