தனி ஈழம் கோரிக்கையை முன்வைத்து வரும் மே மாதம் 19ம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
அவர்கள் கூறுகையில்
,
1967ல் தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு எதிர்த்தது. அதுபோல இலங்கைக்கு எதிராக இருந்து தனித் தமிழ் ஈழம் பெற்றுத் தர வேண்டும். அதற்காக தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு வரும் மே 19ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரமாண்ட அளவில் பேரணியும் பொதுக் கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
அன்றைய தினம் காலை 10 மணிக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி சேலம் போஸ் மைதானம் வரை பேரணியும், மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டமும் நடைப்பெறும். இதில் சேலத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ - மாணவர்களும் கலந்துக் கொள்ளுவார்கள். தொழிலாளர் பெருமக்களும், மீனவ அமைப்புகளும் பெருமளவு கலந்துக் கொள்ளுவார்கள். நிச்சயமாக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பில்லை.
அதை முன்னிட்டு தமிழகம் முழுக்க நான்கு கட்ட பிரசார பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடைபெறும். ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இலங்கையை கண்டிக்கும் வகையில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைப்பெறக் கூடாது என்கிற பிரசாரத்தையும், ஏப்ரல் 22 முதல் 28ஆம் தேதி வரை பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடவும், இலங்கை அகதிகளுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கவும் போராட்டம் நடைப்பெறும்.
ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கி மே 5ஆம் தேதி வரை மீனவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மே 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்திய அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைப்பெறும். இறுதியாக மே 19ஆம் தேதி பேரணியும், பொதுக்கூட்டமும் நடைப்பெறும். இத்தோடு எங்கள் போராட்டம் நின்று விடாது. தொடர் போராட்டமாகவே இருக்கும் என்றார்கள்.
http://www.vivasaayi.com/2013/04/19_20.html