Yarl Forum
அறிவியல் ஆயிரம் செய்யும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: அறிவியல் ஆயிரம் செய்யும் (/showthread.php?tid=4039)



அறிவியல் ஆயிரம் செய்யும் - Mathan - 06-28-2005

அறிவியல் ஆயிரம் செய்யும்

பொதுவாக மனித இனத்துக்கு எப்போதும் ஒரு குறுகுறுப்பு உண்டு. நாம் எவ்வாறு உருவானோம், எப்படி உருவானோம் என்பதைப் பல்லாயிரம் ஆண்டுகளாகவே அறிய முயன்று கொண்டே இருக்கிறது. மனிதத் தோற்றம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் இன்றைக்கும் புழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எத்தனை அறிவியற் சிந்தனைகள் வந்துபோதும் கூட அறிவியலாளர் டார்வினின் தத்துவம் தான் காலம் கடந்து நிற்கிறது.
அந்த மனிதத் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும், நமது மூத்த பெற்றோர் யார் என்பதையும் இன்றைய அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது. பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித குலத்தின் தொடக்கம் நிகழ்ந்ததாக அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இன்றைக்கு உலகம் முழுவதும் விரிந்து பரவியுள்ள 600 கோடி மனிதக் கூட்டத்திற்கு ஆதிப் பெற்றோர் யார் என்பதை நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது.

காட்டு விலங்குகளைப் போராடி வீழ்த்தி, அவற்றைக் கையால் கிழித்து அப்படியே சாப்பிட்டு பேச்சு வழக்கு சிறிதும் இல்லாமல், ஊளையிட்டுக் கொண்டே, கருமை நிறத் தோலுடன் பலம் கொண்ட மதயானையின் திடத்தோடு ஆபிரிக்கா காடுகளில் அலைந்து திரிந்தவள்தான் நமது மூத்த தாய். இற்றைத் தலைமுறையிலிருந்து சரியாக பத்தாயிரமாவது தலைமுறையைச் சேர்ந்தவள்தான் இந்தக் கறுப்பினப் பெண். எளிய முறையில் சொல்வதானால் இவள் நமக்கெல்லாம் `பெரும் பாட்டி'.

"இன்று உலகிலுள்ள ஒவ்வொரு இனமும், தனித்தனியாய் உருவானவை என்ற கார்ல்டன் கூன் என்பாரின் கூற்றை, தற்போதைய மரபணுத் தொழில் நுட்பம் தகர்த்து நொறுக்கியிருக்கிறது. மனித உடலிலுள்ள செல்களைப் பற்றி நமக்கெல்லாம் தெரியும். அச்செல்லின் உட்கருவிலுள்ள குரோமோசோம்கள், அதற்கு உள்ளே இருக்கின்ற மரபணுக்கள் என்று நமது உடல், பல கோடிக்கணக்கான செல்களால் ஆனது செல்களின் மரபணுக்களில் இருக்கின்ற டி.என்.ஏ. மூலக்கூறுதான் நமது ஆதித் தாய் யார் என்பதை உலகுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

நமது உடலின் செல்லில் இருக்கின்ற மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ.தான் நமது நிறம் கை கால் அளவு, முக அமைப்பு இன்னபிறவற்றைத் தீர்மானிக்கிறது. இந்த டி.என்.ஏ.மூலக்கூறை நமது தாய் தந்தை இருவரும் நமக்கு வழங்குகின்றனர். ஆனால் செல்லின் உட் பகுதியில் உள்ள சைட்டோபிளாசத்தில் மைட்டோகாண்டிரியா என்றழைக்கப்படுகின்ற பகுதியில் மற்றொரு டி.என்.ஏ. காணப்படுகிறது. இதனை மை.டி.என்.ஏ. என்றழைக்கின்றனர்.

இந்த மை.டி.என்.ஏ.வை. தாயார் மட்டுமே வழங்க முடியும். இதில் தான் நமது ஆதித் தாய் குறித்த செய்தி பொதிந்து கிடக்கிறது. இன்று உலகில் வாழுகின்ற அனைத்து மனிதர்களுக்குள்ளும் காணப்படும் இந்த மை.டி.என்.ஏ.மூலக்கூறை வைத்துத்தான் `அவ்வா', "அவ்வை", `ஈவ்' என்று அழைக்கப்படுகின்ற, `ஏவாளைக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வியத்தகு அறிவியல் விந்தை, மரபணுத் தொழில்நுட்பப் புரட்சியால் விளைந்த சாதனை.

இந்த உண்மையை அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஸ்டோன்கிங், கேன், வில்சன்மார்க் ஆகியோர் கண்டறிந்து உலகிற்குப் பறைசாற்றியுள்ளனர். சரி, நமது மூத்த தாயைக் கண்டுபிடித்தவர்கள், தந்தையைக் கண்டுபிடித்துவிட்டார்களா? என்ற கேள்வி எழும். நேர்மையான கேள்வி.

நமது ஒவ்வொரு உடலிலும் 23 சோடி குரோமோசோம்கள் உள்ளன. கடைசியாக உள்ள ஒரு சோடி குரோமோசோம்கள் பெண்ணுக்கு XY என்றும், ஆணுக்கு XX என்றும் இருக்கும். இவைதான் ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கும். பால் நிர்ணயக் குரோமோசோம்கள் ஆணுக்கென்றே சிறப்பாக அமைந்துள்ள வகுரோமோசோம், தலைமுறை தலைமுறையாக எந்தவித மாற்றமுமில்லாமல் இருந்து வருகிறது. டாக்டர் லுகோட் என்ற அறிவியலாளர், பல நாடுகளில் வாழும் ஆண்களின் ஙு குரோமோசோம்களிலுள்ள டி.என். ஏ.வை ஆய்ந்து பார்த்தார். இந்த டி.என்.ஏ. ஆபிரிக்காவில் வாழும் `அகா' என்ற பழங்குடியினரோடு ஒத்துப்போகிறது என்ற உண்மையைக் கண்டறிந்துள்ளார். அந்த டி.என்.ஏ.வின் வயதைக் கணக்கிட்டுப் பார்த்ததில் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தனது ஆராய்ச்சியின் முடிவாக வெளியிட்டுள்ளார். ஆக மனித குலத்தின் தொடக்கம் ஆப்பிரிக்காவில்தான் நிகழ்ந்தது என்பதும், நமது ஆதிப் பெற்றோர்கள் கறுப்பினத்தவரைச் சேர்ந்தவர்கள் என்பதும், புதுமையான செய்தி.

பல்வேறு இன, மொழி, சாதி, மத வேறுபாடுகளோடு பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனித இனம் `நாமெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள்' என்பதை ஏதோ இன்னும் உணர மறுக்கிறது. இந்த உண்மையை நாம் உணர மறுப்பதால்தான் இட ஒதுக்கீடு கேட்டு பெண்கள் காலங்காலமாய்ப் போராட வேண்டிய அவலம். இன்னும் சில ஆண்டுகளில் உலகம் மற்றொரு போராட்டத்திற்குத் தயாராகப் போகிறது. "புரதம் வேண்டும் புரதம் வேண்டும்" என்ற கலகக்குரல் இனி உலக நாடுகளில் எழக்கூடும். அந்த அளவிற்கு குழந்தைகள் உட்பட அனைவரும் புரதப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம் உருவாகியிருக்கிறது.

நமது அன்றாட உணவில் கிடைக்கும் புரதசத்துக் குறைவால் உடல் வளர்ச்சியும், மூளைவளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்திய நாட்டில் மட்டும் 70 விழுக்காடு குழந்தைகள் புரதச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இறைச்சியில் அதிக அளவு புரதம் கிடைத்தாலும், அதை உண்ணுகின்ற அளவு மிகக் குறைவாகவே உள்ளது. பட்டாணி, பீன்ஸ் போன்றவற்றில் அதிகளவு புரதமிருந்தாலும் பெரும்பாலான மக்கள் இவற்றை உண்ண முடிவதில்லை. காரணம் விளைச்சல் குறைவு அல்லது விலை அதிகம். பயறு வகைகளும் மிகக் குறைந்த அளவே உற்பத்தியாகின்றன.

தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவும் வழங்க வேண்டும். அதேசமயத்தில் பற்றாக்குறையின்றி புரதசத்தும் அளிக்க வேண்டும். இதற்கு என்ன செய்யலாம்? ஜப்பான் நாடு நமக்கு வழிகாட்டுகிறது. தங்கள் நாட்டின் புரதப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்நாடு 62 ஆயிரம் ஹெக்டேர் கடல் பரப்பில் தற்போது கடல்பாசிகளைப் பயிர் செய்து வருகிறது.

கடல்பாசி இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் தரத்திலும், அளவிலும், நிறைந்த புரதச் சத்துகளைக் கொண்டவை. இறைச்சி உணவிற்கு ஒப்பான புரதம் இந்தப் பாசித் தாவரத்தில் இருக்கின்ற காரணத்தால் ஜப்பானியர்களின் தினசரி உணவு வகைகளில் இதுவும் ஒன்று.

இந்தியாவில் மிக நீண்ட கடற்கரை இருப்பதால் கடலில் இந்தப் பாசியைப் பயிர் செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இனி வருங்காலத்தில் நமது உணவுத் தேவைக்கு போதுமான வளமாக கடல்பாசிதான் இருக்கப் போகிறது. அதற்கான ஏற்பாடுகளை நாம் இப்போதிருந்தே தொடங்கினால் எதிர்காலத் தலைமுறையின் உணவுப் பற்றாக்குறையை மட்டுமல்லாமல், புரதப் பற்றாக்குறையையும் போக்க முடியும்.

அருகே அண்ட முடியாத சூரியனைப் படம்பிடித்து, காந்தப்புயல் உட்பட அங்கே நிகழும் அனைத்து மாற்றங்களையும் துல்லியமாகத் தெரிவிக்கிறது நமது அறிவியல். கோள்களையெல்லாம் உருவாக்கும் ஒளிமயமான நெபுலாவைக்கூட படம்பிடிக்கும் அளவிற்கு, மகத்தான வளர்ச்சியை பெற்றுள்ள மனித இனம், பல்வேறு மூடநம்பிக்கைகளில் தன்னை போர்த்திக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

பகுத்தறிவைத் தரக்கூடிய அறிவியலறிவுதான் இந்த உலகத்தின் இப்போதைய தேவை. அணுவில் தொடங்கி அண்டவெளி வரை எங்கும் நிறைந்துள்ள அறிவியல், ஆக்கத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும். மக்களின் நலனையும், பூவுலகின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். `எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு, இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.' அந்த நிலை அறிவியலால் மட்டுமே உருவாக முடியும்.

Thinakural


- hari - 06-29-2005

நன்றி மாதவா !


- tamilini - 06-29-2005

நன்றி மதன் நல்ல தகவல்.


- வெண்ணிலா - 06-29-2005

தகவலுக்கு நன்றி மதன் அண்ணா