![]() |
|
ஷோபா சக்தியின் அடுத்த குண்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23) +--- Thread: ஷோபா சக்தியின் அடுத்த குண்டு (/showthread.php?tid=6313) |
ஷோபா சக்தியின் அடுத்த குண்டு - yarl - 11-30-2004 ம் - தீர்க்கமுடியாக் கேள்விகள் ============================== ம் (நாவல்) ஷோபாசக்தி வெளியீடு: கருப்புப் பிரதிகள், 45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை 600 005. முதல் பதிப்பு: அக்டோபர் 2004. விலை ரூ.80 ஷோபாசக்தியின் இரண்டாவது சலனமேற்படுத்தும் நாவல் இது. கொரில்லா நாவல் மூலம் ஏற்கனவே நன்கு அறியப்பட்டவரான ஷோபாசக்தி, இந்த நாவலிலும் இலங்கை இனப்பிரச்சினையயே மையமாக வைத்து எழுதியுள்ளார். பொதுவாக இலங்கைத் தமிழ் எழுத்து என்பது அதிகம் புகலிடப் பிரச்சினைகள், பழைய நினைவுகள், இழப்புகள் சார்ந்தே பின்னப்படும். உண்மையில் பல்லாயிரக்கணக்கானவர்களின் கூட்டு நினைவுகளையே அவ்வெழுத்துக்கள் பிரதிபலித்து வருகின்றன. இனப் போராட்டத்தின் விளம்புகளில் ஒவ்வொரு தனிமனிதனும் அனுபவிக்கும் துன்பமாகவே இதையெல்லாம் கருதவேண்டியிருக்கிறது. கெளரவமான வாழ்க்கை, நீதி போன்றவை பறிபோனபின் ஏற்படும் மனஉளைச்சலே பல்வேறு எழுத்தாளர்களால் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது. ஷோபாசக்தி வேறொரு முனையில் இருந்து வருகிறார். முந்தைய கதைகளிலும் சரி, இந்த ம் என்ற நாவலிலும், இனப்போராட்டத்தின் மையமான நிகழ்ச்சிகளினூடே கதையை நகர்த்திச் செல்கிறார். இந்த ம் என்ற நாவல் முழுவதும் நேசகுமாரன் என்ற ஒரு இயக்கக்காரனின் சிறை அனுபவங்களையே அதிகம் சுழன்று வருகிறது. வெலிக்கடை சிறைக் கொலைகள், மட்டக்களப்பு சிறையுடைப்பு ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி, அதில் பாதிக்கப்படும் நேசகுமாரன் பாத்திரமே தன் கதையை விவரிக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது. கதை வேறொரு புள்ளியில் தொடங்குகிறது. நேசகுமாரனின் பதின்ம வயது மகள் நிறமி கர்ப்பமடைகிறாள். ஒரு புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் இது நடைபெறுகிறது. அவளுக்குக் கருகலைப்பு செய்யப்பட்டு, அந்தக் கருவுக்கான காரணகர்த்தா யார் என்ற தேடலில் தொடங்கும் நாவல், அப்படியே நகர்ந்து, இலங்கையில் இருக்கும் ஒரு இறையியல் கல்லூரியில் சுவாமியாராகப் படிக்கும் நேசகுமாரன் எப்படி இனப் போராட்டத்துக்குள் இழுக்கப்படுகிறான் என்பதில் வேகம் கொள்கிறது. அப்படியே தொடர்ந்து, நேசகுமாரன் வெலிக்கடை சிறை மற்றும் மடடக்களப்பு சிறை பின்னர் புலிகளின் சிறை என்று தன் வாழ்நாளை எப்படிக் கழிக்கவேண்டி வருகிறது என்பதையும் விவரிக்கிறது. நாவல் வடிவில் உள்ள அபாரமான சுதந்திரத்தை ஷோபாசக்தி நன்கு புரிந்துகொண்டு பயன்படுத்தியுள்ளார். தான் உருவாக்கும் ஒரு பாத்திரத்தை எப்படி வேறொரு பொருத்தமான இடத்தில் கொண்டு வந்து சேர்ப்பது, முடிப்பது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த தேர்ச்சி இந்த நாவலில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நாவலுக்குச் சம்பந்தமேயில்லாத, ஆனால், நாவல் தொனியோடு இணக்கம்கொள்கிற பல்வேறு நிகழ்வுகளையும் நாவலின் பல புள்ளிகளில் இணைத்து, நாவலை மேலும் செழுமைப்படுத்தியுள்ளார். இலங்கை தமிழர்களின் இனப் பிரச்சினையோடு எந்த நேரடித் தொடர்பும் இல்லாத என்னைப் போன்ற இந்திய வாசகர்கள் படிக்கும்போது, இந்த கதையை ஒரு கதையாக மட்டுமே வாசிக்க முடியும். அதில் பேசப்படும் விஷயத்தின் நேர்மை, கட்டமைப்பு ஆகியவைகளை நாவலின் ரியாலிட்டிக்குள் பொருந்தி வருகிறதா என்று மட்டுமே பார்க்க முடியும். இது ஒரு வகை வாசிப்பு. அல்லது நேரடி நாவல் வாசிப்பு. இனப் பிரச்சினையை அருகே இருந்து பார்த்தவர்கள், அனுபவித்தவர்கள், இதே பிரதியை வேறு விதமாக வாசிக்க முடியும். அது அவர்கள் அனுபவத்தின் பாற்பட்டு பொருள் தருவதாக அமையும். என்னைப் பொருத்தவரை, இந்த நாவலில் பல பண்புகள் பிடித்திருந்தன. 1. நேசகுமாரன் பாத்திரத்தின் மேல் இரக்கம் கொள்ள வைக்கும் முயற்சியெல்லாம் நாவலில் இல்லை. 2. வட்டார மொழிச் சிக்கலுக்குள் போய் மாட்டிக்கொள்ளாமல், அதே சமயம், இலங்கைப் போர்ச்சூழலின் வாசனையை நாவல் முழுவதும் கொண்டுவந்திருப்பது. 3. பல இடங்களில் நிரப்பப்படாத மெளனங்களை அந்தரத்தில் தொங்கவிட்டு, வாசகனின் சுதந்திரத்துக்கு இடம் அளித்திருப்பது. நாவலின் மையம் என்பது ஒரு Incestஐப் பற்றி பேசுகிறது. இவ்வளவு மோசமாக மனரீதியாக பாதிக்கப்படும் நேசகுமாரன் என்ற தந்தை, தன் மகளின் கர்ப்பத்துக்கே காரணமாகிறான். இதைப் போர்ச்சூழல் வழங்கிய அபாயகரமான மனஉளைச்சலின் விளைவு என்று பொருள் கொள்ளவேண்டுமோ? அதுநாள் வரை எல்லா வகையிலும் புத்தி சுவாதீனத்தோடு செயல்படும் நேசகுமாரன் இப்படியரு காரியத்தைச் செய்யக் காரணமென்ன? இதை எப்படி வாசிப்பது என்று தெரியவில்லை. இந்தக் கேள்வி நாவலுக்கு வெளியே இருக்கிறதோ என்னவோ? நாவலுக்கு, இந்த முரண்உறவு அதிர்ச்சிக்காக வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அடுத்தொரு வாசிப்பில் புரியுமோ என்னவோ? எடுத்தால் கீழே வைக்கமுடியாத விறுவிறுப்பு. ஒரு நல்ல நாவலின் பண்புநலன்களில் இந்தச் சுவாரசியத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒரு முழு வாழ்வனுபவத்தை தீர்க்கமுடியாத கேள்விகள் தொக்கி நிற்க, தன் திறமையான எழுத்தில் வழங்கியுள்ளார் ஷோபாசக்தி என்றே சொல்லவேண்டும். ______________________________________________________________________________________________________________ su.venkatesh e-madal - shiyam - 12-01-2004 சோபா சக்தியின் எழுத்துக்கள் ஒருவித சுயசரிதை அல்லது நடந்த சம்பவங்களின் கோர்வை என்கிற அடிப்படையில்தான் எழுத படுகின்றது. இதைபோல புலம்பெயர் தமிழர்களில் ஒவ்வெருவரிலும் ஒவ்வெரு கதை உண்டு ஆனால் அதை காசாக்க தெரிந்தவர் சோபா சக்தி. அவர்தன்னை அதிகம் படிக்காதவர் மாதிரியும் அப்பாவிபோலவும்.அதேபோல புலிகள் இயக்கத்தில் இருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்தது போலவும் தான் ஒரு எல்லையில்லாத சுதந்திர பறவை என காட்ட முற்படுபவர்.சரி ?வர் சுதந்திர பறைவைதான்..ஆனால் இவரை இவரது குடும்பமே வேண்டாம என ஒதுக்கிய காரணத்தை பகிரங்கமாக கூறுவாரா?? எனக்கு தெரியும் - Nanthaa - 12-01-2004 உதெல்லாம் கண்டுக்கப்படாது சியாம். இலக்கியம் வேறை வாழ்க்கை வேறை. சோபா ஷக்தியினுடைய எழுத்தை மட்டும் வாசியுங்கொ அதுக்கங்காலை எட்டியும் பாக்கப்புடாது தம்பி. ஏன்னா உதெல்லாம் உள்வீட்டு சமாச்சாரங்கள் கண்டியளோ. உப்பிடித்தான் உங்கினை உந்த லக்கியவட்டத்து கூட்டங்கள் சொல்லுகினமடாம்பி சியாம். காசுகறக்குற கள்ளங்களையெல்லாம் இலக்கியவாதியளென்று தலையிலை வைச்சு ஆடுற எருமைகள் உள்ள மட்டும் சோபாசக்தியில் இன்னும் கனக்க முத்தலுகள் இருக்கு. |