Jump to content

ஆசீவக நெறி - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி(ஆசீவகம் / Ajivika) #2


Recommended Posts

தமிழர்களின் அழிக்கப்பட்ட நெறி #4

முதல் மூன்று கட்டுரைகளைப் படிக்க, கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130413

 

முருகன் எப்படி ஆசீவக நெறியின் தெய்வம்? – பகுதி #1

பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆசீவக நெறியின் அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் மாற்றப்பட்டாலும் அதை முழுவதுமாக செய்ய முடியாது. அதேபோல் தான் ஆசீவக சித்தர்களின் அடையாளங்களும். முருகன் எப்படி தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தன் எனப் பார்க்கப் போகிறோம்.

 

விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும், எந்தச் செயலை தொடங்கும் முன்பும் திருமணத்திற்கு முன்பும் விநாயகரை வழிபடுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது.

 

       விநாயகர் ஆசீவக நெறியின் முழுமுதற் கடவுள் எனப் பார்த்தோம். ஏன் ஒரு ஆசீவக நெறியின் கடவுளை முருகன், சிவன், முதலிய தெய்வங்களை வணங்கும் முன்பு வணங்க வேண்டும் என நெறிகளை வகுக்கவேண்டும்?. ஏனென்றால், விநாயகர் ஆசீவக நெறியின் கடவுள். முருகன், சிவன், முதலியவர்கள் தெய்வ நிலையை அடைந்த சித்தர்கள்(ஆசீவக சித்தர்கள்). இதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

 

       முதலில், சங்க இலக்கியங்கள் முருகன் எனும் அரசனைப் பற்றித் தரும் செய்திகளைப் பார்ப்போம்

  1. முருகன் என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி. இந்தப் பொதினி இக்காலத்தில் பழநி என வழங்கப்படுகிது, அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். பொதினி குன்றம் மகளிர் மார்பக முகடு போல் பொலிவுடன் திகழ்ந்தது. அத்துடன் பொன்வளம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று. இதன் அரசன் நெடுவேள் ஆவி. நெடுவேள் ஆவி என்பது முருகன் பெயர்களில் ஒன்று. இப்பெயரைக் கொண்டவன் இந்த அரசன். மற்றும் வையாவிக்கோப்பெரும் பேகன், வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோரும் இவ்வூர் ஆவியர் குடிமக்களின் அரசன்.
  2. முருகன் குறுஞ்சி நிலத்து(மலை) அரசன். அங்கு, வாழும் மக்கள் குறவர்(குறத்தி, குறவன்), பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி, வேம்பன், கானவர்.
  3. ஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள்(ஆவியர்குடி) வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. பொதினியின்(பழநியின்) இன்னொரு பெயர் திருவாவினன்குடி(திரு+ஆவினன்குடி). ஆவியர் குடியினர் அருந்திறல் அணங்கின் ஆவியர்எனக் குறிப்பிடப்படுவதால் இவர்களின் உடல் தோற்றமே வலிமை மிக்கதாக அமைந்து பகைவரை அச்சுறுத்தியதை உணரமுடிகிறது. இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவிஎன்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

இலக்கிய மேற்கோள்

அகநானூறு 1, 61

புறநானூறு 147

திருமுருகாற்றுப்படை 176

சிறுபாணாற்றுப்படை 85, 86

வழக்குரை காதை

பதிற்றுப்பத்து

 

ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி(பழநி). இந்த ஆறு முகடுகளை ஆறுமுகம்(ஆறு+முகம்(முகடு-மலை)) என அழைக்கிறோம். இதை ஆண்டதால், முருகனை ஆறுமுகன் என அழைக்கிறோம். ஆனால், தமிழ் மொழித் தெரியாத ஆரியர்கள் ஆறுமுகன் என்றால் ஆறு முகங்களைக் கொண்டுள்ளவன் என தவறாகக் கருதி முருகனுக்கு ஆறு தலைகள் உள்ளது போல கதைகளைப் புனைந்து ஷண்முகன்(ஷண் - சமஸ்கிருதத்தில் ஆறு) என உருவாக்கினர்.

 

முருகன், தன் மக்களைக் காக்கும் அரசனாக இருந்துகொண்டு ஆசீவக நெறியைப் பின்பற்றியவன். பின்பு தெய்வ நிலையை அடைந்தான். முருகனை ஆசீவக சித்தன் என நாம் நிரூபிக்க வேண்டுமென்றால், முதலில் முருகன் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

 

முருகன் யார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில், படைவீடு, வேல், சேவல், மயில், காவடி, தண்டம், தலையில் மொட்டை அடிப்பது ஆகிய முருகனுக்குத் தொடர்புடைய விடயங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலில், முருகனின் அறுபடைவீடு என்பதை விளக்க வேண்டுமென்றால், முதலில், வீடு என்ற சொல்லின் பொருள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும்.

              வீடு – உயரத்தில் அமைந்துள்ள ஒரு தங்குமிடம்

                     ஒப்புநோக்குக:

                           வீ – உயர்வானது, பூவின் வாடும் நிலையைக் குறிக்கும்(வாடி மேலிருந்து கீழே விழும் நிலை)

                           வீழ் – உயரத்திலிருந்து விழுவது

                           விண் – மேல்(உயரத்தில்) இருக்கும் வானம்

                           அருவி – உயரத்திலிருந்து விழும் நீர்

       அதாவது, மலைமேல்(உயரமான இடம்) இருக்கும் வசிக்கும்/தங்கும் இடங்களை முதலில் வீடு என்றழைத்தனர். பின்பு அச்சொல், பொதுவான தங்குமிடங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

       படை என்ற சொல்லின் விளக்கம்,

படை – கொல்லும் தன்மை கொண்ட ஒன்று

முருகன் மலையின் கீழிருக்கும் எதிரிகளை மலையை அரணாகக் கொண்டு போர் புரிந்து விரட்டியமையால்(சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் போல), அம்மலைகளை நாம் படைவீடு என்றழைக்கிறோம்.

       படைவீடு – உயரத்தில் இருந்து கொல்லும் தன்மையைக் கொண்டது.

அறுபடைவீடுகளில் ஐந்து படைவீடுகள் மலை மேல் இருக்கின்றன. திருச்செந்தூர் மட்டும் விதிவிலக்கு. கோயில் மலை மேல் இல்லாமல் கடலோரம் இருக்கிறது என்றாலும், முருகன், அயலாரை போர் புரிந்து வெற்றி பெற்றதை இன்றும் சூரசம்ஹாரம் என இன்றுவரை கொண்டாடுகிறோம். படைவீடு எனும் சொல் காலப்போக்கில் பொதுவான படை இருக்கும் இடங்களைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கலாம். அதாவது, வீடு எனும் சொல் பொதுவான தங்குமிடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

                     சூரசம்ஹாரம் = சூரன்+சம்ஹாரம் = முருகன் சூரபத்மனை கொன்ற நிகழ்வு

                     சூரபத்மன் = சூரன்+பத்மன்

              சூரன் எனும் சொல் ஆரியர்களைக் குறிக்கும். எப்படி என்பதைக் கீழே பார்ப்போம்.

                     சுரா – ஆரியர்கள் அருந்திய ஒரு வகை மதுபானம்

                     சுரன்>சூரன் – ஆரியர்கள் இம்மதுவை அருந்துபவர்களை சுரன் என்றழைத்தனர்.

                     அசுரன் - ஆரியர்கள் இம்மதுவை அருந்தாதவர்களை அசுரன் என்றழைத்தனர்.

              இந்த, சுரன் என்ற வடசொல்தான் சூரன் என மருவியது.

       அப்பொழுது, முருகன் ஆரியர்களை எதிர்த்துப் போர் புரிந்தானா என்பது ஆயத்தக்க விடயம். இதைப் பற்றிப் பின்பு பார்ப்போம்.

 

முருகனின் அறுபடைவீடு என்றால், முருகன் போர் புரிந்து வென்ற இடங்களைக் குறிக்கும் என்பது தெளிவாகிறது.

அடுத்து, முருகனுக்கு அடையாளங்களாக வேல், மயில், சேவல் என்பன எப்படி வந்தன என்பதைப் பார்ப்போம்.

வேல் எப்படி வந்தது எனப் பார்ப்போம். வேல் எனும் தமிழ்ச்சொல்லின் பொருளைக் காண்போம்.

              மின்>மீன்(முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்) – மின்னும் தன்மையைத் தன்னுள் கொண்டது மீன். மின்னுவது மீன் எனப்பட்டது(கடல் மீன், விண் மீன்)

              புனை>பூனை – புனைவது(கண்டுபிடிப்பது – எலியை) பூனை எனப்பட்டது

              அனை>ஆனை – அனைப்பது ஆனை எனப்பட்டது

              மன்>மான் – மன்னுவது(நிலைபெறுதல், தங்குதல்) மான் எனப்பட்டது – ஒப்புநோக்குக : மன்னன், கோமான், சேரமான்

              உண்>ஊண் – உண்ணுவது ஊண்(உணவு) எனப்பட்டது

              அழி>ஆழி – அழிப்பது ஆழி எனப்பட்டது

              பேண்>பெண் – பேணுபவள்(விரும்பிக் காப்பாற்று) பெண் எனப்பட்டாள்

              காண்>கண் – காணுவது கண் எனப்பட்டது

              மாண்>மண் – மாணுவது(மாண்பு - மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு) மண் எனப்பட்டது

அதுபோல, வெல்>வேல் – வெல்லும் தன்மையைத் தன்னுள் கொண்டது வேல். வெல்லுவது வேல் எனப்பட்டது. அதாவது, போரில் வெற்றிபெறுவதற்கு உதவி செய்வது வேல் எனப்பட்டது. வெற்றியைத் தருவது வேல். ஆகையால், வேல் என்பது வெற்றி மற்றும் வீரத்தின் அடையாளம் எனவும் கூறலாம்.

 

வேல் என்ற உடனே நமக்கு முருகன் கையில் உள்ள வேலின் வடிவம் தான் நினைவுக்கு வரும். ஆனால், இதுமட்டும் வேல் அல்ல. சுமேரியாவில் பேல்(Bel) என்ற ஒரு சொல் உண்டு. அதைப் பார்த்தீர்களென்றால் சூலத்தை ஒரு கம்பின் இருபுறமும் வைத்ததைப் போல இருக்கும். இதை, ஆசீவகத்தில் ‘இருபுற முத்தலைக் கோல்’ என்பர். ஆசீவக நெறியின் அடையாளங்களுள் இதுவும் ஒன்று. வைணவத்தில் நாமமிடும் பழக்கம் இதிலிருந்துதான் தோன்றியது(நாமத்தின் நடுவில் இருக்கும் சிவப்பு நிறம் பகைவரின் குருதியைக் குறிக்கும்). இந்த ‘இருபுற முத்தலைக் கோல்’ம் வேல் தான். வேல் எனும் செந்தமிழ்ச்சொல்தான் பேல் என சுமேரியாவில் திரிந்தது.

 

வேல்(Vel)>பேல்(Bel) – Sumerian Tamil

ஒப்புநோக்குக:

       வெங்காலூர்>பெங்காலூர்>பெங்களூர்

       வங்காளம்>பங்காளம்>பெங்காளம்>பெங்கால்

       வேம்பாய்>பேம்பாய்>பம்பாய்

       வெள்ளை>பெள்ளை>பெலா – கன்னடம்

இதிலிருந்து, முருக வழிபாட்டின் தொன்மையை நம்மால் அறிய முடியும். இதைப் பற்றி பிறகு விளக்கமாகப் பார்ப்போம்.

மயிலும் சேவலும் எப்படி முருகனின் அடையாளங்களாகினவென்றால், இவை தன் எதிரிகளுடன் தந்திரமாகச் சண்டையிடும்(Martial Arts) தன்மையைக் கொண்டவை. ஆகையால், சேவலும் மயிலும் முருகனின் போர்த்திறனைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகின.

 

பொதினி மலையில்(பழநி மலையில்) மேல் உள்ள முருகனுக்கு தண்டாயுதபாணி எனப் பெயர். அதாவது, கையில் தண்டம் எனும் போர்க்கருவியை(சங்ககாலப் போர்க்கருவி) வைத்திருப்பவன் எனப் பொருள்படும்.

 

இதிலிருந்து, முருகன் என்பவன் சங்ககால அரசன். அவன் போர் புரிவதில் வல்லவன். போர் புரிந்து பல வெற்றிகளை பெற்றுள்ளான் என்பது தெளிவாகிறது. தமிழர்களுக்கு முருகன் வீரத்தின் அடையாளமாக உள்ளவன்.

 

அடுத்து, காவடி என்பது முருகனுடன் எப்படித் தொடர்புடையது என்பதைப் பார்ப்போம். காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். முதலில், காவடி என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம். ‘காவடி’ என்ற சொல் ‘காவுதடி’ என்ற சொல்லின் திரிபு எனக் கூறுவர். கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. சுமை காவுபவர்கள் இலகுவாகச் சுமப்பதற்காக, ஒரு நீண்ட தடியின் இரு முனைகளிலும் சுமைகளைத் தொங்கவிட்டு அத்தடியின் நடுப்பகுதி தோளில் இருக்குமாறு வைத்துச் சுமந்து செல்வர். காவுவதற்கான தடி என்னும் பொருள்பட இத் தடியைக் காவுதடி என அழைப்பர். முருகன் இந்தக் காவுதடியைப் பயன்படுத்துபவனாக இருந்திருக்க வேண்டும்.

 

பழனி மலைமேல் உள்ள தண்டாயுதபாணி(முருகன்) தலையில் மொட்டை அடித்துள்ளவர். முருகன் ஏன் தலையில் மொட்டை அடித்திருக்க வேண்டும் என நாம் ஆய்ந்தால், சமணர்கள்(ஆசீவகர், ஜைனர்) மற்றும் பௌத்த நெறியைச் சேர்ந்தவர்கள் தலையில் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள் என நமக்குப் புலப்படும். ஆரம்பக்காலத்தில் பழநி முருகன் கோயிலில் தலையில் மொட்டை அடிக்கும் வழக்கம் வந்தது, முருகன் ஆசீவக சித்தன் என்பதால் மட்டுமே என்பதும் புலப்படும். இதனால் தான், முருகனது பக்தர்கள் காவடி(காவுதடி) தூக்கும் வழக்கமும் தலையில் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கமும் வந்திருக்கலாம். இதற்குப் பொருள், முருகனை குருவாக ஏற்று, அவனிடம் சரணடைந்து கற்றுக்கொள்ள வருகிறோம் என்பதே(ஆசீவக சித்தர்களிடம் கற்றுக்கொள்ளும் மாணவர்களைப் போல்).

 

(சமணம்(ஆசீவகம், ஜைனம்) மற்றும் பௌத்தத்தில் ஏன் மொட்டை அடிக்கிறார்கள் அதாவது முருகன் ஏன் தலையில் மொட்டை அடித்துள்ளார் என்பதன் அறிவியல் விளக்கம் பற்றி சிறிது ஆயவேண்டும். திருமாலுக்கும் தலையில் மொட்டை அடிப்பதற்கும் உள்ள தொடர்பை பிறகு காண்போம்.)

 

ஆசீவக நெறியில் தீர்த்தங்கரர் என்றால் தீர்வைத் தருபவர் (அ) தீர்வு தருவதைக்(தீர்த்தம்) கையில் வைத்திருப்பவர் எனப் பொருள்.

தீர்த்தங்கரர் = தீர்த்தம் + கரர் = தீர்த்த + ங் + கரர்

       தீர்த்தம்(பண்புச்சொல்)=தீர்த்து+அம்(பண்புத்தொகை உருபு)<தீர்த்து(வினையெச்சம்)<தீர்த்தி+உ(வினையெச்சம் விகுதி)<தீர்த்தி(தொழிற்பெயர்)<தீர்+த்+தி<தீர்+தி(தொழிற்பெயர் விகுதி)<தீர்

திருத்தம் = திருத்து + அம் = திருத்தும் பண்பு(தன்மை) கொண்டது திருத்தம் எனப்பட்டது

இயக்கம்

பழக்கம்

விருப்பம் = விருப்பு + அம் = விருப்பும் பண்பு(தன்மை) கொண்டது விருப்பம் எனப்பட்டது

வருத்தம் = வருத்து + அம் = வருத்தும் பண்பு(தன்மை) கொண்டது வருத்தம் எனப்பட்டது

வணக்கம் = வணக்கு + அம் = வணக்கும் பண்பு(தன்மை) கொண்டது வணக்கம் எனப்பட்டது

              அதுபோல, தீர்த்தம் = தீர்த்து + அம் = தீர்த்தும்(வினை தீர்ப்பது) (அ) தீர்த்து வைக்கும் பண்பு(தன்மை) கொண்டது தீர்த்தம் எனப்பட்டது

              கரர் = கரு + அர் = ஒரு செயலை செய்பவர்

                     கர் = கரிய நிறத்தின் தன்மையைக் குறிக்கும் சொல்(கருப்பு நிறத்திற்கும் நாம் செய்யும் செயலுக்கும் தொடர்பு இருப்பதால், பிற்காலத்தில் செய்யும் செயலை அல்லது அதன் எதிர்வினையைக் குறிக்கப் பயன்பட்டது.)

                     கர்>கரு(கர்+உ) – உ(படர்க்கை விகுதி) = ஒரு செயலை ஒருவர் செய்வதால் தோன்றும் ஒன்று(எதிர்வினை/கருமம்)

                     கர்>கரு>கரம் = அந்தச் செயலைச் செய்வது

கரம் = கரு + அம் = ஒரு செயலை(கருமத்தை) செய்வது(கைக்கு கரம் என்ற சொல்லும் இப்படித்தான் வந்தது.)

                     கர்>கரு>கருப்பு

                     கர்>கரு>கருமம்>கர்மா(Karma) = நன்மையான/தீமையான செயல். எக்கருமத்திற்க்கும் அதற்கு இணையான கருமபலன் இருக்கும். இது ஆசீவகம் மற்றும் ஜைனம் இரண்டிலும் உள்ள கோட்பாடு. ஆனால், கருமபலனை பற்றிதான் இவ்விரு நெறிகளும் வேறுபடுகின்றன.

 

இதேச் சொல்லாடல் ஜைனத்திலும் உண்டு. இத்தீர்த்தங்கரரை அவர்கள் அருகன்(அருகன்>Arhat) எனவும் அழைப்பர். அதனாலேயே ஜைனர்களுக்கு, அருகர்/ஆருகதர் எனும் பெயரும் வந்தது. இப்பொழுது ஏன் இதைக் கூறுகிறேன் எனப் பார்க்கிறீர்களா?. அருகன் என்பது நம் முருகனின் வேறுபெயர்களுள் ஒன்று. நம் முருகனின் பெயரான அருகன் எனும் பெயர் ஜைனத்தில் அனைத்து தீர்த்தங்கரரைக் குறிக்கும் பொதுச்சொல். ஆசீவக முருகன் என்பவன் தீர்த்தங்கரர்(அருகன்) எனும் பெயரில் ஆசீவகத்திலும் ஜைனத்திலும் கந்தன்(ஸ்கந்தா/கந்தாஸ் – Skanda(Sanskrit)/Khandas(Pali)) எனும் பெயரில் பௌத்தத்திலும் உள்ளவன். இதனால் தான், கதிர்காமத்தில் உள்ள கந்தன் கோயிலை இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்தர்களும் வழிபடுகின்றனர். சீனாவிலும் பௌத்த நெறியில் Skanda(Skanda Bodhisattva/Wei Tuo) வழிபாடு உள்ளது. அங்கு, Skandaவை போதிசத்துவர்(Bodhisattva) எனக் குறிப்பிடுவர். போதிசத்துவர் என்பது ஆசீவக சித்தர்களின் வேறுபெயர்களுள் ஒன்று எனப் பார்த்தோம். இதன் பொருள் என்னவென்றால், ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் போதி சத்துவர்எனப் பெயர் பெற்றனர். இங்கு நாம் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்தையும் போதிதர்மரையும் ஒப்புநோக்கவேண்டும்(இதைப் பற்றி பிறகு பார்க்கலாம்).

 

ஆசீவக முருக வழிபாடு எப்படி இந்து(தற்போதைய) நெறியிலும் ஜைன பௌத்த நெறிகளிலும் வந்தது என நீங்கள் கேட்கலாம். விநாயகர் வழிபாடு எப்படி இந்து ஜைன பௌத்த நெறிகளில் வந்தது என குறிப்பிட்டிருந்தேனோ அப்படித்தான் முருக வழிபாடும் வந்தது. முருக வழிபாடு எப்படி ஜைன பௌத்த நெறிகளுக்கு வந்தது என்றால், ஜைனக் கோட்பாடுகளும் பௌத்தக் கோட்பாடுகளும் ஸ்ரமணம்(அமணம்>சமணம்>ஸ்ரமணம்) எனும் சமணத்தின் திரிபிலிருந்து தோன்றியவை. அதற்கு முன் சமணம் எனும் சொல் ஆசீவகத்தை மட்டுமேக் குறிக்கும். அதாவது, ஜைனம் தோன்றுவதற்கு முன்பு சமணம்(அமணம்) என்றால் ஆசீவகம், ஆசீவகம் என்றால் சமணம்(அமணம்) என்றே பொருள். ஜைனம் தோன்றிய பின்பு சமணம் எனும் சொல் ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய இரண்டையுமே சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல்லானது. ஏன் பொதுச்சொல்லாக வேண்டும்?. அதற்குக் காரணம், ஆசீவகத்திற்கும் ஜைனத்திற்க்கும் பொதுவாக உள்ள கோட்பாடுகளால் தான். ஜைனக் கோட்பாடுகள் ஆசீவகக் கோட்பாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். ஆனால், சிறிது வேறுபாடுகள் உண்டு. இதனால் தான், முருக வழிபாடு, ஜைனத்திலும் பௌத்தத்திலும் உள்ளது. சமணம் எனும் சொல் ஜைனம் தோன்றிய பின்பு ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய நெறிகளைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் என்று இருந்தால், பின்பு எப்படி சமணம் எனும் சொல் ஜைனம் எனும் சொல்லின் தமிழ்ச் சொல்லானது என நீங்கள் கேட்கலாம். இதற்கு விடை, முன்பு கூறப்பட்ட ஆசீவக நெறியின் சான்றுகளில் உள்ளது. அதாவது, இதற்குக் காரணம், ஆசீவகக் கோட்பாடுகள் மற்றும் வழிபாடுகள், ஆசீவகர்கள் நம்பிய, முன்பே முடிவு செய்யப்பட்ட விதி எனும் கொள்கையினாலும், வைதீக ஜைன பௌத்த நெறிகள் தங்கள் நெறியை புராணங்கள் மூலம் பரப்பியதாலும், வைதீக ஜைன பௌத்த நெறிகளால் ஆசீவகக் கோட்பாடுகளை இழுத்துக்கொள்ளப்பட்டதால் ஏற்ப்பட்ட குழப்பங்களாலும், ஆசீவகக் கோட்பாடுகள் வைதீக இந்து நெறிக்குச் சென்று பிற்கால வைதீக நெறியினர்களால் திரிக்கப்பட்டதாலும், பிற்காலத்தில் வைதீக இந்து நெறியின் செல்வாக்கு உயர்வாலும், மக்களிடம் வெகுவாகக் குறைந்த ஆசீவக நெறியின் செல்வாக்காலும், வழிவழியாக வந்த ஆசீவக நெறியைப் பற்றிய அறிவு குறைந்ததாலும், ஆரியர்களால் தமிழர்களின் வரலாற்று திரிப்புகளாலும் அழிப்புகளாலும், தற்காலத்தில் அப்படி ஒரு நெறியே இல்லை என்றளவிற்கு ஒரு நிலையை உருவாக்கிவிட்டது. அக்காலத்திலிருந்தே, ஜைன பௌத்த வைதீக நெறிகள் புராணங்கள் மூலம் தங்கள் நெறியை மக்களிடம் பரப்பின. ஏன், இந்நாட்களில் கூட தொலைக்காட்சிகளில் வைதீக இந்து நெறியினர், இராமாயணம் மகாபாரதம் முதலிய வைதீக இந்துக்களால் திரித்து(புனைந்து அல்ல) எழுதிய புராணங்களை திரையிடுகின்றனரே. ஏற்கனவே உள்ளவர்களிடம் மத நம்பிக்கையை வலுப்படுத்தவும் வழிவழியாக வரும் அடுத்த தலைமுறையினருக்கு தங்கள் மதத்தைப் பரப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் தான் இந்த செயல். ஆசீவக வழிபாடுகள் வைதீக இந்து நெறிக்குச் சென்ற பின் வைதீக நெறியினர்களால் புராணங்களாகத் திரிக்கப்பட்டன.

 

இது மட்டுமல்ல, கீழுள்ள கோட்பாடுகள் ஆசீவக ஜைன பௌத்த இந்து நெறிகளில் பொதுவாக உள்ளதை நாம் பார்க்கலாம்.

  1. விநாயகர் வழிபாடு
  2. முருகன் வழிபாடு
  3. ஓம் எனும் மந்திரச் சொல்
  4. சுழற்றியம்(ஸ்வஸ்திகா)
  5. ஊன் உண்ணாமை
  6. உண்ணா நோன்பு
  7. தலையில் மொட்டை அடிப்பது

இன்னும் பல...

 

சமணம்(ஆசீவகம், ஜைனம்), பௌத்தம், தற்போதைய வைதீக இந்து நெறிகள் அனைத்திற்கும் இடையே இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கின்றதென்றால், தற்செயலாக இது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. முருகன் ஆனைமலையை ஆண்ட அரசன் எனப் பார்த்தோம். முருகனின் அறுபடைவீடுகளில் மலைமேல் உள்ள ஐந்து படைவீடுகள் அனைத்திலும் சமண குகைகள் உள்ளன என்பது இங்கு நோக்கத்தக்கது. சமணர் என்றால் இங்கு ஜைனரா ஆசீவகரா என நாம் பார்க்கவேண்டும். ஜைன நெறியினருக்கும் ஆசீவக நெறியினருக்கும் உள்ள வேறுபாடுகளுள் ஒன்று, ஜைன நெறியினர் மலை மேல் தங்கமாட்டார். அவர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் தங்குபவர்கள். ஆனால், ஆசீவகர்கள் மலைமேல் கற்படுக்கைகள் அமைத்துத் தங்குபவர். இதன்மூலம், இக்குகைகள் ஆசீவக சித்தர்கள் தங்கிய இடங்கள் எனத் தெளிவாகிறது.

 

இதன்மூலம், முருகன் ஆசீவக நெறியின் தெய்வ நிலையை அடைந்த சித்தன் எனத் தெரிகிறது. மேலும், முருகனை சித்தன், ஐயன்(எடுத்துக்காட்டு: முருகையன், வேலையன், சுப்பையன்), ஐயா என ஆசீவக சித்தர்களைக் குறிப்பிடும் சொற்களை வைத்து அழைப்பதும் இங்கு நோக்கத்தக்கது. இதை மேலும் உறுதிபடுத்தும் தரவுகளை அடுத்தத் திரியில் காண்போம்.

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

முருகன் பற்றிய ஆய்வு இதுவரையில் நான் அறிந்து யாரும் இப்படி செய்ததில்லை . அதிலும் திரு ஆவினன்குடி என்ற பெயர் வரக் காரணம் புதுமையாக இருக்கின்றது. இதுவரை பசுக்கள் அங்கு அதிகமாக இருந்த காரணத்தினாலேயே அந்தப் பெயர் வந்தது என்று சில இடங்களில் படித்திருந்தேன் .உங்கள் ஆய்வு ஆவணப் படுத்தப் பட வேண்டியது தமிழ் வேந்தன் . தொடருங்கள் உங்கள் ஆய்வுகளை .

 

Link to comment
Share on other sites

நன்று தமிழ்வேந்தன்.  எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. ..

> ஐந்திணை நிலங்களை பிரித்து அவைகளின் கடவுளாக முருகன் எங்கும் கூறப்படவில்லையே. குறிஞ்சி நிலக் கடவுகளாக கூறப்படும் சேயோனுக்கும் முருகனுக்கும் எதாவது தொடர்பு உண்டு என்று எண்ணுகிறீர்களா?

> வீரத்தின் அடையாளமாக கருதப்படும் கந்தனின் கையில் வேலும், அவன் செய்த போர்களையும் காண்கிறோம். போர்த்தொழிலை கொண்ட கந்தன் கொல்லாமையை போதிக்கும் சமண மதத்தின் மூலமாக பார்க்கலாமா?

> "கொடிநிலை கந்தழி வள்ளி என்னும்
வடுநீங்கு சிறப்பின் முதலன
மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

என்று தொல்காப்பியம் கூறும் கந்தழி வழிபாட்டு முறைக்கும் கந்தனுக்கும் தொடர்பு உண்டா ?

 

> சங்க இலக்கியம் முழுவதும் கூறப்படும் "வேலன் வெறியாட்டில்" வழிபடக்கூடியவன் இவனா?
 

Link to comment
Share on other sites

> வீரத்தின் அடையாளமாக கருதப்படும் கந்தனின் கையில் வேலும், அவன் செய்த போர்களையும் காண்கிறோம். போர்த்தொழிலை கொண்ட கந்தன் கொல்லாமையை போதிக்கும் சமண மதத்தின் மூலமாக பார்க்கலாமா?

 

உங்கள் கேள்வி நியாயமானதே. கொல்லாமையை போதிக்கும் சமண(ஆசீவகம், ஜைனம்) மதத்தில் எப்படி போர் புரிந்து பிற உயிர்களைக் கொன்ற அரசன் இருக்க முடியும்?.

 

போர் என்பதை எதிரியை அழிக்கும் தொழிலாகப் பார்ப்பதை விட தமிழர்கள் அதை ஒரு கலையாகப் பார்த்தனர் என்றேக் கூறவேண்டும். போர்க்கலையில் வெற்றி பெறுவது வீரத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது எனலாம்.

 

ஆசீவக(சமணம்) நெறி என்றால் கொல்லாமை, விதி நம்பிக்கை, முதலிய கோட்பாடுகள் மட்டும் அல்ல. அப்படிப்பட்ட காட்சிதான் நம் மனதிற்கு முதலில் வரும். அப்படிப்பட்ட நிலைமையில் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், கலைகளை(ஆயகலைகள் 64 - அறிவியல்கள்) உருவாக்கியவர்கள் தமிழ்ச் சித்தர்கள்(ஆசீவக சித்தர்கள்).

தமிழ் மொழி - ஒரு கலை

சோதியம் - ஒரு கலை

போர் - ஒரு கலை

சித்தம்(சித்த மருத்துவம்) - ஒரு கலை

ஓகம்(யோகம்) - ஒரு கலை

 

போர்புரியும் நோக்கத்தில் மூன்று வகை உண்டு. வீரத்திற்காக போர் புரிவது. பகைக்காக போர் புரிவது. போராமைக்காக(பொறாமை)/ஆக்கிரமிப்பிற்காக/தன் தேவைக்காக போர் புரிவது. முதல் வகையில் பகைவரை அழிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகையில் பகைவரை அழிக்கும் நோக்கம் கண்டிப்பாக இருக்கும். இந்த வேறுபாடு தமிழர்களுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.

 

தமிழர்களுக்குள்ளேயே முற்காலத்தில், வீரத்திற்காக போர் புரிந்தவர்கள், பிற்காலத்தில், பகைக்காக போர் புரிந்தனர் என்பது ஒன்று. ஆனால், தமிழர்களைத் தவிர பிற மக்கள் கூட்டங்களும் தமிழர்களின் மீது போர் தொடுத்து வந்தனர். அக்காலத்திலேயே, ஒரு நாடு கலைகள்(அறிவியல்கள்) மற்றும் செல்வங்கள் கொழிக்கும் நாடாக இருந்தால், பிற நாட்டு மக்கள்/பகைவர்கள்(தமிழகத்தைத் தவிர) போர் தொடுத்து(பண்பாட்டுப் போர்/அரசியல் போர்) வரத்தான் செய்வர்(இது நியதி). பகைவர்களிடமிருந்து மக்களைக் காக்க போர்க்கலைகளும் மற்ற சண்டையிடும் கலைகளும்(சிலம்பாட்டம், மல்யுத்தம், மற்றும் பல) தேவைப்பட்டிருக்க வேண்டும். இப்படிப் பட்ட கலைகளை உருவாக்கியவன்/பெறிதாக வளர்த்தவன் முருகனாக இருந்திருக்க வேண்டும். முருகன் போர்கள் செய்து தன் மக்களைக் காத்தான்(மக்களின் உயிரைக் காத்தான்). சங்க இலக்கியம் குறிப்பிடும் முருகன் செய்த போர் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகையைச் சார்ந்தவை. மேலும், இங்கு நோக்க வேண்டியதென்னவென்றால், சங்க இலக்கியங்கள் முருகன் பகைவரை அழித்தான் எனக் கூறவில்லை. மாறாக பகைவரை துரத்தியடித்தான் என்றேக் கூறுகிறது. இங்கு, நோக்கம் என்பது தன் நாட்டு மக்களைக் காப்பதேத் தவிர பகைவரை அழித்தல் ஆகாது. அப்படி அவன் செய்யவில்லையென்றால், கொல்லாமையை பின்பற்றும் அவன் நாட்டு மக்களும் அழிவர் என்கிற பொழுது, ஒரு நாட்டு அரசன் என்ற முறையில் அவன் போர் புரியாமல் இருக்க முடியாது.

 

கொல்லாமை என்பதை ஒரு கோணத்தில் பார்த்தால் உயிரைக் காப்பது(கொல்லாமல் காத்தல்) எனவும் பொருள் கொள்ளலாம். இன்னும் கூறப்போனால், ஒரு உயிரை கொல்லாமல்/கொல்லவிடாமல் தடுப்பதும் உயிரைக் காத்தல் எனப்படும்(அரசனின் தொழிலான மக்களைக் காத்தல்). இவ்வகையில் பார்த்தாலும், முருகன் பகைவரின் உயிரைக் காத்து அவர்களை அழிக்காமல் துரத்தியிருக்கிறானே.

 

> ஐந்திணை நிலங்களை பிரித்து அவைகளின் கடவுளாக முருகன் எங்கும் கூறப்படவில்லையே. குறிஞ்சி நிலக் கடவுகளாக கூறப்படும் சேயோனுக்கும் முருகனுக்கும் எதாவது தொடர்பு உண்டு என்று எண்ணுகிறீர்களா?

 

சேயோன் என்ற சொல் சிவந்தவன் எனப் பொருள்படும். சிவந்தவன் என்றால் சிவனா முருகனா என நாம் பார்க்கவேண்டும்.

குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடல் முருகனை சிவப்பு நிறமுடையவன் எனக் குறிப்பிடுகிறது. இப்பாடலில் இன்னும் ஆய்வு தேவை. ஏனென்றால், இதேப்பாடலில் தான் 'உடுக்கைக் குன்று' எனும் சொல்லும் வருகிறது. 'உடுக்கை' என்பது சிவன் தொர்புடைய சொல்.

 

முருகனுக்கும் சிவப்பு நிறத்திற்கும் குறுஞ்சி நிலத்திற்கும் தொடர்புகள் இருந்தாலும் சேயோன் எனும் சொல் ஆய வேண்டிய ஒன்று.

 

ஐவகை நிலத்திற்கும் தொல்காப்பியர் கூறும் கடவுள்கள் முறையே

 

சேயோன்

மாயோன்

வேந்தன்

வருணன்

கொற்றவை

 

ஆகும். இதில், வேந்தன் எனும் சொல்லை நாம் எடுத்துக் கொண்டால், அது ஒரு பொதுச்சொல். அதாவது மருத நிலத்தை ஆளும் அரசனைக் குறிக்கும் பொதுச்சொல். ஆகையால், சேயோன் எனும் சொல் ஒரு பொதுச்சொல்லாகக் கூட இருக்கலாம். இச்சொல், சிவன் முருகன் இருவரையுமே குறிக்கப்பயன்பட்டிருக்கலாம். சங்ககாலத்தில் இருந்து இன்று வரை முருகனை சிவனின் ஒரு அம்சமாக பார்க்கப்பட்டிருப்பதும்(யாரால்?) இங்கு நோக்கத்தக்கது.

  • வேதங்களில் இந்திரன் என்ற தேவர்கள் அரசனின் படைகளான மருதகணங்களின் தலைவனாக ருத்ரன்(உருத்திரன்(சிவன்)>ருத்திரன்>ருத்ரன்) குறிப்பிடப்படுவது போன்றே வடமொழிப் புராணங்களில் தேவசேனாபதியாக முருகன் (ஸ்கந்தன்) குறிப்பிடப்படுகிறான்.
  • திருஞானசம்பந்தரை முருகன் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் சொல்வர். கந்தசஷ்டிக்கு முருகனுக்கு மும்மூர்த்தி அலங்காரம் செய்யும் வழக்கம் உள்ளது. ஐப்பசியில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து (சிவப்பு சாத்தி) நடராஜராஜர்(சிவன்) அம்சமாகவும், மதியம் வெள்ளை (வெள்ளை சாத்தி) வஸ்திரத்துடன் பிரம்மா அம்சமாகவும், மாலையில் பச்சை (பச்சை சாத்தி) வஸ்திரம் அணிந்து திருமால் அம்சமாகவும் காட்சி தருவார். இந்த வழக்கத்தை நாம், சிவகிரியில்(திருநெல்வேலி) உள்ள முருகன் கோயிலிலும் மருங்கூரில்(கன்னியாகுமரி) உள்ள முருகன் கோயிலிலும் காணலாம்.
  • கீழுள்ள நம் மரபு வழிச்செய்தியையும் இங்கு நாம் பார்க்கவேண்டும்.

தமிழ் கற்றுக்கொடுத்தது

சிவன்->முருகன்->அகத்தியர்->அகத்தியர் சீடர்களுள் ஒருவரான தொல்காப்பியர்

முருகன் சிவனிடமிருந்து தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார்.

 

 

இதைப் பற்றி சிறிது ஆய்ந்துவிட்டு மிகுதியை அடுத்தத் திரியில் எழுதுகிறேன். இப்போதைக்கு எனக்குத் தோன்றுவது,

 

சேயோன் -> சிவந்தவன்(சேயோன் பொருள்) -> சிவன், முருகன் <- சிவலிங்கம் <- கந்தழி

 

> "கொடிநிலை கந்தழி வள்ளி என்னும்

வடுநீங்கு சிறப்பின் முதலன

மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

என்று தொல்காப்பியம் கூறும் கந்தழி வழிபாட்டு முறைக்கும் கந்தனுக்கும் தொடர்பு உண்டா ?

 

> சங்க இலக்கியம் முழுவதும் கூறப்படும் "வேலன் வெறியாட்டில்" வழிபடக்கூடியவன் இவனா?

 

இதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. என் பார்வைக்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி... :)

 

இதைப் பற்றி ஆய்ந்து, அடுத்தத் திரியில் இவைகளைப் பற்றிய என் ஆய்வை சேர்த்து எழுதுகிறேன்...

Link to comment
Share on other sites

தொடர்ந்து ஆய்ந்து எழுதுங்கள். ஆவலோடு வாசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

உங்கள் ஆய்வின்போது கீழ்க்கண்டவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
 
சங்க இலக்கியத்தில் மூன்று நிலைகளில் படிப்படியாக முருக வழிபாடு மாறுபடுகிறது. 
 
1. முதலில் குறிஞ்சிக் கடவுளாக குறவர் தெய்வமாக போற்றப்படுகிறார்.  அவருக்கு நிலையான ஆலயமோ வழிபாட்டு  இல்லை.வெறியாட்டு போன்ற விழாக்கள் இந்தக் காலகட்டத்தில் இருந்தது. 
 
2. ஆறுபடை வீடுகள் என்ற பெயரில் இருந்த ஆலயங்கள் முருகனின் தங்கும் இடமாக அமைத்தது. இது திருமுருகாற்றுப் படை காலம் 
 
3. வெறியாட்டு போன்ற விழாக்கள் தவிர்க்கப்பட்டு முற்றிலும் சமஸ்கிருத மொழியிலான மந்திரங்களை ஓதி செய்யப்பட்ட வழிபாடு. இது பரிபாடல் காலம் 
 
வேந்தன் என்னும் சொல் முதலில் மருத நிலத் தலைவருக்கே இருந்தது. காலப்போக்கில் அது பொதுவாக மாறியது.
 
கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையிலான முருகன் சிற்பங்களிலெல்லாம் முருகனின் வாகனமாக யானையே சித்திரிக்கப்படுகிறது என்று ஒரு கட்டுரையில் படித்தேன்.யானை வடிவெடுத்து வள்ளியை அச்சுறுத்தி முருகனிடம் அடைக்கலம் புகச் செய்து இருவரையும் மணம் புணரச் செய்தவர் விநாயகரே என்று கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அருணகிரிநாதர் தமது திருப்புகழில் குறிப்பிடுகிறார்.  
 
ar0407064a.jpg
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஆதித்ய இளம்பிறையன் அவர்களே,

தமிழர்களின் சேயோனுக்கும் சிவப்பு இந்தியர்களுக்கும்(Red Indians) நிறைய பண்பாட்டு ஒற்றுமைகள் கிடைக்கிறது. அதேபோல, தமிழர்களின் மயோனுக்கும் மாயன்களுக்கும்(Mayans) நிறைய பண்பாட்டு ஒற்றுமைகள் கிடைக்கிறது. சேயோன், கந்தழி குறித்த உங்கள் ஆய்விற்கு உதவும் எனத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

தமிழ்வேந்தன் உங்களது அடுத்த ஆய்வுப் பகுதி எப்போது ??.

Link to comment
Share on other sites

தமிழ்வேந்தன் உங்களது அடுத்த ஆய்வுப் பகுதி எப்போது ??.

 

இன்னும் ஓரிரு வாரங்களில் அடுத்தக் கட்டுரை முடிந்துவிடும்...முடிந்தவுடன் பகிர்ந்துகொள்கிறேன்... :)

 

ஐயா ஆதி. சங்கரன் அவர்கள் ஆசீவகம் பற்றி இயற்றிய சிறுசிறு நூல்கள் சிலவற்றை அவரின் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்(இணைப்புகள் கீழே)...இன்னும் பல கோட்பாடுகள் இந்நூல்களில் உள்ளன...

 

ஆதித் தமிழர் மெய்யியல், ஆதி. சங்கரன்

ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள், ஆதி. சங்கரன்

ஐயனார் தந்த ஐகாரமும் ஐகாரம் தந்த வள்ளுவரும், ஆதி. சங்கரன்

 

நேரம் கிடைக்கும்பொழுது படிக்கவும்...

Link to comment
Share on other sites

  • 1 year later...

தமிழ்வேந்தன் அய்யா நான் உங்களை தொடர்புகொள்ள விரும்புகிறேன் தயவுசெய்து எப்படி தொடர்புகொள்வது என தெரியபடுத்துங்கள்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சித்தார்த்துவுக்கும்  அரை அமைச்சுப்பதவி ரெடியோ....
    • இரண்டாம் வாக்கை எனக்குத்தான் போடுவினமோ என்று..கன்பார்ம் பண்ணப்போயிருப்பார்..
    • கரும்புலி  மேஜர் மறைச்செல்வன்  செல்வராஜா ரஜினிகாந்தன்  தமிழீழம் (வவுனியா மாவட்டம்)  தாய் மடியில் :03-05-1981 தாயக மடியில்:10.05-2000 அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்து கொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்த படி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்து கொண்டிருந்தது. அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற நெஞ்சுடனும் ஓர் உருவம். நீண்ட கால்கள், பெருத்த கைகள், குழம்பிப்போன தலைமயிர், அடுக்கான பல்வரிசையில் சற்று மிதந்து நிற்கும் ஒரு பல், பொதுநிறம், கண்குழிக்குள் அலையும் கண்கள் எங்கோ, எதையோ தேடிக்கொண்டிருந்தன. இப்படி அடையாளங்களோடு ஒருவன், அவன்தான் அந்த அணியை வழிநடத்திச் செல்லும் அணித்தலைவன் மறைச்செல்வன். அவனது நெஞ்சிற்குள் எத்தனையோ ஏக்கங்கள். அதை முகத்தில் சிறிதும் வெளிக்காட்டிவிடாது தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அணிகள் எட்டவேண்டிய இலக்கு நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான். இடையில் எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டிச்செல்ல அதிக நேரம் தாமதமாக வேண்டியிருந்தது. தொலைத்தொடர்புக் கருவி அவனை அழைத்தது. ஏதோ கதைத்தான். “இன்னும் இலக்குகளை ஏன் அடையவில்லை. தாக்குதல் தொடங்கி விட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் ஏராளம். அதைத் தெரிந்தும் “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறித்த இடத்தில் நின்று தொடர்பு எடுக்கின்றோம்” என்று கூறிவிட்டு உடனேயே தொடர்பைத் துண்டித்தான். போய்ச் சேரவேண்டிய இடத்திற்கும் அவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே நீண்ட அந்தக் காட்டுப் பகுதியைக் கடக்க அவர்களிற்கு அந்த நேரம் போதாது. அதுவும் படை முகாம்களைக் கடந்து போக வேண்டியிருந்தது. வேகமாக எல்லோரும் நடந்தார்கள். அந்தக் காட்டுப்பகுதி அவனுக்குப் பழக்கமானது. மரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருந்தான். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையில் அவன் பங்கெடுத்திருந்த போது அதே இடங்களில் பலநாட்கள் கண்விழித்து நின்றிருக்கின்றான். அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவன் தன் தோழர்களைப் பிரிந்து தேம்பி இருக்கின்றான். அப்போதெல்லாம் “உந்த ஆட்லறியை உடைக்கவேணும்” என்று மனதினுள் குமுறிக்கொள்வான். அது அவனிற்கும் அந்த மரங்களிற்கும்தான் தெரியும். தொடர் சண்டைக் காலத்தில், காவலரணில் கடந்த நாட்களில் ஆட்லறி ஏறிகணைகள் சினமும் வெறுப்பும் ஊட்டுபவையாகவே இருந்தன. ஒன்றாய் பதுங்கு குழியில் இருந்து விட்டு தண்ணீர் எடுத்து வரவென வெளியில் சென்ற அவனிலும் அகவை குறைந்த தோழன் திரும்பி வரமாட்டான்... அவன் எறிகணை வீச்சில் வீரச்சாவு அடைந்தோ, அல்லது விழுப்புண் பட்டோ இருப்பான். காணாத தோழனைத் தேடிச்சென்று இரத்த வெள்ளத்தில் காணும் வேளைகளையெல்லாம் சந்தித்தவன். இதற்கு காரணம் அந்த ஆட்லறிகள். அதை உடைக்க வேணும் என்று மனதிற்குள் அப்போதே முடிவெடுத்துக் கொண்டான். அதற்காகவே தலைவருக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தன்னையே வருத்திப் பயிற்சி எடுத்து இப்போது கரும்புலியாய் இலக்குத்தேடிப் போகின்றான். அவன் முதலில் நடந்த இடங்களை மீண்டும் காணுகின்ற போது மயிர் சிலிர்த்தது. நடையை விரைவுபடுத்தி வேகமானார்கள். பொழுது கருகின்ற நேரம் தான் அந்த இராணுவ முகாமிற்கு அண்மையாக வந்திருந்தார்கள். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடியவேண்டும். தேசம் வேண்டி நிற்பது அதுவே. வன்னியில் பெரும் நிலங்கள் பகை வல்வளைப்பால் குறுகிக்கொண்டிருந்த காலம். நகரங்களையும் தெருக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு இழந்துகொண்டிருந்தது. இந்த அச்ச சூழலில்தான் “வோட்டசெற்” 01, 02 என்று அம்பகாமம் பகுதியில் முன்னேறி சில காவலரண்களையும், எம்மவர்களின் சில வித்துடல்களையும், எதிரிப்படை கைப்பற்றியிருந்தது. வன்னியில் மக்கள் திகைத்து நிற்கின்ற சூழலில், நெருக்கடி நிறைந்ததாய் உணர்ந்த அந்த நாட்களில் தலைவரோ உலகிற்குப் புலிகள் பலத்தை உணர்த்தும் நடவடிக்கைக்கான தாக்குதலில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தார். தேசத்திற்கும் போராட்டத்திற்கும் இடையூறும் நெருக்கடிகளும் வரும் போது தான் இவர்களது பணி தேசத்திற்குத் தேவைப்படுகின்றது. அவர்களும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்போடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * கண்டி வீதியைக் கடக்கவேண்டும். கண்டி வீதியைக் கடக்கின்ற போது அந்த அகன்ற தார்ச்சாலை மலைப்பாம்பென நீண்டு வளைந்து கிடந்தது. அதைக் குறுக்கறுத்து எதிரியின் கண்ணில் சிக்காது கடந்தார்கள். ஒரு புறம் அவர்கள் தேடி வந்த இலக்கு கனகராயன்குள படைமுகாம், மறுபுறம் வவுனியா. இரண்டையுமே மறைச்செல்வன் திரும்பத் திரும்ப பார்த்தான். வவுனியாவைப் பார்க்கின்ற போது வேறுபல பழைய நினைவுகள் அவனை சூழ்ந்தன. வவுனியா, அதுதான் அவன் பிறந்து வளர்ந்த இடம். அதற்கும் மன்னாருக்குமான நீளுகின்ற அந்தத் தெருக்கள்... நினைவுகள் மீள் ஒளிபரப்புச் செய்தன. மன்னார் வவுனியா நெடுஞ்சாலையிலே அன்றொரு நாள் நாற்பத்தினான்கு அப்பாவித் தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது உயிரிழந்த சடலங்கள் ஆங்காங்கே வீதிகளிலே எரிந்தும் எரியாமலும் கிடந்தன. இந்தச் சேதி உள்ளுர் செய்தி ஏடுகளில் பரவலாக வந்தபோது முகம் காணாத சொந்தங்களிற்காக இரங்கி சில கண்ணீர்த் துளிகள் சிந்தப்பட்டன. அப்பாவி மக்கள் படுகொலை என்று கண்ணை உறுத்தும் வகையில் பெரிய எழுத்தில் வெளிவந்த அந்தச் துயரம் மறுநாளே செய்தி ஏடுகள் போல மறைந்துபோனது. அது இன்னொரு துயரச் செய்தியை அவனுக்குக் காவி வந்தது. அது அவர்களது குடும்பத்தில் பெரிய இடியாக விழுந்தது. எல்லோரையும் போல அவர்களால் அந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னென்றுதான் தாங்குவது. ஊர்திகளை ஓட்டி குடும்பத்தைத் தாங்கிய அப்பாவை இழந்து இனி எப்படி அவர்களது வாழ்க்கை! சின்ன வயசில் அது அவனுக்குப் பெரிய இழப்பு. அப்பாவை நினைத்து நினைத்து விம்முவான். அழுவான். யார்தான் என்ன செய்யமுடியும். சிறிய குடும்பம். அவனும், அக்காவும், அம்மாவும்தான். ஒவ்வொருவரது முகத்திலும் பெரிதாய் துயரம் குந்திக்கொண்டிருந்தது. யாராலும் ஆற்றிவிட முடியாத அந்தச் துயரத்தோடு அவர்களது குடும்பம் நாளும் நாளும் அல்லற் பட்டுக்கொண்டேயிருந்தது. அம்மாவும் இவர்களுக்குத் துணையாக நின்று, மாடுகள் வளர்த்து ஒருவாறு குடும்பத்தை நடத்திச் சென்றாள். இவன் சின்ன வயதில் குழப்படிக்காரனாகவே இருந்தான். காலையில் எழுந்து மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்துவிட்டு மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டுவிட்டே அவசர அவசரமாய் பள்ளிக்கு ஓடுவான். வந்து புத்தகங்களை வைத்துவிட்டு மாடு மேய்க்கப் போய்விடுவான். மாடு மேய்ப்பதும் வரம்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி விளையாடுவதிலும் இவனது பொழுதுகள் கழியும். அதுவே இவனுக்குச் மகிழ்ச்சி. அந்த வயல்கள் இவனோடு கொண்ட சொந்தத்தின் அடையாளமாக சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்களும் இப்போதும் மாறாத அடையாளங்களாய் இருக்கிறன. ஊருக்குள் வரும் போராளிகளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர்களோடு சேர்ந்து கொள்ளச் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவனது இலட்சிய ஆசைகள் நெருப்பாய் எரிய அதை மறைத்து அம்மாவோடு செல்லம் கொஞ்சுவான். வளரவளர அந்த வேட்கை அவனைவிட வளர்ந்தது. இராணுவக் கட்டுப்பாட்டில் அவனது கிராமத்தில் போராளிகள் அலைகின்ற அலைச்சல் அவர்கள் சுமக்கும் வேதனையான நாட்கள் எல்லாம் அவனைப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்ற தீரத்தை ஏற்படுத்தின. பள்ளிப்பருவத்திலே அவன் போராட்டத்தில் இணைந்துகொண்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சி உடல் மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் அப்படியானதே. உயர்ந்த எண்ணங்களும் தூர நோக்கும் கொண்ட அவன் எதிலும் துடிதுடிப்பும் முன்னிற்கும் தன்மையும் கொண்டவன். தாக்குதல் களங்கள் அவனை இன்னும் இன்னும் பட்டை தீட்டின. கண்டி வீதியைக் கடந்து நடந்தான். அன்று 81 மில்லிமீற்றர் மோட்டரையும் தூக்கிக்கொண்டு நடக்கிறபோது அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய வெப்ப மூச்சோடு, அவனுக்கு மட்டும் கேட்டக்கூடிய சத்தத்தில் ஆட்லறியை உடைக்கவேணும் என்று மனம் சுருதி தப்பாது துடித்தது. நினைவுகள் கனத்தன. ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகி அடிக்கின்ற வேகத்திற்கு கனகராயன்குளம் மீது கரும்புலி அணிகள் ஆட்லறிப் பிரிவினருடன் இணைந்து தாக்க தொடங்கினர். சிறிதும் எதிர்பாராத இத் தாக்குதலில் எதிரி திகைத்து திக்குமுக்காடினான். அவனது ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியது. கட்டளைத் தளபதியாகவிருந்த சிங்களத் தளபதிகளுக்கு கரும்புலிகளின் வெடியதிர்வு சாவாய்க் கதவில் தட்டியது. அந்தப் பெரிய சமர் அங்கே ஒரு நொடியில் மாறியது. தளபதிகள் மூட்டை முடிச்சுக்கட்ட எதிரிப்படை பின்வாங்கியது. எமது இடங்கள் எங்கும் அகல அகலப் பரப்பி நின்ற எதிரிப்படை உடைந்தகுளம் வற்றுவதைப்போல மிக வேகமாக ஓடியது. அந்தச் சாதனையை எதுவித இழப்புக்களும் இல்லாது நடத்தி விட்டு மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலி அணி வெற்றிகரமாகத் தளம் திரும்பியது. வட போர்முனையில் ஓயாத அலைகள் அடித்தபோது தென்மராட்சியில் பல இடங்களிலும் இவனது செயற்பாடுகள் இருந்தன. எப்போதும் தாயகத்தைப் பற்றியே நினைத்துக்கொண்ட அந்த வீரன் நாகர்கோவிற் பகுதியில் இலக்கொன்றிற்காய் விரைந்து கொண்டிருந்தபோது, இலக்கை நெருங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுக்கொண்டிருக்கவும் எதிரிப்படை தாக்குதலை தொடங்கவும் சரியாக இருந்தது. இழப்புக்கள் எதுவும் இல்லாது பல தாக்குதல்களையும் நிகழ்த்தி தாய்நாட்டிற்காக வெற்றியைக் கொடுத்தவன் 10.05.2000 அன்று நாகர்கோவில் மண்ணிலே வீரகாவியமானான். ஆட்லறியை உடைக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த தேசப்புயல் துடிப்பிழக்கின்ற போது தன் சாவிலே ஒரு சேதியை இந்தத் நாட்டிற்குச் சொல்லிவிட்டுப்போனது. அழுதுகொண்டிருந்தால் அடிமைகளாவோம், துணிவாய் எழுந்து நின்றுவிட்டால் வாழ்வோம். அல்லது வீரராய்ச் சாவோம் என்று.   " புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "   தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.   தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
    • அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. கப்டன் மயூரன்  பாலசபாபதி தியாகராஜா  தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில் :01.11.1970 தாயக மடியில்:11.11.1993 எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் – கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான். அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது….. தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும் கலகலப்பும்தான் வீட்டில். என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே! என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள் விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன். அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். மருமகனா..! மருமகளா..! என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான். இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை. என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 – காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள். என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள். ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம். அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் – அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது “நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?” என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது. நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனை கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள். இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை. அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான் – அவன் போனதும் – அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன். என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது. “என்னப்பு..! என்ன விசயம்?” என்று கேட்டேன். “வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்.” என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது. அதற்குள் அவனது சின்னக்காவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள். “உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா.” என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே “பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க..” என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான். வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன். எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது. பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். “மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்.” என்று. வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை. பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான். 11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது. விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன். அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான்.   கப்டன் மயூரன் நினைவலைகள்…   கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலி போல் ஆகிவிட்டீர்.   அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன்.   பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.   15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.   அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.   இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.   மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.   திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.   அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.   கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன் ஓருக்கால் வந்தாய் நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய் தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க கையில் பெடியோடு உனது அண்ணி கண் கலங்கப் பார்த்திருக்க பார்த்தாயா…யா? புரியவில்லை நினைவில் தெரியவில்லை. தெருவோடு நீ ஓடி துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம் கனவாக மறைந்து போனாய் சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய் எம் கண்ணிலெல்லாம் காயாத நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய். இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ…? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்ற போது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகி விட்டான். மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது. மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்…   விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த கதைகள் பல இங்கு காதில் அடிபடுது ஆனாலும் மயூரா உன் உடலைக் காணவில்லையடா விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு விதி எமக்கு இல்லையடா-அதனால்தான் உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில் கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம் நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம் மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம் உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம் உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம் - தீட்சண்யன்.. மயூரனின் நண்பர்களின் நினைவில்…   களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையில் கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர் களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய் எரிமலையாகி வெடித்து விட்டாய் நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா! உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே……… ..நண்பர்கள்...   மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)   அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன். அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார். 1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய் விட்டான் மயூரன்.   https://maaveerarkal.blogspot.com/2003/11/blog-post_11.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.