Jump to content

தமிழை யார் எடுத்துச் செல்வது?


Recommended Posts

writers_2562796h.jpg

பொள்ளாச்சி டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய’த்தின் மூலம் ஆண்டுதோறும் நூறு அயல்மொழி நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவுள்ளது பற்றிய செய்தியை ‘தி இந்து’ செப்டம்பர் 26 இதழில் கண்டேன். மிகவும் வரவேற்கத்தக்க பணி. பாரதி தொடங்கி வைத்த இந்தப் பணியை க.நா.சு. தீவிரப்படுத்தினார். நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் செய்ய வேண்டிய அந்தப் பணியை க.நா.சு. ஒருவரே நின்று ஆயுள் பூராவும் செய்தார். அவர் செய்ததைத் தொடர்ந்து இன்று பல மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்திலிருந்து ஏராளமான அளவில் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். உலக அளவில் பிரபலமான எந்த எழுத்தாளராக இருந்தாலும் அல்லது, பிரபலம் ஆகாத தாஹர் பென் ஜெலோன் (மொராக்கோ) போன்றவர்களாக இருந்தாலும் அவர்களின் படைப்புகள் தமிழ் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது. ஆனால், அதே அளவுக்குத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்திலோ அல்லது பிற ஐரோப்பிய மொழிகளிலோ கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் பார்த்தால் ஆங்கிலத்திலிருந்து தமிழில் வருவதில் நூற்றில் ஒன்று அல்ல; ஆயிரத்தில் ஒரு சதவீதம் கூட தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் செல்வதில்லை.

தமிழகத்துக்கு வெளியே தெரியாது

பல மொழி எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் சர்வதேச எழுத்தாளர் கருத்தரங்குகளில் தமிழைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஆட்களே இல்லை. ஆனால் இங்குள்ள ஒவ்வொரு எழுத்தாளரும் நூற்றுக் கணக்கான புத்தகங்களை எழுதியவர்களாகவும் சர்வதேசத் தரத்தில் எழுதுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்கு வெளியே அவர்கள் பெயர் தெரிவதில்லை. இந்தியின் நிர்மல் வர்மாவை நமக்குத் தெரிகிறது. மொழிபெயர்ப்பும் உள்ளது. ஆனால், இங்கே உள்ள அசோகமித்திரனை இந்தியில் தெரியாது. இவ்வளவுக்கும் அசோகமித்திரன் இந்தியாவே பெருமைப்பட வேண்டிய ஒரு மேதை. இலக்கியத்தில் அவர் அளவுக்கு சாதித்திருப்பவர்கள் உலக இலக்கியத்திலேயே கம்மி என்று சொல்லலாம். ஆனால், நமக்கே அவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அது மட்டும் அல்ல. நோபல் பரிசு பெறத் தக்க அளவுக்குத் தமிழில் ஒரு டஜன் பேருக்கு மேல் இருக்கிறார்கள். பெயரையும் சொல்ல முடியும். அசோகமித்திரன், சா. கந்தசாமி, ந. முத்துசாமி, ஆ. மாதவன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், தேவதச்சன், தேவதேவன், வண்ணநிலவன், மனுஷ்ய புத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஷோபா சக்தி, இளங்கோவன் (சிங்கப்பூர்) என்று பலர். இந்தப் பட்டியல் என்னுடைய தனிப்பட்ட ரசனை சார்ந்தது. சீரிய தமிழ் இலக்கிய வாசிப்பு இருப்பவர்களால் இந்தப் பட்டியலில் இன்னும் சிலரையும் சேர்க்க முடியும். இவர்கள் அனைவரும் இன்னமும் தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பவர்கள். பிரெஞ்சு மொழியைத் தவிர உலகின் வேறு எந்த மொழியிலும் இந்த அளவுக்கு சர்வதேசத் தரத்தில் படைப்புகள் உருவாகிக்கொண்டிருக்கவில்லை. உலக இலக்கியத்தைக் கூர்மையாக அவதானித்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில் இதை என்னால் அழுத்தமாகச் சொல்ல முடியும்.

ஆங்கிலம், தமிழ் வித்தியாசம்

இவ்வளவு பேர் இருந்தும், இவ்வளவு அதிகமாக எழுதியும் தமிழ்நாட்டுக்கு வெளியே ஏன் தமிழ் எழுத்து செல்லவில்லை? இரண்டு காரணங்கள். நம் பெருமையை நாமே சொன்னால்தானே அடுத்தவருக்குத் தெரியும்? சொல்வதற்கு யார் இருக்கிறார்கள்? தமிழ் அறிந்தோருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குத் தமிழ் இலக்கியப் பரிச்சயம் அறவே இல்லை. இன்று நேற்று அல்ல; நூறு ஆண்டுகளாக இதே நிலைமைதான். உதாரணமாக, 1954-ல் நடந்த ஒரு சம்பவம். சுந்தர ராமசாமியின் ‘க.நா.சு. நினைவோடை’ என்ற அற்புதமான நூலில் இந்தச் சம்பவம் வருகிறது.

பிற மொழிகளில் எழுத்தாளர் நிலை

திருவனந்தபுரத்துக்கு வந்திருந்த க.நா.சு.வை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரிக்குப் பேச அழைக்கிறார்கள் சு.ரா.வும் கிருஷ்ணன் நம்பியும். ஆனால், அந்தக் கல்லூரிப் பேராசிரியருக்கு க.நா.சு.வைத் தெரியவில்லை. ஆனால் க.நா.சு. ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் மதிப்புரை எழுதும் விஷயம் ஞாபகம் வந்த சு.ரா. அதைப் பேராசிரியரிடம் சொல்கிறார். உடனே பேராசிரியர், “ஓ… கே.என்.எஸ்-ஸா? அதை முதலிலேயே சொல்லக் கூடாதா? நன்றாகத் தெரியுமே” என்கிறார். “ஹிண்டுவில் எழுதுவதென்றால் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று என்னை விட க.நா.சு.வைப் புகழ ஆரம்பித்துவிட்டார் பேராசிரியர்” என்கிறார் சு.ரா. ஆங்கிலத்துக்கும் தமிழுக்குமான இடைவெளியை இந்தச் சம்பவத்திலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், பிற மொழிகளில் எப்படி இருக்கிறார்கள்?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸிலிருந்து ஒரு எழுத்தாளர் இந்தியா வந்திருந்தார். உடனே இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ள அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ் மற்றும் பிரெஞ்சைப் பாடமாக போதிக்கும் சர்வகலாசாலைகள் எல்லாவற்றிலும் அவருடைய கலந்துரையாடல் நடந்தது. மறுநாளே அது பற்றி தினசரிகளில் செய்தி வருகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத் துறையிலும் அவர் விரிவுரையாற்றினார். அவருடைய புத்தகத்தைப் புகைப்பட நகல் எடுத்து, ஒரு மாதத்துக்கு முன்பே மாணவர்களிடம் கொடுத்து, படித்துவிட்டுக் கலந்துரையாடலுக்கு வரச் சொல்லியிருந்தார்கள் பிரெஞ்சுத் துறை பேராசிரியர்கள். இவ்வளவுக்கும் அவர் எழுதியிருந்தது அந்த ஒரே ஒரு நூல்தான்.

பரிசுகளின் பயன்பாடு

தமிழ் அளவுக்கு இவ்வளவு தீவிரமாக இலக்கியச் செயல்பாடுகள் உலகின் பிற மொழிகளில் நடக்கவில்லை என்ற போதும் தமிழ் இலக்கியத்துக்கு இதுவரை ஒரு சர்வதேச விருது கூட வழங்கப்படாததற்குக் காரணம் வேறு யாரும் அல்ல; நாம்தான். உதாரணமாக, தாகூரை விடவும் கவிதையில் சிறந்த பாரதிக்கு ஏன் நோபல் கிடைக்கவில்லை? தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கு அப்போது உலகப் புகழ் பெற்றிருந்த டபிள்யூ,பி. யேட்ஸ் முன்னுரை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் உலக அளவில் அதை அறிமுகமும் செய்தார். அதை எடுத்துக்கொண்டு தாகூர் சுமார் 30 நாடுகளுக்குச் சென்று அறிவுஜீவிகளிடமும் கவிகளிடமும் அறிமுகம் செய்துகொண்டார். தாகூருக்கு நோபல் கிடைத்தது 1913-ல். பாரதி இறந்த ஆண்டு 1921.

பரிசுகளின் பயன்பாடு என்னவென்றால், எந்த மொழிக்குப் பரிசு கிடைக்கிறதோ அந்த மொழியில் நடக்கும் இலக்கியச் செயல்பாடுகள் உலக அளவில் பிரபலமாகும். இலக்கியத்துக்கான நோபல் பரிசு தாகூருக்குப் பிறகு எந்த இந்திய எழுத்தாளருக்கும் கிடைக்காவிட்டாலும் பல சர்வதேசப் பரிசுகளை இந்தியாவின் பிற மொழிகள் வாங்கியிருக்கின்றன. குறிப்பாக இந்தி, வங்காளம், மலையாளம், கன்னட மொழிகள். சர்வதேச அளவில் தமிழ் இலக்கியம் பற்றிப் பேச ஆள் இல்லை. ஒருசிலரே இருந்தாலும் அவர்கள் சங்க இலக்கியத்திலிருந்து ஒரு அங்குலம்கூட நகர்வதாகத் தெரியவில்லை. அதேபோல் சமகாலத் தமிழ் இலக்கியத்துக்குச் சரியான ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் அது தரமான மொழிபெயர்ப்பாக இல்லை. எனவே இப்போதைய உடனடித் தேவை, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதை விட தமிழ் இலக்கியம் ஆங்கிலத்துக்கும் பிற ஐரோப்பிய மொழிகளுக்கும் செல்வதற்கான வழிவகைகள் காணப்பட வேண்டும். அதற்கான மொழிபெயர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும், எந்த மொழியில் மொழிபெயர்ப்பு நடக்கிறதோ அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் அந்தக் குழுவில் பங்கேற்றிருக்க வேண்டும்.

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/article7694595.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்


உலகம் முழுவதும் பல்வேறு தகமைகளோடு இருக்கும் தமிழர்கள்  இது குறித்துச் சிந்திப்பார்களா? யேர்மனியிலே நடைபெற்றதொரு விழாவிலே பேராசிரியர் திரு அருணாசலம்  சண்முகதாஸ்  அவர்கள் தமிழ்கற்கும் இளையோரிடம் வைத்த கோரிக்கையும் இதுவாகவே இருந்தது. தமிழ் நூல்களை யேர்மன் மொழியிலே மொழிபெயர்க்க வேண்டுமென்பதாகவே  இருந்தது. 

இது குறித்து  நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையிலான செயற்பாடுகளை தமிழ்வளர்க்கிறோம் காக்கிறோம் என்ற நிறுவனங்களாவது முன்னெடுக முனையவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கற்காதவர்களின் எதிர்காலம் வருந்தத்தக்கது!

ம.செந்தமிழன்

மொழி அறிவைச் சீரழிப்பதுதான் இன்றைய பள்ளிக் கல்வியின் மிக மோசமான சிக்கல். தாய்மொழியான தமிழ் ஏறத்தாழ எல்லா தனியார் ஆங்கிலப் பள்ளிகளிலும் ஒடுக்கப்படுகிறது. உயர் கட்டணப் பள்ளிகளில் தமிழ் மொழியே கற்றுத் தரப்படுவதில்லை. இந்தத் தலைமுறைக் குழந்தைகள் எதிர்கொள்ளப்போகும் ஆபத்துகளுக்கான அடித்தளம் இதுதான்.

தாய்மொழி அறிவு இல்லாத எந்த மனிதராலும் நல்ல வாழ்வியலை அமைத்துக்கொள்ள முடியாது. தனியார் பள்ளிகளில் பயிலும் இப்போதைய பிள்ளைகளுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது.

ஒருவேளை எழுதினாலும் படித்தாலும் வெற்று மனப்பாடத்தின் வழியாகத்தான் இவற்றைச் செய்கிறார்கள். செம்மை மரபுப் பள்ளியில் தமிழ் உயிர், உயிர் மெய் எழுத்துகளை எழுதிப் போட்டுவிட்டு, அவற்றை வாசிக்கச் சொன்னோம். ஏறத்தாழ எல்லாப் பிள்ளைகளும் சரியாக வாசித்துக் காட்டினர்.

என்னுடன் பணியாற்றும் பள்ளி ஆசிரியர் சாதிகா, ‘எழுத்துகளை வரிசையாக எழுதாமல் இடை இடையே எழுதிப் போடுங்கள்’ என்றார். அதேபோல் எழுத்துகளை வரிசை மாற்றி எழுதியபோது பெரும்பாலான பிள்ளைகள் அவற்றை வாசிக்க இயலாமல் தேங்கிவிட்டனர். அ, ஆ, இ, ஈ என்ற வரிசையில் நன்றாக வாசிக்கும் குழந்தைகளால் உ, ஊ, அ, ஈ என்ற வரிசையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

மனப்பாடத்தின் வழியாகக் கற்றுத் தரும் கேடுகெட்ட வழிமுறையை மொழியின் எழுத்துகளை அறிமுகப்படுத்துவதிலும் கடைபிடிக்கின்றன இக்காலத் தனியார் பள்ளிகள்.

தமிழ் படிக்க / எழுதத் தெரியாமல் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன எனச் சிந்தியுங்கள்.

பெரும்பாலானோரது கனவு, அயல்நாட்டு வேலை அல்லது இங்கேயே செயல்படும் அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை என்பதாக இருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவான பொருளாதார மந்தம், அந்நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரை உலுக்கி எடுத்தது. பல பெரு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. பல இலட்சம் மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. 
அமெரிக்காவில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு பேரணி சென்ற காட்சியை நீங்கள் கவனித்தீர்களா எனத் தெரியவில்லை. அமெரிக்கா விழுந்தால், இந்தோனேசியாவிலும் தாய்லாந்திலும் பட்டினிச் சாவுகள் நிகழும் எனுமளவு நிலைமை உள்ளது. அந்தளவு இந்த நாடுகள் தமது சுயசார்பை இழந்துவிட்டன.

பழைய ரஷ்யாவின் பல பகுதிகளில் விபசாரம் முக்கியமான தொழிலாக உள்ளது. உலகின் பெரும்பாலான செல்வ நகரங்களின் விடுதிகளில் ரஷ்யப் பெண்கள் இருக்கிறார்கள். எந்தமொழி பேசினாலும், சொந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தாவிட்டால், இந்த நிலைதான் உருவாகும்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கும். திடீரென, ஒரு நாட்டின் கடன் சுமை அதிகரித்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் வீழும். அங்கே முதலீடு செய்திருந்த அயல் நிறுவனங்கள் வெளியேறிய பின்னர், வேலைக்கான திண்டாட்டம் மிகும். இப்போது, நடைமுறையில் உள்ள கல்விமுறை, இவ்வாறான தற்சார்பற்ற பொருளாதாரத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது என்பதைச் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

மருத்துவம், கணினி, பொறியியல் ஆகிய மூன்று துறைகளைக் குறிவைத்துதான் ஏறத்தாழ எல்லாக் குழந்தைகளும் கல்விக் கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இவை மூன்றுமே தனியார் துறைகளை நம்பியவைதான். இவற்றிலும் அயல்நாட்டு நிறுவனங்களையும் அயல்நாட்டு வேலைகளையும் நம்பியிருக்கும் நிலைதான் மிகுதி. எதிர்காலத்தில் உருவாகப் போகும் பொருளாதாரப் பேரிடர்கள், அயல்நாட்டு நிறுவனங்களை முடக்கிப்போடவுள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் ஆகிய பகுதிகளில் இந்த நிலை இப்போதே துவங்கிவிட்டது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் ஊதியக் குறைப்பும், பணிச் சுரண்டலும் நடைமுறைக்கு வந்துவிட்டன.

உடல்நலம் முழுமையும் அயல்நாட்டு மருத்துவமுறைகளால் சூறையாடப்படும் இந்தக் காலத்தில், மரபுவழி மருத்துவ முறைகள்தான் தீர்வுகளாக மாறியுள்ளன. உணவை நஞ்சாக்கிய இந்தச் சமூகத்தில், மரபுவழி வேளாண்முறைகள்தான் உயிர் காக்கும் தொழில்நுட்பங்களாகியுள்ளன. இந்த இரு துறைகளும் உங்கள் காலத்தில் நல்ல மாற்றம் பெறத் துவங்கியுள்ளன அல்லவா. இவைபோலவே, எல்லாத் துறைகளிலும் தீர்வுகளை நமது மரபுவழிகளில் மட்டுமே காண இயலும்.

மரபுவழி மருத்துவம், மரபுவழி வேளாண்மை ஆகிய இரு துறைகளும் மீட்டெடுக்கப்படாவிட்டால் இந்தச் சமூகத்தின் நிலையைக் கற்பனை செய்ய இயலுமா? நஞ்சை நிலத்தில் கொட்டி, நஞ்சை விளைவித்து, நஞ்சை உண்டு, நோயுற்று, நஞ்சையே மருந்தென விழுங்கி உடல் நலிவுற்று அழிவதைத் தடுக்க இயலாது போயிருக்கும். இவ்வாறான சிக்கலிலிருந்து சமூகம் காப்பாற்றப்படுகிறது என்றால், இத்துறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்த அனைவரும் மரபு வேர்களைத் தேடிச் சென்று, தீர்வுகளைத் தாய்மொழியாம் தமிழில் எழுதுவதும் பேசுவதும்தான் காரணம்.

உங்களால் இந்தக் கட்டுரையைப் படிக்க முடிகிறது, உங்கள் பிள்ளைகளால் முடியுமா என்று சிந்தியுங்கள். அவர்களின் வாசிப்புப் பழக்கம் ஆங்கிலத்தில் உள்ளது. எந்த நிலத்தில் பிறந்து வளர்கிறார்களோ அந்த நிலத்தின் மொழியை அவர்களால் படிக்கவும், எழுதவும், பேசவும் முடியவில்லை. இவர்களுக்கான வழிகாட்டுதல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதுவோரால் மட்டுமே முடிவு செய்யப்படும்.

திருக்குறளில் உள்ள வாழ்வியல் கருத்துகள் இவர்களுக்குத் தெரிவதற்கான வாய்ப்பில்லை. சித்தர்களின் மெய்யறிவு, திருவாசகத்தின் இறைமை, இராமாயணம், பாரதம், பொன்னியின் செல்வன், பாரதியாரின் பாடல்கள், பாவேந்தரின் எழுச்சிக் கவிதைகள், கண்ணதாசன் பாடல்களின் வாழ்க்கை அறிவு எதுவும் இந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கப்போவதில்லை.

இன்னும் பத்தாண்டுகளுக்குப் பின்னர் நம்மாழ்வார் நூல்களை, கட்டுரைகளை வாசிக்கும் மனிதர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும் நிலை உள்ளது.

உங்கள் வாழ்க்கையில் உருவான மாற்றங்களில் இந்த மொழி இருக்கிறதா இல்லையா? உங்கள் சிந்தனையை, வாழ்வியலை மாற்றியவர்கள் தமிழில்தானே உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலம் மட்டுமே தெரிந்த அரைகுறையாக நீங்கள் இருந்திருந்தால், உங்களால் நம்மாழ்வாரைப் புரிந்துகொள்ள முடியுமா? மரபுவழி மருத்துவங்களைத் தெரிந்துகொள்ள முடியுமா? உணவுக்கும் உடல்நலனுக்கும் உள்ள உறவை விளங்கிக்கொள்ள முடியுமா?

உங்கள் பிள்ளைகள் தமது இளமைக் காலத்தில் தமிழ் படிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் உங்களுக்குக் கவலையாக இல்லையா? நான் வருந்துகிறேன். இப்போதைய குழந்தைகளின் எதிர்காலம் எனக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

ஒருபக்கம், செல்வ நாடுகளின் பொருளாதார ஆதிக்கம், மறுபக்கம் மரபு வாழ்வியலின் மீட்சி ஆகிய இரு முனைகளில் இந்தக் கால குழந்தைகள் எந்த முனையிலும் பொருந்தாதவர்களாக வளர்கிறார்கள். அயல் நிறுவனங்களின் பொருளாதாரத்தை நம்பி வளர்க்கப்படும் குழந்தைகள், எதிர்வரும் பொருளாதார வீழ்ச்சிகளைச் சமாளிக்கப்போவதில்லை. தாய்மொழியே தெரியாததாலும், மரபு கல்விமுறையிலிருந்து விலகி விட்டதால், மரபு மீட்சியிலும் இவர்களால் பங்கெடுக்க இயலாது.

ஆங்கிலம் கற்பது இன்றைய தேவைதான். ஆங்கிலத்தை நிராகரிக்க வேண்டாம். கற்றலில் முதலிடம் தாய் மொழிக்குத்தான் இருக்க வேண்டும். இன்றைக்கு ஆங்கிலம் கோலோச்சுகிறது, அதைக் கற்போம். எதிர்காலத்தில் வேறு மொழியில் தொழில்கள் வளர்ந்தால், அதைக் கற்போம். மனிதகுல வளர்ச்சியில் இது வெகு இயல்பான போக்கு.

தாய்மொழி கற்க வேண்டும் என்பது வெறி அல்ல; இயல்பு. அயல்மொழி மொழியைக் கற்றால் போதும், தாய்மொழி தேவையில்லை என்பதுதான் வெறிபிடித்த சிந்தனை. உண்மையில் இது, வணிகச் சிந்தனை. 
உங்கள் பொருளாதாரத்தைச் சூறையாடுவதற்காக தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டி வைத்த மிக மோசமான கண்ணி இது.

நம் பிள்ளைகள் ஒன்றல்ல இரண்டல்ல பத்து அயல்மொழிகளைக் கூட கற்கட்டும். அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக தமிழ் கற்பது இன்றியமையாதது. தாய்மொழியைக் கற்பதுதான் அயல்மொழிகளுக்கான சிறந்த அடித்தளம்.

நமது மரபு மிக அற்புதமான வாழ்வியல் சேதிகளை, இறையியல் கொடைகளைத் தாங்கி வளர்ந்துள்ளது. இந்த மொழியில் எண்ணற்ற நன்மைகள் பொதிந்துள்ளன. பல்லாயிரம் ஆண்டுகாலமாக தமிழ் மொழி செம்மாந்து வளர்ந்து வந்துள்ளது. உங்கள் காலத்தோடு அதன் உயிர் ஓய்ந்துபோனது என்ற நிலையை உருவாக்கிவிடாதீர்கள்.

நெல், அரிசி, மிளகு, சீரகம், இலை, வேர், மரம், தண்டு, கிளை, கிளி, பருந்து, மலை, முகடு, சோறு, குழம்பு, தண்ணீர், தாகம், வறட்சி, மாமன், அத்தை, சித்தி, தாய்மாமன், கிளிஞ்சல், நத்தை, வேங்கை, புலி, எந்திரம், தூரிகை, ஓவியம், சாணம், வைக்கோல் – ஆகிய சொற்களில் கணிசமானவை இந்தக் கால நகரத்துப் பிள்ளைகளுக்கு அந்நியமானவை. இவற்றில் பல சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களும் இவர்களுக்குத் தெரியாது என்பதுதான் கொடுமை. அதாவது, தன்னைச் சுற்றியுள்ள உயிரினங்கள் மற்றும் பொருட்களின் பெயர்களைத் தாய்மொழியிலும் அழைக்கத் தெரியாது, அயல்மொழியிலும் உச்சரிக்க இயலாது.

ஆனால், இந்தப் பிள்ளைகள் பக்கம் பக்கமாக படிக்கிறார்கள், எழுதுகிறார்கள். அவற்றுக்கான மதிப்பெண்களையும் வாரிக் குவிக்கிறார்கள். எல்லாம் மனப்பாடம் செய்யும் மாயம்!

குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தாருங்கள், தமிழில் பேசுங்கள், எழுதுங்கள். எந்தப் பள்ளியாவது, தமிழில் பேசுவதைத் தடை செய்தால் அந்தப் பள்ளியின் விதிமுறைகளைக் குப்பையென வீசி எறியுங்கள். இவ்வாறெல்லாம் தடை விதிப்பது, சட்டத்திற்கே எதிரானது, அடிப்படை மனித உரிமைக்கு மாறானது. நீங்கள் வளைந்துகொடுப்பதால் அவர்கள் உங்கள் முதுகில் சவாரி செய்கிறார்கள்.

இயன்றவரை, உங்கள் பிள்ளைகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்க வையுங்கள்.

உங்களுக்கென ஓர் அரசு இருக்கிறது, அந்த அரசு கல்விக்கென பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளை நம்மால் எளிதில் சரி செய்ய இயலும். தனியார் கொள்ளைக் கூடங்களில் நீங்களே அடிமைபோலத்தான் நடத்தப்படுகிறீர்கள். அங்கே எந்தச் சீர்திருத்த முயற்சியும் செல்லுபடியாகாது.

தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு நீங்கள் செலுத்தும் பெருந்தொகையைச் சேமித்து வைத்தால், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான வேளாண் பண்ணையே அமைத்துவிடலாம். அல்லது வேறு தொழிலைத் துவங்கித் தரலாம். குறைந்தபட்சம் கடன் வாங்கிச் சீரழியாமலாவது வாழலாம்.

ஒரு தோட்டத்திலிருந்து செடியைப் பிடுங்கி நடும்போது, பிடுங்கப்படும் இடத்தின் மண்ணிலிருந்து ஒரு பிடியை அள்ளி செடியின் வேரில் அணைப்பது வழக்கம். தாய்மண் என்று அதற்குப் பெயர். ஓரறிவு கொண்ட செடி கூட தாய்மண்ணின் மணத்தை விட்டுக்கொடுக்காமல் புதிய நிலத்தில் வேர் இறக்குகிறது. இதற்கும் மேல் விளக்கம் தேவையில்லை என நம்புகிறேன்.

(வனம், இதழில் வெளியாகவுள்ள கட்டுரையின் சுருக்கம்)

இணைப்புப் படத்திலிருப்பவர், மெய்யொளி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.