Yarl Forum
மாலிகா கவிதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மாலிகா கவிதை (/showthread.php?tid=5297)



மாலிகா கவிதை - KULAKADDAN - 02-12-2005

[நன்றி - நவ டிச 2004 வெளிச்சம்]
அந்த நெட்டூரம் நிகழ்ந்த அன்றிலிருந்து
இப்படித்தான் ஒருவாய் நீர்கூட உள்ளிறக்காமல்
ஏகாந்தமாய் வெறித்த பார்வையுடன்
சோபிதம் அகல ஒற்றையாய் நிற்கிறது
இந்த நெடிய பனை.

காலெடுத்து நகரா வாழ்வெனினும்
ஜனனத்திலிருந்தே அருகென்றாகி
இணையென இருந்தன ஒருசோடிப் பனைகள்.
பெருங்காற்றடிக்கும் போதில் மெல்ல தோளுரசி
புளகமெய்தி
பருவமெய்தியதும் காதல் மீதுர சிரித்து பேசி
இருந்தன இரண்டும்.
நேற்றொருவன் வந்தான்
அவன் மனிதனாம்.
மளமளவென்று பெண்ணுடல் சுற்றி படர்ந்து
மார்புரச ஏறிக் கழுத்தில் சுருக்கிட்டான்
மூச்சு திணறியது பெண்ணுக்கு
கீழே விழும் கோடாரிவெட்டு ஒவ்வொன்றுக்கும்
துடித்துப்போனாள் காதலி.

அருகிருந்த ஆண்பனைக்கு
தன் ஆசை காதலனுக்கு
ஏதேதோ சொல்லி அரற்றிற்றுப் பெண்பனை
கூடல் கலங்கி எதிரொலிக்க கத்திற்று.
மௌனத்தில் உறைந்தன அருகிருந்த
உறவுகள்.
மதிய பொழுதானதால் வெட்டு வாயிலிருந்து
அதிக குருதி பெருகிற்று.
சற்று நேரத்தில் அன்றில் பறவைகளிலொன்று
அடிசாய்ந்தது.
குரூர மனிதனுக்கு எப்படி காதலை
கணக்கிட முடியும்?
சக உயிரின் வலிருசிக்கும் மனிதனுக்கு
மகளென்ன ?மரங்களென்ன ?
காதலை பிரிப்பதே களிப்பு
நேற்று காதல் மரங்களிலொன்றை வெட்டிய
மனிதனே
சோடி பனைகளில் ஒன்றையேன்
விட்டுச்சென்றாய்?
வாடா; வந்து வெட்டு மற்றையதையும்.
காதலியிடம் போய்ச்சேரட்டும்
இந்த ஒற்றை பனை உயிரும்