Jump to content

ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும்: மாக்சிம் கார்க்கி: தமிழில்: சுரா


Recommended Posts

ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும்: மாக்சிம் கார்க்கி:

மொழிபெயர்ப்பு: சுரா

மூலம்: லேகா புத்தகங்கள்

நாங்கள் இருபத்தாறு ஆண்கள். ஒரு இருட்டு நிறைந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு காலை முதல் இரவு வரை கோதுமை மாவைக் கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிப்பதுதான் வேலை. செங்கற்களால் ஆன, அழுக்கும் பாசியும் பிடித்த சுவரிலிருக்கும் துவாரங்கள் தான் அந்த அறையின் சாளரங்கள். வெளியே நோக்கியிருக்கும் சாளரத்தின் பலகைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அதன் வழியாகச் சூரிய ஒளி உள்ளே வரமுடியாமல் இருந்தது. சாளரத்தின் பலகைகளுக்கு மேலே பிசையப்பட்ட மாவு ஒட்டியிருந்தது.

தன்னுடைய நிறுவனத்தில் தயாராகும் ரொட்டியும், பிஸ்கட்டும் வெளியிலிருக்கும் பிச்சைக்காரர்களுக்கோ வறுமையின் பிடியில் சிக்கி பட்டினி கிடக்கும் எங்களின் உடன்பிறப்புகளுக்கோ கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக எங்களின் முதலாளி அந்தச் சாளரங்களுக்கு மேலே கம்பி வலையை இணைத்துக் கட்டியிருந்தார். திருடர்களின் கூட்டம் என்றுதான் முதலாளி எங்களை அழைத்தார். மிருகங்களின் அழுகிப்போன குடல்களைத்தான் மாமிசத்திற்குப் பதிலாகச் சாப்பிட எங்களுக்கு அவர் தந்தார். கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும் எட்டுக்கால் பூச்சியின் வலையும் சிலந்தி வலையும் ஆக்கிரமித்திருக்கும் அந்தக் கூரைக்குக் கீழே, இவ்வளவு ஆட்கள் மிகவும் நெருக்கமாக அந்தச் சுரங்கத்திற்குள் வாழ்க்கை மிகவும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.

பாசியும் அழுக்கும் பிடித்த அடையாளங்களும் நிறைந்த அந்தச் சுவர்களுக்குள் வாழ்க்கை மிகவும் கடுமை நிறைந்ததாகவும் கொடூரமானதாகவும் இருந்தது. தூக்கக் கலக்கம் காரணமாக வீங்கிப்போன முகத்துடன் அதிகாலை ஐந்து மணிக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் நாங்கள்; நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் எங்களின் சக நண்பர்கள் பிசைந்து வைத்திருக்கும் மாவைப் பயன்படுத்தி, சரியாக ஆறு மணிக்கு பிஸ்கட் தயாரிக்கும் வேலை ஆரம்பமாகிவிடும். காலை முதல் இரவு பத்து மணி வரை உள்ள அந்த நாள் முழுவதும் அந்த நீளமான மேஜைக்கு அருகில் அமர்ந்து கொண்டு, கட்டியாகப் பிசைந்து வைத்திருக்கும் மாவிற்கு பிஸ்கட் வடிவம் கொடுப்பதுதான் எங்களின் வேலை. உடல் வேதனைத் தீர வேண்டும் என்பதற்காக நாங்கள் உடலை நிமிர்த்தவும் சாய்க்கவும் செய்வோம். அப்போது மற்ற வேலைக்காரர்கள் கோதுமை மாவில் நீரைச் சேர்த்துப் பிசைந்து கொண்டிருப்பார்கள். பிஸ்கட்டுகள் உண்டாக்குவதற்காக அந்தப் பெரிய பாத்திரங்களில் கொதித்துக் கொண்டிருக்கும் நீர் இரைந்து கொண்டிருக்கும்போது, பேக்கரின் கரண்டி அடுப்பில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய சூடான கல்லைத் தட்டி ஓசை உண்டாக்கிக் கொண்டிருக்கும். அமைதியான கிண்டலைப்போல சிவந்த ஜுவாலைகள் அந்தப் பேக்கரியின் சுவர்களில் பிரகாசமாகத் தெரியும். பாதாளத்திற்குள்ளிருந்து தலையைத் தூக்கிப் பார்க்கும் ஒரு சைத்தானின் தலையை அந்த அடுப்பு ஞாபகப்படுத்தும். அதன் பிளந்த உதடுகளுக்கு நடுவில் நெருப்பு ஜுவாலைகள் தெரியும். மேலே இருக்கும் இரண்டு துவாரங்கள் வழியாக மூச்சு உஷ்ணக் காற்றாக மாறி எங்கள் மீது வீசிக் கொண்டிருக்கும்.

எங்களின் குறையாத கஷ்டங்களும் புலம்பல்களும் பார்த்துக் கொண்டிருக்கும் கண்களைப் போல இருந்தன. அந்தத் துவாரங்கள். சைத்தானின் இரக்கமற்ற, ஒன்றுமே செய்ய முடியாத பார்வைகளைப் போல அவை எங்களையே பார்த்துக் கொண்டிருந்தன. வெறுப்பு கலந்த, மனிதத்தன்மை சிறிதும் இல்லாத கண்களைப் போலிருந்த அந்தத் துவாரங்கள் எங்களையே வெறித்துப் பார்த்தன.

வாசலிலிருந்து எங்களின் கால்கள் மூலமாக உள்ளே வரும் அழுக்குக்கு மத்தியில், கடுமையான உஷ்ணம் நிலவிக் கொண்டிருக்கும் பேக்கரியின் அடுப்பிலிருந்து தயாராகும் பிஸ்கட் வாசனைக்கு நடுவில், பகல் முழுவதும் பிசையப்பட்ட மாவைப் பதப்படுத்துவதும் அதிலிருந்து பிஸ்கட்டிற்கு வடிவம் கொடுப்பதும்தான் நாங்கள் செய்து கொண்டிருந்தது. அதில் எங்களின் வியர்வை கலந்திருந்தது. அந்தக் கடினமான வேலையை நாங்கள் வெறுத்தோம். நாங்கள் உண்டாக்கிய அந்த பிஸ்கட்டுகளை நாங்கள் ஒருமுறை கூட தின்றதில்லை. பிஸ்கட்டிற்குப் பதிலாக கம்பு மாவால் தயாரிக்கப்பட்ட ரொட்டிதான் எங்களுக்கு விருப்பமான உணவு. ஒரு நீளமான மேஜையின் இரண்டு பக்கங்களிலும் ஒருவரையொருவர் பார்ப்பது மாதிரி உட்கார்ந்து கொண்டு ஒரு பக்கத்திற்கு ஒன்பது பேர் வீதம்- இயந்திரத்தைப் போல பல மணி நேரங்கள் எங்களின் கைகள் செயலாற்றிக் கொண்டேயிருக்கும்.

வேலையுடன் மிகவும் ஒன்றிப் போய் விடுவதன் காரணமாக, எங்களின் யாருக்கும் எங்களின் உடல் அசைவுகளைப் பற்றி நாங்கள் சுயஉணர்வுடன் இருப்பதேயில்லை. ஆனால், நண்பர்களின் நெற்றியின் ஒவ்வொரு சுருக்கமும் எங்களுக்கு மனப்பாடமாக இருக்கும். நாங்கள் பேசுவதற்கு எதுவுமேயில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்க நாங்கள் நன்கு பழகிக் கொண்டோம். எங்களின் ஒரு ஆள் இன்னொரு ஆளைத் திட்டும் நேரம் தவிர- திட்டுவது என்ற விஷயம் மிகவும் சாதாரணமானது- மீதி நேரங்களில் நாங்கள் அமைதியாகவே இருப்போம்.

நாங்கள் ஒருவரையொருவர் திட்டிக்கொள்வது எப்போதாவது ஒருமுறைதான் நடக்கும். ஏராளமாகப் பேசக்கூடிய மனிதர்களுக்கு அமைதியாக இருப்பது என்பது உண்மையிலேயே வேதனை அளிக்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால், எதுவுமே பேச இல்லாதவர்களுக்கு மவுனமாக இருப்பது என்பது ஒரு சுகமான அனுபவம்தான். சில நேரங்களில் நாங்கள் பாட்டு பாடுவோம். பாட்டு ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலை இப்படித்தான் வரும். வேலைக்கு மத்தியில் சோர்ந்து போன ஒரு குதிரையைப் போல யாராவது ஒருவர் நீண்ட பெருமூச்சை விடுவார். தொடர்ந்து பாட்டு பாடுபவனின் மனச்சுமையைக் குறைக்கிற மாதிரி ஏதாவது ஒரு பாட்டின் ஆரம்ப வரிகள் ஆரம்பமாகும். ஒரு ஆள் பாடும்போது மற்ற தொழிலாளிகள் அவர் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

நெருப்பு குண்டத்தின் ஜுவாலைகளைப் போல அந்தப் பாட்டு அப்படியே வெளியே செல்லும். முதலில் பாடியவனுடன் சேர்ந்து இன்னொரு ஆள் பாட ஆரம்பிப்பான். இரண்டு குரல்களும் இணைந்து அந்தத் தகித்துக் கொண்டிருக்கும் வெப்பச் சூழ்நிலையில் ஒலித்துக் கொண்டிருக்கும். திடீரென்று அந்தப் பாட்டுடன் மேலும் பல குரல்கள் சேர ஆரம்பிக்கும். அத்துடன் அந்தப் பாட்டு ஒரு அலையைப் போல மேலும் தீவிரமடைந்து உரத்த ஸ்தாயியில் கேட்டுக் கொண்டிருக்கும் அது எங்களுடைய சிறையின் கனமான சுவர்களைத் தகர்த்தெறிவதைப் போல் இருக்கும்.

அத்துடன் நாங்கள் இருபத்தாறு பேர்களும் சேர்ந்து பாட ஆரம்பிப்போம். நீண்ட நாட்கள் அப்படியே பாடிப் பாடிப் பழக்கமாகி விட்டதன் காரணமாக உரத்த குரலில் பாடுவதற்கு ஏற்றபடி எங்களின் குரல் தயாராகிவிட்டிருக்கும். நாங்கள் வேலை செய்யும் இடத்திற்குள் அந்தப் பாட்டுச் சத்தம் நிறைந்து நிற்கும். தேம்பி அழுது, சிறு சிறு வேதனைகளால் இதயத்தை ரணமாக்கி, பழைய காலங்களை மீண்டும் குதறி, அந்த அறிவில் கோபத்தைக் கிளர்ந்தெழச் செய்து, இன்னும் விசாலமான இடம் இருக்க வேண்டும் என்று பாடல் வேண்டிக் கேட்டுக் கொள்ளும்.

http://www.lekhabooks.com/short-stories/322-oru-ilam-pennum-irupattharu-aangalum.html

பாட்டு பாடுபவர்கள் நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள். திடீரென்று எங்களின் ஒரு ஆள் பாடுவதை நிறுத்திவிட்டு மற்றவர்கள் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருப்பான். பிறகு, அவனுடைய குரல் மீண்டும் அந்தக் குழுப்பாடலில் இணைந்து ஒலிக்க ஆரம்பிக்கும். "ஹா" என்று இன்னொரு தொழிலாளி துக்கத்துடன் அழுவான். அந்த இசை அருவி தூரத்தை நோக்கி நீண்டு போகிற ஒளியில் குளித்திருக்கும் ஒரு பாதையே எனவும், தான் அதில் நடந்து போய்க் கொண்டிருக்கும் மனிதன் என்றும் அவன் மனதில் நினைத்துக் கொள்வான்.

அப்போது அடுப்பில் தீ ஜுவாலைகள் ஜொலித்துக் கொண்டிருக்கும். பேக்கரின் கரண்டி சுடுகல்லில்தட்டும் சத்தம் பலமாகக் கேட்கும். பெரிய அண்டாவில் நீர் ஓசை உண்டாக்கியவாறு கொதித்துக் கொண்டிருக்கும். அமைதியான சிரிப்புடன் அந்த நெருப்பின் சாயல் சுவரில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும். எங்களுக்குள் இருக்கும் வேதனைகளைப் பற்றி, சூரிய ஒளி மறுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மனிதர்களை அரித்துத் தின்று கொண்டிருக்கும் துன்பங்களைப் பற்றி, அடிமைகளின் மனவருத்தத்துடன், எங்களிடம் மட்டும் இருக்கும் வேதனைகள் என்றில்லாமல் நாங்கள் பாடிக் கொண்டிருப்போம். நாங்கள் இருபத்தாறு பேர் அந்தக் கல்லால் ஆன கூட்டிற்குள் வாழ்ந்தோம். அந்தக் கட்டிடத்தின் மேலே இருக்கும் மூன்று மாடிகளும் கட்டப்பட்டிருப்பது எங்களின் தோள்கள் மீதுதான் என்பதைப் போல் இருந்தது எங்களுடைய வாழ்க்கைச் சுமை.

அந்தப் பாட்டைத் தவிர, நாங்கள் விருப்பப்படும், நாங்கள் ரசிக்கும் வேறொன்றும் அங்கு இருந்தது. ஒரு வேளை எங்களுடைய மனங்களில் பிரகாசம் பரப்பிக் கொண்டிருந்த சூரிய வெளிச்சத்தைப் போல இருந்த ஒன்று அது என்று கூட கூறலாம். நாங்கள் இருந்த கட்டிடத்தின் முதல் மாடியில் ஒரு தையல் சாலை இருந்தது. அந்தத் தொழிற்சாலையில் வேலைக்காரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள் பதினாறு வயது இளம் பெண்ணான டானியா. எங்களுடைய பேக்கரியின் வாசலில் இருக்கும் கண்ணாடியால் ஆன சாளரத்தின் மீது நீலநிறக் கண்களைக் கொண்ட அந்த இளம் சிவப்பு முகம் ஒட்டிக் கொண்டிருப்பதை நாங்கள் எல்லா நாட்களிலும் காலை நேரத்தில் பார்ப்போம். இனிமையாக அவள் எங்களை அழைப்பாள்.

"ஹலோ சிறைப் பறவைகளே! எங்களுக்குக் கொஞ்சம் பிஸ்கட் தருவீங்களா?" அந்த இயல்பான குரலைக் கேட்டு எங்களின் தலைகள் திரும்பும். மிகவும் இனிமை நயத்துடன் எங்களைப் பார்த்துச் சிரிக்கக் கூடிய அந்தக் கள்ளங்கபடமற்ற இளம் பெண்ணின் முகத்தையே நாங்கள் சந்தோஷத்துடன் பார்த்துப் புன்னகை செய்வோம். அவள் சாளரத்துடன் சேர்ந்து நிற்கும்போது பதிந்து போயிருக்கும் மூக்கின் நுனியையும் ஒரு சிறு சிரிப்பிற்காக மலரும்போது அந்த உதடுகளுக்கிடையே தெரியும் வெண்மையான பற்களையும் பார்ப்பது என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அவளுக்காகக் கதவைத் திறப்பதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நாங்கள் ஓடி கதவுக்கு அருகில் போய் நிற்போம். மிகவும் வசீகரமான தோற்றத்துடன், உற்சாகமாகத் தன்னுடைய துணியை நீட்டியவாறு, தலையை ஒரு பக்கம் சாய்த்துக் கொண்டு, பிரகாசித்துக் கொண்டிருக்கும் முகத்துடன் அவள் அங்கு நின்றிருப்பாள். "செஸ்ட்நட்"டின் நிறத்தைக் கொண்ட நீளமான கூந்தல் தோள் வழியாக அவளுடைய மார்பின் மீது விழுந்து கிடக்கும்.

காட்டு வாழ் மனிதர்களைப் போல சுத்தமற்ற நாங்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருப்போம். நாங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து நான்கு படிகளுக்கு மேலே அவள் நின்றிருப்பாள். நாங்கள் அவளுக்கு 'குட்மார்னிங்' கூறுவோம். நாங்கள் அப்படி கூறுவதற்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது. அவளுக்காக மட்டுமே நாங்கள் கண்டுபிடித்த ஒன்று அது. அவளுடன் பேசும்போதெல்லாம் எங்களுடைய குரல் மிகவும் மென்மையாக மாறிவிடும். எங்களுடைய தமாஷான செயல்களை மிகவும் எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியும். அவளுக்காக நாங்கள் செய்த ஒவ்வொன்றும் குறிப்பிட்டுக் கூறும்படியாக இருக்கும். பேக்கர் தன்னுடைய கரண்டியின் உதவியால் ஒரு குவியலாக பிஸ்கட்டுகளை வாரி எடுத்து சிறிதும் இலக்கு தவறிவிடாமல் டானியாவின் துணியில் விழும்படி மிகவும் திறமையாகப் போடுவார்.

"உன்னோட இந்த ரகசிய வேலை முதலாளிக்குத் தெரியாதபடி பார்த்துக்கோ"- நாங்கள் பல நேரங்களில் அவருக்கு முன்கூட்டியே எச்சரிக்கைக் கொடுத்திருக்கிறோம். அப்போது குறும்புடன் புன்னகைத்தவாறு மகிழ்ச்சியுடன் "பை பை சிறைப் பறவைகளே!" என்று கூறியவாறு ஒரு மின்னலைப் போல அவள் மறைந்துவிடுவாள்.

அத்துடன் அந்த விஷயம் முடிந்துவிடும். ஆனால், அவள் போய் சிறிது நேரம் ஆன பிறகும் நாங்கள் அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்போம். நேற்றும் நேற்றைக்கு முந்திய நாளும் பேசிக் கொண்டிருந்த அதே விஷயங்களைத்தான் அன்றும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். நேற்றும் அதற்கு முந்தின நாளும் எங்களைச் சுற்றி நடைபெற்ற சம்பவங்கள்தான் அன்றும் நடந்து கொண்டிருந்தது. தன்னைச் சுற்றியுள்ள பொருட்களுக்கும் மற்ற விஷயங்களுக்கும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருப்பது என்பது ஒரு மனிதனைப் பொறுத்தவரையில் மிகவும் வேதனை தரக்கூடிய கடுமையான ஒரு விஷயம் என்பதே உண்மை. அது அந்த மனிதனின் ஆத்மாவை ஒரேயடியாக அழித்துவிடும். தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தின் சலனமற்ற தன்மை அவனுக்குள் மேலும் அதிக வேதனையைத் தரும்.

பெண்களைப் பற்றி நாங்கள் மிகவும் மெதுவாகவும் வெட்கப்படும்படியாகவும் பேசிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு அறிமுகமாகியிருந்த பெண்கள் வேறு எந்த வகையிலும் கற்பனை பண்ணிப் பார்க்கத் தகுதியில்லாதவர்களாக இருந்தார்கள். ஆனால், டானியாவைப் பற்றி அசிங்கமாக ஒரு வார்த்தை கூட நாங்கள் பேசவில்லை. அவளை ஒருமுறை தொட எங்களில் யாருக்கும் தைரியம் வரவில்லை. எங்களிடமிருந்து ஒரு ஆபாசமான தமாஷைக் கூட கேட்கும்படியான சூழநிலை அவளுக்கு உண்டாகவில்லை. ஒருவேளை, அதிக நேரம் அவள் எங்களுடன் இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம்.

வானத்திலிருந்து உதிர்ந்து ஒரு நிமிடம் மட்டும் எங்களுக்கு முன்னால் பளிச்சிட்டு நின்று கொண்டிருக்கும் நட்சத்திரத்தைப் போல தோன்றிய அடுத்த நிமிடமே அவள் எங்களை விட்டு மறைந்து விடுவாள். ஒருவேளை, அவள் மிகவும் இளவயதைக் கொண்டவளாகவும், அழகிய பெண்ணாகவும் இருந்தது காரணமாக இருக்கலாம். அழகான பொருட்களெல்லாம் கரடுமுரடான குணங்களைக் கொண்டவர்களிடம் கூட ஒருவித ஈர்ப்பைப் பெற்றுவிடுகிறது. எல்லாவற்றையும் விட கடினமான வேலை எங்களைப் பேச முடியாத மாடுகளாக மாற்றிவிட்டிருந்தாலும், சிறிதளவிலாவது மனித குணம் எங்களிடம் மீதமிருக்கவே செய்தது.

யாரையும் ஆராதனை செய்யாமல் வாழ முடியாத ஒரு கூட்டம், மனிதப் பிறவிகள்! அவளை விட அழகானவளாக நாங்கள் வேறொரு பெண்ணைப் பார்க்கவில்லை.

தொடரும்.....................

Link to comment
Share on other sites

அந்தக் கல்லால் ஆன சிறைக்குள் மனிதப் பிறவிகளான எங்களை அவளைத் தவிர வேறு யாரும் கவனித்ததேயில்லை. அந்தக் கட்டிடத்தில் வசிக்கக்கூடிய வேறு ஆட்கள் இருந்தாலும், அவர்கள் யாரும் எங்களைப் பொருட்படுத்தியதேயில்லை. நாங்கள் உண்டாக்கிய பிஸ்கட்டின் அல்லது எங்களின் நிம்மதியற்ற வாழ்க்கையின் பகுதியாகவே அவளை நாங்கள் நினைத்திருந்தோம் என்பதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். அவளுக்குச் சூடான பிஸ்கட்டுகளைத் தருவது என்பது ஒரு கடமை என்று நாங்கள் நினைத்தோம்.

அந்த விக்கிரகத்தின் மீது நாங்கள் கொண்ட ஆராதனையின் வெளிப்பாடாக இருந்தது அது. அவளை எங்களுடன் நெருங்க வைத்த மரியாதைக்குரிய வழிபாட்டுச் சடங்கு என்றே நாங்கள் அதைக் கருதினோம். பிஸ்கட் தவிர சில அறிவுரைகளையும் நாங்கள் அவளுக்குத் தருவதுண்டு- அழகான ஆடைகள் அணிய வேண்டும். படிகளில் ஓடக் கூடாது. எடை அதிகம் கொண்ட பெரிய விறகுக்கட்டுகளைச் சுமக்கக்கூடாது... இப்படி பல அறிவுரைகள். ஒரு புன்சிரிப்புடன் எங்களின் அறிவுரைகளைக் கேட்கும் அவள் ஒருமுறை கூட அதன்படி நடந்ததில்லை. அவற்றில் ஒன்றைக்கூட ஒருமுறை கூட அவள் பின்பற்றியதில்லை. அதற்காக நாங்கள் அவள் மீது கோபம் கொண்டதில்லை. நாங்கள் மனதில் ஆத்மார்த்தமாக நினைத்ததை அவளிடம் சொல்லிவிடவேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கமாக இருந்தது.

பல விஷயங்களுக்காக அவள் எங்களை அணுகினாள். சமையலறையின் கதவைத் திறந்து கொடுப்பதற்கும் சிறிது விறகு வெட்டிக் கொடுக்கவும் அவள் எங்களின் உதவியைத் தேடி வருவாள். மன விருப்பத்துடனே அந்த வேலைகளையும், அவள் எங்களிடம் ஒப்படைக்கும் சிறுசிறு வேலைகளையும் நாங்கள் செய்வோம்.

ஆனால், ஒருநாள் எங்களில் யாரோ ஒருவன் கிழந்து போயிருந்த சட்டையைத் தைத்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டதற்கு, அவள் மூக்கை ஒரு மாதிரி சுளித்துக் கொண்டு அலட்சியமான குரலில் சொன்னாள்: "சரிதான்... ஆனால், நடக்காது."

அந்த இளம் பெண்ணின் செலவில் நாங்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு ஒருமுறைகூட அவளிடம் நாங்கள் எதையும் கேட்டதில்லை. நாங்கள் அவளைக் காதலித்தோம். அந்த வார்த்தைகளில் எல்லாமே அடங்கியிருக்கிறது. எந்த ஆணாக இருந்தாலும் தன்னுடைய காதலை யார் மீதாவது செலுத்தத்தான் முயற்சிக்கிறான். அது பல நேரங்களில் நிராகரிக்கப்படுகிறது. அழிக்கப்படுகிறது. மற்றொரு சக உயிரின் வாழ்க்கையை அது சிரமத்திற்குள்ளாக்குகிறது. காதலிக்கும்போது அவன் தன்னுடைய ஆராதனைக்குரிய பெண்ணைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. வேறு யாரையும் நாங்கள் காதலிக்காததால், நாங்கள் டானியாவைக் காதலித்தோம்.

சில நேரங்களில் நாங்கள் எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வோம். "அந்த இளம்பெண் விஷயத்துல இந்த அளவுக்கு ஆசைப்படுறதுக்கு என்ன இருக்கு? அப்படி விசேஷமா சொல்லுற அளவுக்கு அவள்கிட்ட என்ன இருக்கு?"- அப்படி யார் சொல்கிறானோ, அவனை அடுத்த நிமிடம் நாங்கள் எல்லோரும் தங்கள் பலத்தைப் பயன்படுத்தி அமைதியாக்கிவிடுவோம். காதலிப்பதற்கு எங்களுக்கு ஏதாவதொரு விக்கிரகம் தேவைப்பட்டது. நாங்கள் அந்த விக்கிரகத்தைக் கண்டுபிடித்து ஆராதனை செய்யவும் ஆரம்பித்தோம். நாங்கள் இருபத்தாறு பேரும் ஒன்று சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு மையப் புள்ளியாக அவள் இருந்தாள்.

அந்தச் செயலுக்கு எதிராக எங்களில் யார் செயல்பட்டாலும், அவன் அடுத்த நிமிடம் எங்களின் எதிரியாக மாறிவிடுவான். நாங்கள் காதலித்தோம். (ஒருவேளை, அது அந்த அளவிற்கு ஒரு நல்ல விஷயமாக இல்லாமல் இருக்கலாம்.) ஆனால், காதலித்தவர்கள் இருபத்தாறு பேர்களாக இருந்தோம். அந்த இருபத்தாறு பேரும் குறிப்பிட்ட அந்த ஆராதனை மையத்தைப் புனிதமாகக் கருத வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம்.

எங்களின் கதையைப் போலவே மோசமானதாக இருந்தது. எங்களின் வெறுப்பும், அதனால் காதலைவிட எங்களின் வெறுப்பு பலம் மிக்கதாக இருப்பதாகச் சிலர் நினைத்ததென்னவோ உண்மை.

பிஸ்கட் உற்பத்தி செய்யும் பேக்கரி தவிர, எங்களுடைய முதலாளிக்கு ஒரு 'பன்' தயாரிக்கும் பேக்கரியும் சொந்தத்தில் இருந்தது. ஒரு கட்டிடத்தில்தான் அந்த இரண்டு பேக்கரிகளும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அந்த பன் பேக்கரியில் பணியாற்றிய நான்கு தொழிலாளிகளும் எல்லா விஷயங்களிலும் எங்களிலிருந்து முற்றும் வேறுபட்டு நின்றார்கள். எங்களைவிட சுத்தமான ஒரு பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். எங்களைவிட தாங்கள் நல்ல நிலையில் உள்ளவர்கள் என்று அவர்கள் தங்களைப் பற்றி மதிப்பீடு செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் எங்களின் பேக்கரி பக்கம் வரவே மாட்டார்கள்.

வாசலில் எப்போதாவது ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டால், அவர்கள் எங்களை மிகவும் கேவலமாகப் பார்ப்பார்கள். நாங்கள் அவர்களின் பேக்கரிக்குள் நுழைந்ததில்லை. தாங்கள் அங்கிருந்து பன்களை எங்கே திருடி விடுவோமோ என்று நினைத்து எங்களின் முதலாளி நாங்கள் அங்கு போகாமல் பார்த்துக் கொண்டிருந்தார். பன் பேக்கரியில் பணியாற்றும் தொழிலாளிகள் மீது எங்களுக்குப் பொறாமை இருந்ததால் நாங்கள் அவர்களை வெறுத்தோம். அவர்களின் வேலை எங்களின் வேலையை விட சிரமம் குறைவானதாக இருந்தது. அவர்களுக்கு எங்களைவிட நல்ல சம்பளம் கிடைத்தது. நல்ல உணவு கிடைத்தது. நல்ல காற்றோட்டமுள்ள சுத்தமான அறை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. நல்ல உடல் நலத்துடனும் உற்சாகத்துடனும் அவர்கள் இருந்தார்கள். அந்தக் காரணங்களால் எங்களுக்கு அவர்கள் மீது வெறுப்பு உண்டானது. அதற்கு நேர்மாறாக நாங்கள் எல்லாரும் வெளிறிப் போன மஞ்சள் நிறத்தில் இருந்தோம். எங்களில் மூன்று பேருக்கு 'ஸிஃபிலிஸ்' நோய் இருந்தது. வேறு சிலருக்கு சிரங்கு நோய் இருந்தது. வாத நோய் காரணமாக ஒருவன் கால் ஊனமுற்றவனாக இருந்தான்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்ற விடுமுறை நாட்களிலும் பன் பேக்கரியில் பணியாற்றும் தொழிலாளிகள் சத்தம் உண்டாக்குகிற ஷூக்களையும், சூட்டுகளையும் அணிந்து கொண்டு ஒரு கொண்டாட்டம் போல பூங்காவை நோக்கி நடப்பார்கள். அவர்களின் கைகளில் அக்காடியன் இருக்கும். சுத்தமில்லாத, அழுக்கு ஆடைகளையும், கிழிந்துபோன காலணிகளையும் அணிந்திருக்கும் எங்களை போலீஸ்காரர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களால் எப்படி அந்த பன் பேக்கரியில் பணியாற்றும் தொழிலாளிகள் இது அன்பு செலுத்த முடியும்?

ஒரு நாள் பன் பேக்கரியில் வேலை செய்யும் முதன்மை பேக்கர் மது அருந்திவிட்டு பணிக்கு வந்தான் என்றும், அவனை முதலாளி அடித்து வெளியே போகச் சொன்னார் என்றும், அந்த ஆளுக்குப் பதிலாக வேறொரு புதிய ஆளை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் என்றும் நாங்கள் கேள்விப்பட்டோம். புதிதாக வேலையில் சேர்ந்திருந்த பேக்கர் ஒரு முன்னாள் பட்டாளத்துக்காரனாக இருந்தான்.

சாட்டின் துணியால் ஆன கோட்டும், தங்கச் செயின் உள்ள கைக்கடிகாரத்தையும் அவன் அணிந்திருந்தான். அந்த பச்சை காமதேவனைப் பார்ப்பதற்காக நாங்கள் ஆர்வத்துடன் காத்திருந்தோம். அவனைப் பார்ப்பதற்கான விருப்பத்துடன், எங்களில் பலரும் பல நேரங்களில் அந்த வாசலில் ஓடிப்போய் நிற்போம்.

ஆனால், அவன் தானே எங்களின் பேக்கரி கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே வந்தான். கதவுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு புன்னகை செய்தவாறு அவன் சொன்னான்:

"ஹலோ... நலமாக இருக்கீங்களா, பையன்மார்களே?"

அந்தக் கதவு வழியாக உள்ளே நுழைய முயன்று கொண்டிருக்கும் புகை போன்ற பனிப்படலம், வாசலில் நின்றிருக்கும் அந்த மனிதனின் பாதங்களைச் சுற்றி ஒரு போர்வையைப் போல படர்ந்து கொண்டிருக்கும். அவனுடைய வளைந்த, ஆடிக் கொண்டிருக்கும் மீசைக்கு நடுவில் மஞ்சள் நிறத்தைக் கொண்ட பற்கள் தெரியும். அவனுடைய மேல் கோட்டைப் பற்றி சில குறிப்பிடத்தக்க விஷயங்கள் இருந்தன. நீல நிறமுள்ள அந்தக் கோட்டின் மீது மின்னிக் கொண்டிருக்கும் பூக்கள் தைக்கப்பட்டிருந்தன. பொத்தான்கள் சிவப்பு நிற ரத்தினங்களைப் போல ஒளிர்ந்தன. கோட்டின் மீது பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு செயினும் இருந்தது.

அந்தப் பட்டாளத்துக்காரன் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தான். உயரமான, உறுதியான உடம்மையும், சிவந்த கன்னங்களையும், கறுத்த நிறத்திலிருந்த பெரிய கண்களையும் அவன் கொண்டிருந்தான். மிகவும் கூர்மையான, மென்மையான பார்வையை அவன் கொண்டிருந்தான். கஞ்சிப் பசை போட்ட எழுந்து நிற்கும் தொப்பியை அவன் தலையில் அணிந்திருந்தான். ஆச்சரிரியப்படும் வகையில் மிகவும் சுத்தமாகக் காணப்பட்ட அந்த ஆடைகளுக்குக் கீழே பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு ஜோடி புதிய ஷூக்களின் முனைகள் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.

கதவை அடைக்க வேண்டுமென்று மிகவும் பணிவான குரலில் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த தலைவன் அவனிடம் சொன்னான். எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அந்தக் கதவை அடைத்துவிட்டு அவன் முதலாளியைப் பற்றி எங்களிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். முதலாளி ஒரு மோசமான ஆள் என்றும், கொடூரமான மனிதன் என்றும், கஞ்சத்தனமான ஆள் என்றும் கூற நாங்கள் போட்டி போட்டோம். அவனிடம் முதலாளியைப் பற்றி நாங்கள் சொன்ன விஷயங்களை இங்கு எழுத முடியவில்லை. நாங்கள் கூறிய ஒவ்வொன்றையும் பட்டாளத்துக்காரன் மிகவும் கவனமாகக் கேட்டான். அவன் எங்கள் ஒவ்வொருவரையும் பார்த்தவாறு தன் மீசையைக் கையால் தடவிக் கொண்டிருந்தான்.

"உங்களோட இந்தக் கட்டிடத்திற்குள்ளே நிறைய இளம் பெண்கள் இருக்காங்கன்னு நினைக்கிறேன்..."- அவன் சொன்னான்.

எங்களில் சிலர் அதைக் கேட்டு பணிவாகச் சிரித்தார்கள். வேறு சிலரின் முகங்கள் அதைக் கேட்டு மலர ஆரம்பித்தன. நிறைய அருமையான உருப்படிகள் இருக்கக்கூடிய இடம்தான் அது என்று எங்களில் யாரோ ஒருவன் அந்த ஆளிடம் சொன்னான்.

"அப்படின்னா அவர்களைப் பயன்படுத்த வேண்டியதுதானே?" கண்களைச் சிமிட்டியவாறு பட்டாளத்துக்காரன் கேட்டான்.

நாங்கள் மீண்டும் சிரித்தோம். பதைபதைப்பு நிழல் பரப்பியிருக்கும் அடக்கிய ஒரு சிரிப்பு பட்டாளத்துக்காரனைப் போல சந்தோஷமான சூழ்நிலைகளை உண்டாக்க முயற்சி செய்தவர்கள்தான் எங்களில் பலரும் என்றாலும், எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. யாரோ ஒருவன் மெதுவாகத் தன்னுடைய மனதிற்குள் இருப்பதைத் தயங்காமல் வெளிப்படுத்தினான்:

"அவங்க எங்களுக்காக உள்ளவங்க இல்லையே!"

"இல்ல... நீங்க அதை விட்டு ரொம்பவும் தூரத்துல இருக்கீங்க..." - முழுமையான நம்பிக்கையுடன் பட்டாளத்துக்காரன் தொடர்ந்து சொன்னான்: "நீங்க அதுக்கு லாயக்கு இல்ல. உங்களால் அது முடியாது. அதாவது... உங்களுக்கு அதுக்குத் தேவையான கண்கள் இல்ல. ஒரு மனிதனின் பார்வையும் உடம்பும்தான் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள். யாராவது ஒரு பெண்ணுக்கு நிரந்தரமா ஒரு ஆணோட உடம்பைக் கொடுத்துப் பாரு அவ்வளவுதான் வேணும். அவங்களுக்கு அப்பப்போ முரட்டுத்தனமான ஆளுங்களும் வேணும். நல்ல முரட்டுத்தனமா, சதைப்பிடிப்பான கைகளை வச்சிக்கிட்டு... இதை மாதிரி..."

பட்டாளத்துக்காரன் காற்சட்டை பாக்கெட்டிற்குள்ளிருந்து தன்னுடைய வலது கையை வெளியே எடுத்து, சட்டைக் கையை மேலே சுருட்டி விட்டுக் கொண்டு, அதை நாங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தூக்கிக் காட்டினான். நல்ல உறுதி படைத்த வெளுத்த கைகளுக்கு மேலே பொன் நிறத்தில் ரோமங்கள் பிரகாசித்தன.

‘‘காலும் நெஞ்சும் நல்லா உறுதியா இருக்கணும். நல்லா ஆடைகள் அணியணும். நல்லா ‘ஸ்டைலா’ நடக்கணும். என் விஷயத்தையே எடுத்துக்கங்களேன் பெண்கள் என்னைப் பார்த்தா விட மாட்டாங்க. ஆனா, நான் அவங்க பின்னாடி போக மாட்டேன். அவங்களைக் காதலிக்கிறது இல்ல. சில நேரங்கள்ல ஒரே நேரத்துல ஐந்து பெண்கள் என் உடம்பு மேல ஒட்டிக் கிடப்பாங்க’’ - கோதுமை நிறைக்கப்பட்ட மூட்டையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, பெண்கள் தன்னைத் தேடி வருவதைப் பற்றியும், அவர்களைத் தான் சமாளித்த விதம் பற்றியும் ஒரு நீளமான சொற்பொழிவையே அந்த ஆள் நடத்தினான். அதற்குப் பிறகு அவன் எழுந்து கதவைத் திறந்து வெளியேறினான். ‘கரகர’ சத்தத்துடன் கதவு மூடியது.

அந்த ஆள் போன பிறகும், அமைதியாக உட்கார்ந்து, அவன் சொன்ன விஷயங்களை நினைத்து நினைத்து நாங்கள் ரசித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்தோம். எங்களுக்கு அந்த ஆள் மீது இனம் புரியாத ஒரு பிரியம் உண்டாகத் தொடங்கியது. அவன் உள்ளே நுழைந்து வந்து எங்களுடன் பேசிய அந்த முறை மிகவும் இயல்பான ஒன்றாக இருந்தது. அதைப்போல வேறு யாரும் எங்களைத் தேடி வந்ததில்லை. பேசியதில்லை. நட்பை வெளிப்படுத்தியதில்லை. நாங்கள் வாசலுக்கு வருகிறபோது, மேல் மாடியில் வேலை செய்து கொண்டிருக்கும் தையல்காரிகளைப் பார்ப்போம். ஆனால், அவர்கள் எங்களை நிராகரிக்கவோ, எங்களைப் பார்த்துக் கோபப்படவோ, நாங்கள் மனிதர்களில்லை என்பது மாதிரி நடக்கவோ செய்யத்தான் செய்தார்கள். அந்தப் பெண்களை எப்படி வசப்படுத்துவது என்பதைப் பற்றித்தான் அன்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அழகான ஆடைகளும், கவர்ச்சியான ஒரு தொப்பியும் அணிந்து அவர்கள் வாசல் வழியாக நடந்துபோவதை சாளரத்தின் வழியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த எங்களுக்கு அவர்கள் மீது ஒரு வழிபாட்டுணர்வே தோன்றிவிட்டிருந்தது. நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை அவர்கள் கேட்டிருந்தால், அவர்களுக்கு மிகுந்த வெட்கமும் வெறுப்பும் எங்கள் மீது உண்டாகியிருக்கும். பேசும்போது அந்த அளவிற்கு வார்த்தைகளை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.

‘‘நம்ம டானியா மேல அந்த ஆளோட கண் விழாம இருந்தா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்’’ - கவலையுடன் எங்களின் தலைமை பேக்கர் சொன்னார்.

http://www.lekhabooks.com/short-stories/322-oru-ilam-pennum-irupattharu-aangalum.html?start=3

Link to comment
Share on other sites

அவர் சொன்னதைக் கேட்டதும் நாங்கள் அதிர்ச்சியடைந்து விட்டோம். நாங்கள் டானியாவின் விஷயத்தை முழுமையாக மறந்து போயிருந்தோம். தன்னுடைய அழகான தோற்றத்தின் மூலம் அந்தப் பட்டாளத்துக்காரன் மீண்டும் அவளை எங்களுடைய மனதில் தோன்ற வைத்ததைப் போல் நாங்கள் உணர்ந்தோம். எங்களுக்கு மத்தியில் சத்தங்கள் உண்டாக ஒரு சர்ச்சையே உண்டானது. டானியா அந்த ஆளை பொருட்படுத்தவே மாட்டாள் என்று யாரோ சொன்னார்கள். அந்தப் பட்டாளத்துக்காரனின் காதலை நிராகரிக்க அவளால் முடியாது என்று இன்னொரு ஆள் சொன்னான். டானியாவை காதலிக்கவும் உடல் ரீதியாக உறவு கொள்ளவும் முயன்றால் அடி, உதை கொடுத்து அந்த ஆளின் எலும்பை ஒடிக்க வேண்டும் என்ற கருத்தும் அங்கு எழுந்தது. கடைசியில் பட்டாளத்துக்காரன், டானியா இருவர் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டுமென்றும், அந்தப் பட்டாளத்துக்காரனைப் பற்றி டானியாவிற்கு முன் கூட்டியே எச்சரிக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் அன்றைய விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அப்படியே ஒரு மாதம் கடந்துவிட்டது. பட்டாளத்துக்காரன் பன்கள் தயாரித்தான். தையல்காரிகளுடன் வெளியே சென்றான். அவன் பலநேரங்களில் எங்களின் இருண்ட சிறைக்கு வருவதுண்டு. ஆனால், தன்னுடைய காதல் லீலைகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவன் கூறவில்லை. அதற்குப் பதிலாக மீசையை நீவி விடுவதும் உணவு அருந்த பயன்படுத்தும் குச்சியை நக்குவதுமாக இருந்தான் அவன்.

எல்லா நாட்களிலும் காலையில் வழக்கம் போல சந்தோஷத்தின் அறிகுறிகளைப் பரப்பியவாறு பிஸ்கட் கேட்டுக்கொண்டு டானியா வந்து கொண்டிருந்தாள். அந்தப் பட்டாளத்துக்காரனைப் பற்றி நாங்கள் அவளிடம் கூறுவதற்கு முயன்றோம். ‘‘திருட்டுக் கண்களைக் கொண்ட பந்தா பேர்வழி’’ என்று அவள் அந்த ஆளைப் பற்றி கருத்து சொன்னாள். அவள் அப்படி கருத்து சொன்னது எங்களுக்கு நிம்மதியைத் தந்தது. அந்தத் தையல்காரிகள் பட்டாளத்துக்காரனுடன் சேர்ந்து நடக்கும்போது நாங்கள் டானியாவைப் பற்றி நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டோம். அந்த ஆளைப் பற்றி டானியா கொண்ட கருத்து எங்களிடமும் ஒருவித வேகத்தை உண்டாக்கியது. நாங்கள் அந்த ஆளைப் பார்க்கும்போது கோபத்துடன் பார்க்க ஆரம்பித்தோம். முன்னாலிருந்ததை விட நாங்கள் அவளைக் காதலித்தோம். காலை வேளைகளில் அவளுக்கு நாங்கள் வாழ்த்து சொன்னோம்.

ஒரு நாள் சிறிது மது அருந்தி விட்டு அந்தப் பட்டாளத்துக்காரன் எங்களின் இருண்ட சிறைச்சாலைக்கு வந்தான். அவன் அப்போது சிரித்துக் கொண்டிருந்தான். சிரிப்பதற்கான காரணம் என்ன என்று விசாரித்ததற்கு அந்த ஆள் சொன்னான்:

‘‘எனக்காக அவங்க ரெண்டு பேரும் சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க. லிடாவும் க்ருஷாவும் அவங்க ஒருவரோடொருவர் நடத்திய போராட்டம்தான் ரொம்பவும் சுவாரசியமானது. என்ன ஆர்ப்பாட்டம்! அய்யய்யே! ஒருத்தி இன்னொருத்தியோட தலை முடியைப் பிடித்து இழுத்து வராந்தாவுல தள்ளிவிட்டு, பிறகு அவளோட நெஞ்சில ஏறி உட்கார்ந்து... ஹ...ஹ....ஹ... ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் அடிச்சு… ஆடைகளைக் கிழித்தெறிந்து... நான் எப்படி சிரிக்காம இருக்க முடியும்? அந்தப் பொண்ணுங்க ஒருத்தரையொருத்தர் ஏன் அடிச்சிக்கிறாங்க? அவங்க எதுக்கு உடம்பைப் போட்டு அடிச்சு காயம் உண்டாக்கிக்கணும்?’’

மிகவும் உற்சாகத்துடன், சந்தோஷத்துடன் அங்கு போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அந்த ஆள் நிறுத்தாமல் சிரித்துக் கொண்டிருந்தான். நாங்கள் எதுவுமே பேசவில்லை. என்ன காரணத்தாலோ இந்த முறை அந்த ஆள் மீது எங்களுக்கு வெறுப்பு தோன்றியது.

‘‘பெண்களுக்கு என் மேல ஏன் இப்படியொரு விருப்பம்? அதுதான் ரகசியம். நான் இலேசா கண்ணைக் காண்பிப்பேன். அவ்வளவுதான்... பெண்கள் அதுல விழுந்திடுவாங்க!’’

ரோமங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய கைகளை உயர்த்தி மகிழ்ச்சியுடன் அவன் தன்னுடைய முழங்கால் மீது ஒரு அடி அடித்தான். சந்தோஷமும் ஆச்சரியமும் நிறைந்த கண்களுடன் அவன் எங்களைப் பார்த்தான். பெண்களுடன் நெருங்கிப் பழகுவதற்காகத் தனக்குக் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களைப் பற்றி அவன் தனக்குத்தானே ஆச்சியப்பட்டுக் கொண்டான். அவனுடைய சதைப் பிடிப்பான சிவப்பு படர்ந்த முகம் சந்தோஷத்தால் பிரகாசமாக இருந்தது. அவ்வப்போது அவன் தன்னுடைய நாக்கால் உதடுகளை நக்கிக் கொண்டிருந்தான்.

எங்களை தலைமை பேக்கர் கோபத்துடன் தன்னுடைய கரண்டியை சுடுகல் மீது வைத்து தேய்த்துக் கொண்டே தன்னுடைய மறுப்பை நகைச்சுவை மிளிர வெளிப்படுத்தினார்.

‘‘சின்ன ஃபிர் செடி, மரங்களைப் பார்த்து சாகசம் காட்டுறதுல நான் ஆச்சரியமே படல. அப்படின்னா... பெரிய பைன் மரங்கள்கிட்ட உங்களால என்ன செய்ய முடியும்னு நான் பார்க்கணுமே...’’

‘‘நீங்க யார்கிட்ட பேசுறீங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியலியேடா...’’

‘‘யூ... உங்ககிட்டத்தான் சொன்னேன்.’’

‘‘நீ என்ன சொன்னே?’’

‘‘சரி... விடுங்க... அது இருக்கட்டும்...’’

‘‘ஏய்... நான் அதையும்தான் தெரிஞ்சிக்குறேனே... நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? பைன் மரம்னு நீங்க சொன்னதன் அர்த்தம்

என்ன?’’

எங்களுடைய தலைமை பேக்கர் அதற்குப் பதில் கூறவில்லை. அவருடைய கரண்டி சுடுகல் மீது பரவிக் கொண்டிருந்தது. வெந்து தயாரான பிஸ்கட்டுகளை அவர் தரையில் அள்ளிப் போட்டார். பையன்மார்கள் அவற்றை எடுத்து சுருட்ட ஆரம்பித்தார்கள். அவர் பட்டாளத்துக்காரனை மறந்துவிட்டதைப் போல் தோன்றியது. ஆனால், பட்டாளத்துக்காரன் உற்சாகத்துடன் எழுந்து நின்றான்.

அவன் அடுப்பிற்கு அருகில் சென்றான். காற்றில் ஆவியைப் பறக்க விட்டுக்கொண்டு சுழற்றிக் கொண்டிருந்த அந்த கரண்டியின் கைப்பிடி அவனுடைய மார்பில் பட்டிருக்க வேண்டியது...

‘‘இங்க பாரு... நீ என்ன மனசுல நினைச்சுக்கிட்டு அந்த வார்த்தைகளைச் சொன்னே? அது என்னை வேணும்னே குத்துற மாதிரி வார்த்தைகள்தானே? என் காதல் வலையில் சிக்காத ஒரு பெண் இருக்காள்ன்றியா? அதுதானே நீ சொன்னது? என்ன சார்? நான் சொல்றத சரியா?’’

நிலை குலைந்த ஒரு மனிதனின் முகத்தைப் போல் ஆகிவிட்டது பட்டாளத்துக்காரனின் முகம். பெண்களைத் தன்னுடைய காதல் வலையில் விழ வைப்பது என்பதுதான் அவனுடைய ஆணவத்திற்கான காரணமாக இருந்தது. அதுதான் அவனுடைய பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. ஆணவத்துடன் எல்லாரிடமும் அவன் பேசுவதற்குக் காரணம்கூட அதுவாகத்தான் இருந்தது. அந்த ஒரு தகுதிதான் அவனை மனிதப் பிறவியாக நடமாடச் செய்து கொண்டிருந்தது.

உடலுக்கோ மனதிற்கோ நோயை உண்டாக்குவது சிலரின் வாழ்க்கையில் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கும். அது அவர்களின் வாழ்க்கை முழுக்க இருக்கும். அதற்கு வேண்டித்தான் அவர்கள் வாழவே செய்வார்கள். அதற்குத் தொல்லைகள் உண்டாகிறபோது, அவர்கள் அதை ரசிப்பார்கள். அதைப் பற்றி அவர்கள் மற்றவர்களிடம் குறைகள் கூறிக் கொண்டிருப்பார்கள்.

அதன் மூலமாக அவர்கள் மற்றவர்களின் எண்ணத்தைத் தெரிந்து கொள்ள முயல்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் மற்றவர்களின் பரிதாபத்தைப் பெற முயற்சிப்பார்கள். அது மட்டுமே அவர்களின் வாழ்க்கை முறையாக இருக்கும்.

அப்படிப்பட்ட மகிழ்ச்சி அளிக்காத ஒரு விஷயத்தை அவர்களிடமிருந்து பறித்துவிடால், அவர்கள் எதற்கும் லாயக்கு அற்றவர்களாக ஆகிவிடுவார்கள். அவர்களின் வாழ்க்கையின் மூலத்தையே இழந்துவிட்டதைப் போல் அவர்கள் உணர்வார்கள். அவர்கள் காலியாகிவிட்ட கூடைகளைப் போல ஆகிவிடுவார்கள். சில மனிதர்கள் எப்போதாவது ஏதாவதொரு கெட்ட பழக்கத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டானால், அவர்கள் அதற்கு அடிமைகளாகி விடுவார்கள். விரக்தியிலிருந்துதான் மனிதர்களுக்கு கெட்ட பழக்கங்கள் உண்டாகின்றன என்று கூறுவதில் தவறே இல்லை.

-பட்டாளத்துக்காரன் தன்னுடைய கருத்தில் உறுதியாக நின்று கொண்டிருந்தான். கவலையுடன் அவன் தலைமைப் பேக்கரையே வெறித்துப் பார்த்தான்.

‘‘இல்ல... யார் அவள்? நீங்க சொல்லணும்.’’

‘‘நான் சொல்லணுமா?’’ - பட்டாளத்துக்காரன் பக்கம் திரும்பியவாறு பேக்கர் கேட்டார்.

‘‘ஆமா...’’

‘‘உங்களுக்கு டானியாவைத் தெரியுமா?’’

‘‘தெரியாம என்ன?’’

‘‘அப்படின்னா... அவளைப் பற்றித்தான் சொன்னேன். அவள்கிட்ட நீங்க என்ன செய்ய முடியும்?’’

‘‘நானா?’’

‘‘பிறகு யாரு?’’

‘‘அது அவ்வளவு எளிது! பழம்... சாதாரண பழம்...’’

‘‘அப்படின்னா... அதையும்தான் நாங்க பார்க்குறோமே!’’

‘‘சரி... பாருங்க... நாம பார்ப்போம்...’’

‘‘ஏய்... அவள்கிட்ட அது நடக்காது.’’

‘‘இன்னொரு விஷயம்.... அதுக்கு ஒரு மாசமாவது எனக்கு வேணும்.’’

‘‘பிறகு என்ன பட்டாளத்துக்காரன்டா... உன்னால என்ன முடியுதுன்னுதான் பார்க்குறோமே!’’

‘‘அப்படியா? அப்போ... ரெண்டு வாரம் போதும். நான் யாருன்னு உனக்குக் காட்டுறேன். நீ சொன்ன பெண்ணோட பேர் என்ன? ஓ... டானியா!’’

‘‘நீ போயி வேலையைப் பாருடா.’’

‘‘பார்த்துக்கோ... பதினாலே நாட்கள்ல...’’

‘‘போடா...’’

பேக்கர் கோபத்துடன் தன்னுடைய கரண்டியை உயர்த்தி சுழற்றினார். அதைப் பார்த்து பட்டாளத்துக்காரன் ஒரு மாதிரி ஆகிவிட்டான். சிறிது நிராசை கலந்த குரலில் ‘‘சரி’’ என்று சொல்லிவிட்டு அவன் வெளியேறினான். நீண்ட நேரமாக மிகவும் கூர்ந்து இந்த விஷயங்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், பட்டாளத்துக்காரன் அந்த இடத்தை விட்டு நீங்கியவுடன் நாங்கள் ஒருவரோடொருவர் உரத்த குரலில் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம்.

யாரோ பேக்கரிடம் சொன்னார்கள்.

‘‘பாவல்... அது நடக்காத விஷயம்.’’

‘‘நீ உன் வேலையைப் பாரு’’ - பேக்கர் கோபத்துடன் சொன்னார்.

பட்டாளத்துக்காரனின் ஆணவத்தின் மீது துளை விழுந்துவிட்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அத்துடன் டானியா ஆபத்தில்

சிக்கிக் கொண்டிருக்கிறாள் என்பதையும் எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அது மனதிற்குள் ஒருவித புகைச்சலை உண்டாக்கிக் கொண்டிருந்தாலும், அதன் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளக்கூடிய ஆர்வத்துடன் நாங்கள் இருந்தோம். அந்தப் பட்டாளத்துக்காரனுக்கு எதிராக டானியாவால் உறுதியாக நிற்க முடியுமா? எனினும் ஏகோபித்த குரலில் நாங்கள் எங்களுடைய கருத்தை உரத்த குரலில் சொன்னோம்:

‘‘டானியா... அவள் உறுதியாக நிற்பாள். யாராலும் அவளைக் காதல் வலையில் விழ வைக்க முடியாது.’’

எங்களின் ஆராதனை விக்கிரகத்தின் மீது ஒரு சோதனை நடத்துவது குறித்து நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தோம். எங்களின் வழிபாட்டு கடவுள் மிகவும் பிடிவாதமானது என்றும், எந்த வகையான சோதனைகளையும் சர்வ சாதாரணமாகக் கடந்து அது இறுதியில் வெற்றி பெறும் என்றும் நாங்கள் உறுதியாக நம்பினோம். பட்டாளத்துக்காரன் மிகவும் கோபமாகி விட்டிருப்பானா என்று கூட நாங்கள் சந்தேகித்தோம். அவன் இந்த விஷயத்தை மறந்துவிட்டிருப்பானா என்ற சந்தேகமும் எங்களுக்கு இருந்தது. அப்படி நடந்திருந்தாலும் இன்னும் ஒன்றிரண்டு தடவைகள் அவனை இதே மாதிரி கோபம் கொள்ளச் செய்தால் என்ன என்று கூட நாங்கள் எண்ணினோம். முன்பு எப்போதும் உண்டாகாத அளவிற்கு ஒருவித வெறி எங்களிடம் உண்டானது.

ஒவ்வொரு நாளும் நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தோம். நாங்கள் எல்லாரும் திடீரென்று சுயநலவாதிகளாக மாறிவிட்டதைப்போல், அழகாகத் தெளிவாகப் பேச தொடங்கினோம். டானியாவிற்காக யாரோ ஒரு சைத்தானுடன் போர் புரிவதைப் போல் நாங்கள் உணர்ந்தோம். டானியாவிற்காக அந்தப் பட்டாளத்துக்காரன் ஒரு வலை விரித்திருக்கிறான் என்று பன் பேக்கரியில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் சொன்னதைக் கேட்டு முன்பு எப்போதும் இருந்ததைவிட பல மடங்கு அதிகமாக ஒரு ஜுரம் உண்டானதைப் போன்ற ஆவேசம் எங்களின் நரம்புகளுக்குள் படர்ந்தது.

அந்த ஆவேசத்தை மூலதனமாக வைத்து எங்களின் முதலாளி பதினான்கு மூட்டைகள் கோதுமை மாவை அதிகமாக எங்களுடைய மேஜை மேல் கொண்டு வந்து வைத்ததைக்கூட நாங்கள் ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த அதிகமான பணிச்சுமை எங்களைச் சிறிதும் பாதிக்கவில்லை. நாள் முழுவதும் ‘‘டானியா’’ என்ற மந்திரச் சொற்கள் மட்டும்தான் எங்களின் உதடுகளில் இருந்தன. அசாதாரணமான ஆர்வத்துடன் அவளுடைய காலை நேர வருகைகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் அவள் வரும்போது, நாங்கள் இதுவரை பார்த்திராத புதிய ஒரு டானியாவாக அவள் இருப்பாள் என்று நாங்கள் மனதில் நினைத்துக் கொள்வோம்.

அந்தப் பந்தயத்தை பற்றி நாங்கள் அவளிடம் எதுவும் கூறவில்லை.

நாங்கள் அவளிடம் எதையும் கேட்கவில்லை. எப்போதும் வழக்கமாக வரவேற்பதைப் போலத்தான் நாங்கள் அவளை வரவேற்றோம். ஆனால், புதிதாக ஏதோவொன்று எங்களுடைய மனதிற்குள் நுழைந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருந்தது. டானியாவிடம் முன்பு இருந்ததை விட மாறுபட்ட ஒரு உணர்வு எங்களுக்குள் உண்டாகியிருந்தது. அவள் மீது நாங்கள் கொண்ட பயம்தான் அது. குளிர்ந்த, கூர்மையான, குத்தி நுழையும் உருக்கு கத்தியைப்போல அது எல்லோருக்குள்ளும் நுழைந்திருந்தது.

‘‘டேய் பசங்களா... அந்த நாள் வந்திருச்சு...’’

ஒரு நாள் நாங்கள் வேலையை ஆரம்பித்தபோது எங்களின் தலைமை பேக்கர் சொன்னார்.

ஞாபகப்படுத்த வேண்டிய தேவையே இல்லாமல் நாங்கள் அதைப் பற்றி மனதில் நினைத்து வைத்திருந்தோம். எனினும் அதைக் கேட்டு நாங்கள் ஒரு மாதிரி ஆகிவிட்டோம்.

‘‘நீங்க அவளைக் கவனிங்க. அவள் இப்போ உள்ளே வருவா...’’- பேக்கர் சொன்னார்.

‘‘அது கண்ணால பார்க்கக்கூடிய ஒரு விஷயமில்ல...’’ - சிறிது கவலையுடன் யாரோ சொன்னார்கள்.

உரத்த குரலில் விவாதங்களும், சண்டைகளும் மீண்டும் ஆரம்பமாயின. மிகவும் சுத்தமானது என்றும் புனிதமானது என்றும் நாங்கள் நினைத்திருந்த அந்த விக்கிரகத்தின் உண்மை நிலை எதுவென்று இன்று தெரிந்துவிடும். அந்தச் சோதனையின் மூலம் அந்த விக்கிரகம் ஒரே நொடியில் தூள் தூளாக நொறுங்கிப் போய் விடுமோ என்ற நினைப்பு அன்று காலையில் எங்களின் மனதிற்குள் முதல் தடவையாக நுழைந்தது.

http://www.lekhabook...um.html?start=5

Link to comment
Share on other sites

லேகா இணையத்தளத்தில் இருந்து கதைகளை யாழில் போட உரிய முறையில் அனுமதி கேட்டு இருந்தேன். பதில் தராமால் இருந்தார்கள். இப்ப அவர்களின் தளத்தில் இருந்து copy பண்ண தடை செய்து Copyrighted material என்று போட்டுள்ளார்கள். எனவே இந்த நாவலை யாழில் தொடர முடியவில்லை.

மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.