Jump to content

சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது

என் செல்வராஜ்

 

சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது

என் செல்வராஜ்

 

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த கட்டுரைகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த சில தொகுப்புக்களையும் சேர்த்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். சிறந்த சிறுகதையாக இங்கு நான் குறிப்பிடும் கதைகள் அவை இடம் பெற்ற தொகுப்புக்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகளில் பரிந்துரை பெற்ற கதைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறைந்தது நான்கு பரிந்துரைகள் பெற்ற கதைகள் 150 சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்பு மற்றும் பரிந்துரைகளும் சேர்க்கப்பட்டு

பட்டியல் தயார் செய்து இருக்கிறேன். தொகுப்பு மற்றும் பரிந்துரைகளை ஒன்றாகபரிந்துரை என்றே எடுத்துக்கொண்டு இந்த ஆய்வை செய்து இருக்கிறேன். இந்த ஆய்வு 5550 கதைகளின் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. ஒரே எண்ணிக்கையில் பரிந்துரை பெற்ற கதைகள் அகர வரிசையில் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. இனி ஆய்வின் முடிவை காணலாம்.

 

  1. தனுமை – வண்ணதாசன் – 16 பரிந்துரைகள்
  2. விடியுமா? – கு ப ராஜகோபாலன் – 16 பரிந்துரைகள்
  3. கடவுளும் கந்தசாமி பிள்ளையும் – புதுமைப்பித்தன்   – 15 பரிந்துரைகள்
  4. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை – 14 பரிந்துரைகள்
  5. அழியாச்சுடர் – மௌனி   – 14
  6. எஸ்தர் – வண்ண நிலவன்     -14
  7. புலிக்கலைஞன் – அசோகமித்திரன்                 -14
  8. மருமகள் வாக்கு – கிருஷ்ணன் நம்பி -14
  9. நகரம் – சுஜாதா                       -14
  10. சிலிர்ப்பு – தி ஜானகிராமன் -13
  11. நட்சத்திரக் குழந்தைகள் – பி எஸ் ராமையா       – 12
  12. ராஜா வந்திருக்கிறார் – கு அழகிரிசாமி -12
  13. அக்னிப்பிரவேசம் – ஜெயகாந்தன் -11
  14. குளத்தங்கரை அரசமரம் – வ வே சு ஐயர் – 11
  15. நாயனம் – ஆ மாதவன் -10
  16. சாப விமோசனம் – புதுமைப்பித்தன் – 10
  17. வெயிலோடு போய் – ச தமிழ் செல்வன் – 10
  18. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன் – 9
  19. கன்னிமை – கி ராஜநாராயணன் – 9
  20. கோயில் காளையும் உழவு மாடும் – சுந்தர ராமசாமி – 9
  21. சாசனம் – கந்தர்வன்   – 9
  22. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா கந்தசாமி – 9
  23. தோணி – வ அ இராச ரத்தினம் – 9
  24. பல்லக்கு தூக்கிகள் – சுந்தர ராமசாமி  -9
  25. புற்றில் உறையும் பாம்புகள் – இராஜேந்திர சோழன் -9
  26. மூங்கில் குருத்து – திலீப் குமார் -9
  27. ரத்னாபாயின் ஆங்கிலம் – சுந்தர ராமசாமி -9
  28. விகாசம் – சுந்தர ராமசாமி -9
  29. ஆற்றாமை – கு ப ராஜகோபாலன் -8
  30. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் – வேல ராமமூர்த்தி -8
  31. ஒரு இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன் -8
  32. கடிதம் –   திலீப் குமார் -8
  33. கதவு – கி ராஜநாராயனன் -8
  34. பாயசம் – தி ஜானகிராமன் -8
  35. பிரசாதம் – சுந்தர ராமசாமி -8
  36. மதினிமார்களின் கதை – கோணங்கி   -8
  37. ஒரு ஜெருசலேம் – பா செயப்பிரகாசம்    -7
  38. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் – ஆதவன் -7
  39. செல்லம்மாள் – புதுமைப்பித்தன் -7
  40. திசைகளின் நடுவே – ஜெயமோகன் -7
  41. நாற்காலி – கி ராஜநாராயணன்      -7
  42. நிலை – வண்ணதாசன்      -7
  43. பத்ம வியூகம் – ஜெயமோகன்    -7
  44. பாற்கடல் – லா ச ராமாமிர்தம்    -7
  45. பிரபஞ்ச கானம் – மௌனி  -7
  46. பிரயாணம் -அசோகமித்திரன்   -7
  47. மீன் – பிரபஞ்சன்      -7
  48. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை – அம்பை -7
  49. வெள்ளிப்பாதரசம் – இலங்கையர்கோன் -7
  50. அம்பலக்காரர் வீடு – பா செயப்பிரகாசம் -6
  51. அன்பளிப்பு – கு அழகிரிசாமி   -6
  52. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மனியன் – 6
  53. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி  -6
  54. கனகாம்பரம் – கு ப ராஜகோபாலன்                     -6
  55. கயிற்றரவு – புதுமைப்பித்தன்   -6
  56. காஞ்சனை – புதுமைப்பித்தன் –                     – 6
  57. காற்று – கு அழகிரிசாமி   -6
  58. கேதாரியின் தாயார் – கல்கி   -6
  59. சரஸாவின் பொம்மை – சி சு செல்லப்பா   -6
  60. சாமியார் ஜூவுக்கு போகிறார் – சம்பத்   -6
  61. சுயரூபம் – கு அழகிரிசாமி   -6
  62. திரை – கு ப ராஜகோபாலன்   -6
  63. தேர் – எஸ் பொன்னுதுரை     -6
  64. நசுக்கம் – சோ தர்மன்   -6
  65. பற்றி எரிந்த தென்னை மரம் – தஞ்சை ப்ரகாஷ் -6
  66. பாற்கஞ்சி – சி வைத்திலிங்கம் -6
  67. பிரும்மம் – பிரபஞ்சன்   -6
  68. பைத்தியக்கார பிள்ளை – எம் வி வெங்கட் ராம்        -6
  69. அரசனின் வருகை – உமா வரதராஜன்  -5
  70. ஆண்களின் படித்துறை – ஜே பி சாணக்யா  -5
  71. இழப்பு – ந முத்துசாமி   -5
  72. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்    -5
  73. ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன்  -5
  74. ஒரு பிடி சோறு – கனக செந்திநாதன்   -5
  75. கடிகாரம் – நீல பத்மநாபன்                  -5
  76. கரையும் உருவங்கள் – வண்ணநிலவன்   -5
  77. கனவுக்கதை – சார்வாகன்     -5
  78. கற்பு –   வரதர்     -5
  79. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன்   -5
  80. சன்னல் – சுந்தர ராமசாமி   -5
  81. சாவித்திரி – க நா சுப்ரமணியம்    -5
  82. சாவில் பிறந்த சிருஷ்டி – மௌனி  -5
  83. ஞானப்பால் – ந பிச்சமூர்த்தி  -5
  84. திரிவேணி – கு அழகிரிசாமி       -5
  85. தேடல் – வாஸந்தி   -5
  86. நீர்மை – ந முத்துசாமி   -5
  87. நூருன்னிசா – கு ப ராஜகோபாலன்   -5
  88. பள்ளம் – சுந்தர ராமசாமி                  -5
  89. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா   -5
  90. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி                       -5
  91. மேபல் – தஞ்சை ப்ரகாஷ்   -5
  92. யுகசந்தி – ஜெயகாந்தன்                             -5
  93. விஜயதசமி – ந பிச்சமூர்த்தி -5
  94. ஜன்னல் – சுஜாதா    -5
  95. அண்ணாச்சி     – பாமா                            -4
  96. அந்நியர்கள் – ஆர் சூடாமணி – 4
  97. அப்பாவின் பள்ளிக்கூடம் – ந முத்துசாமி -4
  98. அரும்பு – மேலாண்மை பொன்னுச்சாமி -4
  99. ஆண்மை – ஜி நாகராஜன் -4
  100. ஆனைத்தீ – ரகுநாதன் -4
  101. இருட்டில் நின்ற … சுப்ரமண்ய ராஜு      -4
  102. உயிர்கள் – சா கந்தசாமி -4
  103. எதிர்பார்ப்புகள் – இராஜேந்திர சோழன் -4
  104. ஏழு முனிக்கும் இளைய முனி – சி எம் முத்து -4
  105. கரிசலின் இருள்கள் – ப செயப்பிரகாசம்    -4
  106. காணி நிலம் வேண்டும் – கோபி கிருஷ்ணன் -4
  107. காசு மரம் – அகிலன்   -4
  108. காடன் கண்டது – பிரமிள் -4
  109. காட்டில் ஒரு மான் – அம்பை -4
  110. கோணல் வடிவங்கள் – இராஜேந்திர சோழன் -4
  111. கோமதி –   கி ராஜநாரயணன் -4
  112. சட்டை – கிருஷ்ணன் நம்பி  -4
  113. சித்தி – மா அரங்கநாதன் -4
  114. சிறகுகள் முறியும் – அம்பை -4
  115. சிறிது வெளிச்சம் – கு ப ராஜகோபாலன் -4
  116. செவ்வாழை – அண்ணாதுரை -4
  117. சேதாரம் – தனுஷ்கோடி ராமசாமி -4
  118. தண்ணீர்த் தாகம் – ஆனந்தன் -4
  119. தத்துப்பிள்ளை – எம் வி வெங்கட் ராம் -4
  120. துறவு – சம்பந்தர் -4
  121. தொலைவு – இந்திரா பார்த்தசாரதி -4
  122. நதி – ஜெயமோகன் –                                 -4
  123. நான் இருக்கிறேன் – ஜெயகாந்தன் -4
  124. நிலவிலே பேசுவோம் – என் கே ரகுநாதன் -4
  125. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன் -4
  126. பலாப்பழம் – வண்ணநிலவன்                      -4
  127. பறிமுதல் – ஆ மாதவன் -4
  128. பதினெட்டாம் பெருக்கு – ந பிச்சமூர்த்தி                     -4
  129. புனர் – அம்பை              -4
  130. புயல் – கோபி கிருஷ்ணன் -4
  131. புவனாவும் வியாழக்கிரகமும் – ஆர் சூடாமணி -4
  132. பொன்னகரம் – புதுமைப்பித்தன் -4
  133. மரி என்கிற ஆட்டுக்குட்டி -பிரபஞ்சன் -4
  134. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார் இந்திரஜித் -4
  135. மிருகம் – வண்னநிலவன்      -4
  136. மீன்கள் – தெளிவத்தை ஜோசப்      -4
  137. முள் – பாவண்ணன்       -4
  138. முள்முடி – தி ஜானகிராமன்     -4
  139. ரீதி – பூமணி       -4
  140. வண்டிற்சவாரி – அ செ முருகானந்தம்       -4
  141. வாழ்வும் வசந்தமும் – சுந்தர ராமசாமி       -4
  142. விதை நெல் – ந பிச்சமூர்த்தி     -4
  143. விரித்த கூந்தல் – சுரேஷ்குமார் இந்திரஜித் -4
  144. வெறுப்பை தந்த வினாடி – வத்ஸலா -4
  145. வேட்டை – யூமா வாசுகி -4
  146. வேனல் தெரு – எஸ் ராமகிருஷ்ணன் -4
  147. வைராக்கியம் – சிவசங்கரி -4
  148. ஜனனி – லா ச ராமாமிர்தம் -4
  149. ஜின்னின் மணம் – நீல பத்மநாபன் -4
  150. ஹிரண்ய வதம் – சா கந்தசாமி -4

 

இந்த ஆய்வுக்கு உதவிய தொகுப்புகள், மற்றும் நூல்கள் பட்டியல்

 

  1. 100 சிறந்த சிறுகதைகள் – எஸ் ராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக் பேலஸ்
  2. இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு – வீ அரசு – அடையாளம்
  3. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் – ஜெயமோகன் – கிழக்கு பதிப்பகம்
  4. தமிழ் சிறுகதை களஞ்சியம்தொகுதி 1 – அ சிதம்பரநாத செட்டியார் – சாகித்ய அக்காடமி
  5. தமிழ் சிறுகதைகள் தொகுதி 2 – அகிலன் – சாகித்ய அக்காடமி
  6. நவீன தமிழ் சிறுகதைகள் – சா கந்தசாமி – சாகித்ய அக்காடமி
  7. பெண் மைய சிறுகதைகள் – இரா பிரேமா – சாகித்ய அக்காடமி
  8. எனக்கு பிடித்த கதைகள் – பாவண்ணன் – திண்ணை இணைய இதழ்
  9. குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை – கீரனூர் ஜாகிர் ராஜா
  10. ஐம்பதாண்டு தமிழ் சிறுகதைகள் 1, 2 – சா கந்தசாமி – கவிதா
  11. புதிய தமிழ் சிறுகதைகள் – அசோகமித்திரன் – நேஷனல் புக் ட்ரஸ்ட்
  12. சமீபத்திய தமிழ் சிறுகதைகள் – வல்லிக்கண்ணன், ஆ சிவசுப்ரமணியம் -நேஷனல் புக் ட்ரஸ்ட்
  13. நெல்லை சிறுகதைகள் – சு சண்முகசுந்தரம் – காவ்யா
  14. கொங்கு சிறுகதைகள் – பெருமாள் முருகன் – காவ்யா
  15. தஞ்சை சிறுகதைகள் – சோலை சுந்தர பெருமாள் – காவ்யா
  16. சென்னை சிறுகதைகள் – காவ்யா சண்முக சுந்தரம் – காவ்யா
  17. தில்லி சிறுகதைகள் – சீனுவாசன் – காவ்யா
  18. பெங்களூர் சிறுகதைகள் – காவ்யா சண்முக சுந்தரம் – காவ்யா
  19. மும்பை சிறுகதைகள் – அன்பாதவன், மதியழகன் சுப்பையா- ராஜம் வெளியீடு
  20. கதைக்கோவை 1 முதல் கதைக்கோவை -4 வரை – அல்லையன்ஸ்
  21. ஒரு நந்தவனத் தென்றல் – இ எஸ் தெய்வசிகாமணி- விஜயா பதிப்பகம்
  22. தலை வாழை – இ எஸ் தெய்வசிகாமணி – அன்னம் பதிப்பகம்
  23. ஆகாயப்பந்தல் – எஸ் சங்கரநாராயணன் – உதயகண்ணன் வெளியீடு
  24. பரிவாரம் – எஸ் சங்கர நாராயணன் – உதய்கண்ணன் வெளியீடு
  25. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் -1 முதல் 3 வரை – விட்டல் ராவ் – கலைஞன் பதிப்பகம்
  26. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் -4 முதல் 6 வரை – விட்டல் ராவ், அழகிய சிங்கர் -கலைஞன் பதிப்பகம்
  27. கதை அரங்கம் -மணிக்கதைகள் 1 முதல் 6 தொகுப்புகள் – மீனாட்சி புத்தக நிலையம்
  28. நெஞ்சில் நிற்பவை 1, 2   – சிவசங்கரி – வானதி பதிப்பகம்
  29. கரிசல் கதைகள் – கி ராஜநாராயணன் – அன்னம் பதிப்பகம்
  30. கரிசல் கருதுகள் – உதய சங்கர், லட்சுமணபெருமாள்- அகரம் பதிப்பகம்
  31. மீதமிருக்கும் சொற்கள் – அ வெண்ணிலா – அகநி பதிப்பகம்
  32. தமிழ் சிறுகதைக் களஞ்சியம் – தமிழ்மகன் – விகடன்
  33. கதா விலாசம் – எஸ் ராமகிருஷ்ணன் – விகடன்
  34. கணையாழியின் கடைசி பக்கங்கள் – சுஜாதா – உயிர்மை
  35. காலத்தை வென்ற கதைகள் – குங்குமம் தோழி வலைத்தளம்
  36. பெண்ணியக் கதைகள் – இரா பிரேமா – காவ்யா
  37. தலித் சிறுகதைகள் – விழி பா இதயவேந்தன் – காவ்யா
  38. தலித் சிறுகதை தொகுப்பு – ப சிவகாமி – சாகித்ய அக்காடமி
  39. சிறுகதை மஞ்சரி – மீ ப சோமு
  40. சில கதைகளும் நாவல்களும் – வெங்கட் சாமிநாதன்
  41. க நா சுப்ரமணியம் கட்டுரைகள் – தொகுப்பு காவ்யா சண்முக சுந்தரம் – காவ்யா
  42. 20 ஆம் நூற்றாண்டு புதுவை கதைகள் 1, 2 – பிரபஞ்சன், பாரதி வசந்தன் – கவிதா
  43. மதுரை சிறுகதைகள் – ஆ பூமிச்செல்வம் – அன்னம் பதிப்பகம்
  44. யானைச்சவாரி – எஸ் சங்கர நாராயணன் – இருவாட்சி வெளியீடு
  45. கோணல்கள் – சா கந்தசாமி – கவிதா
  46. தஞ்சை கதைக் களஞ்சியம் – சோலை சுந்தர பெருமாள் -சிவசக்தி பதிப்பகம்
  47. சிறந்த தமிழ் சிறுகதைகள் – விட்டல் ராவ் – கலைஞன் பதிப்பகம்
  48. 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் சிறுகதையாசிரியர்கள் 1, 2 – சா கந்தசாமி – கவிதா
  49. அன்று தொகுதி 1, 2 – மாலன் – ஓரியண்ட் லாங்க்மென்
  50. அன்புடன் – மாலன் – இந்தியா டுடே
  51. ஒரு தலைமுறையின் 11 சிறுகதைகள் – மாலன்,அக்ரீஷ் – வாசகன் இதழ்
  52. வானவில் கூட்டம் – உதயகண்ணன் – இருவாட்சி பதிப்பகம்
  53. வேர்மூலம் – பொதியவெற்பன் – ருத்ரா பதிப்பகம்
  54. கணையாழி கதைகள் – அசோகமித்திரன் – பூரம் பதிப்பகம்
  55. மழை சார்ந்த வீடு – உத்தம சோழன் – சத்யா பதிப்பகம்
  56. சலாம் இசுலாம் – களந்தை பீர் முகம்மது – உதயகண்ணன் வெளியீடு
  57. மலர்ச்சரங்கள், உயிர்ப்பு, சுடர்மணிகள் – சேதுராமன் – பாவை பப்ளிகேஷன்ஸ்
  58. ஜுகல் பந்தி – எஸ் சங்கர நாராயணன் – வடக்கு வாசல் வெளியீடு
  59. அமிர்தம் – எஸ் சங்கர நாராயணன், சு வேணுகோபால் – நிவேதிதா புத்தக பூங்கா
  60. காஃபிர்களின் கதைகள் – கீரனூர் ஜாகிர்ராஜா – எதிர் வெளியீடு
  61. அழியாத கோலங்கள்- கீரனூர் ஜாகிர்ராஜா – ஆழி பதிப்பகம்
  62. 21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் – கீரனூர் ஜாகிர்ராஜா – ஆழி பதிப்பகம்
  63. இருள் விலகும் கதைகள் – விஜய மகேந்திரன் – தோழமை வெளியீடு
  64. மெல்ல விலகும் பனித்திரை – லிவிங்க் ஸ்மைல் வித்யா – பாரதி புத்தகாலயம்
  65. பாதரஸ ஓநாய்களின் தனிமை – ஆ பூமிச்செல்வம் – அன்னம் பதிப்பகம்
  66. ஈழத்து சிறுகதைகள் – சிற்பி – பாரி நிலையம்
  67. ஈழத்து முற்போக்கு சிறுகதைகள் – நீர்வை பொன்னையன் – பாலசிங்கம் பதிப்பகம்
  68. முற்போக்கு கால கட்டத்து சிறுகதைகள் – செங்கை ஆழியான் – பூபால சிங்கம் பதிப்ப்கம்
  69. ஈழத்து முன்னோடி சிறுகதைகள் – செங்கை ஆழியான் – பூபாலசிங்கம் பதிப்பகம்
  70. ஈழத்து சிறுகதைகள் சிறப்பு மலர் – தமிழர் தகவல் பத்திரிக்கை
  71. மலேசிய தமிழ் உலக சிறுகதைகள் – மாத்தளை சோமு
  72. வேரும் வாழ்வும் -1, 2, 3   – சை பீர்முகம்மது – மித்ர வெளியீடு
  73. அயலகத் தமிழ் இலக்கியம் – சா கந்தசாமி – சாகித்ய அக்காடமி
  74. கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் -மாலன் – சாகித்ய அக்காடமி
  75. ஈழத்து இலக்கிய மலர் -தீபம் இதழ் – 1969
  76. ஈழத் தமிழ் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்
  77. பனியும் பனையும் – இந்திரா பார்த்தசாரதி, எஸ் பொ
  78. தமிழ்நேசன் பவுன் பரிசு பெற்ற கதைகள் – கணையாழி டிசம்பர் 2015
  79. கலைகின்ற கருமேகங்கள்- பாரதிதாசன் நூற்றாண்டு போட்டி பரிசு கதைகள்மலேசியா, 1993
  80. 80.வெள்ளிப்பாதரசம் – தொகுப்பு செ யோகநாதன் -1993
  81. முகங்கள் – வி ஜீவகுமாரன்( புலம் பெயர் வாழ்வு பற்றிய உலக தமிழ் எழுத்தாளர்களின் கதைகள்) – 2011
  82. கதையியல் – க பூரணசந்திரன் – அடையாளம்
  83. சிகரம் கண்ட அமரர் சிறுகதைகள் – ஜெகாதா – செண்பகா பதிப்பகம்
  84. இருபதாம் நூற்றாண்டில் சில தமிழ் சிறுகதைகள் – சந்திரகாந்தன் – செண்பகா பதிப்பகம்
  85. காலச்சுவடு கதைகள் – மனுஷ்யபுத்திரன் – காலச்சுவடு
  86. புதியவர்களின் கதைகள் – ஜெயமோகன் – நற்றிணை
  87. மீண்டும் புதியவர்களின் கதைகள்- ஜெயமோகன் – இணய தளம்
  88. சிறப்பு சிறுகதைகள் – விகடன் – 2007
  89. தலித் பற்றிய கொங்கு சிறுகதைகள் – பெருமாள் முருகன் – புதுமலர் பதிப்பகம்
  90. விருட்சம் கதைகள் – அழகிய சிங்கர் – விருட்சம் வெளியீடு 1992
  91. தீபம் கதைகள் – நா பார்த்தசாரதி
  92. புதிய சலனங்கள் – அரவிந்தன் – காலச்சுவடு
  93. கண்ணதாசன் இதழ் கதைகள்
  94. உயிர் எழுத்து கதைகள் -க மோகனரங்கன் – உயிர் எழுத்து பதிப்பகம்
  95. நடை இதழ் தொகுப்பு -கி அ சச்சிதானந்தம் – சந்தியா பதிப்பகம்
  96. சிகரம் இதழ் தொகுப்பு – கமலாலயன்
  97. மணிக்கொடி இதழ் தொகுப்பு – சிட்டி,அசோகமித்திரன், ப முத்துக்குமாரசுவாமி – கலைஞன் பதிப்பகம்
  98. சரஸ்வதி களஞ்சியம் – விஜயபாஸ்கரன் – பரஞ்சோதி பதிப்பகம்
  99. தீபம் இதழ் தொகுப்பு – வே சபாநாயகம் – கலைஞன் பதிப்பகம்
  100. கலைமகள் இதழ் தொகுப்பு- கீழாம்பூர் – கலைஞன் பதிப்பகம்
  101. கணையாழி களஞ்சியம் 1- வே சபாநாயகம் – பரஞ்சோதி பதிப்பகம்
  102. கணையாழி களஞ்சியம் 2- இந்திரா பார்த்த்சாரதி – பரஞ்சோதி பதிப்பகம்
  103. கணையாழி களஞ்சியம் 3, 4 -என் எஸ் ஜகந்நாதன் -கலைஞன் பதிப்பகம்
  104. கசடதபற இதழ் தொகுப்பு – சா கந்தசாமி – கலைஞன் பதிப்பகம்
  105. முல்லை இலக்கிய களஞ்சியம் – மு பழநியப்பன் – முல்லை பதிப்பகம்
  106. கனவு இதழ் தொகுப்பு – சுப்ரபாரதி மணியன் – காவ்யா
  107. முன்றில் இதழ் தொகுப்பு – காவ்யா சண்முக சுந்தரம் – காவ்யா
  108. அமுதசுரபி இதழ் தொகுப்பு (தமிழ் சுரபி) -விக்கிரமன் -இலக்கியபீடம்
  109. அன்னம் விடுதூது கதைகள் – கதிர் – அன்னம் பதிப்பகம்
  110. சுபமங்களா இதழ் தொகுப்பு – இளைய பாரதி – கலைஞன் பதிப்பகம்
  111. இலக்கிய வட்டம் இதழ் தொகுப்பு – கி அ சச்சிதானந்தம் – சந்தியா
  112. ஞானரதம் இதழ் தொகுப்பு – வே சபாநாயகம் – எனி இந்தியன் பதிப்பகம்
  113. சொல்லில் அடங்காத வாழ்க்கை – தேவிபாரதி – காலச்சுவடு
  114. தொப்புள் கொடி – திலகவதி – அம்ருதா பதிப்பகம்
  115. சேரநாட்டு சிறுகதைகள் – திருவனந்தபுரம் தமிழ் சங்கம்
  116. மனஓசை கதைகள் – சூரியதீபன் – தோழமை வெளியீடு
  117. புதிய தமிழ் இலக்கிய வரலாறு – க சண்முகசுந்தரம் – சாகித்ய அக்காடமி
  118. தமிழ் சிறுகதை பிறக்கிறது – சி சு செல்லப்பா – காலச்சுவடு
  119. குருஷேத்திரம் தொகுப்பு நகுலன்
  120. தென்னிந்திய சிறுகதைகள் – கே வி ஷைலஜா – வம்சி புக்ஸ்
  121. வல்லமை சிறுகதைகள் – தாரினி பதிப்பகம்
  122. சிறகிசைத்த காலம் – வே நெடுஞ்செழியன், பவா செல்லதுரை – வம்சி புக்ஸ்
  123. பார்வைகள் – அசோகமித்திரன் – நற்றிணை பதிப்பகம்
  124. சிக்கி முக்கி சிறுகதைகள் – தாரா கணேசன் – புதுமைபித்தன் நூலகம்
  125. காக்கைகள் துரத்தி கொத்தும் தலைக்குரியவன் – மாதவராஜ் – வம்சி புக்ஸ்
  126. ஆர்வி, கேசவமணி, நிலா ரசிகன், அ மு செய்யது, அருண் தமிழ் ஸ்டுடியோ, இமயம், சென்ஷி – இவர்களின் இணய தள பதிவுகள்.
  127. சிறுகதை இலக்கிய வளர்ச்சியில் வடக்கு வாசல் -அ இராஜசேகர் – ஸ்ரீ பாரதி புத்தகாலயம்
  128. உலக தமிழ் இலக்கிய வரலாறு – (1851-2000 வரை) – இராம குருநாதன் கட்டுரை
  129. தொடரும் வெளிச்சம் – குமரி பதிப்பகம் – 1995
  130. வானதி சிறப்பு சிறுகதைகள் 1 – மகரம் – வானதி பதிப்பகம்
  131. Selected Tamil Short stories by Rajendira awasthi -
  132. A Place to live – Edited by Dileepkumar – Tamil stories- Penguin books

 

இந்த பட்டியல் சிறந்த சிறுகதைகள் எவை என்பதைக் காட்டுகிறது. சில எழுத்தாளர்களின் பல சிறுகதைகள் இதில் இடம் பிடித்துள்ளன. இன்னும் பல சிறுகதைகள் 3 பரிந்துரைகள் பெற்று இருக்கின்றன. பல சிறுகதைகள் 2 பரிந்துரைகள்

பெற்றுள்ளன. அவற்றை “நல்ல கதைகள்” என்ற தலைப்பில் அடுத்த கட்டுரையில் பட்டியலிடுகிறேன்.

 

 

http://puthu.thinnai.com/?p=31522

Link to comment
Share on other sites

  • 7 months later...

சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது

2.விடியுமா? – கு ப ராஜகோபாலன் 

 

விடியுமா?

kupara

தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது.
‘சிவராமையர் - டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல்kupara ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.
என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள்.
ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள்.
எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. ‘இருக்காது!’, ’ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்’ என்று இரண்டு விதமாக மனத்தில் எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தன. ‘இருக்கும்!’ என்ற கட்சி, தந்தியின் பலத்தில் வேரூன்றி வலுக்க வலுக்க, ‘இருக்காது!’ என்ற கட்சி மூலைமுடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது.
தந்தியில் கண்டிருந்ததைத் திரும்பத் திரும்பப் படித்தோம். அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்துதான் வந்திருந்தது. சந்தேகமில்லை. காலையில் அடித்திருக்கிறார்கள். குஞ்சம்மாள் பேருக்குத்தான்! தவறு எப்படி நேர்ந்திருக்க முடியும்?
ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் என்ன நேர்ந்திருக்க முடியும்? மூன்று நாட்களுக்கு முன்புதானே கடிதம் வந்தது? ஏதாவது உடம்பு சௌகரியமில்லாமல் இருந்தால் அதில் எழுதாமல் இருப்பாரோ?
என் தமக்கையும் நானும் சாயந்தரம் ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அதுதான் அன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப்  போகும் முதல்வண்டி.
புறப்படுவதற்கு முன் நல்லவேளை பார்த்துப் ‘பரஸ்தானம்’ இருந்தோம். சாஸ்திரிகள், ‘ஒண்ணும் இருக்காது. கிரகம் கொஞ்சம் பீடிக்கும், அவ்வளவுதான்!’ என்றார். அம்மா, தெய்வங்களுக்கெல்லாம், ஞாபகமாக ஒன்றைக் கூடவிடாமல், பிரார்த்தனை செய்துகொண்டு, மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைத்தாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைப் பாக்கு க்ஷேமதண்டுலம் எல்லாம் மறந்து போகாமல் மடி நிறையக் கட்டிக்கொடுத்தாள். பசியுடன் போகக்கூடாது என்று. புறப்படும்பொழுது கட்டாயப்படுத்தி இருவரையும் சாப்பிடச் செய்தாள்.
குஞ்சம்மாள், இயந்திரம்போலச் சொன்னதையெல்லாம் செய்தாள்; ‘ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணு!’ என்றதும் போய் நமஸ்காரம் செய்தாள்.
அவள் கதிகலங்கிப் போயிருந்தாள் என்பது அவள் பேச்சற்றுப் போயிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அவளுடைய கலகலப்பு, முதல் தடவையாக அன்று, எங்கோ அடங்கிவிட்டது.
அம்மா வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். திவ்யமான சகுனம். காவேரியிலிருந்து அடுத்தவீட்டுச் சுந்தரி ஜலம் எடுத்துக்கொண்டு எதிரே வந்தாள்.
‘ஒண்ணும் இருக்காது! நமக்கேன் அப்படியெல்லாம் வரது? நாம் ஒருத்தருக்கு ஒண்ணும் கெடுதல் எண்ணல்லே’ என்றெல்லாம், அம்மா அடிக்கடி தன்னையும் பிறரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.
ரெயில் ஏறுகிறபோது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம். போய் இறங்குவதற்குமுன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றதால், கொஞ்சங் கொஞ்சமாகத் துடிப்பும், கலக்கலுங்கூட மட்டுப்பட்டன. இரண்டு ஜன்னல்களின் அருகில் நேர் எதிராக இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்தோம்.
‘நீ புறப்படுகிறபோது ஒன்றுமே’ இல்லையே, அக்கா?’ என்றேன், ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று.
‘ஒண்ணுமில்லையே! இருந்தால் புறப்பட்டு வருவேனா?’ என்று அவள் ஏக்கம் நிறைந்த குரலில் பதில் சொன்னாள்.
‘அதற்குள் திடீரென்று ஒன்றும் ஏற்படுவதற்குக் காரணமே இல்லையே!’
எது எப்படியானாலும், மனசைச் சில மணி நேரங்களாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தது போலப் பேச்சு வெளிவந்தது.
‘நான், இந்த நோன்பிற்காக இங்கே தாமதம் செய்யாமல், போயிருக்காமல் போனேன்!’
’ஒருவேளை, அக்கா, நோன்பிற்காக நீ இங்கே இருந்துவிட்டதுதான் அத்திம்பேருக்குக் கோபமோ? அவர் உடனே வரும்படியாக எழுதியிருந்தார். நாம் ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் எழுதினோம். அதற்காகத்தான் இப்படித் தந்தி அடித்துவிட்டாரோ?’
‘ஆஸ்பத்திரியிலேயிருந்து வந்திருக்கே?’
’ஆஸ்பத்திரி பேரை வைத்து அத்திம்பேரே அடிக்கக் கூடாதா?’
‘அப்படி அடிக்க முடியுமோ?’ குஞ்சம்மாள் குரலில் ஆவல் இருந்தது.
‘ஏன் முடியாது? தந்தியாபீஸில் - ‘
‘ஒருவேளை அப்படி இருக்குமோ?’ என்று கேட்டபொழுது குஞ்சம்மாளின் முகம் கொஞ்சம் மலர்ந்துவிட்டது.
‘அப்படித்தான் இருக்கவேண்டும். இப்படித் திடீரென்று ஒன்றும் ஏற்படக் காரணமே இல்லை. முந்தா நாள் தானே கடிதாசு வந்தது?’
‘ஆமாம்! அதில் ஒடம்பெப் பத்தி ஒண்ணுமே இல்லையே?’
‘தந்தி அடித்தால் நாம் உடனே புறப்பட்டு வருவோம் என்றுதான் அடித்திருக்கிறார். வீட்டிலிருந்து அடித்தால் கூட அவ்வளவு தாக்காது என்று ஆஸ்பத்திரி பேரை வைத்து அடித்திருக்கிறார்’.
‘அப்படி அடிக்க முடியுமாடா, அம்பி? அப்படியிருக்குமா?’ என்று மறுபடியும் குஞ்சம்மாள் சந்தேகத்துடன் கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்ட பொழுது, முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால்கூடச் சொல்ல மனம் வந்திருக்குமோ, என்னவோ?
‘நீ வேண்டுமானால் பாரேன்! எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இருக்கப் போகிறார்’ என்றேன்.
மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச நேரத்திற்கு ஒரு தரம் அந்தத் திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு கலங்கும்; முகம் விகாரமடையும். மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்; பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.
சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?
ரெயில் வண்டி வெறி பிடித்ததுபோல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் கனவேகமாகப் போய்க் கொண்டிருந்ததுபோல் இருந்தது.
துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம்போல தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்து சென்று கொண்டிருந்தது.
சென்னை போய்ச் சேரும்பொழுது, எங்கள் கவலையும் அந்த இருளைப் போலப்பின் தங்கிவிடாதா? நிம்மதி, காலையைப் போல, அங்கே எங்களை வந்தடையாதா? இருள், நிச்சயம் கூட வராது! சென்னையில் காலைதான்! - இவ்வாறெல்லாம் பேதைமனம் தன்னைத் தேற்றிக் கொண்டே இருந்தது.
குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து எனக்குக் கொடுத்துத் தானும் போட்டுக் கொண்டாள்.
எங்களவர்க்குள்ளேயே குஞ்சம்மாள் அதிக அழகு என்று பெயர். நல்ல சிவப்பு; ஒற்றை நாடித் தேகம்; அவளுக்கு தெருவிலேயே ஒரு செல்வாக்கு உண்டு.
அன்று என்னவோ, இன்னும் அதிகமாக, அவள் ஒளிர்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் என்றுமே இல்லாத ஓர் ஏக்கம் என்று முதல் முதலாகத் தென்பட்டதாலோ என்னவோ, அவள் அழகு மிளிர்ந்து தோன்றினாள்.
குஞ்சம்மாளுக்குப் புஷ்பம் என்றால் பிராணன். யாரு கேலி செய்தாலும் லட்சியம் செய்யமாட்டாள். தலையை மிஞ்சிப் பூ வைத்துக் கொள்ளுவாள். ஆனால் அன்று அவள் தலையில் வைத்துக் கொண்டிருந்த பூவைப்போல, அது என்றும் சோபித்ததில்லை என்று என் கண்களுக்குப் பட்டது. வெற்றிலைக்காவி அவளுடைய உதடுகளில் அன்றுதான் அவ்வளவு சிவப்பாகப் பிடித்திருந்ததுபோல இருந்தது.
சோர்வில்தான் சௌந்தரியம் பரிமளிக்குமோ? அல்லது-? கடைசியாக, அணைவதற்கு முன்னால், விளக்கு-? இல்லை! இல்லை!
குஞ்சம்மாள் அன்று என்னவோ அப்படி இருந்தாள்.
வெற்றிலையைப் பாதி மென்றுகொண்டே, ‘அம்பு, ஒங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?’ என்றாள் குஞ்சம்மாள்.
அவளுடைய கண்களில் ஜலம் மளமளவென்று பெருகிற்று.
‘என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை, நான் அழாத நாள் உண்டா? - என் வாழ்வே அழுகையாக-’ என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.
‘எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டது உண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தால் போதுமென்று தோன்றிவிட்டது, போனதடவை உடம்புக்கு வந்தபோது!’
இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தோம். ஆனால் மனசு மட்டும் மௌனமாக இருக்கவில்லை.
நல்ல நிசிவேளை. வண்டியில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் அநேக தினுசாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றதும், சிலர் எழுந்து இறங்கிப் போவார்கள், மௌனமாகப் பிசாசுகள் போல. அப்பொழுதுதான் தூங்கி எழுந்த சிலர், ‘இதென்ன ஸ்டேஷன்?’ என்று தலையை நீட்டிக் கேட்பார்கள். போர்ட்டர் ஒருவன் ஏதாவது ஒரு ஸ்டேஷன் பெயரை அரைகுறையாகத் தூங்கி வழிந்துகொண்டே சொல்லுவான். மறுபடியும் வண்டி பூரான் மாதிரி ஓட ஆரம்பிக்கும்.
சுமார் ஒரு மணிக்கு வண்டி விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் ஆர்ப்பாட்டத்துடன் போய் நின்றது. அதுவரையிலும் வண்டியில் அமைதியும் நிசப்தமும் இருந்தன. அந்த ஸ்டேஷனில் கூட்டமும் கூக்குரலும் அதிகமாயின. அது வரையில் காலியாகவே வந்த எங்கள் பலகையில் சாமான்கள் நிறைந்தன. நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி, பெண் குழந்தையும் புட்டியுமாக என் தமக்கையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
அவள் அணிந்திருந்த முதல் தரமான வைரங்களுடன் அவள் முகமும் ஜொலித்துக் கொண்டு இருந்தது. ஏதோ ஓர் உள்ளப்பூரிப்பில் அவள் தன்னையே மறந்து தன் குழந்தையுடன் கொஞ்சினாள்.
வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் என் தமக்கையின் பக்கம் தன் புன்னகை பூத்த முகத்தைத் திருப்பி; ‘எங்கிட்டுப் போறீக அம்மா?’ என்று கேட்டாள்.
என் தமக்கை சுருக்கமாக, ‘பட்டணம்’ என்றாள்.
’நானும் அங்கேதாம்மா வாரேன்!’ என்று ஆரம்பித்து, அந்தப் பெண் வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பிறகு தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுத்தாள்.
என் தமக்கை மெய்சிலிர்த்துப் போனாள். வெகு ஆவலுடன் அந்தப் பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொண்டாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, ‘கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை!’ என்று சொன்னதுபோல எண்ணினாள்.
அதுவரையில் அவளுக்கு ஒவ்வொரு வார்த்தை பதில் சொல்லிக் கொண்டு வந்தவள். உடனே இளகி, அவளிடம் சங்கதி பூராவும் சொன்னாள்.
‘மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது!’ என்று அவள் சொன்னதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டுவிட்டாள் குஞ்சம்மாள். அந்த ஆறுதலில் கொஞ்ச நேரம் அவளுடன் கவலை மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ஞாபகம் வந்துவிட்டது. ஏதோ பெருத்த குற்றம் செய்தவள் போலத் திகிலடைந்தாள். ‘ஐயையோ! பைத்தியம் போல் இப்படிச் சிரிச்சுண்டு பேசிக் கொண்டிருக்கிறேனே!’ என்று எண்ணினவள்போல அவள் கலவரமடைந்தது நன்றாகத் தெரிந்தது. வண்டிபோன வேகத்தில் விர்ரென்று அடித்த காற்றிலும் அவளுடைய முகத்தில் வியர்வை தென்பட்டது.
ஆனால் எவ்வளவு நேரந்தான் கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம்.
துக்கத்தில், நித்திரையும் நினைவு மறதியும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு ஒரு சிறு போதையாகித் தாபத்தைத் தணிக்கின்றனவோ?
வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தோம். கிழக்கு வெளுத்துக்கொண்டிருந்தது. வண்டி ஏதோ ஒரு குக்கிராமத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தபொழுது கோழி கூவியதுகூடக் காதில் வந்துபட்டது.
‘அப்பா! விடியுமா?’ என்கிற நினைப்பு ஒருபக்கம்.
‘ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ!’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம்.
இரவின் இருட்டு அளித்திருந்த ஆறுதலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டிய வெளிச்சம் பறிக்க வருவதுபோல் இருந்தது.
எங்கேயோ, கண்காணாத தூரத்தில் உருவடைந்த ஒரு காட்சியில் ஈடுபட்டவளாய் நிலைகுத்திய பார்வையுடன் குஞ்சம்மாள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
‘செங்கற்பட்டில் பல் தேய்த்துக்கொண்டு காபி சாப்பிடுவோமா?’ என்று கேட்டேன்.
‘எல்லாம் பட்டணத்தில்தான்!’ என்று சொல்லிவிட்டாள் குஞ்சம்மாள். பக்கத்தில் நகரத்தார் பெண் கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
‘இதோ ஆயிற்று, இதோ ஆயிற்று!’ என்று சொல்வதுபோல வண்டி தாவிப் பறந்து கொண்டிருந்தது.
ஆனால் எங்களுக்கு என்னவோ பட்டணம் நெருங்க நெருங்க, வண்டி வேண்டுமென்றே ஊர்வதுபோல இருந்தது.
எழும்பூர் வந்தது கடைசியாக.
ஸ்டேஷனில் யாருமில்லை; அதாவது எங்கள் அத்திம்பேர் இல்லை - எல்லோரு இருந்தார்கள். ‘ஆனால் அவர் ஸ்டேஷனுக்கு எதற்காக வரவேண்டும்? அங்கே எதிர்பார்ப்பது சரியில்லைதான்’ என்று அப்பொழுது தோன்றிற்று.
வீட்டுக்குப் போனோம். வீடு பூட்டியிருந்தது.
உடம்பு சௌகரியமில்லைதான்! சந்தேகமில்லை இப்பொழுது!
ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அரைமணி நேரம் துடித்த பிறகு குமாஸ்தா வந்தார்.
‘நீங்கள் கும்பகோணமா?’ என்றார்.
’ஆமாம்-’ என்றேன்.
‘நோயாளி - நேற்றிரவு - இறந்துபோய்விட்டார்’ என்று குமாஸ்தா சாவதானமாகச் சொன்னார்.
’இறந்து-? அது எப்படி? அதற்குள்ளா?’ அப்பொழுதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் விடவில்லை.
‘சிவராமையர்-?’
’ஆமாம், ஸார்!’
‘ஒருவேளை-’
‘சற்று இருங்கள். பிரேதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குமாஸ்தா தம் ஜோலியைக் கவனிக்கப் போனார்.
கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக் கொண்டோம்.
அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!
ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.
பிறகு-?
விடிந்துவிட்டது.
*****

http://azhiyasudargal.blogspot.ch/2010/09/blog-post_30.html

Link to comment
Share on other sites

3.கடவுளும் கந்தசாமி பிள்ளையும் – புதுமைப்பித்தன்  

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைப்பித்தன்

மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். ‘டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் ‘கப்’ காப்பி குடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது…’

‘கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.’

‘இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத் தான் இருக்கும்.’

இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.

திடீரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, “இந்தா, பிடி வரத்தை” என்று வற்புறுத்தவில்லை.

“ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது?” என்று தான் கேட்டார்.

“டிராமிலும் போகலாம், பஸ்ஸிலும் போகலாம், கேட்டுக் கேட்டு நடந்தும் போகலாம்; மதுரைக்கு வழி வாயிலே” என்றார் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை.

“நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன்; எப்படிப் போனால் சுருக்க வழி?” என்றார் கடவுள். இரண்டு பேரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

சாடி மோதித் தள்ளிக்கொண்டு நடமாடும் ஜனக் கூட்டத்திலிருந்து விலகி, செருப்பு ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.

மேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப் பிடிக்கும் அதிதீட்சண்யமான கண்கள்; காரிக்கம் ஷர்ட், காரிக்கம் வேஷ்டி, காரிக்கம் மேல் அங்கவஸ்திரம்.

வழி கேட்டவரைக் கந்தசாமிப் பிள்ளை கூர்ந்து கவனித்தார். வயசை நிர்ணயமாகச் சொல்ல முடியவில்லை. அறுபது இருக்கலாம்; அறுபதினாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் கொழுகொழு என்று வளர்ந்த மேனி வளப்பம்.

தலையிலே துளிக்கூடக் கறுப்பில்லாமல் நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் சிங்கத்தின் பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக் கொண்டு நின்றது. கழுத்திலே நட்ட நடுவில் பெரிய கறுப்பு மறு. கண்ணும் கன்னங்கறேலென்று, நாலு திசையிலும் சுழன்று, சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கனிந்தது. சிரிப்பு? அந்தச் சிரிப்பு, கந்தசாமிப் பிள்ளையைச் சில சமயம் பயமுறுத்தியது. சில சமயம் குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது.

“ரொம்பத் தாகமாக இருக்கிறது” என்றார் கடவுள்.

“இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ இருக்கிறது காப்பி ஹோட்டல்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“வாருங்களேன், அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம்” என்றார் கடவுள்.

கந்தசாமிப் பிள்ளை பெரிய அபேதவாதி. அன்னியர், தெரிந்தவர் என்ற அற்ப
பேதங்களைப் பாராட்டுகிறவர் அல்லர்.

“சரி, வாருங்கள் போவோம்” என்றார். ‘பில்லை நம் தலையில் கட்டிவிடப் பார்த்தால்?’ என்ற சந்தேகம் தட்டியது. ‘துணிச்சல் இல்லாதவரையில் துன்பந்தான்’ என்பது கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம்.

இருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின் பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின் தொடர்ந்தார்.

இருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங் கொடுக்காமல், “சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி!” என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப் பிள்ளை.

“தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல்” என்றார் கடவுள்.

“அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும்” என்று தமிழ்க் கொடி நாட்டினார் பிள்ளை.

முறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். “நல்ல உயரமான கட்டிடமாக இருக்கிறது; வெளிச்சமும் நன்றாக வருகிறது” என்றார்.

“பின்னே பெரிய ஹோட்டல் கோழிக் குடில் மாதிரி இருக்குமோ? கோவில் கட்டுகிறது போல என்று நினைத்துக் கொண்டீராக்கும்! சுகாதார உத்தியோகஸ்தர்கள் விடமாட்டார்கள்” என்று தமது வெற்றியைத் தொடர்ந்து முடுக்கினார் பிள்ளை.

கோவில் என்ற பதம் காதில் விழுந்ததும் கடவுளுக்கு உடம்பெல்லாம் நடுநடுங்கியது.

“அப்படி என்றால்…?” என்றார் கடவுள். தோற்றாலும் விடவில்லை. “சுகாதாரம் என்றால் என்ன என்று சொல்லும்?” என்று கேட்டார் கடவுள்.

“ஓ! அதுவா? மேஜையை லோஷன் போட்டுக் கழுவி, உத்தியோகஸ்தர்கள் அபராதம் போடாமல் பார்த்துக் கொள்வது. பள்ளிக்கூடத்திலே, பரீட்சையில் பையன்கள் தோற்றுப் போவதற்கென்று சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடம்; அதன்படி இந்த ஈ, கொசு எல்லாம் ராக்ஷசர்களுக்குச் சமானம். அதிலும் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குள்ளே வந்துவிட்டால் ஆபத்துதான். உயிர் தப்பாது என்று எழுதியிருக்கிறார்கள்” என்றார் கந்தசாமிப் பிள்ளை. அவருக்கே அதிசயமாக இருந்தது இந்தப் பேச்சு. நாக்கில் சரஸ்வதி கடாட்சம் ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகித்தார்.

கடவுள் அவரைக் கவனிக்கவில்லை. இவர்கள் வருவதற்கு முன் ஒருவர் சிந்திவிட்டுப் போன காப்பியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஈ ஒன்றைக் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்தார். அது முக்கி முனகி ஈரத்தைவிட்டு வெளியே வர முயன்று கொண்டிருந்தது.

“இதோ இருக்கிறதே!” என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது பறந்துவிட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.

“என்ன ஐயா, எச்சிலைத் தொட்டுவிட்டீரே! இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே கழுவும்” என்றார் பிள்ளை.

“ஈயை வரவிடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம்” என்று முனகிக் கொண்டார் கடவுள்.

பையன் இரண்டு ‘கப்’ காப்பி கொண்டுவந்து வைத்தான்.

கடவுள் காப்பியை எடுத்துப் பருகினார். சோமபானம் செய்த தேவகளை முகத்தில் தெறித்தது.

“நம்முடைய லீலை” என்றார் கடவுள்.

“உம்முடைய லீலை இல்லைங்காணும், ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு வைத்திருக்கிறான்; உம்முடைய லீலை எல்லாம் பில் கொடுக்கிற படலத்திலே” என்று காதோடு காதாய்ச் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. சூசகமாகப் பில் பிரச்சனையைத் தீர்த்துவிட்டதாக அவருக்கு ஓர் எக்களிப்பு.

“சிக்கரிப் பவுடர் என்றால்…?” என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார் கடவுள்.

“சிக்கரிப் பவுடர், காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சிலபேர் தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றிவருகிற மாதிரி” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

தெய்வம் என்றதும் திடுக்கிட்டார் கடவுள்.

பெட்டிய�
��ியில் பில்லைக் கொடுக்கும்பொழுது, கடவுள் புத்தம்புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினார்; கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார்.

“சில்லறை கேட்டால் தரமாட்டேனா? அதற்காக மூன்றணா பில் எதற்கு? கண்ணைத் துடைக்கவா, மனசைத் துடைக்கவா?” என்றார் ஹோட்டல் சொந்தக்காரர்.

“நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்தோம்” என்றார் கடவுள்.

“அப்படியானால் சில்லறையை வைத்துக்கொண்டு வந்திருப்பீர்களே?” என்றார் ஹோட்டல் முதலாளி. அதற்குள் சாப்பிட்டுவிட்டு வெளியே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக, வீண் கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். “தொண்ணூற்று ஒன்பது ரூபாய் பதின்மூன்று – சரியா? பார்த்துக்கொள்ளும் சாமியாரே!”

“நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது” என்றார் கடவுள்.

ஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி.

வெளியே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள்.

கடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந்த நோட்டுக்களில் ஐந்தாவதை மட்டும் எடுத்தார். சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே எறிந்தார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு, பக்கத்தில் நிற்பவர் பைத்தியமோ என்ற சந்தேகம். திடுக்கிட்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றார்.

“கள்ள நோட்டு; என்னை ஏமாற்றப் பார்த்தான்; நான் அவனை ஏமாற்றிவிட்டேன்” என்றார் கடவுள். அவருடைய சிரிப்பு பயமாக இருந்தது.

“என் கையில் கொடுத்தால், பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக் கொண்டு வந்திருப்பேனே!” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டீரா இல்லையா? அந்த மாதிரி இதற்கு நான் உடன்பட்டேன் என்று வைத்துக்கொள்ளும். அவனுக்குப் பத்து ரூபாய்தான் பெரிசு; அதனால்தான் அவனை ஏமாற்றும்படி விட்டேன்” என்றார் கடவுள்.

வலிய வந்து காப்பி வாங்கிக் கொடுத்தவரிடம் எப்படி விடைபெற்றுக் கொள்வது என்று பட்டது கந்தசாமிப் பிள்ளைக்கு.

“திருவல்லிக்கேணிக்குத்தானே? வாருங்கள் டிராமில் ஏறுவோம்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“அது வேண்டவே வேண்டாம்; எனக்குத் தலை சுற்றும்; மெதுவாக நடந்தே போய்விடலாமே” என்றார் கடவுள்.

“ஐயா, நான் பகலெல்லாம் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து வைக்க முடியாது; ரிக்ஷாவிலே ஏறிப் போகலாமே” என்றார் கந்தசாமிப் பிள்ளை. ‘நாம்தாம் வழி காட்டுகிறோமே; பத்து ரூபாய் நோட்டைக் கிழிக்கக் கூடியவர் கொடுத்தால் என்ன?’ என்பதுதான் அவருடைய கட்சி.

“நர வாகனமா? அதுதான் சிலாக்கியமானது” என்றார் கடவுள்.

இரண்டு பேரும் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார்கள். “சாமி, கொஞ்சம் இருங்க; வெளக்கை ஏத்திக்கிறேன்” என்றான் ரிக்ஷாக்காரன்.

பொழுது மங்கி, மின்சார வெளிச்சம் மிஞ்சியது.

“இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகி விட்டோமே! நீங்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை இரைச்சலிலே இப்படிச் சந்திக்க வேண்டுமென்றால்…”

கடவுள் சிரித்தார். பல், இருட்டில் மோகனமாக மின்னியது. “நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன்” என்றார் அவர்.

கந்தசாமிப் பிள்ளைக்குத் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே ஒரு தனி உத்ஸாகம். அதிலும் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தம்மிடம் அகப்பட்டுக்கொண்டால் விட்டுவைப்பாரா? கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்.

“சித்த வைத்திய தீபிகை என்ற வைத்தியப் பத்திரிகையைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

“இல்லை” என்றார் கடவுள்.
“அப்பொழுது வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமில்லை என்ற
ுதான் கொள்ள வேண்டும்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“பரிச்சயம் உண்டு” என்றார் கடவுள்.

‘இதென்னடா சங்கடமாக இருக்கிறது?’ என்று யோசித்தார் கந்தசாமிப் பிள்ளை. “உங்களுக்கு வைத்திய சாஸ்திரத்தில் பரிசயமுண்டு; ஆனால் சித்த வைத்திய தீபிகையுடன் பரிசயமில்லை என்று கொள்வோம்; அப்படியாயின் உங்கள் வைத்திய சாஸ்திர ஞானம் பரிபூர்ணமாகவில்லை. நம்மிடம் பதினேழு வருஷத்து இதழ்களும் பைண்டு வால்யூம்களாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் வீட்டுக்கு ஒரு முறை வந்து அவற்றைப் படிக்க வேண்டும்; அப்பொழுதுதான்…”

‘பதினேழு வருஷ இதழ்களா? பதினேழு பன்னிரண்டு இருநூற்று நாலு.’ கடவுளின் மனசு நடுநடுங்கியது. ‘ஒருவேளை கால் வருஷம் ஒருமுறைப் பத்திரிகையாக இருக்கலாம்’ என்ற ஓர் அற்ப நம்பிக்கை தோன்றியது.

“தீபிகை மாதம் ஒரு முறைப் பத்திரிகை. வருஷ சந்தா உள் நாட்டுக்கு ரூபாய் ஒன்று; வெளிநாடு என்றால் இரண்டே முக்கால்; ஜீவிய சந்தா ரூபாய் 25. நீங்கள் சந்தாதாராகச் சேர்ந்தால் ரொம்பப் பிரயோஜனம் உண்டு; வேண்டுமானால் ஒரு வருஷம் உங்களுக்கு அனுப்புகிறேன். அப்புறம் ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம்” என்று கடவுளைச் சந்தாதாராகச் சேர்க்கவும் முயன்றார்.

‘பதினேழு வால்யூம்கள் தவிர, இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓட ஓட விரட்டலாம் என்று நினைக்கிறாரா? அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக் கூடாது’ என்று யோசித்து விட்டு, “யாருடைய ஜீவியம்?” என்று கேட்டார் கடவுள்.

“உங்கள் ஆயுள்தான். என் ஆயுளும் அல்ல, பத்திரிகை ஆயுளும் அல்ல; அது அழியாத வஸ்து. நான் போனாலும் வேறு ஒருவர் சித்த வைத்திய தீபிகையை நடத்திக்கொண்டுதான் இருப்பார்; அதற்கும் ஏற்பாடு பண்ணியாச்சு” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

இந்தச் சமயம் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி வேகத்தை நிதானமாக்கிவிட்டுப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான்.

வேகம் குறைந்தால் எங்கே வண்டியில் இருக்கிற ஆசாமி குதித்து ஓடிப்போவாரோ என்று கந்தசாமிப் பிள்ளைக்குப் பயம்.

“என்னடா திரும்பிப் பார்க்கிறே? மோட்டார் வருது, மோதிக்காதே; வேகமாகப் போ” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“என்ன சாமி, நீங்க என்ன மனுசப்பெறவியா அல்லது பிசாசுங்களா? வண்டியிலே ஆளே இல்லாத மாதிரி காத்தாட்டம் இருக்கு” என்றான் ரிக்ஷாக்காரன்.

“வாடகையும் காத்தாட்டமே தோணும்படி குடுக்கிறோம்; நீ வண்டியே இஸ்துக்கினு போ” என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.

“தவிரவும் நான் வைத்தியத் தொழிலும் நடத்தி வருகிறேன்; சித்த முறைதான் அநுஷ்டானம். வைத்தியத்திலே வருவது பத்திரிகைக்கும், குடும்பத்துக்கும் கொஞ்சம் குறையப் போதும். இந்த இதழிலே ரசக்கட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்; பாருங்கோ, நமக்கு ஒரு பழைய சுவடி ஒன்று கிடைத்தது; அதிலே பல அபூர்வப் பிரயோகம் எல்லாம் சொல்லியிருக்கு” என்று ஆரம்பித்தார் கந்தசாமிப் பிள்ளை.

‘ஏதேது, மகன் ஓய்கிற வழியாய்க் காணமே’ என்று நினைத்தார் கடவுள். “தினம் சராசரி எத்தனை பேரை வேட்டு வைப்பீர்?” என்று கேட்டார்.

“பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படி அவ்வளவு ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமானவரையில் அகன்றுவிடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது. அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு வியாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாது என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை பண்ணினால், தொழில் நடக்காது. வியாதியும் வேகம் குறைந்து படிப்படியாகக் குணமாக வேண்டும். மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல் தந்து விடக் கூடாது. இதுதான் வியாபார முறை. இல்
லாவிட்டால் இந்தப் பதினேழு வருஷங்களாகப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்க முடியுமா?” என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் விஷயம் புரிந்தவர் போலத் தலையை ஆட்டினார்.

“இப்படி உங்கள் கையைக் காட்டுங்கள், நாடி எப்படி அடிக்கிறது என்று பார்ப்போம்” என்று கடவுளின் வலது கையைப் பிடித்தார் கந்தசாமிப் பிள்ளை.

“ஓடுகிற வண்டியில் இருந்துகொண்டா?” என்று சிரித்தார் கடவுள்.

“அது வைத்தியனுடைய திறமையைப் பொறுத்தது” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

நாடியைச் சில விநாடிகள் கவனமாகப் பார்த்தார். “பித்தம் ஏறி அடிக்கிறது; விஷப் பிரயோகமும் பழக்கம் உண்டோ ?” என்று கொஞ்சம் விநயத்துடன் கேட்டார் பிள்ளை.

“நீ கெட்டிக்காரன் தான்; வேறும் எத்தனையோ உண்டு” என்று சிரித்தார் கடவுள்.

“ஆமாம், நாம் என்னத்தையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும், திருவல்லிக்கேணியில் எங்கே?” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வேங்கடாசல முதலி சந்து” என்றார் கடவுள்.

“அடெடே! அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும்?”

“கந்தசாமிப் பிள்ளையை!”

“சரியாய்ப் போச்சு, போங்க; நான் தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ? இனம் தெரியவில்லையே?” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“நானா? கடவுள்!” என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு தாடியை நெருடினார்.

கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!

“பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி.”

கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். “எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என் வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக்கூடாது” என்றார்.

“அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

வண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.

கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

“நல்லா இருக்கணும் சாமீ” என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.

கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!

“என்னடா, பெரியவரைப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது?” என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.

“அப்படிச் சொல்லடா அப்பா; இத்தனை நாளா, காது குளிர மனசு குளிர இந்த மாதிரி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன?” என்றார் கடவுள்.

“அவன்கிட்ட இரண்டணாக் கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்போ தெரியும்!” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“எசமான், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன், அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்லெ, சாமி! நான் எப்பவும் அன்னா அந்த லெக்கிலேதான் குந்திக்கிட்டு இருப்பேன்; வந்தா கண் பாக்கணும்” என்று ஏர்க்காலை உயர்த்தினான் ரிக்ஷாக்காரன்.

“மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன் தான்! தெரியும் போடா; கள்ளுத் தண்ணிக்கிக் கட்டுப்பட்டவன்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும். உன்னை என்ன சொல்ல? கடவுளுக்குக் கண்ணில்லெ; உன்னியே சொல்ல வச்சான், என்னியே கேக்க வச்சான்” என்று சொல்லிக்கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான்.

கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து விழுந்து சிரித்தார். மனசிலே மகிழ்ச்சி, குளிர்ச்சி.

“இதுதான் பூலோகம்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“இவ்வளவுதானா!” என்றார் கடவுள்
.

இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

வீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார்.

கந்தசாமிப் பிள்ளையும் காத்து நின்றார்.

“பக்தா!” என்றார் கடவுள்.

எதிரில் கிழவனார் நிற்கவில்லை.

புலித் தோலாடையும், சடா முடியும், மானும், மழுவும், பிறையுமாகக் கடவுள் காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.

“பக்தா!” என்றார் மறுபடியும்.

கந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது.

“ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீர் வரத்தைக் கொடுத்துவிட்டு உம்பாட்டுக்குப் போவீர்; இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க ஆசைப்பட்டீர்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல, என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான் முந்திச் சொன்னதை மறக்காமல் வீட்டுக்கு ஒழுங்காக வாரும்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் மௌனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது. இதுவரையில் பூலோகத்தில் வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது என்றுதான் அவருக்குப் பட்டது.

கந்தசாமிப் பிள்ளை வாசலருகில் சற்று நின்றார். “சாமி, உங்களுக்குப் பரமசிவம் என்று பேர் கொடுக்கவா? அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா?” என்றார்.

“பரமசிவந்தான் சரி; பழைய பரமசிவம்.”

“அப்போ, உங்களை அப்பா என்று உறவுமுறை வைத்துக் கூப்பிடுவேன்; உடன்பட வேணும்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“அப்பா என்று வேண்டாமப்பா; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என் சொத்துக்கு ஆபத்தில்லை” என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது என்று தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று பட்டது கடவுளுக்கு.

“அப்படி உங்கள் சொத்து என்னவோ?” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“இந்தப் பிரபஞ்சம் முழுவதுந்தான்” என்றார் கடவுள்.

“பயப்பட வேண்டாம்; அவ்வளவு பேராசை நமக்கு இல்லை” என்று கூறிக்கொண்டே நடைப்படியில் காலை வைத்தார் கந்தசாமிப் பிள்ளை.
2

வீட்டு முன் கூடத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்தைக் கோவிலின் கர்ப்பக் கிருகமாக்கியது. அதற்கு அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்கும் பட்டகசாலை. அதற்கப்புறம் என்னவோ? ஒரு குழந்தை, அதற்கு நாலு வயசு இருக்கும். மனசிலே இன்பம் பாய்ச்சும் அழகு. கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம். பழைய காலத்து ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து முன்னும் பின்னுமாகப் பின்னிய எலிவால் சடை வாலை வாளைத்துக் கொண்டு நின்றது. முன்புறம் சடையைக் கட்டிய வாழைநார், கடமையில் வழுவித் தொங்கி, குழந்தை குனியும்போதெல்லாம் அதன் கண்ணில் விழுந்து தொந்தரவு கொடுத்தது. குழந்தையின் கையில் ஒரு கரித்துண்டும், ஓர் ஓட்டுத் துண்டும் இருந்தன. இடையில் முழங்காலைக் கட்டிக்கொண்டிருக்கும் கிழிசல் சிற்றாடை. குனிந்து தரையில் கோடு போட முயன்று, வாழைநார் கண்ணில் விழுந்ததனால் நிமிர்ந்து நின்று கொண்டு, இரண்டு கைகளாலும் வாழை நாரைப் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அதன் முயற்சி பலிக்கவில்லை. வலித்தது. அழுவோமா அல்லது இன்னும் ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமா என்று அது தர்க்கித்துக் கொண்டிருக்கும் போது அப்பா உள்ளே நுழைந்தார்.

“அப்பா!” என்��
� கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக் கட்டிக்கொண்டது. அண்ணாந்து பார்த்து, “எனக்கு என்னா கொண்டாந்தே?” என்று கேட்டது.

“என்னைத்தான் கொண்டாந்தேன்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“என்னப்பா, தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது?” என்று சிணுங்கியது குழந்தை.

“பொரி கடலை உடம்புக்காகாது; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“இதுதான் உம்முடைய குழந்தையோ?” என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில் விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.

கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.

“சும்மா சொல்லும்; இப்பொவெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும். பால், தயிர்கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை” என்று சிரித்தார் கடவுள்.

“ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“இப்படி உட்காருங்கள்; இப்பொ குழாயிலே தண்ணீர் வராது; குடத்திலே எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று உள்ளே இருட்டில் மறைந்தார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் துண்டை உதறிப் போட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்தார்.

மனசிலே ஒரு துறுதுறுப்பும் எல்லையற்ற நிம்மதியும் இருந்தன.

“வாடியம்மா கருவேப்பிலைக் கொழுந்தே?” என்று கைகளை நீட்டினார் கடவுள்.

ஒரே குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது குழந்தை.

“எம்பேரு கருகப்பிலைக் கொளுந்தில்லெ; வள்ளி. அப்பா மாத்திரம் என்னெக் கறுப்பி கறுப்பின்னு கூப்பிடுதா; நான் என்ன அப்பிடியா?” என்று கேட்டது.

அது பதிலை எதிர்பார்க்கவில்லை. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில் இருந்த கறுப்பு மறு தென்பட்டது.

“அதென்ன தாத்தா, கன்னங்கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு” என்று கண்களைச் சிமிட்டிப் பேசிக் கொண்டு மடியில் எழுந்து நின்று, கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம் பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.

“கூச்சமா இருக்கு” என்று உடம்பை நெளித்தார் கடவுள்.

“ஏன் தாத்தா, களுத்திலே நெருப்பு கிருப்புப் பட்டு பொத்துப் போச்சா? எனக்கும் இந்தா பாரு” என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப் போன கொப்புளத்தைக் காட்டியது.

“பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யம்மா; முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே போட்டுக்கொண்டேன். எனக்குப் பங்கில்லியான்னு களுத்தெப் புடிச்சுப்புட்டாங்க. அதிலெ இருந்து அது அங்கியே சிக்கிக்கிச்சு; அது கெடக்கட்டும். உனக்கு விளையாடத் தோழிப் பிள்ளைகள் இல்லியா?” என்று கேட்டார் கடவுள்.

“வட்டும் கரித்துண்டும் இருக்கே; நீ வட்டாட வருதியா?” என்று கூப்பிட்டது.

குழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள்.

“தாத்தா, தோத்துப் போனியே” என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை.

“ஏன்?” என்று கேட்டார் கடவுள்.

கால் கரிக்கோட்டில் பட்டுவிட்டதாம்.

“முந்தியே சொல்லப்படாதா?” என்றார் கடவுள்.

“ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா?” என்று கையை மடக்கிக் கொண்டு கேட்டது குழந்தை.

அந்தச் சமயத்தில் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை முன்னே வர, ஸ்ரீமதி பின்னே குடமும் இடுப்புமாக இருட்டிலிருந்து வெளிப்பட்டார்கள்.

“இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா, கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குத் தான் கொடுத்திருக்கு. தெரியாதா?” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“என்னமோ தேசாந��
�திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே, அந்த மாமாவா? வாருங்க மாமா, சேவிக்கிறேன்” என்று குடத்தை இறக்கி வைத்துவிட்டு விழுந்து நமஸ்கரித்தாள். காது நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது.

“பத்தும் பெருக்கமுமாகச் சுகமாக வாழவேணும்” என்று ஆசீர்வதித்தார் கடவுள்.

காந்திமதி அம்மையாருக்கு (அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர்) என்றும் அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது. மனமும் குளிர்ந்தது. கண்ணும் நனைந்தது.

“வாசலில் இருக்கற அரிசி மூட்டையை அப்படியே போட்டு வச்சிருந்தா?” என்று ஞாபகமூட்டினார் கடவுள்.

“இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பந்தான் கேட்டேன். இல்லைன்னு சொன்னாக. ஊருக்கெல்லாம் மருந்து கொடுக்காக; இவுக மறதிக்குத்தான் மருந்தைக் காங்கலெ. படெச்ச கடவுள்தான் பக்கத்திலே நின்னுதான் பார்க்கணும்” என்றாள் காந்திமதி அம்மாள்.

“பாத்துக்கிட்டுத்தான் நிக்காறே” என்றார் கடவுள் கிராமியமாக.

“பாத்துச் சிரிக்கணும், அப்பந்தான் புத்தி வரும்” என்றாள் அம்மையார்.

கடவுள் சிரித்தார்.

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வாசலுக்குப் போனார்கள்.

“இந்தச் செப்பிடுவித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே” என்றார் பிள்ளை காதோடு காதாக.

“இனிமேல் இல்லை” என்றார் கடவுள்.

கந்தசாமிப் பிள்ளை முக்கி முனகிப் பார்த்தார்; மூட்டை அசையவே இல்லை.

“நல்ல இளவட்டம்!” என்று சிரித்துக் கொண்டே மூட்டையை இடுப்பில் இடுக்கிக் கொண்டார் கடவுள்.

“நீங்க எடுக்கதாவது; உங்களைத்தானே, ஒரு பக்கமாத் தாங்கிப் பிடியுங்க; சும்மா பாத்துக்கிட்டே நிக்கியளே!” என்று பதைத்தாள் காந்திமதியம்மாள்.

“நீ சும்மா இரம்மா; எங்கே போடணும்னு சொல்லுதெ?” என்றார் கடவுள்.

“இந்தக் கூடத்திலியே கெடக்கட்டும்; நீங்க இங்கே சும்மா வச்சிருங்க” என்று வழி மறித்தாள் காந்திமதியம்மாள்.

கந்தசாமிப் பிள்ளையும் கடவுளும் சாப்பிட்டுவிட்டு வாசல் திண்ணைக்கு வரும்பொழுது இரவு மணி பதினொன்று.

“இனிமேல் என்ன யோசனை?” என்றார் கடவுள்.

“தூங்கத்தான்” என்றார் பிள்ளை கொட்டாவி விட்டுக்கொண்டே.

“தாத்தா, நானும் ஒங்கூடத்தான் படுத்துக்குவேன்” என்று ஓடிவந்தது குழந்தை.

“நீ அம்மையெக் கூப்பிட்டுப் பாயும் தலையணையும் எடுத்துப் போடச் சொல்லு” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“என்னையுமா தூங்கச் சொல்லுகிறீர்?” என்று கேட்டார் கடவுள்.

“மனுஷாள்கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான் நடந்தாகணும்; தூங்க இஷ்டமில்லை என்றால் பேசாமல் படுத்துக்கொண்டிருங்கள். ராத்திரியில் நடமாடினால் அபவாதத்துக்கு இடமாகும்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.
3

கந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை ஆபீசில் தரையில் உட்கார்ந்து கொண்டு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். போகர் நூலுக்கு விளக்கவுரை பிள்ளையவர்கள் பத்திரிகையில் மாதமாதம் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி வருகிறது.

“ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு, அப்பனே வயமான செங்கரும்பு, காச்சிய வெந்நீருடனே கருடப் பிச்சு, கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை (கருடப்பச்சை என்றும் பாடம்)…” என்று எழுதிவிட்டு, வாசல் வழியாகப் போகும் தபாற்காரன் உள்ளே நுழையாமல் நேராகப் போவதைப் பார்த்துவிட்டு, “இன்றைக்கு பத்திரிகை போகாது” என்று முனகியபடி, எழுதியதைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார்.

வாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின் இடுப்பில் பட்டுச் சிற்றாடை; கை நிறைய மிட்டாய்ப் பொட்டலம்.

“தாத்தாவும் நானும் செத்த காலேஜ் உசிர் காலேஜ
ெல்லாம் பார்த்தோம்” என்று துள்ளியது குழந்தை.

“எதற்காக ஓய், ஒரு கட்டடத்தைக் கட்டி, எலும்பையும் தோலையும் பொதிந்து பொதிந்து வைத்திருக்கிறது? என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ?” என்று கேட்டார் கடவுள். குரலில் கடுகடுப்புத் தொனித்தது.

“அவ்வளவு ஞானத்தோடே இங்கே யாரும் செய்துவிடுவார்களா? சிருஷ்டியின் அபூர்வத்தைக் காட்டுவதாக நினைத்துக்கொண்டுதான் அதை எல்லாம் அப்படி வைத்திருக்கிறார்கள். அது கிடக்கட்டும்; நீங்க இப்படி ஓர் இருபத்தைந்து ரூபாய் கொடுங்கள்; உங்களை ஜீவிய சந்தாதாராகச் சேர்த்துவிடுகிறேன்; இன்று பத்திரிகை போய் ஆக வேணும்” என்று கையை நீட்டினார் பிள்ளை.

“இது யாரை ஏமாற்ற? யார் நன்மைக்கு?” என்று சிரித்தார் கடவுள்.

“தானம் வாங்கவும் பிரியமில்லை; கடன் வாங்கும் யோசனையும் இல்லை; அதனால் தான் வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிவிட்டீர்களே! இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணம் வரையில் எல்லாம் கலப்படம் தான். இது உங்களுக்குத் தெரியாதா?” என்று ஒரு போடு போட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் யோசனையில் ஆழ்ந்தார்.

“அதிருக்கட்டும், போகரிலே சொல்லியிருக்கிறதே, கருடப்பச்சை; அப்படி ஒரு மூலிகை உண்டா? அல்லது கருடப்பிச்சுதானா?” என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

“பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு; பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே, இது நியாயமா? நான் என்னத்தைக் கண்டேன்? உம்மை உண்டாக்கினேன்; உமக்குக் கந்தசாமிப் பிள்ளையென்று உங்க அப்பா பெயர் இட்டார்; அதற்கும் நான் தான் பழியா?” என்று வாயை மடக்கினார் கடவுள்.

“நீங்கள் இரண்டு பேரும் வெயிலில் அலைந்துவிட்டு வந்தது கோபத்தை எழுப்புகிறது போலிருக்கிறது. அதற்காக என்னை மிரட்டி மடக்கிவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்; அவசரத்தில் திடுதிப்பென்று சாபம் கொடுத்தீரானால், இருபத்தைந்து ரூபாய் வீணாக நஷ்டமாய்ப் போகுமே என்பதுதான் என் கவலை” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

பொட்டலத்தை அவிழ்த்துத் தின்றுகொண்டிருந்த குழந்தை, “ஏன் தாத்தா அப்பாகிட்டப் பேசுதே? அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது; இதைத் தின்னு பாரு, இனிச்சுக் கெடக்கு” என்று கடவுளை அழைத்தது.

குழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டே, “பாப்பா, உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு!” என்றார் கடவுள்.

குழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது.

“தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு செல்லுதியே. அப்போ எனக்கு இல்லையா?” என்று கேட்டது குழந்தை.

கடவுள் விழுந்துவிழுந்து சிரித்தார். “அவ்வளவும் உனக்கே உனக்குத்தான்” என்றார்.

“அவ்வளவுமா! எனக்கா!” என்று கேட்டது குழந்தை.

“ஆமாம். உனக்கே உனக்கு” என்றார் கடவுள்.

“அப்புறம் பசிக்காதே! சாப்பிடாட்டா அம்மா அடிப்பாங்களே! அப்பா லேவியம் குடுப்பாங்களே!” என்று கவலைப்பட்டது குழந்தை.

“பசிக்கும்; பயப்படாதே!” என்றார் கடவுள்.

“தாங்கள் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அது ஹோட்டல் பட்சணம். ஞாபகம் இருக்கட்டும்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“நான் தான் இருக்கிறேனே!” என்றார் கடவுள்.

“நீங்கள் இல்லையென்று நான் எப்பொழுது சொன்னேன்?” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

சில விநாடிகள் பொறுத்து, “இன்றைச் செலவு போக, அந்த நூறு ரூபாயில் எவ்வளவு மிச்சம்?” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

“உமக்கு ரூபாய் இருபத்தைந்து போகக் கையில் ஐம்பது இருக்கிறது” என்று சிரித்தார் கடவுள்.

“அதற்குப் பிறகு என்ன யோசனை?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை.”

“என்னைப் போல வைத்தியம் செய்யலாமே!”

“உம்��
�ுடன் போட்டிபோட நமக்கு இஷ்டம் இல்லை.”

“அப்படி நினைத்துக்கொள்ள வேண்டாம். என்னோடே போட்டி போடல்லே; லோகத்து முட்டாள்தனத்தோடே போட்டி போடுகிறீர்கள்; பிரியமில்லை என்றால் சித்தாந்த உபந்நியாசங்கள் செய்யலாமே?”

“நீர் எனக்குப் பிழைக்கிறதற்கா வழி சொல்லுகிறீர்; அதில் துட்டு வருமா!” என்று சிரித்தார் கடவுள்.

“அப்போ?”

“எனக்குத்தான் கூத்து ஆட நன்றாக வருமே; என்ன சொல்லுகிறீர்? தேவியை வேண்டுமானாலும் தருவிக்கிறேன்.”

கந்தசாமிப் பிள்ளை சிறிது யோசித்தார். “எனக்கு என்னவோ பிரியமில்லை!” என்றார்.

“பிறகு பிழைக்கிற வழி? என்னங்காணும், பிரபஞ்சமே எங்கள் ஆட்டத்தை வைத்துத்தானே பிழைக்கிறது?”

“உங்கள் இஷ்டம்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கந்தசாமிப் பிள்ளை மறுபடியும் சிறிது நேரம் சிரித்தார். “வாருங்கள், போவோம்” என்று ஆணியில் கிடந்த மேல்வேட்டியை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டார்.

“குழந்தை!” என்றார் கடவுள்.

“அதுதான் உறங்குகிறதே; வருகிற வரையிலும் உறங்கட்டும்” என்றார் பிள்ளை.

கால்மணிப் போது கழித்து மூன்று பேர் திவான் பகதூர் பிரகதீசுவர சாஸ்திரிகள் பங்களாவுக்குள் நுழைந்தனர். ஒருவர் கந்தசாமிப் பிள்ளை; மற்றொருவர் கடவுள்; மூன்றாவது பெண் – தேவி.

“நான் இவருக்குத் தங்கபஸ்பம் செய்து கொடுத்து வருகிறேன். நான் சொன்னால் கேட்பார்” என்று விளக்கிக் கொண்டே முன் வராந்தாப் படிக்கட்டுகளில் ஏறினார் பிள்ளை; இருவரும் பின் தொடர்ந்தனர். தேவியின் கையில் ஒரு சிறு மூட்டை இருந்தது.

“சாமி இருக்காங்களா; நான் வந்திருக்கேன் என்று சொல்லு” என்று அதிகாரத்தோடு வேலைக்காரனிடம் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை.

“பிள்ளையவர்களா! வரவேணும், வரவேணும்; பஸ்பம் நேத்தோடே தீர்ந்து போச்சே; உங்களைக் காணவில்லையே என்று கவலைப் பட்டேன்” என்ற கலகலத்த பேச்சுடன் வெம்பிய சரீரமும், மல் வேஷ்டியும், தங்க விளிம்புக் கண்ணாடியுமாக ஒரு திவான் பகதூர் ஓடி வந்தது. எல்லோரையும் கும்பிட்டுக்கொண்டே அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது.

“உட்காருங்கள், உட்காருங்கள்” என்றார் திவான் பகதூர்.

கந்தசாமிப் பிள்ளை அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே, “பரவாயில்லை; சாயங்காலம் பஸ்மத்தை அனுப்பி வைக்கிறேன்; நான் வந்தது இவாளை உங்களுக்குப் பரிசயம் பண்ணி வைக்க. இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர சாகரம்; உங்கள் நிருத்திய கலாமண்டலியில் வசதி பண்ணினா சௌகரியமாக இருக்கும்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

திவான் பகதூரின் உத்ஸாகம் எல்லாம் ஆமையின் காலும் தலையும் போல் உள்வாங்கின. கைகளைக் குவித்து, ஆள்காட்டி விரல்களையும் கட்டை விரல்களையும் முறையே மூக்கிலும் மோவாய்க்கட்டையிலுமாக வைத்துக்கொண்டு “உம்”, “உம்” என்று தலையை அசைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“இவர் பெயர் கூத்தனார்; இந்த அம்மாளின் பெயர் பார்வதி. இருவரும் தம்பதிகள்” என்று உறவைச் சற்று விளக்கிவைத்தார் கந்தசாமிப் பிள்ளை.

“நான் கேள்விப்பட்டதே இல்லை; இதற்கு முன் நீங்கள் எங்கேயாவது ஆடியிருக்கிறீர்களா?” என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம் திவான் பகதூர் கேட்டார்.

கடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல் “நாங்கள் ஆடாத இடம் இல்லை” என்றாள் தேவி.

“என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும்; அம்மா ரொம்பக் கறுப்பா இருக்காங்களே, சதஸிலே சோபிக்காதே என்று தான் யோசிக்கிறேன்” என்றார் வர்ணபேத திவான் பகதூர்.

“பெண் பார்க்க வந்தீரா அல்லது நாட்டியம் பார்க்கிறதாக யோசனையோ?” என்று கேட்டாள் தேவி.

“அம்மா, கோவிச்சுக்கப்படாது. ஒன்று சொல்லுகிறேன் கேளுங்க; கலைக்கும் கறுப்புக்கும் கானாவுக்��
�ு மேலே சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா இந்தக் கலாமண்டலியிலே பிரஸிடெண்டாக இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் கண்கள் தான் கறுத்திருக்கும்.”

“உம்ம மண்டலியுமாச்சு, சுண்டெலியுமாச்சு!” என்று சொல்லிக் கொண்டே தேவி எழுந்திருந்தாள்.

“இப்படி கோவிச்சுக்கப்படாது” என்று ஏக காலத்தில் திவான் பகதூரும் கந்தசாமிப் பிள்ளையும் எழுந்திருந்தார்கள்.

“இவர்கள் புதுப் புதுப் பாணியிலே நாட்டியமாடுவார்கள். அந்த மாதிரி இந்தப் பக்கத்திலேயே பார்த்திருக்க முடியாது. சாஸ்திரம் இவர்களிடம் பிச்சை வாங்க வேணும். ஒரு முறை தான் சற்றுப் பாருங்களேன்” என்று மீண்டும் சிபார்சு செய்தார் கந்தசாமிப் பிள்ளை.

“சரி, பார்க்கிறது; பார்க்கிறதுக்கு என்ன ஆட்சேபம்?” என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். “சரி, நடக்கட்டும்!” என்று சொல்லிக்கொண்டு இமைகளை மூடினார்.

“எங்கே இடம் விசாலமாக இருக்கும்?” என்று தேவி எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.

“அந்த நடு ஹாலுக்குள்ளேயே போவோமே” என்றார் கடவுள்.

“சரி” என்று உள்ளே போய்க் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.

சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.

மயான ருத்திரனாம் – இவன்
மயான ருத்திரனாம்!

கதவுகள் திறந்தன.

கடவுள் புலித்தோலுடையும் திரிசூலமும் பாம்பும் கங்கையும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.

மறுபடியும் இசை, மின்னலைச் சிக்கலெடுத்து உதறியது போல, ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில் கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில் சிரிப்பும் புரண்டோட, காலைத் தூக்கினார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.

“ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும்.”

“சட்! வெறும் தெருக்கூத்தாக இருக்கு; என்னங்காணும், போர்னியோ காட்டுமிராண்டி மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு” என்று அதட்டினார் திவான் பகதூர்.

ஆடிய பாதத்தை அப்படியே நிறுத்தி, சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றார் கடவுள்.

“ஓய்! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும்? புலித்தோலைத்தான் கட்டிக்கொண்டீரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும்; புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக் கொள்ள வேணும்; கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங்காணும்! வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதல்லே அந்தப் பாம்புகளையெல்லாம் பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை!” என்றார் திவான் பகதூர்.

ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளையையும் அவர் லேசில் விட்டுவிடவில்லை. “கந்தசாமிப் பிள்ளைவாள், நீர் ஏதோ மருந்து கொடுத்துக்கொண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக் கூத்துப் பார்க்க முடியாது; கச்சேரியும் வைக்க முடியாது; அப்புறம் நாலு பேரோடே தெருவிலே நான் நடமாட வேண்டாம்?”

கால் மணி நேரங்கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீசில் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், தேவியைத் தவிர. குழந்தை பாயில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு பேரும் மௌனமாக இருந்தார்கள். “தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாது போல இருக்கே!” என்றார் கடவுள்.

“நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களுக்குப் பிடித்தது லோகத்துக்��
�ுப் பிடிக்கவில்லை; வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கிறதுதானே!”

கடவுள், ‘ச்சு’ என்று நாக்கைச் சூள் கொட்டினார்.

“அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ!”

“உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்ததுபோல்” என்றார் கடவுள்.

“உங்களைப் பார்த்தாலோ?” என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.

“உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது” என்றார் கடவுள்.

“உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு” என்றார் கந்தசாமிப் பிள்ளை.

அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.

மேஜையின் மேல் ஜீவிய சந்தா ரூபாய் இருபத்தைந்து நோட்டாகக் கிடந்தது.

“கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை, ஜீவிய சந்தா வரவு ரூபாய் இருபத்தைந்து” என்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை.

“தாத்தா ஊருக்குப் போயாச்சா, அப்பா?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தது குழந்தை.

கலைமகள், அக்டோபர், நவம்பர் 1943

https://thoguppukal.wordpress.com/2010/06/20/கடவுளும்-கந்தசாமிப்-பிள்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.