சமூகவலை உலகம்

வெத்து இலை - T. கோபிசங்கர்

2 months 2 weeks ago

வெத்து இலை 

 

அம்மா செய்த மைசூர்ப்பாகை களவெடுத்து பள்ளிக்கூடம் கொண்டு போக ஒளிச்சு வைச்சதை எறும்பு காட்டிக் குடுக்க, அம்மா அடிக்கத் தடி தேடி ஆச்சீன்டை பொயிலைக் காம்பைக் கொண்டந்தா. அப்ப அடிக்கிறதுக்கு வசதியா கனக்க இருந்திச்சுது. ஏப்பைக் காம்பு, பூவரசந்தடீ, முருக்கஞ் செத்தல் , பொயிலைக்காம்பு எண்டு கன சாமாங்கள் வீட்டிலயோ வேலீலயோ ready made ஆ இருந்தது. இப்ப வீட்டை அடிக்க கடையில போய் பிரம்பை வாங்கி வைக்க பிள்ளைகள் எடுத்து உடைச்சுப் போடும்.

 

வழமையான கடைக்குப் போற வேலைக்கு extra வா சில நேரம் வெத்திலை வாங்கிற வேலை வரும். சைக்கிள் பழகின புதுசில அதை ஓடிறதுக்காகவே சைக்கிளில போக விட்டா வாங்கித்தாறன் எண்டு deal போட்டு , ஓம் எண்டா ஓடிப் போய் வாங்கிறது. மாமா வீட்டை வந்தா வெத்திலை வாங்கு எண்டு சொல்லி கொஞ்சம் கூடக் காசு தருவார் எனக்கும் ஏதும் வாங்க எண்டு. “ வெத்திலை வாங்கேக்க உமா ஸ்ரோர்ஸில வாச வெத்திலை எண்டு கேட்டு வாங்கு” எண்டு மாமா சொன்னார், வெளிக்கிட்டு வர ஆச்சி எனக்கு வெறு வெத்திலை எண்டு சொல்லி காசும் தந்தா. வண்ணார்பண்ணை சிவன் கோயிலுக்கு முன்னால இருக்கிற உமா ஸ்ரோர்ஸ் எண்ட கடை இப்பவும் இருக்கு. வாழைப்பழமும் வெத்திலையும் மட்டும் தான் அப்ப விக்கிறது. வாச வெத்திலை ஒரு கூறு எண்டு கேக்க, “ஒரு வெத்திலையா மூண்டு வெத்திலையா “ எண்டு கேட்டதுக்கு பதில் சொல்ல மூண்டு வெத்திலையை பாத்து எடுத்து வாளித்தண்ணீல கழுவி உதறி மேசையில வைச்சிட்டு மேல் வெத்திலையில பாக்கை வைச்சு, ரெண்டாவதில அசோகாப் பாக்கு வைச்சி, பிறகு மூண்டாவதில மூண்டு சீவல் நாறல் பாக்கை வைச்சிட்டு கிழிச்ச பேப்பர்த் துண்டில சுண்ணாம்பை வைச்சு மடிச்சு வெத்திலைக்கு அடீல வைச்சிட்டு ,பழைய கொப்பிப் பேப்பரில மூலைப் பக்கமாச் சுத்தி நிமித்தி் சுருளின்டை அடியை ரெண்டு தரம் மேசையில தட்டீட்டு வெத்திலை நுனியோட பேப்பரையையும் சேத்து மடிச்சுத்தாற ஸ்டைலுக்காக ரெண்டு வெத்திலைக் கூறு வாங்கலாம்.

யாழ்ப்பாணத்தில அப்ப வெத்திலை போடாதவன் இல்லை எண்டு சொல்லலாம் . சாப்பிட்டாப்பிறகு வெத்திலை பாக்கு கட்டாயம் போடிற பழக்கம் இருந்தது அதோட பழைய laxpray பைக்குள்ள எல்லாம் வைச்ச ஒரு வெத்திலைப் பையும், பாக்கு வெட்டியும், பொக்கை வாய்க்கிழவிக்கு உரலும், இடிக்குறதுக்கு தண்டவாளத்தில சிலிப்பர்கட்டை இறுக்கிற ஆணியோ இல்லாட்டி ஒரு இரும்போ இருக்கும். 

 

வீடுகளில பத்து மணிப் பிளேன்ரீயோட ஒருக்கா, மத்தியானம் சாப்பாட்டுக்குப் பிறகு ஒருக்கா, அப்பிடியே பின்னேரம் தேத்தண்ணிக்குப் பிறகு ஒருக்கா எண்டு சாப்பாட்டுக்கு நிறை குறை நிரப்பியா வெத்திலை இருக்கும். வீடுகளில மூத்திரம் பெய்ய ஒரு மூலை மாதிரி வெத்திலை துப்பிற வேலியும் இருக்கும். வீட்டில ஆரும் வந்தாலும் தேத்தண்ணி குடிச்சிட்டு வெத்திலை போடுவினம். அதே போல வெத்திலை ஒரு அத்தியாவசிய உப உணவாக கன கூலி வேலைக்காரருக்கு இருந்திச்சுது. 

எண்பதில யாழப்பாணம் townக்க “ வாளிக்குள் துப்பவும் “ எண்ட போட்டோட பழைய மண்ணெண்ணை பரலை நிமித்தி வைச்சு வெள்ளைப் பெயின்ற்றும் அடிச்சு வைச்சிருந்தவை . அதோட நல்லூர் வீதியிலையும் திருவிழாக் காலத்தில துப்பிறதுக்கு வாளிகள் வைச்சிருந்தது. ஊரில ஏனோ தெரியேல்லை துப்பிற பழக்கம் பொதுவா இருந்திச்சுது. பயணங்கள் போறவை ஒண்டுக்குப் போகமால் மூத்திரத்தை அடக்கினாலும் வெத்திலை போட்ட எச்சிலை உடனயே துப்பீடுவினம் . ஆனபடியாத்தான் பரலை வெட்டி கக்கூஸ் கட்டாமல் முழுசா நிமித்தி துப்பிறதுக்கு வைச்சாங்கள். முனிசிப்பல் காரங்கள் இடைக்கிடை குப்பை பரலை எடுக்கிறவங்கள் ஆனால் துப்பல் பரலை ஒருநாளும் எடுக்கிறேல்லை . குப்பை எடுக்க வரேக்க பரலுக்குள்ள நெருப்புத் தண்ணி ( Lysol) மாதிரி ஊத்துவாங்கள் அது துப்பலோட சேந்து வெய்யிலுக்கு காஞ்சு போடும். 

பழைய காலத்தில கசம் கனபேருக்கு இருந்ததால கண்ட இடத்திலேம் துப்பி எச்சிலில இருந்து கிருமி பரவாமத் தடுக்க அப்பிடிச் செய்தாங்களோ தெரியேல்லை. ஆனாலும் அதுக்கு வெத்திலை போடிற ஆக்களுக்கு அது வசதியா இருந்திச்சுது. 

வெத்திலை வெறும் விசேசத்துக்கும் கோயிலுக்கு கொண்டு போறதுக்கும் மட்டும் இல்லை அதை பரியாரிமார் மருந்துக்கும் பாவிக்கிறவை. தம்பிக்கு ஒரு நாள் சளி இழுக்க வெத்திலையில எண்ணை பூசி தணலில வாட்டி “ அது சளியை உறிஞ்சுமாம் எண்டு” நெஞ்சில வைச்சவ ஆச்சி. குழந்தைப் பிள்ளைகளுக்கு எண்டால் தலையில வைக்கிறதாம் .

“சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிச்சுவைக்கும் நிஜாம் பாக்கு “ எண்டு ஆல் இந்தியா ரேடியோவில அடிக்கடி விளம்பரங்கள் போகும். பாலர் வகுப்புப் படிக்கேக்க பள்ளிக்கூடத்துக்கு முன்னால இருந்த முரளீன்டை தாத்தான்டை கடையில சுருட்டின பாதி வெத்திலைக்கு கலர் தேங்காய்பூவும் , முறிச்சு உடைச்சுத் தூவின கறுவாவும் எண்டு 10 சதத்துக்கு வித்தது.

சந்தைக்கு விசேசத்துக்கு மரக்கறி சாமான் வாங்கப் போய் கடைசீல வெத்திலைக் கடைக்கும் போறது. தேவைக்கு ஏத்த மாதிரி ரெண்டோ , மூண்டோ கும்பம் வெத்திலை , கிலோவில சீவல் , கொட்டைப்பாக்கு , சுண்ணாம்பு ரின், சுருட்டுக்கட்டு எல்லாம் வாங்கீட்டு , பொயிலைக்காம்பு எண்டு கேட்டுப் பொயிலை எடுத்து விரிச்சு மணந்து பாத்துக் குடுக்க, விரிச்சதை திருப்பிச் சுருட்டி இலையை மடக்கி முடிச்சுப் போட்டுத் தருவாங்கள். 

ஊரில நல்லது கெட்டது எல்லாத்திலேம் வெத்திலைத் தட்டு இருக்கும். தட்டில ஒரு பக்கமா வெத்திலையை அடுக்கி பாக்குச் சீவலை அள்ளிப் போட்டு பழைய ரின்பால் பேணீல வாங்கின சுண்ணாம்பை அள்ளி வைச்சிட்டு, சுருட்டுக் கட்டொண்டையும் வைச்சுக் குடுப்பினம். அதோட பொயிலைக் காம்பில இருந்து இலையை வெட்டீட்டு காம்பை எடுத்து வைப்பினம், அடிக்கிறதுக்கும், மூக்கில விட்டுத் தும்மிறதுக்கும். அதோட மலச்சிக்கல் காரருக்கு மல வாசலில வைச்சா சிக்கல் இல்லாமல் போகும். 

ஆய கலைகளில சேக்க மறந்ததில இந்த வெத்திலை போடிறது ஒரு கலையும் ஒண்டு . நல்லது கெட்டதில வைக்கிற வெத்திலைத் தட்டத்தை எடுத்து மடீல வைச்சபடி பழசுகள் வெத்திலை போடும். வெத்திலைத் தட்டில அடுக்கின வெத்திலைக்கு நடுவில ஆகலும் முத்தலும் இல்லாத வெளிறின பச்சையாப் பிஞ்சும் இல்லாத வெத்திலை ஒண்டை எடுத்து ரெண்டு பக்கத்தையும் கையால ( சில வேளை வேட்டியிலே) வடிவாத் துடைச்சிட்டு காம்பை முறிச்சு அப்பிடியே நடு நரம்போட இழுத்து எறிஞ்சிட்டு சுண்ணாம்பை சுண்டு விரலால எடுத்து வெத்திலையின் வெளிப்பக்கத்தில் மெதுவாகப் பூசோணும். அதோட நல்ல மெல்லிசாச் சீவின, காஞ்ச சீவலா பாத்து எடுத்து சாடையாக் கசக்கீட்டு மெல்ல ஊதி தூசை பறக்கவிட்டிட்டு அப்பிடியே ஒரு பக்கக் கொடுப்புக்குள் வைத்து மெல்லச் சப்பத் தொடங்க வாய்க்குள்ள இருக்கிற பாக்கில எச்சில் ஊறும். பிறகு வெத்திலையை மடிச்சு மற்றப் பக்க கொடுப்புக்குள்ள வைச்சிட்டு இரண்டையும் சமமான அளவில் சப்பினபடி நாக்கினால் பிரட்டிக் கலக்க வாற வெத்திலைச்சாறை சுண்டு விரலையும் நடு விரலையும் வாயில வைச்சு தெறிக்காம எட்டித் துப்போணும். காரத்துக்கும் tasteக்கும் தேவையான அளவுக்கு ஏத்த மாதிரி விரலில் இருக்கும் சுண்ணாம்பை நுனி நாக்கில் இடைக்கிடை தடவிக் கொள்ளலாம். அப்பப்ப சின்னத்துண்டா வெட்டியிருக்கிற பொயிலையை எடுத்து விரித்துப் பாத்து நல்லா மணக்கிற பொயிலைத் துண்டை எடுத்து வெறுமையாக இருக்கும் கொடுப்புப் பகுதிக்குள் தள்ளி் அடக்கி வைத்திருக்க வேண்டும். எச்சில் ஊறிய பொயிலைச்சாற்றை வெத்திலையுடன் கலந்து அசைபோட்டுக் கொண்டு இருக்கேக்க வாற எச்சில் கடைவாயின் பக்கம் வழிய முதல் எச்சிலைத் துப்பிப் போடோணும். போட்ட வெத்திலையை ஒரு நாளும் அப்பிடியே விழுங்கக்கூடாது, அசை போட்டு சாறை உறிஞ்சீட்டு எழும்பி்ப் போய் வேலிப்பக்கம் எல்லாத்தையும் துப்பிப் போட்டு, விரலில மிஞ்சி்இருக்கிற சுண்ணாம்பை மரத்திலயோ சிவத்திலயோ பூசீட்டை வாயைக் கொப்பிளிச்சிட்டு வரோணும். இல்லாட்டி எல்லாத்தையும் சேத்துப் போட்டு மாடு மாதிரி அசையும் போடலாம். 

( பி.கு . இதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பேற்காது.) 

இப்ப ஏன் எண்டு தெரியாம வாங்கி வைக்கிற வெத்திலையை போடிறதுக்கு ஆக்களும் இல்லாமல் , அதை போடிறதை ரசிக்கிற ஆக்களும் இல்லாமல் வெத்திலை இப்ப எல்லாம் பெயருக்கு ஏத்த மாதிரி வெத்து இலையாகவே இருக்கு. 

 

Dr. T. கோபிசங்கர் 

யாழப்பாணம்

மீண்டும் சக்திமான் -shaktimaan

2 months 3 weeks ago
sakthimaan.jpg


 

 

தூர்தர்ஷனில் சக்திமான் பார்த்த நினைவிருக்கிறதா?டாக்டர் ஜாகல், தம்ராஜ் கில்விஸன்,கீதாவிஸ்வாஸ்?கங்காதரர் வித்தியாதரர் மாயாதரர் ஓம்காரசாஸ்திரி? வாருங்கள் நினைவை மீட்டுவோம் 

சக்திமான் எமது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் ஒரே ஒரு சானல்தான் யாழ்ப்பாணத்தில் வேலைசெய்தது அது  தூர்தர்ஸன் தான்.சன் டி.வி எல்லாம் அப்போது அறிமுகமில்லை.தூரதர்ஸனில் ஜேய் ஹனுமான்,நிகழ்வுகள் அதோடு சக்திமானையும் பார்ப்பது வழக்கம். அதில் நிகழ்வுகள் என்ற தொடர் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் அது ஆவிகள் தம் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை ஆகையால் இரவில் வீட்டிற்கு வெளியில் செல்லப்பயந்து யன்னலினூடாகவே சிறுனீர் கழித்த சம்பவங்களும் நடந்தன .
 
அவ்வளவு பீதி.சக்திமான் தொடர் ஒவ்வொரு சனி 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்.தனியார்நிலையத்தில் கல்விகற்ற போது தனியார்கல்வினிலையம் காலை 7.30 ற்கு ஆரம்பமாகி 11 மணிக்கு முடிப்பார்கள்.பெரும்பான்மையான எனது சகபாடிகளுக்கும் சரி எனக்கும் சரி 10 மணிக்கு மேல் படிப்பு மண்டைக்குள் ஏறுவது சற்றுக்கடினமாகத்தான் இருந்தது.காரணம் 11 மணிக்கு சக்திமான் இருப்பதுதான்.1997 இல் யாழ்ப்பாணத்தில் இணையமோ கணணிவசதிகளோ ஒரிரு இடங்களில்தான் இருந்தன இதன் காரணமாக சக்திமானின் புகைப்படங்களோ..அல்லது கார்ட்கள் போன்ற எதுவும் எம்மிடம் இருந்ததில்லை.ஆனால் ஒரு சகபாடி எங்கிருந்தோ ஒரு படத்தைக்கொண்டுவந்துவிட்டான்.அந்த ஒரே ஒரு படத்தால் ஒரே நாளில் ஹீரோ ஆகிவிட்டான் அவன்.
 
backdrop-640x360.jpg
11 மணிக்கு வகுப்பு முடிவடைந்ததும் விழுந்தடித்து வீடுநோக்கி ஓடிதொலைக்காட்சிக்கு முன்னால் ஓட்டம் நிறைவடையும்.சக்திமான் தொடக்கப்பாடல் முடிவடைந்த பின்னர்தான் பெரும்பாலான நேரங்களில் வீடுவரமுடிந்தது.சக்திமான் தொடரின் இடைவேளையின் போதுதான் போய் மதிய சாப்பாட்டை எடுத்துவருவேன்.பின்னர் சாப்பாடு முடிந்ததோ இல்லையோ தட்டுடன் தொடர் முடியும்வரை இருப்பது வழக்கம்.எனது நண்பர்களுக்கும் இதே நிலைதான். நாம் பல நேரங்களில் சக்திமான் கில்விஸனிடம் தோற்பாரா? கீதாவிஸ்வாஸை காப்பாற்ற வருவாரா?கங்காதரர் அகப்படுவாரா? என்று நண்பர்களிடம் வாக்குவாதம் செய்துமிருக்கிறோம்.
 
ஏதோ நாம் மட்டும் இதற்கு அடிமையாகவில்லை இந்தியாவில் இருக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் ஏகோபித்த ஒரே ஹீரோவாக சகலரையும் அடிமையாக்கியவர் சக்திமான்.பல சிறுவர்கள் சக்திமான் வந்து காப்பாற்றுவார்,அவரைபோல் சாகசம் செய்யலாம் என்று உயரமான கட்டடங்களில் இருந்து குதித்து இறந்தமை இதற்கு நல்ல ஆதாரம்.இதனால் பெற்றோர் மிகுந்த சங்கடத்திற்குள்ளானார்கள் இவ்வாறான சம்பவங்களின் பின்னர் வெளிவந்த தொடர்களில் இவை கற்பனையே இவற்றை செய்து பார்க்க முயற்சிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டதுடன் எவ்வாறு சூட்டிங்க் எடுக்கப்படுகின்றது என்பதையும் ஒளிபரப்பினார்கள்.
 
டைட்டிள் சோங்க்
 
video_object.png
 
சக்திமான் என்றகற்பனைக்கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர்கள் டிங்கெர் ஜானி மற்றும் முகேஸ் கண்ணா.முகேஸ்கண்ணா என்பவர்தான் சக்திமானாக அசத்தியவர்.1997 செப்டெம்பர் 13 இல் சக்திமானின் முதலாவது எபிசோட் ஒளிபரப்பப்பட்டது.
கதை இதுதான் தீய சக்திகளுக்கு எதிராக போராடும் வீரனாக சக்திமான் தெரிவு செய்யப்படுகின்றார். சக்திமானுக்கான சக்திகள் 7 யோகிகளால் வழங்கப்படுகின்றன.இதற்காக இவருக்கு குண்டலினி யோகா பயிற்சியளிக்கப்படுகின்றது.இதனால் அசாத்திய சக்திகளை பெற்றுவிடுகிறார் நம்ம தல.மரணத்தை வெல்வதற்கான சடங்கை செய்தார்கள் ஆனால் அது ஈடேறவில்லை பதிலாக சாதாரண மனிதனை விட அதிகாஅயுள்மட்டும் கிடைக்கின்றது.இறுதியில் அக்கினி குண்டத்தில் இறங்கியதும் பஞ்சபூதங்களின் சக்தி கிடைக்கிறது.இவ்வாறு சக்திமான் உருவாகினார்.
சக்திமானுக்கு பல எதிரிகள் அவர்களுள் முக்கிமான எதிரி தம்ராஜ்கில்விஸன்.இவனை அழிக்கும் நோக்கத்திற்காகவே சக்திமான் படைக்கப்பட்டாரென்றும் கூறலாம்.அத்துடன் கில்விஸனுடன் இலவச இணைப்பாக பல சிறிய வில்லன்களும் இருக்கிறார்கள்.சலாம் அலைக்கும்...அலைக்கும் சலாம் என்பதுபோல் கில்விஸன்  வரும்போதும் ஒரு வார்த்தை பிரயோகிக்கப்படும்  நினைவுக்கு வந்துவிட்டதா அதே தான் க.க.க.போ  "இருள் நீடிக்கிறது".
http://2.bp.blogspot.com/-TsIESzQE6HE/UAFsjR7Kn9I/AAAAAAAAHqg/qcRgLh3Hn5M/s320/311507_372570069474306_1403959557_n.jpgசக்திமான் என்னேரமும் அதே உடையில் உலாவர முடியாதல்லவா? அதனால் மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக சுற்றுவதற்காக பற்கள் சொண்டைக்கிளித்துக்கொண்டிருக்கும் கெங்காதரர் ஆனார்.அதில் தன்னை யார் என்று கேட்பவர்களுக்கு இவர் கூறும் விளக்கம்தான் ஹைலைட்.."என் பெயர் கங்காதரர் வித்யாதரர் மாயாதர் ஓம்காரர் சாஸ்திரி" இதோடு கேட்பவர்களின் நட்டு கழன்றுவிடும்.
 
http://1.bp.blogspot.com/-dYa0cfksRiM/UAFtQcLvXbI/AAAAAAAAHrY/n-tdW68y6ws/s1600/48978_100001641115134_9902_n.jpg கீதா விஸ்வாஸ்
அத்தோடு வேலையும் வேண்டுமல்லவா இதனால் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிகிறார் கெங்காதரர்.இந்த இடத்தில்தான் அடுத்த முக்கிய கதாப்பாத்திரம் அறிமுகம் கீதா விஸ்வாஸ் இவர் சக்திமானை காதலிப்பவர்.கீதா விஸ்வாஸாக நடித்தவர் வைஸ்ணவி.ஹீரோயின் வந்துவிட்டாலே புரிந்திருக்கும் இதனால் வில்லன்களிடம் ஹீரோ படும் அத்தனை அவஸ்தைகளையும் சக்திமானும் பட்டார்.
 
இத்தொடர் மொத்தமாக  461 எபிசோட்களாக வெளிவந்தது.அனைத்து எபிசோட்களையும் இலவசமாக பார்வையிட.1998 இல் 
MDb ரேட்டிங்கில் 10 ற்கு 6.9 ஐ பெற்றுள்ளது. எபிசோட் முடிவில் சக்திமான் கருத்துக்கள் கூறுவார். சின்ன சின்ன விடயங்கள் பெரிய பெரிய கருத்துக்கள்.
 
 
உண்மையில் சக்திமான் தொடர் சுப்பர்மான் திரைப்படத்தை சார்ந்து எடுக்கப்பட்டதுதான்.ஆனால் அத்துடன் நிற்கவில்லை எக்ஸ்மான் என்று பல திரைப்படங்களும் உள்ளே தலைகாட்டியிருந்தன.ஆரம்பகாலங்களில் ஹொலிவூட் எமக்கு அறிமுகமில்லாத காரணங்களால் இவை நமக்கு புலப்படவில்லை.சக்திமான் முடிவடைந்த பின்னர் ஆரியமான் என்ற தொடரை அறிமுகப்படுத்தியிருந்தார்கள் முகேஸ் கண்ணாதான் அதிலும் ஹேரோ ஆனால் அது ஆரம்பிக்கும் பொழுது நான் ஸ்டார்வேர்ஸ் பார்த்துவிட்டிருந்தேன்.சோ பருப்பு வேகல.
 
எது எப்படியிருந்தாலும் நமது சிறியவயது ஹீரோ சக்திமான் தான் அத்துடன் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோவும் இவர்தான்.இதன் பின்னர் முகேஸ்கண்ணா வேறுதொலைக்காட்சித்தொடர்களில் நடித்தாலும் எதிர்ப்பட்டவர்கள் இவரை சக்திமான் என்றுதான் அழைத்தார்கள்.
பல சக்திமான் கொமிக்ஸ்களும் வெளிவந்த்துள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
2012 ல் சக்திமானை 3டி திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார்கள் .2012 மார்ச் 24 இல் இதை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள் .சக்திமான் சீரிஸ்ஸில் நடித்த அதே முகேஸ்கண்ணாதான் இத்திரைப்படத்திலும் ஹேரோவாக நடிப்பதாக இருந்தார்,2012  ல் இதைப்பற்றி முகேஸ் கூறும்பொழுது"இப்பொழுது நான் திரைப்படத்தில் மட்டுமே எனது கவனத்தை செலுத்துகின்றென்.சக்திமான்தான் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோ கிரிஸ்ஸோ ராவன்னோ ஜி வன்னோ அல்ல.சக்திமான் திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம்" என கூறினார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றுவரை இது நிறைவேறவேல்லை 
போதாததற்கு கொரோனா காரணமாக முகேஸ்கண்ணா மரணமடைந்துவிட்டார் என்றும் அண்மையில் நெட்டிசன்கள் வதந்தியை பரப்பியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

யாழ்ப்பாணத்திற்கு_ஒரு_ஆறு

2 months 3 weeks ago
May be an image of beach, ocean, horizon and twilight
 
 
 
 
யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30' மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60' இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.
குடாநாட்டின் வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கு ஏனைய பகுதிகளில் பெறப்படும் செல்வமாகிய மேலதிக மழை நீரை இப்பகுதிக்கு பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு நியாய பூர்வமான விருப்பமாகும்.
1930ம் தசாப்த ஆரம்பத்தில் குடாநாட்டில் பரந்திருந்த உவர் நீர் ஏரிகளை பயன்படுத்தும் முகமாக அவற்றை நன்னீராக்க வேண்டும் என்ற கருத்தை காலஞ் சென்ற சட்டவாக்க சபை உறுப்பினரான மு.பாலசிங்கம் அவர்கள் தனது மனதில் உருவாக்கினார்.
மாமன்னர் பராக்கிரமபாகுவின் சிந்தனையின் ரூபமான மிகவும் பரவலாக பேசப்பட்ட கருத்தானது 'வானத்திலிருந்து விழும் ஒரு மழைத்துளியும் மண்ணுக்கு பயன்படாமல் கடலை சென்றடைய விடக்கூடாது' என்ற சித்தாந்தமே மதிப்புக்குரிய மு.பாலசிங்கம் அவர்களது கருத்தாகும்.
இந்தச் சிந்தனையே வட மாகாணத்தின் முக்கிய ஆதாரமான கனகராயன் ஆற்றின் வெள்ள நீரை முற்று முழுதாக பயன்படுத்துவது என்ற எண்ணக்கரு உருவாக வழி கோலியது. இந்த ஆறு வவுனியாவில் உருவாகி புளியங்குளம் மாங்குளம் ஊடாக இரணைமடுக் குளத்தை நிரப்புகின்றது.
இதன் மேலதிக நீர் ஆனையிறவு ஏரியை அடைகின்றது. இது ஆனையிறவு பாலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கடலுடன் இம் மேலதிக நீரானது வீணாக இப் பாலத்தினுடாக பெருங்கடலை சென்றடைகிறது.
1949 மாசியில் ஓர் நாளில் இத் தெரு ஊடாக சுற்றுலாவிற்கு சென்ற குடும்பத்தினர் ஆனையிறவு பாலத்தின் அண்மையில் நண்பகல் உணவிற்காக இளைப்பாறினர். அவரின் சிறிய மகன் இவ் ஏரியில் கை கழுவும் பொழுது ஏரியின் மேற்குப்பகுதி கடலுடன் தெடர்புடையதாக இருந்தாலும் கிழக்குப் பகுதியில் நன்னீர் இருப்பது எவ்வாறு? என்று கேட்ட வினாவிற்கு அன்பான தந்தை அதன் காரணத்தை விளக்கினார்.
அந்தச் சிறுவன் உடனடியாக 'நாங்கள் கொஞ்ச மண்ணை காரில் கொண்டுவந்து இந்தப் பாலத்தை நிரப்புவோம், இதனால் நன்னீர் ஏரி உருவாகும் என்று பதிலளித்தான்.
அந்த வருடம் கனகராயன் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது. இரணைமடுக் குளம் நிரம்பி வான் பாய்ந்தது. மேலதிக நீர் தெருவின் கிழக்கில் உள்ள ஆனையிறவு ஏரியை நிரப்பியது.
இரணைமடுக் குளம் தை மாதத்தில் வான் பாயவிடப்பட்டாலும் மாசி மாதத்தில் கூட கிழக்கு ஏரி நன்னீராகவே காணப்பட்டது. எனினும் இப்பாலத்தினை மண் கொண்டுவந்து நிரப்பினாலொழிய இந்நீர் பாலத்தினூடாக கலக்கும் கடல்நீரால் விரைவாக உவர்நீராக மாறிவிடும்.
தற்போது நடைமுறைப்படுத்தும் ஆனையிறவு ஏரியை நன்னீராக்கும் திட்டத்தின் அடிப்படையானது கிழக்கு ஏரி வருடம் முழுவதும் நன்னீராகவே இருக்க வேண்டும்.
ஆனையிறவு ஏரி ஆனையிறவு தொடக்கம் சுண்டிக்குளம் வரையுள்ள சுமார் 11,400 ஏக்கர் பரப்பை கொண்டது. இவ் ஏரி கனகராயன் ஆறு, நெத்தலி ஆறு, பிரமந்தலாறு, தேராவில் ஆறு மற்றும் சிற்றாறுகளிலிருந்து வரும் நீரை பெறுகின்றது.
இதன் வடக்கே வானைக் குளமும் தெற்கே கரைச்சி காணிகளையும் கொண்டுள்ளது. பாலத்திற்கு அருகில் ஓர் தடுப்பை ஏற்படுத்தி சுண்டிக்குளத்திற்கு அண்மையில் பொருத்தமான வான்கட்டை அமைப்பதனுாடாக இவ் ஏரிக்குள் உட்புகும் நன்னீரானது ஆனையிறவு நன்னீர் தேக்கமாக உருவாகும்.
முள்ளியான் பகுதியூடாக வடக்கில் அமைந்த வாய்க்கால்கள் இந்நீர் தேக்கத்தை யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஏரியாகிய வடமராட்சியைத் தொடும்.
நீண்ட நீர்ப்பரப்பை உடைய வடமராட்சி ஏரியானது பச்சிலைப்பள்ளியில் அமைந்த முள்ளியானில் இருந்து செம்பியன்பற்று, எழுதுமட்டுவாள், வரணி, கரவெட்டி, வல்லைவெளி, ஊடாக பரந்து சென்று வல்வெட்டித்துறைக்கு அண்மையில் உள்ள தொண்டமானாற்றினூடாக கடலுடன் தொடுக்கிறது. இதன் கிளையானது சரசாலையில் தொடங்கி யாழ்ப்பாணப் பட்டினம் நோக்கி பரந்து செம்மணிக்கு அண்மையில் உள்ள அரியாலைக் கடலை அடைகின்றது.
இது கிட்டத்தட்ட ஒரு மைல் அகலமாக குடாநாட்டில் இருதயப் பகுதியில் கூடுதலாகவோ குறைவாகவோ முழுமையாக பரந்து காணப்படுகின்றது. இது குடாநாட்டின் வாழ்க்கையிலே தாக்கத்தை செலுத்தும் முழுமையான வைப்பகமாக இருக்கிறது.
தொண்டமானாற்றில் பூர்த்தியாக்கப்பட்ட 600 அடி நீளமான தடுப்பணை ஊடாக கடல் நீர் உட்புகுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனையிறவில் செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
ஆனையிறவு பாலத்திற்கு அருகிலே உள்ள தடுப்பணை கனகராயன் ஆற்றிலிருந்து வரும் வெள்ள நீரை சேமித்து பாதுகாத்து மேற்குப் பகுதியில் உள்ள கடல் நீர் ஊடுருவாமல் தடுக்கும்.
இதன் கிழக்கு எல்லையில் சுண்டிக்குளத்தில் அமைந்த ஒன்றேகால் (1.25) மைல் நீளமான பாதையோடு இணைத்து கட்டப்பட்ட தடுப்பணையும், வானும் மேலதிக வெள்ள நீரை பாதுகாப்பாக கடலுக்குள் செலுத்துவதற்கும், கடல் நீர் கிழக்கிலுள்ள ஏரியினுள் உட்புகாலும் உறுதிப்படுத்தும், இவ்வாறு கிழக்கிலும் மேற்கிலும் அமைக்கப்பட்ட கட்டமைப்புக்கள் மேலதிக வெள்ள நீரை பெற்று பாதுகாப்பாக சேமித்து வைக்கும்.
அதே நேரத்தில் இதன் மூன்றாவது அங்கமான இணைப்புக் கால்வாய் தேங்கிய நீரை யாழ்ப்பாண குடாநாட்டின் இருதயப்பகுதிக்கு கொண்டு செல்லும், இவ் வேலைத்திட்டத்தின் முடிவில் கனகராயன் ஆற்றின் வெள்ள நீர் ஆனையிறவு ஏரி மற்றும் வடமராட்சி ஏரிகளின் உவர் நீர் தன்மையை படிப்படியாக நீக்குவதற்கு பயன்படும்.
வண்டல் படுக்கை அமைந்த இரண்டாம் நிலை தேக்கத்திலும் பார்க்க உவர் நீர் வெளியேறி களிமண் படுக்கையுள்ள முதன்மை நீர்த்தேக்கம் அமைவதற்கு விரைவுபடுத்தும். குறுகிய காலத்தில் உவர்த்தன்மை குறைப்பானது உடனடியாக முடிவுக்கு கொன்டுவரப்பட முடியாத போதிலும் இதனால் ஏற்படும் நன்மைகளைப் பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்கத் தேவையில்லை.
இதன் பயன்கள் உடனடியாக வந்தடையாமல் ஒவ்வொரு மழைக்காலத்தின் பின்பும் மேலும் மேலும் விருத்தியடையும். மேலும் பகுதியான உவர் நீரானது பயன்படுத்த முடியாவிட்டாலும் வேளாண்மைக்கு உகந்ததாக காணப்படும் அதேவேளை இந்நிலை குடா நாட்டின் கரையோரப் பகுதிகளில் உள்ள பல கிணறுகள் மூலமாக செய்யப்படும் வேளாண்மையினால் இது புலப்படும்.
நாட்கள் செல்லச் செல்ல மாசி பங்குனி சித்திரை மாதங்களில் உள்ள கூடிய வெப்பத்தினால் குறிப்பிடத்தக்க ஆவியாதல் நிகழும் இரண்டாம் நிலை நீர்த்தேக்கத்தின் கூடிய அளவான நீர் இழப்பை ஆனையிறவு நீர் தேக்கத்திலிருந்து நீரை கால்வாயினுடாக செலுத்தி இரண்டாம் நிலை தேக்கத்தை தொடர்ந்தும் நிரம்பல் நிலையில் வைத்திருக்கலாம்.
இவ்வாறான நிரப்பு நிலையானது தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலமான ஆனி, ஆடி மாதங்களில் ஏற்படும் பாரியளவு ஆவியாதலின் விளைவாக இச் செயற்பாடு சாத்தியமற்றதாக இருக்கும்.
இதன் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஏரி அமையும் பாரிய நன்னீPரேரியைக் கொண்டிருப்பதன் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள நிலங்கள் விருத்தியடைந்து பன்மடங்கு நன்மையடையும்.
இதன் மூலம் நிலக்கீழ் நீர் தாராளமாக அமைவதோடு நீர் மட்டமும் உயர்வடையும் வருடங்கள் செல்லச் செல்ல கிணற்று நீர் மட்டமும் உயர்வடையும்.
இந்நிலத்தின் கீழுள்ள மண்ணின் ஈரப்பதன் அதிகரிக்கும். தாவர வளர்ச்சி பல்கிப் பெருகும். தென்னைகளுக்கும் ஏனைய மரங்களுக்கும் கோடையில் ஏற்படும் உற்பத்தி வீழ்ச்சி நிலைமை இல்லாமல் போகும். இத் திட்டம் அமைந்துள்ள ஏரியின் அண்மையில் உள்ள 15,000 ஏக்கரிலும் மேலான காணிகள் வேளாண்மை விருத்திக்கு உதவும். மேலும் வவுனியா மாவட்டத்தில் உற்பத்தியாகும் கனகராயன் ஆற்றின் நீரை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கொண்டுவந்து தொண்டமானாறு மற்றும் யாழ்ப்பாணப் பட்டிணத்தின் எல்லையில் அமைந்துள்ள அரியாலையில் உள்ள வானூடாக பாயச் செய்யும். இதுவே யாழ்ப்பாணத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்ய சரியான தீர்வு.
(இலங்கை எந்திரிமார் சங்கத்தின் ஞாபகார்த்த வெளியீட்டில் கௌரவிக்கப்பட்ட மிகச் சிலரில் ஒருவரானவரும் முன்னாள் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய எந்திரி.எஸ் ஆறுமுகத்தின் தூரநோக்கை விளங்குவதற்கு அடிப்படையாக 1954 இல் முதன் முறையாக வெளியிடப்பட்ட இக் கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.
தமிழாக்கம்
ஏந்திரி.ஏ.ரகுநாதன், இளைப்பாறிய நீர்ப்பாசனப் பணிப்பாளர்,
ஏற்பாட்டுக்குழு
எந்திரி.எஸ்.ஆறுமுகம் நினைவுப் பேருரை
யாழ்ப்பாணம் 11.01.2012)
 
 

போராளியின் இறுதி வெடி !

3 months 2 weeks ago

jeyam.jpg

 
போராளியின் இறுதி வெடி !
எல்லாம் முடிந்துவிட்டது.
முன்னால் கடல்
பின்னால் நிலம்.
இதுதான் நான் இறுதியாக காணப்போகும் விடியும் வானம்.
 
நிலம் பூராவும் எதிரிகள். கந்தகமணம். சிறு பற்றைகள். அவற்றுக்கப்பால் நம் நிலம்பூராயும் எதிரிகள். எதிரிகள் பேசும் சத்தம் கேட்கிறது.வானம் வெளித்ததும் அவர்கள் முழுமையாக பிடித்துவிடுவார்கள். சிலவேளை இறுதியாய் இருப்பது நாம் இருவராக இருக்கலாம்.  எங்கள் தரப்பின் துப்பாக்கி வேட்டுகள் பூராகவும் ஒய்ந்துவிட்டது.
 
திடீரென ஏற்பட்ட புவி அதிர்வில் உதிர்ந்த கோட்டைபோல் ஆகிவிட்டது எங்கள் தேசம்.  அருகே கபிலன். அவன் கட்டாய ஆட்சேர்ப்பில் வந்த பிள்ளை. ஆனால் கடைசிவரை என்னோடு வந்துவிட்டான். நீ போய்விடு என்றால் அடம்பிடித்துவிட்டான். என்னோடு ஒரு வருடமாகத்தான் இருந்தான். சரணடைய மறுத்தே விட்டான். எத்தனையோ போராளிகளை சந்தித்தேன். இவன் வாழ வேண்டிய பிள்ளை.
 
‘அண்ண உங்களுக்கு என்ன முடிவோ அதுவே எனக்கும் என்கிறான்.’
 
கபிலன் அறிவான பிள்ளை. ஒரு முழுமையான போராட்ட வாழ்வில் என் இறுதி கணம் கபிலன் அருகில் முடியப்போகிறது. எம்மை உயிரோடு எதிரி பிடிக்க முடியாது. இரண்டு குப்பிகள், இரண்டு கைத்துப்பாக்கி. இதுபோதும்.
 
நளாவும் வீரச்சாவு என்று அறிந்தேன். முக்கியமான அந்தத்தாயுடன் சேர்ந்து நளா வெடித்துச்சிதறிவிட்டாள். பிள்ளைகளோடு எவ்வளவு பிரியமாக இருந்தாள் ? அவளால் இதை எப்படிச்செய்ய முடிந்தது ? அவள் தியாகங்களுக்கு உலகில் உதாரணம் கிடையாது. தாயை விட்டுவிட்டு போர்க்களம் சென்ற பிள்ளைகள் இருந்தார்கள். தன் குழந்தைகளை விட்டுவிட்டு களமுனை சென்று வெடிக்கும் தாயை யாரும் அறிந்ததுண்டா ? தன் வீரச்சாவவைக்கூட மக்கள் அறியார் என்று தெரிந்தும், போராட்டம் இன்றோ நாளையோ வீழ்ந்துவிடும் என்று அறிந்தும் அவள் தன் மண்ணுக்காக வீழ்ந்தாள். அவளை இந்த இறுதி நேரத்தில் நினைக்கவேண்டும். என் மனம்போல இருந்தாள்.
 
பிள்ளைகளை உறவுகளுடன் விட்டுவிட்டு களமுனையில் கடைசிவரை நின்ற தாயாக நளா இருப்பாள். அது யாருக்கும் தெரியாமல் இருக்கும். இப்போது நடக்கும் எந்தக்காவியத்தையும் சொல்பவர்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை. நானே ஒருமுறை , ‘நீ பிள்ளைகளோடு வெளியேறு’ என்றபோது, மறுத்துவிட்டு கோள்சறோடு களமுனை சென்றாள்.
 
அன்பு நளா ! உன் திண்மை என்னிடம் இல்லை. உனக்கு என் நன்றி. நான் போராளியாக மட்டும் இருந்தேன். நீ தாயாக, போராளியாக, மனைவியாக.. என் விழுப்புண்கள் வலிதரும்போது தாதியாக.. உன் மனபலம் எந்த இரும்பையும் நொருக்கும். எந்த வலியையும் தாங்கும். நான் வலியால் துடிக்கும்போது ‘ஒருதளபதி இப்படி துடிப்பதா’ என்பாய். ஒருபோதும் உனக்கு வலித்தபோதும் நீ துடித்ததில்லை. எத்தனை மகத்தான துணையாக இருந்தாய் ?
 
உன் உடல் எங்கு சிதறியதோ நானறியேன். ஆனால் இந்த நிலத்தில் மிக அருகில் எங்கோ வெடிகுண்டு கட்டி வெடித்தாய் என்பது மட்டும் தெரியும்.
 
சூரியன் வரமுதல் உன்னை என் ஆன்மா சந்திக்கும். மறுமுறை பூரணவாழ்வு கிடைத்தால் உன்னோடு வாழவேண்டும். நாம் குறைந்த நாட்கள் வாழ்ந்து, நிறைய நாட்கள் போராளியாக இருந்தோம்.
ஓ.. என் பிள்ளைகள் ! ஆகரன் ! சிந்துசை ! நீங்கள் இப்போது வவுனியா அகதி முகாமில் இருப்பீர்கள். என் பிள்ளைகள் என்று இராணுவம் கண்டுபிடிக்காமல் இருக்கவேண்டும். நீங்கள் கேட்ட பரிசுப்பொருட்களை தமிழீழம் கிடைத்தததும் வேண்டித்தருவேன் என்றேன். உங்கள் அடிமைப்பட்ட இனத்தின் தந்தையால் அதை செய்ய முடியவில்லை. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
 
ஆனால் அப்பாவையும், அம்மாவையும் நினைத்தபடியே இருப்பீர்கள். உங்களை அனாதையாக்கி விடப்போகிறோம். இந்த பாவப்பட்ட பெற்றோரை பற்றி என்ன நினைப்பீர்களோ தெரியவில்லை.
எப்போதும் உங்களை பேரன்போடு வருடும் உங்கள் அம்மா நேற்று மாலை இறந்துவிட்டார். உங்கள் அப்பா இன்னும் சிறிய நேரத்தில்.
 
அப்பா, அம்மாவின் கனவுகளை மறக்க மாட்டீர்கள். எப்படியும் உங்களை என் தம்பி லண்டன் அழைத்துவிடுவான். நீங்கள் உறுதியோடு வளருங்கள். நம் மக்கள் உங்களை கைவிட மாட்டார்கள். அந்த நம்பிக்கையில்தான் நாம் போகிறோம்.
 
ஓ.. எத்தனை தியாகங்கள் ? எத்தனை உயர்த வீர புருசர்கள் ? எத்தனை தியாகங்களால் தேசம் உருவானது. இதோ.. இதோ.. எல்லாம் முடியப்போகிறது. இந்த முடிவு வேறொன்றின் தொடக்கம் ஆகலாம். ஆனால் இந்த உலகு அதர்ம அச்சிலே சுழல்கிறது. அதை மாற்றும் மனிதன் வருவான். காலம் எல்லாவற்றையும் உருவாக்கும்.
இந்தப்போராட்டம் உயிர்களை கொல்லத்தோன்றியதில்லை. கொலைகளை நிறுத்தத்தோன்றியது.
அவர்கள் தமிழர்களை தேடித்தேடி வேட்டையாடியபோது விரும்பா பிறப்பாகத்தானே பிறந்தது. இத்தனை இளைஞர்களின் உயிர்களும் இந்தத்தோல்விக்காகவா கொடுக்கப்பட்டது ? இத்தனை இறப்புகளும் நம் விடுதலைக்காகவே விதைக்கப்பட்டது. எப்படி இது தோற்றது?
 
காலம் ஆராய்ந்து கருத்திடட்டும். அது காலத்தின் வேலை.
நான் நம்மக்களுக்காக உண்மையாய் இருந்தேன். இந்த மரண நொடிவரை. என்னைப்போலவே உயிர் கொடுத்த என் வீரர்களும். இது நம் கடன். அதை நாம் தவமாக செய்தோம்.
 
இங்கினியாகலையில் காடையர்கள் 150 இளைஞர்களை வெட்டியதில் ஆரம்பித்தார்கள். அதன்பின் எத்தனை கொலைகளை மக்கள் சந்தித்தார்கள். ? ஆண்டாண்டு காலம் வாழ்ந்த எங்கள் மண்ணில் எங்கள் மக்கள் முப்பது ஆண்டுகளாக துரத்தப்பட்டும், கொல்லப்பட்டதால்தானே ஆயுதம் ஏந்தினோம். ! அன்று அந்தக்கொலைகளை தடுத்திருந்தால் இந்த கொலைத் தொழிலை நாம் விரும்பி ஏற்றிருப்போமா ?
எனக்கு அந்த நாள் நினைவுக்கு வருகிறது..
 
வவுனியா எல்லைக்கிராமத்தில் நாம் இருந்தோம். எப்போதும் பதட்டத்துடனே ஐயா, அம்மா இருப்பார்கள். காடையர்கள் எப்போது வருவார்கள் ? வந்தால் மொத்த உயிரும் சிரச்சேதம் செய்யப்படும் என்று தெரியும். எமக்கு பாதுகாப்பென்று அன்று யாருமில்லை. நம்முயிரை எப்போதும் பறிக்கும் உரிமை சிங்களக்காடையருக்கு இருந்தது. முதலில் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது ? மனிதர்களை மனிதர்கள் கொல்ல எப்படி முடிகிறது ? சிங்களவர்களுக்கு நாம் என்ன செய்தோம் ? என்று புரியவில்லை.
 
ஒருநாள் அருகே இருந்த கிராமத்தில் புகுந்து வெட்டிவிட்டு சென்றுவிட்டனர். அம்மா கண்ணீரோடு இருந்தார். அப்போதுதான் அம்மாவிடம்
‘ஏன் அம்மா சிங்களவர் எம்மை கொல்கிறார்கள் ? ’
என்று கேட்டேன். அம்மாதான் கொலைகாலக்கதைகளைச்சொன்னார்.
 
என் மனமெங்கும் வேதனையும், கொடும் கோபமும் இருந்தது. இதற்கு சிறுவனான என்னால் எப்படி தடுக்க முடியும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டிருந்தேன்.
 
இந்தச்சம்பவம் நடைபெற்று சரியாக ஒருமாதம் கழிய எம் கிராமம் தாக்கப்பட்டது. என் அப்பா படுகாயத்தோடு தப்பியிருந்தார். மாட்டுப்பட்டவர்கள் வீடுகள் கொழுத்தப்பட்டு தலைகளை வேலிகளில் குத்திவிட்டு சென்றனர். பள்ளிக்கூடத்தால் வந்த எனக்கு கிடைத்த காட்சி மனிதத்தலைகளும், எரிந்த வீடுகளும். எங்கள் வீடும் எரிந்திருந்தது. முதல்நாள் என்னோடு விளையாடிய பத்துவயதான சிவதாசன் தலை வேலியில் குத்தப்பட்டிருந்தது. பிள்ளைத்தாச்சியாக இருந்த வக்சலா அக்காவின் வயிறு கிளிக்கப்பட்டு சிசுவை எடுத்து தடியில் குத்தி வைத்திருந்தார்கள். ஆண்களின் உடலங்கள் அங்கம் அங்கமாக வெட்டப்பட்டிருந்தது.
இந்தக்காட்சிதான் என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. வன்னியில் மாத்தையா அண்ணரின் தொடர்புள்ளவர்களோடு தொடர்பை கடுமையான பிரயத்தனத்தில் ஏற்படுத்தி புலிகள் இயக்கத்தில் இணைந்தேன்.
 
எனது நோக்கம் எங்கள் மக்களை காப்பதே. அதைவிடுத்து எந்த மாற்றமும் என்னிடம் இருந்தால் மரணம்தான். என்று நானே முடிவெடுத்திருந்தேன்.
 
இயக்கத்தினுள் நடந்த சூறாவளிக்காலத்தில் என் மனம், உடல் வதங்கியகாலம். என் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டபோதும் நான் உண்மையான என் கனவில் உறுதியாக இருந்தேன். போராட்டம் என்பது எவ்வளவு கடுமையானது என்பதை சொல்லித்தந்தது அந்த நாட்கள். உயிரையும் கொடுத்து காக்க வேண்டியவரே தவறு செய்திருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும் ?
 
எந்த நிலையிலும் இறுதிவரை களமுனையில் போராடிச்சாவதே என் நோக்கம். நான் பார்த்த இனக்கொலைக்காட்சி எப்போதுமே என் மனதில் இரும்புத்திரையாக நிற்கும். அதனாலே உறுதியோடு இருந்த என் நிலையால் 1994 இல் மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.
அதைவிட கொடுமையான காலத்தை நான் சந்தித்ததில்லை. இதோ இப்போது நாம் முற்றாக அழியும் நிமிடங்களானாலும் நாம் நம் மக்களுக்காக இறக்கின்றோம் என்ற நிம்மதி உண்டு. போராடப்புறப்பட்டவர்களின் ஆசைகளால் ஏற்படும் தவறுகளால் இழந்த உயிர்களும், தவறும் இலட்சியச்சியத்தை விட கொடிய விசம் வேறொன்றுமில்லை.
 
எந்தச்சூழலிலும் என்கிராமத்தில் நான் கண்ட காட்சிதான் எத்தடையையும் தாங்கி இந்த மக்கள் இலட்சியத்தில் என்னால் இந்த நிமிடம்வரை நிற்க முடிந்தது. எங்கள் மக்களுக்கு என்ன சொல்வது ?! உங்கள் இயக்கம் உங்களை விட்டுப்போகிறது. உங்களில் இருந்துதோன்றிய இந்த வீரர்களில் சில தவறுகளும் பல தியாகங்களும் நிகழ்ந்தன. எந்த சமூக அமைப்பிலும் குழப்பமானவர்கள் இருப்பார்கள். அவர்களின் செயல்களால் உங்களுக்காக உயிர்கொடுத்த அந்த உன்னதங்களை மறந்து விடாதீர்கள்.
உங்களை மீண்டும் ஒரு அனாதை நிலையில் விட்டுவிட்டு நாம் செத்துப்போகிறோம். நீங்கள் பட்ட துயர்களுக்கு உண்மையானவர்கள் உண்மையாக இறுதிவரை போராடினோம். எங்களை மீறிய முட்கள் உங்களை குத்தியதை நாம் அறிவோம்.
 
உங்களின் நல்வாழ்வுக்காக உண்மையோடிருந்த உங்கள் பிள்ளைகளின் ஏக்கங்கள் ஒருநாள் உங்களுக்கு நிம்மதியான வாழ்வைத்தரும். நீங்கள் ஒற்றுமையாக காத்திருங்கள். உங்கள் பிள்ளைகளை அறிவானவர்களாக வளர்த்தெடுங்கள். வரலாறு உங்கள் கைகளில் ஒருநாள் வந்துசேரும்.
 
மனிதனை மனிதன் கொல்வது கொடிது. இந்த கொடிய காலம் எங்கள் கரங்களில் திணிக்கப்பட்டது. கொலைவெறியற்ற சிங்களம் உருவானால் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழமுடியும். அதன் வழிமுறைகளை கண்டுபிடிக்க உங்கள் குழந்தைகள் முயலட்டும்.
 
எங்கள் மரணத்தின் பின்னாவது உலகம் உங்களை காக்கும்.
 
விடமாட்டார்கள் ! எங்கள் மக்கள் விடமாட்டார்கள் ! நம் தமிழக உறவுகள் கொதித்தெழுவார்கள் ! புலம்பெயர் உறவுகள் சேர்ந்தெழுவார்கள்.
 
இந்த இழப்பு. இன்னொன்றை பிறப்பிக்கும். நிச்சயம் நம் மக்களின் கொடிய வாழ்வு முடிவுக்கு வரும்.
எங்கள் மக்களே ! சென்று வருகிறோம். மண்ணே ! உன்மடியில் நீண்ட ஓய்வெடுக்கப்போகிறேன்.
 
‘’கபிலன் ! கபிலன் ! வானம் வெளிக்கிறது.. தயாராகு… இதோ நான் தயாராகிவிட்டேன் . குப்பியை வாயில் கடித்ததும் காதுக்குள் பிஸ்ரலால் சுட்டுவிடு. அடுத்த நொடி உடல்மட்டும் மிஞ்சும்.’’
 
வலப்பக்கத்தில் தென்னைமரம் ஒன்று நின்றது. காகம் ஒன்று பதட்டத்தோடு குறுக்கே பறந்து சென்றது. அலை வீசிய கடல் அழுதுகொண்டிருந்தது. எங்கள் கடலில் எதிரிகளின் போர்க்கப்பல் தெரிந்தது. எங்கும் துப்பாக்கி இயங்கிக்கொண்டே இருந்தது. அவை இராணுவத்தின் துப்பாக்கிச்சத்தங்கள்தான். அவர்கள் வீரர்கள் வாழ்ந்த காற்றுக்கும் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.
 
மேகங்கள் ஒன்றையும் காணவில்லை. அதிகாலைக்குருவிகளின் சத்தம்கூட இல்லை. அவை எங்கு பறந்து போயினவோ தெரியவில்லை. தங்களோடு வாழ்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பறவைகள் அழுதிருக்கும். மனிதர்களை நினைத்து அவை குளம்பிப்போயிருக்கும். ‘இவர்கள் அறிவற்றவர்கள்’ என்று அவை நினைத்திருக்கும். மனிதனை மனிதன் கொல்வதை பார்க்கும் பறவைகளால் வேறெதை நினைக்க முடியும். ?!
 
அண்ணருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. வரலாறு ஒரு பெருமகனை இழந்துகொண்டிருக்கிறது. வரலாற்றில் இருந்து மனிதர்கள் கற்காவிட்டால் அவை மீண்டும் மீண்டும் நிகழும்.
 
‘’ கபிலன்…. கபிலன்.. சத்தம் அருகே கேட்கிறது. நிலம் வெளிக்கிறது, தயாராகு ! நாம் உயிருடன் பிடிபடக்கூடாது.. நாமிருவரும் இந்த மண்ணில் வாழும் நிமிடங்கள் இவைதான். ‘’
இருவரும் தயாரானார்கள்.
 
குப்பி கொடுப்பில் வைக்கப்பட்டது.
 
வலக்கையில் இருந்த பிஸ்ரல் காதோரம் வந்தபோது, இடக்கை அருகே இருந்த அறுகம்புல்லோடு சேந்த தாய்மண்ணை அள்ளி நெஞ்சில் வைத்துக்கொண்டு தளபதி ஜெயம் 1994 இல் தலைவரால் மீண்டும் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை தன் காதோரம் வைத்து விசையை அமத்தினார்.
 
பட்ட்டீர்ர்….பட்ட்டீடர்ர்.. !
 
‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ‘
 
என்று கூற அதன்பிறகு அந்த நிலத்தில் யாரும் இருக்கவில்லை.
 
 
 

டெலோ கும்பலால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விஜித்தாவின் 33ம் ஆண்டு நினைவு நாள்

3 months 2 weeks ago

large.GA1bkoeXMAA5JL-.jpeg.24045ad888c52

 

 

1990 ஆம் ஆண்டு தமிழர்கள் முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்களின் கொடூரத்தால் அல்லோலகல்லப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சொந்த இனத்தில் இருந்தே ஒரு தேசத் துரோகக் கும்பல் தன் சொந்த இனத்தை வேட்டையாடியது. அக்கும்பலின் பெயர் "டெலோ" என்பதாகும். 

இக்கும்பல் பல்வேறு படுகொலைகளை & வன்புணர்ச்சிகளை சிங்களப் படையினருடன் சேர்ந்து அவர்களின் துணைப்படையாக நின்று செய்து முடித்தது. 

அவ்வாறு அன்று அவர்கள் செய்து முடித்த ஒரு கொடூரம் தான், இந்த வின்சென்ட் கல்லூரி மாணவி விஜித்தாவின் வன்புணர்ச்சி நிகழ்வாகும். 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி டெலோ ஒட்டுக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட இவர் 5 பேர் கொண்ட குழுவின் கூட்டு வன்புணர்ச்சியின் பின் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வாவிக்கரை ஆற்றில் வீசப்பட்டார். 

இதில் ஈடுபட்டிருந்த ஐவரில் மூவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் சாவொறுப்பு (சுட்டு) வழங்கப்பட்ட நிலையில் இருவர் மட்டும் தப்பிப் பிழைத்தனர். அவர்களின் படங்களை நீங்கள் மேலே கண்டிருப்பீர்கள். 

இவர்களில் ஜனா என்கிற கோவிந்தம் கருணாகரம் என்ற பாலியல் குற்றவாளி 2012 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு 2017 வரை மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினராகப் பதவி வகித்து வந்தவர் ஆவார். பின்னர் மீண்டும் 2020 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி நாடாளுமன்றம் சென்றார், இந்தக் குற்றவாளி.

குற்றவாளிகளால் ஆளப்படும் நாட்டில் நீதி கிடைக்குமோ?

 

Checked
Thu, 03/28/2024 - 22:25
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed