![]() |
|
வரலாற்றின் நரகல்களுக்குள் புதைந்துபோன இன்னுமொருத்தி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வரலாற்றின் நரகல்களுக்குள் புதைந்துபோன இன்னுமொருத்தி (/showthread.php?tid=1746) |
வரலாற்றின் நரகல்களுக்குள் புதைந்துபோன இன்னுமொருத்தி - narathar - 12-27-2005 <img src='http://img270.imageshack.us/img270/5651/500288255tv.jpg' border='0' alt='user posted image'> கொதித்துக் கொண்டிருக்கிறது என் தேசம்.. உலையிலிட்ட அரிசியாய் அச்சத்திலே வெந்து கொண்டிருக்கும் சனங்கள். இன்னும்.. ரோம் எரிந்து கொண்டிருக்க, பிடில் வாசிப்பில் மூழ்கியிருந்த நீரோ மன்னனாய் சுய தேடல்களுக்குள் ஆழ்ந்தபடி நான்.. கணனியின் திரையில் நேற்றுத்தான் பார்த்த அவளது மரத்துப் போன உடல்... அதே இறுகியும், புதைந்தும் போன உணர்வுகளோடு. தர்சினி... வஞ்சிக்கப்பட்ட என் ஆயிரமாயிரம் சகோதரிகளுள் ஒருத்தி. உருண்டையாய், குமிழியாய் இனம்புரியாத ஏதோவொன்று அடிவயிற்றிலிருந்து விண்ணென்று கிளம்பித் தொண்டையை அடைத்துக் கொள்கிறது.. மூச்சு முட்டுகிறது. என்னை விட்டுவிடுங்கள்... விட்டுவிடுங்கள்... முருகா... கந்தா... 'காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க, தாக்க தாக்க தடையறத் தாக்க, பார்க்க பார்க்க பாவம் பொடிபட...' எப்போதோ பாடமாகிப் போன வரிகள் இப்போதேன் நினைவுக்கு வருகின்றன? ....என்னை விட்டுவிடுங்கள்.... விடுங்கள்ள்ள்ள்ள்.. 'அல்லற் படுத்தும் அடங்கா முனியும், பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும், கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும், பெண்களைத் தொடரும் பிரம ராட்ஷதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட...' உயிர்ப்பிழந்த குரல் தேய்ந்து கொண்டே போகிறது... கடைசி நம்பிக்கையும் கைநழுவிப்போன தருணங்களில், இயலாமையின் உச்சகட்டத்தில் தத்துவங்களும், சித்தாந்தங்களும் செயலிழந்துபோக ஆன்மாவோ இருந்தும் இல்லாதிருக்கின்ற.. - அல்லது யாருக்குத் தெரியும் - ..இல்லாதிருந்தும் இருக்கின்ற இறைவனிடம் சரணடைந்து விடுகிறது. உதடுகள் கிழிந்து தொங்க... மார்பு கடித்துக் குதறப்பட்டிருக்க... திமிறித் தோற்றுப்போய் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.., அவர்களது காம விளையாட்டுக்களை. பிய்த்தெறியப்பட்ட ஆடைகளுக்குள்ளால் வடிந்து கொண்டிருக்கிறது என் ஆன்மா... தனது வீம்புகளோடும்.., (அவ)மானங்களோடும்.., (அவ)மரியாதைகளோடும். வேதனை.. வேதனை.. உயிர்பிடுங்கும் வேதனை. ஒவ்வொரு அணுவும் வலிக்கிறது.. ஒவ்வொரு உணர்வும் மரத்துப் போகிறது. *எனது கண்களின் வடிப்பில்.., என்னுள்ளத்தின் தவிப்பில்.. உங்களுக்குத்தான் எவ்வளவு இன்பம்..? எரிந்து கொண்டிருக்கிறது உடம்பு, அனலிலிட்ட புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது இதயம். உடலில் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச சக்தியையும் ஒன்றுதிரட்டி நெருங்க முயன்ற மூன்றாவது **அதிரடிச் சட்டைக்காரனின் முகத்தில் காறி உமிழ்கிறேன்... "சீ... நாயே!" பூட்ஸ் காலால் அடிவயிற்றில் விழுந்தது ஒரு உதை. சர்வமும் கலங்கிற்று.., கர்ப்பப்பை கரைந்து கால்களினூடு ஒழுகிற்று. பிறக்காத என் மதலையின் ஈனக்குரல் எங்கிருந்தோ அலைந்துவந்து உயிர் பிடுங்கிச் சென்றது. *பேய்களால் சிதைக்கப்படும் பிரேதத்தைப் போன்று சிதைக்கப்பட்டேன்.. ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம் இரத்தம் தீண்டிய கரங்களால் அசுத்தப்படுத்தப்பட்டன.. நிலமெங்கும் சிதறிக் கிடக்கும் பச்சை இரத்தம் நான் சிதைந்து போனதன் தடயமல்ல... அவர்களிலிருந்து வெளிப்பட்ட குரூரத்தின் அடையாளம். அவர்களது வக்கிர புத்தியால் வென்றெடுக்க முடிந்தது இவ்வளவும்தான். தோற்றுப் போனது என் உடல்தான்.., உயிரல்ல. மரணித்தது வெறும் பிண்டம்தான்.., நானல்ல. ஒருகாலத்தில் 'நானாயிருந்த' என் உடலைக் கல்லோடு பிணைத்துக் கிணற்றிலெறிகிறார்கள். கோழைப் பயல்கள்.. பயந்தாங்கொள்ளிகள்.. நானோ இங்கிருக்க, வெறும் உடல் உங்களை என்ன செய்துவிடப் போகிறது? 'நான்' இன்னும் உயிர்த்திருக்கிறேன்... சீதையாய்ப் பிறந்தபோது கற்பு என்ற உங்கள் கற்பிதத்தை நிரூபிப்பதற்காகத் தீக்குளிக்க வைத்தீர்கள்.. நான் உயிர்த்திருந்தேன். திரௌபதி என்னை, அடகுப் பொருளாய் வைத்து சூதாடியபோதும், நட்டநடுச் சபைதனில் துகிலுரிந்தபோதும்.. நான் உயிர்த்திருந்தேன். அரிச்சந்திரன் மனைவியாய், அரியணையில் அமர்ந்திருந்தவளை வெறும் பண்டமாய் மதித்து அந்தணனுக்கு விற்றீர்கள்.. நான் உயிர்த்திருந்தேன். குஷ்டரோகி உன்னைக் கூடையில் சுமந்துதிரிய நேர்ந்தபோதும்.. நான் உயிர்த்திருந்தேன். நம்பிவந்தவளை, துன்பங்களை மட்டுமல்ல ஒற்றை ஆடையையும் பகிர்ந்துகொண்டவளை நடுக்காட்டில் தன்னந்தனியே விட்டு ஓடினீர்கள்.. நான் உயிர்த்திருந்தேன். மன்னம்பேரி, கோணேஸ்வரி, கிருஷாந்தி, சாரதாம்பாள் வரிசையில் நாளை நானும்.., உங்கள் வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களில்.., என் ஆயிரமாயிரம் சகோதர சகோதரிகளின் நினைவுகளில்.. உயிர்த்திருப்பேன். என்றென்றைக்கும் உயிர்த்திருப்பேன். *ஓய்ந்தேன் என மகிழாதே, உறக்கமல்ல தியானம்.. பின்வாங்கல் அல்ல பதுங்கல்.. எனது வீணையின் மீட்டலில் கிழிபடக் காத்துக் கிடக்கின்றன, உனக்கு நரையேற்றும் காலங்கள்... *நினைவில் நின்றவை.. **அதிரடிச் சட்டை - (நன்றி:- திசேரா) (அண்மையில்தான் அறிமுகமாகி, ஆழ்மனச் சிதைவுகளிலிருந்து எனை மீட்பித்த ஒரு உறவுக்கு..) posted by நிவேதா at 5:26 AM http://rekupthi.blogspot.com/2005/12/blog-post_27.html - வர்ணன் - 12-28-2005 இன்று யாழில் அந்த மனித மிருகங்களை பரலோகம் அனுப்பும் ஒவ்வொரு கிளைமோர் குண்டு வெடி சிதறல்களும் தர்சினிக்கு நாங்கள் செலுத்தும் அஞ்சலி வேட்டுக்களாகவே உணர்கிறோம் ! நன்றி நாரதரே உங்கள் இணைப்புக்கு. - RaMa - 12-28-2005 நன்றி நாரதர் இந்த கவிதையை இனைத்தமைக்கு. கிருசாந்தி ரஐனி வரிசையில் இன்று தர்சினி. இவர்களின் சாந்திக்கு அவங்களின் சாவும் தான் பரிகாரம். - Rasikai - 12-28-2005 கையாலாகாத்தனமாய் வெட்கி வருந்தி,வேதனையில் தவித்திருந்தது போதும் என்று எம் மக்கள் பொங்கி எழுந்துள்ளனர். அந்த ஆவேசத்தில் அவளது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். இணைப்புக்கு நன்றி அண்ணா. - MUGATHTHAR - 12-28-2005 இன்று தமிழ் உணர்வுள்ள எவரையுமே உலுக்கிய ஒரு சம்பவம் கேட்ட நேரத்தில் கண் கலங்காதவன் உண்மையிலே எமது தமிழீழத்துக்கு அருகதையில்லாதவன் ...........ஆனாலும் இந்த சாவையும் கொச்சைப்படுத்தி விபச்சாரம்...........சா.........பிரச்சாரம் செய்கிற ஊடகங்களும் இருக்கத்தானே செய்கின்றன எனும் போது நெஞ்சு மேலும் கனக்கிறது............. நன்றி நாரதரே கவியின் இணைப்புக்கு........... |