![]() |
|
படித்ததில் பிடித்தவை......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: படித்ததில் பிடித்தவை......... (/showthread.php?tid=3186) |
படித்ததில் பிடித்தவை......... - sakthy - 09-24-2005 எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன எங்கள் இமைகள் கவிந்துள்ளன எங்கள் உதடுகள் அண்டியுள்ளன எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம் எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக எங்கள் முதுகில் கசையால் அடிக்குக எங்கள் முதுகுத்தோல் பிய்ந்துரிந்து போகட்டும் தாழ்ந்த புருவங்கள் ஒரு நாள் நிமிரும் கவிழ்ந்த இமைகள் ஒரு நாள் உயரும் இறுகிய உதடுகள் ஒரு நாள் துடிதுடிக்கும் கண்டிய பற்களும் ஒரு நாள் நற நறுக்கும் அதுவரை எங்களை நீங்கள் ஆள்க அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக - சண்முகம் சிவலிங்கம்(" மரணத்துள் வாழ்வோம்" ) - sakthy - 09-24-2005 ஜெயபாலனின் கவிதை கொங்றீட் குளவிக் கூடுகளென மாடித் தொகுதியில் உலகம் விரியும் சென்னைப் புற நகர் தனித்துப் போன ஈழவன் எனக்காய் பின் பனி பெய்யுமிக்கடைச் சாமத்தில் சன்னலின் வெளியே பசுமரம் சிலது இருளில் புலப்படும் பறவைகள் சிலது இருந்து பூபாளம் பாடும் இந்தப் பறவைகள்போல் என் நாட்டில் நானும் வாழ்ந்தேன். மாரியின் பின்னே பூத்துக் குலுங்கும் எனது காடுகள் வசந்த நாளில் நாணற் புதரில் முதுகு சொறியும் எனது ஆறுகள். கரைகள்தோறும் கற்களைத் தேடி நீலமுந்தானை துவைக்கும் என் கடல்கள். எனக்கென நெல்மணி அள்ளித் தந்தபின் மந்தைகட்காகப் பசும்புல் குவிக்கும் என்னரும் வயல்கள். எனது சுமைப் பொழுதினையும் சுகம் செய் தென்றல் உழைப்பிலும் களைப்பிலும் சளைத்திடாது விளையாட்டாக வாழ்வினை வென்று தேனிசை பாடுமென் தோழர் தோழியர் இவையெல்லாம் இழந்து அகதியாய் நானும் உயிர்திருப்பேனோ ? மீண்டும் என்னரும் தமிழீழத்தில் உறுதியாய் இந்த வசந்தப் பொழுதை நுகர்வேன். றைபிள்களோடு பூத்த மரத்தின் நிழலில் அமர்ந்தோ.... புல்லின் கீழே என்னரும் மண்ணுள் துயின்றோ.... எதிர்வரும் வசந்த பொழுதை நுகர்வேன் . - sakthy - 09-24-2005 துயரங்களையே சுமந்து பழகிய நான் இப்போது சுமக்க பழகிக் கொண்டேன் துப்பாக்கியை.......... மார்ஜியா அகமதி ஊஷ்கூயி(ஈரான்) - KULAKADDAN - 09-24-2005 நன்றி சக்தி, நல்ல கவிதைகள். - KULAKADDAN - 09-26-2005 வலைபதிவில் DJ தமிழன் என அறியப்படும் ஒரு வலைப்பதிவாளர். அவரது கவிதைகள் , சில உங்கள் பார்வைக்கக. குறிப்பக தமிழ்மணம் தளத்துக்கு /வலைப்பூக்களை அதிகம் படிக்க செல்லாத வாசகர்களுக்காக. [size=18]<b>கணப்பொழுது வாழ்வு </b> தர்க்கங்களால் நிரம்பிவழியும் உனது உரையாடல்கள் கஞ்சாப்புகையின் மிதப்பைப்போல இன்னொரு உலகுக்கு அழைத்துச்செல்லும் விந்தை நிரம்பியவை நிகழ்காலத்தில் வாழ முயலும் மனசு கரைந்து எண்ணற்ற சூத்திரங்களால் பின்னிப்பிணைக்க்கப்பட்ட தத்துவங்கள் மூளைமடிப்புக்களில் படிகின்றன இந்த வலைப்பின்னலுக்குள் நின்று பத்துவிரல்களையும் நீட்டி எந்தக்கூச்சமுமின்றி எவரையும் குற்றஞ்சாட்டமுடிகின்றது மிக இயல்பாய் பேசவிடு! குருதிச்சமுத்திரத்துள் மிதந்துகொண்டிருக்கும் எனது தீவுநாட்டில் மனிதர்கள் இன்னும் வாழ்வதுபற்றி உனது தேவருலகக்கனவுகளில் மூழ்கிவிடாமல் பலவீனங்களுடன் எனினும் ஏழு வார்த்தை எழுதவிடு மழைநாளில் உதிர்ந்துபோகின்ற பூக்களாய் நண்பர்கள் காணாமற்போனதை மீசையரும்பும் வயதில் காதலை ஆழப்பதித்த பதின்மக்காரி 'நான் நீ நினைக்கும் பெண்ணல்ல' வென விரல்கள் விலக்கி களத்துக்கு விரைந்ததை எனது அழுக்குகளுடன் தத்துவங்களைவிட கணப்பொழுது வாழ்வே சாலவும் சிறந்ததெனும் நம்பிக்கையுடன் புத்தகங்களை விரித்து வைத்து தேநீர் அருந்தி தோழியொருத்தியுடன் உரையாடும் பின்னேரப்பொழுதைப்போல இயல்பாய் எழுத... வேண்டும்; ஒரு வேனிற்காலம். நன்றி Sep 08/05 http://djthamilan.blogspot.com/2005/09/blo...og-post_08.html - KULAKADDAN - 09-26-2005 <span style='font-size:30pt;line-height:100%'><b>ஒரு கொள்கைப் பிரகடனம்</b> </span> வருடம் ஒன்று கடந்திருக்குமா? வளாக நாள்கள் நாவில் வழுக்கிச்செல்லும் நுங்கைப்போல சுவைக்கின்றன நாம், நமக்கான கொள்கைகள் முரண்பாடுகள் தாண்டி வருடங்களாய் உரையாடியிருக்கின்றோம் ஏதாவதொரு உள்ளூர் Band இசைக்கும் Rock n Rollல் கரைந்தபடி chicken wingsடன் ரெட் வைனை நாவில் நனைத்தபடி pool விளையாடியிருக்கின்றோம் அடுத்தநாள் எழுதப்போகும் பரீட்சைகள் பற்றிய பயத்தினை மறந்து பிறகு முதலாம் அடியில் சிதறுகின்ற pool காய்களைப் போல சிதறியிருந்தோம் நகரிற்கொரு திசையில் என்னோடு எனக்கே எத்தனை முரண்பாடுகள் ஒரு பெண்ணும் சேர்ந்துகொண்டால் பிரளயமே வெடிக்கலாமென்று சிவன் போக்கு சித்தன் போக்கென வாழும் ஒருத்தன் காதலித்துக்கொண்டிருப்பவளுக்கு விரைவில் மூன்று முடிச்சிடுகவென்ற நிர்ப்பந்தத்திலும் புன்னகையை மறந்துவிடாத மற்றொருத்தன் எப்படியெனினும் ஒரு காதலி கிடைத்தால் இனிதென அலைபாயும் மனத்துடைய நான் இப்படியாக பின்னிரவொன்றில் சந்தித்த மூன்று 'முட்டாள்கள்' பிரிந்துபோகையில் விடியற்காலை மூன்றாகிவிட்டது இவ்வரிய நிகழ்வை வரலாற்றில் நினைவுகொள்ள ஏதேனுமொன்றை அடையாளமாய் விட்டுச்செல்வதென முடிவெடுத்தோம் புத்திசாலித்தனமாய் தேநீர்த்துளிகள் எதுவுமில்லாது எம்முடன் கூடவே விழித்திருந்த தேநீர்க்கோப்பைகளையும் வெளியே வெளுக்கும் வானத்தையும் சாட்சிகளாகக் கொண்டு நாம் மணித்தியாலங்களாய் கதைத்ததிலிருந்து பிழிந்தெடுத்து இப்படிப் பிரகடனப்படுத்தினோம்... பெண்களுக்கும் உள்ளது மிகுந்த சுவாரசியம் ஆண்களின் முன்னாள் காதலிகளை அறிந்துகொள்வதில். May 18/05 http://djthamilan.blogspot.com/2005/05/blo...og-post_18.html - KULAKADDAN - 09-26-2005 மழைத்தூறல் ஓய்ந்து ஈரம் இரவை சிறகுகளால் கோதிக்கொண்டிருந்தபோது வீட்டுக்கு வந்திருந்தார் புத்தர் Santa மட்டுமே புகைக்கூண்டுக்குள்ளால் இறங்குவார் என்றெண்ணிய என் நான்கு வயது மகளுக்கு கோடையில் சாம்பர் பூத்திருந்த அடுப்பிலிருந்து தூசி தட்டியபடி புத்தர் வந்திருந்தது வியப்பாயிருந்தது நான் அருந்துவதற்கு மிதமாய் கலந்துவைத்திருந்த வோட்காவை பகிர்ந்தபோது ஒவ்வொரு மிடறும் தாகத்திற்கு இதமாய் இருக்கிறதென்றார் அரசியல் சினிமா ஜென் செக்ஸ் என ஒரு பட்டத்தைப்போல திசையில்லாது உரையாடல் அசைந்துகொண்டிருக்கையில் புத்தர் திடீரென வினாவினார் கடந்துபோன காலத்தில் நீ இழைத்த தவறுகளுக்கு வருத்தம் கூற விரும்புகின்றாயாயென நான் பாவங்கள் விளைவித்த மனிதர்கள் நிரையாக நிற்க வெட்கிக் குனிந்தபடி நடுங்கும் குரலில் கோருகின்றேன் மன்னிப்பு இப்போது மனது மேகமாய் மிதந்து குதூகலம் மழைநீராய் திரண்டபோது DJ drop the s*** என்றலறியபடி ராப் பாடலுக்கு ஆடத்தொடங்குகின்றோம் நானும் புத்தரும் நேரம் நள்ளிரவைக்கடந்தபோது வெறுமையான மதுக்கோப்பைகளையும் சில நட்சத்திரங்களையும் துணைக்கு விட்டுவிட்டு புத்தரும் எனது நான்குவயது மகளும் காணாமற்போயிருந்தனர். 2. மதியவுணவு இடைவெளிகளின்போதுதான் முகையவிழ்த்திருந்தது அவளுடனான நட்பு அவளையும் இரண்டுவயதுக் குழந்தையையும் சில மாதங்களுக்கு முன் கைவிட்டு இன்னொரு பெண்ணுடன் தன் துணைவன் வாழத்தொடங்கியிருக்கின்றான் என்றாள் விழிநீரைத்துடைத்தபடி எனக்கு வாய்த்ததைப் போல புத்தர் அவள் வீடு தேடி ஓர் இரவில் போகக்கூடும் அல்லது அவளிடமும் அவள் குழந்தையிடமும் நான் புத்தரையும் காணாமற்போன எனது நான்கு வயதுக்குழந்தையும் என்றேனும் ஒருநாள் அடையாளம் காணவும்கூடும் http://djthamilan.blogspot.com/2005/08/san...-dj-drop-s.html - RaMa - 09-26-2005 கவிதைகள் மிகவும் அருமை. தொகுத்து தந்தற்கு நன்றிகள் - அனிதா - 09-26-2005 ம்ம் நல்லாயிருக்கு... நன்றிகள்... - sakthy - 09-26-2005 முதல் கவிதை யாருக்காவது எங்கயாவது கேட்ட மாதிரி இருக்கா ? - sakthy - 09-26-2005 அன்பு அன்பு என்ற தலைப்பில் மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்...... அம்மா என்றேன் உடனே ! கேட்டது அம்மாவாக இருந்தால் இன்னும் சின்னதாய் சொல்வேன் நீ... என்று -தாஜ் சந்தர்ப்பங்கள் எடுப்பதற்குள் நின்றுவிடும் தொலைபேசி மணி சற்று வெளியே சென்றபோது அப்போதுதான் வந்து விட்டுப்போன யாரோ அந்த முகம்தானா என்று நினைவூட்டிக் கொள்வதற்குள் சிக்னலில் விழும் பச்சை வந்து சேர்வதற்கு சற்று முன் எரியூட்டபட்ட உடல் எப்போதும் ஒரு கணம்தான் தாமதமாகிறது -மனுஷ்ய புத்திரன் சொல்லாத வார்த்தைகள் தூக்கு மாட்டிக் கொள்ளும் போது உன்னிடம் சொல்ல நினைத்த வார்த்தைகள் உள்ளே சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் நாக்கை மட்டும் வெளியே தள்ளிக் கொண்டிருக்கிறது. - நிலாக்குட்டி வதை திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தொலைத்துவிட்டு தவிக்கையில்... சின்ன வயதில் வீட்டுத் தொழுவத்தில் தெரு நாய் ஈன்ற குட்டிகளை கோணிப்பையில் திணித்து- ஊருக்கு வெளியே- கள்ளிக் காட்டில் கொண்டுபோய் விட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது! -விஜயலெட்சுமி துபாய் கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சி எனக்குள். ரசித்து ரசித்து வாங்கிய பொம்மைகளொடு காத்திருக்கிறேன் நெடுனேரமாக. வீடு நுழைந்த முகம் கண்டு தொட்டுக் கொஞ்சி மகிழ நெருங்குகையில் ' யாரும்மா... இவங்க?' என்கிறாள் மழலை மொழியில் என் மகள். -இசாக் தாஜ்மகால் நாடு சுடுகாடாய் இருப்பதால் உலக அதிசயமாய் ஒரு கல்லறை -கபிலன் வலி விழுங்கிய மீன் தொண்டையில் குத்துகையில் உணருகிறேன் தூண்டிலின் ரணம் -விஜய் திருத்தப்பட்ட வருத்தம் இறந்தவன் இறுதிப்பயணத்தில் எத்தனை பேர் வருகிறார்கள் என்று ஒருமுறை கண்களைத் திறந்து பார்த்தான்.. வாழ்ந்ததற்கு வருத்தப்பட்டு மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான். -தமிழன்பன் முரண் முரண்டு பிடிக்கும் ஆட்டை அடிக்க முயன்ற என்னைத் தடுத்தவாறு சொன்னாள் அம்மா "அடிக்காதேடா.. அது கருப்பசாமிக்கு நெர்ந்துவிட்டது.." -மணிகண்டன் கவனம் நகரும் தார்ச்சாலை இருபக்க மரங்கள் பசுமையான வயல்வெளிகள் முப்பரிமான மலைகள் முகத்தில் மோதும் தென்றல் எதிர்வரிசை இளமை எதையும் ரசிக்க விடவில்லை சில்லறைப் பாக்கி... - சதாசிவம் எங்கும் எதிலும்.. கள்ளச் சாராயம் காய்சிய பணத்திலும் உடலை விலை பேசி விற்று வந்த பணத்திலும் ஏழைத் தாலியின் அடகுப் பணத்திலும் ஈட்டிக்காரனின் வட்டிப் பணத்திலும் அதே புன்னகையுடன் காந்தி படம் ! - யாரோ - கீதா - 09-27-2005 நல்லாருக்கு கவிதைகள் வாழ்த்துக்கள் - அனிதா - 09-27-2005 <!--QuoteBegin-sakthy+-->QUOTE(sakthy)<!--QuoteEBegin-->முதல் கவிதை யாருக்காவது எங்கயாவது கேட்ட மாதிரி இருக்கா ?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ம்ம்...'கன்னத்தில் முத்தமிட்டால்' இல் மாதவன் இழுத்துச் செல்லப்படும்போது சொல்லும் கவிதை இது தானாம்.. இந்த கவிதை ஏதோ ப்ளொக்கில் படித்த ஞாபகம்... :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sakthy - 10-01-2005 ஈரம் படிந்த வீடு எப்படி விடு பட்டேன்... நான் மட்டும்! ஒரு சொல், ஒரு ஜாடை , ஒரு முகக்குறி காட்டியிருந்தால் அந்த இரவில் நிழலாய் தங்கியிருப்பேனே உன்னோடு. தொப்பூள் கொடி சுவாசம் தந்த தாயே நீ மாரடைந்து இறந்த அந்த சுவாச கணத்தில் என் முகம் ஓடிற்றா அம்மா தகர மயானம் முன் குவிந்த விராட்டிப் படுக்கையில் நீ. இரட்டை வடம் மார்புச் சங்கிலி மேல் மூத்தவனுக்கு குறி. அன்னம் பொங்கி அடுப்படியில் வேந்த உன் வலதுகரத்தில் குறடு நுழைத்து வெட்டிய வளையலோ அடுத்தவனுக்கு. மகளே உனக்கு என்னம்மா வேண்டுமென்ற அப்பாவிடம் கொடிகம்பில் காயும் உன் நைந்த உள் பாவாடை காட்டி அழுகிறேன் பெருங்குரலில் . நானும் நீயும்....... நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில் நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான் அடக்கமாக எனக்குப் பின்னால் நின்று கொண்டிருப்பாய் நீ உன் இனத்து கற்புக்கரசிகளைச் சொல்லி உன்னை மிரட்டுவேன் நான் என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும் அமைதியாக இருப்பாய் நீ நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய சொல்லிக் கொள்வதில்லை நான் நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து பறைசாற்றியாக வேண்டும் நீ எனக்குப் பிறகு என் நினைவுகளோடு வாழவைக்கிறார்கள் உன்னை உனக்குப்பிறகு உன் தங்கையோடு வாழவைக்கிறார்கள் என்னை. -ஜெயபாஸ்கரன் - selvam - 10-01-2005 உன் பார்வையடிபட்டு வீழ்ந்து கிடக்கும் என்னை உன்இதயமருத்தவமனைக்கு அப்புறமாய் எடுத்துச்செல்லலாம் முதலில்; ஓர் புன்னகை முதலுதவி செய்;. நான் உனது இதயத்தையும் கடவுள் என்பேன் ஏன் தெரியுமா? இங்குள்ளவர்கள் கல்லைத்தானே கடவுள் என்கிறார்கள். - கீதா - 10-01-2005 நல்ல கவிதை நன்றி - sakthy - 10-01-2005 அகத்தகத்தகத்தினிலே.......... காதலர் தினம் அன்னையர் தினம் என வரிசையாய் எல்ல தினங்களின் போதும் நீ கொடுத்த முத்தங்கள் , கடிதங்கள் , வாழ்த்து அட்டைகள் , பரிசுகள் என எல்லவற்றையும் அடிக்கடி நினைத்துப் பார்த்து உயிர்த்திருக்கிறேன் பலமுறை. வழக்கமானதொரு மாலைப்பொழுதில் என் தலை கோதி , உச்சி முகர்ந்து '.........ப் போல இருக்கிறாய்' என்று அன்னிச்சையாய் யாரோ ஒரு நடிகனின் பெயரை நீ சொன்னபோது செத்துப் போய்விட்டேன் ஒரேயடியாக . 'சிட்டி'சன் நாரை நடக்கும் குளத்தில் நண்டு பிடிச்சதில்லை முங்கு நீச்சல் போட்டியில் மூச்சுத் திணறியதில்லை கண் பறிச்சு வெல்லமிட்டு வெடி தேங்காய் தின்னதில்லை அடுக்குப் பானை அரிசி திருடி ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை ஆனாலும் சொல்கிறாய் ஜயாம் லிவிங் என்று ! - sakthy - 10-01-2005 கண்ணீருடன்..... உனது தந்தையின் இறப்புச் செய்தி ஈ-மெயிலில் வருகிறது. சாஃப்ட்வேர் சிலந்திவலைப் பின்னலுக்குள் தகப்பன் நினைவுகளைத் தேடி எடுத்து கொடுக்கப்பட்ட சிறு இடைவெளியில் கொஞ்சமாய் அழுகிறாய். உயிர்மீட்க உதவாத உனது டாலர்களோடு நீ வந்து சேரும் போது எரித்த சாம்பல்கூட எஞ்சியிருக்காது. அதனாலென்ன நண்பனே..... இறந்துபோனவர்களுடன் தொடர்புகொள்ள ஒர் வெப்சைட் வராமலா போய்விடும் ? - sakthy - 10-01-2005 "கண்களிருந்தே காட்சிகள் தோன்றும். களங்களிருந்தே தேசங்கள் தோன்றும் துயரத்திலிருந்தே காவியம் தோன்றும் தோல்வியிலிருந்தே ஞானங்கள் தோன்றும் சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும் தோணிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும் மரமொன்று விழுந்தால் மறுபடி தளைக்கும் மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும் ? பூமியை திறந்தால் புதையலும் இருக்கும் பூக்களைத் திறந்தால் தேன் துளி இருக்கும் நதிகளைத் திறந்தால் கழனிகள் செழிக்கும் நாளையைத் திறந்தால் நம்பிக்கை சிரிக்கும்." வைரமுத்து (தண்ணீர் தேசம்) - வெண்ணிலா - 10-01-2005 சக்தி படித்தவற்றில் பிடித்தவற்றை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|