இளவயதினரை சுண்டியிழுக்கும் மேற்கு நாகரிக மோகம்-----படித்தது --நம் சிந்தனைக்கு
மனித குலம் கடந்து வந்த பாதையை வரலாற்றுப் பதிவுகள் வாயிலாக கற்கின்ற போதுதான் ‘நாகரிகம்’ என்பதற்கான நிஜமான அர்த்தம் எதுவென்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.நாகரிகம் என்பது ஆடையலங்காரங்களிலோ அன்றி பகட்டுத்தன்மையான போலியான வாழ்க்கைக் கோலங்களிலோ வெளிப்படுவதன்று. மனித இனத்தின் அறிவியல் வளர்ச்சியும் அதன் வாயிலாக அவன் பெற்றுக் கொண்ட நவீனமான வாழ்க்கை மேம்பாடுகளுமே உண்மையான நாகரிகமாகும் என்பதே பொருத்தமான கருத்தாக அமைகிறது.
இக்கருத்துடன் நோக்குகையில் மனித குலத்தின் அறிவியல் சார்ந்த வளர்ச்சியே நாகரிகம் என்பதாகும். அவ்விதமான படிப்படியான நாகரிக வளர்ச்சியைக் கற்பதே வரலாறு என்பதன் பொருளாகும்.நாகரிகம் என்பதன் உள்ளார்ந்த பொருளை ஆராயுமிடத்து போலித்தனமான வாழ்க்கைப் பண்புகளை மற்றொரு சமூகத்திடமிருந்து பிரதி பண்ணுவதென்பதே நாகரிகம் என்று அர்த்தமாகாது. அறிவியலில் முதிர்ச்சியடைந்த சமூகமொன்றிலிருந்து எமது வாழ்வு முறைக்குப் பயன் தருவதாக அமைகின்ற அம்சங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து எமது விழுமியப் பண்புகள் பிறழ்வுறாத விதத்தில் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே நாகரிகமென்பதற்கான அனுகூலமான அம்சம் எனலாம்.
வரலாற்று ஆசிரியரான பேர்க்ஹாட் என்பவர் கூறியிருக்கும் கருத்தொன்றை இவ்விடத்தில் மேற்கோள் காட்டுவது மிகவும் பொருத்தமாக அமையலாம்.“வரலாறு என்பது ஒரு யுகத்தில் எழுதிப் பாதுகாத்து வைக்குமளவுக்கு பெறுமதியான விடயங்களை அதற்கு முன்னைய யுகமொன்றிலிருந்து தேடிக் கண்டுபிடித்துக் கொள்வதாகும்.” இதுவே பேர்க் ஹாட் கூறியிருக்கும் கருத்தாகும். இக்கருத்தானது வரலாறு என்ற பதத்துக்கு மாத்திரம் ஏற்புடையதல்ல. நாகரிகம் என்பதற்கான பொருளையும் பேர்க்ஹாட் என்ற வரலாற்றாசிரியரின் கருத்துடனேயே சமாந்தரமாக வைத்து நோக்க வேண்டியிருக்கிறது.
அதாவது கடந்த கால வரலாற்றில் இருந்தோ அன்றி மற்றொரு பிரிவினரிடமிருந்தோ எமது வாழ்வு முறைக்குச் சாதகமாகப் பொருந்தக் கூடியவற்றை மாத்திரமே பிரதிபண்ணி அடியொற்றிக் கொள்ள வேண்டுமென்று கூறுவதில் தவறில்லை. மனித நாகரிகம் தொடர்பான இத்தகைய ஆய்வுகளுடன் நோக்குகின்ற போது ‘வலன்ரைன்ஸ் டே’ எனப்படுகின்ற காதலர் தினக் களியாட்டங்களை எத்தகைய நாகரிக வரையறைக்குள் உள்ளடக்குவதென்பது குழப்பமானதொரு விடயமாகவே தோன்றுகிறது.
காதலர் தினத்தை நாளை கொண்டாடுவதற்காக உலகம் இன்றைய தினத்திலேயே தயாராகி நிற்கிறது. மேற்குலக மக்களின் வாழ்வியல் கலாசாரத்துடன் நோக்குகின்ற போது காதலர் தினமென்பது அவர்களுக்கெல்லாம் பிரமாதமானதொரு சமாச்சாரமல்ல. காதலர் தினம் தோற்றம் பெற்றதே மேற்குலகில்தான். மனித உள்ளத்தின் நுண்ணிய மெல்லுணர்வுகளை மனதினுள் பூட்டி வைத்து அந்தரங்கமாக வெளிப்படுத்துவதிலுள்ள ஆத்ம மகிழ்ச்சியின் அர்த்தம் புரியாத மக்களாக மேற்குலக மக்களைக் கொள்ளலாம்.ஆடையலங்காரத்தினால் மேனியை மறைத்து வைக்க முடியாததைப்போன்று மென்மையான உணர்வுகளைக் கூட பக்குவமாக மறைத்து வைத்திருக்கத் தெரியாமல் வெளிப்படையாக வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்டவர்கள் அவர்கள். ஆகவேதான் காதலர் தினத்தன்று ஆணும் பெண்ணும் வெளிப்படையாகவே அன்பைப் பரிமாறிக் கொள்கின்ற கண்காட்சி வைபவமாக ‘வலன்ரைன்ஸ் டே’ என்பதனை அவர்கள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்பு என்பதன் பேரில் இறுதிவரை ஒளிந்திருக்கின்ற ஆனந்தமயமான உணர்வின் அர்த்தத்தையே அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.
மேற்கு நாடுகளில் வாழ்கின்ற காதலர்களைப் பொறுத்த வரை நாளைய தினமானது அவர்களது தேசிய விழாவாகவே மிளிரப் போகின்றதென்று கூறினாலும் அது தவறாகாது. அவர்களது வாழ்க்கைத் கலாசாரமும் நாகரிகத் தன்மையும் அவ்வாறான கொண்டாட்டங்களுடன் பொருந்திப் போகின்றதென நாம் வைத்துக் கொள்வோம்.
ஆனால் இலங்கையிலும் சமீப காலமாக காதலர் தினமென்ற அம்சம் காட்டுத்தீ போன்று பட்டிதொட்டியெல்லாம் வேகமாகத் தொற்றிக் கொண்டு பரவி வருவது கண்கூடாகத் தெரிகிறது. காதலர் தினத்துக்கு முன்னுரிமை அளித்து இளவயதினரை ஈர்த்தெடுப்பதில் வெகுஜன ஊடகங்கள் முனைப்புக் காட்டுவது வெளிப்படையாகவே தெரிகிறது. இலத்திரயனில் ஊடகங்களுக்கே இவ்விடயத்தில் கூடுதலான பங்கு உண்டு. இளவயதினரின் கவனத்தைத் திருப்புவதற்காக ஊடகங்கள் கையாளுகின்ற உத்தியாக இதனைக் கருதலாம்.
இளவயதினரின் ‘ஹோர்மோன்’ என்ற இரசாயனத்தைத் தூண்டி விடுவதில் ஊடகங்களுடன் வர்த்தக நிறுவனங்களும் கைகோர்த்துக் கொள்வதில் அர்த்தம் உண்டு.இளவயதினரின் இதுபோன்ற பலவீனங்களை நன்றாகவே பயன்படுத்திக் கொள்ளக் கூடிய தந்திரத்தை வர்த்தக நிறுவனங்கள் கையாள்கின்றனவென்று கூறுவதே மிகவும் பொருத்தமானதாகும்.காதலர் தினம் நெருங்குகின்ற வேளையில் இளவயதினரைக் குறிவைக்கும் விளம்பர வேட்டையை வியாபார நிறுவனங்கள் ஒரு வாரத்துக்கு முன்னரே ஆரம்பித்து விட்டன. ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்களை விளம்பரப்படுத்தி விற்பனை செய்வதற்கான வியாபாரத் தந்திரமொன்று காதலர் தினத்தின் ஊடாகக் கையாளப்படுகிறது.
நாளைய தினத்தன்று காதலர்கள் தங்களுக்குள் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதென்பது எமது நாட்டில் கட்டாயமானதொரு கலாசாரமெனப் போதிக்கும் வகையில் பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் விளம்பரங்கள் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.இத்தகைய விளம்பரங்களுக்கெல்லாம் ஈர்க்கப்பட்டு இளவயதினர் பணத்தை வீணாக வாரியிறைக்கும் அபத்தமானது நகரங்களில் மாத்திரமன்றி கிராமங்களிலும் பரவி வருகிறது. இளவயதினரைத் தூண்டுவதன் மூலம் ஊடகக் கவர்ச்சியையும் வியாபாரப் பெருக்கத்தையும் ஏற்படுத்துவதே மறைமுகமான நோக்கங்களாகக் காணப்படுகின்றன.
மேற்கு நாகரிக மாயை என்பது எமது நாட்டை மாத்திரமன்றி இந்தியா உட்பட மேலும் பல நாடுகளையும் ஆட்கொண்டுள்ளது. நடையுடை பாவனைகளிலும், கலாசாரங்களிலும் மேற்குலக மக்களைக் கடைப்பிடித்து ஒழுகுவதே மேலானதுதென்றதொரு மாயை இளவயதினரை மாத்திரமன்றி பெரியோரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தனது பிள்ளைக்குத் தாய்மொழி தேர்ச்சி கிடையாதென்றும் ஆங்கிலப் புலமையே முழுமையாக உள்ளதெனவும் கூறிப் பெருமைப்படுகின்ற பெற்றோர் நம்மத்தியில் ஏராளமாகவே உள்ளனர்.
தமது பிள்ளை ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டுமென்ற விருப்பு ஒருபுறமிருக்க, மேற்குநாட்டு கலாசாரத்தையே கடைப்பிடிக்க வேண்டுமென ஆசைப்படும் பெற்றோரும் உள்ளனர். பெற்றோரின் தூண்டுதலும் விருப்புமே அவர்களது பிள்ளைகளை தாயகக் கலாசாரப் பிறழ்வுக்கு உள்ளாக்குவதாகக் கூறினாலும் மிகையாகாது. இவ்விதமான மேற்குக் கலாசார மோகத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே நாளைய காதலர் தினமும் அமைகிறது. நாளைய தினத்துக்காக இளவயதினர் பட்டாளமொன்றே பல நாட்களாகக் காத்துக் கிடக்கின்றது. ஆடம்பர ஹோட்டல்களில் இளவயதினரைக் குறி வைத்து காதலர் தினத்தன்று களியாட்ட வைபவங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் நாளை காதலர்கள் அலை மோதத்தான் போகிறார்கள்.
இவ்விடத்தில் முடிவாக ஒன்றைக் கூற வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கெனவும் அம்மக்களின் வாழ்க்கைக் கோலத்துக்கும் வசதி வாய்ப்புக்களுக்கும் ஏற்ப தனித்தனியான கலாசார பாரம்பரியங்கள் உள்ளன. அந்தந்த நாட்டுக்குரிய காலாசார முறைகளில் ஒன்றை விட மற்றொன்று சிறப்பானதெனக் கருதுவதற்கு இடமில்லை. மேற்கு நாட்டுக் கலாசாரமே மேன்மையானதென நம்புவது புத்திசாலித் தனமுமல்ல.
குறித்த நாடொன்றின் நாகரிகமானது அம்மக்களின் ஒழுக்கவிழுமியங்களுக்கு உட்பட்டதாகவே அமைந்திருக்கிறது. மற்றொரு சமூகத்தின் நாகரிகமானது எல்லைமீறி ஊடுருவுகின்ற போது எமது நாட்டின் சுய கலாசாரத்தை மாத்திரமன்றி ஒழுக்கவிழுமியங்களையும் நாம் தொலைத்துக் கொள்ள நேரிடலாம். மேற்கு நாடுகளின் வாழ்வியல் கலாசாரமானது அம்மக்களின் சமூகக் கட்டமைப்பில் எத்தகைய மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதென்பதை நாமறிவோம். குடும்ப உறவுகள் என்பதெல்லாம் அந்நாடுகளில் கேள்விக்குரியதாகியுள்ளது.
அத்தகைய நாகரிக கலாசாரம் எமது நாட்டு வாழ்வியல் முறைக்குள் ஊடுருவுவது அவசியம்தானா என்பது நாளைய காதலர் தின களேபரங்களைப் பார்க்கையில் ஆழமான சிந்தனைக்குரியதாகிறது.
எஸ். பாண்டியன்
எழுது.கொம்