Jump to content

அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும்!


Recommended Posts

அருண். விஜயராணி

- ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான பெண் படைப்பாளிகளிலோருவர் அருண் விஜயராணி. அவர் இன்று மறைந்துள்ளதாக எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் முகநூலில் அறிவித்திருந்தார். அவரது மறைவையொட்டி எழுத்தாளர் முருகபூபதி  எழுதிய இந்தக்கட்டுரை வெளியாகின்றது. -

கன்னிகளின் குரலாக தனது எழுத்தூழியத்தை தொடர்ந்த அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும்

இலங்கை வானொலி ‘ விசாலாட்சிப்பாட்டி ‘ இலக்கியத்துறையில் ஆற்றிய பங்களிப்பு

” வணக்கம்…. பாருங்கோ…. என்னத்தைச் சொன்னாலும் பாருங்கோ, உங்கடை விசாலாட்சிப்பாட்டியின்ர கதையைப்போல ஒருத்தரும் சொல்லேலாது. இந்தக்குடுகுடு வயதிலையும் அந்தப்பாட்டி கதைக்கிற கதையளைக் கேட்டால் பாருங்கோ…. வயதுப்பிள்ளைகளுக்கும் ஒரு நப்பாசை தோன்றுது. என்ன இருந்தாலும் திங்கட்கிழமை எண்டால் பாட்டியின்ர நினைவு தன்னால வருகுது. அதனால சில திங்கட்கிழமையில அவவுக்கு தொண்டை கட்டிப்போறதோ இல்லை… வேற ஏதேன் கோளாறோ தெரியாது. இவ வரவே மாட்டா….. பாவம் கிழவிக்கு என்னாச்சும் நேந்து போச்சோ எண்டு ஏங்கித் துடிக்கின்ற உள்ளங்களின்ரை எண்ணிக்கை எத்தனை எண்டு உங்களுக்குத்தெரியுமே…? அதனாலை ஒண்டு சொல்லுறன் கோவியாதையுங்கோ… பாட்டியின்ர பிரதியளை இரண்டு மூண்டா முன்னுக்கே அனுப்பிவைச்சியளென்டால் பாட்டி பிழைச்சுப்போகும். தடவித் தடவி வாசிக்கிற பாட்டிக்கு நீங்கள் இந்த உதவியை எண்டாலும் செய்து குடுங்கோ ”

இக்கடிதம் இலங்கை வானொலி கலையகத்திலிருந்து 08-11-1976 ஆம் திகதி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு. விவியன் நமசிவாயம் அவர்களிடமிருந்து ஒரு பெண் எழுத்தாளருக்கு எழுதப்பட்டது. அந்தப்பெண்தான் விசாலாட்சிப்பாட்டி தொடரை எழுதியவர். அந்தப்பெண் அப்பொழுது பாட்டியல்ல. இளம் யுவதி. அவர்தான் அன்றைய விஜயராணி செல்வத்துரை, இன்றைய படைப்பாளி அருண். விஜயராணி. இவரது விசாலாட்சிப்பாட்டி வானொலித் தொடர் சுமார் 25 வாரங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியது.

அக்காலத்தில் பல வானொலி நாடகங்கள் யாழ்ப்பாண பேச்சு உச்சரிப்பில் ஒலிபரப்பாகின. விசாலாட்சிப்பாட்டிக்குரிய வசனங்களை அந்த உச்சரிப்பிலேயே விஜயராணி எழுதினார்.

சமூகம் குறித்த அங்கதம் அதில் வெளிப்பட்டது. அங்கதம் சமூக சீர்திருத்தம் சார்ந்தது. அதனை அக்கால கட்டத்தின் நடைமுறை வாழ்வுடன் அவர் வானொலி நேயர்களுக்கு நயமுடன் வழங்கினார். வடக்கில் உரும்பராயைச் சேர்ந்த விஜயராணியின் முதலாவது சிறுகதை ‘ அவன் வரும்வரை ‘ இந்து மாணவன் என்ற ஒரு பாடசாலை மலரில் 1972 இல் வெளியானது.

தவறுகள் வீட்டில் ஆரம்பிக்கின்றன என்ற இவர் எழுதிய மற்றும் ஒரு வானொலி நாடகத்தை பின்னாளில் துணை என்ற பெயரில் தொலைக்காட்சி நாடகமாக இயக்கித் தயாரித்து ரூபவாஹினியில் விக்னேஸ்வரன் ஒளிபரப்பினார்.

தொலைக்காட்சியின் வருகைக்கு முன்னர் மக்களிடம் வலிமையான ஊடகமாக செல்வாக்கு செலுத்தியிருந்தது வானொலி. அதிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையும் வர்த்தக சேவையும் இலங்கைத் தமிழ் நேயர்களுக்கு மாத்திரமின்றி இந்தியாவில் தமிழ் நேயர்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாகத் திகழ்ந்தது.

அதற்கான காரணம்: ஒலிபரப்பின் தரம். ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள். ஒலிபரப்பாளர்களின் குரல் வளம். வானொலிகள் இருந்த அனைத்து தமிழ் – முஸ்லிம் இல்லங்களிலும் காலை முதல் இரவு வரையில் ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்தது. அந்த நிகழ்ச்சிகளின் பெயர்ப்பட்டியலே நீளமானது.

இதில் தமிழ் – முஸ்லிம் எழுத்தாளர்களை மிகவும் ஆகர்சித்த நிகழ்ச்சிகள், வானொலி நாடகங்கள், இசையும் கதையும், மாதர் மற்றும் கிராம சஞ்சிகை, இளைஞர்களுக்கான சங்கநாதம், சிறுவர்களுக்கான சிறுவர்மலர். இவற்றில் ஏராளமான நாடக எழுத்தாளர்கள், வானொலி கதாசிரியர்கள், சிறுவர் இலக்கியம் மற்றும் சிறுவர் நாடகம், நேயர் கடிதம் எழுதுபர்கள் அறிமுகமானார்கள். அவ்வாறு வானொலி நேயர்களுக்கு அறிமுகமாகியவர் விஜயராணி.

கொழும்பில் தெகிவளையில் தமது பெற்றோர் சகோதரங்களுடன் வாழ்ந்த காலப்பகுதியில் – இலங்கை வானொலி தமிழ் நேயர்களினால் வரவேற்பைப்பெற்றிருந்த சில நிகழ்ச்சிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தார்.

அவுஸ்திரேலியாவில் கால்நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலம் முதல் வாழும் திருமதி அருண். விஜயராணி மெல்பனிலிருந்து அந்த வசந்தகாலத்தை நினைத்து நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார்.

படைப்பாளியிடம் எழுதிக்கேட்டு ஆக்கங்களை ஊடகங்களில் ஒலிபரப்பிய வானொலியும் – பிரசுரித்த பத்திரிகைகளும் இன்றைய நவீன யுகத்தில் அந்த மரபை கைவிட்டமைக்கு இன்றைய நவீன தொழில் நுட்பம்தான் அதிலும் கணினி – மின்னஞ்சல் யுகம்தான் பிரதான காரணம்.

வீரகேசரி வாரவெளியீட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய பொன். ராஜகோபால் ஈழத்து எழுத்தாளர்களை ஊக்குவித்தவர். 1970 – 1980 காலப்பகுதியில் அவர் சில பரீட்சார்த்த முயற்சிகளையும் வாரவெளியீட்டில் மேற்கொண்டார்.

ஏற்கனவே படைப்பாளிகள் எஸ்.பொன்னுத்துரை, குறமகள் வள்ளிநாயகி, இ.நாகராஜன், கனகசெந்தி நாதன் ஆகியோர் இணைந்து எழுதிய மத்தாப்பு புதினத்தை படித்திருந்த அவர், அதுபோன்றதொரு தொடரை வீரகேசரி வாரவெளியீட்டிலும் வெளியிட விரும்பினார்.

நாளைய சூரியன் என்ற தலைப்பில் ஐந்து பெண் எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் தொடர் வெளியானது. முதல் அங்கத்தை அருண். விஜயராணி எழுதியிருந்தார். தொடர்ந்து மண்டூர் அசோக்கா, தமிழ்ப்பிரியா, தாமரைச்செல்வி, தேவமனோகரி ஆகியோர் எழுதினர். இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகள் பற்றி முன்பொரு தடவை எழுதியிருக்கின்றேன்.

ஆயினும் – இலங்கையில் இருந்தகாலத்தில் நான் இவரை சந்திக்கவில்லை. குறிப்பிட்ட நாளைய சூரியன் தொடரை ஒப்புநோக்கும் (Proof Reading) பொழுதே படித்திருந்தேன். அக்கால கட்டத்தில் நாளைய சூரியன் வாசகர்களிடமும் விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்றிருந்தமைக்குக்காரணம் அந்தக்கதையின் கருப்பொருள். ஹிப்பிக் கோலத்தில் அலையும் ஒரு பாத்திரம் பற்றிய கதை. ஈழத்து இலக்கியத்தில் அதனை பெண் எழுத்தாளர்கள் எழுதியமையினால் துணிகர முயற்சி என்றும் சில விமர்சகர்கள் சொன்னார்கள்.

இலங்கை வானொலியில் விஜயராணி எழுதிய சில இசையும் கதையும் மற்றும் சில சிறுகதைகள், நாடகங்களை கேட்டிருக்கின்றேன். வீரகேசரி, மல்லிகையில் அவருடைய கதைகளை வாசித்திருக்கின்றேன்.

எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1980 இல் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்த கல்விக் கூட்டுறவு மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடத்திய அதன் வெள்ளிவிழா கருத்தரங்கில் ஒரு நாள் மாலை நிகழ்ச்சிக்கு அவர் வந்ததாகவும் அறிந்தேன். ஆனால் சந்திக்கக்கிடைக்கவில்லை.

பின்னர் சிறிதுகாலம் விஜயராணியின் எழுத்துக்களை பத்திரிகையிலும் காணவில்லை. வானொலியிலும் அவரது படைப்புகள் ஒலிபரப்பாகவில்லை.

வீரகேசரியில் விஜயராணியின் உறவினர் சோமசுந்தரம் ராமேஸ்வரன் பத்திரிகையாளராக பணியிலிருந்த எனது நண்பர் . அவர்தான் விஜயராணி திருமணம் முடித்து மத்திய கிழக்கில் ஒரு நாட்டிற்கு கணவருடன் சென்றுவிட்ட தகவலை தெரிவித்தார்.

காலங்கள் சக்கரம் பூட்டியது. விரைந்துவிடும்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் வந்ததும், எனது நிரந்தர வதிப்பிட அனுமதி தொடர்பான விண்ணப்பங்களை தயாரித்துத் தந்து என்னுடன் பலதடவைகள் மெல்பன் குடிவரவு திணைக்களத்திற்கு வந்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன், ஒருநாள் ” எழுத்தாளர் விஜயராணி செல்வத்துரையை உமக்குத் தெரியுமா ….?” – என்று கேட்டார்.

நான் உடனே எனக்கு அருண். விஜயராணி என்ற எழுத்தாளர் பெயர்தான் தெரியும் என்றேன். அவர் தனது தங்கை என்றார் ரவீந்திரன். தங்கை தற்பொழுது லண்டனில் இருப்பதாகவும் விரைவில் மெல்பனுக்கு குடும்பத்துடன் வந்துவிடுவார் என்றும் அவர் சொன்னார்.

1988 இல் மெல்பனில் சில நண்பரகள் இணைந்து நடத்திய மக்கள் குரல் என்ற கலை, இலக்கிய அரசியல் விமர்சன கையெழுத்து பத்திரிகை போட்டோ கொப்பி இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்டு மெல்பன் – சிட்னியில் பரபரப்பையே ஏற்படுத்தியிருந்தது.

அதன் முதலாவது ஆண்டு நிறைவுக்கூட்டம் கருத்தரங்காக மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடந்தபொழுது லண்டனிலிருந்து வருகை தந்திருந்த அருண். விஜயராணியையும், ரவீந்திரன் அழைத்து வந்திருந்தார். அன்றுதான் அவரை முதல் முதலில் சந்தித்தேன்.

விஜயராணியின் குடும்பத்தினர் கலை, இலக்கியம், இசை, நடனம் முதலான துறைகளில் ஆர்வம் மிக்கவர்கள். விஜயராணியின் தந்தையார் இலங்கையின் மூத்த ஓவியர். யோகர் சுவாமியின் அபிமனாத்துக்குரிய சீடர். இன்றும் நாம் பார்க்கும் நாவலியூர் சோமசுந்தரப்புலவரின் படத்தை தமது ஒளிப்படக்கருவியால் எடுத்த கமரா கலைஞருமாவார். அவர்பற்றிய பதிவை எற்கனவே எழுதியிருக்கின்றேன்.

அவருடைய தங்கையின் மகன்தான் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் முனியப்பதாசன். விஜயராணியின் அக்காமார் , அண்ணன்மாரின் பிள்ளைகள் நடன, இசை அரங்கேற்றம் கண்டவர்கள். சட்டத்தரணி ரவீந்திரன் கலை, இலக்கிய ஆர்வலர். அத்துடன் லண்டனில் தமிழ் தகவல் நிலையம், இலங்கையில் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் கந்தசாமியுடன் இணைந்து பல சமூகப்பணிகளை மேற்கொண்டவர்.

இவ்வாறு கலை, இலக்கிய, சமூகப்பார்வையுடன் வாழ்ந்த குடும்பத்திலிருந்து வந்த விஜயராணியின் கணவர் அருணகிரி ஒரு பொறியியலாளர். பெரும்பாலான பெண் இலக்கியவாதிகளின் கணவர்கள் போன்று அவருக்கு இந்தத்துறையில் நாட்டம் இல்லையாயினும் தமது மனைவியின் எழுத்துப்பணிகளுக்கு உற்றதுணையாக விளங்குபவர்.

அதனாலும் விஜயராணி செல்வத்துரை என்ற முன்னர் நாம் அறிந்திருந்தவர் பின்னாளில் இலக்கிய உலகில் அருண். விஜயராணி என்று அறியப்பட்டார்.

அருண். விஜயராணி எழுதத் தொடங்கியகாலம் முதல் பல நாடகங்களை சிறுகதைகளை, வானொலிச்சித்திரங்ளை எழுதியிருந்தபோதிலும் தமது நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அவர் மெல்பன் வந்தபின்னர் எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலின் வெளியீட்டு விழாவை 25-06-1989 ஆம் திகதி மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடத்தியபொழுது அருண். விஜயராணியும் உரையாற்றினார். சிட்னியிலிருந்து மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையும் வருகைதந்து உரையாற்றினார். இருவரும் அவுஸ்திரேலியாவில் ஏறிய முதல் மேடையாக அந்த இலக்கிய நிகழ்வு அமைந்தது.

தாம் பலவருடங்கள் இலங்கையிலும் லண்டனிலும் இருந்தும்கூட தமது ஒரு நூலைத்தன்னும் வெளியிட முடியாதிருந்த இயலாமையை அன்று அவர் மேடையில் சொல்லி, அந்த நிகழ்வு தனக்கு முன்மாதிரியாக இருப்பதாக குறிப்பிட்டதுடன், வீரகேசரி வாரவெளியீட்டில் அந்த நிகழ்வு பற்றிய கட்டுரையையும் பின்னர் எழுதியிருந்தார்.

1990 ஆம் ஆண்டு நான் சென்னைக்கு புறப்படுவதற்கு முதல்நாள் மாலை தமது கணவருடன் எனது வீட்டிற்கு வந்த அவர், என்னிடம் ஒரு கோவையை கையளித்து, அதில் தனது சிறுகதைகள் இருப்பதாகவும் அதனை சென்னை தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணனிடம் சேர்ப்பித்து அச்சிடுவதற்கு வழிவகை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

அன்றைய உரையாடலில் அதற்கு தூண்டுகோலாக இருந்தவர் அவருடைய கணவர்தான் என்பதையும் அறியமுடிந்தது.

விமானத்திலேயே அந்தக் கதைகளின் மூலப்பிரதிகளை படித்தேன். தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியம் செல்வன் வரைந்த முகப்போவியத்துடன் அந்தநூல் கன்னிகா தானங்கள் என்ற பெயரில் சென்னை தமிழ்ப்புத்தகாலய வெளியீடாக வந்தது.

21-04-1991 ஆம் திகதி கன்னிகாதானங்கள் மெல்பனில் அதே வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி காசிநாதர் தலைமையில் நடந்தது. இலங்கை வானொலியின் முன்னாள் தமிழ்ச் சேவைப்பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் வருகைதந்து வாழ்த்துரை வழங்கியபொழுது அருண். விஜயராணியின் வானொலி நிகழ்ச்சிப்பங்களிப்புகளை நினைவுபடுத்தினார்.

குறிப்பிட்ட கன்னிகா தானங்கள் நூலை தமிழகத்தில் வாசித்த சுஜாத்தா ராணி என்பவர் Indian Express Weekend இதழில் நல்லதொரு விமர்சனம் எழுதியிருந்தார். அதனையும் தினகரன் வாரமஞ்சரியில் அந்தனி ஜீவா – தேவமலர் என்ற புனைபெயரில் எழுதிய பெண்பிரம்மாக்கள் என்ற தொடரில் அருண். விஜயராணி பற்றி எழுதியிருந்த குறிப்புகளையும் சிட்னியிலிருந்து கவிஞர் பாஸ்கரன், எஸ்.பொன்னுத்துரை, மாத்தளை சோமு இலங்கையிலிருந்து பொன். ராஜகோபால், சுடர் இதழ் ஆசிரியராகவிருந்த கனகசிங்கம் (பொன்னரி) மெல்பனிலிருந்து ரேணுகா தனஸ்கந்தா, முருகபூபதி குவின்ஸ்லாந்திலிருந்து வானொலிக் கலைஞர் சண்முகநாதன் வாசுதேவன் ஆகியோர் எழுதிய குறிப்புகளையும் தொகுத்திருந்த சிறிய பிரசுரமும் அன்றையதினம் வெளியிடப்பட்டது.

அருண். விஜயராணியின் மெல்பன் வருகையின் பின்னர் இங்கும் சில கலை, இலக்கிய மாற்றங்கள் தோன்றின. 1990 தொடங்கப்பட்ட அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் கலாசார செயலாளராக அவர் அங்கம் வகித்ததுடன் சங்கத்தின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சிட்னி – மெல்பன் குவின்ஸ்லாந்து தமிழ் வானொலிகளிலும் இவருடைய பல படைப்புகள் ஒலிபரப்பாயின. கவியரசு கண்ணதாசனின் திரைப்படப்பாடல்களில் இழையோடிய தத்துவக்கருத்துக்களையும், சமூகம், மொழி, பெண்கள் தொடர்பான சிந்தனைகளையும் தொகுத்து தொடர்ச்சியாக உரைச்சித்திரங்களை எழுதி வான் அலைகளில் பரப்பினார்.

மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரை நாம் 2000 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்டபொழுது, அந்த முயற்சிக்கு பக்கபலமாக இருந்தார். அதில் இவர் எழுதிய தொத்து வியாதிகள் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்த தமிழக கவிஞி தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தாம் விரிவுரையாளராக பணியாற்றிய சென்னை இராணி மேரி மகளிர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கொன்றில் விமர்சித்திருக்கிறார்.
KannikaThanagal

அருண். விஜயராணியின் கன்னிகா தானங்கள் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளை கனடாவில் வதியும் சியாமளா நவரத்தினம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆயினும் ஆங்கில வெளியீடு வெளிவருவதில் தொடர்ந்தும் தாமதம் நீடிக்கிறது.

அருண். விஜயராணி எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – இலங்கை மாணவர் கல்வி நிதியம் முதலானவற்றிலும் அங்கம் வகித்து இவற்றின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கியவர். அத்துடன் இந்த அமைப்புகளின் தலைவியாகவும் சில வருடங்கள் பணியாற்றினார். நாம் தொடர்ந்து நடத்திவரும் தமிழ் எழுத்தாளர் விழாக்களிலும் அவரது ஆதரவு தொடர்ந்தது. ஒருவிழாவில் இவருடைய முயற்சியினால் வெளியான மறைந்த எழுத்தாளர் முனியப்பதாசனின் சிறுகதைத்தொகுதி இலங்கையில் அச்சிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை மல்லிகைப்பந்தல் ஊடாக வெளியிட்டிருந்தார். முனியப்பதாசனின் கதைகளை தேடி எடுத்து தொகுத்தவர் செங்கை ஆழியான்.

இவர்களும் மல்லிகைப்பந்தலும் இல்லையேல் அந்தத் தொகுப்பு வெளிவந்தே இருக்காது. முனியப்பதாசனை ஈழத்து இலக்கிய உலகம் மறந்திருந்த வேளையில், அவரை நினைவுபடுத்திய இலக்கியத் தொகுப்பாக அந்த நூல் அமைந்தது.

சமீபத்தில் சில தமிழ் இணையத்தளங்களில் நிறைவடைந்த விழுதல் என்பது எழுகையே என்ற மெகா தொடர்கதைத் தொடரை புகலிட நாடுகளிலிருந்து பல படைப்பாளிகள் எழுதினர். அதிலும் அருண். விஜயராணியின் ஒரு அத்தியாயம் இடம்பெற்றது.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் வீரகேசரியில் நாளைய சூரியன் தொடர்கதையில் சம்பந்தப்பட்டிருந்த அருண். விஜயராணி , மீண்டும் எழுதி அங்கம்வகித்த தொடர் சர்வதேச பார்வையுடன் நிறைவுபெற்றது.

படைப்பாளிகளின் படைப்புமொழி மாறிக்கொண்டிருக்கிறது. வெளியீட்டுச்சாதனங்களும் ஊடகங்களின் வடிவங்களும் காலத்துடன் மாறிக்கொண்டிருக்கின்றன.

இந்த மாற்றங்களுக்கு மத்தியில் அருண். விஜயராணி, தமிழ் இலக்கிய பரப்பில் பலதரப்பட்ட காலகட்டங்களில் எழுதிக்கொண்டிருந்தாலும் அவருடைய குரல் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்து, குறிப்பாக பெண்கள் சார்ந்தே ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நன்றி: அக்கினிக்குஞ்சு

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3029:2015-12-13-10-56-24&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.