தமிழகச் செய்திகள்

ஸ்டெர்லைட்: துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க திமுக அரசு மறுப்பது ஏன்?

1 month ago
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 57 நிமிடங்களுக்கு முன்னர்

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய, அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு திமுக அரசு மறுப்பதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

2018-ஆம் ஆண்டு நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அன்றைய அதிமுக அரசின் மீது வலுவான எதிர்ப்பலைகளை உருவாக்கியது.

திமுகவும் அதனை தனக்கு சாதகமாக்கி, ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தது. அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் முன்வைத்து அதிமுகவை கடுமையாக சாடியது.

இருப்பினும், காவல் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் திமுக தலைமையிலான அரசு குழப்பமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

 
திமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 13 பேர் கொல்லப்பட்டதை எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையாகக் கண்டித்தது.

சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின் தாயார் தொடுத்த வழக்கு

2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையினால் ஏற்பட்ட தீவிர சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் உடல்நல பாதிப்புகளையும் கண்டித்து, ஆலையை மூட வலியுறுத்தி நீண்ட போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தின் நூறாவது நாளில் (மே 22ம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது நிகழ்த்தப்பட்ட கடும் வன்முறை மற்றும் துப்பாக்கிச்‌ சூட்டில் 12 பேர் குண்டுகள் பாய்ந்தும், ஒருவர் கூட்ட நெரிசலில் நெஞ்சில் மிதிப்பட்டும் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் சிலரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் துப்பாக்கி குண்டுகள் மிக அருகிலிருந்து சுடப்பட்டதும், சிலருக்கு தலையில் சுடப்பட்டதும் தெரிய வந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 18வயது ஸ்னோலினின் என்ற பெண்ணின் தலையின் பின் பகுதியில் நுழைந்த குண்டு வாய்வழியாக வெளியே வந்ததை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.

இந்த சம்பவத்துக்கு காரணமான காவல் அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாய் வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் அவர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியாக உயர்த்தி தரவும், அரசு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதனால் கிரிமினல் நடவடிக்கை கோரும் மனுவை தள்ளுபடி செய்ய கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் இந்த நிலைப்பாடு, துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது

அருணா ஜெகதீசன் அறிக்கை சொல்வது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது.

-துப்பாக்கிச்சூட்டுக்கான காரணங்கள், சூழல்கள் குறித்து கண்டறிதல்,

-சூழலுக்கு ஏற்ப தேவையான படைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனவா, துப்பாக்கிச்சூட்டின் போது எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டனவா என கண்டறிதல்

-காவல் அதிகாரிகள் தரப்பில் அதிக பலம் பயன்படுத்தப்பட்டனவா, அப்படி இருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை கூறுதல்

-இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் பரிந்துரைத்தல்

ஆகிய நான்கு நோக்கங்களை விசாரித்த ஆணையம் தனது இறுதி அறிக்கையை 2022 ஜூன் 6 அன்று அரசிடம் வழங்கியது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

17 காவல் அதிகாரிகளை பட்டியலிட்ட அருணா ஜெகதீசன் ஆணையம், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

அருணா ஜெகதீசன் அறிக்கை காவல் அதிகாரிகள் தேவையானதை விட அதிகமான பலத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிந்து கூறியது.

இந்த சம்பவத்துக்கு காரணமாக 17 காவல் அதிகாரிகளை பட்டியலிட்ட அருணா ஜெகதீசன் ஆணையம், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கையும் கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

மாவட்ட ஆட்சியர், மூன்று தாசில்தார்களை இந்த சம்பவத்துக்கு காரணமாக கண்டறிந்தது. அப்போதைய தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் மற்றும் டிஐ ஜி கபில்குமார் சி ஆகிய ஐ பி எஸ் அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், துணை கண்காணிப்பாளர் லிங்க திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன், பார்த்திபன் உள்ளிட்டோர் அருணா ஜெகதீசன் ஆணையத்தால் பட்டியிலிடப்பட்டிருந்தனர்.

மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் கொடுக்க பரிந்துரைத்தது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் என்ற நிவாரணத் தொகையாக தரவேண்டும் என்பதையும் ஏற்பதற்கில்லை என தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது

'எல்லா பரிந்துரைகளையும் ஏற்பதற்கில்லை' - தமிழ்நாடு அரசு

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை முழுவதுமாக ஏற்கவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக அரசு.

காவல் அதிகாரிகள் தேவைக்கு அதிகமான பலத்தை அதிகமாக பயன்படுத்தினர் என்பதையும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஏற்கும்போதிலும், கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் ரூ.50 லட்சம் என்ற நிவாரணத் தொகையாக தரவேண்டும் என்பதையும் ஏற்பதற்கில்லை என வாதிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறும்போது "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், தீவிர காயமடைந்த 40 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், லேசாக காயமடைந்த 64 பேருக்கு தலா ரூ.1.5 லட்சமும் வழங்கப்பட்டன. உயிரிழந்த 18வயது ஸ்னோலினின் சகோதரன் ஜான்ராஜ் உட்பட 21 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் “சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகள் தவிர சம்பந்தப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்டு காவல் கட்டுப்பாட்டில் இருந்த 93 பேருக்கு தலா ஒரு லட்சம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதியான பாரத்ராஜ், போராட்டத்தில் பங்கேற்றதற்காக காவலர்களால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். அந்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி உயிரிழந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்படிப்பு மேற்கொள்ள தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது” என தமிழக அரசு தான் எடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் பட்டியலிட்டுள்ளது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

கொல்லப்பட்ட ஸ்னோலின் குடும்பத்தின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ரஜினி, துறை ரீதியான நடவடிக்கைகள் கண் துடைப்பு மட்டுமே என்கிறார்

துறை ரீதியிலான நடவடிக்கைகள் போதுமா?

தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளே போதும் என்ற நிலைப்பாட்டை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

“சிபிஐ இந்த விவகாரத்தில் இரண்டு ஆண்டுகள் விசாரணை செய்து ஒரே ஒரு காவலர் அதுவும் கீழ் நிலையில் உள்ள திருமலை என்ற டிஎஸ்பி மீது மட்டும் தான் குற்றம் சுமத்தியுள்ளது” என்கிறார் ஹென்றி திபேன்.

ஸ்னோலின் குடும்பத்தின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ரஜினி துறை ரீதியான நடவடிக்கைகள் கண் துடைப்பு மட்டுமே என்றார். “ஆணையத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சைலேஷ் குமார் யாதவ் ஐ பி எஸ், வழக்கமான பதவி உயர்வு பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியம்? யாரை ஏமாற்றுகிறார்கள்?” என்கிறார்.

தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில், “சிபிஐ எல்லா காவல் அதிகாரிகளையும் விசாரித்தது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் வகையிலான அம்சங்களை சிபிஐ கண்டறியவில்லை (மேற்குறிப்பிட்ட நபர்கள் தவிர) . எக்ஸ்கியுடி மேஜிஸ்திரேட் உத்தரவின் படி தான் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். எனவே அந்த வகையில் காவலர்களின் நடவடிக்கைகளை சிபிஐ ஏற்கெனவே நியாயப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு கிரிமினல் மற்றும் விதிமீறல் பார்வையிலிருந்து விலக்கு அளித்துள்ளது” என்று கூறுகிறது.

"தவறு செய்த அதிகாரிகள் மீது எப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும்? பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் கேட்கவில்லை, சட்டரீதியான நியாயம் கிடைக்க வேண்டுமல்லவா? " என்று பிபிசி தமிழிடம் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஸ்னோலின் தாயார் வனிதா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘‘கிரிமினல் நடவடிக்கை எடுக்க சிபிஐ பரிந்துரைக்கவில்லை என்று கூறுகிறார்கள். சிபிஐ என்பது யார்? அவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நிற்பவர்கள். போராடிய மக்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது சிபிஐ என்பது நினைவிருக்கட்டும். இதுவரை அரசால் அமைக்கப்பட்ட ஆணையங்கள் எல்லாமே அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. இந்த ஆணையம் உண்மையை கூறியதால் அதை ஏற்க மறுக்கிறார்கள். குண்டடிபட்டு தான் இறந்தார் ஸ்னோலின் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. இதை அரசு உட்பட யாரும் மறுக்கவில்லையே. இன்னும் வேறு என்ன வேண்டும்?" என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினி.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
படக்குறிப்பு,

ஸ்னோலினின் தாய் வனிதா

அதிகாரிகளை பாதுகாக்கிறதா அரசு?

தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை எடுத்த ஐந்து மாதங்களில் மூடிவிட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்ரி திபேன்.

அரசாங்கம் அதிகாரிகளையே நம்பியிருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார் அவர். ,"இந்த வழக்கை விசாரித்த சிபிஐ இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் ஒரே ஒரு காவலரை மட்டும் தான் குற்றம் புரிந்ததாக அடையாளம் கண்டது. அவரும் கீழ் நிலையில் உள்ள காவலர்தான். இந்த அரசு, அதிகாரிகளையே நம்பியிருப்பது துர்திருஷ்டவசமானது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பாதுகாக்கிறது." என்றார்.

ஒரு முறை வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது கூட தெரியாமல், அறிக்கை இனிமே வெளி வரும் என்று கடந்த மாதம் நீதிமன்றத்தில் கூறியதை சுட்டிக்காட்டுகிறார் அவர்.

தவறு செய்த அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தமிழ்நாடு அரசாங்கம் கூறுகிறது.“தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்நிலையில், இது குறித்து மேலும் விசாரிக்க 2023ம் ஆண்டு மே மாதம் முதல் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் அறிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்றும் கூறியது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ பி எஸ் அதிகாரிகள் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று விமர்சிக்கும் ஹென்றி திபேன், "2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போதும்,2021 ன் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் என்று திமுக கூறியது. அந்த நடவடிக்கை எங்கே என்று தான் கேட்கிறோம்." என‌ கேள்வியெழுப்பினார்.

‘‘13 உயிர்கள் பறி போகின. கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடல்லை. இனிமேலும் திறக்க விடமாட்டார் கடவுள். என் மகளை இழந்து நான் படும் வேதனை எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்" என்கிறார் ஸ்னோலின் தாயார் வனிதா.

இது குறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘இந்த விவகாரத்தில் தேவையான துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிலைப்பாடு அரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது’’ என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c191drwmj4po

'தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?' - ராமதாஸ் கண்டனம்

1 month ago
24 FEB, 2024 | 09:43 AM
image

 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ஆம் நாள் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுநருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. மீனவர் ஜான்சன் ஏற்கெனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, விடுதலை செய்யப்பட்ட 18 மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு 6 மாதங்களும், ஜான்சன் விடுதலையான பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டால் ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. இது சட்டத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசு செய்யும் அத்துமீறலாகும்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிப்பது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும்.  கடந்த 4-ஆம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், கடந்த 16-ஆம் நாள் தீர்ப்பளித்த இலங்கை நீதிமன்றம், 20 மீனவர்களை விடுதலை செய்ததுடன், இரு மீனவர்களுக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து தான் நேற்று மீனவர் ஜான்சனுக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனை வழங்கியிருக்கிறது.

 

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் சிங்கள அரசு மற்றும் நீதிமன்றங்களின் புதிய அத்துமீறல், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதற்காக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் அடுத்தகட்ட அணுகுமுறையாகவே தோன்றுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே தமிழக மீனவர்களைக் கைது செய்வது, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வந்தது. ஆனால்,  அவற்றின் மூலம் தமிழக மீனவர்களை நிலைகுலையச் செய்ய முடியாததால் மீனவர்களை மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் சிறையிலடைக்கும் அணுகுமுறையை  இலங்கை அரசு கையில் எடுத்திருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காக கடந்த காலங்களிலும் இத்தகைய உத்திகளை இலங்கை  பயன்படுத்தியிருக்கிறது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பவர்களுக்கு ரூ.25 கோடி  தண்டம் விதிக்கும் சட்டத்திற்கு கடந்த 2015-ஆம் ஆண்டு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அப்போது தமிழ்நாட்டில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்த முடிவை இலங்கை அரசு திரும்பப் பெற்றது. பின்னர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்தது. இப்போது அதை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது.

வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் தண்டனை விதிக்க முடியாது என்பதுதான் எதார்த்தம் ஆகும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைது செய்வதையும்,  சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.

மிகக்குறுகிய பரப்பளவைக் கொண்ட தமிழக இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு மீன் பிடிப்பது தான் இந்த சிக்கலுக்கு தீர்வாகும். கடந்த காலங்களில் பலமுறை இத்தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து கொண்டு தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது. மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப் படுவதைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தம், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா புறக்கணிப்பு  என ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/177169

தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்கள் அதிகமாக இருப்பது ஏன்? செய்ய வேண்டியது என்ன?

1 month ago
விதவைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை விதவைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக தெரிவிக்கிறது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கணவரை இழந்த, ஆதரவற்றோர் விகிதம் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பதாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும் அந்தக் கொள்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பது ஏன், செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டிற்கான மாநில மகளிர் கொள்கை ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 21ஆம் தேதியன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் சமூக நீதியை உறுதி செய்வது, அவர்கள் உரிமைகளைப் பெற்று, திறன்களை உணர்வு, பெண்கள் சம வாய்ப்புகளுடன் அமைதியான வாழ்க்கை வாழச்செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளுக்கு என சில குறிக்கோள்களை இந்த கொள்கை முன்வைத்திருக்கிறது. பள்ளிக்கூடங்களில் பெண்களின் இடைநிற்றலை குறைத்தல், வளரிளம் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல், எல்லாப் பணியிடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வது, டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல், கடன் வசதிகளை ஏற்பாடு செய்தல், மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்குவித்தல் ஆகியவையே அந்த இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

 

இந்தக் கொள்கை எல்லா மகளிருக்கும் பொருந்தும் என்றாலும் அதன்படி, தனியாக வாழும் பெண்கள், கணவனை இழந்த ஆதரவற்றோர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள், பாதிக்கப்படக்கூடிய தொழில்களைச் செய்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பல முக்கியப் புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவில் 5.6 கோடி கணவரை இழந்த பெண்கள் உள்ளனர் என்றும் இது மொத்த மக்கள் தொகையில் 4.6 சதவீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக கணவரை இழந்த பெண்கள் உள்ளனர்.

கணவரை இழந்த பெண்கள்

பட மூலாதாரம்,M.K.STALIN / X

படக்குறிப்பு,

முதலமைச்சர் முக.ஸ்டாலின்

தேசிய சராசரியை விட அதிகம்

கேரளாவில் 6.7 சதவீதமும் தமிழ்நாட்டில் 6.4 சதவீதமும் கணவரை இழந்த பெண்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் உயிர்வாழ்வதால் கணிசமான முதியோரைக் கொண்ட மாநிலங்களில் கணவரை இழந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பெண்களுக்கு என சிறப்புக் கவனமும் முன்னுரிமையும் அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

அமைப்புகள் என்ன சொல்கின்றன?

தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களுக்கென பல அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. சமூகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள இவர்களுக்கு என செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார்கள் இவர்கள்.

"கணவரை இழந்த பெண்களின் பிரச்சனை என்பது மிக முக்கியமானது. எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில்தான் கணவரை இழந்த பெண்கள் அதிகம். ஆனால், சதவீத அடிப்படையில் கேரளா, தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது" என்கிறார் கணவரை இழந்த பெண்களுக்கென பணியாற்றும் கலங்கரை அமைப்பின் இயக்குநரான குழந்தைச்சாமி.

கணவரை இழந்த பெண்கள் அதிகம் இருப்பதற்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. மதுப் பழக்கம், விபத்துகள், தற்கொலை, திருமணம் நடக்கும்போது பெண்ணைவிட ஆணின் வயது அதிகமாக இருப்பது ஆகியவற்றால் மனைவிக்கு முன்பாகவே கணவர்கள் உயிரிழப்பது நடக்கிறது.

விதவை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த பெண்கள் கணவரை இழந்ததில் இருந்து பிரச்சனைகள் துவங்குகின்றன.

"கணவரை இழந்த பிறகு இந்தப் பெண்களுக்கு நடக்கும் சடங்குகள் மிகக் கொடுமையானவை. அதற்குப் பிறகு எல்லா மங்கல நிகழ்வுகளில் இருந்தும் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். இதனால், பல பெண்கள் கணவரை இழந்துவிட்டால் வாழ்க்கையையே இழந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு என ஒரு மறுவாழ்வை ஏற்படுத்திக்கொள்வதில் மிகப் பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன" என்கிறார் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினரும் கல்வியாளருமான கல்யாணந்தி.

இதில் முக்கியப் பிரச்சனையாக இருப்பது மறுமணம். "கணவரை இழந்தவர்களில் சிலர் அப்படியே வாழ்ந்து முடித்துவிட நினைப்பார்கள். ஆனால், பல பெண்கள் பல்வேறு கட்டாயங்களின் காரணமாக அப்படி வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஜாதி வழக்கம், குடும்பப் பாரம்பரியம் இதில் முக்கியக் காரணமாக இருக்கும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னொரு திருமணத்தை எதிர்கொள்ள பயந்து, திருமணம் செய்யாமல் இருப்பார்கள். அதேபோல, கணவரின் குடும்பத்தை சார்ந்து இருப்பவர்களால் மறுமணம் செய்ய முடியாது. கணவர் வழியில் வர வேண்டிய சொத்துகள், தன் குழந்தைகளுக்கு வர வேண்டும் என்பதற்காகவும் மறுமணம் செய்யாமல் வாழ வேண்டியிருக்கும். இதில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமே கிடையாது" என்கிறார் கல்யாணந்தி.

 
கணவனை இழந்த பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவிலேயே முதல் முறையாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், தமிழ்நாடு அரசால் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் முன்னோடி திட்டங்கள்

தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களுக்கு என இந்தியாவிலேயே முதல் முறையாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், தமிழ்நாடு அரசால் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதன் தலைவராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரே இருந்துவருகிறார்.

"கணவரை இழந்த பெண்கள் தொடர்பாக ஒரு மாற்றுக் கலாச்சார சிந்தனையை உருவாக்க வேண்டும். கணவரை இழந்த பிறகு பூவைக்கவோ, பொட்டு வைக்கவோ கூடாது என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். அவர்கள் மறுமணம் செய்ய விரும்பினாலும், சமூகக் கட்டாயங்கள் அதற்கு அனுமதிப்பதில்லை. இந்தப் பெண்களுக்கு வங்கிக் கடன்களில் முன்னுரிமை தரலாம். தவிர, தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை இவர்களுக்கும் அளிக்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் இவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், கூடுதலான உதவித் தொகையை அளிக்க வேண்டும். கழிப்பறைகள் வீட்டிற்குள்ளேயே இருப்பதுபோன்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்" என்கிறார் குழந்தைச்சாமி.

கணவரை இழந்த பெண்களின் நலனில் சமூகத்தின் நலனும் அடங்கியிருக்கிறது என்கிறார் கல்யாணந்தி. "தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்கள் போட்டித் தேர்வில் பங்கேற்கும்போது அவர்களுக்கு என இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதனை அவர்கள் பயன்படுத்தலாம். அதற்கு சமூகத்தின் தூண்டுதல் மிக முக்கியமானது. மேலும், ஒற்றைப் பெற்றோராக குழந்தையை வளர்ப்பது மிகக் கடினம். அந்தக் குழந்தைகள் சட்டமீறல்களில் ஈடுபடும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஆகவே, கணவரை இழந்த பெண்களின் நலன் மேம்படும்போது சமூகத்தின் நலனும் மேம்படுகிறது" என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c25qq4l259jo

அர்வி: அரபி எழுத்து, தமிழ் உச்சரிப்பு - அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி, மீட்டெடுக்கப்பட்ட வரலாறு

1 month 1 week ago
அர்வி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கமலா தியாகராஜன்
  • பதவி, பிபிசி டிராவல்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

2008ஆம் ஆண்டு ஒரு மாலை வேளையில், தென்னிந்திய நகரமான வேலூரில் உள்ள அரபிக் கல்லூரியில் முகமது சுல்தான் பாகவி 26 வயது மாணவராக இருந்தபோது, அவர் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தைக் கண்டுபிடித்தார். நகரின் லபாபீன் கப்ருஸ்தான் மசூதியில் தொழுகையை முடித்த பிறகு, மசூதியின் முற்றத்தை ஒருவர் சுத்தம் செய்வதைக் கண்டார்.

அவர் குப்பைகளை, காகிதங்களை, இலைகளை சேகரித்து, அவற்றை எரிப்பதற்காக மசூதியின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த ஒரு கிணற்றின் அருகே குவித்து வைத்தார். மசூதியை விட்டு பாகவி புறப்படத் தயாரானபோது, மெல்லிய காற்று வீசியது. குப்பை மேட்டில் இருந்து ஒரு காகிதம் பறந்து வந்தது. அந்த காகிதம் ஏதோவொரு புத்தகத்தின் ஒரு பகுதி என உணர்ந்த பாகவி திடுக்கிட்டார்.

சில மசூதிகளில் வறண்டு போன கிணறுகளை அரிய கையெழுத்துப் பிரதிகளை சேமிப்பதற்காகப் பயன்படுத்தியதை அவர் அறிந்திருந்தார். அதில் இதுவும் ஒன்றாக இருக்குமா?

எரிந்து கொண்டிருக்கும் குப்பைக் குவியலைக் கூர்ந்து கவனித்துவிட்டு, நெருப்பிலிருந்து ஒரு முழு புத்தகத்தையும் அவசரமாக வெளியே எடுத்தார் பாகவி. தீயை அணைத்த பிறகு, அரிய எழுத்துக்களால் நிரம்பிய பக்கங்களைக் அவர் கண்டார். உடனடியாக அவருக்கு புரிந்து விட்டது, இதில் உள்ள எழுத்துக்கள் நீண்ட காலத்திற்கு முன் வழக்கொழிந்து போன அர்வி மொழியைச் சேர்ந்தது என.

தற்போது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஜாமியா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் பாகவி, நான்கு வயதிலிருந்தே அர்வி இலக்கியங்களை படித்து வந்தார். ஆனால் அரபு மொழியைப் நன்கறிந்த முஸ்லிம்களில் கூட மிகச் சிலரால் மட்டுமே இதைப் படிக்க முடியும்.

 
அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

பட மூலாதாரம்,AHAMED ZUBAIR

படக்குறிப்பு,

அர்வி எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை

தமிழ்நாட்டில் உருவான அர்வி மொழி

கிபி 8ஆம் நூற்றாண்டின் இடைக்கால உலகில் அதிக பயணம் மற்றும் வர்த்தகம் காரணமாக பல புதிய கலப்பு மொழிகள் உருவாகின, அதில் ஒன்று அர்வி. 17ஆம் நூற்றாண்டில், தமிழ் பேசும் மக்கள் நிறைந்த தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அதிகமான முஸ்லிம் அரேபிய வணிகர்கள் வந்திறங்கியபோது, அது இந்தப் பகுதியில் முக்கியத்துவம் பெற்றது.

வணிகர்கள் தங்களுடன் கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள், சிறந்த ஜவுளிகள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு வந்தனர். உள்ளூர் மக்கள் மற்றும் வணிகர்கள் இடையே இரண்டு வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், உள்ளூர் மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்த அவர்கள் ஏங்கினார்கள். மேலும் அவர்களுக்கு இடையே இருந்த மத ஒற்றுமையும் ஒரு காரணம் என்று பதிவுகள் கூறுகின்றன.

வணிகர்கள் பேசிய அரபு மொழியானது உள்ளூர் மொழியான தமிழுடன் கலந்து, அதை அறிஞர்கள் அரபு தமிழ் அல்லது அர்வி மொழி என்று அழைத்தார்கள். இந்த மொழிக்கான எழுத்து முறை சற்றே மாற்றியமைக்கப்பட்ட அரேபிய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, ஆனால் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளூர் தமிழ் பேச்சுவழக்கில் இருந்து கடன் வாங்கப்பட்டவை.

அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

எடின்பர்க் பல்கலைக் கழகத்தில், 1750க்கு முன்பான இந்தியப் பெருங்கடலின் வரலாறு எனும் பிரிவில் விரிவுரையாளராக இருக்கும் மஹ்மூத் கூரியா, "அர்வி என்றழைக்கப்படும் அரபுத் தமிழ், அரபு எழுத்துக்கள் கொண்டு எழுதப்படும் பல மொழிகளில் ஒன்றாகும்" என்று விளக்கினார்.

"ஐரோப்பிய காலனித்துவவாதிகளுக்கு முன்பாக இந்தியாவில் தரையிறங்கிய அரேபிய மற்றும் பாரசீக வணிகர்கள் அப்போது இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்" என்று அவர் கூறினார்.

"இந்த மொழிகளின் வளர்ச்சி என்பது கடல் பயணம் மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாக கொண்டது." என்கிறார்.

தமிழ் பேசும் மக்களைக் கொண்ட அருகிலுள்ள இலங்கைக்கும் அர்வி பரவியது. 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோதும், தாய்மொழி பேசுபவர்கள் குறையத் தொடங்கியபோதும் இந்த மொழி அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால் இன்று ஒரு நல்ல மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக பட்டதாரிகள் இதைப் படிக்கிறார்கள், கடற்கரையோரத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில், பல முஸ்லீம் பெண்கள் பண்டைய அர்வி மொழியில் பிரார்த்தனை பாடல்களைப் பாடுவதில் பெருமை கொள்கிறார்கள்.

"பலர் அதன் மதிப்பை உணரவில்லை. எனது சொந்த ஊரான தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் உள்ள குடும்பங்கள் அதை தங்கள் முன்னோர்களுடனான புனிதமான இணைப்பாக கருதுகின்றனர்," என்று பாகவி கூறினார்.

அர்வி எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்து கொள்ள, ஒருவர் தென்னிந்தியாவின் கடற்கரையோர நகரங்களுக்குச் செல்ல வேண்டும், முக்கியமாக முஸ்லிம் குடியிருப்புகளுக்கு.

 
அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

பட மூலாதாரம்,MAHMOOD KOORIA

படக்குறிப்பு,

அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார்.

40 எழுத்துக்கள் மட்டுமே கொண்ட அர்வி மொழி

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து தெற்கே 530கிமீ தொலைவில் உள்ள கீழக்கரை அத்தகைய நகரங்களில் ஒன்றாகும். 38,000 மக்கள்தொகையுடன் வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது, இங்குள்ள ஜும்மா பாலி மஸ்ஜித் - இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றாகும், இது கிபி 628இல் கட்டப்பட்டது.

இந்தப் பகுதிகளுக்கு கடல் வழியாக வந்த ஏமன் வணிகர்களால் இந்த மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இஸ்லாமிய புனிதர்களின் இரண்டு பெரிய கல்லறைகள் மசூதியின் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் மற்றும் பச்சை மினாரட்டுகளுக்கு அருகில் உள்ளன. கல்வெட்டுகளின் ஒரு முனையில் அரபு மொழியும், மறுபுறம் தமிழ் மொழியும் உள்ளது.

அரபு கடல் வணிகர்கள் மற்றும் உள்ளூர் தமிழ் முஸ்லீம் பெண்கள் இடையே நடந்த திருமணத்தின் காரணமாக 17ஆம் நூற்றாண்டில் அர்வியின் புகழ் பரவியது என்றும், வணிக உறவுகளை ஆழப்படுத்த வணிகர்களுக்கு இது உதவியது என்றும் சில அறிஞர்கள் நம்புகிறார்கள். அந்த வணிகர்கள் ஏற்கனவே அறிந்திருந்த அரபி எழுத்துமுறையை தமிழ் போன்ற சிக்கலான மொழியுடன் இணைத்து அர்வி மொழியில் தேர்ச்சி பெற்றனர்.

"தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. அர்வி மொழியில் அதைவிட குறைவாக வெறும் 40 எழுத்துக்கள். ஒரு மொழியில் உடனடியாக தேர்ச்சி பெற விரும்பும் கடல் வணிகர்களுக்கு ஏற்ற மொழியாக இருந்தது அர்வி. புதிய நிலத்தில் வணிகம் செய்து வாழ்வாதாரம் பெற அது உதவியது" என்று கே.எம்.ஏ அகமது சுபைர் கூறினார். சென்னையில் உள்ள தி நியூ கல்லூரியில் அரபு மொழியில் இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார் அகமது சுபைர்.

அவர் மேலும் கூறியதாவது, "வடக்கில் இருப்பது போல இல்லாமல், தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் பாகுபாடு இல்லாமல், பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர். வர்த்தகத்தின் மூலம் அரேபியர்கள் செழிப்பைக் கொண்டு வந்ததால் இங்கு அவர்கள் வரவேற்கப்பட்டனர். சில பதிவுகளின்படி, அர்வி ஒரு ரகசிய மொழியாக பயன்படுத்தப்பட்டது. அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடனான வணிகப் போட்டியை எதிர்கொள்ளும் போது ரகசிய முறையில் (உள்ளூர் மக்களுடன்) தொடர்புகொள்வதற்கான வழிமுறையாக இருந்தது." என்கிறார்.

 
அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம்

தமிழ் மற்றும் அரபு மொழிகளின் கலவையாக மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவில், மலையாளம் மற்றும் அரபு கலந்து, அரபு மலையாளம் அல்லது மாப்பிள மலையாளம் என்று அழைக்கப்படும் மொழியும் செழித்து வளர்ந்தது.

குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி மற்றும் சிந்தி போன்ற பிற பிராந்திய இந்திய மொழிகளும் அரேபிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன என்று சுபைர் கூறினார். அரபு மற்றும் உள்ளூர் மொழியின் இணைப்பால் பிறந்த ஒவ்வொரு மொழியும் தனித்துவமானது. ஆனால் வெளிநாடுகளில் கணிசமான தமிழ் பேசும் மக்கள் தொகை இருப்பதால் அரேபிய வணிகர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறிய போதும் அர்வி தொடர்ந்து செழித்து வளர்ந்தது என்று சுபைர் கூறுகிறார்.

"வரலாற்று பதிவுகளின்படி, இலங்கை, சுமத்ரா, மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கும் அரபு வர்த்தகர்கள் மூலமாக பயணம் செய்தது அர்வி மொழி." என்கிறார் அவர்.

அரபு தமிழ் மற்றும் அரபு மலையாளம் மிகவும் பிரபலமாக இருந்தன, ஏனெனில் அவை வளமான இலக்கிய மற்றும் பேச்சுவழக்கு பாரம்பரியத்தைக் கொண்டிருந்தன, என்று கூறுகிறார் கூரியா. இந்தியா மற்றும் இலங்கை முழுவதும், அரபு தமிழில் எழுதப்பட்ட 2,000 புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன . கேரளாவில், அரிய அரபு மலையாள கையெழுத்துப் பிரதிகளை பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இருப்பினும், கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க, நீங்கள் முதலில் அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது மிகவும் சவாலானது. மசூதியின் வளாகத்தில் புத்தகம் எரிக்கப்படுவதைக் கண்ட பாகவி, இந்தியா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட அர்வி மற்றும் அரபு மலையாள புத்தகங்களை இப்போது வரை சேகரித்துள்ளதாக கூறுகிறார்.

"நான் இந்த புத்தகங்களை பழைய கிணறுகளிலும், கல்லறைகளிலும் (கபருஸ்தான்கள் என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் முஸ்லீம் வீடுகளில் பயன்படுத்தப்படாத பழைய மாடி அறைகளில் கண்டேன்," என்று அவர் கூறினார். (தனியார் சேகரிப்பில் இருந்து இந்த நூல்களில் பல இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, மாப்பிள பாரம்பரிய நூலகத்தில் ஆன்லைனில் பதிவேற்றப்படுகின்றன)

 
முஸ்லிம் பெண்களால் எழுதப்பட்ட நூல்கள்
அர்வி: அரபுத் தமிழர்களின் தொலைந்து போன மொழி

பட மூலாதாரம்,MUHAMMED SULTHAN BAQAVI

படக்குறிப்பு,

1314ஆம் ஆண்டின் அர்வி கவிதை புத்தகம் உட்பட இந்தியா மற்றும் ஆசியா முழுவதும் உள்ள அர்வி புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை பாகவி சேகரித்து வருகிறார்

காலனித்துவத்தின் விளைவாக, கையெழுத்துப் பிரதிகள் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்திற்குச் சென்றன, அவை இன்றும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

அரபு மலையாள மொழியை நன்கறிந்த கூரியா, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நூல்களை அட்டவணைப்படுத்துவதில் பிரிட்டிஷ் நூலகத்திற்கு உதவி வருகிறார். "வரலாறு, மதம், மருத்துவம் மற்றும் கலாச்சாரம் ஆகிய பல பிரிவுகளில் இந்த நூல்கள் இருப்பதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். இவற்றில் பல நூல்கள் பெண்களால் எழுதப்பட்டவை" என்று அவர் கூறினார்.

"பிரசவம் மற்றும் பாலுறவு போன்ற பிரச்னைகளை எடுத்துரைக்கும் விதத்தில், கணிசமான எண்ணிக்கையிலான புத்தகங்கள் பிற பெண்களுக்காக பெண் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. உள்நாட்டுப் பிரச்னைகளைப் பிரதிபலிக்கின்றன அல்லது உணவு வகைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கின்றன" என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மதங்கள் பிரிவு விரிவுரையாளர் ஓபிரா கேம்லியேல் கூறினார்.

"முஸ்லிம் பெண்கள் சமூகத்தில் எப்படி ஒரு வலுவான குரலையும் அடையாளத்தையும் கொண்டிருந்தனர், எப்படி ஒரு தாய்வழி பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் என்பதற்கு இது சான்றாகும்" என்று கேம்லியேல் கூறினார்.

இந்த பேச்சுவழக்குகள் அன்றாடம் பேசப்படுவதில்லை என்றாலும், இந்த புத்தகங்கள் மற்றும் பாடல்களால் அர்வி மற்றும் அரபு மலையாளம் இன்றும் வாழ்கின்றன.

 
தமிழ்நாட்டின் காயல்பட்டினத்தில் பேசப்படும் அர்வி

அர்வி மற்றும் அரேபிய மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பட்ட மதப் பாடல்கள் பாகவியின் சொந்த ஊரான காயல்பட்டினத்தில் இன்னும் பாடப்படுகின்றன, ஏனெனில் உள்ளூர்வாசிகள் இந்த மொழியை நினைவில் வைத்து கொள்ளவும், தங்கள் வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் விரும்புகிறார்கள்.

இந்தப் பாடல்களைப் பாடுவதற்கு என ஒன்றுகூடுவது ஒரு பெரிய சமூக நிகழ்வு. காயல்பட்டினத்தில் உள்ள உள்ளூர் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் படித்து வரும் 18 வயது கிஜ்ர் மக்ஃபிரா, "இது ஒரு பெண்கள் கிளப் போன்றது" என்று கூறி சிரித்தார். "ஒவ்வொரு வீட்டிலும் அர்வியை நன்கு அறிந்த ஒரு உறுப்பினராவது சரளமாகப் பேசுவார்," என்று அவர் மேலும் கூறினார்.

"எங்கள் ஊரில், முகமது நபி பிறந்த மாதம் (இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தில், தோராயமாக செப்டம்பர் மாதம்) போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது பெண்கள் குழுக்கள் கூடி இந்தப் பாடல்களை ஒன்றாகப் பாடுவார்கள்" என்று மக்ஃபிரா கூறினார்.

"அவர்கள் இந்தப் பாடல்களைப் பாடும்போது அவர்களின் கண்களில் கண்ணீரைப் பார்க்கும்போது, அவர்கள் அதை எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொண்டு போற்றுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது மிகவும் உணர்வுப்பூர்வமானது." என்கிறார்.

வீட்டில் உள்ள பெரியவர்களால் ஈர்க்கப்பட்டு அர்வியை கற்றுக்கொள்கிறார் மக்ஃபிரா. இவர் நான்கு வயதிலிருந்தே அரபு மொழியைக் கற்று வந்துள்ளார், மேலும் தமிழில் சரளமாகப் பேசுவதற்கும் அவருக்கு இது உதவுகிறது. நகரத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆண்ட்ராய்டு கைபேசியுடன் இணக்கமான ஒரு அர்வி கீபோர்டை உருவாக்கியுள்ளனர் .

மக்ஃபிராவின் உறவினரான கிஸ்ர் பாத்திமா கூறுகையில், "அர்வி எழுத்து முறையை பழைய முறையில் கற்றுக் கொள்ளும் இளைஞர்களை ஊர் மக்கள் ஊக்குவிக்கிறார்கள். அவ்வாறு செய்யும் இளைஞர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்படுகிறது. இந்த ஊரின் பழமையான பாரம்பரியம் இது” என்றார்.

இவர் சமீபத்தில் தனது அண்டை வீட்டுச் சிறுமிக்கு ரூபாய் 500 பரிசளித்துள்ளார், மேலும் தான் பார்த்ததில் மிக அழகான அர்வி கையெழுத்து அந்த சிறுமியின் கையெழுத்து தான் என்று கூறுகிறார்.

"இந்த மொழியின் பாடல்கள், ஆன்மீகச் சிறப்பு மற்றும் வணிகர்களின் சாகசப் பயணங்களோடு இந்த மொழிக்கு இருக்கும் தொடர்பு, இப்படிப்பட்ட மொழி மேலும் வளர்வதை உறுதி செய்ய இதுவே எங்கள் வழியாகும்," என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c51wzzn3g1vo

ஜெயலலிதா நகைகளை ஒப்படைக்க கர்நாடக‌ அரசுக்கு பெங்களூரு கோர்ட் உத்தரவு

1 month 1 week ago
ஜெயலலிதா நகைகளை ஒப்படைக்க ரூ.5 கோடி: தமிழக அரசுக்கு பெங்களூரு கோர்ட் உத்தரவு
20 FEB, 2024 | 03:18 PM
image
 

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்க‌ளை மார்ச் 6-ம் தேதி தமிழக‌ அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991 - 1996ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தமிழக லஞ்ச‌ ஒழிப்புத் துறை போலீஸார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் தங்க, வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் உட்பட என ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. இவ்வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது, ஜெயலிதா உயிரிழந்தார். சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு மத்திய சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர்.

இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கடந்த ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும். அந்த தொகையில் இவ்வழக்கிற்காக கர்நாடக அரசு செலவு செய்த பணத்தை வழங்க வேண்டும். மீதியுள்ள பணத்தை மக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரினார்.

இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கூடாது. அவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரினர். இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ஜெயலலிதா தொடர்புடைய தங்க, வரை நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கர்நாடக அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். வருகிற மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக‌ உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Jayalalithaa-s-Jewellery-is-in-Karnataka

அன்றைய தினம் தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி, புகைப்படக்காரர், வீடியோகிராபர் ஆகியோர் ஆஜராகி பெற்றுக்கொள்ள வேண்டும். நகைகளை கொண்டு செல்ல 6 இரும்பு பெட்டிகளைக் கொண்டு வர வேண்டும். இவ்வழக்கை நடத்துவதற்கு கர்நாடக அரசு செலவழித்த ரூ.5 கோடியை தமிழக அரசு செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டார். இதையடுத்து இவ்வழக்கின் அடுத்தக்கட்ட‌ விசாரணை மார்ச் 6‍-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/176873

2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்

1 month 1 week ago
தமிழ்நாடு பட்ஜெட்: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் உள்பட 10 முக்கிய அம்சங்கள்
தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TN GOVT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 19 பிப்ரவரி 2024, 09:46 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. அரசின் இதற்கு முந்தைய 3 நிதி நிலை அறிக்கைகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த முதல் நிதி நிலை அறிக்கை இது.

இந்த நிதிநிலை அறிக்கையை காலை பத்து மணியளவில் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு. அறிக்கையின் துவக்கப் பகுதியில், இதற்கு முன்பாக இருந்த அரசுகள் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை நிதியமைச்சர் பட்டியலிட்டார்.

நிதி நெருக்கடி, இயற்கைப் பேரிடர், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு நடுவில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூக நீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன்காக்கும் சமத்துவப் பாதை, பசுமை வழிப் பயணம், தாய்த்தமிழும் பண்பாடும் ஆகிய ஏழு அம்சங்களை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு பட்ஜெட்டின் முக்கிய 10 அம்சங்கள்
  • உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட , தமிழ் புதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். ஆறு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதில் 3,00,000 மாணவர்கள் பயனடையாவர்கள். இதற்கு ரூ. 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிப்பவர்களின் விகிதம் 2.2 சதவீதமாக உள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள ஐந்து லட்சம் குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை ஒருங்கிணைந்து வழங்கி, அவர்கள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கப்படுவார்கள். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என இது அழைக்கப்படும்.
  • காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-5ஆம் வகுப்புவரை விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 13,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பெண்களின் இலவசப் பயணத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ. 3,050 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் 25 இந்திய, உலக மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு. உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்நூல்களை உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம்பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
 
தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TN GOVT

6. 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும். 24-25 ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். சொந்த மனைகள் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்படும். கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

7. உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். வரும் நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8. மதுரையில் 26,500 சதுர அடி பரப்பளவில் தொழில் புத்தாக்க மையம் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மதுரை, திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர், சேலம், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவை விளாங்குறிச்சியில் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,00,000 சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி. பார்க்) அமைக்கப்படும்.

9. 2024-25ல் கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர் உள்ளிடட் எட்டு இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். மஸ்தி, பாலூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும். இந்த அகழாய்வுப் பணிகளுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடி அகழாய்வு பணிகளில் வெளிவந்த செங்கல்கட்டுமானம், கிணறு, பிற கட்டுமானங்களை அனைவரும் பார்க்கும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதற்காக 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

10. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களைத் தொடங்குவதற்கான விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயிலை நீடிக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும். சென்னை பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் அடுத்த ஆண்டு டிசம்பரில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

 
தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TN GOVT

இவை தவிர இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தமிழ் மொழி மற்றும் தமிழர் மரபு சார்ந்த முக்கிய அம்சங்கள் :

தமிழின் அரிய நூல்களை மின்நூலாக மாற்றும் பணிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழர்களின் மரபணுத் தொன்மை, வேளாண்மை, இடப்பெயர்வு ஆகியவற்றை ஆய்ந்தறிய காமராசர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் மரபியல் துறையில் தொல்மரபணுவியல் ஆய்வகத்திற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சிந்துவெளி நூற்றாண்டு பன்னாட்டு கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படும்.

சென்னை நகருக்கான சில புதிய கட்டமைப்பு திட்டங்களும் இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை தீவுத்திடலில் நகர்ப்புற பொதுச் சதுக்கம் உருவாக்கப்படும். இங்கே திறந்தவெளி அரங்குகள், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும். கடற்கரையோரப் பகுதிகளை ஒட்டிய சாலைகள் மேம்படுத்தப்படும். சென்னை பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீன திரைப்பட நகரம் 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். 500 கோடி ரூபாய் செலவில் இந்த நகரம் உருவாக்கப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் மரபுசார் வடிவமைப்புடன் பத்து லட்சம் சதுர அடி பரப்பில் புதிய கட்டடம் கட்டப்படும். பிராட்வே பேருந்து நிலையத்தில் பன்முக வசதிகள் கொண்ட புதிய பேருந்து நிலையமும் அலுவலக வளாகமும் உருவாக்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 20,198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். புதிய புற்றுநோய் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை உயர்நிலை புற்றுநோய் கருவிகள் வழங்கப்பட்டு உயர்திறன் மையமாக தரம் உயர்த்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகளைச் சீரமைக்கவும் பூங்காக்கள் அமைக்கவும் நதிகள் சீரமைப்புக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஐந்து கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கல்வியில் தமிழ் புதல்வன் திட்டம் மட்டுமல்லாமல் வேறு சில அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேரும் மாணவிகள் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தத் திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் வழங்கப்படும். 370 கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பெயரில் மிகப் பெரிய நூலகம் அமைக்கப்படும்.

 
தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TN GOVT

மேலும் தொழில்துறை சார்ந்து இந்த நிதிநிலை அறிக்கையில் வெளிவந்துள்ள அறிவிப்புகள்:

தஞ்சை மண்டலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ரூ. 120 கோடி செலவில் 300 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு 500 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பு வழங்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அரசு வழங்கும்.

தமிழ்நாட்டில் அமையும் புதிய உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட மாத ஊதியத்துடன் உருவாக்கப்படும் உயர்திறன் மிக்க வேலைகளுக்கு முதலாம் ஆண்டு 30 சதவீதமும் இரண்டாம் ஆண்டு 20 சதவீதமும் மூன்றாம் ஆண்டு 10 சதவீதமும் மானியமாக வழங்கப்படும்.

உலகின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களும் இளம் தொழில் முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் Global Startup Summit 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும். பெரியார் சமூக நீதி புத்தொழில் மையம் - Periyar Social Justice Venture Lab - உருவாக்கப்படும். விளிம்புநிலையில் வாழும் மக்கள், பட்டியலின, பழங்குடியினரால் தொடங்கி நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த மையம் முன்னுரிமை அளிக்கும்.

விண்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்காவை டிட்கோ அமைக்கும். தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு குறித்த கொள்கையை வகுக்க தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும்.

 

இவை மட்டுமல்லாமல், இந்த நிதிநிலை அறிக்கையின் வேறு சில முக்கிய அம்சங்களும் உள்ளன.

2030ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க திட்டம் வகுக்கப்படும்.

லண்டன் க்யூ கார்டன் நிறுவனத்தின் உதவியோடு 345 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் மாபெரும் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டில் புதிதாக 3,000 பேருந்துகள் வாங்கப்படும். சிற்றுந்துத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

தொல்குடி என்ற புதிய திட்டத்தின் கீழ் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பழங்குடியின இளைஞர்களுக்கு தொழில்பயிற்சிகள் அளிக்கப்படும்.

பள்ளிவாசல், தர்காக்களை சீரமைக்க, பழுதுபார்க்க பத்து கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்படும். பழமையான தேவாலயங்கள் புதுப்பிக்கப்படும்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தெரு நாய்கள் பெருகியிருப்பதால், அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடைசெய்யும் மையங்களை உருவாக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சர்வதேச கண்காட்சிகள், மாநாட்டுக் கூட்டங்கள் நடத்திடும் வகையில், கலைஞர் மாநாட்டு அரங்கம் (Kalaignar Convention Centre) கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் மூன்று லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு என அறிவிக்கப்பட்ட 3,510 வீடுகளில் 1,591 வீடுகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளன.

 

இந்த அறிவிப்புகள் தவிர, மாநில நிதிநிலை குறித்த சில தகவல்களையும் நிதியமைச்சர் வெளியிட்டார்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் இருப்பதால் முழுச் செலவையும் மாநில அரசே செய்கிறது. இதனால், 9,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டுள்ளதால், 20,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு இரண்டு மிகப் பெரிய இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தபோதும் மத்திய அரசு எவ்வித நிவாரண நிதியையும் தரவில்லை.

2023-24ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பீடு 3,08,056 கோடி ரூபாயாக இருந்தது. திருத்த மதிப்பீட்டில் 3,37,484 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,81,182 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் வரி வருவாய் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 1,70,147 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டிற்காண பட்ஜெட்டில் 37,540 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில் 44,907 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி பற்றாக்குறையைப் பொறுத்தவரை 92,075 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 94,060 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் வருவாய் பற்றாக்குறை 36,017 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் அது 27,790 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 சதவீதமாக இருக்கும்.

தமிழ்நாட்டின் வேளாண் நிதி நிலை அறிக்கை பிப்ரவரி 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/ce4epq0v3p5o

விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை

1 month 1 week ago

 

18 FEB, 2024 | 12:59 PM
image

சென்னை: தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021ல் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் 5 ஏகே 47 துப்பாக்கிகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 1000 தோட்டாக்களை ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.

என்.ஐ.ஏ கொச்சி அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இலங்கைத் தமிழர்கள் உள்பட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்து கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ‘இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டிருந்ததும் இந்திய பெருங்கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும்’ தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

மேலும்  விசாரணையில் இந்த வழக்கில் நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் வேலை பார்த்த முன்னாள் உதவியாளரான சென்னையை சேர்ந்த ஆதிலிங்கத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக என்ஐ ஏ தெரிவித்திருந்தது.

குறிப்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுதகடத்தல் மூலம் கிடைத்த பணத்தை குணசேகரன் தலைவராகவும் ஆதிலிங்கம் துணை தலைவராகவும் இருக்கும் வகையில் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அரசியல் கட்சியை தமிழ்நாட்டில் ஆரம்பித்து நிதி பரிமாற்றம் செய்தது தெரியவந்ததாக என்ஐ ஏ தெரிவித்திருந்தது. 

இதையடுத்து 14வது நபராக ஆதிலிங்கத்தை கைது செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆதிலிங்கம் மீது பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த வழக்கில் 14வது நபராக ஆதிலிங்கம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாக மாற்றிக் கொடுக்கும் வேலையை இவர் செய்துள்ளார். 

போதைப் பொருட்கள் விற்பனை மூலம் பெற்ற பணத்தை ஹவாலா முறையில் மாற்றம் செய்யும் ஏஜென்டாகவும் ஆதிலிங்கம் செயல்பட்டுள்ளார். இந்த பணம் விடுதலை புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ் திரைப்படத்துறையில் பைனான்சியராக பணிபுரிந்த போது இலங்கையை சேர்ந்த குணசேகரன் அவரது மகன் திலீபன் உட்பட விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசியமாக செயல்பட்டு வந்திருக்கிறார். என என்ஐஏ தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/176670

’அந்த நான்கு பேரைப் பற்றி பேசாதே’ : கட்சியினருக்கு சீமான் கட்டளை!

1 month 1 week ago
’அந்த நான்கு பேரைப் பற்றி பேசாதே’ : கட்சியினருக்கு சீமான் கட்டளை!
Screenshot-2024-02-18-132427.jpg

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நிலையில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று பிப்ரவரி 17ஆம் தேதி சென்னையில் நடந்தது.

ஆங்காங்கே தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார் சீமான். இதையடுத்து ’அந்த வேட்பாளர் சரியில்லை’, ’இந்த தொகுதியில் ஏற்கனவே தேர்தல் பணியில் ஈடுபட்டு வருபவரை புறக்கணித்துவிட்டு புதிதாக வந்தவருக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள், இது சரியல்ல’ என்றெல்லாம் சீமானுக்கு புகார்கள் போயிருக்கின்றன.

Image

இந்த நிலையில் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சீமான், “ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளரை நான் தான் முடிவு செய்கிறேன். அந்த வேட்பாளர் சரியில்லை என்று நீ என்னிடம் சொன்னால் நான் சரியில்லை என்று தானே சொல்கிறாய்? நமது கட்சியை பொறுத்த வரைக்கும் வேட்பாளர் என்பது ஒரு கருவி மட்டும் தான். தேர்தல் ஆணையம் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று கூறியிருப்பதால் நாம் பல்வேறு தகுதி படைத்த நம் நபர்களில் இருந்து ஒருவரை மட்டும் நிறுத்துகிறோம்.

மற்றபடி எல்லா தொகுதிகளும் நமது கட்சி தான் வேட்பாளர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நமக்குள் சச்சரவு கொண்டிருக்காமல் ஒற்றுமையாக இருந்து தேர்தல் வேலைகளை பாருங்கள்.

வருகிற மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வாங்கக்கூடிய தொகுதியின் பொறுப்பாளர், அதிக வாக்குகள் வாங்கி தரக்கூடிய சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் என ஒவ்வொருவருக்கும் பிரபாகரன் படம் போட்ட தங்க நாணயத்தை நானே பரிசாக கொடுப்பேன்”என்று தெரிவித்த சீமான் கட்சியினருக்கு முக்கியமான ஒரு கட்டளையை பிறப்பித்துள்ளார்.

Image

“நமது தம்பிகள் மேடைகளிலும் சமூக தளங்களிலும் நமது அன்புக்குரிய சில தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். அவர்கள் நம்மைப் பற்றி பேசினாலும் நாம் அது பற்றி கவலைப்படாமல் கடந்து விட வேண்டும்.

அண்ணன் திருமாவளவன், அய்யா வைகோ, அய்யா ராமதாஸ், சகோதரர் அன்புமணி ஆகியோரை பற்றி நாம் தமிழர் தம்பிகள் இனி விமர்சிக்க வேண்டாம்” என்று அன்பு கட்டளை இட்டுள்ளார் சீமான்.
 

https://minnambalam.com/political-news/dont-talk-about-those-four-people-seaman-orders-the-party-members/

 

தமிழ்நாடு: மாடுகளுக்கு பரவும் பெரியம்மை நோய் மனிதர்களுக்கும் பரவுமா?

1 month 1 week ago
தமிழ்நாட்டில் மாடுகளுக்கு பரவும் பெரியம்மை நோய் மனிதர்களுக்கும் பரவமா?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டில் பரவலாக மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாகக் கன்றுகள் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடுகளுக்கு பெரியம்மை நோய் பரவக் காரணம் என்ன? பெரியம்மை பாதித்த மாடுகளைப் பராமரிப்பது எப்படி?

மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மாடுகள் இருக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் மாடுகளின் தோல் முழுவதிலும் கொப்புளம் கொப்புளமாக பெரியம்மை பாதிப்பு (LSD-Lumpy Skin Disease) ஏற்பட்டது.

வட மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்துள்ளன. தமிழ்நாட்டில் சில கன்றுகள் இறந்துள்ளன என்றாலும் மாடுகளின் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் தற்போது வரை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கின்றன.

இந்த நோயால் பாதிக்கப்படும் மாடுகளுக்கு பால் உற்பத்திக் குறைவு, மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, சில நேரங்களில் மரணம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மைக்கு நேரடியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆடுகளுக்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் செலுத்தப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.மேலும், மாடுகளுக்கு ஏற்படக்கூடிய அம்மை பாதிப்பைத் தடுக்க நேரடியாக தடுப்பூசி தயார் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மாடுகளுக்கு பரவும் பெரியம்மை நோய் மனிதர்களுக்கும் பரவமா?

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஈரோடு விவசாயி குமார் கூறும்போது, "எங்களது பகுதியில் 15 விவசாயிகளின் 30க்கும் மேற்பட்ட கன்றுகள், இளம் வயது மாடுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அவற்றில் சில கன்றுகள் இறந்துள்ளன.

அம்மை நோயால் பாதிக்கப்படும் கன்றுகளைப் பாதுகாக்க நாங்கள் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதேபோல் கோவை, திருப்பூர், ஈரோட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகள் குறிப்பாக கன்றுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி வருகின்றனர். இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கைகளை அரசு எடுத்து கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும்," எனக் கூறினார்.

'ஆயிரக்கணக்கான கால்நடைகள் பாதிப்பு'

இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மரபுசார் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். என். புண்ணியமூர்த்தி பிபிசியிடம் பேசினார்.

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளுக்கு பெரியம்மைத் தொற்று பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. இந்தத் தொற்று ஆப்பிரிக்காவில் இருந்து பரவியது கண்டுபிடிக்கப்பட்டதாக டாக்டர்.என்.புன்னியமூர்த்தி கூறினார்.

மேற்கொண்டு பேசியவர், "வடமாநிலங்களில் மாடுகளுக்கு பெரியம்மை தாக்கம் இருந்ததன் காரணமாக அதிக அளவில் மாடுகள் உயிரிழந்தன. ஆனால், அந்தப் பரவல் தமிழ்நாட்டுக்கு வந்தபோது பெரிய அளவில் இறப்புகள் இல்லை.

ஆனால், தற்போது வரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கின்றன. தற்போது ஆயிரக்கணக்கான மாடுகள் தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நோய் பாதிப்புக்கு நேரடியாக சிகிச்சை முறை கிடையாது. சித்த மருத்துவ முறையில் தீர்வு இருக்கிறது," என்று கூறினார்.

 
சித்த மருத்துவமுறை கால்நடைகளை காப்பது எப்படி?
தமிழ்நாட்டில் மாடுகளுக்கு பரவும் பெரியம்மை நோய் மனிதர்களுக்கும் பரவமா?

"பெரியம்மை பாதிப்பு ஏற்பட்டவுடன் உடல் முழுவதும் கொப்பளங்கள் வெடிக்கும். இதனால் மாட்டின் தோல் மென்மையடையும். அந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மாட்டை மற்ற மாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்துவது அவசியம்.

பெரியம்மை பாதிக்கப்பட்ட மாட்டிற்கு 10 வெற்றிலை, 10 கிராம் மிளகு, கல் உப்பு, நாட்டு சர்க்கரை ஆகியவற்றைக் கலவையாகச் சேர்த்து தினசரி நான்கு வேளை ஆரம்பத்தில் கொடுக்க வேண்டும். பின்பு அதை மூன்று வேளையாக மாற்றி ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்தால் நல்ல பலன் இருக்கும்," என்கிறார் டாக்டர் என்.புன்னியமூர்த்தி.

அதேபோல், "தோல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளுக்கு, நான்கு பல் பூண்டு, மஞ்சள் தூள், குப்பைமேனி தலை, வெண்ணெய் அல்லது வேப்பெண்ணையை நன்றாகக் காய்ச்சி கொப்பளங்கள் இருக்கும் பகுதியின் மீது தொடர்ந்து தேய்த்து வருவதன் மூலம் கொப்பளங்கள் ஆறிவிடும்.

ஒரு வயதுக்கு கீழ் இருக்கக்கூடிய கன்றுகள் தற்போது இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை தானாக உண்ணும் திறன் படைத்தவையாக இருக்காது. எனவே இதற்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் தனிக் கவனம் எடுத்து கன்றுகளைப் பராமரித்தால் மட்டுமே அவற்றைப் பாதுகாக்க இயலும்," என்றார்.

மாட்டிடமிருந்து மனிதர்களுக்கு பெரியம்மை பரவுமா?

"உலக விலங்குகள் நல மையம்( WOAH - World organization for animal health) இந்தத் தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என்பதை உறுதி செய்துள்ளது. எனவே, விவசாயிகள் அச்சமின்றி தங்களது கால்நடைகளுக்கு வரக்கூடிய பெரியம்மை நோய்க்கான சிகிச்சையை அருகிலிருந்து வழங்கலாம்," எனக் குறிப்பிட்டார் புண்ணிய மூர்த்தி.

 
கால்நடைகளுக்கு மூன்று தவணை தடுப்பூசி
தமிழ்நாட்டில் மாடுகளுக்கு பரவும் பெரியம்மை நோய் மனிதர்களுக்கும் பரவமா?

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத தமிழ்நாடு கால்நடைத்துறை உயர் அதிகாரி கூறும்போது "கடந்த 2019ஆம் ஆண்டு மாடுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு பரவியது. இதைத் தொடர்ந்து ஆடுகளுக்கு அம்மைக்காகச் செலுத்தப்படும்( GFV - Goat Fox vaccine) தடுப்பூசி மாடுகளுக்கும் செலுத்தப்பட்டு அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டில் மூன்று முறை தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய தகுதி வாய்ந்த 62 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாடுகளுக்குப் பரவும் பெரியம்மை பாதிப்பு பற்றிய தகவல்கள் மாவட்டங்களில் இருந்து பதிவாகவில்லை. அது பெறப்பட்டால் அதற்கு ஏற்பத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்று கூறினார்.

கன்றுகள் உயிரிழப்பது ஏன்?

இந்தத் தடுப்பூசி நான்கு மாத கன்று முதல் செலுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் மாடுகளுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக அதன் கன்றுக்கு இந்த நோய்த் தாக்கம் ஏற்படுகிறது.

கன்றை விவசாயிகள் முறையாகப் பராமரிக்காத காரணத்தால் அது உயிரிழக்க நேரிடுகிறது, முறையாக கால்நடை மருத்துவமனையை அணுகுவதன் மூலம் கன்றுகள் உயிரிழப்பு தடுக்கப்படுவதாக", மதுரை கால்நடை மருத்துவர் பழனிவேல் தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c1v165wnxwxo

23 வயதில் நீதிபதியாகும் பழங்குடி பெண் - பிரசவித்த மறுநாளே தேர்வு எழுதி சாதித்தது எப்படி?

1 month 2 weeks ago
நீதிபதி தேர்வில் வென்ற பழங்குடியின பெண்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

திருவண்ணாமலையை அடுத்த ஜவ்வாதுமலையை சேர்ந்த 23 வயதான ஸ்ரீபதி என்ற பழங்குடி பெண் சிவில் நீதிமன்ற நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

பிரசவித்த மறுநாள் தேர்வு, வறுமை என பல தடைகளை தகர்த்து அவர் சாதித்தது எப்படி?

தடைகளை தகர்த்து சாதனை!

தமிழகத்தில் சமீபகாலமாக பழங்குடி மக்கள் பல துறைகளில் சாதித்து தடம் பதித்துவருகின்றனர். அந்த வகையில் அடிப்படை வசதிகளற்ற பழங்குடி கிராமத்தில், வறுமையான குடும்பத்தில் பிறந்து, பல போராட்டங்களை கடந்து உரிமையியல் நீதிபதி தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார் 23 வயதான ஸ்ரீபதி.

திருவண்ணாமலை அடுத்த ஜவ்வாது மலைப்பகுதியில் குறிஞ்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்து தற்போது புலியூர் பழங்குடி கிராமத்தில் ஸ்ரீபதி தனது கணவர் வெங்கட்ராமனுடன் வசித்து வருகிறார்.

சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் முடித்துள்ள ஸ்ரீபதி (B.A. B.L), கடந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதி பதவிக்கு தேர்வாகியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் ஸ்ரீபதியை பாராட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை என்று கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்,’’ என பதிவிட்டு ஸ்ரீபதியை பாராட்டியுள்ளார்.

‘மகிழ்ச்சியாக உள்ளது’ - ஸ்ரீபதி

தேர்வில் வென்றது தொடர்பாக பிபிசி தமிழ் ஸ்ரீபதியை தொடர்பு கொண்டது.

பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபதி, ‘‘தேர்வில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார். நீதிபதி பொறுப்புக்கான முறையான உத்தரவு வரும் வரை இது குறித்து மேலும் பேச மறுத்துவிட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற தேர்வை எழுத நேரில் வந்திருந்தார் ஸ்ரீபதி. தனது கிராமத்திலிருந்து 250 கி.மீ பயணம் செய்து வந்த ஸ்ரீபதி அப்போது, குழந்தை பிரசவம் செய்து இரண்டு நாட்களே ஆகியிருந்தன. மன உறுதியுடன் தேர்வு எழுதிய ஸ்ரீபதி அதில் தேர்ச்சிப் பெற்றார். அதன் பின் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நேர்முகத் தேர்வில் பங்கேற்று அதிலும் தேர்ச்சி பெற்றார்.

மலைக்கிராமத்தில் வாழ்க்கை, ஏழ்மை, பிரசவித்த அடுத்த நாளில் தேர்வு என, பல தடைகளைத் தகர்த்து ஸ்ரீபதி எப்படி சாதித்துள்ளார் என்பதை அந்தக் கிராமத்தினர் பிபிசி தமிழிடம் பகிர்ந்துள்ளனர்.

 
ஸ்ரீபதி
‘வறுமையிலும் வென்ற ஸ்ரீபதி’

ஸ்ரீபதியின் பெற்றோர் குறிஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள். மலைப்பகுதியான ஏலகிரியில் சிறிது காலம் தங்கிவந்த போது அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து தான் அவரது தாய் அவரை வளர்த்தார்.

ஸ்ரீபதி திருமணத்துக்கு பிறகு புலியூரில் வசித்து வருகிறார். புலியூர் ஊராட்சித் தலைவர் அன்பழகன் பிபிசி தமிழிடம் பேசிய போது,

“ ஏலகிரியில் தங்கி அங்குள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்2 முடித்து, தொலைதூர கல்வியாக இளங்கலை முடித்து, பின் சென்னையில் தான் இளங்கலை சட்டம் முடித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணமாகி மூன்று ஆண்டுகளாக புலியூரில் தன் கணவருடன் வசித்து வருவதாகவும், அவரது கணவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணி புரிவதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.

“ஸ்ரீபதி பழங்குடியின மக்களுக்கும், எங்கள் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்,’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

‘எங்கள் கிராமத்தை உலகறியச் செய்துள்ளார் ஸ்ரீபதி’

ஸ்ரீபதி போல முதல் தலைமுறை பட்டதாரிகள் சிலர் புலியூரில் உள்ளனர். அவர்கள் அனைவருமே தினசரி வாழ்க்கையை இன்னல்களுக்கு இடையில் நடத்திக் கொண்டு தான் படித்து முன்னேறி உள்ளனர்.

புலியூரை சேர்ந்த யுவன்ராஜ் தற்போது சென்னையில் பொறியாளராக பணிபுரிகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய யுவன்ராஜ், ‘ஸ்ரீபதி திருமணமாகி எங்கள் கிராமத்தில் தான் வசித்து வருகிறார். அவரது குடும்பம் பற்றி எனக்குத் தெரியும். தற்போது பெரிய சாதனையை செய்து, தமிழகத்தின் ஒரு மூலையில் இருக்கும் எங்கள் புலியூர் கிராமத்தையும், ஜவ்வாதுமலை பழங்குடியின மக்களையும் உலகறியச் செய்துள்ளார். இதை நினைத்து எங்கள் ஒட்டுமொத்த கிராமமும் பெருமைப்படுகிறது. வறுமைக்கு மத்தியில் பல தடைகளைத்தாண்டி தான் ஸ்ரீபதி பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார்,’’ என்கிறார் யுவன்ராஜ்.

 
மேல்நிலைப் பள்ளிக்கு 25 கி.மீ பயணம்

ஸ்ரீபதி உட்பட புலியூர் கிராமத்தில் படித்த, படிக்கும் அனைவரும் 25 கி.மீ பயணம் மேற்கொண்டே மேல்நிலைப்பள்ளிக்கு செல்கின்றனர். ‘‘புலியூர் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. எங்கள் பகுதி மாணவர்கள் புலியூர் கிராமத்தில் இருந்து 25 கிலோ மீட்டரில் உள்ள ஜமுனாமடத்தூர் சென்று தான் மேல்நிலைப்பள்ளி படிக்கின்றனர்.” என்கிறார் யுவன்ராஜ்.

மேல்நிலைப்பள்ளியை சென்றடைய இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. “இது புலியூரின் நிலை மட்டுமல்ல, ஜவ்வாது மலையில் உள்ள 11 ஊராட்சிகளுக்கும் இதேநிலை தான். ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார், நான் பொறியியல் படித்துள்ளேன், எங்கள் கிராமத்தில் இன்னும் சிலர் படித்துள்ளனர். பழங்குடி மக்களுக்கு அரசு உரிய அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தால் ஸ்ரீபதி போல் பலரும் சாதிப்பார்கள்,’’ என்றார் யுவன்ராஜ்.

https://www.bbc.com/tamil/articles/cv2jv3yjy92o

திமுகவிடம் தனித் தொகுதிகள் தவிர, ஒரு பொதுத் தொகுதியும் கேட்கும் வி.சி.க. - திருமாவளவன் திட்டம் என்ன?

1 month 2 weeks ago
பொது தொகுதியில் விசிக

பட மூலாதாரம்,FACEBOOK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 14 பிப்ரவரி 2024, 04:35 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திமுக அணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளை கோரியிருப்பதுடன் அதில் ஒன்று பொதுத் தொகுதியாக இருக்க வேண்டும் என கோரியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளை வென்ற அந்த கட்சி இரண்டு பொதுத் தொகுதிகளை கைப்பற்றியது. அப்போது கட்சியின் தலைவர் திருமாவளவன், “எங்களை தலித் கட்சியாக தனிமைப்படுத்தி சுருக்க நினைத்தவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.

தலித் கட்சி என்று தங்களை சுருக்கிவிடக் கூடாது என்று விசிக நினைக்கிறது. தலித் கட்சி என்ற அடையாளத்திலிருந்து வெளிவர வேண்டும் என்ற முடிவு தங்களை விரிவுப்படுத்தி, பலதரப்பட்ட மக்களை தங்களுடன் அணிதிரட்டவா அல்லது தன்னிடம் உள்ள தலித் அல்லாத முகங்கள் சிலவற்றை தக்க வைத்துக் கொள்ளவா?

திருமாவளவன்

பட மூலாதாரம்,FACEBOOK

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு

தலித் பேந்தர்ஸ் இயக்கம் என்ற பெயரில் தலித்துகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாக 1982ம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கமே, பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியாக (விசிக) உருவெடுத்தது. 1999ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் அரசியலுக்கு அறிமுகமானது விசிக. கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் விசிக, தமிழ்நாட்டு அரசியலில் கவனிக்கத்தக்க இடத்தை பெற்றுள்ளது.

இந்தியா கூட்டணியின் அங்கமாக உள்ள விசிக தேசிய அளவில் குறிப்பிடத்தக்க தலித் இயக்கமாகவும் அடையாளப்பட்டுள்ளது. தொல் திருமாவளவன் கவனிக்கப்படும் முக்கியமான தலைவராக இயங்குகிறார். இது வரை தனித்து போட்டியிடாத விசிக, கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்தித்த போது, சுமார் 1.5% வாக்குகளை பெற்றுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பொதுத் தொகுதிகளான நாகப்பட்டினத்தில் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் திருப்போரூர் தொகுதியில் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் விசிக சார்பில் வெற்றி பெற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள 144 மாவட்டச் செயலாளர்களில் 17 பேர் தலித் அல்லாதவர்கள் ஆவர். இதில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

திமுக கூட்டணியில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தனித் தொகுதிகளான சிதம்பரத்தில் திருமாவளவன் பானை சின்னத்திலும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் திமுக சின்னமான உதய சூரியனிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

 
தலித் கட்சியா விடுதலைச் சிறுத்தைகள்?

விசிக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், தங்களுக்கு பொதுத் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார். “கடந்த சட்டமன்றத் தேர்தலில், நான்கு தனித் தொகுதிகளிலும் இரண்டு பொதுத் தொகுதிகளிலும் போட்டியிட்டோம். இதில் தனி தொகுதிகளில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றோம். அதாவது 50% வெற்றி. போட்டியிட்ட இரண்டு பொதுத் தொகுதிகளிலுமே விசிக வெற்றி பெற்றது. அதாவது 100% ஸ்டிரைக் ரேட்” என குறிப்பிட்டார்.

“பட்டியலின மக்களுக்கு மட்டுமான கட்சி என்ற அடையாளத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்பவில்லை. அவர்களுக்கு எல்லா பொது பிரச்னைகளிலும் அக்கறை இருக்கிறது. அவர்கள் முதலில் பட்டியலின மக்களுக்கான கட்சியாகவே தொடங்கினர். பின்பு, தாங்கள் விரிவடைய வேண்டும் என்று உணர்ந்துள்ளனர்” என தலித் விவகாரங்கள் குறித்த ஆய்வாளரும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மண்ட் ஸ்டடீஸ் மையத்தின் முன்னாள் பேராசிரியர் லக்ஷ்மணன் குறிப்பிடுகிறார்.

1980களில் பட்டியலின மக்களின் குரலாக கன்ஷிராம் உருவாக்கிய பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் 2000ம் ஆண்டில் ராம் விலாஸ் பாஸ்வான் உருவாக்கிய லோக்ஜனசக்தி கட்சி ஆகியவை இதற்கு முன்னுதாரணங்கள் ஆகும் என்று லக்ஷ்மணன் சுட்டிக்காட்டுகிறார்.

 
பொது தொகுதியில் விசிக

பட மூலாதாரம்,ரவிக்குமார்

விசிகவை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கான கட்சி என முத்திரையிடக் கூடாது என்கிறார் ரவிக்குமார். “இது எல்லோருக்குமான கட்சியாகும். ஒரு சாதியை சார்ந்து ஒரு மதத்தை சார்ந்து எந்தவொரு கட்சியும் இயங்க முடியாது. அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அம்பேத்கர் எல்லோருக்குமான சட்டத்தை தான் இயற்றினார்” என்கிறார்.

கன்ஷிராம் வழியில் திருமாவளவன் பரிசோதனை செய்கிறார் என்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் கே சந்துரு.

“1999 தேர்தலில் கன்ஷிராம் உருவாக்கிய பகுஜன் சமாஜ் கட்சி 14 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதே போன்றதொரு பரிசோதனையை திருமாவளவனும் மேற்கொள்கிறார். அவர்களுடைய கட்சியில் எந்த சமூகத்தை சேர்ந்தவரும் உறுப்பினராவதற்கு தடை இல்லாதபோதும் அதை தலித் கட்சி என்றே பார்க்கிறார்கள். எனவே அவர் அந்த பிம்பத்தை உடைக்க நினைக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவிற்கு எதிராக முனைவர் வசந்தி தேவியை போட்டியிட வைத்தார்.”

 
எல்லோரது வாக்கும் தேவை

தலித் கட்சி என்ற பிம்பத்தை உடைப்பது விடுதலை சிறுத்தைகளுக்கு அவசியமாக இருக்கிறது என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன்.

“தாங்கள் தலித் கட்சி என்ற பிம்பத்தை உடைக்கவே பொதுத் தொகுதியிலும் போட்டியிட விரும்புகிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித் மக்களுக்காக இருக்கிறார்கள் என்பதை அது வெளிப்படுத்தும்” என்று குறிப்பிட்ட அவர், எந்தவொரு தொகுதியாக இருந்தாலும் நிறுத்தப்படும் வேட்பாளர் அந்த தொகுதியில் மக்களிடம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பது முக்கியம். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபரை நிறுத்த முடியாது” என குறிப்பிட்டார்.

தனித் தொகுதியில் போட்டியிட்டாலும், அந்த தொகுதியில் உள்ள மற்ற சமூகத்தினரின் வாக்குகள் இல்லாமல், ஒரு வேட்பாளர் வெற்றி பெற முடியாது என சுட்டிக்காடுகிறார் ரவிக்குமார்.

“எந்த தொகுதியாக இருந்தாலும் அனைத்து சமூகத்தினரின் ஆதரவும் தேவை. அது தான் பலமும் கூட. பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தவர் போட்டியிடுவது புதிதும் கிடையாது. திமுக அதிமுக இரு கட்சிகளுமே தலித் வேட்பாளர்களை தங்கள் சின்னத்தில் பொதுத் தொகுதிகளில் நிறுத்தி அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர். எந்த கட்சியும் பணக்காரர்களுக்காகவோ, உயர்சாதியினருக்காகவோ இருப்பதாக தங்களை கூறிக் கொள்வதில்லை அல்லவா? எனவே, கூடுதல் இடம் கொடுக்க வேண்டிய கடமை எல்லா கட்சிகளுக்குமே இருக்கிறது” என்று விளக்கினார்.

 
பொது தொகுதியில் விசிக

பட மூலாதாரம்,X

பொதுத் தொகுதிகள் ஏன் முக்கியம்?

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குறிப்பிடுகையில், “தலித் மக்கள் மட்டுமே வாக்களித்து தங்களுடைய தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலைமை இருந்தால்தான் உண்மையான தலைவர்கள் எழுவார்கள் என்ற அம்பேத்கரின் வாதத்தை காந்தி ஏற்கவில்லை. ஆனால் காந்தி அப்படியொரு பரிசோதனைக்கு தயாராக இல்லை. இப்போதுள்ள முறையில் எல்லோருடைய வாக்குகளும் கிடைப்பது ஒரு கட்சிக்கு முக்கியம். எனவே தங்கள் கட்சியின் மேல் தலித் என்ற முத்திரை குத்தப்படுவதை நீக்க திருமாவளவன் முயற்சி எடுக்கிறார்” என்கிறார்.

தலித் வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் தடையாக அமைந்திருப்பதாக குறிப்பிடுகிறார் பேராசிரியர் லட்சுமணன்,” திராவிட கட்சிகள் பிராமண எதிர்ப்பு கட்சிகளாக இருந்தன. அவை தலித் விரோத போக்கை 1920கள் முதல் இன்று வரை கடைப்பிடித்து வருகின்றன. அதனால் தான் வன்கொடுமைகள் இன்றும் நடைபெறுகின்றன. அவர்கள் பல நேரங்களில் மௌனமாக இருந்துள்ளனர். பொது நீரோட்டத்தில் இருக்கும் கட்சிகள் தலித் பிரச்னைகள் குறித்து, போதிய அளவு பேசவில்லை என்றதால் தான் விசிக, அவர்களுக்காக குரல் கொடுத்தது. திராவிட கட்சிகளில் ஒரு பட்டியலினத்தவரை கட்சிக்குள் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. அவரை முழுமையான தலைவராக ஏற்றுக் கொள்வதும் இல்லை. நாங்கள் தான் தலித் மக்களுக்கு பேண்டு, சட்டை போட கற்றுக் கொடுத்தோம் என்று பொதுமேடைகளில் மூத்த தலைவர்கள் பேசியுள்ளனர்” என தெரிவித்தார்.

பட்டியல் சாதியினரின் ஜனநாயக போராட்டத்தில் பொதுத் தொகுதிகளை நோக்கி விரிவாவது முக்கியமான படி என்கிறார் ரவிக்குமார்.

“பொதுத் தொகுதியில் விசிக நிற்க வேண்டும் என்று கூறுவதால், தலித் மக்களின் குரலாக இருக்க வேண்டும் என்பதிலிருந்து எங்களின் கவனம் மாறி விட்டது என்று அர்த்தம் கிடையாது. ஜனநாயக சக்திகளின் உதவியுடன் தான் இயங்க முடியும். தனி தொகுதிகள் என்பது குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்துக்கான உறுதியாகும். ஆனால் அதுவே அதிகபட்சம் கிடையாது.” என்று தெரிவித்தார்.

“விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவது ஜனநாயக உரிமை தானே. பட்டியலின மக்கள் தனி தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று நினைப்பது ஒரு சாதிய போக்கு ஆகும். பட்டியிலின வேட்பாளர்கள் பொதுத் தொகுதிகளில் போட்டியிடுவது முற்போக்கானதாகும்” என்று பேராசிரியர் லட்சுமணன் தெரிவித்தார்.

 
பொது தொகுதியில் விசிக

பட மூலாதாரம்,நீதிபதி கே சந்துரு

திமுக, அதிமுக கட்சிகளே பொதுத் தொகுதிகளில் அதிகம் போட்டியிடுகின்றன. தலித் வேட்பாளர்களை அவ்வப்போது நிறுத்தியுள்ளனர். இதுபற்றி கேட்டபோது “பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்கள் நிறுத்த திமுகவுக்கு எந்த தயக்கமும் தடையும் இல்லை” என்று குறிப்பிட்ட டி.கே.எஸ்.இளங்கோவன் “கோவையில் சி டி தண்டபாணி என்ற திமுக மாவட்டச் செயலாளர் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இது ஆரோக்யமான விசயமே” என்று விளக்கினார். அதே சமயம் திமுக சின்னத்தை பயன்படுத்துவது வெற்றி வாய்ப்பினை அதிகரிக்கும் என்கிறார் அவர். “கடந்த முறை திருமாவளவன் 2500 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். ரவிக்குமார் நல்ல வாக்கு வித்தியாசம் பெற்றிருந்தார். எனவே அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

சொந்த சின்னத்தில் போட்டியிட்டால்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற முடியும் என சுட்டிக்காட்டுகிறார் ரவிக்குமார், “விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தால் அங்கீகாரம் கிடைக்கும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டதால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இல்லையென்றால் கடந்த முறையே கிடைத்திருக்கும். தேர்தல் அரசியலில் நுழைந்து 25 ஆண்டுகள் ஆன கட்சி. கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

 
வெற்றிக்கான பார்முலா எது?

பலம் என்னவாக இருந்தாலும், வெற்றியை நோக்கியே வியூகம் அமைய வேண்டும் என்கிறார் டி.கே.எஸ்.இளங்கோவன், “திமுகவை பொறுத்தவரை எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது இரண்டாம்பட்சம். வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஃபார்முலா வெற்றியை பெற்று தந்தது. எனவே, இந்த முறையும் அதையே கடைப்பிடிக்க வாய்ப்புள்ளது. இந்த முறை கூட்டணியில் புதிதாக எந்த கட்சியும் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணியில் இருந்தவர்களே இப்போதும் கூட்டணியில் இருக்கிறார்கள். 2019 ஃபார்முலா வெற்றிக்கான ஃபார்முலாவாக இருந்தது. எனவே அது போன்று அமையவே வாய்ப்புள்ளது. விசிகவுக்கு கடந்த முறையை விட அதிக இடங்கள் ஒதுக்கினால், பிற கூட்டணி கட்சிகளும் அதிக இடங்கள் கேட்பார்கள்.” என்று தெரிவித்தார்.

கூட்டணி முக்கியம்தான், ஆனால் எண்ணிக்கையும் அவசியம் என்கிறார் வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமார், “நாங்கள் நான்கு தொகுதிகள் கேட்டுள்ளோம். அது நியாயமான கோரிக்கை என்று தான் நினைக்கிறோம். எனினும் திமுக தான் முடிவு செய்ய வேண்டும். திமுகவுக்கு கூட்டணி நெருக்கடி இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் நான்கு தொகுதிகள் கேட்பதற்கான தகுதியும் நியாயமும் இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற “வெல்லும் ஜனநாயகம்” மாநாடு நல்ல வரவேற்பை பெற்றது. எட்டு லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை மாநாட்டில் கலந்து கொண்டிருப்பார்கள் என்று மதிப்பீடு செய்கிறோம். வந்தவர்கள் அனைவரும் இறுதி வரை கலையாமல் இருந்தது கவனிக்கத்தக்கது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் விசிகவின் வளர்ச்சியையும் மறுக்க முடியாது. விசிகவுக்கு வலுவான வாக்கு வங்கி இருக்கிறது. எனவே நான்கு தொகுதிகள் கேட்பதில் தார்மீக நியாயம் இருக்கிறது” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cq5x28qz7z7o

செந்தில் பாலாஜி கைதாகி 8 மாதம் கழித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? திமுக வியூகம் என்ன?

1 month 2 weeks ago
அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏன்?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சிறையில் இருந்தபடி இலாகா இல்லாத அமைச்சராக இருந்துவந்த செந்தில் பாலாஜி தற்போது ராஜினாமா செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் இப்போது ராஜினாமா செய்தது ஏன்?

செந்தில் பாலாஜி கைதான 8 மாதங்கள் கழித்து ராஜினாமா

போக்குவரத்துக் கழக பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறி, அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவரிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் அளிக்கப்பட்டது. இருந்த போதும் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராகவே அவர் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

அவர் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழிந்த நிலையில், செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமா கடிதம் திங்கட்கிழமையே அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், தற்போது ஆளுநர் மாளிகையின் ஒப்புதல் வழங்கப்பட்டு, இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏன்?
தொடர்ந்து சர்ச்சையில் இருந்த செந்தில் பாலாஜி விவகாரம்

கைது செய்யப்பட்ட பிறகும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடித்த விவகாரம் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையாகத்தான் இருந்துவந்தது.

செந்தில் பாலாஜியின் அமைச்சரவைப் பொறுப்புகள் பிற அமைச்சர்களுக்கு பிரிந்து வழங்கப்பட்டுவிட்ட நிலையில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்குப் பிறகு, முதலமைச்சரின் பரிந்துரையின்றி செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஐந்து பக்கக் கடிதம் ஒன்றை முதலமைச்சருக்கு எழுதினார். அந்தக் கடிதத்தில், "எனது அறிவுரையையும் மீறி அவரை பதவியில் நீடிக்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது உங்கள் பாரபட்சத்தை காட்டுகிறது. அவர் அமைச்சராக நீடிப்பது, சட்ட நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்துமோ என்ற நியாயமான அச்சம் ஏற்படுகிறது. இந்த சூழலில், அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164வது பிரிவுகளின் கீழ் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. அதன்படி, வி.செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குகிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "இதுதொடர்பான நடவடிக்கைக்காக மத்திய அட்டர்னி ஜெனரலை அணுகியுள்ளதால், இந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக" இன்னொரு கடிதத்தை முதல்வருக்கு ஆளுநர் எழுதினார். இதையடுத்து அந்த விவகாரம் அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.

செந்தில் பாலாஜி இப்போது ராஜினாமா செய்திருப்பது ஏன்?

கைதான பிறகும் சுமார் 8 மாதங்கள் பதவியில் இருந்த செந்தில் பாலாஜி இப்போது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தான் கைது செய்யப்பட்டதிலிருந்து தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இந்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

இது தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்துவருகிறது. அந்த வழக்கு ஜனவரி 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, "சிறைக்குச் சென்று 230 நாட்களுக்கு மேலாகியும் எப்படி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்? கீழ் நிலை அரசு ஊழியர்கள் 48 மணி நேரத்திற்கு மேல் சிறையில் இருந்தால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது பொதுமக்களுக்கு என்ன செய்தியைச் சொல்கிறது?" என்று கேள்வியெழுப்பினார்.

"இதற்கு முன்பாக செந்தில் பாலாஜி உடல் நலத்தைக் காரணம் காட்டி ஜாமீன் கோரிய போது, அந்த ஜாமீன் மனு நீதிபதி ஜெயச்சந்திரனால் நிராகரிக்கப்பட்டது. அப்போது இருந்த சூழலுக்கும் இப்போதைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; மேலும் செந்தில் பாலாஜி இப்போதும் அமைச்சராகவே நீடிக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் அமலாக்கத் துறை எல்லா விசாரணைகளையும் முடித்துவிட்டதாலேயே ஜாமீன் கோரப்படுவதாகவும் அமைச்சர் பதவியில் இருப்பதையே ஜாமீனுக்கு எதிரான ஒரு முகாந்திரமாகக் கொண்டால், பெரிய பதவியில் இருப்பவர்கள் யாரும் ஜாமீன் கோர முடியாமல் போகக்கூடும் என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு, இந்த வழக்கு பிப்ரவரி 14ஆம் தேதி புதன் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், வழக்கு விசாரணைக்கு இரு நாட்களுக்கு முன்பாக தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏன்?

பட மூலாதாரம்,X/STALIN

திமுக வியூகம் என்ன?

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை விசாரிக்க அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை அவர் ஆஜராகவில்லை. அவருக்கு எதிராக லுக் - அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 9ஆம் தேதி செந்தில் பாலாஜியின் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளை அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்தனர். அசோக் குமார் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்.

"அமலாக்கத் துறை தொடரும் வழக்குகளில், அவர்கள் முன்வைக்கும் வாதங்களைத்தான் நீதிபதி முக்கியமானதாகக் கருதுவார். அவர்கள் ஜாமீனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அதை நீதிபதி அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாது. இத்தனை நாட்களாக, செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதைக் காரணம் காட்டிய அமலாக்கத்துறை, அவர் வெளியில் வந்தால் சாட்சியங்களைக் கலைத்துவிடக் கூடும் என்று குறிப்பிட்டு எதிர்ப்புத் தெரிவித்தது. இதன் காரணமாகவே அவர் ராஜினாமா செய்திருக்கக் கூடும். அதன் மூலம் அமலாக்கத் துறை முன்வைத்த மிக முக்கியமான வாதம் அடிபட்டுவிட்டது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கச் சொல்லி பலரும் கோரியபோதும் நீக்காத தி.மு.க. அரசுக்கு இது ஒரு அரசியல் ரீதியான பின்னடைவாகப் பார்க்க முடியுமா? "செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும்போது அமைச்சராக இருப்பது அவருக்கு உதவக்கூடும் என ஆரம்பத்தில் கருதியிருந்தார்கள். ஆனால், நாள் செல்லச்செல்ல அதுவே அவர் ஜாமீனில் வர பாதகமாக அமைந்திருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். இப்போது அவருக்கு ஜாமீன் கிடைத்தால், நாடாளுமன்ற தேர்தலின்போது அவர் தீவிரமாக கட்சிப் பணியை ஆற்றக்கூடும்" என்கிறார் ப்ரியன்.

இந்தத் தருணத்தில் செந்தில் பாலாஜிக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருப்பதைச் சுட்டிக்காட்டித்தான் செந்தில் பாலாஜியின் ஜாமீனை தொடர்ந்து எதிர்த்து வருகிறது அமலாக்கத்துறை. ஆகவே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தம்பியை சரணடையச் சொன்னால், ஒருவேளை ஜாமீன் கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறார் செந்தில் பாலாஜி. ஆனால், அப்படி நடக்காமலும் போகலாம்.

தில்லியில் மனீஷ் சிசோடியா அமைச்சர் பதவியிலிருந்து விலகினாலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தவரை அவரை வெளியில் கொண்டுவந்துவிட்டால், அரசியல் பணிகளிலாவது அவரை ஈடுபடுத்தலாம் எனப் பார்க்கிறது. அவருக்கு ஜாமீன் கிடைப்பதை வைத்துத்தான் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்" என்கிறார் குபேந்திரன்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏன்?

பட மூலாதாரம்,ANI

இந்திய அரசியலில் இலாகா இல்லாத அமைச்சர்கள்:

இலாகா இல்லாத அமைச்சர்கள் என்பது இந்திய அரசியலில் புதிதல்ல. ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் சி. ராஜகோபாலாச்சாரியார், என். கோபாலசாமி ஐயங்கார், வி.கே. கிருஷ்ண மேனன் ஆகியோர் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். அதற்குப் பிறகு, டிடி கிருஷ்ணமாச்சாரியும் லால் பகதூர் சாஸ்திரியும் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். 1999- 2004 இடையிலான வாஜ்பேயி அரசில் மம்தா பானர்ஜியும் முரசொலி மாறனும் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். இதில் முரசொலி மாறன் உடல் நலம் குன்றியபோது அவர் வசம் இருந்த தொழில் மற்றும் வர்த்தகத் துறை அருண் ஜேட்லியிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.

2005ஆம் ஆண்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நட்வர் சிங் உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தபோது அவர் வசம் இருந்த வெளியுறவுத் துறை பறிக்கப்பட்டு, அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். 2013ல் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவரான கே. சந்திரசேகர ராவ் இலாகா இல்லாத அமைச்சராக மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, உடல்நலம் சார்ந்த காரணங்களால் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவரது துறைகளை நெடுஞ்செழியன் கவனித்தார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு உடல்நலம் குன்றியபோது அவரது துறைகளை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனித்தார்.

கால்நடைத் துறை அமைச்சராக இருந்த எஸ். கருப்பசாமி, உடல் நலம் குன்றியபோது அவரது இலாகா வேறொருவருக்கு அளிக்கப்பட்டு அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். அதேபோல, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் உடல் நலம் குன்றியபோது அவரது அமைச்சரவை வேறொருவருக்கு மாற்றித்தரப்பட்டு, அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏன்?

பட மூலாதாரம்,ANI

செந்தில் பாலாஜி வழக்கின் பின்னணி

கடந்த 2011 முதல் 2015 வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அந்தப் பணியிடங்களை நிரப்புவதில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர். காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழகத்தின் தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

மோசடியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது.

மத்திய குற்றப்பிரிவின் வழக்கை ரத்து செய்யும்படியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதில், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதே நேரம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அடுத்த நாள் அதிகாலையில், விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பல முறை ஜாமீன் கோரி விண்ணப்பித்த போதும், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவருக்கு இதுவரை 19 முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cl5leel0pkko

சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒருவார காலத்தில் பிறப்பிக்கப்படும் - இந்திய மத்திய அரசாங்கம்

1 month 2 weeks ago
13 FEB, 2024 | 02:58 PM
image

ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தாயாரை கவனித்துக் கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தவேளை மத்திய அரசின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண  ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதே வேளை தமிழக அரசாங்கம் அனுப்பிய ஆவணம் இன்னமும் வந்துசேரவில்லை சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/176281

பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா?

1 month 2 weeks ago
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?
படக்குறிப்பு,

சுமார் 200 ஏக்கருக்கும் மேல் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை தூய்மைப்படுத்தி, அதில் 93 ஏக்கருக்கு பசுமைப் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க. சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தென் சென்னையில் அமைந்துள்ள பெருங்குடியைச் சுற்றி வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அங்கு மலை மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளால் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்தக் கழிவுகளை முற்றிலுமாக அகற்றி, திடக்கழிவு மறுசுழற்சி செய்வதற்கான பயோமைனிங் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இதன் மூலம் தங்கள் பல ஆண்டுக்கால பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை அதைச் சுற்றி வாழும் மக்களிடம் துளிர்த்தது.

ஆனால், சமீபத்தில் சென்னை மாநகராட்சி முன்வைத்துள்ள பசுமைப் பூங்கா திட்டம் அவர்களை மீண்டும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

அங்கு அமைக்கத் திட்டமிட்டுள்ள பசுமைப் பூங்காவை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பது ஏன்? அதற்கு மாற்றாக அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.

பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?
படக்குறிப்பு,

பசுமைப் பூங்கா குறித்த செயல் விளக்கக் கூட்டத்தில் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தென் சென்னை மக்கள் கொந்தளிப்பது ஏன்?

பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் அமைந்துள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கு. கடந்த 30 ஆண்டுக்காலமாக அப்பகுதி மக்களின் வாழ்வை நஞ்சாக்கிக் கொண்டிருக்கும் அது, சுமார் 200 ஏக்கருக்கும் மேலாகப் பரவியிருக்கிறது. சொல்லப்போனால், அந்தப் பகுதி குப்பைக் கிடங்கு எனப் பேச்சுவழக்கில் பெயர் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், உண்மையில் அதுவொரு சதுப்புநிலம்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியான அங்கு பல்லாண்டு காலமாக சென்னையின் திடக்கழிவுகளைக் கொட்டிக் கொட்டி, நிலம் பாழாகிக் கிடக்கிறது. இந்நிலையில், அங்குள்ள திடக்கழிவுகளை பயோமைனிங் மூலமாக அப்புறப்படுத்தி, நிலத்தைத் தூய்மையாக்கி மீட்டுருவாக்கும் முயற்சி 2022ஆம் ஆண்டில் 350 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது.

விரைவில் பெருங்குடி குப்பைக் கிடங்கின் திடக்கழிவுகள் முற்றிலுமாக மறுசுழற்சி செய்யப்பட்டு, சதுப்பு நிலம் மீட்கப்படக்கூட வாய்ப்புள்ளது என்ற செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆனாலும், அப்படி மீட்கப்படும் அந்த நிலத்தில் தற்போது 185 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள பசுமைப் பூங்கா அவர்களைக் கோபமடையச் செய்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சென்னை மாநகராட்சி மாற்றுத் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. அந்தத் திட்டம், பசுமைப் பூங்காவின் பரப்பளவைக் குறைப்பதாகவோ அல்லது மொத்த நிலத்தையும் நீர்நிலையாக மாற்றுவதாகவோ இருக்கலாம் என்றும் அதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் திட்டத்தின் சாத்தியக்கூறுகளைப் பொறுத்து முடிவு செய்யப்படும் எனவும் சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம்,SAVE PALLIKARANAI WETLAND

படக்குறிப்பு,

பசுமைப் பூங்காவுக்கான 93 ஏக்கர் பரப்பளவில் 11.2 ஏக்கரில் கட்டடங்கள், சாலைகள், நடைபாதைகள் ஆகியவை உருவாக்க திட்டமிடப்பட்டது.

பசுமைப் பூங்கா திட்டத்தில் என்ன இருக்கிறது?

பள்ளிக்கரணை பசுமைப் பூங்கா திட்டத்தின்கீழ் 93 ஏக்கர் பரப்பளவில், குப்பைக் கிடங்காக இருந்த நிலத்தில் 185 கோடி செலவில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடந்த சந்திப்பில் விளக்கப்பட்டதன்படி, இந்தத் திட்டத்தில் நிழல் குடிசைகள், சூழலியல் கல்வி மையங்கள், பறவை நோக்குதல் கோபுரம், கழிவறைகள், நடைபயிற்சிக்கான பகுதி எனப் பலவும் அமைக்கப்படும்.

இதற்காக ஒதுக்கப்படும் 93 ஏக்கர் பரப்பளவில் 58.15 ஏக்கருக்கு பசுமைப் பூங்கா அமைக்கப்படும். மீதமுள்ள 23.8 ஏக்கர்களில் நீர்நிலைகள் உருவாக்கப்படும். மொத்த நிலப்பரப்பில், கட்டடங்கள், சாலைகள், நடைபாதைகள் ஆகிய கட்டமைப்புகள் 11.2 ஏக்கரில் உருவாக்கப்படும்.

குப்பைக் கிடங்கில் நடைபெற்று வரும் திடக்கழிவு மறுசுழற்சி செயல்முறையில் இதுவரை 17 லட்சம் சதுர மீட்டர் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன என்றும் இன்னமும் சுமார் 30 லட்சம் சதுர மீட்டர் அளவிலான கழிவுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளன என்றும் சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?
படக்குறிப்பு,

திடக்கழிவு மறுசுழற்சி முறையில் பெருங்குடி குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

பெருங்குடியில் நடக்கும் திடக்கழிவு மறுசுழற்சி

பெருங்குடி குப்பைக் கிடங்கில் குவிந்துள்ள குப்பை மலைகளை பயோமைனிங் எனப்படும் திடக்கழிவு மறுசுழற்சி முறையில் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணி கடந்த 2022 முதல் நடந்து வருகிறது.

மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிக் குப்பைகளை மாற்று எரிபொருளாக மாற்றுகிறார்கள்.

இதுகுறித்து பிபிசியிடம் முன்பு பேசிய இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் தனியார் நிறுவனமான சிக்மாவின் துணைத்தலைவர் ஸ்ரீதர், “பல ஆண்டுகளாகக் குவிக்கப்பட்ட குப்பைகளைக் கிளரும்போது, அதைச் சுத்தப்படுத்தும்போது துர்நாற்றம் வீசவே செய்யும். ஆனால், இந்தத் திட்டம் ஒரு சில ஆண்டுகளில் முடிவடைந்த பிறகு, இந்தப் பகுதியின் நிலத்தடி நீர், காற்று ஆகியவற்றின் தரம் மேம்படும்,” என்று கூறினார்.

தற்போது ஓரளவுக்கு திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகள் முடிந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி இந்தப் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து கழிவுகளால் பாழான நிலம் மீட்கப்பட்ட பிறகு அங்கு பசுமைப் பூங்கா அமைக்கத் திட்டமிட்டது.

 
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?
படக்குறிப்பு,

குப்பைக் கிடங்கை அகற்றிய பிறகு, சதுப்பு நிலத்தை ஏதும் செய்யாமல் இயற்கையாகவே விடவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

‘பசுமைப் பூங்காவால் எந்தப் பயனும் இல்லை’

ஆனால், கடந்த ஜனவரி மாதம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பசுமைப் பூங்கா அமைக்க வேறு இடம் பார்க்குமாறும் இந்தப் பகுதியில் மீட்கப்படும் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைத்து, சதுப்பு நிலத்தை மீட்டெடுக்குமாறும் கூறியிருந்தது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி நடந்த இந்தத் திட்டம் குறித்த செயல்விளக்கக் கூட்டத்தில் பெருங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் கலந்துகொண்டனர்.

அவர்கள் இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லையெனவும் குப்பைகளை அகற்றிய பிறகு மீட்கப்படும் நிலத்தை மீண்டும் சதுப்புநிலமாகவே மாற்றவேண்டும் எனவும் கூறினர். மேலும், இப்போது தங்களுக்குத் தேவை பசுமைப் பூங்கா அல்ல, வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதுதான் எனக் கூறிய குடியிருப்புவாசிகள், அதற்கு சதுப்புநிலம் மீட்டுருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வேளச்சேரி மேற்கு, ஏஜிஎஸ் காலனி மக்கள் நலச்சங்கத்தின் செயலாளர் கீதா கணேஷ், “அந்த இடத்தில் இருக்கும் குப்பைக் கிடங்கை அகற்றிவிட்டு, அங்கு வேறு எதுவும் செய்யாமல் அப்படியே விட்டாலே போதுமானது. அதைச் செய்தாலே இங்கு பெய்யும் மழைநீர் அனைத்தும் அங்கு சென்றுவிடும்.

அங்கிருக்கும் இடத்தை முறையாகத் தூர்வாரிப் பராமரித்தாலே வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் வருவதைத் தடுக்க முடியும். அதைவிட்டு, இத்தகைய திட்டத்தைக் கொண்டு வருவதால் எந்தப் பயனும் இல்லை,” என்று கூறினார்.

 
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம்,SAVE PALLIKARANAI WETLAND

படக்குறிப்பு,

சதுப்பு நிலப்பகுதியை மீட்ட பிறகு பசுமைப்பூங்கா என்ற பெயரில் மாநகராட்சி நிர்வாகம் எடுத்துக்கொள்வது குறித்து மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட சதுப்பு நிலம்

பள்ளிக்கரணை 1900களின் தொடக்க காலத்தில் 8,000 ஹெக்டேருக்கு பரந்து விரிவடைந்திருந்ததாகப் பழைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் பரப்பு, ஈசிஆர் முதல் மத்திய கைலாஷ் வரை நீண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், தென் சென்னையின் வளர்ச்சியில் பங்கு வகித்த நெடுஞ்சாலைகள், ஐடி பூங்காக்கள் மற்றும் அதைச் சுற்றி வளர்ந்த இன்னும் பல கட்டுமானங்கள், ஆங்காங்கே துண்டு துண்டாக அந்த நிலத்தை வெட்டியெடுக்கவே, இறுதியில் தற்போது சுமார் 500 ஹெக்டேர் என்ற பரப்பளவாகச் சுருங்கிவிட்டது.

இந்நிலையில், அதில் 200 ஏக்கர் பரப்பளவை பெருங்குடி குப்பைக் கிடங்கு கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தது. கடந்த 2007ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெருங்குடியைச் சுற்றி வாழும் பெண்களின் தாய்ப்பாலில் ஆர்கனோகுளோரின் எனப்படும் நச்சு வேதிமம் கலந்திருப்பது தெரிய வந்தது. இதற்குக் காரணமாக அந்தக் குப்பைக் கிடங்கை அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.

உலகிலேயே தூய்மையானதாகக் கருதப்படும் தாய்ப்பாலையே நஞ்சாக்கிய குப்பைக்கிடங்கின் அபாயகரமான சூழலில் வாழ்ந்த மக்கள், தற்போது அது தூய்மைப்படுத்தப்படுவதை எண்ணி மகிழ்ந்தாலும், அதன்பிறகு அந்த நிலத்தை மீட்ட பிறகு மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் அதை பசுமைப்பூங்கா என்ற பெயரில் எடுத்துக்கொள்வது குறித்து அச்சம் தெரிவிக்கின்றனர்.

 
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தத் திட்டம், ஏற்கெனவே வாழ்விடப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள உயிரினங்களை மேலும் சிக்கலில் தள்ளும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

பசுமைப் பூங்கா அமைப்பதால் என்ன பிரச்னை?

“பல கோடி ரூபாய் செலவில் செய்யப்படும் பயோமைனிங் மூலம், அந்த நிலத்தை மீண்டும் மீட்டுருவாக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இந்தச் செயல்முறை பல இடங்களில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும், இங்கு 2022 முதல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஒருவழியாக இந்த நிலம் தூய்மைப்படுத்தும் முயற்சி முடிவடைந்தால், அதை சதுப்புநிலமாகவே விடவேண்டியது மிகவும் அவசியம்,” என்று விளக்குகிறார் கடல் உயிரியல் வல்லுநரான முனைவர் தி.தி.பாபு.

“இத்தகைய ஈரநிலக் கட்டமைப்பை மனிதர்களால் புதிதாக வேறோர் இடத்தில் அப்படியே செயற்கையாக உருவாக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.” அப்படியிருக்க, மீட்கப்படும் நிலத்தின் இயற்கை அமைப்பை மறுபடியும் மீட்டுருவாக்க முயல்வதே சரியான அணுகுமுறை என்று வலியுறுத்துகிறார் முனைவர் தி.தி.பாபு.

அப்படிச் செய்யத் தவறினால், அது அப்பகுதியில் ஏற்கெனவே சீரழிந்து கொண்டிருக்கும் சூழலியல் சமநிலையை மேலும் சீர்குலைக்கும் எனவும் அவர் எச்சரிக்கிறார்.

இது அப்பகுதியைச் சுற்றி வாழும் மக்களைப் பாதிப்பது மட்டுமின்றி, தற்போது வாழ்விடப் பற்றாக்குறையால் அழிந்துகொண்டிருக்கும் பள்ளிக்கரணை வாழ் ஊர்வனங்கள், பறவைகள் மற்றும் இதர உயிரினங்களையும் தாவரங்களையும் மேன்மேலும் அழிவை நோக்கித் தள்ளும் எனவும் கூறுகிறார் கடல் உயிரியல் வல்லுநர் முனைவர் தி.தி.பாபு.

 
பெருங்குடி குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்கா அமைப்பதால் பள்ளிக்கரணைக்கு பேரழிவா? மக்கள் எதிர்ப்பது ஏன்?
படக்குறிப்பு,

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இயற்கையில், பஞ்சு போல் நீரை உறிஞ்சிக்கொள்ளும் திறன் கொண்டவை.

‘குப்பைக் கிடங்கே சதுப்பு நிலத்தில் வந்ததுதானே!’

முப்பது ஆண்டுகளுக்கு முன் ஐந்தாயிரம் ஏக்கருக்கும் மேல் இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சிறிது சிறிதாக ஆக்கிரமித்த அரசாங்கம், சதுப்பு நிலத்திலேயே குப்பையையும் கொட்டியது என்று கூறும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகர், “இப்போது அந்தக் குப்பைக் கிடங்கைத்தான் பசுமைப் பூங்காவாக மாற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குப்பைக் கிடங்கே சதுப்பு நிலத்தில் வந்ததுதானே,” என்று வாதிடுகிறார் அவர்.

பல ஆண்டுக்காலமாகச் சிதைக்கப்பட்ட பிறகு, இப்போதுள்ள இந்த நிலத்தை முற்றுமுழுதாகப் பழைய சதுப்பு நிலமாக மாற்ற முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

“பழைய சதுப்பு நிலம் எப்படி இருந்ததோ அதே நிலைக்கு அதை மீட்டெடுக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. அந்தச் சதுப்பு நிலப்பகுதி முழுக்கவும் பஞ்சு போல் நீரை உறிஞ்சிக் கொள்ளும் திறன் கொண்டவை.

ஆனால், இத்தனை ஆண்டுக்காலமாக அங்குக் குவிக்கப்பட்ட கழிவுகளால் நிலமே பாழாகிக் கிடக்கிறது. அவ்வளவு பெரிய சிதைவை முற்றிலுமாகச் சரிசெய்து நிலத்தை மீட்டெடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான்,” என்கிறார் டேவிட் மனோகர்.

இதே சந்தேகத்தை பெருங்குடி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களில் சிலரும் எழுப்புகின்றனர். ஆனால், தரைமட்ட அளவு வரை குப்பைக் கிடங்கில் இருக்கும் குப்பைகளை முழுமையாக மறுசுழற்சி செய்து நிலத்தை மீட்க முடியும் என்று திடக்கழிவு மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை பெருங்குடி குப்பைக் கிடங்கு இருக்கும் பகுதியை முற்றிலுமாக மீட்டெடுத்தாலும், அங்கு “பசுமைப் பூங்கா உட்பட எந்தவிதமான கட்டமைப்புகளையும் கொண்டு வரக்கூடாது, சதுப்புநிலத்தை மீட்டெடுத்து அதே நிலையில் பராமரிக்க வேண்டும்” என்று அதைச் சுற்றி வாழும் மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/ckvey9n5210o

பாலியல் துன்புறுத்தல் - ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி

1 month 2 weeks ago
ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி - ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு என்ன ஆனது?
ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி
கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 33 நிமிடங்களுக்கு முன்னர்

பெண் அதிகாரி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கான 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதிகாரிகள் தவறு செய்யும்போது எல்லாத் தருணங்களிலும் இதுபோல நடக்கிறதா?

என்ன நடந்தது?

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிசாமி இருந்தபோது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது, வேறொரு மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியின் காரில் ஏறிக்கொண்ட ராஜேஷ் தாஸ், அந்த அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த பெண் அதிகாரி இது தொடர்பாக புகார் அளிக்க அங்கிருந்து புரப்பட்டு சென்னையை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது அந்தக் காரை பெரும் போலீஸ் படையுடன் வந்து மடக்கிய அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன், காரின் சாவியைப் பிடுங்கி வைத்துக் கொண்டு சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், அதற்கு அந்தப் பெண் அதிகாரி ஒப்புக்கொள்ளாததால் சாவியைத் தர மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தில்லியில் உள்ள உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண் அதிகாரி பேசினார்.

தில்லியில் இருந்த அதிகாரிகளின் உத்தரவின் பேரில், தமிழக உயரதிகாரிகள் தலையிட ஒரு வழியாகச் சென்னையை வந்தடைந்த அந்த அதிகாரி அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்துப் புகார் அளித்தார். இதற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆறு பேர் அடங்கிய விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.

இதற்குப் பிறகு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பிறகு, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்கப் போவதாக அறிவித்தது.

ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி
3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு

2021ஆம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அப்போதைய நீதிபதி கோபிநாதன் முன்னிலையில், 400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்தது. இரு தரப்பு விசாரணைகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 20,500 அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

விசாரணை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் தனக்காக ராஜேஷ் தாஸே வாதாடினார்.

இந்த மேல் முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டு சிறை தண்டனையையும் 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதத்தையும் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு விதிக்கப்பட்டிருந்த 500 ரூபாய் அபராதத்தையும் நீதிமன்றம் உறுதி செய்தது.

ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு என்ன ஆனது?

விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து, குடிமைப் பணி அதிகாரிகளின் ஒழுங்கு விதிமுறைகளின்படி ராஜேஷ் தாசுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

ஆனால், இதுபோல அரசு உயர் அதிகாரிகளின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், அந்த வழக்குகள் எந்த அளவுக்கு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன கேள்விகள் இருக்கவே செய்கின்றன.

2018ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில், பல காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அருணா ஜெகதீஸன் ஆணையம் விசாரணை நடத்தி, பல காவல்துறை அதிகாரிகளைத் தண்டிக்க பரிந்துரை அளித்தது. ஆனால், அந்தப் பரிந்துரைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேபோல, திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் துணைச் சரகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றி வந்த அந்தச் சரகத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களுக்கு வரும் விசாரணைக் கைதிகளை தாக்கியதாகவும், அவர்களின் பற்களைப் பிடுங்கியதுடன் வேறு பல துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி மாதப் பிற்பகுதியில் அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம்,FACEBOOK/GETTYIMAGES

உயர் அதிகாரிகள் தப்புவது எப்படி?

சிவில் சமூகம் கடுமையாக எதிர்வினை ஆற்றும்போதுதான், அதிகார வர்க்கத்தைக் கேள்விக்குட்படுத்த முடியும்; இல்லாவிட்டால் ஏதும் நடக்காது என்கிறார் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.

"சிவில் சமூகம் வலுவாக இல்லாததுதான் இதற்கு முக்கியக் காரணம். அதனால்தான் பல்வீர் சிங் விவகாரத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை. அதே நேரத்தில், சாத்தான்குளம் விவகாரத்தை எடுத்துக்கொண்டால், சிவில் சமூகம் கடுமையாக எதிர்வினை ஆற்றியது. இதன் காரணமாக அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இப்போதுவரை ஜாமீன் பெற முடியவில்லை. ராஜேஷ் தாஸ் விவகாரத்தைப் பொருத்தவரை, புகார் அளித்தவரும் இன்னொரு ஐபிஎஸ் அதிகாரி என்பதால்தான் இந்த வழக்கு இவ்வளவு தூரம் முன்னேறியது. சாதாரண காவலராக இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்காது" என்கிறார் ஹரி பரந்தாமன்.

வேறு சில நிகழ்வுகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த கே.பி.எஸ். கில், ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொண்டதற்காக தண்டிக்கப்பட்டார். இந்தத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது.

"ஆனால், இதிலும் பாதிக்கப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். அதனால் அவர் போராட முடிந்தது. அதிகாரவர்க்கத்தின் அத்துமீறல்களை எதிர்க்கும் அளவுக்கு சிவில் சமூகம் இல்லை. இப்போதும் உத்தரப்பிரதேசத்திலும் உத்தராகண்டிலும் சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்து வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை சிவில் சமூகம் கண்டுகொள்வதேயில்லை.

மேலை நாடுகளில் இதுபோல நடந்தால், அடுத்த நாளே அரசு கவிழ்ந்துவிடும். ஜார்க்கண்டில் முதலமைச்சரைக் கைது செய்கிறது அமலாக்கத் துறை. பொதுமக்களிடம் எந்த உணர்வும் இல்லை. அப்படியிருக்கும்போது, அதிகாரவார்க்கம் தன் தவறுகளுக்காக தண்டிக்கப்படுவது அரிதான விஷயம்தான்" என்கிறார் ஹரி பரந்தாமன்.

ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை உறுதி
படக்குறிப்பு,

அம்பை ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்

உயர் அதிகாரிகளுக்கு தனிச் சலுகை உண்டா?

அதிகார வர்க்கத்திற்கு என தனியாக எந்த சலுகையும் கிடையாது. அவர்கள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாகவே தப்பிக்கிறார்கள் என்கிறார் தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபியான ஜி. திலகவதி.

"இதுபோன்ற விவகாரங்களில் பெரும்பாலும் புகார் தெரிவிப்பவர்கள் உறுதியாக இருப்பதில்லை. அது ஒரு முக்கியக் காரணம். மேலும், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு தப்பிக்கும் வழி தெரியும். தவிர, நம்முடைய சட்ட அமைப்பும் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. இப்போது, ராஜேஷ் தாஸ் விவகாரத்தில்கூட இவர் இனி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார். அங்கு தீர்ப்பு சாதகமாக இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார்.

விசாரணை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டபோதே, அவர் கைது செய்யப்படாமல் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டார். அதிகார வர்க்கத்திற்கென தனியான 'இம்யூனிட்டி' என ஏதும் கிடையாது. சட்டத்தில் உள்ள சலுகைகள், வழக்கறிஞர்களின் வாதத் திறமைகளின் காரணமாகவே இவர்கள் தப்பிக்கிறார்கள்" என்கிறார் திலகவதி.

https://www.bbc.com/tamil/articles/c3gkd9p8lq9o

ஆளுநர் உரையை வாசிக்க ஆர்.என்.ரவி மறுப்பு - அவையில் என்ன நடந்தது? சபாநாயகர் கூறியது என்ன?

1 month 2 weeks ago
தமிழ்நாடு ஆளுநர் vs மாநில அரசு

பட மூலாதாரம்,ANI

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆளுநர் உரையில் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருப்பதாகவும் சட்டப்பேரவையில் தேசிய கீதத்திற்கு போதுமான மரியாதை தரப்படவில்லை என்றும் கூறி, உரையை வாசிக்க மறுத்திருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. இதற்கு முன்பு இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றனவா?

அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்

2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கவிருந்தது. அவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, 10 மணிக்கு வந்தடைந்தார். தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை துவங்கியது.

இதற்குப் பிறகு ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவை துவங்கும் முன்பாகவும் முடியும்போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாஸனத்தை அவமதிப்பதாக அமையும் என்று கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.

இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சில கருத்துகளை முன்வைத்தார். "ஆளுநர் குறைவாக வாசித்ததை நான் குறையாகச் சொல்லவில்லை. அதற்குப் பிறகு, ஜனகனமன வாசித்திருக்க வேண்டும் என்பதை ஒரு கருத்தாகச் சொன்னார்கள். எல்லோருக்கும் கருத்துகள் இருக்கும்.

 

இவ்வளவு பெரிய மழை, வெள்ளம் வந்த பிறகும் ஒரு பைசாகூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிஎம் கேர் நிதியில் உள்ளது. அதற்குக் கணக்குக்கூட கிடையாது. அதிலிருந்து ஒரு 50,000 கோடி ரூபாயை வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என நான் கூட கேட்க முடியும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்" என்று கூறினார்.

சபாநாயகர் இதனைச் சொல்லி முடித்ததும், ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.

இதற்குப் பிறகு அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் சட்டப்பேரவை விதி 17ஐத் தளர்த்தி தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். "2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தமிழ், ஆங்கிலத்தில் தவிர்க்கப்பட்ட ஆளுநர் உரை, இந்த அவைக்கு வழங்கப்பட்ட படியே அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்" என்ற அந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆளுநர் vs மாநில அரசு
தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்ன?
  • நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும் மக்கள் தொகையில் ஆறு சதவீதத்தையும் கொண்டிருக்கும் தமிழ்நாடு, இந்தியப் பொருளாதாரத்தில் 9 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைச் செய்கிறது.
  • மத்திய அரசு ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை நிறுத்தியதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு சுமார் 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால், ஜி.எஸ்.டி. இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர வேண்டும்.
  • மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு பங்களிப்பு செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதுவரை இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதேநேரம், மற்ற மாநிலங்களின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த நியாயமற்ற அணுகுமுறையால், முழு திட்டச்செலவையும் மாநில அரசு செய்ய வேண்டியிருக்கிறது.
  • மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டோம்.
  • தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் போது சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.

இதுதவிர, தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல்களும் சாதனைகளும் ஆளுநரின் உரையில் இடம்பெற்றிருந்தன.

தமிழ்நாடு ஆளுநர் vs மாநில அரசு
ஆளுநர் ஆர்.என். ரவியின் முந்தைய சட்டப்பேரவை சர்ச்சைகள்

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்ற பிறகு, ஆளுநர் உரை தொடர்பாக சர்ச்சை எழுவது இது இரண்டாவது தடவை. கடந்த ஆண்டும் ஆளுநர் உரை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று ஜனவரி 9ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

உரையை வாசித்த ஆளுநர் ஆர்.என். ரவி, அந்த உரையில் இருந்த சில வரிகளைத் தவிர்த்துவிட்டு வாசித்தார். சில வாசகங்களை சேர்த்தும் படித்தார். ஆனால், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்த சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக வாசித்தார். இதற்குப் பிறகு, இதன்பிறகு பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அவர் பேசுகையில்,"தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது" என்று தெரிவித்து இது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரைவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருந்தபோதே, அவையைவிட்டு அவசரஅவசரமாக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் மரபு தொடங்கியது எப்போது?

மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய "நீராரும் கடலுடுத்த" எனத் துவங்கும் பாடல் அரசு விழாக்களின் துவக்கத்தில் பாடப்படும் என 1970 மார்ச் 11ஆம் தேதியன்று அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி, இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து, பொது நிகழ்ச்சிகளில், அரசு விழாக்களின் துவக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது.

"ஏதோ எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென ஆளுநர் இதைச் செய்ததைப் போல இருக்கிறது. ஆளுநர் உரையின் சில அம்சங்கள் அவருக்கு ஏற்புடையதாக இல்லையென கூறுகிறார் ஆளுநர். எந்தெந்தப் பகுதிகள் தனக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியிருந்தால் சரியாக இருந்திருக்கும். அப்படியில்லாமல், பொத்தாம்பொதுவாக பல பகுதிகள் ஏற்புடையதாக இல்லை என்று சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது?" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன்.

"தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு நல்லது அல்ல"

ஆனால், இதுபோலச் செயவது தமிழ்நாட்டில் பா.ஜ.கவைத்தான் பலவீனப்படுத்தும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

"உங்களுக்கு ஏற்பிருக்கிறதோ, இல்லையோ, தமிழ்நாட்டில் பா.ஜ.கவை வளர்க்க அண்ணாமலை ஏதோ முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஆளுநர் இதுபோலச் செயல்படுவது பா.ஜ.கவைத்தான் பலவீனப்படுத்தும். இதைப் பார்க்கும் சாதாரண மக்கள், ஆளுநர் ஏன் இப்படிச் செய்கிறார், பா.ஜ.க. சொல்லித்தான் இதைச் செய்கிறாரா என்று யோசிப்பார்கள். அரசு எழுதிக் கொடுப்பதை படிப்பதுதான் அவருடைய வேலை. முழுமையாகப் படிக்க விருப்பமில்லையென்றால், முதல் பத்தியையும் கடைசிப் பத்தியையும் வாசிக்கலாம். அதுபோல பல ஆளுநர்கள் செய்திருக்கிறார்கள். ஆளுநர் உரையையே ஏற்கவில்லையென அவர் சொல்ல முடியாது" என்கிறார் ஷ்யாம்.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக, 90களின் துவக்கத்தில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கும் முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதாவுக்கும் இடையில் கடுமையான மோதல் இருந்துவந்தது. "ஆனால், அப்போதும் சென்னா ரெட்டி மரபுகளை மீறியதில்லை. தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க, விதிகளை மீறக்கூடிய ஆலோசனைகளை யாராவது அளித்தால் 'unbecoming of Governor' என்று கூறி அதனை மறுத்துவிடுவார் சென்னாரெட்டி" என்று நினைவுகூர்கிறார் ஷ்யாம்.

ஆளுநர் உரை வாசிக்கப்படுவது இதற்கு முன்பாக தவிர்க்கப்பட்டுள்ளதா?

இந்தியாவில் ஆளுநர் ஒருவர் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்க மறுத்த சம்பவங்கள் இதற்கு முன்பு அரிதாக நிகழ்ந்திருக்கின்றன.

மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்த பத்மஜா நாயுடு, 1965ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி ஆளுநர் உரையை வாசிக்க வந்தபோது உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர் தனது உரையை வாசிக்க முடியவில்லை. இதையடுத்து உரையின் பிரதிகள் உறுப்பினர்களின் மேசையில் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் கல்கத்தா நீதிமன்றத்திற்குச் சென்றபோது, ஆளுநர் உரை அவையில் தாக்கல் செய்யப்பட்டதால் அது படிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1969ல் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்தக் கட்சியின் சார்பில் அஜோய் முகர்ஜி முதலமைச்சராகப் பதவியேற்றார். அந்த ஆண்டு மார்ச் ஆறாம் தேதியன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்பட்டது. அந்த ஆளுநர் உரையில் மத்திய அரசை விமர்சித்து சில வரிகள் இடம்பெற்றிருந்தன. அப்போதைய ஆளுநரான தர்மவீரா, அந்த வரிகளைப் படிக்க மறுத்திவிட்டார்.

இதையடுத்து, உரையின் சில பகுதிகளை தவிர்த்துவிட்டுப் படித்ததற்காக அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி கேரள மாநிலத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் துவங்குவதாக இருந்தது அவைக்கு வந்த ஆளுநர் , ஆளுநர் உரையின் 62 பக்க உரையைத் தவிர்த்துவிட்டு கடைசி பத்தியை மட்டும் வாசித்தார். அத்துடன் தனது பேச்சை முடித்துக்கொண்டு ஆளுநர் வெளியேறினார். மொத்தமே 4 நிமிடங்கள்தான் ஆளுநர் அவையில் இருந்தார்.

2020ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ஆளுநர் உரையை வாசித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த பகுதியில் தனக்கு உடன்பாடில்லை என்றாலும் தான் படிக்க வேண்டும் என முதல்வர் கூறுவதால், அதனைப் படிப்பதாக கூறிப் படித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் vs மாநில அரசு

பட மூலாதாரம்,ANI

தமிழக ஆளுநரின் விளக்கம் என்ன?

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் இடம் பெற்றிருந்த அம்சங்கள் பின்வருமாறு..

  • பிப்ரவரி 9ஆம் தேதி ஆளுநர் உரை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. அதில் பல தகவல்கள் உண்மைக்கு மாறானதாக இருந்தன.
  • பின்வரும் அறிவுரைகளுடன் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது: தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில், ஆளுநர் உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என சபாநாயகருக்கும் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டது.
  • மேலும், ஆளுநர் உரையானது அரசின் சாதனைகளை, கொள்கைகளை, திட்டங்களைச் சொல்வதாக இருக்க வேண்டுமே தவிர, தவறான தகவல்களை, பாரபட்சமான அரசியல் பார்வைகளைச் சொல்வதாக இருக்கக்கூடாது.
  • ஆனால், அரசு ஆளுநரின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டது.
  • பிப்ரவரி 12ஆம் தேதியன்று சபாநாயகர், முதல்வர் உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்திய ஆளுநர், ஆளுநர் உரையின் சில அம்சங்கள் உண்மைக்கு மாறாக இருப்பதால் அதனை வாசிக்க முடியாது என் கூறினார். சபாநாயகர் தமிழ் வடிவத்தை படிக்கும்போது ஆளுநர் முழுவதுமாக அமர்ந்திருந்தார்.
  • சபாநாயகர் உரையை வாசித்து முடித்தவுடன், தேசிய கீதம் வாசிக்கப்படும் என கருதி ஆளுநர் எழுந்தார். ஆனால், ஏற்கனவே இருந்த நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதற்குப் பதிலாக ஆளுநரை நாதுராம் கோட்சேவை பின்பற்றுபவர் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தார். இதனால், தனது பதவியின் கண்ணியத்தைக் கருதி ஆளுநர் அவையைவிட்டு வெளியேறினார்.

https://www.bbc.com/tamil/articles/cd1wz1ydyejo

 

 

குழந்தைகள் விரும்பும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்ப்பு - ஆய்வில் அதிர்ச்சி

1 month 2 weeks ago
பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் நிறமி
கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 59 நிமிடங்களுக்கு முன்னர்

புதுச்சேரி மாநிலத்தில் விற்பனைச் செய்த பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி கண்டுபிடிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சுமிட்டாயில் மட்டும்தான் ஆபத்தான செய்யப்பட்ட நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றனவா? உணவுப் பொருளில் சேர்க்கப்படும் நிறமிகளின் அளவை கண்காணிப்பது யார்? உணவு பாதுகாப்புத்துறை நிறமிகள் விவகாரத்தில் கூறுவது என்ன?

ஆய்வகத்தில் பஞ்சு மிட்டாய் பரிசோதனை

புதுச்சேரி மாநிலத்தில் வடமாநில இளைஞர்களால் விற்பனை செய்யப்பட்டு வரும் பஞ்சு மிட்டாயின் நிறம் வித்தியாசமாக இருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார் பெறப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தேடுதல் பணியில் இறங்கி இருக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் புதுச்சேரியில் சைக்கிளில் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்த வட மாநில இளைஞரிடமிருந்து பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்து அதனை இந்திரா நகர் பகுதியில் இருக்கும் உணவு மற்றும் மருந்தாய்வுத்துறையில் வைத்து பரிசோதனை செய்து பார்த்து இருக்கிறார்.

அதில் அரசு தடை செய்த தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய, மனிதர்களுக்கு புற்றுநோயை வரவழைக்கக் கூடிய காரத்தன்மை கொண்ட வேதிப்பொருள் பஞ்சுமிட்டாயின் நிறத்தை கூட்டிக் காண்பிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பஞ்சுமிட்டாய் வைத்திருந்த வட மாநில இளைஞர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. குழந்தைகள் சாப்பிடக் கூடிய பஞ்சுமிட்டாயில் உடல் நலத்திற்கு கேடான வேதிப்பொருட்கள் கலப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் நிறமி
'ஊதுபத்தியில் சேர்க்கப்படும் நிறமி பஞ்சுமிட்டாயில் சேர்ப்பு'

புதுச்சேரி மாநில உணவு பாதுகாப்பு அதிகாரி எம். ரவிச்சந்திரன் பிபிசியிடம் பேசிய போது, "கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி வட மாநில இளைஞர் ஒருவர் இந்திரா நகர் பகுதியில் விற்பனை செய்து கொண்டிருந்த பிங்க் கலர் பஞ்சுமிட்டாயைக் கைப்பற்றி அதனை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

அதில் உணவுப் பாதுகாப்புத்துறையால் தடை செய்யப்பட்ட ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சு நிறமி குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் கலந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உட்கொண்டால் கேன்சரை உருவாக்கும்.

இந்த நச்சு நிறமி தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நிறமியாகும். குறிப்பாக ஊதுபக்திகளில் பின் பகுதியில் பச்சை, மஞ்சள், பிங்க் ஆகிய நிறங்களில் இருக்கும். அதற்கு இந்த நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன.", என்றார்

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் நிறமி
'தமிழ்நாட்டில் எல்லையில் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு'

"புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் பஞ்சு மிட்டாய் வடமாநில இளைஞர்களால் தயார் செய்யப்பட்டு புதுச்சேரியில் சைக்கிளில் எடுத்து வந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட வட மாநில இளைஞர் மீது காவல்துறையின் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் 30 வடமாநில இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அரசு பரிந்துரை செய்த அளவிலான நிறமிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு அது கண்காணிக்கப்பட இருக்கிறது", என்றார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி.

உணவு பாதுகாப்புத்துறை அனுமதித்த நிறமிகள் என்ன?

"இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின்( FSSAI- Food safety and Standards Authority of India) உணவு தரச் சான்றிதழ் பெற்ற நிறமிகளை மட்டுமே உணவுப் பொருளில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக அமிலத்தன்மைகள் உள்ள டார்ட்ராசைன் மஞ்சள்( Tartrazine yellow), சன்செட் மஞ்சள்( sunset yellow), கார்மோசைன்(Carmoisine), எரித்ரோசின் (Erythrosine),பொன்சியோ 4 ஆர், இண்டிகோ கார்மைன் (Indigo carmine), ஃபாஸ்ட் கிரீன் ( fast green) ஆகிய நிறமிகளை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ரோடமின் பி என்ற நிறமி காரத்தன்மை கொண்டது. இது தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. இது பயன்படுத்துவது சட்ட விரோதமானது.

மக்கள் உண்ணும் பஞ்சு மிட்டாய், லட்டு, கேசரி, சிக்கன், குளிர்பானம், பாட்டில் குடிநீர் ஆகியவற்றில் 100 பி.பி.எம் (100 PPM ( Parts per million அளவில் மட்டுமே நிறமிகள் சேர்க்க மட்டுமே அரசு அனுமதி அளித்து இருக்கிறது. குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லி, ஜெம்ஸ் ஆகியவற்றில் 200 பி.பி.எம் நிறமிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஜெல்லியில் இருக்கும் வேதிப் பொருள் இதன் தாக்கத்தை குறைத்துவிடும் என்பதால் அரசு அனுமதி கொடுத்து இருக்கிறது", என்றார்.

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் நிறமி
'பஞ்சுமிட்டாய் கொடுப்பதை தவிர்ப்பேன்'

இதுகுறித்து பிபிசி இடம் பேசிய இராமநாதபுரத்தைச் சேர்ந்த 7 வயது குழந்தையின் தந்தையான ஜெ.ஆர். ஜோன்ஸ் அருண்ராஜ் கூறும்போது, "எனது 7 வயது மகளுக்குத் துவக்க காலத்தில் இருந்தே பஞ்சு மிட்டாய் கொடுப்பதை தவிர்த்து வந்து இருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் அதில் அதிக அளவிலான சீனி, கலர் பொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது உடல் நலத்திற்கு ஏற்றது இல்லை.

பொருட்காட்சிகள் அல்லது வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது மட்டும் அதிக நிறமிகள் இல்லாத பஞ்சுமிட்டாய் தென்பட்டால் மட்டுமே வாங்கிக் கொடுப்பேன். அதுதான் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தாது", என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "வெளிநாடுகளில் உணவு பாதுகாப்பில் அந்த அரசுகள் மிகவும் கவனத்துடன் செயல்படுகின்றன. உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய நிறமிகளை முற்றிலுமாக தடை செய்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாட்டில் அது மிக கடினமான வேலையாக இருக்கிறது. முன்பு கூட ஒரு பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் துரித உணவில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது.

ஆனால், அந்த நிறுவனம் அதில் எந்த தடை செய்யப்பட்டப் பொருளும் இல்லை என்று கூறி மீண்டும் சந்தையில் தனது பொருளை விற்கத் துவங்கியது. அரசு மக்கள் உண்ணும் உணவில் இருக்கும் கலப்படத்தை முற்றிலுமாக தடுத்தால் மட்டுமே நலமான வாழ்க்கை மக்களால் வாழ இயலும்" என்றார்.

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் நிறமி
ஐஸ் கிரீம், பஞ்சு மிட்டாய் குழந்தைகளுக்கு பிடிப்பது ஏன்?

பிபிசியிடம் சுகாதாரத் துறை மதுரை இணை இயக்குநர் குமரகுருபரன் பேசிய போது, "உணவுப் பொருளை மக்களுக்கு பிடித்தவாறு காண்பிப்பதற்காக அதில் நிறமிகள் ( food additives), சேர்க்கப்படுகின்றன. இதன் வழியாக உணவு பார்க்கும் மக்களின் உணர்வைத் தூண்டி வாங்க வைக்கிறது.

குறிப்பாக, குழந்தைகள் விரும்பி உண்ணும் பஞ்சு மிட்டாய், ஐஸ் கிரீம் போன்றவற்றில் நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. பிங்க் கலர் குழந்தைகளை கவர்ந்து இழுக்கும் தன்மையுடையது. எனவே, அதனை அரசு பரிந்துரை செய்த அளவைவிட அதிக அளவிலும், தடை செய்யப்பட்ட நிறமிகளைச் சேர்த்து குழந்தைகளை கவரும் விதமாக தயாரிக்கப்படுகிறது.

இந்த உணவுப் பொருட்கள் உண்பதற்கு மிக எளிதாக இருப்பதால் அதனை குழந்தைகள் அதிகமாக விரும்பிச் சாப்பிடுகின்றனர்", என்றார்.

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் நிறமி

"இது தவிர பெரியவர்கள் உண்ணக்கூடியக் கேசரி, காரா சேவு, முறுக்கு, சாலையோரம் விற்கப்படும் சிக்கன் போன்றவற்றிலும் நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இந்த நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்னைகள், அல்சர் உச்சக்கட்டமாக, புற்றுநோய் வரை கூட வரலாம்.

இது மாதிரியான நிறமிகள் சேர்க்கப்படும் உணவை முடிந்த அளவுக்கு மக்கள் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. அதேபோல் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது நிறமிகள் அற்ற பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீமை கவனத்துடன் வழங்குவது அவர்களின் உடலுக்கு பெரிய அளவிலான தீங்கினைக் கொடுக்காது", என்கிறார்.

தமிழ்நாட்டு உணவு பாதுகாப்புத் துறை அந்தந்த மாவட்டங்களில் இருக்கக் கூடிய பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு வேண்டுமென கேட்டுக் கொண்டு இருக்கிறது. அதன்படி அதிகாரிகள் மாவட்டம் தோறும் ஆய்வினை செய்து வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c3g09v3456po

முதியோர் இல்லத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டிகள் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் மூலம் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை

1 month 2 weeks ago
மதுரை: உறவுகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை
இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை
கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மதுரை அருகே முதியோர் இல்லத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டிகள் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் மூலம் ஒரு லட்சம் சொந்தங்களை பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இந்த முதியவர்கள் ரீல்ஸ் வீடியோ உருவாக்குவது எப்படி? சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது எப்படி? அதற்காக எவ்வாறு தயாராகின்றனர்?

முதியோர் இல்ல தாத்தா பாட்டிகளின் ரீல்ஸ் டிரெண்டானது எப்படி?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட திருநகர் பகுதியில் அடைக்கலம் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் கணவர் அல்லது மனைவி, குழந்தையை இழந்த மற்றும் சொந்தகளால் கைவிடப்பட்ட 27 முதியவர்கள் உள்ளனர்.

கடந்த 2020 ஆண்டு கொரோனா காலத்தில் அடைக்கலம் முதியோர் இல்லம் துவங்கப்பட்டு கொடையாளர்களிடமிருந்து நிதியைப் பெற்று செயல்பட்டு வருகிறது.

இங்கிருக்கும் தாத்தா, பாட்டிகளின் நடனத்திற்கு இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை
ரீல்ஸ் வீடியோ துவங்கியது எப்படி?

தாத்தா, பாட்டி வீடியோவுக்கு ஆரம்பத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்கிறார் முதியோர் இல்லப் பராமரிப்பாளர் வி.நாகலட்சுமி.

இது பற்றி பிபிசியிடம் பேசிய அவர், "எங்களது இல்லத்தில் அனைத்து முதியோரையும் சேர்ப்பது கிடையாது. கணவன், குழந்தையற்ற மற்றும் குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் என 27 பேரை பராமரித்து வருகிறோம்.

இங்கு இருக்கக்கூடிய முதியோர்களுக்கு தன்னார்வலர்கள், மக்கள் உணவு அளிப்பது மற்றும் அது தொடர்பான காணொளிகளை வீடியோவாக பதிவு செய்து எங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டோம்.

இங்குள்ள சில முதியவர்கள் காய்கறி தோட்டம் அமைத்து அசத்தினர். அதனையும் வீடியோவாக பதிவு செய்தோம். ஆனால் அதற்கு பெரிய அளவிலான பார்வையாளர்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை", என்கிறார் அவர்.

இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை
ஒரே ஒரு ரீல்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வையாளர்கள் எட்டியது

"எங்களது இல்லத்திற்கு வரும் தன்னார்வலரான கல்லூரி மாணவர் அருண்ராஜ் என்பவர் வைரலாக இருந்த "பொதியை ஏற்றி வண்டியில" என்கிற கிராமியப் பாடலின் காணொளிக்கு எங்கள் இல்லத்தில் உள்ள தாத்தா பாட்டியை நடனமாடப் பயிற்சிக் கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அந்த காணொளி லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்தது. இது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதனை முதியோர்களிடம் காண்பித்தபோது அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். எப்போது நடனம் ஆடுவோம் எனக் கேட்கத் துவங்கினர்", என்றார் நாகலெட்சுமி.

சமூக வலைதளத்தால் கிடைத்த உதவிகள்

"எங்களது தாத்தா பாட்டிகளின் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றதைத் தொடர்ந்து எங்களது இல்லத்திற்கு ஒரு வேளைக்குத் தேவையான தொகையை பலர் அனுப்ப துவங்கினர். அது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

சில படங்களின் விளம்பரத்திற்காக எங்களது தாத்தா - பாட்டியை வீடியோ எடுத்துக் கொடுக்கச் சொல்லி அதற்கு சிறு தொகையும் கொடுத்தனர்.

அந்தப் பணத்தில் முதியவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தினோம்", எனக் கூறுகிறார்.

இந்த முதியோர் இல்லத்தில் பலர் தங்களுடைய திருமண நாள், பிறந்த நாளை கொண்டாட வருகை தருகின்றனர். அங்கு இருக்கும் முதியோர்களுக்கு உணவை பரிமாறி மகிழ்ச்சியடைகின்றனர். முதியோர்களிடம் வாழ்த்துகளைப் பெற்று ஒரு வேளை உணவுக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டுக் கொள்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை

முதியவர்கள் மதிய நேரத்தில் சிறிது நேரம் தொலைக்காட்சியில் தொடர்களை பார்த்து தங்களது பொழுதைக் கழிக்கின்றனர். மாலை நேரத்தில் கோழிகள் பராமரிப்பு, கிளியிடம் விளையாட்டு என சுறுசுறுப்பாக மாறி நடனமாடுவதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர்.

முதியோர் இல்லத்தின் பின்பகுதியில் இருக்கும் இடத்தில் தாத்தா பாட்டிகள் பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். அவர்களுக்கு நாகலெட்சுமி, கல்லூரி மாணவர் அருண்ராஜ் ஆகிய இருவரும் பயிற்சி அளிக்கின்றனர்.

மகன் இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்ததால் இங்கே வந்துவிட்டேன் என்கிறார் ஆர். ராக்காயி. பிபிசியிடம் பேசிய அவர் , "தேனி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள் நான். எனது மகன் விபத்தில் உயிரிழந்தார். அந்த அதிர்ச்சியில் எனது கணவரும் சிறிது காலத்தில் இறந்துவிட்டார். அங்கு இருக்கக் கூடிய எனது உறவினர்கள் என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை. அதனால் கிளம்பி இங்கு வந்து விட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த இல்லத்தில் வசித்து வருகிறேன். இங்கே எனக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார்கள். நடனம் ஆடுவதால் மகிழ்ச்சியாக இங்கே நிம்மதியுடன் இருக்கிறேன்", என்றார்.

இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை
'கொரோனாவால் வாழ்க்கையே மாறிப் போச்சு'

மகன், மகள் இருந்தும் ஐந்து ஆண்டுகளாக இல்லத்தில் தங்கி இருப்பதாக கூறுகிறார் எஸ்.மாரியப்பன்.

"எனது மனைவி 2003-ல் இறந்து விட்டார். நான் எனது மகன் கோவையில் பணிபுரிந்து நிறுவனத்தில் நானும் பாதுகாவலராக பணியில் இருந்தேன். கொரோனா பெருந்தொற்று நேரத்தில் வயதானவர்களை வேலையில் இருந்து நீக்கினார்கள். அதில் எனக்கும் வேலை போனது. அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் எனது மருமகளுக்கு விருப்பமில்லை. மகளின் வீட்டில் தங்குவதற்கு வசதியுமில்லை. எனவே, நான் இங்கே வந்துவிட்டேன்.

எனக்கு இப்போது 86 வயது ஆகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்கேதான் இருந்து வருகிறேன். என்னால் முடிந்தவரை ஆடுகிறேன். நடனமாடுவது எனக்கு பிடித்து இருக்கிறது", என்றார்.

இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை
'உறவினர் என்னை அழைத்தாலும் போக மாட்டேன்'

"எனது மனைவி இறந்த பிறகு நான் இந்த இல்லத்திற்கு வந்துவிட்டேன். எனக்கு குழந்தைகள் கிடையாது. என்னை எனது அண்ணன் தான் இங்கே சேர்த்துவிட்டார். வீட்டில் நான் நடனமாடுவேன். அந்த பழக்கத்தில் இங்கே நடனமாடுவது மகிழ்ச்சியை கொடுக்கிறது. எனது அண்ணன் தம்பிகள் அதனைப் பார்த்துவிட்டு வரும்போது நன்றாக இருப்பதாக கூறுவார்கள்

இங்கு இல்லத்திற்கு எங்களை பார்க்க வரும் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ச்சி அடைவேன். உறவினர்கள் என்னை மீண்டும் அழைத்தாலும் நான் போக மாட்டேன். இங்கேயே இருந்துவிட்டு போக வேண்டியதுதான்", என்றார் ராஜகோபால்

இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை
'தப்புத்தப்பாக நடனம் ஆடுவோம்'

"எனது கணவருடன் 40 ஆண்டுகள் வாழ்ந்தேன். அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனது மகனுக்கு திடீரென மனநல பாதிப்பு ஏற்பட்டது. அவனை ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு தர்காவிற்கு அழைத்துச் சென்றும் பலன் இல்லை. தற்போது அவன் சாலைகளில் சுற்றி திரிகிறான். என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. எனது மகள் வீட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலை இல்லாததால் இங்கே வந்துவிட்டேன். இங்கே உணவு, உடை தவிர அதிர்ஷ்டமாக நடனமாட வாய்ப்பு கிடைத்தது. அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது", என்றார் பிரேமா

"நாங்கள் நடனத்தை தப்புத்தப்பாக ஆடுவோம். ஆனாலும் அவர்கள் எங்களுக்கு பொறுமையாக சொல்லிக் கொடுப்பார்கள்" என்கிறார் அவர்.

இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை
'முதியோரை துன்புறுத்துவதாக விமர்சனம்'

வீடியோவில் முதியோரை நடனமான வைத்து சிரமப்படுத்துவதாக விமர்சனம் வந்ததாக கூறுகிறார் தன்னார்வலர் க. அருண்ராஜ்.

பிபிசியிடம் பேசிய அவர், "இங்கே இருக்கும் முதியவர்கள் அனைவரும் சாலை ஓரங்களில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களுக்கு உணவு, உடை இருப்பிடம் கிடைத்துள்ளது. ஆனால் மன மகிழ்ச்சி மற்றும் உடல் நலத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளத்தில், நடனமாட வைத்து அதனை பதிவேற்றம் செய்தோம். துவக்கத்தில் அவர்களை துன்புறுத்துவதாக எங்களை விமர்சனம் செய்தனர்.

ஆனால், இது அவர்களுக்கு ஒரு மனதில் புத்துணர்ச்சியையும் உடல் ஆரோக்கியத்தையும் தருகிறது என்பதை நாங்கள் விளக்கினோம். தொடர்ந்து வீடியோக்கள் அதிகம் பார்வையாளர்களை எட்டியது", என்றார்

இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை
ரீல்ஸ் வீடியோ உருவாவது எப்படி?

தொடர்ந்து பேசிய அவர், "தாத்தா பாட்டிகளை வைத்து நடனமாட வைப்பது மிகவும் கடினமான செயல். குழு நடனமாக இருந்தால் ஒரு வீடியோவை எடுப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால், அவர்கள் நாம் சொல்லிக் கொடுக்கும் நடன அசைவுகளை எளிதில் மறந்து விடுவார்கள். மீண்டும், மீண்டும் சொல்லிக் கொடுத்து வீடியோவை எனது செல்போனில் எடுத்து, எடிட் செய்து, அதனைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறோம். இது அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர்களை வைத்து எடுத்த வீடியோக்களை ஞாயிற்றுக்கிழமைகளில் கணினியில் காண்பிக்கும் போது தாத்தா பாட்டிகள் அளவில்லாத மகிழ்ச்சியை அடைந்தனர்", என்றார்.

இந்த தாத்தா பாட்டிகளின் இன்ஸ்டாகிராம் பக்கம் சமீப நாட்களுக்கு முன்பாக ஒரு லட்சம் பின் தொடர்பவர்களை எட்டியதை அவர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா: பல கோடி இந்தியர்களின் பசிப்பிணி தீர்த்த பசுமைப் புரட்சியின் சிற்பி

1 month 2 weeks ago
எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 28 செப்டெம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 9 பிப்ரவரி 2024

(பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கட்டுரை மறு பகிர்வு செய்யப்படுகிறது)

இந்தியாவில் பசுமைப் புரட்சி எனப்படும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்ட விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1925-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்த இவர், சர்வதேச அளவில் தனது வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்காக அறியப்பட்டவர்.

சுதந்திர இந்தியாவில் வேளாண்மை குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்ட, பங்களிப்புச் செய்த விஞ்ஞானிகளில் எம்.எஸ். சுவாமிநாதன் மிக முக்கியமானவர். 60களிலும் 70களிலும் இந்தியாவின் பசியைப் போக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் முக்கியமானவை.

 

இந்தியா சுதந்திரமடைந்தபோது 1943ஆம் ஆண்டின் வங்கப் பஞ்சம் ஏற்படுத்திய வடு மாறாமலேயே இருந்தது. முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க பல நடவடிக்கைகளை எடுத்தார். இந்திய விவசாய ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடிய பயிர் ரகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த முக்கியமான காலகட்டத்தில்தான் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் என்ற எம்.எஸ். சுவாமிநாதனின் ஆய்வுப் பணிகள் மெல்ல மெல்ல துளிர்விட ஆரம்பித்தன. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழங்களில் தனது படிப்புகளை முடித்த சுவாமிநாதன், 1947ல் மரபியல் மற்றும் தாவரப் பெருக்கம் குறித்த படிப்பிற்காக இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தில் இணைந்தார். 1949ல் மரபணு குறித்த தீவிர ஆராய்ச்சிப் பிரிவான சைடோஜெனிடிக்ஸில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.

இதற்கு நடுவில் இந்திய காவல் பணி தேர்வில் தேர்ச்சியடைந்தாலும்கூட, அவருக்கு நெதர்லாந்தில் மரபணுவியல் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் இந்திய காவல் பணிக்குப் பதிலாக மரபணுவியல் படிக்கும் வாய்ப்பைத் தேர்வுசெய்தார். இதற்குப் பிறகு கேம்ப்ரிட்ஜில் தனது பி.எச்டி பட்டத்தையும் பெற்றார்.

படிப்புகளை முடித்த பிறகு, 1954ல் இந்திய விவசாய ஆய்வுக் கழகத்தில் இளநிலை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். இந்த காலகட்டத்தில் இந்தியா ஒரு மிகப் பெரிய உணவு நெருக்கடியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. மிகப் பெரிய அளவில் கோதுமையை பிஎல் - 480 ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி செய்துவந்தது.

 
எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

அமெரிக்க வேளாண் விஞ்ஞானியான நார்மன் போர்லாக் ஒரு குட்டை ரக கோதுமையை உருவாக்கியிருந்தார். அவரைத் தொடர்புகொண்ட எம்.எஸ். சுவாமிநாதன், அதன் மாதிரிகளைக் கோரினார். 1963ல் இந்தியாவுக்கு வந்த போர்லாக், பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். அந்தக் குட்டை ரக கோதுமை இந்தியாவுக்கு பலனளிக்கும் எனத் தோன்றியது. ஆகவே அவற்றைத் தர ஒப்புக் கொண்டார்.

விரைவிலேயே நேரு மரணமடைந்துவிட, லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்றார். எஃகு, சுரங்கம், கனரக பொறியியல் துறை அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் விவசாயத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இப்படித்தான் இந்திய பசுமைப் புரட்சிக்கான முதல் வித்து ஊன்றப்பட்டது.

உலகின் பிச்சைப் பாத்திரம் என்று 1960களில் கேலிசெய்யப்பட்ட இந்தியாவை, உலகின் உணவுப் பாத்திரம் என்று அழைக்கும் வகையில் மாற்றியவர் எம்.எஸ். சுவாமிநாதன் என்கிறார் அவருடைய மாணவரும் சக விஞ்ஞானியுமான சி.ஆர். கேசவன்.

"எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு மிகச் சிறந்த அடிப்படை அறிவியலாளர். அவருக்கு விவசாய அறிவியல் மட்டுமல்ல, பல துறைகளிலும் நிபுணத்துவம் இருந்தது. வெளிநாடுகளில் அவருக்கு பேராசிரியராக வாய்ப்பு அளிக்கப்பட்டும், அவர் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டு இந்தியாவுக்கு வந்தார்.

இந்திய விவசாய ஆய்வுக் கழகத்தில் சேர்ந்த பிறகு, நிறைய அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டார். குறிப்பாக, சைட்டோ ஜெனிடிக்ஸிலும் கதிரியக்க உயிரியலிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டார். 1960களின் இந்தியாவுக்கு நிறைய உணவு தானிய தேவை இருந்தது. இந்தியர்கள் புழுக்களைப் போல பெருகி வருவதால் நாம் நம் தானியங்களை வழங்கி அவர்களைக் காப்பாற்றிவிட முடியாது என பல அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் எழுதினார்கள்.

பசியோடு இருந்த இந்தியா உலகம் முழுவதும் அவமானப்படுத்தப்பட்டது. இந்தியா உலகின் பிச்சைப் பாத்திரமாக வர்ணிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மூலம் பசுமைப் புரட்சியைக் கொண்டுவந்தார். மரபணு மாற்றத்தால் அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடிய கோதுமை முதலில் உருவாக்கப்பட்டது. பிறகு அரிசி உருவாக்கப்பட்டது. 1967ல் இது துவங்கியது. சில ஆண்டுகளிலேயே நிலைமை மாறியது. உலகின் பிச்சைப் பாத்திரமாக இருந்த இந்தியா, உலகின் உணவுக் களஞ்சியமாக மாறியது" என்கிறார் சி.ஆர். கேசவன்.

எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

மரபணு மாற்றப்பட்ட குட்டை ரக கோதுமை, கூடுதல் விளைச்சலை அளிக்கும் என பரிந்துரைத்தார் எம்.எஸ். சுவாமிநாதன். ஆனால், அந்த காலகட்டத்தில் அரசுக்குள்ளிருந்தும் வெளியிலும் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டன. இந்தப் புதிய ரகம் இந்தியச் சூழல்களைத் தாங்குமா, பெரிய அளவில் உரத்தை இறக்குமதி செய்ய வேண்டியிருக்குமா என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. விவசாயிகளிடமும் தயக்கம் இருந்தது.

இதையடுத்து ஒரு சிறிய இடத்தை இந்தக் கோதுமையை விளைவித்துக் காட்டினார் சுவாமிநாதன். இதையடுத்து இதனைப் பரவலாக பயிரிட விவசாயிகள் முன்வந்தனர். முதற்கட்டமாக பஞ்சாபிலும் ஹரியானாவிலும் இவை பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. எதிர்பார்த்ததைப் போலவே இதற்கு நல்ல பலன் இருந்தது. பஞ்சாபில் 1965-66ல் 33.89 லட்சம் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, 1985-86க்குள் 172.21 லட்சம் டன்னாக உயர்ந்தது.

"ஆனால், அதிலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. பசுமைப் புரட்சியால் களஞ்சியங்களில் தானியங்கள் குவிந்தன. ஆனால், அவற்றை வாங்க மக்களிடம் பணம் இல்லை. ஆகவே மக்களின் பசி தீரவில்லை. இந்த முரண்பாட்டைத் தீர்க்க ஏதாவது செய்யவேண்டுமென நினைத்தார். பசியைத் தீர்க்க பசுமைப் புரட்சி மட்டும் போதாது என்பதை உணர்ந்தார். மேலும், பசுமைப் புரட்சி ஒரு நீடித்து நிற்கக்கூடிய வழிமுறை அல்ல என்பதையும் அவர் கணித்தார்.

80களிலும் 90களிலும் இதற்கென அவர் சில வழிகளை முன்வைத்தார். அதுதான் Evergreen Revolution என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில், அதிக அளவில் ரசாயனங்களையோ, பூச்சி மருந்துகளையோ பயன்படுத்தத் தேவையில்லை" என்கிறார் சி.ஆர். கேசவன்.

 
எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

1966 ஜூலையில் இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் இயக்குநராக எம்.எஸ். சுவாமிநாதன் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அது வேகமாக விரிவடையத் துவங்கியது. ஆறு பிரிவுகளுடன் இயங்கிவந்த அமைப்பு, 23 ஆய்வுப் பிரிவுகளைக் கொண்ட அமைப்பாக உருவெடுத்தது. அரிசி, கோதுமை, தானியங்கள், விவசாயத்தில் அணு ஆய்வு, தண்ணீர் தொடர்பான தொழில்நுட்பம் என மிகப் பெரிய அளவில் அந்த அமைப்பின் ஆய்வுகள் விரிவடைந்தன.

வேளாண் ஆய்வுக்கான இந்திய கவுன்சிலின் தலைமை இயக்குநராகவும் மத்திய அரசின் செயலராகவும் 1972ல் எம்.எஸ். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். 1979ல் மத்திய அரசின் முதன்மைச் செயலராகவும் ஆனார் சுவாமிநாதன். இதற்கு அடுத்த ஆண்டு மத்திய திட்டக் குழுவில் நியமிக்கப்பட்டார்.

I987ல் அவருக்கு உலக உணவு பரிசு வழங்கப்பட்டது. அதில் கிடைத்த நிதியை வைத்து எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிலையத்தை உருவாக்கினார்.

"உணவு உற்பத்தி அதிகரித்த பிறகு, அவற்றை மக்கள் வாங்கும் அளவுக்கு அவர்களது வாழ்வாதாரத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார் அவர். இந்தக் காரணத்திற்காகவே எம்.எஸ். சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷனை எம்.எஸ். சுவாமிநாதன் உருவாக்கினார். இதன் மூலம், பல கிராமங்களில் சுயஉதவிக் குழுக்களின் மூலம் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயிற்சியளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்" என்கிறார் சி.ஆர். கேசவன்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அறிவியலை மக்களின் பயன்பாட்டிற்கு எடுத்துச் சென்று, அறிவியலை வைத்து மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முயன்றவர் எனலாம் என்கிறார் கேசவன்.

எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

"எம்.எஸ். சுவாமிநாதன், இந்தியாவின் மிகப் பெரிய வேளாண் விஞ்ஞானி மட்டுமல்ல. அவர் மிகச் சிறந்த மனிதரும்கூட. தன்னுடைய நிலைப்பாடுகளோடு மாறுபடும் கருத்துகளையும் கவனிக்கக்கூடியவர். அதுதான் அவருடைய சிறப்பான அம்சம்" என்கிறார் சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய விவசாயம் குறித்த செய்திகளைச் சேகரித்துவரும் மூத்த பத்திரிகையாளரான பி. சாய்நாத். விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக அவர் அளித்த அறிக்கைகள் மிகமிக முக்கியமானவை என்கிறார் அவர்.

2004ல் இந்திய விவசாய ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையம் ஐந்து அறிக்கைகளை சமர்ப்பித்தது.

"விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு. அது பிறகு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையம் என்றே அழைக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது. அதனுடைய அறிக்கை, எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை என்றே அழைக்கப்பட்டது. இந்திய விவசாயத்தின் முதல் செயல்திட்டமாக இந்த அறிக்கையைச் சொல்லலாம். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த அறிக்கையைக் கவனித்தார்கள். இந்திய விவசாயிகளுக்கு இரண்டே இரண்டு ஆங்கில வார்த்தைகள் தெரியும் என்றால், அது "சுவாமிநாதன் ரிப்போர்ட்" என்பதுதான். இந்த அறிக்கைதான் குறைந்தபட்ச ஆதார விலையை எப்படி நிர்ணயிப்பது எனக் கூறியது. அதாவது, உற்பத்திச் செலவோடு கூடுதலாக 50 சதவீதத்தை இணைந்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றார் அவர்.

இதன் முதல் அறிக்கை 2004ஆம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது. கடைசி அறிக்கை 2006 அக்டோபரில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அடுத்தடுத்து வந்த அரசுகள் அந்தக் கமிஷனின் அறிக்கையை கொன்றுவிட்டன. மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர் அந்த அறிக்கையை உருவாக்கியிருந்தபோதிலும் எந்த அரசுகளுமே இந்த அறிக்கையைப் பற்றி விவாதிக்க ஒரு மணி நேரத்தைக்கூட நாடாளுமன்றத்தில் ஒதுக்கவில்லை

எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின் முக்கிய அம்சங்களை நிறைவேற்றுவோம் என்று தற்போதைய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதனை இப்போதுவரை செயல்படுத்தவில்லை. மாறாக, அதனைச் செயல்படுத்தினால், சந்தை விலைகளைத் தாறுமாறாக்கிவிடும் என்பதால், அவற்றை அமல்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது" என்கிறார் சாய்நாத்.

விதர்பா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அவர் நேரில் கண்டபோது அழுதுவிட்டார் என்கிறார் சாய்நாத்.

"நான் ஒரு முறை அவரைச் சென்னையில் சென்று சந்தித்தபோது, 'நீங்கள் விதர்பா பகுதியைப் பற்றி எழுதுபவை மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன' என்றார். 'நீங்கள் அங்கு வந்து பாருங்களேன்' என்று அவரை அழைத்தேன். அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, மிகக் குறைந்த கால அவகாசத்தில் அவருடைய ஆணையத்தின் மேலும் இரண்டு உறுப்பினர்களுடன் விதர்பாவுக்கு வந்தார். நாங்கள் முக்கியமான இடங்களுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய விலாஷ்ராவ் தேஷ்முக் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இரண்டு நாட்களுக்கு சாய்நாத் என்னை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறாரோ அங்கெல்லாம் செல்வேன் என்று கூறிவிட்டார். தற்கொலை செய்துகொண்ட 3 - 4 விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்றோம். அவருக்கு அப்போதே வயது 80க்கு மேல் ஆகியிருந்தது. இரண்டாவது வீட்டிற்குச் செல்லும்போதே அவர் அழுதுவிட்டார். முகத்தை மூடிக்கொண்டு அழுதார். இதை என்னால் மறக்க முடியாது" என நினைவுகூர்கிறார் பி. சாய்நாத்.

 
எம்.எஸ்.சுவாமிநாதன்

பட மூலாதாரம்,MSSRF MEDIA

2007ல் அப்போதைய மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராக அவரை நியமித்தது. அவர் உருவாக்கிய எம்.எஸ். சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் நீடித்த ஆற்றல், விவசாய உற்பத்தி ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, பங்களிப்புச் செய்துவருகிறது.

எம்.எஸ். சுவாமிநாதன் முன்னெடுத்த பசுமைப் புரட்சி குறித்து பிற்காலத்தில் பல விமர்சனங்கள் எழுந்தன. பசுமைப் புரட்சி நிலத்தில் ரசாயனத்தைக் கொட்டி மாசுபாடுத்தவதாக சூழலியலாளர்கள் குற்றம்சாட்டினார்கள். இது குறித்து அவருடைய பார்வை என்னவாக இருந்தது? "பசுமைப் புரட்சியைப் பொறுத்தவரை, வசதியான விவசாயிகள் அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று நினைத்தார். ரசாயனமும் உரமும் பெரிய அளவில் இதற்குப் பயன்படுத்தப்படுவது குறித்த பார்வையும் மாறியிருந்தது. அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயங்கியதில்லை. அதுதான் அவரை மிகப் பெரிய மனிதர்களில் ஒருவராக்குகிறது" என்கிறார் சாய்நாத். அதேபோல, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்தும் பிற்காலத்தில் அவர் தனது கருத்துகளை மாற்றிக்கொண்டார் என்கிறார் சாய்நாத்.

எம்.எஸ். சுவாமிநாதன் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது மனைவி மீனா சுவாமிநாதன் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். இந்தத் தம்பதிக்கு சௌமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா சுவாமிநாதன் என மூன்று மகள்கள்.

https://www.bbc.com/tamil/articles/cq5800pndepo

Checked
Thu, 03/28/2024 - 19:25
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed