நலமோடு நாம் வாழ

ரத்த அழுத்தத்தை பரிசோதிக்காமல் விட்டால் ஏற்படும் அறிகுறியே இல்லாத ஆபத்துகள்

18 hours 8 minutes ago
ரத்த அழுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை.

தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர்.

ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.

 
உடல்நலம்: ரத்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் என்ன பிரச்னை ஏற்படும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.

“முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர்.

மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர்.

ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

 
உடல்நலம்: ரத்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் என்ன பிரச்னை ஏற்படும்?
படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர்.
ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்?

ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு

140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி?

மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது.

ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.

 
உடல்நலம்: ரத்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் என்ன பிரச்னை ஏற்படும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு.
எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா?

ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது.

ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது.

ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா?

தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம்.

ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும்.

உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன?

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.

 
உடல்நலம்: ரத்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் என்ன பிரச்னை ஏற்படும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்"
உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்?

உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை.

நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை.

இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம்.

உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா?

பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

 
உடல்நலம்: ரத்த அழுத்தத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால் என்ன பிரச்னை ஏற்படும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம்.

என்ன சாப்பிடலாம்?

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார்.

“உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும்.

அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o

'தோப்புக்கரணம் இப்ப 'சூப்பர் பிரெய்ன் யோகா'

1 day 7 hours ago
'தோப்புக்கரணம் இப்ப 'சூப்பர் பிரெய்ன் யோகா'
 
 
பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் ஒரு தோப்புக்கரணம் மூலம் அனுபவித்தவர்கள் எம் மூதாதையர்கள். இவர்கள் வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சி ஒன்றை எதோ ஒரு கால கட்டத்தில் எமக்கு தந்துள்ளார்கள். இந்த தோப்புக்கரணம் பிள்ளையார் வழிபாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டு அதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. இங்கு வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் [உக்கி போடுதல்] ஆகும். தோர்பி என்றால் ‘இரண்டு கைகளினால்’ என்றும், ‘கர்ணம்’ என்றால் ‘காதைப் பிடித்துக் கொள்வது’ என்றும் பொருள் என சிலரும், தவறுக்காக வருந்தித் திருந்திச் செய்யும் செயல் தப்புக்கரணம் என்றும், அந்த தமிழ்ச் சொல் வழக்காற்றில் திரிந்து ‘தோப்புக் கரணம்’ என்றாயிற்று என்று சிலரும் விளக்கம் கொடுக்கின்றனர். இது தொடையை வலுவாக்கும் ஒரு உடற்பயிற்சி என்றும் கூறலாம்.
 
எது எப்படியாயினும் இந்த தோப்புக்கரண பழக்கம் ஒரு ஆயிரம் ஆண்டு அல்லது சற்று முன்னும் பின்னும் பழமை வாய்ந்தது என ஊகிக்கலாம், என் என்றால், இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் எந்த இலக்கியத்திலும் இல்லை. அதே போல, சங்கமருவிய கால ஐம்பெரும்காப்பியமான சிலம்பிலும் மணிமேகலையிலும் சீவகச் சிந்தாமணியிலும் கூட இல்லை. கிருஸ்துக்குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான், குப்தா காலத்தில், பிள்ளையார் ஓர் அளவு அடையாளம் காணக்கூடிய அளவிற்கு வளர தொடங்கினார். பல்லவ மன்னரின் படைத் தளபதியான பரஞ்சோதி [இவரே பிற்காலத்தில் சிறுத்தொண்டராவார்], கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், வாதாபியில், போரில் வெற்றி பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதியை [பிள்ளையாரை] சோழநாட்டுக்கு எடுத்து வந்து, தமிழ் நாட்டிற்கு முறையாக அறிமுகப் படுத்தப்பட்டார். மேலும் பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே ஆகும், எனினும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்பு காணக் கூடியதாக உள்ளது. அந்த குறிப்புகளிலும் கூட எங்கும் தோப்புக்கரணம் பற்றி எதுவும் காண முடியவில்லை.
 
இந்து தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் கடவுளான பிள்ளையாரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்தாலும், இது ஒரு தண்டனை முறையாகும். பாடசாலைகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்கு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வந்துள்ளது. அதைவிடவும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் ஒரு தண்டனையாக தோப்புக் கரணம் இருந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. இவைகள் எல்லாம் சில பல ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள், எனினும் இன்று இவை அருகிவிட்டன. தோப்புக்கரணம், மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் செல்லும் உயிர் சக்தியின் அளவை அதிகரிக்கிறது என்றும், மூளைக்கான அக்கு பஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுவதால், மூளையின் வேகம் அதிகரிக்கிறது என்றும் தொடர்ந்து செய்வதன் மூலம் கவனக் குறைவு நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே மனம் ஒருமுகப்பட்டு, ஞாபகசக்தி அதிகரித்து, படிப்பிலும் கவனம் கூடும் என்ற கருத்து பொதுவாக உள்ளது.
 
ஆனால் இன்று இந்த தோப்புக்கரணம், 'சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற பெயரில், அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? [is now being researched and enthusiastically promoted in the West as "Super Brain Yoga."] லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார் [Dr. Eric Robins, a medical doctor in Los Angeles, calls it "a fast, simple, drug-free method of increasing mental energy"]. மேலும் பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின், மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் அவர் உறுதிப்படுத்தி கூறுகிறார் [He speaks of one student who raised his grades from C's to A's in the space of one semester]. காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றது என்றும், அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாகவும், இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்றும் அவர் சொல்கிறார்.
 
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங்கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன், புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் செய்யும் பொழுது தமிழரின் தற்காப்புக் கலையையும் எடுத்து சென்று அங்கு அறிமுகப் படுத்தினார், ஆனால் இன்றோ நாம் தற்காப்பு கலையினை நினைக்கும் பொழுது அது சீனா அல்லது ஜப்பான் என்று கருதுகிறோம், அது போலத் தான் இந்த தோப்பு கரணமும் ஒரு காலத்தில் அமெரிக்காவினதாக மாறலாமோ என்று ஒரு ஐயப்பாடு என்னிடம் தோன்றுகிறது ?
 
எனவே இந்த எமது பழம் பழக்கமான தோப்புக்கரணத்தின் பெருமையை உணருங்கள், மற்றவர்கள் அதை சொந்தம் கொண்டாட முன்பு இது தமிழரின் பாரம்பரியம் என்பதை எடுத்து கூறுங்கள். இது வெறும் மதம் சார்ந்த வழிபாடோ, நம்பிக்கையோ மட்டும் அல்ல: மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது என்று இன்று நாம் அறிவியல் அடிப்படையிலும் அறிகிறோம். எனவே தமிழர்கள் அறியாத தமிழனிடத்தில் உள்ள நல்ல பழக்கவழக்கம் இதுவாகிறது. 'சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற வடிவில் பிறருக்கு நம்மிடத்தில் உள்ளவற்றின் அருமை- பெருமை இன்று புரிகிறது. ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் மேற்குலகத்தை வாய்பிளந்து பார்க்கிறோம். எம்மிடம் உள்ள நல்ல பாரம்பரியங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் எமக்கு எனோ புரிவதில்லை? எனவே இனியாவது சிந்தியுங்கள், அறிய முயலுங்கள் !! இதனாலோ என்னவோ முன்பு பாடசாலைகளில் குழப்படி செய்யும் அல்லது பிந்தி வரும் அல்லது குறைந்த புள்ளி பெரும் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்தார்களோ என இன்று அறிவியல் பூர்வமாக மீளாய்வு செய்ய என் மனம் ஏங்குகிறது ?
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available.
 
 
 

பாலியல் வாழ்வை பாதிக்கும் மெனோபாஸ், ஆண்களுக்கு வரும் ஆண்ட்ரோபாஸ் - மருத்துவர்கள் கூறும் வழி

3 days 16 hours ago
தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்குமா மெனோபாஸ், மருத்துவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் மிகவும் முக்கியமானவை, பருவமடையும்போது, கர்ப்பமாக இருக்கும்போது, மாதவிடாய் நின்று போகும்போது (மெனோபாஸ்). ஆனால் முதல் இரண்டு கட்டங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், மெனோபாஸிற்கு கொடுக்கப்படுவதில்லை,” என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ்.

மெனோபாஸ், மாதவிடாய் நின்றுபோதல் என்பது பெண்கள் உடலில் காலப்போக்கில் நிகழும் ஒன்று. பெரும்பாலான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் இது நிகழ்கிறது. அப்போது அவர்களின் ஹார்மோன்களில் மாற்றம் நிகழ்வதுடன், அவற்றின் சுழற்சி முறையிலும் வேறுபாடு உண்டாகிறது. இவற்றுடன் எதிலும் நாட்டம் இல்லாதது, மூட்டு வலி, பிறப்புறுப்பில் வறட்சி உள்ளிட்ட பல பிரச்னைகளையும் பெண்கள் அனுபவிக்க நேரிடுகிறது.

ஆனால் இந்த மாதவிடாய் நின்று போதல் எந்த வயதில் நிகழ்கிறது, எந்த மாதிரியான அறிகுறிகளை உடலில் ஏற்படுத்துகிறது, அந்த அறிகுறிகளால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் என்ன, நமது அன்றாட வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பொறுத்து அதன் தீவிரம் மாறுபடுகிறது.

மெனோபாஸ் காலகட்டத்தில் தாம்பத்திய உறவில் நாட்டமின்மை இருக்கும் என்பது உண்மையா? அவ்வாறு உண்டாகும் நாட்டமின்மையைச் சரிசெய்ய மருத்துவர்களின் அறிவுரை என்ன?

பெண்களைப் போல் ஆண்களுக்கும் மெனோபாஸ் பிரச்னை உண்டா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை இங்கு பார்க்கலாம்.

 
மெனோபாஸ், பாலியல் நாட்டமின்மையை ஏற்படுத்துமா?
தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிக்குமா மெனோபாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கான முக்கிய ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென். அந்த ஹார்மோன் உடலில் குறையும்போது கருமுட்டைகள் உருவாவதும், அவை வெளியேறுவதும் குறைந்து, ஒருகட்டத்தில் நின்றுவிடும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேல் மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால் அதைத்தான் மெனோபாஸ் என்கிறோம்,” என்று விளக்கினார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ்.

தொடர்ந்து பேசிய அவர், “பெண்களின் உடலில் தலை முதல் கால் வரை, ஈஸ்ட்ரோஜெனின் தாக்கம் இருக்கிறது. அந்த ஹார்மோன் குறையும்போது மனநிலை, உடல்நிலை இரண்டும் பாதிக்கப்படும். மெனோபாஸ் தொடங்குவதற்கு முன்பும், அந்தக் கட்டத்திற்குப் பிறகும் இந்த பாதிப்புகள் இருக்கும்.

மனச் சோர்வு, தூக்கமின்மை, எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு மற்றும் முதுகு வலி, உடலில் திடீரென வெப்பம் அதிகரிப்பது, உடல் பருமன், முடி உதிர்வு எனப் பல பிரச்னைகள் ஏற்படும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான், பெண்ணுறுப்பில் உள்ள திசுக்களைப் புதுப்பிக்கும். அந்த ஹார்மோன் குறையும்போது, பெண்ணுறுப்பு உலர்ந்துவிடும். இதனால் பிறப்புறுப்பில் அசௌகரியம், வலி ஏற்படும். மெனோபாஸ் கட்டத்திற்குப் பிறகு தாம்பத்திய வாழ்வில் பெண்களுக்கு ஆர்வம் குறைய இதுவும் ஒரு காரணம்,” என்கிறார் மருத்துவர் நிவேதிதா காமராஜ்.

தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிக்குமா மெனோபாஸ்

பட மூலாதாரம்,AAKASHFERTILITYCENTRE

படக்குறிப்பு,மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ்

“ஈஸ்ட்ரோஜென் குறைவால் ஏற்படும் நேரடி விளைவுதான் பாலியல் ஆர்வம் குறைவது. என்னிடம் சிகிச்சைக்காக ஒரு பெண் வந்திருந்தார். அவருக்கு 49 வயதில் மெனோபாஸ் ஏற்பட்டது. அவர் என்னிடம் சிகிச்சைக்கு வருவதற்கு முன்பாக தீவிர மனச்சோர்வில் இருந்துள்ளார்.

பாலியல் ஆர்வம் குறைந்ததால் அவருக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது அவரது மனச் சோர்வை மேலும் அதிகப்படுத்தியது. தூக்கமின்மை பிரச்னையும் இருந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் தற்கொலை எண்ணங்கள் அவருக்கு எழுந்துள்ளன.

அவரது நண்பர் ஒருவர் பரிந்துரைத்து என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு ஹார்மோன் மாற்று தெரபியை தொடங்கினோம். ஈஸ்ட்ரோஜன் சுரப்புக்கு ஈடாக மருந்துகள் மூலம் தீவிரமான அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் முறைதான் ஹார்மோன் மாற்று தெரபி.

இப்போது சில கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். மெனோபாஸ் என்பதைப் பற்றிய புரிதல் பலருக்கும் இங்கு இல்லை. பாலியல் உறவில் நாட்டமின்மை முதல் மெனோபாஸ் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் கண்டிப்பாகச் சரிசெய்யலாம்.

வாழ்நாளில் மருத்துவரிடம் செல்லாமல் இருப்பதை இங்கு பலரும் ஒரு சாதனை என்று நினைக்கிறார்கள். மெனோபாஸ் சமயத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் உங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டால் மருத்துவரை அணுகுவதில் எந்தத் தயக்கமும் வேண்டாம்,” என்று கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா காமராஜ்.

 
இயற்கையாக எந்த வயது வரை பாலியல் ஆர்வம் இருக்கும்?
தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிக்குமா மெனோபாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“ஆண்களுக்கும் பெண்களுக்கும் 80 வயது வரைகூட பாலியல் ஆர்வம் இருக்கும். எனவே மெனோபாஸ் என்பதை தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகப் பார்க்கக்கூடாது,” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

“ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைவதால் ஏற்படும் உடல் மற்றும் மனநிலை மாற்றங்களால் பெண்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால் தானே தாம்பத்திய வாழ்வு சிறக்கும்.

அதோடு சேர்த்து பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சி, உறவின்போது கடுமையான வலியை உண்டாக்கி, பாலியல் உறவு குறித்த ஒரு பயத்தை ஏற்படுத்திவிடும். மேலும் நம் நாட்டில் இருக்கும் ஒரு பொதுவான எண்ணம், பாலியல் உறவு என்பது தம்பதிகளுக்குள் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் இருக்க வேண்டும், பின் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும், ஆன்மீகத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.

இதெல்லாம் சேர்ந்துதான் 45 வயதிற்கு மேல் தம்பதிகளுக்குள் பாலியல் ஆர்வம் குறைந்துவிட்டால் அதை மிகச் சாதாரணமாகக் கடந்து விடுகிறார்கள்,” என்று கூறிய அவர் தொடர்ந்து பேசினார்.

தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிக்குமா மெனோபாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“மெனோபாஸ் சார்ந்த மாற்றங்களுக்கு இப்போது மருந்துகள், சிகிச்சைகள் வந்துவிட்டன. அதில் முக்கியமான சிகிச்சை ஹார்மோன் மாற்று தெரபி, எத்தனையோ பேர் அதை எடுத்துக்கொண்டு இயல்பான வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். இதை எடுத்துக்கொண்டாலே மெனோபாஸ் தொடர்பான பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சிக்கு நிறைய லூப்ரிகண்ட்ஸ் (Lubricants) கிடைக்கின்றன. ஆணுறை நிறுவனங்கள்கூட இதற்கென பிரத்யேக ஆணுறைகளைத் தயாரிக்கின்றன. எலும்பு தேய்மானத்திற்கு மருந்துகளையும், ஆரோக்கியமான உணவுகளையும் பரிந்துரைக்கிறோம்.

எனவே ஒரு வயதிற்கு மேல் கணவன்- மனைவிக்குள் உடலுறவு என்பதே ஏதோ பெரிய குற்றம் என்ற பொதுப்புத்தியில் இருந்து விலகி, மெனோபாஸ் குறித்த பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுக வேண்டும்.

உடலுறவின் மீது ஆர்வம் இல்லை என்றால் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். உடலுறவு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது,” என்கிறார் மருத்துவர் காமராஜ்.

 
`ஆண்களுக்கான மெனோபாஸ்'
தாம்பத்திய வாழ்க்கையைப் பாதிக்குமா மெனோபாஸ்
படக்குறிப்பு,பாலியல் மருத்துவர் காமராஜ்

“இந்த ஹார்மோன் பிரச்னைகள் ஆண்களையும் பாதிக்கும். இதை, ஆண்ட்ரோபாஸ் (Andropause) என்பார்கள், `ஆண்களுக்கான மெனோபாஸ்' என்றும் இதைச் சொல்லலாம்” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

“பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் போல ஆண்களின் உடலில் டெஸ்ட்டோஸ்டீரான் (Testosterone) என்ற ஹார்மோன் குறையும்போது இது ஏற்படும். ஞாபக மறதி, ஆணுறுப்பு எழுச்சியின்மை, தசைகளின் பலம் குறைவது, தூக்கமின்மை, மனச் சோர்வு, பாலியல் ஆர்வம் குறைவது, விந்து சீக்கிரமாக வெளியேறுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

நாற்பது வயதுக்கு மேல் ஆகும்போது, இதையெல்லாம் பலரும் முதுமையின் அறிகுறிகளாகப் பார்ப்பார்கள். ஆனால் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், ஆண்ட்ரோபாஸ் கட்டத்தில் இருக்கும் ஆண்கள் மருத்துவரை அணுகி, உடலில் ஹார்மோன்களை அதிகரிப்பதற்குத் தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் பாலியல் ஆர்வம் கூடுவது மட்டுமல்லாது, அவர்களது அன்றாட வாழ்க்கையும் மேம்படும்.

தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்குமா மெனோபாஸ், மருத்துவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கணவன்- மனைவி, மெனோபாஸ் மற்றும் ஆண்ட்ரோபாஸ் கட்டத்தில் இருக்கும்போது மனம் விட்டுப் பேச வேண்டும். சரி நமக்கு வயதாகிவிட்டது, இதை ஏற்றுக்கொண்டு உடலுறவைத் தவிர்த்துவிடுவோம் என இருக்கக்கூடாது. ஏனென்றால் இந்த ஹார்மோன் பிரச்னைகள் உடல்நிலை சார்ந்தும், மனநிலை சார்ந்தும் பல விபரீத சிக்கல்களை ஏற்படுத்திவிடும். 40- 50 என்ற வயது சோர்ந்து, ஓய்வு எடுப்பதற்கான வயது அல்ல.

மெனோபாஸ்/ஆண்ட்ரோபாஸ் என்பதை பாலியல் வாழ்க்கையின் வீழ்ச்சியாகப் பார்க்கக்கூடாது. அறிகுறிகளைப் புரிந்துகொண்டு குறிப்பிட்ட சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு புதிய தாம்பத்திய வாழ்வைத் தொடங்குவதற்கான வாய்ப்பை அது வழங்குகிறது.

நல்ல மருத்துவ ஆலோசனையோடு உங்கள் உடலைச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டால், தாம்பத்திய வாழ்க்கைக்கு வயது ஒரு தடையே இல்லை,” என்று கூறுகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cw0v5djxqgno

அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை நிரந்தரமாகப் பறிக்கும் நோய்

4 days 11 hours ago
கண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

12 ஏப்ரல் 2024, 02:03 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் கால்பங்கு மக்கள்தொகை கண்சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் குணப்படுத்தக்கூடிய, சரியே செய்ய முடியாத, தடுத்து நிறுத்தக் கூடிய வகையிலான வெவ்வேறு விதமான கண் சார்ந்த பாதிப்புகள் உள்ளன.

அதில் ஒன்றான கிளாக்கோமா சமீபத்தில் பலரையும் அச்சுறுத்தும் ஒரு பாதிப்பாக மாறியுள்ளது. காரணம் இது பல நேரங்களில் எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் தொடங்கி, ஒரு நபர் தனது கண்பார்வையை குறிப்பிட்ட அளவு இழந்த பிறகே தெரிய வருகிறது.

இதனால், இழந்த கண்பார்வையை மீட்க முடியாத நிலையும் உருவாகிறது. உண்மையில் இந்த நோயின் அறிகுறிகள் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே அதை எப்படி கண்டறிவது? அதற்கான சிகிச்சைகள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கிளாக்கோமா என்றால் என்ன?

கிளாக்கோமா என்பது கண்களை பாதிக்கும் ஒரு நோய். கண்களை மூளையோடு இணைக்கும் நரம்புகளை இந்த நோய் பாதிக்கிறது.

பிரிட்டிஷ் பொது சுகாதார சேவையின் (NHS) கூற்றுப்படி, கண்களில் குவியும் இயல்புக்கு மாறான திரவம் அதன் மீது அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி நரம்புகளை சேதப்படுத்துகிறது.

கிளாக்கோமாவை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பு மற்றும் முழுமையான கண்பார்வை பறிபோவதற்கு வழிவகுக்கும்.

கிளாக்கோமா வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இதில் 70 முதல் 80 வயதுடையவர்களுக்கு அபாயம் அதிகம்.

 
கிளாக்கோமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிளாக்கோமா நோய் இரு கண்களையும் பாதித்தாலும், அவற்றில் ஒன்று கூடுதலாக பாதிக்கப்படலாம்.
கிளாக்கோமாவின் அறிகுறிகள் என்ன?

கிளாக்கோமா ஏற்படுகிற ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறிகளும் தெரிவதில்லை. இதனால் அதை பரிசோதனைகள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

இது பல ஆண்டுகளாக படிப்படியாக அதிகரிக்கிறது. இதன் நீட்சியாக பார்வையையும் பாதிக்கிறது. இது மெதுவான விளைவுகளைக் கொண்டிருப்பதால், பலரும் தங்களது பார்வையில் எந்த விதமான மாற்றங்களையும் உணர்வதில்லை.

இது படிப்படியாக முன்னேறி குறிப்பிட்ட அளவு பார்வை பாதிக்கப்படும் போது பாதிக்கபட்டவர்களால் தங்களை சுற்றி எதையும் பார்க்க முடியாது. உடனடியாக சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் முழுமையாக பார்வை பறிபோகவும் வாய்ப்புள்ளது.

மங்கலான பார்வை மற்றும் பிரகாசமான விளக்குகளைச் சுற்றி வானவில் போன்ற வளையங்கள் தெரிவது போன்றவையும் கிளாக்கோமாவின் அறிகுறிகள் தான்.

இந்த நோய் இரு கண்களையும் பாதித்தாலும், அவற்றில் ஒன்று கூடுதலாக பாதிக்கப்படலாம்.

இதன் அறிகுறிகள் திடீரென்று தொடங்கும். அவற்றில் முக்கியமான மற்றும் பொதுவானவை..

  • கண்களில் கடுமையான வலி
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • கண்கள் சிவத்தல்
  • தலைவலி
  • கண்களைச் சுற்றி மென்மையாக மாறுதல்
  • ஒளியைச் சுற்றி வட்டங்கள் தெரிவது
  • மங்கலான தோற்றம்
 
கிளாக்கோமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிளாக்கோமாவின் ஆரம்ப நிலையிலேயே அதை கண்டறிந்து சிகிச்சை அளித்து விட வேண்டும். இல்லையென்றால் படிப்படியாக அதிகரித்து முழுமையாக பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.
எப்போது சிகிச்சை பெற வேண்டும்?

இந்த குறைபாடு என்றில்லாமல், உங்கள் பார்வையில் எந்த விதமான குறைபாடு இருப்பதாக உங்களுக்கு சந்தேகம் வந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கிளாக்கோமாவின் ஆரம்ப நிலையிலேயே அதை கண்டறிந்து சிகிச்சை அளித்து விட வேண்டும். இல்லையென்றால் படிப்படியாக அதிகரித்து முழுமையாக பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.

எனவே, மேற்காணும் ஏதேனும் அறிகுறிகளை உணர்ந்தாலே உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். இது ஒரு மருத்துவ அவசரநிலை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

கிளாக்கோமாவின் வகைகள்

கிளாக்கோமாவில் பல வகைகள் உள்ளது. ஆனால், இவற்றில் மிகவும் பொதுவான வகை ஓப்பன் ஆங்கில் கிளாக்கோமா (open angle glaucoma) ஆகும். இது பல ஆண்டுகளாக கண்ணுக்குள் இருந்து பொறுமையாக வளர்ச்சியடைகிறது.

அக்யூட் ஆங்கில் க்ளோஸர் கிளாக்கோமா (Acute Angle Closure Glaucoma) - இது மிகவும் அரிதானது. கண்ணுக்குள் திரவங்கள் பாயும் பாதை திடீரென தடைப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, கண்ணில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது கிளாக்கோமாவுக்கு வழிவகுக்கிறது.

இரண்டாம் நிலை கிளாக்கோமா (Secondary Glaucoma) - கண் அழற்சி நோய் அல்லது யுவைடிஸ் போன்ற எந்த விதமான கண் நோய்களினாலும் இது ஏற்படலாம்.

கான்ஜெனிட்டல் கிளாக்கோமா(Congenital Glaucoma) - இந்த வகை மிகவும் அரிதாக இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய ஒன்று. இதில் கண்களை அமைப்பு வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும்.

 
கிளாக்கோமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களில் ஒருவருக்கு கிளாக்கோமா இருந்தால், உங்களுக்கும் அது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கிளாக்கோமா ஏற்பட காரணம் என்ன?

கிளாக்கோமா ஏற்பட பல காரணங்கள் உண்டு. கண்களில் காணப்படும் திரவம் அதன் பாதையில் சரியாக பயணிக்காத போது கிளாக்கோமா ஏற்படுகிறது. இது கண்ணில் எதிர்மறை அழுத்தத்தை உருவாக்குவதால், அது கண்களை மூளையுடன் இணைக்கும் பார்வை நரம்பை சேதப்படுத்துகிறது.

கிளாக்கோமா உருவாகும் அபாயம் பல காரணங்களால் அதிகரிக்கிறது.

வயது - வயது முதிர்வு கிளாக்கோமா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

இனம் - ஆப்பிரிக்கர்கள், கரீபியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு கிளாக்கோமா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இவர்களில் 40 வயதை கடந்தவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படுகிறது.

குடும்பம் - உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களில் ஒருவருக்கு கிளாக்கோமா இருந்தால், உங்களுக்கும் அது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உடல்நலப் பிரச்சனைகள் - பார்வைக் குறைபாடுகள் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு கிளாக்கோமா ஏற்படும் அபாயம் உள்ளது.

கிளாக்கோமாவைத் தடுக்க முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தொடர் கண் பரிசோதனைகள் மூலம், கிளாக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

கிளாக்கோமா பரிசோதனை

வழக்கமான தொடர் கண் பரிசோதனைகள் மூலம், அறிகுறிகள் ஏதும் தென்படாதபோதும் கூட இதைக் கண்டறிய முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

கிளாக்கோமாவை மிக வேகமான மற்றும் வலியற்ற பரிசோதனை மூலம் கண்டறியலாம். பரிசோதனையில் கிளாக்கோமா இருப்பது தெரியவந்தால், தாமதிக்காமல் கண் மருத்துவரை அணுக வேண்டும்.

 
கிளாக்கோமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிகிச்சைகளின் மூலம் இழந்த பார்வையை மீட்டெடுக்க முடியாது. மாறாக, மீதம் உள்ள பார்வை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
கிளாக்கோமாவிற்கான சிகிச்சை என்ன?

கிளாக்கோமாவால் ஒருவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டால், அவர்களின் பார்வையை மீண்டும் கொண்டு வர முடியாது. பார்வை இழப்பு லேசானதாக இருந்தால், உடனடி சிகிச்சையின் மூலம் மேலும் பார்வையிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

இதற்கான சிகிச்சை அந்த நபரை பாதித்துள்ள கிளாக்கோமாவின் வகையைப் பொறுத்தது. அதனடிப்படையில் கீழ்காணும் சிகிச்சைகள் வழங்கப்படலாம்.

சொட்டு மருந்து (Drops) - கண்களில் அழுத்தத்தை குறைக்கும்.

லேசர் சிகிச்சை - இந்த சிகிச்சை மூலம் கண்களில் உள்ள திரவம் பயணிக்கும் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்க முடியும். கண்களில் குறைந்த திரவ உற்பத்தியைக் கட்டுப்படுத்த லேசர் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

அறுவைசிகிச்சை - இதில் கண்ணில் உள்ள திரவம் வெளியேறும் பாதை மாற்றியமைக்கப்படுகிறது.

இந்த சிகிச்சைகளின் மூலம் இழந்த பார்வையை மீட்டெடுக்க முடியாது. மாறாக, மீதம் உள்ள பார்வை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக சிகிச்சையின் போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், மருத்துவரிடம் தெரிவிக்கவும். அனைவரும் வழக்கமான தொடர் கண்பரிசோதனைகள் மூலம் இந்த நோய் இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விடலாம். அப்படி குடும்பத்தில் ஒருவருக்கு இருப்பது தெரிய வந்தாலும் கூட, பிற குடும்ப உறுப்பினர்களும் இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjr7dwlrkwqo

பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது ஏன்? எப்படிக் கட்டுப்படுத்துவது?

4 days 17 hours ago
கேன்டிடியாசிஸ், பிறப்புறுப்பு அரிப்பு, மருத்துவம், நோய்த்தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கியூலியா கிராஞ்சி
  • பதவி, பிபிசி செய்திகள், பிரேசில்
  • 11 ஏப்ரல் 2024
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சிலருக்குப் பிறப்புறுப்புகளில் அரிப்பு ஏற்படும். பொதுவாக பெண்களுக்கு இது அதிகமாக ஏற்பட்டாலும், ஆண்களுக்கும் இது ஏற்படக்கூடும்.

இது கேன்டிடா அல்பிகான்ஸ் (Candida albicans) என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. இதன் பெயர் கேன்டிடியாஸிஸ் (Candidiasis).

கேன்டிடா அல்பிகான்ஸ் பூஞ்சை, பொதுவாக மனித உடலில் வாழும் நுண்ணுயிரிகளோடு இணைந்து வாழும். இது உடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிரிகளில் ஒன்றாகும்.

ஆனால் இந்த உயிரினம் ‘சந்தர்ப்பவாதியாகக்’ கருதப்படுகிறது. அதாவது, தனக்கு நிலைமை சாதகமாக இருக்கும்போது அது தொற்றுநோய்களை ஏற்படுத்தும்.

ஏதாவது ஒரு காரணத்தால் இந்தப் பூஞ்சையின்களின் அளவு அதிகரிக்கும்போது, உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை சீர்குலைந்து கேன்டிடியாஸிஸ் தொற்று ஏற்படும்.

 
கேன்டிடியாசிஸ், பிறப்புறுப்பு அரிப்பு, மருத்துவம், நோய்த்தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இது கேன்டிடா அல்பிகான்ஸ் (Candida albicans) என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது
ஆண்களுக்கு இந்தத் தொற்று ஏன் ஏற்படுகிறது?

பெண்களுக்கு இந்தப் பூஞ்சையின் அளவு அதிகரிப்பதற்கு சில பொதுவான காரணங்கள் உள்ளன.

மாதவிடாய் சுழற்சி, கருத்தரித்தல், கருத்தடை மாத்திரைகள் உபயோகித்தல், ஹார்மோன் மாற்று சிகிச்சை ஆகியவற்றின் போது ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் பெண்களின் பிறப்புறுப்பின் யோனி pH-ஐ பாதிக்கலாம். இது பூஞ்சையின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகிறது.

கூடுதலாக, பெண்களின் பிறபுறுப்பு ஈரப்பதத்துடனும் சூடாகவும் இருப்பதால், அதிலுள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதுவும் கேன்டிடா பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது.

ஆனால், ஆண்கள், தங்கள் பிறப்புறுப்பை நீண்ட நேரம் குளியல் உடைகள், டயப்பர்கள் போன்ற ஈரமான ஆடைகளால் மூடிவைத்திருந்தால் இந்தத் தொற்று ஏற்படுகிறது, என்கிறார் பிராசிலின் சிறுநீரியல் சங்கத்தின் நோய்த்தொற்றுத் துறை உறுப்பினர் பியான்கா மாசிடோ.

 
கேன்டிடியாசிஸ், பிறப்புறுப்பு அரிப்பு, மருத்துவம், நோய்த்தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முக்கியமாக கேன்டிடியாஸிஸ் பாலுறவு மூலம் பரவும் தொற்றாகக் (sexually transmitted infection) கருதப்படுவதில்லை.
பிறப்புறுப்பு அரிப்பு ஏற்படுவதன் காரணங்கள்

இந்தத் தொற்று ஏற்படுவதற்கு வேறு காரணங்களும் உள்ளன.

மாசிடோ பின்வருபவற்றைக் கூறுகிறார்:

ஆண்களுக்கு:

  • சரியான பிறப்புறுப்பு சுகாதாரம் இல்லாதது
  • ஆணுறுப்பின் நுனியில் அதிகப்படியான தோல் இருப்பது

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு:

  • நீரிழிவு நோய் (குளுக்கோஸ் அளவு அதிகமாக இருப்பின் பூஞ்சை அதிகமாக வளரும்)
  • அடிக்கடி ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துதல் (இது கேன்டிடா பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் பிற நல்ல நுண்ணுயிரிகளைக் கொல்லும்)
  • நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் நோய்கள். அத்துடன் கீமோதெரபி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்றவையும் நோய் எதிர்ப்புச் சக்தியைக்  குறைக்கும்

முக்கியமாக கேன்டிடியாஸிஸ் பாலியல் மூலம் பரவும் தொற்றாகக் (sexually transmitted infection) கருதப்படுவதில்லை. ஏனெனில் அது மேலே குறிப்பிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.

"இருந்தாலும், தொடர்ச்சியாக தோலோடு தோல் தொடர்புகொள்ளும்போது, குறிப்பாக நெருக்கமான சூழ்நிலைகளில், இந்தத் தொற்று ஏற்படலாம்," என்கிறார் மாசிடோ.

 
கேன்டிடியாசிஸ், பிறப்புறுப்பு அரிப்பு, மருத்துவம், நோய்த்தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பெண்களின் பிறபுறுப்பு ஈரப்பதத்துடனும் சூடாகவும் இருப்பதால், அதிலுள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை பாதிக்கப்படுகிறது
இந்தத் தொற்றின் அறிகுறிகள் என்ன?

மாசிடோவின் கூற்றுப்படி கீழ்கண்டவை இந்தத் தொற்றின் அறிகுறிகள்.

பெண்களுக்கு:

  • பிறப்புறுப்பிலிருந்து பால் நிறத்தில், கெட்டியான ஒரு வகை வெள்ளை பொருள் வெளியேறும்.
  • சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் எரிச்சல் மற்றும் அசௌகரியம் ஏற்படும்
  • உடலுறவின் போது வலி ஏற்படலாம்

ஆண்களுக்கு:

  • ஆண்குறியில் சிறிய சிவப்பு புள்ளிகள், லேசான தடிப்பு மற்றும் புள்ளி வடிவ புண்கள்

மேலும் இரு பாலினரும் கடுமையான அரிப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்களுக்கு ஏற்படும் தொற்றை எப்படிக் கண்டறிவது?

இந்தத் தொற்று பொதுவாக மருத்துவமனைகளில் கண்டறியப்படுகிறது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பரிசோதனைக்கான அவசியமின்றி, பார்வையின் மூலமே இந்தத் தொற்றைக் கண்டறிந்து விடுவார்கள்.

இருப்பினும், சந்தேகத்திற்கிடமான சந்தர்ப்பங்களில், அல்லது சிகிச்சையளிக்கக் கடினமாக இருக்கும் புண்கள் இருந்தால், நுண்ணுயிரிகளை ஆராய்தல் அல்லது பயாப்ஸி போன்ற சோதனைகள் செய்வதன்மூலம் இந்த நோய் கண்டறியப்படலாம்.

தொற்று ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தசை அல்லது திரவங்களைச் சேகரித்து அவற்றைச் சோதிப்பதன்மூலம் பூஞ்சைகளின் இருப்பைக் கண்டறியலாம், என்கிறார் பிராசிலில் உள்ள சான்டா பவுலா மருத்துவமனையின் சிறிநீரியல் நிபுணர் அலெக்ஸ் மெல்லர்.

“இருப்பினும், பொதுவாக, இந்தப் பரிசோதனைகளுக்கு அவசியமிருப்பதில்லை. சிகிச்சை உடனே தொடங்கப்படுகிறது," என்கிறார் அவர்.

 
கேன்டிடியாசிஸ், பிறப்புறுப்பு அரிப்பு, மருத்துவம், நோய்த்தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அனைத்து வகையான கேன்டிடியாசிஸ் தொற்றுகளுக்கான சிகிச்சையிலும், பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன
என்ன சிகிச்சை?

"கேன்டிடா அல்பிகான்ஸ் பூஞ்சை மிக வேகமாகப் பரவும். நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த நோய்த்தொற்று தானாகவே மறைந்துவிடும். இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் தானாகவே சரியாகிவிடும்," என்கிறார் அவர்.

ஆண்கள், சுகாதாரமாக இருப்பதுடன், கேன்டிடியாசிஸைக் குணப்படுத்த ஆயின்ட்மென்ட்கள் மற்றும் மாத்திரைகள் ஆகியவறைப் பயன்படுத்தப்படலாம், என்கிறார் அவர்.

ஆண்களுக்கான சிகிச்சை, பொதுவாக 3 முதல் 5 நாட்களுக்கு கிரீம்கள், மற்றும் மாத்திரைகளை உள்ளடக்கியது.

இந்தத் தொற்றினால் அரிதாகவே சிக்கல்கள் ஏற்படுகிறது என்கிறார் மெல்லர். ஆனால் விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களில் இத்தொற்று ஆண்களுக்கு இரண்டாம் நிலை முன்தோல் குறுக்கத்தை உருவாக்கலாம்.

தொற்றினால் ஏற்படும் வீக்கம் மற்றும் குணமடைவதில் உள்ள சிரமங்கள் முன்தோலின் நெகிழ்ச்சித்தன்மையைக் குறைக்கும் வகையில் காயத்தை ஏற்படுத்தும் போது இது நிகழ்கிறது, என்கிறார் அவர்.

 
கேன்டிடியாசிஸ், பிறப்புறுப்பு அரிப்பு, மருத்துவம், நோய்த்தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேன்டிடியாசிஸ் தோலில் சிவப்புப் புள்ளிகள், கடுமையான அரிப்பு, மற்றும் தோலை உரிதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது
கேன்டிடியாசிஸின் பிற வகைகள்

பூஞ்சை வளர்வதற்குச் சாதகமான சூழ்நிலையைப் பொறுத்து, கேன்டிடியாஸிஸ் உடலின் மற்ற பகுதிகளிலும் ஏற்படலாம்.

வாய்:

கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளில், பொதுவாக வாயில் கேன்டிடியாசிஸ் ஏற்படும். இது ‘த்ரஷ்’ என்று அழைக்கப்படுகிறது. இது உதடுகள், வாய் மற்றும் தொண்டையில் ஏற்படுகிறது.

இது நாக்கில், கன்னங்களின் உட்புறத்தில், மற்றும் தொண்டையில் வெள்ளைப் புள்ளிகள் போல் தோன்றும். விழுங்கும்போது அசௌகரியம் மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தும்.

தோல்:

மேலும், உடலில் பொதுவாக ஈரமான, சூடான பகுதிகளான அக்குள், இடுப்பு மற்றும் மார்பகங்களின் கீழே கேன்டிடியாசிஸ் ஏற்படலாம்.

இது தோலில் சிவப்புப் புள்ளிகள், கடுமையான அரிப்பு, மற்றும் தோலை உரிதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

குடல்:

ஆன்டிபயாடிக் மருந்துகளின் நீண்டகால பயன்பாடு, குடல் நுண்ணியிரிகளின் ஏற்றத்தாழ்வு, ஆகியவற்றின் காரணமாக உடலில் பூஞ்சைகள் பெருகும்போது, குடலிலும் கேன்டிடியாஸிஸ் ஏற்படலாம்.

இது வயிற்று வலி, வயிறு வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், மற்றும் மலத்தில் சிறிய வெள்ளை எச்சம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

தீவிரமான கேன்டிடியாசிஸ்:

இது ‘சிஸ்டமிக் கேன்டிடியாசிஸ்’ எனப்படுகிறது. இது நோய்த்தொற்றின் மிகவும் தீவிரமான வடிவமாகும். இதில் பூஞ்சை ரத்த ஓட்டத்தின் மூலம் உடல் முழுவதும் பரவுகிறது.

சிகிச்சை அளிக்கப்படாத எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், அல்லது நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை உட்கொள்பவர்கள் போன்றவர்களை இது பொதுவாக பாதிக்கிறது.

இதன் அறிகுறிகள்: காய்ச்சல், குளிர், தசை மற்றும் மூட்டு வலி.

சரியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது ஆபத்தான சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

அனைத்து வகையான கேன்டிடியாசிஸ் தொற்றுகளுக்கான சிகிச்சையிலும், பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன -ஆயின்ட்மென்ட்கள், மாத்திரைகள், திரவங்கள் ஆகியவை. மிகவும் தீவிரமான சந்தர்ப்பங்களில் சிறப்பு மருத்துவச் சிகிச்சை தேவைப்படலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cmm3nr34lygo

உலக சுகாதார தினம்: மன அழுத்தம், மனச்சோர்வை கண்டறிவது எப்படி? அறிகுறிகள் என்ன?

1 week 2 days ago
மன அழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள், மனநல மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 39 நிமிடங்களுக்கு முன்னர்

ஒருவர், “எனக்கு உடல்நிலை சரியில்லை, காய்ச்சல், தொடர் இருமல், ஜலதோஷம்” என்றால் உடனே ஒரு மருத்துவரைப் பார்த்து ஊசி போட்டுக் கொண்டால் சரியாகிவிடும் என்று சொல்வோம். ஆனால் அதே நபர் “எனக்கு மனநிலை சரியில்லை” என்று கூறினால் அவரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும்?

உடல்நிலை சார்ந்த பிரச்னைகள், அவை உயிர்க்கொல்லி நோயாக இருந்தாலும்கூட இயல்பாகக் கடந்து செல்லும் சமூகம், ஒருவருக்கு மனநிலை சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது என்று சொன்னால் அவரை பல அடிகள் தள்ளியே வைக்கிறது.

இந்தியன் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரி என்னும் மருத்துவ இதழ் (Indian Journal of Psychiatry) மனநலப் பிரச்னைகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என ஆய்வு நடத்தியது. அதில் பதிலளித்தவர்களில் 47% பேர் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வன்முறையாளர்களாக இருப்பார்கள் என நம்புகின்றனர், மேலும் 60% பேர் மனநோயைத் தனிப்பட்ட பலவீனத்தின் அறிகுறியாகக் கருதுகின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க, மன அழுத்தம் (stress) அல்லது மனச்சோர்வு (Depression) போன்ற வார்த்தைகள் இப்போது பொதுவான வார்த்தைகளாக மாறிவிட்டன. ஆனால் அவற்றைத் தீவிர மனநலப் பிரச்னைகளாக யாரும் கருதுவதில்லை. பள்ளி மாணவர்கள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு சுற்றுலா சென்றால் அல்லது ஒரு நல்ல திரைப்படம் பார்த்தால் அல்லது நல்ல பிரியாணி சாப்பிட்டால் அல்லது உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தால் மன அழுத்தம் சரியாகிவிடும் எனப் பலரும் மருத்துவர்களாக மாறி கருத்து கூறுகின்றனர்.

இதில் எந்தளவு உண்மையுள்ளது? உண்மையில் மன அழுத்தம், மனச்சோர்வு என்றால் என்ன? எப்போது ஒருவர் மனநல மருத்துவரை அணுக வேண்டும்?

 
மன அழுத்தம் (Stress) Vs மனச்சோர்வு (Depression)
மனஅழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் இளைஞர்களிடையே மனநலப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மென்டல் ஹெல்த் சிஸ்டம்ஸ் (International Journal of Mental Health Systems) ஆய்வின்படி, 13-17 வயதுடைய இந்திய இளம் பருவத்தினரில் 7.3% பேர் குறிப்பிடத்தக்க மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

“இதற்கு முக்கியக் காரணம் மன அழுத்தம்தான். இந்த மன அழுத்தம்தான் நாளடைவில் மனச்சோர்வாக மாறுகிறது. மன அழுத்தம் என்பது தற்காலிகமானது, சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உருவாகக் கூடியது. உதாரணமாக தேர்வில் குறைவான மதிப்பெண் பெறுவது, அலுவலகத்தில் குறித்த நேரத்திற்குள் வேலையை முடிக்கத் திணறுவது, பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொள்வது போன்ற சூழ்நிலைகளில் ஏற்படுவது மன அழுத்தம். ஆனால் மனச்சோர்வு நீண்ட நாட்களுக்கு இருக்கக் கூடியது,” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

“தூக்கமின்மை, எப்போதும் ஒரு சோக உணர்வு, எதிலும் ஆர்வமின்மை, குற்ற உணர்வு, முடிவெடுப்பதில் சிரமம், தனது எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் அவதிப்படுவது ஆகியவை மனச்சோர்வின் அறிகுறிகள். இவை ஒருவருக்கு நீண்ட நாட்களுக்கு இருந்தால் அவர் கண்டிப்பாக ஒரு மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

சில பரிசோதனைகள் மூலம் ஒருவர் மனச்சோர்வின் எந்தக் கட்டத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து, அவருக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்,” என்கிறார் ராஜலக்ஷ்மி.

 
‘மது, புகை, சுற்றுலா, மனச்சோர்வுக்கு தீர்வல்ல’
மனஅழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிகமானோர் மனஅழுத்தத்தையும் மனச்சோர்வையும் ஒன்று என நினைக்கிறார்கள், ஆனால் நாள்பட்ட மனச்சோர்வு என்பது ஒரு தீவிரமான பிரச்னை என்றும், அத்தகைய மனச்சோர்வு உடையவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ உதவி தேவை என்றும் கூறுகிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

“ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு மனநலப் பிரச்னைகள் குறித்து இருந்த விழிப்புணர்வைவிட இப்போது மக்களுக்கு ஓரளவு விழிப்புணர்வும் புரிதலும் இருக்கிறது. ஏனென்றால் மனச்சோர்வு என்ற வார்த்தையை இப்போது பலரும் பயன்படுத்துகிறார்கள். அதுகுறித்து சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசவும் செய்கிறார்கள்.

ஆனால் ஒரு மனநல மருத்துவரிடம் செல்ல பலரும் தயங்குகிறார்கள். ஏதோ பெரிய பிரச்னை வந்தால் மட்டும்தான் மருத்துவரிடம் செல்வது பலரின் வழக்கம், அதுவும் மனநலம் சார்ந்த பிரச்னை என்றால் சொல்லவே வேண்டாம். அன்றாட வாழ்வில் மன அழுத்தம் அல்லது தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம்.

இதற்கு ஒரு பிரியாணி சாப்பிட்டால், புகைப் பிடித்தால் அல்லது மது அருந்தினால் சரியாகிவிடும் என சிலர் நினைக்கிறார்கள். சிலர் தனியாக அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறார்கள். அதெல்லாம் தற்காலிக தீர்வுகள். சில நேரங்களில் கைகொடுக்கலாம்.

ஆனால் அதே மன அழுத்தம் நாளடைவில் மனச்சோர்வாக மாறும்போது, இந்த தற்காலிக தீர்வுகள் பிரச்னையை மேலும் அதிகரிக்கும். அப்போதும் மருத்துவ உதவியை நாடாமல் இருப்பது மிகவும் ஆபத்து. எனவே எப்படி உடல்நலப் பிரச்னைகள் வந்தால் மருத்துவரிடம் செல்கிறோமோ, அது போல நாள்பட்ட மனச்சோர்வின் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக ஒரு மனநல மருத்துவரை அணுக வேண்டும்,” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

 
‘மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்’
மனஅழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள்
படக்குறிப்பு,

உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

“மன அழுத்தத்தை மிகச் சாதரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் தொடர் மன அழுத்தத்தால் பல உடல்நலப் பிரச்னைகள் உருவாகும். செரிமானக் கோளாறுகள் முதல் இதய நோய், பக்கவாதம் எனப் பல்வேறு நோய்களுக்கும் மன அழுத்தத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது” என்கிறார் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியர், மருத்துவர் பூர்ணா சந்திரிகா.

தொடர்ந்து பேசிய அவர், “மனச்சோர்வை எடுத்துக்கொண்டால், அது நேரடியாக உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தாது. ஆனால் மனச்சோர்வு பிரச்னை உடையவர்கள் எப்போதும் ஒரு சோக உணர்வுடன் இருப்பார்கள். அவர்களுக்கு எதிலும் ஆர்வமிருக்காது, உணவைக்கூட பெரிதாக விரும்பி உண்ண மாட்டார்கள், எல்லா உணர்வுகளையும் தங்களுக்குள் பூட்டி வைத்துக் கொள்வார்கள்.

இது குற்ற உணர்விற்கு வழிவகுக்கும். ஒரு சிறிய தவறு நடந்தால்கூட இதற்குக் காரணம் நான்தான் எனப் பழி போட்டுக்கொள்வார்கள். இறுதியில் தற்கொலை எண்ணங்கள் உருவாகத் தொடங்கும்.

தற்கொலை செய்துகொள்பவர்கள் ஒருநாளில் அந்த முடிவை எடுப்பதில்லை. பல நாட்கள் அவர்கள் மனச்சோர்வால் அவதிப்பட்டிருப்பார்கள். ஆனால் அதை யாரிடமும் சொல்லாமல் அல்லது சொல்ல யாரும் இல்லாமல், அந்த முடிவை எடுத்திருப்பார்கள். எனவே மன அழுத்தம், மனச்சோர்வு இரண்டையும் புரிந்துகொண்டு அதற்கான உதவியை நாட வேண்டும்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா.

 
மனநல மருத்துவரை அணுகுவதில் உள்ள தயக்கம்.
மனஅழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள்
படக்குறிப்பு,

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியர், மருத்துவர் பூர்ணா சந்திரிகா.

“இப்போது பிரபலங்கள்கூட தங்களது மனநலப் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார்கள். பணம் இருந்தால் மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு வராது என்பது பொய், யாருக்கு வேண்டுமானாலும் அது வரலாம்.

எனவே சமூகம் என்ன சொல்லும் எனத் தயங்காமல் மனநல சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது சாதாரண ஒரு விஷயமாக பார்க்கப்பட வேண்டும்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா.

மத நம்பிக்கைகளும் இதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார் அவர்.

“ஒருவருக்கு மனநலப் பிரச்னை என்றால் அவரை ஏதேனும் கோவிலுக்கோ அல்லது தர்காவுக்கோ அழைத்துச் செல்வது இன்னும் பல இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. கல்வி மற்றும் தொடர் விழிப்புணர்வு மூலமாகத்தான் இதை மாற்ற முடியும்.”

 
யோகா, தியானம் உதவுமா?
மனஅழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்குப் பலரும் யோகா மற்றும் தியான முறையைப் பரிந்துரைக்கிறார்கள். இதுகுறித்து உளவியலாளர் ராஜலக்ஷ்மியிடம் கேட்டபோது, “யோகா மற்றும் தியானம் என்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் மனச்சோர்விற்கு அது தீர்வா எனக் கேட்டால் கண்டிப்பாக இல்லை," என்கிறார்.

"முன்பு சொன்னது போல, இதுவும் ஒரு தற்காலிக தீர்வாகத்தான் இருக்கும். இதுபோல மருத்துவ உதவியை நாடாமல், தற்காலிக தீர்வுகளையே நாடிக்கொண்டிருந்தால் அது மனச்சோர்வை தீவிரமாக்கும்."

நாள்பட்ட மனச்சோர்வு இருப்பவர்கள், மனநல மருத்துவரை அணுகவில்லை என்றால் தங்கள் இயல்பான குணத்தை நிரந்தரமாக இழந்து விடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்.

"ஒரு கட்டத்திற்கு மேல் தற்கொலை எண்ணங்கள் எழுவதை அவர்களால் தவிர்க்க முடியாமல் போகும். இத்தகைய தற்காலிக தீர்வுகள் உதவாது எனப் புரிந்துகொண்டு அவர்கள் தவறான முடிவு எடுக்க தள்ளப்படுவார்கள்,” என எச்சரிக்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி.

 
மனநல சிகிச்சைக்கு அதிகம் செலவாகுமா?
மனஅழுத்தம், மனச்சோர்வின் அறிகுறிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மனநல சிகிச்சை என்றால் அதற்கு அதிகம் செலவாகும் அல்லது மேல்தட்டு மக்களுக்கான ஒன்று என்ற பிம்பம் உள்ளது. ஆனால், மாவட்ட மனநலத் திட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல சிகிச்சைக்கும், ஆலோசனைக்கும் தமிழக அரசு பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்ததாக இத்தகைய வசதிகளை தாலுகா வாரியாகக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மருத்துவர் பூரண சந்திரிகா.

அரசு மருத்துவமனைகளில் மனநல மருத்துவத்திற்கு எனத் தனிப்பிரிவு செயல்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி உள்ளது, மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

“என்னைச் சுற்றி எதுவும் சரியில்லை, உலகமே என்னை மட்டும் ஏமாற்றுகிறது, எனக்கு எதிர்காலம் கிடையாது, இதெல்லாம் மனச் சோர்வு இருப்பவர்களுக்கு அடிக்கடி தோன்றும் எண்ணங்கள். இவ்வாறு இருப்பவர்கள் பல நல்ல வாய்ப்புகளை, மனிதர்களை வாழ்வில் இழந்து விடுவார்கள்.

நாம் நினைப்பதைவிடப் பல மோசமான விளைவுகள் மனநலப் பிரச்னைகளால் ஏற்படுகின்றன. எனவே உங்களுக்கோ அல்லது உங்கள் நெருங்கியவர்களுக்கோ அத்தகைய பிரச்னைகள் இருந்தால் தயங்காமல் மருத்துவரை நாடுங்கள். அந்தப் பிரச்னைகளில் இருந்து வெளியே வந்த பிறகு வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதைக் கண்டிப்பாக உணர்வீர்கள்,” என்கிறார் மருத்துவர் பூர்ணா சந்திரிகா.

https://www.bbc.com/tamil/articles/c4njn530j54o

உடல்நலம்: பூண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் - நிபுணர்கள் விளக்கம்

1 week 3 days ago
உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மணி நேரங்களுக்கு முன்னர்

பூண்டு ஜலதோஷத்தை குணப்படுத்தும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், கொழுப்பைக் கட்டுப்படுத்தும்.

ஆனால், இந்த அனுமானங்கள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளனவா? உணவில் பூண்டு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?

பூண்டு ஜலதோஷத்திற்கு மட்டுமல்ல, பல நோய்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.. ஆனால் இந்த விஷயங்கள் உண்மையா என்பதைப் பார்ப்போம்.

பூண்டு ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதா?

"பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் அதிகம் உள்ளது. மிதமான அளவில் மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச் சத்து உள்ளது. இதுவொரு அற்புதமான உணவு மூலப்பொருள்," என்கிறார், குழந்தைகளுக்கான உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவுக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான பாஹி வான் டி போயர்.

பச்சைப் பூண்டில் அல்லிசின் அதிகம் உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கந்தக கலவை.

உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு நல்லது. இது ஊட்டச்சத்துகளை வழங்குவது மட்டுமல்லாமல், ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்ப்பது முக்கியம்.

"குடலில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்களுக்கு செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் சரியாகவும் வைத்திருக்க நார்ச்சத்து தேவை."

கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை பூண்டு குறைக்குமா?

இரானில் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பங்கேற்பாளர்கள் 20 கிராம் பூண்டு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றின் கலவையை 8 வாரங்களுக்கு தினமும் எடுத்துக் கொண்டனர். முடிவுகள் நேர்மறையாக இருந்தன. இந்தப் பரிசோதனையில் கொழுப்பு, ரத்த அழுத்தம் இரண்டும் குறைவதாகக் காட்டப்பட்டுள்ளது.

அதே ஆண்டில் வெளியிடப்பட்ட மற்றோர் ஆய்வில், பூண்டு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வைப் பார்த்தால், நமக்கு நேர் எதிரான பதில் கிடைக்கிறது. இந்தப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூண்டு கொழுப்பைக் குறைக்கிறது என்பது கட்டுக்கதை எனக் கூறி 2007இல் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.

"லேசான கொழுப்பு கொண்ட 200 ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு பூண்டு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களின் ரத்தத்தில் கொழுப்பு குறையவில்லை.”

தனக்கு ஒரு நாளைக்கு ஒரு பல் பூண்டு கொடுக்கப்பட்டதாக பேராசிரியர் கார்ட்னர் விளக்கினார்.

 
உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேராசிரியர் கார்ட்னர் இந்த ஆய்வில் முக்கியப் பங்கு வகித்தார்.

"எங்கள் ஆய்வு 200 பேரை உள்ளடக்கியது. இது ஆறு மாத ஆய்வு. இந்த ஆய்வு தேசிய சுகாதார நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டது," என்கிறார் கார்ட்னர்.

"எங்கள் ஆய்வு மிகவும் துல்லியமானது. இருப்பினும், இந்தக் கட்டுக்கதைகள் உண்மையா என்பதை அறிவது சுவாரஸ்யமானது,” என்கிறார் கர்ட்னர்.

பூண்டு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்தவொரு பெரிய அளவிலான ஆய்வின் மூலமும் அவற்றை உறுதிப்படுத்துவது ஒரு பெரிய சவால் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோய்க்கு எதிராக பூண்டு பயனுள்ளதா?

நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மரிட் ஓட்டர்லி மற்றும் அவரது சகாக்கள், தங்கள் புற்றுநோய் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பூண்டு குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர்.

உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர் கூறுகையில், "இந்த ஆய்வில், பசுமையான, புதிய பூண்டின் கூறுகள் செல்லுலார் அழுத்த வழிமுறைகளைத் தூண்டுவதில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தோம். புரத உற்பத்தி அல்லது புரதத்தைப் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ள செல்களை கொல்வது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்கிறார்.

மரிட் ஓட்டர்லியின் குழு, பசுமையான பூண்டு மற்றும் எத்தனாலை பயன்படுத்தி பூண்டு சாற்றை உருவாக்கியது. சில வகையான புற்றுநோய்களில் இது பயனுள்ளதாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

"பூண்டு பெருங்குடல், மலக்குடல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய் பாதிப்புகளில் நன்மை பயக்கும் என்பதை நிரூபித்துள்ள பல அறிவியல் ஆய்வுகள் உள்ளன. நாங்கள் எலிகளில் பூண்டு சாற்றைச் சோதித்தோம். இந்தச் சாறு புற்றுநோய் எதிர்ப்பு விளைவைக் காட்டியது."

இருப்பினும், இந்த முடிவுகளுக்கும் சில நிபந்தனைகள் பொருந்தும். பூண்டு கலவையைப் போலவே, இது திரவ வடிவில் இருக்க வேண்டும். இந்த பூண்டு சாறு உறைந்தாலோ அல்லது காய்ந்தாலோ, அது விளைவை ஏற்படுத்தாது.

 
உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டாவதாக, இந்த ஆய்வு விலங்குகள் மீது நடத்தப்பட்டது, மனிதர்கள் மீது அல்ல. ஆனால் இதே போன்ற முடிவுகளை மனிதர்களிடமும் பெற முடியும் என்று ஓட்டர்லி உறுதியாக நம்புகிறார்.

பச்சைப் பூண்டு, பூண்டு சாறு அல்லது அல்லிசின் பயன்படுத்தி, மனிதர்கள் மீது 83 சோதனைகள் நடைபெற்றுள்ளன. அதில், பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோய் உட்படப் பல பிரச்னைகளில் நன்மை பயக்கும் விளைவுகளைக் காட்டியது.

"வாரத்திற்கு இரண்டு பல் பச்சைப் பூண்டுக்கு மேல் சாப்பிடுபவர்கள் மீதும் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய உணவுகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது."

சளி குணமாகுமா?

சில நிபுணர்கள் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால், சில ஆய்வுகள் பூண்டு சளியைக் குணப்படுத்துவதாகக் கூறுகின்றன. வெஸ்டர்ன் சிட்னி பல்கலைகழகப் பேராசிரியர் மார்க் கோஹன் இதை ஆய்வு செய்துள்ளார்.

உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த முடிவை நிரூபிப்பதற்கு அல்லது நிராகரிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பூண்டு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

குளிர்கால நோய்த் தொற்றுகளைத் தடுக்க பூண்டு பயன்படுத்துவதை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன. பூண்டில் ஆன்டிபயாடிக், ஆன்டிவைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பூண்டின் ஆன்டிவைரல் பண்புகள் பற்றிய ஆய்வுகள், பூண்டில் பல வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாகவும், செல்களுக்குள் வைரஸ்கள் நுழைவதைத் தடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

உணவில் பூண்டு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?

வாரத்திற்கு ஒரு முறையாவது பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வான் டி போயர் பரிந்துரைக்கிறார். உணவில் பூண்டை எப்படி அதிகம் பயன்படுத்துவது என்பது குறித்து சமையல் கலை நிபுணர் லின்ஃபோர்ட் கூறினார்.

உங்கள் விருப்பப்படி பூண்டை உணவில் பயன்படுத்தலாம் என்றார். நீங்கள் பூண்டின் சுவையை விரும்பினால், உங்கள் சமையலில் பூண்டு விழுதைப் பயன்படுத்தலாம்.

உடல்நலம்: பூண்டு புற்றுநோயை தடுக்குமா? அறிவியல் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் நீங்கள் பூண்டின் மணத்தை மட்டும் விரும்பினால், பூண்டு பற்களை ஆலிவ் எண்ணெயில் வறுத்து பின்னர் அதை வடிகட்டி, அந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

உங்கள் சாலட்டில் பூண்டு சுவையை நீங்கள் விரும்பினால், சாலட் கிண்ணத்தின் உட்புறத்தில் பூண்டு பற்களைத் தேய்க்கலாம்.

பூண்டு அறையின் வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும். பூண்டு மென்மையாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ மாறினால், அது கெட்டுப் போனதாக அர்த்தம். அதை சமையலில் பயன்படுத்த வேண்டாம்.

பூண்டு அனைவருக்கும் நல்லதா?

பூண்டு சாப்பிடுவதால் சிலருக்கு வயிற்றில் பிரச்னை ஏற்படும்.

துரதிருஷ்டவசமாக, பூண்டு சிலருக்கு தொந்தரவாக இருக்கும். குறிப்பாக குடல் எரிச்சல் (IBS) கொண்டவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என வான் டி போயர் கூறுகிறார்.

எனவே, இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்கள் உணவில் பூண்டு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பூண்டின் சுவையை அதிகரிக்க சமைக்கும்போது பூண்டு கலந்த எண்ணெயைப் பயன்படுத்துவது ஒரு நல்ல வழி. இந்த முறையில் பயன்படுத்துவது, குடல் எரிச்சல் உள்ளவர்களைக் குறைவாகவே பாதிக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c13d3kg3155o

இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன? இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நோன்பு இருக்கலாமா?

1 week 4 days ago
இன்சுலின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் "இன்சுலின் எதிர்ப்பு" பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதைத் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் அல்லது உணவுமுறைகள் இருப்பதாகக்கூறும் புத்தகங்கள் வெளியாகின்றன. இது பற்றிய வீடியோக்களும் பகிரப்படுகின்றன.

·இன்சுலின் எதிர்ப்பு’ வகை 2 நீரிழிவு (Type 2 Diabetes) உட்பட கடுமையான மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்தச்சொல் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்சுலின் எதிர்ப்பு எவ்வாறு ஏற்படுகிறது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன? இதை சரி செய்ய முடியுமா? சாப்பிடாமல் இருப்பது அதாவது ஃபாஸ்டிங் அதை கட்டுப்படுத்த உதவுமா?

 
இன்சுலின் எதிர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கணையம் மிகக் குறைந்த அளவு இன்சுலினை உற்பத்தி செய்தாலோ அல்லது உடலால் அதை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனாலோ பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.

இன்சுலின் என்றால் என்ன?

கணையத்தால் சுரக்கப்படும் இன்சுலின் மனித உடலில் உள்ள முக்கியமான ஹார்மோன்களில் ஒன்றாகும்.

ரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவைக் கட்டுப்படுத்துவது அதன் வேலை. உடலில் அதை சேமித்து சக்திக்காக பயன்படுத்த அது அனுமதிக்கிறது.

கணையம் மிகக் குறைந்த அளவு இன்சுலினை உற்பத்தி செய்தாலோ அல்லது உடலால் அதை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போனாலோ பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

உடலில் இன்சுலின் பின்வரும் வழிகளில் செயல்படுகிறது:

  • உடல் நீங்கள் உண்ணும் உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது உடலுக்கு தேவைப்படும் ஆற்றலின் முதன்மை ஆதாரமாக கருதப்படுகிறது.
  • குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் நகர்கிறது, மேலும் இன்சுலின் வெளியிட கணையத்திற்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது.
  • ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்களுக்குள் நுழைய இன்சுலின் உதவுகிறது. இதனால் அது ஆற்றலுக்காக பயன்படுத்தப்படலாம் அல்லது பிற்கால பயன்பாட்டிற்காக அது சேமிக்கப்படும்.
  • குளுக்கோஸ் உடல் செல்களுக்குள் நுழைந்து, ரத்தத்தில் அதன் அளவு குறையும் போது, இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்துமாறு அது கணையத்திற்கு சமிக்ஞை செய்கிறது.
 
இன்சுலின் எதிர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இன்சுலின் எதிர்ப்பு ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை திறம்பட உறிஞ்சுவதையோ அல்லது சேமிப்பதையோ தடுக்கிறது.

இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன?

இன்சுலின் எதிர்ப்பு என்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும். இது தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்கள், இன்சுலினுக்கு ஏற்றவாறு செயல்படாமல் இருக்கும்போது ஏற்படும்.

இது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை திறம்பட உறிஞ்சுவதையோ அல்லது சேமிப்பதையோ தடுக்கிறது.

கணையம் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸின் அளவை அகற்ற அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இது ஹைப்பர் இன்சுலினீமியா என அழைக்கப்படுகிறது.

பலவீனமான செல் செயல்பாட்டை ஈடுசெய்ய கணையம் போதுமான இன்சுலினை சுரக்கும் வரை, ரத்த சர்க்கரை அளவு ஆரோக்கியமான வரம்பிற்குள் இருக்கும்.

இருப்பினும் இன்சுலினுக்கான செல் எதிர்ப்பு அதிகரித்தால், அது உயர் ரத்த குளுக்கோஸ் அளவுகளுக்கு வழிவகுக்கிறது. இது காலப்போக்கில் வகை 2 நீரிழிவு மற்றும் பிற மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.

·ஃபிராங்க்ளின் ஜோசப், பிரிட்டன் தேசிய சுகாதார சேவையில் ஆலோசகர் மருத்துவர் ஆவார். அவர் நாளமில்லா சுரப்பியியல், நீரிழிவு மற்றும் உள்உறுப்புகள் மருத்துவம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் Dr Frank's Weight Loss Clinic இன் நிறுவனரும் ஆவார். இன்சுலின் எதிர்ப்பு என்பது "மரபியல், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையால் ஏற்படும் ஒரு சிக்கலான நிலை" என்கிறார் அவர். சரியான காரணம் நபருக்கு நபர் மாறுபடலாம்.

இது உருவாவதற்கு பல காரணங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்:

 
இன்சுலின் எதிர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வயிற்று கொழுப்பு, "கெட்ட" கொழுப்பு என்று கருதப்படுகிறது. இது இன்சுலின் எதிர்ப்புடன் வலுவான தொடர்புடையது.

இன்சுலின் எதிர்ப்புக்கான காரணங்கள் என்னென்ன?
  • உடல் பருமன்: அதிகப்படியான உடல் கொழுப்பு, குறிப்பாக வயிற்று கொழுப்பு, "கெட்ட" கொழுப்பு என்று கருதப்படுகிறது. இது இன்சுலின் எதிர்ப்புடன் வலுவான தொடர்பை உடையது.
  • உடல் உழைப்பின்மை: வழக்கமான உடல் செயல்பாடு இல்லாதது இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிக்கும்.
  • மரபியல்: சிலர் மரபணு ரீதியாக இன்சுலின் எதிர்ப்புக்கு ஆளாகிறார்கள். மோசமான உணவு: பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்தீகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகள் நிறைந்த உணவு இன்சுலின் எதிர்ப்பிற்கு பங்களிக்கும். இந்த உணவுகள் ரத்த சர்க்கரையின் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது காலப்போக்கில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும்.
  • நாள்பட்ட மன அழுத்தம்: கார்டிசோல் போன்ற மனஅழுத்த ஹார்மோன்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினின் திறனில் தலையிடலாம். இன்சுலின் எதிர்ப்பிற்கு இதுவும் பங்களிக்கிறது.
  • தூக்கமின்மை: தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கம், இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை பாதிக்கும். தூக்கமின்மையானது ஹார்மோன் அளவை சீர்குலைத்து இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும்.
  • சில மருத்துவ நிலைமைகள்: பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்), குஷிங்ஸ் சிண்ட்ரோம் மற்றும் ஃபேட்டி லிவர் நோய் போன்ற நிலைமைகள் இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
  • முதுமை: வயதாகும்போது செல்கள் இன்சுலினின் சொல்படி கேட்பது குறையும். இது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும்.
 
இன்சுலின் எதிர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

"உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சாப்பிடாமல் இருப்பது ஆபத்தானது. அது உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்," என்கிறார் பேராசிரியர் வாசிம் ஹனிஃப்.

ரமலான் நோன்பு

ரமலான் மாதத்தில் பல இஸ்லாமியர்கள் காலை முதல் மாலை வரை நோன்பு நோற்பார்கள்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரிட்டன் தொண்டு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

"நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தங்கள் நீரிழிவு சிகிச்சை மருத்துவ குழுவுடன் கலந்துரையாடிய பின்னரே நோன்பு பற்றி முடிவுசெய்ய வேண்டும்,” என்று பர்மிங்காம் பல்கலைக்கழக மருத்துவமனையின் நீரிழிவு மற்றும் நாளமில்லாசுரப்பியியல் பேராசிரியரும், நீரிழிவு நோய்க்கான மருத்துவ இயக்குநருமான வாசிம் ஹனிஃப் கூறினார்.

"உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சாப்பிடாமல் இருப்பது ஆபத்தானது. அது உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்,"என்றார் அவர்.

இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளிடையே இன்சுலின் சென்ஸிடிவிட்டியை மேம்படுத்துகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று பேராசிரியர் ஜோசப் குறிப்பிட்டார்.

கூடுதலாக உண்ணா நோன்பு காலங்களில் சில நபர்களுக்கு எடை இழப்பு அல்லது உடல் கொழுப்பில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்கள் குறிப்பாக பருமனான நபர்களில்

இன்சுலின் சென்ஸிட்டிவிட்டி மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம்.

 
இன்சுலின் எதிர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

"ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கும் தனிநபர்கள், குறிப்பாக நீரிழிவு அல்லது பிற வளர்சிதை மாற்ற நிலைமைகள் உள்ளவர்கள், தங்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பது முக்கியம்."

”இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் மீது ரமலான் நோன்பின் விளைவு, வயது, பாலினம், ஏற்கனவே இருக்கும் உடல் பிரச்சனைகள், உணவுப் பழக்கம் மற்றும் உடல் செயல்பாடு அளவுகள் போன்ற காரணிகளைப் பொறுத்து நபருக்கு நபர் மாறுபடும்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

"ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கும் தனிநபர்கள், குறிப்பாக நீரிழிவு அல்லது பிற வளர்சிதை மாற்ற நிலைமைகள் உள்ளவர்கள், தங்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பது முக்கியம். நோன்பு காலத்தில் பாதுகாப்பான உண்ணாவிரத நடைமுறைகள் மற்றும் ஆரோக்கிய மேலாண்மையை உறுதி செய்வது முக்கியம். சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலை அவர்கள் பெறவேண்டும்."

" உடல்நல நன்மைகளை அதிகரிக்க, இண்டர்மிடெண்ட் (இடைப்பட்ட) ஃபாஸ்டிங் அல்லது முழு ஃபாஸ்டிங்கின் போது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம்" என்று அம்மானைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ரீம் அல்-அப்தாலத் கூறுகிறார்.

 
இன்சுலின் எதிர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த முறை ஃபாஸ்டிங் அனைவருக்கும் பொருந்தாது என்று எச்சரிக்கிறார் டாக்டர். நிதின் கபூர்

இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் நல்லதா?

இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது, பல மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பேசுகிறார்கள்.

பகலில் நீண்ட நேரம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது, உணவுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பது அல்லது ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் அல்லது அதற்கு மேல் சாப்பிடாமல் இருப்பது ஆகியவை இதில் அடங்கும்.

டாக்டர். நிதின் கபூர், தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழக மருத்துவமனையில் நாளமில்லா சுரப்பியல் (நீரிழிவு, உடல் பருமன் மற்றும் தைராய்டு போன்ற ஹார்மோன் கோளாறுகள் பற்றிய ஆய்வு) பேராசிரியராக உள்ளார்.

இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங்கால் வளர்சிதை மாற்ற நன்மைகள் இருப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன என்று அவர் தெரிவிக்கிறார்.

ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது என்று எச்சரிக்கும் அவர் பரிந்துரைக்கப்பட்ட எந்த டயட்டும் நோயாளியை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். எந்த வகையான உணவு அல்லது உண்ணாவிரதத்திலும், "நீண்ட கால நிலைத்தன்மையை" அவர் கோடிட்டுக்காட்டுகிறார்.

"உங்கள் வாழ்நாள் முழுவதும் இதைச் செய்ய முடியுமா?.நீங்கள் 15 பவுண்டுகளை இழக்க விரும்பலாம். ஆனால் நீங்கள் டயட்டிங்கை நிறுத்தினால் அது ஆவேசத்துடன் திரும்பி வரும்."

இந்த வகை டயட் பற்றிய ஆராய்ச்சி இன்னும் வளர்ந்து வருகிறது என்றாலும் இது இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை மேம்படுத்த உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன என்று பேராசிரியர் ஜோசப் குறிப்பிட்டார்.

"உதாரணமாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை மாற்றாமல் உடல் பருமன் இல்லாதவர்களில் இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை மேம்படுத்துகிறது என்பதை 2015 இல் செல் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது."

இண்டர்மிடெண்ட் ஃபாஸ்டிங் எடை இழப்புக்கு வழிவகுக்கும். இது மேம்பட்ட இன்சுலின் சென்ஸிட்டிவிட்டி மற்றும் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையது.

 
இன்சுலின் எதிர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இன்சுலின் எதிர்ப்பு இருப்பவர்களுக்கு பசி அதிகரிப்பு, சோர்வு, உடல் எடையை குறைப்பதில் சிரமம், கருமையான தோல் புள்ளிகள் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.

இன்சுலின் எதிர்ப்பு அறிகுறிகள்

இன்சுலின் எதிர்ப்பின் ஆரம்ப அறிகுறிகள் அல்லது எச்சரிக்கை அறிகுறிகள் அவ்வளவு வெளிப்படையாக இருக்காது. ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்தாது.

இருப்பினும், இன்சுலின் எதிர்ப்பு இருப்பதைக் குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன.

பசி அதிகரிப்பு, சோர்வு, உடல் எடையை குறைப்பதில் சிரமம், கருமையான தோல் புள்ளிகள் (குறிப்பாக கழுத்து, அக்குள் அல்லது இடுப்பைச் சுற்றி), உயர் ரத்த அழுத்தம், உயர் ட்ரைகிளிசரைடு அளவுகள் (கொழுப்பின் மோசமான வடிவம்), குறைந்த HDL கொழுப்பு ( நல்ல வடிவம்), மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) ஆகியவை இந்த அறிகுறிகளில் அடங்கும் என்று பேராசிரியர் ஜோசப் சுட்டிக்காட்டினார்.

இன்சுலின் எதிர்ப்பு, வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தினால் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தால் அந்த நபருக்கு மற்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று அவர் கூறுகிறார்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம் மற்றும் மங்கலான பார்வை ஆகியவை இதில் அடங்கும்.

இந்த அறிகுறிகளும் நபருக்கு நபர் மாறுபடும். மேலும் இன்சுலின் எதிர்ப்பு உள்ள அனைவருக்கும் இந்த எல்லா அறிகுறிகளும் இருக்காது என்று என்று அவர் வலியுறுத்துகிறார்.

"கூடுதலாக, இந்த அறிகுறிகள் மற்ற சுகாதார நிலைமைகளையும் குறிக்கலாம், எனவே சரியான மதிப்பீட்டிற்கு ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது முக்கியம்,” என்றார் ஜோசப்.

"டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற சிக்கல்களைத் தடுக்க இன்சுலின் எதிர்ப்பை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மேலாண்மை முக்கியம்".

 
இன்சுலின் எதிர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இன்சுலின் எதிர்ப்பைக் கொண்ட சுமார் 70-80% பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன என்கிறார் பேராசிரியர் ஜோசப்.

மிகவும் கடுமையான நிலைமைகளுக்கு இது வழிவகுக்கும் சாத்தியகூறு என்ன?

இன்சுலின் எதிர்ப்பைக் கொண்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்கப் படாவிட்டால் அல்லது நிர்வகிக்கப்படாவிட்டால் அவர்களில் சுமார் 70-80% பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன என்கிறார் பேராசிரியர் ஜோசப்.

"ஆனால் இது மரபியல், உடல் பருமன், உடல் செயல் தன்மை, உணவு, வயது மற்றும் இனம் போன்ற பல காரணிகளைச் சார்ந்துள்ளது.”

"சில இனக்குழுக்கள் குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு காகசியர்களை ஒப்பிடும்போது வகை 2 நீரிழிவு நோய் உருவாக்கும் அதிக ஆபத்து உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

 
கிளைசெமிக் அமைப்பு என்றால் என்ன?

கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளில் ஏற்படும் தாக்கத்தின் அடிப்படையில் உணவுகளை வகைப்படுத்த பயன்படும் ஒரு அமைப்பாகும். நாம் உண்ணும் உணவு ரத்த சர்க்கரையின் அளவை, விரைவாகவோ, மிதமாகவோ அல்லது மெதுவாகவோ அதிகரிக்கச் செய்கிறது என்பதை இது காட்டுகிறது.

மெதுவாக உடைபடும் கார்போஹைட்ரேட்டுகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதில் சில காய்கறிகள், பழங்கள், இனிப்பு சேர்க்காத பால், பருப்பு வகைகள், முழு தானிய ரொட்டி மற்றும் முழு தானியங்கள் ஆகியவை அடங்கும். மறுபுறம், சர்க்கரை, சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள், வெள்ளை உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளை அரிசி ஆகியவை உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகள். இது ரத்த சர்க்கரையின் விரைவான அதிகரிப்புக்கு காரணமாகிறது.

இருப்பினும், ஒரு குறிப்பிட்ட உணவு ஆரோக்கியமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க கிளைசெமிக் குறியீடு மட்டும் போதாது என்பது கவனிக்கத்தக்கது. உதாரணமாக, பெரும்பாலான சாக்லேட் வகைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் கலோரிகள் அதிகம்.அதே நேரம் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் ஆரோக்கியமற்றவை அல்ல. எடுத்துக்காட்டாக, தர்பூசணி போன்ற சில பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை நன்மை தரக்கூடியவை. எனவே, உணவு ஆரோக்கியமானதாகவும், சீரானதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

 
இன்சுலின் எதிர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற தொடர்புடைய நிலைமைகளைக் குறைக்க உதவுகின்றன.

இன்சுலின் எதிர்ப்பு குணமாகக்கூடியதா?

"வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மருந்துகளின் மூலம் இன்சுலின் எதிர்ப்பை பெரும்பாலும்

மாற்றியமைக்க முடியும். அல்லது குறைந்தபட்சம் கணிசமாக மேம்படுத்த முடியும்" என்கிறார் பேராசிரியர் ஜோசப்.

”இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும். கூடவே மாவுச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைக்க வேண்டும்." என்று ஊட்டச்சத்து நிபுணர் ரீம் அல்-அப்தாலத் குறிப்பிட்டார். ஜோசப் மற்றும் அல்-அப்தாலத் இருவரும் வழங்கிய இரண்டாவது அறிவுரை, வழக்கமான உடற்பயிற்சியை பராமரிக்க வேண்டும் என்பதுதான். எடையை குறைப்பது, குறிப்பாக வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைப்பது இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை மேம்படுத்தலாம்.

நாள்பட்ட மன அழுத்தத்தை குறைப்பதும் முக்கியமானது என்று பேராசிரியர் ஜோசப் கூறுகிறார். "தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது இயற்கையுடன் நேரத்தை செலவிடுதல் போன்ற நுட்பங்கள் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்க ஆரோக்கியமான வழிகளைக் கண்டறிவது நன்மை பயக்கும்," என்றார் அவர்.

போதுமான அளவு தூங்குவதும் மிகவும் முக்கியம்.

இறுதியாக, மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற தொடர்புடைய நிலைமைகளைக் குறைக்க உதவுகின்றன.

மருந்து உதவுமா என்பதைத் தீர்மானிக்க மருத்துவ ஆலோசனையைப் பெறவேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/cd1786jrzj2o

காலை உணவு எல்லோருக்கும் அவசியமா? அரசனைப் போல சாப்பிட்டால் என்ன ஆகும்?

2 weeks ago
காலை உணவு எல்லோருக்கும் அவசியம் தானா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 ஏப்ரல் 2024, 02:26 GMT

“இந்த உலகில் ஒருவர் தவிர்க்கவே கூடாத உணவு என்றால் அது காலை உணவு தான். காலை உணவை ஒரு அரசன் உண்பது போல அதிகமாக உண்ண வேண்டும்”, இது போன்ற வாசகங்களை சில இடங்களில் படித்திருப்போம் அல்லது யாரேனும் சொல்லக் கேட்டிருப்போம்.

ஆனால் பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் ஒரு அரசன் உண்பது போல காலை உணவுகளை உண்ண நேரம் இல்லை அல்லது அவ்வாறு உண்டு விட்டு அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளில் சென்று அமர்ந்தால் வேலை எங்கே நடக்கிறது, வகுப்பை எங்கே கவனிக்க முடிகிறது, தூக்கம் தான் வருகிறது என்று சொல்லி பலர் காலை உணவை தவிர்ப்பதையும் பார்க்கிறோம்.

அதேவேளையில் காலை உணவைத் தொடர்ந்து தவிர்த்து வந்தால் அல்சர் போன்ற பிரச்னைகள் வரும், உடல்பருமன் ஏற்படும், அந்த நாள் முழுவதும் சோர்வாக உணர்வீர்கள், முக்கியமாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு காலை உணவு அவசியம் என்ற எதிர்தரப்பு வாதமும் உள்ளது.

தமிழ்நாடும் அரசும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருவதைப் பார்க்கிறோம். அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் 17 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள் என்கிறது தமிழ்நாடு அரசு.

காலை உணவைத் தவிர்த்தால் உடலில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? ஒரு சிறந்த காலை உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? காலை உணவு என்பது அவசியம் தானா? தினமும் இட்லி, தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாமா? போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

 
காலை உணவு எல்லோருக்கும் அவசியம் தானா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தொழில் புரட்சிக்குப் பிறகு காலை உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே அதிகரித்தது.

காலை உணவின் வரலாறு

“ஆங்கிலத்தில் ‘Break the Fast’ (விரதத்தை முறித்தல்) என்று கூறுவார்கள். இரவு உணவுக்குக்கும் காலை உணவுக்குக்கும் 8 முதல் 10 மணிநேரம் வரை இடைவெளி இருக்கும். அந்த விரதத்தை முறித்து உண்பதால் தான் Breakfast என்று பெயர்” என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்.

“விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் இந்தக் காலை உணவு உண்ணும் வழக்கம் மனிதர்களிடம் ஏற்பட்டது. அப்போது கூட குழந்தைகள், முதியவர்கள், கடின வேலையுடன் நாளை தொடங்குபவர்கள் மட்டுமே காலை உணவை எடுத்துக்கொண்டனர். பலரும் ஒரு நாளின் முதல் உணவை மதிய நேரத்தில் தான் எடுத்துக் கொண்டார்கள்."

"தொழில் புரட்சிக்குப் பிறகு இந்த வழக்கம் மாறியது. காரணம் ஷிஃப்ட் முறையிலான வேலை தொழிற்சாலைகளில் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. தினமும் எட்டு மணிக்கு வேலைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக காலை உணவு சாப்பிடாமல் மதியம் வரை பணி செய்ய முடியாது."

"ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்றவாறு இந்த காலை உணவு மாறியது. இவ்வாறு தான் காலை உணவை அனைவரும் உண்ணும் வழக்கம் வந்தது. இதைத் தொடர்ந்து காலை உணவுக்கென்று ஒரு தனி சந்தையே உருவானது” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்றும் கூட பல நாடுகளில் காலை உணவாக குறைவான மாவுச் சத்துடைய எளிய உணவுகளையே எடுத்துக்கொள்கிறார்கள். மதிய வேளை தான் மாவுச் சத்து சற்று கூடுதலான உணவுகள் எடுத்துக் கொள்கிறார்கள். காலை வேளையில் மாவுச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளலாம் தான் ஆனால் ஒவ்வொரு நபரைப் பொறுத்தும் அவர் பார்க்கும் வேலையைப் பொறுத்தும் அளவு மாறுபடும்” என்று கூறினார்.

 
காலை உணவு எல்லோருக்கும் அவசியம் தானா

பட மூலாதாரம்,DRARUNKUMAR/FACEBOOK

படக்குறிப்பு,

குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்.

சிறந்த காலை உணவு என்றால் என்ன?

காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான் அன்று நாள் முழுக்க நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் என்பதால், காலை உணவு அதிகமாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்படுவது சரியா, ஒரு சிறந்த காலை உணவில் என்னென்ன இடம்பெற வேண்டுமென மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம்.

“எல்லோருக்கும் அவ்வாறு பொதுவாகச் சொல்லிவிட முடியாது. முதலில் ஒருவருக்கு உடல்பருமன், நீரிழிவு மற்றும் வேறு ஏதேனும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் இல்லை என்றால் அவர்களுக்கான சிறந்த காலை உணவு என்பது இரண்டு விஷயங்களைப் பொறுத்து மாறுபடும்.

ஒன்று அவர்களது வேலைப் பளுவைப் பொறுத்து. உடலுழைப்பு இருக்கும் வேலை செய்பவர் என்றால் மாவுச் சத்து உள்ள உணவுகளான இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி போன்றவற்றை நன்றாக எடுத்துக்கொள்ளலாம். அதனுடன் சேர்த்து புரதத்திற்காக முட்டை, நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். இதுவே போதுமானது.

இதுவே உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் வேலையிலும் அன்றாட வாழ்விலும் உடலுழைப்பு அதிகம் இல்லை என்றால் மாவுச்சத்து கொண்ட உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உடலுழைப்பு அதிகம் இல்லாத போது, அடுத்து ஒரு 4 முதல் 5 மணிநேரங்களில் மதிய உணவு எடுத்துக்கொள்வார்கள் என்பதால் உடலில் போதுமான சக்தி இருக்கும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

காலை உணவு எல்லோருக்கும் அவசியம் தானா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீரிழிவு, உடல் பருமன் உள்ளவர்களுக்கான காலை உணவு.

நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் காலையில் மாவுச் சத்து குறைவான உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார் மருத்துவர் அருண்குமார்.

“அவர்கள் நட்ஸ், இரண்டு முட்டைகள், சுண்டல், போன்ற மாவுச் சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் அவர்களது உடலில், இரவுக்கு பின் கிடைத்த நீண்ட இடைவெளியால் இன்சுலின் அளவு கட்டுப்பாடோடு இருக்கும், கொழுப்பு கரையும் செயல்பாடும் நடந்துகொண்டிருக்கும். அவர்கள் காலையில் அதிகளவு மாவுச் சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால், இந்த செயல்பாடுகள் நின்றுவிடும். இதனால் நீரிழிவு பிரச்னையும், உடல் பருமனும் மேலும் அதிகரிக்கும்” என்று கூறுகிறார் மருத்துவர்.

 
காலை உணவு எல்லோருக்கும் அவசியம் தானா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பழைய சாதத்தை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாமா?

பழைய சாதத்துடன் சிறிது தயிர் கலந்து சின்ன வெங்காயம், வடாம் அல்லது வற்றல் கொண்டு சாப்பிடுவது தமிழ்நாட்டில் பலருக்கும் பிடித்தமான காலை உணவு.

மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கும் போது, லாக்டோபாசிலஸ் என்ற பாக்டீரியா உற்பத்தி ஆகி நொதித்தல் செயல்முறை நடந்து புரோபயாட்டிக் உணவாக மாறுவது தான் பழைய சாதம். இதை காலை உணவாக எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதா என மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம்.

“பழைய சாதத்தை காலை உணவாக எடுத்துக்கொள்வது கண்டிப்பாக உடலுக்கு நல்லது தான். காரணம் அதில் புரோபயாட்டிக் எனும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். ஆனால் அதை எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம். அன்றாட வாழ்வில் அதிக உடலுழைப்பு இல்லாத வேலைகள் செய்பவர்கள் மிகக்குறைவாகவே அதை உண்ண வேண்டும்.

ஒரு சிறிய கிண்ணம்ம் அளவு பழைய சாதம் போதும். ஆனால் அதுவே விவசாயம் செய்பவர்கள், தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்பவர்கள் என்றால் திருப்தியாகவே காலை உணவாக பழைய சாதத்தை உண்ணலாம். இதே தான் இட்லி, தோசை, போன்ற உணவுகளுக்கும். அதிகளவு காலை உணவு உடலுக்கு தேவையில்லை” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

காலை உணவு எல்லோருக்கும் அவசியம் தானா
படக்குறிப்பு,

ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி.

காலை உணவைத் தவிர்த்தால் என்னவாகும்?

காலை உணவை கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது என்று சொல்வதற்கான காரணம் மற்றும் அதைத் தொடர்ந்து தவிர்த்து வருபவர்களுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரியிடம் கேட்டோம்,

“ஒரு நாளை ஆரோக்கியமாகத் தொடங்குவதற்கு காலை உணவு மிகவும் அத்தியாவசியமானது. காலை உணவில் 60 சதவிகிதம் வரை மாவுச் சத்து இருக்கலாம். அதன் பிறகு புரதங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். கொழுப்பு மிகக் குறைவு. உதாரணமாக, இட்லி, காய்கறிகள் மற்றும் பருப்புடன் கூடிய சாம்பார் ஒரு நல்ல காலை உணவு. எத்தனை இட்லிகள் என்பது அவரவர் உடல் எடை, உயரம் மற்றும் உடலுழைப்பைப் பொறுத்து மாறுபடும்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி.

“சிலர் இரவு உணவை அதிகமாக எடுத்துக்கொண்டு, காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள். இது மிகவும் தவறு. உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அல்சர் ஏற்பட வாய்ப்புண்டு. உடலின் சர்க்கரை அளவு குறையும். இதனால் நமது முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும்."

"அதிலும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக காலை உணவு கொடுக்க வேண்டும். காலை உணவைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு கற்றல் திறன் கூடுகிறது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன” என்கிறார் அவர்.

 
காலை உணவு எல்லோருக்கும் அவசியம் தானா

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலை உணவுக்கான சிறந்த நேரம் எது?

அதே வேளையில் காலை உணவு என்ற பெயரில் எல்லா உணவு வகைகளையும் உட்கொள்ளக்கூடாது என எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி.

“எண்ணெயில் பொரித்த உணவுகள், பூரி, சோலே பட்டூரே போன்றவை, அதிக மசாலா உடைய உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். காலை உணவில் அசைவம் குறைவாக எடுக்க வேண்டும்” என்கிறார் அவர்.

அரிசி உணவுகளை விட ஓட்ஸ் எடுத்துக்கொள்வது நல்லதா என கேட்டபோது, “ஓட்ஸ் நல்லது தான். ஓட்ஸ் உடன் சேர்த்து, நட்ஸ், பால், பழங்களை சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது மாவுச் சத்து, புரதம், வைட்டமின்கள் என அனைத்தும் கிடைக்கும். ஆனால் அதை விட சிவப்பு அவல், சிறுதானியங்களை இதே முறையில் எடுத்துக்கொள்வது இன்னும் நல்லது” என்றார்.

காலை உணவு எடுத்துக்கொள்ள சிறந்த நேரம் எதுவென கேட்டபோது, “தூங்கி எழுந்து இரண்டு மணிநேரங்களுக்குள் எடுத்துக்கொள்வது நல்லது. பதினோரு மணிக்கு மேல் எடுத்துக்கொள்வது காலை உணவே இல்லை” என்றார்.

“முக்கியமான விஷயம், காலை உணவைத் தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை எடுத்துக்கொள்ளும்போது அதீத பசியில் அதிகளவு உணவு உண்பார்கள். நாளடைவில் இது உடல் பருமனுக்கு வித்திடும். எனவே காலை உணவு என்பது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமானது, அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி.

https://www.bbc.com/tamil/articles/ck5w6p0ej0xo

உணவில் எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும்? அதிகமாக சேர்ப்பதால் என்ன பிரச்னை?

2 weeks 1 day ago
உடல்நலம்: ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்? அதிகமாக எடுத்தால் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கிறிஸ்டோஃபர் டேமன்
  • பதவி, தி கான்வர்சேஷன்
  • 45 நிமிடங்களுக்கு முன்னர்

நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே உணவை பதப்படுத்தவும், பாதுகாக்கவும், சுவையை மேம்படுத்தவும் மக்கள் உப்பைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பண்டைய ரோமில், வணிகத்தில் உப்பு மிக முக்கிய இடத்தை வகித்தது. உதாரணத்திற்கு ரோமானிய படை வீரர்களுக்கு சம்பளமாக உப்பு தான் வழங்கப்பட்டது.

உணவில் தேவையற்ற நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்தி, தேவையான நுண்ணுயிரிகளை வளர அனுமதித்து பதப்படுத்தியாக உப்பு இருக்கிறது.

பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் இந்த குறிப்பிடத்தக்க திறன் காரணமாகத்தான் ஊறுகாய் முதல் சீஸ் வரை பல உணவுகளில் உப்பு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இன்று, உப்பு நம் உணவெங்கும் நிறைந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவு உப்பு பயன்படுத்தப்படுகிறது.

அதிகப்படியான உப்பு காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.

உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கு அதிகப்படியான உப்பு வழிவகுக்கிறது. வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய், மெனியர் நோய், ஆஸ்டியோபோரோசிஸ், உடல் பருமன் போன்றவற்றை உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையது.

ஒரு காலத்தில் தங்கத்தின் எடைக்கு மதிப்புள்ளதாகக் கருதப்பட்ட ஒரு பொருள், எப்படி நோய்களுக்கான காரணியாக மாறியது?

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் குடலியல் மருத்துவர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி என்ற முறையில், உப்பு எப்படி நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பதற்கான ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 
உடல்நலம்: ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்? அதிகமாக எடுத்தால் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் சோடியத்தின் பங்கு அதிகம். ஏனெனில், சோடியம் ரத்த நாளங்களில் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

எளிமையான சொல்ல வேண்டும் என்றால், ரத்தத்தில் சோடியம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு தண்ணீரை அது ரத்த நாளங்களுக்குள் ஈர்க்கிறது.

இது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

ரத்த அழுத்தத்தில் உப்பு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பலர் உணராமல் இருக்கலாம்.

உப்பு, குடல் நுண்ணுயிரியை மாற்றியமைப்பதன் மூலம், ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.

ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் மற்றும் நார்ச்சத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் முக்கிய வளர்சிதை மாற்றங்களை உப்பு குறைக்கிறது.

இந்த வளர்சிதை மாற்றங்கள் ரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைத்து, அவற்றைத் தளர்வாக வைத்திருக்கின்றன. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

 
உடல்நலம்: ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்? அதிகமாக எடுத்தால் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாள் ஒன்றுக்கு எவ்வளவு உப்பு தேவை?

ஹாலோஃபில்ஸ் என்று அழைக்கப்படும் உப்பில் செழித்து வளரும் சில நுண்ணுயிரிகளைத் தவிர, அதிகளவு உப்பு கிட்டத்தட்ட தேவையான எல்லா நுண்ணுயிரிகளையும் நச்சுத்தன்மையடையச் செய்யும்.

அதனால்தான் உணவைப் பாதுகாக்கவும், தேவையற்ற பாக்டீரியாவைத் தடுக்கவும் மக்கள் நீண்ட காலமாக உப்பைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் நவீன உணவுகளில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமாக உள்ள இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 2,000 மில்லிகிராமுக்கும் குறைவாகவே உப்பு தேவைப்படுகிறது.

உலகளவில் சராசரியாக உட்கொள்ளப்படும் உப்பின் அளவான 4,310 மில்லிகிராம் சோடியம், குடலில் உள்ள உப்பின் அளவை ஆரோக்கியமான அளவை விட உயர்த்தலாம்.

உடல் பருமன்

சோடியம் ரத்த அழுத்தத்தைத் தவிர மற்ற உடல்நல பிரச்னைகளுடனும் தொடர்புடையது.

அதிக சோடியம் நிறைந்த உணவுகள் மற்றும் மலத்தில் அதிகளவு சோடியம் ஆகியவை வளர்சிதை மாற்றக் கோளாறுகளுடன் தொடர்புடையவை ஆகும். இதில், ரத்த சர்க்கரை, கல்லீரல் வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவை அடங்கும்.

தினமும் அதிகப்படியாக எடுக்கும் ஒவ்வொரு கிராம் சோடியமும், உடல் பருமன் ஏற்படுவதற்கான அபாயத்தை 15 சதவிகிதம் அதிகரிக்கும் என ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை 500 கலோரிக்கும் அதிகமாக உட்கொண்டவர்களை, குறைவான சோடியம் கொண்ட உணவுகளை உண்பவர்களுடன் ஒப்பிடும்போது 1 கிலோ எடை அதிகமாக இருப்பதாக, அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதில், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்டவர்கள் கூடுதலாக 1.2 கிராம் சோடியத்தை உட்கொண்டனர்.

கலோரிகள் அதிகரிக்காவிட்டாலும் உப்பை மட்டும் அதிகமாக சேர்ப்பது ஏன் உடல் எடையை அதிகரிக்கிறது? ஏனெனில், சோடியம் ஓர் உணவின் மீதான ஆர்வத்தை (craving) அதிகரிக்கிறது.

 
உடல்நலம்: ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்? அதிகமாக எடுத்தால் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நுண்ணுயிர் வளர்சிதை மாற்றங்கள் எடை இழப்பு மருந்துகளான விகோவி (Wegovy) மற்றும் ஓஸெம்பிக் (Ozempic), குடல் ஹார்மோன் GLP-1 இன் இயற்கையான வெளியீட்டைத் தூண்டுகிறது.

GLP-1 மூலம், ஒரு ஆரோக்கியமான நுண்ணுயிர், பசி, ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஆற்றலை எரிக்க அல்லது கொழுப்பாக சேமித்து வைப்பதற்கான உடலின் முடிவை கட்டுப்படுத்த முடியும். அதிகப்படியான உப்பு இந்த விளைவுகளில் தலையிடலாம்.

வளர்சிதை மாற்ற நோய்களில், குடலில் இருந்து பெறப்பட்ட கார்டிகோஸ்டீராய்டுகளின் அதிகரிப்பு மற்றும் பிரக்டோஸ் எனப்படும் சர்க்கரை ஆகியவை கொழுப்பு திரட்சிக்கு வழிவகுக்கும்.

உப்பை குறைக்கும் நாடுகள்

பல நாடுகள் உப்பை குறைக்கும் முயற்சிகளை செயல்படுத்தி வரும் நிலையில், உலகின் பெரும்பாலான பகுதிகளில் சோடியம் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, அமெரிக்கா உணவில் உப்பைக் குறைப்பதில் தொடர்ந்து பின்தங்கியுள்ளது. அதேநேரத்தில், உணவு பாக்கெட்டுகளில் உப்பு குறித்த தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உப்பு வரி போன்ற நடவடிக்கைகளால், பல ஐரோப்பிய நாடுகள் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் குறைவான இறப்புகள் போன்ற பலன்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளன.

நாடுகளுக்கிடையேயான துரித உணவுப் பொருட்களுக்கான ஊட்டச்சத்து தரவுகளின் ஒப்பீடு கணிசமான மாறுபாட்டை வெளிப்படுத்துகிறது.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் மெக்டொனால்ட் ‘சிக்கன் நக்கெட்ஸ்’, கோகோ-கோலா போன்றவற்றில் அதிக உப்பு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு அதிகப்படியான உப்பு மற்ற நாடுகளில் இதே உணவுகளில் இல்லை.

 
உடல்நலம்: ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்? அதிகமாக எடுத்தால் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவில் உப்பு தொழில் இந்த விஷயத்தில் பங்கு வகிக்கிறது.

உப்பு நிறைந்த உணவுகள் அங்கு நன்றாக விற்கின்றன.

ஆனால் ஒட்டுமொத்த உணவில் உப்பைக் குறைக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.

2021 ஆம் ஆண்டில், அமெரிக்க வேளாண் துறை வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பை தன்னார்வமாக படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று தொழில்துறைக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது.

சால்ட் இன்ஸ்டிடியூட் 2019 இல் கலைக்கப்பட்டது. சில உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் உணவில் உப்பைக் குறைக்க ஒப்புக்கொண்டன.

சமச்சீர் உணவுகள்

உப்பை அதிகமாக உட்கொள்வதை எப்படி குறைப்பது?

இதை மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொடங்க வேண்டும்: உப்பு நிறைந்த இறைச்சிகள் (துரித உணவு போன்றவை), உப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகள் (சிப்ஸ் போன்றவை), மற்றும் உப்பு நிறைந்த தின்பண்டங்கள் (சோடாக்கள் மற்றும் ரொட்டி போன்றவை) ஆகியவற்றை குறைக்க வேண்டும்.

தற்போது, அமெரிக்க உணவில் உள்ள உப்பில் 70% வரை பாக்கெட் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து உட்கொள்ளப்படுகிறது.

அதற்கு பதிலாக, குறைந்த சோடியம் மற்றும் சர்க்கரை, அதிக பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளில் கவனம் செலுத்துங்கள், அதாவது பதப்படுத்தப்படாத தாவர உணவுகளான பீன்ஸ், கொட்டை வகைகள், விதைகள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

புளித்த உணவுகள், பொதுவாக சோடியம் அதிகமாக இருக்கும் போது, அதிக அளவு குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, பாலிபினால்கள் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் காரணமாக ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்.

இறுதியாக, உணவில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் சமநிலையை கருத்தில் கொள்ளுங்கள். சோடியம் ரத்த நாளங்களில் திரவத்தை வைத்திருக்க உதவுகிறது, பொட்டாசியம் செல்களில் திரவத்தை வைக்க உதவுகிறது.

சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை சீரான விகிதத்தில் சிறந்த முறையில் உட்கொள்ளப்பட வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/cxxz5dz460jo

வெள்ளைச் சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரையும் கருப்பட்டியும் சிறந்தவை என்பது உண்மையா? - நிபுணர்கள் கூறுவது என்ன?

3 weeks ago
சர்க்கரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டின் பல தேநீர் கடைகளில் ‘இனிப்பு அதிகமாக போடுங்கள்’ என்று சொல்பவர்களின் முகத்தில் அல்லது சொல்லும் தொனியில் ஒரு மெல்லிய கர்வம் தென்படும். எனக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை அல்லது நான் அதிகமாக இனிப்பு சாப்பிடுவேன், ஆனால் என் உடலுக்கு ஒன்றும் ஆகாது என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக அது இருக்கும்.

அதுவே நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி கலந்த தேநீராக இருந்தால் இன்னும் மனநிறைவுடன் வாங்கிப் பருகுவார்கள். சாதாரண தேநீரை விட விலை அதிகமாக இருந்தாலும், வெள்ளைச் சர்க்கரை என்றால் தானே பிரச்னை, நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி என்றால் உடலுக்கு நல்லது, இதை தாராளமாக குடிக்கலாம் என்ற எண்ணம் தான் காரணமாக இருக்கும்.

அதே சமயத்தில், உடல் எடை குறித்து அதிகம் கவலைக் கொள்பவர்கள் சர்க்கரை சேர்த்த உணவு என்றாலே சற்று விலகி நிற்பார்கள். கொஞ்சம் கூட சர்க்கரை சேர்த்துக்கொள்ள மாட்டேன், ஒரு கிராம் சர்க்கரை எடுத்தால் கூட ஒரு கிலோ உடல் எடை கூடிவிடும் என்பது போல ஒரு அச்ச உணர்வு அவர்களுக்கு இருக்கும்.

உணவில் அல்லது பானங்களில் சேர்க்கப்படும் இனிப்பு குறித்து அனைவரிடமும் பொதுவாக எழும் சில கேள்விகள், வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்று தான் நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, தேனா?

தினமும் எவ்வளவு வெள்ளைச் சர்க்கரை சேர்த்துக்கொண்டால் பிரச்னை இல்லை அல்லது எடை கூடாது? இனிப்பை முழுதாக தவிர்த்துவிட்டால் உடலுக்கு நல்லது தானா? இத்தகைய கேள்விகளுக்கான பதில் தான் இந்தக் கட்டுரை.

 
சர்க்கரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்க்கரை என்றால் என்ன?

“சர்க்கரை என்றாலே நம் கண் முன் கலக்கப்படும் வெள்ளைச் சர்க்கரை அல்லது கடைகளில் இருக்கும் இனிப்பு பொருட்கள், சாக்லேட்டுகள் என்று தான் நினைக்கிறோம். ஆனால் காலையில் உண்ணும் இட்லியில் இருந்து தோசை, சாதம் என அனைத்திலும் சர்க்கரை உள்ளது” என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்.

“சர்க்கரை என்றாலே அடிப்படையில் அது சுக்ரோஸ் தான். குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் கலந்தது தான் இந்த சுக்ரோஸ். நாம் வழக்கமாக சாப்பிடும் இட்லி, தோசை, சிறு தானியங்களில் இருப்பது தான் குளுக்கோஸ். உடலுக்கு ஆற்றல் தருவது இந்த குளுக்கோஸ் தான். ஆனால் அதனுடன் இருக்கும் பிரக்டோஸ் தான் சிக்கலே.

ஏனென்றால் சர்க்கரையில் இருக்கும் குளுக்கோஸ் உடலில் எளிதாக கரைந்து ஆற்றலாக மாறும். ஆனால் பிரக்டோஸ் என்பது கல்லீரலுக்கு சென்று அங்கிருந்து ஆற்றலாக மாற்றப்படும். எனவே அதிகமாக இனிப்பு அல்லது சர்க்கரையை எடுத்துக் கொள்ளும்போது, அதை ஆற்றலாக மாற்ற முடியாமல் கல்லீரல் திணறும். அப்போது பிரக்டோஸ் கொழுப்பாக கல்லீரலில் படிந்து விடும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

நாட்டுச் சர்க்கரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடர்ந்து பேசிய அவர், “இவ்வாறு படியும் கொழுப்பு, ரத்தத்திலும் கலந்து விடும். எனவே தான் உலக சுகாதார நிறுவனம் ஒரு நாளுக்கு 25 கிராமுக்கு (5 ஸ்பூன் அளவு) மேல் சர்க்கரை எடுத்துக்கொண்டால் ஆபத்து என பரிந்துரைக்கிறது. உடனே பலர் நினைக்கலாம், நான் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் சர்க்கரை தானே தேநீரில் கலந்து குடிக்கிறேன், எனவே பிரச்னை இல்லை என.

ஆனால் முன்னர் சொன்னது போல, பல உணவுப் பொருட்களில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ சர்க்கரை உள்ளது. எனவே அதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் சேர்த்து தான் 25 கிராம் சர்க்கரை என்று சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். எனவே முடிந்தளவு நேரடி சர்க்கரையை குறைத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

 
மதுவை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சர்க்கரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றா நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, தேன்?

பலரும் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக முன்வைக்கிறார்கள். அதில் செய்யப்படும் இனிப்புகள் அல்லது பலகாரங்களை, மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கவும் செய்கிறார்கள். உண்மையில் நாட்டுச் சர்க்கரை உடலுக்கு நல்லதா என ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி பஜாஜிடம் கேட்டோம்.

“வெள்ளைச் சர்க்கரையோ, நாட்டுச் சர்க்கரையோ, தேனோ அல்லது பனை வெல்லமோ, எல்லாமே மாவுச் சத்து தான். 1 கிராம் மாவுச்சத்தில் 4 கலோரிகள் உள்ளது. இது பொதுவானது. ஆனால் சத்துக்கள் என்று பார்த்தால் வெள்ளைச் சர்க்கரைக்கும் வெல்லத்திற்கும் வித்தியாசம் உள்ளது. வெல்லத்தில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. இதனால் தான் குழந்தைகளுக்கு வெள்ளைச் சர்க்கரையை விட வெல்லம் கொடுப்பது நல்லது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி.

தொடர்ந்து பேசிய அவர், “கிளைசிமிக் இன்டெக்ஸ் (Glycemic index) என்ற ஒரு குறியீடு உள்ளது. அதாவது ஒரு உணவை எடுத்துக்கொள்ளும்போது, நம் உடலின் சர்க்கரை அளவு எவ்வளவு கூடுகிறது என்பதன் குறியீடு. கருப்பட்டி எடுத்துக்கொள்ளும்போது உடலில் சர்க்கரை அளவு அதிகம் உயராது. அப்போது கிளைசிமிக் இன்டெக்ஸ் 35 ஆக இருக்கும்."

"ஆனால் வெள்ளைச் சர்க்கரை எடுத்துக்கொண்டால் 60 ஆக இருக்கும், இது மிகவும் அதிகம். எனவே இந்த விதத்தில் பார்த்தால் கருப்பட்டி நல்லது தான். தேனும் அப்படிதான், உடலின் சர்க்கரை அளவை அதிகமாக பாதிக்காது. மேலும் வெல்லத்தை விட கருப்பட்டியில் இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. இதுதான் வித்தியாசம். மற்றபடி எந்தவகை சர்க்கரை என்றாலும் அதிகமானால் ஆபத்து தான்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி.

இதுகுறித்து பேசிய மருத்துவர் அருண்குமார், வெள்ளைச் சர்க்கரைக்கு, நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி ஒருபோதும் மாற்று இல்லை எனக் கூறுகிறார்.

“கரும்பிலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, 100% சுக்ரோஸுடன் வருவது தான் வெள்ளைச் சர்க்கரை. அதுவே நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் என்றால், 90 முதல் 92% சுக்ரோஸ் இருக்கும். கருப்பட்டி என்றால் 85 முதல் 90% சுக்ரோஸ், தேன் என்றால் 80%. எனவே மக்கள் நினைப்பது போல பெரிய வித்தியாசம் இல்லை."

"நாட்டுச் சர்க்கரையில் இனிப்பு சுவை குறைவாக இருக்கும். எனவே ஒரு ஸ்பூன் வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டிய இடத்தில் 2 அலலது 3 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை போடுவார்கள். அது மிகவும் ஆபத்து. எனவே எல்லா வகை சர்க்கரையையும் அளவாக தான் எடுக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

மதுவை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சர்க்கரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

மிதமான வெந்நீரில் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என பலர் நம்புகிறார்கள். இது குறித்து மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம்.

“முழுக்க முழுக்க பொய். அதிக உடல் எடை என்பது அதிக கொழுப்பு. எனவே எளிய உண்மை என்னவென்றால், உணவைக் குறைத்து உடற்பயிற்சி செய்தால் தான் கொழுப்பு கரைந்து ஆற்றலாக மாறும். மாவுச் சத்து குறைவாக எடுப்பது, விரதம் இருப்பது போன்ற முறைகளும் உதவி செய்யலாம். வெந்நீரில் அல்லது எலுமிச்சை சாறில் தேன் கலந்து குடித்துவிட்டு, வழக்கமாக உண்ணும் உணவையே எடுத்துக்கொண்டால் எந்த பயனும் இல்லை” என்கிறார் மருத்துவர்.

 
மதுவை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சர்க்கரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பழங்களில் இருக்கும் சர்க்கரை நல்லதா?

“ஒவ்வொரு பழத்திலும் குளுக்கோஸ், சுக்ரோஸ், பிரக்டோஸ் என மூன்று வித சர்க்கரைகளும் வெவ்வேறு அளவுகளில் உள்ளது. நேரடி சர்க்கரைக்கும் பழங்களில் உள்ள சர்க்கரைக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், பழச் சர்க்கரை நார்ச்சத்துடன் இணைந்து வருகிறது” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

தொடர்ந்து பேசிய அவர், “பழச்சாறாக இல்லாமல் முழு பழமாக எடுத்துக்கொண்டால் அந்த நார்ச்சத்து கிடைக்கும். அது போல உடலில் சர்க்கரை ஏறும் விகிதமும் (கிளைசிமிக் இன்டெக்ஸ்) குறைவாக இருக்கும். இட்லி, தோசை அல்லது சாதம் போன்றவற்றை விட பழங்கள் குறைவாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கூட்டும். ஆனால் அதற்காக பழங்களையும் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

சிலர் ஃப்ரூட் டயட் (Fruit diet- பழங்களை மட்டும் உண்பது) என்ற முறையை பின்பற்றி, அதிக பழங்களை மட்டுமே உண்டு, கல்லீரலில் கெட்டக் கொழுப்பு படிந்து, எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள். எனவே எந்தப் பழமாக இருந்தாலும் ஒரு 100 கிராம் போல எடுத்துக்கொண்டால் போதும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

மதுவை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சர்க்கரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீரிழிவு உள்ளவர்களுக்கு எவ்வளவு சர்க்கரை நல்லது?

இது குறித்து பேசிய ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி, “நீரிழிவு பிரச்னை வரக்கூடாது, உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் நேரடி சர்க்கரையை தவிர்ப்பது நல்லது அல்லது இரண்டு ஸ்பூன் அளவு வரை எடுத்துக்கொள்ளலாம். அதுவே நீரிழிவு இருப்பவர்கள் என்றால் கண்டிப்பாக நேரடி சர்க்கரை எடுத்துக் கொள்ளக் கூடாது. அது எந்த வகை சர்க்கரையாக அல்லது இனிப்பாக இருந்தாலும் சரி” என்றார்.

“சில நீரிழிவு உள்ளவர்கள் உணவுக்கு பதிலாக பழங்களை எடுத்துக்கொள்கிறார்கள். அது தவறு. தன் உடலின் ரத்த சர்க்கரை அளவைப் பொறுத்து, எவ்வளவு பழங்களை, எந்த நேரத்தில் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதும் முக்கியம்.

ஆனால், குறிப்பிட்ட சில பழங்களில் பொட்டாசியம் சத்து இருப்பதால் குறைவான அளவில் பழங்களை எடுத்துக்கொள்வது அவர்களுக்கு நல்லது தான்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி.

நீரிழிவு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய சர்க்கரையின் அளவு குறித்துப் பேசிய மருத்துவர் அருண்குமார், “நீரிழிவு நோயாளிகளுக்கு நேரடி சர்க்கரையை விட, அரிசி உணவுகள் தான் ஆபத்து. அதுதான் ரத்த சர்க்கரை அளவை உடனே அதிகப்படுத்தும்.

சில விளம்பரங்கள் ‘சுகர்-ப்ரீ’ என்ற பெயரில் பிரக்டோஸ் மட்டுமே உள்ள சர்க்கரையை தேநீர் அல்லது காபியில் கலந்து குடிக்கச் சொல்கிறார்கள். பிரக்டோஸ் ரத்த சர்க்கரை அளவை உடனே உயர்த்தாது ஆனால் நீரிழிவு நோயின் வீரியத்தை அதிகப்படுத்தும். எனவே நீரிழிவு நோயாளிகள் அறவே சர்க்கரையை தவிர்க்க வேண்டும் அல்லது மிகக்குறைவாக எடுக்க வேண்டும்” என்கிறார் அவர்.

 
மதுவை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சர்க்கரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்க்கரை அதிகம் எடுத்துக்கொண்டால் என்னவாகும்?

சர்க்கரை அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் பருமன் மட்டுமல்லாது இதய நோய்களுக்கான அபாயமும் அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

“சர்க்கரை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது, கல்லீரல், ரத்தத்தில் கொழுப்பு கூடும், இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகமாகும். சர்க்கரை அதிகம் எடுத்து பழகியவர்களுக்கு, மற்ற உணவுகளில் திருப்தி இருக்காது.

எனவே அதிகமாக உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். இது உடல் பருமனுக்கும் இதய நோய்களுக்கும் வழிவகுக்கும். பெண்களுக்கு பிசிஓடி எனப்படும் சினைப்பை நோய்க்குறி (PCOD) ஏற்படும். உயர்ரத்த அழுத்தம், யூரிக் ஆசிட் பிரச்னை என அதிக சர்க்கரையால் பல சிக்கல்கள் உருவாகும். எனவே ஒரு வெள்ளைச் சர்க்கரை வில்லன், நாட்டுச் சர்க்கரை ஹீரோ என்பது முற்றிலும் தவறு. எதையும் அளவோடு எடுப்பது நல்லது” என்றார் மருத்துவர் அருண்குமார்.

சர்க்கரை அதிகமானால் அது மதுவை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி.

“எந்த சர்க்கரையாக இருந்தாலும் அதிகமாக எடுத்துக் கொண்டால், உடலில் கெட்டக் கொழுப்பு கூடும். உதாரணமாக ஒரு பாட்டில் குளிர்பானத்தில் 8 முதல் 10 ஸ்பூன் என்ற அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். எனவே தினமும் குளிர்பானம் குடித்தால், கல்லீரலில் கெட்டக் கொழுப்பு கூடும்.

எப்படி அதிகமாக அல்லது தினமும் மது குடித்தால் கல்லீரல் கெடுமோ, அதிகமாக சர்க்கரை எடுப்பதாலும் அதே அளவில் கல்லீரல் கெடும். உடல் எடை கூடுவது, நீரிழிவு நோய், இதய நோய் என சர்க்கரையுடன் பல உடல்நலப் பிரச்னைகளுக்கு தொடர்பு உள்ளது” என எச்சரித்தார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி.

https://www.bbc.com/tamil/articles/cpek2zgxp8eo

கர்ப்பத்தைக் கண்டறிதல் மற்றும் ட்ரைமெஸ்டர் எனப்படும் பேறுகால சிகிச்சைகள்

3 weeks 1 day ago

SCAN_.jpg

 

பெண்கள் வேலைக்குச் செல்வதாலும் தாமதத் திருமணங்களாலும் கடந்த பத்தாண்டுகளாகக் கர்ப்பத்துக்குப் பின்னால் மட்டுமல்ல கர்ப்பம் தரிக்கும் முன்னும் செக்கப் செய்துகொள்வது என்பது வழக்கமாகி இருக்கிறது. கர்ப்பம் ஆகுமுன்னே வந்து மருத்துவரை அணுகி தங்களுக்கு உடல் கோளாறு ஏதும் இல்லை என செக்கப் செய்து கொள்வது தாய்க்கும் சேய்க்கும் நலம் பயக்கும்.

இதயத்தில் மர்மர் சத்தம்., தைராய்ட்., இரத்த அழுத்தம். , ஹீமோக்ளோபின்., ஃபைப்ராயிட் கட்டிகள் இருக்கா என எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தில் கோளாறு இல்லாமலிருக்கிறதா, நீரிழிவு நோய் இருக்கிறதா மேலும் எல்லாத் தடுப்பு ஊசிகளும் ( ஜெர்மன் மீசில்ஸ்) போடப்பட்டிருக்கா என செக்கப் செய்து கொள்வது ப்ரி கன்சப்ஷன் செக்கப் எனப்படுகிறது  PRE CONCEPTION CHECK UP ஐ PRE CONCEPTION CLINIC சென்று செய்து கொள்வது அவசியம். அதன் பின் கருத்தரிப்பது நல்லது.

கர்ப்பம் தரிப்பது தாமதப்பட்டால் ஃபோலிக் ஆசிட் குறைபாடு இருந்தால் ஃபோலிக் ஆசிட் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அது குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் முக்கியமானது. ஃபோலிக் ஆசிட் குறைபாட்டால் கருச்சிதைவுகளும் ஏற்படலாம்.

கரு உருவான பின் ஓரிரு நாட்களிலேயே அதன் உயிரணுக்களின் எண்ணிக்கை விரைவாகவும் இரட்டிப்பு அடைந்தும் அதிகரிக்கும். ஐந்து நாட்களில் இந்த இளம்கருவளர் பருவம் ப்ளாஸ்டோசிஸ்ட் என அழைக்கப்படுகின்றது. இது மூன்று படலங்களைக் கொண்டிருக்கும். புறப்படலம் தோல், நரம்புத் தொகுதியையும், இடைப்படலம் தசை, எலும்புத் தொகுதியையும் அகப்படலம் ஜீரண மண்டலம், சுவாசத் தொகுதியையும் உருவாக்க வல்லவை.

கரு எம்பிரியோ என்றும் அதன் தொப்புள் கொடி அம்பிளிகல் கார்ட் என்றும் அழைக்கப்படுகின்றது. கருப்பையில் தாயிடமிருந்து சேய்க்கு ஆக்ஸிஜனையும் உணவையும் வழங்குவதோடு கழிவுப் பொருட்களை அகற்றுவதும் இந்தத் தொப்புள்கொடியின் பங்கு. கருவைச் சுற்றி இருக்கும் திரவம் பனிக்குடம் எனப்படுகின்றது. தொடர் வளர்ச்சியில் கண், விரல்கள், வாய், காதுபோன்ற உடல் உறுப்புகள் 8 வாரங்களில் முழுமை பெற்றுவிடும். அப்போது இது முதிர்கரு (ஃபோயட்டஸ்) என்று அழைக்கப்படும். மூன்றாவது மாதத்தில்தான் கருவின் பால் உறுப்புக்கள் வெளித் தெரிய ஆரம்பிக்கும்.

கரு உருவாகி இருப்பதை மாதவிடாய் தள்ளிப் போவதன் மூலமும் பரிசோதனைகள் மூலமும் அறிந்து கொள்ளலாம். உடல் மென்மையாதல், மார்பகங்கள் தளர்தல் எனத் தாயின் உடற்கூறியியலும் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைப் பேறுக் காலங்களை 14 வாரங்கள் எனக் கணக்கில் கொண்டு மூன்று பதிநான்கு வாரங்களாக ( 42 வாரங்கள் ) முப்பருவங்களாகப் பிரிக்கின்றார்கள் மருத்துவர்கள்.

கரு உருவாகி முப்பருவத்தின் முதல் 14 வாரத்தில் எலுமிச்சை அளவில் கரு வளர்ந்து இருக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மசக்கை எனக் கருத்தரிப்பின் அறிகுறிகளும் சங்கடங்களும் அதிகமாக இருக்கும். அப்போது இரட்டைக் குழந்தையா., குழந்தையின் இதயத் துடிப்பு  சரியா இருக்கா., கர்ப்பம் உள்ளே இருக்கா., அல்லது வெளியே இருக்கா ., குழந்தையின் உறுப்புக்களில் பிரச்சனை இருக்கா., தாய்க்கு ஃபைப்ராயிட் ., ஓவரி கட்டிகள் இருக்கான்னு ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.

SCAN__0001.jpg

 

இன்னொரு ஸ்கான் 11 முதல் 13 வாரத்தில் செய்ய வேண்டும். டவுன் சிண்ட்ரோம் பேபியா., உறுப்புகள் சரியான வளர்ச்சி உள்ளதா ., என பார்க்க முடியும். அதற்கு அறிகுறிகள் இருந்தால் ப்ளட் டெஸ்ட் செய்து ஸ்கான் செய்வதால் தெரியவரும். முடிந்தவரை  கர்ப்பகாலத்தில்  எக்ஸ்ரேக்கள் எடுக்காமல் இருப்பது நல்லது. அதன் கதிர்கள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவைப் பாதிக்கலாம். மேலும் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றிற்குக் கூட டாக்டரிடம் ஆலோசனை பெற்றபின்பே மருந்துண்ண வேண்டும். பல் தொடர்பான பிரச்சனைகள், பல் எடுத்தல் போன்றவற்றை டாக்டரிடம் கேட்டுவிட்டே செய்யவேண்டும்.

முதல் மூன்று மாதங்களில் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கும் போது ப்ளட் டெஸ்ட்., ஹீமோக்ளோபின்.( HAEMOGLOBIN) , ரத்த குரூப்.,(BLOOD GROUP) ஹெச் ஐ வி ( HIV) இருக்கா., ஹெப்பாட்டைட்டிஸ் பி ( HEPAPATITIES B) , இவை எல்லாம் செக் செய்து கொள்ள வேண்டும். இது கட்டாயம்.

இரண்டாவது முப்பருவத்தில் குழந்தையின் எடை லேசாக அதிகரிக்கத் தொடங்கும். கருப்பை எப்போதும் இருப்பதை விட 20 மடங்கு அதிகரிக்கும். கருப்பையில் குழந்தையின் அசைவு தெரிய ஆரம்பிக்கும்.

இரண்டாவது 3 மாதத்தில் இரும்புச்சத்து மாத்திரை., கால்சியம் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். 20 வாரத்தில் சிசுவுக்கு ஏதாவது பெரிய குறைபாடு  இருக்கா., உறுப்பு வளர்ச்சி இருக்கா என்று ஸ்கான் மூலம் அறியலாம்.

டெட்டனஸ்., டிப்தீரியாவுக்கு இன்ஜெக்‌ஷன் 4 முதல் 6 வாரத்தில் ஒரு டோஸ் கொடுக்க வேண்டும் . இரண்டாவது டோஸ் ., 30 அல்லது 36 வாரத்தில் கொடுக்க வேண்டும். உணவு இரண்டாவது 3 மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடலாம். இயற்கையாய் தயாரிக்கும் சத்துமாவுக் கஞ்சி எடு்த்துக் கொள்ளலாம். பருப்பு, பயறு போன்ற ப்ரோட்டீன் நிறைந்த ஆகாரம் முக்கியம். காய்கறி., கீரை., பயிறு வகைகள்., பழம் அதிகம் சேர்க்கலாம். முட்டை, பால், காரட், பழவகைகள் அனைத்தும் எடுத்துக்கலாம். அவ்வப்போது டையபடீஸுக்கும் ஹீமோக்ளோபினுக்கும் செக்கப் செய்து கொள்வது அவசியம்.

முப்பருவத்தின் மூன்றாவது பகுதியிலேயே குழந்தையின் எடை விரைவாக அதிகரிப்பதாலும் குழந்தையின் தலைப்பகுதி இடுப்பின் கீழ்நோக்கித் திரும்புவதாலும் தாயின் வயிறு மிகப்பெரிதாகக் காணப்படும். இந்த அழுத்தத்தினால் சிறுநீர்ப்பை அடிக்கடி நிரம்பியது போன்று உணர்வார்கள். உப்பு ஹீமோக்ளோபின்., சர்க்கரை., இரத்த அழுத்தம், எடை  ஆகியவை அடிக்கடி சோதனை செய்து கொள்ளலாம். கர்ப்ப ஸ்த்ரி  10 லிருந்து 13 கிலோ எடை ஏறவேண்டும். முதலில் எடை ஏறாது மூன்றாம் மாதத்தில் இருந்து சுமாரா இரண்டு கிலோ எடை ஏறணும்.

கர்ப்பகாலத்தில் தாயின் உடல்நலமும் உள்ள நலமும் பேணிப்பாதுகாக்கப்படவேண்டும். நெஞ்செரிச்சல், அமிலச் சுரப்பு, வாயில் கசப்பு அல்லது புளிப்பு, தூக்கமின்மை, உட்கார்வதில், படுப்பதில் சிரமம், உணர்வுப்பூர்வமாக ஏற்படும் ஏற்ற இறக்கம், சிலசமயம் அரிப்பு, உடல் சூடாக உணர்தல், தலைமுடி தோலில் மாற்றம் போன்றவை நிகழும். குமட்டல் வாந்தி இருந்தால் இஞ்சி உபயோகிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. மேலும் சரியான இடைவெளிகளில் உணவு உண்ணுதலும், அமரும்போதும் படுக்கும் போதும் சரியான நிலையைப் பேணுதலும் அறிவுறுத்தப்படுகின்றது.

மலச்சிக்கல், மூலநோய் போன்றவை இருந்தால் கீரை போன்ற நார்ப்பொருள் கொண்ட உணவுகளை அதிகமாக உண்ணும்படிப் பரிந்துரைக்கிறார்கள். குழந்தை எடை கூடுவதால் அதன் அழுத்தம் தாளாமல் காலில் ஏற்படும் வெரிகோஸ் வெயின் எனப்படும் சிரைகள் வீங்கி நீலநிறமாகக் காணப்பட்டால் காலில் பாண்டேஜ் போன்றவை பயன்படுத்தும்படிக் கூறுகிறார்கள். சிலருக்கு துர்நாற்றம், அரிப்பு, புண் இவற்றோடான யோனி வெளியேற்றமோ அல்லது மாதவிடாய் ரத்தப் போக்கோ ஏற்படலாம். பரிசோதனை செய்து தொற்று ஏதும் இல்லை என உறுதி செய்து கொண்டு அதற்குத் தக்க மருத்துவம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதுகுவலி, இடுப்பு செயல் பிறழ்ச்சி, இடுப்பெலும்பு, தொடை மற்றும் அடிவயிற்று வலி, நடப்பதில் சிரமம் போன்றவை ஏற்பட்டால் சரியான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். வெந்நீர்க் குளியல் மசாஜ் போன்றவை எடுத்துக் கொள்ள வேண்டும். காலில் வீக்கம் ஏற்பட்டால் உணவில் உப்பைக் குறைத்து உண்ணுதல் வேண்டும். பொதுவாகவே காரம், இனிப்பு, உப்பைக் குறைக்க வேண்டும். ஒன்பது மாதங்களில் பிரசவம் எளிதாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, பிரணாயாமம் இவற்றைச் செய்யலாம்.

http://honeylaksh.blogspot.com/2024/03/15.html

குறட்டை விடுவதால் உங்கள் குடும்பத்துக்கு என்ன ஆபத்து? எப்படி தடுக்கலாம்?

1 month ago
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குறட்டை பழக்கம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சனீத் பெரேரா
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 15 மார்ச் 2024, 02:45 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

குறட்டை விடும் பழக்கம் குறட்டை விடுபவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குறட்டை அவர்களின் இணையர் மற்றும் உறவை பாதிக்கும், இதில் உடல் உறவு உட்பட தாம்பத்யம் தொடர்பான விஷயமும் அடக்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"என் கணவர் சத்தமாக குறட்டை விடுவதைப் பற்றி நான் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் சொல்லி கேலி செய்தேன், ஆனால் மனதளவில் ஆழமாக அது என்னைத் பாதித்தது. இதைப் பற்றி என் கணவருடன் பேசினால் அவர் மனம் புண்படுவார் என்று நான் கவலைப்பட்டேன்" என்று சிங்கப்பூரைச் சேர்ந்த 45 வயதான அருணிகா செல்வம் கூறுகிறார்.

குறட்டை என்பது சகஜமான ஒன்று என்று அருணிகா எண்ணினார். ஆனால் அது அவரின் கணவருக்கும் தாம்பத்திய உறவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

"அவர் இரவில் தூக்கத்தின் நடுவே பலமுறை எழுந்திருக்க ஆரம்பித்தார். காலையில் எரிச்சல் உணர்வோடு இருப்பார்," என்று அருணிகா பிபிசியிடம் தெரிவித்தார்.

கணவரின் குறட்டை சத்தத்தால் அருணிகாவால் ஆழ்ந்து உறங்க முடியவில்லை. ஓய்வின்மை மற்றும் தூக்கமின்மை காரணமாக வேலையில் அவரின் செயல்திறன் பாதிக்கப்பட்டது.

இணையர் குறட்டை விடுவதை கண்டு கொள்ளாமல் விடுவது பொதுவாக பல வீடுகளில் நிகழும். ஆனால் குறட்டை பிரச்சனை, இணையருடனான உறவு மற்றும் இருவரின் ஆரோக்கியத்திலும் கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 
குறட்டை
படக்குறிப்பு,

தூக்கத்தின் போது காற்றோட்டம் தடைபட்டு, சுவாசம் நின்று மீண்டும் தொடங்கும்

தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (sleep apnoea) என்றால் என்ன?

பொதுவாக சத்தமாக குறட்டை விடுவது, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (OSA) எனப்படும் தூக்கக் கோளாறுடன் தொடர்புடையதாக இருக்கும், இந்த நிலையில் தூக்கத்தின் போது காற்றோட்டம் தடைப்பட்டு, சுவாசம் நின்று மீண்டும் தொடங்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த கோளாறு தொண்டையின் சுவர்களை தளர்வடையச் செய்து, சுருங்கச் செய்து, சாதாரண சுவாசத்தை குறுக்கிட்டு, ஆக்ஸிஜன் குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர், சுவாச நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி சத்தியமூர்த்தியின் கூற்றுப்படி, தூக்கத்தில் மூச்சுத்திணறல் அறிகுறிகள் லேசான நிலை தொடங்கி கடுமையான நிலை வரை ஏற்படும். ஆனால் பாதிக்கப்பட்ட நபரை இந்த பிரச்னை படிப்படியாக மோசமான நிலைக்கு தள்ளும்.

மேலும் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், குறட்டை விடுபவர் மற்றும் அவர்களது இணையரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அது பாதிக்கும், தம்பதிகளின் உடல் உறவையும் பாதிக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.

 
தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் என்ன?

ஒருவர் தூங்கும்போதுதான் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன, அவை பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

  • உரத்த சத்தத்துடன் குறட்டை
  • சுவாசம் தடைப்பட்டு மீண்டும் தொடங்குவது
  • மூச்சுத்திணறல், குறட்டை அல்லது மூச்சுத் திணறல் போன்ற சத்தங்கள் எழுப்புவது
  • தூக்கத்தின் நடுவே அடிக்கடி எழுந்திருத்தல்

பாதிக்கப்பட்டவர்களுக்கு பகல் நேரத்திலும் சில அறிகுறிகள் ஏற்படும், அவை:

  • தூங்கி எழுந்ததும் தலைவலி
  • மிகவும் சோர்வாக உணர்வது
  • கவனச் சிதறல்
  • மோசமான நினைவாற்றல்
  • மனச்சோர்வு, எரிச்சல் அல்லது மனநிலையின் பிற மாற்றங்கள்
  • மோசமான ஒருங்கிணைப்பு திறன்
  • உடலுறவில் நாட்டமின்மை
 
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மூச்சுத்திணறலின் போது ரத்த ஆக்ஸிஜன் அளவுகளில் ஏற்படும் திடீர் வீழ்ச்சி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

குறட்டையால் பிற உடல்நலப் பிரச்னைகள்

கூடுதலாக, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல் (obstructive sleep apnoea) பாதிப்பு மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

மூச்சுத்திணறலின் போது ரத்த ஆக்ஸிஜன் அளவுகளில் ஏற்படும் திடீர் வீழ்ச்சி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர், மேலும் இது பல்வேறு மருத்துவ சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

சில ஆய்வுகள் ஓஎஸ்ஏ (obstructive sleep apnoea) இதய செயலிழப்பு அபாயத்தை 140% அதிகரிக்கும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 60% மற்றும் கரோனரி இதய நோய் அபாயத்தை 30% அதிகரிக்கும் என்று கூறுகின்றன.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது உடலுறவையும் பாதிக்கலாம் என தூக்க சிகிச்சை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சில தம்பதிகள் தங்கள் துணையின் குறட்டையை நகைச்சுவையாக அணுகினாலும், அது அவர்களின் தாம்பத்திய உறவை பாதிக்கும் என்று டாக்டர் சத்தியமூர்த்தி எச்சரிக்கிறார்.

"வழக்கமாக என்னிடம் வரும் நோயாளிகளில் 90% பேர், இணையரை தன் குறட்டை பழக்கம் பெரிதும் பாதித்ததால் தான் சிகிச்சை மேற்கொள்ளும் முடிவை எடுக்கின்றனர். நாளடைவில் தம்பதி தனியாக தூங்க முடிவெடுப்பர், மேலும் இந்த பிரிவு `தூக்க விவாகரத்து’ என்னும் நிலையை உருவாக்கும்." என்று அவர் பிபிசியிடம் குறிப்பிட்டார்.

“இது ஒரு மோசமான விஷயம் அல்ல’’ என்று குறிப்பிடும் அமெரிக்காவைச் சேர்ந்த உறவு சிகிச்சை நிபுணர் சாரா நாசர்சாதே, ``குறட்டை பழக்கம் இருந்தாலும், இல்லையென்றாலும், தம்பதிகள் சில சமயங்களில் தனித்தனியாக தூங்க வேண்டும்’’ என்று பரிந்துரைக்கிறார். ’’ஆழ்ந்த இரவு தூக்கத்துடன் நம் நாளைத் தொடங்குவது தம்பதிகளுக்கு ஆரோக்கியமான உறவை வளர்க்கும்’’ என்றும் அவர் பிபிசியிடம் கூறினார், இருப்பினும் வீட்டில் ஒரு கூடுதல் படுக்கையறை இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஆனால் சில தம்பதிகளுக்கு, 'தூக்க விவாகரத்து' என்பது நிரந்தரமான பிரிவினைக்கான முதல் படியாக இருக்கும்.

 
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குறட்டை விடுவதை இயல்பான ஒன்று என பலரும் நம்புகின்றனர்.

குறட்டையால் சிங்கப்பூர் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

அருணிகா செல்வம், உலகிலேயே அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட மிகவும் வளர்ந்த நாடான சிங்கப்பூரில் வசிக்கிறார். இருப்பினும் தன் வீட்டில் இணையர் உடன் இருக்கும் அறையை தவிர வேறு இடத்தில் தூங்குவது அவருக்கு சாத்தியமில்லை.

"சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதால் கூடுதல் வருமானம் ஈட்ட, எங்கள் விருந்தினர் அறையை வாடகைக்கு விட வேண்டியிருந்தது" என்று திருமணமாகி 15 வருடங்கள் கடந்து ஒரு குழந்தையின் தாயாக இருக்கும் அருணிகா தன் நிலையை விவரித்தார்.

எண்ணற்ற தூக்கமில்லாத இரவுகளைக் கடந்த பிறகு , இதற்கு மேல் முடியாது என்ற நிலையில் அருணிகா தன் கணவரிடம் அவரின் குறட்டை பிரச்சனை பற்றி பேசினார். அவரின் கணவர் குறட்டை விடுவது இயல்பானது என்று நம்புவதால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கத் தயங்கினார்.

மேலும் அவரது தந்தை மற்றும் தாத்தா இருவரும் குறட்டை விடும் பழக்கம் உடையவர் என்பதால் இது பெரிய பிரச்னையில்லை என அவர் நம்பினார்.

சத்தமாக குறட்டை விடுவது ஆண்மையின் ஒரு அங்கமாகவே பலர் கருதுகின்றனர். குறிப்பாக சில ஆசிய கலாச்சாரங்களில், குறட்டை விடுவது சாதரண விஷயம் என்றே நம்புகின்றனர்’’ என்று அருணிகா மேலும் கூறினார்.

குறட்டையால் ஏற்படும் தூக்கமின்மை மனச் சமநிலையை குலைக்கும். இதனால் ஏற்படும் மன உளைச்சல் தேவையற்ற வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும்.

சாரா நாசர்சாதே கூறுகையில், "இதுபோன்ற சூழ்நிலைகளில், குறட்டை விடும் இணையரிடம் சரியான நேரத்தில், நுட்பமான முறையில் இந்த விஷயத்தை புரிய வைக்க வேண்டும். இந்தப் பிரச்சனையை பற்றி பேச சரியான தருணத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.’’

"உடலுறவு கொண்ட பிறகு, நல்ல மனநிலையில் இருக்கும் போது இதைப் பற்றி பேச முயற்சிக்கலாம்" என்று நாசர்சாதே கூறினார். இவர் “லவ் பை டிசைன் - 6 இன்க்ரீடியன்ட்ஸ் டு பில்ட் லைஃப் டைம் ஆஃப் லவ்’’ என்னும் புத்தகத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக உளவியல் நிபுணரான இவர் இதுகுறித்து கூறுகையில், "குறட்டை விடுபவர் அந்த நிலையை எண்ணி வெட்கப்படுகிறார்’’ என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்.’’ என்றார்.

 
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குறட்டையால் திருமண உறவு கூட முடிவுக்கு வரலாம்

குறட்டையால் தீவிரமான பாதிப்புகள்

பிரிட்டிஷ் குறட்டை மற்றும் தூக்கநிலை மூச்சுத்திணறல் சங்கத்தின் கூற்றுப்படி, பிரிட்டனில் சுமார் 15 மில்லியன் குறட்டை பாதிப்பு கொண்டவர்கள் உள்ளனர். மேலும் இது நாட்டில் 30 மில்லியன் மக்களை பாதிக்கிறது - கிட்டத்தட்ட மக்கள்தொகையில் பாதி என்றே சொல்லலாம்.

"குறட்டை பழக்கம் உடையவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன’’ என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் குறட்டை விடுபவர் யாராக இருந்தாலும், அந்தப் பழக்கம் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் விவாகரத்துக்கான பொதுவான காரணங்களில் ஒன்று `குறட்டை’ என்று சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இருப்பினும் இந்த கூற்றை நிரூபிக்க போதுமான தரவுகள் இல்லை.

குறட்டை பழக்கம் திருமண உறவில் ஆழமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பிரிட்டனைச் சேர்ந்த குடும்பநல வழக்கறிஞரான ரீட்டா குப்தா, தனது நிறுவனம் குறட்டையுடன் தொடர்புடைய பல விவாகரத்து வழக்குகளை கையாண்டதாகக் கூறினார்.

"திருமண பந்தத்தில் ஏற்படும் மகிழ்ச்சியின்மைக்கு இது நிச்சயமாக ஒரு காரணமாக இருக்கும். அவர் குறட்டை விடுவதால் நாங்கள் பல ஆண்டுகளாக தனித்தனி அறைகளில் தான் தூங்குகிறோம், நாங்கள் ஏற்கெனவே பிரிந்துதான் வாழ்கிறோம்’, என்று நிறைய பேர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்," என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

“இதுபோன்ற விவாகரத்து வழக்குகளில் பொதுவான பிரச்சினை என்னவெனில், மருத்துவ சிகிச்சைகளை புறக்கணிப்பது, இந்த சிக்கலை திறம்பட சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காதது தான்’’ என்று குடும்பநல வழக்கறிஞர் மேலும் கூறினார்.

"உதாரணமாக, ஒரு ஆணுக்கு எதிரான வழக்கில், அவருடைய மனைவி, 'என் கணவர் ஏற்கனவே மோசமாக குறட்டை விடுகிறார். இது என் தூக்கத்தை மோசமாக பாதிக்கிறது. ஆனால், அவர் அதை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று கூறுகிறார்.

 
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

CPAP சாதனம் தூக்கத்தின் போது ஏற்படும் சுவாசக் கோளாறைத் தடுக்க உதவுகிறது.

குறட்டை அல்லது தூக்கநிலை மூச்சுத்திணறல் பிரச்னையை தீர்க்க நீங்கள் என்ன செய்யலாம்?

தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கான சிகிச்சைகள் வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றுவதை உள்ளடக்கியது.

  • உடல் எடைக் குறைப்பு
  • புகைபிடிப்பதை நிறுத்துதல்
  • மது அருந்துவதை கட்டுப்படுத்துதல்

இருப்பினும், பலருக்கு, CPAP என்னும் காற்றுப்பாதை அழுத்த சாதனத்தைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. இந்த சாதனம், நீங்கள் தூங்கும் போது உங்கள் வாய் அல்லது மூக்கில் அணியும் முக கவசத்தினுள் காற்றை மெதுவாக உட்செலுத்துகிறது.

இந்த CPAP சாதனம் தூக்கத்தின் போது ஏற்படும் சுவாசக் கோளாறைத் தடுக்க உதவுகிறது.

மருத்துவர் ராமமூர்த்தி சத்தியமூர்த்தி கூறுகையில், “குறட்டை விடுபவர் மற்றும் அவரின் இணையர் ஆகிய இருவரின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிப்பது முக்கியம். இது அவர்களை மருத்துவ ஆலோசனையைப் பெற ஊக்குவிக்கும்” என்கிறார்.

"குறட்டை பிரச்னைக்கு மருத்துவ ஆலோசனைப் பெறுவது, திருமண உறவுக்கு மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நாளடைவில் குறட்டையால் ஏற்படும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுக்கும் செலவும் குறையும். எனவே, இது முழு குடும்பத்திற்கும் ஒட்டுமொத்த நன்மை தரும்" என்று அவர் கூறினார்.

 
குறட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குறட்டை பிரச்னையை தீர்ப்பதில் உலக அளவில் பல காரணிகள் தடையாக உள்ளன.

பொருளாதார, சமூகத் தடைகள்

குறட்டை பிரச்னைக்கான அணுகுமுறைகள் உலகளாவிய மற்றும் தனி நபர் சார்ந்து மாறுபடலாம். பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார காரணிகள் மற்றும் பாலினம் மற்றும் பாலுணர்வால் கூட பாதிக்கப்படலாம்.

இலங்கையின் கொழும்பில் ஹோட்டல் வரவேற்பாளராகப் பணிபுரியும் 40 வயது தன்பால் ஈர்ப்பாளரான சமன் (அவரது உண்மையான பெயர் அல்ல), அவரது பாலினத்தை குடும்பத்தினரிடம் இருந்து ரகசியமாக வைத்துள்ளார். அவரது காதலர் தனது வீட்டில் உள்ள கூடுதல் அறையில் வாடகைக்கு வசிக்கும் நண்பர் என்று குடும்பத்தினரை நம்ப வைத்திருக்கிறார்.

"எனது இணையர் சத்தமாக குறட்டை விடுபவர், அவரின் குறட்டை சத்தத்தால் என்னால் தூங்க முடியவில்லை. என் அம்மா என்னைச் சந்திக்க வரும் போது மட்டும்தான் எனக்கு நன்றாகத் தூக்கம் வரும்" என்று சமன் பிபிசியிடம் கூறினார்.

"என் அம்மா வரும்போது, என் இணையர் விருப்பத்துடன் என் அம்மாவுக்கு அந்த கூடுதல் அறை வழங்கப்படும், எனவே என் இணையர் சோபாவில் தூங்கி என் அம்மாவுக்கு சந்தேகம் வராத வண்ணம் பார்த்துக் கொள்வார். அந்த நாட்களில் மட்டும் நான் நன்றாக தூங்குவேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

"எனது காதலர் தன்னை பெண்பால் குணங்கள் கொண்ட தன்பால் ஈர்ப்பாளராக கருதுகிறார், ஆனால் குறட்டை விடுவது நமது கலாச்சாரத்தில் ஆண்மைக்குரியதாகவே கருதப்படுகிறது. இந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்பது அவரை காயப்படுத்தி என்னை விட்டு அவர் விலகி செல்ல வழிவகுக்கும் என்று நான் அஞ்சுகிறேன்" என்றும் குறிப்பிட்டார்.

ஒருபுறம் குறட்டை பிரச்சனையை காதலனிடம் விவாதிக்க சமன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டிருக்கையில், மறுபுறம், அருணிகா ஒருவழியாக தன் கணவரிடம் மருத்துவரை அணுகுமாறு வற்புறுத்தத் தொடங்கினார். அதன் விளைவாக அருணிகாவின் கணவருக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருப்பது கண்டறியப்பட்டது.

உடல் எடையை குறைக்கும் நோக்கத்தில் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு தனது கணவர் ஏற்கெனவே பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டதாக அருணிகா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cz9zwk1v395o

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று உலக தூக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சிறுநீரக தினம்: உங்கள் சிறுநீர் எந்த நிறத்தில் இருப்பது ஆபத்தின் அறிகுறி?

1 month ago
சிறுநீரகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உங்கள் சிறுநீரின் நிறத்தைக் கொண்டே சிக்கலை அறிய முடியும்

1 ஜனவரி 2024
புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

சிறுநீரகம் உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. சிறுநீரகம் மூலம் தான் நம் உடலில் திரவ கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான ரத்தம் தொடர்ந்து பரவுகிறது. மேலும், உடலில் உள்ள அதிகப்படியான நீர், சிறுநீரகம் மூலம் வடிகட்டப்பட்டு அது சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்படுகிறது.

இந்தியாவில் தீவிர நோய்களால் இறப்பதற்கான முதல் பத்து காரணங்களில், பல்வேறு சிறுநீரக நோய்கள் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன.

“இந்தியா: தேசத்தின் ஆரோக்கியம்”-2017 எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் ஒன்பதாவது முக்கிய காரணமாகும். இந்நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது ஆகியவையாகும்.

’நேச்சர்’ இதழின் (Nature) பகுப்பாய்வின்படி, உலகில் 6.97 கோடி பேர் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1.15 கோடி பேர் இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2010-13-இல், சிறுநீரக செயலிழப்பு 15-69 வயதுடையவர்களிடையே 2.9 சதவீத இறப்புகளுக்கு காரணமாகும். இது 2001-03-ஐ விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறுநீரக செயலிழப்பு இறப்புகளுக்கு நீரிழிவு நோய் மிக முக்கிய காரணமாக உள்ளது.

இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD-Chronic kidney disease) 8-17 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுள் சுமார் 10-20 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
சிறுநீரக நோய்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறுநீரகத்திற்கும் சிறுநீருக்கும் என்ன தொடர்பு?

இந்த நோய்க்கான காரணங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள சிறுநீரக மருத்துவர் சித்தார்த் ஜெயினிடம் பேசினோம்.

சிறுநீருக்கும் சிறுநீரகத்துக்கும் உள்ள தொடர்பை அவர் விளக்குகிறார்.

"உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீர் வாயிலாக சிறுநீரகம் நீக்குகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்ற கழிவுகளை அகற்றுவதாகும். சிறுநீரின் உதவியுடன் இதைச் செய்கிறது" என்றார்.

சிறுநீரகம் நமது உடலின் ஒரு வடிகட்டி அமைப்பு. சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சிறுநீரை உற்பத்தி செய்கின்றன.

"சிறுநீரகத்தின் செயல்பாடு சிறுநீரின் உதவியுடன் உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்றுவதாகும். உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீரகம் நீக்குகிறது" என்று அவர் விளக்குகிறார்.

 
சிறுநீரக நோய்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது.

புரோட்டினூரியா என்றால் என்ன?

புரோட்டினூரியா (சிறுநீரில் புரதத்தின் குறிப்பிடத்தக்க இருப்பு) பற்றி மருத்துவர் சித்தார்த் ஜெயின் விரிவாக விளக்குகிறார். “ஒவ்வொரு ஆரோக்கியமான மனித உடலும் சிறுநீரின் மூலம் சில அளவு புரதத்தை வெளியேற்றுகிறது. ஆனால், இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது மற்றும் இந்த கசிவு புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகிறது" என்கிறார்.

"புரோட்டீனூரியா உற்பத்திக்கு மிகவும் பொதுவான காரணம் நீரிழிவு நோய். ஒருவருக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு இருந்தால், அதிகப்படியான புரதம் சிறுநீரில் கசிகிறது" என்றார், மருத்துவர் சித்தார்த்.

"இதனால் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் முதல் அறிகுறி புரோட்டினூரியா ஆகும்" என்றார்.

புரோட்டினூரியாவின் பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிற நோய்கள்.

புரோட்டினூரியாவின் அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், "சிறுநீர் நுரையுடன் இருப்பதாக உணர்ந்தால், அது புரோட்டினூரியாவின் அறிகுறியாகும்."

புரோட்டினூரியாவின் மேம்பட்ட நிலைகளில், நோயாளிகள் கைகள் மற்றும் கால்களில் வீக்கம், சோர்வு, வயிற்று வலி அல்லது வயிற்று தொற்று ஆகியவற்றை அனுபவிக்கலாம். இந்த நோய்க்கான பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் பிற சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஆகும்.

சிறுநீர் நிறம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன.

சிறுநீரின் நிறத்தை வைத்தே சிறுநீரகத்தில் உள்ள பிரச்னையை தெரிந்து கொள்வது எப்படி?

சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன. அதிகப்படியான அமினோ அமிலங்கள் உடைக்கப்படும்போது யூரியா கல்லீரலில் உற்பத்தியாகிறது. சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படும் முக்கிய கழிவுப்பொருள் யூரியாவாகும். ஏனெனில், அது சிறுநீரகத்தால் மீண்டும் உறிஞ்சப்படாது.

உங்கள் ரத்தத்தில் இருந்து வடிகட்டிய அதிகப்படியான நீர் மற்றும் கழிவுகள்தான் சிறுநீர் என, ’ஹார்வர்ட் ஹெல்த்’ கூறுகிறது. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரை இருக்கும். அதன் செறிவு, நீரில் உள்ள கழிவுகளின் அளவைப் பொறுத்தது. இது, நீங்கள் எவ்வளவு திரவத்தை உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

ஒரு நபர் தனது சிறுநீர் சிவப்பு, கருப்பு அல்லது பழுப்பு அல்லது வேறு ஏதேனும் நிறத்தில் இருப்பதாக உணர்ந்தால், அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் சித்தார்த் மேலும் கூறுகிறார்.

மேலும், சிறுநீரின் அளவு, இயல்பை விட மிகக் குறைவாகவோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ, அல்லது ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டியிருந்தாலோ அல்லது சிறுநீர் கழிக்கும்போது அதிக அழுத்தத்தை உணர்ந்தாலோ, கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ, சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

 
சிறுநீரக நோய்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

சிறுநீரகத்தின் செயல்பாடு என்ன?

சிறுநீரகம் உடலின் இன்றியமையாத உறுப்பு. அதன் செயல்பாடுகள்:

  • உங்கள் உடலில் உள்ள கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
  • ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • உங்கள் ரத்தத்தில் பி.ஹெச். எனும் அமிலத்தன்மையை சமநிலையுடன் பராமரித்தல்.
  • உங்கள் உடலில் இருந்து நீரில் கரையும் கழிவுகளை நீக்குகிறது.

சிறுநீரின் வாயிலாக அதிகப்படியான நீர், உப்புகள் மற்றும் யூரியாவை நீக்குகிறது.

சிறுநீரக தமனி மூலம் ரத்தம் சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ரத்தம் உயர் அழுத்தத்தில் வடிகட்டப்படுகிறது மற்றும் சிறுநீரகமானது குளுக்கோஸ், உப்பு அயனிகள் மற்றும் நீர் போன்ற பயனுள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பிறகு, ரத்தம் சிறுநீரக நரம்பு வழியாக ரத்த ஓட்ட அமைப்புக்குத் திரும்புகிறது.

சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிறுநீர்ப்பை சிறுநீரை உடலில் இருந்து வெளியேறும் வரை சேமிக்கிறது.

நீரிழிவு நோயின் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது மற்றும் உலகளவில் 41.5 மில்லியன் மக்களை இது பாதிக்கிறது. சிறுநீரக செயலிழப்புக்கு நீரிழிவு நோய் முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு இறுதியில் சிறுநீரக நோய் ஏற்படுகிறது.

 
சிறுநீரக நோய்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை

தீவிர சிறுநீரக நோய்கள் என்ன?

நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகும்.

ஒவ்வொரு சிறுநீரகமும் நெஃப்ரான்கள் எனப்படும் சுமார் ஒரு மில்லியன் சிறிய வடிகட்டி அலகுகளைக் கொண்டுள்ளது. நெஃப்ரான்களை காயப்படுத்தும் அல்லது பாதிக்கும் எந்த நோயும் சிறுநீரக நோயை ஏற்படுத்தும். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் நெஃப்ரானை பாதிக்கும்.

உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்கள், இதயம் மற்றும் மூளையில் உள்ள ரத்த நாளங்களையும் பாதிக்கும். சிறுநீரகங்கள் அதிக ரத்த நாளங்களை கொண்டவை. எனவே, ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை.

நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறுநீரகம் செயல்பாட்டை படிப்படியாக இழப்பதாகும். சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்டுகின்றன. பின்னர் அவை சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் ஒரு மேம்பட்ட நிலையை அடையும் போது, திரவம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கழிவுகள் ஆகியவை ஆபத்தான அளவுக்கு உடலில் சேரும்.

நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் காலப்போக்கில் உருவாகின்றன. சிறுநீரக பாதிப்பு படிப்படியாக நிகழ்கிறது. குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு மற்றும் பலவீனம், தூக்க பிரச்னைகள், சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், மனக் கூர்மை குறைதல், தசைப்பிடிப்பு மற்றும் கைகளின் வீக்கம் ஆகியவையும் அறிகுறிகளாகும். பாதங்கள் மற்றும் கணுக்கால் சுளுக்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவையும் இந்நோயுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம்.

நாள்பட்ட சிறுநீரக நோய் முற்றிலும் மீளமுடியாத நோயாகும். இது காலப்போக்கில் தீவிரமடையும். இதனால், சிறுநீரகம் அதன் செயல்பாடுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும்.

https://www.bbc.com/tamil/articles/c972d83qmgeo

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை அன்று இந்த உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியர்களின் 'கத்தி விழுங்கும் கலை' மருத்துவத்துறையை மாற்றி அமைத்தது எப்படி?

1 month ago
இந்தியர்களின் கத்தியை விழுங்கும் கலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், வக்கார் முஸ்தபா
  • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
  • 10 மார்ச் 2024, 11:27 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

19-ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவம்.

ஒரு நபர் தன் தொண்டைக்குள் லாவகமாகச் செலுத்திகொண்ட கத்தி சில நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்தது.

டாக்டர் அடோல்ஃப் குஸ்மால் ஒரு மாலை வேளையில் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த காட்சியைக் கண்டார்.

ஒரு நபர் கத்தியை விழுங்குவதைக் கண்டு டாக்டர் குஸ்மால் அதிர்ச்சியடைந்தார். "இந்த அணுகுமுறையை மனித உடலுக்குள் செய்யப்படும் பரிசோதனைகளுக்காக பயன்படுத்த முடியுமா?" என்ற கேள்வி அப்போது அவரது மனதில் எழுந்ததாக ராபர்ட் யங்சன் தனது 'தி மெடிக்கல் மேவரிக்ஸ்' (The Medical Mavericks) புத்தகத்தில் கூறுகிறார்.

வாள் அல்லது கத்தியை விழுங்குவது ஒரு பழங்காலத் திறமை என்றும் இந்தக் கலை சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தொடங்கியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் லாங் மற்றும் பைன் கூறுகின்றனர்.

 
இந்தியர்களின் கத்தியை விழுங்கும் கலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு வந்த கலை

19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியான ஒரு பத்திரிகை கட்டுரையில் "வாளை விழுங்கும் கலை இந்தியாவிலிருந்து பிரிட்டனை அடைந்தபோது இந்தச் செயல் நம்பமுடியாத ஒன்றாகக் பார்க்கப்பட்டது" யில் கூறப்பட்டுள்ளது.

1813-ஆம் ஆண்டில் லண்டனில் வசித்த இந்திய கழைக்கூத்தாட்டக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட 'வாளை விழுங்கும்' சாகசங்கள், யாரும் செய்ய முடியாத ஒரு புதிய மற்றும் வியக்கத்தக்க சாதனை என விளம்பரப்படுத்தப்பட்டன.

இதேபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். வாளை விழுங்கும் புதுமையான செயல் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது என 'தி டைம்ஸ்' பத்திரிகை கூறுகிறது.

இந்திய மேஜிக் நிபுணர்கள் வாள் விழுங்கும் நிகழ்ச்சியால் லண்டன் நகரத்தை திகைக்க வைத்தனர். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்தக் கலை ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் பரவியது.

 
நோய் கண்டறிய பயன்பட்ட வாள் விழுங்கும் கலை
இந்தியர்களின் கத்தியை விழுங்கும் கலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"டாக்டர் குஸ்மால், வாள் விழுங்கும் கலையை அறிந்த 'அயர்ன் ஹென்றி' (இரும்பு ஹென்றி) என்பவரது உதவியுடன், நோய் ஆய்வுகளுக்காக உணவுக்குழாய் வழியாக உடலில் ஆழமாகச் செல்லக்கூடிய வகையில் ஒரு சாதனத்தை உருவாக்கினார்," என ஆராய்ச்சியாளர்கள் லாங் மற்றும் பைன் கூறினார்கள். 1868-இல் 'அயர்ன் ஹென்றி'க்கு எண்டோஸ்கோபி செய்யப்பட்டது என்று எழுதுகிறார் எலிசா பெர்மன்.

“டாக்டர் குஸ்மாலால் ஒரு நோயாளியின் உணவுக்குழாயில் இருந்த புற்றுநோய் கட்டியை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே அயன் ஹென்றி உதவியுடன் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 47 செ.மீ. நீளமுள்ள ஒரு குழாயை விழுங்கினார் அயன் ஹென்றி. கண்ணாடி மற்றும் எண்ணெய் விளக்கின் உதவியுடன், வயிற்றில் உள்ள உணவுக்குழாயை குஸ்மாலால் தெளிவாக பார்க்க முடிந்தது," என எலிசா கூறுகிறார்.

அதேசமயம், வாளை விழுங்குவது ஒரு ஆபத்தான வித்தையாகும். அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கத்திகளை விழுங்குபவர்களுக்கு குடலில் இரத்தப்போக்கு மற்றும் உணவுக்குழாயில் கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன என தெரியவந்தது.

மருத்துவ பரிசோதனைகளில் வாள் விழுங்குபவர்கள் மிக முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. யாரேனும் இதை சுயமாக முயற்சி செய்தால் உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும்.

1897-இல் ஸ்டீவன்ஸ் என்ற ஸ்காட்டிஷ் மருத்துவர், வாளை விழுங்கும் வித்தை அறிந்த ஒரு நபரின் உதவியோடு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டார் என ஆல்பர்ட் ஹாப்கின்ஸ் கூறுகிறார்.

'எலக்ட்ரோ கார்டியோகிராம்' என்ற சொல் பெரும்பாலும் மருத்துவர்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் அவர்களில் பெரும்பாலோர் அதை 'ஈசிஜி' என்று புரிந்து கொண்டனர். 1906ஆம் ஆண்டில், எம்.கிராமர் என்ற ஜெர்மன் மருத்துவர் இதய செயல்பாட்டைப் பதிவுசெய்ய வாள் விழுங்குபவரின் உணவுக்குழாயில் மின்முனையைச் செலுத்தி பரிசோதனை செய்தார்.

 
'வாள் விழுங்குவதால் எண்டோஸ்கோபி எளிதாக உள்ளது'

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் டாக்டர். ஷரோன் கேப்லான். 2007ஆம் ஆண்டில் கடுமையான தொண்டைக் காயங்கள் உள்ள நோயாளிகளுக்கு உதவ வாள் விழுங்குதலை சிகிச்சை முறையில் பயன்படுத்தலாமா என்பதை முடிவுசெய்ய வாள் விழுங்கும் கலைஞரான ஆண்ட்ரூஸுடன் இணைந்து பணியாற்றினார்.

வாள் விழுங்கும் கலைஞரான டோட் ராபின்ஸ், "எண்டோஸ்கோபி தனக்கு மிகவும் எளிதானது" என்கிறார். அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் வாள் விழுங்கும் கலையின் வரலாறு குறித்து விரிவுரை நடத்தினார் ராபின்ஸ். அவரை பத்திரிகையாளர் ஒலிவியா பி.வாக்ஸ்மேன் பேட்டி கண்டார்.

"எனக்கு எண்டோஸ்கோபி செய்ய வேண்டியிருந்தது. குழாயைச் செருகுவதற்கு முன்பு நோயாளிகள் பொதுவாக மயக்கமடைந்துவிடுவார்கள். ஆனால் என்னால் ஒரு கத்தியை விழுங்க முடியும் என்பதால், மருத்துவர் கொடுத்த எண்டோஸ்கோபி எளிதாக இருந்தது" என்று ராபின்ஸ் கூறினார்.

ஆனால் இப்போது இந்தக் கலை அழிவின் விளிம்பில் உள்ளது. வாள் விழுங்குபவர்களின் சர்வதேச சங்கத்தின் கூற்றுப்படி, இப்போது சில டஜன் வாள் விழுங்குபவர்கள் மட்டுமே உள்ளனர்.

சர்வதேச வாள் விழுங்குவோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.

"அறிவியல் மற்றும் மருத்துவத்திற்கு வாள் விழுங்குவோரின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த பழமையான கலை தினத்தை கொண்டாடுவதன் நோக்கம்," என்று வாள் விழுங்குவோர் சங்கம் கூறுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cnl7d54ed0jo

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? இதன் பக்கவிளைவுகள் என்ன?

1 month 1 week ago
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு புதிய 'டயட்' திட்டங்கள் அவ்வப்போது டிரெண்டாகும். பெரும்பாலானோர் அந்த 'டயட்' திட்டங்களை பின்பற்றி உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். அப்படி, பேலியோ, கீட்டோ என பல்வேறு 'டயட்டுகள்' உள்ளன. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை குறைப்பு முயற்சியில் பெரும்பாலானோர் பின்பற்றும் டயட் திட்டமாக இருக்கிறது 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) எனப்படும் 'இடைநிலை உண்ணாவிரதம்'. இதுவொரு வகை விரத முறையே.

பொதுவாக நாம் ஒருநாள் முழுதும் காலையிலிருந்து இரவு வரை 3-4 முறை உணவு எடுத்துக்கொள்வது வழக்கம்.

இதில், குறைவான கால இடைவெளியில் உணவை உட்கொண்டுவிட்டு, அதைத்தொடர்ந்து அதிகமான நேரம் விரதமிருப்பதே இந்த 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்'. 8 மணிநேரம் உணவு - 16 மணிநேரம் விரதம் (16:8) என்ற முறையை பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். தங்களின் வசதிக்கேற்ப இந்த நேரம் 14:10, 12:12, 18:6 என நேர இடைவெளிகளை மாற்றிக்கொள்கின்றனர்.

இப்படி அதிக நேரம் சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லதா? இதனால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா? இந்த விரதமுறையை யாரெல்லாம் கடைபிடிக்கக் கூடாது?

இதுகுறித்த கேள்விகளுக்கு பிபிசியிடம் பதிலளித்தார் ஈரோட்டை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரும் யூடியூபில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் தொடர்பான காணொளிகளைப் பதிவிட்டு வருபவருமான அருண்குமார்.

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்: இந்த விரத முறையை எல்லோரும் கடைபிடிக்கலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடல் எடையை குறைப்பதில் 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' உதவுமா?

உடல் எடையை குறைக்க சமவிகித உணவை மூன்று வேளையும் உண்கிறோம் என எடுத்துக்கொண்டால், அப்போது இன்சுலின் அதிகமாகிக் கொண்டே இருக்கும். நாம் குறைவாக சாப்பிட வேண்டும் என நினைத்தாலும் உணவு மீதான ‘கிரேவிங்’ இருந்துகொண்டே இருக்கும். ஒருநாளைக்கு 1,200 கலோரிகள் கணக்கிட்டு உண்ணலாம் என நினைத்தாலும் அதில் தோல்வியடைவதற்கான காரணம் இதுதான்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் கலோரி பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டும். உடல் எடை அதிகமாவதற்கு முக்கியமான ஹார்மோன் இன்சுலின். எவையெல்லாம் இன்சுலினை அதிகரிக்கிறதோ, அவை உடல் எடையையும் அதிகரிக்கும். இன்சுலினை எவையெல்லாம் குறைக்கிறதோ, அவை உடல் எடையை குறைக்கும். இதனால் நாம் இன்சுலினுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இதுதான் அடிப்படை. இதற்கு கார்போஹைட்ரேட் உணவுகளை குறைக்க வேண்டும். மாறாக, புரோட்டீன், கொழுப்பு, காய்கறியை அதிகமாக எடுத்தால் இன்சுலின் கட்டுப்பாட்டுடன் இருக்கும். உடல் எடை குறையும். ‘கிரேவிங்’ குறையும்.

இந்த அடிப்படையில்தான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்கும் வேலை செய்கிறது. ஒருநாளைக்கு மூன்று வேளை உணவு, நான்கு வேளை 'ஸ்நாக்ஸ்' எடுக்கும்போது இன்சுலின் அதிகரிப்பதால், விரதத்தில் இருக்கும்போது இன்சுலின் கட்டுப்படும். எட்டு அல்லது பத்து மணிநேரம் மட்டுமே நீங்கள் உணவு எடுத்துக்கொண்டு, 14 அல்லது 16 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கும்போது, அந்த 16 மணிநேரம் உங்கள் இன்சுலின் அளவு அதிகரிக்காமல் இருக்கிறது. அப்போது உடலில் கொழுப்பு சேராது.

உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்திலும் ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள், காய்கறிகளை எடுத்துக்கொண்டால் பசியை நன்றாக கட்டுப்படுத்த முடியும். இன்சுலின் கட்டுக்குள் கொண்டு வரும்போது உடல் எடை குறையும், என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

 
இந்த முறையை கடைபிடிக்கும் முன் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமா?
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்: இந்த விரத முறையை எல்லோரும் கடைபிடிக்கலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடல் எடையைக் குறைப்பதற்காக எந்தவொரு உணவுத்திட்டத்தையும் எடுப்பதற்கு முன் ஒவ்வொருவரின் உடல் வளர்சிதை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சில அடிப்படையான ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

ரத்தப் பரிசோதனை எடுத்துப் பார்த்தால்தான் நீரிழிவு நோய் இருக்கிறதா, யூரிக் அமிலம் அதிகமாக இருக்கிறதா என்பது தெரியவரும். அதற்கேற்றவாறு நாம் டயட்டை எடுத்துக்கொள்வது அவசியம், என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

18 மணிநேரம் விரதம் இருந்தால் உடல் எடை வேகமாக குறையுமா?

16:8, 14:10, 12:12 என எந்த நேர இடைவெளியை எடுத்துக்கொண்டாலும் முடிவுகள் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த விரத முறையில் சாப்பிடும் நேரத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். நீங்கள் ஆறு மணிநேரம் மட்டுமே சாப்பிட்டாலும், அதில், நொறுக்குத் தீனிகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட கெடுதல் விளைவிக்கும் உணவுகளை சாப்பிட்டால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இதனை பின்பற்ற நினைப்பவர்கள், தங்களின் சௌகரியங்களுக்கு ஏற்ப கால இடைவெளியில் ஆரம்பிக்கலாம். எடுத்ததும் 16:8 இடைவெளியை பின்பற்ற முடிந்தாலும் அதனை கடைபிடிக்கலாம். ஒன்றும் பிரச்னை வராது, என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

 
யாரெல்லாம் இதனை தவிர்க்க வேண்டும்?
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்: இந்த விரத முறையை எல்லோரும் கடைபிடிக்கலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையைப் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இதை அவர்களின் உடல் ஏற்காவிட்டால், பிரச்னைகள் அதிகரிக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஏற்கனவே அவர்களின் உடல் பல மாற்றங்களுக்குள் சென்றிருக்கும். அதனுடன் இதையும் சேர்க்க வேண்டாம் என நினைக்கிறோம்.

குழந்தைகளால் விரதத்தைத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் அவர்களும் இம்முறையை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம்.

நீரிழிவு அதிகமாக உள்ளவர்கள், மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயம் விரத முறையை கடைபிடித்தால், சர்க்கரை அளவு வெகுவாக குறையும். அதேபோன்று பல்வேறு பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும், என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

நீரிழிவு நோயை இந்த முறையால் கட்டுப்படுத்த முடியுமா?

கார்போஹைட்ரேட்டை குறைப்பதனால் மட்டுமே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும். இந்த விரத முறை நீரிழிவு நோயின் ஆரம்பத்தில் உள்ளவர்கள் அதனை அந்நோயிலிருந்து விடுபடுவதில் உதவிபுரியும்.

ஆனால் நாள்பட்ட நீரிழிவு நோயை இதனால் குணப்படுத்த முடியாது, என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

இந்த முறையால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா?

ஓரிரண்டு வாரங்கள் சில விளைவுகள் இருக்கும். சிலருக்கு மயக்கம் ஏற்படலாம், நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். சிலரால் விரதம் இருக்க முடியாது. அவர்கள் 1-2 வாரங்கள் கடந்தும் பிரச்னை தொடர்ந்தால், இதிலிருந்து வெளியேறலாம், அல்லது சாப்பிடும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இது பெரிய விஷயமல்ல. விரத நேரத்தில் தண்ணீரோ, சூப்போ அருந்துவதன் மூலம் இதனை தவிர்க்கலாம், என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

 
ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுமா?
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்: இந்த விரத முறையை எல்லோரும் கடைபிடிக்கலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் கேள்விக்கு பதிலளித்தார், ஊட்டச்சத்து நிபுணர் தரணி கிருஷ்ணன். சில வழிமுறைகளைப் பின்பற்றி இம்முறையில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதையோ, தசை இழப்பையோ தவிர்க்கலாம் என்றார் அவர்.

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை முதல் மாலை வரைதான் இம்முறையை பின்பற்ற வேண்டும். காலை உணவைத் தவிர்த்துவிட்டு எடுத்ததும் மதிய உணவுக்குள் செல்லக் கூடாது. உணவைத் தவிர்க்க வேண்டும் என்றே, பலர் அதிக நேரம் தூங்கிவிட்டு, மதியம் எழுந்து உண்கின்றனர். இது தவறு.

இரண்டு வேளை முழு உணவு, ஒரு வேளை ஸ்நாக்ஸ் எடுக்க வேண்டும். இருவேளை உணவிலும் நிச்சயம் புரோட்டீன் இருக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும். சிறிதளவு கார்போஹைட்ரோட் எடுக்கலாம். ஒரு கப் சாதம் அல்லது சப்பாத்தி அல்லது தோசை எடுக்கலாம். இன்னொரு கப்பில் பருப்பு, முட்டை, மீன், இறைச்சி எடுக்க வேண்டும். அதற்கு இரு மடங்கு காய்கறிகள் எடுக்க வேண்டும்.

காபி அல்லது டீ, சுண்டல் ஆகியவற்றை ஸ்நாக்ஸ் ஆக எடுக்கலாம்.

உடற்பயிற்சி செய்து தசை இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தோல் தளர்ந்து வயதானவர் போன்ற தோற்றம் ஏற்படும்.

இந்த முறையை தவறாக பின்பற்றினாலோ என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டாலோ எதிர்பார்க்கும் விளைவுகள் இருக்காது, ஆபத்தில்தான் முடியும்.

நெஞ்செரிச்சல் இருப்பவர்கள் இதனை பின்பற்றக் கூடாது. சிஜிஎம் மூலம் சர்க்கரை அளவை கண்காணித்துதான் பின்பற்ற வேண்டும். சர்க்கரை அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் சத்துணவு நிபுணர் இருவரையும் ஆலோசித்துத்தான் நிச்சயம் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மிகவும் வயதானவர்களுக்கு செரிமான பிரச்னைகள் ஏற்கனவே இருக்கும். அவர்களும் இதனை எடுக்கக் கூடாது, என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தரணி கிருஷ்ணன்.

https://www.bbc.com/tamil/articles/c9945q5w5p8o

பால் குடிப்பது நல்லதா? யாரெல்லாம் பால் குடிக்கக் கூடாது?

1 month 1 week ago
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 மார்ச் 2024, 02:40 GMT
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

'எங்கள் நிறுவனத்தின் பிஸ்கட்டில் அதிக பால் உள்ளது, எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை பாலில் கலந்து குடித்தால் உங்கள் பிள்ளைகள் பல சாதனைகளைப் புரிவார்கள்' போன்ற பால் தொடர்பான பல விதமான விளம்பரங்களை பல வருடங்களாக தொலைக்காட்சியில் பார்த்திருப்போம்.

உலகிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான். 2022-23ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் மொத்த பால் உற்பத்தி 230.58 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மாட்டுப்பால் என்பது மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான, ஆரோக்கியமான ஒரு பானம் என்ற கருத்து இந்திய சமூகத்தில் பரவலாக உள்ளது. இரவில் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்குவதை பலர் ஒரு தினசரி பழக்கமாக கடைபிடிக்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட குழந்தைப் பருவத்தைக் கடந்த பிறகு, மனிதனைத் தவிர வேறு எந்த மிருகமும் வாழ்நாள் முழுவதும் பால் குடிப்பதில்லை, குறிப்பாக வேறு மிருகத்தின் பாலை.

பால் என்பது தினமும், எல்லோரும் குடிக்கக்கூடிய ஒரு பானம் தானா? அதிலுள்ள சத்துக்கள் என்ன? தினசரி எவ்வளவு பால் எடுத்துக்கொள்ளலாம்? யாரெல்லாம் பால் குடிக்கக்கூடாது? போன்ற பல கேள்விகளுக்கான பதிலே இந்தக் கட்டுரை.

 
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசைவம் சாப்பிடுவோருக்கு பால் அவசியமா?

பால் என்பது கால்சியம், புரதம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த ஒரு பானம் தான், ஆனால் அசைவ உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்பவர்களுக்கு பாலை உணவில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் எந்த பிரச்னையும் ஏற்படாது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்.

"புதிய கற்காலத்தின் போது மனிதர்களுக்கு பல விதமான சத்துக் குறைபாடுகள் இருந்தன. எனவே அதை பூர்த்தி செய்ய, கால்நடைகளை அதிகம் வளர்த்து, கிடைக்கும் பாலை தினமும் அருந்தும் வழக்கம் தோன்றியது. அந்த காலத்தில் விவசாய பொருட்களை மட்டுமே நம்பி இருக்க முடியாத நிலை இருந்ததால் தோன்றிய இந்த பழக்கம், 10,000 வருடங்களாக சமூகத்தில் தொடர்கிறது. இப்போது நமது டயட்டை சரியாக திட்டமிட்டால், பால் அவசியமில்லை" என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

"சைவ உணவுகளை மட்டுமே உண்பவர்கள் கண்டிப்பாக பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பிட்ட அளவு உள்ளது. எல்லோருக்கும் பால் ஒத்துக்கொள்ளுமா என்று கேட்டால், இல்லை. காரணம் பாலில் லாக்டோஸ் எனும் சர்க்கரை உள்ளது. அதை ஜீரணிக்க நமது குடலில் லாக்டேஸ் எனும் என்சைம் இருக்க வேண்டும். இந்த என்சைம் இல்லையென்றால் பல உடல்நலக் கோளாறுகள் உண்டாகும்" என்கிறார் மருத்துவர்.

 
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,DOCTORARUNKUMAR/FACEBOOK

படக்குறிப்பு,

குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்

பாலில் உள்ள சத்துக்கள் என்ன?

"பொதுவாக பால் என்றாலே அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுவது பசும்பால் தான். அதற்கடுத்து எருமைப் பால். கலோரிகளைப் பொறுத்தவரை நூறு கிராம் பசும்பாலில் 67 கலோரிகள் உள்ளது, ஆனால் எருமைப் பாலில் 117 கலோரிகள் உள்ளது. இதனால் தான் எருமைப் பால் தொடர்ந்து குடித்தால் உடல் எடை கூடுகிறது" என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

"நூறு கிராம் பசும்பாலில் கால்சியம் சத்து 120 என்ற அளவிலும், எருமைப் பாலில் 210 என்ற அளவிலும் உள்ளது. புரதங்களைப் பொறுத்தவரை பசும்பாலில் 3.2 என்ற அளவிலும், எருமைப் பாலில் 4.3 என்ற அளவிலும் உள்ளது. ஆனால் இது கேசின் புரதம், அதாவது இவ்வகை புரதங்கள் ஜீரணத்திற்கு உகந்தவை அல்ல. இதனால் தான் நமது குடலில் லாக்டேஸ் என்சைம் இல்லையென்றால் பல உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என முன்னர் கூறியிருந்தேன்.

அதே போல கொழுப்பைப் பொறுத்தவரை பசும்பாலில் 4.1, எருமைப் பாலில் 6.5. எனவே எருமைப்பாலில் தான் சத்துக்கள் அதிகமாக உள்ளன" என்கிறார் மருத்துவர்.

பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இயற்கையாக பால் என்பது பெரியவர்கள் குடிக்கக்கூடிய பானமாக இருந்ததில்லை என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

யாரெல்லாம் பால் குடிக்கக்கூடாது?

தொடக்கத்தில் இந்த லாக்டேஸ் என்சைம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளிடம் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் மனிதனின் தினசரி பால் அருந்தும் பழக்கத்தால் காலப்போக்கில் மனித உடல் தன்னை மாற்றிக்கொண்டது எனவும், எனவே இயற்கையாக பால் என்பது பெரியவர்கள் குடிக்கக்கூடிய பானமாக இருந்ததில்லை என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

"பால் என்பது அஜீரணக் கோளாறுகளுடன் நேரடி தொடர்புடையது. சிலர் மிகவும் சாதாரணமாக தினமும் ஒரு லிட்டர் பால் வரை குடிப்பார்கள். ஆனால் லாக்டோஸ் அலர்ஜி இருப்பவர்களுக்கு அரை கிளாஸ் பால் குடித்தால் கூட வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். இவர்கள் பாலை தவிர்க்க வேண்டும்." என்கிறார் மருத்துவர்.

"மாட்டுப்பாலில் அதிகளவு சத்துக்கள் உள்ளதால் இதை குழந்தைகளுக்கு கொடுப்பதால் எடை கூடும் தான், ஆனால் அதை மட்டுமே கொடுப்பது நல்லதல்ல. சில குழந்தைகள் மாட்டுப்பாலை குடித்துவிட்டால் வேறு உணவுகளை தவிர்த்து விடுவார்கள். அது ஆபத்தானது, ஏனென்றால் மாட்டுப்பாலில் இரும்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது."

"ஒரு குழந்தை 13 லிட்டர் பால் குடித்தால் தான் ஒரு நாளுக்கு தேவையான இரும்பு சத்தைப் பெற முடியும். அவ்வளவு பால் குடிப்பது சாத்தியமில்லை. அது மட்டுமில்லாது பாலில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் கிடைக்கும் சிறிதளவு இரும்பு சத்தையும் பாதியாக குறைத்து விடும். எனவே ரத்தசோகை ஏற்படும்" எனக் கூறுகிறார் மருத்துவர் அருண் குமார்.

"ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தவிர சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை. ஆனால் சில குழந்தைகளுக்கு நான்கு மாதத்தில் கூட மாட்டுப்பால் கொடுக்கிறார்கள். இதனால் புரதம் சார்ந்த அலர்ஜி ஏற்பட்டு, வயிற்றில் இரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு கூட உள்ளது. நீர்சத்து குறைபாடு முதல் சிக்கல்கள் உண்டாக வாய்ப்புள்ளது. 2 வயதுக்கு மேல் தான் மாட்டுப்பாலை நன்றாக ஜீரணிக்கும் சக்தி அவர்களுக்கு வரும்" என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

 
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா
படக்குறிப்பு,

ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்

தினசரி எவ்வளவு பால் குடிக்கலாம்?

சில ஆண்டுகளுக்கு முன்பு 'கிரிக்கெட் வீரர் தோனிக்கு மிகவும் பிடித்த பானம் பால். தினமும் நான்கு லிட்டர் பசும்பால் குடிப்பதால் தான் அவரால் எளிதாக ஹெலிகாப்டர் ஷாட்களை அடிக்க முடிகிறது' என்ற செய்தி இணையத்தில் பரவியது. இதற்கு ஒரு பேட்டியில் பதிலளித்த தோனி, தான் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் வரை மட்டுமே எடுத்துக்கொள்வதாக கூறியிருந்தார்.

"தோனியைப் போல அனைவராலும் 1 லிட்டர் பாலை தினசரி எடுத்துக்கொள்ள முடியாது. அவர் செய்யும் உடற்பயிற்சிக்கு அது சரியாக இருக்கலாம். சராசரி மனிதர்களுக்கு அது ஆரோக்கியமானது அல்ல, ஆனால் 400 மில்லி வரையிலான பால் அல்லது 400 கிராம் தயிர் நிச்சயமாக எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

"இப்போது பல குடும்பங்களில் வாரத்தில் இரண்டு அல்லது ஒரு நாள் மட்டும் தான் அசைவ உணவு எடுத்துக்கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு தினமும் பால் எடுத்துக்கொள்வது நல்லது தான். ஆனால் முதியவர்களுக்கு பால் தொடர்பான அஜீரணக் கோளாறுகள் இருந்தால், மோராக 400 மில்லி வரை எடுத்துக்கொள்ளலாம்." என்கிறார் அவர்.

பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,SARAVANAKUMARM/FACEBOOK

படக்குறிப்பு,

ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார்.

பாலுடன் சர்க்கரை சேர்த்து குடிக்கலாமா?

"காலையில் 200 மில்லி, இரவில் 200 மில்லி என ஒரு நாளுக்கு 400 மில்லி வரை பாலை எடுத்துக்கொள்வது பாதுகாப்பான அளவு. ஆனால் பாலில் சர்க்கரை கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் ஏற்கனவே போதுமான அளவு கலோரிகள் உள்ளதால், தொடர்ந்து பல வருடங்களுக்கு பாலில் சர்க்கரை சேர்த்து குடிப்பது உடலுக்கு ஆபத்தாக மாறிவிடும்" என எச்சரிக்கிறார் ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார்.

"உதாரணமாக ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து இருவேளை பால் குடிக்கிறோம் என்றால், ஒரு நாளுக்கு 40 கிராம் சர்க்கரை. அதுவே ஒரு மாதத்திற்கு என கணக்கு போட்டால் பாலுடன் மட்டுமே ஒரு கிலோவுக்கு அதிகமான சர்க்கரையை நாம் உட்கொள்கிறோம். குழந்தை பருவத்திலிருந்தே இதை செய்கிறோம் என்றால் சற்று யோசித்து பாருங்கள். எனவே சர்க்கரை இல்லாமல் பால் குடிப்பது ஒரு நல்ல வழியாக இருக்கும்"

"அல்சர், லாக்டோஸ் அலர்ஜி இருந்தால் கண்டிப்பாக பாலை தவிர்க்க வேண்டும். அஜீரணக் கோளாறுகள் இருந்தால் பால் அருந்தக் கூடாது. கால்சியம் சத்து பெறுவதற்கு பால் தவிர்த்து பார்த்தால், அசைவம் உண்பவராக இருந்தால் ஆட்டுக் கால் சூப், முட்டையின் வெள்ளைக் கரு, ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். நெய், வெண்ணெய், நிலக்கடலை, கீரைகள் ஆகியவையும் கால்சியம் நிறைந்த உணவுகள்" என்று கூறுகிறார் ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார்.

 
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏ1 அல்லது ஏ2 பால், எது சிறந்தது?

நாட்டு ரக மாடுகளின் ஏ2 ரக பால் புரதம் நிறைந்தது என்றும் ஏ1 ரகம் சார்ந்த வெளிநாட்டு மாடுகளின் பாலை தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் உட்பட பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து உண்மையா என மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம்.

"இது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்துள்ளன. பாலில் உள்ள சில புரத அமைப்புகளில் வேறுபாடுகள் இருக்கிறது, ஆனால் ஏ1 பால் உடலுக்கு நல்லதல்ல என்பதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை. நம் நாட்டு மாடுகளில் 98% ஏ2 ரக பாலை தரக்கூடியவை தான். எருமைப் பால் என்பது 100% ஏ2 தான். வெளிநாட்டு மாட்டினமான ஜெர்சி மாடுகள் கூட ஏ2 பாலை தான் கொடுக்கின்றன. சில வெளிநாட்டு இனங்கள் மட்டுமே ஏ1 ரக பாலைக் கொடுக்கின்றன." என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்ட போது, "ஏ1 பாலா, ஏ2 பாலா என ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. கடைகளில் அல்லது பண்ணைகளில் கிடைக்கும் பாலை நன்கு காய்ச்சி குடித்தாலே போதும்" என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cn3mg8rkxypo

குழந்தைகளின் வயிற்றுக்குள் குடற்புழுக்கள் வருவது எப்படி? அவற்றை எவ்வாறு நீக்க வேண்டும்?

1 month 1 week ago
குடற்புழு வருவது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஓம்கார் கர்ம்பேல்கர்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மார்ச் 2024

குடற்புழுக்கள் ஒரு பெரிய பிரச்னை. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மற்றும் பிற காரணங்களால் புழுக்கள் உடலில் நுழையலாம்.

மலத்தில் நீண்ட புழுக்கள் இருப்பது, வயிற்று வலி மற்றும் ஆசன வாயில் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை ஆய்வு செய்த பிறகு நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது.

வயிற்றில் காணப்படும் இந்த புழுக்கள் இரைப்பை புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. வட்டப்புழுக்கள், தட்டைப்புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளன. நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைச் சுழற்சிகளில் அவற்றின் விளைவுகள் மாறுபடும்.

சாட்டைப்புழுக்கள் மற்றும் கொக்கிப்புழுக்கள் மண்ணின் வழியாக வயிற்றுக்குள் நுழைகின்றன.

புழுக்கள் எவ்வாறு பரவுகின்றன?
புழுக்கள் எவ்வாறு பரவுகின்றன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

புழு நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் கைகளை சரியாகக் கழுவாததால் ஏற்படுகின்றன.

புழுக்களின் முட்டைகள் மண்ணுடன் தொடர்பு கொள்வது, அசுத்தமான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது புழுக்கள் வயிற்றுக்குள் நுழைவதற்கு வழிவகுக்கும்.

மோசமான கழிவுநீர் மேலாண்மை மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் உள்ள பகுதிகளிலும் இந்த தொற்று பரவுகிறது. வேக வைக்கப்படாத இறைச்சி மற்றும் புழுக்கள் உள்ள மீன்களை சாப்பிடுவதும் இந்த பிரச்னையை ஏற்படுத்தும். சில சமயங்களில் செல்லப் பிராணிகளுக்கு கூட தொற்று ஏற்படலாம்.

நூற்புழு தொற்று பல குழந்தைகளில் காணப்படுகிறது. நீளமான கயிறு போல் தோற்றமளிக்கும் இந்தப் புழுக்களின் முட்டைகள் வயிற்றில் நுழையும்போது பிரச்னை ஆரம்பமாகிறது. பின்னர் அவை ஆசன வாயில் முட்டைகளை இடுகின்றன.

இந்த முட்டைகளை ஆடை, பொம்மைகள், பல் துலக்குதல், சமையலறை, குளியலறை தரை, படுக்கையறை, உணவு ஆகியவற்றில் பரப்பலாம்.

இந்த பொருள்கள் மற்றும் மேற்பரப்புகளைத் தொட்ட பிறகு, அதே கையை வாயில் வைப்பது உடலுக்குள் நுழையலாம். வட்டப்புழுக்களின் முட்டைகள் சுமார் இரண்டு வாரங்கள் உயிர் வாழும்.

வயிற்றை அடைந்த பிறகு, முட்டைகள் லார்வாக்களாக உருவாகின்றன. ஓரிரு மாதங்களில் அவை நீண்ட கிருமிகளாக மாறிவிடும்.

 
புழுக்களை அழிக்க என்ன செய்ய வேண்டும்?
புழுக்களை அழிக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, குழந்தைகள் மீண்டும் அத்தகைய மேற்பரப்பைத் தொட்டால் மீண்டும் தொற்று ஏற்படலாம்.

எனவே, குழந்தைகள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கைகளை கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

புழுக்களை அழிக்க இதை செய்ய வேண்டும்

  • அனைவரும் கைகளை கழுவ வேண்டும், நகங்களை வெட்ட வேண்டும்.
  • சாப்பிடுவதற்கு முன், கழிப்பறைக்குச் சென்ற பிறகு, குழந்தைகளின் நாப்கின்களை மாற்றிய பின் கைகளைக் கழுவ வேண்டும்.
  • குழந்தைகள் அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினமும் குளிக்க வேண்டும்.
  • துலக்குவதற்கு முன்னும் பின்னும் டூத் பிரஷ்களைக் கழுவவும்.
  • துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகளை சூடான நீரில் கழுவவும். பொம்மைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • சமையலறை மற்றும் குளியலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 
குடற்புழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்போது இந்தப் புழுக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு (என்.எச்.எஸ்.) இதற்கென சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

  • எதையும் சாப்பிடும் முன் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மலம் கழித்த பின் கைகளை சோப்பினால் கழுவ வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட அல்லது பாட்டில் தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசிகள் போட வேண்டும். அவற்றின் கழிவுகளை விரைவில் அகற்ற வேண்டும்.
  • நாய், பூனை கழிவுகளுக்கு அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது. தொற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள சுகாதாரமற்ற இடங்களில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதைத் தவிர்க்கவும்.
  • அசுத்தமான இடங்களில் வெறுங்காலுடன் நடக்கக் கூடாது.
 
வயிற்றுப் புழுக்களை எவ்வாறு கண்டறிவது?
  • வயிற்றில் புழுக்கள் நுழைந்த பிறகு சில அறிகுறிகள் தோன்றும்.
  • வயிற்று வலி, குமட்டல், வாந்தி.
  • பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சிலர் மலச்சிக்கலால் அவதிப்படுவார்கள்.
  • பசியின்மை மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
  • பலவீனமாகி கடுமையான சோர்வை அனுபவிக்கிறார்கள்.
  • ஆசன வாயில் அரிப்பு மற்றும் தூக்கமின்மை. பெரியவர்களுக்கு வயிற்று வாயு. சில நோயாளிகள் இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள்.
டாக்டர் ரோஹித்

பட மூலாதாரம்,RK

வயிற்றுக் கிருமிகளை ஏன் அகற்ற வேண்டும்?

நம் உடலில் உள்ள பல்வேறு வகையான கிருமிகள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளைக் காட்டுகின்றன. பல வகையான பிரச்னைகள் சிரமத்திற்கு வழிவகுக்கும்.

இரத்த சோகை குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்துடன் கூடுதலாக, அவை உறுப்பு சேதத்தை ஏற்படுத்தும்.

இவற்றை தவிர்க்க உலக சுகாதார நிறுவனம் அடிக்கடி குடற்புழு நீக்கம் செய்ய பரிந்துரைக்கிறது.

டோம்பிவிலியில் உள்ள மதுசூதன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சுகாதார இயக்குநர் டாக்டர் ரோஹித் காகு, இந்த கிருமிகளை எப்படி அகற்றுவது என்று பிபிசியிடம் விளக்கினார்.

வயிற்றில் உள்ள கிருமிகளை அகற்ற, 12-23 மாத குழந்தைகளுக்கும், ஒன்று முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கும், 5-12 வயதுடைய ஆண் மற்றும் பெண்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை தடுப்பு கீமோதெரபி கொடுக்க வேண்டும்.

 
கிருமிகளை எவ்வாறு அகற்றுவது?

கிருமிகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல நோய்களை உண்டாக்குவதாக டாக்டர் ரோஹித் கூறினார்.

“ஆகவே ஆண்டுக்கு இருமுறை மருத்துவரின் ஆலோசனைப்படி பூச்சி விரட்டி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்த செயல்முறை இரண்டு வயது முதல் தொடங்கலாம். இந்த செயல்பாட்டில், உடலில் உள்ள ஒட்டுண்ணி வெளியேறுகிறது" என்று ரோஹித் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c0jxz44p0jpo

மதுப்பழக்கம்: இளம் வயதிலேயே மது அருந்துவதால் ஏற்படும் அபாயகரமான பாதிப்புகள்

1 month 1 week ago
மதுப்பழக்கம்: இளம் வயதில் மது அருந்துவதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நான் பல்கலைக்கழக படிப்புக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாள் எனக்கு 18 வயதானது. பிரிட்டனில் மது வாங்குவதற்கான வயது வரம்பை நான் அப்போது கடந்திருந்தேன். எனது புதிய வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் நான் சென்றபோது, வாரத்திற்கு எத்தனை யூனிட் மது அருந்துவீர்கள் எனக் கேட்டார். பிரிட்டனில் 1.5 யூனிட் என்பது, தோராயமாக ஒரு சிறிய கோப்பை அளவிலான ஒயினுக்கு சமம். நான் தோராயமாக “ஏழு” என பதிலளித்தேன்.

"இந்த எண்ணிக்கை இனியும் உயரும்” என சிரிப்புடன் பதிலளித்தார். அதிக மது அருந்துவது, ஆயுட்காலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். ஆனால் 30, 40 அல்லது 50 வயதுடைய ஒருவருடன் ஒப்பிடும்போது எனது இளமை கூடுதல் ஆபத்துகளைக் கொண்டுவரும் என்று நான் கருதவில்லை. எல்லா பெரியவர்களுக்கும் மதுவால் ஏற்படும் ஆபத்துகள் ஒரே மாதிரியாக இருக்குமா?

மதுபானம் இளம் பருவத்தினரின் மூளையை எப்படி பாதிக்கும் என்பது குறித்து எனக்கு இப்போது தெரிந்த விஷயங்களை முன்கூட்டியே நான் அறிந்திருந்தால், நான் சற்று எச்சரிக்கையாக இருந்திருப்பேன். இளம் வயதில் மது அருந்துவது நமது அறிவாற்றல் வளர்ச்சியில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.

இளைஞர்களிடையே மதுவின் தாக்கம் பற்றி ஆராய்ச்சியாளர்களிடம் பேசுகையில், அதுகுறித்து எனக்குத் தெரியவந்த தகவல்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. பிரிட்டன் அல்லது அமெரிக்காவைவிட ஐரோப்பியர்கள் ஆரோக்கியமான மதுப்பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

மேலும் இளைஞர்களை வீட்டில் உணவுடன் மது அருந்த அனுமதிப்பது அவர்களுக்கு பொறுப்புடன் மது அருந்த கற்பிக்கிறது. ஆனால், மதுவின் தாக்கம் ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்து அறிந்துகொள்வது, தங்கள் வீட்டில் மதுவை எவ்வாறு கையாள்வது என்பதைப் பெற்றோர்கள் தீர்மானிக்க உதவலாம்.

 
மூளையை சென்றடையும் ஆல்கஹால்
உடல்நலம்: இளம் வயதிலேயே மது அருந்துவதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/BBC/GETTY IMAGES

ஆல்கஹால் ஒரு நச்சு. கல்லீரல் நோய் மற்றும் பல வகையான புற்றுநோய்கள் இதனால் ஏற்படுகின்றன. "மது அருந்தும்போது, ஆரோக்கியத்தைப் பாதிக்காத பாதுகாப்பான அளவு என்று எதுவும் இல்லை" என உலக சுகாதார மையம் கூறுகிறது.

மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த பல நாடுகளில் சில வரம்புகள் உள்ளன. அமெரிக்காவில் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பானங்களுக்கு மேல் இல்லை என்றும், பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பானங்கள் இல்லை என்றும் வரையறுக்கப்படுகிறது. பல நாடுகளும் இதேபோன்ற வழிகாட்டுதலை வழங்குகின்றன.

பீர் மற்றும் ஒயின் பொதுவாக பாதுகாப்பான பானங்களாகக் கருதப்பட்டாலும், அமெரிக்க வழிகாட்டுதலின்படி, பானத்தின் வகையைக் காட்டிலும் அதில் உள்ள ஆல்கஹால் அளவுதான் பிரச்னை. "12-அவுன்ஸ் பீரில், ஐந்து-அவுன்ஸ் அளவு கோப்பை ஒயின் அல்லது 1.5-அவுன்ஸ் மதுபானத்தில் இருக்கும் ஆல்கஹால் இருக்கிறது." பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில், மது வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 18. அமெரிக்காவில் 21 வயது.

எவ்வாறாயினும், இளம் வயதினருக்கு மதுபானம் மிகவும் ஆபத்தானது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இளம்பருவத்தினர் 21 வயது வரை தங்கள் வயது உயரத்தை எட்ட மாட்டார்கள், மேலும் அவர்கள் செங்குத்தாக வளர்வதை நிறுத்திய பின்னரும்கூட, 30 அல்லது 40 வயதையொட்டியவர்களின் உடலமைப்பை அடைந்திருக்க மாட்டார்கள்.

"ஒரு கோப்பை மது அருந்துவதால், பெரியவர்களைவிட இளைஞர்களுக்கு ரத்தத்தில் அதிகளவு ஆல்கஹால் சேர்கிறது" என்று மாஸ்ட்ரிச் பல்கலைக் கழகத்தின் முதுகலை ஆராய்ச்சியாளரும் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்பவருமான ரூட் ரூட்பீன் கூறுகிறார்.

இளம் பருவத்தினரின் ஒல்லியான தேகமும் இதற்கு ஒரு காரணம். நீங்கள் மது அருந்தும்போது, அது உங்கள் ரத்த ஓட்டத்தில் நுழைந்து உங்கள் உடலில் பரவுகிறது. ஐந்து நிமிடங்களுக்குள் அது உங்கள் மூளையை அடைந்து, பொதுவாக உங்கள் மூளையை தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து பாதுகாக்கும் தடையை எளிதில் கடந்துவிடும்.

"இளைஞர்கள் மது அருந்தும்போது அதன் பெரும்பகுதி அவர்களின் மூளையைச் சென்றடைகிறது. இது, இளைஞர்கள் ஆல்கஹால் நச்சுத்தன்மையைப் பெறுவதற்கான மற்றொரு காரணம்" என்று ரூட்பீன் கூறுகிறார்.

 
'மோசமான நடத்தைக்கு வழிவகுக்கும்'
உடல்நலம்: இளம் வயதிலேயே மது அருந்துவதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/BBC/GETTY IMAGES

மண்டை ஓட்டில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். கடந்த காலத்தில், நமது பதின்பருவத்தில் நரம்பு வளர்ச்சி நின்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின்படி, இளம்பருவ மூளையானது ஒரு சிக்கலான மறுபின்னலுக்கு உட்படுகிறது, அது குறைந்தது 25 வயது வரை முடிவடையாது.

ஒரு செல் மற்றொன்றுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கும் ஒத்திசைவுகளை மூளை கத்தரிக்கும்போது "கிரே மேட்டர்" எனப்படும் சாம்பல் நிற திசுக்களைக் குறைப்பது, ஆல்கஹாலின் மிக முக்கியமான விளைவுகளுள் ஒன்று என அவர் கூறுகிறார்.

மூளையில் நடத்தை மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடைய லிம்பிக் அமைப்பு முதலில் முதிர்ச்சியடைகிறது. நெற்றிக்குப் பின்னால் அமைந்துள்ள ப்ரீஃப்ரன்டல் கோர்டெக்ஸ் எனப்படும் முன்புறணி வளரும் வேகம் மெதுவாக இருக்கும். இந்தப் பகுதி, உணர்ச்சிக் கட்டுப்பாடு, முடிவெடுத்தல் மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

இந்த இரண்டு பிராந்தியங்களின் வளர்ச்சியின் ஒப்பீடு, இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் ஏன் பெரியவர்களைவிட அதிக ஆபத்தைச் சந்திக்கிறார்கள் என்பதை விளக்கலாம். குறிப்பாக, உற்சாகமான பதின்ம வயதினருக்கு, ஆல்கஹால் மோசமான நடத்தை மற்றும் குற்றத்தின் சுழற்சியை உருவாக்கும் .

"அதாவது, அதிக மனக்கிளர்ச்சி கொண்ட இளம் பருவத்தினர் அதிகமாகக் குடிக்க முனைகிறார்கள், பின்னர் குடிப்பது மேலதிக மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது," என்கிறார், சௌத் கரோலினா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உளவியலாளர் லிண்ட்சே ஸ்குக்லியா.

இளம்பருவத்தினரின் மதுப்பழக்கம் நீண்டகால வளர்ச்சியை பாதிக்கலாம். பல ஆய்வுகள், ஆரம்பக்கால மதுப்பழக்கம் சாம்பல் நிற திசுக்கள் மிக விரைவாகக் குறைவதுடன் தொடர்புடையது என்று சுட்டிக்காட்டுகின்றன. அதே நேரத்தில் வெள்ளை நிற திசுக்களின் வளர்ச்சியும் தடைபடுகிறது," என்கிறார் அவர்.

அறிவாற்றல் சோதனைகளில் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை; இளம் பருவத்தினரின் மூளையில், சிக்கலைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான பகுதிகள் பற்றாக்குறையை ஈடுசெய்யச் சிறிது கடினமாக உழைக்கலாம். இருப்பினும் இது என்றென்றும் நீடிக்காது. "பல வருட மதுப்பழக்கத்திற்குப் பிறகு, மூளையில் குறைவான செயல்பாடு மற்றும் மோசமான செயல்திறன் ஆகியவற்றைக் காண்கிறோம்," என்கிறார் ஸ்குக்லியா.

ஆரம்பக்கால மதுப்பழக்கம் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். மேலும் எதிர்கால வாழ்க்கையில் மதுவைத் தவறாகப் பயன்படுத்துவதன் அபாயத்தை அதிகரிக்கிறது. குடும்பத்தில் ஏற்கெனவே மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இது அதிகளவில் ஏற்படுகிறது.

 
ஐரோப்பிய மதுப்பழக்கம் ஆரோக்கியமானதா?
உடல்நலம்: இளம் வயதிலேயே மது அருந்துவதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/BBC/GETTY IMAGE

இந்தக் கண்டுபிடிப்புகள் ஓர் இளம் பருவத்தினரின் தேர்வுகளை எவ்வாறு பாதிக்கலாம்? எப்படி, எப்போது வீட்டில் குடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது பற்றிய பெற்றோரின் முடிவு என்னவாக இருக்க வேண்டும்?

"முடிந்தவரை மதுப்பழக்கத்தைத் தொடங்கும் வயதைத் தாமதமாக்க வேண்டும். ஏனெனில் உங்கள் மூளை பதின்பருவத்தில் இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. மதுப்பழக்கத்தை தொடங்குவதற்கு முன் உங்கள் மூளை முடிந்தளவு ஆரோக்கியமாக இருக்கட்டும்," என்கிறார் அவர்.

இந்த அறிவுரை சட்டத்தில் இணைக்கப்பட வேண்டுமா என்பது வேறு விஷயம். மது அருந்துதல் பற்றிப் பொது வெளிகளில் தாம் பேசும்போது, "ஐரோப்பிய மதுப்பழக்க மாதிரி" குறித்துக் கேள்வி எழுப்பப்படுவதாக ஸ்குக்லியா கூறுகிறார். பிரான்ஸ் போன்ற சில நாடுகளில், சிறார்களுக்கு ஒரு கிளாஸ் ஒயின் அல்லது பீர், குடும்ப உணவுடன் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

ஐரோப்பாவிற்கு வெளியேயும்கூட, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மதுவை மெதுவாக அறிமுகப்படுத்துவது இளைஞர்களுக்குப் பாதுகாப்பாக மது அருந்த கற்றுக் கொடுக்கிறது என்றும், பிற்காலத்தில் அதிகமாக மது அருந்துவதைக் குறைக்கிறது என்றும் பல பெற்றோர்கள் நம்புகிறார்கள்.

இதுவொரு கட்டுக்கதை. "ஆல்கஹாலை பயன்படுத்துவதில் பெற்றோர்கள் எவ்வளவு அதிகமாக அனுமதிக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஒரு சிறார் பிற்காலத்தில் மதுவால் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றனர்" என்கிறார் ஸ்குக்லியா. "இளமைப் பருவத்தில் மது அருந்துவது தொடர்பான கடுமையான விதிகளைப் பெற்றோர்கள் விதிப்பது மதுபழக்கம் மற்றும் அதுதொடர்பான ஆபத்தான நடத்தைகளுடன் பெருமளவில் தொடர்புடையது," என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

ஆஸ்திரியாவில் உள்ள ஜோஹன்னஸ் கெப்லர் பல்கலைக்கழக லின்ஸில் அலெக்சாண்டர் அஹம்மர் மேற்கொண்ட ஆய்வைக் கவனியுங்கள். அங்கு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் சட்டப்பூர்வமாக பீர் அல்லது ஒயின் வாங்கலாம். கடுமையான சட்டங்கள் மது அருந்துவதற்கான விருப்பத்தை மட்டுமே அதிகப்படுத்தினால், அமெரிக்காவைவிட ஆஸ்திரியா ஆரோக்கியமான மதுப்பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அங்கு மது அருந்துவதற்கான குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயது 21. ஆனால் இது விஷயமல்ல.

உடல்நலம்: இளம் வயதிலேயே மது அருந்துவதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/BBC/GETTY IMAGES

இரு நாடுகளிலும் ஒருவர் குறைந்தபட்ச வயதைக் கடந்த பிறகு அதிகமாக மது அருந்துகின்றனர். "ஆனால் இந்த எண்ணிக்கை, அமெரிக்காவில் 21 வயதில் இருந்ததைவிட ஆஸ்திரியாவில் 16 வயதில் 25% அதிகமாக இருந்தது," என்று அலெக்சாண்டர் அஹம்மர் கூறுகிறார்.

அமெரிக்கர்கள் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது சற்று அதிகமாக இருப்பது, மதுபானங்களை வாங்க அனுமதிக்கப்படும்போது மிகவும் பொறுப்பான நடத்தையை ஊக்குவித்ததாகத் தோன்றியது.

"ஆல்கஹால் சட்டப்பூர்வமாக மாறும்போது, பதின்வயதினர் முன்பைவிட மிகவும் குறைவான அபாயத்திற்கு ஆளாகின்றனர்," என்று அஹம்மர் கூறுகிறார். 16 வயதில், அத்தகைய தவறான பாதுகாப்பு உணர்வு ஆபத்தானதாக இருக்கலாம், அதேநேரம் 21 வயதில், அதிக முதிர்ச்சியடைந்த மூளை மதுபானத்தைக் கையாளுவதற்கு ஓரளவு சிறப்பாக மாறியுள்ளது.

ஐரோப்பிய மதுப்பழக்கம் ஆரோக்கியமானது என்பது முற்றிலும் உண்மையில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஐரோப்பிய பிராந்தியத்தில் ஆல்கஹால் காரணமாக ஏற்படும் புற்றுநோய்களில் மிதமான ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படுகிறது என்று தரவு சுட்டிக்காட்டுகிறது.

அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், அரசாங்கங்கள் சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயதை 25 அல்லது அதற்கு மேல் அமைக்க வேண்டுமா? தனிப்பட்ட சுதந்திரம் பற்றிய மக்களின் கருத்துகளுக்கு எதிராக பொது சுகாதார நலன்கள் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், இது அவ்வளவு எளிதல்ல என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"ஒரு கட்டத்தில் மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும்" என அஹம்மர் ஒப்புக்கொள்கிறார்.

இளம் பருவத்தினருக்கு மதுவின் அபாயங்கள் மற்றும் மதுவால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிறந்த கல்வியை வழங்கலாம் என்று, ஹாமில்டனில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் போதைக்கு அடிமையாதல் குறித்து ஆய்வு செய்து வரும் ஜேம்ஸ் மெக்கிலாப் பரிந்துரைக்கிறார்.

நீண்ட கால உடல்நல அபாயங்களை அறிந்திருந்தும், இன்றும் நான் மது அருந்துகிறேன். ஆனால் சுற்று கூடுதலாக மதுபானங்களை வாங்குவதற்கு முன் நான் இரண்டு முறை யோசிக்க இவை வழிவகுக்கலாம்.

*டேவிட் ராப்சன் விருது பெற்ற அறிவியல் எழுத்தாளர். அவரது அடுத்த புத்தகம் `தி லாஸ் ஆஃப் கனெக்‌ஷன்: தி டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் சயின்ஸ் ஆப் பீயிங் (The Laws of Connection: The Transformative Science of Being Social), ஜூன் 2024இல் கனோகேட் (பிரிட்டன்) மற்றும் பெகாசஸ் புக்ஸ் (அமெரிக்கா&கனடா) ஆகியவற்றால் வெளியிடப்படும்.

https://www.bbc.com/tamil/articles/cndj3xd229yo

Checked
Tue, 04/16/2024 - 23:20
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed