![]() |
|
நேற்றைத் துயர் தொலைய - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நேற்றைத் துயர் தொலைய (/showthread.php?tid=4710) |
நேற்றைத் துயர் தொலைய - hari - 03-21-2005 நேற்றைத் துயர் தொலைய நிகழ்காலம் எம்பக்கம். கண்ணெதிரே கரைந்துபோகிறது கனவு மண்ணெனவே உதிர்ந்து போகிறது மனம். நெஞ்சுக்குள்ளே கோடுகளால் வரைந்த உருவம் கூட ஒப்பேற முன்னரே உருகிப் போகிறது. நடைவழித் துணையாக நம்பிக்கை மட்டுமே நம்பிக்கை மட்டுமே நமக்கற்றுப் போயிருந்தால் வெம்பிப்போய் என்றோ விழுந்திருப்போம். நாளை நமக்கெனும் நம்பிக்கையிற்தானே வாழ்வு வசப்படுமென வரலாறு நகர்கிறது. ஒருநாள் மட்டுமே உயிர்வாழுகின்ற ஈசல்களுக்கேன் இறக்கை முளைக்கின்றது? நீண்டநாள் பறப்பேனென அதற்கு நினைப்பு அதனால் முளைக்கிறது. மாலையில் கருகும் மலர்களெல்லாம் காலையில் என்னவாய் கண்சிமிட்டுகின்றது நாட்கள் பலவாக வாழ்வோமெனும் நம்பிக்கை பூக்களுக்குக்கிருப்பதாற் தானே அவை புன்னகைக்கின்றன. எவரெஸ்ட் சிகரத்தை டென்சிங் தொட்டான். அதற்குமுன் எத்தனை முறை ஏறியிறங்கினான். என்றோ ஒருநாள் தொடுவேனென்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது அதனாலே வென்றான். நடக்கவேண்டுமா எழுந்துபார். கடக்க வேண்டுமா பாய்ந்துபார். எப்படிச் சாத்தியமாகுமென இடிந்து போனால் இப்படியே கிடக்க வேண்டியதுதான். துரையப்பாவை தலைவன் சுட்டபோது ஏன் சுட்டதென்று எவரும் கேட்கவில்லை எவர் சுட்டதென்று தானே கேட்டார்கள். பின்னர் பிரபாகரனென்ற பெயரை பிரமிப்புடன் உச்சரித்துக் கொண்டனர் பொன்னாலைப் பாலத்தில் புதைத்தகுண்டு வெடிக்காதபோது என்னாலினி முடியாதென தலைவர் நினைத்திருந்தால் ஆனையிறவை வெல்ல அவரால் முடிந்திருக்குமா ? எத்தனைபேர் அவருடன் நின்றார்கள். பின்னர் சென்றார்கள். எத்தனைபேர் அவருடன் வந்தார்கள் பின்னர் போனார்கள். கூட இருந்தவர்கள் அகன்ற போதும் ஆடவில்லையே அந்த ஆலமரம். வெல்வேனென்ற வீரியமும் செல்வேனென்ற நம்பிக்கையும் வல்வை மைந்தனுக்கு வாய்த்திருக்காவிடில் ஈழத் தமிழருக்கு எப்போதோ ஆண்டுத்திவசம் முடிந்திருக்கும். நம்பிக்கையே பலம் பொருந்திய தும்பிக்கை. தளராதிருக்க வேண்டும் தமிழரே. வன்னிக்கு வரும்போது வாழ்வே முடிந்ததென எண்ணி இருந்தோமானால் இதுவரைக்குள் எல்லாமும் தொலைத்திருப்போம். உன்னியெழுந்தோம். ஊர்புகுவோம் என்றுரைத்தோம். இன்று செம்மணியில் நின்று சிரிக்கின்றோம். நம்பிக்கைதானே நாற்றங்கால். ஒருநாளும் தளராதிருப்பவனே பெருவாழ்வு பெருவான். முடியுமாயிது என மலைத்துப் போறவன். பிடிமானமேதுமின்றிப் பொசுங்கிப் போய்விடுவான். ஊர்போக வேண்டுமா? போவேனென நம்பு உயிர்வாழ வேண்டுமா? சாகேனென நம்பு. நம்பிக்கைதானே நாட்களை நகர்த்துகின்றது. பிரபாகரனென்ற பெயர் ஒரு மனிதனின் பெயர் மட்டுமல்ல நம்பிக்கைக்கு இன்னொரு நாமம். வாழ்வு வசப்படுமென யார் நம்பினாலும் அவனுக்கு வாசல் திறந்து கொள்ளும். ஈழத்தமிழரின் சோதனைக்காலம் முடிந்துவிட்டது. இனிச் சாதனைக்காலம். இருள்வாழ்வு எமக்கினி எப்போதுமில்லை. வெற்றியின் முகமே எமக்கினி விளங்கும். எங்கள் மூச்சுக்கலந்த காற்றுக்கு முன்பாக நிற்கும் பலம் உலகத்தில் எவருக்கும் இல்லை. நாங்கள் வேர்படர்ந்த அறுகம்புல். கொத்திப் புரட்டினாலும் முளைப்போம். கொழுத்தியெரித்தாலும் துளிர்ப்போம். நிமிர்ந்த வாழ்வு வருமென நினை. வருந்தி உழை. தமிழீழம் வருமென நம்பு தளராது போரிடு. உன்னை யாரழித்தல் கூடும் ? உமித் துகளல்ல உன்னை யாரும் ஊதித்தள்ள கைவிலங்கற்று வீசும்காற்றை அவாவுவோம். சிறகடித்துப் பறக்கிறதே பறவை அதன் சங்கீதத்துக்குத் தாளமிடுவோம். விட்டு விடுதலையாகும் விடுதலை வேண்டும் கட்டுக்களற்று எந்தக் காயங்களுமற்று தொட்டுமகிழ எமக்குச் சுதந்திரம் வேண்டும் முன்னர் எமக்கொரு நிலமிருந்தது அந்த நிலத்திலொரு வாழ்விருந்தது அந்த வாழ்வில் ஒரு வாசமிருந்து. வாழ்வைத் தொலைத்து எத்தனை வருடங்கள் ? போரிடுவோம். தொடர்ந்து போராடுவோம். பிரபாகரனென்ற நம்பிக்கையுடனும் புலிகளென்ற தும்பிக்கையுடனும், போராடுவதுதான் பெருமைதரும் காடுகளையும், மலைகளையும் கடப்போம். மேடுகளிலும் பள்ளங்களிலும் நடப்போம். கால்கள் வலிக்குதெனக் களைப்பாறும் போதுதான் பகைவனின் குதிரைகள் பக்கத்தில் வந்து விடுகின்றன. அதனால், நடக்கத்தொடங்கினால் இளைப்பாறல் கூடாது தொடர்ந்து நடப்போம். சூரியன் கைக்கெட்டும் தூரத்தில் சுடர்கிறது தமிழீழம் அது எங்கள் உயிர்க்கோளம் உருவாகிவிட்டது சிசு கருவாய் திறப்பதற்காகவே காத்திருக்கின்றோம். நடுகல் வரிசையை நாளும் தரிசித்து விடுதலைக்கான வேகத்தை விரைவுபடுத்துவோம் ஆவிநிகர்த்த எம் "அன்னை நிலத்தேவி" தன் அளகபாரம் நீவிமுடிந்தாள். முத்துப் பரல்களைக் கொட்டிச் சிரித்தாள். பகைமுழுதும் தீயும் திசையுரைத்தாள். வரமளித்து வல்லமை நல்கினாள். உரம் கொண்டெழுந்தது ஓயாத அலை. இனி ஊர் முழுதும் எமதாக்கியே ஓயும். தாயின் துயரழித்தே தணியும் பகைவரை மட்டுமல்ல துரோகிகளையும் அள்ளிவந்து எம் காலடி ஏற்றும் காற்று எம்பக்கம் கடலும் எம்பக்கம் நேற்றைத் துயர் தொலைய நிகழ்காலம் எம்பக்கம். தாழ்வுற்று எம் தலை குனிந்தது போதும். வாழ்வு சமைப்போம் வாருங்கள். புதுவை இரத்தினதுரை ஐப்பசி, கார்த்திகை 2000 இக்கவிதை பற்றிய உங்கள் மதிப்பீட்டுக்கு இங்கு சொடுக்குங்கள்! - yalie - 03-22-2005 மீண்டும் கவிஞரின் இன்னும் ஒரு கவிதையை இணைத்துள்ளதற்கு நன்றி ஹரி! நம்பிக்கை தான் வாழ்வின் அத்திவாரம்! நம்பிக்கையோடு முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்கிறார் கவிஞர்! உண்மை தானே! மிக விரைவில் கவிஞரின் 'பூவரசும் புலுமச்சிலந்திகளும்" (இது தான் தலைப்பு என்று கேள்வி) லண்டனில் வெளிவர இருக்கின்றது என்று அறிந்தேன்! உண்மை தானா????? - kavithan - 03-22-2005 நன்றி மன்னா.. - tamilini - 03-22-2005 நன்றியண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 03-27-2005 yalie Wrote:மீண்டும் கவிஞரின் இன்னும் ஒரு கவிதையை இணைத்துள்ளதற்கு நன்றி ஹரி! <b>லண்டனில் புதுவை இரத்தினதுரையின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா</b> கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் என்ற கவிதைத் தொகுப்பு நூல் லண்டனில் வெளியிடப்பட உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு லண்டன் ரூற்ரிங் முத்துமாரி அம்மன் கோவில் சிவயோக மண்டபத்தில் இவ்விழா நடைபெறும். சட்டத்தரணி கவிஞர் ந. சிறீக்கந்தராஜா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் லண்டன் முத்துமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் நா.சீவரத்தினம் நூலை வெளியிட பத்மசிறீ ர. கமலநாதக் குருக்கள் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்கிறார். விரிவுரையார் ஆ.யோ.பற்றிமாகரன் சிறப்புரையும் ஊடகவியாலாளர் பொ.ஐங்கரநேசன் வெளியீட்டுரையும் நிகழ்த்துகின்றனர். பிபிசி தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம்ää ஊடகவியலாளர் ஏ.சி. தாசீசியஸ் மற்றும் எஸ். கருணானந்தராஜா ஆகியோர் மதிப்பீட்டுரை வழங்குவர். ரீ.ரீ.என். தமிழ் ஒளியின் பொ. கைலாசபதி நாதன் வரவேற்புரையாறுகிறார். நிகழ்வின் இறுதியில் கலை நிகழ்வுகள் நடைபெறும். நன்றி புதினம் |