Yarl Forum
மகிளிர் தினம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: மகிளிர் தினம் (/showthread.php?tid=7369)



மகிளிர் தினம் - Mathan - 03-07-2004

மகளிர் தினத்தில் இன்றைய சிந்தனை

இன்று சர்வதேசப் பெண்கள் தினம். தமது உரிமைகளுக்காகவும், சமூக மேன் மைக்காகவும் சர்வதேச பெண்கள் ஒருமித்து குரல் எழுப்பும் உன்னதமான தினம் இன்று. இலங்கைப் பெண்களின் குரலும் சர்வதேச குரலுடன் சங்கமிக்கின்றது.

மனித சமூகத்தின் வளர்ச்சியினூடே பெண்களுக்கான உரிமைகளும், மேன்மைகளும் ஆண் சமூகத்தின் அங்கீகாரத்தினை பெற்றே வருகின்றன. சட்ட ரீதியாகவும், இவ்வுரிமைகள் ஆவணப்படுத்தப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு மற்றும் உலகில் உருவாகியுள்ள ஓரணி நாடுகளின் அமைப்புகள் அனைத்துமே சட்டங்கள் இயற்றி, அவற்றை அங்கீகரித்து ஆவணப்படுத்துவதுடன், பிரகடனப்படுத்தி சம்பந்தப்பட்ட நாடுகள் அனைத்தும் அவற்றை தம்தம் நாடுகளில் செயல்படுத்தி வசதிபடுத்த வேண்டும் என பணித்து வருகின்றன.

இலங்கையும் பெண்களின் உரிமைகள் குறித்த சாசனம் அமைத்துள்ளதோடு பாராளுமன்றத்திலும் சட்டரீதியாக சில அம்சங்களுக்கான அங்கீகாரம் பெற்று பெண்கள் சாசனத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னேற்றகரமான இத்தகைய அம்சங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் பெண்களுக்கெதிரான வன்முறைகள், உரிமைகள் மறுப்பு என்பன இன்றும் தொடர்கதையாகவே உள்ளன.

இலங்கையின் சனத்தொகையில் 50 விகித மானவர்கள் பெண்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுப்பூதுபவர்களாகவே இருந்து குடும்ப விவகாரங்களை முழுமையாக தமது தலை மேல் சுமந்து வாழ்பவர்களாகவே உள்ளனர்.

பெண்களின் கல்வி நிலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேல் கல்வியினை தொடர்பவர்களும், அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் தொகையும் கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது. ஏப்ரலில் நடைபெறும் தேர்தலிலும் பெண்களையும் அதிக அளவில் வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பெண்கள் அமைப்பிலிருந்து வெளிக்கிளம்பியதால் இத் தேர்தலில் வேட்பாளர்களாக பெண்கள் போட்டியிடும் சூழலும் எழுந்துள்ளது.

இத்தகைய முன்னேற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்தது, பெண்கள் அமைப்புகளின் தோற்றமும், அவர்கள் தெருவிற்கு இறங்கி நடத்திய போராட்டங்களும் தான் எனில் அதுமிகையல்ல.

பெண்கள் அமைப்புகள் குறித்தும், பலவாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் அவர்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பியதன் பெறுபேறாக ஏற்பட்ட மாற்றங்கள் உணரத்தக்கவை.

இரு தசாப்த கால யுத்த கால கட்டத்தின் போது வடகிழக்கு பிரதேச பெண்களின் துன்ப துயரங்களுக்கு எதிராகவும், இலங்கை தோட்டத்துறை பெண்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களுக்கு எதிராகவும் இவ்வமைப்புகள் குரல் கொடுத்தே வருகின்றன. இதன் காரணமாக அரசியல் மட்டத்தில் சட்டரீதியான சீர்திருத்தங்கள் உருவாவதற்கும் கல்வி, பொருளாதார உதவி, தொழில் மற்றும் பாலியல் வல்லுறவுகளுக்கான தண்டனைகள் என்பனவற்றை ஏற்படுத்துவதற்கு உந்துசக்தியாக அமைந்தன.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான சமாதான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்ற போது பேச்சுவார்த்தையில் பெண்கள் கலந்து கொள்ளாதது பெரும் குறையாகவே கருதப்பட்டது. பெண்களே போர்காலங்களில் பெரிதும் இன்னலுக்கானவர்கள் என்பதை சகல மட்டத்திலும் சுட்டிக் காண்பிக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள் இயக்கங்கள் இதனை வலியுறுத்தியதன் விளைவாக பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றக் கூடியதான பெண்களில் சமாதானக் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

சமூகத்தின் ஒரு பகுதியினர் இத்தகைய முன்னேற்றகரமான அம்சங்களில் ஈடுபட்டு வருகின்ற போதும், பெண்களை ஆபாசப் பண்டமாகவே உருவகப்படுத்தும் கலாசார சீரழிவு, திரைப்படம், சஞ்சிகைகள் என்பவற்றில் ஒரு தொடர் கதையாகவே உள்ளது. ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா என சகல கண்டங்களிலும் இந்நிலையே தொடர்வது துர்அதிஷ்டமே.

ஆன்மிகம், கலாசார விழுமியம் என்பனவற்றுக்கு முதலிடம் வழங்கும் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் இத்தகைய துர் அதிஷ்டமான நிலையேநிலவுகின்றது. இவற்றில் பெண்கள் ஆர்வமுடன் பங்குகொள்வது அதைவிட துர் அதிஷ்டமானது. இன்றைய மகளிர்தின நிகழ்வுகளில் இதற்கு எதிராக குரல் எழுப்புவதும் பெண்கள் அமைப்புகளின் பெரும் பணியாகும்.

நன்றி - வீரகேசரி