300 யானைகளில் தொலைந்த குட்டியின் தாயை வனத்துறை சரியாகக் கண்டுபிடித்தது எப்படி? - ஓர் உணர்ச்சிப்பூர்வமான கதை
பட மூலாதாரம்,SUPRIYASAHUIAS
கட்டுரை தகவல்
- எழுதியவர், சிராஜ்
- பதவி,பிபிசி தமிழ்
-
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
"இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகியிருந்தால், குட்டியை விட்டு யானைக் கூட்டம் வெகு தூரம் சென்றிருக்கும். கடைசி வரை அந்த குட்டியால் தாயை பார்த்திருக்க முடியாது, தாய்ப்பால் இல்லாமல் குட்டி உயிர் பிழைப்பதும் கடினமாகியிருக்கும். நல்லவேளையாக தாயிடம் சேர்த்து விட்டோம்", என புன்னகையுடன் கூறுகிறார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது, பன்னிமேடு தேயிலை எஸ்டேட். டிசம்பர் 29 அன்று இந்தப் பகுதியில் தாயைப் பிரிந்து, கூட்டத்திலிருந்து விலகிய ஒரு குட்டியானை சுற்றிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனே அங்கு விரைந்த வனத்துறையினர், சில மணிநேரங்களில் எந்த யானைக் கூட்டத்திலிருந்து குட்டி பிரிந்தது என்பதைக் கண்டறிந்து அதனை தாய் யானையுடன் சேர்த்துள்ளனர்.
கடந்த 5 நாட்களாக யானைக்குட்டி மற்றும் அதன் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தது வனத்துறை. இந்நிலையில் நேற்று, தாயின் அருகே அந்த குட்டியானை அமைதியாக படுத்து உறங்கும் காணொளியை வெளியிட்டது வனத்துறை.
இணையத்தில் பலரால் பகிரப்பட்ட அந்த காணொளி குறித்தும், 300க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருக்கும் வால்பாறை பகுதியில், ஒரே நாளில் எவ்வாறு குட்டியானை தாயிடம் சேர்க்கப்பட்டது என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.
பட மூலாதாரம்,FOREST DEPARTMENT
"அன்று காலை தகவல் கிடைத்தவுடன் பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்கு சென்றுவிட்டோம். அங்கு 5 முதல் 6 மாதங்களே ஆன ஒரு குட்டி யானை சுற்றித் திரிந்தது. குட்டி யானை தன் தாயிடமிருந்து பிரிந்து விட்டால், அதை உடனடியாக அதன் தாயிடமோ அல்லது கூட்டத்திடமோ சேர்க்க வேண்டும்."
"மனித வாடை அதன் உடலில் பட்டுவிட்டால் யானைக் கூட்டம் அதை சேர்த்துக் கொள்ளாது, தாய் அதனை விரட்டிவிடும்" என்று நம்மிடம் பேசத் தொடங்கினார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன்.
"யானைகள் எப்போதும் கூட்டம் கூட்டமாக வால்பாறை பகுதியில் முகாமிடுவதால், புதிதாக ஏதும் யானைக் கூட்டம் இங்கு வந்தால் எங்களுக்கு தெரிந்துவிடும். டிரோன் மூலமாகவும், கண்காணிப்பு குழுக்கள் மூலமாகவும் யானைகள் எங்கே செல்கின்றன என்பதை நாங்கள் பார்ப்போம்."
"எந்த யானைக் கூட்டம் ரேஷன் கடைகளைத் தாக்குகின்றன, எவை மக்களின் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன, தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள் எவை என அனைத்து தரவுகளும் எங்களிடம் இருக்கும்" என்றார் மணிகண்டன்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு மீண்டும் ஒருமுறை டிரோன் மூலம் கண்காணித்து, அதை உறுதிபடுத்திக்கொள்வோம். அப்படி இருக்கையில் அன்று அதிகாலை பன்னிமேடு பகுதிக்கு சென்று குட்டியை மீட்டுவிட்டு, அதன் யானைக் கூட்டத்தை தேடத் தொடங்கினோம்." என்றார்.
பட மூலாதாரம்,FOREST DEPARTMENT
மேலும் அவர் கூறியது, "காலை 8.30 மணிக்கு எங்களுக்கு யானைக்குட்டி பற்றி தகவல் வந்தது, சரியாக மதியம் 1.30 மணிக்கு நாங்கள் அதை தாயிடம் சேர்த்துவிட்டோம். இவ்வளவு துரிதமாக செயல்பட்டதற்கு காரணம் ஒரு நாளுக்கு மேல் ஆகிவிட்டால், யானைக்கூட்டம் வேறு பகுதிக்கு நகர்ந்து விடும். பிறகு குட்டியை கூட்டத்தில் சேர்ப்பது கடினம்."
"யானைக்குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. காரணம் முழுக்க முழுக்க அது தாய்ப்பாலை மட்டும் குடித்து வளர்ந்தது. புல்லைக் கூட உண்ணாது. எனவே நாங்கள் வேறு ஏதாவது உணவு அல்லது லாக்டோ பானம் கொடுத்து அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், உடல்நிலை சரியில்லாமல் போய் மேலும் தாமதமாகிவிடும்."
"இன்னொரு சிக்கல், யானைக்குட்டி நம்மிடம் பழகிவிட்டால் நம்மை விட்டு போகாது. அது குட்டிக்கு தான் ஆபத்து. இப்படி பல சிக்கல்கள் இருந்ததால், பல குழுக்களாக பிரிந்து தேடுதலில் ஈடுபட்டோம். தேயிலைத் தோட்ட தொழிலார்கள் கூறியது மற்றும் எங்களிடமிருந்த தரவுகள் மூலமாக மூன்று யானைக்கூட்டங்களை பின்தொடர்ந்தோம்."
"அதில் பதினோரு யானைகள் கொண்ட கூட்டத்தில் தான், ஒரு குட்டியை காணவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். பின்னர் டிரோனைப் பறக்க விட்டு அந்த குறிப்பிட்ட யானைக்கூட்டத்தைப் பின்தொடர்ந்தோம். ஆனால் இப்போது தான் இரண்டு பெரிய சிக்கல்கள் உருவானது" என்கிறார் மணிகண்டன்.
பட மூலாதாரம்,FOREST DEPARTMENT
தொடர்ந்து பேசிய அவர், "யானைகள் கூட்டத்தை நோக்கி செல்லும்போது, குட்டி சோர்வடைய ஆரம்பித்தது. அதற்கு குடிக்க ஆற்றுத் தண்ணீரை மட்டுமே கொடுத்தோம். அது எங்களுடன் சற்று நெருக்கமாகத் தொடங்கியது. இப்போது எங்களுக்கு பயம் வந்துவிட்டது, நன்றாகப் பழகி விட்டால் அதை கூட்டத்திடம் சேர்ப்பது சிக்கல்."
"இன்னொரு சிக்கல், யானைக் கூட்டம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. அருகில் சென்று குட்டியை விட முடியாது. அது எங்களை தாக்க வாய்ப்புகள் அதிகம். தேயிலைத் தோட்டம் என்பதால் யானைகளிடமிருந்து தப்பிப்பது இன்னும் கடினம்.
எனவே மீண்டும் டிரோன் மூலம் கூட்டத்தின் இருப்பிடத்தை உறுதி செய்துவிட்டு, யானையை நன்றாக குளிப்பாட்டி சேற்று மணலை பூசினோம். மனித வாடை இருக்கக்கூடாது அல்லவா." என்று சிரிக்கிறார் மணிகண்டன்.
"பின்னர் அதை முன்னே செல்ல விட்டோம். கூட்டத்தின் சத்தத்தைக் கேட்ட குட்டி யானை பிளிறியது. உடனே இரண்டு யானைகள் முன்னே குட்டியை அழைத்துக் கொண்டன. அப்போது தான் நாங்கள் நிம்மதி அடைந்தோம். ஏனென்றால் இவ்வளவு சிறிய குட்டி தாயைப் பிரிந்தால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்காது." என்று கூறினார்.
வைரலான காணொளி குறித்து பேசும்போது, "அது இரண்டு நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட காணொளி, டிரோன் மூலம் தான் எடுத்தோம். எங்களுக்கு இருந்த சந்தேகம் தாய் அந்தக் குட்டியை எவ்வாறு அணுகும் என்பது தான். ஆனால் டிரோன் மூலம் அந்தக் காட்சியை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார் வனத்துறை ரேஞ்சர் மணிகண்டன்.
பட மூலாதாரம்,FOREST DEPARTMENT
இது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் ராமசுப்ரமணியனிடம் (ஐஎப்எஸ்) பேசியபோது, "கேரளாவில் சபரிமலை சீசன் என்பதால் அங்கிருந்து வெளியேறிய முன்னூறுக்கும் மேற்பட்ட யானைகள் வால்பாறையில் முகாமிட்டுள்ளன."
"அவை தங்களுடைய உணவுக்காக மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்லும். எனவே எத்தனை யானைகள் வருகின்றன போகின்றன என்பது குறித்த தரவுகள் எங்களிடம் எப்போதும் இருக்கும்."
"இப்போது அந்த குட்டி யானையும் அதன் கூட்டமும் மீண்டும் கேரளாவுக்குள் சென்றுவிட்டது. நாங்கள் இறுதியாக கண்காணித்தவரை குட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது."
"சில மணிநேரங்களில் அனைத்தும் நடந்ததற்கு எப்படியாவது தாயுடன் குட்டியை சேர்த்துவிட வேண்டுமென்ற குழுவின் எண்ணம் தான் காரணம். ஒருவேளை மீண்டும் அந்த யானைக்கூட்டம் வால்பாறைக்குள் வந்தால் கண்காணிக்கப்படும்" என்றார்.
வால்பாறையில் கூட்டத்திலிருந்து விலகிய குட்டியானையை மீட்டு தாயிடம் சேர்த்த வனத்துறை
யானைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்துவரும் ஆற்றல் பிரவீன்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில், "தாயை பிரிந்த யானையின் கன்று ஒன்று மீண்டும் தனது தாயுடன் சேர்ந்த அழகிய தருணங்கள், தாயின் மடியில் பத்திரமாக இருப்பதாய் குட்டி உணர்கிறது. பெரும் முயற்சிக்குப் பிறகு தமிழ்நாடு வனத்துறை இந்த குட்டியை தாயுடன் சேர்த்து வைத்துள்ளனர்."
"தமிழ்நாடு வனத்துறையை சேர்ந்த இக்குழுவினருக்கு எம்முடைய வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது வாங்கிய தி எலிபெண்ட் விசுபெரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய அம்மு குட்டி என்னும் யானைக் குட்டி ஒன்று இன்று வரை தன் கூட்டத்துடன் சேர முடியாமல் அனாதையாகவே உள்ளது. தாயை பிரிந்த வேதனை அதற்கு மட்டும் தான் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில், "பல ஆறுகளின் மூலமாக இருக்கும் மழைக்காடுகளை துண்டுச் சோலைகளாக மாற்றி விட்டு நாம் தினமும் குடிக்கும் தேயிலைக்காக இங்கு பயிர் செய்து வருகிறார்கள். இழந்துவிட்ட தனது வாழிடத்தை தேடி வரும் யானைகள் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றன" என்று கூறியுள்ளார்.