Jump to content

Registration Terms

யாழ் கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 4.0

வணக்கம்,

கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கருத்துக்கள விதிகள் மீளாய்வு செய்யப்பட்டு தெளிவற்றவை சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 4.0 கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் 01 நவம்பர் 2020 ஞாயிறு (01.11.2020 - 00:00 மணி) முதல் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆகவே யாழ் கள உறுப்பினர்கள் விதிமுறைகளை உள்வாங்கி  யாழின் வளர்ச்சிக்குத் துணைபுரியுமாறு வேண்டிக்கொள்கின்றோம். மேலும் கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீது மட்டுறுத்துதலும், பயனர்கள்/கள உறுப்பினர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.


1. கருத்துக்கள விதிமுறைகள்

தாங்கள் யாழ் கருத்துக்கள விதிமுறைகளை (“விதிமுறைகள்”) வாசிக்கின்றீர்கள்.   இவ்விதிமுறைகள் தங்களுக்கும் எங்களுக்கும் இடையேயான ஒரு ஒப்பந்தமாக செயல்படுகிறது.  
இந்த விதிமுறைகளின் நோக்கங்களுக்காக, "தாங்கள்", “நீங்கள்”, "தங்கள்" மற்றும் “உங்கள்” என்பது சேவைகளின் பயனராக தங்களைக் குறிக்கிறது.

விதிமுறைகளானது தங்களுக்கும் எங்களுக்கும் இடையில் சட்டப்பூர்வமாக ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குகின்றன. எனவே, அவற்றை கவனமாக வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் பின்வருவனவற்றை குறிப்பிடுகிறீர்கள்:

(அ) தாங்கள் ஒரு கடமைப்பாடு கொண்ட ஒப்பந்தத்தை உருவாக்க சட்டப்படி திறன் கொண்டவர்;

(ஆ) தாங்கள் தண்டிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி அல்ல;

(இ) எங்கள் விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு தாங்கள் இணங்குவீர்கள்.

 

2. விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளல்

எங்கள் சேவைகளை பாவிப்பதன் மூலம், யாழ் களத்துடன் ஒரு கடமைப்பாடு கொண்ட ஒப்பந்தத்தை உருவாக்க முடியும் என்பதையும், இந்த விதிமுறைகளை தாங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதையும், அவற்றுடன் இணங்க ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகிறீர்கள். எங்கள் சேவைகளுக்கான தங்கள்  பயன்பாடு எங்கள் தனியுரிமைக் கொள்கை மற்றும் சமூக வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது. இதன் விதிமுறைகள் நேரடியாக கருத்துக்களத்தில் காணப்படுகின்றன. யாழ் கருத்துக்கள சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளுக்கு தாங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

எங்கள் சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் விதிமுறைகளை ஏற்கலாம்.  தாங்கள் எங்கள் சேவைகளை பாவிக்க ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து விதிமுறைகளை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக நாங்கள் கருதுவோம் என்பதை தாங்கள் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.

தங்கள் பதிவுகளுக்கென்று விதிமுறைகளின் நகலை அச்சிட்டு அல்லது சேமித்து வைக்க வேண்டும்.

 

3. விதிமுறைகளில் மாற்றங்கள்

கருத்துக்கள விதிமுறைகளை நாங்கள் அவ்வப்போது திருத்துகிறோம், உதாரணமாக, எங்கள் சேவைகளின் செயல்பாட்டை நாங்கள் புதுப்பிக்கும்போது,  இந்த விதிமுறைகளில் எந்தவொரு பொருள் மாற்றங்களையும் பொதுவாக பயனர்களுக்கு அறிவிக்க நியாயமான முயற்சிகளைப் பயன்படுத்துவோம். அதாவது எங்கள் நிர்வாக அறிவிப்பு மூலம் இதுபோன்ற மாற்றங்களைச் சரிபார்க்க தாங்கள் தொடர்ந்து விதிமுறைகளைப் பார்க்க வேண்டும். அதற்கு மேல் இந்த விதிமுறைகளின் “கடைசியாக புதுப்பிக்கப்பட்ட” திகதியையும் நாங்கள் புதுப்பிப்போம், இது அத்தகைய விதிமுறைகளின் செயலாக்கப்படும் திகதியை பிரதிபலிக்கிறது. புதிய விதிமுறைகளின் திகதிக்குப் பிறகு தாங்கள் சேவைகளை தொடர்ச்சியாக  பயன்படுத்துவது புதிய விதிமுறைகளை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கருதப்படும். தாங்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளவில்லையெனில், சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்.

 

4. கருத்துக்கள உறுப்பினர்/பயனர் கணக்கு

யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடல்களில் ஈடுபடவும், பதிவுகளை இணைக்கவும், தாங்கள் எங்களுடன் ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். அந்த கணக்கை தாங்கள் உருவாக்கும்போது,  தங்கள் விபரங்களையும் தாங்கள் எங்களுக்கு வழங்கிய வேறு எந்த தகவலையும் பராமரித்து உடனடியாக புதுப்பிக்கவேண்டியது முக்கியம்.

தங்கள் கணக்கின் கடவுச்சொல்லை இரகசியமாக வைத்திருப்பதும், அதை தாங்கள் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் வெளியிடவில்லை என்பதும் அவசியமாகும். எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் தங்கள் கடவுச்சொல் தெரிந்திருக்கிறது அல்லது தங்கள் கணக்கை அணுகியிருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தெரிந்தால் அல்லது சந்தேகித்தால், தாங்கள் உடனடியாக தனிமடல் சேவையூடாக அல்லது https://yarl.com/contact மூலம் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தங்கள் கணக்கின் கீழ் நிகழும் செயலுக்கு தாங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.  கருத்துக்கள விதிமுறைகளின் எந்தவொரு விதிகளையும் தாங்கள் இணங்கத் தவறினால் அல்லது விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் ஏற்படும்பட்சத்தில் எந்த நேரத்திலும் தாங்கள் பதியும் கருத்துக்களை, பதிவுகளை மட்டுறுத்தவோ, நீக்கவோ அல்லது முடக்கவோ, மேலும் தங்கள்  கணக்கை முடக்குவதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது.

தங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதில் நாங்கள் மிகவும் தீவிரமாக உள்ளோம். தங்கள் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் தரவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் உயர் தரங்களுடன் நாங்கள் வழங்குகிறோம்.

தாங்கள் இனியும் எங்கள் சேவைகளை மீண்டும் பயன்படுத்த விரும்பவில்லை, மேலும் தங்கள் கணக்கை நீக்க விரும்பினால், நாங்கள் தங்களுக்காக இதை கவனித்துக் கொள்ளலாம். தாங்கள் தனிமடல் சேவையூடாக எங்களுடன் தொடர்பு கொள்ளவும். தனிமடல் சேவை பாவிக்கமுடியாதவிடத்து https://yarl.com/contact மூலம் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

மேலும் நாங்கள் தங்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதோடு செயல்முறையில் தங்களுக்கு வழிகாட்டுவோம். தங்கள் கணக்கை நீக்க தாங்கள் தேர்வுசெய்ததும், தங்கள் கணக்கை மீண்டும் இயக்கவோ அல்லது தாங்கள் கருத்துக்களத்தில் பதிந்த தகவல்களை அழிக்கவோ முடியாது. நீக்கப்பட்ட கணக்குகளின் பயனரால் பதியப்பட்ட பதிவுகள் யாவும் “விருந்தினர்” என்ற பெயரில் காண்பிக்கும்.

 

அ) உறுப்பினர்கள்

1. உறுப்பினர் பெயர்

  • யாழ் கருத்துக்களத்தில் இணையும் உறுப்பினர்கள் இரண்டு வகைப் பெயர்களைத் தெரிவு செய்துகொள்ளலாம்.
    • பயனர் பெயர் (username): இது யாழ் கருத்துக்களத்தில் கள உறுப்புரிமைப் பதிவிற்கான பெயர்.
    • புனைபெயர் (nickname): இது கள உறுப்பினர் ஒருவர் யாழ் கருத்துக்களத்தில் தன்னை அடையாளப்படுத்துவதற்கான பெயர்.
  • இவை இரண்டும் கற்பனைப் பெயர்களாகவோ அல்லது உண்மைப் பெயர்களாகவோ இருக்கலாம்.
  • பயனர் பெயராக மின்னஞ்சல் முகவரியை அல்லது புனைபெயரைப் பாவிக்கலாம். பயனர் பெயர் கள உறுப்பினருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
  • கள உறுப்பினர் ஒருவர் யாழ் கருத்துக்களத்தில் உள்நுழைவதற்குப் பயனர் பெயரினையும் கடவுச் சொல்லையும் பாவிக்கவேண்டும்.
  • பெயர்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படலாம். (சில தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக நீளமான பெயர்களை தமிழில் எழுத முடியாதுள்ளது).
  • பின்வரும் பெயர்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:
    • உயிரோடு வாழும்/மறைந்த பிரபலமானவர்களின் பெயர்கள்.
    • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்).
    • பண்பற்ற பெயர்கள்/பிறரை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்படும் சொற்கள் (எ.கா.: சொறிநாய்).
  • பின்வரும் முறையில் புனைபெயர்கள் எழுதப்படல் ஆகாது:
    • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
    • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
    • இலக்கங்கள் (எ.கா.: 12345678)
    • குறியீடுகள் (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , . )

2. உறுப்பினர் படம்

  • யாழ் களத்தில் இரண்டு வகைப் படங்களை உங்கள் படமாக இணைக்கலாம்.
    • பயனர் படம் (profile photo): யாழ் கருத்துக்களத்தில் எழுதும் உங்கள் கருத்துக்களோடு இந்தப்படம் காண்பிக்கப்படும்.
    • உறைப் படம் (cover photo): யாழ் கருத்துக்களத்தில் உங்கள் "எனது அகம்" (profile) பக்கத்தில் இந்தப்படம் காண்பிக்கப்படும்.
  • பயனர் கள உறுப்பினர்களின் உண்மையான படமாகவோ அல்லது கணினியில் உருவாக்கப்பட்ட படங்களாகவோ இருக்கலாம்.
  • படங்களின் அளவு பின்வருமாறு இருக்க வேண்டும்:
    • பயனர் படம்: 90px * 90px
    • உறைப் படம்: 640px * 480px
  • பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:
    • உயிரோடு வாழும்/மறைந்த பிரபலமானவர்களின் படங்கள்.
    • குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்.
    • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் படங்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்).
    • மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்).
    • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்.

3. கையொப்பம்
யாழ் கருத்துக்கள உறுப்பினர்களின் கையொப்பம் தொடர்பான விதிகள்:

  • கையொப்பம் யாழ் கருத்துக்கள விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • கையொப்பத்தில் பேரழிவு ஆயுதங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான தளங்களுக்கும், வன்முறைகளைத் தூண்டும் தளங்களிற்கும், தகவல் திருட்டுக்களில் ஈடுபடும் தளங்களிற்கும், வக்கிரமான பாலியல் தளங்களிற்கும் இணைப்புக்கள் கொடுப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கையொப்பத்தில் விளம்பரங்களை நோக்கமாகக் கொண்ட வசனங்களும், இணைப்புக்களும் இருத்தல் ஆகாது.
  • விரும்பிய நிறங்களைப் பயன்படுத்தமுடியும். எனினும் "சாதாரண அளவு" எழுத்தில் கையொப்பம் இருத்தல் விரும்பப்படுகின்றது.
  • கையொப்பத்தின் உயரம் அதிகமாக இருந்தால் கருத்துக்களை வாசிப்பதில் இடையூறுகள் உண்டாகலாம். எனவே இணைக்கப்படும் படங்களின் அளவு "உயரம்: 80px" க்கு உள்ளடங்கியதாக இருத்தல் விரும்பப்படுகின்றது.
  • இணைக்கப்படும் படங்களின், அசைபடம் (animation) அடங்கலாக, கோப்பு அளவு (file size) அதிகமாக இருப்பது யாழ் கருத்துக்களத்தின் வேகத்தைக் குறைக்கலாம். எனவே இயலுமானவரை கோப்பு அளவு குறைந்த படங்களைப் பாவிப்பது விரும்பப்படுகின்றது.
  • சீண்டும் வகையிலும், பிறரை இழிவுபடுத்தும் அல்லது அவதூறு செய்யும் வகையிலும் கையொப்ப வசனங்கள் இருத்தல் ஆகாது.

 

5. தனிமடற் சேவை

  • யாழ் கருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிமடற் சேவையினைப் பயன்படுத்தலாம்.
  • தனிமடற் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது. (அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்).
  • தனிமடற் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.
  • தனிமடற் சேவையினை குழுக்களாக இணைந்து ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களைப் புரிவதற்கான தொடர்பாடலுக்கு பயன்படுத்தல் ஆகாது.
  • ஒருவரின் தனிமடலை நிர்வாகப் பிரிவில் இருப்பவர்கள் தவிர்ந்த இன்னொருவருக்கு அனுப்புவதும், யாழ் கருத்துக்களத்தில் அல்லது பிற தளங்களில் பகிரங்கப்படுத்துவதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். இவ்விதி நிர்வாகத்தில் உள்ளவர்களால் அனுப்பப்படும் தனிமடல்களுக்கும், நிர்வாக நடவடிக்கைகள் சம்பந்தமான தொடர்பாடல்களுக்கும் பொருந்தும்.
  • கள உறவுகளுக்கிடையில் ஆபாசமாகவோ அல்லது வக்கிரமாகவோ தனிமடல் பிரயோகம் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

 

6. உறுப்பினர் குழுமங்கள்
யாழ் கருத்துக்களத்தில் பின்வரும் உறுப்பினர் குழுமங்கள் உள்ளன.


விண்ணப்பித்தோர்:
இக்குழுமத்தில் உள்ளவர்கள் யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இணைந்தவர்களெனினும் யாழ் களத்தினால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் உள்ள இணைப்பைச் சொடுக்கி அவர்தம் மின்னஞ்சல் முகவரிகளை உறுதிப்படுத்தாதோர் ஆவர்.

எனவே இக்குழுமத்தில் உள்ளவர்களால் அவர்தம் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தி புதிய உறுப்பினர்கள் குழுமத்திற்குள் அனுமதிக்கப்படும்வரை யாழ் கருத்துக்களத்தில் பதிவுகள் எதனையும் மேற்கொள்ளமுடியாது.

புதிய உறுப்பினர்கள்:
இக்குழுமத்தில் உள்ளவர்கள் யாழ் கருத்துக்களத்தின் சகல பகுதிகளிலும் கருத்துக்கள் பதியலாம். ஆயினும் யாழ் அரிச்சுவடி பகுதியில் மட்டுமே புதிய தலைப்புகளை அவர் தம்மை அறிமுகப்படுத்தவும் உதவிகளை நாடவும் திறக்கலாம்.

 

கருத்துக்கள உறவுகள்:
இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு யாழ் கருத்துக்களத்தின் சகல பகுதிகளிலும் புதிய தலைப்புக்களைத் திறக்கவும், கருத்துக்களைப் பதியவும், திண்ணையில் உரையாடவும், விருப்புப் புள்ளிகளை இடவும் அனுமதி உண்டு.

ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை தமிழில் பதிந்த புதிய உறுப்பினர்கள் “கருத்துக்கள உறவுகள்” எனும் நிலைக்கு மாற்றப்படுவார்கள். எனினும் கருத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் இந்நிலைக்கு அங்கத்துவம் வழங்கப்படமாட்டாது. எழுதப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே “கருத்துக்கள உறவுகள்” குழுமத்தில் சேர்த்துக்கொள்வது பற்றி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்படும். குறிப்பாகத் தமிழில் எழுதுகிறார்களா, ஏனைய கருத்துக்கள உறுப்பினர்களுடன் பண்போடும், நட்போடும் பழகுகின்றார்களா போன்ற விடயங்கள் முதன்மையாகக் கவனிக்கப்படும்.


கருத்துக்கள பார்வையாளர்கள்:
இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு யாழ் கருத்துக்களத்தின் சகல பகுதிகளிலும் புதிய தலைப்புக்களைத் திறக்கவும், கருத்துக்களைப் பதியவும், திண்ணையில் உரையாடவும் அனுமதி உண்டு. எனினும் விருப்பப் புள்ளிகள் இடவும், மறைவாக (Anonymous) கருத்துக்களத்தினுள் உள்நுழையவும் முடியாது. கருத்துக்களத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் கருத்துக்கள் பதியாமல் இருப்பவர்கள் தானியங்கியால் இக்குழுமத்திற்கு நகர்த்தப்படுவார்கள்.

 

7. விருப்புப் புள்ளிகள்
யாழ் கருத்துக்களத்தில் ஆக்கபூர்வமான கருத்தாடலை ஊக்குவிக்கும் சொந்தக் கருத்துக்களுக்கும், சுய ஆக்கங்களை ஊக்குவிக்கவும் "கருத்துக்கள உறவுகள்" குழுமத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு விருப்புப் புள்ளிகள் இடும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தினந்தோறும் கள உறுப்பினர்களின் தங்க, வெள்ளி, வெண்கல முன்னணி நிலைகள் அதிகூடிய விருப்புப் புள்ளிகளின் அடிப்படையில் தானியங்கியால் தீர்மானிக்கப்படுகின்றது.

விருப்புப் புள்ளி வகைகள் (Reaction Types)

spacer.png

  • Like(+1 புள்ளி)
  • Thanks (+1 புள்ளி)
  • Haha (+1 புள்ளி)
  • Confused(0 புள்ளி)
  • Sad (0 புள்ளி)

மதிப்பு நிலைகள் (Reputation Levels)

  • Neutral (50 புள்ளிகளுக்கு கீழ்)
  • Good (50 - 100 புள்ளிகள்)
  • Excellent (100 - 250 புள்ளிகள்)
  • ஒளி (250 - 500 புள்ளிகள்)
  • பிரகாசம் (500 - 1000 புள்ளிகள்)
  • நட்சத்திரம் (10000 புள்ளிகளுக்கு மேல்)

விருப்புப் புள்ளிகள் தொடர்பான விதிகள்:

  • கள உறுப்பினர் ஒருவர் குறித்த 24 மணிநேர இடைவெளியில் அதிக பட்சமாக 8 விருப்புப் புள்ளிகள் மாத்திரமே வழங்க முடியும்.  விருப்புப் புள்ளிகள் வழங்கியவரின் பெயர் புள்ளிகளின் அருகே காண்பிக்கப்படும்.
  • சக கள உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்தாடலை ஊக்குவிக்கும் சொந்தக் கருத்துக்களுக்கும், சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தவும், தரமான பதிவுகளுக்கும் விருப்புப் புள்ளிகள் இடுவது விரும்பப்படுகின்றது.
  • கள உறுப்பினர் ஒருவர் தனக்கு அணுக்கமானவர்களின் கருத்துக்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்கி செயற்கையாக விருப்புப் புள்ளிகளை அதிகரிக்க உதவுதல் கூடாது.
  • கள உறுப்பினர்கள் குழுவாகச் சேர்ந்து தமக்கு அணுக்கமானவர்களின் கருத்துக்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்கி செயற்கையாக விருப்புப் புள்ளிகளை அதிகரிக்க உதவுதல் கூடாது.
  • கள உறுப்பினர் ஒருவர் தனது பதிவுகளுக்கு வேறு பயனர் பெயரில் உள்நுழைந்து விருப்புப் புள்ளிகள் வழங்குதல் கூடாது.
  • கள உறுப்பினர் ஒருவர் தனக்கு அல்லது பிற கள உறுப்பினர்களுக்கு விருப்புப் புள்ளிகள் வழங்குவதற்காக பல உறுப்பினர்கள் பெயர்களில்  கருத்துக்களத்தில் இணைவது கூடாது.
  • கருத்துக்களத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் கருத்துக்கள் பதியாமல் இருப்பவர்கள் தானியங்கியால் "கருத்துக்கள பார்வையாளர்கள்" குழுமத்திற்கு நகர்த்தப்படுவதனால், அவர்கள் கருத்துக்கள் பதியும்வரை விருப்புப் புள்ளிகள் இடும் வசதி நீக்கப்படும்.

 

ஆ) வடிவம்

1. எழுத்து

  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் எழுதப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள் அனைத்தும் "சாதாரண அளவு" எழுதிலேயே எழுதப்படல் வேண்டும்.
  • வேறுபடுத்திக் காட்டுவதற்கு "மொத்த(bold) – சரிந்த(italic) – அடிக்கோடிட்ட(underline)" எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தலாம்.
  • தலைப்புக்களில் (Topic Title) வடிவமைப்புக்களை இணைக்க முடியாது என்பதால் தலைப்புக்கள் அனைத்தும் வடிவமைப்புகள் இன்றியே இணைக்கப்பட வேண்டும்.

2. நிறம்

  • வேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே நிறங்கள் பயன்படுத்தப்படலாம்.

3. படம்

  • இணைக்கப்படும் படங்களின் அளவு "அகலம்: 640px" க்கு உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.

 

இ) கருத்தாடல்
யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் கருத்துக்கள், பின்னூட்டங்கள் விமர்சனங்கள் சம்பந்தமான விதிகள்:

1. பொது

  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.
  • சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.
  • புதிய உறுப்பினர்களை நட்போடும், பண்போடும் வரவேற்றல் வேண்டும்.
  • கருத்தாளர் ஒருவர் தனது அடையாளங்களை பகிரங்கமாக குறிப்பிடுவதை கூடியவரைக்கும் தவிர்த்தல் வேண்டும். இணையத்தில் இடம்பெறும் தகவல் / தனிநபர் தகவல் திருட்டுக்களைத் தடுக்கும் நோக்கில் உறுப்பினர்கள் தங்கள் சுயவிபரங்களை பகிரங்கப்படுத்தாது இருப்பது விரும்பப்படுகின்றது. தனிப்பட்ட விபரங்களை உறுப்பினர்கள் பகிர்ந்தால் அவர்களே அதற்கான விளைவுகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.
  • சக கருத்தாளரின் தனியுரிமைகளை மீறும் தனிப்பட்ட விடயங்களை எழுதுவதையும், அவரது குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதையும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிமனித தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் பண்பற்ற சொல்லாடல்களால் விமர்சிப்பதும், அவர்களது பெயர்களை நையாண்டி செய்வதற்கு பயன்படுத்துவதும் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உடற்தோற்றம், கல்வி, சமூகநிலை, பால்நிலை, இன்ன பிற நிலைகளைச் சுட்டி  பண்பற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பதும், நையாண்டி செய்வதும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தை விளம்பர/பிரச்சார நோக்கிலும், பணமீட்டும்/ பிறருக்கு பணமீட்ட உதவும் நோக்கிலும், விளம்பர ஆதரவாளர்கள் சார்ந்தும், வெறும் செய்திகள், காணொளிகள், பதிவுகள் இணைக்கும் தளமாக மட்டும் பாவித்தல் தவிர்க்கப்படவேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தில் குழுக்களாக இணைந்து இயங்குவதையும், ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களையும் தவிர்த்தல் வேண்டும். கருத்துக்கள விதிகளைச் சட்டை செய்யாது தொடர்ந்தும் குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கு அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • வேண்டாத வீண் தகவல்கள் (Spam), தீங்கான/பாதுகாப்பற்ற வெளியிணைப்புக்கள்  உள்ள பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • தனியே காணொளிகள், படங்கள், அசைபடங்கள், மீமி, சமூகவலை இணைப்புக்கள் (யூடியூப், முகநூல், ட்விட்டர் போன்றவை) என்பவற்றை கருத்துக்களாகப் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.  இவை கருத்துக்களுக்குத் துணையாகப் பதியப்படலாம். எனினும் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியில் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது. ஆயினும் அளவுக்கதிகமாகப் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • தனியே முகக்குறிகளால் மட்டும் கருத்துக்கள் பதிவதைத் தவிர்த்தல் வேண்டும். எனினும் திண்ணையில் மாத்திரம் இவ்விதிமுறை தளர்த்தப்படுகின்றது.
  • கருத்தாடலைத் திசை திருப்பும் வகையிலும் தலைப்புக்கு தொடர்பில்லாத விதத்திலும், வீண் விதண்டாவாதங்களாகவும், அரட்டையாகவும் எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தினைக் குப்பைக்கூடமாகவும், மனவக்கிரங்களையும், மனோவிகாரங்களையும் கொட்டும் இடமாகவும் பயன்படுத்தக்கூடாது.
  • யாழ் கருத்துக்கள விதிகளை பிறர் மீறுவதற்கு உதவி செய்தல் கண்டிப்பாகத் தவிர்த்தல்வேண்டும்.

2. கருத்து/விமர்சனம்

  • கருத்துக்கள், பின்னூட்டங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும். பிறரது கருத்துக்களை கருத்துக்களத்தில் இருந்தோ, வேறு இடங்களில் இருந்தோ (எ.கா: சமூகவலைத் தளங்கள்) பிரதி செய்து சொந்தக் கருத்துக்கள் போன்று பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் சமூகப் பொறுப்புடனும் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • தனிநபர்களையும் அமைப்புக்களையும் தாக்கும், திட்டித் தூற்றும், புண்படுத்தும், குந்தகம் விளைவிக்கும் பாதகமான கருத்துக்கள்/பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சிறுவர்களை/குழந்தைகளை இடர்நிலைக்கு உள்ளாக்கும், அச்சுறுத்தும் பாதகமான கருத்துக்கள்/பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • பிரதேசவாதம். சாதீயம், மதவிரோதம் என்பனவற்றை ஆராதிக்கும்/ஊக்குவிக்கும் கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சட்டத்திற்கு புறம்பான, சட்டவிரோத செயற்பாடுகளை ஆராதிக்கும்/ஊக்குவிக்கும் கருத்துக்கள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • நீதிமன்ற தீர்ப்புக்களின் முடிவுகளில் செல்வாக்கை செலுத்தி தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய கருத்துக்கள்/பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் விதிமுறைகளை மீறும் கருத்துக்கள்/பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • வன்முறைகளைத் தூண்டுதல், ஊக்குவித்தல் தொடர்பான சகல கருத்துக்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஆயுதங்களை தயாரித்தல், ஏவுகணை, இரசாயன ஆயுதம், உயிரியல் ஆயுதம் போன்ற பேரழிவு ஆயுதங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான சகல கருத்துக்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • இணையத்தினூடாக தனிப்பட்டவர்களின் பெறுமதியான தரவுகளையும், வங்கி அட்டைகள் போன்றவற்றையும் திருடும் வழிமுறைகள் தொடர்பான சகல கருத்துக்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். மாறாக இணையப் பாதுகாப்பு பற்றிய அறிவூட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான கருத்துக்கள் இயலுமானவரை தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு துணைபுரியும் நோக்கில் வைக்கப்படும் கருத்துக்களுக்கு இவ்விதியில் தளர்வுப்போக்கு காட்டப்படும்.
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களையும் செயற்பாடுகளையும் விமர்சிப்பவர்கள் அவதூறுகளைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான முறையில் ஆதாரங்களை இயன்றவரை குறிப்பிட்டு விமர்சிக்கவேண்டும்.
  • நாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களையும் (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்), சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், உயிரோடு இருக்கும்/மறைந்த சமூகத் தலைவர்களையும், கட்சித் தலைவர்களையும், கலைஞர்களையும் (சினிமாத்துறை உள்ளடங்கலாக) ஒருமையில் விளித்தலும், அவதூறான சொற்களால் இகழ்தலும், இழிவுபடுத்தும் காணொளிகளும், மீமி படங்களும், அசைபடங்களும், போலியாக உருவாக்கப்பட்ட படங்களும், சமூகவலை இணைப்புக்களும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.


3. உரையாடல்

  •  "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  •  "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  •  துரோகி, பச்சோந்தி, பன்னாடை, நாதாரி, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான, அருவருப்பான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சோனி, காக்கா, தொப்பி பிரட்டி, பயங்கரவாதி, காட்டுமிராண்டி போன்ற பண்பற்ற இழிவான பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • உடற்தோற்றம், கல்வி, சமூகநிலை, பால்நிலை, இன்ன பிற நிலைகளைச் சுட்டும் பண்பற்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • க ற் ப ழி ப் பு (பாலியல் வல்லுறவு/வன்புணர்வு), விபச்சாரி (பாலியல் தொழிலாளி), விபச்சாரம் (பாலியல் தொழில்), அலி (திருநங்கை) போன்ற பிற்போக்கான பதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். பதிலாக அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ள பதங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • சாதிப்பெயர்களாலும், இழிவான வசைச் சொற்களாலும் சுட்டுதல், திட்டுதல், தூற்றுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகளைத் தூற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மேலுள்ளவை போன்ற மலினமான, அருவருப்பான பதங்கள் காணப்படும் உரையாடல்கள் உள்ள காணொளிகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.


4. அரட்டை

  • யாழ் கருத்துக்களம் அரட்டைக்களம் அல்ல - எனவே, அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஒரு தலைப்பில் அதனுடன் தொடர்பற்ற கருத்துக்கள், அரட்டைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அதே போன்று வேறு ஒரு திரியில் எழுதியவற்றை மீண்டும் இன்னொரு திரியில் அவசியமின்றிப் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஒரு திரியின் கருத்தாடலை திசை திருப்பும் வகையில் அரட்டைத்தனமாகவும்,  வீண் விதண்டாவாதங்களாகவும் எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியிலும் யாழ் உறவுகள் பகுதியில் உள்ள யாழ் நாற்சந்தி பிரிவிலும், திண்ணையிலும் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது.
  • எனினும் மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் புதிய ஆக்கங்களை இணைப்போர், அதில் அரட்டையடிப்பதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுப்பின் அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களம் உறுப்பினர்கள் அல்லாத பார்வையாளர்களுக்கும் பொதுவானது என்பதால் கள உறுப்பினர்களுக்கு மட்டுமான திண்ணையில் அரட்டை அடிப்பது போன்று கருத்துக்களத்தில் அரட்டை அடிப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

 

5. பொறுப்பு

  • கள உறுப்பினர்கள் சமூகப் பொறுப்புடனும், கருத்துக்களத்தின் தரத்தினை பேணும் வகையிலும் பொறுப்பானவர்களாக இருத்தல்வேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு யாழ் இணையம் பொறுப்பேற்காது.
  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு அவற்றை எழுதும் உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • கள உறுப்பினர்கள் எழுதும் கருத்துக்கு வருகின்ற எதிர்வினைகளுக்கும், விளைவுகளுக்கும் அவரவரே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • யாழ் களத்தில் கள உறுப்பினர்களால் அறியத்தரப்படும் மற்றும் யாழில் விளம்பரம் செய்யப்படும் அமைப்புகள், நிதி நிறுவனங்கள் / மனித நேய அமைப்புகள் என்பனவற்றுடனான கள உறுப்பினர்களின் தனிப்பட்ட தொடர்புகளுக்கும் அவர்களுக்கிடையான கள உறுப்பினர்களின் தொடர்பாடலின் விளைவுகளுக்கும் அவரவரே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.


6. முறைப்பாடு

  • யாழ் கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகளை, திரிகளில் முறையிடுவதைத் தவிர்த்து, நேரடியாக நிர்வாகத்துக்கு முறைப்பாட்டு முறை (Report) மூலம் அறியத்தருவது விரும்பப்படுகின்றது. இது கருத்துக்களத்தின் தரத்தினைப் பேண உதவும்.
  • கருத்துக்கள விதிமுறைகளை மீறும் திண்ணை உரையாடல்களை பார்வையாளர்களாக இருந்து வேடிக்கை பார்க்காது, "கருத்துக்களில் மாற்றங்கள்" திரியில் உள்ள முறைப்பாட்டு முறை மூலம் நேரடியாக நிர்வாகத்துக்கு அறியத்தருவது விரும்பப்படுகின்றது. இது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க உதவும்.
  • யாழ் கருத்துக்கள உறுப்பினர்கள் பற்றிய குறைகளையும், விமர்சனங்களையும் நேரடியாக நிர்வாகத்துக்கு முறைப்பாட்டு முறை (Report) மூலமாகவோ அல்லது தனிமடல் மூலமாகவோ அறியத்தரல் வேண்டும். (அதற்கான தனித் தலைப்புகள் தொடங்குதல், திண்ணையில் முறையிடுதல்/விமர்சித்தல் ஆகாது).
  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் மட்டுறுத்துனர்களிடம் முறைப்பாட்டு முறை மூலமாக அல்லது தனி மடலில் விளக்கம் கோரலாம்.  (அதற்கான திரிகளில் விவாதித்தல், விமர்சித்தல், திண்ணையில் முறையிடுதல்/விமர்சித்தல் ஆகாது).
  • மேற்கூறிய விடயத்துக்கு மட்டுறுத்துனர்கள் பொதுவாக  24 மணி நேரத்திற்குள் பதில் அளிப்பர். அவ்வாறு பதில் அளிக்கவில்லையாயின் அதனையும் குறிப்பிட்டு நாற்சந்திப் பகுதியில் மட்டும் தனித் திரி திறந்து மட்டுறுத்தியதற்கான காரணங்களை தெளிவுபடுத்தக் கேட்கலாம்.

 

ஈ) பதிவுகள்

1. தலைப்பு

யாழ் கருத்துக்களத்தில் ஆரம்பிக்கப்படும் தலைப்புகள் பற்றிய பொதுவான விதிகள்:

  • புதிய திரிகள், அவற்றுக்கான பொருத்தமான கருத்துக்களப் பகுதிகளில் ஆரம்பிக்கப்படவேண்டும்.
  • ஆரம்பிக்கப்படும் திரிகளின் தலைப்புகள் அனைத்தும் தமிழில் எழுதப்படல் வேண்டும்.
  • தலைப்புகள் சுருக்கமானதாகவும், பொருள்பொதிந்ததாகவும் எழுதப்படல் வேண்டும்.
  • ஆரம்பிக்கப்படும் திரியின் தலைப்புக்கும், உள்ளடக்கத்திற்கும் பொருத்தமான குறிச்சொற்கள் (tags) Add Tags என்பதை அழுத்தி இணைப்பது வரவேற்கப்படுகின்றது. குறிச்சொற்கள் ஒத்த விடயங்கள் சார்ந்த பதிவுகளை ஒருங்கிணைத்துக் காட்ட வழிவகை செய்யும். இணைக்கப்படும் பதிவினது உள்ளடக்கத்தில் இருந்து பொருத்தமான சொற்களை குறிச்சொற்களாகப் பயன்படுத்தலாம். எனினும் நீண்ட சொற்றொடராகவோ, பந்திகளாகவோ இணைக்கப்படலாகாது.
  • யாழ் கருத்துக்களத்தைப் பார்வையிடும் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் தலைப்புகள் அமைதல் ஆகாது.
  • பிற தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளின் தலைப்புக்களை பார்வையாளர்களைக் கவரும் வகையில் மாற்றுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • தலைப்புக்கள் பதியப்படும் செய்திகளின்/பதிவுகளின் உள்ளடக்கத்துக்கு மாறாக இருப்பின் பொருத்தமானதாக மாற்றவும், தலைப்புகளில் எழுத்துப் பிழைகளைத் திருத்தவும் அனுமதிக்கப்படுகின்றது.
  • வன்முறைகளையும், பாலியல் உணர்வுகளையும் தூண்டும் வகையிலான தலைப்புகள் இடப்படல் கூடாது.
  • பின்வரும் முறையில் தலைப்புகள் எழுதப்படல் ஆகாது:
    • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
    • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
    • குறியீடுகள்: (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , .)


2. மொழி

  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.
  • கொச்சைத் தமிழிலும் தமிங்கிலத்திலும் எழுதுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • பிறமொழி  பதிவுகளாக இருப்பின்:
    • மிகவும் முக்கியமானதும் நிகழ்காலத்துக்குரியதுமான ஆங்கில அல்லது பிறமொழிச் செய்தியினது அல்லது அரசியல் ஆய்வுக்கட்டுரையினது உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கத்தை சுருக்கமாகத் தமிழில் தந்துவிட்டு நேரடி மூலத்துடன் முழுமையாக மூலமொழியில் இணைத்தல் வேண்டும்.
    • உள்ளடக்கத்தை மாற்றாது இயலுமானவரை தமிழில் மொழிபெயர்த்து இணைத்தல் வேண்டும்.
    • முழுமையாக பிறமொழி பதிவுகள் எனில் அவை பிறமொழிப் பகுதியான யாழ் திரைகடலோடிப் பிரிவில் மட்டும் நேரடி மூலத்தையும் பதிவின் அடியில் குறிப்பிட்டுப் பதியப்படல் வேண்டும்.
  • தமிழில் எழுதப் பின்வருவனவற்றைப் பயன்படுத்தலாம்.
  • குறிப்பு: பயனர்கள் தரவிறக்கி தமிழில் எழுதப் பாவிக்கும் செயலிகளுக்கும், மென்பொருள்களுக்கும் யாழ் களம் பொறுப்பல்ல.
  • விண்டோஸ் இயங்குதளத்தில் அமைந்த கணினி:
    • இகலப்பை. காணொளி விளக்கம்:
    • Keyman - தமிழ் சுரதா பாமுனி. கட்டணமற்றது. விண்டோஸ் 8 எனில் அதில் உள்ள Short-Cut வசதியைப் பாவித்து தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற்றிக் கொள்ள முடியும்
    • Keyman Tavultesoft * கட்டணம் செலுத்தவேண்டும்.
  • iOS இயங்குதளத்தில் அமைந்த iPad வரைபட்டிகை (tablet), iPhone திறன்பேசி (smartphone):
    • தமிங்கில விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Anjal
    • தமிழ்99 விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Tamil 99
  • Android இயங்குதளத்தில் அமைந்த வரைபட்டிகை (tablet), திறன்பேசி (smartphone):

 

3. செய்திகள், கட்டுரைகள், பயனுள்ள பதிவுகள்

யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் செய்திகள், கட்டுரைகள் பயனுள்ள பதிவுகள் சம்பந்தமான பொதுவான விதிகள்:

  • செய்திகள்,  கட்டுரைகள், பயனுள்ள பதிவுகள் அவற்றுக்குரிய பிரிவுகளில் இணைக்கப்படல் வேண்டும்.
  • பொருத்தமான பிரிவுகளை தெரிவு செய்ய உதவும் வகையில் கருத்துக்களப் பிரிவுகளில் மேற்பகுதியில் மேலதிக விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றினை உள்வாங்கி பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
  • காப்புரிமை காரணமாகப் பகிர்வதற்குத் தடை உள்ளவற்றை இணைப்பது முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • செய்திகள், கட்டுரைகள், பயனுள்ள பதிவுகள் முழுமையாக இணைக்கப்படல் வேண்டும். விளம்பரக் கட்டணம் செலுத்திப் பதியப்படும் செய்திகளுக்கும், பதிவுகளுக்கும் இவ்விதி தளர்த்தப்படுகின்றது.
  • இணைக்கப்படுபவை யாழ் கள உறுப்பினர்களின் சுயமான பதிவு இல்லையாயின் நேரடி மூலம் கண்டிப்பாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
  • சிறுவர் துஷ்பிரயோகம், பெண்ணடக்குமுறை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை ஊக்குவிக்கும் பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • அப்பட்டமாகப் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வக்கிரமான பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • எதுவித விஞ்ஞான அடிப்படையும், நம்பகத்தன்மையும் அற்ற போலியான பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்டல் வேண்டும்.
  • எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும். தீவிர நம்பிக்கையை ஊக்கப்படுத்தாமல் பொழுதுபோக்காக அமையும் பதிவுகளுக்கு இவ்விதி தளர்த்தப்படுகின்றது.
  • மானுடம், மக்கள் நலன், நன்நெறி, பண்பாடு, சீர்திருத்தங்கள், தனிமனித ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்து மக்களை நெறிப்படுத்தும் மெய்யியல்/இறையியல் சம்பந்தமான பதிவுகள் ஊக்குவிக்கப்படுகின்றது. எனினும் மதப் பிரச்சாரம் செய்யும் வகையிலான பதிவுகள் அனுமதிக்கப்படமாட்டாது.

யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் செய்திகள் சம்பந்தமான விதிகள்:

  • செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும்.
  • யாழ் இணையத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • அநாமேதயமான, விளம்பரங்கள் மூலம் பணமீட்டுவதையே நோக்கமாகக் கொண்ட தளங்களில் இருந்து செய்திகள் இணைக்கப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • வெறுப்புணர்வை ஊக்குவிக்கும், அமைப்பு, மதரீதியான பிரச்சாரங்களை முன்னெடுக்கும் தளங்களில் இருந்து செய்திகள் இணைக்கப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • செய்திகளின் உண்மைத்தன்மை முடிந்தளவு உறுதிப்படுத்தப்பட்டு இணைக்கப்படுதல் வேண்டும்.
  • செய்திகளை இணைக்கும்போது அது தொடர்பான தலைப்பொன்று ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அத்தலைப்பின் கீழ் பதிய வேண்டும்.
  • செய்திகள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று தேடற்கருவி மூலம் பார்த்துவிட்டு இணைக்கப்படுதல் வேண்டும்.
  • ஒரே செய்தியை மீள மீள வெவ்வேறு திரிகளிலும், வெவ்வேறு பிரிவுகளிலும்  இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சூடான/ஆக்கபூர்வமான கருத்தாடல்களை நீர்த்துப்போகும் வண்ணம் செய்திகளை கருத்துக்களாக இணைப்பது தவிர்க்கப்படவேண்டும்.
  • பார்வையாளர்களைக் கவரும் வகையில் இணைக்கப்படும் செய்திகளின் தலைப்பை மாற்றுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • தலைப்புக்கள் பதியப்படும் செய்திகளின் உள்ளடக்கத்துக்கு மாறாக இருப்பின் பொருத்தமானதாக மாற்றவும், தலைப்புகளில் எழுத்துப் பிழைகளைத் திருத்தவும் அனுமதிக்கப்படுகின்றது.
  • உறுதிப்படுத்தப்படாத செய்திகள், ஆர்வத்தைத் தூண்டும் வினோதச் செய்திகள், பெட்டிச் செய்திகள் செய்தித் திரட்டி பிரிவில் மட்டுமே இணைக்கப்படல் வேண்டும். எனினும் வக்கிரமான செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • யாழ் கள உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களைப் புதிய செய்திகளாக செய்திப் பிரிவுகளில் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.

 

4. ஆக்கங்கள்

யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் ஆக்கங்கள் சம்பந்தமான விதிகள்:

  • யாழ் கள உறுப்பினர்கள் சுயமான ஆக்கங்களை, காணொளிகளை பதிவது விரும்பப்படுகின்றது.
  • முகப்பில் காட்டப்படும் கதைக் களம், கவிதைக் களம் பகுதிகளில் கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள், சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன இணைக்கப்படல் வேண்டும்.
  • யாழ் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்கள், படைப்புக்களிற்கு சக கள உறுப்பினர்கள் விருப்புப் புள்ளிகளை வழங்கி ஆதரவு கொடுத்து ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
  • யாழ் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது.
  • பிற தளங்களில் இருந்து இணைக்கப்படும் ஆக்கங்களின் உள்ளடக்கம் யாழ் களவிதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • கதை கதையாம், கவிதைப் பூங்காடு பகுதிகளில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், கவிதைகள்,  பாடல் வரிகள் போன்றவை இணைக்கப்படலாம்.
  • வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்பட்டு, ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்.
  • தரமான ஏனைய படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து இணைக்கலாம்.  எனினும் காப்புரிமை காரணமாகப் பகிர்வதற்குத் தடை உள்ளவை தவிர்க்கப்படல் வேண்டும்.


5. மூலம்

  • யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் செய்திகள், பதிவுகள், ஆக்கங்கள் வேறு இடத்திலிருந்து பெறப்பட்டதாயின், பதிவுகளின் அடியில் நேரடி மூலம் கண்டிப்பாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
    • அது எங்கிருந்து பெறப்பட்டது என குறிப்பிடப்படல் வேண்டும்.
    • அது யாரால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்.
  • நேரடி மூல இணைப்பு  பதிவுகளை உறுதிப்படுத்த கட்டாயம் கொடுக்கப்படல் வேண்டும்.
  • மூலம் பற்றிய விபரங்கள் தெரியாதவிடத்து, அது இணைப்பவரது சொந்த ஆக்கம் இல்லை என்று குறிப்பிடல் வேண்டும். மூலம் இல்லாமல் இணைப்பதற்கான முக்கியத்துவத்தைக் கண்டிப்பாகக் குறிப்பிடவேண்டும்.
  • அதேபோல், யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்களை வேறெங்கும் (வேறு ஊடகங்களில்) பயன்படுத்தும் போது:
    • மூலம்: யாழ் இணையம் என்று குறிப்பிடப்பட வேண்டும்.
    • ஆக்கத்தை எழுதிய கருத்துக்கள உறுப்பினரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.
    • ஆக்கத்துக்கான நேரடி இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.

 

6. காணொளிகள்
அதிக பார்வையாளர்களைச் சென்றடையும் வண்ணம் காணொளிப் பதிவுகளின் பெருக்கம் அதிகரித்து வருவதனை யாழ் களம் வரவேற்று உள்வாங்குகின்றது.  யாழ் கருத்துக்களத்தில் ஆரம்பிக்கப்படும் திரிகளில், பதியப்படும் கருத்துக்களில், ஆக்கங்களில் இணைக்கப்படும் காணொளிகள் தொடர்பான விதிகள்:

  • காணொளிகளை இணைக்கும் கள உறுப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்.
  • காணொளிகளை முழுமையாகப் பார்த்து அவை யாழ் களவிதிகளை மீறவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இணைத்தல் வேண்டும்.
  • காணொளிகளை முழுமையாகப் பார்த்து மட்டுறுத்துவது நிர்வாகத்தினருக்கு நடைமுறைச் சாத்தியமில்லை என்பதனால்  இணைக்கும் கள உறுப்பினரே அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
  • இணைக்கப்படும் காணொளிகள் கருத்தாடலைத் தூண்டுவதாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும், பயனுள்ள தகவல்களை பார்வையாளருக்குத் தருவதாகவும் இருத்தல்வேண்டும்.
  • காணொளிகளை இணைக்கும்போது அவற்றின் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கத்தை சுருக்கமாகக் கட்டாயம் குறிப்பிடுதல் வேண்டும். கள உறுப்பினர்களின் சொந்தமான காணொளிகளுக்கு இந்த விதி தளர்த்தப்படுகின்றது. அத்துடன் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியில் இணைக்கப்படும் காணொளிகளுக்கும் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது. ஆயினும் திரியொன்றில் (குறிப்பாகப் பொழுதுபோக்குத் திரிகளில்)  சிறுகால இடைவெளியில்  அளவுக்கதிகமாக காணொளிகளைத் தொடர்ச்சியாகப் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • காப்புரிமை காரணமாக பகிர்வதற்குத் தடை உள்ள காணொளிகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • இணைக்கப்படும் காணொளிகள் சூழ்ச்சிக்கோட்பாடுகளை முன்வைக்காமலும், விளம்பரங்களை நோக்கமாகக் கொண்ட பரபரப்புக் காணொளிகளாக இல்லாமலும் இருத்தல்வேண்டும்.
  • இணைக்கப்படும் காணொளிகள் காழ்ப்புப் பரப்புரை, வெறுப்புப் பரப்புரை,  அரசியல் கட்சிசார் பரப்புரை, அருவருப்பான சொல்லாடல்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
  • கள உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட அடையாளங்களைக் காட்டும் காணொளிகளையும், அவர்தம் குடும்ப உறுப்பினர்களினதும் நண்பர்களினதும், காணொளிகளையும் இணைப்பதை இயலுமானவரை தவிர்த்தல் வேண்டும். எனினும் கள உறுப்பினர்களின் சொந்தமான காணொளிப் படைப்புக்களுக்கும், காணொளிக் கருத்துக்களுக்கும் இந்த விதி தளர்த்தப்படுகின்றது.
  • எக்காரணம் கொண்டும் சக கள உறுப்பினர்களின் தனிப்பட்ட காணொளிகளை அவர்களின் எழுத்துமூல முன் அனுமதி இன்றி இணைத்தல் ஆகாது.
  • கள உறுப்பினர்களுக்குச் சொந்தமற்ற காணொளிகள் இணைக்கப்படும்போது அவற்றைப் பகிர்வதற்கு அனுமதி உள்ளதா என்று உறுதிப்படுத்தல் வேண்டும். இவ்விதி அரசியல், சினிமா மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின்  காணொளிகளுக்கு தளர்த்தப்படுகின்றது.
  • குழந்தைகள், சிறுவர்களது காணொளிகள் இணைப்பதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்று உறுதிப்படுத்தியபின்னரே இணைத்தல்வேண்டும்.
  • குழந்தைகள், சிறுவர்களை இடர்நிலைக்கு உள்ளாக்கும், அச்சுறுத்தும் காணொளிகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சிறுவர்கள் மற்றும் குழந்தைகளினது நிர்வாணமான காணொளிகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • தகாத உள்ளடக்கம் அல்லது அவை போன்றவற்றை (உதாரணமாக நிர்வாணம், மிருகப்புணர்ச்சி, ஆபாசம், கெட்ட வார்த்தைகள், கிராஃபிக் வன்முறை அல்லது குற்றச் செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டவை) அல்லது உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்காத உள்ளடக்கம் அல்லது அவை போன்றவற்றை இணைத்தல் ஆகாது.
  • அப்பட்டமாக பாலியல் உணர்வுகளைத் தூண்டும் காணொளிகள் இணைக்கப்படல் ஆகாது.
  • வக்கிரங்களையும், வன்முறையையும் தூண்டும் காணொளிகள் இணைக்கப்படல் ஆகாது.
  • சடலங்களிலும் காயமடைந்து இருக்கும் உடல்களிலும் பாலுறுப்புகள் மறைக்கப்பட்டே காணொளிகள் இணைக்கப்படல் வேண்டும். இவ்விதி பிற தளங்களில் இருந்து எடுத்து ஒட்டப்படும் காணொளிகளுக்கும் பொருந்தும்.
  • செய்திகளோடு தொடர்புடையதாக இணைக்கப்படும் காணொளிகளில் சடலங்கள், இரத்தம் போன்றன இடம்பெற்றிருந்தால் - தலைப்பில் அது பின்வருமாறு குறிப்பிடப்படல் வேண்டும்:
    • எ.கா.: [எச்சரிக்கை!] ஈஸ்டர் படுகொலைகள்
  • இணைக்கப்படும் காணொளிகளினது நேரடி மூலம்  அவற்றினை உறுதிப்படுத்த குறிப்பிடப்படல் வேண்டும். (பார்க்க: மூலம்)

 

7. படங்கள்/அசைபடங்கள் (animations)/மீமி (memes)
யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் கருத்துக்களோடும் ஆக்கங்களோடும் இணைக்கப்படும் படங்கள்/அசைபடங்கள் (animations)/மீமி (memes) தொடர்பான விதிகள்:

  • தனியே படங்கள், அசைபடங்கள், மீமி என்பவற்றை கருத்துக்களாகப் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.  இவை கருத்துக்களுக்குத் துணையாகப் பதியப்படலாம். எனினும் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியில் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது. ஆயினும் திரியொன்றில் (குறிப்பாகப் பொழுதுபோக்குத் திரிகளில்)  சிறுகால இடைவெளியில் அளவுக்கதிகமாகப் படங்களை தொடர்ச்சியாக பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • காப்புரிமை காரணமாக பகிர்வதற்குத் தடை உள்ள படங்கள்/அசைபடங்கள் (animations)/மீமி (memes) இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கள உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட அடையாளங்களைக் காட்டும் படங்களையும், அவர்தம் குடும்ப உறுப்பினர்களினதும் நண்பர்களினதும் படங்களையும் இணைப்பதை இயலுமானவரை தவிர்த்தல் வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் சக கள உறுப்பினர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் அவர்களின் எழுத்துமூல முன் அனுமதி இன்றி இணைக்கப்படல் ஆகாது.
  • கள உறுப்பினர்களுக்குச் சொந்தமற்ற படங்கள் இணைக்கப்படும்போது அவற்றைப் பகிர்வதற்கு அனுமதி உள்ளதா என்று சரிபார்க்கப்படல் வேண்டும். இவ்விதி அரசியல், சினிமா மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் படங்களுக்கு தளர்த்தப்படுகின்றது.
  • குழந்தைகள், சிறுவர்களை இடர்நிலைக்கு உள்ளாக்கும், அச்சுறுத்தும் படங்கள்/அசைபடங்கள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சிறுவர்கள் மற்றும் குழந்தைகளினது நிர்வாணமான படங்கள்/அசைபடங்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • தகாத உள்ளடக்கம் அல்லது அவை போன்றவற்றை (உதாரணமாக நிர்வாணம், மிருகப்புணர்ச்சி, ஆபாசம்,  கிராஃபிக் வன்முறை ஆகியவற்றைக் கொண்டவை)  இணைத்தல் ஆகாது.
  • அப்பட்டமாக பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள்/அசைபடங்கள் இணைக்கப்படல் ஆகாது.
  • வக்கிரங்களையும், வன்முறையையும் தூண்டும் படங்கள்/அசைபடங்கள் இணைக்கப்படல் ஆகாது.
  • சடலங்களிலும் காயமடைந்து இருக்கும் உடல்களிலும் பாலுறுப்புகள் மறைக்கப்பட்டே படங்கள் இணைக்கப்படல் வேண்டும். இவ்விதி பிற தளங்களில் இருந்து எடுத்து ஒட்டப்படும் படங்களுக்கும் பொருந்தும்.
  • செய்திகளோடு தொடர்புடையதாக இணைக்கப்படும் படங்களில் சடலங்கள், இரத்தம் போன்றன இடம்பெற்றிருந்தால் - தலைப்பில் அது பின்வருமாறு குறிப்பிடப்படல் வேண்டும்:
    • எ.கா.: [எச்சரிக்கை!] சுனாமியும் அதன் வடுக்களும்
  • படங்களின் மூலம் குறிப்பிடப்படல் வேண்டும். (பார்க்க: மூலம்)


8. சமூகவலைத்தள இணைப்புக்கள்

பின்வரும் செயலிகள், தளங்கள் போன்றவை சமூகவலைத் தளங்களாகக் கருதப்படுகின்றன.

  • Blogs (வலைப்பதிவுகள்), Facebook (முகநூல்), Twitter (ட்விட்டர்), YouTube (யூடியூப்) , WhatsApp, Messenger, Viber, Instagram, Tik Tok, Snapchat, Tumblr, Reddit, LinkedIn, Pinterest, Telegram, Medium

சமூகவலைத் தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகள் தொடர்பான விதிகள்:

  • சமூகவலைத் தளத்தில் இருந்து இணைக்கப்படும் பதிவுகள் இயலுமானவரை சமூகவலை உலகம் பிரிவில் இணைக்கப்படல் வேண்டும்.
  • சமூகவலைத் தளத்தில் இருந்து இணைக்கப்படும் பதிவுகள் அவ்வலைத் தளங்களின் உறுப்புரிமை இல்லாதவர்களாலும் பார்க்கக் கூடியதாக இருத்தல்வேண்டும்.
  • இணைக்கப்படும் பதிவுகளை உறுதிப்படுத்த அப்பதிவுகளுக்கு நேரடி இணைப்புக் கொடுக்கப்படல் வேண்டும்.
  • சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள், அரசியல் கருத்துக்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் கட்சிசார நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் யூடியூப் கணக்குகள், முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
  • சமூகவலைத் தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகள் சூழ்ச்சிக்கோட்பாடுகளை முன்வைக்காமலும், விளம்பரங்களை நோக்கமாகக் கொண்ட பரபரப்புப் பதிவுகளாக இல்லாமலும் இருத்தல்வேண்டும்.
  • சமூகவலைத் தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகள் காழ்ப்புப் பரப்புரை, வெறுப்புப் பரப்புரை,  அரசியல் கட்சிசார் பரப்புரை, அருவருப்பான சொல்லாடல்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
  • தனிப்பட்டவர்களின் யூடியூப் கணக்குகள், சமூகவலை தளங்களின் நிலைத் தகவல்களை அவர்களின் அனுமதி இல்லாமல் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும். இத்தகைய அனுமதிகளை சமூகவலைத் தளங்களினூடாகப் முன்கூட்டியே பெற்று வைத்திருப்பது விரும்பத்தக்கது.
  • தனிப்பட்டவர்களின் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், விழாக்களின் போது எடுக்கப்படும் காணொளிகள், அவர்களது தனிப்பட்ட விபரங்கள் என்பனவற்றை இணைப்பதும் பகிர்வதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மக்கள் போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு போன்ற விடயங்களையும் நிகழ்வுகளையும் யாழ் இணையத்தின் பொதுவான கள விதிகளுக்கு ஏற்ப இணைப்பது அனுமதிக்கப்படுகின்றது. எ.கா: உதாரணமாக மாணவர் போராட்டங்கள், நினைவு தின ஒன்றுகூடல்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள், மாவீரர்களின் முக்கிய நிகழ்வுகள் போன்றன.
  • சமூக வலைத்தளங்களில் இணைக்கப்படும் ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது. இவ்வாறு இணைக்கப்படுபவை யாழ் களவிதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • மத வழிபாட்டுக்குரிய தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றை இணைப்பது அனுமதிக்கப்படுகின்றது. எ.கா: கோயில்/தேவாலயத் திருவிழாக்களின் புகைப்படங்கள், காணொளிகள், மதங்களின் நன்நெறிக் குறிப்புகள் போன்றவை.
  • யாழ் கள உறுப்பினர் ஒருவர் தனது சமூகவலைத் தளத்தில் பகிர்வதை யாழ் கருத்துக்களத்திலும் பகிர விரும்பின் அவை யாழ் களவிதிகளுக்கு உட்பட்டதாக இருப்பின் அனுமதிக்கப்படும். எனினும் இவ்வாறு பகிர்வதன் மூலம் ஏற்படும் விளைவுகளுக்கு யாழ் களம் பொறுப்பேற்காது.
  • யாழ் கருத்துக்களத்தில் உள்ள ஆக்கங்களையும் கருத்துக்களையும் முகநூல், ட்விட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் இணைத்து யாழ் களத்தின் வளர்ச்சிக்கு உதவுவது விரும்பப்படுகின்றது. எனினும் நாற்சந்திப் பகுதி கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கக்கூடியவாறு உள்ளதால் இப்பகுதியில் உள்ள பதிவுகளை சமூகவலைத் தளங்களில் பகிர்வது கூடாது.

 

9. போலிச் செய்திகள்/பதிவுகள்

போலிச் செய்திகள், புனைவுச் செய்திகள், போலித் தகவல்கள் பற்றிய விதிகள்:

  • நம்பகத்தன்மையற்ற போலிச் செய்திகள், தகவல்கள் போன்றவற்றை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். உடனடிச் செய்திகள், அரசியல் செய்திகள், உடல்நலம் சார்ந்த விடயங்களும், வரலாறு, பண்பாட்டு விடயங்களும் போலியா இல்லையா என்பதை இயன்றவரை உறுதிப்படுத்தி இணைக்கவேண்டும்.
  • தனியொருவர், சமூகக் குழுமங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது நாடுகளுக்கு தீங்கு விளைவிக்க திட்டமிட்டே  உருவாக்கப்படும் தவறான செய்திகள், தகவல்கள் போன்றவற்றை எழுத்தில், படங்களில், காணொளிகளில் இணைத்தல் ஆகாது.
  • தனியொருவர், சமூகக் குழுமங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உண்மையான செய்திகள், தகவல்கள் ஆயினும் எழுத்தில், படங்களில், காணொளிகளில் இணைத்தல் ஆகாது.
  • தனியொருவர், சமூகக் குழுமங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது நாடுகளுக்கு தீங்கு விளைவிக்காத தவறான தகவல்கள் ஆயினும் எழுத்தில், படங்களில், காணொளிகளில் இணைத்தல் ஆகாது.

 

10. சதி/சூழ்ச்சி கோட்பாடுகள்
சதி/சூழ்ச்சி கோட்பாடுகள் பற்றிய விதிகள்:

  • குறித்த உலக நிகழ்வுகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் வலிமையான மறைமுக சக்திகளின் செல்வாக்கு காரணம் என நம்பும் சதி/சூழ்ச்சி கோட்பாடுகள் பற்றிய பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சதி/சூழ்ச்சி கோட்பாடுகள் எனத்தோன்றும் பதிவுகளை இடுவோர் யார், அவர்கள் ஏன் எழுதுகின்றார்கள் என்பவை உறுதிப்படுத்தமுடியாத பட்சத்தில் அப்பதிவுகளை தவிர்த்தல் வேண்டும்.
  • சதி/சூழ்ச்சி கோட்பாடுகள் எனத்தோன்றும் பதிவுகளின் மூலம் நம்பகத்தன்மையற்றதாயின் அப்பதிவுகளை தவிர்த்தல் வேண்டும்.
  • சதி/சூழ்ச்சி கோட்பாடுகள் எனத்தோன்றும் பதிவுகள் பரபரப்பைத் தூண்டும் ஒரு பக்கச் சார்பானதாகக் காணப்படும் பட்சத்தில் அப்பதிவுகளை தவிர்த்தல் வேண்டும்.


11. அரசியல் கட்சிசார் பதிவுகள்
அரசியல் கட்சிசார் பதிவுகள் தொடர்பான விதிகள்:

  • யாழ் கருத்துக்களம் உலகத் தமிழர்களை, அவர்கள் நம்பும்/ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தளம் என்பதால், அரசியல் கட்சிகளின் நேரடிப் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் போன்றவை எழுத்தில், படங்களில், காணொளிகளில், சமூகவலை இணைப்புக்களில் பதிதல் முற்றாகத் தவிர்க்கப்படல்வேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வமான இணையத்தளங்களில் இருந்தோ, சமூகவலை தளங்களில் இருந்தோ கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • அரசியல் கட்சிகளின் ஆதரவாக ஒரு பக்கச் சார்பானதாகக் காணப்படும் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள்/பதிவுகள்/காணொளிகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தூண்டும் அரசியல் கட்சிகளைப் பற்றிய காத்திரமான விமர்சனங்கள், அவதானிப்புக்கள், கருத்துக்கள் பதியப்படலாம்.


12. மதம்சார் பதிவுகள்
மதம்/சமயம் தொடர்பான விதிகள்:

  • மதவிரோதங்களை ஆராதிக்கும்/ஊக்குவிக்கும் கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மதம் சார்ந்த மூடநம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மதப் பிரச்சாரம் செய்யும் வகையிலான பதிவுகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • சக கருத்தாளர்களின் மத நம்பிக்கையை/நம்பிக்கையின்மையைச் சுட்டி புண்படுத்தும் வகையில் கருத்துக்கள்/பதிவுகள் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். எனினும் மத நம்பிக்கை என்ற போர்வையில் வரும் மூட நம்பிக்கைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தூண்டும் காத்திரமான விமர்சனங்கள், அவதானிப்புக்கள், கருத்துக்கள் பதியப்படலாம்.
  • மத நம்பிக்கைகள்/மத நம்பிக்கையற்ற நாத்திகம் சார்ந்த விவாதங்கள், கருத்தாடல்கள் சக கருத்தாளர்களை தனிமனித ரீதியில் தாக்குதல் செய்யாமல் ஆரோக்கியமான வகையில் பண்பாக இருத்தல்வேண்டும்.
  • மத நம்பிக்கையை/நம்பிக்கையின்மையை கேலி/நையாண்டி செய்யும் பதிவுகளை எழுத்தில், படங்களில், மீமிகளில், காணொளிகளில் இணைத்தல் ஆகாது.
  • மெய்யெனப் படுவது பகுதியில் மானுடம், மக்கள் நலன், நன்நெறி, பண்பாடு, சீர்திருத்தங்கள், தனிமனித ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்து மக்களை நெறிப்படுத்தும் மெய்யியல்/இறையியல் சம்பந்தமான பதிவுகள் ஊக்குவிக்கப்படுகின்றது. எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

13. பொழுதுபோக்கு பதிவுகள்

  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியில் உள்ள பிரிவுகளில் தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள், படங்கள், காணொளிகள் இணைக்கப்படலாம்.
  • ரசிக்கத்தக்க படங்கள், காணொளிகள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
  • பொழுதுபோக்குத் திரிகளில் சிறுகால இடைவெளியில் பல புதிய தலைப்புக்கள் திறக்கப்படுவதும்,  அளவுக்கதிகமாகப் பதிவுகளை, காணொளிகளை தொடர்ச்சியாகப் பதிவதும் தவிர்க்கப்படல் வேண்டும். இவை அவசியமானதும், முக்கியமானதுமான பிற தலைப்புக்களையும், திரிகளையும் பின்னுக்கு தள்ளும் நிலையை உருவாக்கலாம்.
  • தனியொருவர், சமூகக் குழுமங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அரசியல் கட்சிகள் போன்றவற்றை அவதூறு செய்யும் பதிவுகளையும் காணொளிகளையும் நகைச்சுவை என்ற போர்வையில் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

 

உ)  திருத்தங்கள்

1. கருத்துகளை திருத்துதல்

  • கருத்துக்கள் பதியப்பட்டதில் இருந்து அடுத்த 12 மணிநேரம் வரையுமே கள உறுப்பினர்களால் தமது பதிவுகளில்/கருத்துக்களில் மாற்றங்கள் செய்யமுடியும்.
  • கள உறுப்பினர்கள் தமது பதிவுகளில்/கருத்துகளில் உள்ள எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மற்றும் தவறான மூலம் என்பனவற்றை மட்டுமே திருத்தலாம்.
  • சக கள உறுப்பினர்கள் பதில் கருத்துக்களை வைத்தபின்னர் தாம் எழுதிய கருத்துகளை நீக்குவதும் அல்லது பிரதான கருத்தில் மாற்றத்தைச் செய்வதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கள உறுப்பினர்கள் நிர்வாகத்தின் அனுமதி இன்றி திரியில் எழுதியவற்றை முழுமையாகவோ, பகுதியாகவோ நீக்குதல் கூடாது.
  • கள உறுப்பினர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்றை பூட்ட வேண்டுமாயின் மட்டுறுத்தினர்களுக்கு தனிமடலில் அறியத் தருதல் வேண்டும். மட்டுறுத்தினர்களின் இறுதி முடிவே செயல்படுத்தப்படும்.

2. மட்டுறுத்தப்பட்ட கருத்துகள்

  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகளை மீண்டும் பதிவதும் வேறு தலைப்புகளில் கொண்டுவந்து பிரசுரிப்பதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மட்டுறுத்தப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக திரிகளில் கருத்துக்கள் பதிவதும், நிர்வாகத்தை நோக்கி முறைப்பாடுகள் வைப்பதும் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஏதாவது ஒரு நியாயமான காரணத்திற்காக ஒருவரின் சுயபடைப்பு திருத்தப்படவோ அல்லது சில பகுதிகள் நீக்கப்படவோ வேண்டி ஏற்படின், அப் படைப்பை எழுதியவரிடமே அதற்கான பொறுப்பு வழங்கப்படும். அவ்வாறு படைப்பாளி அதனை திருத்தும் வரைக்கும் அப்படைப்பு நிர்வாகத்தினரைத் தவிர வேறு எவரும் பார்க்க முடியாத பகுதிக்கு நகர்த்தப்பட்டு, படைப்பாளி திருத்தம் செய்து அனுப்பிய பின்னர் மூன்று நாட்களுக்குள் மீண்டும் வழமையான இடத்தில் இணைக்கப்படும்.
  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் மட்டுறுத்தினர்களிடம் முறைப்பாட்டு முறை மூலமாக அல்லது தனி மடலில் விளக்கம் கோரலாம்.
  • மேற்கூறிய விடயத்துக்கு மட்டுறுத்தினர்கள் பொதுவாக 24 மணி நேரத்திற்குள் பதில் அளிப்பர். அவ்வாறு பதில் அளிக்கவில்லையாயின் அதனையும் குறிப்பிட்டு நாற்சந்திப் பகுதியில் மட்டும் தனித் திரி திறந்து மட்டுறுத்தியதற்கான காரணங்களை தெளிவுபடுத்தக் கேட்கலாம்.

 

ஊ) திண்ணை சேவை
யாழ் கள உறுப்பினர்கள் தமக்குள் நட்பு ரீதியில் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணைப் பகுதி தொடர்பான விதிகள்:

  • யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடல்களில் பங்குபெறாமல் திண்ணையில் மாத்திரம் உரையாடுதல் ஆகாது.
  • திண்ணை உரையாடல்கள் யாழ் கருத்துக்கள விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். களவிதிகளைச் சட்டைசெய்யாது எதனையும் எழுதலாம் எனக் கருதி உரையாடுதல் ஆகாது.
  • திண்ணை உரையாடல்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.
  • திண்ணை உரையாடல்கள் கண்ணியமான முறையிலும் நட்பு ரீதியிலும் இருத்தல் வேண்டும்.
  • திண்ணை உரையாடல்களில் கலந்துகொள்ளாத சக உறுப்பினர்களைப் பற்றி உரையாடுதல், வீண்வம்பு பேசுதல், முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.
  • சக கருத்தாளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தனிநபர் தாக்குதல், சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும், அவதூறு செய்யும் வகையிலும் உரையாடுதல், நீ, வா, போ என ஒருமையில் சக உறுப்பினரை விளித்தல்,  அநாகரீகமாக உரையாடுதல், இழிவான வார்த்தைகளைப் பிரயோகித்தல், சக உறுப்பினரின் பெயரைச் சுட்டி நையாண்டி செய்தல்,  நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனநிலை பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடல், உடற்தோற்றம்,  கல்வி, சமூகநிலை, பால்நிலைகளை சுட்டி அவமதித்தல் போன்றன கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சக கருத்தாளரின் தனியுரிமைகளை மீறும் தனிப்பட்ட விடயங்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றிய உரையாடல்கள் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்.
  • திண்ணையில் தமது அடையாளங்களை (பெயர் / முகவரி / பால் / தொலைபேசி இலக்கம் போன்றவற்றை) பகிரங்கமாக வெளிப்படுத்துவதும் உரையாடும் சக கள உறுப்பினரின் அடையாளங்களை கோருவதும் (பெயர் / பால் / முகவரி / தொலைபேசி இலக்கம் போன்றவற்றை) கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • திண்ணையில் உரையாடப்பட்டவற்றை திரைவெட்டுவது (screenshot), யாழ் களத்திற்கு வெளியே கொண்டு செல்வது, பரப்புவது, பிரதியிடுவது போன்றன முற்றாகத் தடை செய்யப்படுகின்றது.
  • திண்ணையில் உரையாடப்பட்டவற்றை களத்தில் உள்ள திரிகளில் ஒட்டுதலும், தனியாகத் திரி திறந்து இடுதலும் ஆகாது.
  • யாழ் கருத்துக்கள திரிகளின் தொடர்ச்சியாக திண்ணையில் உரையாடுவதும், வீண்விவாதங்களில் ஈடுபடுவதும், ஆத்திரமடைந்து, உணர்வுமேலீட்டால் உரையாடல்களின் எல்லைகளை மீறுவதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
  • ஒரு திரியில் எழுதிய விடயத்தை அப்படியே கொண்டு வந்து திண்ணையில் இடுவது தவிர்க்கப்படல் வேண்டும். இதற்குப் பதிலாக எழுதிய விடயம் உள்ள திரியின் இணைப்பைக் குறிப்பிடலாம்.
  • யாழ் கருத்துக்களத்தில் இருந்து நீக்கப்பட்ட எந்தக் கருத்தையும் / பதிவையும் கண்டிப்பாகத் திண்ணையில் இடுதல் கூடாது.
  • நிர்வாகத்தால் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக திண்ணையில் குறிப்பிடுவதும்,  விமர்சிப்பதும், முறைப்பாடுகளை வைப்பதும், நிர்வாகத்தினரைத் தவிர ஏனையோருடன் உரையாடுவதும், கலந்தாலோசிப்பதும் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள விதிகளுக்கு உட்படாத வெளியிணைப்புக்களை - எடுத்துக்காட்டாக காழ்ப்பு/வெறுப்பு/அரசியல் கட்சிசார் பரப்புரைக் காணொளிகளின் இணைப்புக்கள் - திண்ணையில் இடுவது தவிர்க்கப்படல் வேண்டும்.  கருத்துக்கள விதிகளை மீறும் வெளியிணைப்புக்கள் திண்ணையில் அவதானிக்கப்பட்டால் திண்ணையில் தடைக்கும் அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • கருத்துக்கள விதிமுறைகளை மீறும் திண்ணை உரையாடல்களை பார்வையாளர்களாக இருந்து வேடிக்கை பார்க்காது, "கருத்துக்களில் மாற்றங்கள்" திரியில் உள்ள முறைப்பாட்டு முறை மூலம் நேரடியாக நிர்வாகத்துக்கு அறியத்தருவது விரும்பப்படுகின்றது. இது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க உதவும்.
  • கள உறுப்பினர் ஒருவர் திண்ணை விதிகளை மீறியது அவதானிக்கப்பட்டால் அல்லது நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டால் பின்வருமாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும்.
    • முதலாவது மீறல்: குறிப்பிட்ட கள உறுப்பினர் திண்ணையில்  தற்காலிகமாகத் தடை செய்யப்படுவார். தடைசெய்யப்படும் காலத்தின் அளவு மட்டுறுத்துனரின் முடிவுக்குட்பட்டது.
    • இரண்டாவது மீறல்: குறிப்பிட்ட கள உறுப்பினர் திண்ணையில் ஒரு மாதம் தடை செய்யப்படுவார்.
    • மூன்றாவது மீறல்: குறிப்பிட்ட கள உறுப்பினர் திண்ணையில் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.
    • சக கருத்தாளரை மிரட்டினாலோ, ஆபாசமாக இழிவுபடுத்தினாலோ,  அல்லது யாழின் விதிகளை அப்பட்டமாக மீறினாலோ உடனடியாக குறிப்பிட்ட உறுப்பினர் திண்ணையிலும் கருத்துக்களத்திலும் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.

எ) நடவடிக்கைகள்

1. கள உறுப்பினர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் சந்தர்ப்பங்களும் முறைகளும் பற்றிய விதிகள்:

குறிப்பு: மட்டுறுத்துனர் பார்வையில் உள்ளவரால் பதியப்படும் கருத்துக்கள் அனைத்தும் மட்டுறுத்துனர் ஒருவரால் பரிசீலனை செய்தபின்னரே கருத்துக்களத்தில் காண்பிக்க அனுமதிக்கப்படும்.

  • மீறப்படும் கள விதிகளின் அடிப்படையில்:
    • ஒருவருக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும்
    • ஒருவர் மட்டுறுத்துனர் பார்வையில் விடப்படுவார்
    • ஒருவர் கருத்துக்கள் பதிவது முற்றாகத் தடைசெய்யப்படும்
    • ஒருவர் கருத்துக்கள பயனராக உள்நுழைவது இடைநிறுத்தப்படும்
  • சக கள உறுப்பினர்களை கருத்துக்களத்தில், திண்ணையில் அல்லது தனிமடல் மூலமாக மிரட்டினாலோ, ஆபாசமாக இழிவுபடுத்தினாலோ,  அல்லது யாழின் விதிகளை அப்பட்டமாக மீறினாலோ உடனடியாக குறிப்பிட்ட உறுப்பினர் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.
  • சக கள உறுப்பினர்களை யாழுக்கு எதிராக இயங்குமாறு கருத்துக்களத்தில் நேரடியாகவோ, தனிமடல் மூலமாகவோ கோரினாலோ அல்லது பிற சமூகவலைத் தளங்கள், தொடர்பாடல் சேவைகள் மூலம் கோரினாலோ உடனடியாகக் குறிப்பிட்ட உறுப்பினர் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.
  • குடும்ப உறவுகளை இழுத்து இழிவாகக் கருத்து எழுதுகின்றவருக்கு அன்றிலிருந்து உடனடியாக ஒரு மாதத் தடை வழங்கப்படும். மீண்டும் ஒரு முறை மீறினால் நிரந்தரமான தடை வழங்கப்படும்.
  • கள உறுப்பினர் ஒருவர் வசைச் சொற்கள் (தூஷண வார்த்தைகள்), இழிவான கெட்ட வார்த்தைகள், பாலியல் ரீதியிலான வசைகள் போன்றவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எழுதினால் உடனடியாக ஒரு மாதம் மட்டுறுத்துனர் பார்வைக்குள் கொண்டு வரப்படுவார். இரண்டாவது முறை மீறினால் ஒரு மாதத் தடையும், மூன்றாவது முறை மீறினால் நிரந்தரமான தடையும் வழங்கப்படும்.
  • வெறுமனே சீண்டுவதற்காக தொடர்ந்து எழுதுகின்றவர்கள் மீதும், ஒருவர் ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை வைக்கும்போது பதிலுக்கு களவிதிகளை மீறும் கருத்துக்களை வைப்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் எச்சரிக்கைப் புள்ளிகளும், பின் மட்டுறுத்துனரின் பார்வைக்குள் உட்படுத்தப்படுவதும், அதன் பின் தடைகளும் வழங்கப்படும். இவற்றில் எத்தகைய நடவடிக்கை முதலில் எடுக்கப்படும் என்பது மட்டுறுத்துனரின் முடிவுக்குட்பட்டது.
  • நிர்வாகத்தின் வேண்டுகோள்களையும், அறிவுறுத்தல்களையும் தொடர்ச்சியாக மீறுபவர்கள் மீதும் ஒரு மாதத் தடையும், மீண்டும் ஒரு முறை மீறுபவர்களுக்கு நிரந்தரமான தடையும் வழங்கப்படும்.
  • கள உறுப்பினர் ஒருவர் தனது கருத்துகளை நிர்வாகத்தின் அனுமதி இன்றி நீக்கினால் அல்லது நிர்வாகத்தினரால் அனுப்பப்பட்ட தனிமடல் அல்லது நடவடிக்கை சார்ந்த விடயங்களைப் பகிரங்கப்படுத்தினால் அவர் தடை செய்வதற்குரிய சூழ்நிலைகளை தோற்றுவித்தவராகக் கருதப்பட்டு தடை செய்யப்படுவார்.
  • பிறரின் ஆக்கங்களை தன் சொந்த ஆக்கமாக பிரசுரித்தால் முதலில் எச்சரிக்கை வழங்கப்படும். மீண்டும் அதே தவறு நிகழுமாயின் அவர் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.
  • கள உறுப்பினர் ஒருவர் எட்டுக்கு மேற்பட்ட (8+) எச்சரிக்கைப் புள்ளிகள் பெற்றால் அவர் உடனடியாகத் தானியங்கி மூலமாகவோ அல்லது மட்டுறுத்துனர் மூலமாகவோ நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஐந்திற்கு மேற்பட்ட (5+) எச்சரிக்கைப் புள்ளிகள் பெற்றால் அன்றிலிருந்து ஒரு மாதத் தடை வழங்கப்படும்.

 

2. எச்சரிக்கைப் புள்ளிகள் நீக்குவது தொடர்பான நடைமுறை:
எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுமிடத்து அவரது கருத்துக்கள நடத்தையில் முன்னேற்றங்கள் இருக்குமிடத்து எச்சரிக்கைப் புள்ளிகள் நீக்கப்படும்.

குறிப்பு: இந்நடைமுறை ஒவ்வொரு உறுப்பினரதும் நடத்தைகளில் உள்ள முன்னேற்றங்கள் நிர்வாகத்தால் ஆராயப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும்.

  • எச்சரிக்கைப் புள்ளிகள் எடுத்தவர்கள் அடுத்த ஆறு மாதத்திற்கு எதுவித எச்சரிக்கைப் புள்ளிகளும் எடுக்காதவிடத்து ஆறாவது மாதத்தின் பின்னரிலிருந்து ஒவ்வொரு எச்சரிக்கைப் புள்ளி குறைக்கப்படும்.
  • ஒரு வருடத்திற்குள் எதுவித எச்சரிக்கைப் புள்ளிகளும் எடுக்காதவிடத்து அனைத்து எச்சரிக்கைப் புள்ளிகளும் நீக்கப்படும்.

3. நிர்வாக நடவடிக்கைகள் சம்பந்தமாக திறக்கப்படும் திரிகள் பற்றிய விதிகள்:

  • நிரந்தரத் தடை தவிர்ந்த ஏனைய நடவடிக்கையை ஒருவர் மீது எடுக்கப்படும் போது அவருக்கு ஆதரவாகத் திரி திறக்கப்படுவது அனுமதிக்கப்படமாட்டாது.
  • இதேபோன்று ஒருவர் நிர்வாகத்தின் நடவடிக்கை மீது கோபம் கொண்டு நிரந்தரமாக விலகுகின்றேன் என விலகினால், அவரை மீண்டும் யாழ் கருத்துக்களத்துக்கு வரச் சொல்லி திறக்கப்படும் திரிகளும் அனுமதிக்கப்படமாட்டாது.
  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் மட்டுறுத்துனர்களிடம் முறைப்பாட்டு முறை மூலமாக அல்லது தனி மடலில் விளக்கம் கோரலாம்.  மட்டுறுத்துனர்கள் பொதுவாக  24 மணி நேரத்திற்குள் பதில் அளிப்பர். அவ்வாறு பதில் அளிக்கவில்லையாயின் அதனையும் குறிப்பிட்டு நாற்சந்திப் பகுதியில் மட்டும் தனித் திரி திறந்து மட்டுறுத்தியதற்கான காரணங்களை தெளிவுபடுத்தக் கேட்கலாம்.

மேற்கூறிய அனைத்து விதிகளின் எல்லைகள் எவை என்பது மட்டுறுத்துனரின் முடிவாகவே இருக்கும். களவிதிகளை மீறும் கருத்தொன்றை எப்படித் தணிக்கை செய்வது (திருத்துவது/ஒரு பகுதியை நீக்கி *** இடுவது/முற்றாக நீக்குவது) என்பதனையும் மட்டுறுத்துனரே தீர்மானிப்பர். மட்டுறுத்துனரின் முடிவே இறுதியானது ஆகும். மேலும் களவிதிகளை மீறும் கள உறுப்பினர் ஒருவர் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதனை நிர்வாகத்தினர் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பர்.

 

நாமார்க்கும் குடியல்லோம்

நன்றி,
யாழ் இணையம்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.