Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33652
  • Joined

  • Days Won

    157

கிருபன் last won the day on February 13

கிருபன் had the most liked content!

2 Followers

Contact Methods

  • Website URL
    https://kirubans.blogspot.com/
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    முடிவிலி வளையம்
  • Interests
    போஜனம், சயனம்

Recent Profile Visitors

கிருபன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

7.9k

Reputation

  1. போதமும் காணாத போதம் – 24 அனலி வீரச்சாவு அடைந்தாள். வித்துடல் திறக்கமுடியாதபடி பேழையில் அடைக்கப்பட்டு வந்தது. கொடுநாற்றத்துடன் பேழைக்குள்ளிருந்து நிணம் கசிந்து வெளியேறியது. அமைக்கப்பட்ட பந்தலுக்குள் வெயில் வராமல் கம்பளங்கள் தொங்கவிடப்பட்டன. வாசனைத் திரவியங்கள், சந்தன நறுமண ஊதுபத்திகளென மூச்சுவிட உபாயங்கள் அளித்தும் வெயில் ஏற ஏற சுற்றியிருந்தவர்களின் குடல் புரண்டது. சிலர் மூக்கைப் பொத்தியபடியே இருந்தனர். வயிற்றைக் குமட்டி வெற்றிலையைப் போட்டு அதக்கினேன். நான்கு நாட்களுக்குப் பிறகு களத்தில் மீட்கப்பட்ட வித்துடல் இப்படித்தான் இருக்குமென இயல்பாகச் சொல்லினர். கப்டன் அனலி என்று அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட பெரிய புகைப்படத்தில் மலர்ந்திருந்தாள். வித்துடல் மாவீரர் துயிலுமில்லம் நோக்கி புறப்பட்டது. வீதியில் சனங்கள் கூடி மலரஞ்சலி செய்தனர். சிவந்தொழுகும் அந்தியின் வண்ணத்தில் மழை தூறிற்று. அனலியின் தாயார் மயக்கமடைந்து ஓய்ந்திருந்தாள். அனலியின் சகோதரனான அமலன் என்னுடைய கைகளைப் பற்றி துடிதுடித்தான். “தங்கா, என்னை மன்னிக்கவே மாட்டாள். அவளை நாந்தான் கொலை செய்திட்டன்” என்றான். அவனைத் தழுவி ஆறுதல் சொன்னேன். அனலியின் வித்துடலை விதைத்து திரும்பினோம். இருண்ட சொற்களால் எழுதப்பட்ட நீண்ட வரியைப்போல வெறித்திருந்தது வீட்டிற்கு செல்லும் வீதி. கனவிற்காக உயிர்துறப்பதா? உயிர் துறப்பதுவே கனவா? வன்னிநிலம் முழுதும் அதே இருண்ட சொற்களாலான வீதியில் சனங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். அனலியின் கைகளைப் பற்றிக்கொண்டு சென்ற கோவிலும் குளமும் களையிழந்தன. “நீ வளர்ந்து வந்து என்னைத் தான் கலியாணம் செய்து கொள்ளவேண்டும் வடுவா” என்பாள். என்னுடைய தலையில் பேன் பொறுக்கி விரல் நகத்தில் மெழுகுப் பசையாய் ஆகும் வரை குத்திக்கொண்டே இருப்பவளை இழந்தேன். அவளின் வாசனை எனக்குப் பிடித்திருந்தது. கூந்தலும், நெற்றியில் பொட்டென அமைந்திருக்கும் சிறிய மச்சமும் அவள் வடிவின் அடவு. இப்படி ஏன் உயிர்களை இழக்கிறோம்? எத்தனை எத்தனையாய் அவலப்படும் பிறவியிது? அனலியையும் மண் பிளந்து வாங்கிற்று. அவளது மேனியில் ஒரு பிடி மண்ணை அள்ளிப்போட்டேன். வரலாற்றின் முகப்பில் விதைகுழிகள் வரவேற்கும். வன்னியிலுள்ள சனங்களுக்கு இயக்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. “வீட்டுக்கு ஒருவரை நாட்டுக்கு தருவீர்” என்று பதாகைகள் எழுந்து நின்றன. பரப்புரைகள் முடுக்கிவிடப்பட்டன. வீடு தோறும் அரசியல்துறைப் போராளிகள் படையெடுத்தனர். வீடுகளில் பிரச்சனை தோன்றியது. எந்தப் பிள்ளையை போருக்கு அனுப்புவதென்று பெற்றோர்கள் குழம்பினர். எப்போதும் வீடுகளில் விளக்குகள் சுடர்ந்தன. சனங்களிடமிருந்து உறக்கம் எரிந்து போயிற்று. அண்ணனை வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு பாசறை நோக்கிப் புறப்பட்ட தம்பிகளும், தங்கைகளும் நாளேட்டில் வெளியாயினர். பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்த பெற்றோர்களின் பேட்டிகள் இயக்கத்தின் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. தேய்பிறை நிலவின் ஒளிமங்கும் நள்ளிராப் பொழுதில் உறக்கத்திலிருந்து விழித்து நீரருந்திய அனலியிடம் “அமலன் என்னோட இருக்கட்டும், நீ போ மோளே” என்ற தாயாரின் சொல்லை ஆமோதித்தாள். தேயும் நிலவுடன் அவளது உறக்கம் மெலிந்தது. கண்களை மூடமுடியாமல் மூச்சின் வேகம் அதிகரித்தது. நெஞ்சைப் பிடித்தபடி எழுந்தாள். அவள் எழுப்பிய சத்தம் கேட்டு அமலன் திடுக்கிட்டான். “தங்கா, என்னடி செய்யுது?” ஒன்றுமில்லையென தலையை ஆட்டினாள். தாயார் அவளுக்கு சுடுதண்ணி கொடுத்தாள். “என்னில எதுவும் கோபிக்காத மோளே, கொண்ணா வருத்தக்காரன். அவனை அனுப்பிப் போட்டு என்னால உயிர் வாழ ஏலாது” அனலியின் கால்களை தொழுதெழுந்தாள். அடுத்தநாள் காலையிலேயே கிளிநொச்சியிலுள்ள அரசியல் துறையினரின் முகாமுக்குச் சென்று இயக்கத்தில் இணைந்து கொண்டாள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் புறப்பட்டுப் போகும் பிள்ளையை எல்லோருமாக நின்று வழியனுப்ப பழகினர். அனலிக்கும் அது வாய்த்தது. அமலன் கொஞ்சநாட்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து விம்மினான். ஊரோடு ஒத்த துயர். போருக்கு மகவுகளை அனுப்பி வைத்துவிட்டு, எரிமலை கொதிக்கும் கருவறையோடு விரதமிருந்தனர். பிள்ளைகளின் உயிருக்கு எதுவும் நேரக்கூடாதென கோவில்களுக்கு நேர்த்தி வைத்தனர். அனலி இயக்கத்திற்குச் சென்று ஆறுமாதத்திலேயே வித்துடலாக திரும்பிவந்தாள். அன்றிரவு அவள் ஆசை ஆசையாக வளர்த்த பசு, வெள்ளை நிறத்தில் கன்றை ஈன்றது. “என்ர தங்காவை நாந்தான் கொலை செய்திட்டன். அவள் என்னை மன்னிக்கவே மாட்டாள்” அமலன் எட்டாம் நாள் செலவு வீட்டிலும் சொல்லியழுதான். அவனைத் தேற்றுவதே எங்களுக்கு வேலையானது. “அமலன் இனிமேலும் நீ இப்பிடிச் சொன்னதைக் கேட்டால், இயக்கம் உன்னை கொலைக்கேஸ்ல பிடிச்சுக் கொண்டு போய்டவும் வாய்ப்பிருக்கு. அவங்களுக்கு இப்ப ஆள் பற்றாக்குறை எண்டு உனக்குத் தெரியும் தானே” என்றார் காசிப்பிள்ளை மாமா. கூடியிருந்தவர்களும் நடந்தாலும் ஆச்சரியமில்லை என்பதைப் போலவே ஆமோதித்தனர். இயக்கத்துக்கு இப்ப எல்லாமும் பற்றாக்குறைதான். ஒரேயொரு வரவு இதுதான். வித்துடல்களை அடுக்கியடுக்கி நிலத்தையும் கைவிடீனம். மிஞ்சப்போறது என்னவெண்டுதான் தெரியேல்ல” என்ற காசிப்பிள்ளை மாமா பீடியைப் புகைத்து மூக்கினால் புகை எறிந்தார். உலாவ வழியற்ற பெருமரத்தின் நிழலென சனங்கள் உறைந்திருந்தனர். யுத்த அக்கினி வன்னிக் காட்டின் மேய்ச்சல்களையும் பட்சித்தது. அதன் சுவாலை வெளியின் விருட்சங்களையெல்லாம் எரித்துப்போட்டது. சொந்த மாமிசத்தின் துண்டங்களை சனங்கள் கூட்டிப் பெருக்கினர். மாதங்கள் உருண்டோடின. நடுச்சாமத்தில் கிளிநொச்சியிலிருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தேன். அனலியின் வீட்டினைக் கடந்து வருகிற அடுத்த ஒழுங்கையில் எனது வீடு. என்னுடைய ஈருருளியின் முன்சக்கரம் ஆட்டம் கண்டிருந்தது. தெருவில் நாய்கள் குரைத்து விரட்டின. சீமைக்கருவேல மரங்கள் காற்றில் அசையும் சத்தம் ஆசுவாசத்தை தந்தது. அனலியின் வீட்டின் முன்பாக கச்சான் விதைத்திருந்தனர். அந்த தோட்டத்தின் நடுவே யாரோ நின்று கொண்டிருப்பதை பார்த்தேன். அந்த உருவம் திடீரென மறைந்தது. திகைப்புற்று அங்கேயே நின்றேன். கையில் கிடந்த டோர்ச் லைட்டால் அடித்துப் பார்த்தேன். யாருமில்லை. ஈருருளியை மிதிக்கலானேன். பாரம் அழுத்தியது போலிருந்தது. நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். எவருமில்லை. திடீரென பாதையின் ஓரத்தில் தன்னுடைய கூந்தலை இரட்டைச் சடையாக இறுக்கிப் பின்னிக் கொண்டிருந்தாள் அனலி. அவளுடைய முகம் பொலிவுற்ற பூசணிப்பூவாய் மஞ்சள் நிறத்துடனிருந்தது. அவளது பெயர் சொல்லி அழைத்தேன். எதையும் பொருட்படுத்தாமல் சடை பின்னிக் கொண்டிருந்தாள். நான் விடியும் வரை அங்கேயே மயக்கமுற்று கிடந்திருக்கிறேன். வீட்டிற்கு தூக்கிச் சென்றவர்கள் நடந்தவற்றைக் கேட்டார்கள். அனலி மஞ்சள் முன்னா மரத்தடியில் நின்றாள். ஆனால் எதுவும் கதைக்கவில்லை. அதன் பிறகு என்னால் அசையமுடியாது போயிற்று. பிறகு என்ன நடந்ததென தெரியவில்லையென்றேன். அனலி உன்னை ஒற்றைப்படையாக விரும்பினாள். அதனாலேதான் உனக்கு காட்சித் தந்திருக்கிறாள் என்றார் காசிப்பிள்ளை மாமா. அவள் என்னுடைய ஸ்நேகிதிதான். ஆனால் நீங்கள் சொல்வதைப் போலில்லை என்றேன். அனலியின் தாயாரும், அமலனும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அனலியை இயக்கத்தில் இணையச் சொன்ன நாள்முதலாய் புழுங்கித்தவிக்கும் தாய்மை. அவள் பேயாக அலைவது உண்மையில்லையென சிலர் சொன்னார்கள். “அவள் பேயாக வந்தாலும் வரட்டுமே. இயக்கத்துக்கு போய் செத்தபிள்ளையள் இப்பிடி உலாவினம். அதில பயப்பிடுறதுக்கு என்ன இருக்கு” என்றாள் அம்மா. “எடியே நீ இயக்கத்துக்கு குடுக்கிற அதேமரியாதையை இயக்கப் பேய்களுக்கு குடுப்பாய் போல” என்றார் காசிப்பிள்ளை. “இயக்கப் பிள்ளையள். எப்பவும் எனக்கு பிள்ளையள்தான்” ஊருக்குள் கொஞ்சம் பயம் வந்தது. கம்மாலையடுத்து இருக்கிற மரத்தடியைத் தாண்டுபோது எல்லோருக்கும் குழை சோறு மணந்தது. யாரோ கழிப்பு கழிச்சிருக்கிறார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் மாதக்கணக்கில் மணந்தது. இரவுகளில் அந்த வாசனை பலருக்கு மயக்கத்தை உண்டாக்கியது. வீட்டின் பின்பிருந்த மாட்டுத்தொழுவத்தில் அனலியின் குரல் கேட்டு எழும்பிப் போயிருக்கிறாள் தாய். கன்று துள்ளித் துள்ளி விளையாடியது. அது தனது உச்சியை யாருக்கோ தடவக்கொடுத்து சுகம் காண்பதைப் போல கிறங்கி நின்றது. அன்றைக்கு என்னுடைய நன்பனின் சகோதரர் வீரச்சாவு அடைந்திருந்தார். விசுவமடுவுக்கு சென்று திரும்ப வேண்டியிருந்தது. பேருந்தில் இறங்கி, வீட்டிற்கு செல்ல வேண்டும். லேசாக மழையும் தூறிக்கொண்டிருந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாதிருந்தது வீதி. கொஞ்சம் பயமாகவிருந்தது. நான் மதகைத் தாண்டி நடந்தேன். நாய்களின் கண்கள் வழமைக்கு மாறாய் நெருப்புக் கனிகள் போல சிவந்திருந்தன. காற்றில் ஒருவித வெக்கை. சோளம் வாட்டும் வாசனை உள் நாசியில் புகுந்தது. கம்மாலையைத் தாண்டினேன். குழைசோறு மணந்தது. கண்களை மூடிக் கொண்டு விறுவிறுவென நடந்தேன். மஞ்சள் முன்னா மரத்தடியை கடக்கும் போது அனலி என்னை அழைத்தாள். திரும்பக்கூடாதென மனம் சொல்லியும் திரும்பினேன். யாருமில்லை. மஞ்சள் முன்னா மரத்தின் மீதிருந்து குரல் கேட்டது. மேல் நோக்கிப் பார்த்தேன். நீலநிறத்தில் பாவாடை அணிந்து, கண்களுக்கு மை தீட்டி, கனகாம்பரப் பூக்களைத் தலைக்குச் சூடி அனலி அமர்ந்திருந்தாள். கீழே வா என்றழைத்தேன். “இல்லை உனக்கருகில் நான் வந்தால், நீ மூக்கை மூடுவாய். என் நாற்றம் தாங்காது வெற்றிலையைப் போட்டு அதக்க வேண்டிவரும். இந்நேரத்தில் உனக்கு ஏன் சங்கடத்தை தருவான்” என்றாள். “நீயேன் இப்படி தேவையற்ற விஷயங்களைக் கதைக்கிறாய். இரு நானே மேலே வருகிறேன்” “வேண்டாம், நீ கீழே நில். என்னுடைய உடல் வாசனையில்லாதது. உன்னுடைய குடலைப் புரட்டிவிடும்” என்றாள். “அனலி… அப்படிச் செய்தமைக்காக நீ என்னைத் தண்டித்துக் கொள். ஆனால் மீண்டும் மீண்டும் அதையே சொல்லாதே. இரு வருகிறேன்” என்று மரத்தில் தாவினேன். மரத்திலிருந்து கீழே விழுந்த என்னை அதிகாலையிலேயே ஊரவர்கள் மீட்டனர். அந்த மரத்தில்தான் அவள் குடியிருக்கிறாள் என்று சிலர் கருதினார்கள். மரத்தை தீ வைத்துக் கொழுத்திவிட்டால் அவளது ஆன்மா சந்தியடையும் என்றார்கள். எதுவும் செய்யவேண்டாம். அவளால் எங்களுக்கு ஒரு தீங்கும் நடவாது என்றாள். ஊரவர்கள் சிலர் தமது பிள்ளைகளை வெளியே அனுப்ப பயந்தனர். அமலன் பொழுது சாய்ந்தால் வீட்டுக்குள்ளேயே ஒடுங்கினான். என்னைச் சாக்கொல்லாதே சாக்கொல்லாதே என்று உறக்கத்திலிருந்து கதறி எழும்பி ஊரைக் கூட்டினான். அவனை அழைத்துச் சென்று ஒரு சாமியாடியிடம் நீறு போட்டு கறுப்பு நிறத்தில் கயிறும் கட்டிவிட்டேன். அவனுக்கு அந்தத் துணையும் காப்பும் ஆறுதலாயிருந்தது. அனலி ஆரையும் எதுவும் செய்யமாட்டாள் என்று அவனுக்குச் சொன்னேன். அன்றிரவு மாட்டுத்தொழுவத்தில் விளையாடிக்கொண்டிருந்த கன்று பெரிதாகச் சத்தமிட்டு அழுதது. விளக்குடன் ஓடிச்சென்ற தாயார் மல்லாந்து கிடந்த பசுவின் காம்பில் நீலம்பாரித்து கிடப்பதைக் கண்டாள். உயிருக்குப் போராடிய பசுவை காப்பாற்ற முடியாமல் விளக்கு வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில நொடிகளில் மஞ்சள் முன்னா மரம் தீப்பற்றி எரிந்தது. ஊரிலுள்ள விஷமிகள் யாரோ இதனைச் செய்திருப்பார்கள் எனவெண்ணி அம்மா கூச்சலிட்டாள். எவரொருவரும் செய்தேனென்று சொல்லவில்லை. ஊரே கொஞ்சம் கதி கலங்கியது. தம் நிழலைக் கண்டு அஞ்சினர். மஞ்சள் முன்னா மரத்தின் கீழே ஆழமாய் மண்ணில் இறங்கியிருந்தன அழிவற்ற கால் தடங்கள். “அவள் போய்ட்டாள். இனி வரமாட்டாள். எல்லாமும் அடங்கிற்றுது” என்றாள் அம்மா. அனலி ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்கிற குழப்பமும் அச்சமும் எனக்குத் தோன்றியது. அவளும் நானும் சென்றுவரும் கோவிலில் வழிபட்டேன். நடுமதியத்தில் குளத்திற்குச் சென்று குளித்தேன். அவள் நின்று குளிக்கும் இடத்தில் குமிழ்கள் பொங்கின. சலவைக் கல்லில் பிழிந்து வைத்திருந்த ஆடைகள் அவளுடையது போலவே தோன்றின. ஓடிச்சென்று பார்த்தேன். அப்போதுதான் குளித்து பிழிந்த ஈரத்துடன் இருந்தவை அனலியின் ஆடைகள்தான். அவற்றை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினேன். அம்மா கேட்டாள், “ஆற்ற உடுப்படா இது?” “அனலியின்ர” “அவளின்ர உடுப்ப எங்கையிருந்து எடுத்துக் கொண்டு வந்தனி” “குளத்தடியில” அம்மா என்னிடமிருந்து ஆடைகளை வாங்கி வீட்டினுள்ளிருந்த கொடியில் காயப்போட்டாள். “அவள் இஞ்சதான் திரிகிறாள். பாவம் பிள்ளை” என்றாள் அம்மா. சில நாட்கள் கழித்து ஒரு மதிய நாளில் வீட்டில் தனியாகவிருந்தேன். வீட்டின் கதவை யாரோ தட்டினார்கள். “ஆர்?” “கதவைத் திறவுங்கோ” “ஆரெண்டு கேக்கிறன். பெயரில்லையோ” “இருக்கு. ஆனால் சொல்லமாட்டேன். கதவைத் திறவுங்கோ” எழுந்து கதவைத் திறக்கும் முன்பாக பல்லி சொன்னது. நல்ல சகுனம். கதவைத் திறந்தேன். பூசணிப் பூவின் முகப்பொலிவும், குழை சோற்றின் வாசனையோடும் அனலி நின்று கொண்டிருந்தாள். “என்னடா இப்பிடி பார்க்கிறாய். என்ர உடுப்பைத் தா” என்றபடி வீட்டிற்குள் வந்தாள். மடித்து வைக்கப்பட்டிருந்த உடுப்பை எடுத்து அவளிடம் கொடுத்தேன். அனலி “நீ வளர்ந்து வந்து என்னைத் தான் கலியாணம் செய்து கொள்ளவேண்டும் வடுவா” என்றாள். வெளியே வெயில் எறிந்தது. ஆனாலும் பூமி குளிர்ந்தது. https://akaramuthalvan.com/?p=1961
  2. மன்னார் காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி? March 18, 2024 மன்னாரில் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி என்ற கருத்து நிலவுவதாக இந்தியாவின் பிரபல நாளிதழான தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியாவின் அதானி கிறீன்ஸ் நிறுவனத்தினால் இலங்கையின் வடபகுதியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளது. கரையோர பகுதிகளிலும் வாழ்வாதாரத்திற்கும் இந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சூழலியாளர்களும் உள்ளுர் மக்களும் கரிசனையும் கவலையும் வெளியிட்டுள்ளனர். இலங்கையின் வடபகுதியில் காற்றுவளம் அதிகமாக உள்ள இரண்டு பகுதிகளில் 4.2 கோடி டொலரில் இரண்டு காற்றாலை மின்னுற்பத்தி திட்டததை முன்னெடுப்பதற்கு கடந்த வருடம் இலங்கையின் முதலீட்டு சபை அனுமதி வழங்கியிருந்தது. இலங்கையின் அதிகரிக்கும் எரிசக்தி தேவைகளை எதிர்கொள்வதற்காக 2030ஆண்டுக்குள் இந்த எரிசக்திதேவையின் 70 வீதத்தை மீள்புதுப்பிக்கத்த சக்திவளங்கள் மூலம் பெறுவதற்காக அரசாங்கம் இந்தத் திட்டங்களை முன்னெடுக்கின்றது. இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு 11.5 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுகின்றது. மீள்புதுப்பித்தக்க சக்திவளங்கள் என்ற விடயத்தில் இலங்கையுடன் நெருங்கிய ஒத்துழைப்பை பேணுவதற்கு இந்தியா இணங்கியுள்ளது. மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளங்கள் தொடர்பான இருநாடுகளிற்கும் இடையிலான செயல்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 11ஆம் திகதி நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை உருவாக்குவதற்காக இந்தியா 11 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதேவேளை, அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தால் பிரதேசத்தின் பல்லுயிர்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கரையோர சூழலுடன் பின்னிப்பிணைந்துள்ள அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சூழலியாளர்களும் பொது மக்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர். இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற நிலையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்னெடுத்த பொருளாதார மீட்சி திட்டங்கள் தோல்வியடைந்த நிலையில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கில் பெருமளவு குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. பறவைகள் குறித்த ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்களின் தகவலின் படி மன்னார் மத்திய ஆசியாவின் பறவைகள் பறக்கும் பாதையின் ஒரு முக்கிய பகுதியாகும். உலகின் உள்ள பல நீர்பறவை இனங்களின் முக்கியமான இடம்பெயர் பாதையாக இது காணப்படுகின்றது. இந்த காற்றாலை மின் திட்டம் பறவைகளிற்கு ஒரு மரணப் பொறி என கவலை வெளியிட்டார் கொழும்பு பல்கலைகழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞான பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் சம்பத் செனிவிரட்ன. https://www.ilakku.org/மன்னார்-காற்றாலை-மின்-தி/
  3. அதிகரிக்கும் வெப்ப நிலை – விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்குமாறு அறிவிப்பு March 18, 2024 அதிக வெப்பநிலை நிலவுவதால் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கடும் வெப்பநிலையால் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், கடந்த சில வாரங்களாக நாட்டின பல பகுதிகளில் அதிக வெப்ப காலநிலை நிலவுகிறது. இதன்படி மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று திங்கட்கிழமை கவனத்துக்குரிய மட்டத்துக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மன்னார், வவுனியா, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் கிழக்கு, வடமேற்கு, வடமத்திய, மேல் மாகாணங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்துக்குரிய அளவில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, போதியளவு தண்ணீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் இயன்றவரை ஓய்வெடுத்தல், கடுமையான வெளிச் செயல்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.ilakku.org/அதிகரிக்கும்-வெப்ப-நிலை/
  4. ஜோசப் ஸ்டாலினை கடந்து அதிக காலம் ரஷ்யாவை கட்டி ஆளும் புடின்! adminMarch 18, 2024 ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88% வாக்குகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது. இந்தியாவை விட பல மடங்கு பெரியதாக விளங்கும் ரஷ்யா, உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தாலும் 15 கோடி மக்கள் தொகையை கொண்டதாகவே விளங்குகிறது. அங்கே ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். ரஷ்யாவில் சர்வ வல்லமை பெற்ற தலைவராக இருப்பவர் விளாடிமிர் புடின். இவர் கடந்த 1999 முதல் அங்கே அசைக்கவே முடியாத தலைவராக இருக்கிறார். இந்த நிலையில் அங்கே புதிய ஜனாதிபதி தேர்வு தேர்தல் நடந்தது. ஜனாதிபதி தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் வென்றதாக முதற்கட்ட தேர்தல் முடிவுகளில் தெரியவருகிறது. இதன் மூலம் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவியில் தொடர்வது உறுதியாகி இருக்கிறது. ரஷ்யாவில் பதிவான வாக்குகளில் 87.8% வாக்குகள் புடினுக்கு கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பின் ரஷ்யாவில் நடந்த தேர்தலில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச வாக்குகள் இதுவாகும். 1999இல் அதிகாரத்திற்கு வந்த புடின், ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த 200 ஆண்டுகளில் அதிக காலம் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ஜோசப் ஸ்டாலினை புடின் கடந்துள்ளார். உக்ரைன் போருக்குப் பிறகு அங்கே நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கும் நிலையில், புடின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதேநேரம் ரஷ்யாவில் நடக்கும் தேர்தலை மேற்குலக நாடுகள் எப்போதும் விமர்சித்தே வருகிறார்கள். அங்குள்ள எதிர்க்கட்சிகள் போட்டியிட அனுமதிக்கப்படுவதில்லை. வேறுமனே பெயரளவில் சில கட்சிகளை மட்டும் போட்டியிட அனுமதிக்கிறார்கள் என்ற விமர்சனமும் உள்ளது. இந்த முறையும் கூட புடினை வலிமையாக எதிர்க்கும் அளவுக்கு எந்தவொரு வேட்பாளரும் களத்தில் இல்லை என்பதே உண்மை. ரஷ்யாவை பொறுத்தவரை அங்கே ஒரே நபரால் தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபரா இருக்க முடியாது என்ற விதி இருந்தது. இதன் காரணமாகவே 1999இல் பதவிக்கு வந்த புதின் 2008இல் ஜனாதிபதி பதவியைத் தனது நண்பர் டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு முறை மட்டும் பிரதமராக இருந்தார். அதன் பின் மீண்டும் 2012இல் அதிபரான அவர், இந்தச் சட்டத்தை மாற்றினார். அதாவது ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்ந்து ஜனாதிபதியாக இருக்கலாம் என்று விதியை மாற்றினார். மேலும், ஜனாதிபதி பதவிக் காலமும் அப்போது 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது புடின் பிரதமராக இருந்த போது 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. புடின் சாகும் வரை ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததாக விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/201236/
  5. வடக்கில் கடந்தாண்டு மாத்திரம் வெளிநாடு அனுப்புவதாக 254 கோடி ரூபா மோசடி வவுனியாவிலேயே அதிக முறைப்பாடுகள்! ஆதவன். யாழ்ப்பாணம், மார்ச் 18 வடக்கு மாகாணத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மாத்திரம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடி செய்யப்பட்ட சம்பவங்களில் 139 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறைப்பாடுகளின் அடிப்படையில் 254 கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பொலிஸ் பணிமனையிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலிலேயே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்தியத்தில் 30 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 33 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 14 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 18 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் சந்தேகத் தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸ் பிராந்தியத்தில் 17 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 46 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸ் பிராந்தியத்தில் 53 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 116 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 30 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்தில் 20 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 33 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 13 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்தில் 5 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/வடக்கில்_கடந்தாண்டு_மாத்திரம்_வெளிநாடு_அனுப்புவதாக_254_கோடி_ரூபா_மோசடி
  6. இன நெருக்கடி தீா்வுக்கு தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச தயார் – கிளிநொச்சியில் அநுரகுமார March 17, 2024 தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க நேற்று பகிரங்கமாக தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த மாநாடு நேற்றுக் காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இடம்பெற்றது. அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு – “எமது வரலாற்றை எடுத்துக்கொண்டால், நாங்கள் திருமணம், சமய வழிபாடுகள், கலாசாரம் உள்ளிட்டவற்றில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயற்பட்டோம். நாங்கள் ஒன்றாகவே வாழ்ந்தோம். எமக்குள் இனவாதம், வேறுபாடுகள் இருந்திருக்கவில்லை. கடந்த காலத்தில் பிரிவினை அரசியலே மேற்கொள்ளப்பட்டது. தெற்கிலும், வடக்கிலும் அவ்வாறு பிரிவினை பேச்சுக்களை முன்னெடுத்தே அரசியல் செய்யப்பட்டது. அந்த அரசியல் நிலையிலிருந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். இந்தியா எனும் நாட்டை நாங்கள் பார்க்கவேண்டும். இந்திய தேசியக் கொடியின் கீழ் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ்கின்றார்கள். இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனங்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். அங்கு பல்வேறு வகையான கலை, கலாசாரம் என இருந்தாலும் அவர்கள் இந்தியர்களாக ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். அந்த ஒற்றுமையினால் அப்துல் கலாம் எனும் ஒருவரை ஜனாதிபதியாக கொண்டுவர முடிந்தது. அந்த ஒற்றுமையால் சிறுபான்மை இனமான சீக்கிய இனத்தவர் ஒருவரை பிரதமராகவும் கொண்டுவர முடிந்தது. அந்த ஒற்றுமையானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால், எமது நாட்டில் அதற்கு மாறாக நடந்தது. சுதந்திரம் கிடைக்கப்பெற்ற பின்னர் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. மொழிப் பிரச்னை உருவாகியதை தொடர்ந்து இனப்பிரச்னையும் தொடங்கியது. வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மாநாட்டில் தனிநாடு கோரி சூரியனில் தேர்தலில் போட்டியிட்டனர். தற்கொலை குண்டுதாரிகள் உருவாக்கப்பட்டனர். தொடர்ந்து 2009 இல் யுத்தம் முடிந்தது. நாங்கள் சுதந்திரத்துக்கு பின்னர் சண்டையிட்டே காலம் கடந்தது. அதனால் நாங்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை. இழப்புக்களையும், பகைகளையும், இன ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் வாழ நேர்ந்தது. இவற்றுக்கு முடிவு வேண்டும் என்பதற்காகவே இந்த அரசியல் சூழல் எழுந்துள்ளது. அனைவரும் ஒன்றாகி அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கவேண்டும். நடு நிலையான அரசியல்வாதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். அடுத்து வரும் நாட்களில் யாழ்ப்பாணத்திலும் தமிழ் அரசியல்வாதிகளுடன் பேசஉள்ளோம். எமது அரசாங்கள் உருவாக்கப்பட்ட சில நாட்களிலேயே பல்வேறு தீர்வுகளை நாங்கள் வழங்கு வோம்” என்றும் அநுர குமார தெரிவித்தாா். https://www.ilakku.org/இன-நெருக்கடி-தீா்வுக்கு/
  7. யு ரியூப்பர்களின் காலத்தில் தேசமாகச் சிந்திப்பது! நிலாந்தன். adminMarch 17, 2024 பார்க்க ஆசையா இருக்கு எண்டாலும் மனதில ஒரு கவலை இருக்கு கடத்த ஒன்பதாந் திகதி வெடுக்குநாறி மலையில் சிவ பூசைக்குள் போலீஸ் புகுந்தது. எட்டுப் பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் சிறை வைக்கப்பட்ட அடுத்த நாள், 10ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்ற வெளியில் விமானப்படைக் கண்காட்சியின் கடைசி நாளன்று, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே திரண்டார்கள். அங்கு திரண்ட சனத்தொகை சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வில் திரண்ட தொகைக்குக் கிட்ட வரும் என்று கூறப்பட்டாலும், அது ஒரு மிகை மதிப்பீடு என்று கருதப்படுகின்றது. எனினும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டார்கள் என்பது மட்டும் உண்மை. தமது மரபுரிமைச் சொத்து ஒன்று ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், தமது வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்துவதற்காகவும் வெடுக்குநாறி மலையில் போராடிக் கொண்டிருக்கும் அதே மக்கள் மத்தியில் இருந்துதான் முற்ற வெளிக்கும் ஆட்கள் போனார்கள். இந்த முரண்பாட்டை எப்படி விளங்கிக் கொள்வது? வெடுக்கு நாறி மலைக் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர், முற்றவெளிக்குப் போன மக்களைக் கடுமையாக விமர்சித்தார். 15 ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை மறந்து முற்றவெளிக்குப் போன மக்கள் மீது அவருக்குக் கோபம். அந்தக் கோபம் நியாயமானது. ஆனால் அதைவிட ஆழமான, நியாயமான ஒரு கேள்வி உண்டு. அது என்னவெனில், தமது சொந்த அரசியலின் மீதும் நேரடியான மற்றும் மறைமுக ஒடுக்குமுறைகளின் மீதும் தமிழ் மக்களின் உணர் திறனை விழிப்பை அதிகப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் எந்தக் கட்சியிடம் உண்டு? ஒரு மக்கள் கூட்டத்தின் பொதுப் புத்தி அப்படித்தான் இருக்கும். அது வாழ்க்கையைக் கொண்டாடக் கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் தேடிப் போகும். மக்களுக்கு பொழுது போக வேண்டும். அதுதான் அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பண்ணை வெளிக்கு வருகிறார்கள். யாழ்ப்பாணத்தின் ஏனைய உல்லாசத் தலங்களுக்குப் போகின்றார்கள். வசதி குறைந்தவர்கள் பண்ணைக்கும் ஏனைய சிறு பூங்காக்களுக்கும் போகின்றார்கள். வசதி கூடியவர்கள் யாழ்ப்பாணத்தின் நட்சத்திர அந்தஸ்துடைய விருந்தினர் விடுதிகளுக்கு போகின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்பு வரும்பொழுது தங்கள் சொந்தக்காரர்களின் வீடுகளில் தங்குவதுண்டு. இப்பொழுது கணிசமானவர்கள் விருந்தினர் விடுதிகளில் தங்குகிறார்கள். அதற்காக லட்சக்கணக்கில் செலவழிக்கின்றார்கள். அதாவது சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் இருப்பவர்கள் தங்கள் தங்கள் நிதித் தகமைக்கு ஏற்ப வாழ்க்கையைக் கொண்டாட விரும்புகிறார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வாழ்க்கையைக் கொண்டாட விரும்பும் அநேகருக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் ஒரு முன்னுதாரணம். மூன்றாவது புலப்பெயர்ச்சி அலைக்கு அது பிரதான காரணம். இப்படியாக வாழ்க்கையைக் கொண்டாட ஆசைப்படும் ஒரு மக்கள் கூட்டத்தை அவர்களுடைய சொந்த அரசியலின் மீது உணர்திறண் மிக்கவர்களாக மாற்றுவது எப்படி? அதை யார் செய்வது? விமானப்படைக் கண்காட்சிக்கு வந்த ஒரு நோர்வேத் தமிழர் கூறுகிறார் “பார்க்க ஆசையா இருக்கு, எண்டாலும் ஒரு கவலை இருக்கு மனதில ” என்று. ஆசையாக இருக்கிறது என்பது வாழ்க்கையை கொண்டாட ஆசையாக இருக்கிறது என்று பொருள். கவலை இருக்கிறது என்பது இறந்த காலத்தில் தமிழர்கள் பட்ட துயரங்களை நினைக்கும் போது ஏற்படுவது. ஆனால் அது இறந்த காலமல்ல, நிகழ்காலமுந்தான். அதனால்தான் வெடுக்கு நாறி மலையில் போராட வேண்டியிருக்கிறது; மயிலத்தமடுவில், மாதனையில் போராட வேண்டியிருக்கிறது; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. போர் ஒரு விளைவு மட்டுமே, மூல காரணம் அல்ல. ஒடுக்கு முறைதான் மூல காரணம். அது இப்பொழுதும் உண்டு. எட்டுப் பேர் கைது செய்யப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் முற்றவெளிக்குப் போயிருக்கிறார்கள். அங்கே படையினர் பரசூட்டில் இறங்குவதைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். உலங்கு வானூர்தியில் ஏறுவதற்காக முண்டியடிக்கிறார்கள். அதைப் பெரும்பாலான யு ரியூப்பர்கள் கவர்ச்சியாக விற்கிறார்கள். இது யுடியூப்பர்கள் காலம். வாசிப்பதற்கான பொறுமை குறைந்து வருகின்றது. கேட்பதற்கான தாகம் அதிகரித்து வரும் ஒர் ஊடகச் சூழல். யுடியூப்பர்கள் எத்தனை பேர் தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்? தான் பரப்புவது வதந்தியா செய்தியா என்று எத்தனை யுடியூப்பர்களுக்குத் தெரியும்? எத்தனை யுடியூப்பர்கள் தமிழுக்கு வெளியே போய் வாசிக்கின்றார்கள்? எத்தனை யுடியூப்பர்கள் தாங்கள் வெளியிடும் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறார்கள்? இதை இன்னும் கூர்மையாகக் கேட்டால் ஒரு யுடியூப்பருக்கு என்ன தகைமை இருக்க வேண்டும்? ஒரு நல்ல கமராவும் வேகமான இன்டர்நெற்றும் இருந்தால் மட்டும் போதுமா? தாங்கள் கூறும் விடயத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு எத்தனை யுடியூப்பர்களுக்கு உண்டு? கடந்த சுதந்திர தினத்தன்று, ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அவருடைய வருகைக்கு எதிராக கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் பழைய பூங்கா வீதியில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்த வீதியின் குறுக்கே போலீஸ் ஒரு பேருந்தை நிறுத்தி வைத்திருந்தது. அவ்வாறு பழைய பூங்கா வீதி முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதை எதிர்த்து அந்த வீதி வழியாக காரில் வந்த ஒருவர் போலீசாரோடு முரண்படுகிறார். அது தொடர்பாக ஒரு யுடியூப்பர் செய்தி வெளியிடுகையில் “காரில் வந்த இந்தியர், பார்த்து மிரண்ட இலங்கை போலீஸ்” என்று தலைபிடுகிறார். அக்காணொளி ஆறு லட்சத்து எட்டாயிரம் பேர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் பொலிசாரைக் கேள்வி கேட்கும் நபர் ஒர் இந்தியர் அல்ல. சுயாதீன திருச்சபை ஒன்றின் பாஸ்டர். அவருடைய காரின் “டாஷ் போர்ட்” பகுதியில் இந்திய தேசியக்கொடி காணப்படுகின்றது. அதை வைத்து அவர் ஒரு இந்தியர் என்று யுரியூப்பர் கூறுகிறார். ஆயின்,ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் அந்தப் பொய் சென்று சேர்ந்திருக்கின்றதா? இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்ட பொழுது ஓர் இந்திய யுடியூபர் கூறினார், வெள்ளைக்காரர்கள் வாங்கி வைத்திருக்கும் பாணை உள்ளூர் மக்கள் பறித்துக் கொண்டு ஓடுவதாக. அது ஒரு பொய். பெரும்பாலான யுரியூப்பர்கள் தமது காணொளிகளைப் பார்பவர்களின் தொகையை எப்படி கூட்டுவது என்று தான் சிந்திக்கிறார்கள். பார்ப்பவர்களின் தொகை கூடக்கூட வருமானம் பெருகும். எனவே பெரும்பாலானவர்கள் உழைப்பை எப்படிப் பெருக்குவது என்றுதான் சிந்திக்கின்றார்கள். இது ஓர் ஆபத்தான வளர்ச்சி. யு ரியூப்பர்களின் காலத்தில் உண்மை எது? பொய் எது? ஊடக அறம் எது? உழைப்பு மட்டும்தான் யூரியுப் தர்மமா? சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு, தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு யு ரியூப்பர்ளுக்கு இல்லையா? வாசகரை அல்லது பார்வையாளரை விமர்சனபூர்வமாகச் சிந்திக்கும் விழிப்புடைய பிரஜைகள் ஆக்குவதே தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகவியலாளரின் வேலை. எனவே யுடியூப்பர்களின் காலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவது எத்தனை சவால்கள் மிக்கது என்பதனை விமானப்படை கண்காட்சி தொடர்பாக வெளிவந்த பெரும்பாலான யுடியூப்கள் மீண்டும் நிரூபித்தன. இது அரசியல் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பணி மேலும் கடினமாக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இப்படிப்பட்டதோர் ஊடகச் சூழலில், முற்றவெளியில் திரளும் மக்களைத் திட்டித் தீர்ப்பதனால் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது. தமது சொந்த அரசியலின் மீது அந்த மக்களை எப்படி உணர் திறண் மிக்கவர்களாக மாற்றுவது என்று கட்சிகள் சிந்திக்க வேண்டும். அதற்கு வேண்டிய வழிவகைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். தேசியவாத அரசியல் என்பது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது. தேசத்தை கட்டியெழுப்பும் கலையை; பண்பாட்டை; அறிவியலை; தேசத்தைக் கட்டியெழுப்பும் யுடியூப்பர்களை; தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இப்படி எழுதுவதுகூட சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கலாம். ஏனென்றால் வான்படைக் கண்காட்சி தொடர்பாக படித்தவர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களில் அதைக் காண முடிந்தது. எல்லா பிரச்சினைகளும் முடிந்து விட்டன; நாங்கள் இப்பொழுது சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்; கண்டதையும் எழுதிக் குழப்பாதீர்கள்; மக்கள் சந்தோஷமாக இருக்க விரும்புகிறார்கள்; அவர்களை மீண்டும் பலியாடுகள் ஆக்காதீர்கள்… என்று கூறும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. மக்களைத் தமது நிகழ்காலத்தின் மீது உணர் திறண் மிக்கவர்களாக மாற்ற முற்படும் எழுத்துக்களுக்கு வாசிப்பும் வரவேற்பும் குறைந்து வருகிறது. பதிலாக மாயைகளின் மீதும் பொருளற்ற மகிழ்ச்சியின் மீதும் பொய்களின் மீதும் கட்டுக் கதைகளின் மீதும் தாகம் கொள்ளச் செய்யும் ஊடக கலாச்சாரம் மேலெழத் தொடங்கிவிட்டது. வெறுப்பர்கள்-haters-எல்லாவற்றையும் எதிர்மறையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சில மாத கால இடைவெளிக்குள் யாழ்ப்பாணம் முற்ற வெளியில் மக்கள் பெருந்திரளாகக் கூடிய நிகழ்வுகளிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகமும் புத்திஜீவிகளும் கலைஞர்களும் ஊடகங்களும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆழமான வாசிப்புக் குறைந்து, ஆழமான யோசிப்பும் குறைந்து,மேலோட்டமானவைகளை நோக்கி மொய்க்கும் ஒரு ஜன சமுத்திரத்தை புதிய ஊடக மரபு உற்பத்தி செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் புதிய வளர்ச்சிகளின் பின்னணியில் “டீப் ஃபேக்” – deepfake- என்று அழைக்கப்படும் ஆழமான போலி உருவாக்கப்படுகின்றது. அது ஒரு வெகுசனப் பண்பாடாக வளர்க்கப்படுகிறது. ஆழமான பொய்களின் மத்தியில்; மறதி அதிகமுடைய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில்; தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. https://www.nillanthan.com/6615/
  8. தமிழரசுக் கட்சியிடம் இரண்டு யாப்பா?? March 16, 2024 — கருணாகரன் — நீதிமன்ற வழக்கை முடித்துக் கொண்டு வெளியேறினாலும் தமிழரசுக் கட்சிக்குப் பிரச்சினைகளும் தலையிடியும் மேலும் மேலும் கூடுமே தவிர, குறைந்து விடாது. அதற்கு உள்ளும் புறமுமாகக் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அணையுமென்றில்லை. அது நீண்ட நாட்களாகத் தொடர்ந்து கனன்று கொண்டிருந்த தணலின் விளைவு. முதலில் அதனுடைய யாப்புத் தொடர்பான பிரச்சினை. “தேர்தல் திணைக்களத்திற்குக் கொடுக்கப்பட்ட – காட்டப்பட்ட – யாப்பு வேறு. கட்சியின் நடைமுறையில் உள்ள யாப்பு வேறு” என்று ஒரு வலிமையான குற்றச்சாட்டு கட்சியின் முக்கியமான உறுப்பினர்களிடையே உண்டு. இதனால் ஏற்பட்ட சிக்கலே இப்பொழுது நீதிமன்றம் வரையில் செல்லும் நிலையை ஏற்படுத்தியது. அதாவது சட்டபூர்வமான யாப்பு ஒன்றாகவும் கட்சியின் நடைமுறைகளின்போது பின்பற்றப்படும் யாப்பு இன்னொன்றாகவும் இருந்துள்ளது என்று இது பொருள்படும். ஏறக்குறைய எழுதப்படாத இரண்டாவது யாப்பின்படியே (நழுவல் யாப்பு) காரியங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதற்கு அண்மைய உதாரணம், மத்திய செயற்குழுவினரும் ஒவ்வொரு தொகுதிக் கிளையிலும் தெரிவு செய்யப்பட்ட ஐந்து உறுப்பினரும் பொதுச்சபை உறுப்பினராவர். இதற்கமைய ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஐந்து உறுப்பினர்களே பொதுச்சபை உறுப்பினர்கள். இதன்படி 25 தொகுதியிலும் 125 உறுப்பினர்கள். மத்திய குழு உறுப்பினர்கள் 41. எனவே மொத்தம் 166 உறுப்பினர்களே பொதுச் சபை அங்கத்தவர்கள் ஆகும். (விதி 07 (ஆ)) ஆனால் தலைவர் தெரிவின்போது 321பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கின்றார்கள். இது எப்படி நடந்தது? இதுதான் தமிழரசுக் கட்சியினுடைய யாப்பின் விசித்திரம். தலைமையின் சிறப்பு. மேலும் சொல்வதென்றால், யாப்பு விதியின்படி தலைவர் தெரிவின் பின்னரான அனைத்துத் தெரிவுகளையும் புதிய தலைவரின் தலைமையில் பொதுச்சபையே தீர்மானித்திருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் மத்தியசெயற்குழு கூட்டப்பட்டு பதவிநிலைகள் தீர்மானிக்கப்படும் என்றோ அதற்கு பொதுச்சபையிடத்தில் அனுமதி பெறும் முறைமையொன்று யாப்பில் கூறப்படவில்லை. ஆனால், இதையெல்லாம் மீறியே செயலாளர் தெரிவு உட்பட ஏனைய விடயங்கள் நடந்தன. ஏறக்குறைய புதிய தலைமை உட்பட நிருவாகத்தெரிவு விடயத்தில் யாப்பைக் கடந்து 15 க்கும் மேற்பட்ட விடயங்களை சென்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “எல்லாத்துக்கும் நாங்கள் யாப்பை வைத்துத்தான் செயற்பட வேண்டுமென்றில்லை” என்று அதனுடைய தலைவர் மாவை சேனாதிராஜா இந்த நெருக்கடிகளின்போது சொன்னதை இங்கே நினைவு கொள்ளலாம். தமிழ் மக்களின் மிகப் பெரிய கட்சி, பாரம்பரியம் மிக்க கட்சியின் நிலைமையையும் நடத்தைச் சிறப்பையும் பார்த்தீர்களா? இப்படிச் சொன்ன மாவைக்கு நீதிமன்றம் தக்க பாடம் படிப்பித்துள்ளது. ஆம், இது போன்ற தவறுகளால் யாப்பு, இப்பொழுது கட்சிக்கே ஆப்பு வைத்துள்ளது. அதாவது யாப்பின் பலவீனங்களும் யாப்பைப் பலவீனப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட தலைமை உறுப்பினர்களின் செயல்களும் கட்சியை முடக்கும் நிலைக்குள்ளாக்கியுள்ளன. கட்சியைச் சந்தி சிரிக்க வைத்துள்ளன. யாப்புத் தவறுகளை முன்னிறுத்தியே யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் கட்சிக்கு எதிரான வழக்குகள் யாப்பு விதிகளை வலியுறுத்தும் தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சிக்குள் ஏராளம் சட்டவாளர்கள் உள்ளனர். கட்சியின் உருவாக்குநர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம், திருச்செல்வம், நாகநாதன் தொடக்கம் சம்மந்தன், சுமந்திரன், தவராஜா வரையில் பல சட்டவாளர்கள். இருந்தும் யாப்புக் குழப்பமும் குறைபாடுகளும் நீடிக்கிறது என்றால் பதவியில் குறியாக இருப்பதைப்பற்றியே ஒவ்வொருவரும் சிந்திக்கின்றனரே தவிர, கட்சியின் எதிர்காலத்தையோ மக்கள் நலனையோ அல்ல என்பது தெளிவாகிறது. இந்தத் தவறுகளிலிருந்தும் இந்தப் போக்கிலிருந்தும் தமிழரசுக் கட்சி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அது எளிய விசயமல்ல. அப்படிச் செய்ய வேண்டும் என்றால் கட்சியின் தலைமைப் பதவியிலிருப்போரும் மூத்த தலைவர்களும் தங்களைச் சுய விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும். கூடவே பல நிலைகளில் விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டும். அதாவது தகிடு தத்தங்களைக் கைவிட்டு, கட்சியை நேர்மையாக வழிநடத்த வேண்டும். யாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுவதுடன், அதிலுள்ள குறைபாடுகளும் களையப்பட வேண்டும். இதற்கு யார் தயார்? அடுத்தது, வாய்ப்பேச்சு அரசியலிலிருந்து விடுபட்டுச் செயற்பாட்டு அரசியலில்தமிழரசுக்கட்சி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இதனை “சூனிய அரசியல்” என்று சொல்கிறார், விடுதலை இயக்கமொன்றில் செயற்பட்ட சார்ள்ஸ் என்ற மூத்த போராளி. தமிழரசுக் கட்சியின் அரசியல் போதாமைகளை – அதனுடைய வளர்ச்சியின்மையைப் பார்க்க வேண்டும் என்றால் 1960, 1970 களின் சுதந்திரன் பத்திரிகையையும் இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் பேச்சுகளையும் கவனித்தால் இது தெரியும். அன்றும் இன்றும் அது வெறும் பிரகடனங்களை (பீத்தல்களை) வாய்ச்சவடால்களாக அடிப்பதையே தன்னுடைய அரசியல் முறைமையாகக் கொண்டுள்ளது. அது அரசாங்கத்துக்கு 50 ஆண்டுகளாக விடுத்த எந்த எச்சரிக்கையும் கண்டனமும் பதிலடியும் விளைவுகளை உண்டாக்கியதில்லை. பதிலாக அவற்றைக் குறித்து மக்கள் சிரிக்கும் நிலையே உருவாகியது. அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் சிரிப்பதற்கான பகடியாக இருந்தது – இருக்கிறது. என்பதால்தான் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசும்போது சிங்கள உறுப்பினர்கள் அதைப் பொருட்படுத்துவதுமில்லை. அவர்கள் அங்கே இருப்பதுமில்லை. இவர்கள் தமிழ்ப்பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காகவே பேசுகிறார்கள் என்பார் நண்பர் ஒருவர். இதுதுான் இறுதியில் தீபாவளிக்குத் தீர்வு, பொங்கலுக்குத் தீர்வு என்று தலைவர் சம்மந்தன் சொன்னதை வைத்துச் சம்மந்தனையே பகடி செய்யத் தொடங்கினர் சனங்கள். ஆழ்ந்து நோக்கினால் தமிழரசுக் கட்சியின் கையாலாகத்தனத்தை இதில் தெளிவாக உணரலாம். அது வந்து கோமாளித்தனமான தலைவர் தெரிவு வரையில் வந்து சீரழிவில் நிற்கிறது. ஆகவே 75 ஆண்டுகால அரசியற் பயணத்தில் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு எத்தகைய அரசியல் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தது? தமிழ் மக்களுடைய அரசியல், பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்கும் நிலப் பாதுகாப்புக்கும் என்ன வகையிலான பங்களிப்புகளைச் செய்தது? அவற்றின் விளைவுகள் எவ்வாறான நற்பலன்களை விளைத்துள்ளன? போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதேசங்களையும் அது மீள்நிலைப்படுத்தியுள்ளதா? அப்படியென்றால் அதை அது எப்படிச் செய்யது? எங்கே செய்தது? குறைந்த பட்சம் போருக்குப் பிந்திய அரசியலையும் சமூகத்தையும் எப்படிக் கட்டமைத்தது? முன்னெடுத்தது? என்றும் கணக்கிட வேண்டும். கட்சியும் அதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அந்தக் கட்சியை ஆதரிப்போரும் இருக்குப் பதிலளிக்க வேண்டும். அந்தக் கடப்பாடு இன்று தவிர்க்க முடியாமல் உருவாகியுள்ளது. குறைந்த பட்சம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய மறுவாழ்வுப் பணிகளிலும் யுத்த அழிவுப் பிரதேசங்களை மீளுயிர்ப்புச் செய்வதிலும் அது ஆற்றிய பணிகள் என்ன? அதனுடைய பெறுமானங்கள் – அடையாளங்கள் என்ன என்றபது அவசியமாக அது தெளிவுபடுத்த வேண்டும். மூத்தகட்சி, பெரிய கட்சி என்ற அடிப்படைத் தகுதியை அது கொள்வதாக இருந்தால் இன்று உலகமெங்கும் பரவிப் பலமடைந்திருக்கும் புலம்பெயர் மக்களை அது ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். அதைப்போல அது, தன்னுடைய ஒழுங்கமைப்பின் கீழும் ஒருங்கிணைப்பிலும் ஏனைய தமிழ்க்கட்சிகளைச் சேர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், அதற்கு எதிராக, ஏற்கனவே ஒருங்கிணைந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சிதைத்தது. தமிழரசுக் கட்சியின் ஜனநாயக மறுப்பும் எதேச்சாதிகாரப் போக்குமே ஏனைய பங்காளிக் கட்சிகள் விலகிச் செல்லக் காரணமாகின. இதையெல்லாம் யார் மறுக்க முடியும்? இப்படிச் செயற்பாடு எதுவுமே இல்லாமல், எதிர்மறையாக மக்களுக்கும் சமூகத்துக்கும் விளைவுகளை – பாதிப்புகளை உண்டாக்கும் கட்சியை எளிதில் சீராக்க விட முடியாது. அதற்கு மிகப் பெரிய அளவில் மாற்றத்தை உள்ளேயும் வெளியேயும் உருவாக்க வேண்டும். இதற்கு அது தன்னுடைய வெற்றுப் பிரகடனங்களிலிருந்து விடுபட வேண்டும். மக்களையும் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் ஏமாற்றும் அரசியலைக் கைவிட வேண்டும். தன்னை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். உழுத்துப் போன வீட்டை அல்லது கட்டிடத்தை நாம் இடித்துப் புனரமைப்பதில்லையா? அப்படி முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். சொந்த வாழ்க்கையில் நாம் தேவையற்றதையெல்லாம் கழித்து ஒதுக்கி விட்டு, புதியவைகளை வாங்கிக் கொள்கிறோம். அல்லது உருவாக்கிக் கொள்கிறோம். அது வீடாக இருக்கலாம். பொருட்களாக இருக்கலாம். துணிமணிகளாக இருக்கலாம். ஏன், மிகப் பெறுமதியான நகைகளாகக் கூட இருக்கலாம். காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைப்பது அவசியமானது. வேண்டப்படும் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இன்னும் அது தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாகப் பேராதரவோடு இருக்கிறது என்றால்…. தமிழ் மக்களின் அரசியற் தலைவிதியை என்னவென்று சொல்வது? அவர்களுடைய அரசியல் அறிவை, புத்திஜீவித்தனத்தை எப்படிக் கூறுவது? அடுத்தது, தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்துக்கான அரசியலைப் பற்றியது. தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு வகையான அரசியற் போக்குண்டு. 1. சம்மந்தன், சுமந்திரன், குகதாசன் போன்றோர் முன்னெடுக்கின்ற ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற வகையிலான அரசியல். இதற்காக அவர்கள் முஸ்லிம், மலையக, சிங்களத் தரப்பினரோடும் ஒரு மென்னிலை இணக்கப்பாட்டு உறவைப் பேணி வருகின்றனர். கூடவே விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தீவிர நிலைப்பாட்டை தவிர்க்கின்றனர். இதைப்பற்றி தலைவர் தெரிவு நடைபெற்ற பிறகு ஊடகவியலாளர் சிவராஜாவுக்கு வழங்கிய யுடியூப் நேர்காணலில் திரு சுமந்திரன் தெளிவாகவே சொல்கிறார். தலைவர் தெரிவில் தான் தோற்றிருந்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டை விட்டு விடப் போவதில்லை என. அது சரியானது என்றும் அவர் வாதிடுகிறார். இதனால்தான் அவர் தனியே உலக நாணய நிதியத்தின் நிதிப் பயன்பாடு பற்றிய அரசாங்கத்தின் உரையாடலில் துணிவாகச் சென்று பங்கேற்றுள்ளமையும் நிகழ்ந்திருக்கிறது. 2. சிறிதரன், மாவை, அரியநேத்திரன், சிறிநேசன் போன்றோர் முன்னெடுக்கும் தீவிரத் தமிழ்த்தேசியவாத அரசியல். இதற்கான செயல்வடிவத்துக்கு அப்பால், இவர்கள் விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி தாமே என்று கருதிக் கொண்டு மேற்கொண்டு வரும் தனியாவர்த்தனம். இதுவரையிலும் கூட இந்த இரண்டு போக்கும் கட்சிக்குள்ளிருந்தன. ஆனால் இப்போதுள்ளதைப்போல அதுவொரு பெரிய வெடிப்பாக வரவில்லை. இந்த இரண்டு போக்குகளையும் பயன்படுத்தி அரசியல் அறுவடையைத் தமிழரசுக் கட்சி செய்து வந்தது. சிறிதரன் புலிக்கொடியை ஏந்துவார். சம்மந்தன் சிங்கக் கொடியைத் தூக்குவார். புலிகளை ஆதரிப்போரின் வாக்குகளும் அதற்குக் கிடைத்தன. அவர்களை எதிர்ப்போரின் வாக்குகளும் கிடைத்தன. இதற்கான முடிவு ஏறக்குறைய வந்துள்ளது எனலாம். அடுத்தது, இப்போதுள்ள நிலையில் சிறிதரன் அணி மீண்டும் (நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு) தலைமையேற்றால் இன்னொரு பிரச்சினை தமிழரசுக் கட்சிக்குண்டு. சிறிதரன் மேற்கொள்கின்ற அதே தீவிர அரசியலையே கஜேந்திரகுமாரின் அணியும் மேற்கொள்கிறது. ஆகவே இரண்டு தரப்பும் களத்தில் நேருக்கு நேர் மறுபடியும் மோதக் கூடிய நிலை ஏற்படக் கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. இது முன்னொரு காலம் அகில கஜேந்திரகுமாரின் பாட்டனாரான ஜீ.ஜீ. பொன்னம்பத்தின் இலங்கைத் தமிழ்க்காங்கிரசும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மோதியதைப்போன்றிருக்கும். ஆனால் அன்று வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் மோதல் நடந்தது. அதனால் ஜீ.ஜீ. தோற்றார். செல்வநாயகம் வென்றார். இங்கே இருதரப்பும் ஒரே நிலைப்பாட்டில் மோதப் போகிறது. ஆகவே இது மீளவும் தமிழரசுக் கட்சிக்கு இன்னொரு நெருக்கடியாகவே இருக்கும். அதேவேளை அது இந்த நிலைப்பாட்டில் இருந்தால் தமிழ்ச்சமூகம் மேலும் நெருக்கடியைச் சந்திப்பதோடு, நாட்டிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கையை மேலும் கூட்டும். சுமந்திரன் தரப்பு வெற்றியடைந்தால் அதுவும் நெருக்கடியைச் சந்திக்கும். இனப்பிரச்சினையைத் தீர்ப்பது – அரசியற் தீர்வைக் காண்பது தொடக்கம் தமிழ்ச்சமூகத்தை பொருளாதாரம் உட்பட அனைத்துத் தளங்களிலும் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இது எளிதான விசயமல்ல. இதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும். ஆகவே தமிழரசுக் கட்சிக்கு தொடர் நெருக்கடிகளும் தவிர்க்கவே முடியாத கடப்பாடுகளும் (பொறுப்புகளும்) வரலாற்று ரீதியாக வந்து சேர்ந்துள்ளன. இனியும் அதனால் முன்னரைப்போல சுழித்தோட (தப்பியோட) முடியாது. பொறுப்புச் சொல்லியே ஆக வேண்டும். https://arangamnews.com/?p=10549
  9. உண்மை. ஆசாரவாதிகள் அவர்கள் நாட்டில் இருந்து புறப்பட்ட காலத்திலேயே உறைந்துவிட்டவர்கள். சமூக முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் மிகவும் குறுகிக்கொண்டுதான் போகின்றனர். காலம் அவர்களைக் காணாமல் போகச் செய்யும். இரண்டாவது காணொளியில் பவனீசனை உற்சாகமாகப் பேசவைக்கும் அளவிற்குத் தமிழர்களில் முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் அதிகமாக உள்ளனர்.
  10. மன்னாாில் காற்றாலை மின்சார திட்டம் – கொழும்பில் அதானி நிறுவனத்துடன் பேச்சு March 16, 2024 காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனத்துக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம செயல்பாட்டு அதிகாரியுமான அனில் சர்தானா ஆகியோர் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்துள்ளனர். மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவாட் காற்றாலை ஆற்றல் மின் உற்பத்தி திட்டத்துக்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக அதானி கிரீன் எனர்ஜியின் அதிகாரிகள் இலங்கை வந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜே சேகர குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் மன்னாரில் 250 மெகாவாட் மின்சாரமும், பூநகரியில் 234 மெகாவாட் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.ilakku.org/மன்னாாில்-காற்றாலை-மின்ச/
  11. தயாசிறி ஜயசேகர எம்.பியின் தலைமையில் புதிய கூட்டணி – 20 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு March 16, 2024 சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு – லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நாற்பது சிவில் அமைப்புகள் இந்த புதிய கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அன்றைய தினம் இந்த புதிய கூட்டணியுடன் சில ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, புதிய கூட்டணியின் கொள்கைகளுக்கு பிரதான கட்சியொன்று இணங்கும் பட்சத்தில், குறித்த கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாத நிலையில், தேசியத் தேர்தலில் மனிதநேய மக்கள் கூட்டணி சார்பில் அதன் தலைவர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய கட்சிகளுக்குள் ஏற்கனவே உட்கட்சி பூசல் காணப்படும் நிலையில், இந்த புதிய கூட்டணியில் பலர் இணைவதற்கான சாத்தியம் உள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/தயாசிறி-ஜயசேகர-எம்-பியின/
  12. போதமும் காணாத போதம் – 23 அம்மாவை விசாரணைக்கு வருமாறு வற்புறுத்தினார்கள். சனங்கள் திரண்டனர். வீட்டில் வைத்தே விசாரிக்குமாறு வன்கவர் வெறிப்படையினரிடம் கூறினார்கள். ஆனால் அவர்களோ தரையோடு தரையாக பலாத்காரமாக அம்மாவை இழுத்துச் செல்லவும் தயாராக இருந்தார்கள். வீட்டிலிருந்த மிகச் சொற்பமான சாமான்களையும் கிண்டிக்கிளறி எறிந்தனர். முள்ளிவாய்க்காலில் உயிரைத் தவிர எல்லாவற்றையும் இழந்த பின்பும், எம்மிடமிருந்து எதனைப் பறிக்க நினைத்தார்கள்? மீளக்குடியமர்த்தப்பட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் இப்படியான வன்முறைகள் அப்பாவிச் சனங்கள் மீது தொடர்ந்தன. வீட்டின் பின்புறமிருந்த சிறிய கோவிலுக்குள் சென்றனர். அதற்குள் எதுவுமில்லை. மூலஸ்தானத்திலிருந்த சிறிய கலசத்தை தன்னுடைய காலணியால் ஓங்கி உதைந்த, வன்கவர் வெறிப்படை வீட்டிலிருந்து அம்மாவை கூட்டிச்சென்றது. விசாரணை முடிந்ததும் அனுப்பி வைப்போமென என்னிடம் சொன்னார்கள். அம்மாவின் முகத்தில் வாட்டமில்லை. கண்களில் தீயின் நிழல். என்னை அழைத்து முத்தமிட்டு “அம்மா திரும்ப வந்திடுவன். நீ பசி கிடக்காமல் சாப்பிடு. தவறாமல் கோவிலுக்கு ஒரு பிடி அரிசி படை” என்றாள். அம்மா என்னிலிருந்து வெகுதூரத்தில் மறையும் வரை, வீதியிலேயே நின்றேன். சனங்கள் பதற்றத்தில் ஏதேதோ சொல்லினர். அன்றிரவு கோவிலுக்குள் நுழைந்து சாதுவாய் நெளிந்திருந்த கலசத்தை சரியாக்கினேன். ஒரு பிடி அரிசியை எடுத்து படைத்தேன். அம்மாவை நினைத்துச் சொல்லியழ எவருமில்லாது தனித்திருந்து தீபத்தை ஏற்றினேன். சொந்தக்காரர்கள் வந்து ஆறுதல் சொல்லிப்போயினர். அம்மாவின் நிலையறிய அரச உத்தியோகத்தர்களின் உதவியைத் தேடி சிலர் சென்றனர். எதுவும் துணைக்கு வராது விலகின. கோவில் வாசலிலேயே படுத்திருந்தேன். வணங்கிச் செல்பவர்களுக்கு ஒரு பிடி அரிசியை வழங்கிவிட்டு அங்குதான் அம்மாவுக்காக காத்திருந்தேன். மூன்றாவது நாள் மாலைப்பொழுதில் அம்மா வீட்டிற்கு வந்தாள். சனம் கூடித் திரண்டது. எதற்காக விசாரணை? என்ன கேட்டார்கள்? என்றெல்லாம் அறிய முண்டியடித்தனர். “இயக்கத்தின் ஆதரவாளராக நீங்கள் இருந்தீர்களா?” என்று கேட்டார்கள். “இயக்கம் இல்லாத இன்றைக்கும் ஆதரிக்கிறேன். என்றைக்கும் ஆதரிப்பேன்” என்றேன். “உங்களுக்குத் தெரிந்து ஆயுதங்கள் எங்கேயோ புதைக்கப்பட்டிருப்பதாக தகவல், எங்கேயென்று சொல்லுங்கள்” என்றனர். “அப்படி எதுவும் எனக்குத் தெரியாது” என்றேன். பொய் சொல்லாதீர்களென அடித்தார்கள். வதைத்தார்கள். ஒரு தகரத்தில் உப்பைக்கொட்டி அதன் மீது கட்டிப்போட்டார்கள். நீங்கள் கேட்பது எதுவும் எனக்குத் தெரியாதென சொல்லிக்கொண்டிருந்தேன். அதனை அவர்கள் நம்பிக்கொள்ள மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அவ்வளவுதான் என்றாள். அம்மா கலசத்திற்கு நீரள்ளி ஊற்றினாள். மண்ணால் கழுவி மண்ணெடுத்துச் சாற்றினாள். பூசை செய்வித்து எல்லோருக்கும் நெற்றியில் மண்ணைப் பூசினாள். எல்லோரும் சென்றதற்கு பிறகு நானும் அம்மாவும் அமர்ந்திருந்து கதைத்தோம். அவள் தன்னுடைய முதுகைக் காண்பித்தாள். தோலுரிந்த சிகப்புக் காயங்கள். முள்ளுக்கம்பியால் அடித்து இழுத்தார்கள் என்றாள். மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் குழைத்து காயத்தில் இட்டேன். “அம்மா உங்களை நன்றாக கொடுமைப்படுத்தி விட்டார்கள்” என்றேன். அவள் எதுவும் கதையாமல் உறைந்திருந்தாள். அன்றிரவு முழுவதும் அம்மாவை இறுகக் கட்டியணைத்து உறக்கமில்லாது விழித்திருந்தேன். அம்மா புரண்டு படுக்க முடியாமல் தவித்தாள். நோவும், கொதிப்பும் உடலை ஆக்கிரமித்திருந்தது. “ஆர்மிக்காரங்களுக்கு ஏதோவொன்று அரசல்புரசலாய் போயிருக்கு, அதுதான் தேடி வந்திருக்கிறாங்கள்” என்றாள். “அப்பிடி என்னத்தையம்மா நாங்கள் மறைச்சு வைச்சிருக்கிறம்” கேட்டேன். “விஷயம் அதுவில்லை. அவங்களுக்கு எப்பிடி சந்தேகம் வந்தது. எப்பிடி என்னை நெருங்கினவங்கள் எண்டுதான் யோசனை. அப்பா ஆரோ ஒருத்தன் அவங்கட பிடிக்குள்ள இருக்கிறான்” என்றாள். அம்மா சுயநினைவற்று ஏதேதோ கதைத்தாள். அவளை இறுக்கி கட்டியணைத்து அம்மா…அம்மா எனக்குப் பயமாயிருக்கு என்று சொல்லியும் கதைப்பதை நிறுத்தவில்லை. ஆங்காரமாய் படுக்கையிலிருந்து எழுந்தவள், எனது கையைப் பிடித்திழுத்தபடி கலச கோவிலுக்கு ஓடினாள். தீப விளக்குகள் காற்றில் அசையாமல் நின்றிருந்தன. அம்மா உள்ளே நுழையாமல் “ஆரது, எனக்குச் சொல்லு” என்றாள். உள்ளிருந்த ஓருருவம் தனது கைகளை வெளியே நீட்டியது. இடது கையின் நடுவிரல்கள் மூன்றுமற்றிருந்தது. அறம்பாவை அத்தையின் கைகள். அம்மா, மீண்டும் “ஆரது சொல்லு” என்றாள். அறம்பாவை அத்தை எதுவும் சொல்லவில்லை. அம்மா ஒரு பிடி அரிசியை எடுத்துவந்து கலசத்தின் முன்னே படைத்தாள். அறம்பாவை அத்தையின் கை அரிசி வரை நீண்டு வந்தது. முள்ளிவாய்க்காலிலும் அம்மாவுக்கு நெருக்கமானவர்கள் பலர் வீரச்சாவு எய்தினர். கொழிஞ்சி, திகழினி, நிலான், வெள்ளையன், முல்லை, தென்னவன் என இழப்புக்களின் பெருக்கு. பொலித்தீன் பைகளுக்குள் அடைக்கப்பட்ட வித்துடல்களுக்கு சனங்கள் மரியாதை செலுத்தினர். மிஞ்சியிருக்கும் நிலத்தின் ஒரு கைப்பிடிப் பரப்பிலும் விதைப்பதற்கு வித்துடல்கள் வந்து கொண்டேயிருந்தன. நானும் அம்மாவுமாக வித்துடல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் சென்றோம். இலைகள் உதிரும் பெருமரத்தின் கிளைத்தழும்பை போல ஒருவரையொருவர் வெறித்தனர். சொற்களற்ற திகைப்பும் ஆற்றாமையும் ஒவ்வொருவரின் மூச்சையும் நடுக்குவித்தது. அழுகிக் கிடந்த நிலானின் வித்துடல் மீது விழுந்து புரண்டு ஓலம் ஏற்றினாள் அம்மா. அது பிடுங்கப்பட்ட திசையறையைச் சென்றது. ஒவ்வொரு தாய்மாரின் வயிற்றிலும் பற்றியெரியும் நெருப்பை எங்கே கொட்டினால் ஊழி கருகும்? தம் பிள்ளைகளின் குருதியில் ஏளனமாய் புழுதி வீசும் கடல் காற்றைச் சாம்பலாக்குவது எப்படி? வானுயரும் ஊளையின் அடர்த்தி யுத்தத்தை விடவும் குழந்தைகளின் இதயத்தை பெரியதாய் துளைத்தது. ஆனந்தபுரத்தில் நடைபெற்ற மோதலில் இயக்கம் கடுமையான இழப்புக்களை சந்தித்தது. வன்கவர் வெறிப்படையின் முற்றுகைக்குள் வீரயுகத்தின் தேவாதி தேவர்கள் அனைவரும் அகப்பட்டுப் போயினர் என்பது பேரிடியாக இறங்கிற்று. முற்றுகையைத் தகர்க்க உக்கிரமான தாக்குதலை போராளிகள் முன்னெடுத்தனர். ஆயினும் அற்புதங்கள் நிகழ மறுத்தன. பிசாசின் தந்திரங்களை எதிர்த்து உயிர் ஈகம் செய்யத் திராணியுள்ளவர்களாயிருந்தவர்களை சுள்ளிகளைப் போல முறித்துப்போட்டது படுகளம். தலைவரும் அகப்பட்டுக் கொண்டார். மீள்வது கடினமென பேச்சுக்கள் பரவின. பல தளபதிகளும், நூற்றுக்கணக்கான போராளிகளும் வீரச்சாவைத் தழுவிய களமாக ஆனந்தபுரம் உத்தரித்தது. தகிக்கும் மூச்சுக்கள் ஓய்ந்தன. ததும்பிய குருதியாற்றில் ஆயுதங்கள் சூடடங்கிக் குளிர்ந்தன. மாபெரும் வனாந்தரத்தின் மீட்பர்கள் உயிர்த்தெழ வழியற்று வீழ்த்தப்பட்டனர். முற்றுகைக்குள்ளால் அதிஷ்டவசமாக உயிர் தப்பியவர்களுள் அறம்பாவை அத்தையும் அடக்கம். நாங்களிருந்த பதுங்குகுழிக்கு மேலிருந்து அம்மாவின் பெயரைச் சொல்லி, அழைக்கும் சத்தம் கேட்டது. பதுங்குகுழியின் மேற்கூரையை திறந்து பார்த்தோம். அறம்பாவை அத்தை நின்றாள். நட்சத்திரங்கள் அற்ற வானத்தின் இருளில் ஒளி பிறந்திற்று. பதுங்குகுழிக்குள் குதித்து இறங்கினாள். அறம்பாவை அத்தைக்கு முதுகிலிருந்து அடிவயிறு வரை ஒரு காயமிருந்தது. ஏதோவொரு சீலையால் அதனைக் கட்டியிருந்தாள். எல்லாமும் சாம்பலாய் போச்சு. எண்ணுக்கணக்கில்லாமல் பூமிக்கு தின்னக் குடுத்தாச்சு” என்று கொந்தளிப்பாக இருந்தாள். “குடிக்கக் கொஞ்சம் தண்ணி தா” என்று அறம்பாவை அத்தை கேட்டார். அம்மாவுக்கு இல்லையென்று சொல்ல மனம் வரவில்லை. இரண்டு நாட்களாக தண்ணியும் சாப்பாடும் இல்லாமல் பதுங்குகுழிக்குள்ளேயே இருந்தோம். எறிகணையும், சிறிய ரக ஏவுகணை தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமிருந்தன. போர்விமானங்கள் தமது ராட்சத நிழல் தரையில் விழுமளவுக்கு தாழப்பறந்து தாக்குதல் செய்தன. என்னிடம் சிறிய வாளியைத் தந்து “குடிக்கும் நீரை எடுத்துக் கொண்டு வா” என்றாள் அம்மா. “தண்ணி வேண்டாம், நீ பெடியனை வெளியால விடாத” அறம்பாவை அத்தை சொன்னாள். அது ஒண்டுமில்லை. அவன் போய்ட்டு வந்திடுவான். கடுஞ்சுழியன். ஷெல்ல அவங்கள் குத்துற சத்தம் கேட்டாலே, இவன் இஞ்ச விழுந்து படுத்திடுவான்” என்றாள் அம்மா. “இப்ப ஷெல்லுக்கு மட்டுமே பயம். உவனை மாதிரி சின்னஞ்சிறுசுகளை பயிற்சிக்கெல்லே கொண்டு போறாங்கள்” “இவனிட்ட மாவீரர் குடும்ப அட்டையிருக்கு. அதைக் காட்டினால் விட்டிடுவாங்கள். நீ ஒண்டுக்கும் பயப்பிடாத” “இப்ப அதெல்லாம் செல்லாது. ஒரு கதைக்கு மாவீரரே எழும்பி வந்தாலும், இவங்கள் பிடிச்சுக்கொண்டு போய் பயிற்சி குடுப்பாங்கள்” அறம்பாவை அத்தை சொன்னாள். மூவரும் அமரமுடியாதளவு சிறிய பதுங்குகுழி. அதிகாலை வரையும் எங்களோடு இருந்தாள். இருபது வருஷங்களுக்கு மேலான இயக்க வாழ்வில் துயர் புலம்பும் ஓரிரவாக ஆக்கிக்கொண்டாள் போலும். முற்றுகையை விட்டு வெளியேறும் போது, கையில் கிடந்த ஆயுதத்தை தூக்கி எறிந்தாளாம். அந்தச் சனியனை இனிமேலும் கையால் தொடமாட்டேன் என்றாள். ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து அறம்பாவை அத்தைக்கும் எனக்கும் தந்த அம்மா, தண்ணியில்லை நல்லாய் அரைச்சு சாப்பிடுங்கோ. விக்கலெடுத்துச் செத்துப்போனால் ஒருத்தனும் உங்களைத் தூக்கிப் போடவும் வரமாட்டங்கள் என்றாள். “அக்கா, நீயும் சாப்பிடு” என்றாள். “இல்லை, எனக்கு வேண்டாம். ஒரேயடியாய் காலமைக்கு கஞ்சி வைச்சு குடிக்கலாம்” என்றாள் அம்மா. “தப்ப கிடைச்சால் உள்ள போங்கோ. இனி இங்க எதுவும் இல்லை. மண்ணை விசுவாசித்தவன் மரித்தாலும் பிழைப்பான் என்ற வீரயுகமோ, அவயவங்களாயும் மாம்சங்களாயும் எலும்புகளாயும் யுத்தத்திற்கு உரிமையுடைதாயிற்று. எப்போதும் யுத்தத்தைப் பற்றி மரணத்தை மகிமைப்படுத்தினோம். வாக்குத்தத்தம் அளிக்கப்பட்ட தியாகத்தின் சாட்சியமானோம். மரித்தவர்களை குழியிலிருந்து உயிர்ப்பித்து கட்டவிழ்த்துவிடுகிற தெய்வங்களை எப்போதோ பிரேதச்சீலைகளால் சுற்றி அடக்கம் செய்திருந்தோம். இரத்தத்தினாலே சமீபமானது யுத்தம். வெறும் யுத்தத்தினால் அநாதரவானது தியாகம் என்று சொல்லியபடி பதுங்குகுழியின் மேற்கூரையைத் திறந்து அதிகாலையில் விடைபெற்றாள். மேகத்தின் அலைவு சனங்களைப் போல ரூபமளித்தது. பெண்ணொருத்தி தன்னுடைய தலைமுடியில் அலைமேவும் கடலை கட்டியிழுத்துச் செல்வதைப் போல பிறிதொரு மேகத் தரிசனம் தோன்றியது. அறம்பாவை அத்தை இருந்த இடத்தில் ரத்தம் வடிந்திருந்தது. மண்ணோடு அதையள்ளி ஒரு பிடியாகக் குழைத்து, நகைகள் வைத்திருக்கும் பையில் போட்டாள் அம்மா. அறம்பாவை அத்தை மீண்டுமொருதடவை வந்திருந்தார். பைநிறைய விசுக்கோத்துக்களைக் கொண்டு வந்து தந்தார். அம்மாவை தனியாக அழைத்துச் சென்று சிறிது நேரம் ஏதேதோ கதைத்தார். என்னை பதுங்குகுழிக்குள்ளேயே இருக்குமாறும், தான் ஒரு வேலையாக சென்று திரும்பி வருவதாகவும் சொல்லிப் புறப்பட்டாள் அம்மா. மூன்று மணித்தியாலங்கள் போயிருந்தன. எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அம்மாவுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாதென வேண்டி கந்தசஷ்டி கவசத்தைப் பாடினேன். அறம்பாவை அத்தையும், அம்மாவுமாக மீண்டும் வந்திருந்தனர். அத்தை என்னைத் தூக்கி முத்தமிட்டார். சிலநிமிடங்கள் நமக்கிடையே நிலவிய அமைதி ஒரு எரிபந்தின் அந்திமப் புகையென கண்ணீரை வரவழைத்தது. சூன்யத்தின் கையசைப்பு. விடைகொடுப்பு. அறம்பாவை போனாள். பிறகு எல்லாமும் போயிற்று. தீராத ரணம். சகிக்க இயலாத குரூரமான ஓவியத்தில் அனாதைகளாக நிறுத்தப்பட்டிருக்கும் தாயும் மகனுமாய் பதுங்குகுழிக்குள் உறைந்திருந்தோம். உலர்ந்த உதடுகளை எச்சிலால் நனைத்தோம். அது தாகத்திற்கு தீர்வாகாத தகுதியற்ற சடங்கு. அம்மாவின் மடியில் தலைவைத்தேன். சிறிதாய் ஒரு சுகம். பெருந்துணைக் கவசமென தலையைத் தடவிக் கொடுத்தாள். எங்களுடைய கைகளைத் தூக்கி மண்டியிட்டு பகைவர் அறையும் சிலுவைக்காக பதுங்குகுழிக்குள் பத்திரமாயிருந்தோம். ஒரு பகலுக்கும் இரவுக்குமிடையேயான நாளின் தலையில் இறங்கி மூண்டது எரியுகம். எல்லாத் தருணங்களும் அவமானத்தினால் போர்த்தப்பட்டன. எல்லோரும் ஒரு குரலுக்காக காத்திருந்தார்கள். கொடிய தோல்வியின் நகரத்தில் எல்லாவற்றாலும் கைவிடப்பட்டவர்கள் கடலுக்குள் இறங்கினர். சீழும் ரத்தமும் நிரம்பிய பிணங்கள் புராதனமானவொரு வரலாற்றின் அந்திம அத்தியாயத்தின் மீது குவிந்திருந்தன. பிணங்கள் பாதையானதொரு மத்தியானத்தில் ஒன்றின் மீது ஏறி இறங்கினேன். கால்களில் தளும்பிய உடலத்தைப் பார்த்தேன். அறம்பாவை அத்தை. பின்னே வந்துகொண்டிருந்த அம்மாவிடம் “அத்தை…அறம்பாவை அத்தை” என்றேன். அவள் அத்தையின் வாயில் ஒரு பிடி அரிசியை இட்டாள். லேசாக முகத்தை மூடிக்கிடந்த கூந்தலை விலக்கினாள். அத்தையின் நடுவிரல்கள் மூன்றுமற்ற கையை எடுத்து முத்தமிட்டேன். தீயுழின் நொடிகள் பெருகின. அம்மாவின் நகைப்பையை வாங்கிய வன்கவர் வெறிப்படையாளன் ஒருவன் எல்லாவற்றையும் அபகரித்தான். அந்தப் பையிலிருந்த குருதி நாற்றத்தை அவனால் தாங்கமுடியாதிருந்திருக்க வேண்டும். தூக்கி வீசினான். “அது எங்கட முதுசம். அதை எடுத்துக் கொண்டு வா” என்றாள். அறம்பாவை அத்தையின் குருதியும் முள்ளிவாய்க்கால் கடல் மண்ணுமாய் ஒரு வீரயுகத்தை வழியனுப்பி வைத்தோம். நாங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதும் யாழ்ப்பாணத்திலிருந்து சிறிய கலசத்தை வாங்கிவந்து, அதற்குள் அறம்பாவை அத்தையின் குருதியால் குழையுண்ட மண்ணைப் போட்டு பீடத்தில் வைத்தாள். சிறிய கோவிலாக கட்டி பூசைகள் செய்தாள். வருவோர்க்கு ஒரு கைப்பிடி அரிசியை மட்டும் பிரசாதமாக வழங்குவது வழக்கமாயிருந்தது. தண்ணி குடிக்காமல் அதனைச் சாப்பிடவேண்டுமென நிபந்தனையும் இருந்தது. ஏனென்று எல்லோரும் கேட்டார்கள். அம்மா அப்படித்தான், அதற்கு பதிலில்லை என்றாள். சில நாட்களில் நான் உறங்கப்போனதற்கு பிறகு அம்மா, கோவிலுக்குச் சென்று புசுபுசுப்பது கேட்டிருக்கிறது. ஆனால் அறம்பாவை அத்தை அங்கே வருகிறாள் என்று அம்மா எனக்குச் சொன்னது கிடையாது. ஒருநாளிரவு வீட்டைச் சுற்றிவளைத்து ராட்சத இயந்திரங்களால் பூமியைத் தோண்டினார்கள். சனங்கள் மிரண்டு கூடியிருந்தனர். அம்மாவிடம் மீண்டும் விசாரணைகள் தொடர்ந்தன. நீங்கள் கேட்பது எதுவும் எனக்குத் தெரியாது என சொன்னாள். தோண்டப்பட்ட பூமியிலிருந்து அரிசியும், குருதியால் குழைந்த மண்ணுமே வந்தது. கலசக் கோவிலினுள்ளே சுடரொழுகும் விளக்கொளியில் அமர்ந்திருந்து அரிசியுண்ணும் அறம்பாவை அத்தையிடம் ஓடிச்சென்றேன். “அன்றைக்கு அம்மாவை அழைத்துக் கொண்டு போனது நீங்கள் தானே, அப்பிடி என்னத்தை அத்தை தாட்டணியள்?” “எங்கட முதுசமாய் இருக்கிற ஒரு வித்துடலை. அது எண்டைக்கோ ஒருநாள் உயிர்த்தெழுமடா தம்பியா” “இவங்களால கண்டு பிடிக்க முடியாதோ?” “அம்மாவைத் தவிர ஆருக்கும் தெரியாத இடம். அம்மாவுக்கு மட்டுமே தெரிந்த இறுதி ரகசியம்” “ஆரின்ர வித்துடல்?” என்று அறம்பாவை அத்தையிடம் கேட்டதும், என் பின்னே வந்துநின்ற அம்மா “எங்கட மண்ணோட வித்துடல்” என்றாள். https://akaramuthalvan.com/?p=1945
  13. நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிப்பு! Mar 15, 2024 12:46PM IST ஷேர் செய்ய : நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நாளை (மார்ச் 16) வெளியிட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று அனைத்து கட்சிகள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தநிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை மாலை 3 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி மற்றும் சில மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளார் https://minnambalam.com/political-news/election-commission-announce-parliament-election-date-tomorrow/
  14. புலிகளின் சடலங்களே கொக்குத்தொடுவாயில் மீட்பு – பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றுக்கு அறிக்கை March 15, 2024 கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும்1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையவை என முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் கையளித்த இந்த இடைக்கால அறிக்கை மொத்தமாக 35 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் முன்னர் துப்பாக்கிச் சண்டையை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அந்த இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் 1994ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெறவில்லை என்பதோடு, 1996ற்குப் பின்னர் இடம்பெறவும் இல்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை வைத்து சடலங்கள் 1994 மற்றும் 1996ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என தீர்மானிக்கப்பட்டதெனவும், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர்க் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு தொகுதி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2023 நவம்பர் 29ஆம் திகதி ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு நிறுத்தப்பட்ட போது புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கங்கள் மீட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதேநேரம் அடுத்த கட்ட அகழ்விற்காக ஏப்பிரல் 4ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளபோதும் அதற்கான எந்தவொரு நிதியும் அரசு இதுவரை விடுவிக்காத நிலையில் ஏப்பிரல் 4 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதில் சந்தேகம் நிலவுகின்றது. https://www.ilakku.org/புலிகளின்-சடலங்களே-கொக்க/
  15. அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு March 15, 2024 அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59 ஆயிரத்து 500 பேர் முகாம்களில் உள்ளனர். இந்த முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெறஉரிமையில்லை என உத்தரவு பிறப் பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், அதை குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா். https://www.ilakku.org/அகதி-முகாமில்-பிறந்தோருக/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.