உரையாடலின் அறுவடை
'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன்.
பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன.
இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.
நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது?
அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.
'....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல்
நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே
நம்மைவிட்டு விடுகிறது....' என்ற வரிகளில் அவர் தெரிந்தார்.
*************
உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்)
-------------------------
கேட்கும் கேள்விகளிலிருந்தும்
அளிக்கும் பதில்களிலிருந்தும்
கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும்
நமக்கிடையேயான தூரத்தை
நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம்
தொடர்ந்து எழுப்பும் கேள்விகள்
உடைத்து உடைத்து உள் பார்க்கிறது
தொடர்ந்து அளிக்கும் பதில்கள்
உள் திறந்து திறந்து காண்பிக்கிறது
தொடரும் மௌனம்
இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது
பூட்டினால் திறக்கவும்
திறந்தால் பூட்டவும்
கேள்வியும் பதிலுமற்ற உரையாடல்
நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே
நம்மைவிட்டு விடுகிறது
https://akazhonline.com/?p=6797