Jump to content

காதல் வழிச் சாலை


Recommended Posts

காதல் வழிச் சாலை 26: முக்கோணக் காதல் பாடம்

 

 
 
 

 

 
triangle_3144336f.jpg
 
 
 

என்னுடைய காதல் உண்மையானது தானா? வெறும் உடல் கவர்ச்சியில் மயங்கிவிட்டேனா? அல்லது உளப்பூர்வமாகத்தான் நேசிக்கிறேனா? இப்படிச் சிலருக்கு சந்தேகம் எழலாம். காதலித்த போது இருந்த வேகமும் தாபமும் இப்போது இல்லையே… எங்கே போயிற்று அந்தக் காதல் சூறாவளி என்றும் சிலருக்குத் தோன்றலாம். இவற்றுக்குப் பதில் தெரிய வேண்டுமானால் நீங்கள் ஒரு முக்கோணத்துக்கு வர வேண்டும். முக்கோணக் காதலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல இது முக்கோணக் காதல் கோட்பாடு (Triangular Theory of Love).

காதல் எப்படிப் பரந்து விரிந்ததாகவும் விளக்குவதற்குக் கடினமானதாகவும் பன்முகம் கொண்டதாகவும் இருக்கிறதோ அதே போல அதை விளக்க முற்படும் கோட்பாடுகளும் ஏராளமானவை. ஆனால் ஓரளவுக்கு எல்லோரும் ஏற்றுக்கொண்ட, நடைமுறையில் பயனுள்ளதான ஒரு கோட்பாடே இந்த முக்கோணக் கோட்பாடு. உளவியலாளர் ராபர்ட் ஸ்டெர்ன்பெர்க் (Robert Sternberg) என்பவரின் எண்ண வெளியில் உதயமான இந்தக் கோட்பாடு உங்களின் சந்தேகங்களுக்கு ஓரளவு விளக்கம் சொல்லும்.

என்னருகே நீ இருந்தால்

அருகில் இருக்கும் முக்கோணத்தைப் பாருங்கள். அதன் மூன்று முனைகளிலும் மூன்று விஷயங்கள் இருக்கும். Intimacy என்னும் நெருக்கம், Passion என்னும் அதீத உணர்வு, Commitment என்னும் அர்ப்பணிப்பு. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். காதல் என்று ஒன்று இருந்தால் இந்த மூன்றும் தனியாகவோ ஒன்றுடன் ஒன்று இணைந்தோ இருக்கும் என்பது உளவியலாளர் ராபர்ட்டின் கணிப்பு.

காதலர்களின் நெருக்கம் (intimacy) முக்கிய மானது. எந்தவொரு உறவுப்பிணைப்பும் உறுதியாக இருப்பதற்கு இந்த அந்நியோன்யம் அவசியம். ‘அவரைப் பற்றி முழுமையாக எனக்குத் தெரியும். உள்ளும் புறமும் ஆழமாக அவரை நான் அறிவேன். என்னருகில் அவர் இருந்தால் மகிழ்வாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறேன்’ என்பது இதுதான். நெருக்கம் அதிகமாக ஆக உணர்வு நெருக்கத்தை அடுத்து உடல் நெருக்கமும் தானாக ஏற்பட்டுவிடும். அதிக நெருக்கம் அதிக காமத்தில் முடியும். அதிக காமம் அந்த நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கி விடும்.

அனைத்துக்கும் காதலே பொறுப்பு

அடுத்து அதீத உணர்வு எனப்படும் passion. காதலரின் மீது ஏற்படும் விளக்க முடியாத ஒரு கவர்ச்சி இது. அவரின் நினைவும் அண்மையும் பரவசம் தரும். நம் கண்ணுக்கு உலகிலேயே மிகக் கவர்ச்சியாகவும், காதலையும் காமத்தையும் ஒருசேரத் தூண்டுவதாகவும் இருக்கும் ஒரு உணர்வு நிலை இது.

மூன்றாவதாகப் அர்ப்பணிப்பு (commitment). நாம் என்றைக்கும் சேர்ந்திருப்போம். உன்னை எப்போதும் கைவிட மாட்டேன். குடும்பம், குழந்தைகள் என எல்லா எதிர்கால நிகழ்வுகளுக்கும் நானே உத்தரவாதம். இனி நான் என்பது இல்லை. எல்லாமே நாம்தான் என்பதே காதலின் இன்னொரு முக்கோண முனை சொல்லும் சேதி. சுருங்கச் சொன்னால் காதல் முடிந்து கல்யாணம் செய்வது என்றும் நீண்ட கால ஒப்பந்தத்துக்காகத் தயாராவதும்தான் இது.

காதலிக்கிறோம் என்று சொல்லும் போது இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக இருக்கும். குறைந்தபட்சம் இரண்டு விஷயங்கள் சேர்ந்து இருக்கும். இந்த உணர்வுக் கலவையின்படி பார்த்தால் ஏழு விதமான காதலின் நிலைகள் நமக்குத் தெரிய வரும்.

முதல் நிலை, முக்கோணத்தின் உச்சியைப் பாருங்கள். அங்கே ‘லைக்கிங்’ எனப்படும் விரும்புதல் இருக்கும். உங்களுக்குள் நெருக்கமும் நம்பிக்கையும் அதிகமாக இருக்கும். அடிப்படையில் ஒரு நல்ல நட்பை நினைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவே இது. காதலின் மற்ற இரண்டு அம்சங்களான அதீத உணர்வும் நீண்ட கால ஒப்பந்தத்துக்கான அர்ப்பணிப்பும் இதில் இருக்காது.

இரண்டாவது நிலை, முக்கோணத் தின் இடப்புறத்தில் இருக்கும் அதீதக் கவர்ச்சி மட்டும் இருந்தால் அதுதான் ‘இன்ஃபாச்சுவேஷன்’ எனப்படும் ஈர்ப்பு. வெறும் உடல் கவர்ச்சியிலும் காமக் கிளர்ச்சியிலும் ஒருவரின் மீது காதல் கொள்வதுதான் இது. கண்டதும் காதல் என்பதும் இதுதான். உணர்வு ரீதியான பிணைப்பும் நெடும் வாழ்க்கைப் பயணத்துக்கான அர்ப்பணிப்பும் இல்லாததால் இந்த விடலைக் காதலுக்கு ஆயுள் குறைவு. ஆனாலும் பெரும்பாலான காதல்கள் இப்படித்தான் ஆரம்பிக்கும். அதைக் காப்பாற்றி மேலே கொண்டு செல்வது அவரவர் பொறுப்பு.

மூன்றாவது நிலை, முக்கோணத்தின் வலது முனையைப் பாருங்கள். அங்கே ‘கமிட்மெண்ட்’ என்கிற அர்ப்பணிப்பு மட்டும் இருக்கும். அந்தக் காதலுக்கு வெறுமைக் காதல் என்றே பெயர். ‘உன் மேலே எனக்கு எதுவும் தோணலை. உன்னைப் புரிஞ்சிக்கவும் விரும்பலை. ஏதோ கல்யாணம் பண்ணிக்கிட்டோம், காலம் முழுக்க உன்னைக் காப்பாத்தறேன்’ என்ற உறவுகளெல்லாம் இதில்தான் சேர்த்தி.

உடல் நெருக்கமும் இல்லை. உணர்வுப் பிணைப்பும் இல்லை. சரியாகச் சொன்னால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் சிலவற்றின் ஆரம்பக் கட்டம் இப்படி இருக்கும். அதே போல வாழ்ந்து சலித்துப் போன தம்பதியினரிடமும் இந்த வெற்றுக் காதலைப் பார்க்கலாம். மேற்சொன்ன மூன்று வகைகளும் காதலுக்கான ஒரு அம்சத்தை மட்டுமே கொண்டிருப்பதால் நீண்ட காலம் நீடிப்பது கடினம். அடுத்து நீங்கள் பார்க்கும் காதலின் வகைகள் இரண்டு அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்.

நான்காம் நிலை, காதல் முக்கோணத்தின் இடப்பக்க சுவரைப் பாருங்கள். நெருக்கமும் அதீத உணர்வும் சேர்ந்த ரொமாண்டிக் காதல் இது. சந்தேகமின்றி பதின்பருவத்திலும் இளம்வயதிலும் வருவது இதுதான். ஒரு புதிய உறவின் ஆரம்பத்தில் கிளுகிளுப்பும் கவர்ச்சியும் நெருக்கமும் ஒருசேர சிறகடித்துப் பறக்கும் காதல் காலம் இது. காதல் மோகம் இருக்குமே தவிர அது நீண்ட கால உறவாக நீடிக்கத் தேவையான அர்ப்பணிப்பு இருக்காது.

ஐந்தாம் நிலை, வலப்பக்கச் சுவரைப் பாருங்கள். நெருக்கமும் அர்ப்பணிப்பும் சேர்ந்து இருக்கும் இதை தோழமைக் காதல் (companionate love) என்கிறோம். நீண்ட காலம் ஒன்றாக இருக்கும் தம்பதியினரிடம் இதைக் காணலாம். காமமெனும் அதிதீவிர உணர்வு காலப்போக்கில் குறைந்த நிலையிலும் பரஸ்பர உணர்வு நெருக்கமும் ‘உனக்காக நான், எனக்காக நீ’ என்ற வாழ்க்கை ஒப்பந்தமும் தொய்வின்றித் தொடர் வதால் இது ஒரு ஆரோக்கியமான காதல்.

ஆறாம் நிலை, முக்கோணத்தின் அடிச்சுவர் விளக்குவதுதான் வெற்றுக் காதல் எனப்படும் fatuous love. ஒன்றாகச் சேர்ந்திருப்போம் என்ற அர்ப்பணிப்பு இருக்கும். உடல் ரீதியிலான உறவுப் பிணைப்பும் காம தேவனின் தயவில் குறைவின்றி இருக்கும். ஆனால் மன ரீதியான நெருக்கம் இருக்காது. காமம் முக்கியம். அதைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல கல்யாணம் முக்கியம் என்று மட்டும்தான் இவர்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் காதலின் முக்கிய அம்சமான மன நெருக்கம் இல்லாததால் இதுவும் சற்றுக் குறையுள்ள காதலே. இதைக் கற்பனைக் காதல் (fantasy love) என்றும் குறிப்பிடலாம்.

ஏழாம் நிலை, இறுதியாக முக்கோணத்தின் நடு மையத்துக்கு வாருங்கள். இதுவே நிறைவான காதல் (consummate love). காதலின் இன்றி யமையாத மூன்று அம்சங்களும் ஒருங்கே இணைந்திருக்கும் இந்தக் காதல் அரிதானது. அமைந்தவர்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகளே. உணர்வு நெருக்கத்தோடு கூடிய உடல் சேர்க்கையும் காலா காலத்துக்கு வாழ்க்கைப் பாதையில் ஒருங்கே பயணிப்பதற்கான அர்ப்பணிப் பும் இருவரிடமும் இருப்பதால் அவர்களின் காதல் வாழ்வில் எந்தக் குறையும் இருக்காது.

முழுமையாகக் காதலிக்கலாமா?

இப்படியொரு வாழ்க்கை, அது அமைந்தவர்களுக்கும் அனுபவித்தவர்களுக்கும் மட்டுமே புரியும். பேசுவதற்கு நன்றாக இருந்தாலும் இவ்வளவு முழுமையான காதலைப் பார்ப்பது கடினம். எல்லா விதத்திலும் முழுமையான மனிதர்களை எங்காவது பார்க்க முடிகிறதா? அது சாத்தியமில்லாத போது அந்த மனிதர்களின் காதல் மட்டும் அவ்வளவு முழுமையானதாக இருக்க முடியுமா என்ன? இருந்தாலும் நானும் காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கும் காதலின் முழுமையான கட்டமைப்பு தெரிய வேண்டியது அவசியம்.

சங்க இலக்கியம் தொடங்கி, திரைப்பாடல்கள் வரை போற்றிப் புகழப்படும் காதல் ஒரு அறிவியல்பூர்வமான உந்துசக்தி. மனித குலத்தின் இன்றியமையாத வேட்கைகளில் முக்கியமானது. வேதிப்பொருட்களின் தாண்டவத்தில் கொண்டு செல்லப்படும் காதலை கொஞ்சம் நின்று நிதானித்து கவனியுங்கள். உங்கள் காதல் எந்த இடத்தில் பொருந்தி வருகிறது என்று பாருங்கள். உங்கள் காதலரோடு சேர்ந்து இந்த முக்கோணத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எப்படிக் கொண்டு சென்றால் காதல் வாழ்க்கையும் அதைத் தொடர்ந்த மண வாழ்வும் இனிப்பாக இருக்கும் என்பதை அலசுங்கள். நான்கும் நான்கும் எட்டு என்பது எப்படிக் கணித உண்மையோ அப்படித்தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் என்பதும் ஒரு அறிவியல் உண்மை. இப்படிச் சொல்வது வகுப்பு எடுப்பதைப் போல உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் உங்கள் காதல் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்க இது போன்ற வகுப்புகளும் அவசியம்தானே!

 

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-26-முக்கோணக்-காதல்-பாடம்/article9587490.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 27: காதல் சொல்லும் நேரம் எது?

 
love_3146815f.jpg
 
 
 

அந்தக் கல்லூரி மாணவியின் பதற்றம் அவர் எழுதியிருந்த கடிதத்திலேயே தெரிந்தது. “எனக்கு அவன் சீனியர். இன்னும் இரண்டு வாரங்களில் கடைசித் தேர்வும் முடிந்து கல்லூரியை விட்டுக் கிளம்பப் போகிறான். பாழாய்ப்போன மனசு கிடந்து அடித்துக்கொள்கிறது. ஒரு வருஷமாதான் அவனைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

எல்லா விஷயத்திலும் அவனைப் பிடிக்கிறது. எனக்கு அவன் நல்ல நண்பனும்கூட. இது ஈர்ப்பாக மட்டுமே இருக்கலாம் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் ஏன் காதலாக இருக்கக்கூடாது? அல்லது காதலைத் தெரிவிக்க எவ்வளவு காலம் பழகிப் பிறகு சொல்ல வேண்டும்? அவன் ஒரு பெண்ணைக் காதலிக்க, அவள் வேறொருவரின் பின்னால் சென்றுவிட்டாள். அந்த மன உளைச்சலில் இனி பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யும் முடிவோடு இருக்கிறான்.

இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் நான் காதலைச் சொல்வது? என்னை நிராகரித்துவிட்டால் இப்போது இருக்கும் நல்ல நட்பும் கெட்டுவிடுமா? நான் என்னதான் செய்வது?” என்று எழுதியிருந்தார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி.

காதல் உணர்வைப் பகுப்பாய்ந்து எப்போது, எப்படிச் சொல்ல வேண்டும் என்ற அளவுக்கு அவர் யோசிப்பதே ஆரோக்கியமானதுதான். எப்போது காதலைச் சொல்வது என்பது பலருக்கும் மண்டை குடையும் கேள்வியாகவே இருக்கிறது. அதற்கும் ஒரு சரியான நேரம் வேண்டும். உரிய நேரம் தவறி அவசரக் குடுக்கைத்தனமாக நேசத்தை வெளிப்படுத்துவது அடுத்தவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

அவசரப்படும் ஆண்கள்

ஆண், பெண் இருவரில் காதலை முதலில் சொல்வது பெரும்பாலும் ஆண்தான் என்கின்றன ஆய்வுகள். ஒரு பெண்ணைச் சந்தித்துப் பழகி, பிடித்துவிட்டால் 88 நாட்களில் ஒரு ஆண் தன் காதலைச் சொல்கிறான். ஆனால் பெண் தன் காதலை வெளிப்படுத்த சராசரியாக 134 நாட்கள் எடுத்துக்கொள்கிறாள் என்கிறது ஒரு ஆய்வு. நேசத்தைச் சொல்ல ஒரு பெண் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கும் மேலாக எடுத்துக்கொள்கிறாள்.

புற அழகின் வசீகரிப்பே ஆணின் முதல் மயக்கம். அவளை எப்படியாவது அடைய வேண்டும் அல்லது சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்பது அவனே அறியாதபடி ஆழ்மன எண்ண ஓட்டமாக இருக்கும். இனப்பெருக்கம் என்கிற உள்ளார்ந்த ரகசிய நோக்கத்தின் அடிப்படையில்தான் காதல் கொண்டுசெல்லப்படும் என்கிறது பரிணாம உளவியல் (Evolutionary psychology). இது இயல்பே. புறக்கவர்ச்சியின் அடிப்படையில் அணுகும் ஆண், தனக்கான நிரந்தரத் துணையாக இருப்பானா என்ற ஆழ்மனக் கேள்விகளை அசைபோடத்தான் பெண் சற்று நேரம் எடுத்துக்கொள்கிறாள். இவை பொதுவான கருத்துகளே தவிர உலகெங்கும் எல்லா ஆண்களும் பெண்களும் இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

காதல் பொதுவல்ல

வருடத்துக்கு ஒருவரை டேட்டிங் செய்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ள(!) முயற்சிப்பவர்கள் ஒரு நாட்டில் நிறைந்திருப்பார்கள். “கல்யாணமாவது வெங்காயமாவது… ஒரு வீட்டைப் பிடிப்போம். எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் சேர்ந்து வாழ்வோம். குழந்தையெல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டாம். எப்போது நாம் அசவுகரியமாக உணர்கிறோமோ அந்த நிமிடமே பிரிந்துவிடலாம்” என்ற ‘கோ ஹேபிச்சுவேஷன்’ முறை ஒப்பந்தத்தில் வாழ்பவர்களைக் கொண்ட நாடுகளும் உண்டு. முறைகள் மாறினாலும் நோக்கம் ஒன்றுதான்.

நாமிருவரும் சேர்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பதோடு முடிந்து விட்டால் இயற்கையின் இயக்கத்தை நாம் மறுதலிப்பது போலாகிவிடும். ஏனெனில் துணையைத் தேர்ந்தெடுப்பதும், அதைத் தக்கவைத்துக்கொள்வதும், அதன் மூலம் ஒரு சந்ததியை உருவாக்குவதும், உருவாக்கிய வாரிசை வளர்த்தெடுப்பதில் இருவரது சக்தியையும் முதலீடு செய்வதுமே வாழ்வின் ‘ஒன்லைன்’. அதற்கான ஆரம்பமே காதலெனும் மந்திர உணர்வு.

‘ஐ லவ் யூ’ சொல்லலாமா?

இப்போது அந்தக் கல்லூரி மாணவியின் விஷயத்துக்கு வருவோம். அன்புத்தோழி… உங்கள் சீனியரை உங்களுக்குப் பிடித்திருக்கிறது. சரி, திருமணம் அவரோடு சாத்தியமா? அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்கிறீர்கள். காதல் உணர்வு பீறிடும்போது இப்படி இருப்பது இயல்பே. திருமணம் உங்கள் குறிக்கோளா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். காரணம் நம் சமூகத்தில் மதம், இனம் தாண்டி தொழில், குடும்பம், பொருளாதாரம் போன்றவையும் திருமண வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளாகக் கருதப்படுகின்றன.

அவருடன் நல்ல நட்பில் இருப்பதால் இப்போதே பலமுறை அவருடன் உங்களைப் பல விதத்திலும் பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள். காரணம் இரண்டு பேருக்கும் ஒருங்கே காதல் வந்து அதை மேலெடுத்துச் செல்வது வேறு. உங்களுக்கு மட்டும் வந்து அதை இனிமேல்தான் அவரிடம் சொல்லப்போகிறீர்கள் என்பது வேறு. ஒரு குளத்தில் கல்லெறியப்போகிறீர்கள். முடிவை மட்டும் தீர்க்கமாக யோசித்து எடுத்துவிடுங்கள்.

அடுத்த கட்டம் கொஞ்சம் முக்கியமானது. இன்னும் நன்கு பழகுங்கள். சரியான தருணத்துக்காகக் காத்திருங்கள். பதற்றம் இல்லாமல் தொடங்குங்கள். “என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேளுங்கள். “உங்களை எனக்கு எல்லா விதத்திலும் பிடித்திருக்கிறது. நீங்கள் என்னுடன் இருந்தால் நம் இருவரின் வாழ்வும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. எப்படியும் நான் ஒருவரை மணக்கப்போகிறேன். அது ஏன் நீங்களாக இருக்கக் கூடாது? உங்களுக்கும் யாராவது ஒருவர் மனைவியாகப் போகிறார். அது நானாக இருக்க விரும்புகிறேன். இப்படிச் சொல்வதில் தவறேதும் இல்லை என்று தான் நினைக்கிறேன். உங்கள் எண்ணம் எதுவாக இருந்தாலும் நிதானமாக யோசித்துப் பதில் சொல்லுங்கள்” என்று அவரிடம் உங்கள் காதலைச் சொல்லுங்கள்.

‘ஐ லவ் யூ’ என்று சொல்வதுதான் சினிமாத்தனமானது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். பதற்றம் இல்லாமல் வார்த்தைகள் வரும். அதற்காகத் தாமதமாகவும் காதலைத் தெரிவிக்கக் கூடாது. அவசரத்தில் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் காதலைச் சொல்வதும் நல்லதல்ல. எது சரியான சந்தர்ப்பம் என்பதை உங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவும் முடியாது. இதுதான் காதலின் தனித்துவம்.

ஒருமுறைதான் காதல் வருமா?

“நான் அப்படித் தெரிவிக்கத் தயங்கி கடைசியில் அந்தப் பெண்ணுக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயமாகிவிட்டது. என்ன செய்வது... இப்போதுதான் அவளை முன்னைவிட அதிகமாக நேசிக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார் ஒரு இளைஞர். ஒருவரைக் காதலிப்பது, பின் அவரை அடைவது என்பதைத்தாண்டி ‘காதலித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதன் முடிவு பற்றியெல்லாம் கவலை இல்லை’ என்பதை இயல்பானதாகப் பார்க்க முடியாது. இவர்கள் காதல் என்பதைத்தான் காதலிக்கிறார்களே தவிர தங்கள் காதலியைக் காதலிக்கவில்லை. இவையெல்லாம் ஆரோக்கியமான காதலில் சேர்த்தி இல்லை.

எனவே சரியான தருணம் பார்த்து உங்கள் காதலைச் சொல்லிவிடுங்கள். உங்கள் நண்பர் ஏற்கெனவே காதல் தோல்வி அடைந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ‘முதல் காதலே முற்றுப் பெற்ற காதல். அடுத்து காதலைப் பற்றி சிந்திப்பதே அபத்தமானது. காதலின் இலக்கணத்துக்குப் புறம்பானது’ என்று நினைப்பதெல்லாம் முட்டாள்தனம். அறிவியலுக்கு எதிராக இந்தச் சமூகம் பயிற்றுவித்த தப்பர்த்தமே அது.

அதனால் முதல் காதலுக்குப் பிறகு நாம் இன்னொருவரையும் நேசிக்க முடியும் என்று அவர் சிந்திப்பதுதான் ஆரோக்கியமானது. அவருக்கு அதை நீங்கள் புரியவைக்க முயல்வதும் தவறில்லை. ஒரு பெண் குழப்பிவிட்டார் என்பதால் பெண்களின் காதலே கண்ணாமூச்சி விளையாட்டுதான் என்ற முடிவுக்கு மட்டும் அவர் வராதிருந்தால் போதும். பிறப்பு, இறப்பு என்ற இரண்டைத்தவிர இந்த உலகில் வேறு எல்லா விஷயங்களும் மறுபரிசீலனைக்கு உரியவையே என்பதை அவருக்கு உணர்த்துங்கள்.

ஆணோ, பெண்ணோ… அவர்களின் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மகிழ்ச்சி. ஆனால் அது நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? பெரும்பாலான பெண்கள் காதலை எப்படி நிராகரிக்கிறார்கள்? ‘உங்களை நல்ல நண்பனாக நினைத்தேன்’ என்றோ, ‘சேச்சே உங்களை என் அண்ணன் மாதிரியில்ல நினைச்சிட்டிருந்தேன்’ என்றோ மன குண்டுகள் வீசப்படும்போது அதை எப்படி எதிர்கொள்வது? காதலை மறுப்பதிலும் ஒரு நளினம் இருக்கிறதா? மறுக்கப்படும் காதலை எதிர்கொள்வதிலும் ஒரு நாகரிகம் இருக்கிறதா? அவற்றைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-27-காதல்-சொல்லும்-நேரம்-எது/article9598840.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 28: காதலை மறுப்பது எப்படி?

 

 
 
love_3149129f.jpg
 
 
 

பெண்கள் காதலை எப்படி மறுக்கிறார்கள்?

“உங்களை அப்படி நான் நினைக்கவேயில்லையே... அப்படி ஒரு எண்ணம் என்னால் உங்களிடத்தில் உண்டாகியிருந்தால் ஸாரி. என்னை மன்னிக்கவும்”.

“உங்களை என் அண்ணனாகத்தான் நினைத்தேன். உங்களுக்கு அந்த எண்ணம் எப்படி வந்தது?”.

“இப்போது அதைப் பற்றியெல்லாம் யோசிப்பதற்கு எனக்கு நேரம் இல்லை. படிப்பு, பிறகு வேலை என்பதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது”.

“மன்னிக்கவும். நாங்கள் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் பெற்றோர் இதற்கெல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்”.

இப்படிப் பல விதங்களிலும் காதலை நிராகரிக்கலாம். சரியான சந்தர்ப்பம் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்லியிருப்பீர்கள். ”ஸாரி. என் போன்ல சார்ஜ் சுத்தமா இல்லே. அப்புறம் கூப்பிடறேன்” என்று பதில் வரும். அப்புறம் என்பது இல்லாமலே போய்விடும்.

“இன்னொரு முக்கியமான கால் வந்துட்டிருக்கு.. அநேகமா வெளியூர் போன அப்பாவா இருக்கும்… அப்புறம் லைனுக்கு வரேன்” என்ற ரீதியிலான மறுதலிப்புகள் இன்னும் உஷாரானவை.

கொஞ்ச நாள் பழகித் தொலைத்து விட்டோம். அவனோட தயவும் கொஞ்சம் நமக்குத் தேவை. ஒரேயடியாகத் துண்டித்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் இருந்தால் இப்படி வலிக்காமல் துண்டிக்கலாம். அந்தப் புத்திசாலித்தனமான அணுகுமுறைகளை நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

காதலை மறுப்பதிலும் இங்கிதம்

ஏன் நிராகரிக்கிறார்கள் பெண்கள்? சில பத்திகளில் இதற்கு விளக்கம் சொல்லிவிட முடியாது. ஆணின் உடல் மொழி, காதலைத் தெரிவித்த விதம், காதலைக் கட்டாயப்படுத்தும் விதமாக அணுகுவது, கெட்ட பழக்கங்களுடன் ஊர் சுற்றுவது, குறிக்கோள் இல்லாமல் திரிவது என்றிருப்பவர்களைப் பிடிக்காது என்பது மாத்திரமில்ல; ரொம்ப நல்ல பையனாகவும் கடும் நியாயஸ்தனாகவும் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் இளமைக்கே உரிய துள்ளலும் துடிப்பும் குறைவாக இருந்தாலும் பல பெண்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆச்சரியமாக இருந்தாலும் இது உண்மைதான்.

கெட்ட பையன்கள் பெண்களிடம் வாங்கும் மார்க்கை விட நல்ல பையன் என்றழைக்கப்படும் பையன்கள் வாங்கும் மதிப்பெண்கள் குறைவுதான் என்றுகூடச் சில ஆய்வுகளில் நிரூபித்திருக்கிறார்கள். காதலிப்பது என்று வரும்போது கொஞ்சம் ‘ரிஸ்க்’ எடுக்கக்கூடிய, அழகான முரட்டுத்தனத்துடன் கூடிய, சொல்பேச்சு கேளா இளைஞர்களுக்குப் பெண்கள் கொஞ்சம் முன்னுரிமை கொடுக்கிறார்களாம். உளவியல் ரீதியாக நாம் காணும் எத்தனையோ முரண்களில் இதுவும் ஒன்று.

எப்படியிருந்தாலும் காதலை மறுப்பதிலும் ஒரு இங்கிதம் இருக்கிறது. மிகவும் கொச்சையான வார்த்தைகளில் திட்டி, சுய மரியாதையைக் குலைக்கும் வசனங்களை வீசி அவமானப்படுத்தித்தான் காதலை மறுக்க வேண்டும் என்பதில்லை. ‘நோ’ என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தாமல் மறுப்பது என்பது ஒரு கலை. இல்லை என்பதையே சொல்லாமல் இல்லை என்பதைப் புரிய வைப்பது நாகரிகமிக்க ஒரு செயல்.

சில மளிகைக் கடைகளுக்குச் செல்லும்போது கவனித்துப் பாருங்கள். “அண்ணாச்சி... சீரக சம்பா அரிசி இருக்கா?” என்று கேட்பீர்கள். அது இல்லாதபட்சத்தில் “இப்பதான் புது ஸ்டாக் பொன்னி அரிசி வந்திருக்கு வாங்கிக்கங்களேன்...” என்று எதையாவது சொல்லி அண்ணாச்சி சமாளிப்பாரே தவிர நாம் கேட்ட பொருள் இல்லை என்று மட்டும் சொல்லவே மாட்டார். எதிர்மறையான அந்த வார்த்தையை அடிக்கடி வியாபாரத்தில் உபயோகிப்பது எதிர்மறையான பலன்களைத் தந்துவிடும் என்ற எச்சரிக்கையே இதன் காரணம்.

வாழ்க்கையும் லாப நஷ்டங்கள் நிறைந்த ஒரு வியாபாரம்தானே? மறுப்பதிலும் ஒரு மென்மை இருத்தல் நலம். அதிலும் சில காலம் பழகி ஒருவரின் குணாதிசயங்கள் புரிந்திருக்கும்பட்சத்தில் மிக நாகரிகமாக மறுக்கலாம். நீங்கள் புத்திசாலியாக இருந்தால் உண்மையான காரணங்களை உண்மையாகவே சொன்னாலே போதுமானது. காயமும் குறைவு. உணர்வு ரீதியாக பலத்த சேதாரம் தவிர்க்கப்படும். எதிராளியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில் அவருக்கு உண்மையையும் புரிய வைத்தது போலிருக்கும்.

கேள்விகளிலேயே கொக்கி போடுங்கள்

“நீங்கள் சரியானவர்தான். எனக்கு உங்களின் இந்தக் குணாதிசயங்கள் சரிவராது. பல விஷயங்கள் நமக்குப் பொருந்தியிருப்பதாகச் சொன்னீர்கள். ஆனால் வெற்றிகரமான மண வாழ்க்கைக்கு இவை மட்டுமே போறாது. என் கருத்து என்னவென்றால்…” என்று இப்படி மென் மையாகவும் மறுப்பைத் தெரிவிக்கலாமே. உங்கள் மனதில் அப்படி எவ்வாறு நினைத்தீர்கள் என்று கேட்டு அவர் சொல்லும் பதிலிலேயே அவரை மடக்க வேண்டும்.

நம்மால் அவருக்குள் ஏற்பட்ட சலனங்களுக்கு உங்களுக்குத் தோன்றும் விளக்கத்தை அவருக்கு அளிக்க வேண்டும். “சரி... காதலிப்பதாகச் சொல்கிறீர்கள். அடுத்து என்ன பார்க், பீச் என்று சுற்றலாம். அதற்குப் பிறகு கல்யாணம் செய்யும் எண்னம் இருக்கிறதா? ஓகே… அப்படியானால் இன்னின்ன விஷயங்களுக்கு உங்கள் பதில் என்ன?” என்று கொக்கி போட வேண்டும்.

குறிக்கோளில்லாத, பிடிமானமற்ற பல விடலைக் காதல்களுக்கு இது போன்ற சில கேள்விகளே அவர்களுக்கு உண்மையைப் புரியவைத்துவிடும். தாமாகவே விலகி விடுவார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் காதலை ஏற்றுக்கொள்வதில் மட்டும் குழப்பக் கூடாது. அது பாவ காரியம் மாத்திரமல்ல அபாயகரமானதும்கூட.

பலவீனத்தைக் காதலுக்குப் பயன்படுத்தாதீர்

“காதலைச் சொன்னேன். மறுத்து விட்டாள். நானும் விலக முயற்சிக்கிறேன். ஆனால் இன்னமும் அவள் என்னைப் பார்க்கும் பார்வையில் இருந்து செய்யும் காரியங்கள் வரை என்னைத் தேடுவது போலவே இருக்கிறது. என் நண்பர்களும் அவள் என்னை ‘லவ்’ பண்ணுவதாகத்தான் சொல்கிறார்கள். ஆனால் அவள் உறுதியாக மறுத்துவிட்டாள். பயங்கரக் குழப்பமாக இருக்கிறது..” என்று எழுதுகிறார் ஒரு கல்லூரி மாணவர்.

அப்பெண் பெயரளவிற்கு மறுத்தாலும் தன் மீது இன்னமும் அவருக்குக் காதல் இருப்பதாக இம்மாணவர் நம்புகிறார். இதற்குச் சம்பந்தப்பட்ட பெண்தான் விளக்கமளிக்க முடியும். ஆனால் இது தவறு. அதேபோல ‘இரண்டாண்டுகள் நல்ல நேசத்தில் இருந்துவிட்டு இப்போது அம்மா ஒப்புக்க மாட்டார். எனவே பிரிந்து விடுவோம் என்கிறார் என் ஆண் நண்பர்’ என்று எழுதியிருக்கிறார் ஒரு பெண். இவர் ஒரு மாற்றுத் திறனாளி. நல்ல வேலையில் இருக்கிறார். உடன் பணி புரியும் நபருடன் காதலில் இருந்திருக்கிறார்.

‘பல நேசம் சில வேஷம்’ என்று காலம் கழிந்த பிறகு இப்போது அவரது காதலர் தன் அம்மா மீது காரணம் சொல்லித் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுக்கிறார். இப்பெண்ணோ கடும் மனச்சோர்வுக்குப் போய்விட்டார். காதலிக்கும்போது அம்மாவைக் கேட்க வேண்டியதில்லை; கல்யாணத்துக்கு மட்டும் சம்மதம் கேட்க வேண்டும் என்பதெல்லாம் என்ன நியாயம் என்று தெரியவில்லை.

இன்னொரு பெண்ணின் புலம்பல் வேறு மாதிரியாக இருக்கிறது. பிடிக்காமலேயே தனக்குக் கல்யாணம் நடந்தது என்றும் எதுவும் சரிவராததால் மூன்றே மாதங்களில் கணவரைப் பிரிந்துவிட்டதாகவும் சொன்ன அவர் மேலும் எழுதுகிறார்.

“என் மனதில் இருந்த பிம்பத்துக்குப் பொருந்தி வந்த ஒருவரை என் விவாகரத்துக்குப் பின் சந்தித்தேன். என் மீது அவரும் அப்படி ஒரு அன்பைப் பொழிந்தார். காலையில் காதலும் இரவில் காமரசம் சொட்டும் பேச்சுமாக சில காலம் கழிந்தது. என்னை, என் மேனியைப் பார்க்க வேண்டும். இப்போது உடனே உன் போட்டோ வேண்டும் என்று கேட்பார். அதுவும் ஆடை குறைவான என்னைப் பார்ப்பதில் அவருக்கு அலாதி விருப்பம் என்பதால் நானே அப்படியான ஒளிப்படங்களை அனுப்புவேன். ஆனால் இப்போது உன்னைத் திருமணம் செய்துகொள்ள வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. நாம் சேர முடியாது, என்னை மறந்துவிடு என்று அவரும் அழுகிறார். என்னையும் அழ வைக்கிறார். மிக எச்சரிக்கையாக, இந்த முறை வாழ்க்கையில் வழுக்கக் கூடாது என்று இருந்தும் இப்படி ஒரு உணர்வுப் பிரளயத்தில் மாட்டிக்கொண்டுவிட்டேன் நான்… என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை”. இப்படி எழுத்தில் விம்முகிறார் அந்தப் பெண்.

திருமணமாகாத ஒரு இளைஞனை நம்பிக் காதலித்தது அவர் தவறா? மணமுறிவு ஏற்பட்ட ஒரு பெண்ணின் மனச் சூழலைத் தவறாகக் கையாண்டு காமத் தூண்டுதல்களில் ஈடுபட்டுக் கடைசியில் கைகழுவி விடும் இளைஞனின் செயல் நியாயமானதா? ஒப்புக்கொள்ளக் கூடியதா? ஒருவரின் பலவீனத்தைப் பயன்படுத்திக் காதல் என்ற போலி வளையத்துக்குள் அவர்களைக் கொண்டுவந்து நேரத்தைக் கடத்துவதற்காகப் பழகும் இளைஞர்கள் ஒரு பாவத்தைச் செய்வதாக உணர்ந்து தம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

ஆக, காதல் என்பதைத் தாண்டி நாமிரு வரும் மனிதர்களே என்ற சிந்தனையை இழக்காத நாகரிகம், காதலை மறுப்பதில் இருக்க வேண்டும். அந்த மனித நேயம் காக்கப் படும்போது வன்முறைக்கு அங்கே ஏது இடம்?

 

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-28-காதலை-மறுப்பது-எப்படி/article9607970.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 29: உயிரைப் பறிக்குமா உண்மைக் காதல்?

 

 
 
 
love_3151441f.jpg
 
 
 

எது நடக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ எழுதுகிறோமோ அது மறுபடியும் நடந்துவிட்டது. கடந்த வாரம் சென்னையில் ஒரு இளைஞர் தன் காதலியைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார். தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விலகிச் செல்லும் எண்ணத்தில் இருந்தவரைக் கடைசியாகப் பார்க்க வேண்டும் என்று அழைத்து, சுத்தியலால் தாக்கியே கொன்றிருக்கிறார். எங்கிருந்து வருகிறது இவ்வளவு வன்மம்? ஏன் இப்படிச் செய்கிறார்கள்? தங்கள் முன்னாள் காதலியையோ பிரிய நினைக்கும் மனைவியையோ கொல்லுகிற அளவுக்குப் போவதன் உளவியல் பின்னணி என்ன?

இருவரல்ல ஒருவர்

காதலை விளக்கும்போது fusion model of love என்று ஒன்றைச் சொல்வார்கள். ஆழமாகக் காதலிக்கும்போது நாம் இருவர் இல்லை ஒருவரே என்ற அளவில் சிந்தனை, சொல், செயல் எல்லாம் ஒன்றாகிவிடுகின்றனவாம். உடல் ஒட்டிப் பிறந்த சியாமீஸ் (Siamese) இரட்டையர்களைப் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன். இருவர் ஒருவராகும் இந்த அதிசயத்தைச் சொல்லாத கவிதைகள் இல்லை. சினிமாப் பாடல்கள் இல்லை. எனக்கான அடையாளமே அவள்தான், என் உலகமே அவள்தான், அவளில்லாமல் நான் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள் சிலர். சொல்லப் போனால் அப்படி ஒன்றிப்போன காதல் தம்பதியினரை உலகம் வியந்துதான் பார்க்கிறது.

இவ்வளவு ஏன்… நீண்ட கால மகிழ்வான, மன நிறைவான வாழ்க்கைக்குப் பிறகு கணவனும் மனைவியும் உள்ளத்தில் மாத்திரமல்ல, உடல் ரீதியாகவும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருப்பவர்களாகவே மாறிவிடுவார்கள் என்று ஒரு ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். கொலை செய்யும் அளவுக்கு, அதுவும் திட்டமிட்டே ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சந்திக்கச் செல்லும் அளவுக்குக் காதல் நிராகரிப்பு அவ்வளவு துயரமானதா?

வெறுப்புக்கும் கண்ணில்லை

காதலுக்கு மட்டும்தான் கண்ணில்லை என்பதல்ல. வெறுப்புக்கும் கண்ணில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வன்முறையை எந்த அளவுக்குக் கையிலெடுத்தாலும் தப்பில்லை என்ற அளவுக்குச் சில ஆண்களுக்கு அந்த வெறுப்பு கண்ணை மறைத்துவிடுகிறது. இந்த அளவு வன்முறைக்கு நம் மூளையின் வேதியியலும் ஒரு காரணமே. காதல் நிராகரிக்கப்படும்போது நடக்கும் உளவியல் கதறல்களை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அதாவது, மறுக்கப்பட்டுவிட்டோம் என்றவுடனேயே முதலில் நம்ப மறுக்கிறோம். ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். “அய்யோ… இருக்கவே முடியாது.

என்னையா வேண்டாமென்கிறாய்” என்று கத்துகிறோம், கதறுகிறோம். இந்த உணர்வுப் பிரளயத்தில் சிக்கி இருக்கும்போது நார்எபினெஃப்ரின் (norepinephrine), டோபமைன் (dopamine) என்ற இரண்டு வேதிப்பொருட்களும் உடலில் பிரவாகமாகப் பொங்குகின்றன. விளைவு? மறுக்கப்பட்ட நபர் பயங்கர உத்வேகத்துடன் ‘எப்படி அவளை மடக்குவது’ என்ற சிந்தனையின் விளைவாகப் பின் தொடர்கிறார் (stalking). அந்தப் பெண்ணின் வீட்டுக்கு, வேலை செய்யும் இடத்துக்கு, அவரது நண்பர்கள் வீட்டுக்கு, அவர் வந்து செல்லும் மார்க்கெட்டுக்கு என்று நிராகரிக்கப்பட்டவரின் பயணம் தொடர்கிறது. நள்ளிரவு, அதிகாலை என்றில்லாமல் பசி, தூக்கம் மறந்து காதலியே கதி என்று அல்லாடுகிறார்கள்.

இதற்கான சக்தியைக் கொடுக்கும் இந்த வேதிப்பொருட்கள்தான் இன்னொன்றையும் செய்கின்றன. அதாவது இவற்றின் அளவு உடலில் ஏற ஏற செரோடோனின் (serotonin) என்ற வேதிப்பொருளின் அளவு குறைய ஆரம்பிக்கிறது. செரோடோனின் குறைந்தால் மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்றவை மட்டுமன்றி தற்கொலை எண்ணங்களும் ஏற்படும். உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வன்முறைகளில் ஈடுபடவும் துணிந்துவிடுகின்றனர்.

காதலின் தீவிரம்?

காதலின் பெயரால் நடக்கும் கொலைகளின் பின்னணியில் ஒருவித பயம், பொறாமை, கட்டுப்படுத்தும் மனப்பாங்கு இவை மட்டுமல்லாது ‘நீ எனக்கு மட்டும்தான்’ என்ற உடைமையாக்கிக்கொள்ளும் தீவிர மனப்பாங்கும் (possessiveness) ஒரு காரணமாக இருக்கும். அவள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன் என்ற ஆயாசம் இடியென மனதில் இறங்கும்போது அதீத பயத்துக்கு ஆளாகிறார்கள். அந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே அச்சப்படும் ஆண்கள் பெண்ணின் உயிரையும் எடுக்கும் ஆபத்தான முடிவுக்கு வருகிறார்கள்.

அடுத்து பொறாமை. வேறு யாரோ அவளை அபகரித்துக்கொள்வார்கள், அதற்கு அவளும் சம்மதம் சொல்வாள் என்ற நினைப்பே இது மாதிரி ஆண்களைப் பித்துப் பிடிக்க வைத்துவிடுகிறது. எனக்கு இல்லாத அவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது, அவளைக் கொல்வதுதான் இதற்கு ஒரே வழி என்று முடிவெடுக்கிறார்கள். எந்த அளவுக்குத் தன் காதலியைச் சார்ந்து வாழ எத்தனித்திருக்கிறார்கள் என்பதையே இது போன்ற காதல் குற்றங்கள் அறிவிக்கின்றன. காதல் விவகாரங்களைப் பொறுத்த மட்டில் பலவீனத்தின் வெளிப்பாடுதான் கொலையே தவிர ஒரு போதும் அது பலத்தின் வெளிப்பாடாக இருப்பதில்லை. அடுத்து பொசஸிவ்னஸ்.

இவள் தனக்குரியவள் என்று மனதில் வகுத்துக்கொண்டுவிட்ட நேரத்தில் அந்தப் பொருள் உன்னுடையதல்ல என்று நிஜம் உணர்த்தும்போது மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எல்லோரையும் அப்படிக் குறிப்பிட முடியாது. காதல் தோல்வி அடைந்தவர்களெல்லாம் தம் பார்ட்னரைக் கொல்வதில்லையே. இந்த இடத்தில்தான் அவர்களின் மனப்பாங்கு, ஆளுமைக் கோளாறுகள், உளவியல் பிரச்சினைகள், போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களாக இருத்தல் போன்ற விஷயங்களை நாம் பார்க்க வேண்டும். கொலை செய்யும் அளவுக்கு வந்தவர்கள் அதற்கு முன்பே கொஞ்சமாகத் தங்களது வெறித்தனத்தைக் காண்பித்திருக்கக் கூடும். அப்போதே எதிராளி சற்று எச்சரிக்கையாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

கொஞ்ச நாள் பின் தொடர்வான். பிறகு விட்டு விலகி விடுவான் என்று எல்லோரையும் ஒரே மாதிரி நினைத்துவிட முடியாது என்பதை இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. அந்த வயதில் காதல் தோல்வி என்பது அப்படித்தான் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. உடல் வலியைப் போன்றே மன வலியும் இருக்கும் என்பதை மூளையில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.

வெளிப்படும் உளவியல் கோளாறு

உலகின் ஆரம்பமே அவள்தான் என்று உணர்வுபூர்வமாக முடிவு செய்வதால் அவள் இல்லாத உலகம் முற்றுப்பெற்றுவிட்டதாக உணர்ந்து அவளையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொள்கிறான். காதல் தோல்வியில் தற்கொலை என்று கேள்விப்பட்ட காலம் போய் காதலியையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டான் என்பது போன்ற செய்திகளை இன்று அதிகம் கேள்விப்படுகிறோம்.

காதலைப் பெற்றோர் எதிர்ப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஒரு முக்கியக் காரணம். தன் மகனோ மகளோ காதலிக்காமல் தப்பித்தால் நல்லது, அப்படியே காதலில் விழுந்தாலும் அந்தப் பையன் நல்லவனாக இருக்க வேண்டுமே என்றுதான் பெற்றோர் நினைக்கிறார்கள்.

“இவர் குடிப்பது தெரிந்தே காதலித்தேன். எல்லோரையும் மீறி மணம் முடித்தேன். இன்று முழுநேர குடிநோயாளிவிட்டார்” என்று என்னிடம் சிகிச்சைக்குத் தன் கணவரை அழைத்துவருகிறார் ஒரு இளம் மனைவி. “ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலிக்க ஆரம்பித்தோம். இப்போது எப்படி விலகுவது என்று தெரியாமல் பரிதவித்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் மற்றொரு இளம்பெண். “என்னிடம் காதலைச் சொன்ன நீ, இதே ஃபேஸ்புக்கில் என்னைவிட அழகாக யாரேனும் வந்தால் அவனை லவ் பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம் என்று கேட்க ஆரம்பித்தார்.

இதோ இன்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் இருந்தும் வெளியே வந்த பிறகும் எனக்கு நிம்மதியில்லை. அவருக்குச் சந்தேகமே ஒரு நோயாக இருக்கிறது. எப்படி இவரைத் திருமணம் செய்வது?” என்று குழம்புகிறார். இதுபோன்ற சம்பவங்கள் உளவியல் கோளாறுகள் உள்ளவரையா காதலித்தோம் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். நமது தேர்வு முடிந்தவரை எல்லா வகையிலும் சரியாக இருக்க வேண்டும் எனபதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.

 

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-29-உயிரைப்-பறிக்குமா-உண்மைக்-காதல்/article9619441.ece

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 30: ஏன் காதலை வெறுக்கிறார்கள் பெற்றோர்?

 

 
 
 
love_3154161f.jpg
 
 
 

பெற்றோர் ஏன் காதலை எதிர்க்கிறார்கள்? காதல் என்பதையே ஒரு பாவச்செயலாகப் பார்க்கும் பெற்றோர்களின் உளவியல் என்ன? காதல் திரைப்படங்கள் பெருவெற்றியைப் பெறுகிற நாட்டில் நம் வீட்டுப் பையனோ, பெண்ணோ காதலித்தால் பெற்றோர் பதறித் துடிப்பது ஏன்? காதலிப்பது அர்த்தமற்றது போலவும், எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்வதை வாழ்க்கையின் தோல்வியாகவும் பெற்றோர் பலர் நினைப்பது ஏன்?

“நாங்கள் இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். அந்தப் பையனை மதம் மாறச் சொல்கிறார் என் அப்பா. அவன் சம்மதித்துவிட இப்போது வேறு காரணங்களைச் சொல்லி மறுக்கிறார். அவனை அவருக்குப் பிடிக்கும். ‘நம்ம மதமா இருந்தா எப்பவோ கல்யாணம் பண்ணிக் கொடுத்திருப்பேனேம்மா’ என்று சில சமயம் புலம்புகிறார். சொந்த பந்தம் அவரைப் புறக்கணித்துவிடுமோ என்று பயப்படுகிறார்” என்று சொல்கிறார் நன்கு படித்து வேலையில் இருக்கும் ஒரு இளம்பெண். மூன்று ஆண்டுகளாகப் பெற்றோரின் சம்மதத்துக்குக் காத்திருக்கிறார்.

எது குடும்ப கவுரவம்?

பொதுவாகக் காதல் திருமணங்கள் வெற்றி பெறுவதில்லை என்பது பல பெற்றோரின் நினைப்பு. காலப் போக்கில் காதல் உணர்வு குறைவது ஏற்பாட்டுத் திருமணங்களிலும் நடக்கும் என்றாலும், காதல் திருமணங்களில் அது மிகைப்படுத்திப் புரிந்துகொள்ளப்படுகிறது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ஒருவித சமூகப் பாதுகாப்பை அளிக்கின்றன. ஏதாவது தவறு என்றால் நான்கு பேரை வைத்து நியாயம் பேசலாம், சமாதானம் செய்யலாம். காதல் திருமணங்களில் அதற்கான வாய்ப்புக் குறைவு என்பது அவர்கள் எண்ணம்.

இவை தவிர நம் சமூகம் திருமணங்களுக்கு அலாதி முக்கியத்துவம் கொடுத்தே வந்திருக்கிறது. திருமணம் என்பது இருவர் சம்பந்தப்பட்டதில்லை. இரு குடும்பத்துக்கிடையே, இரு கிராமங்களுக்கு இடையேயான பிணைப்பு என்று நம்புகிறார்கள். அதன் நினைவுகளும் வீச்சும் ஆண்டாண்டுகளுக்குப் பேசுபொருட்களாக இருக்கின்றன. தங்கள் குடும்ப கவுரவத்துக்குக் கேடு வந்துவிடுமோ என்ற சமூக அச்சமே காதல் திருமணங்களை எதிர்க்கச் சொல்கிறது.

ஆதியிலிருந்தே கூட்டாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் நாம். அதுதான் எப்போதும் நமக்குப் பாதுகாப்பு. எல்லாவித அச்சுறுத்தல்களையும் தாண்டி நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றால் நமக்குக் குடும்பம், சமூகம் என அனைத்தும் தேவை என்று நம்புவது இயல்பே. காதல் என்ற ஒன்றுதான் இந்தக் கட்டமைப்பில் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது என அவர்கள் நம்புகிறார்கள். “என் மகள் தற்கொலை செய்துகொள்வதாக இருந்தாலும் சரி, நான் பார்த்திருக்கிற மாப்பிள்ளையிடமிருந்து தாலி கட்டிக்கொண்டு அப்புறம் சாகச் சொல்லுங்க” என்று என்னிடம் சொன்னார் ஒரு பெண்ணின் தந்தை. “அவள் காதலனை மறக்கச் செய்ய ஏதாவது மருந்து இருக்கா டாக்டர்?” என்று என்னிடம் கேட்ட அப்பாக்கள் நிறையப் பேர்.

இவற்றைத் தாண்டி பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதிய மனப்பான்மை போன்றவையும் பெற்றோரின் அளவுகோல்களாக இருக்கின்றன. அவ்வளவு ஏன்… “காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டால் வரதட்சிணை கிடைக்காதே. அதுக்கா இவ்வளவு செலவுசெய்து படிக்க வெச்சோம்?” என்று கேட்பவர்களும் உண்டு. தன் பையனுக்கு வரும் சீர்செனத்தி, தன் சமூக கவுரவத்திற்கான அடையாளம் என்று நினைக்கும் பெற்றோர்கள் நிறைய பேர்.

தன் பிள்ளைக்குத் திருமண வயது எட்டியும் இன்னும் நல்ல வரன் அமையவில்லையே என்று ஏங்கும் பெற்றோர் எத்தனை பேர் தெரியுமா? முப்பது ஜாதகம் பார்த்திருப்பார்கள். ஏழெட்டு முறை பெண் பார்க்கும் வைபவமும் நடந்திருக்கும். இன்னும் எதுவும் பொருந்தி வரவில்லையே என்று கடும் மன உளைச்சலில் இருக்கும் பெற்றோரும் இருக்கிறார்கள். ஆனால் தங்கள் பிள்ளைகளே யாரையாவது தேர்ந்தெடுத்து அதற்குக் காதல் என்று பெயர் சூட்டும்போது மட்டும் ஏன் அப்படித் துள்ளிக் குதிக்கிறார்கள்? சொல்லப்போனால் காதல் திருமணங்கள் அதிகரித்தால் தானாகவே வரதட்சிணைக் கொடுமை போன்றவையெல்லாம் குறைந்து விடுமல்லவா? யோசித்துப் பாருங்கள் இளைஞர்களே. அந்த இடத்தில்தான் பெற்றோரின் எண்ணங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களது அத்தனை அச்சங்களையும் தவறான எண்ணங்களையும் போக்க முயல்வதே உண்மையாகக் காதலிப்பவர்களின் முதல் வேலை.

மனதை மாற்றும் மந்திரம்

இதை எப்படிச் செய்வது? முதலில் உங்கள் காதலை நீங்கள் முழுவதுமாக நம்ப வேண்டும். இன்னாருடன்தான் என் வாழ்க்கை என்பதில் உங்களுக்கு இருக்கும் தெளிவே கால் பங்கு வெற்றிக்குச் சமம். அடுத்து நேரம் பார்த்துச் சொல்ல வேண்டும். உங்களவரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதற்கான காரணங்களை மிக மென்மையாக எடுத்துரைக்க வேண்டும். தன் கட்சிக்காரருக்காக வாதாடும் ஒரு தேர்ந்த வழக்கறிஞரின் நேர்த்தி அதில் இருக்க வேண்டும். அவர்கள் மறுத்துச் சொல்லும் விஷயங்களைப் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.

முடிந்தவரை உங்கள் குடும்பத்தில் முக்கியமான யாருடைய ஆதரவாவது உங்களுக்குக் கட்டாயம் வேண்டும். பாட்டி, தாத்தா போன்ற சீனியர்கள் தொடங்கி அப்பாவுக்குச் செல்லமான கடைசித் தங்கைவரை யார் வேண்டுமானாலும் உங்களுக்கு உதவலாம். பேசிய உடனேயே உங்களவரை உங்கள் பெற்றோர் சந்திக்க வேண்டும். உங்களை அவரது பெற்றோர் சந்திக்க வேண்டும். எப்படிச் செய்வீர்களோ அது உங்கள் பாடு. ஆனால் பெரும்பாலான மாற்றுக் கருத்துகள் எல்லாம் ஒரு நபரை நேரில் சந்திக்கும்போது மாறிவிடும். அவரது நேர்மறைப் பக்கங்களையும், நீங்க ‘இதற்காகத்தான் அவனை விரும்புகிறேன்’ என்று சிலாகித்த நல்ல விஷயங்களைப் பெற்றோரும் உணர்வார்கள். தம் பிள்ளை மீதும் அவரின் மனமுதிர்ச்சி மீதும் ஓரளவேனும் நம்பிக்கை வைத்திருந்தால் இப்படியொரு சந்திப்புக்கு நிச்சயம் உங்கள் பெற்றோர் தடை சொல்ல மாட்டார்கள்.

படிப்பு, நல்ல வேலை, நல்ல நட்பு வட்டம், சுயமாகச் செய்த சாதனைகள் என நீங்கள் கடந்து வந்த பாதை ஓரளவு நன்றாக இருந்தால், உங்கள் காதல் பாதிக்கடல் தாண்டியதாகவே எடுத்துக்கொள்ளலாம். இதையெல்லாம் ஜெயித்த என் மகள் வாழ்க்கைத் துணைத் தேர்விலும் சரியாகத்தான் இருப்பாள் என்றுதான் நினைக்கத் தோன்றும். வெட்டியாக ஊரைச் சுற்றிக்கொண்டு கைச்செலவுக்கே வீட்டில் உள்ளவர்களை நம்பிக்கொண்டு இருக்கும் போது “இவளை லவ் பண்றேன்.. கல்யாணம் பண்ணி வையுங்க” என்றால் எப்படி இருக்கும் பெற்றோருக்கு? ஓரளவு கல்வித் தகுதி, நம் செலவுகளைப் பார்த்துக்கொள்ளும் அளவிலாவது சிறு வருமானம் இவைகூட இல்லையென்றால் தயவுசெய்து காதல் திருமண எண்ணத்தைத் தள்ளிப்போடுங்கள்.

உங்களவரைக் காத்திருக்கச் சொல்லுங்கள். நீண்ட வாழ்க்கைப் பயணத்துக்கே தயாராக இருக்கும் உங்கள் காதலி சில ஆண்டுகள் கண்டிப்பாகக் காத்திருப்பார், காத்திருக்கத்தான் வேண்டும். அதுதானே காதல்!

 

எல்லாமே பேசலாம்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.

(பயணிப்போம்)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-30-ஏன்-காதலை-வெறுக்கிறார்கள்-பெற்றோர்/article9638084.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காதல் வழிச் சாலை 31: காதல் என்னும் முடிவில்லாப் பெருங்கடல்

 

 
 
 
china_wall_3156224f.jpg
 
 
 

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரைச் சில ஆண்டுகளுக்கு முன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் சுவர். சுவரின் பிரம்மாண்டத்தில் கவரப்பட்டு, அதைப் பற்றிய தகவல்களை இணையத்தில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் ஒரு காதல் கதை கண்ணில் பட்டது. “இவ்வளவு நீளச் சுவரை யாராவது நடந்தே கடக்க முடியுமா?” என்று நான் யோசிக்க, காதலர்கள் இருவர் அதை ‘நடத்தி’க்காட்டிவிட்டனர். காதலி ஆப்ராமோவிச் (Abramovic) ஒரு முனையில் இருந்து நடக்க, காதலன் உலாய் (Ulay) இன்னொரு முனையில்… 90 நாட்கள் நடைப்பயணம். தனியாக நடந்த இருவரும் சீனப் பெருஞ்சுவரின் நடுவில் சந்தித்து ஆரத் தழுவிக்கொண்டனர். நாமிருவரும் இனி பிரியலாம் என்று சொல்லிவிட்டு அதை உலகத்துக்கும் அறிவித்துவிட்டு ஆளுக்கொரு திசையில் சென்றனர். என்ன குழப்பமாக இருக்கிறதா?

பிரிவிலும் காதல் உண்டு

இருவரும் நடனக் கலைஞர்கள். தீவிரக் காதலில் இருந்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து நடத்திய நிகழ்த்துக்கலை நடனங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவர்களின் காதலும் ஒரு கட்டத்தில் கசந்தது. பிரிந்துவிடலாம் என்று முடிவெடுத்த அவர்கள், கடைசியாக ஒரு மெகா நிகழ்வுடன் தங்கள் காதலுக்கு விடைகொடுக்க முடிவுசெய்தனர். அதுதான் சீனப் பெருஞ்சுவரில் நடந்து சென்று சந்தித்துக்கொள்வது என்ற முடிவு.

“காதலை ஆரம்பிக்கும்போது பகீரத பிரயத்தனம் செய்யும் நாம், அதை முடித்துக்கொள்ளும்போது ரொம்ப சாதாரணமாகப் பிரிந்து விடுகிறோம். நாங்கள் அப்படி இருக்க விரும்பவில்லை” என்று தன் தோழியிடம் சொல்லியிருக்கிறார் ஆப்ராமோவிச். ‘The Lovers: The Great Wall Walk’ என்று இந்தச் சம்பவம் குறிப்பிடப்படுகிறது. காதலைப் பற்றிய சுவாரசியங்கள்தான் எத்தனை எத்தனை!

கவித்துவமாக இருந்தாலும் இந்தச் சம்பவம் நமக்குச் சில உண்மைகளைப் புரியவைக்கும். பிரிவதிலும் ஒரு நாகரிகத்தைக் கடைப்பிடித்தனர் இந்த வித்தியாசக் காதலர்கள்.

காதல் ஒரு காற்றைப் போல, அதை உணரத்தான் முடியும், பார்க்க முடியாது என்பார்கள். அது முகிழ்வதென்னவோ குறுகிய காலத்தில்தான். ஆனால் பல படிகளைத் தாண்டித்தான் காதல் ஆழம் அடைகிறது. முழுமை பெறுகிறது. ஆரம்பத்தில் வரும் உணர்வு மட்டுமே காதலாகாது. வாழ்க்கை அளிக்கும் பல சோதனைகளின்போது காதலின் பிடியும் தளரக்கூடும். ஹார்மோன்களின் விளையாட்டுதான் என்றாலும், அதையும் புரிந்துகொள்ள முயன்றால் பல சிக்கல்களிலிருந்து நாமே விடுபட முடியும்.

உணர்வுபூர்வமாகக் காதலிக்கும்போது நிலைமை வேறு. கொஞ்சக் காலம் கழித்து உடல், மன ஆரவாரங்கள் அடங்கும்போது நாம் உணர்வது வேறு. அதையும் நாமே புரிந்துகொண்டால் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கலாம்.

இரட்டையர்கள்

தனக்கான துணையைத் தானே தேர்ந்தெடுத்து, ஒன்றுகூடி, சந்ததியை விருத்தி செய்வதற்கான முதல் படி ஆண்-பெண்ணுக்கு இடையே வரும் ரொமாண்டிக் காதல். காமம் இல்லாமல் காதல் இல்லை. காதல் இல்லாமல் காமமும் இல்லை. இவை இரண்டும் வேறு வேறு என்பவர்கள்கூட, “இவை இரண்டும் இணைந்திருத்தல் நலம்; அதுவே இயற்கை” என்றுதான் சொல்லி முடிக்கின்றனர். காதலின்றி வாழ்வது கடினம். நம்மை இன்னொருவரிடத்தில் தேடுவதே காதல். நம்மை நாமே புரிந்துகொள்ளும் ஒரு ஆத்ம விசாரணையே காதல். அது நம்மைப் பண்படுத்தும்; பக்குவப்படுத்தும். அளவற்ற நேர்மறை மாற்றங்களை நம்முள் கொண்டுவருவது காதல். இன்னொன்றோடு சேர்ந்தால்தான் முழுமையடையும் என்பதற்காகவே இரண்டு பேரைப் படைத்தது இயற்கை.

காதல் ஒருவித தவம்தான். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் பலனையும் இன்பத்தையும் எதிர்பார்ப்பது மனித இயல்பு. வெறுமனே காதலியுங்கள், குழந்தை பெறுங்கள் என்று சொல்லிவிட்டால் நமக்குப் போரடித்துவிடும். அதனால் காமம் என்ற மின்சாரத்தைப் பாய்ச்சி, காதலுடன் அதைக் குழைத்துக் கொடுத்து நம்மைப் போதைகொண்டு இயங்கச் சொல்லியிருக்கலாம் இயற்கை. ஆனால், தற்போது காமத்துக்கான நாகரிக நுழைவுவாயிலாக மட்டுமே காதல் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. காதல் சற்றுப் பாதை மாற்றி இயக்கப்படுகிறது. அதனால் காதல் அதன் மாண்பை, மரியாதையை, சக்தியை இழக்க நேரிடுகிறது. அதைத் தவறாகப் பயன்படுத்தும்போது அது தவறான பலன்களையே தருகிறது. எனவே, இளைஞர்கள் தங்கள் காதல் பாதையைச் சீரமைத்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.

இதற்குப் பெயர்தான் காதலா?

விளையாட்டாகக் காதலிக்க ஆரம்பிக்கலாம். பொய் சொல்லிக் காதலிக்கலாம். உடல் தேவைக்கான கருவியாகக் காதலைப் பயன்படுத்தி, பின்னர் பிரிந்துவிடும் முடிவில்கூடச் சிலர் காதலிக்கலாம். பணத்துக்காக, தன் இணையர் செய்யும் செலவுக்காக, வறட்டு கவுரவத்துக்காக, போலியான சமூக அங்கீகாரத்துக்காகக்கூடக் காதலிக்கலாம். ஆனால் எல்லாமே காதல் என்ற பெயருடன்தானே உலா வருகின்றன? காதலில் வென்றால் சரி. பிரிந்தால்? அவரவர் மனநிலைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேறுபடுகிறது. தற்கொலை செய்பவர்கள் ஒரு புறம். ஆளையே கொலை செய்பவர்கள் ஒரு புறம். ‘அடப் போய்யா’ என்று சொல்லிவிட்டு, அடுத்த வாரத்திலேயே அடுத்த ஆளுக்கு மாறுபவர்கள் இன்னொருபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள். அது அவரவர் விருப்பம்.

காதலைக் காதலாகச் செய்தால், அதன் வழியில் அது நம்மைக் கொண்டு செல்லும். அது வெற்றியின் வழியாகத்தான் நிச்சயம் இருக்கும். வார்த்தையில் மட்டும் காதலை வைத்துக்கொண்டு, உடல் வேட்கைக்கான தீர்வாக மட்டுமே காதலைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும்? இப்போது சமூகத்தில் நாம் பார்க்கும் எல்லாமும் நடக்கும். காதல் தோல்வி, கவுரவக் கொலைகள், கூடா நட்பு, பெண்கள் மீதான பாலியல் வன்முறை, படிப்பும் தொழிலும் பாதிக்கப்படுதல், மனநோய்கள் என்று எதிர்மறையான செயல்களே நடக்கும்.

முடிவில்லா பயணம்

‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்றுதான் மகாகவியும் சொல்கிறார். எப்படிச் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும்போது, “காதலிக்கக் கற்றுக்கொடுப்பதா? அசட்டுத்தனமாக இருக்கிறதே,” என்று கோபம் வரலாம். ஒரு கைபேசி வாங்கினால்கூடச் செயல்முறை விளக்கக் கையேடு இருக்கிறது. என்னதான் பரிச்சயப்பட்டதாக இருந்தாலும், சில சந்தேகங்களுக்கு நமக்கு அந்தக் கையேடு தேவைப்படுகிறது. காதலிக்கும் முடிவை வேகமாக எடுத்தாலும் கொஞ்சம் விவேகமாக அதைச் செயல்படுத்த வேண்டும். காலங்கள் மாற மாற காதலுக்கான வழிமுறைகள் மாறுகின்றன. ஆனால், காதலுக்கான இலக்கணம் மாறுவதில்லை. அப்படிக் காதலின் இலக்கணம் தவறாக மாற்றி எழுதப்படும்போதுதான், வாழ்க்கையென்னும் இலக்கியமே தவறாகிப் போய்விடுகிறது.

கல்வியைப் போலக் காதலுக்கும் கரையில்லை. அனைத்தையும் புரிந்துகொண்டுதான் காதலிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதற்குள் நம் வாழ்நாளில் பாதி கடந்து போய்விடும். இயல்பாக, இயற்கையாக முகிழ்ந்த காதலை, பிறந்த குழந்தைக்குச் சமமாகப் பாவிக்க வேண்டும். அதைப் பாராட்டி, சீராட்டித் தொட்டிலில் தாலாட்டி வளர்த்துப் பெரியவராக்குவதைப் போலக் காதலுடன் பயணப்படுங்கள். அதன் அத்தனை வளர்ச்சியையும் அணுஅணுவாக அனுபவியுங்கள்.

குழந்தை அழும்; அதற்கு உடல்நிலை சீர்கெடும்; சில நேரம் எரிச்சலூட்டும்; படிக்காதபோது கவலையும், பட்டம் வாங்கி வரும்போது பெருமையும் தரும். குழந்தையால் சுகப்படும்போது தூக்கி கொஞ்சும் நாம், சோகம் தரும்போது அதை வேண்டாம் என்று புறந்தள்ளி விடுவதில்லையே? உங்கள் காதல் பயணமும் இப்படித்தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடல் அலைகளும் ஓயப் போவதில்லை. காதலுக்கே உரிய சிரமங்களும் ஓயப் போவதில்லை. ஆனால், பற்றிய கையை நழுவ விடாமல் நீந்திக் கடக்க முயற்சிப்பவர்களே, உண்மையான காதலர்கள்.

எல்லாச் சாலைகளும் ஓரிடத்தில் முடியத்தான் போகின்றன. காதல் வழிச்சாலை இங்கே முடிகிறது. உடன் பயணித்த அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.

(நிறைவடைந்தது)

http://tamil.thehindu.com/society/lifestyle/காதல்-வழிச்-சாலை-31-காதல்-என்னும்-முடிவில்லாப்-பெருங்கடல்/article9652405.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.