Jump to content

சிறீலங்கா அரசு இணங்கினால் ஒரே நாளில் தரை வழிப்பாதை


Recommended Posts

அரசு இணங்கும் பட்சத்தில் ஒரே நாளில் யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை (ஏ9) திறக்க தாங்கள் தயாராயிருப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ( ஐ.சி.ஆர்.சி.) இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை அனுப்பிய கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது மூடப்பட்டுள்ள (ஏ9) வீதியை திறப்பதற்கு விடுதலைப்புலிகள் தயாராயுள்ளதாகவும் ஐ.சி.ஆர்.சி. இது குறித்து அரசுடன் பேசி இணக்கமொன்று காணப்பட்டால் ஒரு நாளிலேயே இந்தப் பாதையை திறக்க தாங்கள் தயாராயிருப்பதாகவும் இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் யாழ்.குடாநாட்டுக்கு சரக்குக் கப்பல்கள் செல்வதற்கோ அல்லது பயணிகள் கப்பல் பயணத்துக்கோ தங்கள் தரப்பிலிருந்து அனுமதி வழங்கப்படமாட்டாதெனவும் அது குறித்து இனித் தாங்கள் பேசப் போவதில்லையெனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தரை வழிப்பாதையூடான குடாநாட்டுப் பயணத்துக்கு மட்டுமே தங்களது அனுமதி வழங்கப்படுமெனவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் கிளிநொச்சி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் தமிழ்ச்செல்வனைச் சந்தித்த போது இவை பற்றியெல்லாம் அவர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே தங்களது நிலைப்பாட்டை தற்போது புலிகள் எழுத்து மூலம் ஐ.சி.ஆர்.சி.க்கு அனுப்பியுள்ளனர்.

யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதை திறப்பதற்கான அனுமதியை இதுவரை அரசு வழங்காத நிலையில் இது குறித்து அரசு மற்றும் இராணுவ தரப்புடன் ஐ.சி.ஆர்.சி. உடனடியாகப் பேச்சுக்கள் நடத்தவுமுள்ளது.

இந்தப் பேச்சுக்களைப் பொறுத்தே குடாநாட்டுக்கான தரைவழிப்பாதை திறப்பது தொடர்பான இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.