"தந்தை எனும் தாய்" [உண்மைக் கதை]
தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகளும், அதிலும் குறிப்பாக தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிப்பதும் ஆகும். உதாரணமாக,
“அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார
என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“
“எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும்
அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“
மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் [தந்தையில் தாய் இருப்பினும்] அன்றாடச் சிக்கல்கள் அவரைத் [பிள்ளைகளை] தாயற்ற குழந்தை போலத் துன்புற வைத்த சூழலை தவிர்க்க, குழந்தை செய்யும் குற்றம் எத்தன்மைத்தாயினும் பெற்றவள் பொறுத்துக் கொள்வாள். அவளைப் போலவே இறைவனும் [நானும்] அடியவர்க்கு [பிள்ளைக்கு] அவரது பிழை பொறுத்து வாழும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப் பட்டேன் 08 / 06 / 2007 திகதி அன்று. ஆமாம் திடீரென மனைவிக்கு தோன்றிய தண்டு மூளைச் சவ்வுக் காய்ச்சல் [meningitis], பதினாறு மணித்தியாலத்துக்குள், நானோ, பிள்ளைகளோ எதிர்பாராதவிதமாக காலை ஐந்து மணிக்கு அவரின் உயிரை பறித்துவிட்டது.
"ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை?
எந்தை அவள்- தன் ஒளி அணைத்துவிட்டாள்!
சிந்தை ஓடவில்லை?- எம் மனம் ஆறவில்லை?
எந்தை அவள்-கண் மூடி உறங்கிவிட்டாள்!!"
தாயற்ற குழந்தை போலத் என் குழந்தைகளை துன்புற வைத்துவிட்டான். இப்ப நான் தந்தையும் தாயாக இரு வேறு நிலையில், ஆனால் ஒருவனாக செயல் பட வேண்டிய கட்டாயம் உணர்ந்தேன்.
“நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அறத்
தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே“
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று எனும் அத்துவிதக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள பாடல் இது. அது போலத்தான் நானும் தந்தையாகவும் தாயாகவும் இனி கவனமாக வாழ்வை நகர்த்தவேண்டும் என்று தாயுமானவரின் இந்த வரி எனக்கு உறுதியையும் வலுவையும் கொடுத்ததை நான் மறுக்கவில்லை.
படித்துக்கொண்டு இருக்கும் இளம் அகவையில், தாயை இழப்பது மிகப்பெரிய மோசமான இக்கட்டான சூழ்நிலை என்றாலும், அவர் மிகவும் கடுமையாக குடும்பத்துக்காக, பிள்ளைகளுக்காக நல்ல பாடசாலை, நல்ல வாழ்விட சூழல், வருங்காலத்தில் திறமையான தொழில் வாய்ப்பு பெற நல்ல படிப்புகள் எவை, எந்த பல்கலைக்கழகம் முழுமையாக இவ்வற்றை எல்லாம் வழங்குகிறது என்றெல்லாம் ஏற்கனவே தேடி தேடி வைத்தவை எனக்கு ஆறுதல் அளித்தன. அவர் என்னுள் இருந்து இயக்குவது போல் இருந்தது. அர்த்தநாரீசுவரர் போல், தாயும் தந்தையாக வாழ்வு அன்றில் இருந்து ஆரம்பித்தது.
பெண் உருவை ஒரு பாகத்திலே அறியக்காட்டியும், தன்னுள் அதனை அடக்கி ஒளித்துத் தானாகத் தனித்தும் அவன் விளங்குகின்றான் என்று புறநானூறு:
"பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;"
கூறுவது போலத்தான் நானும் தாய்மையை ஒரு நேரத்தில் வெளிக்காட்டியும், ஆனால், அதேநேரத்தில், அதை மறைத்து தந்தையாக தனித்தும் இயங்க தொடங்கினேன்! ஆனால், எனோ தெரியாது, என் மனம் அவர்கள் தாயில்லா பிள்ளை என்று கொஞ்சம் அதிகப்படியாக வசதியை அவர்கள் எப்பவும் கவலைப்படக்கூடாது என்று கொடுத்துவிட்டேன் என்று இன்று எண்ணுகிறேன்! என்னுள் தாயும் இருந்து இயக்குகிறாள் என்பதை எப்படி மறந்தேனோ, நான் அறியேன் பராபரமே!
"நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்"
என்று ஐங்குறுநூறு- நீலத் திருமேனியும் தூய ஆபரணங்களும் கொண்ட அம்பிகையை ஒரு பாதியிலே கொண்ட சிவபெருமானுடைய இரண்டு திருவடி நிழலின் கீழே - அதாவது "தந்தை எனும் தாய்" யாக என் நிழலில் அவர்கள் இன்று என்பதை ஏன் நான் நினைக்கவில்லை? அது தான் எனக்கு புரியவில்லை??
என்றாலும் தாய் ஏற்கனவே வரிசைப்படுத்தி இருந்த வழிகாட்டி என்னுள் இருந்து இயங்க, அதே வழியில் அவர்கள் பல்கலைக்கழக பட்டங்கள் பெற்று இன்று நல்ல நிலைக்கு வாழ்வில் வந்து, திருமணமும் செய்து மகிழ்வாக இருக்கிறார்கள் . எப்படியாகினும் தாயுமானவர் அறிவுரை வழங்கியது போல:
“என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பனைத்தும்
கன்றை உதை காலி கதை காண் பராபரமே“
பசுவிற்குக் கன்றின் மேல் உள்ள தாய்ப்பாசத்தில் குறை ஏதும் இல்லை எனினும்; போதுமான காலம் கழிந்தபின், தன் கன்றின் நலன் நோக்கி, தானாக மேய்ந்து பழக ஏதுவாக அதை உதைத்துத் தள்ளுவது போல, ஒருவேளை கொஞ்சம் அவர்களுக்கு பொறுப்பு ஏற்படுத்தி இருந்தால் இன்னும் மேலாக அவர்களின் வாழ்வு அமைந்து இருக்கலாம்?
நம்மைப் பற்றி நமக்கும் மட்டுமே தெரியும் ஒரு ரகசியம் தான் ‘நான்'! இனம்புரியா எண்ணங்களோடு ஒழிந்து கிடக்கும் ஆழ்மன ‘நான்' தான் அது! இதன் வெளிப்பாடு நம்மையறியாமல் அப்பப்ப சூசகமாக பேச்சிலோ எழுத்திலோ உடல் மொழியிலோ நடந்துக் கொண்டு தான் இருக்கும். அப்படி தந்தை என்ற 'நான்', 'தந்தை எனும் தாய்' என்பதை மறந்ததே இதற்கு காரணம். ஆனால் பேரப்பிள்ளைகள் பிறக்க, அவர்கள் இப்ப மெல்ல மெல்ல ஒவ்வொரு பொறுப்பாக தாங்களே உணர்ந்து கடமையாற்றுவது, கட்டாயம் தாயின் நிழல், அவர்களை வெளிப்படையாக நகர்த்துவதை மகிழ்வாக நான் காண்கிறேன்!
'தந்தை எனும் தாய்' ஆகிய நானும் இனி கவலைப்பட ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளின் - தாயின் - செயலே!!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]