Yarl Forum
அந்த பிஞ்சு முகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: அந்த பிஞ்சு முகம் (/showthread.php?tid=2161)



அந்த பிஞ்சு முகம் - AJeevan - 12-07-2005


<b>அந்த பிஞ்சு முகம்</b>
<img src='http://www.sla.purdue.edu/WAAW/Whitaker/images/onesadlostsm-m.jpg' border='0' alt='user posted image'>
மன சோர்வோடு வைத்தயசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் வெளிப்பகுதியில் அமர்ந்து
அவசர சிகிச்சைப் பிரிவு வாயிலை நோக்கியவாறு அமர்ந்து இருக்கிறேன்

உள்ளேயும் வெளியேயுமிருந்து டாக்டர்களும், தாதிகளும் ,பணியாளார்களும், நோயாளிகளை பார்க்க வருவோரும் என் முன்னால் நடந்து போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்.

என் பார்வை மட்டும் வாயிலை நோக்கியதாக இருக்கிறது.

இரு குழந்தைகளும் ஒரு பெண்ணும் என் அருகால் நடந்து செல்கின்றனர்.

முன்னே போனவர்கள் அவசர சிகிச்சை பிரிவு விசாரிப்பு பகுதியில் ஒரு கணம் நிற்கிறார்கள்.

சொற்ப நேரம்தான் அது

அவர்களை ஓரு டாக்டர் அழைத்துக் கொண்டு முன்னே போகிறார்.

முன்னே போய்க் கொண்டிருந்தவர்களில் சுமார் 5-6 வயது மதிக்கத் தக்க மூத்த பெண் குழந்தை திடீரென அவர்களை விட்டுப் பிரிந்து நிற்கிறாள்.

தாயும் 4 வயது மதிக்கத் தக்க ஆண் குழந்தையும் மட்டும் அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டு நடப்பது தெரிகிறது.

அவர்களிலிருந்து பிரிந்த பெண் குழந்தை நான் இருக்கும் திசை நோக்கி வருகிறாள்.

அவள் முதுகில் ஒரு பை இருக்கிறது.

அதை மெதுவாக இறக்கிக் கொண்டே " வணக்கம். இங்கே உட்காரலாமா?" என்று ஜெர்மன் மொழியில் என்னிடம் கேட்கிறாள்.

"வணக்கம். உட்கார்" என்கிறேன்.

உட்கார்ந்தவள் பையிலிருந்து 'சினெல்கோ' குளிர்பான போத்தலை வெளியே எடுத்து பார்த்து விட்டு மீண்டும் பைக்குள் திணிக்கிறாள்.

பக்கத்து தானியங்கி மெசினில் எடுத்த காப்பியை கையில் வைத்து உறிஞ்சிய வண்ணம் அவளைப் பார்க்கிறேன்.

அவள் தாயும் தம்பியும் சென்ற திக்கை நோக்கிப் பார்க்கிறாள்.

ஏதாவது அருந்துகிறாயா? என்கிறேன்.

வேண்டாம் இது என் தம்பியுடையது என்று பையிலிருந்து சினெல்கோ குளிர்பான போத்தலை வெளியே எடுத்து என்னிடம் காட்டுகிறாள்.

உனக்கு வேண்டுமானால் இந்த மெசினில் எடு என்கிறேன்.

என்னிடம் காசில்லை. அம்மா வரட்டும் என்கிறாள்.

பரவாயில்லை. நீ எடு என்கிறேன்.

இங்கே இலவசமா எனக் கேள்வி எழுப்புகிறாள்.

இல்லை. நான் வாங்கித் தருகிறேன் என்கிறேன்.

அம்மா வரட்டும் என்கிறாள்.

அம்மா எங்கே போகிறாள் எனக் கேட்கிறேன்.

அப்பா செத்துட்டார். பார்க்கப் போறாங்க.

என் இதயம் நின்று துடிக்கிறது.

அந்தக் குழந்தையின் முகத்தில் அந்த வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை என்பது என்னை சாகடிக்கிறது.

சாவு என்பதைக் எப்படியோ, எங்கேயோ கேட்டு அச்சமடைந்திருக்கிறாள் என்பது மட்டும் எனக்குள் உறுதியாகிறது.

அதனால்தான் தாயோடு போகாமல் நின்று விட்டாள் .

அதை உணர்கிறேன்...........

அதற்கு மேல் அந்த பச்சிளம் பாலகனிடம் என்ன கேட்பது?

உனக்கு என்ன அருந்த வேண்டும்?

கோலா என்கிறாள்.

அதில் எடு என்கிறேன்.

தானியங்கி மெசினிடம் போனவள் மனதை மாற்றிக் கொண்டவளாக ஐஸ்டீ என்கிறாள்.

எடு என்று 5 பிராங் சில்லறையை அவளிடம் நீட்டுகிறேன்.

அவள் வாங்கி மெசினுக்குள் போட்டு விட்டு ஐஸ்டீயை எடுக்கிறாள்.

மிகுதி பணம் திரும்பி வருகிறது.

அதை எடுத்து என்னிடம் தந்து விட்டு நன்றி என்று கூறி ஐஸ்டீயை பருகுகிறாள்.

என் மனம் வார்த்தைகளின்றித் தவிக்கிறது.

தாயும் தம்பியும் டாக்டரும் எங்களை நோக்கி வருகிறார்கள்.

இவள் ஓடிச் சென்று என்னைக் காட்டி ஐஸ்டீ வாங்கித் தந்ததாக சொல்கிறாள்.

அந்த வேதனையிலும்
நன்றி சொன்னாயா என்று குழந்தையிடம் தாய் கேட்கிறாள்.

ஓ......சொல்லிட்டேனே என்று என்னைப் பார்க்கிறாள்.

டாக்டர் குழந்தை முன் மண்டியிட்டு அமர்ந்து
"வந்து அப்பாவை ஒரு முறை பார்" என்று சொல்கிறார்.

சிறியவன் அப்பா செத்துட்டார். நான் பாத்துட்டேன் நீயும் வந்து பார் என்கிறான்.

இரு குழந்தைகளையும் அணைத்து அழைத்துக் கொண்டு டாக்டர் செல்கிறார்.

தாய் மட்டும் தூரத்தே நிலத்தில் அமர்ந்து மெளனமாக கண்ணீர் வடிக்கிறாள்.

நான் எழுந்து சென்று " நான் இருக்கும் இடத்தில் உட்காருங்களேன்." என்கிறேன்.

இல்லை தனியாக அழ வேண்டும் என்கிறாள்.

அதற்கு மேல் நான் என்ன சொல்வது?

நான் திரும்பி வந்து அமர்கிறேன்.

அவள் உட்கார்ந்து கொண்டு அழுத வண்ணம் தனியே ஏதோ புலம்புவது தெரிகிறது.

இறந்து போன தந்தையை பார்த்து விட்டு குழந்தைகள் திரும்பி அம்மாவிடம் ஓடி வருகின்றன.

டாக்டர் தூரத்தே நின்று பார்த்து விட்டு நடக்கிறார்.

நான் திரும்பி வீடு வர நினைத்து எழுந்து போய் அவள் கைகளை பற்றி "என் அனுதாபங்கள்" என்கிறேன்.

அவள் நன்றி என்கிறாள்.

ஏதாவது தேவையா? என்கிறேன்.

இல்லை.
உறவினர்கள் வரும் வரை நிற்கிறேன் என்கிறாள்.

நான் வருகிறேன் என்று சொல்லி விட்டு குழந்தைகளின் கைகளை பற்றி விடை பெற்று நடக்கிறேன்.

பெண் குழந்தை என்னை நோக்கி பின்னால் ஓடி வருகிறாள்.

நான் நின்று திரும்புகிறேன்.

கோலாவுக்கு நன்றி என்று சொல்லி
நின்று என்னை நோக்குகிறாள்.

வார்த்தைகள் வர மறுக்கின்றன.

"சுயிஸ்" (மீண்டும் சந்திப்போம்) என்று சுவிஸ் மொழியில் சொல்லி விட்டு தாயை நோக்கி நடக்கிறாள்.

பனி கொட்டும் இரவின் தாக்கமே புரியாமல் என் காரை நோக்கி நடந்து வந்து அமர்கிறேன்.

வீடு வரை மட்டுமென்ன
இப்போதும் கூட தந்தையின் பிரிவையோ அதன் தாக்கத்தையோ உணர முடியாத அந்த பிஞ்சு முகம் என்னை வாட்டி வதைக்கிறது...................


- inthirajith - 12-07-2005

நிஜங்கள் எப்பொதும் கொடுமைதான் அஜிவன் மாடு செத்தால் கன்று வாழ்வதற்கு இயற்கையே வழி காட்டும் என்று மனதை தேற்றுவோம்


- RaMa - 12-07-2005

தந்தையின் பாசத்தை முழுமையாக உணரமுன்பே இழந்து விட்டார்கள்.
நன்றி அஐிவன்


- Vasampu - 12-07-2005

<b>அஜிவன்</b>

பிஞ்சுகளுக்கு பிரிவின் சோகம் புரிவதில்லை. அவர்களுக்கு அதை அந்த வயதில் புரியவைக்கவும் முடியாது.


- அருவி - 12-07-2005

Quote:முன்னே போய்க் கொண்டிருந்தவர்களில் சுமார் 5-6 வயது மதிக்கத் தக்க மூத்த பெண் குழந்தை திடீரென அவர்களை விட்டுப் பிரிந்து நிற்கிறாள்.
Quote:பெண் குழந்தை என்னை நோக்கி பின்னால் ஓடி வருகிறாள்.

நான் நின்று திரும்புகிறேன்.

கோலாவுக்கு நன்றி என்று சொல்லி
நின்று என்னை நோக்குகிறாள்.



இது பிரிவின் சோகம் புரியாததனால் அல்ல புரிந்ததனால் என்று நினைக்கிறேன்.


- MUGATHTHAR - 12-07-2005

Quote:நான் எழுந்து சென்று " நான் இருக்கும் இடத்தில் உட்காருங்களேன்." என்கிறேன்.
இல்லை தனியாக அழ வேண்டும் என்கிறாள்.


இளம் வயதில் கணவனை இழந்து நிக்கும் பெண்களின் நிலை இதுவாகத்தான இருக்கிறது இவர்களின் கவலைக்கு எந்த ஆறுதல் வார்த்தைகளும் திருப்திப் படுத்த மாட்டாது


- shobana - 12-07-2005

inthirajith Wrote:நிஜங்கள் எப்பொதும் கொடுமைதான் அஜிவன் மாடு செத்தால் கன்று வாழ்வதற்கு இயற்கையே வழி காட்டும் என்று மனதை தேற்றுவோம்


ஆம் அண்ணா நிஐங்கள் ரொம்ப கொடுமையானவை...
அதை நேரே அனுபவித்ததால் தான் சொல்லுகிறேன்


- AJeevan - 12-07-2005

ஒருவனது இன்னலை பகிர்ந்து கொள்ளும் போது
அவர்களோடு நாமும் இணைந்து விடுகிறோம்.
அதற்கு மேல் விபரம் சொல்ல வார்த்தைகள் வருவதில்லை.

மெளனம்
எனும் மொழி சொல்லாததை சொல்கிறதா?

நேற்று இரவு வீட்டுக்கு வந்த போது இரவு மணி 11.00.
அதிகாலை 1.00 மணி வரை
எனக்கு தூக்கம் வர மறுத்தது.
இதயத்தை வருடிய அந்த நிகழ்வை எழுதினேன்.
இங்கு கற்பனை என்பது துளி கூட இல்லை.
பலரை வாட்டியிருக்கிறது.

ஒரு அதிர்வு விபத்தால்
என் இதயம் ஒவ்வொரு கணமாக நொந்த வேதனையை இந்நிகழ்வு அதிகரித்ததா குறைத்ததா?

என் மனம் இன்னும் குமுறுகிறது..............?

தேசங்கள் வேறுபட்டாலும் இதயத்தால் இணைந்து அழுகிறோம்.
இதுதான்
மனித நேயத்தின் அழு குரல்...................


- tamilini - 12-07-2005

அறியா வயது செத்துப்போனார் என்ற சொல்லின் தாக்கம் அந்தக்குழந்தைக்கு தெரியவில்லை இப்போ. ஒரு வேளை வளர வாட்டலாம்.


- KULAKADDAN - 12-09-2005

தந்தை அல்லது தாயின் இழப்பு சிறுவயதில் ஏற்பட்டால் மிக வருத்தம் தரகூடியது. புரியாத பருவத்தில அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தா விட்டாலும் வளர வளர தனது சினேகிதர்களின் அப்பா/ அம்மா அவர்களுக்கு செய்வதை பார்த்து மனதில் ஒரு தவிப்பை தோற்றுவிக்கலாம். உங்கள் நிஜ கதையை வாசிக்கும் போது மனதில் தோன்றிய உணர்வுகளை வார்த்தையால் விளக்குவது கடினம்.


- AJeevan - 12-09-2005

உங்கள் கருத்துகளையும் உணர்வுகளையும்
அவர்களிடம் சொல்ல முடியவில்லையே என இப்போது ஆதங்கமாக இருக்கிறது.
காரணம்
அவர்களை மீண்டும் பார்க்கவில்லை............
அவர்கள் யார் என்பது கூட தெரியாது.
ஆனாலும் நமது பிராத்தனைகள் நிச்சயம் அவர்களை சென்றடையும்.
நம்புவோம்.........................


- vasisutha - 12-10-2005

அஜிவன் அண்ணா உங்கள் மன உணர்வுகளை அருமையாக
எழுதியுள்ளீர்கள்.


- shanmuhi - 12-13-2005

நேரில் கண்டு, இதயத்தை வருடிய நிகழ்வினை கதையாக வடித்ததை வாசிக்கும் போது மனமே கலங்கிவிட்டது.


- Rasikai - 12-15-2005

நேரில் கண்ட அந்த நிஜத்தின் கொடுமையை சிறுகதை மூலம் மிக அ௯ழகாகக் கூறியுள்ளீர்கள்.மேலும் தொடர்ந்து கதை எழுதுங்கோ


- Mathan - 12-15-2005

உங்களுடைய உணர்வுகளை கதையாக தந்திருக்கின்றீர்கள். அந்த குழந்தையை நினைக்க வேதனையாக இருக்கின்றது.


- AJeevan - 12-15-2005

அனைவருக்கும் நன்றி.
வெகு விரைவில் ஒரு உண்மைக் கதை..................


- Selvamuthu - 12-16-2005

மார்கழி 7 இல் கதை வந்திருந்தபோதும் என்னால் இப்போதுதான் படிக்க முடிந்தது. உண்மைக்கதை என்று படித்தபோது உண்மையில் என் இதயம் கனக்கின்றது. எனது மிக நெருங்கிய உறவுகளிற்கும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்தத்தாக்கங்கள் அகல இரண்டு வருடங்கள் வரை ஆனது. இப்படியான துயரங்கள் யாருக்கும் வரவே கூடாது.