Jump to content

ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும்.


Recommended Posts

ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும்.


Posted by
சாந்தி ரமேஷ் வவுனியன்


Saturday, April 6, 2013

அக்கா ஒருக்கா இந்த நம்பருக்கு எடுங்களன்....!



28.03.2013 முதல் ஒரு தொலைபேசியழைப்பு ஒருமுறை ஒலிப்பதும் பின்னர்
தொடர்பு அறுபடுவதுமாக 03.04.2013 மதியம் வரை இந்த அழைப்பு வந்து வந்து
போய்க்கொண்டிருந்தது. கடந்த ஏழுநாட்களில் அதிகாலையில் எழுப்பும் அழைப்பும்
இதுவாகவே இருந்தது.


இப்போதெல்லாம் ஒரு அழைப்பு வந்தால் முன்பு போல அடித்துப்பிடித்து
உடனடியாக எடுப்பதில்லை. தொடர்ந்து துயர்களைக் கேட்கிற தாங்கு சக்தி இப்போது
இல்லாது போய்க்கொண்டிருக்கிறது. அதுவோ என்னவோ புதிய அழைப்புகள் என்றால்
பயம் தொற்றிவிடுகிறது. கையில் எதுவும் இல்லாமல் உதவிகள் என்று
வருகிறவர்களுக்கான மாற்று வழியைச் செய்ய வகையும் தெரியவில்லை.
 


eelam6.jpg


03.04.2013 மதியம் 12.27இற்கு அந்த இலக்கத்திலிருந்து வந்த குரல் ஒரு பெண்ணுடையது.


ஏன்னக்கா உங்களுக்கு இரக்கமே வராதா ? எத்தின தரமமக்கா மிஸ்கோல்
விட்டனான் ? உங்கடை பிள்ளை தானக்கா நானும்....நீங்கள் தானக்கா எங்களுக்கு
உதவ வேணும்....! எனக்கொரு கையும் கண்ணும் இல்லை நான் காயப்பட்டிருக்கேக்க
நீங்கள் வந்து பாத்தனீங்களக்கா....! அழுதழுது தனது கதைகளைச் சொல்லிக்
கொண்டு போனவளின் தொடர்பு அறுபட்டது.


அடுத்து அரைமணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் அழைத்தாள். அக்கா காசு
முடிஞ்சுது ஒருக்கா எடுங்கோ...! சரி நீங்க கட்பண்ணுங்கோ நானொரு
2மணித்தியாலம் கழிச்சு எடுக்கிறன். காத்திருப்பன் கட்டாயம் எடுங்கோ
அக்கா....! சொல்லிவிட்டு தொடர்பை அறுத்தாள். உரிமையோடும் அதிகாரத்தோடுமான
அவளது குரல் ஞாபகத்தில் எங்காவது பதியமாகியிருக்கிறாளா ? அவள் யார் ? 
தேடத் தொடங்கியது மனசு.


அடுத்த 3மணித்தியாலத்தின் பின் அவள் அழைத்த இலக்கத்திற்கு அழைத்தேன்.

உங்கடை பேரென்ன ? சங்கீதத்துடன் சேர்ந்த ஒரு இராகத்தின் பெயரைச்
சொல்லித் தன்னை அடையாளப்படுத்தினாள். அவளும் அவளது கணவனோடு
வீரச்சாவடைந்துவிட்டதாகவே 2009 முடிவுகளின் பின்னால் கிடைத்த செய்தி. ஆனால்
2013இல் அவள் தான் உயிரோடு இருப்பதாகச் சொன்னதை நம்புவதற்கு சிரமமாகவே
இருந்தது.

000            000               000
 


870feb1750d6719784d6fb689dc970c8.jpg


1990களில் அவள் போராளியானவள். அந்த நாட்களில் விடுதலைப்பாதையில்
அணிவகுத்தவர்களுள் அவளும் ஒருத்தியாய் மாங்குளத்தில் முதல்
சண்டையனுபவத்தைப் பெற்றுக் கொண்டாள். அதற்குப் பின் 1991ஆனையிறவுச் சமரில்
ஒரு கண்ணை இழந்தாள். யாழ் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று மீண்டும்
பணியில் இணைந்து 1992இல் துறைசார் பயிற்சியொன்றில் இணைக்கப்பட்டாள். அவளது
சாதனையும் ஒவ்வொர வீரமிகு விழுதுகளின் கதைபோல 2001 வரையும் எழுதிவிட
முடியாத வீரம் படைதோரின் பெயர்களுள் அவளும் ஒருத்தியாய்....!

2001இல் தீச்சுவாலை நடவடிக்கையில் கையையும் காதையும் இழந்தாள். அவள்
பணியாற்றிய துறையைச் சேர்ந்தவொரு வீரன் அவளைக்காதலித்தான். 2002இல்
அவனுக்கும் அவளுக்கும் திருமணம் முடிந்தது. 2004இல் ஒரு குழந்தைக்கு
அம்மாவானாள். பணியின் நிமித்தம் வீடு குடும்பம் பலருக்கு மறந்து போகிற
விடயம். அதுபோல அவளது காதல் கணவனும் வீட்டை மறந்து பணியில்....!
காற்றுப்புகா இடங்களில் கடமை முடிக்க அவன் வீட்டை மறந்து போயிருந்தான்.

நம்பிய சமாதானம் இரத்தகளமாய் மாறிக்கொண்டிருந்த தருணத்தில் வன்னிக்கள
முனையில் கணவனும் மனைவியும் கடமையில் மூழ்கினர். பிள்ளையுடன் கூட நேரம்
செலவளிக்க முடியாது பணியில் ஊறிக்கிடந்தனர்.


யுத்தம் வன்னியை இறுக்கியகாலம். 2009ஏப்றல் மாதத்தின் தொடக்கம். புதிய வழியொன்றின் திறவுகோலாக
நம்பிய ஆனந்தபுரம் சமர்க்களத்தில் அவளது காதல் கணவனும் களத்தில் நின்றான்.

வெற்றிவரும் ஒரு பெரும் மாற்றம் வருமென்ற நம்பிக்கையில் அவளும் அவள்
போன்ற பலரும் தங்கள் கணவர்களை , சக தோழ தோழிகளின் வெற்றிச் செய்திக்காய்
காத்திருந்தார்கள்.

சமரின் உக்கிரம் எதிர்பாராத பேரிடியாய்.....ஈழவிடுதலைப்பாதையின்
விடிவெள்ளிகளான  முதல் நிலைத்தளபதிகள் பலரையும் இழந்து களம் மாறியது.
ஏல்லோருடைய கனவுகளும் நம்பிக்கைகளும் கரைந்து போனது. அவளது கணவனும் அந்தச்
சமரில் வீரச்சாவடைந்து விட்டதாய் செய்தி மட்டும் வந்தடைந்தது.

நெஞ்சில் விழுந்த பேரிடியைத் தாங்கும் வலுவை இழந்தாலும் குழந்தைக்காக
அவள் உயிர் மீண்டாக வேண்டிய கட்டாயம். மணவாழ்வில் அவனோடு கரைந்த
பொழுதுகளின் நினைவோடு வழியும் கண்ணீரின் கடைசிச்சொட்டு காயும் வரை
அவனுக்காய் அழுதாள். ஊலகத்தின் மூலையெங்கும் எழுச்சி கொண்டிருந்த
உலகத்தமிழரின் பேரெழுச்சி மூலம் மாற்றமொன்று துளிர்க்குமென நம்பிய
ஆயிரமாயிரம் பேரைப்போல அவளும் நம்பியிருந்தாள்.
 


news%5C2009%5C4%5Cimages%5CnewsLTTE_DEAD



கால நேரம் பாராமல் வெடிக்கும் குண்டுகளின் சத்தமும் சாவுகளின்
குரல்களுமான பொழுதொன்றில்; விழுந்த எறிகணையில் வயிற்றில் காயமடைந்தாள்.
சாவின் கடைசித்துளி வரை போனது நிலமை. இடையில் செத்துப்போய்விடாமல்
தன்னுயிர் மீள வேண்டுமென அவள் இயன்றவரை முயன்று மருத்துவம் பெற்றாள்.

000         000           000

நினைத்தவை எல்லாம் மாறி நிலமையும் மாறியது. 2009மே 17கால் போன போக்கில்
எதிரியின் எல்லைக்குள் குழந்தையோடு போய்ச் சேர்ந்தாள். களையெடுப்பில்
அவளும் கைநீட்டப்பட்டு சிறையில் அடைபட்டு வெளியுலகை வெளியுலக
மனிதர்களையெல்லாம் மறந்த காலங்கள் அவை. சூனியத்தின் வாயில் சிதைந்து போனது
குரல்கள். அவளது குரலும் 4ம் மாடிவரை போய் மீண்டு சிறையொன்றில்
அடைக்கப்பட்டாள்.


வாழ்வுக்கும் சாவுக்குமான மரண வேதனையை அந்த நாட்களில்
அனுபவித்தாள். துயரமே அவளைத் தின்று தொலைத்தது. ஒரு புறம் ஊனத்தின்
வலி....மறுபுறம் குழந்தையின் எதிர்காலம்.....இன்னொரு புறம் சிறைவாழ்வின்
நீளம்....? இரவுகள் நித்திரை தொலைக்க மன அழுத்தம் பயங்கரம் மிக்க கனவுகள்
இதுவே நிரந்தரமானது.

எல்லா இழப்பின் இறுதியிலும் எல்லோரும் இனி கடவுளே எல்லாம் என நம்புகிற
ஒரு நிலமை இவளுக்கும். 2011இல் சிறைவாழ்வு முடிந்து குழந்தையுடன்
இணைந்தாள். வருமானமில்லை வாழ்வுக்கான ஆதாரமில்லை.

அப்போது சிறையிலிருந்து மீண்டவர்களுக்கு உள்ளுரில் இயங்கிய
நிறுவனமொன்று 10ஆயிரம் ரூபா பண உதவி கொடுத்தது. அந்தப் பத்தாயிரம் ரூபாவோடு
இரவல் காணியில் தறப்பாளைக்கட்டிக் கொண்டு அவளுக்கு மிஞ்சிய உறவான
அம்மாவும் வன்னியில் ஒரு ஊரில் குடியேறினார்கள்.


அன்றாடப் பொழுதைக் கழிக்கவே பேரவலம் மிக்க கொடுமையை தினம் தினம் அனுபவிக்க வேண்டிய துயரம்.
உதவிகள் தேடி யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியாத அச்சம்.


வெளிநாடுகளிலிருந்து முன்னாள் போராளிகளுக்கு உதவிகள் செய்கிறார்கள் என ஆட்கள் சொல்லக் கேட்டிருக்கிறாள். ஆனால் யாரிடம் தொடர்பு கொண்டு யாரிடம் கேட்பது ? இன்னொருவரிடம் கையேந்த சுயகௌரவமும் இடங்கொடுக்காத மனநிலை....!

அண்மையில் ஊனமுற்ற முன்னாள் போராளியொருவனின் மரணவீட்டுக்குப்
போயிருந்தாள். வந்திருந்த பலரும் ஆளையாள் கண்டதும் அழுது தங்களை ஞாபகம்
கொண்டனர். மரண வீட்டில் வந்திருந்த ஒரு ஊனமுற்ற முன்னாள் சக தோழன் தான்
அவளுக்கொரு தொலைபேசியிலக்கத்தைக் கொடுத்தான். இலக்கம் கிடைத்தும் எப்படி
அறிமுகமாவது எப்படி உதவி கேட்பதென்ற குழப்பம் மீண்டும் அந்தத் தோழனே
நம்பிக்கை கொடுத்தான்.

எடுத்துக் கதையுங்கோ அவையின்ரை கடமைதானே எங்களுக்கு உதவிறது ?
இதிலையென்ன பயப்பிடக்கிடக்கு ? பயப்பிடாமல் கேளுங்கோ... யோசிக்காமல்
உரிமையோடை கேளுங்கோ.....! என்ற அவனது வார்த்தைகளோடு கொஞ்சம் தெம்பு வந்தது.


000         000            000

பேச ஆரம்பித்து ஒரு மணித்தியாலமும் 23நிமிடங்களும் கரைந்து போனது.
ஆயிரமாயிரம் கதைகளை அவளது வாழ்வு சுமந்து துடிப்பதை அவள் விளக்கிக் கொண்டு
போனாள்.

என்னாலை வேலையொண்டும் செய்யேலாதக்கா பிள்ளையின்ரை படிப்பு , வயது போன
அம்மா இதோடை இந்த ஊனத்தோடை இந்த சமூகத்தோடை சண்டை போட்டு சமாளிக்கேலாமல்
இருக்குதக்கா...! எங்களைக் கண்டாலே சனம் ஒரு மாதிரியாத்தானக்கா
பாக்குது...! றோட்டில போனா ஒவ்வொருதற்றை பார்வையும் ஏதோ நாங்கள்
தீண்டத்தகாத மாதிரித்தானக்கா பாக்கினம்....அந்த நேரம் செத்துப் போகாமல் ஏன்
வாழ்றமெண்ட வெறுப்புத்தான்....என்னேயிறதெண்டே தெரியாமல் தானிருக்கிறன்.

நீங்களும் நான் கனதரம் மிஸ்கோல் விட எடுக்காமல் விட்டது சரியான கோவமாக்
கிடந்தது அதுதான் கோவமாக் கதைச்சுப்போட்டன் மன்னிச்சுக் கொள்ளுங்கோக்கா.
நாங்கள் இருந்த நிலமையும் வாழ்ந்த வாழ்க்கையும் பாருங்கோ இப்ப என்ன
நிலமையெண்டு ? ஏனடா இயக்கத்துக்கு போனமெண்டும் சிலவேளை நினைக்கிறது தான். 

அழுகை மாறி அவள் அந்தநாள் கதைகள் முதல் ஆயிரமாயிரம் நினைவுகளை மீளவும்
தந்தாள். இறந்து போனதாய் நம்பிய பலர் உயிருடன் வாழும் கதைகளையெல்லாம்
சொன்னாள்.

அக்கா அமுதினியைத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரியுமெல்லோ அவளுக்கு
காலில்லை கையும் ஏலாதுதானே...! அவளை ஒருவர் பிரான்சிலையிருந்து வந்து
கலியாணங்கட்டி ஒரு குழந்தையும் பிறந்திருக்கு தெரியுமே ?

அமுதினியாரைக்கட்டினாள் ?

அது பெரிய கதையக்கா....அவளுக்கு 35வயது. குடும்பம் சரியான கஸ்ரம்
கடையொண்டில வேலை செய்து கொண்டிருந்தவள். பிரான்சிலயிருந்து ஒருவர் இஞ்சை
வந்து நிண்டு ஆக்களுக்கு உதவி செய்தவர். அவருக்கு இப்ப வயது 66. தான்
கலியாணங்கட்டிறனெண்டு உங்கை கனபேரைக் கேட்டவர். அமுதினி வேலை செய்த
இடத்திற்கு நெடுகப்போய் வந்திருக்கிறார்.


இஞ்சை எங்கடை சனம் தெரியும்தானேக்கா தனிய எங்களை வாழ விடாதுகள்.....! அவளுக்கும் வேறை
வழியில்லை இவர் வெளிநாடு எடுக்கிறனெண்டு சொல்லி கலியாணங்கட்டீட்டார். பிறகு
வெளிநாடும் எடுக்கேல்ல வருசத்துக்கு ஒருக்கா வந்து 3மாதம் நிண்டிட்டுப்
போறார். ஒரு கடையும் போட்டுக்குடுத்து ஓட்டோ ஒண்டும் எடுத்துக்
குடுத்திருக்கிறார். பிள்ளைக்கும் இப்ப 2வயதாகீட்டுது. அவர் வெளிநாடு
கொண்டு போறது கஸ்ரமெண்டு சொல்றாராம்.

அவரது பெயர் விபரத்தை விசாரித்தேன். அவள் சொன்ன போது எனக்கு யாரோ
மூஞ்சியைப் பொத்தி அடிச்சது மாதிரியிருந்தது. 2010ம் ஆண்டு நான்
வானொலியொன்றில் நேசக்கரம் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த போது ஒருவர்
தொடர்பு கொண்டு விதவைகளுக்கு உதவ விரும்புவதாகக் கேட்டிருந்தார். நானும்
வயதான ஒருவர் தன் பிள்ளையைப் போலொருத்திக்கு உதவுவார் என நம்பி கதைத்த போது
அவர் ஒரு போரால் பாதிக்கப்பட்ட விதவையை தான் திருமணம் செய்ய
விரும்புவதாகச் சொன்னார்.


எனக்கு அறுவது தாண்டீட்டுது மனிசி செத்துப்போட்டா 4பிள்ளையள் அவையெல்லாம் கலியாணம் கட்டீட்டினம் நான் நல்லாவேலை செய்தனான்...இப்ப பென்சன் வருது....நான் செத்துப் போனா என்ரை பென்சன்
வீண்தானே.....ஆரும் ஒரு பிள்ளையை கலியாணம் கட்டினா அந்தப்பிள்ளைக்கு என்ரை
காசும் பிரியோசனப்படுமெல்லே ?

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாய் அந்த அறுபது தாண்டிய
ஐயாவின் இரக்கத்தில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஐயா நீங்கள் கலியாணம்
கட்டாமல் உங்கடை பென்சனில பத்துப்பிள்ளையளைப் படிப்பிச்சு விடுங்கோவன் ?
எங்கடை பிள்ளையின்ரை வறுமையை நீங்கள் ஒரு தமிழன் இப்பிடி பயன்படுத்த
நினைக்கிறது சரியோ ?

ஐயாவுக்கு கடும் கோவம் வந்திட்டுது. நான் ஊரில போனால் ஆளாளுக்கு வயது
வித்தியாசம் பாக்காமல் வந்து நிக்குங்கள். இப்பத்தைய நிலமையில வெளிநாடு
வாறதெண்டா உந்த வயது வடிவு ஒண்டும் பாக்காமல் வெளிக்கிடுங்கள் தெரியுமே ?

அதுக்கு மேல் அவரோடு முரண்பட்டு வாதிட விரும்பாமல்.....சரி உங்கடை
விருப்பப்படி செய்யுங்கோ ஆனால் தயவு செய்து எனக்கு ரெலிபோனெடுக்காதையுங்கோ
என்னிட்டை இப்பிடி கலியாணங்கட்ட பெண் கேட்காதையுங்கோ.....! சொல்லிவிட்டுத்
தொடர்பை நானே அறுத்தேன்.


அதன் பின் பல தடவை அந்த ஐயா தொடர்பு கொண்டு ஒரே தொல்லையான போது இனிமேல் என்னுடன் இத்தகைய கதையோடு வந்தால் பெயர் விலாசம் யாவற்றோடும் ஊடகங்களில் அம்பலப்படுத்திவிடுவேன் எனச் சொன்னபோது ''நீ பாரன் நான் ஊருக்குப் போய்....''அடுத்த வார்த்தைகள் தமிழில் உள்ள
கெட்டவார்த்தைகளாக தொடர்பைத் துண்டித்து அந்த இலக்கத்தையும் தொலைபேசியில்
நிறுத்தி விட்டேன்.

அன்று சவால்விட்டு  இதோ பார் என்ற அதே நபர் அமுதினியைத் திருமணம்
செய்துள்ளதை மனசால் ஏற்க முடியாது போனது. இந்த நிலமைக்கு இட்டுச் சென்ற
எல்லார் மீதும் கோபமே வந்தது.

அக்கா இஞ்சையிப்ப கனபேர் வெளிநாட்டிலயிருந்து வருகினம் இப்பிடி கன
கலியாணம் நடந்திருக்கு. அவள் மேலும் 4பேரின் கலியாணக்கதையையும் சொன்னாள்.

அக்கா என்னை பிழையாய் நினைக்கக்கூடாது இப்பிடியான வயது போன யாரும்
இருந்தா எனக்கும் ஒண்டைக்கட்டித்தாங்கோக்கா நானும் என்ரை பிள்ளையை ஒரு நல்ல
நிலமைக்கு கொண்டு வந்திருவன்...!

உமக்கென்ன விசரோ ? பைத்தியம் மாதிரி....! (தணிக்கை...) எனது
வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனது கட்டுப்பாட்டை இழந்து அவள் மீது கோபமாக
மாறியது. அவள் அழத்தொடங்கினாள்.

அக்கா இஞ்சை நாங்கள் தினம் தினம் படுற வேதனையை அனுபவிச்சாத்தான்
தெரியும்....பிள்ளையைப் பாக்க வேணும் இந்தச் சனத்தின்ரை வாயுக்காலை தப்ப
வேணும்....எல்லாத்துக்கும் மேலாலை பசி அண்டண்டைக்கு சாப்பிடவே படுற சிரமம்
இதெல்லாம் உங்கை இருக்கிற உங்களுக்கு விளங்காது....!


சாமானுகள் விக்கிற விலையில சாதாரணமா வாழிறதெண்டாலே நாளுக்கு ஐநூறு ரூவாய்
வேணும்....மாதத்துக்கு 15ஆயிரம் ரூவாய் அதுகும் என்னைமாதிரியான ஊனங்களுக்கு
மருந்து அதிதெண்டு எவ்வளவு தேவையள்...! ஆரிப்ப எங்களை மதிக்கினம்
சொல்லுங்கோ பாப்பம் ?


அறுவது வயதோ எழுவது வயதோ இருக்கிற வரையும் ஏதோ
வாழ்ந்திட்டுப் போக ஆராவது வெளிநாட்டு ஆம்பிளையள் முன் வந்தா நான்
கட்டுவனக்கா....! ஏனெண்டா எனக்கு என்ரை பிள்ளையின்ரை வாழ்க்கை
முக்கியம்....! அவள் அழுதழுது சொல்லிக் கொண்டு போனாள்....

என்னால் அவளது முடிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தொலைபேசியை
நிறுத்தினேன். அவளது கதைகள் தான் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
அவள் ஊனமென்றதை தெரிந்தே முன்வந்து காதலித்து அவளை அவளது கணவன் திருமணம்
செய்தான். அவளது ஊனத்தை அவன் ஒரு போதும் சுமையாகவே எண்ணியதில்லை.
கண்ணுக்குள் வைத்திருந்தான் என்றே சொல்ல வேண்டும். அப்படித்தான் அவர்கள்
வாழ்ந்தார்கள். இன்று அவன் ஒரு வேளை உயிரோடிருந்து இந்த முடிவினைக் கேட்க
நேரின்....???

அண்மையில் பீபீசியில் பேட்டி கொடுத்திருந்த போராளிப்பெண்களின்
குரல்களில் ஒரு குரல் போலவே இவளது குரல் எனக்குள் வந்து வந்து போனது....!
இந்த அவலங்களுக்கெல்லாம் காரணமான நானும் என்போன்ற தமிழர்களும் இவர்களது
வாழ்வை மாற்ற என்ன செய்யப்போகிறோம் ?????


05.04.2013 அதிகாலை தொடக்கம் மதியம் வரையும் 11தடவைகள் மிஸ்கோல் விட்டிருந்தாள். 2குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தாள்.

05.04.2013 மாலை 15.57இற்கு அவளிடமிருந்து வந்த குறுஞ்செய்தியில் இப்படித்தான் எழுதியிருந்தாள்:-

அக்கா மன்னிச்சுக் கொள்ளுங்கோ....உங்கடை தொடர்பு வந்த போது என்னுறவை
மீண்டும் பெற்றது போல மகிழ்ந்தேன். எனது இயலாமையையே உங்களிடம் சொன்னேன்.
நான் கதைத்தது பிடிக்காமல் கட் பண்ணீட்டீங்கள். அக்கா உங்களை நம்புகிறேன்
தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள் எதிர்பார்த்திருக்கிறேன்.

06.04.2013 (இரவு 00.45மணி)

 

http://mullaimann.blogspot.de/2013/04/blog-post.html

Link to comment
Share on other sites

விவசாயி தலைப்பையும் படங்களையும் மட்டும் பார்த்து விட்டு எழுதியிருக்கிறார் போல் இருக்கிறது.

இதை முழுவதும் படித்ததன் பிற்பாடு என்ன செல்வது என்று தெரியவில்லை. நாங்கள் முன்பு அவர்களின் உயிரைக் கேட்டோம். இப்பொழுது உடலையும் கேட்கிறோம். ஈனப் பிறப்புகள் நாங்கள்.

Link to comment
Share on other sites

பல சம்பவங்கள் உணர்த்துவது என்னவென்றால், உள்ளூர்ச் சமூகமே இவர்களை ஒதுக்கி வைக்கிறது என்பதை.. இதைவிடக் கொடுமை வேறு இருக்கமுடியாது. சொந்தக் குடும்பத்துக்குள்ளேயே ஒதுக்கிவைக்கப்படும் சோகம்..

 

உள்ளூர் சமூகத்தின் ஆதரவு இல்லாவிட்டாலும், ஒதுக்கி வைத்து கொடுமையாவது செய்யாதிருக்கலாம்..

 

வயதான ஐயா மறுமணம் செய்ததை என்னவென்று சொல்ல..?! அந்தப் போராளிப் பெண்ணுக்கு ஏதோ உதவி கிடைக்கிறது என ஆறுதல் கொள்வதா.. அல்லது இழவுவீட்டில் பிடுங்கியதுவரையில் இலாபம் என்று இருக்கும் மந்தைகளை நோவதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இஞ்சை நாங்கள் தினம் தினம் படுற வேதனையை அனுபவிச்சாத்தான்

தெரியும்....பிள்ளையைப் பாக்க வேணும் இந்தச் சனத்தின்ரை வாயுக்காலை தப்ப

வேணும்....எல்லாத்துக்கும் மேலாலை பசி அண்டண்டைக்கு சாப்பிடவே படுற சிரமம்

இதெல்லாம் உங்கை இருக்கிற உங்களுக்கு விளங்காது....!

 

இந்த வலி யாருக்கும் விளங்காது!

Link to comment
Share on other sites

அக்கா இஞ்சையிப்ப கனபேர் வெளிநாட்டிலயிருந்து வருகினம் இப்பிடி கன

கலியாணம் நடந்திருக்கு. அவள் மேலும் 4பேரின் கலியாணக்கதையையும் சொன்னாள்.

 

மேலதிக கருத்துக்கள் கூற விரும்பவில்லை .

 

 

 

Link to comment
Share on other sites

இந்த போராளிக்கு ஒரு தொழில் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுக்க எவளவு வரும்? என்று ஒரு கள உறவு கேட்டிருந்தார்.... தான் முயற்சி செய்து பாபதர்க்கு.....

Link to comment
Share on other sites

விவசாயி தலைப்பையும் படங்களையும் மட்டும் பார்த்து விட்டு எழுதியிருக்கிறார் போல் இருக்கிறது.

இதை முழுவதும் படித்ததன் பிற்பாடு என்ன செல்வது என்று தெரியவில்லை. நாங்கள் முன்பு அவர்களின் உயிரைக் கேட்டோம். இப்பொழுது உடலையும் கேட்கிறோம். ஈனப் பிறப்புகள் நாங்கள்.

சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால் இவள் போன்ற மனநிலமையில் பலர் எதற்கும் தயராக இருக்கிற அவலத்துக்கான மாற்றத்தை கொண்டு வரும் சக்தி புலம்பெயர் அனைத்து தமிழர்களின் கையிலுமே இருக்கிறது.

..

வயதான ஐயா மறுமணம் செய்ததை என்னவென்று சொல்ல..?! அந்தப் போராளிப் பெண்ணுக்கு ஏதோ உதவி கிடைக்கிறது என ஆறுதல் கொள்வதா.. அல்லது இழவுவீட்டில் பிடுங்கியதுவரையில் இலாபம் என்று இருக்கும் மந்தைகளை நோவதா?

அவர்களது இயலாமையை பயன்படுத்துவதை சுயநலம் மிக்க வக்கிரமென்றே சொல்லலாம்.

 

இந்த வலி யாருக்கும் விளங்காது!

 

உண்மைதான் வலியை மாற்ற எங்களால் ஆன உதவிகள் உறுதுணையாகும். ஆனால் எத்தனைபேருக்கென்று கையேந்துவது ? என்பதுதான் இப்போதைய பிரச்சனை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அளவுக்கு அதிகமாக மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைக்கும் ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்கள். அந்த வகையில் சில முன்னாள் போராளிகளின் தனிப்பட்ட முடிவுகளை இட்டு சிலாகிப்பது எமக்குப் புதிதல்ல. ஆனால் அது அனாவசியமானது. பெரியார் என்பவர் ஒரு 27 வயது மணியம்மையை திருமணம் செய்த போது அதனை புரட்சி என்று சொன்ன நாம் (தமிழர்கள்).. அரபாத் 68 வயதில் திருமணம் செய்த போது உலகமே புகழ வாழ்த்த கூடி இருந்து வாழ்த்திய நாம்.. ஒரு 66 வயது தமிழ் முதியவரும்.. 35 வயதுப் பெண்மணியும் அவரவர் சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு அவரவர் தேவைக்கு ஏற்ப திருமணம் செய்து கொள்வதில் தலையீடு செய்வது என்பது அநாகரிகமானது. அதுவும் புலம்பெயர் சூழலில் வாழ்பவர்கள் அதனைச் செய்வது இன்னும் மோசமான செயல்.

 

இங்கே புலம்பெயர் நாடுகளில் எத்தனையோ வயதானவர்கள்.. ஆசிய நாடுகளிற்குப் போய் வறிய குடும்பங்களில் பெண்ணெடுத்து வருகின்றனர். முஸ்லீம்களில் பலர் இவ்வாறு செய்து அவர்களை மேற்கு நாடுகளுக்கு அழைத்து வருகின்றனர். அவை அந்த நபர்களின் சொந்தப் பிரச்சனை. அதனை சமூகப் பிரச்சனை என்று பார்ப்பதும்.. பழி வாங்கும் தோறணையில் அணுகுவதும் சரியா என்பது சிந்திக்க வேண்டிய விடயம்..??!

 

இங்கே புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வந்துள்ள பல தமிழ் பெண்களில் அநேகர்.. இங்கு வந்து குடியேறிய தமிழ் ஆண்களை மணம் முடித்து வந்தவர்களாவர். அவர்களில் பலர் பல்வேறு கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்று மற்றும் பெறாமல்.. தனிக்குடித்தனம் நடத்துகின்றனர். பலர் அரச உதவிப்பணத்தைப் பெறக் கூட இப்படி நடந்து கொள்கின்றனர். இப்படியான ஒரு சமூகப் பின்னணி கொண்ட நாம்.. ஒரு போராளி தனக்குரிய ஆபத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள ஒரு 66 வயதானவரை மணந்து கொள்வதில் (அதுவும் ஏலவே திருமணமான போராளிகள்) என்ன தவறு இருக்கிறது..??! அதனை தவறென்று சொல்லும் நாம்.. அவர்களுக்கு வேறு என்ன வழியை காட்டுகின்றோம்.. என்ற கேள்விகள் நிறையவே எழுகின்றன..!

 

மேலும் இந்த முன்னாள் போராளிகள் தோல்வி ஒன்றுக்கான சூழலுக்கு தயார்ப்படுத்தப்படாத நிலையில் தோல்வி எய்தப்பட்டுள்ளதன் விளைவாக அதன் அதிர்ச்சியில் தாக்கத்தில் இருந்தும் தம்மை விடுவித்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றமையால்.. எந்தச் சமூகத்தின் முன் தலைநிமிர்ந்து நின்றார்களோ.. அந்தச் சமூகத்தின் முன் தலை குனிந்து நிற்கும் நிலையை எய்தி இருக்கிறார்கள்.

 

உண்மையில் இவர்களை அந்த அதிர்ச்சிகளில் இருந்தும் மீள வைக்க வேண்டிய பொறுப்பு.. எங்கள் சமூகத்தினது. குறிப்பாக புலம்பெயர் மற்றும் உள்ளூர் கல்விச் சமூகத்தினது. ஆனால் அது அவ்வாறு செயற்படுவதாகத் தெரியவில்லை. அல்லது அது சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில்.. இதனை சர்வதேச அமைப்புக்களூடாகக் கொண்டு சென்று நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான உருப்படியான நகர்வுகள் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகின்ற இவ்வேளையிலும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. செய்யப்பட்டிருந்தால்... இப்படியான கதைகளும் போராளிகளின் இன்றைய கஸ்டத்தை காட்டி  ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும்.. இந்தப் போராளிகள் எதற்காக போராடினார்களோ அதன் பிரதான இலச்சியத்தையும் குழிந்தோண்டிப் புதைக்கும் காணொளிகளும்.. கட்டுரைகளும்.. வரையப்படும் நிலை தோன்றி இருக்காது. இது கூட எதிரிக்கு எம்மீதான அடக்குமுறைக்கு உதவி நிற்கிறது.

 

நாம் எல் எல் ஆர் சி.. பற்றிக் கதைக்கிற அளவிற்கு.. முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு.. எதிர்காலம்.. குறித்து சர்வதேச மட்டத்தில் முன்னிறுத்துவதில்லை. அவர்களுக்கு நிகழ்ந்த அநியாயங்களுக்கு நீதியும் கோருவதில்லை. எல்லாம் பயங்கரவாத உச்சரிப்புக்குள் முடக்கப்பட்டுக் கிடக்க விடப்பட்டுள்ளது.

 

மேலும்.. இந்த இவர்கள் மீது முன்னாள் போராளி என்ற அந்த முத்திரை மிகக் கொடூரமான மக்களை அவர்களிடத்தில் இருந்து விலக்கி வைக்கும் செயலைச் செய்கிறது. இதனை போர் முடிந்த ஆரம்பத்திலேயே இங்கு யாழில் சுட்டிக்காட்டி இருந்தோம். எவரும் அதைப்பற்றி துளியும் அக்கறை செலுத்தவில்லை. ஆனால் இப்படி முன்னாள் போராளிகள் என்று அழைப்பதையும் அவர்களை சமூகத்தில் தனித்து இனங்காட்டுவதையும்.. எதிரியும் துரோகிகளும் முன்னின்று செயற்படுத்துகின்றனர். இது போர் களத்தில் அவர்கள் சரணடைந்த பின்னும் சுட்டுக்கொன்றதை விட மோசமான சித்திரவதை ஆகும். அதுவே மக்களும் அவர்களை விட்டு பயத்தால் தூர விலகி இருக்கச் செய்கிறது.

 

இந்தியப் படைகள் காலத்தில் அடைக்கலம் கொடுத்துக் காத்த மக்கள் இன்று அதைச் செய்ய முடியவில்லை என்றால் அதற்குக் காரணம்.. அந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தாகும். இதனை புலம்பெயர் எழுத்தாளர்கள் தங்களுக்குரிய வகைகளுக்கு திரித்தும்.. மொழுகியும் எழுதி வருகின்றனர் என்ற சந்தேகம் எமக்குள் இயல்பாக எழுகிறது.

 

ஓரிருவர்.. ஓரிரு இடங்களில்.. போராளிகளை மதிக்கத் தெரியாதவர்கள் இருக்கலாம். போராட்ட காலத்திலும் அப்படியான ஊர்கள் இருந்துள்ளன. ஆனால் இன்று அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் போர் பாதிப்புற்ற மக்களுக்கு (முன்னாள் போராளிகள் என்போரே இதில் அதிகம் அடங்குகின்றனர்) நாம் செய்ய வேண்டியது இரண்டு.

 

1. இவர்களை தோல்வியின் தாக்கத்தில் இருந்தும் அதனால் ஏற்பட்டுள்ள மன அளவில் உள்ள பாதிப்பில் இருந்தும்...  மீட்டு இயல்பிற்குக் கொண்டு வருவது.

 

2. அவர்கள் சமூகத்தில் சந்தித்து நிற்கும் சவால்களில் இருந்தும் அவர்கள் மீண்டு வர வழிகாட்டுவது... அவர்கள் இயல்புக்குத் திரும்பும் வரை.. ச்மூகத்தோடு இரண்டறக் கலக்கும் வரை.. துணையிருப்பது.குறிப்பாக இவர்கள் திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுவதை இயலுமானவரை தடுப்பது.. தவிர்க்கச் செய்வது.

 

இதனைச் செய்யாமல்.. வெறுமனவே அவர்களை கஸ்டத்துக்குள்ளும் துன்பத்துக்குள்ளும் தள்ளிவிட்டு விடுப்புப் பார்த்துக் கொண்டு அவற்றை இட்டு போலி  மனித உரிமை அக்கறைகளும்.. காணொளிகளும்.. கட்டுரைகளும்.. கதைகளும்.. கவிதைகளும் வரைந்து என்ன பயன்..??! இந்தக் கேள்வி எனக்குள் எப்போதோ எழுந்த போதும்.. ஒரு சிறு குழுவாக ஒரு பெரிய சவாலை சந்திப்பது இலகு அல்ல என்பதால் ஒடுங்கிக் கிடக்க வேண்டி உள்ளது. குறிப்பாக எம்மவர்களில் மற்றவர்களை நம்ப முடியாத ஒரு சூழலில்.. இது இவ்வாறு அமைந்து விடுகிறது.

 

இதில் இருந்து மீள வேண்டின் சர்வதேச கவனத்தை இவர்கள் மீது திருப்புவதும் கூட இவர்களின் மீள்விற்கு ஒரு வழியாக அமையலாம்..! மேலும் போராளிகள் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் எடுக்கும் நல்ல.. அல்லது பாதகமற்ற முடிவுகளை சிலாகித்து கெடுப்பதிலும் அவர்களின் புத்திக்கு சிந்தனைக்கு செயற்பட விடுவது நன்று..! :icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்.. நீங்கள் சொல்லுறதும் ஒருவகையில் சரிதான். ஆனால், வெளியில் உள்ள இளைஞர்கள் எல்லாரும் முன்வந்தால்... இந்த நிலை ஏற்படாதுதானே?! அதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்களா??? :rolleyes:   

 

பந்தி பந்தியா கருத்து எழுதுறது இலகு. ஆனால்... அதை செயல்வடிவில் கொண்டுவாறது கஷ்டம்

ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றால்... அதை செய்வதற்கான மனநிலையும் திடமும் முதலில் நமக்குள் வரவேண்டும்.

அது உங்களிடம் இருக்கா நெடுக்ஸ்?  :unsure:  :rolleyes:   

 

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்..

மற்ற விடயங்களை விட்டுவிடுகிறேன்.. ஆனால் வயதான அந்த ஐயாவின் செயலை மட்டும் எடுத்துக்கொள்வோம்..

அதிக வயது வித்தியாசத்தில் திருமணங்கள் நடைபெறுகின்றனதான் .. இருமனங்களும் சம்மதிக்கும் பட்சத்தில் யார் தடைசொல்ல முடியும்??

இந்த ஐயா போரைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்தவர் என வைத்துக்கொள்வோம் .. போராளிகளின் தியாகம் தந்த அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு போராளிகளின் தற்போதைய இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தலாமா?? இந்தக் கேள்விதான் தொக்கி நிற்குது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. நீங்கள் சொல்லுறதும் ஒருவகையில் சரிதான். ஆனால், வெளியில் உள்ள இளைஞர்கள் எல்லாரும் முன்வந்தால்... இந்த நிலை ஏற்படாதுதானே?! அதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்களா??? :rolleyes:   

 

பந்தி பந்தியா கருத்து எழுதுறது இலகு. ஆனால்... அதை செயல்வடிவில் கொண்டுவாறது கஷ்டம்

ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றால்... அதை செய்வதற்கான மனநிலையும் திடமும் முதலில் நமக்குள் வரவேண்டும்.

அது உங்களிடம் இருக்கா நெடுக்ஸ்?  :unsure:  :rolleyes:   

 

நடக்கிற விசயமா கதையுங்க. புலம்பெயர் தேசத்தில் உள்ள இன்றைய இளைஞர்கள் ஊரில் இருந்து பொண்ணே வேணான்னு இருக்கிறாங்க.. (அநேகர்). ஊரில இருந்து பெண்ணுப் பொறுக்கிற அந்த அல்லோலகல்லோலம் இப்ப கொஞ்சம் ஓய்ஞ்சிருக்குது. ஏன்னா.. இப்போ புகலிடத்தில் பிறந்தவர்களுக்கு பொண்ணு.. பையன் தேடும் காலம்..!

 

இவர்களில் அநேகருக்கு தாயகம் என்றாலே என்னென்று தெரியாது. அவர்களைப் போய்.. இந்த விதவைப் பெண்களை திருமணம் செய் என்றால் செய்வார்களா..???! ஏன்.. புகலிடத்தில் இருந்து கதை கட்டுரை காணொளி தயாரிப்பவர்கள் தான் தங்கள் பிள்ளைகளுக்கு செய்து வைப்பார்களா..??!

 

இன்னொன்றும் வெகு இலகு கவிதையார். அது மற்றவனைப் பார்த்து கேள்வி கேட்கிறது. அந்தக் கேள்வியை நீங்களே உங்களை நோக்கிக் கேட்டுப் பாருங்க..???! நடைமுறைச் சாத்தியமா என்று..???!

 

என்னைப் பொறுத்த வரை.. இந்த விதவைகளுக்கு மறுவாழ்வளிக்கிறன்.. மண்ணாங்கட்டி அளிக்கிறன் பேர்வழிகளோடு அந்தளவு கருத்தியல் நெருக்கம் இல்லை.

 

மனிதாபிமான உதவி தேவைப்படும் இடத்தில் அதை வழங்கி.. அவர்களே தங்களுக்குரிய வாழ்வை தேடிக் கொள்ள வழிகாட்டுதலும் புத்திமதியும் வழங்க முடியுமே தவிர.. எங்களால் அதற்கு அப்பால் சென்று பொறுப்புக்களை சுமக்க முடியாது. இதுதான் பொதுவான இளைஞர்களின் நிலைப்பாடும். இந்த எல்லைக்குள் நின்று கொண்டு தான்.. நாம் மிச்சத்தை சிந்திக்கனும்..! அதைவிட்டிட்டு.. இப்படியே கேள்வி கேட்டுக் கிட்டே இருந்தா.. பிரச்சனைகளை சந்திக்கும் மக்களுக்கு தீர்வு தான் என்ன..??!

 

ஒரு விதவையை.. அல்லது கணவன் காணாமல் போன ஒரு பெண்ணை குழந்தையோடு திருமணம் செய்ய ஒரு இளைஞன் வீராவேசத்தோடு முன் வருகிறான் என்று வையுங்கள். நீங்கள் எல்லோரும் அவனை வாழ்த்துவீங்க.. புரட்சி தீரன் என்று எழுதுவீங்க. ஏன் சுவரொட்டி கூட ஒட்டி வாழ்த்துவீங்க. கவிதை எழுதுவீங்க. பேஸ்புக்கில போடுவீங்க. இவை கொஞ்சம் + வ். இன்னும் கொஞ்சப் பேர்.. - வ் வா.. விரசமா கதைப்பாங்க.. பழிப்பாங்க.. புறணிபாடுவாங்க.. குற்றம் குறை சொல்லுவாங்க.

 

ஆனால் அந்த திருமணத்தின் அப்புறமான அவனின் குடும்ப வாழ்வுக்குள் எழக் கூடிய பிரச்சனைகள்.. அந்தப் பெண்ணின் மனநிலைகள்.. மாற்றங்கள்.. தேவைகள்.. இவை தரக்கூடிய பாதிப்புக்களை நீங்கள் சுமைப்பீர்களோ..???! நீங்கள் எல்லோரும் அதைச் செய்ய முன்வருவீர்கள் என்றால்.. நானும் உங்கள் கேள்விக்கு சாதகமான பதிலைத் தரலாம். ஆனால் நிஜத்தில் அது நடக்காது.

 

நீங்கள் போராட்டம் என்று ஒரு தொகுதி இளைஞர்களிடம் ஆயுதத்தையும் தேசத்தையும் பொறுப்பையும் கையளித்துவிட்டு.. மிகுதிப் பேர்.. போராட்டம் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல்.. எதிரியை புகழ வேண்டிய இடத்தில் புகழ்ந்து.. அவனோடு நெருங்க வேண்டிய இடத்தில் நெருங்கி... அவனுக்கு பணிய வேண்டிய இடத்தில் பணிந்து... அப்புறம் வெளிநாடுகளில்.. காட்டிக்கொடுக்க வேண்டாததுகளை எல்லாம் காட்டிக் கொடுத்து.. ஒரு சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொண்டு.. நல்ல கன்னி கலையாத கூந்தல் மழுங்காத பொண்ணுங்களா பார்த்து சைட் அடிச்சுக் கொண்டு.. அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணிறது இருக்குப் பாருங்க.. அதைப் போல.. ஒரு துரோகத்தனம் இந்த உலகில் வேறெதுவும் இருக்க முடியாது..!

 

இதுதான் எம் சமூக நிஜம். இல்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஓரிரு விதிவிலக்குகள்.. சமூகப் புறநடைகளே தவிர அவை பலரின் தப்பிப்புவாத உதாரணங்களே தவிர.. அதுவே சமூக வழக்கம் அல்ல..! எமது சமூக வழக்கம் மேலே சொல்லப்பட்டுள்ளது. இதற்குள் நின்று கொண்டு தான் நாம் தீர்வு தேட வேண்டும். இன்றேல் எல்லோரும் மாற வேண்டும். ஓரிருவரை தியாகம் செய்யக் கேட்பது அல்ல நீதி.. போராட்டம்..! எல்லோரும் தாய் நாட்டுக்காக இதய சுத்தியோடு.. தியாகம் செய்ய முன்வந்திருந்தால்.. இன்று இந்த நிலை இந்தப் பெண்களுக்கு வந்திருக்காது..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..

மற்ற விடயங்களை விட்டுவிடுகிறேன்.. ஆனால் வயதான அந்த ஐயாவின் செயலை மட்டும் எடுத்துக்கொள்வோம்..

அதிக வயது வித்தியாசத்தில் திருமணங்கள் நடைபெறுகின்றனதான் .. இருமனங்களும் சம்மதிக்கும் பட்சத்தில் யார் தடைசொல்ல முடியும்??

இந்த ஐயா போரைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்தவர் என வைத்துக்கொள்வோம் .. போராளிகளின் தியாகம் தந்த அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு போராளிகளின் தற்போதைய இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தலாமா?? இந்தக் கேள்விதான் தொக்கி நிற்குது..

 

சரி.. அந்த ஐயா தவிச்ச முயல் அடிச்சது தப்புன்னு ஒரு கருத்துக்கு எடுத்துக் கொள்வோம்.. அப்போ அந்தப் பெண்களுக்கு மறுவாழ்வளிப்பது யார்..??! 

 

அவர்கள் கையைப் பிடிச்சு இழுக்கும் அவர்கள் வாழ்வை சீரழிச்சு விபச்சாரம் வரை கொண்டு போகும்.... சிங்களவனும் ஒட்டுக்குழுக்களுமா..???!

 

அந்த ஐயா மீது புறணிபாடும் நாம்... ஏன்.. அதற்கு சாத்தியமான மாற்றுக்களை முன்வைக்கிறோம் இல்லை. ஏன்னா.. எங்களிடம் உருப்படியா எதனையும் செய்யும் மனநிலை இல்லை. ஆளாளால் தான் தப்பிக்கனும்.. சுகபோகமாக இருக்கனும்.. இடையில் பாவம்.. புண்ணியம் பார்க்கிறவன் ஏதாவது செய்தால் அதை விமர்ச்சிச்சு நாங்கள் எங்களை வித்தியாசமான புரட்சியாளர்களாக் காட்டிக்கிட்டு.. வெட்டிப் பெருமை பேசிக்கிட்டு இருக்கனும்.

 

இதனால்.. நடைமுறைப் பிரச்சனைகளுக்கு தீர்வு வருமா..??! அப்படி தீர்வு வருமென்றால்.. அதனை இனங்காட்டி நடைமுறைப்படுத்துவது தான் புத்திசாலித்தனம். சமூகத் தேவை..! அப்படியான ஏதாவது கருத்து இங்க வந்திருக்கா..?????!  :icon_idea::rolleyes::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..

மற்ற விடயங்களை விட்டுவிடுகிறேன்.. ஆனால் வயதான அந்த ஐயாவின் செயலை மட்டும் எடுத்துக்கொள்வோம்..

அதிக வயது வித்தியாசத்தில் திருமணங்கள் நடைபெறுகின்றனதான் .. இருமனங்களும் சம்மதிக்கும் பட்சத்தில் யார் தடைசொல்ல முடியும்??

இந்த ஐயா போரைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்தவர் என வைத்துக்கொள்வோம் .. போராளிகளின் தியாகம் தந்த அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு போராளிகளின் தற்போதைய இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தலாமா?? இந்தக் கேள்விதான் தொக்கி நிற்குது..

உங்களின் கேள்வி ஒருபக்க நியாயமானது  மட்டுமே.

 
முள்ளிவாய்க்கால் முடிவின்போது எனது உள்மனதில் நான் நினைத்தேன்....
மாவீரர்களின் கனவை புதைத்துவிட்டோம் என்று.
ஆனால் இனி மாவீரராக இருப்பவர்களை காப்பற்றுவோமா? என்று.
 
முன்னை நாள் போராளிகளின் நிலைகளை இப்போது கொண்டு வந்து இலக்கியம் படைக்கிறார்கள்.
இதே நிலைதான் முன்பும் இருந்தது. அப்போது இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.
வலித்தவர்கள் மட்டும் மனதுக்குள் அழுதுகொண்டிருந்தார்கள்.
மாவீரர் குடும்பத்தில் இருந்தே அடுத்த போராளியும் செல்லும் நிலைமை அன்றும் இருந்தது. அடுத்தவீட்டில் புலிகளின் வரியால் வாடி வதங்கி போய்  இருந்தார்கள் .
 
இது தமிழனின் இயற்குணம்.
 
இது இப்போது மட்டும் வந்ததல்ல.............. முன்பு வேறு வடிவு 
இப்போ இந்த வடிவு.
வடிவங்கள் மாறுகின்றன. விடயம் ஒன்றுதான்.
வடிவங்கள் மாறும்போது சிலருக்கு தெளிவாக தெரிகிறது.
 
கள உறவு அர்ஜுன் அவர்கள் (இது தனிமனித தாக்குதல் என்று கருதும் இடத்து நீக்கிவிடவும்) புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பை பற்றி துடித்து துன்புற்று எழுதுகிறார். 
மொத்த குடும்பமும் கனடாவில் இருக்கிறார்கள். எமக்கு அப்படி வசதி கிடைக்கவில்லை. கட்டாய ஆட்சேர்ப்பு என்று புலிகள் எங்கள் வீட்டுக்குத்தான் வந்தார்கள். அவரக்ளிடமும் வேறு தெரிவு இல்லை என்பது எமக்கு தெரியும். 
பிள்ளைகள் எல்லாம் படித்து முடிந்த பின் வயது போன நேரத்தில் சேவை செய்ய தான் யாழ்பாணம் போவாராம் என்று இன்னொரு திரியில் எழுதிய அர்ஜுன்  அவர்கள். எங்கள் வீடில் புலிகள்  காட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆள்பிடித்ததட்கு மிகுந்த கண்டனம் தெரிவிக்கின்றார்.
கட்டாய ஆட்சேர்ப்பு காலத்திற்கு முன்பு அங்கயகன்னிகள் தாமாகவே சேர்ந்து தாமாகவே கரும்புலி படகு ஏறிய காலங்களில். இவர்கள் போய் ஏறினார்களா????
அன்று அங்கய கன்னி 
இன்று அவள் தங்கை 
இதுதான் நிலைமை. 
சாதியை  சொல்லி அயல்வீட்டு மனிதனை மிதித்தவன் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? 
இந்த முதியவருக்கு இந்த துணிவை இந்த அறிவை கொடுத்தது யார்???
 
அடுத்தவன் படிக்கவில்லையாம் என்று இங்கே எழுத்திலேயே எழுதுகிறார்களே?
அவர்கள் விண்வெளியில் சர்வதேச ஸ்பேஸ் சென்றரில் இருந்தா யாழில் எழுதுகிறார்கள் ? அவர்கள் என்ன படித்து கிழித்தார்கள்? படிப்பிலே கிழித்தவன் அப்படி எழுதுவானா ? மற்றவனை காட்டி தம்மை மேம்படுத்துவது. ஒரு போலி நாடகம் போட்டு  ராஜா  ஆவது இது சமூகம் கற்று கொடுக்கிறது. 
உமா மகேஸ்வரன் புளட்டை தொடங்கியதட்கும் இதுதான் அடிப்படை காரணம்.
எமது இனம் அழிந்து போனதற்கும் இதுதான் காரணம்.
 
போராளிகளின் வாழ்வை தக்கவைத்து  இதை திருத்திவிட முடியாது.
ஓவரு மனிதனும் அறிவு பெற வேண்டும்.
ஒரு தமிழனுக்கு யாரவது அடித்தால் எல்லா தமிழனுக்கும் வலிக்க வேண்டும்.
பிரபாகரனுக்கு மட்டுமே வலித்தால்?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..

மற்ற விடயங்களை விட்டுவிடுகிறேன்.. ஆனால் வயதான அந்த ஐயாவின் செயலை மட்டும் எடுத்துக்கொள்வோம்..

அதிக வயது வித்தியாசத்தில் திருமணங்கள் நடைபெறுகின்றனதான் .. இருமனங்களும் சம்மதிக்கும் பட்சத்தில் யார் தடைசொல்ல முடியும்??

இந்த ஐயா போரைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்தவர் என வைத்துக்கொள்வோம் .. போராளிகளின் தியாகம் தந்த அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு போராளிகளின் தற்போதைய இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தலாமா?? இந்தக் கேள்விதான் தொக்கி நிற்குது..

உங்களின் கேள்வி ஒருபக்க நியாயமானது  மட்டுமே.

 
முள்ளிவாய்க்கால் முடிவின்போது எனது உள்மனதில் நான் நினைத்தேன்....
மாவீரர்களின் கனவை புதைத்துவிட்டோம் என்று.
ஆனால் இனி மாவீரராக இருப்பவர்களை காப்பற்றுவோமா? என்று.
 
முன்னை நாள் போராளிகளின் நிலைகளை இப்போது கொண்டு வந்து இலக்கியம் படைக்கிறார்கள்.
இதே நிலைதான் முன்பும் இருந்தது. அப்போது இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.
வலித்தவர்கள் மட்டும் மனதுக்குள் அழுதுகொண்டிருந்தார்கள்.
மாவீரர் குடும்பத்தில் இருந்தே அடுத்த போராளியும் செல்லும் நிலைமை அன்றும் இருந்தது. அடுத்தவீட்டில் புலிகளின் வரியால் வாடி வதங்கி போய்  இருந்தார்கள் .
 
இது தமிழனின் இயற்குணம்.
 
இது இப்போது மட்டும் வந்ததல்ல.............. முன்பு வேறு வடிவு 
இப்போ இந்த வடிவு.
வடிவங்கள் மாறுகின்றன. விடயம் ஒன்றுதான்.
வடிவங்கள் மாறும்போது சிலருக்கு தெளிவாக தெரிகிறது.
 
கள உறவு அர்ஜுன் அவர்கள் (இது தனிமனித தாக்குதல் என்று கருதும் இடத்து நீக்கிவிடவும்) புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பை பற்றி துடித்து துன்புற்று எழுதுகிறார். 
மொத்த குடும்பமும் கனடாவில் இருக்கிறார்கள். எமக்கு அப்படி வசதி கிடைக்கவில்லை. கட்டாய ஆட்சேர்ப்பு என்று புலிகள் எங்கள் வீட்டுக்குத்தான் வந்தார்கள். அவரக்ளிடமும் வேறு தெரிவு இல்லை என்பது எமக்கு தெரியும். 
பிள்ளைகள் எல்லாம் படித்து முடிந்த பின் வயது போன நேரத்தில் சேவை செய்ய தான் யாழ்பாணம் போவாராம் என்று இன்னொரு திரியில் எழுதிய அர்ஜுன்  அவர்கள். எங்கள் வீடில் புலிகள்  காட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆள்பிடித்ததட்கு மிகுந்த கண்டனம் தெரிவிக்கின்றார்.
கட்டாய ஆட்சேர்ப்பு காலத்திற்கு முன்பு அங்கயகன்னிகள் தாமாகவே சேர்ந்து தாமாகவே கரும்புலி படகு ஏறிய காலங்களில். இவர்கள் போய் ஏறினார்களா????
அன்று அங்கய கன்னி 
இன்று அவள் தங்கை 
இதுதான் நிலைமை. 
சாதியை  சொல்லி அயல்வீட்டு மனிதனை மிதித்தவன் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? 
இந்த முதியவருக்கு இந்த துணிவை இந்த அறிவை கொடுத்தது யார்???
 
அடுத்தவன் படிக்கவில்லையாம் என்று இங்கே எழுத்திலேயே எழுதுகிறார்களே?
அவர்கள் விண்வெளியில் சர்வதேச ஸ்பேஸ் சென்றரில் இருந்தா யாழில் எழுதுகிறார்கள் ? அவர்கள் என்ன படித்து கிழித்தார்கள்? படிப்பிலே கிழித்தவன் அப்படி எழுதுவானா ? மற்றவனை காட்டி தம்மை மேம்படுத்துவது. ஒரு போலி நாடகம் போட்டு  ராஜா  ஆவது இது சமூகம் கற்று கொடுக்கிறது. 
உமா மகேஸ்வரன் புளட்டை தொடங்கியதட்கும் இதுதான் அடிப்படை காரணம்.
எமது இனம் அழிந்து போனதற்கும் இதுதான் காரணம்.
 
போராளிகளின் வாழ்வை தக்கவைத்து  இதை திருத்திவிட முடியாது.
ஓவரு மனிதனும் அறிவு பெற வேண்டும்.
ஒரு தமிழனுக்கு யாரவது அடித்தால் எல்லா தமிழனுக்கும் வலிக்க வேண்டும்.
பிரபாகரனுக்கு மட்டுமே வலித்தால்?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் கூற விரும்பவில்லை .

Link to comment
Share on other sites

சரி.. அந்த ஐயா தவிச்ச முயல் அடிச்சது தப்புன்னு ஒரு கருத்துக்கு எடுத்துக் கொள்வோம்.. அப்போ அந்தப் பெண்களுக்கு மறுவாழ்வளிப்பது யார்..??! 

 

அவர்கள் கையைப் பிடிச்சு இழுக்கும் அவர்கள் வாழ்வை சீரழிச்சு விபச்சாரம் வரை கொண்டு போகும்.... சிங்களவனும் ஒட்டுக்குழுக்களுமா..???!

 

அந்த ஐயா மீது புறணிபாடும் நாம்... ஏன்.. அதற்கு சாத்தியமான மாற்றுக்களை முன்வைக்கிறோம் இல்லை. ஏன்னா.. எங்களிடம் உருப்படியா எதனையும் செய்யும் மனநிலை இல்லை. ஆளாளால் தான் தப்பிக்கனும்.. சுகபோகமாக இருக்கனும்.. இடையில் பாவம்.. புண்ணியம் பார்க்கிறவன் ஏதாவது செய்தால் அதை விமர்ச்சிச்சு நாங்கள் எங்களை வித்தியாசமான புரட்சியாளர்களாக் காட்டிக்கிட்டு.. வெட்டிப் பெருமை பேசிக்கிட்டு இருக்கனும்.

 

இதனால்.. நடைமுறைப் பிரச்சனைகளுக்கு தீர்வு வருமா..??! அப்படி தீர்வு வருமென்றால்.. அதனை இனங்காட்டி நடைமுறைப்படுத்துவது தான் புத்திசாலித்தனம். சமூகத் தேவை..! அப்படியான ஏதாவது கருத்து இங்க வந்திருக்கா..?????!  :icon_idea::rolleyes::(

 

நெடுக்ஸ்.. நீங்கள் சொன்னதை முழுமையாக ஏற்றுக்கொண்டிருப்பேன்.. அந்த ஐயா அந்தப் பெண்ணை தனது நாட்டிற்கு எடுத்திருந்தார் என்றால்.. இப்போது மட்டும் என்ன பாதுகாப்பை வழங்கிவிட்டார்?? பணப் பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கிறார்.. அவ்வளவுதான்..

 

வெறும் பண உதவிகளை வெளியில் இருந்து குறிப்பிடத்தக்கவர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்..! ஆனால் இந்த ஐயா பண உதவியைச் செய்துகொண்டு தாம்பத்தியத்தையும் பெற்றுக்கொள்கிறார்.. இதற்கும் அங்கே நேரடியாக நடக்கும் விபச்சாரத்துக்கும் என்ன வித்தியாசம்? இந்த விடயத்தில் ஐயா ஒருவர்.. மற்ற விடயங்களில் பலர்.. அவ்வளவுதான்..

Link to comment
Share on other sites

இப்போல்லாம் முன்னாள் போராளிகளை வைத்து விவாதம் நடத்திறதே வேலையா போச்சு......

அட போங்கப்பா..... அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்கு அவருக்கும் பிடிசிடுக்கு......

ஒரு வேலை சோத்துக்கே கஷ்டப்பட்டு கொண்டு உங்க உதவாத கதையல கேட்டு கொண்டு இருக்கிறதும் பாகா....

இப்ப அந்த பொண்ணுக்கு ஒரு கடை ஒரு ஆட்டோ ன்னு கிடைச்சிருக்கு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரோபகாரம் செய்வதற்கும் vulnerable (இயலாதவர்களாக?) ஆக இருப்பவர்களை நம்பிக்கை கொடுத்து துஷ்பிரயோகம் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

 

 

Link to comment
Share on other sites

இவளவு நாளும் அந்த பொண்ண கண்டுக்காம விட்ட உறவினர்கள் சுற்றம் எல்லாம் இப்ப தேடி தேடி வருவினம்.... அது மட்டுமல்ல இராணுவம் மற்றும் அதன் கைகூலிகலிடம் இருந்தும் ஒரு பாதுகாப்பு......

இங்கே அந்த ஐயா விரும்பா விட்டாலும் தன்னுடைய பாதுகாப்புக்காக அந்த பெண்ணே விரும்பி குழந்தை பெற்று இருக்கலாம்.....

கூட்டலும் கழித்தலும் பெருக்கலும் பிரித்தலும் நிறைந்தது தானே வாழ்கையே..... அதாவது வாழ்க்கை ஒரு கணக்கு.... ஒவோன்றுக்கும் ஒவொரு விலை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அந்த ஜயாவின் மகள் வயசு தான் அந்தப் பெண்ணுக்கு இருக்கும்.அவரின்ட மகளுக்கு இப்படியொரு நிலைமை வந்து இவரிலும் பார்க்க வயதானவர் இவரது மகளுக்கு இப்படி செய்தால் இவருக்கு எப்படி இருக்கும்?...கல்யாணம் முடித்தவர் தன்னோடு கூட்டி வந்து மனைவி அந்தஸ்து குடுத்து குடும்பம் நடத்தினாவது ஓரளவுக்கு மன்னிக்கலாம்...படுக்க ஆசையாய் இருந்தால் இங்கிருக்கும் விபச்சாரிகளை தேடிப் போக வேண்டியது தானே!...ஒரு நல்ல மனிதன் என்டால் தன்ட மகள் மாதிரி என்று நினைத்து தத்தெடுத்து அப் பெண் வாழ ஏதாவது வழி[சுயதொழில்] செய்திருக்க வேண்டும்...கேடு கெட்ட சமூதாயம் எம்மோடது :(
Link to comment
Share on other sites

அவர் மகள் மாதிரி நினைச்சு உதவி செய்திருந்தாலும் அங்கால போக விட்டிட்டு அதைப்பற்றியும் தப்பு தப்பா பேசி இருக்கும் எங்க சனங்க சோ.....

Link to comment
Share on other sites

இந்த திரியால்  பல தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. பலரும் பல கருத்துக்களை முன்வைகின்றார்கள்.
 
ஒரு நியாயமான அரசியல் தீர்வு மட்டுமே ஒரு தீர்வை ஓரளவிற்காவது கொண்டுவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. நீங்கள் சொன்னதை முழுமையாக ஏற்றுக்கொண்டிருப்பேன்.. அந்த ஐயா அந்தப் பெண்ணை தனது நாட்டிற்கு எடுத்திருந்தார் என்றால்.. இப்போது மட்டும் என்ன பாதுகாப்பை வழங்கிவிட்டார்?? பணப் பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கிறார்.. அவ்வளவுதான்..

 

வெறும் பண உதவிகளை வெளியில் இருந்து குறிப்பிடத்தக்கவர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்..! ஆனால் இந்த ஐயா பண உதவியைச் செய்துகொண்டு தாம்பத்தியத்தையும் பெற்றுக்கொள்கிறார்.. இதற்கும் அங்கே நேரடியாக நடக்கும் விபச்சாரத்துக்கும் என்ன வித்தியாசம்? இந்த விடயத்தில் ஐயா ஒருவர்.. மற்ற விடயங்களில் பலர்.. அவ்வளவுதான்..

 

உங்க எத்தினையோ.. இளமைத் துடிப்பும்.. பி எம் டம்பிள்யு கிறுக்கும் கொண்ட மாப்பிள்ளை மார் ஊரில போய் கலியாணம் கட்டி கூத்தும் அடிச்சிட்டு இந்தா கூப்பிடுறன் என்றிட்டு ஒரேயடிய ஓடி வரினம்.. அந்தாக்களோட ஒப்பிடேக்க.. அந்த ஐயா பறுவாயில்லைத் தானே.

 

திருமணமே ஒரு வகை விபச்சாரம் தானே. அது இந்த ஐயா செய்தால் என்ன காதலிச்சு (தானே ஒன்றைச் செட்டப் செய்து.. அதுதான் காதல்) இளமைத் துடிப்போடு ஒருத்தர் செய்தால் என்ன.. எல்லாம் செயலும் விளைவும் ஒன்று தானே.

 

அதுவும் தமிழ் பெண்கள் விசாவுக்கும்.. வெளிநாட்டு சுகபோகத்திற்கும்.. காசுக்கும் தானே கலியாணமே முடிக்கினம். அப்புறம் என்ன. அது விபச்சாரமில்லையா..???! :lol::icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமே ஒரு வகை விபச்சாரம் தானே.  

அதுவும் தமிழ் பெண்கள் விசாவுக்கும்.. வெளிநாட்டு சுகபோகத்திற்கும்.. காசுக்கும் தானே கலியாணமே முடிக்கினம். அப்புறம் என்ன. அது விபச்சாரமில்லையா..???! :lol::icon_idea:

இந்தக் கதையைப் பார்த்தால் மனிதர் எல்லாரும் விபச்சாரத்தால்தான் சந்ததிகளைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று எடுக்கலாம்.

மனிதரோ, விலங்கோ ஒரு பருவத்திற்கு வந்த பின்னர் தமது துணைகளை தாமே தெரிவு செய்கின்றனர். அதிலும் வயதுக்கு வந்த மனிதர் யாருடைய கட்டாயப்படுத்தல்களும் இன்றி சுயமாகச் சிந்தித்து திருமணத்திற்கோ, கூடி வாழ்வதற்கோ சம்மதித்தால் அதைப் பற்றிக் கருத்துக் கூறவேண்டியதில்லை.

வாழ்வு கொடுக்கின்றேன், தியாகம் செய்கின்றேன் என்ற போர்வையில் சிலர் துஷ்பிரயோகம் செய்வதால் நல்லவர்களையும் நம்பமுடியாமல் உள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.