Yarl Forum
வியாசனின் உலைக்களம் (விடுதலைப்புலிகள் புரட்டாதி-ஐப்பசி 2004) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வியாசனின் உலைக்களம் (விடுதலைப்புலிகள் புரட்டாதி-ஐப்பசி 2004) (/showthread.php?tid=6334)



வியாசனின் உலைக்களம் (விடுதலைப்புலிகள் புரட்டாதி-ஐப்பசி 2004) - thiru - 11-26-2004

[size=18]கடற்கரை மணலிற் கட்டிய வீட்டுக்கு வர்ணம் பூசாதே.

<b>-வியாசனின் உலைக்களம்-</b>


கனவிற் கரைந்து ஆடைகலைவதும்
அறியாமல்
வாய்நீர் வடித்ததும் போதும்.
குடை,கொடி,ஆலவட்டப் பவனியில்
தோளில் உத்தரியச் சால்வை துலங்க
உலாப்போனதும் போதும்.
வெண்புறா நினைவில் மனமும்
வெள்ளைக்காரர் வருகையில் சனமும்
முட்டி மூச்சுத் திணறுகிறது.
ஏ 9 தெருவில் சமாதானப் பதாகை தாங்கிய
உறவுப்பால ஊர்வலம் போதும்.
'சிங்களச் சகோதரருக்கு' விடுதலை பற்றி
விளக்க
நடத்திய பட்டிமன்றங்களும் போதும
புஷ்பக விமானப் பறப்பும்
கண்டவனுக்கெல்லாம் கம்பளம் விரிக்கும்
சேவகமும்
போதுமய்யா போதும்.
இந்தா வருகிறது கல்லறைத் திருநாள்
கார்த்திகைப் பெருநாள்.
கடந்த வருடங்களும்
விளக்கேற்றப்போனோம்.
குழியிலிருந்து வெளியேறிவந்து
செல்வங்கள் எம்மைஆரத்தழுவியபோது
கூனிக்குறுகியல்லவா நின்றோம்?
ஏதேதோ சொல்லிச் சமாளித்துத்
திரும்பினோம்.
இம்முறை எந்த முகத்துடன் போவது?
சமாதானத்துக்காகக் காத்திருக்கிறோமெனெச்
சொல்வது
சாத்தியமாகுமா?
காறியல்லவா துப்புவர் எம் முகத்தில்?
'எங்களை விளம்பரப்பொருளாக்கி
விடுதலையை விற்பனையா செய்கிறீர்'
என
எழுந்து கேட்பார்களே
என்ன பதிலுண்டு எங்களிடம்?
அற்புதங்களை ஆழக்குழியிட்டு மூடிவிட்டு
கற்பனைக்கு மாலையிட்டுக் களிக்கிறோம்.
இம்முறை துயிலுமில்ல வாசல்
திறக்கும்போதே
என்ன கொண்டுவந்தீர் எனக் கேட்டால்
பதிலேதும் உண்டா எம்மிடம்?
சம்பூ கொணர்ந்தோம்,
சவர்க்காரம் கொணர்ந்தோம்,
சீமெந்தும்,முறுக்குக் கம்பியும்,
செல்போனும் கொணர்ந்தோம் என்று
சொல்லமுடியுமா அவர்களுக்கு?
எந்த முகத்தோடு இம்முறை துயிலுமில்லம்
செல்வது?
இராசதந்திரங்கள் இருப்பவர்களுக்கேயன்றி
இறந்துபோனவர்களுக்கல்ல.
தாகம் சுமந்து
கனவுகளுக்கு வடிவம் வரைந்துவிட்டு
கல்லறைக்குள்ளே கிடப்பவர் முன்னே
பொய்சொல்லுவதே பெரிய துரோகம்.
வேண்டாமய்யா இந்த வதை.
முகிலுக்குள்ளே
முகங்கொண்டுலவியது போதும்
இனியாயினும் நிலத்தில் இறங்குவோம்.
காலநீட்சி வேண்டுமெனில்
காத்திருக்கலாம்.
அது குற்றமும் அல்ல.
மாயக்கண்ணாடி முன்னே
மயங்குவதுதான்
மன்னிக்க முடியாதது.
கடற்கரை மணலில் கட்டிய வீட்டுக்கு
வர்ணம் பூசும் கிறுக்கரானோமா நாம்?
காற்றிலேற்றும் பட்டத்தின் வாலில்
கருங்கல் கட்டும் அறிவிலியரானோமா
நாம்?
உலகம் வலியனின் கையிற்தான்
சுழல்கிறது.
கேட்க நாதியற்றுக் கிடக்கிறது நீதி.
இடையில் வந்த அதலபாதாளம் நிரவி
விடுதலைத்தேர் நகர்த்த வேண்டும்.
காய்நகர்த்தியபடி எம் தலைமகன்.
களங்களை உற்றுப்பார்த்தபடி எங்கள்
தளபதிகள்.
இடைவெளிக்குள் நுழைந்து
வெளியேறும் வித்தையை
தெரிந்து வைத்திருப்பவனே
சேனாதிபதி.
புயலெதுவும் புடுங்கமுடியாத
புளியமரமல்லவா?
சிரித்தபடி தேதி கணக்கிட்டிருக்கும்.
முதுகில் விடுதலைச் சிறகு.
முளைத்தவர்களுக்கு
பலவழிகள் கிடையாது.
ஒற்றைவழியே அவர்களுக்கு உண்டு
அது ஆகாயம்.
சுகன வெளியெங்கும் கைகளை
விரித்தபடி பறப்பர்.
ஈழத்தமிழன் விடுதலைக் குருவியடா.
வாயிற் சுதந்திரப் பாடலைப்
பாடியபடிதான்
புலம்பெயர்ந்த தேசத்திலும் இருப்பான்.
மாயக் கனவுகளிலிருந்து கொஞ்சம்
விடுபடுவானாயின்
இவனே மலையென்றாவான்
எவரும் எடுத்தசைக்க முடியாதபடி.
எம்மண்ணில் கார்த்திகை மாதம்
வருவது
கண்ணீர்விட அல்ல.
பூவொன்று பிடுங்கி வைப்பது
நாங்கள் உயிர் பிடுங்கியும்
வைப்போமென
உறுதி சொல்ல.
நெய்விளக்கேற்றுவது
உள்ளே நெருப்பேற்றி வைத்துள்ளோம்
என
உறவுகளுக்குக் காட்ட.
கார்த்திகை 26
புதிய உயிரொன்று தலைமையேற்கப்
பிறந்தநாள்.
கார்த்திகை 27
அதிக விலைகொடுக்க
வேண்டுமெனச் சொல்லி
அச்சாரம் கொடுத்த நாள்.
இரு நாட்களும் அருகென்றானது
தற்செயலான சம்பவங்களல்ல.
காலமளித்த தீர்ப்பு.
கடவுள் எழுதிய காப்பு.
நடந்துவந்த பாதையில் ஒரு
நாற்சந்தியில் நிற்கிறோம்.
நேர்வழி நடந்தால் விடுதலை.
மறுவழி போனால் சலுகைகள்.
இன்னொருவழியிலும் போகலாம்
அதில் உலகநாடுகள் வலைவிரித்து
வைத்துள்ளன.
உயிருறுஞ்சிவிட்டு
இறுதியில் தகனம் செய்யும்.
நாலாவது வழியிலும் போகமுடியும்.
நீந்திக் கடக்கக்கூடிய துரத்திற்தான்
மறுமுனை.
சாம்பார்,ரசம்,மசாலாப்பொடியுடன்
சாப்பாடும் கிட்டும்.
தர்மப் பொறிபோலக்காட்டி
வளைத்துப்பிடித்து
பின்னர் சாக்காட்டும்.
என்ன செய்யும் உத்தேசம் உனக்கு?
கார்த்திகை 27க்கு முன்னர் ஒரு
முடிவெடுத்தபடி
கல்லறைக்குப் போ.
சும்மா விளக்கேற்றி வரலாம் என்று
போனால்
'குழிப்பிள்ளை'களின் கேள்விக்குப்
பதிலின்றித் தவிப்பாய்.
'எங்கள் சாவுக்கு அர்த்தமுண்டா?'
எங்கள் கனவுக்கு வடிவம் வருமா?
எங்கள் காத்திருப்புக்குப் பதில்
கிட்டுமா?
துயிலுமில்லம் அதிரக்கேட்கும்
பிள்ளைகளின் பேரொலி.
நெஞ்சு பிளக்க,
மூச்சுத்திணற,
விழிசோர,மொழிசோர நிற்பாய்.
கார்த்திகை 27க்கு முன்னர் முடிவெடு
போர்த்தொழில் வீரரான வடிவெடு.


<b>நன்றி:</b> விடுதலைப்புலிகள் புரட்டாதி-ஐப்பசி 2004
<b>கணனித் தட்டச்சு:</b> திரு (ரஷ்யா)


- kavithan - 11-26-2004

நன்றி திரு அருமையான கவிதையை எமக்கு கிடைக்க செய்திருக்கிறீர்கள் ... உங்கள் பணி தொடரட்டும்.


- MEERA - 11-26-2004

திரு நன்றி...


- hari - 11-27-2004

அருமையான கவிதை, சிரமம் பாராமல் தட்டச்சு செய்து அனுப்பினதற்கு நன்றிகள்,


- thiru - 11-27-2004

தங்களது கருத்துகட்கு நன்றி. இக் கவிதையை எழுதுவதைக்காட்டிலும் தட்டச்சுச் செய்வது சுலபம். எனவே பாராட்டுக்குரியவர் புதுவை அவர்களே!

-திரு