Jump to content

25 வருடகால தமிழ் - சிங்கள பகையை தீர்ப்பது மிகக் கடினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

25 வருடகால தமிழ் - சிங்கள பகையை தீர்ப்பது மிகக் கடினம்"

*மனம் திறந்து பேசுகிறார் சாதனை நாயகன் முரளி

தமிழ்க் குழந்தைகளுக்கு கணினி மற்றும் ஆங்கில பாடங்களை கற்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள உலக சாதனையாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரன், இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலுள்ளது 25 வருடகால நீண்ட பகையெனவும் இந்த இடைவெளியை குறைப்பது மிகக் கடினமெனவும் தெரிவித்துள்ளார்.

`இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸின் தலைமை ஆசிரியர் சேகர் குப்தா என்.டீ.ரீ.வியின் `வோக் த ரோக்' நிகழ்ச்சிக்காக முரளிதரனை நேர்கண்டிருந்தார். அந்த நேர்காணலில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்தும் அதனால் தனது பெற்றோர் எதிர்நோக்கிய சவால்கள் பற்றியும் மனம்திறந்து பேசியிருக்கிறார் முரளி.

அந்த நேர்காணலிலிருந்து சில முக்கிய பகுதிகளை இங்கு தருகின்றோம்.

கே: முழுநேரமும் விளையாடுகின்றீர்கள். விளையாடும்போது வர்த்தக விளம்பரங்களில் நடிக்கிறீர்கள். அத்துடன் உலகம் முழுவதும் பயணிக்கிறீர்கள். எனவே உங்களுக்கு நேரமில்லையென்பது எனக்குத் தெரியும். இலங்கையின் தலைசிறந்த வீரரான நீங்கள் கடல்கோளின் பின்னரான நிவாரண பணிகளில் எந்தளவில் ஈடுபட்டுள்ளீர்கள்?

ப: வர்த்தக விளம்பரங்களில் நான் அதிகம் நடிப்பதில்லை. மிகச் சொற்ப அளவிலேயே அவற்றில் கலந்துகொள்கின்றேன். நான் இந்த நிலையை அடைய மக்கள் எனக்கு உதவியுள்ளார்கள். ஆகவே அனைத்தையும் அவர்களுக்கே சமர்ப்பிக்கின்றோம். ஏதாவது அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.

கே: மக்களுக்கு எதையாவது சமர்ப்பிக்க வேண்டுமென்ற ஆழமான உணர்வு உங்களிடம் இருப்பதாக கருதுகிறீர்களா?

ப: நிச்சயமாக, ஏனெனில் அவர்கள்தான் என்னை பிரபல்யப்படுத்தியவர்கள். எனவே உதவிய மக்களுக்கு ஏதாவது நிச்சயமாக செய்தேயாகவேண்டும்.

கே: இந்த கேள்வி உங்களிடம் முன்னதாகவும் கேட்கப்பட்டிருக்கலாம். அது என்னவெனில்...பல வழிகளிலும் துண்டாடப்பட்டுள்ள நாட்டில் நீங்கள் உள்ளீர்கள் அத்துடன் பிரிபட்டு நின்றாலும் ஒன்றாக வாழலாம் என்பதற்கான ஒரு அடையாளமாகவும் நீங்கள் விளங்குகின்றீர்கள். இலங்கை தேசிய அணியில் நீங்கள் மாத்திரமே தமிழர். தற்போது சிங்கள கிராமமொன்றை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவி வருகின்றீர்கள். இவை குறித்து என்ன கருதுகின்றீர்கள்?

ப: ஆம், திருகோணமலை - மட்டக்களப்பு பகுதிகளிலும் உதவுவதற்கு நாம் முயற்சித்தோம். ஆனால், அந்த நேரத்தில் இது போன்றவிடங்களில் விருப்பங்கொண்டவர்களை எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது முகாமையாளரான குசில் எனது நண்பனும்கூட. அவரை எனக்கு நன்றாகத் தெரியும். எனவே இந்த மக்களுக்கு உதவினோம். தற்போது அந்த கிராமம் (சிங்கள கிராமம்) மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கே: ஆகவே, சிங்கள கிராமமொன்றை மீளக் கட்டியெழுப்ப பணியாற்றுகின்றீர்களா? இதில் வழமைக்கு மாறான விடயம் எதுவுமில்லையென கருதுகின்றீர்களா? ஒரு தமிழனாக உங்களைப் பார்க்கின்றீர்களா அல்லது கபடமற்ற இலங்கையராக (ஓஉட் - ரிக்க்ட் ஸ்ரிலன்கன்) கருதுகிறீர்களா?

ப: என் இனத்தையும் நான் விரும்புகின்றேன். ஆனால், விடயம் என்னவெனில் நாம் அனைவரும் மனிதர்கள். எனவே சிங்களவர் என்றோ தமிழர் என்றோ நாம் நினைக்கவில்லை. `எவ்வளவு காலம் இங்கு வாழப்போகின்றீர்கள்' என கூறுவதுண்டு. ஏனெனில் வாழ்க்கையின் முடிவில் நினைவுகளை மாத்திரமே உங்களுடன் எடுத்துக்கொள்கின்றீர்கள். ஆகவே, நான் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மக்களுக்கு முடியுமானவரை உதவிசெய்வதனூடாக மறக்கமுடியாத ஒரு வாழ்க்கையை பெறவே விரும்புகின்றேன்.

கணினி மற்றும் ஆங்கிலம் போன்றவற்றை சில குழந்தைகளுக்கு கற்பிக்கும் திட்டமொன்றை வைத்துள்ளோம். ஒவ்வொன்றும் 5 முதல் 6 மாதங்களை கொண்ட இப்பயிற்சிக்காக அவர்களில் 30 முதல் 50 பேரை (தமிழ் குழந்தைகளை) கொண்டுவரவுள்ளோம். இங்கு வைத்திருந்து அவர்களுக்கு கற்பித்த பின்னர் யாழ்ப்பாணத்துக்கோ திருகோணமலைக்கோ அவர்களின் இடத்துக்கு திருப்பியனுப்பி வைப்போம். இது எதிர்கால திட்டம்.

கே: தமிழ்க் குழந்தைகளை அந்த பகுதிகளிலிருந்து அழைத்துவந்து கற்பித்துவிட்டு மீண்டும் அங்கு அனுப்பிவைக்கும் பாகின்றீர்களா?

ப: ஆம்; எவராயினும் தமது பிள்ளைகளை அனுப்ப விரும்பினால் அனுப்பலாம். கணினி வகுப்புகளை இந்த நாட்டின் கிராமங்களில் நடாத்துவது மிகக் கடினம்.

கே: இதேபோல ஏதாவது இன்னும் அதிகமாக முயன்று சமூகங்களை ஒன்றாக்க எண்ணியுள்ளீர்களா? ஏனெனில் இதுபோன்ற துண்டாடப்பட்டு கிடக்கும் ஒரு நாட்டில் தூதுவராக உங்களை போன்றவர்கள் செயற்படலாம்.

ப: ஆம். ஆனால், விடயம் என்னவென்றால்..இது இலகுவானதொரு விடயமல்ல. நாம் எளிதானதொரு வழியில் முயன்று பார்க்கலாம். ஆனால், அனைத்தும் அரசியல்வாதிகளிலேயே தங்கியுள்ளது. ஏனெனில் அவர்களே எம்மை விட முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள்.

கே: இவ்விடயத்தில் அரசியல்வாதிகள் முக்கியமாக இருக்கலாம். ஆனால், உங்களிடமும் உபாயமுள்ளதென நான் கருதுகின்றேன்.

ப: ஆனால், என்னைப் போன்ற ஒரு கிரிக்கெட்காரன் அரசியலுக்குள் வருவதை விரும்புவதில்லை.

கே: எனினும் உங்களின் சகாக்கள் சிலர் அரசியலுக்குள் உள்ளார்கள் அல்லது அரசியலுக்கு வர முயன்றிருக்கிறார்கள்.

ப: ஆம்; ஆனால், இன மோதல் இலகுவான விடயமல்ல. நீண்ட பகை இங்கேயுள்ளது. இதுவரையில் நான் பேசுவதற்கு சிக்கலில்லாது இருந்துள்ளது. ஏனெனில் நான் நன்கு அறியப்பட்டவன். நல்லதொரு இடத்தில் இருப்பவன். ஆனால், மற்றவர்கள் அப்படியல்ல. வாழ்க்கையின் சவால்கள், அவற்றுக்குள்ளால் எவ்வாறு பயணித்தார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும்.

ஒன்றுபட்டு செயற்படுங்கள் என்று அவர்களிடம் சொன்னபோது"ஆனா முரளி, உங்களுக்கு நல்ல நேரம் இருந்திருக்கு. ஆனால், நாங்கள் பட்டபாடுகளை நினைத்துப் பாருங்கள்" எனச் சொல்வார்கள். ஆம். அவர்கள் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் யுத்தம் இடம்பெற்றபோது 15 வருடங்களாக அவர்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லையென கேள்விப்பட்டேன்.

எனவே, `நீங்கள் இப்படிச் செய்யலாம்' என அவர்களிடம் சொல்லுவதற்கு என்னால் முடியாது. மனிதாபிமான ரீதியில் எந்த வழியிலாவது அவர்களுக்கு உதவ முடியும். இதை மாத்திரமே என்னால் செய்ய முடியும். 25 வருடகால பகை. இதுவொரு சிறிய விடயமல்ல.

கே: இலங்கை அணிக்குள் முதற்தடவையாக பிரவேசித்தபோது இந்த உண்மைகளின் அடிப்படையிலான விளைவுகளை நீங்கள் எதிர்கொண்டீர்களா?

ப: தமிழர்களும், சிங்களவர்களும் ஒன்றாக வாழும் சூழலிலேயே நான் வசித்தேன்.

கே: கண்டியிலா? யாழ்ப்பாணத்திலிருந்து அது வேறுபட்டதா?

ப: ஆம்; முற்றிலும் வேறுபட்டது. அத்துடன் நான் புனித அந்தோனியார் கல்லூரி விடுதியில் தான் தங்கியிருந்தேன். அங்கு சிங்களவர்கள், முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள், தமிழர்களென அனைவரும் இருந்தோம். ஆகவே நான் எந்தவித வேறுபாடுகளையும் உணரவில்லை.

கே: தமிழன் என்ற அடிப்படையில் பாகுபாடுகளை எதிர்கொண்டிருக்கின்றீர்களா?

ப: உண்மையில் இல்லை. எனது பெற்றோர்....1983 மற்றும் 1977 களில் நான் சிறுவனாக இருந்தபோது எமது வீடு மற்றும் அனைத்து உடைமைகளும் எரிக்கப்பட்டன. இதனால் தப்பிப்பதற்காக ஓடவேண்டியிருந்தது.

கே: அந்த நேரத்தில் நீங்கள் வாலிபராக இருந்தீர்களா?

ப: இல்லையில்லை. 1977 இல் எனக்கு 6 வயது. 83 இல் அதைவிட சற்று விபரம் தெரிந்தவனாக இருந்தேன். அந்த நேரத்தில் விடுதியிலேயே நான் இருந்தேன். அப்போது மாத்திரமே நாம் பாகுபாடு காட்டப்பட்டோம். இச் சம்பவத்துக்கு பின்னர் இந்த நாட்டில் வாழ சற்றுப் பயமாகத்தான் இருந்தது. ஆனால், எனது பெற்றோருக்கு வாழ சந்தர்ப்பம் கிடைத்தது.

கே: பல தமிழர்கள் இலங்கையை விட்டு அப்போது வெளியேறினார்களா?

ப: ஆம்; அவர்கள் அனைவருமே இந்தியாவுக்கு சென்றார்கள். ஏனென்றால் நாம் இந்திய வம்சாவளி தமிழர்கள். எமது தாத்தா 1920 இல் இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர்.

கே: எப்போது உங்கள் வீடு எரியூட்டப்பட்டது? உங்கள் குடும்பத்தினர் அச்சத்திலிருந்து மீள எவ்வளவு காலம் எடுத்தது?

ப: அப்பொழுது நான் மிகவும் சிறியவன். நீண்டகாலமாக எனது குடும்பத்தினர் அச்சத்திலேயே வாழ்ந்தார்கள். எனினும் அவர்கள் இங்கிருந்து வெளியேறவில்லை. நாம் இங்கு பிஸ்கற் தயாரிக்கும் நிறுவனமொன்றை வைத்திருந்தோம். அது நன்றாக இயங்கிக்கொண்டிருந்தது. அதனால் அவர்கள் வெளியேறவில்லை. இங்கு வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென எனது பெற்றோர் நினைத்திருந்தார்கள்.

கே: இதுபோன்ற வடுமிக்க வரலாற்றை கொண்ட சிங்கள தேசமொன்றில் சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அணிக்காக முதற்தடவையாக விளையாட வந்தபோது தமிழன் என்ற அடிப்படையிலான உணர்வுகளை எதிர்கொண்டீர்களா?

ப: இல்லை. நான் ஏற்கனவே பாடசாலையில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட நான் முன்னணியில் இருந்தேன். அனைவரும் நான் ஒருநாள் சாதனை படைக்க வேண்டுமென விரும்பினார்கள். இது இன்று பாகிஸ்தான் அணியில் டனிஷ் கனீறியா இருப்பதைப்போலவே. அந்த அணியில் இந்து ஒருவர் இருந்ததில்லை. இன்று அணியின் கதாநாயகனாக அவர் தான் உள்ளார். கிரிக்கெட்டை பொறுத்தவரை பாகுபாடு என்பது அதிகளவில் இல்லை. அது ஒரு சதவீதத்தில் வேண்டுமானால் இருக்கலாம். வாழ்க்கையில் பாரபட்சம் அதிகளவில் இருக்கலாம். ஆனால், விளையாட்டில் அதிகளவில் அது இல்லை.

கே: ஏன் மொன்ரி பனீசர்? (இங்கிலாந்து)

ப: ஆம். ஒன்றாக விளையாடினால் உங்களை யாரும் வெளியேற்ற முடியாது. நான் இதுபோன்ற விடயங்களைச் சந்திக்கவில்லை. நான் வித்தியாசமாக வாழ்ந்திருந்தேன்.

கே: கிரிக்கெட் உலகில் உங்களின் மிக நெருங்கிய நண்பன் யார்? ப: அன்றூ பிளின்ரோவ் மிக நெருக்கமானவர். ஏனென்றால் அவருடன் நான் `லன்கேஷியஞ்க்'காக விளையாடினேன். அனில்(கும்ளே) நெருங்கிய நண்பன். ஷேன்வோன் ஒரு நண்பன்.

-தினக்குரல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.