Jump to content

வெற்றிப் பெண்கள்


Recommended Posts

அக்கரைச் சீமையில் அசத்தல் வெற்றி

 

pic_2150225g.jpg

 

vid1_2150223g.jpg

 

 

vid2_2150222g.jpg

 

பள்ளி, கல்லூரி நாட்களில் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் பலர் திருமணத்திற்குப் பின்னர் கற்ற கலையை மறக்கும் நிலையே இன்றும் இருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணுக்கு நல்லதொரு புகுந்த வீடு அமையும்போது அவள் கற்ற கலைகள் செம்மைப்படுகின்றன. அடுத்த கட்டத்துக்கு அவளை நகர்த்திச் செல்கின்றன.

அப்படித்தான், அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள வித்யா மூலாவுக்கும் நல்லதொரு குடும்பம் அமைந்தது. அந்த ஆதரவோடும் ஒத்துழைப்போடும் அமெரிக்காவில் ஒரு கலைப் பள்ளிக்கூடத்தைத் தொடங்கும் பணியில் இறங்கியிருக்கிறார் வித்யா மூலா.

ஓவியம், ஃபேஷன் ஸ்கெட்சிங், எம்ப்ராய்டரி, நாகரிக நகைகள் வடிவமைத்தல், மெட்டல் எம்பாஸிங், பேப்பர் ஜுவல்லரி, இசை, பரதநாட்டியம் எனப் பல கலைகளும் வித்யாவுக்கு அத்துப்படி. மதுரையில் பிறந்து, படித்து, வளர்ந்தவர், திருமணத்துக்குப் பின் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திற்குக் குடிபெயர்ந்தார். புதிய இடம், புதிய மக்கள் என வெளிநாட்டில் குடியேறுகிறவர்களுக்கே உரிய மனநிலைதான் வித்யாவுக்கும் ஏற்பட்டது. ஆனால், அதை அவர் வித்தியாசமாக அணுகினார்.

 

“தனியாக வீட்டில் இருக்கும்போதெல்லாம் நான் கற்ற கலைதான் எனக்கு நல்ல நட்பாக இருந்தது. முதல் குழந்தை பிறப்பதற்கு முன் நிறைய நேரம் கைவசம் இருந்தது. அதனால், பல்வேறு கலைப் பொருட்களை உருவாக்குவதையும், ஓவியம் தீட்டுவதையும் நிதானமாக செய்ய முடிந்தது. இப்போது எனக்கு 2 குழந்தைகள். ஆனால், இன்றும் என்னால் முன்புபோல் செயல்பட முடிகிறது. காரணம் நேர மேலாண்மை. தொலைத்த நேரத்தைத் திரும்பப் பெறவும் முடியாது, கூடுதல் நேரத்தைக் கடனாகவும் பெற முடியாது.

 

இருக்கும் நேரத்தைத் திறன்பட பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம் பலவகையிலும் எனக்கு உதவியாக இருந்தது” என்று சொல்லும் வித்யாவுக்கு வெட்டித்தனமாகப் பொழுதைப் போக்குவது பிடிக்காது. முதலில் இதைச் செய்வது அவருக்குக் கடினமாகத்தான் இருந்தது. ஆனால், தன் லட்சியத்தை நேசித்து அதில் உறுதியாக இருந்தவருக்கு இந்த நேர மேலாண்மை மலையைப் புரட்டும் வேலையாக இல்லை. மிக எளிதாக கைகூடியது.

 

கைவினைப் பொருட்களுக்கான கலைக்கூடம் ஒன்றை அமெரிக்காவில் சொந்தமாக அமைக்க வேண்டும், கலைப் பள்ளி துவங்க வேண்டும். இவையே வித்யாவின் அடுத்தக்கட்டத் திட்டங்கள்.

இதற்கு வித்திடும் வகையில், முதல் கட்டமாகத் தன் வீட்டருகே இருக்கும் வெளிநாட்டவர் பலருக்கு ஓவியம், பேப்பர் ஜூவல்லரி, ஓவியம் தீட்டுதல் போன்ற கலைகளைப் பயிற்றுவித்து வருகிறார். பல்வேறு வயதினரும் இவரிடம் பயின்று வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கின்றனர்.

 

“குழந்தைகளுக்கு நுண்கலைகளைக் கற்றுத்தருவதன் மூலம் அவர்களை கம்ப்யூட்டர் சார்பில் இருந்து விடுவிக்கலாம். கலைகளை கற்பது, குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும், தசை இயக்கும் திறனை மேம்படுத்தவும் உதவும்” என்கிறார் வித்யா. வெளிநாட்டுக் குழந்தைகள் பலரும் இந்திய நுண்கலைகளை ஆர்வத்தோடு கற்றுக் கொள்கின்றனர்.

நம் கலாசாரத்தைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவே நம் கலாசாரத்தை பற்றி இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்ளும் முனைப்பில் இருக்கிறார் வித்யா.

“வெளிநாட்டில் தொழில் தொடங்குவதில் சில சவால்கள் இருக்கின்றன. அதுவும் இந்தியப் பாரம்பரிய கைவினைப் பொருட்களை ஒரு அந்நிய நாட்டில் சந்தைப்படுத்துவதற்கு நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கிறது. முதலில், அந்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும். பின்னர் சரியான திட்டமிடுதல், அளவான முதலீடு அவசியம். முதல் அடியாக,www.stayartistic.com என்ற இணையதளத்தைத் தொடங்கியிருக்கிறேன். இதற்கு என் கணவர் ஜெகன் பக்கபலமாக இருக்கிறார். இதன் மூலம் என் பொருட்களைச் சந்தைப்படுத்துகிறேன்.

 

வாடிக்கையாளர்கள் திருப்தியடையும் அளவுக்கு படைப்புகள் தரமாக இருப்பதைக் கவனமாக பார்த்துக் கொள்கிறேன். தரம், நம்பிக்கை இதுவே எந்த ஒரு தொழிலுக்கும் மிகப்பெரிய ஆதாரம்” என்று சொல்லும் வித்யாவின் எதிர்காலத் திட்டம், இந்திய அடையாளங்களைத் தெளிவாகப் பறைசாற்றும் கலைப் பொருட்களை தான் வாழும் பகுதியில் பிரபலப்படுத்துவது. ஆர்வமும் குடும்ப ஆதரவும் இருக்கும்போது வானம் வசப்படும்தானே.

 

vid3_2150221g.jpg

 

http://tamil.thehindu.com/society/women/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6492653.ece?homepage=true

Link to comment
Share on other sites

அனைத்து அனுபவங்களையும் கடக்க வேண்டும்!

 

Tamil_News_large_1092827.jpg

 

ஆண்களுக்கான தொழிலில் 'கலக்கி' வருபவரும், சென்னை பாலவாக்கத்தில், 'டிம்பர் மார்ட்' கடை வைத்திருப்பவருமான பிரேமா: எங்கள் குடும்பத்திற்கும், என் கணவர் குடும்பத்திற்கும் பரம்பரை தொழிலே டிம்பர் பிசினஸ் தான். கல்யாணத்திற்கு பின், மகன் தனியாக தொழில் செய்யட்டும் என, என் மாமனார் வைத்து கொடுத்தது தான் இந்த கடை.

ஆரம்ப காலங்களில் சொந்த தொழிலில் அனைவருக்கும் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள், கடன் சுமைகள் எங்களுக்கும் வந்தது. அந்த சந்தர்ப்பத்தில், என் கணவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, திடீரென இறந்து போனார். கணவருடைய மரணத்திற்கு பின், இந்த தொழிலை யார் கவனிப்பது என பேச்சு வந்தது. எனக்கு இந்த தொழிலில் நேரடி அனுபவம் இல்லை எனினும், குடும்பத் தொழிலே இதுதான் என்பதால், 'நாமே ஏன் எடுத்து நடத்தக் கூடாது'ன்னு தோன்றியது. ஆனால், மாமனார் வீட்டில் அனுமதிக்கவில்லை; அதற்கு நியாயமான காரணமும் இருந்தது.
 
எங்கள் தொழிலில், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் மரங்களை வரவழைப்போம். வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வோம். விலையை பொறுத்தவரை மரத்தின் தரம், சீசன் பொறுத்து அவ்வப்போது மாறுபடும். அதனால் இந்த தொழிலில், 'பிக்சட் ரேட்' வைக்கும் வழக்கம் கிடையாது.
இதை சாதகமாக பயன்படுத்தும் கஸ்டமர்கள், அடிமாட்டு விலைக்கு பேரம் பேசுவர். இதை சமாளிப்பது பெரிய போராட்டமாக இருக்கும். இதுதவிர, கஸ்டமர்கள், ஆசாரி, மேஸ்திரி, இன்ஜினியர், பில்டர், பிரமோட்டர் என, அனைவரும் ஆண்களாகத் தான் இருப்பர். இதையெல்லாம் மனதில் வைத்து தான், 'உனக்கு இந்த வேலையெல்லாம் சரிப்பட்டு வராது. வீட்டிலேயே இருந்து குடும்பத்தை கவனித்துக் கொள்; உனக்கும், இரண்டு பெண்களுக்கும் தேவையானதை நாங்கள் செய்து தருகிறோம்' எனக் கூறினர். என்னால் அவர்கள் சொன்னதுக்கெல்லாம் உடன்பட முடியவில்லை.
 
படிப்படியாக வேலை நுணுக்கங்களை, நிர்வாக நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொண்டேன். நான் பொறுப்புக்கு வந்து, 12 ஆண்டுகள் ஆகிறது. இப்போது, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம். என் விஷயத்தில் கணவர் வீட்டில் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை எனினும், அவர்களை நான் பகையாக நினைக்கவில்லை. அதனால் தான், நான் ஓரளவு தொழிலில் எழுந்து நின்று, பெண்களையும் ஆளாக்கியதை பார்த்து, விட்டு போன உறவுகளும் மதிப்பாக பார்க்கின்றனர்.
 
Link to comment
Share on other sites

  • 1 month later...

பஞ்சர் கடை நடத்தி வரும் இரும்புப் பெண்மணி விஜயலட்சுமி

 

Tamil_News_large_111969420141120230447.j

 

 

பஞ்சர் கடை நடத்தி வரும் இரும்புப் பெண்மணி விஜயலட்சுமி: கரூர் மாவட்டம் தரகம்பட்டியைச் சேர்ந்தவள் நான். என் கணவர் அரசு பஸ் டிரைவராக இருந்தார். அவர் பஸ் ஓட்டி வரும்போது, எதிரே வந்த லாரியில் பஸ் மோதியது. அதில், யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை. ஆனாலும், அவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர்.

 

பிழைப்புக்கு என்ன செய்வது என தெரியவில்லை. சரி... கரூருக்கு வந்து ஏதாவது தொழில் செய்யலாம் என, கரூரிலிருந்து மதுரை செல்லும் நான்குவழிச் சாலை, சுக்காலியூரில், என் கணவர் பஞ்சர் கடை வைத்தார். அவர் டயர் கழட்டும்போது, பஞ்சர் ஒட்டும்போது கூடமாட உதவியாக இருந்தேன். சில நேரங்களில் என் கணவர் வெளியில் சென்றிருந்தால், பஞ்சரோடு வரும் லாரிகள் காத்திருப்பதைப் பார்த்து, நானே பஞ்சர் ஒட்டி அனுப்ப ஆரம்பித்தேன். இதைப் பார்த்த பலர், 'பொம்பளைங்க இந்தத் தொழிலை செய்ய வேணாம்; டயர் மேல விழுந்துறப் போகுது'ன்னு பயமுறுத்தினர். அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், பையன், பெண்களை காப்பாற்றி கரை சேர்க்கணும் என, இன்னும் கடினமாக உழைக்க ஆரம்பித்தேன்.
 
 
டாரஸ் லாரி, 12 சக்கரம், 18 சக்கரம்னு வரும். அந்த லாரிக்கு பஞ்சர் ஒட்டிப் பழகினேன். டிராக்டர் டயர் கழட்டும் போது, கொஞ்சம் ஏமாந்தால் ஆளையே அமுக்கிவிடும். டிராக்டர் டயரையும் கழற்றி, பஞ்சர் ஒட்டி பழகினேன். வேலை இல்லாத நேரங்களில் என்ன செய்வது என்று யோசித்தேன். டிராக்டர் வாங்கி உழவு ஓட்டப் போனால், வருமானம் வரும் என்று முடிவு செய்து, கடன் வாங்கி டிராக்டர் வாங்கினேன். நானே டிராக்டரை ஓட்டிக் கொண்டு, உழவு ஓட்ட கிளம்பிடுவேன். நான் உழவு ஓட்டுவதை பெண்கள் ஆச்சரியமாகப் பார்ப்பர். 'டவுனில் பெண்கள் கார் ஓட்டுவது போல் தான்' என்று சொல்லுவேன். ஆனால், அங்குள்ள விவசாயிகள், 'ஏம்மா பொய் சொல்ற... உழவு ஓட்டும்போது சேத்துல கலப்பை மாட்டி வரும்போது, டிராக்டர் ஓட்டுறது எவ்வளவு சிரமம்ன்னு தெரியாதா?' என்பர். கஷ்டம்ன்னு பார்த்தால், பிழைப்பு கஷ்டமாயிருமேன்னு மனதில் நினைத்து, வேலையை முடித்துவிட்டு வருவேன். கஷ்டப்படாமல் கஞ்சி குடிக்கணும்ன்னா முடியுமா? தொழிலில் கஷ்டப்பட்டுத் தானே ஆகணும்?
 
 
Link to comment
Share on other sites

மறுவாழ்வு தந்த இயற்கை

 

 

iyarkai_2208533f.jpg

(வலது) மண்ணால் செய்யப்பட்ட ஃபிரிட்ஜ்
 

‘சாமைச் சோறு ஆமை ஆயுள்’

 
‘குதிரைவாலி தந்திடுமே குறைவில்லா வாழ்வு’
 
‘கோலுன்றி நடப்பவரும் கம்பங்கூழால் காலூன்றி நடப்பார்’
 
‘தினை உண்டால் தேக்கு போல் உடல் வலுவாகும்’
 
‘வரும் நோய்களை வரகால் விரட்டுவோம் ராகியில் பலகாரம் கால்சியத்தின் அதிகாரம்’
 
- திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு பக்கமாகச் செல்கிறவர்களின் கவனம் ஈர்க்கின்றன இந்த வாசகங்கள். இவற்றைத் தன் பசுமை அங்காடியில் ஒட்டி வைத்திருக்கிறார் சத்யபாமா. காய்கறிகளை அடுக்கிவைப்பது, வாடிக்கையாளர்களைக் கவனிப்பது எனச் சுறுசுறுப்புடன் வேலை செய்யும் சத்யபாமா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படுத்த படுக்கையாக இருந்தவர் என்றால் நம்ப முடியவில்லை.
 
“நம்பித்தான் ஆகணும். ரெண்டு வருஷத்துக்கு முன்னால எனக்குக் கர்ப்பப்பையை அகற்றியாச்சு. அல்சர், எலும்பு தேய்மான நோய்னு வரிசையா பிரச்சினைகள். எழுந்து நடமாடக்கூட முடியலை. அப்போ ஒரு வேளைக்கு 10 மாத்திரை வீதம் தினமும் 30 மாத்திரைகள் சாப்பிடுவேன். ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் சாப்பிட்டதால மன அழுத்தம் அதிகமாயிடுச்சு. ராவெல்லாம் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவேன்” என்று தான் துயரப்பட்ட நாட்களை சத்யபாமா விவரிக்கிறார். அப்போது அவருடைய கணவர் குணசேகரன், டெஸ்ட் தெரபி எடுக்க வைத்துள்ளார்.
 
இயற்கையின் வழியில்
 
அதன் பின்னர் ஓரளவு தூக்கம், உணவு என இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த சத்யபாமாவுக்கு 2013-ம் ஆண்டு தொடக்கத்தில் தோழி ஒருவர் மூலம் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் அறிமுகம் கிடைத்தது. வானகத்தில் நம்மாழ்வாரைச் சந்தித்த சத்யபாமா, ஐந்து நாட்கள் அங்கேயே தங்கி இயற்கை உணவு குறித்து அவர் வழங்கிய ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறார்.
 
வானகத்தில் இருந்து திருச்சி திரும்பியவர், ‘இயற்கைக்குத் திரும்பிவிடு’ என நம்மாழ்வார் கூறியதைச் செயல்படுத்தும் விதமாக, இயற்கை முறை விவசாயத்தில் உற்பத்தி செய்த சாமை, வரகு, கம்பு, சோளம், தினை, சிகப்பரிசி ஆகியவற்றைத் தினசரிச் சமையலுக்குப் பயன்படுத்தினார். வீட்டிலேயே தோட்டம் அமைத்து கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய், சுரைக்காய், தக்காளி மற்றும் கீரை வகைகளைப் பயிரிட்டார்.
 
சிறிதும் ரசாயன கலப்பில்லாத உணவைச் சாப்பிட்டு வந்ததால் சத்யபாமாவின் உடல் நலத்தில் சில மாதங்களிலேயே மாறுதல் ஏற்பட்டது. மாத்திரைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விடை கொடுத்தவர் இயற்கை உணவுப் பழக்கத்துக்கு மாறிய பின், இன்றுவரை ஒரு மாத்திரைகூட சாப்பிடவில்லை.
 
அனைவருக்கும் நலவாழ்வு
 
தனக்கு ஏற்பட்ட இந்த ஆரோக்கியமான மாற்றத்தை மற்றவர்களும் பெறவேண்டுமென நினைத்தார் சத்யபாமா. தன் கணவரது உதவியுடன் திருச்சி கருமண்டபத்தில் பசுமை அங்காடி ஒன்றைத் தொடங்கினார். இங்கு இயற்கையாக விளைவிக்கப்பட்ட சிறு தானியங்கள், அரிசி வகைகள், காய்கறிகள், கீரைகளை மட்டுமே விற்கின்றனர்.
 
ஆரம்பத்தில் உடல் நலம் சரியில்லாத மனைவிக்கு உதவ பசுமை அங்காடியைப் பார்த்துக்கொண்ட சத்யபாமாவின் கணவர், இயற்கை உணவுப் பொருட்களால் ஈர்க்கப்பட்டு முழுநேரமாக அங்காடியைக் கவனிக்கத் தொடங்கினார். அதனால் கருமண்டபம் பசுமை அங்காடியை அவரையே பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, சில மாதங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் மற்றொரு பசுமை அங்காடியைத் திறந்திருக்கிறார் சத்யபாமா.
 
இவருடைய பசுமை அங்காடியில் இயற்கை வேளாண்மை விளைபொருட்கள் மட்டுமல்லாது மண்ணாலான குக்கர், ஃபிரிட்ஜ், வாட்டர் ஃபில்டர், தோசைக் கல், தட்டு, டம்ளர் ஆகிய பொருட்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
 
குஜராத்தைச் சேர்ந்த மட்பாண்டக் கலைஞர் ஒருவரது தயாரிப்பான மண் ஃபிரிட்ஜைப் பயன்படுத்த மின்சாரம் தேவையில்லை. ஃபிரிட்ஜின் மேல் பகுதியில் இருக்கும் டேங்கில் 10 லிட்டர் தண்ணீர் நிரப்பினால் போதும். கீழே இரண்டு அறைகள் இருக்கின்றன. இதில் 7 கிலோ வரை பழங்கள், காய்கறிகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம். சமைத்த உணவு வகைகளை வைக்க முடியாது. பொதுவாகவே சமைத்தப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்கிறார் சத்யபாமா.
 
விலையைக் குறைக்கும் மந்திரம்
 
“மற்ற கடைகளுடன் ஒப்பிடும்போது பசுமை அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களின் விலை சிறிது அதிகம்தான். ஆனால், இவற்றைப் பயன்படுத்துவதால் மருந்து மாத்திரைகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க முடியும். இதற்கு நானே உதாரணம்” என்கிறார் சத்யபாமா.
 
ஒரு கிலோ எடையைக்கூட தூக்க முடியாதவர் இப்போது 15 கிலோ எடையுள்ள பொருட்களை திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் வரை எடுத்து வரும் அளவுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
 
“வரகு, சாமை, தினை போன்றவற்றை மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டாலே விவசாயிகள் அவற்றை அதிக அளவு விளைவிக்கத் தயாராகிவிடுவார்கள். உற்பத்தி அதிகரித்தால் விலையும் தானாகக் குறைந்துவிடும்” என்று விளக்கமும் தருகிறார் சத்யபாமா.
 
படங்கள்:ஜி.ஞானவேல்முருகன்
 
Link to comment
Share on other sites

அவர்கள் அனனவரக்கும் என்ணுனடய வாழ்ததுக்கள்

Link to comment
Share on other sites

பேர் சொல்லும் உணவகம்
 
 
pasi3_2217563g.jpg
 
pasi2_2217564g.jpg
 
 
pasi_2217565g.jpg
 
வெளிநாட்டில் கைநிறைய சம்பாதித்த மகன் திடீரென்று சொந்த ஊருக்கு வந்து, சாப்பாட்டுக் கடை திறக்கப் போகிறேன் என்று சொன்னால் ஒரு அம்மாவுக்கு எப்படியிருக்கும்? சில அம்மாக்கள் உடைந்து போகலாம். இன்னும் சிலர் ‘எல்லாம் உன் இஷ்டம்பா’ என்று சொல்லி ஒதுங்கியிருக்கலாம். ஆனால் ஆதிலட்சுமியோ தன் மகனின் எண்ணத்துக்கு மலர்ந்த முகத்துடன் ஆதரவு தெரிவித்ததுடன், தானும் களத்தில் இறங்கினார். இன்று அவர்களின் வெற்றியை எட்டி நின்று ரசித்துக் கொண்டிருக்கிறார்.
 
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் நிம்மதியாகப் பொழுதைக் கழிக்க வேண்டிய வயதில், தன் மகனின் முயற்சிக்குத் துணை நின்ற பெருமிதத்துக்குச் சொந்தக்காரர் ஆதிலட்சுமி. சென்னை சூளைமேட்டில் இயங்கிவரும் ‘கொல பசி’ உணவகத்தில் ருசியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். ஆர்டர்களுக்கு ஏற்ப ஒழுங்காக பார்சல் நடைபெறுகிறதா என்பதை மேற்பார்வையிட்டபடியே பேசினார்.
 
“என் மகன் சந்தோஷ், அமெரிக்காவில் 8 வருஷம் வேலை பார்த்தான். இந்தியா வந்தவன் திடீர்னு ஒரு நாள் ஹோட்டல் பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்னு சொன்னான். நம்ம குழந்தைகளோட முயற்சிக்கு நாமதானே துணை நிற்கணும்?” என்று கேட்கிற ஆதிலட்சுமி, ஆரம்பத்தில் பலருடைய கேள்விகளையும் விமர்சனங்களையும் பொறுமையுடன் கடந்துவந்திருக்கிறார்.
 
“நம்ம பையன் முன்னேறிடுவான்னு நமக்குத் தெரியும். ஆனால் சுத்தியிருக்கறவங்க எல்லாம் இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, நீங்க எடுத்து சொல்லக் கூடாதான்னு கேட்டாங்க. நான் அவங்களுக்கு எந்தப் பதிலும் சொல்லலை. பிசினஸ் டெவலப் ஆக ஆரம்பிச்சதும் பேச்சு குறைஞ்சு, இப்போ நின்னும் போயிடுச்சு. இவங்களோட வெற்றி அவங்க வாயை அடைச்சுடுச்சு” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் ஆதிலட்சுமி.
 
சுவையே வெற்றியின் ரகசியம்
 
சமையலில் ஆதிலட்சுமியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. அதுவும் அசைவ சமையலில் இவரின் கைப்பக்குவத்துக்கு ஈடுகொடுக்க முடியாது. தன் குடும்ப நண்பர் நடத்திய கேட்டரிங் நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக சமையலில் உதவியிருக்கிறார். விதவிதமான பிரியாணி இவருடைய சிறப்பு. அந்த அனுபவமே தன் மகனுடைய நிறுவனத்துக்கு உதவக் கைகொடுத்திருக்கிறது.
 
“என் மகன் சந்தோஷுடன் அவனோட ஃப்ரெண்ட்ஸ் ஆதித்யா, பத்மநாபன், என் மருமகள் சஞ்சிதா இவங்க எல்லாரும் இந்த நிறுவனத்துல பார்ட்னரா இருக்காங்க. சமையல்தான் பிசினஸுக்கான ஆதாரம். என்னென்ன செய்ய வேண்டும் என்பதைவிட என்னவெல்லாம் செய்யக்கூடாதுன்னு முடிவு செய்தோம். சமையலில் நிறத்தையும் மணத்தையும் கூட்டுவதற்காக எந்த செயற்கைப் பொருளையும் சேர்ப்பதில்லை. அஜினோமோட்டோ போன்ற சுவையூட்டிகளுக்கும் இங்கே இடமில்லை. சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருள்களில்தான் உணவை அடைத்துத் தருகிறோம்” என்று தங்கள் தனிச்சிறப்பைச் சொல்கிறார் ஆதிலட்சுமி.
 
பேர் சொல்லும் உணவகம்
 
நம் வீட்டுச் சமையலறை அளவே இருக்கிற ‘கொல பசி’ உணவகத்தில் பார்சல், டோர் டெலிவரி ஆகிய இரண்டுக்கு மட்டுமே இடமுண்டு.
 
“அதுதான் மற்ற உணவகங்களுக்கும் எங்களுக்கும் இருக்கிற வித்தியாசம். உணவை வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டில் வைத்து பொறுமையாக ருசிக்கலாம்” என்று விளக்கம் தருகிறார் ஆதித்யா.
 
தொலைபேசி மூலம் ஆர்டர் தருகிறவர்களுக்கு வீட்டுக்கே சென்று உணவை சப்ளை செய்கிறார்கள். எளிய உணவு போதும் என்கிறவர்கள் சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்கிறவர்களின் நாவுக்குச் சுவை கூட்டுகின்றன அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அசைவ ரகங்கள்.
 
ஆரம்பத்தில் இது என்ன புது விதமாக இருக்கிறதே என்று தயங்கியவர்கள், உணவு வகைகளின் சுவையால் நிரந்தர வாடிக்கையாளர் களாகிவிட்டார்கள் என்று குறிப்பிடும் ஆதிலட்சுமி, வீட்டு விசேஷங்களுக்கும் சமைத்துத் தருவதாகச் சொல்கிறார். அதிகரித்த வாடிக்கையாளர்களால் தற்போது அண்ணாநகரில் இன்னொரு கிளையைத் திறந்திருக்கிறார்கள்.
 
தங்கள் உணவகத்துக்குப் பெயர் வைத்ததை வைத்தே ஒரு கதை எழுதலாம் என்கிற ஆதித்யா அந்த சுவாரசியத்தையும் பகிர்ந்து கொண்டார்.
 
“சும்மா இந்த பவன் அந்த பவன்னு பேர் வைக்கிறதுல எங்களுக்கு இஷ்டமில்லை. பேரே அதிரடியா இருக்கணும்னு நினைச்சோம். யாரைப் பார்த்தாலும் புதுசா ஒரு பேர் சொல்லுங்கன்னு கேட்போம். ஒரு முறை சந்தோஷும் சஞ்சிதாவும் டூவீலர்ல போயிட்டிருந்தப்போ வொய் திஸ் கொலவெறி பாட்டைக் கேட்டிருக்காங்க சஞ்சிதா. உடனே ‘நாம ஏன் கொல பசின்னு பேர் வைக்கக் கூடாது?’ன்னு கேட்க அதை அப்படியே செயல்படுத்திட்டோம்” என்று சிரிக்கிறார் ஆதித்யா.
 
“அடுத்த முறை மட்டன் கிரேவி செய்யறப்போ முருங்கைக்காயை கொஞ்சம் அதிகமா போடணும்” என்று குறிப்பு சொல்லிக்கொண்டே பணியைத் தொடர்கிறார் ஆதிலட்சுமி. அம்மாவின் இந்த அன்பையும் அக்கறையையும் உள்வாங்கியபடி சுறுசுறுப்பாகிறார்கள் உணவக ஊழியர்கள்.
 
Link to comment
Share on other sites

ஓய்வு நேரத்தில், 'டிவி' சீரியல் பார்ப்பதை விட்டுவிட்டு, இப்படி ஏதாவது செய்யலாம்

 

Tamil_News_large_1127419.jpg

 

'டிவி' பார்க்காமல் 'பிசினஸ்' செய்யுங்க!'நட்ஸ் அண்டு டிரை புரூட்ஸ் பிசினசில்' சில மாதங்களில் லட்சக்கணக்கில் லாபம் சம்பாதித்தது குறித்து கூறும் பவானி தேவி: திருமணம் ஆகி, 20 ஆண்டுகளாகிறது. அன்பான கணவர், நிறைவான குடும்பம். மகன் காலேஜும், மகள், ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். குடும்பத்திற்கு தொந்தரவு இல்லாமல், ஏதாவது, 'பிசினஸ்' செய்து, அதில் லாபம் பார்க்கணும்னு மனதை உறுத்தியபடியே இருந்தது.இந்நிலையில் தான், புதிதாக வாங்கின வீட்டுக்கான கடன், எங்களை நெருக்க ஆரம்பித்தது. என் பங்காக ஏதாவது செய்யணும்னு நினைத்தேன். அப்போது தான், இந்த பிசினசில் இறங்கினேன்.

 

எங்கள் குடும்பத்தில், கல்யாணம், குழந்தை பிறப்பு, பிறந்த நாள், 'பார்ட்டி'ன்னு எந்த விழாவிற்கு சென்றாலும், கடைசி நேரத்தில், 'கிப்ட் பேக்' செய்வதே இல்லை. ஒவ்வொரு விழாவிற்கும் தகுந்தாற்போல், முன்னேற்பாடாக தயார் செய்து வைத்து விடுவோம்.இந்த பழக்கம், என்னுடைய நண்பர்கள், ஏதாவது விழாவிற்கு அவசர அவசரமாகச் செல்லும் போது, 'போகிற வழியில், பவானி வீட்டில் ஒரு, 'கிப்ட் பாக்ஸ்' வாங்கி போயிடலாம்' என, சொல்லும் அளவு இருந்தது.இதையே பிசினசாக எடுத்து செய்தால் என்ன என்ற யோசனை வந்தவுடனே, செயலில் இறங்கினேன்.

 

அந்த கிப்ட் பேக்கில், சிறியதாக ஒரு விஷயத்தைச் சேர்த்தேன்; அதுதான், 'நட்ஸ் அண்டு டிரை புரூட்ஸ்!'இப்போது, உயர் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் வீடுகளுக்கு போகும் பலர், லட்டு, ஜிலேபி, பூந்தி, காரச்சேவு என்று வாங்கிச் செல்வதில்லை. 'ஹெல்தி அண்டு ஹைஜீனிக்' என, தரமான பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் உலர் திராட்சைகள், 'ஹோம் மேட் சாக்லேட்ஸ்'ன்னு ரொம்பவும் அழகாக, 'பேக்' செய்து, கடைகளில் விற்பதை தான் வாங்கிச் செல்கின்றனர்.எனக்கு சாக்லேட்ஸ் நன்றாகவே செய்ய வரும். அத்துடன், பாதாம், பிஸ்தா, உலர் பழங்களைச் சேர்த்து, அதையே என்னோட பிசினசுக்கு எடுத்தேன்.

 

'கிரியேட்டிவ்' ரசனையுடன், அழகாக பெட்டி தயார் செய்தோம். 'நிஷாந்த் நட்ஸ் டிரை புரூட்ஸ்'ன்னு பெயர் வைத்து, பேக் செய்து விற்க ஆரம்பித்தேன்.நான் பிசினஸ்ல இறங்குனது, தீபாவளி நேரம் என்பதால், நிறைய விற்பனை ஆனது. உதயம் பருப்பு, பாப்புலர் அப்பளம் என, சில முன்னணி நிறுவனங்களை அணுக, அவர்களும், நட்ஸ் டிரை புரூட்சுக்கு, 'ஆர்டர்' கொடுத்தனர். தீபாவளி நேரத்தில் மட்டும், லட்சம் ரூபாய்க்கு மேலே லாபம் கிடைத்தது.

 

நம்மிடம் உள்ள டிசைன்களை, 'வாட்ஸ் அப்'பில் எப்படி அனுப்புவது, அது மூலமாக எப்படி பிசினஸ் விரிவாக்கம் செய்வது என, என் மகன் சொல்லிக் கொடுத்தான். பேக் செய்வதற்கு, மகள் உதவினாள்; கணவரும் உற்சாகப்படுத்தினார்.இப்போது, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்கு, 'ஆர்டர்ஸ்' எடுக்கிறேன். மத்திய வயது பெண்கள் வீட்டு வேலை முடித்து, கிடைக்கும் ஓய்வு நேரத்தில், 'டிவி' சீரியல் பார்ப்பதை விட்டுவிட்டு, இப்படி ஏதாவது செய்யலாம். உங்களையே நீங்கள், புத்தம் புதிதாக பார்க்குற மாதிரி இருக்கும்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறைகளை நிவர்த்தி செய்தால் வளரலாம்!

Tamil_News_large_113575120141211232059.j

 

கிலோவில் துவங்கி, டன் கணக்கில் மிளகாய் பொடி தயாரித்து முன்னேறியது குறித்து விளக்கும், சுஜி மிளகாய்த் துாள் உரிமையாளர் சுஜாதா: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவிலை சேர்ந்தவள் நான். என் கணவர் பி.ஏ.எஸ்.சந்திரன், வத்தல் மண்டி வைத்துள்ளார். குழந்தைகள் பள்ளி படிப்பை முடிக்க இருந்த நிலையில், ஏதாவது சுயதொழில் செய்யலாம் என, தோன்றியது. கணவர், மிளகாய் வத்தல் வியாபாரம் செய்வதால், வத்தல் பொடி தயாரிக்கலாம்ன்னு முடிவெடுத்து, அவரிடம் கூறினேன். 'சூப்பர் ஐடியா' என, ஊக்கம் கொடுத்தார்.

முதலில் கிலோ கணக்கில் தயார் செய்து, நண்பர்கள், பக்கத்து வீடுகள், ஓட்டல்களுக்கு கொடுத்தேன். ரசாயனம் எதுவும் சேர்க்காமல், தரமான வத்தல்களால் தயார் செய்திருந்ததால், வாங்கிய அனைவருக்குமே பிடித்து போய் வாடிக்கையாளர்கள் ஆயினர். தொழில் சம்பந்தமாக பெரிய பெரிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு கேட்கப் போகும்போது, நாம் இன்னும் படித்திருக்கலாமே என, தோன்றியது. அதனால், என் பையன் காலேஜ் சேர்ந்தபோது, நானும் தொலை துார கல்வியில், பி.பி.ஏ., சேர்ந்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அடுத்து, மனவளக்கலை - யோகாவில் எம்.எஸ்.சி., படித்து, 85 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.
ஸ்நாக்ஸ் மற்றும் ஊறுகாய் கம்பெனிகளுக்கு, 'சாம்பிள்' கொடுத்தேன். நிறம், மணம், காரம் சரியான அளவில் இருந்ததால், தொடர்ந்து, 'ஆர்டர்' கிடைத்தது. பெரிய ஊறுகாய் நிறுவனங்களுக்கு வத்தல் பொடி அனுப்பும்போது, ஏற்றுமதி தரத்தை உறுதிபடுத்த, தரச்சான்று பெற வேண்டி இருந்தது.
 
ஒவ்வொரு மாதமும் மொத்தமாக தயாரிக்கும் போது, கும்மிடிப்பூண்டியில் உள்ள, 'ஸ்பைஸ் போர்டு ஆப் இந்தியா'வுக்கு சாம்பிள் அனுப்பி, 'தரமானது, கலப்படம் ஏதும் இல்லை'ன்னு உறுதிச்சான்று வாங்கி அனுப்பினேன். ஆர்டருக்கு ஏற்ப மாதம், 5 முதல் 9 டன் வரை, வத்தல் பொடி தயாரித்து, காற்று நுழையாதபடி, 'டபுள் பேக்கிங், ஸ்டிச்சிங்'ன்னு கவனம் செலுத்தி, 'பிரெஷ்'ஷா அனுப்புவேன். குறித்த நேரத்தில் பொருட்களை அனுப்புவது, ஒவ்வொரு முறையும், 'எங்க பொடி திருப்தி அளிக்குதா?'ன்னு கேட்டு, குறைகளை நிவர்த்தி செய்வது, இதெல்லாம் தான், என் தொழில் வளர்ச்சிக்கு காரணம்.
 
எனக்கு ரோல் மாடல், என் தாத்தா பி.ஏ.சுப்பையா. உழைப்பின் அருமையையும், அதன் பலனையும், எங்களுக்கு வாழ்ந்து காட்டி நிரூபித்தவர். அந்த உந்துதல் தான், 'சும்மா இருக்கக் கூடாது. ஏதாவது தொழில் துவங்கணும்'ன்னு ஆர்வத்தை துாண்டி, இந்தளவுக்கு முன்னேற வைத்துள்ளது. என் அடுத்த இலக்கு, இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வத்தல்களை வைத்து, வத்தல் பொடி தயாரிப்பது.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 4 weeks later...

ஒன்பது ஆண்டு களாக பால் பண்ணை நடத்தி வரும், 'அன்னை தெரசா தாழம்பூ' மகளிர் குழு தலைவி ராமேஸ்வரி

 

50 பெண்களுடன் சச்சரவின்றி தொழில் செய்கிறேன்!

 

Tamil_News_large_1165381.jpg

 
ஒன்பது ஆண்டு களாக பால் பண்ணை நடத்தி வரும், 'அன்னை தெரசா தாழம்பூ' மகளிர் குழு தலைவி ராமேஸ்வரி: திருநெல்வேலி மாவட்டம், நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவள் நான். எங்கள் ஊரில் உள்ள குளத்தை நம்பித்தான் விவசாயம் நடந்தது. முன்பு மாதிரி குளத்திலேயே தண்ணீர் இல்லாததால் விவசாயம் முடங்கியது. இதனால் வயக்காடு, தோட்டத்து வேலை இல்லாமல் நாங்கள் வருமானத்துக்கு வழியில்லாத நிலைக்கு ஆளானோம்.
 
இந்த நேரத்தில், திருநெல்வேலி சமூகசேவை மையத்தின் வழிகாட்டுதல் மூலமாக நான், மகளிர் குழுவை உருவாக்கினேன். குழுவில் இருக்கும் பெண்கள் எல்லாருக்கும் வருமானம் கிடைக்க ஏதாவது செய்ய வேண்டும் என, நினைத்தேன். அப்போது தான், கறவை மாடு வாங்கி வளர்த்தால் அனைவருக்கும் வருமானம் கிடைக்கும் என்ற 'ஐடியா' வந்தது. இதற்கு எல்லாரும் சம்மதித்ததால், அனைவருக்கும் லோன் எடுத்து, ஆளுக்கொரு கறவை மாடு வாங்கி கொடுத்தேன்.
 
ஆரம்பத்தில் ஊரில் உள்ள சில பால் விற்பனையாளர்கள் எங்களிடம் ஒரு லிட்டர் பாலை, 18 ரூபாய்க்கு வாங்கி, 36 ரூபாய்க்கு விற்றனர். இதனால், எங்களை விட அவர்களுக்கு தான் நல்ல லாபம் கிடைத்தது; நாள் முழுக்க கஷ்டப்பட்ட எங்களுக்கு நஷ்டம் வந்தது. இந்த நேரத்தில், பாளை ஒன்றிய கூட்ட மைப்பால் உருவான, 'பாரதி பால் பண்ணை'யுடன், எங்கள் குழுவை இணைத்து, நான் எங்கள் ஊரிலேயே எங்களுக்கு என, தனியாக ஒரு பண்ணையை உருவாக்கினேன். இதில் இணைந்த பின், ஒரு லிட்டர் பாலை, 23 ரூபாய்க்கு விற்றோம். நாள் ஒன்றுக்கு காலையில், 70 - 80 லிட்டர், மாலையில், 55 - 70 லிட்டர் பால் இங்கிருந்து பெறப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தண்ணீர் கலப்படமின்றி சுத்தமாக, சுகாதாரமாக கொண்டு செல்லப்படும் சத்தான இந்த பாலை வாங்க, திருநெல்வேலியில் நிறைய பேர் காத்து இருக்கின்றனர். கடந்த, 2005ல் துவங்கிய இந்த பண்ணையில் இன்று, 50 மாடுகளுக்கு மேல் உள்ளது. சித்தாள், விறகு வெட்டுதல் போன்ற கடினமான வேலைக்கு போன பெண்களும், உடல் நலனை பாதிக்கும் பீடி சுற்றும் தொழிலை செய்த வந்த பெண்களும், இன்று அவற்றை விட்டு விட்டு கறவை மாடு வளர்த்து சந்தோஷமாக உள்ளனர். ஒரே ஊரே சேர்ந்த நாங்கள், ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து செல்கிறோம். குழுவில் யாராவது ஒருவர் சிறு தவறு செய்தால் கூட, அதை சிரித்துக் கொண்டே சொல்வேனே தவிர, ஒரு போதும் சினம் கொள்வதில்லை. இதனால், சண்டையின்றி, சந்தோஷமாக இருக்கிறோம்.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருதை பெற்ற பெண்

 

article_1422508208-SAM1711.JPG

 

வட மாகாண விவசாய அமைச்சால் நடத்தப்பட்ட உழவர் திருநாள் போட்டியில், வட மாகாணத்தில் சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருதை இராமன் சுதர்சினி என்ற பெண் பெற்றுக்கொண்டார். யுத்தத்தில் கணவனை இழந்த இவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் அம்பாள்புரத்தில் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி நடத்தி வருகின்றார்.

 

இவரது கோழிப்பண்ணையை நாளடைவில் விரிவாக்கிய இவர், தனது ஊரைச் சேர்ந்த 4 பெண்களுக்கு கோழிப் பண்ணையில் தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அவர்கள் நால்வருக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் மாதாந்த வேதனமாக வழங்கி வருகின்றார். கோழிகளின் கழிவுகளை விவசாயத்துக்கு பயன்படுத்தி சிறந்த முறையில் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கின்றார்.

 

இதனைக் கருத்திற்கொண்டு வட மாகாணத்தின் சிறந்த கோழிப் பண்ணையாளராக இவர் தெரிவு செய்யப்பட்டார். வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற உழவர் விழா நிகழ்வில் வைத்து, இவருக்கான விருதை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கினார்.

 

article_1422508222-SAM1697.JPG

 

article_1422508231-SAM1712.jpg

 

http://www.tamilmirror.lk/138704#sthash.cROG3jHm.dpuf

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பிசினசில் ஈடுபடுவது எளிதான விஷயம்!

 

Tamil_News_large_1191958.jpg

 

ஷாப்பிங் மீதான ஆர்வம், தன்னை அலங்கார நிபுணராக்கியது குறித்து கூறும் அஸ்வினி: நான் படித்தது பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ். 'டெகரேஷனு'க்காக, தனி படிப்பு இல்லை. சிறு வயதில் இருந்தே, நன்றாக படம் வரைவேன். அந்த அறிவு மற்றும் டிகிரியின் போது படித்த, 'போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர்' இதெல்லாம் தான், இந்த தொழிலுக்கு வரக் காரணம்.

 

பொதுவாக, பெண்கள் அனைவருக்குமே கடை கடையாக ஏறி ஷாப்பிங் செய்வது, எந்த கலர் புடவைக்கு, என்ன கலர் பிளவுஸ் மேட்ச் ஆகும்ங்கற விஷயமெல்லாம் அத்துபடி தான். அது தான், இந்த துறைக்கு தேவையான அடிப்படை தகுதி. அத்துடன் சேர்ந்து கொஞ்சம் வரைவது, வித்தியாசமாக டிசைன் செய்வது என, இதுமாதிரியான தகுதியும் கூட இருந்தால், இதில் வெற்றி தான்.
 
சில நேரங்களில் பூக்கட்டுவது, கார்பென்டர் வேலை பார்ப்பதுன்னும் சின்னச் சின்ன வேலைகளை செய்ய வேண்டி வரும். விழா நடக்கும் இடத்திற்கு சென்று, அந்த இடம் அல்லது ஹால் எவ்வளவு பெரியது என, முதலில் பார்ப்போம். பின், அந்த இடத்தை அளவெடுத்து, எந்த ஏரியாவுக்கு எப்படி அலங்கரிக்க வேண்டும் என, வரைபடம் போட்டுப்பேன்.அப்புறம், அலங்கரிக்க துணி, கிறிஸ்டல், பீட்ஸ், பூ, இப்படி டெகரேஷன் பொருட்களை வாங்கும் ஷாப்பிங் வேலை இதெல்லாம் முடித்து, சம்பந்தப்பட்ட, 'ஈவென்ட்'டோட, முதல் நாளே டெகரேட் செய்ய ஆரம்பிப்போம். சின்ன பர்த்டே பார்ட்டி, ஆபீஸ் மீட்டிங் மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு, 3 - 4 மணி நேரம் போதும். இதுவே, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு, அலங்காரம் செய்ய ஒரு நாள் கூட ஆகலாம்.
 
இப்போது உள்ளவர்களில் பாதி ஈவென்ட் மேனேஜர்கள், பெண்கள் தான். அவர்களுக்கு ஒரு ஈவென்ட் ஆர்டர் வந்தால், என் வேலை மேல் இருக்கும் நம்பிக்கையில், அலங்காரத்திற்காக என்னிடம் கொடுப்பர். இது, கிட்டத்தட்ட ஒரு பிசினஸ் என்பதால், நாம் எடுக்கும் புராஜெக்ட்டுக்கு ஏற்ப தான் வருமானம் இருக்கும். நம்முடைய அனுபவம், திறமையை பொறுத்து, ஒரே ஈவென்ட்டில், 30 - 40 ஆயிரம் ரூபாய் வரை கூட சம்பாதிக்க முடியும்.முதலில், சின்னச் சின்ன பிறந்த நாள் விழாக்களுக்கு அலங்காரம் செய்து பயிற்சி பெற்றால், பெரிய நிகழ்ச்சிகளுக்கு செய்யும் நம்பிக்கை உங்களுக்கே சீக்கிரம் வந்துவிடும்.
 
 
Link to comment
Share on other sites

  • 1 month later...

அமெரிக்காவில் நீதிபதியான தமிழ் பெண்

 

raja_rajeswari_2375986h.jpg

 

நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் ராஜ ராஜேஸ்வரி

 

அமெரிக்காவின் நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி (43) நியமிக்கப்பட்டுள்ளார். 

 
சென்னையில் பிறந்த இவர், தனது 16 வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார். நியூயார்க் நகர நீதிமன்ற நீதிபதியாக இந்திய பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. ராஜ ராஜேஸ்வரி இதற்கு முன்பு ரிச்மோண்ட் கவுண்டி மாவட்டத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்தார். அவரை நியூயார்க் நகர் மேயர் பில் டி பால்சியோ, நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்துள்ளார்.
 
இது தொடர்பாக ராஜராஜேஸ்வரி கூறியது: எனக்கு இப்பதவி அளிக்கப்பட்டுள்ளதை கனவு போன்று உணர்கிறேன். இது நான் கற்பனை செய்ததற்கும் மேலானது. எனெனில் நான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பெண். எனக்கு இங்கு உயரிய பதவி கிடைத்துள்ளது. எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு நீதித்துறையின் மேம்பாட்டுக்கு உதவுவேன் என்றார்.
 
தெற்காசியா மற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களின் குழந்தைகள் உரிமை, குடும்ப வன்முறை வழக்குகளை ராஜ ராஜேஸ்வரி திறமையாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தந்துள்ளார்.
 
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாசார நிகழ்வுகள் மற்றும் கோயில் விழாக்களில் பங்கேற்றுள்ள ராஜ ராஜேஸ்வரி தனது குழுவினருடன் பரத நாட்டியம் மற்றம் குச்சிப்புடி நடனங்களை அரங்கேற்றம் செய்துள்ளார். அவரது தாய் பத்மா ராமநாதனின் பெயரில் பத்மாலயா நாட்டிய அகாடமியை நடத்தி வருகிறார்.
 
இப்போது இந்திய வம்சவாளியைச் சேர்ந்த இரு ஆண்கள் அமெரிக்காவில் நீதிபதிகளாக உள்ளனர்.
 
Link to comment
Share on other sites

  • 1 month later...

மதுபானக் கடை இல்லாத அதிசயம்: மழைநீர் சேகரிப்பில் முன்மாதிரி கிராமம் - 20 ஆண்டுகளாக சாதித்து வரும் ஊராட்சித் தலைவி

 

sesu_mary_2417977f.jpg

 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மைக்கேல்பட்டினம் ஊராட்சியில் மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து, டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளார் அக்கிராமத்தின் ஊராட்சித் தலைவி சேசு மேரி. இவர் தனது கிராமத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பல்வேறு சமூகநலத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறார்.
 
1996-ம் ஆண்டு ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சேசுமேரி, பியுசி வரை படித்துள்ளார். கிராம வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க அன்று தொடங்கிய சேசுமேரியின் பணி இன்று வரை தொடர்கிறது.
 
பொதுநலப் பணிகளில் தனது தந்தை காட்டிய ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட சேசுமேரி, 1984-ல் முதியோர் கல்வித் திட்டத்தில் வகுப்புகளை நடத்தி பலருக்கு கல்வி அளித்ததால் நன்கு அறிமுக மானார்.
 
பின்னர், ஊராட்சித் தலைவரான வுடன் முதற்கட்டமாக தனது கிராமத்தின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் கள மிறங்கினார். மக்கள் பங்களிப்புடன் வீடுகளிலிருந்து பிவிசி பைப் மூலம் மழைநீரை சேகரித்து, சுத்தப் படுத்தி கிராம ஊரணியில் தேக்கி னார். இதனால், இப்பகுதியில் ஓரளவு மழை பெய்தாலும் ஊரணி யில் மழைநீர் தேங்கி குறைந்த பட்சம் 2,000 குடம் நீர் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
 
இவரது முயற்சியால் கிராமத்தில் 100 சதவீத மழைநீர் சேகரிப்புத் திட்டம்,100 சதவீத தனி நபர் கழிப்பறை வசதி, சிறுசேமிப்பு, தெரு சுத்தம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
தவிர, காட்டாமணக்கு வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், மக்கும் - மக்கா குப்பை தயாரித்தல், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்றவற்றையும் செம்மையாக நடைமுறைப்படுத்தியுள்ளார்.
 
இந்தப் பணிகளுக்கிடையே மைக்கேல்பட்டினத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றிய சேசுமேரியின் பணி குறிப்பிடத்தக்கது. ஊராட்சி யில் உள்ள அனைத்து மகளிரையும் திரட்டி கிராமக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றி ஊராட்சியில் இயங்கி வந்த மதுபானக் கடைகளை அப்புறப்படுத்தியுள்ளார்.
 
சுகாதாரமான குடிநீர் வழங்குவது குறித்து கிராமாலயா சார்பில் அண்மையில் நடைபெற்ற 3 நாள் கருத்தரங்கில் பங்கேற்க திருச் சிக்கு வந்திருந்த சேசுமேரி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
 
எங்கள் கிராம மக்கள் குடிநீருக் காக அருகில் உள்ள ஊராட்சிகளுக் குச் சென்றுவரும் நிலையை மாற்ற முடிவெடுத்து, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை கிராம மக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றினேன். இந்தத் திட்டம் எங்கள் ஊராட்சியை உலக வங்கி மூலம் உலகுக்கு அடையாளம் காட்டியது.
 
இதேபோன்று முழு சுகாதாரத் திட்டத்தின்கீழ் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறை அமைத்துக் கொடுத்துள்ளேன். டாஸ்மாக் கடைகளை அப்புறப் படுத்தியதில் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்புற பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. நான் வாங்கிய விருதுகளுக்கும், அமெ ரிக்கா வரை எங்கள் கிராமம் அறி முகம் ஆனதற்கும் எங்கள் ஊராட்சி மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்” என்றார் தன்னடக்கத்துடன்.
 
http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/article7247141.ece?homepage=true&relartwiz=true
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மொட்டையம்மாள் சைக்கிள் கடை!

 

cycle_2446534g.jpg

 

cycle_2_2446535g.jpg

 

வீட்டில் நிம்மதியாக உட்கார்ந்து ஓய்வெடுக்க வேண்டிய வயதில் சைக்கிள் கடை நடத்திவருகிறார் 85 வயது மொட்டையம்மாள். திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இவர், தள்ளாத வயதிலும் தளராத நிர்வாகத்தால் தலைநிமிர்ந்து நிற்கிறார்.

உடல் தளர்ந்துபோனாலும் உள்ளத்தில் உறுதி இருந்தால் எந்த வயதிலும் எந்த வேலையையும் திறம்படச் செய்ய முடியும் என்பதை மொட்டையம்மாள் நிரூபித்துவருகிறார். தடி ஊன்றி நடந்தாலும், அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல் சுயமாகச் சம்பாதித்துத் தன் சொந்தக் காலில் வைராக்கியத்துடன் வாழ்கிறார். வேலை வேலை எனத் தேடி வெறுப்படைந்து மூலையில் உட்காரும் இளைஞர்கள், மொட்டையம்மாள் பாட்டியிடம் வாழ்க்கைப் பாடம் படிக்கலாம்.

மொட்டையம்மாளுக்குப் பெற்றோர் வைத்த பெயர் வேலம்மாள். ஆனால் மொட்டையம்மாள் என்றால்தான் ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிகிறது. பொழுது புலர்ந்ததும் காகம் கரைகிறதோ இல்லையோ, மொட்டையம்மாள் கண்விழித்துவிடுகிறார். சுறுசுறுப்பாகச் சைக்கிள் கடையைத் திறந்து உட்கார்கிறார். கால் வண்டி, அரை வண்டி, முக்கால் வண்டி, முழு வண்டி சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார். கூலிக்கு ஆள் வைத்து சைக்கிள்களைப் பழுது பார்க்கிறார். பஞ்சர் பார்க்கிறார். இதன் மூலம் கிடைத்த வருவாயில் இந்தக் காலத்துக் குழந்தைகளை மகிழ்விப்பதற்காகக் குட்டி சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்கிறார். பேரக்குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.

எதிர்பாராத திருப்பம்

“எனக்கு 17 வயசுல கல்யாணம் நடந்தது. கல்யாணமாகி 35 வருஷமா குழந்தையில்லை. நாங்க வேண்டாத தெய்வமில்லை. எங்க மனக்குறை ஒரு பக்கம்னா கேள்வி கேட்குறவங்களுக்குப் பதில் சொல்லி மாளாது. கடைசில என் மனக்குமுறலைத் தீர்த்துவைக்கிற மாதிரி என் மகன் பிறந்தான்” என்று கடந்த காலத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். மொட்டையம்மாளின் மகனுக்கு 15 வயதாகும்போது அவருடைய கணவன் இறந்துவிட, நட்டாற்றில் நிற்பதுபோலத் தவித்திருக்கிறார். வருமானம் இல்லாத நிலையில் மகனை வளர்த்து ஆளாக்கத் தனியாளாகப் போராடியிருக்கிறார்.

கரை சேர்த்த கடை

என்ன செய்வது என்று தலையில் கைவத்து அழுவதைவிட எதைச் செய்தால் வண்டியோடும் என்று மொட்டையம்மாள் யோசித்தார். நேர்மையாகச் செய்யும் எந்தத் தொழிலும் தாழ்ந்ததில்லை என்று நினைத்த அவர், ஆரம்பத்தில் விறகுக் கடை வைத்து நடத்தினார். சமையல் எரிவாயு வந்த பிறகு, விறகுக் கடையில் வியாபாரம் முடங்கியது. அப்போதும் மொட்டையம்மாள் சோர்ந்துபோகவில்லை. வைக்கோல் கடை வைத்து நடத்தினார். அதில் வந்த வருமானம் கைக்கும் வாய்க்குமே சரியாக இருந்தது.

“என் குடும்ப நிலையைப் பார்த்துட்டு சொந்தக்காரர் ஒருத்தர் அவர் நடத்துன சைக்கிள் கடையை என்கிட்டே கொடுத்தார். அப்போ கடையில நாலு சைக்கிள் மட்டும் இருந்துச்சு. அதை வாடகைக்கு விட்டு, வந்த வருமானத்துல குடும்பம் ஓரளவு கஷ்டமில்லாம நகர்ந்துச்சு. சாப்பாட்டுக்குப் போக மிச்சமான பணத்துல சின்ன சைக்கிளை வாங்கி வாடகைக்கு விட்டேன். கொஞ்ச நாள்ல பஞ்சர் ஒட்டவும் கத்துக்கிட்டேன். சைக்கிள் ரிப்பேர் பார்ப்பேன்” என்கிறார் மொட்டையம்மாள்.

தற்போது மூப்பின் காரணமாக இவரால் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அதனால் ஆள் வைத்து சைக்கிள் ரிப்பேர் பார்க்கிறார்.

இவரது சைக்கிள் கடைக்குப் பக்கத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் தண்டபானி, “நாமளே கடை திறக்கக் காலையில லேட்டா வருவோம். ஆனா இந்தம்மா காலைல ஆறு மணிக்கெல்லாம் கடை திறந்துடுவாங்க. ராத்திரி ஒன்பது மணிக்குத்தான் கடையை அடைப்பாங்க. வரவு, செலவுல கறாரா இருப்பாங்க. ஒரு பைசாகூட விட்டுக் கொடுக்க மாட்டாங்க. ஆனா கஷ்டம்னு யாராவது வந்துட்டா உதவி செய்வாங்க. இந்த வயசுலயும் பாட்டிக்கு நல்ல ஞாபகச் சக்தி, கண் பார்வை தெளிவாக இருக்கு” என்று மொட்டையம்மாள் பாட்டியின் புகழ் பாடுகிறார்.

நினைவுச் சின்னம்

ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் அவரை பஞ்சம், துவரை பஞ்சம் ஏற்பட்டபோதும் மொட்டையம்மாளின் குடும்பம் வசதியாக இருந்திருக்கிறது. ஆனால் இடையில் எதிர்பாராதவிதமாக வறுமைக்கு ஆட்பட்டபோது இந்த சைக்கிள் கடைதான் மொட்டையம்மாளுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. அந்த நினைவால்தான் இன்றும் இந்தக் கடையை விடாமல் நடத்தி வருகிறார்.

“வீட்ல சும்மா இருக்கப் பிடிக்கலை. அதுவும் இல்லாம கையில நாலு காசு சம்பாதிக்க இந்த வயசுல வேறு பொழப்பும் தெரியலை. அதான் பழக்கப்பட்ட இந்தச் சைக்கிள் கடையை நடத்துறேன். முன்னால, ஒரு நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம்னு வருமானம் வரும். அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சு. இன்னைக்கு, கூலி ஆளுக்குப் போக ஒரு நாளைக்கு 300 ரூபாய் கையில நிக்கறதே பெருசு. சில நாள் ஒண்ணுமே கிடைக்காது. அந்தக் காலத்துல பழநிக்கு சைக்கிள்லதான் யாத்திரை வருவாங்க. அப்பல்லாம் நிறைய பேர் பஞ்சர் ஒட்ட, ரிப்பேர் பார்க்க வருவாங்க.

நிறைய காசு கிடைக்கும். இன்னைக்கு யாரு சைக்கிள்ல வர்றாங்க? கார், பஸ்ஸுல வந்துட்டு போறாங்க. முன்னாடிலாம் ஒரு சைக்கிள்கூட கடையில சும்மா நிக்காது. இன்னைக்கு, வாடகைக்குப் போவாம சும்மாவே எல்லா சைக்கிளும் நிக்குது. வருமானமே இல்லை” என்று தற்போது தான் சந்திக்கும் சவால்களை அடுக்குகிறார் மொட்டையம்மாள். இருந்தாலும் இந்தக் கடையைத் தன் அடையாளமாகவே கருதுகிறார்.

“நானும் தினமும் ஆபீஸ் போறா மாதிரி வெள்ளென கிளம்பிடுவேன். சில நேரம் மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போவேன். முடியலைன்னா கையில சாப்பாட்டை எடுத்துக்கிட்டு வந்துடுவேன். சொல்லிக்கிற மாதிரி வருமானம் இல்லாட்டியும் கடை நடத்துறது சந்தோசமா இருக்கு. இந்தக் கடை மூலமா பெரிய அளவுல வருமானம் இல்லைன்னாலும், என் நிம்மதிக்காக என் மகன் ஒண்ணும் சொல்ல மாட்டான். எனக்கு ஒரே ஒரு ஆசைதான். ஆயுசு முழுக்க இந்த சைக்கிள் கடை நடத்தணும்” என்று சொல்கிறார் மொட்டையம்மாள்.

 

http://tamil.thehindu.com/society/women/மொட்டையம்மாள்-சைக்கிள்-கடை/article7337394.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீங்கதான் முதலாளியம்மா!: ஷியாமளா

Night Dress

இரவில் மட்டுமே அணிகிற நைட்டி, இப்போது 24 மணி நேரமும் அணிகிற உடையாகிவிட்டது. வீட்டில் இருக்கிற போது அணியக்கூடிய வசதியான உடை அது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், அது எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பதில்லை. பேன்ட், சட்டை மாடலில் அணிகிற நைட் டிரெஸ்ஸும் பலரின் விருப்பமான உடையாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என எல்லோருக்கும் ஏற்றபடி இந்த மாடல் நைட் டிரெஸ் கிடைக்கிறது.

விதம் விதமான நைட் டிரெஸ் தைப்பதில் நிபுணியாக இருக்கிறார் சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த ஷியாமளா. பிளஸ் டூ படிச்சிருக்கேன். சின்ன வயசுலேருந்து தைக்கிறேன். வீட்லருந்தே பிளவுஸ், சுடிதார் எல்லாம் தச்சுக் கொடுத்திட்டிருக்கேன். ஒரு கஸ்டமர் நைட்டி தைப்பீங்களானு கேட்டாங்க. தச்சுக் கொடுத்தேன். அது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போனதால, தொடர்ந்து ஆர்டர் கொடுத்தாங்க. 

அப்புறம் ஒருநாள் பேன்ட் ஷர்ட் மாடல்ல நைட் டிரெஸ் வேணும்னு கேட்டாங்க. அதுவும் தச்சுக் கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு மத்தவங்களும் கேட்டாங்க. கடைகள்ல ரெடிமேடா கிடைக்கிற நைட் டிரெஸ் பெரும்பாலும் அளவு சரியா இருக்கிறதில்லை.  மட்டமான துணியில தச்சிருப்பாங்க. ஒரு முறை தண்ணியில போட்டதும் சுருங்கிடும். சாயம் போயிடும். தையல் விட்டுடும். பெண்களுக்கு அவங்க உடல்வாகுக்கு ஏத்தபடி சரியான அளவுல நைட் டிரெஸ் கிடைக்கிறதே இல்லை. 

அப்படி எந்தக் குறைகளும் இல்லாம நான் தச்சுக் கொடுக்கறேன். காலர் வச்ச மாடல், காலர் இல்லாதது, லேஸ் வச்சது, முக்கால் பேன்ட் மாடல்னு நிறைய இருக்கு. எல், எக்ஸ்எல், டபுள் எக்ஸ் எல் அளவுகளும் தைக்கிறேன். எலாஸ்டிக் இல்லாம கயிறு வச்சுத் தச்சுக் கொடுக்கறதால ரொம்ப நாள் வரும்’’ என்கிற ஷியாமளா, வெறும் 1,000 ரூபாய் முதலீட்டில் நைட் டிரெஸ் தைக்கிற பிசினஸில் இறங்க தைரியம் தருகிறார்.

மூணேகால் மீட்டர் துணியில ஒரு செட் தைக்கலாம். சாதாரண துணியா இருந்தா 250 ரூபாய்க்கு விற்கலாம். துணியோட தரத்தைப் பொறுத்து விலையும் வித்தியாசப்படும். வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு உட்கார்ந்தாலும் ஒருநாளைக்கு 2 செட் தைக்கலாம். வருஷம் முழுக்க ஆர்டர் இருக்கும்’’ என்கிறவரிடம் 2 நாள் பயிற்சியில் 3 மாடல் நைட் டிரெஸ் தைக்கக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 750 ரூபாய்.

http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=3497

வாவ்... வீட்டுச் சாப்பாடு!

Wow ... home food!

தெருவுக்கு நான்கு ஓட்டல்கள்இருக்கின்றன. ஓட்டல் சாப்பாடு பிடிக்காதவர்களுக்கு வீட்டுச் சாப்பாடு என்கிற பெயரில் கேட்டரிங் செய்து கொடுக்கும் ஆட்களுக்கும் இன்று பஞ்சமே இல்லை. ஆனாலும், அவற்றின் ருசியும் தரமும் கேள்விக்குரியவையே. குறிப்பாக வயதானவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிற மாதிரியான உணவுகள் பெரும்பாலும் எங்கேயும் கிடைப்பதில்லை. இன்னும் சிலருக்கு வெங்காயம், பூண்டு, சோம்பு உள்ளிட்ட மசாலா இல்லாத உணவுகள் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். அதிக காரம் வேண்டாம், மசாலா வேண்டாம், வெங்காயம், பூண்டு வேண்டாம் எனக் கேட்கிறவர்களுக்கு அப்படிப்பட்ட உணவுகள் கிடைப்பது சிரமம்தான். 

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த மதுமதி செய்கிற கேட்டரிங்கில், மேலே சொன்ன அத்தனை எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகின்றன.‘‘பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு எனக்கு என் கணவரும், குழந்தைங்களும்தான் உலகம். வெளி உலகம் தெரியாது. வேலைக்குப் போற அளவுக்கு படிப்போ, அனுபவமோ இல்லை. தெரிஞ்சதெல்லாம் சமையல் மட்டும்தான். கஷ்டப்பட்டுக் குடும்பத்தைப் பார்க்கிற கணவருக்கு என்னால முடிஞ்ச ஏதாவது உதவியைச் செய்யணும்னு ரொம்ப நாளா ஆசை. என்ன பண்றதுனு தெரியாம, எனக்கு நெருக்கமானவங்கக்கிட்டல்லாம் சொல்லிப் புலம்பிட்டிருந்தேன். அப்பதான் என் ஃப்ரெண்ட்ஸ் சிலர், ‘இவ்ளோ நல்லா சமைக்கிறியே... அதையே ஏன் ஒரு பிசினஸா பண்ணக் கூடாது’னு கேட்டாங்க. 

நான் குடியிருக்கிற ஏரியாவுல பாரம்பரியமான வீட்டுச் சாப்பாட்டுக்கான தேவை அதிகம்னும், அதை சப்ளை பண்ண சரியான ஆட்கள் இல்லாததையும் சொன்னாங்க. முதல்ல ரொம்ப சின்ன அளவுல வீட்ல சமைக்கிற மாதிரிதான் ஆரம்பிச்சேன். அக்கம்பக்கத்து வீடுகளுக்குக் கொஞ்சமா கொடுத்துப் பார்த்தேன். ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தவங்களுக்கு என் சமையல் ரொம்ப வித்தியாசமா இருந்தது. மசாலா இல்லாம வேணும்னு கேட்ட பெரியவங்களுக்கும் ரொம்பப் பிடிச்சது. ‘தினம் பண்ணித் தர முடியுமா’னு ஆர்டர் கொடுத்தாங்க. வீட்ல சாதம் மட்டும் வச்சுக்கிட்டு சாம்பார், வத்தக்குழம்பு அல்லது மோர் குழம்பு அல்லது பொரிச்ச குழம்பு, ரசம், பொரியல், கூட்டு வேணும்னு கேட்கறவங்களுக்கு அதை மட்டும் 60 ரூபாய்க்கு கொடுக்கறேன். 

சாதமும் வேணும்னு கேட்கிறவங்களுக்கு எல்லாம் சேர்த்து 80 ரூபாய்... திருப்தியா சாப்பிட்டோம்னு மத்தவங்க வாழ்த்தறப்ப, எனக்கும் நிறைவா இருக்கு...’’ என்கிற மதுமதி, நன்றாக சமைக்கத் தெரிந்த யாரையும் இந்தத் துறையில் சம்பாதிக்க அழைக்கிறார். ‘‘பெரிய முதலீடு தேவையில்லை. வீட்ல சமைக்கிறதை வச்சே ஆரம்பிக்கலாம். கொஞ்சம் கொஞ்சமா அளவை அதிகப்படுத்திக்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்’’ என்கிற மதுமதியிடம், பாரம்பரிய உணவுகளின் செய்முறையோடு, கேட்டரிங் ஆரம்பிக்கிற நுணுக்கங்களையும் சேர்த்துக் கற்றுக் கொள்ள ஒரு நாள் பயிற்சிக்குக் கட்டணம் 300 ரூபாய். (94980 30141)

http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=3036&Cat=501

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வானவில் பெண்கள்: இது பெண்கள் ஏரியா!

ladies1_2470411f.jpg
 

நான்கு பெண்கள் ஒரே இடத்தில் இருந்தால் அங்கே பிரச்சினைகளுக்குப் பஞ்சமிருக்காது என்ற பிற்போக்கு சிந்தனையை உடைத்தெறிந்திருக்கிறார்கள் ஓசூர் ஏ.எஸ்.டி.சி ஹட்கோ பகுதியைச் சேர்ந்த பெண்கள். மகளிர் தெரு என்று பெயர் சூட்டும் அளவுக்கு ஒரு தெரு முழுக்கப் பெண்களால் நடத்தப்படும் கடைகள் நிறைந்திருக்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கடை வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் சபரிலெட்சுமி, ஜூனியர். மகனின் கல்லூரி படிப்புக்காக ஓசூரில் குடியேறியவருக்கு, குழந்தைகள் வெளியே கிளம்பியதும் வீட்டில் தனியாக உட்கார்ந்துகொண்டிருக்க விருப்பமில்லை. பக்கத்தில் பள்ளிகள் இருப்பதால் ஸ்டேஷனரி கடை திறக்கலாம் என்று நினைத்தார். ஆனால் கடைத்தெருவில் தனியாகக் கடை வைத்துச் சமாளிக்க முடியுமா என்ற அவரது தயக்கத்தைப் போக்கினார்கள் தெரு முழுக்கக் கடை வைத்திருக்கும் பெண்கள்.

“என் கணவர் வட இந்தியாவுல வேலை பார்க்கிறார். நாமும் ஏதாவது வேலை செஞ்சா வீட்டோட பொருளாதாரத் தேவைக்கு உதவியா இருக்குமேன்னு நினைச்சேன். ஸ்டேஷனரி கடை வைக்கலாம்னு முடிவு பண்ணி, கடைத் தெருவைப் பார்த்தப்போதான் தெரு முழுக்கப் பெண்கள் நடத்துற கடைகளா இருக்கறது எனக்குத் தெரிஞ்சது. அந்தத் தைரியத்துல நானும் கடை வைத்தேன். காலையில ஏழு மணிக்குக் கடையைத் திறந்துடுவேன். ஒன்பது மணிவரைக்கும் ஸ்கூல் குழந்தைகளோட கூட்டம் இருக்கும். அதுக்கு அப்புறம் டைப் ரைட்டிங் ஜாப் வொர்க் பண்ணுவேன்” என்கிறார் சபரிலெட்சுமி.

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் அன்றுதான் குழந்தைகளின் வரவு அதிகமாக இருக்கும். அதனால் தன் கடைக்குச் செவ்வாய்க்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்துவிட்டார் சபரிலெட்சுமி.

நிற்காமல் ஓடும் வண்டி

அதே தெருவில் அரிசி மாவு அரைத்துத் தரும் கடை நடத்துகிறார் ஞானசௌந்தரி. காலை முதல் இரவுவரை நிற்க நேரமில்லாமல் வேலை செய்கிறார்.

“என் வீட்டுக்காரர் கம்பெனி வேலைக்குப் போறாரு. பிரசவத் தேதிக்கு ரொம்ப முன்னாடியே என் மகன் பொறந்துட்டான். அவனைத் தனியா விட்டுட்டு வெளியே எங்கேயும் போக முடியாது. அதனால கடை ஏதாவது போட்டா வீட்டையும் கடையையும் சேர்த்துக் கவனிச்சுக்கலாம்னு ஏழு வருஷத்துக்கு முன்னாடி இதை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல சாயந்திரம் மட்டும் இட்லி மாவு அரைச்சு தருவேன். கொஞ்ச நாள்ல கோதுமை, மிளகாய், தனியா எல்லாம் அரைக்க மிஷின் போட்டேன். எனக்கு மாவரைச்சு பழக்கமில்லை. கொஞ்சம் கொஞ்சமா நானே கத்துக்கிட்டேன். இப்போ எல்லா வேலையும் எனக்கு அத்துப்படி” என்கிறார் ஞானசௌந்தரி.

சமையல் ராணிகள்

தேர்ந்த மாஸ்டர் போல தமிழ்ச்செல்வி பரோட்டா தட்ட, ஓடியாடி சப்ளை செய்கிறார் உமாமகேஸ்வரி. இருவரும் ஓட்டல் தொழிலில் கலக்கும் சகோதரிகள்.

“என் அக்காவும் நானும் அண்ணன், தம்பியைக் கல்யாணம் செய்திருக்கோம். என் வீட்டுக்காரர் டீக்கடை நடத்திட்டு இருந்தாரு. அதுல வந்த வருமானம் வீட்டுச் செலவுக்குப் போதலை. அதனால ஓட்டல் தொடங்கினோம். நானும் என் அக்காவும் மாஸ்டர் வேலையில இருந்து கிளீனிங் வரைக்கும் எல்லா வேலையும் செய்வோம். காலையில குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டுக் கடைக்கு வந்தோம்னா ராத்திரி பத்தரை மணிவரைக்கும் வேலை இருக்கும். வேலை செய்யக் கஷ்டப்பட்டா வாழ்க்கையில முன்னேற முடியுமா?” என்று கேட்கிறார் உமாமகேஸ்வரி.

பன்னிரெண்டு ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்திவருகிறார் புனிதா. பட்டப்படிப்பு முடித்திருக்கும் இவர், கடையைத் தனி ஆளாக நிர்வகிக்கிறார்.

“காலையில ஆறரை மணிக் கெல்லாம் கடையைத் தொறந் துடுவேன். என் வீட்டுக்காரர் பலசரக்கு வாங்கிட்டு வந்து தந்துடுவார். முதல்ல என்னால சமாளிக்க முடியுமான்னு பயமா இருந்துச்சு. இப்போ எல்லாமே பழகிடுச்சு” என்கிறார். கடையில் எவ்வளவு கூட்டம் சேர்ந்தாலும் அசராமல் சமாளிக்கிறார் புனிதா.

தனிமையே பலம்

இருபது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்திரி கடை நடத்தும் லட்சுமி அம்மாள், உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகிறார். அதிகாலையில் துணிகளை அயர்ன் செய்யத் தொடங்கும் இவரது கரங்கள், இரவுவரை ஓயாமல் வேலை செய்யும். யாருடனும் அவ்வளவாக ஒட்டாமல் தாமரை இலை தண்ணீராக இருக்கிறார் லட்சுமி அம்மாள். தன்னையும் குழந்தைகளையும் புறக்கணித்துவிட்டுச் சென்ற கணவனை நினைத்து வருந்தாமல், சொந்தக்காலில் நின்று குழந்தைகளை ஆளாக்கிய வலிமையை இந்தக் கடைதான் அவருக்குத் தந்தது. திருமணம் முடித்த தன் மூத்த மகள், மூன்று குழந்தைகளுக்குத் தாயான பிறகு இறந்துவிட, அப்போதும் உறுதியுடன் நின்றார். லட்சுமி அம்மாளுக்கு அடுத்தவர் என்ன சொல்வார்களோ என்ற நினைப்பு துளிக்கூட இல்லை. அதுவே அவரைத் தனியாளாக நின்று அனைத்தையும் சமாளிக்கவைக்கிறது.

கீரை விற்கும் கந்தம்மாளுக்குப் பூர்வீகம் கர்நாடகா. இருந்தாலும் தமிழைத் தடங்கலின்றிப் பேசுகிறார்.

“நான் இருபத்து மூணு வருஷமா காய்கறி கடை நடத்துறேன். எனக்குத் தமிழ் எழுத, படிக்கத் தெரியாது. பேச மட்டும்தான் தெரியும். இந்தக் கடை தந்த வருமானத்துலதான் என் பொண்ணுங்க காலேஜ் படிக்கறாங்க” என்று புன்னகையுடன் சொல்கிறார்.

ஊரு விட்டு ஊரு வந்து ஏழு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் குடிசாகனபள்ளி கிராமத்தில் இருந்து இங்கே வந்து தையல் கடை நடத்துகிறார் நாகவேணி. கணவரின் வருமானம் மட்டுமே குடும்பம் நடத்தப் போதாது என்பதால் இந்த முடிவு என்கிறார். இவரது தையல் கடையில் நான்கு பெண்கள் வேலை செய்கின்றனர்.

“கிராமத்துல தையல் கடை போட்டா ஓடாது. அதனாலதான் இங்கே கடை போட்டிருக்கேன். ராத்திரி வீடு திரும்ப ஒன்பதரை ஆகிடும். தனி ஆளா அங்கே இருந்து கிளம்பிவந்து, வேலையை முடிச்சுட்டு கிளம்பறது அலைச்சலாதான் இருக்கு. என்ன பண்றது? வண்டி ஓடணுமே” என்று சொல்லும் நாகவேணியின் கடையைத் தேடி வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

ஒற்றுமையே பலம்

பால் கடை நடத்தும் லதா, அதிகாலை நான்கு மணிக்கே கடையைத் திறந்துவிடுகிறார். பால் வாங்க வரும் கூட்டத்தை ஒரு பக்கம் சமாளித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்புகிறார்.

“நான் ஆரம்பத்துல மில்லுல வேலைக்குப் போனேன். அதுக்கப்புறம் சொந்தமா ஏதாவது தொழில் செய்யலாம்னு இந்தப் பால் கடையைத் திறந்தோம். மதியத்துக்கு மேல வீட்டுக்குப் போனா அங்கேயும் வந்து பால் வாங்கிட்டுப் போவாங்க. எந்நேரமும் வேலையும் வியாபாரமும் சரியா இருக்கும்” என்கிறார் லதா.

மொபைல் ரீசார்ஜ் கடையைக் கவனித்துக்கொள்கிறார் கோமதி.

“என் வீட்டுக்காரர் கம்பெனி வேலை, வெளி வேலைகளைக் கவனிச்சுக்குவாரு. நான் ரீசார்ஜ் பண்ற வேலையைப் பார்ப்பேன். கஸ்டமருங்க வராத நேரத்துல துணி தைப்பேன்” என்கிறார் கோமதி.

தெரு முழுக்கப் பெண்களின் கடைகளாக நிறைந்திருந்தும் இதுவரை ஒரு கருத்து வேறுபாடுகூட வந்ததில்லை என்கிறார் சபரிலெட்சுமி.

“நாங்க எல்லாரும் கடைக்கு வந்துட்டா வேலை சரியா இருக்கும். ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு நேரத்துல கஸ்டமர்ஸ் அதிகமா வருவாங்க. நேரம் கிடைக்கறப்போ ஒருத்தரோட ஒருத்தர் பேசிப்போம், சந்தோஷத்தைப் பகிர்ந்துப்போம். இத்தனை பொண்ணுங்க சேர்ந்து ஒரே தெருவுல கடை நடத்துறது பெருமையா இருக்கு” என்று சபரிலெட்சுமி சொல்கிறார். அதை ஆமோதிப்பது போல மற்ற பெண்கள் கட்டைவிரலை உயர்த்துகிறார்கள்.

http://tamil.thehindu.com/society/women/வானவில்-பெண்கள்-இது-பெண்கள்-ஏரியா/article7411801.ece?homepage=true

Link to comment
Share on other sites

பிளாஸ்டிக் இல்லாதநாப்கின் தயாரிக்கிறோம்!

 

Tamil_News_large_1297584.jpg

நாப்கின் தொழிலில், சீன நிறுவனங்களுடன் மோதி ஜெயித்த வள்ளி: திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவள் நான். என் கணவர், கூலித் தொழிலாளி. அக்கம் பக்கத்து வீடுகளுக்கு துணி தைத்து கொடுத்து வந்தேன்; வருமானம் போதவில்லை.வேறு ஏதாவது தொழில் செய்ய யோசனை செய்த போதுதான், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மகளிரியல் துறைத் தலைவர், மணிமேகலை, தனியார் கல்லுாரி ஒன்றில், நாப்கின் தயாரிக்கும் பயிற்சி கொடுத்தார். 

ஐந்து நாட்கள் நடந்த பயிற்சியில், கையாலேயே நாப்கின் செய்வது எப்படி என, கற்றுக் கொண்டேன்.'மிகப்பெரிய கம்பெனி தயாரிக்கும் நாப்கின்களில், பிளாஸ்டிக் இருப்பதால் சூடாகி, பெண்களுக்கு பிறப்புறுப்பில் காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மிக முக்கியமாக கர்ப்பப் பை புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்படும் ஆபத்துகள் வரும்' என, எங்களுக்கு பயிற்சி கொடுக்க வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்தனர். 

அதனால் தான் நாங்கள், பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, நாப்கின்களில் பிளாஸ்டிக் இல்லாமல் தயாரிக்கிறோம். 
முசிறி வங்கியில், 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கித் தான் நாப்கின் தொழிலை துவங்கினேன். முதலில் பெரிய நிறுவனங்களான சீன நாப்கின்கள் தான் பெண்களுக்குப் பிடிக்கும் என கூறினர். நான் கட்டாயப்படுத்தி, கையால் செய்த நாப்கின்களை இலவசமாக உபயோகிக்க கொடுத்தேன். 
அதுமட்டுமின்றி, முசிறியிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு நாப்கின்களை சாம்பிளுக்கு பயன்படுத்தக் கொடுத்தேன். பிடித்துப் போகவே, தலைமையாசிரியை அனுமதியுடன் தொடர்ந்து கொடுக்கவும் ஆரம்பித்தேன்.

பெண்கள் மத்தியிலும், போகப் போக ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. ஆர்டர்கள் வர ஆரம்பித்ததும், வீட்டிலேயே மிஷின்களை வைத்து, பெரிய அளவில் தயாரிக்க முடிவெடுத்தேன். இதற்காக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஒரு மாதம் பயிற்சியை, இலவசமாக கற்றுக் கொண்டேன். 
தொழிலை விரிவாக்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம், 2.02 லட்சம் ரூபாய் லோன் வாங்கினேன். இப்போது மிஷின்கள் இருப்பதால், ஒரு நாளைக்கு, 1,000 பீசுக்கு மேல் உற்பத்தி செய்து, மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது.
'ஸ்ரீ சிந்து சானிட்டரி நாப்கின்' என்ற பெயரில், எட்டு பீஸ் வைத்து, 26 ரூபாய்க்கு விற்கிறேன். ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்களைப் போல, தமிழக அரசு, எங்கள் நாப்கின்களை பெண்
களுக்கு கொடுக்க முன்வர வேண்டும்.தொடர்புக்கு: 99431-68244.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அயராது உழைத்தால்தொழில் முனைவோர்ஆவது நிச்சயம்!

Tamil_News_large_1307640.jpg

ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்து, தங்களது வாழ்வை ருசியாக்கிக் கொண்ட லட்சுமி: மதுரை மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவள் நான். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்ததும், திருமணம் செய்து வைத்தனர்.எங்கள் வீட்டு பக்கத்தில் வங்கியில் வேலை பார்க்கும் வேறு மாநிலத்துக்காரர்கள், 'மாசா மாசம் காசு கொடுக்கிறோம்; மதிய சாப்பாடு மட்டும் செய்து கொடுக்கிறீங்களா?'ன்னு கேட்டனர். 

சும்மா இருக்கும் நேரத்தில், சாப்பாடு செய்து கொடுத்து வருமானம் ஈட்டலாம் என, முடிவு செய்தேன். 
வங்கி அதிகாரிகளுக்கு தினமும் மதிய சாப்பாட்டுடன், நானே செய்த ஊறுகாயையும் வைத்து அனுப்பினேன். ஊறுகாய் எல்லாருக்கும் பிடித்து போய், நன்றாக உள்ளதாக பாராட்டினர். அதில், கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், 'எனக்கு ஊறுகாய் செய்து கொடு; ஊருக்குக் கொடுத்தனுப்பப் போறேன்'னு கூறினார்.அவர்களுக்காக, முதன் முதலாக, 50 ரூபாய் முதலீடு போட்டு, 75 ரூபாய்க்கு எலுமிச்சை ஊறுகாய் செய்து கொடுத்தேன். அதைப் பார்த்து மற்ற அதிகாரிகளும் கேட்க, ஊறுகாய் தொழிலுக்கு, 'டிமாண்ட்' உள்ளதை புரிந்து, அதை தயாரிக்க முடிவு செய்தேன். 

கடந்த, 1996ல், இத்தொழிலில் இறங்கிய 
நான், 2005 வரை, பல வகையான ஊறுகாய்களை கையாலேயே செய்து கொடுத்து வந்தேன். பாகற்காய், நார்த்தங்காய், இஞ்சி, நெல்லிக்காய், வெஜிடபிள் மிக்ஸ், பிரண்டை, கறிவேப்பிலை, புதினா, வடுமாங்காய் என, 35 வகையான ஊறுகாய் செய்து வருகிறேன்.
கஸ்டமர் அதிகரிக்க அதிகரிக்க, கனரா வங்கியில், 20 லட்சம் ரூபாய் லோன் வாங்கி, பூண்டு, வெங்காய தோல் எடுக்க, தக்காளி சாஸ் எடுக்க என, பல மிஷின்களை வாங்கி தொழிலை விரிவாக்கினேன்.
வாங்கிய கடனை அடைத்தவுடன், 56 லட்சம் ரூபாய் லோன் வாங்கி, ஊறுகாய்களைப் பதப்படுத்த பெரிய குளிர்பதன அறையை, வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளேன். மாதம், மூன்று லட்சம், ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய் லாபம் எடுப்பதோடு, தனியாக பேக்டரி ஆரம்பித்து, 20 பேருக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்து உள்ளேன். 
என்னுடைய, 'மீனாஸ்' ஊறுகாய் தமிழகம் முழுவதும் விற்க முக்கியக் காரணம், 18 ஆண்டு அயராத உழைப்பு தான். 20 பேர் என் கம்பெனியில் வேலை பார்த்தாலும், இன்னும், 'கிச்சன்' பொறுப்பு என் கையில் தான் உள்ளது. 
ஐ.எஸ்.ஓ., தரச்சான்று மற்றும் புட் புராடக்ட் ஆர்டர் சான்றை பெற்றுள்ள நாங்கள், நேரடியாக ஏற்றுமதி பண்ணலாம் எனவும் திட்டமிட்டு உள்ளோம். நம்பிக்கையுடன் அயராது உழைத்தால், சில ஆண்டுகளிலேயே பெரிய தொழில் முனைவோராக மாறலாம்.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முதல் ஆர்டரிலேயே 5,500 ரூபாய் லாபம் கிடைத்தது!  ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வரும் பிருந்தா:

 Tamil_News_large_1314678.jpg


திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவள் நான். என் பெண்ணுக்கு, ஐஸ்கிரீம் என்றால் ரொம்பப் பிடிக்கும். எங்கே போனாலும், ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்கச் சொல்லி அடம் பிடிப்பாள். ஐஸ்கிரீம் செய்யக் கற்றுக் கொண்டால், அவளுக்கு செய்து கொடுப்பது மட்டுமில்லாமல், உறவினர்களுக்கும் கொடுக்கலாமே என தோன்றியது.அதனால், ஆர்வத்தோடு நிறைய சமையல் புத்தகங்களை வாங்கி ஐஸ்கிரீம் செய்வதை படித்து, வீட்டுலேயே செய்து பார்த்தேன்.

ஆரம்பத்தில் ஐஸ்கிரீம் பவுடர்களை எந்தளவு மிக்ஸ் பண்ண வேண்டும் என தெரியாததால், சரியான பதம் வரவில்லை. இருப்பினும், மனம் தளராமல், திரும்பத் திரும்ப முயற்சி செய்தேன். ஓரளவு சரியாக வந்திருப்பதாக தோன்றியபோது, உறவினர், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுத்தேன். 'கடையில் விற்கும் ஐஸ்கிரீம் மாதிரியே ரொம்ப டேஸ்டா இருக்கு'ன்னு அனைவரும், 'என்கரேஜ்' செய்தனர்.'என்னுடைய பெண் பிறந்தநாளுக்கு ஐஸ்கிரீம் செய்து கொடுக்க முடியுமா?' என, உறவினர் கேட்க, அந்த ஆர்டரை என் விடாமுயற்சிக்கும், உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமா நினைத்தேன்.

முதல்முறையாக, 1,500 ரூபாய் முதலீட்டில், உறவினர் பெண் பிறந்தநாள் விழாவுக்கு, 50 பெரிய பாக்சில் ஐஸ்கிரீம் செய்து கொடுத்தேன். அந்த ஆர்டரில், 5,500 ரூபாய் லாபம் கிடைத்தது. விழாவுக்கு வந்திருந்தவர்களும் நன்றாக இருப்பதாக பாராட்டினர்.அந்தப் பாராட்டு தான் என்னை, முழுநேர ஐஸ்கிரீம் தயாரிப்புத் தொழிலில் இறங்க செய்தது. இப்போது, 'வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, மேங்கோ, சாக்லேட், பிஸ்தான்'னு ஆர்டர் கொடுப்பவர்களுக்கு செய்து கொடுத்து வருகிறேன். நான் பிளஸ் 2 வரை தான் படித்துள்ளேன். இந்த தொழில் மூலம், இப்போது மாதம், 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறேன். ஐஸ்கிரீம் தொழிலில் போட்ட முதலீட்டை விட, இரு மடங்கு லாபம் எடுக்கலாம். சரியான மார்க்கெட்டிங்கும், விடா முயற்சியும் இருந்தால், இந்தத் தொழிலில், சீசனைப் பொறுத்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூட சம்பாதிக்கலாம். பெரிய அளவில் செய்ய நினைப்பவர்கள், ஐஸ்கிரீம் கடை திறந்து, நல்ல வருமானம் ஈட்டலாம்.
தொடர்புக்கு: 91761 89314

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

முன் அனுபவம் எதுவுமின்றி மரப்பலகை வர்த்தகத்தில் துணிச்சலுடன் ஈடுபட்டு வெற்றிபெற்ற பெண்மணி! 

எதைச் செய்தாலும் முழு விருப்பத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்தால் வெற்றி கிட்டும்.இத்தகைய ஈடுபாட்டினாலும் உழைப்பினாலும் தனக்கு முன் அனுபவம் எதுவுமில்லாத ஒரு தொழிலில் தைரியமாக ஈடுபட்டு வெற்றிபெற்ற ஒருவர் திருமதி கே.பி. ரஞ்சனி. 
 

132DSC07003.jpg

 இவர் கொழும்பு ஆமர் வீதியில் மரப்பலகை வியாபாரத்தை நடத்தி வரும் வர்த்தகராவார். 
 
பதினாறு வயதில் காதலில் வீழ்ந்து அதே வயதில் திருமணமும் செய்துக் கொண்டதாகவும் கூறி எம்மை அதிர்ச்சியடையைச் செய்தார் ரஞ்சனி.
 
பின்னர் நான்கு குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே தாயாகியதாகவும் அவர் தெரிவித்தார். 
 
ரஞ்சனியின் கணவர் வெளிநாட்டு கப்பலில் பணிபுரியச் சென்று பத்து வருடங்களின் பின்னர் நாடு திரும்பி மரப்பலகை வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தார். 
 
கப்பலில் வருடக்கணக்காக   தொழில் பார்த்து உழைத்தப் பணத்தில் இந்த வர்த்தகத்துக்கு முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு வருட கால எல்லைக்குள்ளேயே அந்த மரப்பலகை  வர்த்தகம் சரிவடையத் தொடங்கியது.
 
அதையடுத்து, துணிச்சலுடன் தைரியப் பெண்ணாக ரஞ்சனி தனது கணவரின் வர்த்தகத்துக்குள் கால் பதித்தார். 
 
அதுவரை குடும்ப வாழ்க்கையிலேயே கவனம்செலுத்தி வந்தவர் ரஞ்சனி. மரப்பலகையை பற்றி ஒன்றுமே புரியாத நிலையில் மரப்பலகை வர்த்தகத்துக்குள் நுழைந்ததும் முதலில் தான் தடுமாறிப் போனதாக அவர்  தெரிவித்தார்.
 
"ஆனால், நான் எடுத்த முடிவில் மாற்றம் செய்யாமல் மரப்பலகை வர்த்தகத்தின் நுட்பங்களை முதலில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
 
 
ஒவ்வொரு மரப்பலகை இனத்தின் பெயர்களையும் உதவியாளர்களின் உதவியுடன் அறிந்துக் கொண்டேன்.
 
பலகைகளின் பெறுமதி, எந்தெந்த தேவைகளுக்கு எவ்வகையான மரப்பலகைகளை பாவிக்கலாம் என்ற விபரங்களை கற்றுக் கொண்டேன். 
 
 
அனைத்து தொழிலும் தொழில் இரகசியங்கள் உள்ளன. அந்த தொழில் இரகசியங்களை தெரிந்து கொள்வதும் இன்னொருவரின் வாயிலாக அறிந்துக் கொள்வதும் மிக மிகக் கடினம்.
 
எதையும் அனுபவித்தால் தான் அதன் நன்மை தீமைகளை விளங்கிக் கொள்ளலாம்” என ரஞ்சனி தனது தொழில் அனுபவத்தை எமக்குத் தெரிவித்தார். 
 
நான்கு பிள்ளைகளின் அன்பான தாயாகவும் மருமகன்களுக்கு மாமியாகவும் பாசம் கொண்ட பேரப்பிள்ளைகளின் அம்மம்மாவாகவும் திகழ்பவர் இவர்.


132DSC07008.jpg

 
"இன்று பலகைகளை காட்டினால் இப்பலகை என்ன ரகம் உங்களால் எனத் தெரிவிக்க இயலுமா? என கேட்டோம். 
 
அதற்கு அவர் ஒரு சிரிப்புடன் “ஆம், சொல்ல இயலும். அப்பலகையின் உயரம், அகலம்,
 
கனவளவு எல்லாம் கூற முடியும். அப்பலகை எந்தத் தேவைக்கு உகந்தது.
 
எவ்வளவு காலத்திற்கு நிலைத்து நிற்கும் வளர்ச்சி பெறாத இளம் மரத்து பலகையா அல்லது நடுத்தர மரத்தின் பலகையா அதையும் மீறி முதிர்வடைந்த காலத்தைக் கொண்ட மரத்தினது பலகையா என்பதையும் கூறமுடியும்” என்றார். 
 
 
சரி, மரப்பலகையை சீவுவது, வெட்டுவது, அறுப்பது எனப்பட்ட வேலைகளை எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள்? பெண்ணான உங்களுக்கு பயம் இல்லையா? எனவும் கேட்டோம். 
 
“எனக்கு எவரும் இத்தொழிலை கற்றுத் தரவில்லை. எனக்கு எவ்வித பயமும் இல்லை. இன்று மரப்பலகை தொழில் அனைத்தும் இயந்திரமயமாகிவிட்டது.
 
மரத்தை வெட்டி நிலத்தில் சாய்ப்பதிலிருந்து வெட்டுவது, சீவுவது, அறுப்பது எல்லாமே மின்சார இயந்திரக் கருவிகளின் ஊடாகவே இடம்பெறுகின்றன.
 
இதனால் நேரமும் காலமும் மீதமாகிறது. இந்த இயந்திரங்களை பயன்படுத்த முதலில் கொஞ்சம் தயக்கம் கொண்டேன்.
 
மின்சாரக் கருவிகளை பிடித்து பலகைகளுடன் வேலை செய்கையில் கருவிகளின் அதிர்வுக்கு இசைந்தாற்போல் நாமும் தைரியத்துடன் உடல் பலத்துடன் இயங்க வேண்டும். 
 
மின்சாரக் கருவியும் எமது உடலும் ஒரே வேகத்தில் இயங்க வேண்டும்.
 
ஊழியர்கள் செய்வதை கண்களால் பார்த்து துணிவுடன் கற்றுக் கொண்டேன்” என ரஞ்சனி கூறினார்.
 
“என்ன வகையான தளபாடங்களை உங்களால் தயாரிக்க முடியும்?”
 
“எங்கள் பலகை வியாபாரத்துடன் தளபாடங்கள், கதவு, ஜன்னல்களை தயாரிக்கின்றோம். என்னால் கதிரைகள் (ஸ்டூல்), கெஷியர் மேசை, டிசைன்கள் இல்லாத தனிப்பலகை கதவுகளை சுயமாக தயாரிக்க இயலும்.
 
இவைகளை நானே கற்றுக் கொண்டவை. இக் கைத்தொழிலை கற்றுக் கொண்டதில் பெரும் மனநிறைவைப் பெற்றுள்ளேன்.

 
132DSC07006.jpg

 
“எவ்வகையான மரப் பலகைகளுக்கு மக்களின் கேள்வி அதிகம்? பலகைகளை எங்கு கொள்முதல் செய்கிறீர்கள்?” 
 
“பலா, வேம்பு, தேக்கு, மக்கோனி மரபலகைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
 
மரப்பலகைகளை மொறட்டுவையில் கொள் முதல் செய்வேன். 
 
அதிகமாக கேகாலையிலிருந்தும் கொள்முதல் செய்வேன்.
 
“இத் தொழிலில் மனநிறைவு உள்ளதா?” எனக் கேட்டோம்
 
“ஏனைய வர்த்தகத்தைப் போல அல்ல இவ்வர்த்தகம் போட்டி அதிகம். வாடிக்கையாளர்களிடம் பல மணி நேரம் பேசியே அவர்களை திருப்திப்படுத்த இயலும்.
 
வாடிக்கையாளர்கள் மரப்பலகையின் தரத்தைப் பார்ப்பதில்லை. 
 
விலையையே பார்க்கின்றார்கள். அவர்களுக்கு விபரமாக விளங்கப்படுத்திய பின்பே வாடிக்கையாளர்கள் தெளிவடைகிறார்கள். செலவுகளுக்கேற்ற வகையில் வருமானம் கிடைக்கின்றது.
 
இதைவிட வேறு என்ன தேவை? என்கிறார் ரஞ்சனி.
- See more at: http://metronews.lk/feature.php?feature=132&display=0#sthash.OTH03pqX.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன் அனுபவம் எதுவுமின்றி மரப்பலகை வர்த்தகத்தில் துணிச்சலுடன் ஈடுபட்டு வெற்றிபெற்ற பெண்மணி! 

எதைச் செய்தாலும் முழு விருப்பத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்தால் வெற்றி கிட்டும்.இத்தகைய ஈடுபாட்டினாலும் உழைப்பினாலும் தனக்கு முன் அனுபவம் எதுவுமில்லாத ஒரு தொழிலில் தைரியமாக ஈடுபட்டு வெற்றிபெற்ற ஒருவர் திருமதி கே.பி. ரஞ்சனி. 
 

132DSC07003.jpg

 இவர் கொழும்பு ஆமர் வீதியில் மரப்பலகை வியாபாரத்தை நடத்தி வரும் வர்த்தகராவார். 
 
பதினாறு வயதில் காதலில் வீழ்ந்து அதே வயதில் திருமணமும் செய்துக் கொண்டதாகவும் கூறி எம்மை அதிர்ச்சியடையைச் செய்தார் ரஞ்சனி.
 
பின்னர் நான்கு குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே தாயாகியதாகவும் அவர் தெரிவித்தார். 
 
ரஞ்சனியின் கணவர் வெளிநாட்டு கப்பலில் பணிபுரியச் சென்று பத்து வருடங்களின் பின்னர் நாடு திரும்பி மரப்பலகை வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தார். 
 
கப்பலில் வருடக்கணக்காக   தொழில் பார்த்து உழைத்தப் பணத்தில் இந்த வர்த்தகத்துக்கு முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு வருட கால எல்லைக்குள்ளேயே அந்த மரப்பலகை  வர்த்தகம் சரிவடையத் தொடங்கியது.
 
அதையடுத்து, துணிச்சலுடன் தைரியப் பெண்ணாக ரஞ்சனி தனது கணவரின் வர்த்தகத்துக்குள் கால் பதித்தார். 
 
அதுவரை குடும்ப வாழ்க்கையிலேயே கவனம்செலுத்தி வந்தவர் ரஞ்சனி. மரப்பலகையை பற்றி ஒன்றுமே புரியாத நிலையில் மரப்பலகை வர்த்தகத்துக்குள் நுழைந்ததும் முதலில் தான் தடுமாறிப் போனதாக அவர்  தெரிவித்தார்.
 
"ஆனால், நான் எடுத்த முடிவில் மாற்றம் செய்யாமல் மரப்பலகை வர்த்தகத்தின் நுட்பங்களை முதலில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
 
 
ஒவ்வொரு மரப்பலகை இனத்தின் பெயர்களையும் உதவியாளர்களின் உதவியுடன் அறிந்துக் கொண்டேன்.
 
பலகைகளின் பெறுமதி, எந்தெந்த தேவைகளுக்கு எவ்வகையான மரப்பலகைகளை பாவிக்கலாம் என்ற விபரங்களை கற்றுக் கொண்டேன். 
 
 
அனைத்து தொழிலும் தொழில் இரகசியங்கள் உள்ளன. அந்த தொழில் இரகசியங்களை தெரிந்து கொள்வதும் இன்னொருவரின் வாயிலாக அறிந்துக் கொள்வதும் மிக மிகக் கடினம்.
 
எதையும் அனுபவித்தால் தான் அதன் நன்மை தீமைகளை விளங்கிக் கொள்ளலாம்” என ரஞ்சனி தனது தொழில் அனுபவத்தை எமக்குத் தெரிவித்தார். 
 
நான்கு பிள்ளைகளின் அன்பான தாயாகவும் மருமகன்களுக்கு மாமியாகவும் பாசம் கொண்ட பேரப்பிள்ளைகளின் அம்மம்மாவாகவும் திகழ்பவர் இவர்.


132DSC07008.jpg

 
"இன்று பலகைகளை காட்டினால் இப்பலகை என்ன ரகம் உங்களால் எனத் தெரிவிக்க இயலுமா? என கேட்டோம். 
 
அதற்கு அவர் ஒரு சிரிப்புடன் “ஆம், சொல்ல இயலும். அப்பலகையின் உயரம், அகலம்,
 
கனவளவு எல்லாம் கூற முடியும். அப்பலகை எந்தத் தேவைக்கு உகந்தது.
 
எவ்வளவு காலத்திற்கு நிலைத்து நிற்கும் வளர்ச்சி பெறாத இளம் மரத்து பலகையா அல்லது நடுத்தர மரத்தின் பலகையா அதையும் மீறி முதிர்வடைந்த காலத்தைக் கொண்ட மரத்தினது பலகையா என்பதையும் கூறமுடியும்” என்றார். 
 
 
சரி, மரப்பலகையை சீவுவது, வெட்டுவது, அறுப்பது எனப்பட்ட வேலைகளை எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள்? பெண்ணான உங்களுக்கு பயம் இல்லையா? எனவும் கேட்டோம். 
 
“எனக்கு எவரும் இத்தொழிலை கற்றுத் தரவில்லை. எனக்கு எவ்வித பயமும் இல்லை. இன்று மரப்பலகை தொழில் அனைத்தும் இயந்திரமயமாகிவிட்டது.
 
மரத்தை வெட்டி நிலத்தில் சாய்ப்பதிலிருந்து வெட்டுவது, சீவுவது, அறுப்பது எல்லாமே மின்சார இயந்திரக் கருவிகளின் ஊடாகவே இடம்பெறுகின்றன.
 
இதனால் நேரமும் காலமும் மீதமாகிறது. இந்த இயந்திரங்களை பயன்படுத்த முதலில் கொஞ்சம் தயக்கம் கொண்டேன்.
 
மின்சாரக் கருவிகளை பிடித்து பலகைகளுடன் வேலை செய்கையில் கருவிகளின் அதிர்வுக்கு இசைந்தாற்போல் நாமும் தைரியத்துடன் உடல் பலத்துடன் இயங்க வேண்டும். 
 
மின்சாரக் கருவியும் எமது உடலும் ஒரே வேகத்தில் இயங்க வேண்டும்.
 
ஊழியர்கள் செய்வதை கண்களால் பார்த்து துணிவுடன் கற்றுக் கொண்டேன்” என ரஞ்சனி கூறினார்.
 
“என்ன வகையான தளபாடங்களை உங்களால் தயாரிக்க முடியும்?”
 
“எங்கள் பலகை வியாபாரத்துடன் தளபாடங்கள், கதவு, ஜன்னல்களை தயாரிக்கின்றோம். என்னால் கதிரைகள் (ஸ்டூல்), கெஷியர் மேசை, டிசைன்கள் இல்லாத தனிப்பலகை கதவுகளை சுயமாக தயாரிக்க இயலும்.
 
இவைகளை நானே கற்றுக் கொண்டவை. இக் கைத்தொழிலை கற்றுக் கொண்டதில் பெரும் மனநிறைவைப் பெற்றுள்ளேன்.

 
132DSC07006.jpg

 
“எவ்வகையான மரப் பலகைகளுக்கு மக்களின் கேள்வி அதிகம்? பலகைகளை எங்கு கொள்முதல் செய்கிறீர்கள்?” 
 
“பலா, வேம்பு, தேக்கு, மக்கோனி மரபலகைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
 
மரப்பலகைகளை மொறட்டுவையில் கொள் முதல் செய்வேன். 
 
அதிகமாக கேகாலையிலிருந்தும் கொள்முதல் செய்வேன்.
 
“இத் தொழிலில் மனநிறைவு உள்ளதா?” எனக் கேட்டோம்
 
“ஏனைய வர்த்தகத்தைப் போல அல்ல இவ்வர்த்தகம் போட்டி அதிகம். வாடிக்கையாளர்களிடம் பல மணி நேரம் பேசியே அவர்களை திருப்திப்படுத்த இயலும்.
 
வாடிக்கையாளர்கள் மரப்பலகையின் தரத்தைப் பார்ப்பதில்லை. 
 
விலையையே பார்க்கின்றார்கள். அவர்களுக்கு விபரமாக விளங்கப்படுத்திய பின்பே வாடிக்கையாளர்கள் தெளிவடைகிறார்கள். செலவுகளுக்கேற்ற வகையில் வருமானம் கிடைக்கின்றது.
 
இதைவிட வேறு என்ன தேவை? என்கிறார் ரஞ்சனி.
- See more at: http://metronews.lk/feature.php?feature=132&display=0#sthash.OTH03pqX.dpuf

முதலில் பார்த்துக் கொண்டே, உடுப்பினை பார்க்க நம்மூர் போல் இருக்குது என்று நகர்ந்தேன்.

மீண்டும் வந்த போது, வாசித்தேன். அட நம்மூரு தான். 

நன்றி ஆதவன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

உன்னால் முடியும்: வித்தியாசம் காட்டினால் வெற்றி நிச்சயம்

கே.ரம்யா, லயன்பேக்ஸ், சென்னை.
கே.ரம்யா, லயன்பேக்ஸ், சென்னை.

சென்னை, பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. பிஎஸ்இ கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. சொந்த தொழில் செய்துவரும் தனது தந்தைக்கு உதவும் பொருட்டு அவரது தொழிலுக்குத் தேவையான அட்டை பெட்டிகளைத் தயாரிக்க இறங்கியவர். தற்போது பல வெளி நிறுவனங்களுக்கும் தயாரித்து வருகிறார்.

பீட்சா, பாப்கார்ன், மருந்துகள் அடைக்க என பல வடிவிலான சிறிய அட்டைப் பெட்டிகளைத் தயாரித்து வருகிறார். தொழிலில் இறங்கியபோது இவருக்கு வயது 23. கடந்த ஏழு ஆண்டுகளில் பெண் தொழில்முனைவோராக வெற்றிகரமாக நிலைத்து நிற்கிறார். அவரது தொழில் அனுபவத்தை இந்த வாரம் ``வணிகவீதி’’ பகுதிக்கு பகிந்து கொண்டார்.

படித்து முடித்தபின், சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்பதுதான் யோசனை. ஏனென்றால் எனது குடும்பத்தினர் அனைவரும் சுயதொழில்தான் செய்து வருகின்றனர்.

முதலில் அப்பாவுக்கு உதவி செய்யத்தான் சென்றேன். அப்பா செய்து வரும் தொழிலுக்கு சிறு சிறு அட்டை பெட்டிகளை வெளியிலிருந்து வாங்கி வந்தார். இந்த தொழிலை செய்தால் அப்பாவுக்கு உதவியாக இருக்குமே என்கிற யோசனையோடு தனியாக இறங்கினேன்.

எங்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனத்தினரிடமே சில மாதங்கள் வேலைக்குச் சேர்ந்து தொழிலைக் கற்றுக் கொண்டதுடன், சிறு தொழில் பயிற்சிகளும் எடுத்தேன். முதலில் தேவைக்கு ஏற்ப வெளியில் ஆர்டர் கொடுத்து வாங்கி பிறகு தொழில் பழகியதும், வங்கி கடனுதவி மூலம் இயந்திரம் போட்டேன்.

வீட்டில் ஊக்கம் கொடுத்தனர் என்றாலும், எல்லாமே எனது சொந்த முயற்சிகள்தான். ஒருநாள் சோர்வாக இருக்கிறது என்று வீட்டில் படுத்தாலும் அப்பாவோ அம்மாவோ விரட்டுவார்கள். நீ விரும்பி மேற்கொள்ளும் தொழில் இது. சொந்த தொழிலில் சோர்வு என்கிற பேச்சே இருக்கக்கூடாது என்று உற்சாகம் கொடுத்து வேலைக்கு அனுப்பிவிடுவார்கள்.

என்னைவிட மூத்தவர்கள், அனுபவசாலிகளிடம் வேலை வாங்க வேண்டும். மார்க்கெட்டிங் வேலைகளையும் கவனிக்க வேண்டும். இதெல்லாம் சவாலான விஷயம்தான். அதுவும் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் இந்த தொழிலில் பெண் தொழில்முனைவோராக ஈடுபடுவது இந்த சவால்களை மேலும் அதிகமாக்கியது.

தரமாகவும் குறித்த நேரத்திலும் டெலிவரி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த துறையில் முக்கியமானது. எத்தனை போட்டியாளர்கள் இருந்தாலும், ஏதாவது ஒரு வகையில் அவர்களிடமிருந்து வித்தியாசப் படத்தான் செய்வோம். வித்தியாசம் காட்ட வேண்டும் அப்போதுதான் நிலைக்க முடியும். அனுபவங்களே இதையெல்லாம் கற்றுக் கொடுத்தது.

காலையில் சப்ளை செய்ய வேண்டிய ஆர்டர்களுக்கு நைட் ஷிப்ட் வேலை செய்து கொண்டிருப்பார்கள், மிஷின் ரிப்பேர் ஆகிவிடும். எழுந்து ஓடுவேன்.

பொருளை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள். சின்ன பெண் என்பதால் கொஞ்சம் சத்தம் போட்டு பேசுவார்கள். இந்த தொழிலிலேயே பல வருடங்களாக இருக்கும் ஆண்களின் அவதூறுகள் என எல்லாவற்றையும் கடக்க வேண்டும்.

இது போன்ற சமயங்களில் வீட்டினர் பக்கபலமாக இருந்தனர் சொந்த தொழிலில் இவையெல்லாம் நடக்கும், அதை சமாளிக்க கற்றுக்கொள் என்பதுதான் அப்பாவின் அறிவுரை.

திருமணத்துக்கு பிறகு கூடுதல் பொறுப்புதான். வீட்டு வேலைகளை தட்டி கழிக்கவில்லை என்றால் எங்களுக்கு சிக்கல் இல்லை என்று கணவரது வீட்டிலும் சொல்லிவிட்டனர். அதனால் தொழில் தடைபடவில்லை.

குழந்தை பிறந்த பிறகு இன்னும் அதிக வேலை பளு... ஆனாலும் பத்து பேருக்கு வேலை கொடுத்து வருகிறேன், சொந்தமாக வருமானம் வருகிறது, பத்துபேர் மதிக்கும் தொழில்முனைவர் என்கிற தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்கள் என்னை சோர்ந்து போகவிடாமல் இயக்குகிறது. குழந்தையை தூங்க வைக்க இரவு பணிரெண்டு மணியாகும், என்றாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்து சாப்பாடு செய்வது முதல் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வேலைக்கு கிளம்பி விடுவேன்.

நேரடி ஆர்டர்கள் தவிர ஆன்லைன் மூலமானவும் ஆர்டர்கள் பிடிக்கிறேன். பெரிய நிறுவனங்கள், பாப்கார்ன் பெட்டிகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் சில அரசு துறை நிறுவனங்களுக்கான தொடர்ந்து சப்ளை செய்து வருகிறேன்.

பெண் என்பதற்காக எந்த சலுகைகளும் எதிர்பார்ப்பதில்லை. தொழில் கொடுக்கும் தன்னம்பிக்கை என்னை மேலும் பல முயற்சிகளை எடுக்க வைக்கும் என்று நம்பிக்கையோடு பேசினார். இவரது உழைப்பு இவருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கட்டும். பலருக்கு பாடமாகட்டும்.

maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-வித்தியாசம்-காட்டினால்-வெற்றி-நிச்சயம்/article7832517.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஒரு பெண் விமானியின் அனுபவங்கள்

இந்தியாவில் பெண்கள் பல்துறைகளில் முன்னேறி தமது ஆளுமையை பதித்து வருகின்றனர் என்பதற்கு சென்னையைச் சேர்ந்த ல்வ்லி ஃபெராண்டா மத்தையாஸ் ஒரு உதாரணம்.
மிகக் கடுமையானது, சவாலானது, ஆணாதிக்கம் நிறைந்தது எனக் கூறப்படும் விமான ஓட்டுநர் பணியில், தலைமை விமான ஓட்டுநராக முன்னணி விமான நிறுவனம் ஒன்றி பணியாற்றுகிறார் லவ்லி.
சர்வதேச அளவிலான உள்ள விமானிகளின் எண்ணிக்கையில் வெறும் 3 சதவிதமானவர்களே பெண்கள். அவர்களது எண்ணிக்கையும் அதிகரிப்பதில்லை என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

151121175238_lovely_feranda_women_pilot_
லவ்லி ஃபெராண்டா மத்தையாஸ்

இந்திய விமானப் படையின் போர் விமானங்களில் பெண் விமானிகள் பணியாற்ற மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் தான் ஒப்புதல் அளித்திருந்தது.
இந்தியாவின் முதல் பெண் விமானியான சரளா தக்ரல், ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டில் விமானி உரிமம் பெற்றார்.
பெண்கள் மட்டுமல்ல பெரும்பான்மையான ஆண்களும் கார் ஓட்டுவது கூட அரிதாக இருந்த ஒரு காலத்தில் ஒரு பெண் விமானியாக அவர் பணியாற்றியிருந்தாலும், இந்தியாவில் இன்று வரை பெண் விமானிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.
இச்சூழலில் தலைமை விமான ஓட்டுநரகாக பணியாற்றி வரும் லவ்லி ஃபெராண்டா மத்தையாஸ் தமது அனுபவங்கள் குறித்து பிபிசி தமிழோசையின் சங்கீதா ராஜனுடன் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இங்கே கேட்கலாம்.
நூறு பெண்கள் எனும் பிபிசியின் சிறப்புத் தொடரின் ஒரு பகுதியாக அவரது பேட்டி இடம்பெற்றது.

http://www.bbc.com/tamil/india/2015/11/151121_100women_womenpilot

Link to comment
Share on other sites

  • 4 months later...

 

சாதிக்க வயது தடையல்ல!

Tamil_News_large_1495098.jpg

மகளிடம் பயிற்சி பெற்று, 38 வயதில் போல்வால்ட்டில், தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள, விவசாயியின் மனைவி சரளா: கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள பொய்கைபுத்துாரைச் சேர்ந்தவள் நான். என் கணவர், விவசாய வேலை செய்து வருகிறார். பள்ளிப் பருவத்தில், நான் நிறைய விளையாட்டுகளில் விளையாடி இருக்கிறேன். திருமணம், குழந்தைகள் என வந்ததும், அதெல்லாம் மறந்து விட்டது. குடும்பத்தை காப்பாற்ற, நுால் மில்லுக்கு வேலைக்கு போய் வருகிறேன்.பிளஸ் 2 படிக்கும் என் மகள், பள்ளியில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள, வீட்டுக்கு பின்புறமுள்ள தென்னந்தோப்பில், குச்சியை நட்டுவைத்து பயிற்சி எடுப்பாள்; துணைக்கு நான் செல்வேன். பள்ளியில் நடந்த, கபடி, உயரம் தாண்டுதல் போட்டிகளில், என் மகள் பல பரிசுகளை வென்றுள்ளாள். சில நேரங்களில், உயரம் வைத்து நானும் தாண்டிப் பார்ப்பேன். அப்படியே பழகிப் பழகி, நானும் நன்றாக தாண்ட ஆரம்பித்தேன். பின், குச்சியை ஊன்றி தாண்டிப் பழகினேன்.இதைப் பார்த்த என் கணவர், மாவட்ட அளவில் அந்த பகுதியில் நடக்கும் போட்டிகளில், கலந்து கொள்ள, என்னை அழைத்து சென்றார். அதில் கலந்து கொண்டு, பல பரிசுகள் வாங்கி வந்தேன்.பின், சென்னையில், 38 வயது நிரம்பியவர்களுக்கான மாநில அளவில் நடந்த போட்டியில், முதலாவதாக வந்தேன். கடந்த வாரம் மைசூரில் தேசிய அளவில் நடந்த போட்டியில், 13 மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அதில் முதலாவதாக வந்து, தங்கப் பதக்கம் வாங்கினேன்.இதைப் பார்த்து, எங்கள் ஊரே என்னை பெருமையாக பேசுவது, மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு, 38 வயதாகி, மகள் பிளஸ் 2 படிக்கும் நிலையில், உடம்பு எடை கூடாததும், என் வெற்றிக்கு காரணம்.

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.