Jump to content

வேலி - கோமகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேலி - கோமகன்

 

அதிகாலை மூன்று மணிக்கு வேலையால்  வந்து படுத்து, செத்த சவம் போலக் கிடந்த என்னை ஐந்து மணிக்கு அடித்த  தொலைபேசி அழைப்பு,  வெறி கொள்ள வைத்தது. மறுமுனையில் நரேன் என்ன மச்சான் நித்திரையாய் போனியே என்று லூசுத்தனமாக தனது கதையை தொடங்கினான் . “உனக்கு தெரியும் தானே மச்சான் என்னம் ரெண்டு கிழமையிலை எங்கடை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி ஏறுது . நீ நாளையிண்டைக்கு ஊருக்கு போறாய் தானே அதுதான் உனக்கு ஞாபகப்படுத்த எடுத்தனான்” என்றான் நரேன் .நித்திரை கலைந்த கோபத்தில் தூசணத்தால் நரேனை பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு இன்னும் கோபம் அடங்கியபாடாகத் தெரியவில்லை .நட்பு என்ற போர்வையில் நாகரீகம் தெரியாத மனிதர்களாக இருக்கின்றார்களே என்று மீண்டும் தலையணையைக் கட்டிப்பிடித்தேன் .போன நித்திரை திரும்பி என்னிடம் வர சண்டித்தனம் செய்தது. ஆவி பறக்கும் தேத்தண்ணியை போட்டுக்கொண்டு அறையில் கிடந்த செற்றியில் இருந்தேன் .தேத்தண்ணி சாயத்தின் மணம் மூக்கில் நுழைந்து உடம்பை முறுக்கேற்றியது. தேத்தண்ணியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் இந்தக் காலமை நேரத்தில் எனக்கு சூராவத்தை பிள்ளையார் கோயிலின் கொடியேத்தம் முக்கியமா ? என்று மனம் யோசித்தது.

0000


 

எங்கடை சனங்களால் செல்லமாய் அழைக்கப்படுகின்ற ஜப்(F)னா பட்டினத்தில் ஒரு சின்னப் புள்ளியாகத் தெரிவதுதான் சூராவத்தை. மொத்த குடிகளாக ஓரு முன்னூறு குடும்பங்கள் இருந்தன. சூராவத்தையில் இருந்து பத்துப் பதினைஞ்சு ஒழுங்கைகள் தள்ளி வண்ணான் குண்டு குறிச்சியின் எல்லை தொடங்குகின்றது . இவர்களின் தொழிலாக ,சூராவத்தையார் விவசாயமும் வண்ணங்குண்டார் உடுப்புகள் தோய்ப்பதுமாக இருந்துவந்தது . ஜப்(F)னா பட்டினத்தில் காலங்கள் பலகட்டங்களில் அதன் வாழ்க்கை முறையை மாற்றி இருந்தாலும் இந்த இரண்டு பகுதியும் தங்கள் நிலையில் இருந்து அசைவதாகத் தெரியவில்லை. சூராவத்தையாருக்கு தாங்கள் தோட்டம் செய்யாவிட்டால் வண்ணங்குண்டார் சோற்றில் கைவைக்க மாட்டார்கள் என்ற இழி பார்வையும், தாங்கள் சூராவத்தையாரின் உடுப்புகளைத் தோய்க்காவிட்டால் உடுப்பே போட மாட்டார்கள் என்ற மிதப்பும் காலம் காலமாக இருந்து வந்திருக்கின்றன. ஆனால் இந்த இரண்டு பகுதியும் சூராவத்தை பிள்ளையார் கோவில் கொடியேத்தத்தில் மட்டும் ஒன்றாக இருப்பார்கள் .கொடியேத்தத்துக்கு வண்ணாங்குண்டில் இருந்துதான் வெள்ளைத்துணி சூராவத்தை பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துவரப்படும்,  இது இரண்டு பக்கத்திற்கும் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த பாரம்பரியம்.


ஒருநாள் மாலை தவறணையில் பம்பலுக்கு இரண்டு பக்கத்து பெடியளும் வெவ்வேறு இடங்களில் இருந்து குடித்துக்கொண்டிருக்க, வெறிவளத்தில் நக்கல் கதைகள் இரண்டு பகுதிக்கும் நடந்து அதன் உச்சக்கட்டமாக,” நாங்கள் வெள்ளை துணி தராவிட்டால் உங்கடை பிள்ளையார் கோயில் கொடி ஏறுமோடா” ?என்று வண்ணாங்குண்டார் எகிற, சூராவத்தையார் இவர்களை துவைத்து எடுத்து விட்டார்கள். இதில் அடிவாங்கியவர்களில் நரேனின் ஒன்றவிட்ட தம்பியும் ஒருவன். பிரச்சனை விதானையார் வரை போய் விதானையாரின் சமாதான முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்கு விதானையார் சூராவத்தை பகுதி என்பது ஒரு காரணமாக இருந்தது .வண்ணாங்குண்டு பெரிசுகளுக்கு பெடியள் “வெள்ளைத்துணி கொண்டு போகக்கூடாது” என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்கள். இந்த நேரத்தில் தான் நரேன் காலமை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடியேத்தத்தைப் பற்றி எனது காதில் போட்டிருக்கின்றான்.


0000


நரேன் என்னுடன் நட்பாகி  பல வருடங்களாகின்றன. இருவரும் ஒரே ஊர் என்பதாலும் எமது நட்பு உடையாது இருந்தது .நரேன் வண்ணாங்குண்டு பகுதியை சேர்ந்தவன். நானோ சூராவத்தை பகுதியை சேர்ந்தவன். என்னமோ தெரியவில்லை எம்மை இந்த இரண்டு பகுதிகளும் பிரிக்கவில்லை. நரேன் பாரிஸ் வந்தபின்னர் சில காலம் வேறு வேலைகள் செய்துவிட்டு வங்கியில் இருந்து கடன் எடுத்து இங்கும் உடுப்புகள் தோய்க்கும் நிறுவனம் ஒன்றின் முதலாளியாகிப் பல வோஷிங் மெசின்களைப் போட்டு உடுப்புகள் தோய்த்துக்கொண்டிருந்தான். அவனது நிறுவனத்தில் பல தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவன் எவ்வளவு வளர்ந்தாலும் என்னுடன் இருந்த நட்பைக் குலைக்கவில்லை. நிறுவனத்தில் வரும் வருமானத்தின் ஒருபகுதியை வண்ணாங்குண்டு வளர்ச்சிக்காக செலவழிப்பான். நான் ஏதாவது கேட்டால்,” எனக்கு தெரிஞ்ச தொழிலை கொஞ்சம் மொடேர்னாய் செய்யிறன். என்ரை ஊருக்கும் குடுக்கிறன். நீ ஏன் குத்தி முறியிறாய் ? என்று எனது வாயை அடக்கிவிடுவான். நானோ எனது வருமானத்தில் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓர் தொண்டு நிறுவனம் ஊடாக யாருக்கும் தெரியாது செய்து வந்தேன்.

00000

அன்று பின்னேரம் மீண்டும் நரேனது ரெலிபோன் அழைப்பு வந்தது ,” மச்சான் உனக்கு காலமை இன்னமொரு விசயம் சொல்ல மறந்து போனன். முந்த நாள் என்ரை ஒண்டவிட்ட தம்பிக்கு உங்கடையாக்கள் வெறிவளத்திலை அடிச்சுப்போட்டாங்கள். நாங்கள் என்ன மசிரே…………….? இல்லை நாங்கள் என்ன மசிரோ எண்டு கேக்கிறன் ? என்ன இருந்தாலும் உங்கடை ஆக்கள் எங்களிட்டைதானே வரவேணும் ? இருந்துபாரடி எங்கடை விளையாட்டை. எப்பிடி பிள்ளையார் கோயில் கொடி ஏறுது எண்டு பாப்பம் ?” என்றான் நரேன். எனக்கு மெதுவாக கோபம் எட்டிப்பார்க்க தொடங்கியது ” உன்ரை குடும்ப பிரச்னைக்கு ஏன்ராப்பா இதை ஊர் பிரச்சனையாக்கி பிள்ளையாரை இதுக்குள்ளை இழுக்கிறாய் ? “என்றேன். ” நீ என்னதான் சொல்லு உதிலை நாங்கள் விட்டுத்தரமாட்டம். நீயும் பாக்கத்தானே போறாய் ” என்று போனை துண்டித்தான் நரேன். இவனைத் திருத்தவே முடியாதா ? என்று எண்ணியவாறே வேலைக்குச் சென்று விட்டேன் .  நான் ஊருக்குப் போகும் பொழுது இரண்டு பகுதியையும் சமாதானப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

00000

என்னையும் சேர்த்துக்கொண்டு பாரிஸில் இருந்து பறந்த கட்டார் எயார்வேய்ஸ் பன்னிரண்டு மணித்துளிகளை முழுமையாக வானத்தில் கழித்து விட்டு அதிகாலைப் பொழுதொன்றில் கொழும்பில் வந்திறங்கியது.எயார்ப்போர்ட் சம்பிரதாயங்களை விரைவாக முடித்துக் கொண்டு காலை இன்ரர் சிற்ரியில் ஜப்(F)னா பட்டினம் நோக்கிப் புறப்பட்டேன். மத்தியானப் பொழுதொன்றில் ஜப்(F)னா பட்டினம் என்னை அணைத்துக்கொண்டது . நான் சூராவத்தயை அடையும் பொழுது ஒரு தாயின் அணைப்பில் குழந்தை கரைவதுபோலவே இருந்தேன். சொந்தங்கள் பந்தங்கள் என்று நாட்கள் என்னை முன்னோக்கித் தள்ளின. ஒருநாள் மாலை வீட்டு வாசலில் இருந்து அம்மாவுடன் வீட்டுக் கதைகள் கதைத்துக்கொண்டிருந்த பொழுது “வீரகேசரி” விநாசித்தம்பியரே அந்தக் கதையைக் கொண்டுவந்தார்……

இந்த இடத்திலை “வீரகேசரி” விநாசித்தம்பியை பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேணும். சூரவத்தையிலை ஆர் சாதிமான் எண்டு கேட்டால் தவ்வல் கூட விநாசித்தம்பியைத்தான் கையைக் காட்டும். தன்ரை வீட்டு கிணத்திலை தண்ணி அள்ளினாலும் செம்பிலை தண்ணியை விட்டு அண்ணாந்து சொண்டு படாமல் குடிக்கிற ஆசார சீலன். அதோடை காய் தீட்சை எடுத்த சைவப்பழம். தனக்குப் பிறந்த ரெண்டு பெட்டையளையும் பொத்திப் பொத்தி வளத்து லண்டனிலை தனக்குத் தோதான இடத்திலை கலியாணம் கட்டிக் குடுத்திருக்கிறார். அவனவன் வயிற்றுப்பாட்டுக்கு குனிஞ்சு வளைஞ்சு எழும்ப, லண்டன் பவுண்ஸாலை இவருக்கு மெயின் பொழுது போக்கு ஊர்த்துளவாரம்தான். ஜப்னா பட்டணத்திலை இருக்கிற கோயில் திருவிழாவிலை சாமியள் கேக்கினமோ இல்லையோ முதல் ஆளா நிண்டு விரதம் பிடிச்சு பக்திப் பழமாகவே விநாசித்தம்பியர் இருந்தார். ஆனாலும் அவரிலை இருக்கிற ஒரு அழுகல் பழக்கம் என்னவெண்டால், சூராவத்தையிலை ஒவ்வரு குடும்பத்திலையும் நடக்கிற நிகழ்சி நிரல் எல்லாம் விரல் நுனியிலை வைச்சு ஊர் முழுக்க காவிக்கொண்டு திரிவார். இதாலை அவருக்கு “வீரகேசரி” எண்ட பட்டப் பெயரை சூராவத்தை பெடியள் வைச்சிருந்தாங்கள். இனி வீரகேசரி விநாசித்தம்பி கதையிலை என்றி ஆகிறார் …………

கதை பெரிதாக ஒன்றும் இல்லை.,” வண்ணாங்குண்டு பெடியள் பிள்ளையார் கோயில் தெப்பக்குளத்துக்கை இறங்கி விசமத்துக்கு குளிக்கிறாங்களாம். உந்த எளிய சாதியளை வைக்கிற இடத்திலை வைக்கவேணும். எங்களுக்கு உடுப்பு தோய்கிறவங்கள். எங்கடை தண்ணியிலை வந்து குளிக்கவோ? அதுவும் கோயில் தெப்ப குளத்துக்கை. உது எக்கணம் இது பெரிய வில்லங்கத்தைக் கொண்டு வரப்போகுது” என்று பதகளிப்பட்டார் “வீரகேசரி” விநாசித்தம்பியர்.

அம்மாவும் அவருடன் சேர்ந்து,” ஓ………… அவங்களுக்கும் இப்ப நல்லாய் குளிர் விட்டுப்போச்சுது. அதோடை இந்த முறை கொடியேத்தத்துக்கு வெள்ளைத்துணி கொண்டு வரமாட்டினமாம். இந்த முறை திருவிழா கலம்பகத்திலைதான் முடியப்போகுது” என்று வீரகேசரி விநாசித்தம்பியருக்கு புகைப் போட்டா. எனக்கு இரண்டு பேரிலும் கோபம் கோபமாக வந்தது ,” என்ன மனிதர்கள் இவர்கள் ? எல்லோருக்கும் பொதுவாக இருந்த தண்ணி இப்பொழுது இந்த மடையர்களால் குட்டையாக வருகின்றதே! இவர்கள் என்ன படிக்காதவர்களா ? இளம் வயது பெடியளுக்கு இங்கு என்ன பெரிதாகப் பொழுது போக்கு இருக்கின்றது? குளம் குட்டைகள்தானே இவர்களது ஸ்விமிங் பூல்? . அதென்ன நாங்கள் மட்டும் குளிக்கலாம் அவங்கள் குளிக்க கூடாது ?இது எந்த ஊர் நியாயம்? “என்று என் மனம் அலைபாய்ந்தது. இவர்களுக்கும் நரேனுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாக நான் எண்ணவில்லை. எல்லோருமே எரிகின்ற காஸ் குக்கறில் குளிருக்கு கை காட்டிக்கொண்டு நின்றார்கள்.

IMG_20150919_121831

ஒருவேளை எனக்கு எதோ வண்ணாங்குண்டு பெடியளிடம் ஒருமுறை கதைத்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. எல்லோரும் ஒன்றாகத்தானே படித்தோம் ? கதைப்பவன் கதைத்தால் சரியாகலாம் என்ற எண்ணத்தில் மறுநாள் காலை நண்பர்களை சந்திக்க சென்றேன். அவர்களை சந்திக்க முதல் பிள்ளையாரையும் ஒருமுறை பார்த்துவிட்டு போகலாம் என்ற எண்ணத்தில் கோவிலை நோக்கி சைக்கிளை விட்டேன் .அங்கு பெரிதாகக் கூட்டம் இருக்கவில்லை .குருக்கள் ஆறுதலாக இருந்தார் என்னைக் கண்ட சந்தோசம் அவரது முகத்தில் தெரிந்தது. “ஐயா………. இதுக்கு ஒரு சொலூசனும் இல்லையோ? ஏன் இப்பிடி சனங்கள் விசர் பிடிச்சு திரியுதுகள் ?இவ்வளவுகாலமும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் தானே கொடி ஏறீச்சுது ? உங்களுக்கு ஏதாவது படுதே” என்று குருக்களை நோண்டினேன். “தம்பி நீங்கள் வெளியாலை இருக்கிறதாலை வித்தியாசமாய் யோசிக்கிறியள். இங்கை அப்பிடி இல்லை. இல்லாட்டி எங்கடை சனத்துக்கு எப்பவோ விடிவு வந்திருக்கும். இவ்வளவு உழுது தள்ளியும் இதுகள் திருந்தீச்சுதுகளே? கடைசி நேரத்திலையும் புளியம் பொக்கணையிலை நிண்டுகொண்டு குடிக்கிற தண்ணிக்கு தள்ளுமுள்ளு பட்டுதுகள். இயக்கம் இருந்த நேரம் அடங்கி இருந்துதுகள். இப்ப திருப்பவும் ஆடத்தொடங்கீட்டுதுகள். இதிலை ஆரை எண்டு நோகிறது? காலம் காலமாய் வண்ணாங்குண்டார்தான் கொடித்துணி கொண்டுவாறது. அது அவங்கடை உரிமை. அதை கொண்டுவரக்கூடாது எண்டு சொல்லுறது கொஞ்சம் கூட சரியில்லை .எல்லாம் பிள்ளையார் பாத்துக்கொள்ளுவார் .நீங்கள் விரும்பினால் எதுக்கும் சின்னாட்டியிட்டை கதைச்சு பாருங்கோ. அவர்தான் காலம் காலமாய் கொடித்துணி கொண்டு வாறது. ” ” இந்த பிள்ளையார் எப்பவுமே பிரச்சனைக்குரிய ஆள்தான். இருக்கும் பொழுது சனங்களை சும்மா இருக்க விடமாட்டார் .நடந்து போய் கடலிலையோ குளத்திலை குளிக்க இறங்கும் பொழுதும் சனத்தை உருவேத்திறதுதான் வேலை. வெட்டுக்கொத்து எண்டு ரத்தம் கண்டுதான் பிள்ளையார் ஒரு நிலைக்கு வருவார். ” என்று என்மனம் சொல்லிக்கொண்டது.

எனக்கும் நண்பர்களுக்கும் சந்திப்பில் எதுவித பிரச்சனையும் இருக்கவில்லை. எல்லோரும் சொக்கன் கடையில் ரீ குடித்துக் கொண்டிருந்தோம். நண்பர்கள் நரேனைப்பற்றி கேட்டார்கள் .நான் இதுதான் சாட்டு என்று கதையை தொடங்கினேன் .அவர்களது முகம் கறுக்கத் தொடங்கியது .குஞ்சன் தான் முதல் கதையை தொடக்கினான் . “மச்சான் சொல்லுறதெண்டு குறைவிளங்கப்படாது. நீங்கள் எல்லாம் கதையிலைதான் இருக்கிறியளே ஒழிய நடைமுறையிலை மாறி நிக்கிறியள். உடுப்பு தோய்க்கிறது எங்கடை தொழில். தோட்டம் செய்யிறது உங்கடை தொழில். நீங்கள் தொழிலை தொழிலாய் பாக்கிறியள் இல்லை. எங்களை உங்கடை அடிமையள் மாதிரித்தான் பாக்கிறியள். அல்லாட்டி பம்பலுக்கு எங்கடை பெடியள் தவறணையிலை கதைக்க கைவைச்சிருப்பியளா ? அவ்வளவுக்கு நாங்கள் உங்களுக்கு கேவலமாய் போட்டமா? அதாலைதான் எங்களுக்கு நரேன் இந்தமுறை சொன்னான் உங்கடையாக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேணும் எண்டு”. எனக்கு இப்பொழுது பிரச்சனையின் அடிஆழம் எல்லாம் கிளியறாக விளங்கியது.

“சரி மச்சான் எங்கடை குரங்குகள் செய்தது செரியான பிழை. அவங்கழுக்காக நான் இப்ப உங்களிட்டை மன்னிப்பு கேக்கிறன். இந்த முறை ஒரு பிரச்சனையும் இல்லாமல் கொடி ஏறவேணும். இந்த கோயில் எங்கடை ரெண்டு பக்கத்துக்கும் பரம்பரை கோயிலடாப்பா. ஒரு அற்ப விசயத்துக்காக நாங்கள் வெட்டுகுத்துப்பட வேணுமோ ? நாங்கள் மனம் விட்டு கதைக்கவேணும். இதிலை ஆர் பெரிசு சின்னன் எண்டதில்லை பிரச்சனை. நாங்கள் இளம் ஆக்கள். பழசுகளின்ரை சேட்டையளுக்கு சரியான அடி குடுக்க வேணும். பெரியாக்களை விடுங்கோடாப்பா. நாங்கள் பெடியள். நாங்களும் பிழை விட்டால் ஆர் மச்சான் எங்கடை ஊரை காப்பாத்திறது? இதுக்கே எங்கள் தரவளி பெடியள் எல்லாம் காடுமேடெல்லாம் அலைஞ்சம்? எனது கதை அவர்களை ஆட்டம் காண வைத்தது. குஞ்சனே சொன்னான் ,” மச்சான் என்ன பெரிய கதை எல்லாம் கதைக்கிறாய்? நாங்கள் அப்பிடியே பழகினம்? நீ கவலை படாமல் போ. பிள்ளையார் கொடி ஏறும். சின்னாட்டியண்ணை முறையாய் கொடித்துணி கொண்டுவருவார். ஆனால் இதுகளை கெடுக்கிறமாதிரி உங்கடைபக்கம் நடக்காமல் பாக்கிறது உன்ரை பொறுப்பு. கவலைப்படாமல் போட்டுவாடாப்பா ” என்றான் குஞ்சன்.

சின்னாட்டியண்ணை முறைப்படி வெள்ளைத்துணி எடுத்துவர, குருக்கள் சின்னாட்டியண்ணைக்குக் காளாஞ்சி கொடுத்து பரிவட்டம் கட்டி கொடித்துணியை பெற்று, சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி பிரச்சனை இல்லாமல் ஏறியது. எமதுபக்கம் வழக்கத்தை விட பயங்கரமான அமைதியாக இருந்தது. இந்த அமைதி என்னை யோசிக்க வைத்தது .வீரகேசரி விநாசித்தம்பிக்குத் தனது பேச்சையும் மீறி நான் அவர்களை சமாதானப்படுத்தியது துண்டாகப் பிடிக்கவில்லை. “தம்பி வெளியாலை இருந்து கொண்டு நீங்கள் சுத்தமானவன் எண்டு காட்டாதையுங்கோ. நீங்கள் வித்தியாசமாய் செய்யிறன் எண்டு எல்லாரையும் குழப்பிறியள். அவன் அவனை அந்தந்த இடத்திலை வைக்கவேணும். இல்லாட்டில் எங்கடை தலையிலை மிளகாய் அரைச்சு போடுவங்கள். இண்டைக்கு கோயில் குளத்துக்கை குளிக்கிறவங்கள் நாளைக்கு எங்களோடை சம்பந்தம் பேசுவங்கள். உதெல்லாம் முழையிலை கிள்ளிப் போடவேணும்” என்று சூராவத்தை விசுவாசத்தை என்னுடன் கதைக்கும்போதே காட்டிக்கொண்டார்.

திருவிழா முடிவுக்கு வரும் பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தால் சூராவத்தை குய்யோ என்றது . தீர்தத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்த ஒரு விடியக் காலையில் தெப்பக்குளத்தில் சொப்பிங் பாக்கில் கக்கூசும், ஒரு சோடி செருப்பும் மிதப்பதாக ஊரைக்கூட்டி விட்டார் “வீரகேசரி” விநாசித்தம்பியர். இதை வண்ணாங்குண்டாரே செய்ததாக அழிச்சாட்டியம் செய்தார். பிரச்சனை விதானை மூலம் பொலிசுக்குப் போனது. பொலிஸ் எடுத்த எடுப்பில் எதையுமே விசாரிக்காது குஞ்சனையும் இன்னும் சில நண்பர்களையும் தூக்கிக்கொண்டு போய் விட்டது. வீரகேசரி விநாசித்தம்பி வலு மும்மரமாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு நடையாய் நடந்தார். பின்பக்கத்தால் உயிர் கோழிக்கறியும் மென்டிஸ் ஸ்பெசலும் இன்ஸ்பெக்டருக்கு தாராளமாக பாய்ந்தது.

இதற்கிடையில் பிள்ளையார் கோயிலை விட்டே போய் விட்டார் என்று சூராவத்தையார் கதையை கட்டிவிட்டார்கள். பிள்ளையார் தேர் ஏறி முடிந்து அடுத்தநாள் தீர்த்தம் ஆடவெளிக்கிடும் பொழுது தான் சூராவத்தைக்கு வீரகேசரி விநாசித்தம்பி மூலம் சனி பிடித்துக்கொண்டது. இரவோடு இரவாக பொலிசைக்கொண்டு ஒருவருமே தெப்பக்குளத்தினுள் போகாத மாதிரி தெப்பக்குளத்தை சுற்றி முள்ளு வேலி அடித்து விட்டார். தெப்பக் குளத்தை சுற்றி அடைக்கப்பட்டிருந்த முள்ளு வேலிக்கு பின்னால் அந்த சபிக்கப்பட்ட வண்ணாங்குண்டு மக்கள் பிள்ளயார் குளிப்பதைக் காண முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள். அதில் சூராவத்தையாரும் கலந்து இருந்தார்கள் .சுற்றிவரப் போலிஸ் காவலுக்கு நின்றது. பிள்ளையாரோ குருக்களின் உதவியுடன் தன்னந்தனியனாக தெப்பக்குளத்தில் குளித்துக்கொண்டிருந்தார் . எனக்கு ஏனோ வன்னியில் இருந்த செயிண்ட் ஜோசெப், மெனிக் பாம் முகாமின் முட்கம்பி வேலிகளுக்கு பின்னால் நின்ற அந்த மக்களின் நிலையே மனதில் நிழலாடின.

0000000000000000


பிற்குறிப்பு :
சாதீயமோ, எனது மக்கள் இவ்வளவு அழிவுகளையும் கண்டபின்னரும் இருக்கின்றது என்பதனை எனக்கு அண்மையில் தாயகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மூலம் உணர்த்தின. அதன் விழைவே இந்தக்கதை.

 

 

 

http://eathuvarai.net/?p=5023

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் வழமையான எழுத்து நடை...நன்றாக உள்ளது!

யாழ்ப்பாணத்தை ஜப்னா பட்டினம் என்று விழிப்பதை.. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! ஒரு வேளை அது எனது பலவீனமாகவும், எனது மண் மீது நான் கொண்ட 'பற்று' காரணமாகவும் இருக்கலாம்!

செத்துப்போகும் சாதீயத்தை 'உயிர்த்தெழுப்புவதற்கு' சில முன்னெடுப்புகள் இப்போது யாழில் நடை பெறுவதாகச் செய்திகளில் வாசிக்கின்றேன்!

உண்மையில்.. இது நடை பெறுகின்றதா என யாராவது இங்கு தெரியப்படுத்துங்கள்! நான் எதற்காகக் கேட்கிறேன் எனில்...சாதி குறைந்தவர்கள் எனக் கருதப்படுபவர்களின் 'பொருளாதார நிலையே'  அவர்கள் ஒடுக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என நான் நம்புவது தான்!

இப்போது அவர்களது பொருளாதார நிலை...முன்னிலும் பார்க்க மிகவும் மேம்பட்டுள்ளது என நினைக்கிறேன்!

எனது ஊரில்.. முன்னாள் மேல் சாதி எனக்கருதப்பட்டாவர்களால் நடத்தப்பட்ட கோவில் திருவிழாவைக் கூட.. அவர்கள் கை விட்டபோது... கீழ் சாதியினர் எனக் கருதப்பட்டவர்கள் இப்போது எடுத்து நடத்துகின்றார்கள்!

மிகவும் வரவேற்கப் பட வேண்டிய விடயம்!

வாழ்த்துக்கள் கோமகன்... உங்கள் சிகரத்தில் இன்னுமொரு  மணிக் கல்லாக இந்தக் கதை அமையட்டும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் எழுத்து நடை அருமை. புலம் பெயா் நாடுகளில்கூட இந்த சாதீய வெறி தலைவிாித்தாடுவது மறைமுகமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது, திருமணம் என்று வரும்பொழுது முதலில் என்ன சாதி என்பதுதான் பிரச்சனை. காதலிப்பவா்கள் ஓரளவு இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பி விடுகிறாா்கள். அடுத்த தலைமுறையினருக்கும் இதைத் திணிக்க முற்படும் எம் தமிழ் கலாச்சாரத்தை எப்படித் தடுப்பது என்பது தொியவில்லை. ஆனால் அடுத்த தலைமுறையினா் சாதீயத்தை சாகடிப்பாா்கள் என்ற நம்பிக்கை உண்டு, வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் எழுத்து நடை அருமை. புலம் பெயா் நாடுகளில்கூட இந்த சாதீய வெறி தலைவிாித்தாடுவது மறைமுகமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது, திருமணம் என்று வரும்பொழுது முதலில் என்ன சாதி என்பதுதான் பிரச்சனை. காதலிப்பவா்கள் ஓரளவு இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பி விடுகிறாா்கள். அடுத்த தலைமுறையினருக்கும் இதைத் திணிக்க முற்படும் எம் தமிழ் கலாச்சாரத்தை எப்படித் தடுப்பது என்பது தொியவில்லை. ஆனால் அடுத்த தலைமுறையினா் சாதீயத்தை சாகடிப்பாா்கள் என்ற நம்பிக்கை உண்டு, வாழ்த்துக்கள்.

கோமகனின் கதையை இணைத்த கிருபனுக்கு நன்றிகள்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கு நன்றி சொல்ல மறந்து விட்டதை சுட்டிக் காட்டிய புத்தனுக்கும் எப்பொழுதும் பல விடயங்களை எம்முடன் பகிா்ந்து கொள்ளும் கிருபனுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்களிடையேயே  சாதி பார்க்கும் பெரியவர்கள் இருக்கும்போது  ஊரில் கட்டாயம் இருக்கும். பொது இடங்களிலும் அரசியலிலும் இருக்க முடியாத சூழ் நிலை. ஆனால் பெரும்பான்மையான  பெரியவர்கள் மனதில் அழிக்க முடியாமல் வேரூன்றிவிட்டது. சில தசாப்தங்கள் இது தொடரும்.
கோமகனின் எழுத்து நடை தொடர்ந்து வாசிக்க வைக்கின்றது.
இணைப்பிற்கு நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.