Jump to content

பெருமூச்சு


Recommended Posts

மலையின் மஞ்சள் கலந்த மண்ணிறம் மாயத்தோற்றந் தந்தது. மலையினைக் கையால் உடைத்து வாயில் போட்டு மென்று தின்ன முடியும் என்று தோன்றியது. மலை வெண்ணையென்றும் நான் கண்ணனென்றும் கூட ஒரு தடம் மனதுள் விரிந்தது. கண்ணன் என்ற எண்ணம் சிந்தையில் வந்ததும் கோபிகை தோன்றி விடுகிறாள்.
 
குதிரை வால் குடுமியில் ஏதோ ஒரு மாந்திரீகத் தன்மையிருக்கிறது என்பது எனது அபிப்பிராயம். கறுத்த முடிப் பெண் குதிரைவால் குடுமி போட்டு என் முன் நடப்பின் என் மனம் ஒரு முகப்பட்டு அவள் முகம் பார்க்கத் துடிப்பது எனக்குப் பரிட்சயம். உடற் பயிற்ச்சி நிலையத்துள் குதிரைவால் குடுமியுடன் ஒரு இளையவள் குதிரையாய் வந்தாள். காதிற்குள் “எம்.குமரன் சன் ஒவ் மகாலட்சுமி படத்தின் ஐயோ ஐயையோ” பாடல் நிஜமாகவே ஒலித்தபடி நான் ஓடிக்கொண்டிருந்தேனா, சிற்றுவேசன் அமர்க்களப்படுத்தியது. ஓட்டம் வேகமெடுத்தது. ஆழ்கூறு மாறாத வேகவோட்டத்தில் உடலிருக்க, என் மனம் மீண்டும் மலையேறியது.
 
மனித உளவியலில், ஆட்டிற்கு வெக்கையினைக் குளிரவைக்கும், கடுங்குளிரைச் சூடாக்கும் தன்மையிருப்பதனைப் பலமுறை அவதானித்துள்ளேன். வரண்ட நிலத்தின் சிறுத்த புல்லை மேய்ந்தபடி ம்மே என்று ஆடு கத்த அதன் குட்டி பால் குடிப்பதனைப் பார்க்கையில் வரட்சி மறந்து போகும். மஞ்சள் மலையில் தாடியாடு தாண்டி ஓடுகையில் குளிர் இதமாய் இருக்கும். குதிரையில் குதிரைவால்க் குடுமி வைத்த இடைச்சி ஒருத்தி மஞ்சள் மலையில் ஆடு மேய்த்து வந்தாள். வீடுகளாக மாற்றப்பட்டிருந்த மலைக் குகைகள் பின்னணியில் புகை கக்கிக் கொண்டிருந்தன. 
 
ஏதிர்பார்த்திருக்காகத் திருப்பம் உடற்பயிற்சி நிலையத்துள்ள நிகழ்ந்தது. ஒற்றைக் குறி விபூதி அணிந்த தன் தாயினைத் திடிரென்று குதிரைவால் இளையவள் எங்கிருந்தோ அழைத்து வந்தாள். இவளுடன் கூடவே வந்த தாய் உடைமாற்றும் அறையில் அதிகநேரம் இருந்திருப்பாள் போலும். விலா மற்றும் உள் தொடையின் தசைநார் இறுக்கத்திற்காக, குறிப்பாக இளம் பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் உபகரணத்தில் தாயை உட்கார வைத்துத் தன் தாயிற்குப் பயிற்சி கற்றுக் கொடுத்தாள். மனம் எதிர்பார்க்காத காட்சிகள் திடுப்பென்று விரிகையில் கவனம் குவிவது தவிர்க்க முடியாதது. “மேறா சப்பு நோக்கி றாணி கப் ஆயே கித்து” பாடல் தற்போது என் காதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. பாடல் என்னை மலைக்கு மீட்டு வந்தது.
 
இடைச்சியின் ஆடுகள் மேய்ந்த பாதையில் என் பார்வை பயணித்தது. மலையில் எத்தனை மலர்கள். கல்லாய்த் தெரியும் நிலப்பரப்பைக் கூர்ந்து பார்க்கையில் தாவர ராட்சியம் பிரமாண்டம். தேனீக்கள் மலைத்தேன் சேர்த்துக்கொண்டிருந்தன. அருவி ஒன்று மலையினை அறுத்துப் பாய்ந்து கொண்டிருந்து. குகைகளில் புகை இன்னமும் குறைந்தபாடில்லை. வானத்தில் நீலமின்றி வேறேதுமில்லை. காற்றில் ஏதேதோ கலந்திருக்கவேண்டும், ஆயுர்வேத வைத்தியத்தினை அது எனக்குள் நிகழ்த்திக்கொண்டிருந்தது. இடைச்சியின் குதிரை இழைப்பாறியபடி மேய்கிறது. இடைச்சி நிலத்தில் உட்கார்ந்திருக்கிறாள். குளிர்தாங்கும் ஆடை அவள் உடல்போர்த்துப் பாய்கிறது.
 
நம் பெற்றோர் நம் மனதுள் கதாநாயகர்களாக அறிமுகமானவர்கள். அப்பா அம்மாவால் முடியாதது உலகில் இல்லை என்ற எண்ணம் பாதுகாப்புணர்வாய் நம்மோடு வளர்வது. திடீரென முதுமை தோன்றி அம்மாவும் அப்பாவும் மூச்சுவாங்குவதைப் பார்க்கையில் நம் உடலிற்குள் ஒழிந்திருந்த எத்தனையோ கோழைத்தனங்கள் முகங்காட்டும். ஓடி ஒழிக்கத் தோன்றும். கத்திக் கலவரம் செய்யத் தோன்றும். கதாநாயகர்கள் அடிவாங்குவதை எந்த ரசிகனும் ஏற்றுக்கொள்ளுவதில்லை. ஆறாவது அடி விழுந்த பின்னேனும் கதாநாயகன் எழுந்தடிப்பான் என்ற நம்பிக்கை ரசிகனுள் மறைவதேயில்லை. கதாநாயகன் எழுந்திருக்கத் தாமதிப்பின் ரசிகன் எழுந்து உற்சாகக் குரலெழுப்புவான். 
 
தன் அம்மாவின் உள்தொடையின் தசைநார்களைப் பாடகி Beyonce கூனிப்போகும் படி மீண்டும் வரவைப்பேன் என குதிரைவால் பெண் உடற்பயிற்சி நிலையத்துள் தன் தாயின் அருகிருந்து முயன்று கொண்டிருந்தாள். அவள் தாயின் கண்களில் ஏதோ சோகம் இழையோடிக் கிடந்தது. தாயின் கன்னங்கள் கலவரப்பட்டுத் துடிப்பது போல்த் தெரிந்தது. யாழ்ப்பாணத் தமிழ்த்தாய் இந்தப் பயிற்சி செய்யலாமா என்று கேட்டு அவதானமாய்ச் சிந்திப்பதுபோல மொத்த முகம் கலவரப்பட்டுக் கிடந்தது. குதிரைவால் குடுமி கருமமே கண்ணாய் அன்றலர்ந்த மலர்போல் சலனமின்றித் தன் தாயருகே முயன்று கொண்டிருந்தாள். மிட்டாய் கடையில் நுழைந்த சிறுவன் போல, எல்லாவற்றையும் முழுங்கிவிடும் நோக்கில், என் மனம் மீண்டும் மலையேறியது.
 
ஒரு கழுதையில் பொதியேற்றிக் கிழவன் ஒருவன் மலையின் மீது இழுத்துவருகிறான். அவனிற்கு இருமல் பிடித்திருக்கவேண்டும், ஒலி என் காதை எட்டாத போதும் அவன் உடல் அடிக்கடி குலுங்குவது தெரிகிறது. உறு மீனைக் கண்டு குறிவைத்துக் குத்தும் கொக்கின் குணவியல்பொத்து இடைச்சி கணப்பொழுதில் குதிரையோட்டிக் கிழவனை அடைகிறாள். அலாக்காய் அவரை அள்ளிக் குதிரையில் வைக்கிறாள். பின் கழுதையின் கயிற்றோடு தானும் குதிரையேறி மலையேறுகிறாள். தன் தந்தையின் தலைப்பாகையினைச் சரிசெய்து விடுகிறாள். ஏதோ கதைகதையாய்க் கூறுகிறாள். மஞ்சள் கலந்த மண்ணிற மலை பின்னணியாய் இருக்க, சிவப்புக்கம்பளமும் வெண்ணிறத் தலைப்பாவும் அணிந்த கிழவனின் முகத்தில் இழையோடும் முறுவல் மானசீகமாய் எனக்குள் தெளிவாய் விரிகிறது. இருமல் குலுக்கல் அவர் உடலில் குறைந்திருந்தது. நாளை கிழவன் எழுந்திருக்காது கூடப் போகலம். ஆனால் இன்றைக்குத் தன் தந்தை கதாநாயகன்ந்தே வீரன்ந்தே என அவரை அவள் குதிரையில் கம்பீரமாகவே கொண்டு செல்லுகிறாள்.
 
உடற்பயிற்சி நிலையத்தின் வரவேற்று மேசையில் அலங்காரப் பொருளாய் வரண்டு இறுகிக்போன றோஜா இதழ்கள் ஓலைப்பெட்டியில் நிறைந்து கிடப்பதனைப் பார்க்கையில் முதுமையின் முகம் முளித்துப் பார்க்கிறது. முதுமை முடியும் வரைக்கும் நம் கதாநாயகர்களை உயர்த்தி உயர்த்திப் பிடித்து அவர்கள் தோலின் சுருக்கமெடுக்க முனைந்து நாம் தோற்றதன் பின்னர், அவர்களைப் புகைப்படமாக்கி இதிகாசம் புனையும் எமது ஓயா ஓட்டம் அழுத்தி நிலைக்கிறது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாிக்குவாி விளையாடும் இன்னுமொருவனின் தமிழைப் படித்து எம்மால் பெருமூசு்சு விடாமலிருக்க முடியவில்லை. என்னவொரு எழுத்துநடை. முதுமை சுகமா சுமையா என்று பட்டிமன்றம் நடத்தி என்ன பயன். முதுமையை ஏற்றுக் கொள்ள எம்மை பக்குவப்படுத்துவதனால் மட்டுமே இதற்கு சிறிதளவாவது விடை காண முயலலாம். வரண்ட மலாிதழ்களில் மென்மையை ஸ்பாிசிக்க முடியாவிட்டாலும் வருடிக்கொடுத்து எம் வாஞ்சையை வெளிப்படத்தலாம் என்று உங்கள் பெருமூசு்சின் நீளம் சொல்கிறது,பாராட்ட வாா்த்தையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. இன்னுமொருவன்!

நீண்ட காலங்களின் பின்னர் ஒரு தலை காட்டல்...மிக்க மகிழ்ச்சி!

எல்லாமே இழந்து நிற்கும் ஈழத்தமிழன் யாழ் களத்தை மட்டும் எந்தக் காரணத்தையும் கொண்டு இழந்து விடக்கூடாது!

அதற்காகவும், உங்கள் அழகு தமிழ் நடைக்காகவும்... பல தளங்களில் உலாவும் உங்கள் சிந்தனைச் சிதறல்களுக்காகவும் அடிக்கடி என்று இல்லாவிட்டாலும் இடைக்கிடையாவது எட்டிப் பாருங்கள்!

Link to comment
Share on other sites

காவலூர் கண்மணி, வல்வை சஹாறா மற்றும் புங்கையூரான். உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்கள்தான் எல்லோருக்கும் கதாநாயகர்களாக இருப்பார்கள். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டுதானே பலர் வாழமுயற்சிக்கின்றார்கள்.  எனது அம்மா, அப்பா சொல்லித்தந்த அடிப்படையான சமூக விடயங்கள், தோற்றுப்போகாமல் தொடர்ந்தும் வாழ்வில் போராடவேண்டும் என்பதுக்கு அவர்கள் சொல்லிய கதைகள் எப்போதும் நினைவுகளில் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

சி.கு. குதிரைவால் கொண்டை வைத்த எல்லாரும் ஆண்கள் பார்வையில் குமரிகளாகத்தான் தெரிவார்கள். பார்க்கும்போது நாமும் பதின்ம வயசுக்குப் போய்விடுவோம் :)

Link to comment
Share on other sites

வணக்கம் கிருபன்,
நிச்சயம் பெற்றோர்கள் கதாநாயகர்கள் தான். நமது கதாநாயகர்களின் முதுமையினைப் பார்க்கையில் எமக்குள் எழுகின்ற போராட்டங்களையும் மாற்றமுடியாக் காரணங்கள் சார்ந்து எழுகின்ற குமைச்சல்களையுமே கதை பேச முயன்றுள்ளது. மற்றம்படி கதாநாயகர்கள் கதாநாயகர்கள் தான்.
 
முதுமை என்பதை நாம் எதிர்கொள்ளுவது ஒருவேளை இலகுவாய் இருக்குமோ என்னமோ. எமது பெற்றோர்களின் முதுமையினைப் பார்ப்பது குமைச்சலானது. முதுமை எனும் போது அது தோற் சுருக்கம் மட்டுமல்ல. உதாரணமாக அல்சைமர்ஸ் வியாதிக்குட்படும் வயோதிபர் உடல் இருக்க உளத்தின் அடையாளம் தொலைத்து நிற்பது, பாக்கின்சன்ஸ் நோய்க்குட்படுவோர் உளம் உள்ளபடி இருக்க உடல் உருகிக்கொண்டிருப்பது போன்ற விடயங்கள் மிகப்பெரும் போராட்டங்களை பாசத்திற்குரியோரில் விதைத்து விடுகின்றன. இது தவிர்த்து, இக்கதை பேசியதைப் போலன்றி எழுந்து நடமாடமுடியா முதுமைக் கட்டமும் இருக்கவே செய்கின்றது. அவைசார்ந்த எண்ணங்களை இயன்றவரை அழகுணர்வோடு பகிர முயன்ற முயறச்சிதான் இக்கதை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். எமது பெற்றோர்களின் முதுமை அடையும்போதும், குறிப்பாக துணையில் ஒருவர் இல்லாமல்போகும்போதும் மற்றவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பார்ப்பது மிகவும் கடினமானது. அவர்களை சந்தோசமாக வைத்திருக்க பிள்ளைகள் தமக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்திலும் செய்யும் பணிவிடைகள் முக்கியமானவை. அதை உங்கள் கதையில் அழகாகக் கொண்டுவந்துள்ளீர்கள். 

இதேபோன்ற நிலைமை எதிர்காலத்திலும் எமது சமூகத்தில் இருக்குமா அல்லது மேற்கத்தையரைப் போன்று நாமும் இறுதிக் காலத்தில் ஒரு முதியோர் தங்ககத்தில் இருந்துகொண்டு பிள்ளைகளினதும் தெரிந்தவர்களினதும் வருகைக்காகக் காத்திருப்போமா போன்ற கேள்விகள்தான் அடிக்கடி வருகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை இரு தடவையும் ,அத்துடன் பின்னூட்டங்களையும் வாசித்த பின்பு கதையை முழுதாக புரிந்து கொண்டேன்...நன்றிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைசிறந்த எழுத்தைக் கொண்டிருக்கும்,தமிழக எழுத்தாளர்களை விஞ்சக்கூடிய எழுத்தாளுமை உள்ள ஒருவர் தன திறனை எழுதாது வீணடிக்கிறாரே என்று ஆதங்கமாக இருக்கிறது இன்னுமொருவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.