Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: 145 கோடி ரூபாய் மர்ம கடிகாரம்

 

 
masal

உலகிலேயே மிகவும் உயரமான மனிதரும் உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதரும் லண்டனில் சந்தித்துக்கொண்டனர். 31 வயதான சுல்தான் கோசன் துருக்கியில் வசிக்கிறார். 8 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட உலகிலேயே உயரமான மனிதராக வலம் வருகிறார். நேபாளில் வசிக்கும் 75 வயது சந்திர பஹதூர் டாங்கி, 1 அடி 9.5 அங்குலம் உயரம் கொண்ட மிகவும் குள்ளமான மனிதராக இருக்கிறார். கின்னஸ் உலக சாதனைகளின் 60வது ஆண்டு கொண்டாட்டத்துக்காக இவர்கள் இருவரையும் லண்டனுக்கு வரவழைத்திருக்கிறார்கள். பிக் பென் அருகில் இருவரும் நின்று தங்கள் உயரங்களை, பொதுமக்களுக்குக் காட்டியிருக்கிறார்கள். ’நானும் சந்திர பஹதூரும் ஒரே மாதிரியான பிரச்சினைகளைத்தான் சந்தித்திருக்கிறோம். மிகவும் நல்ல மனிதர். அவரைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி’ என்கிறார் சுல்தான். இருவரும் கை குலுக்கிக்கொள்வதற்கே மிகவும் சிரமப்பட்டனர்.

அடப்பாவமே… எதுவுமே அளவோடு இருந்தால்தான் பிரச்சினை இல்லை…

ஃப்ளோரிடாவில் தாயும் மகளும் ஒரே நாளில் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். 40 வயது ஹெதெர் பெண்டிகாஃப், 20 வயது டெஸ்டினே மார்டின் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமானார்கள். ’அம்மா அவருடைய கர்ப்பத்தைச் சொன்னபோது ரொம்ப த்ரில்லாக இருந்தது. நாங்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமான விஷயத்தை இருவருமே சாதாரணமாக எடுத்துக்கொண்டோம். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டார்கள். நானும் அம்மாவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக, எங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, சந்தோஷமாக ஒரே நாளில் குழந்தைகளைப் பெற்றெடுத்தோம். என் மகனுக்கும் என் தங்கைக்கும் ஒரே வயது’ என்று மகிழ்கிறார் டெஸ்டினே மார்டின்.

இதெல்லாம் அவரவர் விருப்பம்… இதை விவாதம் செய்வதெல்லாம் நல்லாவா இருக்கு?

மாமூத் என்ற கம்பளி யானைகள் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வசித்து வந்துள்ளன. சைபீரியாவின் பனிப்பகுதியில் புதைந்திருந்த ஒரு மாமூத்தின் முழு உருவமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியே தோண்டி எடுத்து, ஆராய்ந்து வருகிறார்கள். இது 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வசித்ததாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தப் புதைப்படிமத்தில் இருந்து மாமூத்தை மீண்டும் க்ளோனிங் முறையில் மறு உருவாக்கம் செய்ய முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஐயையோ… ஜுராசிக் பார்க் படத்தில காட்டற மாதிரி டைனோசாரையும் கொண்டு வந்துடாதீங்க…

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கடிகாரம் 145 கோடிக்கு கடந்த வாரம் விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கடிகாரத்தின் உரிமையாளர் ஷேக் சவுத் பின் முகம்மது அல் தானி இறந்துவிட்டார். மிகப் பெரிய கோடீஸ்வரரான 48 வயது ஷேக் திடீரென்று இதயக் கோளாறால் லண்டனில் இறந்துபோனார். உடனே கடிகாரத்தைப் பற்றிய முந்தைய வரலாறுகளை ஆராயத் தொடங்கிவிட்டனர். ஏற்கெனவே கடிகாரம் வைத்திருந்த உரிமையாளர்கள் சிலரும் திடீரென்று மரணம் அடைந்ததாகப் பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள்.

இனி யார் வாங்கப் போறாங்க அந்தக் கடிகாரத்தை?

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: மரண விளையாட்டு!

 

 
10chskomasa

ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் முதலை காட்சியகம் ஒன்று, 2011-ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. மிகப் பெரிய தொட்டியில் 16 அடி நீளமுள்ள உப்பு நீர் முதலை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த முதலையை மிக அருகில் சென்று பார்ப்பதற்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் இங்கே வசதி செய்யப்பட்டிருக்கிறது. 8,700 ரூபாய் கட்டணத்தில் 30 நிமிடங்கள் மெல்லிய பிளாஸ்டிக் தொட்டிக்குள் அமர்ந்தபடி, முதலையை ரசித்துவிட்டுத் திரும்பலாம். முதலைக்கு மாட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றைக் கம்பியில் சொருகி வைத்துவிடுவதால், மனிதர்கள் இருக்கும் கூண்டுக்கு அருகிலேயே முதலை சுற்றிச் சுற்றி வருகிறது. 360 டிகிரிக்கு முதலையை முழுவதுமாகக் கண்டு ரசிக்கலாம். ஒரு கூண்டுக்குள் இருவர் அனுமதிக்கப்படுகிறார்கள். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கூண்டு மேலே வந்துவிடும். “இது என் வாழ்நாள் அனுபவம். நான் இவ்வளவு நல்ல அனுபவத்தை எதிர்பார்த்து இங்கே வரவில்லை. ஊர்வனப் பிராணிகளிலேயே உப்புநீர் முதலைதான் மனிதனுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியது. மனிதனைச் சாப்பிடும் முதலை என்றுதான் சொல்வார்கள். நேருக்கு நேர் மிக அருகில் பார்த்தபோது உடல் நடுங்கிவிட்டது. கூண்டுக்குள் இருக்கிறேன் என்பதே மறந்து பயம் பிடித்துக்கொண்டது. ஒருவேளை கூண்டு உடைந்தால் முதலைக்கு இரையாகிவிடுவது நிச்சயம். முதலையின் ஒவ்வொரு பல்லும் 4 அங்குல நீளத்துக்கு இருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகே பயம் விலகி, ரசிக்க ஆரம்பித்தேன்” என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி நெல்லி வின்ட்டர்ஸ்.

மரண விளையாட்டு!

ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோட் பகுதியிலுள்ள ஸாவோட் கிராமத்தைச் சேர்ந்தவர் உடாலோவ். இவரது வீடு இந்தக் கிராமத்தில் இருந்தாலும் அருகில் இருக்கும் நகரத்தில் வேலை பார்ப்பதால், எப்பொழுதாவதுதான் வீட்டுக்கு வருவார்கள். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, சில நாட்கள் வீட்டில் தங்குவதற்காக உடாலோவ் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக வந்தனர். ஆனால் வீட்டைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்துவிட்டனர். எந்த நேரமும் இடிந்துவிழக்கூடிய அளவுக்கு வீடு மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கு முன்பக்கம் இருந்த இவர்களுக்குச் சொந்தமான நிலத்தில், அரசாங்கம் சாலை போட்டிருந்தது. “பிழைப்புக்காக வெளியூர்களில் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது. எப்போதாவது இந்தக் கிராமத்துக்கு வந்து, தங்கிவிட மாட்டோமா என்ற எண்ணம் எங்களுக்குள் இருந்துகொண்டே இருக்கும். எங்களுக்கு இந்தக் கிராமமும் வீடும் அவ்வளவு முக்கியம். எங்களிடம் தகவல் கூடத் தெரிவிக்காமல், அரசாங்கம் வீட்டை இடித்திருக்கிறது. நிலத்தை அபகரித்துக்கொண்டிருக்கிறது. இனி இந்த வீட்டில் எங்களால் குடியிருக்க இயலாது. எந்த நேரமும் இடிந்து விழும் அளவுக்குச் சேதப்படுத்தியிருக்கின்றனர். எங்களுக்குத் தகவல் தெரிவிக்காதது, வீட்டைச் சேதப்படுத்தியது, நிலத்தை எடுத்துக்கொண்டது போன்ற குற்றங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்திருக்கிறேன். எங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை எங்கள் நிலத்தின் மீதுள்ள சாலையைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக, மரக்கட்டைகளைத் தடுப்பாகப் போட்டிருக்கிறேன். 40 லட்சம் ரூபாய் கிடைத்தால்தான் நாங்கள் வீட்டை மீண்டும் கட்ட முடியும்” என்கிறார் உடாலோவ்.

அரசாங்கமே இப்படிச் செய்யலாமா?

http://tamil.thehindu.com/world/article19655161.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: புதிய வரவு பிங்க் சாக்லெட்!

 

 
12chskosweet

நெஸ்லே நிறுவனம் ஒயிட் சாக்லெட் கண்டுபிடித்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று டார்க், மில்க், ஒயிட் என்று 3 முக்கியமான வகைகளில் சாக்லெட்கள் கிடைக்கின்றன. தற்போது நான்காவதாக இணைந்திருக்கிறது ரூபி பிங்க் சாக்லெட். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பேர்ரி கால்பாட், உலகின் மிகப் பெரிய கோகோ தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று. கடந்த 13 ஆண்டுகளாக ரூபி கோகோ விதைகளில் இருந்து இளஞ்சிவப்பு வண்ண சாக்லெட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த வகையான கோகோ ஈக்வடார், பிரேசில், ஐவரி கோஸ்ட் உட்பட பல நாடுகளில் விளைவிக்கப்படுகின்றன. உலகிலேயே முதல் முறையாக இந்த ரூபி கோகோ விதைகளில் இருந்து இயற்கையான முறையில் இளஞ்சிவப்பு சாக்லெட்டை உருவாக்கியிருக்கிறார்கள். சீனாவின் ஷாங்காய் பகுதியில் விற்பனைக்கு வந்த இந்த சாக்லெட் குறித்து விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இளஞ்சிவப்பு சாக்லெட் லேசான புளிப்புச்சுவையுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்குக் காரணம் இதில் செயற்கையாக எந்தப் பொருளும் சேர்க்கப்படவில்லை. இன்னும் 6 மாதங்களுக்குப் பிறகே, உலகின் மற்ற பகுதிகளுக்கு இளஞ்சிவப்பு சாக்லெட்டை விற்பனைக்கு கொண்டுவர இருக்கிறது ஸ்விட்சர்லாந்து நிறுவனம். “நாங்கள் இயற்கையான சுவையில் இந்த சாக்லெட் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். செயற்கை வண்ணமோ, நறுமணமோ இதில் சேர்க்கப்படவில்லை. சாக்லெட் வரலாற்றிலும் தயாரிப்பிலும் இளஞ்சிவப்பு சாக்லெட் ஒரு மைல்கல்” என்கிறார் பேர்ரி கால்பாட்டின் முதன்மை செயல் அலுவலர்.

புதிய வரவு பிங்க் சாக்லெட்!

பெரு நாட்டின் பிஸ்கோ நகரில் ட்ரக் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார் அலெஜான்ட்ரோ ராமோஸ் மார்டினெஸ். 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மிக மோசமான விபத்து நிகழ்ந்தது. 30 மீட்டர் ஆழத்தில் மிக வேகமாக விழுந்துவிட்டார். அப்போது ரத்தத்திலுள்ள நைட்ரஜன் அவரது தசைகளில் மிகப் பெரிய குமிழ்களை உருவாக்கிவிட்டது. மார்டினெஸின் உருவம் காற்றடைத்த பலூன் போல மிக மோசமாக மாறிவிட்டது. உடலிலுள்ள நைட்ரஜனை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான விஷமில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தக் குமிழ்கள் எல்லாம் ரத்தத்திலும் தசையிலும் சேர்ந்து உருவாகியிருக்கின்றன. இதனால் அளவுக்கு அதிகமான களைப்பு, தலைசுற்றல், குமட்டல், மூட்டு வலி போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. பக்கவாதம், மரணம் போன்ற துயரத்திலும் தள்ளிவிடலாம். உடலில் உள்ள நைட்ரஜனை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெளியேற்ற முடியும். ஓர் இயந்திரத்துக்குள் மார்டினெஸை நுழைத்து, ஆக்ஸிஜனைச் செலுத்தி, நைட்ரஜனை வெளியேற்றுகிறார்கள். ஆக்சிஜன் தெரபி மூலம் இதுவரை 30 சதவிகித நைட்ரஜன் குமிழ்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. இன்னும் குறைந்தது 100 தடவையாவது ஆக்சிஜன் தெரபி செய்தால்தான் மார்டினெஸ் முழுமையாகக் குணம் பெற முடியும். “இந்த பலூன்களால் 30 கிலோ எடை அதிகரித்தது போன்று இருக்கும். வலி உயிர் போகும். வலி நிவாரணிகளைச் சாப்பிட்டு, காலத்தைத் தள்ளுகிறேன். 64 லட்சம் ரூபாயில் ஓர் அறுவை சிகிச்சை இருக்கிறது என்கிறார்கள். ஒரு சாதாரண ட்ரக் ஓட்டுநரால் அவ்வளவு பணத்துக்கு எங்கே போகமுடியும்?” என்கிறார் மார்டினெஸ்.

விபத்தை விடக் கொடுமையாக இருக்கிறதே..!

http://tamil.thehindu.com/world/article19669697.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஒரு சுவர்க்கோழியின் விலை பல லட்சங்களா!

 

 
13chskomasalapic

சேவல் சண்டை, மாடு சண்டை போலவே சீனாவில் சுவர்க்கோழிகள் சண்டை மிகவும் பிரபலமானது. இந்த விளையாட்டு தோன்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. காலப்போக்கில் செல்வாக்குக் குறைந்திருந்த இந்த விளையாட்டு, தற்போது மீண்டும் பிரபலமாகிவிட்டது. மரபணுவில் உயர்ந்த நிலை பெற்ற சுவர்க்கோழிகள் வளர்ப்பு சீனாவில் தற்போது அதிக லாபம் தரும் தொழிலாக மாறிவிட்டது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து சுவர்க்கோழிகளை வாங்குகிறார்கள்.

ஒவ்வொன்றையும் தனிக் கவனம் செலுத்தி, மண் பானையில் வைத்துப் பராமரிக்கிறார்கள். இறால், ஈரல், புழுக்கள் போன்றவற்றை உணவாகக் கொடுக்கிறார்கள். சுவர்க்கோழி சண்டை நடப்பதற்கு முதல் நாள் இரவு, மண் பானைக்குள் இருக்கும் ஆண் சுவர்க்கோழியிடம் பெண் சுவர்க்கோழியை விடுகிறார்கள். பெண்ணுடன் சண்டையிட்டு, ஒத்திகை பார்த்துவிடுகிறது ஆண் சுவர்க்கோழி. வலிமை, ஆக்ரோஷம் போன்றவற்றை வைத்து ஆண் சுவர்க்கோழியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சுவர்க்கோழி சுமார் 5 லட்சம் வரை விலை போகிறது. சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள சிடியான் நகரம்தான் சுவர்க்கோழிகள் விற்பனைக்குப் புகழ்பெற்றது.

இங்கே பெரும்பாலான மக்கள் சுவர்க்கோழி வளர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். கோடைகாலத்தில் சிடியான் நகர் இரவு, பகல் பாராமல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் மக்கள் சுவர்க்கோழிகளை விற்பதற்காகக் கொண்டுவருவார்கள். சண்டைப் பயிற்சி பெற்ற சுவர்க்கோழிகள் விலை அதிகம் போகும் என்பதால், பிரத்யேகமாகப் பயிற்சியளிக்கிறார்கள். பயிற்சியாளர்கள், இடைத்தரகர்கள் என்று ஏராளமானவர்கள் இந்தத் தொழிலை நம்பியிருக்கிறார்கள். சிடியான் பகுதியில் தங்கும் விடுதிகளும் ஏராளமாக இருக்கின்றன. சுவர்க்கோழி வளர்ப்பில் சிறந்த குடும்பங்கள், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் ரூபாய்வரை சம்பாதித்து விடுகின்றனர்.

இந்த ஆண்டு 1.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை சுவர்க்கோழிகள் விற்பனையாகியிருக்கின்றன. 2014-ம் ஆண்டில் ஒரு சுவர்க்கோழி 49.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாகத் தகவல் பரவியது. ஆனால் அது வதந்தி என்கிறார்கள். சீனக் கலாச்சாரப் புரட்சியின்போது சுவர்க்கோழி விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்தது. நாளடைவில் மிகப் பெரிய வருமானம் தரக்கூடிய தொழிலாக மாறிவிட்டது. சிடியான் நகரைச் சேர்ந்த மக்கள் வருடத்தின் பெரும்பாலான நாட்களைப் பெரிய நகரங்களில் கழிக்கிறார்கள். போட்டி நடக்கும் காலகட்டத்தில் மட்டும் கிராமத்துக்கு வந்து, சுவர்க்கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். குறுகிய காலத்தில் அதிக அளவு பணத்தை ஈட்டிக்கொண்டு, மீண்டும் நகரம் நோக்கிச் சென்றுவிடுகின்றனர்.

சீனா முழுவதும் சுவர்க்கோழி சண்டை போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் 35 சுவர்க்கோழிகள் தேசிய அளவில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கின்றன. சுவர்க்கோழி வர்த்தகம் மிகவும் லாபகரமான தொழிலாக இருக்கிறது. ஆனால் மண்ணில் வாழும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. சீனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஊடகங்களும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். ஆனால் லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பவர்களிடம் இது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது என்கிறார்கள்.

ஒரு சுவர்க்கோழியின் விலை பல லட்சங்களா!

http://tamil.thehindu.com/world/article19675092.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மூக்கைவிடச் சிறந்த தொழில்நுட்பம் வேறு இல்லை…

 

 
 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
14chkanrobot-dog

ஜப்பானிய நிறுவனம் ஒன்று, துர்நாற்றத்தைக் கண்டுபிடிக்கும் ரோபோ நாயை உருவாக்கி இருக்கிறது. ஜப்பானியர் களுக்கு ஷூக்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இந்த துர்நாற்றத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே ரோபோ நாய் உருவாக்கப்பட்டிருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் ரோபோ நாய் அருகில் வரும். துர்நாற்றம் வரவில்லை என்றால் மகிழ்ச்சியாக வாலை ஆட்டிக்கொண்டு சென்றுவிடும். துர்நாற்றம் வந்தால் கோபமாகக் குரைக்க ஆரம்பித்துவிடும். காலணிகள் மட்டுமின்றி, வீட்டிலிருந்து வரும் எத்தகைய துர்நாற்றத்தையும் கண்டுபிடித்துவிடும் அளவுக்கு உயர்தொழில் நுட்பத்தில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது. 15 செ.மீ. நீளம் இருக்கும் இந்த ரோபோ நாய், சில நொடிகளில் நுகர்ந்து பார்த்துவிட்டுச் சொல்லி விடுகிறது. 3 விதங்களில் தன்னுடைய கருத்தை இது வெளிப்படுத்துகிறது. நறுமணம் என்றால் வால் ஆட்டும், துர்நாற்றம் என்றால் குரைக்கும், தாங்க முடியாத துர்நாற்றம் என்றால் கீழே விழுந்துவிடும். விலை சுமார் 6 லட்சம் ரூபாய்.

நம் மூக்கைவிடச் சிறந்த தொழில்நுட்பம் வேறு இல்லை…

சோமாலியா நாட்டைச் சேர்ந்த தாயும் மகனும் லண்டனில் 3 ஆண்டுகளாக தெருவிலேயே வசித்து வருகிறார்கள். இரவு, பகல், பனி, மழை என்று எதையும் பொருட்படுத்தாமல் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். 2014-ம் ஆண்டு இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மருத்துவம் பார்த்ததிலும், அவர் மரணம் அடைந்ததிலும் பொருளாதார நிலைமை மிக மோசமடைந்தது. அதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தெருவுக்கு வந்துசேர்ந்தனார். நூலகத்தின் வெளியே இருக்கும் நீண்ட இருக்கைக்கு அடியில் தங்களின் பொருட்கள் அடங்கிய பெட்டிகளையும் பைகளையும் வைத்துக்கொள்கிறார்கள்.

காலை 10.30 மணிக்கு கண் விழிக்கிறார்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு காலை உணவு. நூலகம் திறந்தவுடன் அம்மா உள்ளே சென்றுவிடுவார். காலை கடன்களை முடித்துவிட்டு, சிறிது நேரம் புத்தகங்கள் படித்துவிட்டு, இருக்கைக்கு திரும்புவார். மதியம் 2 மணிக்கு உணவுடன் வந்து சேர்வார் மகன். வெயில் காலமாக இருந்தால் குடையை விரித்து வைத்துக்கொண்டு, உணவைச் சாப்பிட்டு, மீண்டும் தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். மாலை ஒரு காபியை வாங்கி இருவரும் பகிர்ந்து குடிக்கிறார்கள். மகன் பாட்டு கேட்டு பொழுதுபோக்குவார். அம்மா, அந்த வழியே செல்பவர்களிடம் உற்சாகமாகப் பேசிப் பொழுது போக்குவார். இரவில் பழங்கள், சாண்ட்விச் சாப்பிட்டு 12 மணிக்கு தார்பாலினால் மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள். அரசாங்கம் இருமுறை இவர்களுக்காக ஒரு வீட்டை ஒதுக்கிய போதிலும் அந்த வாடகையைக் கொடுக்க முடியாது என்பதால் இவர்கள் செல்லவில்லை.

எத்தனையோ அறக்கட்டளைகள் உதவுவதற்குத் தயாராக இருக்கின்றன. ஆனால் எந்த உதவியையும் இவர்கள் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்த வழியாகச் செல்பவர்கள் பரிதாபப்பட்டு தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றை வழங்குகிறார்கள். இந்த அத்தியாவசிய தேவைகளை மட்டும் புன்னகையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். யாரிடமும் எந்த உதவியும் தாங்களாகக் கேட்பதில்லை. நகர நிர்வாகம் இவர்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவிக்கிறது. ஒருவருக்கு கட்டாயப்படுத்தி உதவியைப் பெற வைக்க முடியாது என்று சொல்வதும் உண்மை தானோ.

இவர்களுக்காவது உதவுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்…

http://tamil.thehindu.com/world/article19681689.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஐயோ… புதுசு புதுசா நோய் உருவாகுதே…

 

 
15chskous
15chskoma

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்துவரும் நடாலியா அட்லெர், விநோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். திடீரென்று இமைகள் மூடிக்கொண்டால் 3 நாட்களுக்கு அவரால் இமைகளைத் திறக்க முடியாது. 13 ஆண்டுகளாக இந்த விசித்திர நோயால் நடாலியா அனுபவிக்காத துன்பமே இல்லை. இதுவரை ஏராளமான பரிசோதனைகள் செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால் சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. “17 வயதில் ஒரு ஞாயிற்றுக் கிழமை தாமதமாகக் கண் விழித்தேன். என்னுடைய இமைகள் ஏனோ வீங்கியிருந்தன. என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது இமைகள் இடைவிடாமல் மூடி, மூடித் திறந்தன. சில நிமிடங்களில் மூடிய இமைகளை என்னால் திறக்க முடியவில்லை. உடனே மருத்துவரிடம் சென்றோம். அவருக்கும் காரணம் புரியவில்லை. மூன்று நாட்கள் பார்வையின்றி தவித்துக்கொண்டிருந்தேன். பிறகு திடீரென்று இமைகள் திறந்தன. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனி பிரச்சினை இல்லை என்று நினைத்தேன். ஆனால் சில நாட்களில் மீண்டும் இமைகள் மூடிக்கொண்டன. 3 நாட்களுக்குப் பிறகு திறந்தன. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மருத்துவரைப் பார்த்தோம். பரிசோதனைகள் எடுத்தோம். ஆனால் யாருக்கும் காரணம் தெரியவில்லை. மருத்துவ உலகத்துக்கே என் பிரச்சினை சவாலாக இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வரிசையாகப் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இமைகளில் உள்ள 99% தசைகளை எடுத்துவிட்டனர். ஆனாலும் மாதம் ஒருமுறை இமைகள் மூடிக்கொள்வதை இன்றுவரை தடுக்க முடியவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் 40 மருத்துவ நிபுணர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனாலும் என்னை முழுவதுமாகக் குணப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறை இமைகளை மூடும்போதும் திறக்க முடியாதா என்ற பயம் வந்துவிடுவது கொடுமையானது. என் கணவர் அளிக்கும் அன்பாலும் தைரியத்தாலும்தான் நான் வாழ்க்கையை ஓரளவு சிரமமின்றி நடத்தி வருகிறேன். ராயல் மெல்பர்ன் மருத்துவமனை மரபணு ஆராய்ச்சி மையத்தில் பதிவு செய்திருக்கிறேன். அங்குள்ள ஆராய்ச்சியாளர்களால் என் பிரச்சினையைச் சரி செய்ய முடியும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்” என்கிறார் நடாலியா.

ஐயோ… புதுசு புதுசா நோய் உருவாகுதே…

அமெரிக்காவின் டெக் சாஸ் பகுதியில் ஏற்பட்ட சூறாவளியின் விளைவால் பல கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கியிருந்தன. நேஷனல் அடோபோன் சொசைட்டியைச் சேர்ந்த ப்ரீத்தி தேசாய், இறந்து போன ஒரு கடல்வாழ் உயிரினத்தைக் கண்டார். நீண்ட உருளை போன்ற உடலும் ரம்பம் போன்ற கூர்மையான பற்களும் கொண்ட இந்த உயிரினத்துக்குக் கண்கள் இல்லை. “நான் இப்படி ஒரு உயிரினத்தை இதுவரை பார்த்ததில்லை. எங்கள் மையத்திலும் இது குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அதனால் சமூக வலைதளங்களில் ஆராய்ச்சியாளர்களின் உதவி கேட்டேன். சிலர் மீன் வகையைச் சேர்ந்தது என்றார்கள். இன்னும் சிலர் ஃபேங்டூத் ஸ்நேக் ஈல் என்றார்கள். இன்னும் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை” என்கிறார் ப்ரீத்தி தேசாய்.

மனிதனால் கண்டுபிடிக்க முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன!

http://tamil.thehindu.com/world/article19689510.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: உள்ளம் கொள்ளைகொள்ளும் சீட்டுக்கட்டு ஜாடிகள்!16chskomasalapic

சீனாவில் வசிக்கும் 65 வயது ஸாங் கேஹுவா, பிரத்யேகமான ஒரு கலையில் நிபுணராக இருக்கிறார்! சீனாவின் புகழ்பெற்ற பீங்கான் ஜாடிகளைப் போலவே பிளாஸ்டிக் சீட்டுக் கட்டுகளில் ஆள் உயர ஜாடிகளை உருவாக்கி அசத்திவிடுகிறார்! “சீட்டுக் கட்டுகளை வைத்து எவ்வளவோ பேர், எத்தனையோ விதங்களில் உருவங்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால் ஸாங் கேஹுவா போல் இதுவரை யாரும் செய்ததில்லை. இவருடைய படைப்பு மிக உன்னதமான இடத்தில் இருக்கிறது. பிளாஸ்டிக் கார்டுகளை மடிப்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. விடாமுயற்சியால் இவர் இந்தக் கலையைக் கைப்பற்றிக்கொண்டார். தூரத்தில் இருந்து பார்த்தால் பீங்கான் ஜாடிகளைப் போலவே அழகாக இருக்கின்றன!” என்கிறார் மாவோ ஸாங். “பழம்பெருமை வாய்ந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதுதான் என்னுடைய வேலை. தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்தில் எவ்வளவு அற்புதமான வேலைப்பாடுகளுடன் ஒவ்வொரு பொருளையும் மனிதர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவற்றை எல்லாம் பார்த்து நானும் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். பிளாஸ்டிக் சீட்டுகள் கண்ணில் பட்டன. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, ஜாடி செய்யும் நுட்பத்தை உருவாக்கினேன். உடனே எனக்கு வெற்றி கிடைத்துவிடவில்லை. சவாலாக எடுத்துக்கொண்டு, ஜாடியைச் செய்து முடித்தேன். பார்த்தவர்கள் அசல் ஜாடி என்று பாராட்டினார்கள். பிறகு சிறிய ஜாடிகளிலிருந்து ஆள் உயர ஜாடிகள்வரை செய்ய ஆரம்பித்துவிட்டேன். 106 செ.மீ. உயரம் உள்ள ஒரு ஜாடியை உருவாக்க, 5 ஆயிரம் கார்டுகள் தேவைப்படும். ஒரு வாரத்தில் செய்து முடித்துவிடுவேன். வீட்டு அலங்காரத்துக்கும் பரிசாகக் கொடுப்பதற்கும் மக்கள் ஆர்வத்துடன் ஜாடிகளை வாங்கிச் செல்கிறார்கள்” என்கிறார் ஸாங் கேஹுவா.

உள்ளம் கொள்ளைகொள்ளும் சீட்டுக்கட்டு ஜாடிகள்!

மெலானி பார்போனி சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர். வானியல் மையத்தில் உதவி ஆராய்ச்சியாளராக லாஸ் ஏஞ்சல்ஸில் பணியாற்றி வருகிறார். இவரை வானியல் ஆராய்ச்சியாளர் என்பதைவிட ‘ரீங்காரச்சிட்டு ஆராய்ச்சியாளர்’ என்றே பலரும் அழைக்கிறார்கள். இவரது அலுவலக ஜன்னலுக்குத் தினமும் 200 ரீங்காரச்சிட்டுகள் வருகின்றன. உணவு அருந்துகின்றன. தண்ணீர் குடிக்கின்றன. “ரீங்காரச்சிட்டுகள் மிக வேகமாக இயங்கக்கூடியவை. பொதுவாக அருகில் பார்க்க முடியாது. சுவிட்சர்லாந்தில் ரீங்காரச்சிட்டுகளே இல்லை என்று சொல்லலாம். புத்தகங்களில்தான் பார்த்திருக்கிறேன். அதனால் எனக்கு இவற்றின் மீது ஈர்ப்பு வந்துவிட்டது. வேலைக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தபோது, ஆண்டு முழுவதும் இங்கே இந்தப் பறவைகளைப் பார்க்க முடியும் என்ற செய்தி அறிந்து மகிழ்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலுவலக ஜன்னலில் பூந்தேனையும் தண்ணீரையும் வைத்தேன். பறவைகள் உணவு தேடி வர ஆரம்பித்தன. இன்று சுமார் 200 பறவைகள் இந்த ஜன்னலுக்கு வருகின்றன. என் கைகளில் இருந்து உணவு சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டன. வேலை அதிகமாக இருக்கும்போது இவற்றைக் கவனிக்காவிட்டால், சத்தமிட்டு அழைக்கின்றன” என்கிறார் மெலானி பார்போனி.

ரீங்காரச்சிட்டுகளின் தோழி!

http://tamil.thehindu.com/world/article19696830.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அடடா! காபியில் செல்லப் பிராணிகளின் படங்கள்!

 

 
17chskomasalapic

தைவானில் உள்ள கஃபே மை காஃபி மையத்தில் விலங்குகளின் உருவங்களை, காபியில் உருவாக்கித் தருகிறார்கள். விலங்குகள் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பவர்களுக்கு பால், சாக்லெட் நுரையில் அழகான செல்லப் பிராணிகளை உருவாக்கித் தருகிறார்கள். “செல்லப் பிராணிகளின் படங்களைக் கொடுத்தால், அதே போன்ற உருவத்தை காபியில் கொண்டுவந்துவிடுவோம். அடிப்படை விஷயங்களை என் ஊழியர்கள் செய்வார்கள். நுரை மூலம் உருவத்தை நான் கொண்டுவருவேன். இந்த காபிகளுக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது” என்கிறார் சாங் குயீ ஃபாங்.

அடடா! காபியில் செல்லப் பிராணிகளின் படங்கள்!

தாய்லாந்தில் பல தார மணம் சட்டப்படி குற்றம். இந்த நவீன காலத்திலும் ஒருவர் 120 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்! புரோம்னீ மாவட்டத்தில் வசிக்கும் டாம்போன் பிரசெர்ட் சட்டத்துக்குப் புறம்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்திருக்கும் விஷயம் சமீபத்தில் வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 58 வயது டாம்போன் உள்ளூர் அரசியல்வாதியாகவும் கட்டுமானத் தொழிலதிபராகவும் இருக்கிறார். “எனக்குத் தாய்லாந்து முழுவதும் தற்போது 120 மனைவிகள் இருக்கிறார்கள். 28 மகன்களும் மகள்களும் இருக்கிறார்கள். யாரையும் ஏமாற்றி நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. பெண்கள், அவர்கள் குடும்பத்தினரின் அனுமதியோடுதான் திருமணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு திருமணமும் என்னுடைய அனைத்து மனைவிகளுக்கும் தெரியும். அவர்களின் சம்மதத்துடன்தான் செய்திருக்கிறேன். அதனால்தான் இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. எனக்கு 17 வயதில் முதல் திருமணம். 3 குழந்தைகள் பிறந்தனர். என்னுடைய கடின உழைப்பால் தொழிலதிபராகவும் அரசியல்வாதியாகவும் உயர்ந்தேன். நாடு முழுவதும் என் தொழில் விரிவடைந்தது. எங்கெல்லாம் கட்டிடம் கட்டப் போகிறேனோ அங்கெல்லாம் தங்க வேண்டியிருக்கும். அப்போதுதான் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் வந்தது. என்னுடைய எல்லா மனைவிகளும் 20 வயதுக்குக் குறைவானவர்கள்தான். வயதான பெண்களை நான் விரும்புவதில்லை. அவர்கள் அதிகமாக விவாதம் செய்வார்கள். ஊருக்கு ஒருத்தரைத் திருமணம் செய்து, அந்த ஊரில் வேலைக்காகச் செல்லும்போது குடும்பம் நடத்திக்கொள்வேன். ஒவ்வொரு மனைவியையும் நான் மிகவும் மதிக்கிறேன், அன்பு செலுத்துகிறேன். அவர்களும் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். வீடில்லாத மனைவிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளேன். எல்லோரையும் பொருளாதார ரீதியில் சிறப்பாக வைத்திருக்கிறேன். பாங்காக்கில் சில கி.மீ. இடைவெளியில் 22 மனைவிகள் இருக்கிறார்கள். யாருமே சண்டையிட்டுக் கொண்டதில்லை. நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டாலும் இருவருமே என் மனைவிகள் என்று தெரியவந்தாலும் ஒரு புன்னகையால் கடந்து சென்றுவிடுவார்கள். நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தால் அனைத்து மனைவிகளிடமும் முறையாகத் தகவல் கொடுத்துவிடுவேன். சட்டப்படி எங்கள் திருமணத்துக்கு அனுமதி இல்லாவிட்டாலும் நான் பாரம்பரிய முறைப்படித்தான் திருமணம் செய்கிறேன். எனக்கும் பிரச்சினை இல்லை. என்னுடைய மனைவிகள், குழந்தைகளுக்கும் பிரச்சினை இல்லை” என்று பத்திரிகையாளர்களிடம் டாம்போம் கூறினார். இந்தச் சந்திப்பின்போது இவருடைய 27 வயது மனைவி நாம் ஃபோன் உடன் இருந்தார்.

மன்னர் காலத்தில்தான் இதுபோன்ற செய்திகளை கேள்விப்பட்டிருக்கிறோம்…

http://tamil.thehindu.com/world/article19702901.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகின் நீளமான இமை முடிகள் கொண்ட கின்னஸ் சாதனைப் பெண்ணுக்கு வாழ்த்துகள்!

 

 
jkipng

சீனாவைச் சேர்ந்த 48 வயது யு ஜியான்ஸியாவின் இமை முடிகள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மிக நீளமானவை! சாதாரணமாக மனிதர்களின் இமை முடிகள் 0.8 முதல் 1.2 செ.மீ. வரை நீளம் இருக்கும். ஆனால் ஜியான்ஸியாவின் இமை முடிகள் 12.4 செ.மீ. நீளம் இருக்கின்றன! ‘உலகின் மிக நீளமான இமை முடிகள்’ என்ற கின்னஸ் சாதனையைப் பெற்றுவிட்டன. 2018-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் ஜியான்ஸியாவின் பெயர் இடம்பெற இருக்கிறது. உலகம் முழுவதும் 500 பேர் இந்தப் பிரிவில் போட்டியிட்டனர். அதில் ஒருவர் கூட இவருக்கு அருகில் வர முடியவில்லை. “என்னுடைய இமை முடிகள் கின்னஸ் அமைப்பினரால் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக அளவு எடுக்கப்பட்டன. ஓராண்டில் இன்னும் சற்று அதிகமாக முடிகள் வளர்ந்துவிட்டன. எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு நீளமாக இமை முடிகள் வளர்கின்றன என்று ஆச்சரியமாக இருக்கிறது. நான் கோடிக்கணக்கில் பணம் புரளும் மிகப் பெரிய நிறுவனத்தில் சேர்மேனாக பதவி வகித்துவந்தேன். 2013-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டேன். இயற்கை மீது தீராத ஆர்வம் எனக்கு உண்டு. அதனால் மிகப் பெரிய தோட்டத்தை உருவாக்கினேன். அதில் 1,600 வகை ரோஜா செடிகளை வளர்த்துவந்தேன். அப்போதுதான் என் இமை முடிகள் மிக நீளமாக வளர ஆரம்பித்தன. அதற்கு முன்பு வரை நான் சாதாரணமாகத்தான் இருந்தேன். தோட்டத்துக்கும் என் இமை முடிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று கூட யோசித்திருக்கிறேன். நீளமாக வளர ஆரம்பித்தவுடன் அதை வெட்டாமல் விட்டுவிட்டேன். என் வாய் வரை வளர்ந்துவிட்டன. எல்லோரும் இது எனக்குக் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். நான் ஒருநாளும் எந்தவித அசவுகரியத்தையும் உணர்ந்ததில்லை. உலகிலேயே நீளமான இமை முடிகளுக்குச் சொந்தக்காரி என்பதில் எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. தவறுதலாக முடிக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். நீளமான இமை முடிகள் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் குறிப்பதாகப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவை முகத்தைச் சுத்தம் செய்யும்போதும் கவனமாக இருக்கிறேன்” என்கிறார் யு ஜியான்ஸியா.

உலகின் நீளமான இமை முடிகள் கொண்ட கின்னஸ் சாதனைப் பெண்ணுக்கு வாழ்த்துகள்!

 

பிரான்ஸைச் சேர்ந்த ஹெர்மஸ் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை நிறுவனம், 55 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பேப்பர் வெயிட் கல்லை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது. இந்தக் கல் பிரத்யேகமானது. இதைப்போல் இன்னொரு கல்லை இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது என்பதாலும் இது பணக்காரர்களுக்கானது என்பதாலும் இவ்வளவு விலை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். வெள்ளை நிறத்தில் நீள்கோள வடிவில் இருக்கும் இந்தக் கல்லைச் சுற்றி தோல் கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கிறது. கல்லைத் தொடாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

என்னதான் சொன்னாலும் ஒரு பேப்பர் வெயிட்டுக்கு இவ்வளவு விலையா?

http://tamil.thehindu.com/world/article19713820.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: இயற்கையின் அதிசயங்களில் கல் முட்டையிடும் குன்றும் ஒன்று!

 

 
jipng

சீனாவில் உள்ள ஒரு குன்றை, ’முட்டையிடும் மலை’ என்று மக்கள் அழைக்கிறார்கள். கைஸொவ் மாகாணத்தில் உள்ள சான் டா யா குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாகச் சொல்கிறார்கள். 9 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்ட சமதளமற்ற குன்றில் டஜன் கணக்கில் கோள வடிவ முட்டைகள் வெவ்வேறு அளவுகளில் உருவாகியிருக்கின்றன. குன்றுக்கு அருகில் இருக்கும் குலு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த மலை நன்றாகச் சாப்பிட்டு, 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகளை இடுவதாகச் சொல்கிறார்கள். இந்த விசித்திரமான முட்டை இடும் மலையை ஆய்வு செய்வதற்குப் புவியியலாளர்கள் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கிறது. நகரிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து, ஒதுக்குப்புறமான குன்றை அடையவேண்டும். குன்று கடினமான பாறைகளால் ஆனது. முட்டைகள் சுண்ணாம்புப் பாறைகளால் ஆனவை. எல்லா முட்டைகளும் ஒரே விதமான பாறையால் உருவாகவில்லை. இதுவரை இந்தக் குன்றிலிருந்து ஏன் முட்டை வடிவப் பாறைகள் உருவாகின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. இன்னும் சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கல் முட்டைகள் எப்படி உருவாகின்றன என்று தெரியவரலாம் என்கிறார்கள். பல தலைமுறைகளாக இந்தக் குன்று முட்டைகளை இடுவது குறித்து குலு கிராம மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். அடிக்கடி குன்றுக்கு வந்து, முட்டைகளைத் தொட்டு வணங்குகிறார்கள். ‘கடவுள் முட்டைகள்’ என்றும் ’அதிர்ஷ்டம் தரும் முட்டைகள்’ என்றும் நம்புகிறார்கள். கிராமத்தில் வசிக்கும் 125 குடும்பங்களும் குறைந்தது ஒரு கல் முட்டையையாவது வைத்திருக்கின்றன. மற்ற கிராமங்களில் இருந்தும் முட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள். சமீபத்தில் இந்தக் குன்று பிரபல சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. பெரும்பாலான கல் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. 70 கல் முட்டைகளே தற்போது குலு கிராமத்தில் இருக்கின்றன. புதிதாக விழும் முட்டைகளைத் திருடுவதற்காகப் பலரும் காத்திருக்கிறார்கள். சீனாவில் உள்ள மலைகளிலேயே சான் டா யா குன்றில்தான் அதிக அளவில் கல் முட்டைகள் உருவாகின்றன. இவை மற்ற கல் முட்டைகளைவிட மிகச் சிறப்பாக இருக்கின்றன.

இயற்கையின் அதிசயங்களில் கல் முட்டையிடும் குன்றும் ஒன்று!

அமெரிக்காவைச் சேர்ந்த அமன்டா சின்டர் தாயாகியிருந்தார். குழந்தை பிறப்பதற்கு முன்பு அமன்டாவும் அவரது கணவர் ஜெஸ்ஸி வேனும் போடோஷூட் செய்யவேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால் ஒரு மரத்தை வெட்டிக்கொண்டிருந்தபோது அந்த மரம் விழுந்து, விபத்தில் உயிரிழந்தார் ஜெஸ்ஸி. அமன்டா உடைந்து போனார். தன்னைத் தேற்றிக்கொண்டவர், தனியாக போடோஷூட்டில் பங்கேற்றார். இவரது உருவத்துக்கு அருகில் ஜெஸ்ஸியின் உருவத்தை போட்டோஷாப் மூலம் பொருத்தச் சொன்னார். “மற்றவர் கண்களுக்கு ஜெஸ்ஸி இல்லை என்பது நிஜம். ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் இருக்கிறார். அதனால்தான் ஒளிப்படங்களில் நான் பளிச்சென்றும், ஜெஸ்ஸி மங்கலாகவும் தெரியும்படி உருவாக்கச் சொன்னேன். ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்தவுடன் ஒளிப்படக்காரர் ஆல்பத்தைக் கொடுத்தார். என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை” என்கிறார் அமன்டா.

நெகிழ்ச்சியான ஆல்பம்!

http://tamil.thehindu.com/world/article19719470.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஒரே வீட்டில், ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள்!

 

 
21chkancygnus-longest-tail

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் வசிக்கும் லாரன், வில் பவர்ஸ் தம்பதியர் பூனைகளை வளர்த்து வருகிறார்கள். இவற்றில் சிக்னஸ் என்ற பூனையின் வால் மிக நீளமாக இருக்கிறது. உலகிலேயே மிக நீளமான வாலுடைய வீட்டுப் பூனை இதுதான். வாலின் நீளம் 18.4 அங்குலம். “சிக்னஸுக்கு 2 வயதாகிவிட்டது. பிறந்ததிலிருந்தே இயல்பான பூனைகளைவிட இதன் வால் மிக நீளமாக இருந்தது. இந்தப் பூனையின் சகோதரனுக்கு வால் சாதாரணமாகத்தான் இருக்கிறது. காரணம் தெரியவில்லை. ஒருகட்டத்தில் பூனையின் வால் அளவுக்கு அதிகமாக வளர ஆரம்பித்தது. அதற்குப் பிறகே சிக்னஸின் வாலை, பாதுகாக்க ஆரம்பித்தோம். கதவு பின்னால் ஒளிந்துகொள்ளும்போது வால் கதவில் சிக்கிவிடும். உயரமான இடத்திலிருந்து குதிக்கும்போது வாலுக்கு என்ன ஆகுமோ என்ற பயம் வந்துவிடும். இவனைக் கண்காணிப்பதே ஒரு பெரும் வேலையாக மாறிவிட்டது. சென்ற வருடம் ஜூன் மாதம் கின்னஸ் நிறுவனத்திலிருந்து வந்து சிக்னஸின் வாலை அளந்தனர். 17.58 அங்குல நீளம் இருந்தது. தற்போது 18.4 அங்குலமாக வளர்ந்துவிட்டது. மாதந்தோறும் வளர்ச்சி தெரிகிறது. உலகிலேயே மிக நீளமான வாலுடைய வீட்டுப் பூனை இதுதான் என்று கின்னஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கிவிட்டது. சிக்னஸின் சகோதரன் ஆர்க்ட்ரஸும் ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்திவிட்டான். ‘உலகின் மிக உயரமான வீட்டுப் பூனை’ என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறான். இவனின் உயரம் 19.5 அங்குலம். ஒரே வீட்டில், ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள் நிகழ்ந்திருப்பது குறித்து எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்கிறார் லாரன்.

ஒரே வீட்டில், ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள்!

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவுடன் நிஸ்மாவும் ரோயாவும் சட்டென்று தோழிகளாக மாறினர். இருவரும் மொராக்கோவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். கனடாவில் பிறந்தவர்கள் போன்ற விவரங்கள் எல்லாம் பின்னர்தான் தெரியவந்தன. இருவரும் ஒரே அறையில் தங்கியவுடன் நட்பு இன்னும் ஆழமானது. “ஒருமுறை என் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று ரோயாவின் அம்மாவிடம் போனைக் கொடுத்து அப்பாவிடம் பேசச் சொன்னேன். ஒரு சில நிமிடங்கள்தான் இருவரும் பேசினார்கள். உடனே என் அப்பா ரோயாவின் அம்மா யார் என்று கண்டுபிடித்துவிட்டார். என் அம்மாவின் ஆருயிர் தோழி ரோயாவின் அம்மா. இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். திருமணத்துக்கு பிறகும் பக்கத்து பக்கத்து வீடுகளில் குடியிருந்தனர். நானும் ரோயாவும் பிறந்தோம். அப்போதே நல்ல தோழிகளாக இருந்தோம். அதற்கு சாட்சியாக ஒளிப்படங்கள் இருக்கின்றன. பிறகு ரோயா குடும்பம் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டது. காலப் போக்கில் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் குடும்பம் மீண்டும் தொடர்புக்கு வந்திருக்கிறது. எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்கள் அம்மாக்களும் தோழிகள். நாங்களும் தோழிகள் என்பது சுவாரசியமானது” என்கிறார் நிஸ்மா.

அடடா! அம்மாக்களும் தோழிகள்; மகள்களும் தோழிகள்!

http://tamil.thehindu.com/world/article19725969.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
 
 
22chskomasalapic
 

இர்மா சூறாவளியால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு, துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மாரத்தான் பகுதியைச் ஜுலியோ மெலெண்டஸும் ஒருவர். சூறாவளியால் வீடு உட்பட அனைத்தையும் இழந்துவிட்டார். தற்போது தன்னுடைய ட்ரக்கில்தான் வசித்து வருகிறார். ஆனாலும் பிறருக்கு உதவுவதில் மும்முரமாக இருக்கிறார். சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தண்ணீர், உணவுப் பொருட்கள், போர்வை என்று தனக்குக் கிடைப்பதைக் கொடுத்துவிடுகிறார். ஜுலியோவைக் கவனித்து வந்த லேன் லோஸோனோ, காற்றுப் படுக்கை ஒன்றை அளித்தார். உடனே ஜுலியோ, “இந்த உதவிக்கு மிக்க நன்றி. ஆனால் என்னைவிட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை அளித்துவிடுவேன். உதவி வேண்டி ஏராளமான மக்கள் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லும்போதே அழுதுவிட்டார். லோஸோனோவை இந்தச் சம்பவம் உலுக்கிவிட்டது. ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். “நாங்கள் இரண்டு நாட்கள் அந்தப் பகுதி யில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். அடிக்கடி ஜுலியோவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னிடம் எதுவுமே இல்லாதபோதும், தனக்குக் கிடைக்கும் பொருட்களைப் பிறருக்குக் கொடுப்பதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும். இந்த நல்ல உள்ளத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால் எங்கள் சந்திப்பு வீடியோவுடன், இந்த ஹீரோவுக்கு ஒரு வேலையும் வீடும் கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதுவரை 50 லட்சம் தடவை இந்த வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது. 3 ஆயிரம் பேர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். இந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருக்கு ஏராளமானவர்கள் உதவுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்” என்கிறார் வேன் லோஸோனோ.

 

ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!

ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, 4 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி டோக்கியோவுக்கு வந்தார். குடியிருக்க வீடு இல்லை. எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, தன்னை வாடகைக்கு விட முடிவு செய்தார். “நான் வேலையற்றவன். நகைச்சுவை உணர்வு மிக்கவன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னால் முடியும். நீங்கள் கொடுக்கும் வேலைகளையும் செய்வேன். உணவும் தங்கும் இடமும் அளித்து, மாதம் 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும்” என்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நிறையப் பேர் கோட்டானியைத் தொடர்புகொள்ள ஆரம்பித்தனர். ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம், ஒரு மாதம் வரை இவரை வாடகைக்கு எடுக்கிறார்கள். 500 ரூபாய் மிகவும் குறைவான ஊதியம் என்பதால் உடைகள், செருப்பு, போன் கட்டணம் என்று பலவற்றையும் தாங்களாகவே விரும்பிச் செய்கிறார்கள். “என்னுடைய வாடிக்கையாளர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு நடந்துகொள்வேன். உலகம் அன்பால் ஆன மக்களால் நிறைந்தது என்பதைக் கண்டுகொண்டேன். இதுவரை எந்த வாடிக்கையாளரும் என்னை மோசமாக நடத்தியதில்லை. அவர்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள். வீட்டிலுள்ளவர்களை நகைச்சுவையால் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பதே என்னுடைய முக்கியமான வேலை. மற்ற நேரங்களில் அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்வேன். அவர்களுடன் வெளியே செல்வேன். உணவருந்துவேன். இன்று என்னை வாடகைக்கு எடுப்பதற்குப் பலத்த போட்டி. ஒரு மாதத்துக்கு முன்பே பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறார்கள்” என்கிறார் கோட்டானி.

விநோதமான வேலை!

http://tamil.thehindu.com/world/article19733652.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நேற்று பாத்திரம் தேய்த்தவர், இன்று பிரபல மாடல்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
 
 
23chskomasalapic%202

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் உள்ள ஓர் உணவு விடுதியில் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் பணியில் சேர்ந்தார் ரெமிங்டன் வில்லியம்ஸ். 12-வது நாளில் நியூயார்க் பேஷன் வீக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. உடனே நியூயார்க் சென்று, சர்வதேச மாடலிங் ஏஜென்சியின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ரெமிங்டனுக்குப் பயிற்சியளிக்கப்பட்டபோது பல்வேறு மாடலிங் நிறுவனங்கள் அவரை உற்று நோக்கின. இவரது திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்தன. கால்வின் க்லெய்ன் நிறுவனம் தன்னுடைய பிராண்ட் சார்பாக பேஷன் வீக்கில் பங்கேற்க வாய்ப்பு அளித்தது. இதுவரை சிறிய அளவில்கூட மாடலிங் செய்திராத ரெமிங்டனுக்கு ஆரம்பமே பிரம்மாண்டமாக இருந்தது. “மிகச் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவள். கிராபிக் டிசைன் படித்துக்கொண்டே, பகுதி நேரமாகப் பாத்திரம் சுத்தம் செய்யும் பணியில் சேர்ந்தேன். சட்டென்று மாடலிங் வாய்ப்பு கிடைத்துவிட்டது. எத்தனையோ பேர் மாடலிங் வாய்ப்புக்காகப் பயிற்சி எடுத்து காத்திருக்கிறார்கள். ஆனால் மாடலிங் பற்றி ஒன்றும் தெரியாத எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் இன்றுவரை ஆச்சரியமாக இருக்கிறது. ராஃப் சிமோன்ஸ் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எப்படி நடக்க வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று ஒவ்வொன்றையும் அழகாகச் சொல்லிக் கொடுத்தார். அவரால் பிரபல மாடல்களை வைத்து ஷோ நடத்தியிருக்க முடியும். ஆனால் என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புக் கொடுத்ததால், நானும் முழுமையாக ஈடுபாடு காட்டினேன். பேஷன் வீக் முடியும் நேரத்தில் மார்க் ஜேகப்ஸ் நிறுவனத்துக்காக பேஷன் ஷோவில் பங்கேற்கச் சொல்லி அழைப்பு வந்தது. என் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழும் அதிசயங்களைக் கண்டு நான் ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறேன்” என்கிறார் ரெமிங்டன் வில்லியம்ஸ். அடுத்து ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் பேஷன் ஷோக்களில் பங்கேற்க இவருக்கு அழைப்பு வந்துவிட்டது.

நேற்று பாத்திரம் தேய்த்தவர், இன்று பிரபல மாடல்!

ப்ளோரிடாவில் தன் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்தாள் 4 வயது யான்லி நெல்லி ஸோல்லர். இவளது அப்பாவுக்கு இன்னும் 2 குழந்தைகள் இருந்ததால், தன் பெற்றோரின் பராமரிப்பில் நெல்லியை விட்டிருந்தார். கடந்த வாரம் மிட்டாய் வேண்டும் என்பதற்காகப் பாட்டியின் பையை எடுத்தாள் நெல்லி. அதில் மிட்டாய்கள் இல்லை. ஆனால் அவள் இதுவரை நேரில் பார்த்திராத துப்பாக்கி ஒன்று அவள் கண்ணில் பட்டது. அதைக் கண்டு சுவாரசியமான நெல்லி, கையில் எடுத்துப் பார்த்தாள். அப்போது சட்டென்று துப்பாக்கி குண்டு அவள் மார்பைத் துளைத்துவிட்டது. பாட்டியும் தாத்தாவும் ஓடிவர, அவர்கள் கண் முன்னே நெல்லி உயிரிழந்தாள். மகளை அழைத்துச் செல்வதற்காக ஷேன் ஸொல்லர் வீட்டுக்குள் நுழைந்தபோது அதிர்ந்து போய்விட்டார். காவல் துறை விசாரணை செய்ததில், இது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து என்பதை உறுதி செய்திருக்கிறது.

சே, குழந்தை எடுக்கக்கூடிய இடத்திலா துப்பாக்கியை வைத்திருப்பது?

http://tamil.thehindu.com/world/article19740746.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: விலங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

 
24chskomasalapic

காடுகள் அழிப்பு, சுற்றுச் சூழல் சீர்கேடு, வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் ஓரங் ஊத்தன்களின் எண்ணிக்கை மிக மோசமாகக் குறைந்துவிட்டது. ஆனால் தற்போது ஓர் ஓரங் ஊத்தன் பற்றி உலகமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அல்பா என்ற ஓரங் ஊத்தன், அல்பினோ என்ற வெண் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மரபணு குறைபாட்டால் ஏற்படும் இந்த நோயால் சிவப்பும் பழுப்புமாக இருக்க வேண்டிய ஓரங் ஊத்தனின் தோல், முடி என்று அனைத்தும் வெள்ளையாகக் காட்சியளிக்கிறது. உலகிலேயே அல்பினோ வகை ஓரங் ஊத்தன் இது ஒன்றுதான். 5 வயது அல்பா, ஒரு கூட்டத்தால் பிடிக்கப்பட்டு, கூண்டுக்குள் அடைபட்டிருந்தது. இந்தோனேஷிய மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டபோது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. தொற்று, நீரிழப்பு, எடை குறைப்பு போன்ற பல பிரச்சினைகள் இருந்தன. “ஓரங் ஊத்தன்கள் பொதுவாக மனிதர்களிடம் நட்பாகப் பழகக்கூடியவை. அல்பாவுக்கு அல்பினோ பிரச்சினை இருப்பதால் பார்க்கும் சக்தியும் கேட்கும் சக்தியும் குறைவாக இருக்கிறது. அதோடு தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. இதனால் அல்பா உயிர் வாழ்வது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. அதனால்தான் நாங்கள் தனிப்பட்ட முறையில் அல்பாவைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். காடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரிய வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். ஆனால், அல்பினோ அல்பாவுக்கு மனிதர்களால் ஆபத்து காத்திருக்கிறது. இதுபோன்ற அல்பினோ உயிரினங்களை, ‘அதிர்ஷ்டம்’ என்ற பெயரில் பிடித்து, விற்பனை செய்வது ஒரு தொழிலாக மாறிவருகிறது. அதனால்தான் காட்டில் மீண்டும் அல்பாவை விடுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. அதே நேரம் அரிய அல்பினோ ஓரங் ஊத்தனை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. அல்பாவுடன் இன்னும் 3 ஓரங் ஊத்தன்களைக் கவனித்து வருகிறோம். ஓர் இடம் சொந்தமாக வாங்கி, ஓரங் ஊத்தன்களுக்குப் பாதுகாப்பான, அதே நேரத்தில் காட்டில் இருக்கும் சூழலை உருவாக்குவதற்கு சுமார் 52 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உலகின் ஒரே அல்பினோ ஓரங் ஊத்தனை பாதுகாக்கும் முயற்சியில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் உதவ ஆரம்பித்திருக்கிறார்கள். அல்பா மூலம் அழிந்து வரக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கும் ஓரங் ஊத்தன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது” என்கிறார் செய்தித் தொடர்பாளர் நிகோ ஹெர்மனு.

உலகின் ஒரே அல்பினோ ஓரங் ஊத்தனை பாதுகாப்பவர்களுக்குப் பாராட்டுகள்!

அமெரிக்க உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்க்க வந்த ஒரு பெண், யானையுடன் ஒளிப்படம் எடுக்க விரும்பினார். யானையும் தடுப்புக் கம்பிகள் மீது நீண்ட தும்பிக்கையை வைத்தபடி நின்றுகொண்டிருந்தது. தும்பிக்கையைப் பிடித்தபடி சந்தோஷமாக நின்றார் அந்தப் பெண். அடுத்த நொடி யானை தும்பிக்கையால் அந்தப் பெண்ணின் கழுத்தைச் சுற்றியது. தலையில் அடித்தது. அவர் தலையில் மாட்டியிருந்த கண்ணாடியை உடைத்தது. பெரிய காயங்கள் இன்றி தப்பினாலும் அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு வெகு நேரமானது.

விலங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/world/article19746052.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: இந்தக் காலத்திலும் இப்படிச் சொன்னால் நம்பிவிடுவதா?

 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
26chskomasalapic
TAMILTHTemplateLibrarynation21clIMG2
26chskomasalapic

மை

க்ரேன் தலைவலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் ‘ஸ்டார் மேஜிக்’ மூலம் குணப்படுத்திவிடலாம் என்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த 39 வயது ஜெர்ரி சார்கியண்ட். இவரிடம் சிகிச்சை பெறுவதற்கு 15 நிமிடங்களுக்கு 7,800 ரூபாய் கட்டணம். 3 மாதங்களுக்கு 4.38 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். தன்னை மருத்துவர் என்று சொல்லிக்கொள்ளாமல், வழிநடத்துபவர் என்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ருமேனியாவில் இவர் சென்றுகொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது. அதில் இரு பெண்கள் இறந்து போனார்கள். அவர்களில் ஒரு பெண்ணின் ஆவி கார் கண்ணாடிக் கதவை ஊடுருவி, இவரது உடலுக்குள் புகுந்துவிட்டது. அதிலிருந்துதான் தனக்கு நோய்களைக் குணமாக்கும் அற்புத சக்தி கிடைத்திருப்பதாகச் சொல்கிறார் ஜெர்ரி. மைக்ரேன், கட்டிகள், பார்வை குறைபாடு என்று இவர் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. அதில் புற்றுநோய்களை அதிக அளவில் குணமாக்கியதாகச் சொல்கிறார். நோயாளிகளை நிற்க வைத்து ஹிப்னாடிசம் செய்கிறார். மயங்கி விழுபவர்களைப் பிடித்து, தரையில் படுக்க வைத்துவிடுகிறார். நோய் இருக்கும் இடங்களில் ஆகாயத்திலிருந்து கிடைக்கும் சக்தியைப் பிடித்து உடலுக்குள் செலுத்துகிறார். அவர்கள் கண் விழிக்கும்போது தங்கள் நோய் குறைந்துவிடுவதாகச் சொல்கிறார்கள். “நான் ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் என்னைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். புற்றுநோய் என்பது செல்களின் அபரிமிதமான பெருக்கம்தான். இதை என்னால் எளிதாகக் கட்டுப்படுத்தி, முற்றிலும் குணமாக்கிவிட முடியும்” என்று தனது இணையதளத்தில் சொல்லியிருக்கிறார். இவர் குறுகிய காலத்தில் ஏராளமானவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டார். பணமும் பெருகியது. தொழிலும் வளர்ந்தது. உலக அளவில் தன் தொழிலைக் கொண்டு செல்ல முயன்றபோதுதான் ஜெர்ரி மாட்டிக்கொண்டார். மருத்துவம் படிக்காத, பயிற்சி பெறாத ஒருவர் நோய்களைக் குணமாக்குவதாகச் சொல்வது ஏமாற்று வேலை என்று புகார் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இரு முறை பெயிலில் வர முயன்றும் அவரால் வர முடியவில்லை. அப்பாவி மக்களின் வாழ்நாள் சேமிப்பைக் கட்டணமாகப் பெற்று, ஏமாற்றிய குற்றத்துக்காகக் கடுமையான தண்டனை அவருக்கு விதிக்கப்பட இருக்கிறது.

இந்தக் காலத்திலும் இப்படிச் சொன்னால் நம்பிவிடுவதா?

மிஸ்டர் மாடல் டாபாஸ்கோ 2017 என்ற மிகப் பெரிய ஆண் அழகன்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டி மெக்சிகோவில் முக்கியமானது. இந்த ஆண்டு போட்டிக்கு வந்தவர்களிடம் மாடலிங் ஏஜென்சி எதிர்பார்த்த தன்மைகள் இல்லை. அதனால் போட்டியை ரத்து செய்திருக்கிறார்கள். “இதுவரை இப்படி ஒரு நிலை எங்களுக்கு ஏற்பட்டதில்லை. இந்தப் போட்டி மூலம் சர்வதேச மாடல்களை உருவாக்கி வருகிறோம். 17 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 5 அடி 10 அங்குலம் உயரமும் ஆரோக்கியமான உடலும் மகிழ்ச்சியான முகமும் அவசியம். ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இந்தத் தகுதிகளுடன் இளைஞர்கள் கிடைப்பது இந்த ஆண்டு அரிதாகிவிட்டது. வந்திருந்த போட்டியாளர்களிலிருந்து ஓரளவு தகுதி படைத்த 6 பேரைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் பலருக்கும் அதில் உடன்பாடு இல்லை. போட்டியைக் கைவிட்டுவிடுவது நல்லது என்று முடிவெடுத்தோம்” என்கிறது மிஸ்டர் மாடல் டாபாஸ்கோ ஏஜென்சி.

மாடல்களுக்கு வந்த சோதனை!

http://tamil.thehindu.com/world/article19755999.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மலை ஏறும் ஸ்பைடர் உமன்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
27chkanDengping
27chkanSpiderwoman
TAMILTHTemplateLibrarynation21clIMG2
 

சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மியாவோ மக்கள் பல நூற்றாண்டுகளாக செங்குத்தான, கரடுமுரடான மலை உச்சிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை எல்லோரும் ஸ்பைடர்மேன் என்று அன்புடன் அழைக்கிறார்கள். இவர்களில் ஒரே ஒரு பெண் ஸ்பைடர் உமனும் இப்போது பிரபலமாகி இருக்கிறார். லுவோ டென்பிங் கயிறு கட்டிக்கொள்ளாமல், எந்தவிதப் பாதுகாப்பு கருவிகளையும் எடுத்துக்கொள்ளாமல் 100 மீட்டர் உயரம் கொண்ட குன்றுகளில் ஏறி, இறங்குகிறார். மியாவோ ஆண்கள் குன்றின் மீது வளரும் அரிய மூலிகைகளைப் பறிப்பதற்காகவே காலம் காலமாக ஏறிக்கொண்டிருக்கிறார்கள். ஆஸ்துமா, வாத நோய்களுக்கான பாரம்பரிய சீன மருந்துகள் இந்த மூலிகைகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. ஆபத்தான இந்தப் பணியில் தற்போது மிகச் சில ஆண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். “மியாவோ மக்கள் தைரியமானவர்கள், திறமையானவர்கள். என் அப்பா மிகவும் நேர்த்தியாக மலை ஏறுவார். நான் ஒரே பெண் என்பதால் அவருக்குப் பிறகு மலை ஏறுவதற்கு எங்கள் வீட்டில் ஆட்கள் இல்லை. ஆண்தான் ஏற வேண்டுமா, நான் ஏறினால் என்ன என்று தோன்றியது. 15 வயதில் மலை ஏற ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. எப்படி இவர்களால் ஏற முடிகிறது என்று ஆச்சரியப்பட்டேன். இந்தக் குன்று என்னை ஏறச் சொல்லி அழைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக என் கைகளுக்கும் கால்களுக்கும் பாறைகள் பழக்கமாகின. பிறகு என் அப்பாவை விட வேகமாக ஏறும் அளவுக்கு முன்னேறினேன். ஒரு கட்டத்தில் மலை ஏறுவதை விட்டுவிட்டேன். திருமணத்துக்குப் பிறகு கணவரின் குறைவான சம்பளத்தில் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியவில்லை. அதனால் மீண்டும் எனக்குத் தெரிந்த இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். நாங்கள் குன்றின் மீது ஏறுவது சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்கிறது என்பதால், அரசாங்கம் இதை ஒரு சுற்றுலாவாக மாற்றிவிட்டது. நாங்கள் இப்போது அரசாங்கத்தில் முறைப்படி வேலை செய்துவருகிறோம். காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டும். தினமும் 2 முறை ஏறி, இறங்குவோம். இதன்மூலம் மாதம் 30 ஆயிரம் வருமானம் வருகிறது. ஒரே ஸ்பைடர் உமன் நான் என்பதால் மிகவும் பிரபலமாகிவிட்டேன். எல்லோரும் ஒரு பெண் இப்படி மலை ஏறலாமா என்று கேட்கிறார்கள். ஆண்களால் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையும் பெண்களாலும் செய்ய முடியும். அதைத்தான் நான் நிரூபித்திருக்கிறேன். இந்த வேலை செய்வதில் எந்தக் கஷ்டமும் எனக்கு இல்லை” என்கிறார் லுவோ டென்பிங்.

மலை ஏறும் ஸ்பைடர் உமன்!

http://tamil.thehindu.com/world/article19761241.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: விவாகரத்துக்கு பரீட்சை வைக்கும் நீதிமன்றம்!

 

 
 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
28chkandivorce-exam

கணவன், மனைவி இருவருக்கும் உடன்பாடு இல்லாவிட்டால் விவாகரத்து கிடைப்பது எளிதான காரியம் அல்ல. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யிபின் மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு விவாகரத்து விண்ணப்பம் வழங்கப்படுவதில்லை. நீதிபதி வாங் ஷியு இந்தத் தேர்வு முறையைக் கொண்டு வந்திருக்கிறார். தற்போது அதிக எண்ணிக்கையிலான ஜோடிகள் விவாகரத்து கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு போதுமான அவகாசம் கொடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்க எண்ணினார் வாங் ஷியு. அதற்காகவே தேர்வு முறையை அறிமுகம் செய்துள்ளார். கணவனும் மனைவியும் தனித் தனியாகத் தேர்வு எழுத வேண்டும். 60 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியிருந்தால், அவர்களுக்கு விவாகரத்து விண்ணப்பம் வழங்கப்படுகிறது. குறைவாக மதிப்பெண்கள் பெற்றால், அவர்கள் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சேர்ந்து வாழ வேண்டியதுதான். இந்தத் தேர்வில் கோடிட்ட இடங்களை நிரப்புதல், குறு வினாக்கள், சிறிய கட்டுரை என்று 3 பகுதிகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள், பிடித்த உணவுகள், திருமண நாள், அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள், இணையின் நல்ல விஷயங்கள், தீய விஷயங்கள், திருமணம், குடும்பம் என்பது குறித்து உங்களது கருத்துகள் போன்ற கேள்விகள் இடம்பெறுகின்றன. தேர்வு எழுதியவுடன் அந்தத் தாளை வாங்கி, இருவர் முன்பும் நீதிபதி படித்துக் காட்டுவார். சரியான விஷயத்தைக் கோடிட்டுக் காட்டி, அவர்கள் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கிறார்கள் என்பதைப் புரிய வைப்பார். இதன்மூலம் நிறைய தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்வதாகச் சொல்லிவிடுகிறார்கள். இதையும் மீறி விவாகரத்து வேண்டும் என்பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

“எங்கள் நீதிமன்றத்துக்கு குடும்ப வழக்குகள்தான் அதிகம் வருகின்றன. அதிலும் விவாகரத்து கேட்டு வருகிறவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சின்னச் சின்னப் புரிதல்களில்தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. இந்தத் தேர்வு அதைப் புரிய வைக்கும். குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் விவாகரத்து விண்ணப்பம் என்றால் வேண்டுமென்றே தவறாக எழுதுவார்கள். அதனால்தான் 60 மதிப்பெண்கள் இலக்கு வைத்தேன். செப்டம்பர் 14 அன்று ஒரு தம்பதி தேர்வு எழுத வந்தனர். 80, 86 மதிப்பெண்களைப் பெற்றனர். இதுவரை தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் நீங்கள். நல்ல புரிதல் இருக்கிறது. நீங்கள் ஏன் விவாகரத்து செய்ய வேண்டும் என்று கேட்டேன். உடனே இருவரும் சேர்ந்து வாழ்வதாகச் சொன்னார்கள். கணவனுக்குக் கொஞ்சம் சூதாட்டத்தில் ஆர்வம். மற்றபடி நல்லவர். அவருக்கு தனியாக அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன். தேர்வு வைப்பதன் மூலம் விவாகரத்துகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்திருக்கிறது” என்கிறார் வாங் ஷியு. இந்த விஷயம் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. விவாகரத்து என்பது அவரவர் சொந்த விஷயம், இதில் நீதிபதி தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்ப்பும் கணிசமாகக் கிளம்பியிருக்கிறது.

விவாகரத்துக்கு பரீட்சை வைக்கும் நீதிமன்றம்!

http://tamil.thehindu.com/world/article19767555.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: வாடகை பணத்தில் ஒரு திருமணத்தையே நடத்திவிடலாம்!

 

 
29chskomasalapic

மணப்பெண்கள் திருமணத்தின்போது மிகச் சிறந்த ஆடை, அணிகலன்களை அணிய விரும்புகிறார்கள். இவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த குராவ்டியா நிறுவனம். டிஸ்னியின் பிரபலமான இளவரசிகள் அணியும் ஆடைகளை, திருமண ஆடைகளாக வடிவமைத்திருக்கின்றனர். ஸ்நோ ஒயிட், சிண்ட்ரெல்லா, ராபுன்ஸெல், ஸ்லீப்பிங் பியூட்டி, ஏரியல், பெல் போன்ற இளவரசிகளின் ஆடைகளை அற்புதமாக உருவாக்கியிருக்கின்றனர். “இளவரசிகளின் ஆடைகள் மிகச் சிறந்த வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டவை. எந்த ஆடையை அணிந்தாலும் முழுத் திருப்தி கிடைக்கும். இந்த ஆடையை அணியும் மணமகள் நிஜமான இளவரசியைப்போல் ஜொலிப்பார். ஆடைகள் மட்டுமின்றி, திருமணம் நடக்கும் அரங்கம், ராஜ விருந்து, மணமகனுக்கான ஆடைகள் போன்றவற்றையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம். திருமணம் நடக்கும் இடத்தை தேவதைக் கதைகளில் வரும் இடம் போன்று உருவாக்கிவிடுவோம். இதுவரை 14 இளவரசிகளின் ஆடைகளை உருவாக்கியிருக்கிறோம். இதில் 6 இளவரசிகள் உலகம் முழுவதும் பிரபலம். அதனால் அந்த ஆடைகளை அதிகமாக விரும்புகிறார்கள். இந்த ஆண்டு நவம்பர் முதல் தேதியிலிருந்து ஜப்பானில் மட்டும் ஆடைகள் விற்பனைக்கு வருகின்றன. ஆடைகள் விலை அதிகம் என்பதால் வாடகைக்குக் கொடுப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம். இளவரசி ஆடையின் கட்டணம் 2.37 லட்சம் ரூபாய். இளவரசரின் ஆடையையும் வாடகைக்கு எடுப்பதென்றால் மேலும் 60 ஆயிரம் ரூபாய் செலவாகும். திருமணம் முடிந்த பிறகு, ஆடைகளை திருப்பித் தரவேண்டும் என்பது முக்கியம். வசதியானவர்கள் எங்களிடம் ஆடைகளை வாங்கி, வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கலாம்” என்கிறார் குராவ்டியா நிறுவனர்.

வாடகை பணத்தில் ஒரு திருமணத்தையே நடத்திவிடலாம்!

பியூர்டோ ரிகோ தீவைப் புரட்டிப் போட்டது மரியா புயல். வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டது. மனிதர்கள் பிழைப்பதே கடினமான காரியமாகிவிட்ட நிலையில், ஒரு தம்பதியர் தங்களின் 7 நாய்களையும் 8 பூனைகளையும் காப்பாற்றியிருக்கின்றனர்! போலந்தைச் சேர்ந்த ஹராசிமோவிஸும் அவரது மனைவி ரோசாரியோவும் புயல் வருவதற்கு முன்பே தங்கள் குழந்தைகளை நண்பரின் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். “மரியா புயல் பற்றிய எச்சரிக்கைகள் வந்துகொண்டிருந்தாலும் நாங்கள் இவ்வளவு பாதிப்பை எதிர்பார்க்கவில்லை. புயல் வந்தபிறகு தப்பிச் செல்லவும் வழியில்லை. வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்தது. எங்கள் செல்லப் பிராணிகளை உயரமான அலமாரிகள் மீது வைத்திருந்தோம். கழுத்தளவு தண்ணீர் வந்ததும் இத்துடன் எங்கள் வாழ்க்கை முடிந்துவிடும் என்று அஞ்சினோம். வெள்ள நீர் வடிய ஆரம்பித்தது. வீடு முழுவதும் சகதி. பொருட்கள் அனைத்தும் நாசமாகியிருந்தன. மின்சாரம் இல்லை. அருகில் உள்ளவர்கள் இங்கிருந்து சென்றுவிடும்படிக் கூறினார்கள். ஆனால் எங்கள் செல்லப் பிராணிகளை விட்டுவிட்டு எங்களால் எப்படிப் போக முடியும்? மீண்டும் வெள்ள நீர் வீட்டுக்குள் வர ஆரம்பித்தது. வேறு வழியின்றி பூனைகளையும் நாய்களையும் அழைத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக் கதவை உடைத்து, மாடியில் தஞ்சமடைந்தோம். இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது” என்கிறார் ரோசாரியோ.

செல்லப் பிராணிகளைக் காப்பாற்றிய அதிசய தம்பதியர்!

http://tamil.thehindu.com/world/article19774936.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நல்ல அட்வைஸ்!

 

 
01chskomasalapic

கனடாவைச் சேர்ந்த 24 வயது காட் காலிங்கர் மாடலாக இருக்கிறார். சமீபத்தில் கண்ணில் டாட்டூ போட்டுக்கொண்டார். ஆனால் ஏதோ தவறு நேர்ந்து, இன்று ஒரு கண்ணின் பார்வையை இழந்துவிட்டார். “கண்ணில் டாட்டூ வரைந்துகொள்வது இன்று சாதாரணமானது. இப்படி ஒரு கொடூரம் நிகழும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. டாட்டூ போட்டுக்கொண்ட பிறகு என் கண்ணிலிருந்து ஊதா நிறத்தில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. உடனே மருத்துவமனைக்குச் சென்றேன். சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினேன். ஆனால் நிலைமை இன்னும் மோசமானது. கண் பெரிதாக வீங்கியது. இமையைத் திறக்க முடியாமல் போனது. டாட்டூ மை கார்னியாவை பாதித்துவிட்டதால், பார்வையும் குறைந்தது. லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தும் என் பழைய பார்வையை மீட்க முடியவில்லை. கண்ணும் பழைய நிலைக்கு வரவில்லை. இன்னும் வெளிர் ஊதா நிறத்தில்தான் இருக்கிறது. என் பார்வை முழுமையாக மீண்டும் கிடைக்காது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இன்னும் மோசமாவதற்குள் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகிறேன். அதற்கு முன்பு எனக்கு ஏற்பட்ட பாதிப்பை உலகத்திடம் சொல்லிவிட முடிவு செய்தேன். என்னைப்போல் எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் என்னுடைய படங்களை வெளியிட்டிருக்கிறேன். கண்களில் டாட்டூ போடும் முன்பு ஆயிரம் தடவை யோசியுங்கள். தகுதியான, தரமான டாட்டூ கலைஞரா என்று விசாரித்துக்கொள்ளுங்கள். முடிந்தால் கண்களில் டாட்டூ போடுவதைத் தவிர்த்துவிடுங்கள்” என்கிறார் காட் காலிங்கர்.

நல்ல அட்வைஸ்!

இங்கிலாந்தில் வசிக்கும் 65 வயது தெரசா டாயல், கடந்த 14 ஆண்டுகளாக இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். காரணம், இறுதிச் சடங்குக்குப் பிறகு நடைபெறும் விருந்தில் உணவருந்துவதற்காக இப்படிச் செய்கிறார் என்கிறார்கள். தெரசா அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதில்லை. அவர் வசிக்கும் பகுதியைச் சுற்றிலுமுள்ள தேவாலயங்களில் நடைபெறும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கிறார். தன்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறார். பிறகு விருந்தில் கலந்துகொண்டு சாப்பிடுகிறார். சில பாத்திரங்களில் உணவுகளை எடுத்துக்கொண்டு, சைக்கிளில் வீடு திரும்பி விடுகிறார். இவரைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கிறது. “கடந்த வாரம் இளம் பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார் தெரசா. பெண்ணின் தாய், இவரை யார் என்று விசாரித்தார். இறந்த பெண்ணுடன் உணவகத்தில் ஒன்றாக வேலை பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தன் மகள் உணவகத்தில் இதுவரை வேலை செய்ததில்லை என்றவர், சந்தேகப்பட்டு விசாரித்தபோது அங்கிருந்து கிளம்பிவந்துவிட்டார். ஒரு சில இறுதிச் சடங்குகளில் விருந்து இல்லை என்று தெரிந்தால், கறுப்பு ஆடையைக் களைந்துவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிவிடுவார்” என்கிறார் தெரசாவின் பக்கத்து வீட்டுக்காரர். தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் நோயல் கோன்னோலி, “தெரசா அழையா விருந்தாளியாக எல்லா இறுதிச் சடங்குகளிலும் பங்கேற்பது எங்களுக்குத் தெரியும். உணவுக்காகத்தான் இப்படிச் செய்கிறார் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 14 ஆண்டுகளாக உணவுக்காகத் தெரியாதவர்களின் இறுதிச் சடங்குகளில் ஒருவரால் பங்கேற்க முடியுமா? ஏதாவது காரணம் இருக்கும். அதனால்தான் நாங்கள் அவரை வரவேண்டாம் என்று சொல்வதில்லை” என்கிறார்.

உணவுக்காக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டுப் போகட்டுமே…

http://tamil.thehindu.com/world/article19779411.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நூடுல்ஸில் போதைப் பொருள் கலப்பு

 

 
noodles

கோப்புப் படம்

ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் ஹாலோவீன் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழாவின் போது பறங்கிக்காய்களில் விதவிதமான உருவங்களைச் செய்து, அதற்குள் விளக்குகளை ஏற்றி மகிழ்கிறார்கள். இந்த ஆண்டு பறங்கிக்காய்களில் ஒரு புதுமையைக் கொண்டு வந்திருக்கிறார் டோனி டிஹெரா. அவருடைய பண்ணையில் மனித முகம் வடிவத்திலேயே பறங்கிக்காய்களை விளைவித்திருக்கிறார்! பிளாஸ்டிக் மோல்ட்க்குள்ளே பறங்கிப் பிஞ்சுகளை வைத்து, வளர்த்தால் இதுபோன்ற உருவங்கள் கிடைக்கும். இந்தப் பறங்கி உருவத்தின் விலை சுமார் 4,500 ரூபாய்.

பார்க்க அழகாத்தான் இருக்கு! ஆனால் அவங்க அவங்க கற்பனைத் திறன் இதில் காணாமல் போகுதே…

தாமஸ் காண்ட்லே புற்றுநோயில் இருந்து மீண்டவர். அமெரிக்கா முழுவதும் மிகப் பிரம்மாண்டமான பந்தை உருட்டி, புற்றுநோய் விழிப்புணர்வை ஊட்டி வருகிறார். புகைப்படக்காரராக இருக்கும் தாமஸ், தன்னுடைய நோய் தீவிரமானபோதுதான் மருத்துவரிடம் சென்றார். ஆனாலும் விரைவில் குணம் பெற்று, இப்போது மீண்டுவிட்டார்.

விரைவாக மருத்துவம் பார்க்காததாலேயே புற்றுநோயால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த தாமஸ், தன் கதையைக் கூறி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ’வலியோ, வித்தியாசமான அறிகுறியோ தென்பட்டால் உடனே மருத்துவரைப் பாருங்கள். கேள்விகளைக் கேட்கப் பயப்படாதீர்கள். பெரும்பாலான புற்றுநோய்கள் குணப்படுத்தக்கூடியவையே’ என்று வலியுறுத்துகிறார்.

உங்களோட அற்புதமான சேவையைத் தொடருங்க தாமஸ்…

சீனாவில் ஓர் உணவகத்தில் நடந்த விஷயத்தைக் கேளுங்கள்… 26 வயது லி ஜுயூ குடித்து விட்டு வண்டி ஓட்டக்கூடாது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டபோது, அவர் போதைப் பொருள் உட்கொண்டது தெரியவந்திருக்கிறது. உடனே அவரை அழைத்து விசாரணை செய்தது போலீஸ். தனக்கு எந்தவிதமான கெட்டப் பழக்கமும் இல்லை என்றார் லி ஜுயூ.

பல்வேறு விஷயங்களை ஆராய்ந்தபோது, அவர் ஓர் உணவு விடுதியில் தொடர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்டு வந்தது தெரிந்தது. அங்கே மேலும் சிலரை அனுப்பி, நூடுல்ஸ் சாப்பிட வைத்து சோதனை செய்தபோது, உணவில் அபின் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியதாக உணவு விடுதி நடத்துபவர் ஒப்புக்கொண்டார். போதைப் பொருள் பயன்பாட்டுக்குச் சீனாவில் கடுமையான தண்டனை உண்டு.

நம்பி, பணம் கொடுத்துச் சாப்பிட வருகிறவங்களை இப்படி ஏமாத்தறவங்களுக்கு மிக மிகக் கடுமையான தண்டனைதான் கொடுக்கணும்…

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உலக மசாலா: அதிர்ச்சியில் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் சரி…

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
03chskomasalapic
 

அமெரிக்காவின் டலாஸ் நகரில் இயங்கிவரும் ஹர்ட்ஸ் டோனட் உணவகத்தில் ஆர்டர் செய்பவர்களுக்கு விநோதமான முறையில் டெலிவரி செய்கிறார்கள். வீட்டிலுள்ளவர்கள் திட மனத்துடன் இருந்தால்தான் டோனட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். “பொதுவாக ஹால்லோவீன் பண்டிகையின்போதுதான் விநோதமாக ஒப்பனை செய்துகொண்டு வலம்வருவார்கள். அதை ஆண்டு முழுவதும் செய்தால் என்ன என்று தோன்றியது. அதனால்தான் பயங்கரமான கோமாளி வேடமிட்ட மனிதர்களை டோனட் டெலிவரிக்கு அனுப்பும் திட்டத்தை ஆரம்பித்தோம். சாதாரண டெலிவரி கட்டணத்தை விடக் கூடுதலாக 328 ரூபாய் கொடுத்தால் கோமாளி மூலம் டெலிவரி செய்வோம். திடீரென்று கோமாளியைப் பார்த்தால் பயம் ஏற்படும். ஆனால் சில நிமிடங்களில் அந்த உருவத்தை ரசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். விருந்தினர்கள் வருகை, விழாக்கள், பண்டிகைகள் போன்ற நிகழ்ச்சிகளின்போது கோமாளி மூலம் டோனட் டெலிவரி கேட்கிறார்கள். கோமாளி அவர்கள் வீட்டுக்கு டோனட்களுடன் செல்லும்போது மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் பல மடங்கு அதிகரித்துவிடுகிறது. ஆரம்பத்தில் இந்தத் திட்டம் வெற்றி பெறுமா என்று அச்சம் இருந்தது. ஆனால் சாதாரண டெலிவரியைவிட கோமாளி டெலிவரியை அதிக அளவில் மக்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டது எங்களுக்கே ஆனந்த அதிர்ச்சியாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இதுவரை கோமாளி டெலிவரியைச் செய்துவந்தோம். இனி எந்த நேரமும் இந்தச் சேவையைக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டோம். இந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள நாங்கள் இன்னும் பல புதுமையான டெலிவரி திட்டங்களைக் கொண்டு வரவேண்டும். இப்போதைக்கு இந்தத் திட்டத்தை மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தும் பணியில் இறங்கியிருக்கிறோம்” என்கிறார் உரிமையாளர்களில் ஒருவரான காஸ் க்ளெக்.

அதிர்ச்சியில் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் சரி…

லின்க்ஸ் என்பது ஒருவகை காட்டுப் பூனை. காட்டுப் பகுதியில் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் புதர்கள், நாணல் செடிகள் போன்ற பகுதிகளில் வாழக்கூடியது. பறவைகளையும் சிறிய விலங்குகளையும் வேட்டையாடி உண்ணும். மனிதர்களை நாடி இவை வருவதில்லை. அலாஸ்காவில் உள்ள டிம் நியூட்டனின் கதவை யாரோ பிராண்டுவதுபோல் சத்தம் கேட்டது. “கரடி அல்லது ஆபத்தான விலங்குகள் ஏதாவது வந்திருக்கலாம் என்று நினைத்தேன். சத்தம் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அங்கே சில லின்க்ஸ் குட்டிகள் விளையாடிக்கொண்டிருந்தன. எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. லின்க்ஸ் மனிதர்களைக் கண்டால் ஓடிவிடக் கூடியவை. எப்படி மனிதர்களின் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தன என்று யோசித்தபடி கதவைத் திறந்தேன். இன்னும் 3 குட்டிகளுடன் தாய் வந்துசேர்ந்தது. 7 குட்டிகளும் தாயும் விளையாடும் காட்சி அற்புதமாக இருந்தது. என் கேமராவை எடுத்துக்கொண்டு அவற்றை வெகு அருகில் படம் பிடித்தேன். குட்டிகள் சண்டை போட்டன, கட்டி உருண்டன. ஆனால் அம்மாவின் குரலுக்குக் கட்டுப்பட்டன. ஒரு மணி நேரம்வரை இப்படி விளையாடிவிட்டு, மீண்டும் தமது இருப்பிடத்தை நோக்கிக் கிளம்பின. யாரும் எளிதில் பார்க்க முடியாத லின்க்ஸ் குடும்பத்தை, நான் என் வீட்டிலேயே பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் டிம் நியூட்டன்.

அடடா! வீடு தேடி வந்த அரிய விருந்தாளிகள்!

http://tamil.thehindu.com/world/article19789742.ece

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

உலக மசாலா: அதிர்ச்சியில் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் சரி…

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
03chskomasalapic
 

அமெரிக்காவின் டலாஸ் நகரில் இயங்கிவரும் ஹர்ட்ஸ் டோனட் உணவகத்தில் ஆர்டர் செய்பவர்களுக்கு விநோதமான முறையில் டெலிவரி செய்கிறார்கள். வீட்டிலுள்ளவர்கள் திட மனத்துடன் இருந்தால்தான் டோனட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். “பொதுவாக ஹால்லோவீன் பண்டிகையின்போதுதான் விநோதமாக ஒப்பனை செய்துகொண்டு வலம்வருவார்கள். அதை ஆண்டு முழுவதும் செய்தால் என்ன என்று தோன்றியது. அதனால்தான் பயங்கரமான கோமாளி வேடமிட்ட மனிதர்களை டோனட் டெலிவரிக்கு அனுப்பும் திட்டத்தை ஆரம்பித்தோம். சாதாரண டெலிவரி கட்டணத்தை விடக் கூடுதலாக 328 ரூபாய் கொடுத்தால் கோமாளி மூலம் டெலிவரி செய்வோம். திடீரென்று கோமாளியைப் பார்த்தால் பயம் ஏற்படும். ஆனால் சில நிமிடங்களில் அந்த உருவத்தை ரசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். விருந்தினர்கள் வருகை, விழாக்கள், பண்டிகைகள் போன்ற நிகழ்ச்சிகளின்போது கோமாளி மூலம் டோனட் டெலிவரி கேட்கிறார்கள். கோமாளி அவர்கள் வீட்டுக்கு டோனட்களுடன் செல்லும்போது மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் பல மடங்கு அதிகரித்துவிடுகிறது. ஆரம்பத்தில் இந்தத் திட்டம் வெற்றி பெறுமா என்று அச்சம் இருந்தது. ஆனால் சாதாரண டெலிவரியைவிட கோமாளி டெலிவரியை அதிக அளவில் மக்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டது எங்களுக்கே ஆனந்த அதிர்ச்சியாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இதுவரை கோமாளி டெலிவரியைச் செய்துவந்தோம். இனி எந்த நேரமும் இந்தச் சேவையைக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டோம். இந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள நாங்கள் இன்னும் பல புதுமையான டெலிவரி திட்டங்களைக் கொண்டு வரவேண்டும். இப்போதைக்கு இந்தத் திட்டத்தை மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தும் பணியில் இறங்கியிருக்கிறோம்” என்கிறார் உரிமையாளர்களில் ஒருவரான காஸ் க்ளெக்.

அதிர்ச்சியில் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் சரி…

 

http://tamil.thehindu.com/world/article19789742.ece

 

 

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: அதிகரித்துள்ள ஜப்பானியர்களின் ஆயுள்

 
masala

போலந்தில் கால்நடை மருத்துவம் படிக்கும் இறுதியாண்டு மாணவர் ஒருவர், நாய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தார். திடீரென்று தன் காதலியைக் கவர்வதற்கு ஒரு யோசனை தோன்றியது. நாய்க்குத் தையல் போட்ட பிறகு, நூலால் நாயின் வயிற்றில் ஐ லவ் யூ என்று தைத்தார். இதைப் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். உடனே நண்பர்கள் பலரும் இவரின் செயலுக்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். கல்லூரியிலும் ‘காதலுக்கு நாங்கள் எதிரிகளல்ல; ஆனால் அதை வெளிப்படுத்துவதில் ஒரு நேர்மை இருக்க வேண்டாமா?’ என்று கேட்கவும், உடனே ஃபேஸ்புக்கில் இருந்து புகைப்படத்தை எடுத்துவிட்டார்.

ஏம்ப்பா, உன்னோட காதலைச் சொல்ல வேற வழியா இல்லை… கன்ஸ்யூமர் கோர்ட்ல நாய் கேஸ் போடாதுன்னு தைரியமா?

ஜப்பானியர்களின் ஆயுள் காலம் அதிகரித்திருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் தொகையில் கால் பகுதிக்கும் மேல் 65 வயதைக் கடந்தவர்கள். இந்த முதியவர்களுக்காகப் பல விஷயங்கள் அங்கே அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. வயதானவர்களுடன் உரையாட ரோபோ பொம்மைகள் இருக்கின்றன. தனியாக இருக்கும் முதியவருக்குத் தனிமை தெரியாதவண்ணம் இருக்க, புதிதாக ஒரு நாற்காலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தலையில் தொப்பியுடன் காட்சியளிக்கும் ஒரு பொம்மை, நாற்காலியில் இணைக்கப்பட்டிருக்கிறது. நாற்காலியில் அமர்ந்தால், பொம்மையின் மடியில் அமர்வது போல இருக்கும். பொம்மையின் நீண்ட கைகளை எடுத்து நம்மைச் சுற்றி வைத்துக்கொண்டால், மனிதரின் அரவணைப்பில் இருப்பது போலவே தோன்றும். தனிமை தெரியாது!

இந்த ஜப்பானியர்கள் என்ன மாதிரி யோசிக்கிறாங்க பாருங்க!

போஸ்னியாவில் 77 வயதான ஹவா செபிக் மிகவும் பிரபலமானவர். கண்களில் ஏற்படும் எல்லா நோய்களுக்கும் அவருடைய நாக்கின் மூலம் ஒரு முறை தடவி சுத்தம் செய்தால், நோய் குணமாவதாக எல்லோரும் சொல்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளாக இந்த விநோத கண் மருத்துவத்தைச் செய்து வருகிறார் ஹவா செபிக். குழந்தையாக இருந்தபோது, தன்னுடைய சகோதரனுக்குக் கண்களில் பிரச்னை ஏற்பட்டபோது, யதேச்சையாக நாக்கால் தடவினார். உடனே சகோதரனின் கண் பிரச்னை தீர்ந்தது. அன்று முதல் அவரைத் தேடி ஏராளமானவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மருந்து இல்லை, மாத்திரை இல்லை… நாக்கின் மூலம் ஒரே தடவலில் குணமாகிவிடுவதாக நம்புகிறார்கள். மருத்துவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் ஹவா செபிக்கைத் தேடி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது.

ம்ம்… இது போன்ற நம்பிக்கைகளுக்கு உலகம் முழுவதும் பஞ்சமில்லை போல…

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 40 வயது லியான்னேக்கு ஒரு விநோதமான விருப்பம். குதிரைகளை அதிகமாக நேசிக்கக்கூடியவருக்கு, அந்தக் குதிரையைப் போலவே தன்னையும் மாற்றிக்கொள்ள ஆசை வந்துவிட்டது. குதிரைக்குப் போடும் கடிவாளம், கால்களில் அடிக்கப்படும் லாடம் போன்றவற்றைத் தானும் அணிந்துகொள்கிறார். ஒரு குதிரையைப் போலவே செயல்படுகிறார். குதிரையாக இருக்கும்போது தன்னுடைய பெயரை ஷியான் என்று மாற்றிக்கொள்கிறார். ‘ஒரு குதிரையைப் போல இருக்கும்போது நான் மிகவும் சுதந்திரமாக உணர்கிறேன்’ என்று தன்னுடைய செயலுக்கு விளக்கம் அளிக்கிறார் லியான்!

உங்களை நினைச்சு சிரிக்கிறதா, அழறதான்னு தெரியலை லியான்… இல்லை ஷியான்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உலக மசாலா: மலைப்பாம்பை வென்ற வீரருக்கு வாழ்த்துகள்!

 

05chkanLG-K7i-mosquito
05chkanpython
05chkanLG-K7i-mosquito
 

இந்தோனேசியாவைச் சேர்ந்த 37 வயது ராபர்ட் நபாபன் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது, சாலையில் 23 அடி நீள மலைப்பாம்பிடம் சிக்கிக்கொண்டார். மலைப்பாம்பு ராபர்ட்டை தாக்கத் தொடங்கியது. ராபர்ட்டும் எதிர் தாக்குதலை நிகழ்த்தினார். உடல் முழுவதும் காயப்பட்டாலும் ராபர்ட் நம்பிக்கையை இழக்கவில்லை. கடினமாகப் போராடினார். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு மலைப்பாம்பு இறந்துவிட்டது. அந்த வழியே வந்த மக்கள் ராபர்ட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். “அது என் கையைக் கடித்துவிட்டது. மலைப்பாம்புடன் போராடியதும் உயிர் பிழைத்ததும் ஆச்சரியமாக இருக்கிறது. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்திருந்தால் மலைப்பாம்பின் வயிற்றுக்குள்தான் இருந்திருப்பேன். என் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்தை நான் கேள்விப்படவில்லை. உயிர் பிழைத்தாலும் காயங்கள் சரியாக நாட்களாகும்” என்கிறார் ராபர்ட். இறந்துபோன மலைப்பாம்பு கிராமத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பெரியவர்கள் வேடிக்கை பார்க்க, குழந்தைகள் மலைப்பாம்பைப் பிடித்து விளையாடுகிறார்கள்.

மலைப்பாம்பை வென்ற வீரருக்கு வாழ்த்துகள்!

கொசுவை விரட்டும் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்திருக்கிறது. தென் கொரியாவைச் சேர்ந்த எல்ஜி நிறுவனம், உலகின் முதல் கொசு விரட்டி ஸ்மார்ட்போனை (LG K7i) அறிமுகம் செய்திருக்கிறது. இது மீயொலி அலைகள் (Ultrasonic sound waves) மூலம் ரத்தம் உறிஞ்ச வரும் கொசுக்களை விரட்டுகிறது. கொசுக்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் உதவும் என்கிறார்கள். எல்ஜியின் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டிகளில் கொசு விரட்டும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கிறது. ரசாயனங்கள் மூலம் கொசுக்களை விரட்டுவதற்கான தேவை இல்லாமல் போய்விட்டது. ஸ்மார்ட்போனுடன் ஒரு ஸ்டாண்ட்டும் வழங்கப்படுகிறது. கொசுக்கள் இருக்கும் இடங்களில் ஸ்மார்ட்போனை ஸ்டாண்டில் வைத்து, ஆன் செய்தால் கொசுக்கள் ஓடிவிடுகின்றன. மனிதர்களுக்கு எந்த விதத்திலும் தொல்லை தராத, பாதுகாப்பான ஸ்மார்ட்போன் இது. விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். எதிர்காலத்தில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த கொசு கட்டுப்பாட்டு அமைப்பு 15 ஆண்டுகளாக செய்த பரிசோதனைகளின்படி, இதுபோன்ற சாதனங்கள் நீண்ட காலம் வேலை செய்வதில்லை என்று அறிவித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் நடத்திய பரிசோதனையில் 72% கொசுக்கள் ஸ்மார்ட்போன் மூலம் விரட்டப்பட்டிருக்கின்றன என்கிறது எல்ஜி நிறுவனம். கொசுக்களை விரட்ட இந்தியர்கள் பல்லாயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறார்கள். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் சிறப்பாக வேலை செய்தால் மக்கள் பிரச்சினை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொசுவை விரட்டும் ஸ்மார்ட்போனுக்கு வெல்கம்!

http://tamil.thehindu.com/world/article19800781.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பாக்டீரியா காப்பாற்றுமா, கைவிடுமா?

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
06chskomasalapic
 
 

ஜெர்மனியைச் சேர்ந்த 48 வயது நடிகை மானோஷ் 35 லட்சம் ஆண்டுகள் பழமையான பாக்டீரியாவைத் தன் உடலில் செலுத்திக்கொண்டிருக்கிறார். இதன்மூலம் தன்னுடைய முதுமை மறைந்து, இளமை திரும்பும் என்று நம்புகிறார். “நான் ஒரு பரிசோதனை எலி போன்றவள். இளமையைத் தக்க வைப்பதற்காக எந்த விஷயத்தையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனக்குச் சின்ன வயதில் இருந்தே முதுமை மீது வெறுப்பு வந்துவிட்டது. நான் மட்டும் முதுமை அடைந்துவிடக் கூடாது என்று எண்ணிக்கொள்வேன். கடந்த 20 ஆண்டுகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யாத உறுப்புகளே இல்லை என்று சொல்லலாம். மூக்கில் 2, உதட்டில் 2, மார்பகங்களில் 6 என்று ஏராளமான அறுவை சிகிச்சைகளை பல லட்சங்கள் செலவு செய்து செய்திருக்கிறேன். சமீபத்தில் பாக்டீரியா சிகிச்சை பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே அதைச் செய்துகொள்ள முடிவெடுத்தேன். 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான Bacillus F பாக்டீரியாவை ரஷ்ய விஞ்ஞானிகள்தான் கண்டுபிடித்துள்ளனர். ரஷ்யாவின் வடமேற்கு காடுகளில் 2009-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு வரை இதை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இந்த பாக்டீரியா முதுமைக்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. இளமையை நீண்ட காலம் தக்க வைத்துக்கொள்ளும் ஆற்றல் இருப்பதாகச் சொல்லப்பட்டது. உடனே நான் அவர்களைத் தொடர்புகொண்டேன். என் உடலில் பாக்டீரியாவைச் செலுத்த சம்மதம் தெரிவித்தேன். ஆராய்ச்சியாளர்கள், என் குடும்பத்தினர், நண்பர்கள் இதைச் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நான் யார் சொல்வதையும் பொருட்படுத்தவில்லை. உரிமம் இல்லாததால் பாக்டீரியாவைச் செலுத்த எந்த மருத்துவரும் முன்வரவில்லை. ஒரு சில மருத்துவர்களின் மேற்பார்வையில் நானே 2 வாரங்களுக்கு ஒருமுறை செலுத்திக்கொண்டேன். 3 மாதங்களில் என் உடலில் மாற்றம் தெரிய ஆரம்பித்துவிட்டது. என் தோல் குழந்தையின் தோல்போல் மென்மையாகிவிட்டது. முகத்தில் தழும்புகள், கோடுகள் எல்லாம் மறைந்துவிட்டன. தூக்கம் இன்மையால் அவதிப்பட்டேன். இப்போது நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறேன். ஒருவேளை எனக்கு இது நீண்ட காலத்துக்கு வெற்றியைத் தராவிட்டாலும் பரவாயில்லை. இந்த பாக்டீரியா என்னுடைய ஆயுளை 80, 90 வயதுவரை நீட்டிக்கும். நான் சாகும் வரை என் உடலின் அனைத்து பாகங்களும் வேலை செய்யும்” என்கிறார் மானோஷ். “இளமைக்காக ஏதோ ஒரு பாக்டீரியாவை உடலுக்குள் செலுத்துவதை எங்கள் குடும்பம் கடுமையாக எதிர்த்தது. மருத்துவர் அனாட்டோலி ப்ரோச்கோவும் எவ்வளவோ அறிவுரை வழங்கினார். நேரடியாக ரத்தத்துக்குள் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் என் அம்மா எதையும் கேட்கவில்லை. முதுமையை ஒரு நோயாக அவர் நினைத்திருக்கிறார். அதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்” என்கிறார் மானோஷின் மகன். மனித உடல், எலிகள், தாவரங்கள் போன்றவற்றில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகளில் பாக்டீரியா மூலம் ஆயுள் நீண்டிருப்பதை அறிய முடிகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பாக்டீரியா காப்பாற்றுமா, கைவிடுமா?

http://tamil.thehindu.com/world/article19806884.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.