Yarl Forum
தமிழுக்கு இணை என்று சொல்வதற்கு ஆங்கிலத்துக்குஎந்தத் தகுதியு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: தமிழுக்கு இணை என்று சொல்வதற்கு ஆங்கிலத்துக்குஎந்தத் தகுதியு (/showthread.php?tid=2483)



தமிழுக்கு இணை என்று சொல்வதற்கு ஆங்கிலத்துக்குஎந்தத் தகுதியு - adsharan - 11-13-2005

`தமிழுக்கு இணை என்று சொல்வதற்கு ஆங்கிலத்துக்கு எந்தத் தகுதியும் இல்லை!'

* `தமிழனால் தமிழன் அழிந்தான் என்பது நமது நேற்றாக இருந்தது'

*`தமிழனால் தமிழன் அழிந்து கொண்டிருக்கிறான் என்பது நமது இன்றாக இருக்கிறது'

* `தமிழனால் தமிழன் மீட்கப்பட்டான் என்பது நமது நாளையாக இருக்கட்டும்'

ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தனுடனான சிறப்புப் பேட்டி

* இயந்திரத்தனமான வெளிநாட்டு வாழ்க்கைச் சூழலிலிருந்து மிகக் குறைவாகவும்; அச்சம் நிறைந்த கொழும்புச் சூழலிலிருந்து உண்மைகள் மறைக்கப்பட்டனவாகவும் வெளிவருகின்ற ஈழத்து இலக்கியப் படைப்புகளை நோக்குகையில்; தரமான படைப்புகளைத் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறோம் என்று கருதலாமா?

இதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் கூற வேண்டியிருக்கிறது. அண்மையில் நமது எஸ்.பொ.இங்கு தமிழகத்தில் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். `21 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கியங்கள் இலங்கையிலிருந்தே வெளிவரும்' என்றார். இதற்குப் பல எதிர்ப்புக் குரல்களும் இங்கு கிளம்பின.

உண்மையில், களத்தில் நின்றுகொண்டு அல்லது களத்தை நினைத்து வெறெங்கிலுமாவது இருந்து எழுதுகின்ற படைப்புகளில் சோர்வு தெரியாது. ஒரு தூய்மை இருக்கும். வேகம் இருக்கும். அதையெல்லாம் எம்முடைய படைப்புகளில் காண்கிறோம்.

இதற்கு மாறாக, ஆம் என்பதற்கான பதில் தான்; படைப்பாற்றல் மிக்கவர்களின் கொழும்பு வட்ட இலக்கியங்களும் படைப்புகளும்! இவை காத்திரத்தன்மை குறைந்தவை. உண்மைகள் மறைக்கப்பட்டவை.

ஆனாலும் கூட, இவையெல்லாவற்றையும் தாண்டி தமிழீழ இலக்கியம் செழிப்பாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது.

`தமிழ்மொழி அழியாது' என்று அழகாக உச்சரிக்கிறார்களே தவிர; `அதை அழிய விடமாட்டோம்' என்பதற்கான சரியான முயற்சிகளில் இங்குள்ள கலைஞர்கள் என்கிற திரை உலகமோ, பெரும்பாலான இலக்கியர்களோ, ஊடகங்களோ இறங்கிச் செயற்படவில்லையே!

தமிழகத்தில் எனக்குச் சுமையாக இருக்கும் விடயம் இதுதான்! நீங்கள் குறிப்பிட்ட இவர்களெல்லாம் தமிழைப் படுகொலை செய்து வேரோடு பிடுங்கி எறிகிறார்கள். வழிகாட்ட வேண்டிய பலர் வியாபாரம் பார்க்கிறார்கள். ஆனாலும், இதை எதிர்த்து சில பேர் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். மருத்துவர் ராமதாஸ், தொல் திருமாவளவன், மருத்துவர் சேதுராமன் இவர்களோடு உலகமே போற்றுகிற நம்முடைய பழ.நெடுமாறன் எல்லோரும் இணைந்து ஒரு பெரிய தமிழ் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி முன்நடத்தி வருகிறார்கள். இவர்கள் தமிழ்க் காப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனாலும், மக்களிடம் இந்தத் தமிழ்க் காப்பை நேரடியாக எடுத்துச் செல்வதற்கு ஆட்சியிலுள்ள மக்கள் செல்வாக்குள்ள பெருங்கட்சிகள் நினைத்தால் சாதிக்க முடியும். ஆனால், அவர்களிடம் அப்படி ஒரு முயற்சி இருக்கிறதா ஈடுபாடு இருக்கிறதா, அது குறித்த கவலை இருக்கிறதா என்றால் எதுவுமே இல்லையென்றே படுகிறது. அதுதான் கவலை.

கல்வி மொழியாக தமிழ் மொழி ஆக வேண்டியது; தமிழ் மொழி குறித்த பெரிய கட்டாயமாகும். தமிழ்க் காப்புத் தேவையென்றால் தமிழ்நாட்டில், தமிழ் காலத்தாழ்வு இன்றி கல்வி மொழியாக வேண்டும். அதேபோன்று, ஆட்சிமொழியாக அது முழு அளவில் செயற்படவும் வேண்டும்.

*ஒடுக்குமுறையின் பயங்கரத்தை ஒரு விடுதலையாளன் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டியிருக்கிறது?

பல்வேறு ரூபங்களிலுமான ஒடுக்குமுறைகளையெல்லாம் எதிர்க்கக்கூடியவன் தான் உண்மையான விடுதலையாளனாக முடியும். நிற ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்கு முறை என்ற இவ்வெல்லா ஒடுக்கு முறைகளையும் எதிர்க்கப் போராடித்தான் ஆகவேண்டும். இதுவே உண்மையான விடுதலைப் போர். ஆனாலும், இவற்றுள் தேசிய ஒடுக்குமுறைக்கே முதலிடம் தரவேண்டும். ஒரு தேசிய இனத்தை இன்னொரு தேசிய இனம் ஒடுக்குவதென்பது பேராபத்தானது.

எப்படியென்றால், நிற ஒடுக்குமுறையில் ஒடுக்கப்படுகின்ற கறுப்பன் எந்தவொரு காலகட்டத்திலும் கறுப்பனாகவே இருப்பான். அவன் ஒடுக்கப்படுவான், மிதிக்கப்படுவான், துன்புறுத்தப்படுவான்; ஆனால் அழிக்கப்படமாட்டான். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவன் கறுப்பனாகவே இருப்பான். பின்னர் தனக்குரிய எல்லாவற்றையும் பெற்று நிமிர்வான்.

வர்க்க ஒடுக்குமுறையில் ஒடுக்கப்படுகின்ற தொழிலாளியை முதலாளி சுரண்டுவான், பிழிவான். ஆனால், அழிந்து போகவிடமாட்டான். ஏனெனில் தொழிலாளி இருந்தால் தான் அவனால் முதலாளியாக இருக்க முடியும்! சாதிய ஒடுக்கு முறையிலும் அப்படித்தான். தாழ்த்தப்பட்ட மக்கள் அழிக்கப்படுவதில்லை. அவன் தாழ்த்தப்படுவான், இழிவுபடுத்தப்படுவான், சேரிக்கு நெருப்பு வைத்தும் கூட துன்புறுத்தப்படுவான். ஆனால், அழிக்கப்பட மாட்டான்.

ஆணாதிக்க ஒடுக்குமுறையிலும் பெண் வதைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டாலும் அவள் அழிக்கப்பட மாட்டாள். பல வருட காலங்களாக அவள் போராடி வெற்றிபெறுவாள்.

ஆனால் தேசிய ஒடுக்குமுறையில், ஒடுக்கப்படுகிற ஒரு தேசிய இனம் அழிக்கப்படக் கூடியது. அழியும் தன்மையுடையது. அழிந்தும் இருக்கிறது.

*அவ்வாறு அழிந்து போன ஒரு தேசிய இனம் பற்றி......

தென் அமெரிக்காவிலிருந்து வந்த நாகரிகங்கள் இரண்டு - `மாயா நாகரிகம்', `மின்கா நாகரிகம்'. இவற்றின் மொழி, கலை, பண்பாடு எல்லாமே அழிந்துபோய்விட்டன. இது மிகவும் நீண்டகாலப் பழைய கதை என்றாலும் அதன் வரலாறு நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

இதுபோன்று தான் 700 வருடங்களுக்கு முன்பு, தமிழராக இருந்த சேர மக்கள் இன்று மலையாளிகளாகப் போய்விட்டனர். இத் துயர நிலை எல்லா நாடுகளிலும் உள்ள தேசிய இனங்களுக்கும் இருக்கிறது.

ஒரு இனம் அழகாக உருவாகி, வளர்ந்து, தேசிய இனமாகி விட்டதென்றால் அதனைக் காப்பாற்றியாக வேண்டும். அதற்காகப் போராடுவது நம்முடைய முதல் கவனமாக இருக்கவேண்டும்.

*இங்கு திராவிடம் பேசுபவர்கள் தற்போது தமிழ் மொழியைச் சரியாகவே மதிக்கிறார்களா?

இங்குள்ள திராவிடர்கள் எல்லோரும் தமிழ் உணர்வாளர்கள். ஆனால், ஆங்கிலத்தை முண்டுகொடுத்து நிறுத்துவதற்கான முயற்சியாளர்களாக; பார்ப்பனர்கள் மீது தவறான பார்வையைச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றே எனக்குச் சொல்லத் தெரிகிறது.

பார்ப்பனரல்லாதவர்கள் தமிழைப் படித்துக்கொண்டிருந்தால், பார்ப்பனர்கள் ஆங்கிலத்தைப் படித்து வளர்ந்து விடுவார்கள் என்றும், தமிழர்கள் பார்ப்பனர்களுக்குச் சரியாகப் போட்டி போட்டு வளரவேண்டுமானால் ஆங்கிலம் படித்தே ஆகவேண்டும் என்றும் திராவிடர்கள் நினைக்கிறார்கள்.

பெரியார் என்ன கூறியிருக்கிறார் என்றால், பார்ப்பனர்கள் எதைச் செய்கிறார்களோ; எந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார்களோ அதற்கு எதிரானதையே நாம் செய்யவேண்டும் என்கிறார். அதுதான் சரியான அணுகுமுறையாக இருக்குமாம்.

ஆங்கிலத்தைத் தமிழர்களிடம் பரப்ப வேண்டும் என்பதில் இங்குள்ள பார்ப்பனர்கள் மிகுந்த அவதானமாகச் செயற்படுகிறார்கள்.

ஆனந்த விகடன், குமுதம் போன்ற வார இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் ஊடகங்கள் என்பவற்றினூடாக ஆங்கிலம் புகுத்தும் உத்தியை விரைவாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆங்கிலம் படிப்பதே சிறப்பென்று `த ஹிந்து' (The Hindu) பத்திரிகை எழுதிக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் இவற்றையெல்லாம் நம்பி வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மொழியைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

* திராவிடர்களுடைய பார்வையும், பார்ப்பனர்களுடைய கருத்தும் எவ்வாறு முரண்படுகின்றன?

தமக்குச் சமமாகத் தமிழர்கள் தொழில் வாய்ப்பில் உயர்ந்து வளரக்கூடாது என்று மட்டும் பார்ப்பனர்கள் நினைத்திருப்பார்களானால், தாங்கள் மட்டுமே ஆங்கிலத்தைப் படித்திருப்பார்கள். தமிழர்களை வற்புறுத்தியிருக்கமாட்டார்கள். ஆனால், பார்ப்பனர்கள் தமிழர்களை ஏன் வற்புறுத்துகிறார்கள்?

தமிழைக் கல்விமொழி ஆக்கவேண்டும் என்று தமிழன் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றவன் பார்ப்பனன். ஆங்கிலம் படிக்க வைப்பதனூடாக நம்மை இனமாற்றம் செய்ய அவன் எப்படியெல்லாமோ முயல்கிறான். இதன் மூலம் தமிழ்த் தேசியம் அழிந்துபோய்விட வேண்டும் என்பதே அவனுடைய எதிர்பார்ப்பு. இந்தச் சூழ்ச்சியில் தமிழர் - நாம் பதவி பெற்று உயர்ந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால் அவனுக்குச் சமமாக தமிழனாக உயராமல் தாழ்வானதோர் கலப்பினமாகவே உயர வேண்டும் என்று நினைக்கிறான். தமிழனுடைய பார்வை இவ்விடயத்தில் முற்றிலும் தவறாகிப்போய் விடுகிறது.

* நீங்கள் குறிப்பிடுகிற `பார்ப்பனச் சூழ்ச்சி' இங்கு தமிழ் அல்லாத ஏனைய இனங்கள் மீதும் பிரயோகிக்கப்படுகிறதா?

ஆம். பார்ப்பனச் சூழ்ச்சியால் பல இனங்கள் மாறிப்போய்விட்டன. ஆனால், தமிழரல்லாதவர்களால் பிராமண (பார்ப்பன) எதிர்ப்புகள் எதனையும் மேற்கொள்ள முடியவில்லை. ஆந்திராவில் பிராமணர்களுக்கெதிரான எதிர்ப்பு இல்லை. கன்னடம், மலையாளத்திலும் கூட இல்லை. அங்கெல்லாம் இருக்கின்ற தமிழர்கள்; தமிழரல்லாத இன்னொரு இனமாக மாறிப்போய்விட்டார்கள். இவ்வாறு மாறிப்போனதால் என்ன நடக்கிறதென்றால், தமிழர்களாக இருந்தவர்கள் தெலுங்கர்களாக மாறும்போது 85 வீதம் சமஸ்கிருதம் கலக்கிறது. அப்போது அங்கே தெலுங்கர்களாக இருக்கிற பிராமணர்களுக்கு; தெலுங்கர்களாக மாறிய தமிழர்களை விடவும் கூடுதல் உரிமை வருகிறது. மாறிப்போன தமிழனுக்கு 15 வீதமான உரிமையே கிடைக்கிறது. இங்கே சமஸ்கிருத மொழி தன்னுடையது என்றும் தமிழிலிருந்து தெலுங்குக்கு மாறியவன் தனக்குக் கீழானவன் என்றும் பார்ப்பனன் நினைக்கிறான்.

ஆனாலும், சமஸ்கிருத மொழியைத் தமிழன் ஏற்றுக்கெண்டு விட்டான் என்கிற பெருமிதம் இவனுக்கு! இறந்துபோய்விட்ட சமஸ்கிருதத்தை எப்படிக் கொண்டு தள்ளி, இன்னொரு இனத்தை உருவாக்கி, அதில் அவன் பெரும்பான்மையாகி.......! இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

*இதையெல்லாம் உங்களுடைய ஏதாவதொரு படைப்பில் பதிவு செய்திருக்கிறீர்களா?

புதிதாகப் பதிவு செய்துகொண்டிருக்கின்ற `தமிங்கிலர் எதிர்ப்பு இயக்கம்' என்ற நூலில் இவற்றை உள்ளடக்கவுள்ளேன். ஆனால், தற்போது இங்கு பல மேடைகளில் இக்கருத்துகளைப் பகிரங்கமாகப் பேசி வருகிறேன்.

*தமிழ் நாட்டில் இன்றுவரை நிலவுகின்ற எவ்வெந்த நடைமுறைகள் உங்களுக்கு விசனத்தை ஏற்படுத்துகின்றன? தமிழீழத்துடன் ஒப்பிட்டுக் கூறுங்கள்.

இங்கு - தமிழ்நாட்டில் பல்வேறு சிக்கல்கள் உண்டு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டிய சிக்கல்கள் அவை. நமது நாட்டில் தந்தை பெரியார் தோன்றவில்லை. ஆனால், அவர் தமிழ்நாட்டில் எவையெல்லாம் ஒழியவேண்டுமென்று கனவு கண்டாரோ அவற்றையெல்லாம் அவர் இல்லாமலே நாம் தமிழீழத்தில் ஒழித்துக் கட்டியிருக்கிறோம். 90 வயதைத் தாண்டிய பிறகும் மக்களிடம் சென்று கருத்துகளைச் சொன்னவர் பெரியார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் செவிகொடுக்கவில்லை என்பது என்னுடைய பெருங்குற்றச்சாட்டு. வெறுமனே பெரியாரைப் போற்றிக் கொண்டிருப்பதில் பயனில்லை. அவருடைய கொள்கைகளைப் போற்றவேண்டும்.

இன்றுவரை தமிழ்நாட்டில் ஓரளவு மக்களேனும் திருந்தியிருக்கிறார்கள் என்றால் அதற்கு தந்தை பெரியார் ஏற்படுத்திய விழிப்புணர்வே காரணம்.

ஆனாலும், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்ற தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள், இன்றுவரையில் தேர்தலில் நிற்கமுடியவில்லை. `திண்ணையம்' என்ற இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட தமிழனின் வாயில் மலத்தை அள்ளித் திணித்திருக்கிறார்கள். இவைபோன்ற பெருங்கொடுமைகள் எதனையும் தமிழீழத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு தமிழ் மக்கள் செய்ததில்லை.

அதுபோல் சாதியின் பேரில் சங்கங்களும் எம் நாட்டில் இல்லை. சாதியின் பெயரை சொந்தப் பெயருக்கு முன்னால் போடும் பழக்கமும் இல்லை. (காமராஜ நாடார், முத்துராமலிங்கத் தேவர், பக்தவச்சல முதலியார், ராஜா அண்ணாமலைச் செட்டியார்).

இன்னும் சொன்னால், தமிழீழத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லப்படுவதுமில்லை, சமையலறைகளில் காஸ் அடுப்புகள் வெடித்துப் பெண்கள் இறப்பதுமில்லை. தமிழ்நாட்டில் இந்தக் கொடுமைகள் நிறைந்து போயிருப்பதால் இவற்றைச் சுற்றிய இலக்கியங்கள் அந்தப் போராட்டத் தன்மையுடனேயே படைக்கப்படுகின்றன.

மேலும் தமிழ் நாட்டில் இன்னொரு பக்கம் பொழுது போக்குத் தன்மையுடன் கூடிய இலக்கியங்களாக (அவற்றுள் பெரும்பாலானவற்றைக் குப்பைகள் என்றே சொல்ல முடியும்) வெளிவருகின்றன. ஆனால், இவற்றுள்ளும் மிகச் சூடான போராட்ட உணர்வு கலந்த ஒடுக்குமுறைக்கெதிரான சில வெடிப்புகள் நல்ல இலக்கியங்களாக மலர்கின்றன `பூமணியன் புதினம்' போன்றவற்றை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். `இன்குலாப்', `அறிவுமதி' போன்றவர்களின் பாடல்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானவையாகவுள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது; ஒரே நேரத்தில் அனைத்து ஒடுக்குமுறைகளையெல்லாம் உடைத்தெறிந்த தமிழீழம் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும்.

*நீங்கள் குறிப்பிடுகிற ஒரு சிலரைத் தவிர, தமிழுக்காகவே வாழ்கிறோம், ஈழமக்களை நேசிக்கிறோம் என்றெல்லாம் பதிவு செய்பவர்கள் நடைமுறைக்குப் புறம்பானவர்களாகவே இருக்கிறார்கள் என்று கூறலாமா?

தமிழ் நாட்டில் விடுதலைப் போரை ஆதரிக்கிற இலக்கியர்கள் துணிவாகத் தமது கருத்தைப் பதிவு செய்கிறார்கள். ஆனால், மிகக் குறைவாக இருக்கிறார்கள். அவர்களும் தமிழீழம் குறித்து இறுக்கமான சட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள் அவிழ்த்து விடப்படும்போது பல இலக்கியர்கள் வாயை மூடி விடுகிறார்கள். பின்னர் அவர்கள் வேறு எதையாவது எழுதிக் கொண்டிருப்பார்கள்.

*இங்கு காதல் குறித்து எழுதுபவர்களும் வெளிவருகிற இதழ்களும் மிக அதிகமாக இருக்கிறதே;

(சிரிக்கிறார்) நான்கு நான்கு வரிகளில் எழுதிவிட்டுப் புதுக்கவிதை என்கிறார்கள். அவை கவிதைகள் அல்ல உரை இலக்கியம் என்று வேண்டுமானால் கூறலாம். அழகழகான ஓவியங்களுடன் வெளிவருகிற குமுதம், விகடன் ஆகியவற்றில் வெளிவருகிற கவிதை என்கிற பெயரில் வெளிவருகிற வரிகளைப் படித்திருப்பீர்கள், ஏதாவதொன்று ஞாபகம் இருக்கிறதா? புரியாமல் எழுதுவது தான் உயர்ந்த கவிதை என்று சொல்கிற முட்டாள்களும் இருக்கிறார்கள். ஓசை இல்லாமல் உரை நடை வடிவில் இருந்தாலும், எடுத்துச் சொல்கிற மாதிரி எழுதுபவர்களை வாழ்த்தலாம். நம்முடைய மண்ணிலிருந்து வெளிவருபவை பளிச்சென நேரடியாக ஒன்றைச் சொல்கிறபோது இயல்பான இலக்கியங்களாக மனதை நிறைக்கின்றன.

*ஈழப்போராட்டத்தின் கட்டாயம்/ இன்றியமையாமை பற்றி தமிழ் நாட்டிலுள்ள ஊடகங்கள் உங்களிடம் கேட்கும்போது நீங்கள் கூறும் பதில் என்ன?

எந்த நாட்டு ஊடகங்கள் கேட்டாலும் என் பதில் ஒன்றுதான். ஆனால், எந்நாடு தவிர்ந்த பிற நாட்டுக்காரர்களுக்கு அதிகமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது

எமது மண்ணின் போராட்டம் இனவெறியின் அடிப்படையில் தொடங்கப்பட்டதல்ல நடத்தப்பட்டதுமல்ல. சிங்கள மொழியும், இனமும் அழியவேண்டும் என்று நாங்கள் போர் தொடுக்கவில்லை. தமிழ் மொழியையும், இனத்தையும் அவர்களிடமிருந்து காத்துக்கொள்வதற்காகவே நாங்கள் போர் தொடங்கியவர்கள்.

நாங்கள் சிங்கள இனத்தைத் துன்புறுத்த வேண்டும் என்று போர் தொடங்கியவர்களல்ல. சிங்கள இனம் தமிழ் இனத்தைத் துன்புறுத்தக் கூடாது என்று போர் தொடங்கியவர்கள். நாங்கள் சிங்கள ஷ்ரீலங்காவை அடிமைப்படுத்துவதற்காகப் போர் தொடுக்கவில்லை. தமிழீழத்தை விடுதலை செய்வதற்காகப் போர் தொடங்கியவர்கள்.

இதற்கெல்லாம் முன்பு எல்லோரும் ஒன்றாக, ஒரே மண்ணில் வாழவேண்டுமென்று விரும்பியவர்கள். இயலாமல்போன நிலையிலேயே போராட்டத்தைத் தொடங்கியவர்கள். எங்களுக்கு அது தேவையாக இருக்கிறது. இல்லையென்றால் எங்களுடைய தேசியத் தன்மையை இழந்து எங்களுடைய அடையாளத்தைத் தெலைத்துவிடுவோம். எங்கள் மீது திணிக்கப்பட்ட போரை எதிர்ப்பது தவிர்க்க முடியாததாகிப்போனது. எங்களுக்கான கடமையிலிருந்து நாங்கள் நழுவ முடியாது. எங்கள் விடுதலையை வென்றெடுப்பதற்காக நாங்கள் போராடித்தான் ஆகவேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது. இதை எனது கடமையென்றுதான் கருதுகிறேன்.

*தமிழீழம் விடுதலை பெற்றால்; அவ்வாறு அமைகிற தமிழீழம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இங்கு - தமிழ்நாட்டில் ஒரு பரவலான கருத்து நிலவுகிறதே!

ஆம். மிகவும் கொச்சைத்தனமாக இக்கருத்துப் பரப்பப்படுகிறது. இந்திய அரசை வழிநடத்துகிற, அதற்கு வழி காட்டுகிற அரசியல் அறிவுரையாளர்கள் விடுகின்ற மிகப்பெரிய பிழை இது! விடுதலை பெற்று அமைகிற தமிழீழம் ஒருபோதும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையாது.

இந்தியாவின் அரவணைப்பை இன்னும் இன்னும் பெரியளவில் வேண்டுகிற, இந்தியாவை நேசிப்பதற்காகத் துடிக்கிற, இந்தியாவோடு உறவுகொண்டு வாழவேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிற, அதைக் கட்டியெழுப்பப் பணியாற்றுகிற ஒரு மண்ணாகவே தமிழீழம் இருக்கும். ஏனெனில் இந்தியா தமிழீழத்திற்கு ஒரு அண்டை நாடாகவே இருக்கும். ஆகவே அண்டை நாடு எப்போதும் தமிழீழத்திற்கு உறவுநாடாக இருக்கவேண்டுமென்றே தமிழீழம் விரும்புவது இயல்பானது. அது மட்டுமல்ல அப்படி விடுதலை பெற்றதொரு தமிழீழம் எந்தக் காலத்திலும் இந்தியாவுக்கு எதிராகப் போரைத் தொடுக்காது. அச்சுறுத்தலாக இருக்கும் என்று சொன்னால், இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்கும் என்பது தான் அதன் பொருள். அந்த நிலை உருவாக வாய்ப்பே இல்லை.

இதற்கு எடுத்துக்காட்டாகச் சொன்னால், கியூபா ஒரு சின்னஞ்சிறிய தீவு. பக்கத்தில் மிகப்பெரிய வலிமை கொண்ட வல்லரசாக அமெரிக்கா இருக்கிறது. எந்தக் காலத்திலும் கியூபா அமெரிக்காவுக்கு எதிராக போர் தொடுக்காது. தொடுக்கவும் முடியாது. அதேபோன்று தான் பிரிட்டனுக்குப் பக்கத்தில் அயர்லாந்து இருக்கிறது. 300 வருடகாலப் போராட்டத்தின் பின்னர் விடுதலை பெற்ற ஒரு சிறு தீவு அது. அயர்லாந்தும் பிரிட்டனுக்கு எதிராக ஒருபோதுமே போர் தொடுக்க முடியாது.

ஆனால், இதற்கெல்லாம் அப்பால், (குரலில் மிகுந்த அழுத்தத்துடன் கூறினார்) கியூபா அமெரிக்கா மீது போர் தொடுத்தால் அதை எதிர்த்து கியூபா போராடும். பிரிட்டன் அயர்லாந்து மீது போர் தொடுத்தால் அயர்லாந்து மக்களும் பிரிட்டனை எதிர்த்துப் போராடுவார்கள். இதேபோன்றுதான் தமிழீழத்தின் நிலையும் இருக்கும்.

தமிழீழம் ஒரு நாடாகவோ, அரசாகவோ அமைந்தால் எந்தக் காலத்திலும் இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்காது. ஆனால், இந்தியா தமிழீழம் மீது போர் தொடுத்தால் அதை எதிர்க்கப் போராட்டம் நடத்துவது தமிழீழத்தின் கடமையாக இருக்கும். இங்குள்ள நிருபர் ஒருவர் என்னிடம் நீங்கள் கேட்ட இதே கேள்வியைக் கேட்டபோது நான் இவ்வாறு தான் பதிலளித்திருந்தேன்.

*ஈழத்தில் சிங்கள இனம் 2,500 ஆண்டு கால வரலாறு கொண்டதென்கிறார்களே! சரியா?

தவறு. ஏனென்றால் கி.பி.500 ஆம் ஆண்டில் தான் சிங்கள மொழியே தோன்றுகிறது. விஜயன் இலங்கைக்கு வந்தது கி.மு.5 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். ஆனால், அதற்கு 1000 ஆண்டுகளுக்குப்பிறகு கி.பி.500 இல்தான் சிங்கள மொழியே தோன்றுகிறது. சிங்கள தேசிய இனமும், அதன் பின்புதான் தோன்றுகிறது. ஆகவே, அவர்களுடைய காலம் 1500 ஆண்டுகளே. இவ்வளவு காலமும் அவர்களுடைய கொள்கையாக இருந்தது; தமிழ் இனத்தை முற்றாக அழித்தொழிப்பதே. இது குறித்த அவர்களுடைய நிலைப்பாடு மிக உறுதியாக இருக்கிறது.

*அமைதித்தீர்வு குறித்து மூன்று வருடங்களாக முடிவுறாத பேச்சுக்குறித்து....

இலங்கையில் தமிழர்களுக்கான இடம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்ற வரை சுருக்கி விட்டார்கள். வெளியே சிலாபம் போன்ற இடங்களைக்கூட விட்டு, தமிழர்களின் மண்ணாக இருந்த பட்டிப்பளையாறு, அம்பாறை மாவட்டங்களிலெல்லாம் தாங்கள் குடியேறி தமிழ்த் தேசியத்தை அழித்தொழிப்பதில் உறுதிாக இருக்கிறார்கள். சிங்கள தேசிய இனத் தலைமையின் மிக உறுதியான நிலைப்பாடு; தமிழ்த் தேசிய இனத்தை முற்றாக அழித்தொழிப்பது. ஆகவே அமைதித் தீர்வு என்று வருகிறபோது தமிழீழ மக்களின் சிக்கலைத் தீர்ப்பது அவர்களுடைய நோக்கமல்ல, தமிழீழ மக்களைத் தீர்ப்பது தான் அவர்களுடைய நோக்கம். இதை நாம் இதுவரை கால வரலாற்று அடிப்படையில் உணர்ந்துகொள்ள முடியும். அமைதி வேண்டும் என்று உணரப்பட்டால் அது அறுவடையாக வேண்டும். அவ்வாறு உணர்வதற்கே இவ்வளவு காலம் எடுக்கிறதென்றால், பேச்சுவார்த்தை மூலம் எமது மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று படவில்லை.

தற்போது நிலவுகிற அமைதியை நிரந்தரமான, முடிவான, தீர்வான அமைதியாகக் கொள்ள முடியாது. இதுவும் போராட்டத்தின் ஒருகால கட்டம்தான்.

வரலாற்றின் அனுபவத்தில், பட்டறிவில்தான் பெற்ற முடிவு இதுதான்!"எனது மக்கள் இதுவரை காலமும் பட்ட இன்னல்களிலிருந்து மீண்டும் அமைதியாக வாழவேண்டுமெனில், அந்த அமைதியை தமிழீழ விடுதலையின் மூலமாகத்தான் அது முடியும்"
http://www.thinakural.com/New%20web%20site...3/Article-8.htm