நாமக்கல்: பட்டியலின சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த விவகாரம் - உண்மையில் என்ன நடந்தது?
பட மூலாதாரம்,GETTY IMAGES
சித்தரிப்புப் படம்
கட்டுரை தகவல்- எழுதியவர், சுதாகர் பாலசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
22 மார்ச் 2024
ஊர் கட்டுபாடு என்னும் பெயரில் தொடரும் சாதிய வன்கொடுமையால் இரண்டு பட்டியலின சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுக்கப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடை உரிமையாளர் உட்பட மூன்று பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள திருமலைப்பட்டி காமராசர் காலணியைச் சேர்ந்தவர் 33 வயதான அருள்பாண்டியன். தனியார் நிறுவன ஊழியரான இவர், தன்னுடைய இரண்டு மகன்கள் மற்றும் மனைவியுடன் இந்த ஊரில் வசித்து வருகிறார்.
கடந்த ஞாயிறன்று, மதியம் 1 மணியளவில், தனது இரு மகன்களையும் முடிவெட்டுவதற்காக தனது ஊருக்கு அருகேயுள்ள தெவ்வாய்பட்டி கிராமத்திலுள்ள சலூன் கடைக்கு அனுப்பியுள்ளார் அருள்பாண்டியன்.
அங்கு சென்ற சிறுவர்களிடம், சலூன் கடையின் உரிமையாளர் சிட்டு, கோவிலுக்குப் போவதால், கடையைப் பூட்டுவுள்ளதாகக் கூறி சிறுவர்கள் இருவரையும் திருப்பி அனுப்பியுள்ளார். இந்தத் தகவலை வீட்டுக்குத் திரும்பிய சிறுவர்கள் தனது தந்தையிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் அன்று மாலை, அருள்பாண்டியன் தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் சிட்டுவின் முடிவெட்டும் கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது மூடுவதாகக் கூறப்பட்ட கடை திறந்து இருந்தது. கடையின் உரிமையாளர் சிட்டு ஒருவருக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது தனது மகன்களுக்கு முடிவெட்ட வேண்டும் என்று அருள்பாண்டியன் கேட்டபோது, கடை உரிமையாளர் முடிவெட்ட மறுத்துள்ளார்.
“எனது மகனுக்கு முடிவெட்ட வேண்டும் என்று நான் சிட்டுவிடம் கேட்டபோது, உங்களுக்கெல்லாம் முடிவெட்ட முடியாது. ஊர் கட்டுப்பாடு அப்படி இருக்கிறது. மீறி வெட்டினால் பஞ்சாயத்தில் கடையை மூடிவிடுவார்கள் என கடை உரிமையாளர் என்னிடம் சொன்னார்,” என்று பிபிசியிடம் பேசிய அருள்பாண்டியன் தெரிவித்தார்.
சாதியை முன்வைத்து, சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த விவகாரத்தில், அருள்பாண்டியன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, சலூன் கடை உரிமையாளர் சிட்டுவை கைது செய்தது.
இவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தல், அவமானப்படுத்தும் நோக்கத்தோடு அவமரியாதை செய்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மேலும் பட்டியிலினத்தவர்களுக்கு முடிவெட்டக்கூடாது என்று கிராமத்தில் கட்டுப்பாடு உள்ளது என்று கூறி சலூன் கடை உரிமையாளரை மிரட்டியதாக இந்த வழக்கில் மேலும் இரண்டும் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிட்டு கைதான நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சமூகத்தினரின் மிரட்டலுக்குப் பயந்து தனது கணவர் முடிவெட்ட மறுத்ததாகவும், இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று சிட்டுவின் மனைவி தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறும்போது, அருள்பாண்டியன் புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவில் இவ்வழக்கு பதியப்பட்டுள்ளது.
அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடிவெட்டக் கூடாது என சலூன் கடை உரிமையாளரை மிரட்டிய ஆதிக்க சாதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ராஜேஷ்குமார்(35), பால்காரர் செல்வராசு(52) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம மக்களிடம் பேச பிபிசி முயற்சி செய்தது. ஆனால் காவல்துறை கைது நடவடிக்கைக்குப் பயந்து யாரும் பேச முன்வரவில்லை.
பட மூலாதாரம்,GETTY IMAGES
சித்தரிப்புப் படம்
"சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் நடப்பது வேதனையளிக்கிறது. இன்னொரு மனிதனுடைய சுயமரியாதையை கேவலப்படுத்துவதற்காக சக விளிம்புநிலை சமூகங்களில் இருப்பவர்களையே கருவியாகப் பயன்படுத்துவது இந்த நாடு இன்றும் ஜனநாயகப்படவில்லை என்பதையே காட்டுகிறது," என்றார் பழங்குடியின செயற்பாட்டாளர் வழக்கறிஞர் பாலமுருகன்.
இதுகுறித்துப் பேசிய சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், "இன்றைய காலகட்டத்தில் நேரடியான சாதிய தீண்டாமைகளுக்கு மாற்றாக நவீன தீண்டாமைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற நேரடியான தீண்டாமை வடிவங்கள் தமிழக கிராமங்களில் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.
ஒரு மனிதன் பயன்படுத்திய பொருளை, இடத்தை, கடையை நான் பயன்படுத்த மாட்டேன் எனச் சொல்லி பட்டியிலின மக்களை ஒதுக்கி வைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு விரிவான ஆய்வு மேற்கொண்டு தீண்டாமை கொடுமைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்," என்றார்.
ராசிபுரம் சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய ஆணையர் டாக்டர் ரவிவர்மன் பிபிசியிடம் பேசினார்.
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது தொடர்பான வழக்குகள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே பதிவாகின்றன. கடந்த மாதம் சேலம் கொளத்தூர் அருகே முடிவெட்டுவது தொடர்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில், சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
சித்தரிப்புப் படம்
“காவேரிபுரம் பேருந்து நிறுத்தத்தில் ரமேஷ் என்பவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். அவர் அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு முடிதிருத்தம் செய்வதில்லை என்ற புகார் வந்தது. இதுகுறித்து விசாரணை செய்தபோது உங்களுக்கு வெட்டினால், உயர் சாதியினர் என்னிடம் முடிவெட்ட வர மாட்டார்கள் என்றார் அந்த கடைக்காரர். வேண்டுமென்றால் வழக்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்."
இதுபோல பல ஊர்களின் நடந்தாலும், பெரியளவில் அந்தச் சம்பவங்கள் வெளிவருவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் குறித்துப் புகார் அளித்தால் மட்டுமே தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், நேரடியாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்று ரவிவர்மன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் திருப்பூர், கோயமுத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு நாமக்கல், கரூர், ஒரத்தநாடு, உள்ளிட்ட பகுதியில் அதிகளவில் பட்டியலின மக்களுக்கு முடிவெட்டாமல் புறக்கணிக்கப்படுவதாக தகவல் வருகின்றன. ஆனால் இங்கு யாரும் புகாரளிக்க முன்வருவதில்லை என்றார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடிவெட்ட மறுத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,20,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும். எஃப்.ஐ.ஆர் போட்டவுடன் 25% தொகையும், குற்றப் பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்பு 50% தொகையும், நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் 25% தொகை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ராசிபுரம் விவகாரத்தில், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நேரடியாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியாது. தேர்தல் முடிந்ததும், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டில் இதுவரை முடிவெட்ட மறுத்தல் தொடர்பாக கொளத்தூர் மற்றும் நாமக்கல் என இரு வழக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.