Jump to content

காதல் வழிச் சாலை


Recommended Posts

காதல் வழிச் சாலை 01: இருக்கு... ஆனா இல்ல!

 

 
love_3012491f.jpg
 

இந்த உலகமே உறவுகளால் பின்னப்பட்டிருக்கிறது. அறிவியலும் விஞ்ஞானமும் ஆயிரம் புரட்சிகளையும் மாற்றங்களையும் சாதித்துக் காட்டினாலும், உயிர்ச் சங்கிலியின் ஆதாரம் ஆண்-பெண் உறவுதான். ஆணைத் தவிர்த்துவிட்டுப் பெண்ணும் பெண்ணைத் தவிர்த்துவிட்டு ஆணும் வாழ முடியாது. ஆண், பெண்ணுக்கிடையே மலரும் காதல் என்னும் உணர்வு அதிஅற்புதமானது, தவிர்க்க முடியாதது. ஆனால் காதலைவிட காதல் சார்ந்து எழும் குழப்பங்களும் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கின்றன. எது காதல், எதுவரை காதல் என்பது இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய கேள்வி. அந்தக் கேள்விகளின் வழியே பயணப்பட்டு விடைகளைத் தேடுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை என்னிடம் ஆலோசனைக்காக அழைத்து வந்திருந்தார்கள். என் முன்னால் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்த அந்தப் பெண்ணிடம், “உன் பெயர் என்னம்மா?” என்று கேட்டேன். “நதியா” என்று ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. “உனக்கு என்னம்மா கஷ்டம்?” என்று கேட்டதுதான் தாமதம், கண்களில் பொலபொலவென்று கண்ணீர். பொங்கிப் பொங்கி அழுதார்.

“என்ன பண்றதுன்னே புரியலை டாக்டர். ஸ்கூல்ல யாரோ ஒரு பையனை விரும்புகிறாளாம். அவனை லவ் பண்றீயாடின்னு கேட்டா, இல்லைன்னு சொல்றா. ஆனா அவனை மறக்க முடியலை, ஒரு நாள் அவன் ஸ்கூலுக்கு வரலைன்னாலும் மனசு அடிச்சுக்குதுன்னு சொல்றா. என்ன வேணும்னுகூட இவளுக்குச் சொல்லத் தெரியலை” என்று தவிப்புடன் சொன்னார் அந்தப் பெண்ணின் அம்மா. அவருடைய அம்மா கேட்ட அதே கேள்வியைத்தான் நானும் நதியாவிடம் கேட்டேன்.

“அந்தப் பையனை காதலிக்கிறியாம்மா?”

“ம்... இல்லை, தெரியலை”

“அந்தப் பையன்கிட்டே இருந்து உனக்கு என்ன வேணும்?”

“தெரியலை டாக்டர். ஆனா அவன்கூட பேசணும். அவன்கூட இருக்கணும். என்கிட்டே எப்பவும் அவன் அன்பா பேசிக்கிட்டே இருக்கணும்னு தோணுது. இது காதாலான்னு தெரியலை. கல்யாணம் பத்தி எல்லாம் யோசிக்கக்கூட தோணலை. அம்மா, அப்பா ரெண்டு பேருமே என்னை எதுவும் சொல்லலை. எல்லாம் போகப் போக சரியாகிடும்னுதான் சொன்னாங்க. எனக்குத்தான் மனசே சரியில்லை. அழுகை அழுகையா வருது. ஆனா அவனை ரொம்பப் பிடிக்குது” - அழுகையும் இடையிடையே கொஞ்சம் சிரிப்புமாகச் சொல்லி முடித்தார் நதியா.

அந்த மாணவனை விசாரித்தபோது, “நாங்கள் சாதாரணமாகத்தான் பழகுகிறோம்” என்று சொல்லியிருக்கிறார். அந்த மாணவர் தெளிவாக இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு நாளும் அவரையே நினைத்துப் புலம்பும் நதியாவுக்கு என்னவாயிற்று?

அடுத்து சுரேஷின் கதை. டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். என்னைப் பார்க்க வந்த அன்றும் குடித்திருந்தார். “அவளால மட்டும்தான் என்னைச் சரிசெய்ய முடியும்” என்று எடுத்த எடுப்பிலேயே உணர்ச்சிவசப்பட்டார்.

“மூணு வருஷமா நானும் அவளும் காதலிக்கிறோம் சார். ரொம்ப நல்ல பொண்ணு சார். நல்லா படிப்பா. ஆனா நான்தான் ஏதாவது பண்ணிடறேன். சின்னதா சண்டை வந்தாலும் குடிக்கத் தோணுது. குடிச்சிட்டு கலாட்டா பண்ணிடறேன். நேத்துகூட அப்பாவையே அடிச்சிட்டேன். ஆனா போதை தெளிஞ்ச பிறகுதான் நான் பண்ண தப்போட வீரியம் புரியுது. அதுக்காக என்னை நானே தண்டிச்சிக்கிறேன். இதோ பாருங்க” என்றபடி தன் இடது கையைக் காட்டினார்.

அங்கே வரிசையாக நான்கு கோடுகள் பிளேடால் இழுத்து, தன்னைத் தானே வருத்திக்கொண்டிருக்கிறார். பாதிக் காயம் ஆறியும், மீதி ரணமாகவும் இருந்தது அவரது மனதைப் போலவே. “நீங்க தயவுசெய்து அவகிட்டே பேசுங்க சார்” என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்டவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. இன்னும் முழுதாக போதைக்கு ஆட்படவில்லை போல. தெளிவாகவே பேசினார்.

அவர் சொன்ன பெண்ணைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். விவசாயப் படிப்பு படிக்கிறாராம்.

“எந்தப் பிரச்சினையும் இல்லை டாக்டர். மூணு வருஷமா காதலிக்கிறோம். ரெண்டு பேர் வீட்லயும் எந்த எதிர்ப்பும் இல்லை. எல்லாத்துக்கும் காரணம் அவரும் அவரோட குடிப் பழக்கமும்தான். அவருக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை இருக்கு. அடிக்கடி என் செல்போனை வாங்கிப் பார்ப்பார். நானும் யதேச்சையாகப் பார்ப்பதாகத்தான் நினைத்தேன். ஆனால் நான் யார் யாருடன் பேசியிருக்கிறேன் என்று பார்ப்பார். யாருடனாவது ‘சாட்’ செய்திருந்தால் கோபப்படுவார். நள்ளிரவில் போன் செய்து ‘வாட்ஸ் அப்’பில் இவ்ளோ நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கறேன்னு கேட்பார்.

இதெல்லாம் ஒரு பக்கம்னா, இவர் குடிக்கறதுக்கே நான்தான் காரணம்னு சொல்றார். ஆனா இதுவரை என்னைச் சந்தேகப்பட்டு நேரடியா எதுவும் கேட்கலையே தவிர, மறைமுகமா நிறைய கேட்டிருக்கார். என் மேல ரொம்ப பொசஸ்ஸிவ்வா இருக்கார்னு மட்டும் புரிஞ்சுக்க முடியுது. ஆனா அது என்னைக் கஷ்டப்படுத்துற அன்பா இருக்கக் கூடாது இல்லையா?” என்று கேட்டார் அந்த மாணவி.

இருவரிடமும் அன்பு நிறைந்திருக்கிறது. பிறகு என்ன சிக்கல்? சுரேஷிடம் என்ன பிரச்சினை? காதலில் ஏற்படும் உணர்வுக் குழப்பமா? இல்லை குடிப்பதால் ஏற்படுகிற சந்தேக நோயா? அவரது மன நிலையா? மதுவா? காதலிக்க வேண்டியதுதான். அது ஒரு மகோன்னதமான அனுபவம்தான். ஆனால் எத்தனை காதல்கள் அழகாக எடுத்துச் செல்லப்பட்டு கல்யாணத்தில் கைகூடி, அதற்குப் பிறகும் தொடர்கின்றன? எல்லாக் காதலர்களும் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறக்கிறார்களா? ஹார்மோன்களின் ருத்ர தாண்டவம் மட்டும்தான் காதலா?

நான் இங்கே சொன்ன இரண்டு சம்பவங்களிலும் தாங்கள் காதல் வயப்பட்டிருக்கிறோமா என்ற குழப்பம் இருக்கிறதே ஏன்? பிடிக்காத பெண்ணைப் பின் தொடர்வதும், தன்னைக் காதலித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், மறுத்தால் எத்தகைய வன்முறையையும் கையில் எடுப்பதும் காதலில் சேருமா? காதலித்தாலே புத்தி பிசகிவிடுமா என்ன? விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலக்கிற காதலின் உணர்வுப் பிழைகளை உளவியல் கண்ணாடி அணிந்து அலசுவோம் வாருங்கள்.

mohan_3012495a.jpg

- மோகன வெங்கடாசலபதி சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர்.
முன்னாள் பத்திரிகையாளர்.
குடிநோய் குறித்த விழிப்புணர்வுக்காகத் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-01-இருக்கு-ஆனா-இல்ல/article9114803.ece?homepage=true

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 02: பார்த்ததுமே பற்றிக்கொள்ளுமா?

மோகன வெங்கடாசலபதி

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
love_3020565f.jpg
 

தன்னுடன் படிக்கும் மாணவன் மீது நதியாவுக்கு ஏற்பட்டிருப்பது என்ன? நதியாவுக்கு மட்டுமல்ல, நதியாவின் வயதில் உள்ள இளைய சமூகத்தினருக்கு எதிர்பாலினத்தவர் மீது ஏற்படும் உணர்வுக்கு என்ன பெயர்? ஈர்ப்பு. ஆணிடம் பெண்ணுக்கும், பெண்ணிடம் ஆணுக்கும் பார்த்ததுமே ஏற்படுகிற அழகான உணர்வே இந்த ஈர்ப்பு. ஆங்கிலத்தில் இதை ‘இன்ஃபாச்சுவேஷன்’ என்று சொல்வோம்.

தயக்கமும் வெட்கமும் கலந்த ஒரு குறும்புப் புன்னகை முகத்தில் குடிகொள்ளும். அவர்களை நினைக்கும்போதே உடல் முழுக்கச் சிலிர்ப்பு பரவும். பசி மறந்துபோகும், தூக்கம் தொலைந்துபோகும். அவர்கள் வந்துபோகிற ஒவ்வொரு காலைப் பொழுதும் மிகவும் ரம்மியமாகக் காட்சிதரும். அவர்களைத் தவிர இந்த உலகில் வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அதனாலேயே வேறு எதையும் பார்க்கத் தோன்றாது. அவர்களது நடை, உடை, சின்னத் தவறு, செல்லக் கோபம் என்று எல்லாமே பிடித்துப்போகும்.

கண்டதுமே காதலா?

தன்னையே மறக்கிற அளவுக்கு ஒருவரைப் பிடிக்கிறதே, இது காதலா என்றால் நிச்சயம் இல்லை. கண்டதுமே காதல் சத்தியமாக வராது. திரைப்படங்களில் வரலாம், தொலைக்காட்சித் தொடர்களில் வரலாம். ஆனால் வாழ்க்கை என்னும் முழுநீளப் படத்தில் கண்டதுமே காதல் பெரும்பாலும் சாத்தியமில்லை. இங்கே ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ இல்லை. கண்டதுமே ஈர்ப்பு மட்டும்தான் ஏற்படும்.

காதலுக்கும் ஈர்ப்புக்கும் நிறைய வேறுபாடு உண்டு. காதல் ஆழமானது. ஈர்ப்பு மேலோட்டமானது. காதல் புற அழகைத் தாண்டியும் ஆழமான நேசம் கொண்டது. பிடித்தவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பு வைப்பதும், அவர்களின் சுக துக்கங்களில் சரிபாதி பங்கெடுத்துக் கொள்வதும், அவர்களுக்காக விட்டுக்கொடுக்கத் தயங்காமல் இருப்பதுமே காதலாக அறியப்படுகிறது. ஆனால் ஈர்ப்பு புற அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அகம் எப்படி இருக்கும் என்ற தேடலோ அக்கறையோ இல்லாதது.

ஈர்ப்பு என்பது கண நேரப் பரவசமும் மகிழ்ச்சியும் தருவது. அதைக் காதலுடன் போட்டுக் குழப்பிக்கொள்கிறவர்கள் இங்கே அதிகம். அப்படியொரு குழப்பம்தான் நதியாவுக்கும். அதனால்தான் சக மாணவர்மீது அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பை என்னவென்றே இனம் காணமுடியாமல் குழம்பினார். பருவ வயதின் இனிய இம்சைகளில் இந்த ஈர்ப்பு முதன்மையானது.

தீபாவளியின்போது நாம் கொளுத்தும் புஸ்வாணம் போன்றது ஈர்ப்பு. நெருப்புப் பற்றியதுமே சடசடவென தீப்பூக்கள் உயர்ந்து சிதறும். அடுத்த நொடியே அடங்கிப் போகும். அப்படித்தான் ஈர்ப்பும். அந்த வயதில் பட்டென்று பற்றிக்கொண்டு உடல் முழுக்கப் பரவசத்தைத் தரும். ஆனால் அதற்கு நீடித்த ஆயுள் கிடையாது. இதைப் புரிந்துகொள்ளாமல் பலரும் அது மிகப் பெரிய உன்னத உணர்வு என்று நினைத்துப் புலம்புவார்கள்.

பொய்களும் அழகே

இன்னொரு விஷயம் தெரியுமா? காதல் உண்மையானது. அதற்குப் போலித்தனம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஈர்ப்புக்குச் சின்னச் சின்னப் பொய்களும் நடிப்பும் தேவைப்படும். எதிர்பாலினத்தவரைக் கவர வேண்டும், அவர்கள் முன்னால் ஹீரோ அல்லது ஹீரோயின் போலத் தெரிய வேண்டும் என்பதற்காக இல்லாத வித்தையை எல்லாம் செய்யச் சொல்லும். நம்முடைய இயல்பைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டு நடிக்கச் சொல்லும். நம் சுயத்தை இழந்து அல்லது மறைத்து நடிக்கிறோம் என்ற குற்றவுணர்வு அங்கே தோன்றாது. காரணம் ஈர்ப்பு என்பது மேலோட்டமானது. அந்த நேரத்து மகிழ்ச்சியை மட்டுமே வேண்டுவது.

ஈர்ப்பில் எல்லாமே உடனுக்குடன் தேவைப்படும். ஒரு நாள் பார்க்கவில்லை என்றால், பேசிக்கொள்ளவில்லை என்றால் அந்த நாளே நரகமாகத் தெரியும். பெரிதாக ஏதோவொன்றை இழந்தது போல சோகம் சூழும். பிரியும்போது பதற்றம் ஏற்படும். மீண்டும் எப்போது சந்திப்போம் என்ற பரிதவிப்பு தொடரும். இதெல்லாம் ஈர்ப்பின் விளைவுகள். ஆனால் காதல் அப்படியல்ல. விலகிச் சென்றாலும் நெருங்கி வருவதே காதல்.

எதிர்பாலினக் கவர்ச்சிதான் காதலுக்கும் ஆரம்பப் புள்ளி என்றாலும் அது பயணிக்கும் பாதை வேறு.

ஈர்ப்பில் எதற்கெடுத்தாலும் சந்தேகமும் பயமும் இருக்கும். அவன்/அவள் நம்முடையவராக நீடிப்பாரோ என்ற கவலை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இதையெல்லாம் கடந்த நிலையே காதல்.

மலர்வதும் உதிர்வதும்

ஈர்ப்பு மேலோட்டமானது என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன். வாசுவும் கீதாவும் கல்லூரி நண்பர்கள். இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்தார்கள் அல்லது அப்படி நம்பினார்கள். கீதா அணிந்துவரும் ஆடைகள் வாசுவுக்கு மிகப் பிடிக்கும். வாசுவின் தெளிவான பேச்சுக்கு கீதா ரசிகை.

கீதா அணிந்துவரும் ஆடைகளில் மயங்கிய வாசுவுக்கு, கீதா ஒரு முன்கோபக்காரி என்பதும் அலட்சிய மனோபாவம் கொண்டவள் என்பதும் தெரியாது. வாசுவின் பேச்சில் மயங்கிய கீதா, அவன் தன் நண்பர்களுடன் இருக்கும்போது உதிர்க்கிற மட்டரகமான வார்த்தைகளை அறிந்துகொள்ளவில்லை. இருவருமே இருவரின் பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே அறிந்துவைத்திருந்தார்கள். காரணம் ஈர்ப்புக்கு அது மட்டும் போதும். நெகட்டிவ் சங்கதிகளைத் தெரிந்துகொள்ள விரும்பாதது பெரிய குற்றமல்ல. அதைத் தெரிந்துகொள்ளாமலேயே காலத்தை ஓட்டிவிடலாம். காரணம் ஈர்ப்புக்கு ஆயுள் குறைவு. இருவரின் நெகட்டிவ் குணங்கள் தெரிந்த பிறகும் இருவருக்குள்ளும் புரிதல் தொடர்ந்தால்தான் அந்த ஈர்ப்பு காதலின் சாலையில் பயணிக்கும்.

அதனால் காதலையும் ஈர்ப்பையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஈர்ப்பு வருவது ஒரு பூ மலர்வதுபோல மிக இயல்பானது. சில நாட்களில் அந்தப் பூ வாடிப்போய், புல்வெளியில் அழகாக உதிர்ந்தும் போகலாம். அதுவும் இயல்புதான். அதைப் புரிந்துகொண்டால் ஈர்ப்பு நல்லது!

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-02-பார்த்ததுமே-பற்றிக்கொள்ளுமா/article9139843.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காதல் வழிச் சாலை 03: ‘நோ’ சொன்னால் ஏத்துக்கணும்!

 

 
no_3035674f.jpg
 

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற ஈர்ப்பு குறித்து நான் எழுதியதைப் படித்த பலரும், “எல்லாமே ஈர்ப்பு என்றால் எது காதல்? ஈர்ப்பு காலப்போக்கில் காதலாக மாறாதா? ஈர்ப்பு வருவதே தவறா, நாங்கள் என்ன செய்வது?” என்று சரமாரியாகக் கேள்விக் கனைகளைத் தொடுத்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பதில்தான். ஈர்ப்பு என்பது ஒரு கட்டம்தான் என்பதை முதலில் உணர வேண்டும். காலப்போக்கில் அது காதலாக மாறலாம், மாறாமலும் போகலாம்.

அவசரக் காதல் வேண்டாமே

ஒரு பெண்ணையோ, ஆணையோ பார்த்ததும் காற்றில் மிதப்பதுபோல துள்ளலான உணர்வு தோன்றுவதற்குக் காரணம் மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்கள்தான். ‘டோப்பமைன்’ (Dopamine) என்ற ‘நியூரோ டிரான்ஸ்மிட்டர்’ அவற்றில் முக்கியமானது. காதல் கெமிஸ்ட்ரியின் கேப்டன் இவர். இயல்பாக எழும் இந்த அழகிய உணர்வுகளைக் கட்டுப்படுத்த மெனக்கெட வேண்டாம். ஆரம்பகட்ட உணர்வுப் பிரவாகமான இந்த ஈர்ப்புதான் காதல் என்ற அவசர முடிவுக்கும் வர வேண்டாம்.

ஈர்ப்பின் மறுபக்கம்

அழகான ஈர்ப்பில் ஆபத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. எதிர் பாலினம் மீது ஏற்படும் முதல் கட்ட ஈர்ப்பு உணர்வை ‘க்ரஷ்’ (crush) என்றும் சொல்வார்கள். இந்த உணர்வின் ஆயுட்காலம் ஒன்றரை முதல் மூன்று ஆண்டுகள்வரைதான் என்கின்றன பல உளவியல் ஆய்வுகள். அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த உணர்வுகளின் வீச்சு குறையத் தொடங்கும். அதற்குப் பிறகு பார்ட்னரின் மறுபக்கம் தெரிய ஆரம்பிக்கும். பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தலை தூக்கும்.

நம்மவரைப் பற்றிய எதிர்மறை விஷயங்களை ஈர்ப்பு கட்டத்தில் கவனித்திருக்க மாட்டோம். கவனிக்கவும் முடியாது. ஆனால் உணர்ச்சிகள் அடங்கும் நேரம் வந்தவுடன் உண்மைகள் மேலெழும்பத் தொடங்கும்.

இந்த ஈர்ப்பில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ஒருவர் மீது அதீத ஈர்ப்பில் இருக்கும்போது, அவரைத் தவிர இந்த உலகில் வேறெதுவுமே நம் கண்களுக்குத் தெரியாது. வீடு, நண்பர்கள், சமூகம் என்று எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்.

ஈர்ப்பில் விலகல் வந்துவிட்டால் உற்சாகம் வடிந்துபோகும். இந்த உலகமே நிறமிழந்துவிட்டதுபோலத் தோன்றும். யாரையும், எதையும் பிடிக்காது. ஓரளவு தெளிவுடன் இருந்தால் இவற்றையெல்லாம் கடந்து வந்துவிடலாம்.

மறுத்துவிட்டார் தோழி

பலர் தங்களுடைய மனக் குழப்பங்களை என்னிடம் மின்னஞ்சல் வாயிலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒரு மின்னஞ்சலைப் படித்ததும் என்னால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதை உங்களுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

“நான் பொறியியல் இறுதியாண்டு படிக்கிறேன். நெருங்கிப் பழகிய தோழி ஒருவரை மனதார நேசிக்கிறேன். சமீபத்தில் என் காதலைச் சொன்னேன். மறுத்துவிட்டார். நண்பன் என்ற எல்லைக்கு மேல் உன்னை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்கிறார். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. படிக்க முடியவில்லை. எதன் மீதும் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த மனச்சோர்விலிருந்து வெளியே வரவும் முடியவில்லை. எல்லோர்

மீதும் எரிந்து விழுகிறேன். சமயங்களில் உலகமே இருண்டு போனது போன்ற மன அழுத்தத்தை உணர்கிறேன். அவர் என் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு உதவுங்கள் ப்ளீஸ்….”

காதலுக்குத் தோல்வியில்லை

இந்த இளைஞர் மட்டுமல்ல, நம் சமூகத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சினை இது. நம்மில் பலருக்கும் நிராகரிப்புக்கும் தோல்விக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. காதலில் ஒருவரை ஒருவர் நிராகரிக்கலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது. காரணம் காதலுக்கு எப்போதும் தோல்வியில்லை.

சரி, இந்த இளைஞரின் விஷயத்துக்கு வருவோம். சகோதரா, ‘நான் உன் வாழ்க்கைத் துணை இல்லை’ என்று புரியவைத்ததற்காக உன் தோழிக்கு நன்றி சொல். காதல் என்பது இரு கை ஓசை. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது மட்டுமல்ல காதல். இருவரும் சேர்ந்து ஒரே திசையில் பார்ப்பதே காதல்.

உங்கள் மீது காதல் இல்லை என்று சொல்லும் பெண்ணின் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். கட்டாயப்படுத்தி மணம் புரிந்தாலும் அன்பு இல்லாமல் தொடங்கும் வாழ்க்கை நிச்சயம் இனிக்காது. ஒவ்வொரு தடங்கலுக்கு அப்பாலும் அதைவிட ஏதோவொன்று பெரிதாக, நல்லதாக நமக்காகக் காத்திருக்கிறது என்று நம்புங்கள்.

என் வலி எனக்குத்தான் புரியும் என்று நீங்கள் புலம்பலாம். மூளையில் நடக்கும் ரத்த ஓட்டம் போன்ற விஷயங்களைப் பதிவு செய்வதற்கு fMRI என்ற பரிசோதனை உதவுகிறது. உடல் வலியால் துடிப்பவர்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதே போல் காதல் தோல்வியில் சிக்கி, நிராகரிப்பின் வலியில் இருப்பவர்களுக்கும் இதே சோதனை நடத்தப்பட்டது. முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. காரணம் உடல், மனம் இரண்டின் பாதிப்புக்கும் மூளை ஒரே விதமாகத்தான் செயல்பட்டிருக்கிறது. அதனால் மன வலி, உடல் வலியைவிட அதிகம் என்ற பிரமையை விட்டுவிடுங்கள்.

நதிபோல ஓடிக்கொண்டிரு

முதலில் கழிவிரக்கத்தை ஒழித்துக் கட்டுங்கள். அடுத்து என்ன, என்று நதிபோல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். உங்கள் திறமைகள், நண்பர்கள், உறவினர்கள் என்று உங்களைச் சுற்றி நல்ல விஷயங்கள் எத்தனையோ உண்டு. அதையெல்லாம் நினைத்து, நிராகரிப்பை மறந்துவிட்டு மனதை மடைமாற்றுங்கள்.

முடிந்தவரை உங்கள் தோழியைப் பார்ப்பதைத் தவிருங்கள். பார்க்க நேரிட்டாலும் கண்ணியமான இடைவெளியோடு பேசுங்கள். அவர் குறித்த நினைவுகளை உங்கள் மனதிலிருந்து நீக்க முற்படுங்கள். அனைத்துக்கும் மேலாக வாழ்க்கையில் ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதை நோக்கிப் பயணப்படுங்கள். அந்தப் பாதையில் காதல் தானாகவே வந்து உங்கள் கைகளில் சேரும். வாழ்த்துகள்!

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-03-நோ-சொன்னால்-ஏத்துக்கணும்/article9193035.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 04: வாழ்வை மீட்டுத் தந்த காதல்!

 

 
relationship_3044421f.jpg
 

என்னைச் சந்திக்க வந்திருந்தனர் அந்த இளம் ஜோடி. “முடியலை சார். எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படறார். யாரும் என்கிட்டே பேசக் கூடாதுங்கறார். எப்படி சார் அப்படி இருக்க முடியும்? பால்காரன் முதல் கொண்டு கேபிள் பையன்வரை என்னை இணைச்சு வெச்சு சந்தேகப்படறார். நான் தப்பு செய்யலேன்னு அவருக்கு நல்லாத் தெரியும். சமயங்கள்ல அவர் முகத்தை மூடிட்டு அழறதைப் பார்க்கப் பாவமா இருக்கு. எங்களோடது லவ் மேரேஜ்ங்கிறதால என் அம்மா வீட்டுக்கும் போக முடியாது. இவர் வீட்டிலும் யாரோட சப்போர்ட்டும் இல்லே. என் மீது அவ்வளவு பிரியம் வச்சிருப்பார். இப்போ ஆறு மாசமா எங்க நிம்மதியே போச்சு” என்று வெதும்பலாக ஆரம்பித்தார் அந்த இளம் மனைவி. கையில் எட்டு மாதக் குழந்தை.

“எனக்காக அவங்க வீட்டில தனி ஆளா போராடினா. கல்யாணமாகி அஞ்சு வருஷமாகுது. சொன்னா நம்ப மாட்டீங்க. இதுவரைக்கும் அம்மா வீட்டுக்குனு அவ போனதே இல்லை. போகவும் விரும்பவில்லை. நான்னா அவளுக்கு உயிர் சார்… ஆனா இப்போ அவ சரியில்லே சார்” என்றார் அந்த இளைஞர்.

 

இல்லம் சங்கீதம்

வீட்டின் பின்புறத்தில் சிறியதாக வொர்க்‌ஷாப் வைத்து நடத்துகிறாராம்.

“நாள் முழுக்க அவர் கண் பார்வையிலேயே இருக்கிறேன். குழந்தையைப் பார்க்க, சாப்பிடன்னு ஒரு நாளுக்குக் குறைஞ்சது ஏழு முறையாவது வீட்டுக்கு வந்து போய்க்கிட்டுத்தான் இருப்பார். தன் சந்தேகம் அர்த்தமில்லாதது, அபத்தமானதுன்னு அவருக்கே தெரியுது. ஆனா பாவம் எதனாலோ இப்படி ஆகிட்டார். எப்படியாச்சும் சரி பண்ணுங்க டாக்டர்” என்று இயலாமையும் ஆற்றாமையும் கலந்து புலம்பினார் அந்தப் பெண்.

சின்ன விஷயத்துக்கெல்லாம் முணுக் முணுக்கென்று கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போகும் பெண்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகளாகத் தன் பிறந்த வீட்டுக்குப் போகாத அந்தப் பெண்ணை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. இவர்களின் காதல்தான் பிறந்த வீட்டின் எதிர்ப்புக்குக் காரணமாம். சரி... விஷயத்துக்கு வருவோம்.

“உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கா?” என்று கேட்டேன். “ம்…” என்று தலையாட்டினார். “முன்னெல்லாம் மாசத்துக்கு ரெண்டு முறைதான் குடிக்கப் போவார். இப்போ கொஞ்சம் அதிகமாகக் குடிக்கிறார். வாரத்துல ரெண்டு நாளாவது குடிச்சிடுவார். கேட்டா, ‘வேலை கஷ்டமா இருக்கு. உடல் வலி தெரியாம இருக்க குடிக்கிறேன்’னு சொல்றார். குடிச்சிட்டா கலாட்டா எல்லாம் பண்ண மாட்டார். இதனால ஏதும் பிரச்சினையா டாக்டர்?” என்று அப்பாவியாகக் கேட்டார் அந்தப் பெண்.

காதல் என்பதன் சக்தியைப் பாருங்கள். கணவன் லேசாகக் கையை ஓங்கியதற்காகக் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போய் அழுது ஆர்ப்பரித்தார் ஒரு பெண். இவர் ஒன்று சொல்லப்போக, அது ஒன்பதாகிப்போய் அந்தப் பெண்ணின் அண்ணன்மார்கள் முஷ்டியை உயர்த்த, பிறகென்ன… விஷயம் இப்போது மகளிர் போலீஸில். போன வாரம் இப்படி ஒரு விவகாரத்தைப் பார்த்தேன்.

 

ஆரோக்கியமற்ற பொறாமை

ஆனால் இந்தத் தம்பதியின் விஷயத்திலோ கணவர் அனாவசியமாகச் சந்தேகப்படுகிறார். ஆனால் இருவருக்கும் பரஸ்பரம் காதல் இருக்கிறது. இருவருமே காதலில் ஜெயிக்கப் பாடுபட்டிருக்கிறார்கள். ஆக என்ன சிரமம் வந்தாலும் நமக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியில் நிறையத் தாங்குகிறார் அந்தப் பெண். ஒழுக்கமாக இருக்கும் ஒரு பெண்ணை எந்த ஆதாரமும் இல்லாமல் அவள் காதல் கணவனே தவறாகப் பேசுவது என்பது கொடுமையிலும் கொடுமை.

என்ன ஆயிற்று அந்த இளைஞனுக்கு? அவருக்கு ஏற்பட்டிருப்பது ஒருவித உளவியல் கோளாறு. ஆரோக்கியமற்ற ஒரு பொறாமை (Morbid jealousy) என்று சொல்லலாம். ஆண், பெண் உறவில் அவ்வப்போது சின்னப் பொறாமைகள் வருவது இயல்பே. நம்மவர் மீதுள்ள அதீதப் பற்றின் காரணமாகவும் நம் மீதே நமக்குள்ள தாழ்வு மனப்பான்மை, பாதுகாப்பற்ற உணர்வு இவை காரணமாகவும் பொறாமை வரலாம். ஆனால் அதுவே எல்லை மீறிப்போகும் போதுதான் பல சிக்கல்கள் எழுகின்றன.

 

அலைக்கழிக்கும் சந்தேகம்

பார்ட்னரை ஃபாலோ செய்வது, அவரது சமூக வலைத்தள தொடர்புகளைத் திருட்டுத்தனமாக ஆராய்வது, வீட்டில் கேமராவை வைத்து ரெகார்டு செய்யலாமா அல்லது ஏதேனும் தனியார் உளவாளிகளை ஏற்பாடு செய்யலாமா என யோசிப்பது என்று இவர்களின் சந்தேகம் பல கோணங்களில் பரவும். விளைவு? தினமும் வீட்டில் சண்டையும் சச்சரவும்தான். வாக்குவாதம் முற்றினால் போட்டு உதைக்க வேண்டியது. பிறகு போலீஸ், வழக்கு, விசாரணை இத்யாதிகள்.

மனைவி தனக்கு துரோகம் இழைக்கிறார் என்ற இந்த ஒரு நினைப்பு, பல உளவியல் கோளாறுகளுக்கான ஒரு அறிகுறி. மனச்சிதைவு நோய், மிதமிஞ்சிய மதுப்பழக்கம், போதை வஸ்துக்களுக்கு அடிமையாவது, இருதுருவக் கோளாறு மற்றும் ஆளுமைக் கோளாறுகள்… இப்படிப் பல கோளாறுகளின் ஒரு வெளிப்பாடாக இருக்கலாம் இந்தச் சந்தேக நோய்.

எங்கே போனாய், எதற்கு இவ்வளவு நேரம், அவன் எதற்கு உனக்கு ஹலோ சொன்னான், நான் கறுப்பாக இருப்பதால் உனக்கு சலித்து விட்டதா என்பன போன்ற இம்சைகள் தொடங்கி உச்சகட்டமாக படுக்கை விரிப்புகளைச் சோதனை செய்வதுவரை இவரின் நடவடிக்கைகள் எல்லை தாண்டிய பயங்கரவாதம் போலத்தான் இருக்கும்.

இல்லாத ஒன்றை இருப்பது போல் நினைப்பதை ‘டெல்யூஷன்’ (Delusion) என்கிறது உளவியல். மருட்சிக் கோளாறு (Delusional disorder) அல்லது எண்ண மாயை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு இப்படி ஒரு சந்தேக நோய் இருந்தது. அதனால் இந்நோயை ‘ஒதெல்லோ சிண்ட்ரோம்’ (Othello syndrome) என்றே அழைப்பார்கள்.

 

சாத்தியப்படுத்திய காதல்!

நல்ல மருத்துவச் சிகிச்சைகள் உள்ளன. மனநல மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொண்டாலே பாதி சந்தேகங்கள் தீர்ந்துபோகும். குடி முதலான போதைப் பழக்கங்களை முழுவதும் நிறுத்த வேண்டும். இவை தவிர ஏகப்பட்ட உளவியல் சிகிச்சைகள் உள்ளன. அறிவாற்றல் மற்றும் நடத்தை மாற்று சிகிச்சை (cognitive behaviour therapy) என்பது முக்கியமானது. நமது எண்ணங்களை மாற்றி நடத்தையையும் சீரமைக்கும் ஒரு அற்புதமான சைக்கோதெரபி இது.

சிகிச்சை ஆரம்பித்த மூன்றே வாரங்களில் அந்த இளைஞனிடம் மாற்றம் தெரிந்தது. தொடர்ச்சியான கவுன்சலிங்கும் தரப்பட அவர் வெகுவாகத் தேறினார்.

எத்தனை சிக்கல்கள் வந்தாலும், அது மனநோயாகவே இருந்தாலும் தன் கணவனைப் பிரியாது அவருடனே இருந்து நோயை மாத்திரமல்ல, வாழ்க்கையிலும் ஜெயித்தார் அந்தப் பெண்! அவர்களுக்கிடையே மலர்ந்திருந்த உண்மைக் காதலே இதைச் சாத்தியப்படுத்தியது!

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-04-வாழ்வை-மீட்டுத்-தந்த-காதல்/article9218656.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 05: திரும்பத் திரும்பக் காதலிக்கலாமா?

 

 
love_3052727f.jpg
 

அந்த இளைஞரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். பேயறைந்தவர் போல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தார். ஒரு பெண்ணின் பெயரைத் திரும்பத் திரும்ப உச்சரித்துக்கொண்டிருந்தரர். “இவன் சரியா தூங்கி மூணு நாளாச்சு சார். வீட்டுக்கே வராம எங்கேயோ சுத்திக்கிட்டு இருந்தான். வேலையை விட்டு நின்னுட்டான். தேவையில்லாத நிறைய மாத்திரைகளை பைக்குள் வெச்சிருந்தான். தற்கொலை பண்ணிக்கப்போறானோன்னு பயமா இருக்கு. இவன் ஒரு பொண்ணை காதலிக்கறான்னு எங்களுக்குத் தெரியவந்தது. அதுல ஏதாவது பிரச்சினையான்னும் தெரியலை. எங்க பையனை மீட்டுக்கொடுங்க சார்” என்று கலங்கியபடியே சொன்னார்கள் அந்த இளைஞனின் அப்பாவும், அண்ணனும்.

அந்த இளைஞரின் மொபைலை எடுத்துக் காட்டினார் அவருடைய அண்ணன். “நான் சாகப் போகிறேன். எனக்கு நீ வேண்டும். என்னை நீ புரிந்துகொள்ளவில்லை. நான் உன்னை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்கிறேன். நீ இல்லாமல் நான் இருக்கமாட்டேன். நான் எங்கோ கண் காணாத இடத்துக்குப் போகிறேன் சாவதற்கு. என் பிணத்தைப் பார்க்கவாவது நீ வருவாயா மாட்டாயா?” - இப்படியான மெசேஜ்கள் நிறைந்திருந்தன. காதல் விவகாரங்களில் இது சகஜம்தான். ஆனால் இந்தக் குறுந்தகவல்களின் எண்ணிக்கை சுமார் இருநூறைத் தாண்டியிருக்கிறது, அதுவும் இரண்டே நாளில். அது இயல்பில்லை, அசாதாரண நடத்தை!

“அந்தப் பொண்ணைப் போட்டு டார்ச்சர் செய்திருப்பான் போல சார். அவங்களும் இவனைக் காதலிக்கறாங்க. ஆனால் சமீபகாலமாக இவன் ரொம்ப தொந்தரவு தர்றான்னு தோணுது. ஒரே நாளில் நூத்துக்கணக்கில் மெசேஜ் அனுப்பறது. நிமிஷத்துக்கு நிமிஷம் போன் பண்றது, அவங்க வேலை செய்யற ஆபீஸுக்குத் தொடர்ந்து ஃபேக்ஸ் குடுத்துட்டே இருக்கறதுன்னு இவனோட தொந்தரவு எல்லை மீறியிருக்கு. ரெண்டு பேருமே ஒருவரையொருவர் புரிஞ்சிக்கிட்டு காதலிக்கறபோது இவன் ஏன் இந்த மாதிரி நடந்துக்கறான்னு புரியலை” என்று வருத்தப்பட்டார் அவருடைய அண்ணன். அப்பாவும் அண்ணனும் பேச, அந்த இளைஞரோ எந்த உணர்வுமின்றி விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தார்.

ஆட்டிப்படைக்கும் அதீத உணர்வு

ஒரு விஷயம் நமது எண்ண வெளியெங்கும் நிறைந்திருப்பது, வேறு எதையும் ஒரு பொருட்டாக எண்ணத் தோன்றாமல் சமூகம், குடும்பம், தொழில் என எல்லாவற்றையும் புறந்தள்ளி ஒரு நபரைப் பற்றியே மீண்டும் மீண்டும் எழும் ஆரோக்கியமற்ற உந்துதலான உணர்வுகள் போன்றவற்றை ஆங்கிலத்தில் ‘அப்செஷன்’ என்று சொல்வார்கள். தான் நேசிக்கும் ஒரு பெண் அல்லது ஆணிடத்தில் இதுபோன்ற அசாதாரணமான உணர்வுகளைச் செலுத்தித் தானும் நிம்மதி இழந்து அடுத்தவரையும் உயிரோடு கொல்லும் இந்த விசித்திரக் காதலே ‘அப்செஷனல் லவ்’. அந்த இளைஞர் இப்படி ஒரு உணர்வுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டேன்.

துன்புறு காதல்

கீழ்வரும் அறிகுறிகளைப் பாருங்கள்:

# தாழ்வு மனப்பான்மை நிறைய இருக்கும்.

# ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். உதாரணமாக, ‘நீ என்னைக் காதலிக்கிறாய்தானே?’ என்று தினமும் நாற்பது முறையாவது கேட்பது.

# திரும்பத் திரும்பக் கைப் பேசியில் அழைப்பது, குறுந்தகவல் அனுப்புவது. ஒன்று, தமக்குப் பிடித்தவரின் நேர்மறை விஷயங்களைச் சிலாகித்துப் பேசுவது. இல்லையென்றால் அவரின் எதிர்மறைப் பக்கங்களைப் பற்றியே பேசி இம்சிப்பது. இப்படித்தான் இருப்பார்களே ஒழிய நடுநிலைக் கண்ணோட்டமே இருக்காது.

# நேசிப்பவர்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்துகொண்டு அவை கிடைக்காமல் இருக்கச்செய்ய முயல்வது. உதாரணம் பணம், உணவு. # தான் நேசிக்கும் நபருடன் உலகின் எல்லை முடிந்து போவதாகக் கருதுவது. வேலை, ஓய்வு, நட்பு, குடும்பம், கடமை இவற்றையெல்லாம் விலக்கிவைத்து விடுவார்கள்.

# நேசிப்பவரின் அண்மையும் அவரது ‘க்ரீன்’ சிக்னலும் போதும். அதீத சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் பெறுவார்கள்.

# எங்கே கை நழுவிப்போய் விடுவாரோ என்ற பயத்திலும் சந்தேகத்திலும் அனைத்து விதங்களிலும் வேவு பார்ப்பது. ஏதேனும் தவறாகத் தென்பட்டால் எந்த அளவுக்கு வன்முறை என்றாலும் துணிந்து இறங்குவது.

இந்த அறிகுறிகளுடன் ஒரு காதல் பயணிக்கிறது என்றால் அது ஆரோக்கியமானதல்ல. காதல் தன்னலமற்றது. கருணை மிக்கது. தியாகங்கள் நிறைந்தது. நம்மவரின் சுக துக்கங்களை நம்முடையது போல கருதுவது. பொது வாழ்க்கையிலும் நம்மை வெற்றியாளனாக்கி முழு மனிதனாக வாழச்செய்வது.

நிழலும் நிஜமும்

இந்தத் துன்புறு காதலைப் போன்று இம்சைக்கு ஆளாக்குவதல்ல காதல். பெரிய அளவிலான உளவியல் கோளாறுகளின் ஒரு வெளிப்பாடாகவே இந்தத் தொல்லைக் காதலைப் பார்க்க வேண்டும். குடும்பத்தில் யாருக்கேனும் மனக் கோளாறுகள் இருந்தாலும் இப்படி அவர் பாதிக்கப்படச் சாத்தியம் உண்டு. சமூகத்தில் 0.1% பேருக்கு இப்படியான உளவியல் கோளாறுகள் இருக்கின்றன. தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணையோ அல்லது காதலிக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்காகவோ கத்தியைத் தூக்கும் வன்முறைகளின் பின்னணியில் இப்படிப்பட்ட உளவியல் பிரச்சினைகள் ஒளிந்திருக்கலாம்.

பல திரைப்படங்களில் காதல் என்ற பெயரால் சித்தரிக்கப்படும் பத்தாம்பசலித்தனங்களின் அடிப்படை இந்த இம்சைக் காதல்தான். திரையில் சுவாரஸ்யமாக இருக்கும், ஆனால் நிஜ வாழ்விலோ இது நோய். மூன்று மணி நேரத்தில் காதலித்து வெற்றி அல்லது தோல்வி பெற்று, வில்லனைக் கொன்று அல்லது தன்னைக் கொன்று முடிந்துவிடுவதல்ல நிஜ வாழ்வின் காதல்.

ஆண், பெண் இரு பாலருமே இந்தத் தொல்லைக் காதலால் பாதிக்கப்படுவதுண்டு. ஆனால் பெண்கள் பெரும்பாலும் தனக்குப் பரிச்சயமானவர்களிடத்திலோ தமக்கு உதவி செய்தவர்களிடத்திலோதான் இப்படி ‘துன்புறு காதலில்’ மாட்டிக்கொண்டுவிடுவார்கள். புதியவர்களிடமோ அறிமுகமில்லாதவர்களிடமோ அவர்கள் இப்படிச் செய்வதில்லை.

எல்லை நல்லது

மேற்சொன்ன இளைஞரின் வாழ்வில் அந்த இளம் பெண்ணின் நிலைமை இன்னும் மோசம். இருவரும் மூன்றாண்டுகளுக்கும் மேலாகக் காதலிக்கிறார்கள். பையன் வீட்டில் திருமணத்துக்கும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் இப்போது மிகுந்த பயத்தில் இருக்கிறார். காதலுக்கும் ஒரு அளவீடு உண்டுதானே? மூச்சுவிட முடியாத அளவுக்கு, காதல் என்ற பெயரில் இப்படி மன ரீதியாகத் துன்பத்துக்கு ஆளானவுடன் அவர் பயப்பட, அதைக்கண்ட நம் இளைஞர் ஏன் என்னை விட்டு விலகுகிறாய் என்று தன் இம்சைகளை மேலும் அதிகரிக்க… இதோ சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டுவிட்டார்.

காதலிக்கிறேன் பேர்வழி என்று ஒரு உறவை ஏற்படுத்திக்கொண்டு அதன் பின்னர் நம்மவரின் உண்மைப் பக்கங்களைக் கண்டு அதிர்ந்து போயிருப்பவர்களுக்காகச் சொல்கிறேன். அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல காதலும் நஞ்சுதான். காதலின் பெயரால் இன்று சமூகத்தில் நிகழும் பல சீரழிவுகளின் பின்னணியில் இதுபோன்ற உளவியல் சிக்கல்களின் பங்கு நிறைய உண்டு. அதற்கெல்லாம் சிகிச்சையும் உண்டு. அதீதத்தின் பெயரால் காதலையும் வதைக்க வேண்டாம், விட்டுவிடுவோம். காதலும் கொஞ்சம் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே!

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-05-திரும்பத்-திரும்பக்-காதலிக்கலாமா/article9249469.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 06: சந்தேகத்துக்கு இங்கே இடமில்லை!

மோகன வெங்கடாசலபதி

 

 
kadhal_3060024f.jpg
 

காதலைத் திரும்பத் திரும்பக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும் ‘அப்செஷன்’ பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். சாதாரணமாகவே காதலில் இந்த அப்செஷன் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். காதலிக்கப்படுபவரும் ஏற்றுக்கொண்டு எல்லாம் சரியாகப் போனால் அந்த அப்செஷன் லேசாகக் குறையவும் செய்யும். ஆனால் பழகுவதற்கு மறுத்தாலோ பழகிவிட்டு வெறுத்தாலோதான் இந்த உணர்வு விஸ்வரூபம் எடுக்கும். நம்மில் உள்ள கீழ்ப்படிதலற்ற ‘ஈகோ’ பல்வேறு உத்திகளைக் கையாண்டு எதிர்ப்பாலினத்தை வளைக்கப் பார்க்கும்.

அன்பு குறைந்து ஆளும் வெறி அதிகரிக்கும். ஏற்கெனவே உளவியல் கோளாறுகள், போதைப் பழக்கங்கள் மற்றும் ஆளுமைக் கோளாறுகளால் (personality disorders) பாதிக்கப்பட்டிருந்தால் நிலைமை இன்னும் மோசம். மனப் பதற்றம், மனச் சோர்வு, அதீத பயம் போன்ற உளவியல் கோளாறுகளின் தாக்கம் இப்பொதெல்லாம் நிறைய இருக்கிறது. மது முதலான போதைப் பழக்கங்களும் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் வேலையைச் செய்கின்றன. சினிமாக்களும், அவற்றைப் பிரதிபலிக்கும் காதல் சம்பந்தமான வன்முறைச் சம்பவங்களும் மேலும் மேலும் அந்த உளவியல் சிக்கல்களை அதிகமாக்குகின்றன.

பசியில்லை தூக்கமில்லை

லேசான எண்ணச் சுழற்சியாக இருந்தது, ஒரு நோயாக மாறித் தலைவிரித்து ஆடத் தொடங்குவது தான் பிரச்சினையின் ஆரம்பம். அடித்தளம் சரியில்லாத கட்டிடத்தின் மீது இடி விழுவதைப் போன்றது இது. தெளிவான சிந்தனை உள்ளவர்கள் காதலிக்கத் தொடங்கினாலே, ‘பசிக்கலை, தூக்கம் போகுது, குழப்பமாக இருக்கு, நடக்குமா இல்லையான்னே தெரியலை’ என்று பாதி நேரம் புலம்பலிலேயே கழியும். இதில் தவறில்லை. ஆரோக்கியமான காதல் என்று பின்னாளில் பேரெடுத்த காதல்கள்கூட இப்படி ஆரம்பித்தவையாக இருக்கலாம்.

ஒரு சாதாரண க்ரஷ், இன்ஃபாச்சுவேஷன் என்று தொடங்கினாலும் மனங்களும் குணங்களும் ஒத்துப்போகும்போது அந்தக் காதல் நாகரிகமடைந்துவிடுகிறது. ஆரம்பம் எப்படியிருந்தாலும் அது எடுத்துச் செல்லப்படும் விதத்தைப் பொறுத்தே அது ஆரோக்கியமான காதலா அல்லது அவஸ்தை கொடுக்கிற துன்புறு காதலா என்பதை முடிவுசெய்ய முடியும்.

“என்னப்பா வெளியில் இருக்கியா? சரி ஒரு முக்கியமான விஷயம் பேசணும். வந்ததும் என்னைக் கூப்பிடு” - இது ஆரோக்கியமான காதல். “நீ போன் பண்ணலையேன்னு இங்கே நான் கிடந்து தவிச்சிக்கிட்டுருக்கேன். என்னைவிட அப்படி என்ன உன் ஃப்ரெண்ட்ஸ் முக்கியமாப் போச்சா?” - இது அப்செஷனல் காதல். காதல் நம்மை வளர்த்தெடுக்கும். அப்செஷன் நம்மை டென்ஷனாக்கும். வளர்ச்சி இருக்காது. மருட்சியும் விரக்தியும் பதற்றமும் பயமும் குழப்பமும்தான் இருக்கும். எவ்வளவு தொலைவில் நம்மவர் இருந்தாலும் எள்ளளவு பயமும் சந்தேகமும் இல்லாமல் இயல்பாக இருப்பதே காதல்.

பின்தொடரும் தொந்தரவு

அப்செஷன் நம்மை மெல்லக் குழப்பி முழு நோயாளியாக்கிவிடும் அபாயம் இருக்கிறது. இறுதியில் ‘ஸ்டாக்கிங்’ (stalking) என்ற பின்தொடரும் தொந்தரவால் பாதிக்கப்பட்டு அவரைச்சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்துவிடுவோம். போகுமிடமெல்லாம் பின் தொடர்வது, ஒளிந்திருந்து பார்ப்பது, அவரை அறிந்தவர்களிடத்திளெல்லாம் விசாரிப்பது, அவர் எதிர்பார்க்காத வித்தியாசமான இடத்தில் அல்லது நேரத்தில் அவர் முன் போய் நிற்பது, அவர் வீட்டு வாசல், வாகனம் போன்றவற்றில் குறிப்புகள் எழுதி அவரைக் குழப்புவது, அந்தத் தெருவிலேயே சுற்றிச் சுற்றி வருவது என்ற நிகழ்வுகள் தொடர் கதையாகிவிடும். அப்செஷன் என்ற சூறைக்காற்றின் மத்தியில் சிக்கி அதனால் முழுமையாக ஆட்கொள்ளப்பட்ட நிலை இது.

இது இன்னும் உச்சத்துக்குப் போனால் நிலைமையே வேறு மாதிரி இருக்கும்.

‘அதோ அவர் என்னைத்தான் அழைக்கிறார், என்னிடம்தான் அவரது காதலைச் சொல்ல வருகிறார். ஆனால் அவரைச் சுற்றியிருப்பவர்கள்தான் தடுக்கிறார்கள். அவரது படத்தில் விரக தாபத்தில் அவர் பாடும் பாட்டு என்னைக் குறித்துத்தான். வேறு யாருக்கும் எங்கள் காதல் தெரியாது’ – சமூகத்தில் பிரபலமான ஒருவரைப் பார்த்துச் சாதாரணமான ஒருவர் இப்படிக் காதல் நோயால் வாடுவதும் ஒரு விசித்திரமான கோளாறுதான். அதைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

 

போகப் போகத்தான் பிடிக்குமா?

love_2_3060023a.jpg

“எனக்கு இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம். அவரை நேரில் பார்த்தப்போ அவ்வளவா பிடிக்கலை. ஆனால் வீட்டில் ஜாதகம் எல்லாம் பார்த்து முடிவு பண்ணிட்டாங்க. அவர்கிட்ட பேசும்போது ரொம்ப எரிச்சல்படறேன். ஆனா அவர் ரொம்ப அன்பா இருக்காரு. என்னை மனைவியாகவே நினைக்கறாரு. என் மனசு நிலையா இல்லை. ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறமும் நான் இப்படியே இருந்தா ரெண்டு பேர் குடும்பத்திலேயும் பிரச்சினை வரும். சில சமயம் அவரை நினைச்சா பாவமா இருக்கு.

நான் யாரையும் காதலிக்கவும் இல்லை. என்னோட ஃப்ரெண்ட்ஸ்கிட்டே சொன்னா இதெல்லாம் போகப் போகச் சரியாகிடும்னு சொல்றாங்க. எனக்காக வாழறதா இல்லை என் குடும்பத்துக்காக வாழறதான்னு புரியலை. ஒரே குழப்பமா இருக்கு. நான் நினைச்ச மாதிரி அவர் இல்லை. என் மனசு நிறைய நெகட்டிவா யோசிக்குதுன்னு மட்டும் புரியுது. அரேஞ்ச்டு மேரேஜ் என்றாலே இப்படித்தான் இருக்குமா? போகப் போகத்தான் பிடிக்குமா? நான் என்னதான் செய்யட்டும்?”

– எனக்கு வந்த இமெயில்களில் ஒன்று இந்தக் கடிதம். இந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான பெண்களுக்கும் இந்தக் குழப்பம் இருக்கும். அவருக்கு நான் சொல்கிற பதில்தான் அனைவருக்கும்.

அன்புத் தோழி… நீங்கள் நன்றாகக் குழம்பியிருக்கிறீர்கள். வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்து மட்டும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. புற அழகைவிட அக அழகு முக்கியம். யாரையும் காதலிக்கவில்லை என்கிறீர்கள். அவர் உங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். ஒரு மாதத்தில் திருமணம் என்று இருக்கும்போது எத்தனை ஏற்பாடுகள் முடிந்திருக்கும்? அவ்வளவு ஏற்பாடும் உங்கள் சம்மதம் இல்லாமலா நடந்திருக்கும்?

நீங்கள் தேவையில்லாமல் குழம்புகிறீர்கள். சினிமாத்தனமான எதிர்பார்ப்புகள் ஏதும் இருந்தால் விட்டொழியுங்கள். வாழ்க்கை வேறு, சினிமாக்களின் கற்பிதம் வேறு. நிஜ வாழ்க்கைக்கு அவை ஏற்புடையதாக இருக்காது. இப்படி ஆகிவிடும், அப்படி நேர்ந்துவிடும் என்று எதிர்மறையாக நினைப்பது என்பது உளவியல் ரீதியாக மனப்பதற்றம் (anxiety disorder) என்ற வகையறாவில் சேர்த்தி. உங்கள் உள்ளுணர்வை நம்புகிறீர்கள் என்றால் உங்களுக்குக் குழப்பம் வராது. ‘கல்யாணத்தை நிறுத்துங்கள்’ என்று முதலிலேயே சொல்லியிருப்பீர்கள். வெளித்தோற்றத்தில் அவர் உங்கள் கணவன் என்ற இமேஜுக்குப் பொருந்தவில்லை என்பதாகத்தான் அங்கலாய்க்கிறீர்கள். அது சரிவராது.

வாழ்க்கை ஒரு நெடும் பயணம். நல்ல வேலை, தேவைக்குத் தகுந்த பணம், நன்மக்களைப் பெறுதல், அனைவரும் ஆரோக்கியமாக இருத்தல், வீட்டுக்கு முதலிலும் நாட்டுக்குப் பிறகும் பயனுள்ளவர்களாக இருத்தல்… இப்படிப் பல பரிமாணங்களைக் கொண்டது நிஜ வாழ்க்கை. ‘தாலி கட்டிய பின்னர்தான் தலை தூக்கி என் கணவனையே பார்த்தேன்’ என்று சொன்ன அம்மாக்களின் காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் திருமணத்துக்கு முன் எவ்வளவோ பேசுகிறோம், பரிமாறிக்கொள்கிறோம். பொறுமையாக யோசியுங்கள். நடைமுறை நிஜத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். புற அழகு குறையக் குறைய அக அழகு அதிகரிக்கும் அதிசயம் காதலில் நடக்கும். அதை அனுபவித்து உணருங்கள். உங்கள் வாழ்க்கையிலும் நல்லதே நடக்கும், திருமண வாழ்த்துகள்!

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-06-சந்தேகத்துக்கு-இங்கே-இடமில்லை/article9274970.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காதல் வழிச் சாலை 07: மனிதர் உணர்ந்துகொள்ள முடியாததா?

 

 
 
 
lonely_3067252f.jpg
 

சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிற, நம்மை யாரென்றே தெரியாத ஒருவர் மீது ஏற்படுகிற காதல் அசாதாரணமானது. இல்லாத ஒன்றை இருப்பது போல நினைத்துக்கொள்வது மட்டுமல்ல, ஆதாரத்துடன் எவ்வளவு விளக்கம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த எண்ண மாயையை ‘Unshakable Belief’ என்று சொல்வோம். அதீத உளவியல் கோளாறுகளின் அறிகுறிகளில் ஒன்று இந்த ‘டெலுஷன்’ (Delusion). அப்படிப்பட்ட மருட்சிக்கோளாறுகளில் (Delusional Disorder) ஒன்றுதான் ‘எரடொமேனியா’ (Erotomania).

ரகசிய மொழி

ஆண் பெண் இருபாலரும் எரடொமேனியாவால் பாதிக்கப்பட்டாலும் பெண்கள் பாதிக்கப்பட்ட கதைகள் சற்றே அதிகம். சமூகத்தில் பிரபலமானவராக இருக்கும் ஒருவரை டார்கெட் செய்து கொள்வார்கள். ‘என்னை அவர் காதலிக்கிறார். எனக்காகத்தான் அந்த ரகசிய சைகை. அது என்னைத் தவிர வேறு யாருக்கும் புரியாது. நீங்கள் கேட்டால் அவர் மறுக்கத்தான் செய்வார். அதுவும் எங்கள் ரகசியக் காதலின் ஒரு மொழியே’ என்ற ரீதியில் இந்தக் காதல் கதை செல்லும். அப்செஷன் காதலுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அங்கே நாம் காதலிப்பவர் நமக்குத் தெரிந்தவராக இருப்பார்.

நம்மைக் காதலித்தவராகவும் இருப்பார். அவர் பின்னால் வெறிபிடித்தவர் மாதிரி சுற்றிக்கொண்டிருப்போம். ஆனால் எரடொமேனியாவில் காதலிக்கப்படும் நபருக்கும் நமக்கும் சம்பந்தமே இருக்காது. பெரும்பாலும் சமூக அந்தஸ்தில் நம்மைவிட மிக உயர்ந்தவராகவும் பிரபலமானவராகவும் இருப்பார். கனவிலேயே அந்தப் பிரபலத்தை மணந்துகொண்டு குழந்தைகூட பெற்றுவிடுவார்கள்!

ஒரு பெண்ணை எத்தனை நாள் பின்தொடர முடியும் என்று நினைக்கிறீர்கள்? இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்? இல்லை, நம் கற்பனையை விஞ்சிவிடுகிற அளவுக்குக் கிட்டத்தட்ட முப்பது, முப்பத்தேழு ஆண்டுகள்கூட ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்த வரலாறுகளும் உண்டு.

கவனம் ஈர்த்தல் தகுமா?

அமெரிக்க அதிபராக ரொனால்டு ரீகன் பதவி வகித்த காலம் அது. 1981-ம் ஆண்டு, மார்ச் 30-ம் தேதி, ஒரு மாநாட்டில் உரை நிகழ்த்திவிட்டுத் தன் பரிவாரங்களுடன் காரில் ஏற வந்தார். கடும் பாதுகாப்பு இருந்த போதும் ஜான் ஹின்க்லே (John Hinckley) என்பவர் உள்ளே புகுந்துவிட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் ரீகனைச் சுட்டார். நிலை குலைந்து சரிந்த ரீகன், பயங்கரக் காயங்களுடன் உயிர் பிழைத்துக்கொண்டார். ‘எதற்காகச் சுட்டாய்?’ என்று ஜானிடம் கேட்டதற்கு, ‘இவரைக் கவர வேண்டும் என்பதற்காக’ என்று ஒருவரைக் கைநீட்டினார். அந்த ஒருவர் அப்போது அமெரிக்காவையே புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த நடிகை ஜோடீ ஃபாஸ்டெர். “அவரை நான் தீவிரமாகக் காதலிக்கிறேன். ஆனால் அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

அவரின் கவனத்தைக் கவரப் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும். என்பதற்காகப் பெரிய மனிதரான அதிபரைக் குறிவைத்தேன்” என்று சொல்லியிருக்கிறார் சலனமில்லாமல். மனநிலை பாதிப்புள்ளவர் என்று தெரிய வந்ததால் சட்டமும் அவரைப் பெரிதாகத் தண்டிக்கவில்லை. தன் வாழ்நாளில் பல ஆண்டுகளை மனநலக் காப்பகத்தில் கழித்த அந்த நபர் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். இதையும் எரடொமேனியா என்றுதான் பார்க்கிறது உளவியல்.

தனித் தீவில் காதல் உலா?

லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையைச் சுற்றி ஆளில்லாத தீவிலிருந்து ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அது எரடொமேனியா விவகாரம் எனத் தெரியவந்தது. அரண்மனை ராணியைக் குறிவைத்த அந்த உளநோயாளி அரண்மனையைப் பார்த்துக்கொண்டே இருப்பதற்காகவோ என்னவோ ஆளே இல்லாத அந்த தீவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இல்லாத காதலை இருப்பது போலக் கற்பனை செய்துகொண்ட இவர்கள் கண்டிப்பாக அசாதரணமானவர்கள்தான்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் ஒருசிலரை நாம் பெரும்பான்மை மனப்பாங்குக்கான உதாரணமாகக் கொள்ளவும் முடியாது; சொல்லவும் கூடாது. ஆனால் எப்படியெல்லாமோ பயணிக்கிற இந்தக் காலத்து காதலைப் பார்க்கும் போது, இளைஞர்களுக்கு நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. தெளிவாக இருப்பவர்கள்கூட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும்போதுதான் நம் கவலை அதிகரிக்கிறது. அவற்றால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளுடன் காதல் விவகாரங்களும் சேர்ந்து கொண்டால் சொல்லவே வெண்டாம். எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காது போதை மனசு!

 

இன்னொரு கதவு நிச்சயம் திறக்கும்!

breakup_3067253a.jpg

“நான் கல்லூரி இறுதியாண்டு மாணவி. உங்கள் கட்டுரையில் சொன்ன அப்செஷன் எனக்கும் நிறைய இருக்கிறது. என்னுடன் பழகிய ஒருவர் திடீரென்று உறவை முறித்துக்கொண்டார். ‘பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அவர்களை நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கிறது’ என்கிறார். அவர் பிரிந்ததில் இருந்து மிகவும் டென்ஷனாக இருக்கிறேன். அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார், அவர் பெற்றோர் எப்படி இருக்கின்றனர் என்று அவர் நண்பர்களை விசாரிப்பது, அவர் வீட்டுப் பக்கம் போவது, ஆன்லைன் ஸ்டேட்டஸ்களை செக் செய்வது என்று நகர்கின்றன என் நாட்கள். நான் நார்மலாகத்தான் இருக்கிறேனா என்று சந்தேகமாக இருக்கிறது. இந்த அப்செஷனை விட்டு நான் எப்படி வெளியில் வருவது?”

“ஒரு பிரிவைத் தொடர்ந்து இப்படியொரு மனநிலை இயல்பானதே. பெற்றோர் எதிர்ப்பார்கள் என்று உங்கள் முன்னாள் காதலருக்குத் தெரியாதா? கணிசமான காலம் பழகிவிட்டுப் பெற்றோர் மீது பழியைப் போடுவது, அவ்வளவு ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. எத்தனை பெற்றோர் எடுத்த எடுப்பிலேயே காதலுக்குப் பச்சைக் கொடி காட்டுகிறார்கள்? கொஞ்சம் போராடித்தான் வெற்றிபெற வேண்டும். நான் அடிக்கடி சொல்வேன், காதல் தோற்றுப் போவது பெரும்பாலும் காதலர்களால் மட்டும்தான் என்று.

போராடும் மனப்பாங்கு இல்லாத ஒருவரைத் தேர்ந்தெடுக்க இருந்தீர்கள். அவருக்கு அந்தப் பக்கம் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். காதலிப்பதை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள்; ஆண்களும் இருக்கிறார்கள். முடிவு எப்படி இருக்கும், நம்மால் போராட முடியுமா என்பதை யோசித்துத்தான் காதலில் இறங்க வேண்டும். அப்போதைக்கு எழும் உணர்வுகளுக்கு மட்டும் வடிகாலாகக் காதலைப் பயன்படுத்திக் கொள்பவர்களால் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.

மெல்ல உங்கள் நினைவுகளை வேறு விஷயங்களில் திருப்புங்கள். உற்ற தோழிகளுடன் இருங்கள். மனதிலுள்ள சுயபச்சாதாபத்தை அகற்றிவிட்டுத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். காலத்தால் ஆற்ற முடியாத காயம் எதுவுமில்லை. இன்று உலகமே இருண்டுவிட்டதாகத் தோன்றும் ஒரு விஷயம், சில பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகச் சாதாரணமானதாகத் தோன்றும்.

இதற்காகத்தான் அன்று அப்படி ஏங்கினோமா என்று நம்மை வெட்கப்படவைக்கும். ஆழமின்றிப் பிறந்து பாதி வழியிலேயே விபத்துக்குள்ளான அரைகுறை காதல்களும் இப்படித்தான். உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால், காதல் இருகை ஓசை. எதற்கும் கலங்காதீர்கள். ஒரு கதவு மூடுவதே இன்னொரு கதவு திறப்பதற்காகத்தான்!”

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-07-மனிதர்-உணர்ந்துகொள்ள-முடியாததா/article9300813.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச்சாலை 8: பருவமே புதிய பாடல் பாடு!

 

 
love_3076973f.jpg
 

காதல் ஒரு நோயைப் போன்ற அறிகுறிகளைக் கொண்டது என்று சொன்னால் ரசிக்க முடியுமா? காதல் என்பது உள்ளத்தை மட்டுமல்ல உடலையும் கெடுத்து உங்களை நோயாளியாக்கிவிடும் என்று அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்ற அறிஞர்களே சொல்லியிருக்கிறார்கள்! ஆனால், அதே காதலை மாபெரும் உந்து சக்தியாகப் பார்ப்பவர்களும் உண்டு. மனித குலத் தோன்றுதலுடன் காதலைப் புரிந்துகொள்ள முயற்சித்தால் ஒன்று புரியும். அதுதான் இனப் பெருக்கம். நம் சந்ததிகளை உருவாக்குவதற்கான வசந்த அழைப்பாகத்தான் காதலைப் பார்க்கிறது அறிவியல்.

ஏன் மயங்குகிறாள் பெண்?

ஒரு பெண் ஒரு ஆணிடத்தில் எதைப் பார்த்து மயங்குகிறாள் என்று ஆய்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. அவற்றில் ஒப்புக்கொள்ளும்படியான முடிவுகளும் சில இருக்கின்றன. ஒரு ஆண் தன்னைப் பார்த்துக்கொள்வான் என்பதைத் தாண்டி தன் குழந்தையை அவன் நன்றாக வளர்த்தெடுப்பான், வளர்த்தெடுக்கத் தனக்கும் உதவுவான் என்ற நம்பிக்கையே அவன் மீது வீசப்படும் காதல் பார்வையின் அடிநாதம் என்கிறது உளவியல். அதே சமயம் ஆணின் காதல் பார்வையின் பின்னணி வேறு. அந்தப் பெண் தனக்கு ஒரு வாரிசைத் தரக்கூடிய தன்மைகளைக் கொண்டவளாக இருக்கிறாளா என்ற கோணத்தில் இருக்கும் என்கின்றன ஆய்வுகள்.

இந்தச் சிந்தனைகள் அனைத்தும் ஆழ்மன அளவில் நமக்கே தெரியாமல் நடந்தேறும். மனித மனதின் அடிப்படை உள்ளுணர்வுகள் இப்படித்தான் இலைமறை காயாகப் புரிந்தும் புரியாமலும் இருக்கும்.

இனப் பெருக்கமே காதலின் அடிப்படை. காமத்தின் மீது இனிப்பு தடவப்பட்ட வடிவம்தான் காதலா அல்லது காமத்துக்கான நுழைவுச் சீட்டுதான் காதலா என்று ஆராய்ந்தால் நிறைய விஷயங்கள் உங்களுக்கே புரியும்.

பருவத்தின் எழுச்சி

தன் சுய அடையாளத்தைத் தேடியலையும் பதின் பருவத்தில் எதிர்ப் பாலினத்தின் மீது அதீத ஆர்வம் ஏற்படும். என்னதான் ஏழெட்டு நண்பர்கள் இருந்தாலும் ஒரு தோழியின் நெருக்கம்/அண்மை தரும் அனுபவமே வேறு. அதேபோல் எத்தனை தோழிகள் இருக்கிறார்கள் என்ற கணக்கைவிட ‘எனக்கும் ஒரு பாய் ஃப்ரெண்ட் இருக்கிறான்’ என்பதும் ‘அவன் என்னை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகிறான்’ என்பதும் விடலைப் பருவத்துக்கே உரித்தான மனநிலை.

தத்தமது எண்ணங்களுக்கும் வண்ணங்களுக்கும் வடிகாலாக ஒரு துணையைத் தேடியலையும் மனசு அதன் மூலம் தனக்கு ஒரு அடையாளத்தைத் தேட விழைகிறது. எதிர்ப் பாலினத்துடன் இணைவது என்பது அடையாளத் தேடலின் முக்கியத் தேவையைப் பூர்த்திசெய்து விடுகிறது.

கவிதை எழுதுமா காதல்?

காதலில் பெண்களைவிட ஆண்கள் எளிதில் விழுந்து விடுவது ஏன்? அதே நேரம் எளிதில் விழாமல் இருந்தாலும் காதலிக்கத் தொடங்கிவிட்டால் மிகத் தீவிரமாகப் போய்விடுகிறார்களே பெண்கள், அது ஏன்? காதலித்தாலே கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறார்களே அது ஏன்? ஆரம்பத்தில் நம்மை எழுச்சி நிலைக்கு இழுத்து, நடக்கும்போதே பறக்கிற மாதிரி உணரச் செய்த அந்த அதி தீவிர உணர்வு ஏன் காலப்போக்கில் குறைந்து போய்விடுகிறது?

காதல் என்பது ஒரு உன்னத உணர்வுதான். ஆனால், மனநலப் பிரச்சினைகள் சிலவற்றில் தோன்றும் அறிகுறிகளைப் போன்ற சில அறிகுறிகளைக் காதலும் கொண்டிருக்கிறது என்ற விந்தையான உண்மையைப் புரிந்துகொண்டால் மேற்சொன்ன கேள்விகளுக்கான விடைகளும் எளிதாகப் புரியும்.

ஒரே மாதிரியான சிந்தனைகள் திரும்பத் திரும்பத் தோன்றும். அப்படிச் சிந்திப்பது முட்டாள்த்தனம் என்று நம் மனசுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அப்படிச் செய்யாமல் இருக்க முடியாது. முதலில் எண்ண அளவில் இருந்த சுழற்சிச் சிந்தனைகள் பிறகு செயல் அளவிலும் தொடர ஆரம்பித்துவிடும். இதே மாதிரியான இயல்புகள் உளவியலில் ‘எண்ணச் சுழற்சி நோ’யிலும் (Obsessive Compulsive Disorder) தென்படும்.

நாடகமன்றோ நடக்குது

காதலிப்பவரின் மனநிலையுடன் இதை ஒப்பிட்டு நோக்குங்கள். எந்நேரமும் அவரது நினைவு. திரும்பத் திரும்ப அவரைப் பற்றியே பேசுவது, நினைப்பது, மின்னஞ்சலையும் வாட்ஸ் அப்பையும் மீண்டும் மீண்டும் செக் பண்ணுவது, வருகிறேன் என்று சொல்லியிருந்தாலும் பூங்காவில் அமர்ந்துகொண்டு ஆயிரம் முறை கடிகாரத்தைப் பார்ப்பது என இப்படிப் பல விஷயங்கள், எண்ணச் சுழற்சியால் பாதிக்கப்பட்டவரைப் போன்றே இருக்கும்.

கை நடுக்கம், இதயம் வேகமாகத் துடிப்பது, உள்ளங்கைகள் சில்லிட்டுப் போவது, நெற்றியில் லேசாகத் துளிர்க்கும் வியர்வை, எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்ற பதற்றம், ஒருவித அமைதியின்மை, உடலே கனமில்லாதது போல் உணர்ந்து ஒரு விதமான தள்ளாட்டம் இவையெல்லாம் மனப் பதற்ற நோயின் (Anxiety Disorder) அறிகுறிகளைப் போன்றே இருக்கும். உண்மையைச் சொல்லுங்கள். காதலிக்கும் நபர் சாலையிலோ கல்லூரியிலோ உங்களை நோக்கி நெருங்கி வர வர இப்படி ஆகவில்லையா உங்களுக்கு? குறைந்தபட்சம் நம் காதலைத் தெரிவிக்கும் த்ரில்லான காலகட்டத்தில் நிச்சயம் இப்படி உணர்ந்திருப்பீர்கள். இதே போலத்தான் பசியில்லாமல் போவது, தூக்கம் தொலைந்து போவது, எடை குறைந்து போவது, எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போவது, நம்மை நமக்கே பிடிக்காமல் போவது, அவரைத் தவிர வேறு எந்த விஷயமும் மகிழ்ச்சி தராமல் போவது, முடிவில் அவன்/அவள் இல்லாத உலகமே வேண்டாம் என்று தம் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முற்படுவது என இவையெல்லாமே பார்ப்பதற்கு மிகத் தீவிரமான மனச்சோர்வு நோயின் (Major Depressive Disorder) அறிகுறிகளைப் போலவே இருக்கும்.

காதல் நமக்குள் எந்த வழியாக வேண்டுமானாலும் நுழைந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதன் ஆட்டம்பாட்டங்களுக்கு இயக்குநராக இருந்து வேதிப்பொருட்களின் உதவியுடன் நவரசங்களுடனான ஒரு விந்தை நாடகத்தை நடத்திக்காட்டுவது சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள நமது மூளைதான். அந்த நாடகம் எதுவென்று அடுத்த வாரம் பார்க்கலாம்.

கட்டுரையாளர், மனநல மருத்துவர். தொடர்புக்கு: drmohanv18@gmail.com

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்ககிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்சாலை-8-பருவமே-புதிய-பாடல்-பாடு/article9332981.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 09: காதலும் போதையைப் போன்றதே!

 
love_3084883f.jpg
 
 

நமது மூளையில் ‘ரிவார்டு சென்டர்’ (Reward centre) என்றொரு இடம் இருக்கிறது. இன்பகரமான விஷயங்கள், நம்மை மதிமயக்கிக் குஷிப்படுத்தி வேறு லெவலுக்கு அழைத்துச் செல்லும் சமாச்சாரங்கள் போன்றவற்றின் மையம் இது. டோபமைன் (Dopamine) என்னும் சந்தோஷ வேதிப்பொருள் கையாளப்படும் இடம் இது. மனதில் உற்சாகம் கரைபுரளும்போது இந்த டோபமைன் அதிகமாகச் சுரக்கும். போதைப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் உச்சம் என்பது இந்த ரிவார்டு சென்ட்ரில்தான் பதிவாகிறது. காதலும் ஒரு வகை போதைதானே… அதனால் இதற்கும் இந்த ரிவார்டு சென்டர்தான் பட்டறை!

தீவிரமாகக் காதலித்துக் கொண்டிருக்கும் சிலரையும், அதிதீவிரக் காதல் அகாலத் தோல்வியடைந்ததால் மனம் வெறுத்திருக்கும் சிலரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூளையை ஆய்வு செய்வதற்காக அந்த இரு தரப்பினருக்கும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பதிவு செய்யப்பட்டது. முதல் பிரிவினருக்கு அவர்கள் கட்டுண்டு கிடக்கும் இனிய இதயத்தின் ஒளிப்படமோ காணொலியோ காண்பிக்கப்பட்டது. தங்கள் மனதுக்கினியவரைக் கண்டதும் அவர்கள் மூளையில் குறிப்பிட்ட ஒரு பகுதி பளபளவென்று மின்னத் தொடங்கியது. டோபமைன் வெள்ளமெனச் சுரந்தது.

உற்சாக வெள்ளம்

உச்சக்கட்ட போதையில் இருக்கும்போது ரிவார்டு சென்டர் தூண்டப்படுவதைப் போலவே காதலில் தீவிரமாகவும் ஆழமாகவும் இருப்பவர்களின் ஸ்கேன் ரிப்போர்ட் இருந்தது. அதே சமயம் காதல் தோல்வியடைந்தவர்களின் ஸ்கேன் வேறு மாதிரி இருந்தது. ஒளிப்படத்தைப் பார்த்ததும் முதலில் பரவசமடைந்தார்கள். உடனே ரிவார்டு மையம் சுறுசுறுப்பானது. டோபமைன் சுரந்தது. ஆனால், அதேநேரத்தில் மூளையின் வேறு சில ஏரியாக்களும் பளீரென்று ஒளிரத் தொடங்கின. எண்ணச் சுழற்சிக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எந்த மூளைப்பகுதி காரணமோ, அதே பகுதி இவர்களுக்கும் செயல்பட்டது. அவர்களுடைய காதலன்/ காதலியின் நினைவலைகளிலேயே இவர்கள் நீந்திக்கொண்டிருக்கின்றனர் என்பதை அந்த ஸ்கேன் ரிப்போர்ட் நிரூபித்தது.

இது மட்டுமல்ல… செரடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருள் பற்றியும் ஆராய்ந்தனர். எண்ணச் சுழற்சிக் கோளாறாலோ மனச்சோர்வு நோயினாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செரடோனின் அளவு குறைந்திருக்கும். அதேபோல காதல் விவகாரங்களில் சிக்கியவர்களுக்கும் குறைவான அளவிலேயே செரடோனின் இருப்பதை நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

நினைத்தாலே இனிக்கும்

ஒரே நேரத்தில் நாம் இரு வேறு மனநிலைகளைப் பெற்றிருக்க முடியுமா? அது சாத்தியமா? கஷ்டம்தான். காதலித்தவரைக் கண்டதும் வந்த மகிழ்ச்சி என்பது கடந்தகாலம். அது நினைத்தாலே இனிக்கும் வசந்த காலம்! ஆனால் அந்த துர்பாக்கியமான தோல்வி அவ்வளவு சீக்கிரம் விட்டுப்போகிறதா என்ன?

காதலித்துக்கொண்டிருக்கும் போதும் எண்ணச் சுழற்சிதான். அது தோல்வியுற்றுத் துன்புறும்போதும் எண்ணச் சுழற்சிதான்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காதல் நோய் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவிசென்னா (Avicenna), பன்முகத்திறமை கொண்ட பாரசீக அறிஞர். இன்றைய உஸ்பெகிஸ்தான் நாடுதான் அவரின் தாய்வீடு. இஸ்லாம் கண்ட மிகப் பெரும் ஞானிகளுள் ஒருவர். மனநலம், காதல், ஆன்மா பற்றியெல்லாம் அப்போதே தனது ஆய்வு முடிவுகளைப் பதிவுசெய்து வைத்திருக்கிறார். எலும்பும் தோலுமாக வந்த நோயாளிக்குச் சிகிச்சை அளித்தது பற்றி இப்படி எழுதுகிறார். “நீண்ட கால நோயில் சக்தியிழந்து வந்தவரைப் பார்த்தேன்.

அவையனைத்தும் காதல் கோளாறின் அறிகுறிகள் என்பதைப் புரிந்துகொண்டேன். அவரது நெஞ்சுக்கு நெருக்கமானவரைச் சென்று அடைந்ததும் என்ன ஆச்சரியம்… புத்துணர்ச்சியுடனும் புதிய உத்வேகத்துடனும் அவர் மாறியதைக் கண்டேன். ஆச்சரியப்பட்டேன். ஆக மனிதனின் ஆரோக்கியம் என்பது அவனது மனதின் கட்டுப்பாட்டிலும் அதற்குக் கீழ்ப்படிந்தும்தான் இருக்கிறது”.

அவிசென்னா சொன்னது இன்றைக்கும் பொருந்தும். மனம் என்று தனியாக ஒரு உறுப்பு இல்லை. மூளையின் செயல்பாடுகளே மனதின் வெளிப்பாடுகள் என்பது நாமறிந்ததே. மனமும் உடலும் பின்னிப் பிணைந்த ரெட்டை வாழைகள். ஒன்றன் சோகம் இன்னொன்றைத் தாக்கும் என்பதெல்லாம் நிரூபிக்கப்பட்ட மருத்துவ உண்மைகள்.

 

காதலில் ஏன் தோற்கிறோம்?

love_2_3084884a.jpg

“தோல்வியின் சோகம் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளலாமா என்று யோசிக்கிறேன்” என்று வந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து அந்த இளைஞரிடம் பேசினேன். “பல வருடங்களாகக் காதலித்தோம் சார். கொஞ்சம் ஜாலியான பொண்ணு அவங்க. ஆண்களோடு இயல்பாகப் பழகுவார். சமூக வலைத்தளங்களில் ‘ஆக்டிவ்’ ஆக இருப்பார். முகம் தெரியாத ஆண் நண்பர்களை நம்பி வீட்டு முகவரி எல்லாம் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்துகொள்வார். ஒரு முறை தன் புதிய நண்பர் என்று சொல்லி, ஒரு பையனுடன் நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் போட்டோவைப் பதிவிட்டார்.

கொஞ்சம் கட்டுப்பாடு வேண்டும் என்று அப்போதே எச்சரித்தேன். என்னுடன் பழகிக்கொண்டிருக்கும்போதே இரண்டு முறை பெண் பார்க்கும் வைபவம் நடந்திருக்கிறது அவர் வீட்டில். அதில் ஒரு பையனைத் தேர்ந்தெடுத்து அவருடன் ‘சாட்’ செய்திருக்கிறார். எதேச்சையாக அவரது மொபைலைப் பார்த்தபோது இது எனக்குத் தெரியவந்தது. கேட்டதற்குப் பெரியவர்கள்தான் பார்க்கிறார்கள் என்றார். கொஞ்ச நாள் கழித்து எனக்கு வேலை இல்லை, செட்டில் ஆகவில்லை, எப்படிக் கல்யாணம் செய்வது என்று சாதாரணமாகக் கேட்டார். அதிர்ந்து விட்டேன். நம்ப மாட்டீங்க சார். என் மேல அவ்வளவு லவ்வா இருந்தா…” என்று சொல்லிவிட்டு விசும்பத் தொடங்கினார்.

ஒருவாறு சமாளித்துக்கொண்டு, “ஓப்பனா சொல்றேன் சார். ரெண்டு முறை டேட்டிங் போனபோது எங்களுக்குள் எல்லாமே நடந்துவிட்டது. ‘அதையெல்லாம் கனவா நினைச்சு நானும் மறந்துடறேன். நீயும் மறந்துடு’ன்னு சொல்றா சார். எப்படி சார் இதைத் தாங்குறது?” என்றவர் அழுதேவிட்டார். தற்போது அந்தப் பெண்ணுக்குத் திருமணம் முடிந்து வளைகுடா நாடொன்றில் செட்டில் ஆகிவிட்டார். இங்கே இந்த இளைஞர் மனச்சோர்வின் எல்லைக்கே போய்விட்டார். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் என்பதே, அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் இவருக்குத் தெரியவந்ததாம்.

காதலின் கோணல் கோலங்களில் இதுவும் ஒன்று. பிராக்டிக்கலாக இருக்கிறோம் என்று அந்தப் பெண் பிரிந்து சென்றுவிட்டார். காதலிக்கும் நபரையேதான் திருமணம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் பழங்கதையாகி வருகிறது. பார்க்கலாம், பழகலாம், முடியவில்லை என்றால் பிரியலாம் என்ற மனநிலை பரவலாக இருக்கிறது. பழகும்போது ஏற்படும் உணர்வுரீதியான நெருக்கத்தில் இந்த இளைஞர் அவரை மனைவியாகவே பாவித்துவிட்டார். அவர் காதலுக்குக் கொடுத்திருக்கும் இடம் அப்படி. ஆனால், அந்தப் பெண் இவரை நிறையக் குழப்பிவிட்டார். தனி ஒருவரின் ஒழுக்கம், காதலின் ஓர் அங்கமில்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது இவர் கதை.

காதலி பிரிந்து சென்றுவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. அதைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது. காலப்போக்கில் அந்த இளைஞர் வேறொரு காதலையும் சந்திக்கலாம். காதலைத் தெரிவு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அவர் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். காதல் வேகமாகப் பிறக்கலாம். ஆனால், அதை வளர்த்தெடுப்பதற்கு நாளாகும். அதில் இருவரின் பங்கும் அவசியமே. சமமான பங்கு மட்டுமே காதலை ஆரோக்கியமாக்கும்.

பின் குறிப்பு: அந்த இளைஞருக்கு உளவியல் ஆலோசனை தரப்பட்டது. மருந்துகள் உட்பட தீவிர உளவியல் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார். தற்போது தேறிவருகிறார்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-09-காதலும்-போதையைப்-போன்றதே/article9361001.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 10: பெண்ணின் மனதில் என்ன இருக்கு?

 

 
love_3092503f.jpg
 
 

“நான் மேனிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர். உடன் பணிபுரியும் டீச்சரைக் காதலித்தேன். மறுத்துவிட்டார். மனம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். சிறு வயதில் நிறையக் கஷ்டப்பட்டுவிட்டேன். வறுமை மிகுந்த சூழலில் அப்பாவின் குடிப் பழக்கம் என்னை மிகவும் பாதித்தது. அன்புக்கு ஏங்கியதாலோ என்னவோ யார் என்னிடம் கொஞ்சம் நெருங்கினாலும் மனம் அவர் பக்கம் சாய்ந்துவிடுகிறது. இது எனக்கு முதல் காதலுமல்ல. ஏற்கெனவே ஒரு பெண்ணை நேசித்திருக்கிறேன்.

அதுவும் ஒருதலையாகவே போய்விட்டது. பெண்களுக்கு யாரைப் பிடிக்கும், எதற்காகப் பிடிக்கும் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு தோல்வியிலிருந்து பாடம் கற்காமல் மீண்டும் அதே தப்பைச் செய்கிறேனே என்று வெட்கமாக இருக்கிறது. ஆனால் இந்தக் காதல் என்ற பிசாசு என்னைப் பிடித்து ஆட்டுகிறதே சார்..?” - இப்படி ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்தது. இதேபோன்ற அனுபவ அவஸ்தைகள் நிறைய இளைஞர்களின் வாழ்க்கையிலும் உண்டல்லவா!

அன்பின் ஏக்கம்

அன்புக்கும் காதலுக்கும் யார்தான் ஏங்கவில்லை? ஏற்கெனவே அன்பற்ற சூழ்நிலையில் வளரும்போது, அதற்கான ஏக்கமும் கூடவே வளர்கிறது. பதின்ம வயதில் காதலுக்கு ஏங்குவது இயல்பானதே. பகிர்ந்துகொள்ள ஆட்களற்ற குடும்பம், ஆட்கள் இருந்தும் வறுமையின் கொடுமையில் அன்புப் பரிமாற்றங்கள் குறைவது, பெற்றோரின் இழப்பு, வாழ்க்கைக் கோளாறுகள் போன்றவை அவர்களை ஏக்கத்தினூடேதான் வளர்த்தெடுக்கின்றன. அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களைச் சந்திக்கும்போது பொசுக்கென்று விழுந்துவிடுகிறார்கள். அது தவறல்ல. அந்தப் பாலின ஈர்ப்பு இயல்பானதே. ஆனால், அது பகுப்பாய்ந்து பார்க்கப்பட வேண்டும்.

ஏன் பிடிப்பதில்லை ஆண்களை?

ஒருசில பெண்களுக்குச் சில ஆண்களைப் பிடிக்காமல் போய்விட்டால் கடைசிவரை பிடிக்காது. அதற்கான காரணத்தை அவர்களால்கூட சரியாகச் சொல்ல முடியாது. “ப்ச்… பிடிக்கலைன்னா விட்டுடுப்பா” என்று ஒற்றை வரியில் சொல்லிவிடுவார்கள். பிடிக்கவில்லை என்பதற்குக் காரணம் தேடும் பெண் மனம், பிடித்திருக்கிறது என்பதற்குப் பல காரணங்களைச் சொல்லிச் சிலாகிக்கும். எவ்வளவு ஆராய்ந்து பார்த்தாலும் பெண்களின் மனநிலை மாற்றங்கள் இன்றளவும் ஒரு மர்மம்தான்.

திட்டமிட்டுக் காதலிக்கலாமா?

ஒரு மொட்டு மலர்வதைப் போல ரகசியமாகவும் ரம்மியமாகவும் முகிழ்வது காதல். ஆனால், அது இரு பக்கமும் இயல்பாக இயற்கையாக மலர்வது நல்லது. அப்படியில்லாமல், ‘இப்போதைக்குக் காதல் என்னில் ஆரம்பித்துவிட்டது. இனி அது அவரிடமும் வர என்ன செய்ய வேண்டும்’ என்கிறீர்களா? கொஞ்சம் திட்டமிட வேண்டும்.

காதலிப்பதைக்கூடத் திட்டமிட்டுச் செய்ய முடியுமா? உண்மைதான். நமது சிந்தனைகள் அனைத்தும் அதிர்வலைகளால் ஆனவை. அவை இந்த அண்ட வெளியில் (ethereal space) நீந்திச் சென்று எதிராளியைத் தாக்கவல்லவை. அந்தச் சிந்தனைகளுக்கு வலு ஏற்றி, சக்தி கூட்டி, ஒருமுகப்படுத்தி வெளியே அனுப்பிப் பாருங்கள். சிந்தனைகளின் சக்தி என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலானது.

நமக்கு அவரைப் பிடிப்பதற்கான காரணங்களை முதலில் பட்டியலிட வேண்டும். உடல் மொழியில் இருந்து வண்ணம், எண்ணம், பேசும் பாங்கு, பேசும் பொருள், நடக்கும் நேர்த்தி, குணாதிசயங்கள், ஆளுமையின் அழகியல், உடை நளினங்கள், உள்ளத்தின் அழகு… இப்படிப் பல விஷயங்கள் தனியாகவோ கூட்டாகவோ அவரிடம் நமக்குப் பிடித்திருக்கலாம். அது காதலின் மெல்லிய பூங்காற்றுக் காலம். அதன் பின் நாம் மெல்ல நெருங்கும்போது எதிர்ப்பக்கமிருந்தும் வரவேற்பு மிக முக்கியம். நம்மைப் பிடித்திருப்பதை அவரது கண்களே காட்டிக்கொடுத்துவிடும். அவர் பேசும் பாங்கு, நம்மைக் கண்டதும் செய்யும் அனிச்சையான அங்க அசைவுகள், கை கால்களை வைத்து அவருக்கே தெரியாமல் ஆடும் நடனம்… இப்படிப் பல சேட்டைகளை வைத்து அவர் காதலில் இருக்கிறார் என அறியலாம்.

பரீட்சையல்ல காதல்

படித்துப் பார்த்து, ஆய்ந்து நோக்கி அணுகுவதற்குக் காதல் ஒன்றும் கல்லூரிப் பரீட்சை அல்ல. இன்னதென்று புரியாத உணர்வு இருவருக்குமே தோன்ற வேண்டும். எண்ண அளவில், செயல் அளவில் அவர்களின் சுவைக்கு ஓரளவேனும் நாம் ஒத்துப்போயிருந்தால் சிரமமே இல்லாத ஒரு பரிமாற்றம் ஆரம்பித்துவிடும். இருவருக்குமே பரஸ்பரம் ஒரு இணக்கமான உணர்வு (comfort feeling) வந்துவிடும். அந்த ஆரோக்கியமான காலகட்டத்தைக் கொஞ்ச காலம் அப்படியே கொண்டு செல்ல வேண்டும். முழுவதும் புரிந்துகொள்ள உதவும் இந்தக் காலகட்டத்தில் அவசரம் கூடாது. “இன்னிக்குப் பாக்கறோம்… நாளைக்கு ப்ரபோஸ் பண்றோம்… மறுநாள் டேட்டிங் போறோம்” என்பதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம்.

புகழ்ச்சியும் வேண்டும்

பார் போற்றும் பேரழகியாகவே இருந்தாலும் தன்னை ஒருவன் நெருங்கி வருகிறான் என்பது யாரையும் சலனப்படுத்தியே தீரும். “நான் பேரழகி. என்னைச் சாதாரணமாக யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது” என்பது பொதுப்புத்தியாக இருக்கலாம். “நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது” என்ற புகழ்ச்சியை எந்தப் பெண்ணுமே ரசிக்கத்தான் செய்வார். அதை அவரிடம் நேரில் சென்று நாகரிகமாகத் தெரிவிப்பதில்தான் சூட்சுமமே இருக்கிறது.

மனித மனம் எப்போதுமே பாராட்டுதலுக்கும் ஆராதனைக்கும் ஏங்குவது. நம் பெயரை உச்சரித்து உரிமையுடன் நம்மை அணுகும்/ விமர்சிக்கும் யாரையும் நமக்குப் பிடிக்காமல் போகாது. இரு பாலினத்தவர் நெருங்கி வரும்போது பாராட்டுரைகள் காதல் சாயம் பூசிக்கொள்கின்றன. ஆனால், இப்படி முளைவிடும் காதலுக்கு இருவருமே கொடுக்கும் ஆழம்தான், அதை வாழ வைப்பதற்கான ஆக்ஸிஜன். ஒரு தரப்பில் அது குறைந்தாலும் அந்தக் காதல் மூச்சுத் திணறிவிடும்.

காதலுக்கு எது தகுதி?

அந்தப் பொருள் எனக்கு வேண்டும் என்று வேண்டுவதில்கூட ஒரு நேர்த்தி இருக்கிறது. குழந்தையைப் போல் அழுது அடம் பிடித்தால் பொம்மை கிடைக்கலாம், காதல் கிடைக்காது. அது ஏன் வேண்டும்? நான் அதற்குத் தகுதியானவன்தானா? அதை வைத்து என்ன செய்யப் போகிறேன்? எனக்கு அதைக் கேட்பதற்கான உரிமைகள் என்னென்ன?அது மற்றவர்களுக்கு எந்த வகையில் இடைஞ்சல் தரும் அல்லது தராது? - இது போன்ற கேள்விகளைக் கேட்டு உங்களை முதலில் சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனிடமும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பிரபஞ்ச அறிவு என்று சொல்லப்படுகிற Universe intelligent என்ற சக்தியிடமும் வேண்டுதலை முன்வைக்கலாம்.

“உடல், மனம், ஆன்மா மூன்றாலும் நான் அவளை நேசிக்கிறேன். இம்மூன்றாலும் அவளை யாசிக்கிறேன். அவளை எனக்குப் புரிகிறது. அவள் என்னில் சுகமடைவாள். அவள் ஒரு பெண். அவளுக்கு ஒரு ஆண் வாழ்நாள் முழுக்க வேண்டும். அந்த ஆண் நான்தான். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவே என்னை அவளுக்குத் தா” - இப்படி எத்தனை பேர் வேண்டியிருக்கிறீர்கள்? “அவளை எனக்குத் தா” என்று கேட்பது வெறுமனே ஆசைப்படுவது போலாகிவிடும்.

ஆனால் ‘என்னை அவளுக்குக் கொடு’ என்று சொல்லும்போது, உங்கள் காதலின் ஆழம் புரியவைக்கப்படுகிறது. சரியான தெளிவான முறையில் முன்வைக்கப்பட்ட ஒரு வேண்டுதல் பாதி தீர்க்கப்பட்டதற்குச் சமம் என்பார்கள். காதலும் அப்படித்தான். ஒவ்வொரு அடியிலும் தெளிவும் தீர்க்கமும் தேவை. முனைப்புடனும், அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், எல்லாவற்றையும்விட உண்மை யுடனும் முயற்சி செய்துபாருங்கள். உங்கள் காதலும் வெற்றிபெறும்!

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-10-பெண்ணின்-மனதில்-என்ன-இருக்கு/article9385872.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 11: ரொமான்ஸ் தெரியும்... லிமரென்ஸ் தெரியுமா?

 

 
kadhal_3097899f.jpg
 
 
 

கல்லூரி மாணவர் ஒருவர் ஆலோசனைக்காக என்னைச் சந்திக்க வந்திருந்தார். உடன் படிக்கும் மாணவியைத் தீவிரமாக நேசிப்பதாகச் சொன்னார். “நீங்கள் விரும்புவது அவருக்குத் தெரியுமா?” என்றேன். “தெரியவில்லை” என்றார். என் பார்வையைப் புரிந்துகொண்டவராக அவரே தொடர்ந்தார்.

“இல்லை சார்… நான் அவங்களை நேசிக்கறது உண்மை. ஆனா அதை அவங்ககிட்டே சொல்ல மனம் வரலை. ஒருவேளை நிராகரிச்சிட்டா என்ன செய்வதுங்கற பயமும் ஒரு காரணம். என் பிரச்சினை இப்போ அதுவல்ல” என்று நிறுத்தியவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“எப்பவும் அவங்க நினைவாகவே இருக்கேன். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியலை. அவங்க என்கூடவே இருக்கணும், அவ்ளோதான். தொட வேண்டாம், ரொமான்ஸ் வேண்டாம், டேட்டிங் வேண்டாம். ஒரு பார்வை மட்டும் போதும். சில நேரம் வேண்டாம்னு எவ்ளோ முயற்சி செஞ்சாலும் அவங்க நினைவு திரும்பத் திரும்ப வருது. சில நேரம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. சில நேரம் எதையோ இழந்ததுபோல கஷ்டமாக இருக்கு.

இப்போ அடிக்கடி சோர்ந்துடறேன். சாதிக்க வேண்டிய வயதில் இப்படி இருக்கோமேன்னு குற்ற உணர்வு என்னைக் கொல்லுது. குடும்பத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய நேரத்தில் இது ஒரு புரியாத இம்சையாக இருக்கு” - உணர்வுகளின் கலவையாகச் சொல்லி முடித்தார் அந்த மாணவர்.

இதுதான் காதல் என்பதா?

ஈர்ப்பு என்றும் சொல்ல முடியாத, காதல் என்றும் சொல்ல முடியாத ஒரு விசித்திர உணர்வு நிலையில் அவர் இருப்பதைப் புரிந்துகொண்டேன். இதை ‘லிமரென்ஸ்’ (Limerence) என்று சொல்கிறது உளவியல். கிட்டத்தட்ட முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு டோரதி டெனோவ் (Dr DorothyTennov) என்ற உளவியலாளர் கண்டறிந்த வார்த்தைதான் இது. இன்னதென்று புலப்படாத எதிர்ப் பாலினக் கவர்ச்சியாகத்தான் இது ஆரம்பிக்கும்.

காலப்போக்கில் அந்த உணர்வுகள் சடசடவென அதிகரித்து, தான் அவரைத் தீவிரமாகக் காதலிக்கிறோம் என்று சம்பந்தப்பட்டவரை நம்பவைத்துவிடும். இது இரண்டு, மூன்று ஆண்டுகள்தான் இருக்கும். பிறகு ஏறிய வேகத்திலேயே அந்த உணர்வுகள் கீழிறங்கத் தொடங்கிவிடும். பிறகென்ன? காதல் கசக்குதய்யா என்று பாட வேண்டியதுதான். சில நேரம் உறவு முறிவுக்கும் திருமண முறிவுக்கும்கூட இந்த லிமரென்ஸ் காரணமாக அமைந்துவிடும்.

காட்டிக்கொடுக்கும் உணர்வுகள்

# ஒருவரைத் தீவிரமாக விரும்புவோம். அது காதல்தான் என்பதைத் தெளிவாக விளக்க முடியாது.

# அவரது கவனத்தை ஈர்ப்பது மட்டுமே முதன்மையாக இருக்கும். உடல் ரீதியான அண்மையும் நெருக்கமும் இரண்டாம்பட்சமே. சமயத்தில் அது தேவையே இல்லை என்றும் சொல்வார்கள்.

# காதல் என்பதன் இருண்ட, அதே நேரம் ஆபத்தான மறுபக்கமே லிமரென்ஸ்.

# உண்மையில்லை என்று தெரிந்தபோதும், அவரைப் பற்றிய வண்ணக் கனவுகள் திரும்பத் திரும்ப வரும். போதைக்கு அடிமையான வருக்கு அந்த போதைப் பொருள் பற்றிய நினைவுகள் தொடர்ந்து வருமே அதைப் போல.

# ஒன்று சோகமாக இருக்கும். இல்லை அதீத சந்தோஷமாக இருக்கும். இடைப்பட்ட எந்த உணர்வும் இருக்காது.

# சில நேரம் நெஞ்சே வலிப்பது போலவும் நெஞ்சில் பாரமாகவும் உணர்வார்கள்.

# தாம் விரும்பும் நபரின் சுக துக்கங்கள் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். தன்னை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற ஆராய்ச்சியில், பொன்னான நேரத்தை வீணடிப்பார்கள்.

# வேலை, கடமை, குடும்பம், நட்பு வட்டம் என எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, இந்தப் போலிக் காதலிலேயே ஆண்டுக்கணக்கில் உழன்றுகொண்டிருப்பார்கள்.

எதிர்பார்ப்பு இல்லாதது

காதல் அப்படியல்ல. அது கொடுத்து மகிழ்வது. பிரதிபலன் பார்க்காதது. லிமரென்ஸ், கொடுத்துவிட்டு எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கும். காதல் உடலையும் உள்ளத்தையும் வலுவாக்கும். ஆனால், லிமெரென்ஸ் நம்மை நாளுக்கு நாள் பலவீனப்படுத்திவிடும். நம் மீதே சந்தேகமும் வெறுப்பும் கூடுதலாகி இறுதியில் தற்கொலை செய்யவும் தூண்டிவிடும். காதல் இரு பக்கமும் ஒரு அமைதியைக் கொண்டுவரும். லிமெரென்ஸ் அப்படியல்ல. அடுத்தவரை மூர்ச்சையடையச் செய்யும் அளவுக்கு உணர்வு ரீதியிலான பலவந்தம் இருக்கும்.

லிமரென்ஸ் என்பது ஒரு விசித்திர உணர்வு. காதலுக்குக் கீழே, ஈர்ப்புக்கு மேலே என்கிற இடைப்பட்ட நிலையில் உள்ள ஒன்று அது. நம் கட்டுப்பாட்டை மீறித் தானாக வெளிவருவது. அவரைப் பற்றிய எண்ணம் திரும்பத் திரும்ப மேலெழுந்துகொண்டே இருக்கும்.

சொன்னால்தான் காதல்

நிராகரிக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயம் இதில் அதிகம் இருக்கும். அதனால் எந்தச் சூழ்நிலையிலும் தான் ஈர்க்கப்படும் நபரிடம் மனம் திறந்து தன் விருப்பத்தைத் தெரிவிக்க மாட்டார்கள். நிராகரித்துவிடுவார்களோ என்ற அதீத பயம் அல்லது பதற்றத்தின் காரணமாகக் கடைசிவரை காதலைச் சொல்லவே மாட்டார்கள்.

எதிர்ப்புறம் இருப்பவரே காதலை எதிர்பார்த்து மனதளவில் தயாராகியிருப்பார். இருப்பினும் எங்கே நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் அந்தப் பக்கம் தெரியும் பச்சை சிக்னலைக்கூட கவனிக்கத் தவறிவிடும் அவலமும் இந்த லிமரென்ஸில்தான் இருக்கும்.

அதேநேரம் நம் செய்கைகளுக்கு எதிர்த்தரப்பிலிருந்து சின்னதாக ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டால் போதும். வானமே காலடியில் வந்து வீழ்ந்ததைப்போல் பறப்பார்கள். சின்னதொரு சம்பவத்தைக்கூட பெரிதாக சிலாகித்து, காலம் கனிந்து வருகிறது என்று குதிப்பார்கள்.

லிமரென்ஸ் உணர்வு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏகப்பட்ட மாற்றங்களை உண்டாக்கிவிடும். கை கால்களில் நடுக்கம், படபடப்பு, பலவீனம், பேச்சில் தடுமாற்றம் ஆகியவற்றோடு இனம் புரியாத கூச்சமும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

லிமரென்ஸ் என்பது வெளியே தெரியாத அளவுக்கு மறைந்து தாக்கும் உணர்வு. ஏனெனில், காதலில் இருப்பது போன்றே உணர்வுகள் இதிலும் இருக்கும். ஆனால் இது காதல் இல்லை.

நமக்கு ஏற்பட்டிருப்பது காதலா, ஈர்ப்பா அல்லது லிமரென்ஸ்தானா என்பதைப் பகுத்தாய்வது கொஞ்சம் சிரமம்தான். அதிகம் அறியப்படாத இந்த லிமரென்ஸின் முதலாவதும் முக்கியமானதுமான அறிகுறி எது தெரியுமா? நமது உணர்வுகளைச் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து மறைக்க முயல்வதுதான். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டு, காதலைத் தேடுவோம்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-11-ரொமான்ஸ்-தெரியும்-லிமரென்ஸ்-தெரியுமா/article9406344.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 12: அபிராமி... அபிராமி...!

 
kadhal_3101035f.jpg
 
 
 

இருபத்தைந்து வயது இளைஞர் ஒருவர் கடிதம் அனுப்பியிருந்தார். அவர் மனநிலை இப்படி விரிகிறது: “சார், எண்ணங்களுக்கு சக்தியுண்டு. பிரார்த்தனைகள் மூலம் காதல் வெற்றி பெற முயற்சியுங்கள் என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள். அதேபோல எனக்குள்ளும் வித்தியாசமான உணர்வுகள் துளிர்விட ஆரம்பித்துவிட்டன. அவள் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவளைப் பார்த்த நாளிலிருந்து அவளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். அதனாலோ என்னவோ எதிர்பார்க்காத இடங்களிலெல்லாம் அவள் பெயர் தெரிகிறது. செய்தித்தாள் எடுத்தால் ஒரு பிரபலத்துக்கு அவள் பெயர். டீக்கடைக்குப் போனால் ‘தீபா டீஸ்டால்’ என்றிருக்கிறது. என் அம்மா பெயர் லட்சுமி. ஒரு தொழில் தொடங்கினால் அம்மா பெயரோடு என் காதலியின் பெயரையும் சேர்த்து வைக்கலாம் என்றிருந்தேன். என்ன ஆச்சரியம்… எங்கள் ஏரியாவில் புதிதாகத் தொடங்கிய கல்யாண மண்டபத்துக்கு தீபலட்சுமி மஹால் என்று பெயர் வைத்திருந்தார்கள்.

முட்டாள் தனமாக யோசிக்காதே தம்பி என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. காதலே ஒரு முட்டாள்தனம்தானே. எல்லாம் சரி, இப்போது பிரச்சினையே அந்தப் பெண் இதுவரை எனக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. என் வீட்டில் அனைவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டேன். என் அக்காவுடன் அவள் வீட்டுக்குச் சென்றேன். போன் நம்பரைக் கேட்டபோது, தன்னிடம் மொபைல் இல்லை என்றாள். ஆனால் அவளிடம் போன் இருப்பது எனக்குத் தெரியும். வலியுறுத்திக் கேட்டதால் கடைசியில் ஒரு நம்பரைச் சொன்னாள். என் அக்காவை அந்த நம்பருக்கு போன் செய்யச் சொன்னேன். யாரோ ஒரு இளைஞர் பேசினார். அவளுக்கு அண்ணனும் இல்லை, தம்பியும் இல்லை. பின் எதற்காக யாரோ ஒருவரது எண்ணை எனக்குத் தர வேண்டும் என்ற குழப்பம் இன்றுவரை தீரவில்லை.

ஒன்பது மாதங்களாக அவள் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறேன். சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் அவள் எனக்குத்தான் என்று உணர்த்துவதாக இருக்க, அவள் மட்டும் பதில் சொல்லாமல் இருப்பது டென்ஷனாக இருக்கிறது. உன்னைப் பிடித்திருக்கிறது, மறக்க முடியவில்லை என்று நான் சொன்னதற்குப் பதில் பேசாதவள், “உங்க அண்ணனுக்கு எங்க அக்காவைப் பெண் கேட்டு வரச் சொல்லுங்க” என்று மட்டும் சொன்னாள். இவளை விடவும் மனமில்லை. மேலெடுத்துச் செல்லவும் முடியவில்லை. ஹெல்ப் மீ சார்…” – உணர்வுக் குவியலாக இருந்தது அந்தக் கடிதம்.

ஞாபகங்கள் தாலாட்டும்

இவருக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கும். ரொம்ப நாள் தொடர்பில் இல்லாத நண்பராக இருப்பார். எதையோ தேடும்போது அவரும் நீங்களும் எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தைப் பார்ப்பீர்கள். அன்று மதியம் அவரே அழைப்பார். அதிர்ந்து போவீர்கள். உங்களுக்குப் பிடிக்காத குறுந்தகடு பாடல்களை நிறுத்திவிட்டு, ரேடியாவை ஆன் செய்திருப்பீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று நேயர் விருப்பமாகத் தவழ்ந்து வந்துகொண்டிருக்கும்.

புல்லரித்துப் போவீர்கள். எதேச்சையாக நடக்கும் இந்நிகழ்வுகளுக்கு ஏதும் விளக்கம் இருக்கிறதா? இருக்கிறது. ஆங்கிலத்தில் இவற்றைத் தற்செயல் (coincidence) என்று சொல்லிக் கடந்தும் போகலாம். மேலும் ஆராய்ந்தால் எதுவும் எதேச்சையல்ல, எல்லா நிகழ்வுகளும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை என்று புரியும்.

நினைத்தாலே நடக்கும்

ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லவே சம்பவங்கள் இப்படி ஒன்றோடு ஒன்று இணைகின்றன (Synchronise). இதைத்தான் Synchro Destiny என்று சொல்கிறார் டாக்டர் தீபக் சோப்ரா. புகழ்பெற்ற பல சுயமுன்னேற்ற நூல்களின் ஆசிரியரான இவர் எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பே இதுதான். மேலோட்டமாகப் பார்த்தால் பெரிதாக எதுவும் புலப்படாது. ஆனால், பக்கவாட்டுச் சிந்தனையுடன் கூர்ந்து நோக்கினால் அவற்றுக்கு வேறு அர்த்தம் புலப்படும். இது மட்டுமல்ல, ஒரே விஷயத்தின் மீது நம் மொத்தக் கவனத்தையும் குவித்தால் அது நம்மை நெருங்கி வரும் என்பதே கவர்தல் விதி (Law of attraction).

நேர்மறை விஷயமானாலும் சரி; எதிர்மறை விஷயமானாலும் சரி, அதையே நினைத்துக்கொண்டிருந்தால் அது ஒரு நாள் நடந்தே தீரும் என்று சொல்வார்கள். சுய முன்னேற்ற நூல்களைப் படிக்க நேர்ந்தால் அவற்றின் அடிப்படை போதனைகளில் பலவும் எண்ணங்களின் சக்தியைப் பறைசாற்றும். அடுத்து ஆழ்மனதின் சக்தியைப் பயன்படுத்தி எண்ணங்களின் துணையுடன் நினைத்ததைச் சாதித்துக்கொள்ளுங்கள் என்பதுதான் மையக் கருத்தாக இருக்கும்.

வேலை வந்தால் மாலை வரும்

இப்போது அந்த இளைஞர் கதைக்கு வருவோம். அன்புத் தம்பி, காதலில் விழும்போது இப்படி உணர்வது சகஜமே. இயற்கையே நமக்கு உத்தரவு கொடுத்தது போலவும் நடப்பதெல்லாம் உங்களிருவரைச் சுற்றியே நடப்பது போலவும் பிரமிப்பாக இருக்கும். இதற்கான அறிவியல் விளக்கத்தையும் மேலே சொல்லியிருக்கிறேன். அந்தப் பெண் ஏன் மவுனமாக இருக்கிறார்? காரணம் பயமாகவும் இருக்கலாம். ஆமாம், அவருடைய அக்காவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அது முடிந்தவுடன்தான் தன்னைப் பற்றி அவரால் யோசிக்க முடியும்.

உங்கள் நிலவரம் என்ன? போட்டித் தேர்வுகளுக்குப் படித்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். அதில் வெற்றி பெற்று நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்று உங்கள் நிலை உயர்ந்தால் எல்லாமே மாற வாய்ப்பிருக்கிறது. காதல் எங்கேயும் போய்விடாது என்ற நம்பிக்கை எல்லோருக்கும் வேண்டும்.

பொறுத்தாருக்குக் காதல் கிட்டும்

பெண்களின் மவுனம் நான் முன்பே சொன்னதுபோல் பல இடங்களில் நமக்குப் புரியாது. ஒவ்வொன்றாகத்தான் அந்த மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதற்குள் வேலையில் கண்டிப்பாக செட்டில் ஆக வேண்டும். அவரைத் தொடர்ந்து செல்வதை உடனே நிறுத்துங்கள். ஆனால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், உங்கள் திட்டம் என்ன, எவ்வளவு காலம் காத்திருக்கப் போகிறீர்கள் என்பதைச் சந்தர்ப்பம் பார்த்து அவருக்குப் புரியவைத்துவிடுங்கள்.

காதலைச் சொன்னதுமே டூயட் பாடியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து வெளியே வாருங்கள். முக்கியமாக அந்தப் பெண்ணின் மனதில் வேறு யாரும் இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எல்லா மவுனமும் சம்மதத்துக்கு அறிகுறியல்ல. ‘நீங்கள் ஐ லவ் யூ’ என்று சொன்னதும் அவரும் ‘லவ் யூ டூ’ என்று சொல்லிவிட்டால் நமக்குக் காதல் மேலேயே ஒரு சந்தேகம் வந்துவிடும்.

பல நேரங்களில் ஒரு வித பாதுகாப்பற்ற உணர்வுக்கு ஆணோ பெண்ணோ தள்ளப்படுவார்கள். அப்போது நம்மைக் கடந்து போகிற, நம்மைப் பாதித்த ஒரு நபரை ரிசர்வில் வைப்பதுபோல பரிசீலனையிலேயே வைத்திருப்பார்கள். காதல் விண்ணப்பங்களும் சில நேரம் காத்திருப்பில் வைக்கப்படுகின்றன. மனதில் நாமும் அவர்களை நிறுத்தி நாம் விரும்புவதையும் காத்திருப்பதையும் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்.

அதன் பின் இருவரது காதலே மற்றவற்றைப் பார்த்துக்கொள்ளும். உங்கள் விஷயத்தில் அந்தப் பெண் பதில் சொல்லவில்லை. மறுக்கவும் இல்லை. கடைக்கோடி கிராமத்தில் பெற்றொருடன் வாழும் பெண்ணுக்கும் மும்பை ஜுஹூ பீச்சுக்கு அருகில் ஹாஸ்டலில் வசிக்கும் நவ நாகரிக யுவதிக்கும் இருக்கும் சுதந்திரத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதனால் உடனே ரியாக்ட் செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது.

இளமை நமக்கு வைக்கும் தேர்வுகளில் முக்கியமானது காதல். அதில் வெற்றிபெற நிறைய திட்டமிடலும், கவனம் சிதறாத உண்மையான முயற்சியும், எல்லாவற்றையும்விட ஏராளமான பொறுமையும் அவசியம் தேவை.

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-12-அபிராமி-அபிராமி/article9417947.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 13: எனக்கு 33 அவருக்கு 26

 

 
relationship_3104556f.jpg
 
 
 

எனக்கு ஒரு மின்மடல் வந்திருந்தது. “என் வயது 33. தகவல் தொழில்நுட்பப் பொறியாளர். என்னுடன் பணிபுரியும் இளைஞரைக் காதலிக்கிறேன். என்னைவிட ஏழு வயது சிறியவரான அவரும் என்னை மனப்பூர்வமாகக் காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். எங்களுடையது, நிபந்தனையற்ற காதல் (Unconditional love). சமூகம் எங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. திருமணமான பிறகு சில ஆண்டுகளில் அவர் மாறிவிடுவாரா? எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் வருமா? இது போன்ற திருமணங்கள் இயற்கையை மீறியவையா?” இதுதான் அந்தப் பெண்ணின் கேள்வி. இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது மடலில் உறுதியும் தெளிவும் இருந்தன. காதலுக்கு அவர் வைத்திருக்கும் வரையறை என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அன்புத் தோழி… காதலின் முதல் தேவை அசைக்க முடியாத நம்பிக்கை. அது உங்களிடம் இருப்பதாகவே உணர்கிறேன்.

வரையறுக்கப்பட்ட வட்டத்தை விட்டு விலகுபவர்கள் ஒன்று புத்திசாலிகளாகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். அல்லது மன ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். பக்கவாட்டுச் சிந்தனை உள்ள யாருமே முதலில் சமூகத்தால் எள்ளி நகையாடப்படுவார்கள். செல்லும் பாதையில் தெளிவும் எடுத்து வைக்கும் அடிகளில் உறுதியும் கொண்டிருந்த எவருமே இலக்கை அடையாமல் இருந்ததில்லை.

காலம் மாறிப்போச்சு

ஆண் எப்போதுமே குடும்பத் தலைவனாக முன்வைக்கப்படுபவன். நாகரிகம் வளர்வதற்கு முன்பாக குடும்பப் பாதுகாப்பு என்பது ஆணின் உடல் வலிமை சார்ந்த ஒன்றாகவும் கருதப்பட்டுவந்தது. அப்போது பெண் வீட்டுக்குள் இருந்தாள். அதனால் அவன் சொல்வதைக் கேட்டு கீழ்ப்படிதலுடன் இருந்து குடும்பத்தை நடத்திச் செல்லும் ஒரு செயல் அலுவலராகப் பெண் இருந்தாள். ஆக, தன்னைவிட வயதில் இளைய பெண்ணை மணம் செய்வது வழக்கத்தில் இருந்திருக்கலாம்.

பெண்ணின் பூப்படையும் வயது, அவர்களின் மன முதிர்ச்சி, பேறு பாக்கியம் முடிவடையும் காலம் - இப்படிப் பல காரணங்களும் இருக்கின்றன. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. ஆண், பெண் இருவரும் வேலைக்குப் போகிறார்கள். பல தளங்களில் ஆணுக்கு நிகராகப் பெண்கள் பதவிகளிலும் அதிகாரத்திலும் இருக்கிறார்கள். இரண்டு சம்பளம், இரட்டிப்பு நிம்மதி என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. வயது குறைவான பெண்ணை மணப்பது என்பது ஒரு பழக்கமாகத்தான் இருந்திருக்கிறது. சட்டமாக ஆக்கப்பட்டதாகத் தெரியவில்லை. நீங்கள் விரும்பினால் நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

நாலு பேர் என்ன சொல்வார்கள்?

சமூகத்தை எப்போதும் நம்மால் திருப்திப்படுத்த முடியாது. தர்க்கரீதியில் ஒரு விஷயத்துக்கு விளக்கம் தேடுவதைவிட, தார்மீகரீதியில் அதை அணுகுவது அறிவுப்பூர்வமானது.

ஒரு ஊரில் மாடு புனிதமாகக் கருதப்படுகிறது, வழிபடப்படுகிறது. பக்கத்து ஊரில் அது மதிய உணவுக்கான தொடுகறியாக இருக்கிறது. ஒரு கட்சித் தலைவரைத் தூக்கியெறியும் சமூகம், அடுத்த தேர்தலில் அவரைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது. சமூகம் பல வண்ணங்களைக் கொண்டது. நம்மை அது குழப்பிவிடாமல், நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண்டுகள் பல கழிந்த பிறகு, நீங்கள் வெற்றிகரமான தம்பதியராக இருக்கிறீர்களா என்பதைத்தான் சமூகம் பார்க்குமே தவிர, உங்கள் வயது வித்தியாசத்தைப் பார்த்துக்கொண்டிருக்க அப்போது யாருக்கும் நேரமிருக்காது.

இல்லம் சங்கீதம்

உடல் இயங்கியல் ரீதியாகப் பார்ப்போம். மாதவிடாய் நிற்கும் காலம் சராசரியாக 48 வயது. அதாவது ஒரு பெண்ணின் கருத்தரிப்புக்கான சாத்தியக்கூறுகள் குறைவது மாத்திரமல்ல… தாம்பத்தியத்தில் ஈடுபாடும் ஆர்வமும் குறையும் பருவமும் அதுதான். அதன்படி உங்களுக்கு இன்னும் 15 ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் உங்கள் வருங்கால கணவரின் இப்போதைய வயது 26. இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் 41-வது வயதில் இருப்பார். வாழ்க்கை நாற்பது வயதில்தான் ஆரம்பிக்கிறது என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

அது உண்மையோ பொய்யோ ஆணுக்கு நாற்பது வயதெல்லாம் அவ்வளவு ஒன்றும் முடியாத வயதல்ல. அப்போது சம்சார வீணையை மீட்டுவதில் இருவருக்கும் ஒரு ஸ்வர பேதம் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாலியல் திருப்தி மட்டுமே வாழ்க்கையல்ல என்பதும் உண்மைதான். ஆனால் பாலியல் திருப்தி இல்லாத வாழ்க்கையும் நிறைவற்றதே. அளவுகள் மாறலாம். ஆனால், தேவை மாறாது. அதை அனுசரித்துக்கொள்ளும் மனநிலை இருவருக்கும் இப்போதே இருக்க வேண்டும்.

யார் சொல்லி யார் கேட்பது?

அடுத்து மன முதிர்ச்சி. இயல்பாகவே பெண்கள் ஆண்களைவிட உடலளவில் மாத்திரமல்ல, மனதளவிலும் சீக்கிரம் முதிர்ச்சியடைந்துவிடுகின்றனர். அவர் உங்களுக்குச் சொல்வதைக் காட்டிலும் நீங்கள் அவருக்குச் சொல்லும் ஆலோசனைகள் கூடுதலாக இருக்கும். அதை அவர் விரும்பி ரசித்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. “நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது? எனக்கும் எல்லாம் தெரியும்” என்று அவர் நினத்துவிட்டால், நெருடல் ஆரம்பித்துவிடும்.

பெண்ணின் அறியாமையை ரசிக்கும் ஆண்கள் நிறைய உண்டு. அது காதலையும் அதிகரித்து தாம்பத்திய சங்கீதத்தை மேலும் இனிமையாக்க வல்லது. ஆனால், உங்கள் விஷயத்தில் அவர் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பளிப்பவராகவும் அதிலெல்லாம் ஈகோ பார்ப்பவராகவும் இருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதனால்தானே உங்கள் காதல், கல்யாணம்வரை வந்திருக்கிறது! குழந்தை குறித்த திட்டமிடலும் உங்கள் திருமணத்தின் முக்கிய அம்சம். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே, அது குறித்து முடிவெடுப்பது நல்லது.

காதலுக்கு நாம்தான் பொறுப்பு

மற்றபடி காதல் திருமணங்களுக்கே உரித்தான பல பிரச்சினைகள் எல்லாருக்கும் பொதுவானதே. பெற்றோர் பார்த்து செய்துவைத்த கல்யாணத்தில் சிக்கல் வந்தால் அவர்களிடம் போய் அழலாம், முறையிடலாம். காதலித்து, சில பல எதிர்ப்புகளை மீறி மணந்து அதில் சிக்கல்கள் வந்தால், வேறு யாரிடமும் சென்று முறையிட முடியாது. “நாங்கதான் அப்பவே சொன்னோமே” என்று உறவினர்கள் நீட்டி முழக்குவார்கள். சொல்லப்போனால் காதல் மணம் புரிபவர்களுக்குப் பொறுப்புணர்வு அதிகமாக இருக்க வேண்டும். விட்டுக்கொடுத்தலின் உச்சம்தான் காதல் திருமணத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவீடு.

நான் பல முறை சொல்லியிருக்கிறேன். காதலிக்கும்போது இருக்கும் வேகம், மோகம் எல்லாம் அப்படியே இருக்காது. கண்டிப்பாக சில ஆண்டுகளுக்குப் பிறகு குறையத்தான் செய்யும். அது இயல்பு என்று உளவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டதே. அப்படிக் குறையும்போதுதான், இயற்கை நம்மை வேறு மாதிரி அணுகி அந்த உறவின் மெல்லிய இழை அறுந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது. உதாரணம் குழந்தை. ஆம், மன்மதன் அம்பு மழுங்க ஆரம்பிக்கும்போது மழலையின் அழுகை அந்த வெற்றிடத்தை நிரப்புகிறது.

பிள்ளைப் பேற்றை அனுபவிக்கும் ஆனந்தத்தில் ஒருவரின் தவறுகளை மற்றவர் மன்னித்துப் பின் மறந்தும் விடுவார்கள். வாழ்வில் ஒரு மோகம் குறையும்போது மற்றொன்று உள்ளே வரும். ஒன்றில் இருந்து விடுபட முயலும்போது, இன்னொன்று வந்து சேரும். தொடர்ந்த அந்தப் பொறுப்புகள் மூலமாக வாழ்க்கை தொய்வின்றி இயற்கை அன்னையால் வழி நடத்தப்படும்.

கணவன், மனைவியிடம் பரஸ்பரம் சரணாகதி அடைவது என்பது ஒரு மாபெரும் சூத்திரம். இதை அறிந்துகொண்ட காதலர்கள் பூட்டிய அறைக்குள் பிரளயமே வந்தாலும் வெளியே சொல்ல மாட்டார்கள். இரண்டு பேரால் ஒரு அறைக்குள் வைத்து தீர்த்துக்கொள்ள முடியாத பிரச்சினை, எத்தனை பெரிய மன்றத்தில் வைத்துப் பேசினாலும் தீராது என்பதை உண்மையான தம்பதிகள் உணர்ந்திருக்க வேண்டும். ஆம்… உங்கள் இருவருக்குமான வாழ்க்கை உங்களுக்கு மட்டுமே புரிந்த ரகசியம். மற்றவர்களுக்கு அது புரியாது, புரிய வேண்டிய அவசியமும் இல்லை.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-13-எனக்கு-33-அவருக்கு-26/article9430144.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 14: காதலின் மூன்றாம் நிலையைத் தெரியுமா?

 

 
love_3107432f.jpg
 
 
 

அரும்பாகி, மொட் டாகி, பூவாவாக மலர்வதைப் போலத்தான் காதலும் படிப்படியாக அரங்கேறும். அது மெல்ல கருவாகி உருவாவதை படிகமாக்கல் (Crystallization) என்று வர்ணித்திருக்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர்.

முதலில் ‘லஸ்ட்’ (Lust) என்று சொல்லப்படும் காமம். எதிர்ப் பாலினத்தைக் கண்டதும் ஏற்படும் கவர்ச்சி, ஈர்ப்பு, வெறி, மோகம், தாபம்... இதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அந்தச் சமாச்சாரங்களின் அடிப்படை இரண்டு ஹார்மோன்கள். ஒன்று ஆண் தன்மைக்குக் காரணமான டெஸ்டோஸ்டீரோன் (Testosterone). மற்றொன்று பெண் தன்மைக்குக் காரணமான ஈஸ்ட்ரோஜன் (Estrogen). இந்த வேதிப்பொருட்கள் நம் உடம்பில் பிரவாகமாகச் சுரந்து வரும்போது, பதின் பருவம் நம்மைத் தாலாட்டத் தொடங்கும். உடலில் ஏற்படும் பதின் பருவ வயதின் மாற்றங்கள் தொடங்கி இல்லறத் துணையைத் தேடுவதுவரை அனைத்துக்கும் இந்த இரண்டு ஹார்மோன்கள்தான் காரணம்.

இளமை ஊஞ்சலாடும் காலத்தில் எதிர்ப்பாலினத்தைக் கண்டதும் பிறக்கும் மோகமே அனைத்துக்கும் முதற்படி. புனிதமான காதலாகப் பூஜிக்கப்பட்டுப் பின் கல்யாணத்தில் முடிகிற வெற்றிக் காதலானாலும் சரி, அவசர அவசரமாக உடல் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் ஆளுக்கொரு திசையில் நடையைக் கட்டும் வெற்றுக் காதலானாலும் சரி, ஆரம்பம் என்னவோ இந்த முதல் நிலைதான்.

வயிற்றுக்குள் பறக்கும் பட்டாம்பூச்சி

அடுத்தது எதிர்ப் பாலினம் மேல் ஏற்படும் ஈர்ப்பு (attraction). ‘காதலில் விழுந்தேன்’ என்பது இதுதான். கனவுகளில் மிதப்பது, பசி மறப்பது, படபடப்பது, உறக்கமின்மை, உறங்கத் தேவையின்மை, கை நடுக்கம், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது… இப்படிப் பல உணர்வுகளின் கலவையாக நம்மை ஆக்கும் ‘காதல் காலம்’ இது. இந்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் கவர்ந்திழுக்கப்பட்டு நெருங்கி வருவார்கள்.

குறைகள் எதுவுமே கண்ணுக்குத் தெரியாது. கொஞ்சமாக அலைவரிசை ஒத்துப்போயிருந்தாலும், அதீதமாக மிகைப்படுத்திக் காற்றில் பறப்பார்கள். அடுத்தவரின் ‘பாசிடிவ்’ மட்டுமே தெரியும். ‘நெகடிவ்’ என்பதை சுத்தமாகக் கண்டு கொள்ள மாட்டார்கள். காரணம் ‘காதலுக்குக் கண் இல்லை’ என்று அனைவருமே அறிந்திருப்பீர்கள்!

வழிநடத்தும் வேதிப்பொருட்கள்

‘நாம் காதலிக்க ஆரம்பிக்கும் அந்த நொடிவரை, மூளை தொடர்ந்து வேலை செய்கிறது’ என்ற மேற்கோளைப் படித்தேன். நகைச்சுவையாகச் சொல்வதாக வைத்துக்கொண்டாலும், எவ்வளவு ஆழமான கருத்து இது! காதலிக்க ஆரம்பித்தவுடன் மூளை வேலை செய்வதில்லையாம். காதல் காலம் ஒரு கண்ணாமூச்சி காலம். ஹார்மோன்களால் ஆளப்படும் இந்தக் காலகட்டம் காதலில் மிகவும் முக்கியமானது.

ஒரு இசைக்கோவைக்கு எப்படி ஏழு ஸ்வரங்கள் தேவைப்படுகின்றனவோ அதுபோல காதலெனும் உணர்வுக்கோவைக்கும் சில வேதிப்பொருட்கள் தேவைப்படுகின்றன. அட்ரினலின் (adrenaline), டோபமைன் (dopamine) மற்றும் செரடோனின் (serotonin) என்ற மூன்று நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்தான் காதல் காலத்தின் இயக்குநர்கள். நமது மூளை லட்சக்கணக்கான மூளை நரம்பு செல்களால் ஆனது. நியூரான் என்பது மூளை செல்லின் பெயர். ஒரு நரம்பு செல்லுக்கும் இன்னொரு நரம்பு செல்லுக்கும் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுபவைதான் இந்த நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்.

காதல் போதைக்குக் காரணம் என்ன?

காதலின் ஆரம்பத்தில் ஏற்படும் படபடப்பு, வியர்த்துக் கொட்டுவது, உள்ளங்கைகள் சில்லிட்டுப் போவது, நா வறண்டு போவது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் அட்ரினலின். மனம் கவர்ந்தவரின் நினைவே ஒரு போதையைப் போன்றதுதான். நினைத்தாலே இனிக்கும் அந்தப் பெருமகிழ்ச்சிக்கு டோபமைன் காரணம். அவரை நினைத்தாலே ஒரு சக்தி பெருகி தூக்கம், உணவு தேவைப்படாத நிலையிலும் இன்பம் ஊற்றெடுக்குமே, அதற்குக் காரணம் டோபமைன்.

இவை தவிரக் காதலில் இருக்கும்போது எந்நேரமும் அவரைப் பற்றிய நினைவு நம் உள்ள வெளியெங்கும் வியாபித்திருக்கும்; திரும்பத் திரும்ப அந்நினைவுகளே நம்மை ஆக்ரமித்திருக்கும் என்று முந்தைய அத்தியாயங்களில் சொல்லியிருந்தேன் அல்லவா? அந்த உணர்வுகளுக்கெல்லாம் காரணம் செரடோனின். பெரும்பாலான காதலர்கள் இந்தக் கட்டத்தில்தான் இருப்பார்கள். அந்தக் காதல் கல்யாணத்தில் முடிகிறதா இல்லை, ஆளுக்கொரு திசையில் கிளம்பிச் செல்கிறோமா என்பது முடிவாகும் கட்டம் இது.

உயிரும் நீயே உணர்வும் நீயே

கவர்ச்சிப் படலம் முடிந்த பிறகு வருவது அட்டாச்மென்ட் (Attachment) என்னும் இணைப்புப் படலம். எப்படியோ அந்தக் காதலர்களுக்குத் திருமணம் ஆகிவிடுகிறதென்று வைத்துக்கொள்வோம். காதல் தன் பூச்சைக் கழுவிக்கொண்டு காமக் கடலில் இருவரையும் தள்ளிவிடும். சம்சார சாகரத்தில் திளைக்கின்றனர் தம்பதியர். அப்படியான ஒரு உறவு உடலால் ஏற்படும்போது ஹார்மோன்கள் சுரக்காமலா விட்டுவிடும்? உறவின் உச்சத்தில் இருக்கும்போது சுரக்கும் முக்கியமான ஹார்மோன் ஆக்ஸிடோசின் (Oxytocin). கணவன் மனைவிக்கு இடையேயான ஜோடிப் பிணைப்புக்கு (pair bonding) மூலகாரணமாக இருப்பது இந்த ஆக்ஸிடோசின். இவள் என்னவள், எந்தச் சூழலிலும் இவளைப் பிரிய மாட்டேன், இவள் எனக்கு எப்போதும் வேண்டும் என்பன போன்ற சிந்தனைகளின் காரணகர்த்தா இந்த ஆக்ஸிடோசின்.

இல்லற உறவில் அடிக்கடி ஈடுபடும் தம்பதியினரிடையே அதிக அளவு நெருக்கமும் பிணைப்பும் ஏற்படும் என்பது உளவியல் உண்மை. அதற்குக் காரணமும் ஆக்ஸிடோசின்தான். தம்பதியினரின் உறவுப் பிணைப்பைத் தாண்டி இந்த ஹார்மோனின் இன்னொரு வேலையைக் கேட்டால் சிலிர்த்துப்போவீர்கள். குழந்தை பிறக்கும்போது வெளிப்படுகிற ஹார்மோனும் இதுதான். அதனால்தான் இயல்பாகவே தாய்க்குத் தன் சிசு மீதான நெருக்கமும் பிணைப்பும் வந்துவிடுகிறது. மாசற்ற தாய்ப்பாசத்துக்கே மூலகாரணமாக இருப்பதால் இந்த ஆக்ஸிடோசினுக்குத் தொட்டில் ஹார்மோன் (Cuddle Hormone) என்ற செல்லப்பெயரும் உண்டு.

நீடித்து நிலைக்கும் பிணைப்பு

ஒருவரைக் காதலித்து ஒன்றுசேர்வதோடு காதல் முடிவதில்லை. அவரோடு மட்டுமே என் வாழ்க்கை என்ற ‘ஒருவனுக்கு ஒருத்தி’ தத்துவத்துக்கும் அடிப்படை ஒரு ஹார்மோன்தான். நம் சிறுநீரகச் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் வாசோபிரெஸின் (Vasopressin) என்ற ஹார்மோன் மன ரீதியான பிணைப்பிலும், துணையைப் பாதுகாப்பதிலும் அற்புதப் பங்காற்றுகிறது.

ஏற்பட்ட உறவை நீண்டகாலத்துக்குக் கொண்டு செல்லும் இன்னொரு அட்டாச்மெண்ட் ஹார்மோன் இது. காதலை இயற்கை எப்படி வழிநடத்துகிறது பாருங்கள்! வழி தெரியாமல்தான் பலரும் காதல் வாகனத்தை ஓட்ட ஆரம்பித்துவிடுகிறோம். வழியைப் புரிந்து, தெளிந்து வாகனத்தை ஓட்டிப்பாருங்கள். காதல் கைகூடும். ஏனெனில் காதலும் ஓர் அறிவியல்தான்!

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-14-காதலின்-மூன்றாம்-நிலையைத்-தெரியுமா/article9440169.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 15: காதலில் ஜெயிக்க என்ன செய்யலாம்?

 

kadhal_3110683f.jpg
 
 
 

“அந்தப் பெண் என்ன ஆவாங்க?” - இப்படியொரு கேள்வி எதிர்முனையில் ஒலித்ததுமே நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

“ஏழெட்டு வருஷமா ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. இப்போ அந்தப் பொண்ணுக்கு வேற ஒருத்தருக்கு இரண்டாம்தாரமா கல்யாணம் பண்ணித்தர முடிவெடுத்திருக்காங்க. கல்யாணத்துல அந்தப் பொண்ணுக்கு சுத்தமா விருப்பமில்லை. நான் செத்துட்டேன்னு எல்லாரும் நினைச்சுக்கங்கன்னு விரக்தியா சொல்றாங்க. இந்தப் பெண்ணுக்கு அப்பா, அம்மா இல்லை. அண்ணனும் தாய் மாமனும் எப்படியோ தள்ளிவிட்டா போதும்னு நினைக்கிறாங்க. என்ன செய்யறதுன்னே தெரியலை,” என்றார் அந்த நண்பர்.

“மாப்பிள்ளையின் குடும்பம் சரியில்லையாம். கட்டுப்பெட்டியானவங்களாம். வாசலில் நிற்கக் கூடாது, செல்போன் பேசக் கூடாது, ஆறு மணிக்கு மேல் வெளியே போகக் கூடாதுன்னு ஆயிரம் பத்தாம்பசலித்தனமான கட்டுப்பாடுகளாம். மாப்பிள்ளைக்கும் நல்ல பேர் இல்லைன்னு, அவங்க தெருவில் சொல்றாங்க” என்று அடுக்கினார் நண்பர்.

“ரெண்டு பேருமே மேஜர். பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாமே?” என்று கேட்டேன். “அந்தப் பொண்ணு ரொம்பப் பயப்படறாங்க. அவங்க காதலனும் வேலை சரியாக அமையாமல் தன் வாழ்க்கையை ஓட்டவே தடுமாறிட்டு இருக்கார். ரெண்டு பேருமே நம்பிக்கையில்லாம பேசுறாங்க. என்ன செய்யறதுன்னு எங்களுக்குத் தெரியலை,” என்றார் குழப்பத்துடன்.

தன்னம்பிக்கை அவசியம்

காதலுக்கு முக்கியத் தேவையான தன்னம்பிக்கை இரண்டு பேருக்குமே இவ்வளவு குறைவாக இருந்தால் எப்படிச் சரிவரும்? எதிர்மறை எண்ணங்களோடு வாழ்க்கையைத் தொடங்குவது அவ்வளவு நல்லதில்லையே.

தன் காதலைத் துறந்த ஒரு பெண், வேறு ஆணைத் திருமணம் செய்தால் என்ன நடக்கும்? புகுந்த வீட்டில் ஒருவழியாகச் சமாளித்து கணவன், புகுந்த வீட்டாருடன் அனுசரித்துப் போய்விடுவார்கள். அல்லது அந்த மாற்றத்தைக் காலமே நிகழ்த்திவிடும். அதிலும் பட்டென்று ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால் பல விதங்களிலும் வாழ்க்கையைச் சமரசம் செய்துகொண்டு விடுவார்கள்.

ஒருவேளை பழைய உறவை மறக்க முடியாமல் மனதளவில் புகுந்த வீட்டில் ஒட்டவில்லை என்றால் அது கணவன், மனைவி இருவருக்குமே நஷ்டம்.

கசந்துபோன மண வாழ்க்கை

நான் சந்தித்த இன்னொரு காதல், பரிதாபமான முடிவைச் சந்தித்தது. வழக்கமான காதல். அதைத் தொடர்ந்த எதிர்ப்புகள். பெண்ணின் தந்தைக்கு இதில் துளியும் விருப்பமில்லை. “உன் காதலன் குறைவாகச் சம்பாதிக்கிறான். நான் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்குச் சம்பளத்தைவிட கிம்பளம் அதிகம்” என்று சொல்லி ஒரு மாப்பிள்ளையின் கையில் பிடித்துக் கொடுத்தார்.

இரண்டே மாதங்களில் கசந்தது, அந்தப் பெண்ணின் வாழ்க்கை. போதைக்கு அடிமையான அந்த நபர் தெருவில் போவோர் வருவோருடன் எல்லாம் இணைத்துப் பேசி கொன்றிருக்கிறார். சந்தேக நோயாளியோடு வாழ முடியாமல், தந்தை வீட்டுக்கே திரும்பிவிட்டார். வாழாமல் வந்துவிட்ட தன் பெண்ணைப் பார்க்கப் பார்க்க தகப்பனுக்குக் குற்றஉணர்வு பிடுங்கித் தின்றிருக்கிறது. “நான்தானே உன் வாழ்க்கையைக் கெடுத்தேன். நானே சரி செய்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் தன் மகளின் காதலனிடம் சென்றார். நல்ல வேளை அந்த நபருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏதோ வேலையாக இருந்தவர், பின்னர் அழைப்பதாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

துயர் சூழ்ந்திருந்த அந்தப் பெண்ணின் முகத்தில் நம்பிக்கையின் கீற்று தென்பட, தந்தையும் ஆசுவாசமடைந்தார். ஆனால், நாட்கள் சில கடந்தும் பழைய காதலிரிடமிருந்து பதில் இல்லை. பொறுமையிழந்த பெண்ணின் தந்தை அந்த நபரை அழைக்க, அவர் என்ன பதில் சொன்னாரோ இடிந்து விழுந்தார். தன் வாழ்வில் இனி வசந்தமில்லை என்றதும் அந்தப் பெண் பூச்சிக்கொல்லியைக் குடித்துவிட்டார். இறக்கும் தறுவாயில் அந்தப் பெண் கேட்ட கேள்வி: “அப்பா, எனக்கு மட்டும் ஏம்ப்பா இப்படி?”

காதலே பொய்யா?

இந்தப் பெண்ணின் கதையில் யார் மீது தவறு? தன் மகளின் உண்மையான காதலின் ஆழத்தைப் பெற்றோர் புரிந்து கொள்ளவில்லையா? காதலிப்பவனின் வருமானத்தைவிட தான் பார்த்த மாப்பிள்ளைக்கு வரும்படி அதிகம்; தன் மகள் இன்னும் சுகமாக இருப்பாள் என்ற அந்தத் தந்தையின் அனுமானம் தவறா? சென்ற இடத்தில் கணவன் மனநோயாளியாக இருந்தது யாருடைய தவறு? அவளும் நானும் காதலித்தோம்… இப்படியொரு சூழ்நிலையில் அவளுக்குத் துணைநிற்க வேண்டுமே என்ற எண்ணம் இல்லாத காதலனின் முடிவு ஏற்புடையதா? இல்லை இந்தக் காதலே நிஜமில்லையா?

போராடினால்தான் வெற்றி

இந்த இரண்டு காதல் கதைகளில் இருந்து என்ன புரிகிறது? காதலில் வெற்றி பெற போராட வேண்டும். அதற்கு முன்பாக நம்முடைய காதலை நாமே கொஞ்சம் ஆராய்ந்து உணர வேண்டும். குறைந்தபட்சம் ஆண், பெண் இருவரில் ஒருவராவது துணிச்சலோடு முயல வேண்டும். இந்தக் காலத்தில் வேலை, வருமானம் போன்றவை ஜாதி மத பேதங்களைவிட முக்கியமானவை. பெற்றோர்தான் மாப்பிள்ளையின் வருமானம் போன்றவற்றைப் பார்க்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.

தேனிலவுக் காலம் முடியும்வரைதான் எல்லாம். பிறகு வேகம் குறைந்து, விவேகம் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிடும். ‘இல்லானை இல்லாளும் வேண்டாள்’ என்று முன்னோர்கள் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. அன்பு, பாசம், காதல் எல்லாவற்றையும் தாண்டி வாழ்வின் நடைமுறைச் சிக்கல்களைச் சமாளித்து எழ பணம் வேண்டும். அதற்கு ஒரு வேலை வேண்டும். அப்போதைக்குத் தேவையான வசதிகள் மாத்திரம் முக்கியமல்ல… தொடர்ந்து வாழ்க்கையைக் கொண்டுசெல்லக் குறைந்தபட்ச உத்தரவாதத்துக்கு ஒரு வேலை தேவை. இதை ஏற்பாடு செய்துகொள்ளத் தவறிவிட்டதால், தன் காதலியைச் சோகத்துடன் வழியனுப்பி வைக்கிறார் ஒரு இளைஞன்.

கன்னியின் கடைக்கண் பார்வையே போதுமா? அந்தக் கண்ணில் என்றும் மலர்ச்சியையும் மகிழ்வையும் காண அடிப்படையான விஷயங்களை நிறைவேற்றிக்கொள்வதை எப்படி மறக்க முடியும்? காத்தல் என்பதே காதல் என்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் சொல்லும் பல்வேறு காரணங்களில் வேலையின்மையும் ஒன்று. வெறுமனே இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் வாலிபனைக் காட்டிலும், தனக்கென ஒரு துணையுடன் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞனின் எண்ண ஓட்டம் எப்படி இருக்க வேண்டும்? அவள் எனக்கு வேண்டும்; அதற்கு நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எப்படித் தயாராக வேண்டும் என்ற தொடர் சிந்தனை அவனை வெற்றியாளனாக ஆக்கிவிடாதா?

ஊக்கம் தரும் மாமருந்து

கல்லூரியில் இறுதித்தேர்வு வந்துவிட்டது. விடிய விடிய அம்மா காபி போட்டுக் கொடுப்பார். அப்பாவி அப்பாவோ சட்டையை அயர்ன் செய்து, வண்டியைத் துடைத்து, பாக்கெட் மணியைக் கொஞ்சம் சேர்த்துக்கொடுத்து அனுப்பி வைப்பார். இதையெல்லாம் தாண்டி இன்னொரு முக்கியமான ஆள் வருவார். “டேய்… பாத்துடா, நல்லா எழுது. இந்த எக்ஸாம்தான் நம்ம வாழ்க்கைக்கே ரொம்ப முக்கியம். இதுல ஜெயிச்சி, கேம்பஸ்ல செலக்ட் ஆகணும். முதல் மாசம் சம்பளம் வாங்கியதுமே, நம்ம கல்யாணப் பேச்சை நானே எங்க வீட்ல ஆரம்பிப்பேன்.

நீ வேலை மட்டும் வாங்கு. மாலையை எங்க அப்பாவை வாங்கி வைக்கச் சொல்றேன்,” என்று நம்பிக்கையோடு ஒரு பெண் வாழ்த்து சொல்லி அனுப்பிவைக்கிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தத் தேர்வில் அந்த இளைஞன் தோற்பானா என்ன? அவன் காதல் அவனைத் தோற்கவிடுமா? அந்தப் பெண்ணின் நம்பிக்கையும் காதலின் சக்தியும் அளவற்ற ஒரு உத்வேகத்தை அந்த இளைஞனுக்குக் கொடுக்கும். கொடுக்க வேண்டும்; அதுதான் காதல். அப்படி இருப்பது மட்டுமே காதல். விரயமாகாத காமமும் விலை மதிப்பில்லாத காதலும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டால் செயற்கறிய காரியங்களை யாரும் செய்யலாம்.

காதலின் சக்தியை வெற்றிக்கான ஊக்க மருந்தாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத்தான் Transmutation of sexual energy என்று குறிப்பிடுகிறார் நெப்போலியன் ஹில் (Napoleon Hill).

அவரது ஆகச் சிறந்த புத்தகமான Think and Grow rich என்ற புத்தகத்திலும் இதைத்தான் சொல்லியிருக்கிறார். வெற்றிபெற்ற எல்லா ஆண்களின் பின்னணியிலும் ஒரு பெண் இருப்பாள் என்பதன் இன்னொரு விளக்கம்தான் இது. காதலில் ஜெயிக்க, வாழ்க்கையிலும் ஜெயிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டாலே போதும், காதல் யார் துணையும் இல்லாமலே கைகூடும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-15-காதலில்-ஜெயிக்க-என்ன-செய்யலாம்/article9450383.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காதல் வழிச் சாலை 16: காதலும் கடந்து போகும்

 

 
love_failure_3114043f.jpg
 
 
 

குழப்பவாதிகளிடம் மாட்டிக்கொண்டு காதல் படும் பாடு இருக்கிறதே... கொடுமையிலும் கொடுமை. இந்த மின்னஞ்சலைப் பாருங்கள்.

“எனக்கு 23 வயது. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். யாரையும் காதலிக்கவில்லை. என் திருமணத்துக்குச் சொந்தக்காரப் பையன் ஒருவரை வீட்டில் ஆலோசித்தார்கள். என்னிடம் கேட்டபோது உங்கள் இஷ்டம் என்று சொல்லி விட்டேன். பின்னர் அவர் ஆள் எப்படி என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சோஷியல் மீடியா வழியாகப் பழகினேன். தான் காதல் தோல்வி அடைந்தவன் என்று ஆரம்பித்துத் தன் கதையை எல்லாம் சொன்னதும் எனக்கும் அவரைப் பிடித்துப்போய்விட்டது.

அவரோ, “உன்னை என்னால் காதலியாகவோ மனைவியாகவோ நினைக்க முடியாது. நாம் நண்பர்களாக மட்டும் பழகலாம்” என்றார். ஆனால், “என்னை உனக்குப் பிடிச்சிருக்குனு சொல்றீயே எதனால என்று சொல்ல முடியுமா” என்று கேட்பார். இவற்றால் பிடிக்கும் என்று சில காரணங்களைச் சொல்வேன். ஆனால், என்னைப் பிடிக்குதா இல்லையா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இருக்காது. அப்படி இப்படி என்று சண்டை வந்துவிடும் கொஞ்ச நாள் பேசாமல் இருப்பார். திடீரென்று வந்து நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்பார். ஏன் என்று கேட்டாலும் பதில் இருக்காது.

பிறகு அவரே, “இல்லப்பா… நமக்கு செட் ஆகாது. உனக்கு மெச்சூரிடி கம்மியா இருக்கு. நானும் உனக்கு நல்ல கணவனா இருப்பேன்னு சொல்ல முடியாது” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். மீண்டும் சண்டை, சமாதானம், திருமணப் பேச்சு என்று தொடரும். வெறுத்துப்போய், “ஏன் இப்படி குழப்பறீங்க?” என்று கேட்டால், “இப்பவும் நீ என்னை காதலிச்சுட்டு இருக்கியான்னு செக் பண்ணிக்கத்தான் கேட்டேன்” என்பார். ஆரம்பத்தில் இவர் இப்படி கேட்க கேட்கத்தான் எனக்குத் திருமண சிந்தனையே வந்தது.

என்னைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டுப் போயிட்டா நிம்மதியா இருப்பேன். வந்து வந்து டிஸ்டர்ப் பண்றாரு. இப்ப என்னால மறக்க முடியலை. அன்புக்கு மதிப்பு இல்லையோன்னு தோணுது. இதையெல்லாம் தாண்டிப் பெற்றோருக்காக அவரை மணந்தால் என் வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு பயமா இருக்கு. சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மனசை மாத்திக்கும் அவரை எப்படிச் சமாளிப்பது?” இப்படிப் புலம்பியிருந்தார் அந்தப் பெண்.

எப்படி இருக்கிறது பாருங்கள் அந்த இளைஞரின் காதல் விளையாட்டு! அவரது முதல் காதல் தோல்வியில் முடிந்ததற்கும் அவரது குழப்பமான அணுகுமுறையே காரணமாக இருக்கலாம் அல்லவா? எனில் தோல்வியிலிருந்து அவர் என்ன பாடம் கற்றுக்கொண்டார்? மீண்டும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருக்கிறார்.

தோல்வியில் புலம்புவது ஃபேஷனா?

காதல் தோல்வி என்ற உணர்வை ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறார். அறிந்தோ அறியாமலோ ஆபத்தான ஒரு ஃபேஷனாக இளைஞர்கள் மத்தியில் காதல் தோல்வி பரவிவருகிறது. கருணையைப் பெறவேண்டி ஓர் ஆயுதமாகவும், குடித்துவிட்டுப் புலம்புவதற்கான கருப்பொருளாகவும், வேலைக்குப் போகாமல் பிதற்றுவதற்கும், நண்பர்கள் மத்தியில் ஞானத்தந்தை போன்று அறிவுரை சொல்லவும் சிலர் காதல் தோல்வி வேடம் தரித்து பொன்னான இளமையைப் புலம்பலில் கழிக்கிறார்கள். “வண்டி ஓட்டத் தெரியாது, எடுத்தேன் விபத்து நேர்ந்துவிட்டது” என்பது போலத்தான் இதைப் பார்க்க வேண்டும். நமக்குப் புரிந்ததுகூட அந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை என்று தோன்றலாம். எப்படிப் புரியும்? அவர்தான் காதலில் இருக்கிறாரே!

சரி, விஷயத்துக்கு வருவோம். அந்த இளைஞர் எங்கோ ஏமாந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு பெண் ஏமாற்றினால் எல்லாப் பெண்களும் அப்படித்தான் செய்வார்களா?

மாதத்துக்கு ஒரு முறை காதல் வரும், பிறகு போய்விடுமா? கல்யாணம்வரை பேசப்படும் ஒரு காதல் உறவில் இந்த நிச்சயமற்ற தன்மை இருவர் மன நலனையும் பாதிக்கும்தானே?

என்னை விட்டால் போதும் என்று இந்தப் பெண் புலம்பும் அளவு வந்துவிட்ட பிறகு இன்னும் எதற்காகக் காத்திருக்க வேண்டும்? அந்த இளைஞருடனான திருமண வாழ்வை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்கிறார். பிறகு ஏன் தயக்கம்?

அறிவின் வழிதான் சிறந்தது

சரி, அந்த இளைஞர் ஏதோ தீவிர குழப்பத்தில் இருக்கிறார் என்றால் அதற்குத் தகுந்த ஆலோசனையைப் பெறவேண்டியதுதானே? உளவியல் ஆலோசனை எடுத்துக்கொள்ள இருவருமே முன்வர வேண்டும். இப்படியான பல உறவுச் சிக்கல்களுக்கு நுண்மையான, வெளியில் தெரியாத உளவியல் கோளாறுகளும் காரணமாக இருக்கலாம். ஒருவேளை அது சரிசெய்யப்பட்டால் அந்த இளைஞர் தெளிவாகிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் அல்லவா? அதனால் யோசித்து முடிவெடுக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படுவதைவிட அறிவின் வழியில் செல்வதே சிறந்தது.

விளையாட்டல்ல காதல்!

ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்லி அவரும் சம்மதம் சொன்னபிறகு சில இளைஞர்களுக்குச் சப்பென்று ஆகிவிடுகிறது. “இவள்தான் சரியென்று சொல்லிவிட்டாளே… நாம் வேறு ஏதாவது விளையாடுவோம்” என்று தெனாவெட்டாகிவிடுகிறார்கள். இதுவே அந்தப் பெண் மறுத்துவிட்டால் சூழும் சோகமென்ன? வளரும் தாடி என்ன? ஊதித்தள்ளும் சிகரெட்டுகள் என்ன? இதுதான் காதலா?

கல்யாணத்தைப் பற்றியே பேசாத ‘பாதுகாப்பான’ காதல்களும் நிறைய உண்டு. “டேய்… கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு அடிக்கடி போன் பண்ற வேலையெல்லாம் வேணாம். நான் அவருக்கு ‘சின்சியரா’ இருக்கணும்னு முடிவு செஞ்சிருக்கேன்” என்கிறார் ஒரு காதலி. அருகிலிருக்கும் அந்தப் பையனோ “சேச்சே... நீ ஏதும் உணர்ச்சிவசப்பட்டு என் பேரை உளறாம இருந்தா சரி. என்ன இருந்தாலும் அவரு எனக்குப் பங்காளிதானே” என்கிறார். இது நான் காதால் கேட்ட உரையாடல். “காதலிக்கறவனையேதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு கட்டாயம் ஒண்ணும் இல்லயே. காதல் வேறு, கல்யாணம் வேறு. ரெண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது” என்று ஆண் நண்பருக்கு உபதேசிக்கும் முதிர்ச்சியான இளம் பெண்களும் உண்டு.

ஆனால், இந்தப் பெண் அப்படியில்லையே… இவர் ரிவர்ஸில் அல்லவா ஆரம்பித்திருக்கிறார். இன்னாரை உனக்குப் பார்க்கலாம் என்று தன் வீட்டார் சொல்லிய பிறகுதான் அந்தப் பையனுடன் பழகவே ஆரம்பித்திருக்கிறார். தன்னையறியாமல் காதலில் விழுந்திருக்கிறார். தற்போது அந்தக் காதலின் பலனாக மனச்சோர்வும் அடைந்திருக்கிறார்.

இளைஞர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு, படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, போதைக்கு அடிமையாதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு ஒரு ‘ட்ரிக்கர்’(trigger) ஆகத்தான் காதல் தோல்வி என்றழைக்கப்படும் ஒரு விஷயம் இருக்கிறது. காதல் தோல்விக்காக வளர்த்த தாடியை ஷேவ் செய்ய நீங்கள் முடிவெடுப்பதற்குள் சந்திர மண்டலத்தில் ஏதேனும் மருத்துவக் கல்லூரி ஆரம்பித்துவிடப் போகிறார்கள். காதலும் கடந்து போகும் என்பதை உணருங்கள்.

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-16-காதலும்-கடந்து-போகும்/article9462870.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 17: சாதியில்லை பேதமில்லை... சீர்வரிசை தேவையில்லை!

 

 
 
 
kadhal_3117192f.jpg
 
 
 

அது மதங்களைக் கடந்த காதல். அவர்கள் இருவரும் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கள். கைநிறைய சம்பளம். பெண் இந்து. ஆண் வேறு மதம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இருவரும் மிகத்தீவிரமாகக் காதலிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் அந்தப் பெண்.

“முதலில் நான் சம்மதிக்கவில்லை. நன்றாகப் பழகிய பிறகுதான் அவரை ஏற்றுக்கொண்டேன். வேற்று மதம் என்பதால் என் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு. அவர் தனியாக வந்து என் வீட்டில் பேசினார். பிறகு அவருடைய பெற்றோரும் வந்து பெண் கேட்டுப் பார்த்தனர். என் பெற்றோர் கடுமையாக மறுத்ததோடு அவரது மத நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தி அனுப்பிவிட்டனர். ‘நீ அவனுடன் போனால் நாங்கள் செத்துவிடுவோம்’ என்று இருவரும் தூக்குக் கயிறுடன் என் முன் உட்கார்ந்துகொண்டனர். அவர்களை மீறவும் மனம் வரவில்லை. ஆண்டுக்கணக்கில் எனக்காகக் காத்திருக்கும் என் காதலனையும் கைப்பிடிக்க முடியவில்லை. அவருக்கு வயதாவதால் வேறு பெண்ணைப் பார்க்கலாம் என்கிறார்களாம் அவரது வீட்டில். மனசே நொறுங்கிவிட்டது சார். ஏன்தான் அவனைப் பார்த்தோமோ என்று குழம்பித் தவிக்கிறேன்” என்று விரிகிறது அந்தக் கடிதம்.

தன் பிரச்சினைக்கு இரண்டு வழிகள்தான் தீர்வு என்பதையும் அவரே குறிப்பிடுகிறார். “ஒன்று பெற்றோர் செத்தாலும் பரவாயில்லை என்று காதலனைக் கரம்பிடிப்பது. காதல் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு போலியான வாழ்க்கை வாழ்வது இரண்டாவது வழி” என்று முடிக்கிறார் விரக்தியுடன்.

இது போன்ற கதைகளைப் பார்க்கும் போது நடைமுறை நிஜங்களின் தாக்கம் எவ்வளவு பெரியது என்பது புரியும். இருவரும் நன்கு படித்திருக்கிறார்கள். ஐந்து இலக்கத்தில் சம்பளம். வேலைக்குப் பின் மாலை என்று பேசுகிறோம். ஆனால் இங்கே மதம் குறுக்கே நிற்கிறது. உயிரை விட்டு விடுவோம் என்ற பெற்றோரின் அதிரடியை எப்படித்தான் சமாளிப்பது? ஒவ்வொருவரின் கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையைப் பார்ப்போம்.

காதலன்

ஆளாளுக்குக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு உப்புப் பெறாத காரணங்களைச் சொல்லி ஏமாற்றிவிட்டுச் செல்கிறார்கள். காதலைச் சொல்லும்போதே திருமணம் எப்போது என்று நான் கேட்டேன். அவர் வீட்டுக்கு நான் போய் பேசி அவமானப்பட்ட பின்பும் நல்லது நடக்காதா என்றுதான் என் பெற்றோரையும் அனுப்பிப் பேசினேன். அவர்களுக்கும் அதே அவமானம். வேற்று மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக அவர்கள் இப்படியா என்னை வெறுத்து ஒதுக்குவது? எவ்வளவு காலம்தான் நானும் காத்திருப்பது?

காதலியின் பெற்றோர்

படிப்பு முடிந்து வேலைக்குச் செல்லும்வரை நாங்கள் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டாள் எங்கள் பெண். இன்று ஒருவனைப் பிடித்துப் போனதும் சாதி மதங்களோடு சேர்த்து எங்களையும் தூக்கிப் போடத் துணிந்து விட்டாளே. வெவ்வேறு மதங்களைச் சார்ந்த இருவரும் மணந்துகொண்டால் எங்கள் சாதி சனத்தை எப்படி எதிர்கொள்வது? இவர்களுக்குப் பிறக்கும் குழந்தையை எந்த மதத்தில் சேர்ப்பார்கள்? இவ்வளவு நாள் கட்டிக்காத்த குடும்ப கவுரவம் என்ன ஆவது? படித்து வேலையில் இருப்பதால் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம் என்ற திமிரில் பேசுகிறாளா? எல்லாத் தேவைகளுக்கும் பெற்றோரை அணுகியவள் மாப்பிள்ளைத் தேவைக்கு மட்டும் தானே முடிவெடுப்பதை நாங்கள் எப்படி ஏற்பது?

காதலி

பெற்றோர் சொல்வதில் தவறில்லை. அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் என்னவர் எனக்காக ஆறு வருடங்களாகக் காத்திருக்கிறார். ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டத்துடன்தான் என்னைக் காதலிக்கவே ஆரம்பித்தார். அவருடன் இருந்தால் என் வாழ்க்கை முழுமையடையும் என்று நம்புகிறேன். பெற்றோரின் பாசத்தை ஒரு தட்டிலும் அவரது காதலை இன்னொரு தட்டிலும் வைத்துப் பார்க்கிறேன். இரண்டுமே எனக்கு சமமாகத்தான் தெரிகின்றன. ஆனால் இப்பொழுது நான் அனுபவிக்கும் மன உளைச்சலைப் பார்த்தால் காதலிப்பதே பெரும் தவறாக இருக்குமோ என்று குழம்புகிறேன். அந்தப் புனிதமான உணர்வின் மறுபக்கம் இவ்வளவு சிரமமானதா?

இதுவும் கடந்து போகும்

இப்படியான சூழலில் இருக்கின்றனர் அவர்கள் அனைவரும். பெற்றோர் பார்த்துச் செய்து வைக்கும் திருமணங்கள் அனைத்தும் நூறு சதவீதம் வெற்றியடையும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா? இந்தப் பையன் எங்கள் மகளை வைத்துக் காப்பாற்ற மாட்டான் என்று பெற்றோர் நினைப்பது எதிர்மறைச் சிந்தனையே.

இன்றைக்கு இருக்கும் சமூகச் சூழல் இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு அப்படியே இருக்கப் போவதில்லை. மதங்களைத் தாண்டிய காதல் திருமணங்களைச் சொந்த பந்தங்களே முன்னின்று நடத்துவதையும் இன்று பார்க்கிறோம். நேற்று எவையெல்லாம் முடியாது என்று நினைத்தோமோ இன்று அவையெல்லாம் சாத்தியம் என்பதை உணர்கிறோம். இன்றைக்கு எவையெல்லாம் அசாத்தியம் என்று நினைக்கிறோமோ வருங்காலத்தில் அவையெல்லாம் சாதாரணமாகச் சாதிக்கப்பட்டுவிடும் என்பது நம் அனைவருக்குமே தெரிகிறது.

மதம் தடையல்ல

இரு வேறு மதங்களைச் சார்ந்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மூன்றாவது மதத்தைச் சார்ந்த ஒருவரைக் காதல் மணம் முடிப்பதாக வைத்துக்கொள்வோம். பிரச்சினை முடிந்தது அல்லவா? கலப்புத் திருமணம் நடந்தால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம் என்று பெற்றோர் மிரட்டுவதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

மனிதனை நெறிப்படுத்தி வாழ்க்கையில் ஒழுங்கைக் கொண்டுவரக் கண்டு பிடிக்கப்பட்டவையே மதம் முதலான சங்கதிகள். கடைசியில் அவன் வாழ்வையே சீர்குலைத்து உடல் மற்றும் மன நலனைப் பாதிப்புக்கு உள்ளாக்குவதான விஷயங்களுக்கு அவை வழிவகுத்துவிட கூடாது.

கண்ணை விற்று ஓவியமா?

சாதி, மதங்களின் பெயரால் நடக்கும் ஆணவக் கொலைகள் ஒரு பக்கம்… கலப்புத் திருமணங்களை ஊக்குவித்துச் சலுகையும் வழங்கும் அரசாங்கம் இன்னொரு பக்கம். காதலிப்பவர்கள் பாவம், என்னதான் செய்வார்கள்? கண்ணை விற்று ஓவியம் வாங்குவதைப் போலத்தான் உண்மைக் காதலை விற்றுவிட்டுப் போலி வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதும்.

இவர்களைப் போல நன்றாகப் படித்து, கைநிறையச் சம்பாதிக்கும் முதிர்ச்சியான காதலர்களுக்கே திருமணம் செய்யப் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால் யார்தான் காதல் திருமணம் செய்ய முடியும்? ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நேசித்துவருவதாகச் சொல்கிறார்கள். வெறும் ஈர்ப்பு (Infatuation) என்று இதை ஒதுக்கிவிடவும் முடியாது. தங்களுக்குள் பிரச்சினை வந்தால் எப்படிச் சமாளிப்பது என்பதை இந்நேரம் அவர்கள் இருவரும் கற்றிருப்பார்கள்.

வழிவிடுங்கள் பெற்றோரே

ஊர் உலகம் என்ன பேசும் என்று பயப்படும் பெற்றோர்களே… இன்றைய சம்பவம் நாளைய மறதிப் பட்டியலில் சேர்ந்துவிடும். எவ்வளவோ பெரிய வரலாற்றுச் சம்பவங்களைக்கூட நம் சமூகம் பத்து, பதினைந்து நாட்களில் அநாயாசமாகக் கடந்து சென்றுவிடும். அதனால் அது உங்கள் வீட்டுக் காதல் திருமணத்தை ஒன்பதாண்டுகளுக்கெல்லாம் பேசிக்கொண்டிருக்காது. அப்படியே பேசினாலும் அதில் நமக்கு எதுவும் பாதிப்பில்லை என்று நினைப்பதுதான் உத்தமம். நம் வாழ்க்கை நம் கையில். எல்லோருக்கும் எல்லாச் சமயத்திலும் நல்லவர்களாக நம்மால் இருக்க முடியாது. ஊருக்காக, உலகத்துக்காக என்று சொல்லி நமக்கு நியாயமில்லாத ஒப்புதல் இல்லாத காரியங்களைச் செய்துகொண்டே இருந்தால் இறுதியில் மன நோயாளியாகி விடுவோம்.

“காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது.

காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது”

என்ற பாடல் வரிகளை நினைத்துப் பாருங்கள். பிள்ளைகளின் காதலில் உண்மை இருந்தால் சற்றேனும் மனது வையுங்கள் பெற்றோர்களே!

 

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

 

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-17-சாதியில்லை-பேதமில்லை-சீர்வரிசை-தேவையில்லை/article9477581.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 18: நெருப்பை விழுங்கி அன்பைத் தரும் காதல்

 

 
 
 
 
kadhal_3120255f.jpg
 
 
 

நான் என் வேலையைக் காதலிக்கிறேன், என் ஊரைக் காதலிக்கிறேன், என் வீட்டுச் செல்ல நாய்க்குட்டியைக் காதலிக்கிறேன்... பலரும் இப்படிப் பல விதங்களில் தங்கள் நேசத்தை வெளிப்படுத்துவார்கள். இதுபோன்ற உணர்வுகளும் காதல்தான் என்றாலும் ஆணும் பெண்ணும் நேசிப்பதைத்தான் ‘ரொமான்டிக் லவ்’ (Romantic love) என்கிறோம். ஆம், இது கொஞ்சம் ஸ்பெஷல்தான்.

இந்த ரொமான்டிக் காதலில் விழுந்தால் நாம் எப்படி உணர்வோம்? ஆளைப் பார்த்ததுமே ஏற்படும் கிளர்ச்சி, படபடப்பு, வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி போன்ற இன்ன பிற சமாச்சாரங்களை மட்டும் நான் சொல்லவில்லை. அதி அற்புதமான, மிகவும் அழகான, உணர்வுகளுக்கெல்லாம் ஆசானாக இருப்பதும் இளமையின் மிகப்பெரும் நன்கொடையுமான காதலின் வெளிப்பாடு எப்படி இருக்கும்?

ஆளே மாறிடுவீங்க

காதலுக்கு முன், காதலுக்குப் பின் என்று உங்கள் வாழ்க்கையே இரண்டு அத்தியாயங்களாகப் பிரிந்துவிடும். அதை நீங்களே உணர்வீர்கள். இல்லையென்றால் உங்கள் குடும்பத்தாரோ, உற்ற நண்பர்களோ அந்த மாற்றங்கள் குறித்து உங்களிடமே சொல்லக்கூடும். உங்கள் தனித்தன்மையான பிம்பமே (self image) மாறிவிடும் அதிசயம் காதலில்தான் சாத்தியம். அவரின் நட்பு உங்களிடம் ஒரு பெரிய நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுதான் உண்மைக் காதல்.

கொண்டாடித் தீர்ப்பீர்கள்

நீங்கள் தோல்வியடைந்த ஒரு விஷயத்தில் உங்களவர் வெற்றி பெற்றுவிட்டால் அந்த வெற்றியை அப்படிக் கொண்டாடுவீர்கள். உங்களால் முடியாத ஒன்றை அவர் சாதித்துக் காட்டினால் உங்களுக்குக் கொஞ்சம்கூடத் தாழ்வு மனப்பன்மை வராது. மாறாக அவரைப் பார்த்துப் பெருமையும் பெருமிதமும்தான் பொங்கும்.

அறிமுகம் பரவசம்

என் தேர்வு எப்படி என்பதைக் காட்டுவதற்கு மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்துவைப்பதற்காகவும் அவரை உங்கள் வீட்டுக்கு அழைப்பீர்கள். அந்த வசந்த அழைப்புகளின் அர்த்தம் என்ன தெரியுமா? உங்கள் உறவும் நட்பும் உங்களவரை விரும்பி நட்புப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம்தான். ஒரு உறவு மிகவும் வலுவாகப் பிணைக்கப்படுவதற்குச் சொந்த பந்தங்களின் அரவணைப்பும் அவசியம்தானே.

எதிலும் இழப்பில்லை

காதலில் விழுந்துவிட்டோம் என்பதற்காகக் குடும்பம், நண்பர்கள், வேலை, கடமை என எதையும் புறந்தள்ள மாட்டீர்கள். மாறாக முன்பைவிட இன்னும் மகிழ்வுடன் உழைக்கவும் சம்பாதிக்கவும் தொடங்குவீர்கள். ஆரோக்கியமான காதல், சந்தேகத்துக்கும் சங்கடங்களுக்கும் அப்பாற்பட்டது. அவருக்கான நேரத்தை அவருக்குத் தரும் அதே சமயம் மற்றவர்களுக்கான நேர முதலீட்டிலும் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டீர்கள்.

மிஸ் பண்ணுவீங்க

உங்களவர் அருகில் இல்லாத போதோ, சில நாட்கள் பார்க்க முடியவில்லை என்றாலோ அவரை ‘மிஸ்’ பண்ணுவீர்கள். காதல் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறதோ அவ்வளவு தூரத்திற்கு அந்தப் பிரிவுணர்வும் கூடுதலாக இருக்கும். ஆனால் அதில் பதட்டம் இருக்காது, பயம் இருக்காது, பரிதவிப்பு மட்டுமே இருக்கும்.

சுதந்திரம் இருவர் உரிமை

ஒவ்வொருவருக்கும் ஒரு சுதந்திர வெளி இருக்கிறது. காதலிக்கிறோம் என்பதற்காக அந்தத் தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது. அப்படி மூச்சு முட்டும்படி ஆதிக்கம் செலுத்துவது ஆரோக்கியமான காதலாக இருக்காது. அப்சஸிவ் (obsessive) காதலாகத்தான் இருக்க முடியும்.

சேர்ந்தே யோசிப்பீர்கள்

இனி உங்களுக்கெனத் தனியான விடுமுறை இல்லை. தனியாக ஊர் சுற்றத் தோன்றாது. தனி ஷாப்பிங் இல்லை. சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும் என்றாலும் உங்களவரை யோசிக்காமல் எதுவும் செய்ய மாட்டீர்கள். உங்கள் இருவர் நலனும் எல்லா இடத்திலும் சேர்ந்தே யோசிக்கப்படும், முன்னிறுத்தப்படும்.

விட்டுக்கொடுத்தல் சுகம்

சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டால் அந்தக் கணமே அதைத் தூக்கி வீசிவிடுவார்கள். ஆரோக்கியமான காதல் அதற்கான சக்தியைக் கொடுக்கும். உங்களுக்கு என்று சேமித்து வைத்திருக்கும் தொகையின் மூலமாக அவருக்கு ஒரு அவசரத் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டிய சூழலில் புன்முறுவலுடன் அதைச் செய்வீர்கள். அவர் குடும்பத்துப் பிரச்சினைகளை உங்கள் வீட்டுப் பிரச்சினை போல நினைத்து தீர்த்துவைக்க நினைப்பீர்கள். தன்னலம் தாண்டியதே உண்மைக் காதல் என்பதை உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் காரியங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டே இருப்பீர்கள்.

பொறாமைக்கும் இடம் உண்டு

காதலில் பொறாமையும் அவசியமே. அந்தச் சிறு அளவிலான ‘பொஸஸிவ்னெஸ்’ (possessiveness) காதலுக்கு ஆரோக்கியமானதே. ஆனால் எள்ளளவும் சந்தேகம் இருக்காது. எத்தனை நாட்கள் பிரிந்திருந்தாலும் எத்தனை பேருடன் பழகுவதற்கான வாய்ப்பும் உங்களவருக்கு இருந்தாலும் பரவாயில்லை. அவர் மேல் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை நீங்களே நினைத்தாலும் அசைந்து கொடுக்காது. அதுதான், அந்த நம்பிக்கைதான் உண்மைக் காதலுக்கான இலக்கணம்.

வன்முறை இல்லாதது

முகர்ந்தால் வாடிவிடுகிற அனிச்ச மலரைவிட மென்மையானது காதல். இதுவரை இருந்த உங்கள் முரட்டுத்தனம் மாறும். பொய்ப் பித்தலாட்டங்கள் குறையும். ஆடை அணிவதிலிருந்து சாப்பிடும் உணவுவரை உங்களவரால் சீரமைக்கப்படும். அந்த மாற்றங்கள் நம்மை மேலும் மெருகேற்றும், நாகரிகப்படுத்தும் என்பதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் நமக்கும் எந்தச் சிரமமும் இருக்காது. கருத்து வேறுபாடுகள் எழாமல் இருக்க முடியாது. சின்னச் சின்னதாய் சண்டைகள் வரும். ஆனால் காதலில் வன்முறை மட்டும் இருக்கவே இருக்காது.

கை ஓங்கப்படலாம். ஆனால் அடிக்க மனம் வராது. பல்லைக் கடிக்கலாம், சொல்லைக் கொட்டலாம். ஆனால் எதுவுமே எல்லை மீறாது. உன்னைக் காப்பேன் என்பதை ஆழ்மனதில் வகுத்துக்கொண்டு நம்மை நம்பி வாழ்க்கைத் துணையாய் வந்த ஒருவரை உடலால் தாக்குவது வன்முறையே. அப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவருக்கு ஏதோ ஒரு வகையில் மனநலம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். வேண்டாம் என்று மறுத்துவிட்ட பெண்ணைத் துரத்தித் துரத்தித் துன்புறுத்துவதும், நடுத்தெருவில் கீழே தள்ளி நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து இருபத்தோரு முறை கத்தியால் குத்திக் கொல்வதும் காதலின் பெயரால் நடப்பது எத்தனை அருவருப்பானது.

கால மாற்றத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். பருவ மழை பொய்த்துப் போகலாம். தை பிறந்தும் வழி பிறக்காமல் போகலாம். அத்தைக்குக்கூட மீசை முளைக்கலாம். ஆனால் காதலின் குணமும் மணமும் என்றென்றைக்கும் மாறவே மாறாது.

 

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-18-நெருப்பை-விழுங்கி-அன்பைத்-தரும்-காதல்/article9490264.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 19: கிரேக்கத்தில் எப்படிக் காதலித்தார்கள்?

 

love_3123808f.jpg
 
 
 

காதலில் நான்கு வகை உண்டு என்கின்றன கிரேக்கத் தத்துவங்கள். அவை ஈராஸ் (Eros), ஃபிலியோ (Phileo), ஸ்டோர்ஜ் (Storge), அகேப் (Agape).

விடலைக் காதல்

கண்டதும் காதல்தான் ஈராஸ். இது உடல் கவர்ச்சியின் அடிப்படையில் பிறப்பது. காமக் கிளர்ச்சியைக் குறிக்கும் எரோட்டிக் (erotic) என்ற ஆங்கில வார்த்தை இதிலிருந்து பிறந்ததுதான். உள்ளத்தின் அழகைப் பார்க்கும் முன், உடல் அழகைப் பார்த்துப் பிறக்கும் இந்த உணர்வு எப்படிப் போகும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அந்தக் காதல் நெருப்பு கல்யாணத்திலும் முடியலாம். தீயின் வேகம் கொஞ்சமாகக் குறைந்ததும் பல நிஜங்கள் வெளியில் தெரியும். அந்த உண்மையின் கசப்பு தாங்காமல் பாதி வழியிலேயே அந்தக் காதல் முறிவையும் சந்திக்கலாம்.

இந்த வகைக் காதல் ஒருவரது பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே பார்க்கும். எதிர்மறைப் பக்கங்கள் வெளிப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பலருக்கும் இருக்காது. பெரும்பாலான விடலைக் காதல் இதில்தான் சேர்த்தி.

நட்பின் பரிணாம வளர்ச்சி

நட்பு, காதலாக மாறுவது ஃபிலியோ. பல காலம் நண்பர்களாகப் பழகும்போது பெரும்பாலான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு இதில் உண்டு. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் உணர்வுக் குழப்பங்களை ஒருவிதப் புரிதலுடன் கடந்து செல்ல நட்பு நல்லதொரு வாய்ப்பு. ஒரு பெண் எப்படி என்பதைப் பத்து ஆண்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதைவிடத் தெளிவானது ஒரு தோழியோடு பழகி, புரிந்துகொள்வது. அதே போல ஒரு ஆண் அன்புக்கு எப்படி ஏங்குகிறான் என்பதை விளக்கிச் சொல்ல எல்லா ஆண்களாலும் முடியாது. காரணம் எல்லா ஆண்களும் கவிதை எழுதுவது இல்லையல்லவா? அங்கும் நட்புதான் கைகொடுக்கிறது.

கண்டதும் ஏற்படும் காமம் தோய்ந்த காதலைவிட நீண்ட காலம் பழகிய பின் ஏற்படும் இந்தக் காதல் நிச்சயமாக நிலைத்து நிற்கக்கூடியது. வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு அச்சாரமிடக் கூடியது. நியாயமாக இப்படித்தான் காதலிக்க வேண்டும். முதலில் எந்தவித கமிட்மெண்ட்டும் இல்லாத ஒரு நட்பு. நட்பு தரும் தெளிவு. மறுத்தாலும் வெறுத்தாலும் நட்பின் நாகரிகம் இருவரது சுய மரியாதையையும் காப்பாற்றும். அவ்வளவு நாள் பழகிய பழக்கம் சேதாரமின்றி இருவரையும் காக்கும். சரி என்றால் கல்யாணம்; இல்லை என்றாலும் நாம் என்றும் நண்பர்கள் என்ற நாகரிகம் அங்கே அவர்கள் இருவரையும் பெரும் மன உளைச்சலிலிருந்து லாவகமாகக் காப்பாற்றிவிடும்.

நட்பில் பிறக்கும் காதல் எவ்வளவு அழகானது! முரண்பாடுகளைக் கடந்த அந்த இடத்தில் மீதம் இருப்பது முதிர்ச்சி மட்டுமே. அந்த முதிர்ச்சிதான் காலங்களைக் கடந்தும் காதல் வென்று நிற்க முக்கியத் தேவை. மாட மாளிகை, கோபுரங்களைக்கூட ஏழெட்டு மாதங்களில் கட்டி முடித்துவிடலாம். ஆனால் காதல் கோட்டையைக் கட்ட நீண்ட காலம் பிடிக்கும் நண்பர்களே.

வீட்டுக்குள்ளே திருவிழா

மூன்றாம் வகையான ஸ்டோர்ஜ், குடும்ப ரீதியிலான காதல் (familial love). குடும்பம் மற்றும் உற்ற நண்பர்களிடத்தில் நமக்குத் தோன்றும் அன்புணர்ச்சி இது. இயல்பாகவே பெற்றோருக்குத் தம் பிள்ளைகள் மீது வரும் பாச உணர்ச்சி இந்த வகையைச் சேர்ந்தது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். ஆண்டுக் கணக்கில் பேசிக்கொள்ளாத சகோதரர்கள்கூட தங்கள் மூன்றாவது சகோதரனுக்கு ஏதாவது பிரச்னை என்றவுடன் அனைவரும் ஒன்று கூடிவிடுவார்கள். அடி நாதமாக ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் பாசமே இதற்குக் காரணம்.

இந்த அன்பு நிபந்தனைகளற்றது. நண்பர்களிடத்தில் தவறு இருக்கலாம். பெற்ற பிள்ளைகளிடத்திலும் களங்கம் இருக்கலாம். ஆனால் அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு காலப்போக்கில் அவற்றை மறந்து பின் மன்னித்தும் விடுகிறோமல்லவா. அந்த வகை காதலான இது, பாதுகாப்பானது; சவுகரியமானது; தியாகங்களும் நிறைந்தது.

அதையும் தாண்டி புனிதமானது

எதிர்பார்ப்புகளற்ற, நிபந்தனைகளற்ற, பிரதிபலன் பார்க்காத, புனிதமான காதலே அகேப். இது மனிதர்களுக்குச் சரிப்பட்டு வரக்கூடியதா என்றால் சந்தேகம்தான். இயற்கை நம் மீது வைத்திருக்கும் மாசற்ற அன்பைப் போன்றது இந்த வகைக் காதல். மழை ஒரு ஊரில் பெய்யும் போது பாகுபாடு பார்க்கிறதா? ஏதாவது பிரதிபலன் நம்மிடத்தில் கேட்கிறதா? அதைப் போன்றதுதான் இந்தக் காதல். “நீ இருந்தால் நன்று. இல்லாவிட்டாலும் நன்று. உனக்கு வேண்டியதை என்னால் முடிந்தவரை செய்துகொண்டே இருப்பேன்.

நீ நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஒற்றை எதிர்பார்ப்பு. நடந்திருந்தால் எல்லாம் மகிழ்ச்சியே. வாழ்க்கை நம்மை ஒன்றுசேர்க்காவிட்டாலும் நீ எனக்குள் இடம் மாறியதால் நாம் என்றும் ஈருடல் ஓருயிரே. உடல் கலப்பு என்பது அண்டவெளியில் புலன்கள் சுகிப்பதற்காக நடப்பது. சந்ததி விருத்திக்கு அது வேண்டும்தான். ஆனால் ஆன்ம அளவில் என்னுடன் நீ கலந்திருப்பது எனக்கு மட்டுமே தெரிந்தது. கடவுளைப் பார்த்தவன் அதை அடுத்தவருக்குச் சொல்லி விளங்கவைக்க முடியுமா? அது போலத்தான் நமக்கான காதல் நமக்கானது மட்டுமே” - இப்படியானதுதான் இந்தக் காதல்.

‘என்னால் முடிந்தவரை நான் காப்பாற்றுவேன். அதைக் கடமை என்று சொன்னால்கூட அதன் புனிதம் சற்றே சிதைந்துவிடும். அவள் காக்கப்படுவது அவசியம். வேறு இடத்தில் இருந்தாலும் காக்கப்பட்டால் சரி. காதல் என்பதே காத்தல்தான் அல்லவா?’ - காதல் தோல்வி அடையும்போது இப்படி எத்தனை பேர் மாற்றி யோசித்துப் பார்த்திருக்கிறோம்? இதைத்தான் அகேப் கற்றுத்தருகிறது. எதிரிகளிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படை இது. நம்மைப் பிடிக்காதவர்கள், நமக்குப் பிடிக்காதவர்கள் இருவரிடமும் நமக்கு ஈராஸ் உணர்வும் வராது. ஸ்டோர்ஜ் என்ற உணர்வும் வராது. ஆனால் அவர்களையும் நேசிக்கத் தலைப்படுவதுதான் இந்த அகேப் என்ற தெய்வீக உணர்வின் அடிநாதம்.

கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் காதலைப் பற்றிய ஆராய்ச்சியிலும் ஒரு முடிவுக்கே வர முடியாதுதான் போல!

 

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-19-கிரேக்கத்தில்-எப்படிக்-காதலித்தார்கள்/article9503069.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 20: பள்ளி வயதில் வரும் பிரியத்தின் பெயர் என்ன?

 

 
kadhal_3127169f.jpg
 
 
 

அழகான ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது அந்த மின்னஞ்சல். இரண்டு காதல் முடிந்து, மூன்றாம் காதலில் விழுந்து தற்போது அதுவும் கசந்து எப்படி வெளியே வருவது என்று கேட்டு அனுப்பியிருந்தார் பள்ளி மாணவி ஒருவர். அவருக்கு வயது 14.

“முதல் காதல் நான் ஏழாம் வகுப்பு படித்தபோது ஏற்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவனைக் காதலித்தேன். பிரின்ஸிபல் வரை சென்றதால் அதைக் கைவிட்டேன். அடுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவனைத் துரத்தித் துரத்திக் காதலித்தேன். ஆனால் அவன் இன்னொரு மாணவியைக் காதலித்ததால் அதுவும் தோல்வியில் முடிந்தது. முதல் காதலின் வெறுமையை மறப்பதற்காக மீண்டும் யாரையாவது காதலித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அப்போதுதான் ப்ளஸ் டூ மாணவனுடன் ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டது.

அவன் ப்ரபோஸ் செய்தவுடன் நான் யோசித்தேன். நம் மீது யாராவது அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார்களா என்று நான் ஏங்கிக்கொண்டிருந்த நேரம் அது. அதனால் ரொம்ப யோசிக்காமல் அந்தக் காதலுக்கு இசைந்தேன். ஆனால் கொஞ்ச நாளிலேயே அவன் என்னை உண்மையாகக் காதலிக்கவில்லை என்று புரிந்துகொண்டேன். அவனை விட்டு விலகிவிடு என்று மனசு சொன்னாலும் அவன் காயப்படுவானே என்று நினைத்து என் மறுப்பையும் சொல்லத் தயங்கினேன். இதற்கிடையில் என் பெற்றோருக்கும் இது தெரியவர வீட்டில் பெரிய பிரச்சினை.

போனையும் பிடுங்கி வைத்துக்கொண்டார் அப்பா. இப்போது அவனிடம் உண்மையைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். நீ என்னுடன் பழகித்தான் ஆக வேண்டும் என்று என்னைக் கட்டாயப்படுத்துகிறான். நான் அவனுடன் மொபைலில் பேசியதை ரெக்கார்டு செய்து வைத்திருப்பதாகவும், நான் அவனைக் காதலிக்க மறுத்தால் அதை வெளியே ‘லீக்’ செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறான். என்னால் படிக்க முடியவில்லை. எப்போதும் பயமாகவும் பதற்றமாகவும் இருக்கிறது. செத்துவிடலாமா என்றுகூடச் சில சமயம் தோன்றுகிறது” என்று எழுதியிருக்கிறார் அந்த 14 வயதுப் பெரிய மனுஷி!

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே…

எப்படி இருக்கிறது பாருங்கள் அந்தப் பள்ளி மாணவியின் பிரச்சினை. கவிஞர்களும் தத்துவ ஞானிகளும் இன்ன பிறரும் யுகாந்திரங்களாகக் காதலைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே நம் குழந்தைகள் (வேறெப்படிச் சொல்ல) சர் சர்ரென்று காதல் ராக்கெட்டுகளாக விட்டுத் தள்ளுகிறார்கள்.

குழந்தைப் பருவத்தில் பள்ளியில் உடன் படிக்கும் எதிர்ப் பாலினரை நமக்குப் பிடிக்கலாம். ஒருவரை மட்டும் ரொம்பவே பிடித்தும் போகலாம். ஆனால் வேறெதுவும் தோன்றாது. இருவருமே பருவம் எய்தாததால் உடல் ரீதியான காம இச்சை போன்றவையும் தோன்றாது. ஆனால் அந்த ஒருவர் மனசை என்னவோ செய்வார். பலருக்கு அந்த முதல் நேசமும் அழகான தோழமையும் எந்த வயதிலும் பசுமரத்தாணி போல நினைவில் இருக்கும். இதைத்தான் ‘ப்ளட்டோனிக் லவ்’ (Platonic love) என்பார்கள். காமமற்ற ஒரு பாச உணர்வு அது. உடல் தாகங்களுக்கு அங்கே இடம் இருக்காது.

பெற்றோருக்குத் தெரியுமா பிள்ளைகளின் காதல்?

ஆனால் நண்பர்களே, மேற்சொன்ன மாணவியின் கதை அப்படிப்பட்டதும் அல்ல. பல வீடுகளில் பெற்றோர் தங்கள் எந்திரமயமான வாழ்க்கை முறையில் குழந்தைகளை மறந்தேவிட்டனர். பெருநகர வாழ்க்கைக்கு நம் குழந்தைகளுடனான உணர்வுப் பிணைப்பை விலையாகக் கொடுத்துவிட்டோம். காசு பணத்தைத் தூக்கித் தூர வையுங்கள்.

அன்பு, பாசத்துக்காகக் குழந்தைகள் ஏங்குவதைக்கூடப் புரிந்துகொள்ள நேரமில்லை நம்மில் பலருக்கு. பதின் பருவத்துச் சூறாவளியில் நம் பிள்ளைகள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் பலருக்குப் புரிவதில்லை. உடலாலும் உள்ளத்தாலும் வேறு ஒரு கட்டத்துக்குத் தள்ளப்படும் சிறார்களுக்குப் பலவிதங்களிலும் உங்கள் அரவணைப்பும் அனுசரணையும் தேவை. உங்களுக்குள் எழும் சண்டை சச்சரவுகள்கூட உங்கள் பிள்ளையின் மனநலனைப் பாதிக்கலாம். தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் இவர்கள் எங்கே நம்மைப் பாசமாகப் பார்த்துக்கொள்வார்கள் என்று குழந்தைகள் நம்பிக்கையிழந்து போய்விடுகின்றனர்.

கத்தி மேல் நடப்பதைப் போன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இந்தப் பதின்ம வயதில் அவர்களுக்குப் பெற்றோராக, உற்ற நண்பராக, நல்ல ஆசானாக இருக்க வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் எப்படி மறக்கலாம்? குழந்தையின் நிம்மதி, வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் பெற்றோர்களே!

இப்போது இந்த மாணவியின் சிக்கலுக்கு வருவோம். குழந்தையே, நீ செய்வதெல்லாம் காதல் அல்ல. அது ‘க்ரஷ்’ எனப்படும் இனக் கவர்ச்சிதான். வீட்டில் உனக்கு அன்பும் அக்கறையும் கிடைக்கவில்லை. அதை வெளியில் தேடியதால் வந்த விளைவு இது. காதல் பெரிய விஷயம். அதைச் சரியாக உச்சரிக்கும் வயதுகூட உனக்கு வரவில்லை. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருடன் ஏற்படுவதற்குப் பெயர் காதல் இல்லை. ஒருவருடன் குறைந்தபட்சம் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் பழக வேண்டும். உணர்வுப் பூர்வமான புரிதல்கள், கொடுக்கல் வாங்கல்கள் என எல்லாவற்றையும் கடக்க வேண்டும். அதன் பின்புதான் காதலைப் பற்றி யோசிக்கவே ஆரம்பிக்க வேண்டும்.

பிஞ்சு மனதில் நஞ்சு

காலம் போகப் போக காதல் ஆழமாகிக்கொண்டே வரும். காமம் சில மாதங்களிலேயே கசந்துவிடும். எப்படி வாதிட்டாலும் காதலைத் தீர்மானிக்கும் வயது உனக்கு இன்னும் வரவில்லை. படிப்புச் சுமையே மலையளவு இருக்கும்போது பாவம் காதல் சுமையையும் எப்படி நீ சுமப்பாய்? பதின் பருவத்தின் விளையாட்டுக்களில் ஒன்றுதான் காதல் என்று பலராலும் தவறாக அழைக்கப்படுகின்ற முதிர்ச்சியற்ற விசித்திர உணர்வு அது. அதிலிருந்து உடனே வெளியே வந்துவிடு.

உன் மீது அன்பு கொண்ட யாரும் உன்னை மிரட்ட மாட்டார்கள். ப்ளாக்மெயில் பண்ண மாட்டார்கள். பெற்றோரிடம் தவறு இருந்தால் அவர்களுடன் மனம் விட்டுப் பேசு. என்ன வேண்டும் உனக்கு என்பதை எடுத்துச்சொல். என்ன செய்வது? இப்போதெல்லாம் அன்பைக்கூடக் கேட்டுத்தான் பெறவேண்டியிருக்கிறது. காதல் போதையில் மதிமயங்கிப் போனால் பொன்னான இளமை வீணாகி, படிப்பில் கோட்டைவிட்டுப் பின் தீராப் பழிக்கு ஆளாக நேரிடும்.

அனைவருக்குமான எச்சரிக்கை

சக மாணவியிடம் போனில் பேசியதை எதற்கு அந்த மாணவன் பதிவு செய்ய வேண்டும்? இப்படிக் குரூரமாகவா அந்த மாணவனின் மூளை வேலை செய்கிறது? தனிமை தந்த கிளர்ச்சியில் அந்த மாணவி எப்படி வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். அதை எந்த நோக்கில் இவர் பதிவு செய்திப்பார்? எவ்வளவு பெரிய சமூக விரோத மனப்பாங்கு இதில் புதைந்திருக்கிறது. இணையம் இருக்கிறது என்பதற்காக என்னவெல்லாம் செய்யத் துணிகிறார்கள்? சக தோழிகளுடன் காம ரசம் சொட்ட இரவில் உரையாடியதை எத்தனை பேர் இணையத்தில் பதிவேற்றியிருக்கிறார்கள் தெரியுமா? வசனங்கள்தான் என்றில்லை,

இருவரும் அந்தரங்கமாக இருக்கும் நொடிகளையும் படம் பிடித்துக்கொள்ளும் நோயும் பலருக்கு இருக்கிறது. நட்பே ஒரு காலத்தில் பகையாகும்போது ரிலீஸ் செய்வதற்காக இது போன்ற படங்களை எடுத்துவைத்துக் கொள்கிறார்களோ? வெளியே தெரியாமல் எத்தனை பெண்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

மூச்சு விட்டால்கூடப் பதிவு செய்யப்பட்டு அடுத்த நொடி உலகத்துக்கே தெரியப்படுத்துகின்ற துர்புத்திக்காரர்கள் எங்கெங்கு காணினும் உலவிக்கொண்டிருக்கிறார்கள். அப்பாவி மாணவிகள் அவர்களிடம் மாட்டிக்கொண்டால் வாழ்க்கையே வீணாகிவிடும் அபாயம் இருக்கிறது. எச்சரிக்கை குழந்தைகளே…

 

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-20-பள்ளி-வயதில்-வரும்-பிரியத்தின்-பெயர்-என்ன/article9516546.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 21: இது கத்தியில் நடந்திடும் பருவம்

 

love_3130752f.jpg
 
 
 

இதுவும் ஒரு பள்ளி மாணவியின் பிரச்சினைதான். உடன் படிக்கும் மாணவனைத் தீவிரமாகக் காதலிக்கிறாராம். அந்தப் பையன் ஏழ்மையான குடும்பம். மாணவியின் அப்பா நன்றாகச் சம்பாதிக்கும் தொழிலதிபர்.

“சார்… அவனுக்காக நான் நிறைய செலவு செய்யறேன். படிப்புச் செலவு மட்டுமில்லாம மொபைல், விலையுயர்ந்த கேமரா இப்படி நிறைய வாங்கிக் கொடுத்தேன். என்னைப் பணத்துக்காக மட்டும்தான் அவன் காதலிக்கிறானோ என்று சந்தேகமாக இருக்கு. எனக்கென்று அவன் எதுவுமே வாங்கிக் கொடுத்ததில்லை என்பது வலிக்கிறது. காஸ்ட்லியான பரிசு என்று இல்லை… நினைவு தெரிந்து சாதாரண கிஃப்ட்கூட அவன் எனக்குத் தந்ததில்லை. ஒரு கட்டத்தில் என் அப்பாவுக்குச் சந்தேகம் வந்து, எனக்குப் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.

எங்கள் பழக்கமும் அவருக்குத் தெரிந்து எங்கள் இருவரையுமே கடுமையாக எச்சரித்தார். கொஞ்ச நாள் பேசாம இருந்தான். பிறகு எப்படியோ சோஷியல் நெட்வொர்க் மூலமா பேச ஆரம்பித்துவிட்டோம். இது ஒரு அடிமைத்தனமா டாக்டர்? இவ்வளவுக்குப் பிறகும் ‘எப்படியாவது பணம் ஏற்பாடு பண்ணு’ என்று சொல்கிறான். அப்படிச் சொல்லும்போதுதான் அவன் மீது உள்ள நம்பிக்கையே போய்விடுகிறது. இதை விட்டு நான் வெளியே வர வேண்டும். எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு. படிப்பில் சுத்தமாய்க் கவனம் செலுத்த முடியவில்லை” என்று எழுதியிருந்தார் அந்த மாணவி.

காதலின் பெயரால் சுரண்டல்

காலம் மாறிவிட்டது பாருங்கள். பையன்கள்தான் அங்கே இங்கே என்று கடன் வாங்கித் தன் தோழிகளுக்குச் செலவு செய்வார்கள். அவர்களை அசத்துவதற்காகத் தங்கள் சக்திக்கு மீறிய பரிசுகளைக் கொடுப்பார்கள். சரி, இங்கே அந்த மாணவனால் செலவு செய்ய முடியாத சூழல். அதனால் அந்த மாணவி செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். படிப்புக்குச் செலவு செய்யலாம். பதினைந்தாயிரம் ரூபாய்க்கு மொபைலும் முப்பதாயிரம் ரூபாய்க்கு கேமராவும் எதற்கு அந்த மாணவனுக்கு? அத்தியாவசியம் வேறு, ஆடம்பரம் வேறு. காதல் என்ற போர்வையில் அந்த மாணவியைப் பயன்படுத்திக்கொள்கிறார் என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறதே.

தன்னால் பணம் புரட்ட முடியவில்லை என்று சொல்லியும் முயற்சி செய் என்று அவர் சொல்கிறாரே… என்ன அர்த்தம் இதற்கு? எப்போது அந்த மாணவிக்குக் காதலின் மீதே சந்தேகம் வந்ததோ அதற்குப் பிறகாவது அந்த மாணவன் தன் போக்கை மாற்றிக்கொண்டிருக்கலாம் அல்லவா? காதலிக்கப்படுவது ஒரு மேன்மையான விஷயம். ஒரு பெண்ணின் களங்கமற்ற காதலைவிட விலை மதிப்பான ஒரு பொருள் எதுவும் இல்லை. உண்மைக் காதல் ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவதில்லை. இப்படி ஆதாயத்துக்காகக் காதலைப் பயன்படுத்துவதால்தான் தான் ஏழை என்பதைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறான் அந்த மாணவன்.

பொருள் இல்லாத நிலையிலும் மனதளவில் செல்வந்தனாக உணரச் செய்வது காதல். ஆனால் இங்கே இவர்களின் காதல் சந்தேகத்துக் குரியதாகிவிட்டது. பரஸ்பரம் உதவிக் கொள்வது காதலர் களிடம் சகஜம்தான். ஆனால் ஒருவரையே பயன்படுத்திக் கொள்வது என்பது வேறு.

நானும் ரவுடிதான்

அதீதக் கவர்ச்சியின் அடிப்படையில் எழும் இது காதல் அல்ல. அப்படித்தான் என்று வாதிட்டாலும் இது காதலின் மிக மிக ஆரம்பக்கட்டம். இது கொஞ்ச காலம் மட்டுமே நீடிக்கும். அதன் பின் அது வளர்ந்து, காயாகி, கனியாகி அவர்கள் முதிர்ந்த காதலர்களாக மாறுவதற்கு ஆண்டுகள் பல ஆகும். அதுவரை இவர்கள் இருவரும் தாக்குப் பிடிப்பார்களா என்பது காதலுக்கே வெளிச்சம்.

நடிகர் வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில் ‘நானும் ரவுடிதான்’ என்று சொல்வதைப் போலவே பள்ளி மாணவர்கள் பலரும் ‘நானும் லவ் பண்றேன்’ என்று சொல்லித் திரிகிறார்கள். ‘தோழமை அழுத்தம்’ (peer pressure) என்பது இரண்டு இடங்களில் தவறாமல் செயல்படும். ஒன்று மதுப்பழக்கம், மற்றொன்று காதல். “அனிதாவை சரவணன் லவ் பண்றான்; ராஜேஷை சாக்‌ஷி லவ் பண்றா; உன் ஆள் யாருடீன்னு தினமும் தொந்தரவு செய்கிறார்கள் தோழிகள். இவர்களுக்காகவாவது என்னிடம் ஜொள்ளு விடும் அபிஷேக்கை நான் லவ் பண்ணனும்னு நினைக்கிறேன்” என்று ஒரு பள்ளி மாணவி என்னிடம் சொல்லியிருக்கிறார். நமக்கு ஒரு ஆள் என்பது கட்டாயமான ஒரு விஷயமாகிவிட்டது என்பது அத்தனை நல்ல விஷயமல்ல.

பூவாகிக் காயாகி

முடிவைப் பற்றி யோசிக்காத காதல் உணர்வு சரியானதல்ல. தற்காலிகச் சுகத்துக்காகவும் போலி சமூக அங்கீகாரத்துக்காகவும் பலவந்தமாக ஒரு துணையைத் தேடுவது சொந்தச்செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போலத்தான். காதல் தானாக மலர வேண்டும். கட்டாயத் துக்காக மலரக் கூடாது.

இப்படிப் பள்ளிப் பருவத்தில் காதலிக்கும் இருவரில் ஒருவர் சற்று இளகிய மனம் கொண்டவராக இருந்து உணர்வுகளை உயிராக மதிப்பவராக இருந்தால் அவர் நிலைமை என்ன ஆவது? அதிலும் அவர் குடும்பத்தில் உளவியல் கோளாறுகள் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மனநோய்களுக்கும் மரபணுக்களுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது என்பது மருத்துவ உண்மை. பதின்ம வயதில் ஏற்படும் ஆகச் சிறந்த உணர்வு, காதல் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு அந்தக் காதல் தோல்வியில் முடிந்துவிட்டால் அதைவிட ஒரு கொடூரமான வலி தரக்கூடிய விஷயம் அந்த வயதில் வேறெதுவும் இருக்க முடியாது.

ஏதேனும் ஒரு எதிர்மறைச் சம்பவத்துக்காக ஆழ்மனம் காத்துக்கொண்டிருக்கும். அப்படி நடந்துவிட்டால் முழு அளவிலான மனநோய்க்கு ஆளாகிவிட நேரிடும். ஆக நம் மன வலிமை, முதிர்ச்சித்தன்மை இரண்டையும் பொறுத்தே காதல் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும் என்பதுதான் செய்தி. “இதையெல்லாம் பார்த்தா லவ் பண்ண முடியும்?” என்று நீங்கள் கேட்டால் என் பதில் ‘ஆம்’ என்பதுதான்.

இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டுக் காதலித்திருந்தால் கேரளத்தில் கோட்டயம் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் அந்தச் சம்பவம் நடந்திருக்காது. காதலிக்க மறுத்த மாணவியைப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டு, அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இறந்துவிட்டான் ஒரு இளைஞன். ஒரு தலைக்காதலுக்குக் காதல் வரலாற்றில் மேலும் இரண்டு பொன்னான உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுவிட்டன. இப்போதெல்லாம் இது போன்ற கொடூரச் சம்பவங்களை அடிக்கடி நாம் எல்லோருமே கேள்விப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்? இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்படியெல்லாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோமா? மனம் திறந்து உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் பேசிப் பாருங்கள்.

காதலிக்கவில்லை என்பதற்காகப் போகிற போக்கில் கொலை செய்துவிட்டுப்போகிற சம்பவங்களெல்லாம் எத்தனை கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்று. சமீப ஆண்டுகளாகத்தான் காதலுக்கு அதிகம் ரத்தகாவு தேவைப்படுகிறது. இயந்திர நாகரிகம்தான் வளர்கிறதே தவிர மனித நாகரிகம் எங்கே போகிறது என்று விளங்கவில்லை. காதலைப் பற்றிச் சொல்லவும் பேசவும் பகிரவும் இதுதான் சந்தர்ப்பம். காதலைப் பற்றிய புரிதலும் அறிதலும் இன்றைய காலத்தின் கட்டாயங்களில் அவசியமான ஒன்றுதான்.

மனதைப் பார்க்காத காதலும் மனிதம் மறந்த காதலும் காதலே இல்லை நண்பர்களே.

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-21-இது-கத்தியில்-நடந்திடும்-பருவம்/article9533762.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 22: காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா?

 

 
 
 
 
love_3133964f.jpg
 
 
 

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பள்ளி ஒன்றின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் இப்படி எழுதப்பட்டுள்ளது. ‘காதல், மாணவிகளின் வாழ்வை நிச்சயம் சீர்கெடுத்துவிடும். இந்தப் பள்ளி மாணவர்கள், காதல் விவகாரங்களில் ஈடுபடக் கூடாது’. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வகையான உணர்வுகளை இது எழுப்பலாம். ஆதரித்தும் மறுத்தும் பலரும் தங்கள் வாதத்தை முன்வைக்கலாம். ஆனால் இதைப் பற்றியெல்லாம் அந்தப் பள்ளி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

‘பதின்ம வயதில் காதல் வேண்டாம், அது நல்லதல்ல. படிப்பு கெட்டு, உடலும் உள்ளமும் கெட்டுப்போகும். நாங்கள் நிறைய பார்த்தாகிவிட்டது. நல்ல காதலும் வேண்டாம், கெட்ட காதலும் வேண்டாம்’ என்பதாகத்தான் அந்தப் பள்ளி நினைக்கிறது. நாடு வேறு, அதன் கலாச்சாரம் வேறு. அவர்களின் பிரச்சினைகளின் தாக்கம் வேறு. அதை நம் கலாச்சாரம், சமூக நடைமுறைகளோடு ஒப்பிடத் தேவையில்லை. ஆயினும் எந்த அளவுக்கு அங்கு சீரழிவுகள் அரங்கேறியிருந்தால் அந்தப் பள்ளி இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருக்கும்?

காதலும் போதையே

பெற்றோர்கள்தான் காலம் காலமாகக் காதலுக்கு எதிரியாக இருந்துவருகிறார்கள். இது போதாதென்று பள்ளி முதல்வர்களும் வில்லன்களாகிவிட்டார்களே. அப்படி என்ன பாவம் செய்துவிட்டது காதல்? ஏன் எதிர்க்கிறார்கள்? டீன் ஏஜ் வயதில் காதல் வருவது இயல்புதானே. எல்லாம் சரிதான். ஆனால் காதலை, போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் (addiction) மனநிலையோடு ஒப்பிடுகிறது உளவியல்.

அந்தப் பொருள் கிடைத்தால் அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்படுவதால் மீண்டும் மீண்டும் அது வேண்டும் என்ற ஏக்கமும், சதா அதைப் பற்றிய நினைப்பும் ஏற்படும். வேறு எல்லாவற்றையும்விட அந்தப் பொருளே பிரதானத் தேவையாகிவிடும். இந்த நிலையில் படிப்பு, பெற்றோர் உட்பட மற்றவையெல்லாம் இரண்டாம்பட்சமாகிவிடும். ஆனால் அந்தப் பொருள் கிடைக்காதபோது ஏற்படும் எதிர்மறை விளைவுகள் மிகவும் பாதிக்கக் கூடியவை. போதைப் பொருளாக இருந்தால் அந்த விளைவுகளை ‘withdrawal syndrome’ என்றும், காதல் போதை கிடைக்காமல் போனால் அதைக் காதல் தோல்வி, காதல் நோய் என்றும் ஒப்பிட்டு நோக்குகிறது உளவியல்.

வண்ணம் மாறலாமா?

காதல் ஒரு அடிமைத்தனம் என்பதை அறிவியலின் துணையோடு விளக்க முடியும். ஆனால் அந்தக் காதல்தான் மானுடவியலின் மையப்புள்ளி என்பதும் உயிர்களின் பெருக்கத்துக்கான இயற்கைச் சூத்திரம் என்பதும் மறுப்பதற்கல்ல. ஆனால் அந்தக் காதலின் வண்ணத்தை நம் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்வதுதான் பிரச்சினைகளுக்கு ஆணி வேர். ஆணுக்கு ஒரு பெண்ணைப் பிடிக்கிறது. கல்லைத் தூக்கியோ காளையை அடக்கியோ அவளைத் தனதாக்கிக்கொள்கிறான். அவள் என்றுமே எனக்குத்தான் என்பதைத் திருமணம் மூலம் உறுதி செய்துகொள்கிறான்.

பலதார மணங்களுக்கும் பலருடனான தொடர்புக்கும் வழிவகைகள் இருந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி எனபதையே நம் நாகரிகம் பரிந்துரைக்கிறது. காலப்போக்கில் பலதார மணங்கள் குறைந்துவருவதையும் நாம் பார்க்கிறோம். இயற்கையை மீறிய விஷயங்களை எல்லாரும் செய்து பார்க்க முடியும்.

ஆனால் அது விஷப் பரீட்சையே. உடலும் உள்ளமும் பாதிப்படையும். பாதிக்கப்படுவதே தெரியாதவாறு அது மெல்லமாக நிகழும். மது குடிக்க ஆரம்பித்தவுடனேயே கல்லீரல் கெட்டுப்போய் விடாது. புகைபிடிக்கத் தொடங்கியவுடனேயே புற்று நோய் வந்து விடாது. தவறு செய்ய வாய்ப்பும் வழியும் இருக்கிறது என்பதற்காக தவறு செய்துவிடக் கூடாது. செய்து கொண்டே இருக்கவும் கூடாது.

நேற்று யாரோ சிலர் செய்துவிட்டதனாலேயே இன்று நாமும் செய்யலாம் எனத் தலைப்படக் கூடாது. அந்த ஒரு தவறு, தொடர்ந்த பல தவறுகளுக்கான கதவை அகலத் திறந்து விட்டுவிடும். ஒருவனுக்கு ஒருத்தி என்பதாகத்தான் நம் உடலும் மனமும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. லேசான பக்கவாட்டு நீட்சிகள் பெரிய பாதிப்பை உண்டாக்காது என்றாலும் கால் போன போக்கில் பல காதல்கள் போய்விட்டதென்றால் உடல் பிறகு கெடும். உள்ளம் முதலில் கெடும்.

கொல்லும் முதல் காதல்

குடும்பத் தலைவி ஒருவர் எழுதுகிறார். “என் கணவருடன் நிம்மதியாக வாழ முடியவில்லை. அவருக்குத் துரோகம் செய்துவிட்டோமோ என்று மனம் பரிதவிக்கிறது. எனக்கு ஒரு காதலன் இருந்தான். பள்ளி இறுதி ஆண்டு படிக்கும்போது பழக்கம். இரவு நேரங்களில் நீண்ட நேரம் அவனுடன் பேசுவேன். கல்லூரி முதலாண்டு படிக்கும்போது நெருக்கம் அதிகமானது. விளையாட்டாகப் பேசத் தொடங்கி பின் தன் பேச்சை விரசமாகக் கொண்டுசெல்வான். சரி, இளம் வயதில் இதெல்லாம் இருக்கத்தானே செய்யும் என்று நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

affair_3133965a.jpg

ஆனால் ஒரு முறை என் வீட்டில் யாருமில்லாததை எப்படியோ தெரிந்து கொண்டு வந்துவிட்டான். தனிமையின் சுதந்திரத்தில் என்னிடம் எல்லை மீறப் பார்த்தான். நல்லவேளை நான் சுதாரித்துக்கொண்டேன். இருந்தும் அவன் என்னைச் சீண்டியதையும் என்னைத் தொட்டு எல்லை மீற முயன்றதையும் இன்றளவும் என்னால் மறக்கவும் முடியவில்லை; மன்னிக்கவும் முடியவில்லை.

என்னதான் பழகினாலும் காதலுக்கு ஒரு எல்லைக் கோட்டை நான் வகுத்துக்கொண்டிருந்தேன். இப்போது நானும் என் கணவரும் மகிழ்வாக இருக்கும் தருணங்களில் குற்ற உணர்வு என்னைப் பிடுங்கித் தின்கிறது. நான் நினைப்பது தேவையற்ற குழப்பச் சிந்தனை என்று எனக்கே தெரிகிறது. ஆனால் என் நிம்மதியைக் கெடுத்த என் முன்னாள் காதலனைப் பழி வாங்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது” என்று போகிறது அவர் எழுடிய கடிதம்.

ஆணுக்கு இல்லையா கற்பு?

கல்லூரி மாணவர் ஒருவர் தன் வேதனையை இப்படி வார்த்தைகளாக்கி யிருக்கிறார். “சார், அவளை மறக்க முடியவில்லை. ரெண்டு வருஷமா பழகினோம். இப்போ ரொம்ப சாதாரணமா இன்னொரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்கிறாள். அவளுக்குச் சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்த்து பத்திரிகை எல்லாம் அடிச்சிட்டாங்க. டக்குனு மனசை மாத்திக்கிட்டா சார்.

மத்ததையெல்லாம்கூட மறந்துடலாம். ஆனால் புருஷன் பொண்டாட்டியாவே பாவிச்சி நாங்க இருந்த அந்த நிமிடங்களை என்னால் மறக்கவே முடியலை. கற்பு ஆண்களுக்கும் உண்டுங்கிறதை நான் எப்படி நிரூபிப்பது? அவளை மனைவியாகப் பாவித்து, தொட்டுத் துலங்கிய என்னால் இன்னொரு பெண்ணை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லையே. இதைச் சொன்னால் ‘ஒரு பொண்ணு நானே அதையெல்லாம் மறக்கச் சொல்றேன். நீ ஆம்பளை தானே. ப்ராக்டிகலா இரு’ என்று சாதாரணமாகச் சொல்கிறாள்.

இப்போது என்னால் சுத்தமாகப் படிக்க முடியவில்லை. என் வேலையை வைத்துதான் என் குடும்பமே இயங்கப் போகிறது. என் நண்பனிடம் சொன்னால் என்னை புத்தி சரியில்லாதவனைப் போலப் பார்க்கிறான். அவளுடன் நிரந்தரமாக இருப்போம் என்றுதான் காதலோடு காமத்தையும் பகிர்ந்துகொண்டேன். இது தவறா? ஆண்கள் இப்படி நினைக்கக் கூடாதா?” என்று நீள்கிறது அவரது புலம்பல்.

ஆளுமை அவசியம்

அவரவர் காதலில் இருந்தவரைக்கும் இவர்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பருவத் தீ பற்றிக்கொள்ள ஆரம்பித்தவுடன்தான் சிக்கல். விரல் பட்டதே பாவம் என்று நினைக்கும் ஒரு பெண். தாம்பத்ய சாகரத்துக்குப் பின்னும் என்னை ஏற்க மறுக்கிறாளே என்று ஒரு ஆண். இதற்கு மனநிலை (mindset) தான் காரணம் என்று சொல்லிக் கடந்துவிடலாம். ஆனால் உளவியல் இங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. நம் அடிப்படை ஆளுமை (personality), பிரச்சினைகளைக் கையாளும் திறன், வளர்க்கப்பட்ட விதம், குடும்பம் மற்றும் சமூக முன்மாதிரிகள், குடும்ப உறுப்பினர்களிடையே இலைமறை காயாகத் தொடர்ந்து வரும் உளவியல் கோளாறுகள் என்று பலவற்றைச் சார்ந்துதான் காதல் பற்றிய நமது கோணமும் அணுகுமுறையும் அமையும்.

படிக்கும் வயதில்தான் இந்தக் காதல் விவகாரங்கள் விஸ்வரூபமெடுக்கும். காதல் வெற்றியா தோல்வியா என்பது வேறு விஷயம். நாம் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்களில்தான் காதல் வந்து குறுக்கே நிற்கும். அதையும் சமாளித்து, படிப்பிலும் வென்று, வாழ்க்கையிலும் வெல்லும் தெம்பும் திறனும் இருந்தால் காதலியுங்கள். இல்லையென்றால் உங்கள் வாழ்வில் காதல் ஒரு கத்திரிக்காயாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

 

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-22-காதல்-என்ன-கண்ணாமூச்சி-ஆட்டமா/article9547008.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 23: எல்லா நேசமும் காதல் அல்ல!

 

 
 
love_3137168f.jpg
 
 
 

“நாங்கள் இருவரும் ஒரே ஏரியாவில்தான் வசித்தோம். எங்கள் குடும்பங்களுக்கு இடையே நல்ல நட்பு. என் காதலை மென்மையாக அதே சமயம் உறுதியாக எடுத்துச் சொல்லியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதுதான் அந்த அதிர்ச்சியைக் கேள்விப்பட்டேன். நேரிலும் பார்த்துவிட்டேன். என்னைவிட மிகவும் சுமாரான ஒரு ஆண். நிறமும் உயரமும் குறைவு. அவரைத் திருமணம் செய்துகொள்ள எப்படித்தான் சம்மதித்தாள் என்று தெரியவில்லை. அது காதல் மணம் என்பது எனக்குப் பேரதிர்ச்சியாக இருக்கிறது” - ஒரு இளைஞர் இப்படி மெயிலில் புலம்பியிருந்தார்.

காதல் வரைபடம்

‘காதலுக்குக் கண்ணில்லை’ என்று ஒற்றை வரியில் சொன்னால் அது வழக்கமான விளக்கமாக இருக்கும். நம் மனதில் இருக்கும் காதல் வரைபடம் (Love map) பற்றிச் சொன்னால் இவர் புரிந்துகொள்வார். உருவமும் உயரமும் நிறமும் பார்த்துத்தான் காதல் வரும் என்று இவரைப் போல நம்மில் பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

யாருக்கு யாரைப் பிடிக்கும், எப்போது அது நடக்கும் என்பதெல்லாம் நம் மனதின் சில ரகசியக் கோட்பாடுகளைப் பொறுத்தது. சிவப்பாக இருக்கிற பெண்ணை ஒருவருக்குப் பிடிக்கும் என்றால், இன்னொருவர் கறுப்பு நிறத்தழகியைத்தான் மணம் முடிப்பேன் என்று சபதம் எடுத்திருக்கலாம்.

இப்படி ஒருவர் இருந்தால் எனக்குப் பிடிக்கும் என்பது நம் மனதில் எப்போது புகுந்தது என்பதே தெரியாத அளவுக்கு அது ஆழ்மன ரீதியாக நடக்கும். நம் காதலரின் குணாதிசயங்களின் பட்டியல் நாம் உணர்வதற்கு வெகு முன்பாகவே நம் மனதில் பதிந்துவிட்டிருக்கும். இதைத்தான் காதல் வரைபடம் என்கிறோம். அந்த வரைபடத்துடன் பொருந்திப் போகும் நபரை நாம் சந்திக்கும்போதுதான் கண்டதும் காதல் என அந்த ரசாயனக் குதிரை வேகமாகக் கிளம்பிவிடுகிறது.

இந்தக் காதல் வரைபடம் பெரும்பாலும் 5 முதல் 8 வயதுக்குள் நடக்கும் என்கின்றன ஆய்வுகள். நாம் பிறந்து வளரும் குடும்பம், நம் வளர்ப்பு, அக்கம் பக்கத்து உறவு முறைகளின் அணுகுமுறை, பொருளாதாரச் சூழ்நிலை என்று பல விஷயங்களை நாம் சிறு வயதில் கடந்துவருகிறோம்.

மனதில் பதியும் நேச விதை

நம் அப்பா வெற்றிபெற்ற நபராக இருக்கிறார் என்றால் நம் முதல் கதாநாயகன் அவர்தான். அப்பாவைப் போல வர வேண்டும் என்று மகனும், அப்பாவைப் போல ஒருவன் நம் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்று மகளும் நினைப்பார்கள். அது அவர்களின் ஆழ் மனதில் பதிந்துவிடும். இப்படி நாம் ஆழ்மனதில் பதிந்துவைத்திருக்கும் எண்ணங்களுக்குப் பொருத்தமான நபரைச் சந்திக்கும் போது நாம் காதல் வசப்படுகிறோம். ஆனால் அதே நேரம் நாம் எல்லோருமே நூறு சதவிகிதம் நம் காதல் வரைபடத்துக்குப் பொருந்திவரும் நபரைச் சந்திப்பது குதிரைக்கொம்பே. அப்படி அமைந்தால் நீங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.

காதல் வரைபடமும் காலப்போக்கில் சில மாறுதல்களுக்கு ஆட்படும். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்த பெண் வேண்டாம் என்று ஒருவர் முடிவெடுத்திருப்பார். பெண்ணின் உயரம் முக்கியம் என்று இன்னொருவர் நினைத்திருக்கலாம். ஆனால் திடீரென்று ஒரு தேவதையைச் சந்தித்தவுடன் அவர்களது கொள்கைகள் எல்லாம் கலவர காலத்துச் சட்டமன்றம் போல களேபரமாகிக் குழம்பிவிடும். அடிப்படையாக, ஆண்டுக்கணக்காக நாம் வகுத்துவைத்திருக்கும் பெரும்பான்மையான மற்ற விஷயங்களுக்கு அவர் ஒத்துப்போவதால் உயரமும் அவர் சார்ந்த மதமும் பெரிதாகத் தோன்றாது. மனம் சற்று முதிர்ந்துவிடுவதையும் இது காட்டுகிறது.

பார்த்ததுமே வரும் பிரியம்

யாரிடம் நாம் காதல் வசப்படுகிறோம்? தெரிந்தவர்களிடமா, தெரியாதவர்களிடமா? அறிந்த, புரிந்த நபரிடம் மனதைப் பறிகொடுப்பது ஆச்சரியமல்ல. நமக்குப் பரிச்சயம் இல்லாதவர்களிடம் காதல்வசப்படுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்! மிகவும் தெரிந்தவர்களிடத்தில் காதல் என்ற சுவாரஸ்யமான மந்திர உணர்வை வெளிப்படுத்துவதில் கண்டிப்பாக ஒரு தயக்கம் இருக்கத்தானே செய்யும்? அதே சமயம் ‘முன் பின் தெரியாதவங்களை எப்படிக் கல்யாணம் பண்ணிக்கிறது?’ என்று கேட்கும் பெண்களும் அதிகம். கல்யாணம் என்பதை ஒதுக்கிவிட்டு காதல் என்ற எதிர்பாராத உணர்வு மின்னலைப் பற்றி யோசியுங்கள். எந்தத் திட்டமும் இல்லாமல் நாம் பயணித்துக் கொண்டிருக்கும்போது முன் பின் தெரியாத மனிதரிடத்தில் நமது வரைபடத்துக்குப் பொருந்தும் குணாதி சயங்களைப் பார்க்கும் போது ஏற்படும் பரவசம் அனுபவித்தவர்களுக்குத் தெரியுமல்லவா?

ரோமியோ ஜூலியட் விளைவு

“ஏதோ மந்திரம் போட்டு என் பொண்ணை மயக்கிட்டான்” என்று பல பெற்றோர் புலம்புவதை நாம் கேட்டிருப்போம். அதுவும் பருவத்தின் வசந்த வாயிலில் நிற்கும் பெண்ணோ ஆணோ காதல் வசப்படுவது இன்று மிகச் சாதாரணம். விஷயம் தெரிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்து வீட்டை ரணகளமாக்கிவிட வேண்டாம் பெற்றோரே. மன முதிர்ச்சி குறைவான அந்தப் பதின்ம வயது சில சமயம் நேரெதிர் விளைவுகளை நமக்குத் தரும். உங்கள் பெண்ணின் முதிர்வில்லாத காதலை மிகவும் மெனக்கெட்டு சினிமா வில்லன் போல் சகல விதங்களிலும் எதிர்க்கிறீர்கள் என்றால் என்ன ஆகும்?

பயத்தில் அந்தக் குழந்தைகள் பேசாமல் விட்டு விலகிவிடலாம். ஆனால் சில சமயம் வேறு மாதிரி ஆகிவிட்டால்? அதாவது நீங்கள் எவ்வளவு அழுத்தம் கொடுத்து அவர்களைப் பிரிக்க நினைக்கிறீர்களோ அவ்வளவு தூரம் அவர்களின் உணர்வுப் பிணைப்பு வலுப்பட்டுவிடவும்கூடும். உளவியலில் இதை ‘ரோமியோ ஜூலியட் விளைவு’ (Romeo & Juliet effect) என்பார்கள். ஷேக்ஸ்பியர் எழுதிய வரலாற்றுப் புகழ்மிக்க காதல் காவியத்தின் கதாபாத்திரங்களுக்கு அப்படி நேர்ந்ததால் அவர்கள் பெயரிலேயே இந்த விளைவும் வழங்கப்படுகிறது.

நாம் சந்திக்கிற ஆயிரம் பேரில் ஒருவரை மட்டும் நமக்குப் பிடித்துப் போவதற்கான காரணம் நம் மனதில் பதிந்துள்ள காதல் வரைபடம் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். உயரம், நிறம் போன்ற புற அழகுகளைத் தாண்டி அன்பு, கனிவு, பணிவு, துணிவு போன்ற அக அழகுகளும் பொருந்திவந்தால் நமக்கு ஒருவரை மிகவும் பிடிக்கிறது. இது வெறும் பிடித்திருப்பது மட்டுமே. அதன் பிறகு அவருடன் பழகப் பழக பல உணர்வு நிலைகளைக் கடந்து வர வரத்தான் அவர் மீதான உங்கள் காதலை நீங்களே அடையாளம் காண முடியும்.

நமக்குப் பிடித்திருப்பவர்களை எல்லாம் காதலிக்க முடியாது, அது காதலாகவும் இருக்காது. ஆனால் காதலிப்பவர்களை முதலில் நமக்கு எக்கச்சக்கமாகப் பிடித்திருக்கும். விரும்புவது என்பது வேறு, காதலிப்பது என்பது வேறு என்பதைப் புரிந்துகொண்டால் உங்கள் காதல் என்பது இன்னும் அர்த்தமுள்ளதாகிவிடும்.

 

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-23-எல்லா-நேசமும்-காதல்-அல்ல/article9558562.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 24: கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...

 
love_3139621f.jpg
 
 

காதல் என்பது அழகான உணர்வு என்றுதான் பலரும் அனுமானித்துவருகிறோம். ஆனால் அதை உணர்வு என்று சொல்வதைவிட உந்து சக்தி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். காதல் வயப்படும்போது மூளையில் சுரக்கும் டோபமைன் (Dopamine) என்னும் வேதிப்பொருள் மகிழ்ச்சி, புத்துணர்வு, உத்வேகம், புதியதொரு சக்தி போன்றவற்றைக் கொடுத்து நம்மை ஊக்குவிக்கும். காதல் என்பது பரிணாம வளர்ச்சிக்கேற்ப நம்மைத் தகவமைத்துக்கொள்வதற்கான இயற்கையின் சூத்திரம் என்றும் சொல்லலாம்.

பசி, தூக்கம் போன்று அடிப்படையான வேட்கைதான் காதல். காதல் கைகூடினால் உலகமே நம் பின்னால் வருவதைப் போன்ற மகிழ்ச்சியும், அது கூடாவிட்டால் உலகின் அனைத்துத் துயரங்களும் நம் தலை மீது வந்து உட்கார்ந்துகொண்டதைப் போன்ற சோகமும் நம்மைத் தாக்கிவிடும்.

திரும்பக் கிடைக்காத அன்பு

காதல் தோல்வியுடன் வேறெந்தத் துயரத்தையும் ஒப்பிட்டுச் சொல்வது கடினம். நாம் காதலிக்கிறோம், ஆனால் எதிர்த் தரப்பில் நம் மீது காதல் இல்லை. இருவருமே காதலிக்கிறோம், ஆனால் காலத்தின் கோலத்தில் காதலில் மண் விழுந்து பிரிந்துவிடுகிறோம். இந்த இரண்டுமே காதல் தோல்விதான். திரும்ப நமக்குக் கிடைக்காத இந்தக் காதலை Unrequited love என்று சொல்வார்கள்.

நமக்கே தெரியாமல் நமக்குள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பிக்கொள்வதற்காக வெளியே ஒருவரைத் தேடுகிறோம். நமக்கு மிகவும் பிடித்த குணாதிசயங்கள், பண்புகள் கொண்டவர்களைக் காணும்போது காதலில் விழுகிறோம். பெற்றோரிடமும் மற்றோரிடமும் கிடைக்காத ஒன்று அவரிடத்தில் இருப்பதாக நினைத்து மனதைப் பறிகொடுக்கிறோம். ஆனால் அந்த அன்பு திரும்பக் கிடைக்காதபோது கடும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

விலகினாலும் விலகாத நேசம்

காதல் நிராகரிக்கப்படும் போது பல கட்டங்களை நாம் தாண்ட வேண்டியிருக்கிறது. முதலில் எதிர்ப்பும் மறுப்பும் (Protest). “இல்லை… எப்படி அவர் என்னை நிராகரிக்கலாம்? என் உலகமே அவன்தான் என்றிருக்கும் போது எப்படி என்னைப் புரிந்துகொள்ளாமல் போகலாம்?” - இப்படியான புலம்பல்கள்தான் முதலில் இருக்கும். நிஜம் இதுதான் என்று புரிந்துகொண்டு அந்த நிராகரிப்பை ஏற்றுக்கொள்வதெல்லாம் அடுத்த கட்டம். இதைவிட வினோதம் என்ன தெரியுமா? அவர் நம்மை விட்டு விலகிச் செல்லச் செல்ல அவர் மீதான காதலும் பிடிப்பும் அதிகரித்துக்கொண்டே போகும்.

கோபம் அதிகரிக்கிற அளவுக்குக் காதலும் அதிகரிக்கும். இன்னும் என்னவெல்லாம் செய்து அவரைக் கவரலாம், ஏதேனும் அதிசயமாக நடந்து அவர் நம்மைத் திரும்பிப் பார்க்க மாட்டாரா என்ற பரிதவிப்பு கூடிக்கொண்டே போகும். இதுதான் காதலின் விந்தை! இதை frustration attraction என்று சொல்கிறார்கள். அதாவது நிராகரிப்பினூடே வரும் ஈர்ப்புப் பிணைப்பு என்கிறார்கள்.

நாடகமன்றோ நடக்குது

எந்தவொரு உறவும் துண்டிக்கப்படும்போது நம் மனம் கிடந்து அடித்துக்கொள்ளும். யாராவது உதவிக்கு வாருங்கள், எனக்கு நியாயம் சொல்லுங்கள் என்பதற்காக இயற்கை நமக்கு அளித்துள்ள தகவமைப்பு முறை இது. இதைப் புரிந்துகொண்டால் காதல் தோல்வியின்போது நாம் போரிடுவது ஏன் என்பது உங்களுக்குப் புரியும். டோபமைன் மற்றும் நார்ஃபினெஃப்ரின் (norepinephrine) ஆகிய இரண்டு வேதிப்பொருட்களும் நம் மூளையில் இந்த நேரத்தில் அதிகரித்துவிடும். நடக்கக்கூடிய அசம்பாவிதத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மூளை சுறுசுறுப்படைந்துவிடுகிறது. எதையாவது செய்து நம் காதலைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஒரு போர்வீரனைப் போல மனம் தயாராகிறது.

காதலில் விழும் ஆரம்பக் கட்டத்தில் நம் உணர்வு ஜாலங்களுக்குச் சூத்திரதாரி இந்த டோபமைன்தான் என்பதை நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். காதலுக்குக் காரணமான அதே வேதிப் பொருட்கள்தான் காதல் நிராகரிக்கப்பட்டு அதை நாம் மறுக்கும் போதும் அதே அளவில் மூளையில் சுரக்கின்றன. காதலில் நமக்கான நியாயங்களைச் சொல்லிப் புலம்பித் தவிப்போம். ஆனால் அவர் என்ன செய்தாலும் அவர் மீது நமக்கு வெறுப்பு வராமல், காதல் வேகம் முன்பைவிட அதிகரிக்கிறதே என்று தவித்திருக்கி றீர்களா? காரணம் இதுதான். இந்த வேதிப்பொருட்கள் இரண்டு சூழலிலும் பிரவாகமாகப் பொங்கிவருவதால்தான் நமக்கு அப்படி ஏற்படுகிறது. அழுது கொண்டே சிரிப்பதைப் போல, வெயில் அடிக்கும்போதே மழையும் பெய்வதைப் போல இது நம் மன வானில் நடக்கும் வேதியியல் நாடகம்.

என்றென்றும் காதல்

ஒருதலைக் காதலால் தவிக்கும் போதும் காதலரால் கைவிடப்படும் போதும் கடும் ஆத்திரத்துக்கு (abandonment rage) உள்ளாகிறோம். வெறித்தனமான பற்றுதலாக இருந்த ஒன்று கடுமையான கோபமாக மாறுகிறது. இதற்கும் காரணம் நமது மூளையில் இருக்கும் பிணைப்புகள் (network). கடும் பசி நேரத்தில் சுவையான உணவு கிடைத்தால் எப்படி உணர்கிறோம்? கஷ்டப்பட்டுச் செய்த ஒரு வேலைக்குப் பாராட்டும் பதவி உயர்வும் கிடைத்தால் எப்படி மகிழ்வோம்? இவற்றுக்குக் காரணமான ‘ரிவார்டு மையங்கள்’ மூளையின் Prefrontal cortex பகுதியில் இயங்குகின்றன.

நிராகரிப்படுவதால் வரும் ஆத்திரத்துக்குக் காரணமான நரம்புப் பிணைப்புகளும் மேலே சொன்ன ரிவார்டு சென்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவை. எனவேதான் நமக்கு மகிழ்வளித்த ஒரு பொருள் மறுக்கப்படும்போது ஆத்திரத்தின் உச்சத்துக்குச் செல்கிறோம்.

பூனைக்குப் பால் கொடுக்கிறோம். அது வெகுமதி (reward) எனப்படும். அதே பாலை பூனை சுவைத்துக் குடிக்கும்போது சடாரென்று பிடுங்கிவிடுகிறோம். உடனே அந்த இடத்தை விட்டு வெறியேறிவிடும் பூனை சமயத்தில் மேலே பாய்ந்து பிராண்டிவிடும் என்பது நாம் அறியாததல்ல. அதைப் போலத்தான் காதல் நிராகரிக்கப்படும்போது எழும் ஆத்திரத்துக்கும் மூளையின் செயல்பாடுகளே காரணம். ஆனால் உண்மையாக நாம் காதலித்திருக்கும் பட்சத்தில் எவ்வளவு ஆத்திரம் வந்தாலும் அந்தக் காதல் மட்டும் அழியாது.

அளவில் குறையலாம். அலங்காரத்தில் குறையலாம். ஆழம்கூடக் குறைந்து போகலாம். ஆனால் காதல் என்ற உணர்வு அழிந்து போகாது. பிரதிபலனை எதிர்பார்த்தும், ‘நான் கொடுப்பதை நீயும் கொடுக்க வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பிலும் வருவது ஒரு வகையில் சுயநலக் காதலே. அப்போது அந்தக் காதல் மறுக்கப்படும் போது வரும் ஆத்திரம்தான் அபாயகரமானது. பல பயங்கரங்களை ஏற்படுத்தக்கூடியது. நாம் செய்தித்தாள்களில் அடிக்கடி பார்க்கும் துர்சம்பவங்களுக்குக் காரணமானது.

எது தூய்மையான காதல்?

ஆனால் காதலுக்கான இலக்கணங் களுடன் மனதின் அடியாழத்திலிருந்து பிரதிபலன் பார்க்காமல் வரும் காதல் அப்படியானதல்ல. அது மறுதலிக்கப்பட்டால் நமக்குக் கோபம் வருமே தவிர கொலை வெறி வராது. ஆத்திரம் வரும், ஆனால் கண்மூடித்தனமாகத் தாக்கி உயிர் பறிக்கும் அளவுக்கு வன்மம் இருக்காது. அதீத வெறுப்பும் மனிதத்தன்மையற்ற சிந்தனையும் இருக்கும் இடத்தில் காதல் என்ற வார்த்தைக்கே இடமில்லை!

மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு கல்லூரி மாணவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “காதலிலேயே தூய்மையானது எது?” என்று கேட்டார். “நீங்களே சொல்லுங்கள்” என்றேன். “ஒருதலைக் காதல்தான் மிகத் தூய்மையானது. ஏன் தெரியுமா? திரும்பக் கிடைக்காது என்று நன்றாகத் தெரியும். எந்தப் பலனும் இல்லை என்று நிச்சயமாகத் தெரியும். ஆனாலும் தொடர்ந்து காதலிக்கிறோம். சுய நலன் தொலைந்த அந்தக் காதல் நிச்சயம் புனிதமானது, பரிசுத்தமானது.

நான் அவளை அவளுக்காகவே காதலித்தேன். என்றென்றும் அவள் என் காதலிதான். கோயிலுக்குப் போகிறீர்கள். உங்கள் வேண்டுகோள் அனைத்தையும் கடவுள் நிறைவேற்றுகிறாரா? அட்லீஸ்ட் உங்களோடு உட்கார்ந்து குறைகளைக் கேட்கிறாரா? எதுவும் நடப்பதில்லை. ஆனாலும் கோயிலுக்குப் போகாமல் இருப்பதில்லையே நாம். அதுபோலத்தான் ஒருதலைக் காதலும். திரும்பக் கிடைக்காத இடத்திலும் எதிர்பார்ப்புகளற்று அன்பு செலுத்துவது தெய்வீகமானது என்றால் ஒருதலைக் காதலும் புனிதமானதுதானே!” என்றார் அந்த இளைஞர்.

நான் பேச்சிழந்து நின்றேன்.

 

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-24-கொஞ்சம்-நிலவு-கொஞ்சம்-நெருப்பு/article9568896.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காதல் வழிச் சாலை 25: காலம் மாறும்... காயம் மறையும்!

 
 
 
kadhal_3141955f.jpg
 
 
 

“கண் இருக்கிறது. வழி இருக்கிறது. சேரும் இடம் தெரிகிறது. போகும் பாதைதான் தெளிவில்லை” இப்படி முடிந்தது ஒரு பெண்ணின் மின்னஞ்சல். அரசுப் பணியில் இருக்கும் அவர், வைதீக முறைகளில் ஊறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்லூரிக் காலத்தில் கல்லூரிப் பேருந்து ஓட்டுநரிடம் மனதைப் பறிகொடுத்திருக்கிறார். வேற்று மதத்தினரான அந்த ஓட்டுநர் முதலில் காதலை வெளிப்படுத்த, நீண்ட யோசனைக்கும் தயக்கத்துக்கும் பிறகு இந்தப் பெண் ஏற்றுக்கொண்டார். பிறகென்ன? அவரைக் கணவராகவே பாவித்துவிட, அவர்களுக்குள் எல்லாமே முடிந்துவிட்டது.

அந்த நபர் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட, அவருக்கு வேண்டிய உதவிகளைத் தொடர்ந்து செய்ததோடு இன்றுவரை அவர் பட்ட கடனையும் இந்தப் பெண்தான் திருப்பிச் செலுத்திக் கொண்டு வருகிறார். இப்போது பிரச்சினை இதுதான். இவருக்குப் படிப்பும் முடிந்து வேலையிலும் சேர்ந்துவிட்டார். ஆனால் அந்த ஓட்டுநர் காரணமே இல்லாமல் பாராமுகமாக இருக்கிறார். நாள் கணக்கில் பேசாமல் இருந்தவர் இப்போது மாதங்கள் பல கடந்தும் பேசுவதில்லை. இங்கே இந்தத் தோழியோ காரணம் தெரியாமல் குழம்பித் தவிக்கிறார்.

சில பெண்கள் காதலில் விழுந்துவிட்டால் அடிமையாகவே ஆகிவிடுகிறார்கள். மேற்படி நபர் தன்னை ஏமாற்றுகிறார் என்று மட்டும் எழுதவில்லையே தவிர அவரால் தான் படும் துன்பங்கள் போதும் என்று கதறுகிறார். மீட்டெடுக்க முடியாததையெல்லாம் கொடுத்துவிட்டுக் காதல் மனதை மாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறார். அதே சமயம் அந்த நபருடனான வாழ்க்கை இனிக்காது என்ற நடைமுறை நிஜத்தையும் வலியோடு ஏற்றுக்கொண்டு இந்தப் பெண் படும் பாடு கொடுமையே.

காதலா? கள்ளமா?

பழகிவிட்டு ஒரு ஆண் விலகுகிறார் என்றால் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? அடிக்கடி ஆளை மாற்றும் காதல் மன்னனாக இருக்கலாம். முடிந்தவரை பணம் முதற்கொண்டு அனைத்தையும் சுரண்டிக்கொண்டு கடைசியில் கம்பி நீட்டிவிடும் திட்டத்துடனேயே பழகியிருக்கலாம். அல்லது இந்தப் பெண்ணின் இன்னொரு முகத்தைத் தெரிந்துகொண்டு விலகும் முடிவை அவர் எடுத்திருக்கலாம். அல்லது எந்த முடிவையும் எடுக்க முடியாத அளவுக்கு ஏதேனும் மனநலச் சிக்கலால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

எப்படி இருந்தாலும் அதிகம் உடைந்து போய் குழப்பத்தின் உச்சியில், வேலை பார்க்கவும் முடியாமல் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையையும் ஏற்க முடியாமல் வெளியே எதையும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருப்பது இந்தப் பெண்தானே?

மாற்றி யோசியுங்கள்

அன்புத் தோழி… அந்த நபரின் நிலையற்ற மனதைத் தெரிந்துவைத்திருக்கிறீர்கள். உங்களைப் போன்றே காதல் உணர்வு அவரிடமும் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும் என்று நீங்களே சொல்கிறீர்கள். முதலில் அவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். விரட்டி விரட்டிப் பேசுங்கள். பெரும் பிரச்சினைகளாகத் தோன்றும் பலதும் சில மணி நேர மனம் திறத்தலிலேயே சரியாகிவிடும். பணத்துக்காகத்தான் உங்களைக் காதலித்தாரா என்பது இந்நேரம் உங்களுக்கே புரிந்திருக்கும். அதேபோல வருடம் ஒரு பெண் என்று பொழுதுபோக்குபவராக அவர் இருந்தால் அதுவும் உங்களுக்குப் புரிந்திருக்கும். இவற்றையெல்லாம் தாண்டி அவருக்கு ஆளுமைக் கோளாறுகளோ உளவியல் கோளாறுகளோ இருக்கவும்கூடும். அதனால் மனநல ஆலோசனையைப் பெறுவது நல்லது. அதன் பிறகு ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள்.

நிறைய பெண்களுக்கு இதே போலப் பிரச்சினைகள் உண்டு. திருமணம் என்ற நீண்ட உறவுப் பிணைப்புக்கு முன்பே இயற்கை உங்களைப் பேராபத்திலிருந்து காப்பாற்றிவிட்டது என்று நேர்மறையாக நினைத்துக்கொள்ளுங்கள். மறப்பது கடினமாக இருக்கிறது என்பதுதான் காதலின் சாபக்கேடு. ஆனால் சீழ்பிடித்த புண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தால்தான் குணமாகும் என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்தையும் மென்று விழுங்கி நிமிர்ந்து நில்லுங்கள். எல்லாச் சம்பவங்களும் பாவக் கழிவே என்று அமைதி கொள்ளுங்கள்.

உங்கள் நண்பர் புறத் தேவைகள் தீர்ந்த பிறகு விலகும் போலிக் காதலனா என்பதைத் தீர்க்கமாக சிந்தித்துப் பாருங்கள். காதல் மோகத்தில் நம் சிந்தனைகள் குதிரைக்குக் கண்ணைக் கட்டிவிட்டதைப் போல ஒரே நோக்கில்தான் பயணித்திருக்கும். இப்போது மாற்றி யோசித்துப் பாருங்கள். மீண்டு வந்துவிடுவீர்கள். காதலில் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவரின் நினைவுகள் என்றும் நம் நெஞ்சத்தில் இருக்கும்தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இப்போது அவரை நினைக்கும் போது உங்களுக்கு எழும் உணர்வுப் பிரவாகங்கள் அது மகிழ்ச்சியோ அல்லது பரிதவிப்போ இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயம் இருக்காது.

அதுவும் அவரால் நாம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் சீக்கிரமே அந்த உணர்வுகளை நம் மனம் களைந்துவிடும். காலம் என்ற மருத்துவரை உங்களுக்குச் சிகிச்சையளிக்க அனுமதியுங்கள். எல்லாம் சுகமாக மாறும்.

மீண்டும் பூ மலரும்

‘வாழத் தெரிந்தவருக்கு வாழ்க்கை அமைவதில்லை; வாழ்க்கை அமைந்தவருக்கு வாழத் தெரிவதில்லை’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். இப்படியொரு காதலைத் தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டோமே என்று அந்த நபர் கடுமையாக வருத்தப்படுவது காலப்போக்கில் கண்டிப்பாக நடக்கும். ஒருதலைக் காதல் குறித்த ஆய்வுகளின் போது காதலை நிராகரித்தவர்களின் மனநிலையையும் ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களில் பலரும் நீண்ட காலத்துக்கு ஒருவித குற்ற உணர்விலும், இப்படிச் செய்துவிட்டோமே என்ற பரிதவிப்பிலும் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. ஆக, காதல் நிராகரிப்பட்டவரையும் விடுவதில்லை. நிராகரித்தவரையும் விடுவதில்லை.

என்ன ஆறுதல் சொன்னாலும் மனச்சோர்வும், கடும் ஏமாற்றமும், ஆற்றாமையும், கோபமும் ஒரு சேர நம்மைக் கொல்லும். காதல் தோல்விக்கும் மனச்சோர்வுக்கும் அவ்வளவு நெருக்கம் உண்டு என்பது நாம் அறியாததல்ல. ஆனால் நீங்கள் மனது வைத்தால் அழகாக, அற்புதமாக, புத்திசாலித்தனமாக, சேதாரமின்றி மீண்டு வரலாம். காதல் நிறைவேறாத கோடானு கோடிப்பேர் இன்னும் இந்த உலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் தனி ஆள் இல்லை. உங்களைவிட அதிகம் காயப்பட்டவர்கள் இன்று வாழ்வின் உச்சாணிக்கொம்பில் ஏறி இளைப்பாறுகிறார்கள் என்ற உண்மையை மட்டும் உணருங்கள். விழுந்த குழந்தைதான் எழுந்து நிற்கப் பழகும். பட்ட மரம்தான் கல்லடி படும். காதலில் தோல்வி என்பது ஒரு உறவின் தோல்வியே தவிர வாழ்க்கையின் தோல்வி அல்ல. காயங்களே இல்லாமல் மைதானத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெல்ல முடியாது.

பாட்டிலில் அடைத்துவைப்பதைப் போல சோகங்களையும் பாரங்களையும் கால காலத்துக்கும் மனதில் அடைத்துவைக்க வேண்டாம். ஆண்டுகள் செல்லச் செல்ல அவற்றை மெல்ல ஜீரணித்துவிடுங்கள். மனதை லேசாக்கிக்கொள்ளுங்கள். மறத்தலையும் மன்னித்தலையும்விட மாபெரும் வெற்றிச் சூத்திரம் எதுவும் இல்லை. பழைய அனுபவம் கொடுத்த எச்சரிக்கையிலும் முதிர்ச்சியிலும் உங்கள் பயணம் விவேகமாகத் தொடரட்டும். இப்போதும் மனிதர்கள் உங்கள் குறுக்கே வருவார்கள். சில சம்பவங்கள் உங்களைத் தாலாட்டும். பல சம்பவங்கள் உங்களைத் தூக்கிப் புரட்டிப்போடும். ஆனால் அனுபவம் என்ற ஆசான் உங்களுடன் இருப்பதால் இந்த முறை உங்கள் தேர்வு தவறாது. பார்த்துப் பார்த்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களைச் சேர்த்துவைக்க வேண்டிய இடத்தில் நிச்சயம் சேர்த்து வைக்கும்!

 

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-25-காலம்-மாறும்-காயம்-மறையும்/article9578998.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.