நாவூற வாயூற

"பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்" 

3 hours 8 minutes ago

"பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்" 

 

மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக 
7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும்.

இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம். 

ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்

முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை. 

இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது:

"தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை, 

பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்"

ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது:

"முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்,"

"Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire"

It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues 

"Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)"

இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது:

"நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு." 

"Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.]

என்கிறது.

மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.

 
இறுதியாக, 


இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள். 


அவர்களுக்கு 


அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன. 

இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்?


அப்படி என்றால் நீராவிச் சமையல் ??


உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன் 

 
நன்றி


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

No photo description available. No photo description available. No photo description available. No photo description available. May be an image of pastaMay be an image of textMay be an image of text

 

 

"மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை"

1 day 4 hours ago

"மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை"

 

 

பண்டைய சுமேரியாவில் பொதுவாக பெண்களின் வேலை அல்லது பங்கு வீட்டு பணிகளில் இருந்தே வருகிறது. கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi] ஒன்று "மது" பெண் தெய்வமான நின்காசியையும் [Ninkasi: “வாய் நிரப்பும் பெண்மணி] மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] பாராட்டுகிறது. பொதுவாக மது வடிப்போர் /காய்ச்சுவோர் அங்கு பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் முன்பு, துணை உணவாக மது, வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த ஒரு வகைச் சாராயத்தை /பீர் மது பானத்தை [beer] விற்கவும் முடியும். அதாவது பெண்கள் தவறணை காப்பாளராகவும் இருக்க முடியும். மேலும் அந்த துதி பாடல் சேர்மானங்களையும் செய்முறையையும் விளக்கமாக கொண்டுள்ளது. உதாரணமாக புளிக்கச் செய்யப் பயன் படும் பொருள் முதல், ஊற வைத்தல், நொதித்தல், வடித்தல் என்பனவற்றின் விபரங்களை தருகிறது.
 
 
"நின்காசி, நியே மாவை [dough] ஒரு பெரிய வாரி [shovel] மூலம்
குழியில் கலாவுகிறாய்-
பார்லி ரொட்டியையும் [bappir] தேனையும்
[இந்த தேன் பேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம்? வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்படுகிறது?]
 
நின்காசி, நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக் கிறாய்-
உமி தானியங்ககளை [hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து
[வடித்தலின் போது "பப்பிர்" [bappir: பார்லி ரொட்டி] ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகிறது. ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது. மற்றது அரைத்தலுக்கான புரதங்களையும் சுவைகளையும் தருகிறது]
 
நியே பார்லி முளை தானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்-
பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது
நின்காசி, நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்-
அலைகள் ஏறுகின்றன, அலைகள் இறங்கு கின்றன
[இந்த அசைவு மறை முகமாக அரைத்தலை குறிக்கலாம் ? அப்பொழுது முளை தானியமும் பப்பிரும் மேல் அதிக பார்லி உடன் சேர்க்கப் படுகிறது? அத்துடன் இந்த மசியல் அதிகமாக சூடாக்கி இருக்கலாம்?]
 
நின்காசி, நியே சமைத்த கூழாகிய களியை [cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்-
சூடு தணிகிறது, குளிர்ச்சி வெற்றி கொள்கிறது
[இது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஒன்று பாவித்த தானியத்தின் உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் இது உதவி இருக்கலாம்? அது மட்டும் அல்ல, சாராயத்துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால், நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும். ஏன் என்றால் உயர் வெப்பம் மாவை புளிக்க வைக்க உதவும் பொருளின் [yeast / புளிச்சொண்டியின்] ஆற்றலை குறைத்து விடும் என்பதால்]
 
நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய் -
அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய்
[இது உண்மையில் தேனா? அல்லது பேரீச்சம் பழம் சாறா? என்பது ஒரு கேள்விக் குறியே. அது மட்டும் அல்ல, திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையின் தோலில் இயற்கையாகவே "ஈஸ்ட்" ['yeast'] காணப்படுகிறது. ஆனால் ஒயினில் [wine] அப்படி அல்ல. அங்கு "ஈஸ்ட்" இன் செயற்படு அற்று காணப்படுகிறது. ஆகவே இது திராட்சை ரசமாக இருக்க முடியாது. அது அதிகமாக திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையாக இருக்கலாம்?]
 
நின்காசி, வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது-
நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில் [large collector vat] சரியாக வைக்கிறாய்"
[இந்த இன்பமான ஒலி அதிகமாக, சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பீர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்?]
 
அது மட்டும் அல்ல, இந்த துதி பாடலில் இருந்து நாம் எப்படியான பாராட்டுதலை அல்லது புகழ்ச்சியை ."பீர் மதுபான பெண் தெய்வம்" பெற்றால் என அறிய முடிகிறது. மேலும் நின்காசிக்கும் பீர் மது பானத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் பலமானது என்பதையும் அறிய முடிகிறது. உதாரணமாக மேலும் இரண்டு புகழ்ச்சியை கிழே தருகிறோம்.
 
"நின்காசியே, நியே, வடித்த பீர் மது பானத்தை மரத் தொட்டியில் இருந்து ஊற்றுகிறாய். அது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆறு மாதிரி வேகமாய்ப் பாய்கிறது [Ninkasi, you are the one who pours out the filtered beer of the collector vat, It is [like] the onrush of Tigris and Euphrates]"
 
மற்றது
 
"குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards] [and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்தல் ஆகும்.
 
மேலும் மெசொப் பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது, சாடி ஒன்றில் இருந்து. பீர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது.
 
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.”
(குறள் 926)
 
என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது, உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார். என்றாலும் நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது, அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில், ஆண் பெண் இரு பாலாரிடமும், ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது.  துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை, புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார், தனது புறநானுறு 235 இல்,
 
"சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;"
 
என்று எடுத்து உரைக்கிறார். அதாவது, சிறிதளவு கள்ளைப் பெற்றால் அதியமான நெடுமான் அஞ்சி அதை எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; என்கிறார் ஒளவையார். மேலும் அகநானுறு 336:
 
"தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்"
 
என கூறுவதையும் காண்க, அதாவது, தெளிந்த கள்ளினைக் குடித்து, பெண்கள், நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்து விட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின் நீழலில் குரவை [கைகோத்து ஆடப்படும்] ஆடுதலைச் செய்யும் மகளிர் என்கிறது. அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை [275-281] இல், மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன், பட்டிணப் பாலை [106 -110] இல், கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம்.
 
"அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல் அடை அளைஇ தேம்பட
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த
வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி"
-பெரும்பாணாற்றுப்படை(275-281)
 
அதாவது, குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நல்ல வாசனையுள்ள கள் என்கிறது.
 
"துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
மகளிர்கோதை மைந்தர் மலையவும்"
- பட்டிணப்பாலை[106-110]
 
அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available. No photo description available.
 

தினமும் பரோட்டா சாப்பிட்டால் என்ன ஆகும்? மைதா பற்றிய உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

2 days 14 hours ago
தினமும் பரோட்டா சாப்பிடலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

மைதா உணவு என்றாலே பலரது நினைவுக்கும் உடனே வருவது ‘பரோட்டா’ மட்டும் தான்.

“நான் மைதா உணவே எடுத்துக்கொள்வதில்லை, எப்போதாவது மாதம் ஒருமுறை மட்டுமே பரோட்டா. அதுவும் கோதுமை பரோட்டா தான்” என்பார்கள்.

ஆனால், மைதா என்பது பரோட்டாவில் மட்டுமில்லாமல் நமது பெரும்பாலான அன்றாட உணவுகளில் கலந்துள்ளது. உதாரணமாக, பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் பிரெட்கள் மைதாவால் செய்யப்பட்டவையே.

இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீட்சா, பர்கர், பாஸ்தா, நூடுல்ஸ், ஆகிய உணவுகளில் இருப்பது மைதாவே. கேக்குகள் மற்றும் பாதுஷா, குலாப் ஜாமுன், ஜிலேபி, சோன் பப்டி போன்ற பல பிரபலமான இனிப்புகளை மைதா இல்லாமல் செய்ய முடியாது.

மாலை வேளையில் தேநீருடன் எடுத்துக்கொள்ளும் பிஸ்கட், சமோசா, பகோடா, ரஸ்க், பப்ஸ், இவை அனைத்திலும் மைதா உள்ளது. இப்படியிருக்க தினமும் ஏதேனும் ஒரு வகையில் நாம் மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறோம்.

நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்?

 
தினமும் பரோட்டா சாப்பிடலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

“மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?” என்று பொது மக்கள் சிலரிடம் கேட்டோம்,

“மரவள்ளிக்கிழங்கில் இருந்து தான் மைதா தயாரிக்கப்படுகிறது. பரோட்டா சாப்பிட்டாலே அது தெரியும்” என்று ஒருவர் கூறினார்.

மற்றொருவர், “மரவள்ளிக்கிழங்கைப் பொடித்து தான் மைதா மாவு செய்கிறார்கள். கேரளாவில் அதைக் கப்பக்கிழங்கு என்பார்கள், அதனால் தான் பரோட்டா அங்கு பிரபலமான உணவு” என்றார்.

“எதிலிருந்து வந்தால் என்ன, மைதா கண்டிப்பாக உடலுக்கு கேடு” என்று சமோசாவை சாப்பிட்டுக் கொண்டே ஒரு இளைஞர் கூறினார்.

“கோதுமையின் கழிவு தான் மைதா, அந்த கழிவில் ஒரு ஆபத்தான ரசாயனத்தை கலந்து மைதா செய்கிறார்கள்” என்றார் ஒரு பெண்.

உண்மையில் மைதா எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது, அதன் மூலப்பொருள் என்னவென தெரிந்துகொள்ள குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமாரிடம் கேட்டோம்.

“நெல்லில் உமி, தவிடு, உள்ளிருக்கும் அரிசி என மூன்று விதமான லேயர்கள் இருக்கும். உமியை நாம் அகற்றிவிடுவோம். தவிடுடன் இருக்கும் அரிசியைத் தான் பிரவுன் அரிசி என்போம். தவிட்டை நீக்கிவிட்டால் பட்டைத் தீட்டப்பட்ட அரிசி (Polished) என்கிறோம்.

அதே போல கோதுமையிலும் உமியை நீக்கிவிட்டு தவிடுடன் மாவாக்கி பயன்படுத்தினால் வழக்கமான கோதுமை. அதுவே தவிடு நீக்கப்பட்ட கோதுமையை மிகவும் மிருதுவாக அரைத்தால் அது மைதா, வெளிநாட்டில் 'ஆல் பர்பஸ் ஃப்ளோர்' (All purpose flour) என்பார்கள். மைதா என்பது பாஸ்மதி அரிசி போன்ற ஒரு அரிசி வகைக்கு சமமான ஒன்று தான்” என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதே தவிடு நீக்கிய கோதுமையை மிருதுவாக இல்லாமல் சாதாரணமாக அரைத்து கிடைப்பதே ரவை. எனவே ரவைக்கும் மைதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மைதாவை அதிகம் எடுத்துக்கொள்வது கண்டிப்பாக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல தான். ஆனால் அதற்காக மைதா மீது மட்டும் இருக்கும் இந்த அதீத பயமும் தேவையில்லை. இணையத்தில் உலவும் சில தவறான தகவல்கள் இதற்கு காரணம்” என்றார்.

தினமும் பரோட்டா சாப்பிடலாமா

பட மூலாதாரம்,DRARUNKUMAR/FACEBOOK

படக்குறிப்பு,குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்.
மைதாவின் வெள்ளை நிறம் எப்படி பெறப்படுகிறது?

கோதுமையை அரைத்து தான் மைதா கிடைக்கிறது என்றால், கோதுமை மாவு போல பழுப்பு நிறத்தில் இல்லாமல் பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் மைதா இருப்பது எப்படி, இப்படி வெள்ளை நிறத்திற்கு மைதாவை கொண்டுவர ஏதேனும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறதா என மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம்.

“மைதா என்பதே அதன் வெள்ளை நிறத்திற்காக தான் அறியப்படுகிறது. மைதாவில் இருந்து செய்யப்படும் பிரெட், பன், கேக், பிஸ்கட், பரோட்டா என அந்த வெள்ளை நிறமும், மிருதுவான தன்மையும் தான் மைதாவை ஒரு முக்கிய உணவுப் பொருளாக மாற்றியுள்ளது."

"கோதுமையின் பழுப்பு நிறம் மைதாவில் வரக்கூடாது என்பதற்காக ப்ளீச் (Bleach) எனப்படும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதைச் சுற்றி தான் பல சர்ச்சைகள் உள்ளன. ப்ளீச் என்பது ஆக்சிசனேற்றம் (Oxidation) எனும் செயல்முறை தான். பள்ளியில் இதைப் பற்றி படித்திருப்போம். இந்த வேதியியல் செயல்முறை மூலம் கோதுமையின் பழுப்பு நிறமியை நீக்கிவிடலாம்."

"இதற்காக குளோரின் வாயு, பென்சாயில் ஃபெராக்ஸைடு போன்ற சில ப்ளீச்சிங் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அது சரியான அளவில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். "

"இதையெல்லாம் தாண்டி, ப்ளீச்சிங் செயல்முறை முடிந்து இறுதியாக மைதா கிடைக்கும்போது அதில் இந்த ரசாயனங்கள் இருக்காது என்று தான் உணவுத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

 
தினமும் பரோட்டா சாப்பிடலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மைதா நீரிழிவை ஏற்படுத்துமா?

மைதாவை ப்ளீச் செய்யும்போது அலோக்ஸன் எனும் ரசாயனம் அதில் சேர்க்கப்படுகிறது என்றும், இந்த ரசாயனம் நீரிழிவை உண்டாக்கும் என்றும் கூறப்படுகிறது, இது குறித்து மருத்துவரிடம் கேட்டபோது,

“2016இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது, மைதாவில் நீரிழிவை உண்டாக்கும் அலோக்ஸன் சேர்க்கப்படுகிறது, எனவே மைதாவை தடைசெய்ய வேண்டுமென மனுதாரர் கூறியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மைதா கொண்டு செய்யப்படும் உணவுகளை ஆய்வு செய்ய உணவுத் துறைக்கு உத்தரவிட்டது."

"அவ்வாறு உணவுத் துறை ஆய்வு செய்து பார்த்ததில், ஆபத்து விளைவிக்கக்கூடிய ரசாயனங்கள் மைதாவில் இல்லை என்பது உறுதியானது. இந்த அலோக்ஸன் குறித்துப் பார்த்தால், அது மைதாவில் ப்ளீச்சிங் முறைக்கு கலக்க மாட்டார்கள். மாறாக அது ஆக்சிசனேற்றம் முறையின் போது தானாக உருவாகக்கூடிய ஒருதுணைப் பொருள். எல்லா மைதாவிலும் குறைந்தபட்ச அளவில் அது இருக்கும்."

"பயம் ஏன் வருகிறது என்றால், எலிகளை வைத்து செய்யும் ஆய்வுகளில் அவற்றுக்கு செயற்கையாக நீரிழிவு நோய் வரவைக்க இந்த அலோக்ஸன் பயன்படும். ஆனால் மைதாவில் இருக்கும் அலோக்ஸனை அந்த ஆய்வுகளுக்கு பயன்படும் அலோக்ஸன் 25,000 மடங்கு வீரியமானது. அதனால் அதையும் இதையும் ஒப்பிட முடியாது. அப்படி பார்த்தால் பிஸ்கட், பரோட்டா உண்ணும் பலர் இன்று நீரிழிவு நோயாளிகளாக மாறியிருக்க வேண்டுமல்லவா."

"எனக்கு மைதா உணவுகள் வேண்டாம் என்று ஒதுக்குவது சரிதான், காரணம் மைதாவில் மாவுச்சத்து அதிகம் மற்றும் நார்ச்சத்து மிகக் குறைவு. எனவே அதைவிட்டு அறிவியல் ஆதாரமற்ற காரணங்களுக்காக மைதாவை ஒதுக்கத் தேவையில்லை” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

 
தினமும் பரோட்டா சாப்பிடலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மைதாவுக்கு மாற்றா கோதுமை?

“இன்று கோதுமையில் செய்யப்படும் பிரெட், பிஸ்கட், பரோட்டா இவையெல்லாம் மைதா உணவுகளுக்கு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், கோதுமை பரோட்டாவிலும் கூட மைதா சேர்க்கப்படுகிறது."

"அதேபோல வெறும் கோதுமையை வைத்து கோதுமை பிரெட் அல்லது கோதுமை பிஸ்கட் தயாரிக்க முடியாது, அதில் குறிப்பிட்ட அளவு மைதா சேர்க்கப்பட வேண்டும். காரணம் மைதாவின் மிருதுவான தன்மை."

"எனவே 2 மைதா பரோட்டாவிற்கு பதிலாக, கோதுமை ஆரோக்கியமானது என்பதற்காக 5 அல்லது 6 சப்பாத்தி சாப்பிட்டாலும் அது அதிக மாவுச் சத்து தான். அதனால் மைதா சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை அளவாக அல்லது மிகக்குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது” என்றார் மருத்துவர் அருண்குமார்.

தினமும் பரோட்டா சாப்பிடலாமா
படக்குறிப்பு,ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.
மைதாவில் உள்ள சத்துக்கள் என்ன?

மைதாவில் உள்ள சத்துக்கள் குறித்து நம்மிடம் பேசினார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன், “கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மைதாவில் மாவுச் சத்து தான் அதிகமாக உள்ளது. உதாரணமாக 100 கிராம் மைதாவில் 351 கலோரிகள் உள்ளது. மேலும் 10.3 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 2.76 கிராம் நார்ச்சத்து, 74.27 மாவுச்சத்து உள்ளது.” என்றார்.

 
தினமும் பரோட்டா சாப்பிடலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மைதாவால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் என்ன?

“பொதுவாக மைதா கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களில் அதிகமான கொழுப்பு சேர்க்கப்படுகிறது. பரோட்டாவில் அதிக எண்ணெய் சேர்க்கப்படுகிறது. சோலே பட்டூரா, மிகப் பிரபலமான மைதா கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள். அதை எண்ணெயில் பொரித்து தான் எடுக்கிறார்கள்."

"இதுபோக மைதா கொண்டு செய்யப்படும் பிஸ்கட்டுகள், பலகாரங்கள் என அனைத்தும் அளவுக்கு அதிகமான இனிப்பும் எண்ணெயும் கொண்டு தான் செய்யப்படுகிறது. ஏற்கனவே அதிக மாவுச் சத்துள்ள மைதாவில் இதுபோன்ற துணைப்பொருட்களும் சேரும்போது அது உடலுக்கு கேடாக மாறுகிறது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

தொடர்ந்து பேசிய அவர், “நீரிழிவு உள்ளவர்கள் கண்டிப்பாக அதை எடுக்கக்கூடாது. காரணம் எந்த நார்ச்சத்தும் இல்லாத மைதா சேர்த்த உணவை குறைவாக எடுத்தாலும் கூட இரத்த சர்க்கரை அளவு உடனே கூடும். உடல்பருமன் உள்ளவர்களும் இதைத் தவிர்க்க வேண்டும்."

"முக்கியமாக எடை அதிகமாக உள்ள பெண்களும் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மேலும் எடை கூடும்போது, மாதவிடாய் தள்ளிப்போவது முதல் பல பிரச்னைகள் ஏற்படலாம்” என்று கூறுகிறார் தாரிணி கிருஷ்ணன்.

https://www.bbc.com/tamil/articles/cxwvmjjlxdxo

தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட 'பக்கோடா' உலகெங்கும் பரவியது எப்படி?

1 week 2 days ago
ரமலான் - பக்கோடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், உருஜ் ஜாஃப்ரி
  • பதவி, பிபிசி இந்திக்காக இஸ்லாமாபாத்திலிருந்து
  • 9 ஏப்ரல் 2024

பக்கோடாவும் இஸ்லாமியர்களின் நோன்பு மாதமான ரமலானும் ஒன்றோடொன்று இணைந்தது.

இஃப்தார் (நோன்பு திறப்பு) மேசையில் பக்கோடா பரிமாறப்படாத எந்த முஸ்லிம் குடும்பமும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்க வாய்ப்பில்லை.

இஃப்தார் நேரமும் மாலை தேநீர் நேரமும் ஒன்றுதான்.

ஒவ்வொரு குடும்பத்திலும் மாலை நேரத்தில் தேநீருடன் பக்கோடாவும் தயாரிக்கப்படுகிறது. ஆனால், பக்கோடாவின் வரலாறு எவ்வளவு பழமையானது என்பது பற்றி பல்வேறு கூற்றுகள் உள்ளன.

பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களின்படி, பக்கோடா கி.பி. 1025 முதலே உள்ளது.

அவை முதலில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

பக்கோடா சாப்பிடும் பழக்கம்
பக்கோடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பருப்புகளை அரைத்து, அதனை காய்கறிகளுடன் கலந்து பக்கோடா தயாரிக்கப்பட்டது. அதை மக்கள் பொறித்து சாப்பிட்டனர். மக்கள் இதை பக்கவாடா (Pakavata) என்று அழைத்தனர். அதாவது, சமைத்த உருண்டை அல்லது கட்டி என்பது இதன் பொருள்.

இது பல இடங்களில் பாஜியா என்றும் அழைக்கப்படுகிறது.

1130 இல் வெளியான மானசொல்லாசம் (Manasollas) மற்றும் 1025 இல் வெளியிடப்பட்ட லோகோபகாரம் (Lokapakara) ஆகிய வரலாற்று உணவு நூல்களில், பாஜியா அல்லது பக்கோடா செய்ய, காய்கறிகளை கடலை மாவில் கலந்து, மீன் வடிவ அச்சில் பொறித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு, கீரை, வெங்காயம், பச்சை மிளகாயுடன் காய்ந்த மசாலாப் பொருட்களைக் கலந்து பக்கோடாக்கள் தயாரிக்கப்படுகின்றன. ரவை மற்றும் அரிசி மாவு இதில் பயன்படுத்தப்படுகின்றன.

பக்கோடா அல்லது பாஜியாவில் ஊருக்கு ஏற்ப சில வித்தியாசங்கள் இருப்பதாகவும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் பக்கோடா பரவியது எப்படி?
ரமலான் மாதத்திற்கும் பக்கோடாவுக்கு என்ன தொடர்பு? உலகம் முழுவதும் பக்கோடா பிரபலமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கடல் மார்க்கமாக இந்தியக் கடற்கரைக்கு வந்த போது, நீண்ட காலம் கெடாமல் இருக்கும் பண்டங்களைத் தேடினர் என்றும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்த்துகீசியர்கள் பொதுவாக இந்திய சமையல்காரர்களை பயணத்தின் போது தங்களுடன் வைத்திருப்பார்கள். அந்த சமையல்காரர்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், கத்தரிக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் பச்சரிசி மாவு மற்றும் மசாலா சேர்ந்து வறுத்த காய்கறிகளை போர்ச்சுகீசியர்களுக்கு உணவாக வழங்குவர்.

வறுத்த பிறகு அவற்றின் ஈரப்பதம் நீக்கப்பட்டதால், அவை நீண்ட காலத்திற்கு கெட்டுப்போவதில்லை.

போர்ச்சுகீசியர்களால்தான் பக்கோடாக்கள் ஜப்பானை சென்றடைந்தன. ஜப்பானில் பருப்பு பயிரிடப்படாததால், அங்குள்ள மக்கள் காய்கறிகள் மற்றும் உலர்ந்த மசாலாப் பொருட்களுடன் பருப்பால் ஆன மாவுக்குப் பதிலாக மைதா மாவைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஜப்பானிய டெம்புரா பிறந்தது இப்படித்தான்.

இன்றும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பேருந்தில் பயணம் செய்தாலும், ரயிலில் பயணம் செய்தாலும், பக்கோடா, பாஜியா, போண்டா போன்றவற்றை சட்னியுடன் சேர்த்து எடுத்துச் செல்வதுதான் வழக்கம்.

இந்திய-பாகிஸ்தானிய பக்கோடாக்கள், ஜப்பானிய மற்றும் பிரிட்டிஷ் ஃபிரிட்டர்ஸ் வகை உணவு மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளின் ஃபாலாஃபெல், அனைத்து உணவுகளும் ஒன்றுக்கொன்று உறவினர்கள் போல் தெரிகிறது.

பக்கோடாக்களுக்கான மாவு பருப்பு மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஃபிரிட்டர்ஸ் உணவுக்கு மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், ஃபாலாஃபெலுக்கு வேகவைத்த பயிரை அரைத்து மாவு தயாரிக்கப்படுகிறது.

 
ரமலானுக்கும் பக்கோடாவுக்கும் என்ன தொடர்பு?
ரமலான் மாதத்திற்கும் பக்கோடாவுக்கு என்ன தொடர்பு? உலகம் முழுவதும் பக்கோடா பிரபலமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உணவு மற்றும் பானங்கள் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்த புஷ்பேஷ் பந்த், பக்கோடாவின் வரலாறு பற்றி கூறுகையில், "பக்கோடாவின் வரலாறு உணவு வரலாற்றில் இல்லை, ஆனால் உணவுகள் வறுத்த உணவுகளின் வரலாற்றில் உள்ளது. ரமலான் மாதத்தில் இதன் பயன்பாடு பெரிது. இவ்வகை உணவுகள் எண்ணெயில் பொறித்தது என்பதால், சீக்கிரம் கெட்டுப்போகாது. கடலை மாவு என்பதால் சத்தானது. மேலும், இதை உங்களுக்குப் பிடித்த காய்கறிகள் மற்றும் சட்னிகளுடன் சாப்பிடலாம்” என்றார்.

நோன்பு திறப்பின்போது நமக்குப் பிடித்தமான காரமான மற்றும் இனிப்பு உணவுகளை உண்ண நம் இதயம் விரும்புகிறது.

பக்கோடா என்பது ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய ஓர் உணவு. அதன் தயாரிப்புக்கான அனைத்து பொருட்களும் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும்.

பக்கோடாக்கள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலம். இதற்கு ஒரு காரணம், அவை இரண்டு நாடுகளின் வானிலைக்கும் ஏற்றது. இதுவே காலப்போக்கில் பக்கோடா தயாரிப்பதில் பல வகைகள் தோன்றியதற்குக் காரணம்.

உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டுமின்றி, தாமரை, வெள்ளரிக்காய், மீன் போன்றவற்றையும் கடலை மாவில் கலந்து பக்கோடாவாக செய்வார்கள்.

புஷ்பேஷ் பந்த் கூறுகையில், "முஸ்லிம்கள் இறைச்சியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் அவர்களின் இஃப்தார் உணவு அட்டவணை இது தவறு என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில், ரமலானின் போது, உணவு மேசையில் உருளைக்கிழங்கு சாட் மற்றும் சாட் பக்கோடாக்கள் கிடைக்கும். மேலும் உருளைக்கிழங்கு-வெங்காயம் பக்கோடாவும் கிடைக்கும். ஒருபுறம், அது காரமான சுவையை அளிக்கிறது. மறுபுறம், இது நோன்பு இருப்பவர்களின் உடலில் சோடியம் மற்றும் புரதத்தின் அளவையும் சமநிலையில் வைத்திருக்கிறது" என்றார்.

 
பாகிஸ்தான் பக்கோடாக்கள்
ரமலான் மாதத்திற்கும் பக்கோடாவுக்கு என்ன தொடர்பு? உலகம் முழுவதும் பக்கோடா பிரபலமானது எப்படி?

பட மூலாதாரம்,UROOJ JAFRI

படக்குறிப்பு,

உருஜ் ஜாஃப்ரி

பாகிஸ்தானின் பிரபல சமையல் கலைஞரான ஜுபைதா அபா இப்போது உயிருடன் இல்லை. ஆனால், அவருடைய சமையல் கலை தந்திரங்கள் மற்றும் உணவு வகைகளை இன்னும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சமையலறைகளில் பயன்படுத்துகின்றனர்.

அவரது மகள் ஷாஷா ஜாம்ஷெட் கூறுகையில், "அம்மா பக்கோடாவில் இனிப்பு சோடாவைப் பயன்படுத்துவார். அதனால் பக்கோடா மென்மையாகவும், லேசாகவும் இருந்தது. அது ரமலான் மாதமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி, ஒருவர் தேநீர் மற்றும் பக்கோடாவுடன் அரட்டையடிக்கலாம், நோன்பு திறக்கலாம்” என்றார்.

பாகிஸ்தானில், ரமலான் மாதத்தில் ஒவ்வோர் இனிப்பு கடையிலும் பக்கோடா மற்றும் ஜிலேபி கிடைக்கும். உருளைக்கிழங்கு பக்கோடா பல தசாப்தங்களாக மக்களின் விருப்பத்தில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்ப அதில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

பெஷாவரில், கீமா அல்லது சிக்கன் பக்கோடாக்களும் கிடைக்கின்றன. அதேபோல், கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் கோழி மற்றும் கடல் உணவுகளுடன் கூடிய பக்கோடாவும் கிடைக்கும்.

 
ரமலான் மாதத்திற்கும் பக்கோடாவுக்கு என்ன தொடர்பு? உலகம் முழுவதும் பக்கோடா பிரபலமானது எப்படி?

பட மூலாதாரம்,UROOJ JAFRI

படக்குறிப்பு,

ஆயிஷா அலி பட்

லாகூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஆயிஷா அலி பட் கூறுகையில், "பருப்பு மாவின் சுவை வித்தியாசமானது. ஆனால், மற்ற நாடுகளில் பக்கோடா மாவு மற்றும் அரிசி மாவு கலவையில் செய்யப்படுகிறது" என்றார்.

“பிரிவினை மூலம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் உருவாக்கியவர்களுக்கு அவமானம். அசாம் முதல் பஞ்சாப் சிந்து வரை, கேரளா முதல் காஷ்மீர் வரை எங்கு முஸ்லிம்கள் இருந்தார்களோ, அங்கெல்லாம் பக்கோடாக்களும் இருந்தன” என்கிறார் புஷ்பேஷ் பந்த்.

"ஒடிசாவிலும் வெங்காயத்தில் இருந்து தயாரிக்கப்படும் பியாஜி உள்ளது. அதேசமயம் வங்காளத்தில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் கலந்து பைகுனி எனும் உணவு கிடைக்கும். தென்னிந்தியாவில் காய்கறிகளை பொடியாக நறுக்கி பாஜியா செய்யப்படுகிறது. பிகாரில் நிறுபருப்பை அரைத்துத் தயாரிக்கப்படுகிறது. காஷ்மீரில் வேகவைக்கப்பட்ட தாமரை, வெள்ளரி பக்கோடாக்கள் நாதிர் மோஞ்சி என்று அழைக்கப்படுகின்றன."

பிரிட்டனில் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே பிரிட்டனிலும் பக்கோடாக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

லண்டனில் மழை பெய்யும் போதெல்லாம், பிபிசி உருது சேவையின் மூத்த சக ஊழியரான ராசா அலி அபிதி சாப், மத்திய லண்டனில் உள்ள டிரம்மண்ட் தெருவில் இருந்து கலவையான பக்கோடாக்களையும் ஜிலேபிகளையும் கொண்டு வருவார்.

பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் உலகில் எங்கிருந்தாலும் பக்கோடா விருந்து இல்லாமல் ரமலான் அல்லது மழைக்காலத்தைக் கொண்டாடுவதில்லை.

https://www.bbc.com/tamil/articles/crg3kv4r872o

மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?

3 weeks ago
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அரிசியின் வெவ்வேறு வகைகள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 29 மார்ச் 2024, 02:21 GMT

உலக அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40% இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதை விட உலகிலேயே அதிக அரிசியை உட்கொள்ளும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம், ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 90 முதல் 100 மில்லியன் மெட்ரிக் டன் உணவுகளை இந்தியர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுவும், தென்னிந்தியாவின் பிரதான உணவுகளில் அரிசி முதன்மையானது என்பதை நாம் அறிவோம்.

அதற்கேற்றாற்போல் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான அரிசி வகைகள் விளைவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையில் அரிசி நமக்கு சரியான உணவுதானா? அதனால் நமக்கு நன்மையா அல்லது தீமையா?

எந்த அரிசியை சாப்பிடுவது மனிதர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உள்ளிட்ட அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு உணவு நிபுணர்களின் பதில் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரிசியின் வகைகள் என்னென்ன?

தமிழர்களின் உணவு பாரம்பரியத்தில் தினை வகைகளே தொன்று தொட்டு தொடர்ந்து வரும் உணவுகள். ஆனால், இடையில் வந்த அரிசியும் தினைகளுக்கு இணையான இடத்தை பிடித்துக் கொண்டது.

தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் நாம் பெரும்பாலும் உட்கொள்வது வெள்ளை நிறத்தில் கிடைக்கும் பாலிஸ் செய்யப்பட்ட அரிசிதான்.

அதைத் தாண்டி ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்றவாறு ஒவ்வொரு வகையான அரிசி வகை இருப்பதாக கூறுகிறார் சிவாலயா மருத்துவமனையின் இயற்கை மருத்துவரான மருதராஜ்.

அரிசியில் பாரம்பரிய அரசி மற்றும் ஹைபிரிட் அரிசி வகைகளும் கிடைக்கின்றன. பாரம்பரிய அரிசிகள் உடலுக்கு நல்லது என்றாலும், ஹைபிரிட் அரிசியை முழுமையாக கெடுதல் என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார் அவர். அதுவே இந்தியாவின் பெரும்பான்மையான உணவுத் தேவையை பூர்த்தி செய்வதாகவும் குறிப்பிடுகிறார் .

இதில் எந்த அரிசியாக இருந்தாலும் பட்டை தீட்டப்படாத அரிசி என்பதே உடலுக்கு நல்லது என்கிறார் அவர்.

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும்.

அரிசியின் சத்துக்கள் எப்படி காணாமல் போகிறது?

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அரிசியில் கலோரி, புரதம், மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), நார்ச்சத்து, மினரல்கள், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

"ஆனால், இந்த சத்துக்கள் அனைத்தும் அரிசியை பட்டைதீட்டும் போது வெளியேறி விடுகின்றன. உதாரணத்திற்கு ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும். முதல் அடுக்கு நாம் மேலே பார்க்கும் உமி. அடுத்த அடுக்கு பிரான்(Bran) என்று அழைக்கப்படும் தவிடு. இதை நீக்காமல் கிடைக்கும் அரிசிதான் ப்ரவுன் அரிசி. மூன்றாவது அதுக்குதான் endosperm என்று அழைக்கப்படும் மாவுச்சத்து நிறைந்த நடுப்பகுதி. மற்ற அனைத்தையும் நீக்கிவிட்டு வெள்ளை நிறத்தில் நாம் உட்கொள்ளும் பகுதியும் இதுவே."

"இப்படி மேலே இருக்கக்கூடிய புரதங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றை நீக்கும்போது மக்கள் அதிக மாவுச்சத்து நிறைந்த அரிசியை உண்ண வேண்டிய சூழல் வருகிறது. இதன் நீட்சியாக உடலில் சர்க்கரை நோய் உள்ளிட்டவை ஏற்பட வழிவகுக்கிறது" என்று கூறுகிறார் மருத்துவர் மருதராஜ்.

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கருப்புகவுனி அரிசி

கருப்பு கவுனி அரிசி என்றால் என்ன?

சமீப காலமாகவே பலரும் கருப்பு கவுனி அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் பேசி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக இது தீர்க்காத நோயை கூட தீர்த்து விடும் என்பது போன்றெல்லாம் வீடியோக்கள் பரவி வருகின்றன. உண்மையில் அதன் பயன் என்ன என்று மருத்துவர் மருதராஜிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அவர், “கருப்பு கவுனி அரிசி அந்த நிறத்தில் இருக்க காரணம் ஒருவகை நிறமிதான். அதற்கு சாதாரண அரிசியை விட 15% கூடுதல் நலன்கள் இருக்கிறதே தவிர, அதன் மூலம் எந்த நோயையும் சரிப்படுத்த முடியாது. கருப்புகவுனி அரிசியில் கூடுதல் ஆன்டிஆக்ஸிடன்டுகள் இருப்பதால் அது உடலுக்கு ஒரு சில நன்மைகளை தரும் அவ்வளவுதான்” என்கிறார்.

மற்றபடி 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் இருக்கும் மாவுச்சத்தின் அளவில் இருந்து ஓரிரண்டு கிராம்களே கருப்பு கவுனி அரிசியில் குறைவாக இருக்கிறது என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

அதே போல் 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் 1-2 கிராம் நார்ச்சத்து இருந்தால், கருப்பு கவுனியில் 4-5 கிராம் நார்ச்சத்தே காணப்படுகிறது.

 
அரிசி

பட மூலாதாரம்,AATHICHOODI

படக்குறிப்பு,

மருத்துவர் மருதராஜ்

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?

சமீப காலமாக அரிசி கொடுத்து தேடப்படும் முக்கியமான தகவல்களில் செறிவூட்டப்பட்ட அரிசியும் (Fortified rice) ஒன்று.

இதுகுறித்து கேட்டபோது, “உணவுச்சந்தை என்பது மிகப்பெரிய கடல். இதில் உணவை விற்பதற்காக சொல்லப்படும் பல பரப்புரைகளில் இதுவும் ஒன்று” என்கிறார் மருத்துவர் மருதராஜ்.

அவரது கூற்றுப்படி, செறிவூட்டப்பட்ட அரிசி என்பது இயற்கையாகவே ஊட்டச்சத்துகளோடு விளைவிக்கப்படும் அரிசியில், செயற்கை முறையில் கூடுதல் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் செயல்முறை ஆகும்.

இதில் ரசாயனம் அல்லது எந்த முறையில் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகிறது என்று தெரியாததால் அது நல்ல அரிசியா என்று தீர்மானிப்பது கடினம் என்கிறார் அவர்.

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ்.

சீரக சம்பா vs மாப்பிள்ளை சம்பா வித்யாசம் என்ன?

தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளில் இந்த சம்பா வகை அரிசிகளும் ஒன்று. இதில் இந்த சீரக சம்பா அரிசி அளவில் சிறியதாகவும் அதே சமயம் நறுமணம் வாய்ந்ததாகவும் இருக்கும்.

மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ். அந்த காலங்களில் புதுமணம் முடிந்து வரும் மணமகனுக்கு இந்த அரிசி சோறுதான் பரிமாறப்படுமாம். அதனால் தான் இந்த பெயர் பெற்றதாகவும் கூறுகிறார் அவர்.

“இதன் நிறம் காரணமாக இதில் வைட்டமின் ஏ மிக அதிகமாக இருக்கும். ஆனால், இதை சமைக்கும் செயல்பாடு நீண்டதும், அதிக நேரம் எடுக்க கூடியதும் ஆகும்.”

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும்

காட்டுயானம் அரிசி என்றால் என்ன? அது உடலுக்கு நல்லதா?

பாரம்பரிய அரிசியை விரும்பி உண்பவர்களில் பலர் கூட இந்த காட்டுயானம் அரிசி குறித்து கேள்விப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

இதன் உயரம் பெரிது என்பதால் காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும். கருப்பு கவுனி அரிசியை போலவே இதையும் குறைந்தது 10 மணிநேரமாவது ஊற வைத்து சமைக்க வேண்டும்.

இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் இதர அரிசிகளில் காணப்படும் சத்துக்களும் உள்ளன.

இதுவும் மலச்சிக்கல் தீர்வு, வயதான தோற்றத்தை தாமதப்படுத்தல், ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்துதல், ரத்த சர்க்கரையை உயராமல் பார்த்துக்கொள்ளுதல் போன்ற பலன்களை கொண்டுள்ளது.

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

"பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்கள் நீங்காமல் இருக்கும்”

ரேஷன் அரிசி நல்லதா?

பொதுவாகவே மக்கள் மத்தியில் அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி குறித்த சந்தேகம் இருந்து வருகிறது. காரணம் அதன் நிறம். ஆனால், அது பழுப்பு நிறத்தில் இருக்க காரணம் அதை பெரியளவு பட்டை தீட்டாததே காரணம் என்கிறார் மருத்துவர் மருதராஜ்.

“மக்கள் பெரும்பாலும் வெள்ளை அரிசிதான் நல்லது என்று வாங்கி உண்ணும் அரிசியில் பெரியளவு மாவுச்சத்து மட்டுமே உள்ளது. ஆனால், இது போன்ற பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்களும் நீங்காமல் இருக்கும்” என்கிறார் அவர்.

எனவே ரேஷன் அரிசி தரமானது தான். அதை மக்கள் தாராளமாக உண்ணலாம் என்கிறார் மருதராஜ்.

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

“அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம்" என்கிறார் மருதராஜ்.

எந்த அரிசியை தேர்வு செய்வது?

இன்றைய காலகட்டத்தில் அரிசியிலும் வெவ்வேறு வகைகளில் தொடங்கி, வித விதமான கலப்படங்கள் வரை வந்துவிட்டன. இந்நிலையில் ஆரோக்கியமான வாழ்வை வாழ மக்கள் எந்த அரிசியை உண்ண வேண்டும் என்று மருதராஜிடம் கேட்டோம்.

இதற்கு பதிலளித்த அவர், “அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம். ஆனால், அளவாக உண்ண வேண்டும். அது கருப்பு கவுனியோ அல்லது எந்த வகை அரிசியாக இருந்தாலும் எல்லை மிகாமல் சாப்பிட வேண்டும்.”

“அதில் பட்டை தீட்டப்படாத அரிசியாக இருந்தால் உடல் நலத்திற்கு கூடுதல் நல்லது. ஆனால், அதுவும் உங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்களை தருமே தவிர, உங்களது நோய்களை போக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்”

https://www.bbc.com/tamil/articles/c3gj24ql6x4o

ஆரோக்கியமான சமையல் எண்ணெய் எது? மருத்துவர்கள் கூறுவது என்ன?

3 weeks 2 days ago
  • சமையல் எண்ணெய்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    கட்டுரை தகவல்
    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்
    • 27 மார்ச் 2024, 02:42 GMT

    இந்திய சமையலில் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெயும், தென் பகுதியில் கடலை மற்றும் நல்லெண்ணெயும், கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் தேங்காய் எண்ணெயும் பல வருடங்களாக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தந்த பகுதிகளின் புவியியல் அமைப்பு, சீதோஷண நிலை, கலாச்சாரம், உணவு மற்றும் சமைக்கும் முறை போன்ற அம்சங்களின் அடிப்படையில் மக்கள் இந்த எண்ணெய்களுக்கு பழகி விட்டனர்.

இவை தவிர்த்து, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யப்பட்ட சூரிய காந்தி எண்ணெய், செம்பனை எண்ணெய் (Palm oil), ஆலிவ் எண்ணெய் போன்றவையும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

உணவின் சுவையை தீர்மானிப்பதே எண்ணெய் தான் என சொல்லப்பட்டாலும் கூட, பெரும்பாலானோருக்கு கொழுப்பு என்றவுடன் உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் தான் நினைவுக்கு வருகிறது. அதிலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டோர் பலர் எண்ணெய் கலந்த உணவு என்றாலே சற்று விலகி நிற்கிறார்கள்.

எண்ணெய் பயன்படுத்தாத உணவு என்பது வேகவைத்த உணவு மட்டுமே, ஆனால் அவை தினமும் எடுத்துக்கொள்வதற்கு ஏற்றதாகவும், அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்ததாக இருக்குமா என்றால் இல்லை என்று தான் ஆய்வுகள் சொல்கின்றன.

சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது நல்லது? எண்ணெய் என்றால் கொழுப்பு மட்டும் தானா? ரீஃபைண்டு எண்ணெயை விட செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லதா? எண்ணெய் கலந்த உணவுகளைப் பார்த்து அச்சம் கொள்வது அவசியமா? போன்ற கேள்விகளுக்கான விடையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 
ஆரோக்கியமான சமையல் எண்ணெய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran) போன்றவற்றில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன

எண்ணெயில் உள்ள கொழுப்புகள் உடலுக்கு என்னென்ன?

தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் என எடுத்துக்கொண்டால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகியவற்றை சொல்லலாம். இந்த மூன்று எண்ணெய்களிலும் என்னென்ன கொழுப்புகள் உள்ளன, அவை உடலுக்கு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என பார்க்கலாம்.

எண்ணெய்களில் உள்ள கொழுப்பை மூன்று வகைகளாக பிரிக்கலாம், சாச்சுரேட்டட் (Saturated), மோனோ அன்சாச்சுரேட்டட் (monounsaturated), பாலி அன்சாச்சுரேட்டட் (Poly unsaturated). தேங்காய் எண்ணெய், பாமாயில், நெய், வெண்ணையில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம். மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆலிவ் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது.

நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran) போன்றவற்றில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன.

1. தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு மிக அதிகம் (82%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிகக் குறைவு (6%), பாலி அன்சாச்சுரேட்டட் இன்னும் குறைவு (2%).

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது, இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். உயர்- வெப்ப சமையலுக்கு இந்த எண்ணெய் உகந்ததாக இருக்கும்.

அதே வேளை, தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகளால், அதை அதிகம் எடுத்துக் கொண்டால் கெட்ட கொழுப்பு உருவாகி, இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. தேங்காய் எண்ணெயில் கலோரிகளும் மிக அதிகம்.

 
ஆரோக்கியமான சமையல் எண்ணெய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது, இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

2. நல்லெண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு மிகக் குறைவு (14%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (42%), பாலி அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (40%).

எள் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளும் நிறைந்துள்ளன, இது உடலின் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.

3. பாமாயிலில் சாச்சுரேட்டட் சற்று அதிகம் (49%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (37%), பாலி அன்சாச்சுரேட்டட் மிகக் குறைவு (9%)

பொதுவாக பாமாயிலை எடுத்துக்கொண்டால், அது மலிவானது என்றும், ஆரோக்கியமற்றது என்ற எண்ணமும் உள்ளது. ஆனால் இதில் வைட்டமின் இ எனப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இந்த எண்ணெய் ஆரோக்கியமற்றது, கெடுதலானது என்பதற்கு போதிய மருத்துவச் சான்றுகள் இல்லை.

சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் ரீஃபைண்டு எண்ணெயாக பாமாயில் பெறப்படுவதால் அதற்குரிய சில சிக்கல்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. எனவே பாமாயிலை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ரீஃபைண்டு எண்ணெய் என்றால் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

பாமாயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் ரீஃபைண்டு எண்ணெயாக பாமாயில் பெறப்படுவதால் அதற்குரிய சில சிக்கல்கள் உள்ளன

செக்கு எண்ணெய் Vs ரீஃபைண்டு எண்ணெய்.

செக்கு எண்ணெய் என்பது மிகவும் பழமையான முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய். பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் முறைப்படி, மாடுகள் கொண்டு இழுக்கப்படும் ஒரு செக்கில், எண்ணெய் விதைகள் அரைக்கப்பட்டு, எண்ணெய் எடுக்கப்படும். சில நாடுகளில் குதிரைகளும், ஒட்டகங்களும் கூட செக்கிழுக்க பயன்படுகின்றன.

இவ்வாறு செக்கில் அரைக்கப்பட்டு கிடைக்கும் எண்ணெய் கோல்ட் பிரஸ்டு ஆயில் (Cold pressed oil) என்று அழைக்கப்படுகிறது. அதாவது செக்கில் அரைக்கப்படும் போது, உள்ளிருக்கும் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு மேல் செல்லாது.

குறைவான வெப்பநிலையில் செக்கில் விதைகள் அரைக்கப்படுவதால், அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் இயற்கையான வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள் (Anti oxidants) என எல்லாம் அதன் அசல் வடிவில் இருக்கும். இதனால் எண்ணெயில் மனம் மற்றும் சுவை அதிகமாக இருக்கும்.

இதனால் தான் செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த எண்ணெயின் தயாரிப்பு செலவு அதிகம். காரணம், செக்கின் மூலமாக விதைகளில் இருக்கும் 30 முதல் 40% எண்ணெயை மட்டுமே பிரித்தெடுக்க முடியும். இதனால் கழிவு அதிகமாக இருக்கும்.

செக்கு எண்ணெய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுவே இயந்திரத்தால் அரைக்கப்பட்டு எண்ணெய் தயாரிக்கும் போது (Expeller pressed oil), 80 முதல் 90% எண்ணெயை பிரித்தெடுக்க முடியும். ஆனால் உள்ளிருக்கும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என்பதால் எண்ணெயின் இயற்கை தன்மை மாறிவிடும்.

இதற்கு பிறகு வந்த முறைதான், சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு. விதைகளை நன்றாக அரைத்து, பின்னர் அதனுடன் எக்சேன் (Hexane) எனப்படும் வேதியியல் பொருளைக் கலக்கப்படும். விதைகளில் உள்ள 100% எண்ணெயை இந்த எக்சேன் எடுத்துவிடும். பின்னர் அடுத்த கட்டத்தில் எண்ணையில் கலந்துள்ள எக்சேன் பிரிக்கப்படும்.

பின்னர் பல்வேறு வேதியியல் முறைகள் மூலமாக அந்த எண்ணெய் சுத்திகரிக்கப்படும். இறுதியாக மனமும் சுவையும் அதிகம் இல்லாமல், சுத்தமாக, தண்ணீர் போல நமக்கு கிடைப்பதே ரீஃபைண்டு எண்ணெய்.

கடந்த சில வருடங்களாக மக்களால் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran oil) போன்றவை எக்சேன் பயன்படுத்தி எடுக்கப்படும் ரீஃபைண்டு எண்ணெய்களே.

 
ஆரோக்கியமான சமையல் எண்ணெய்
படக்குறிப்பு,

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறையின் தலைவருமான எஸ்.சந்திரசேகர்.

செக்கு எண்ணெய் தான் நல்லதா?

“சந்தேகமே வேண்டாம், செக்கு எண்ணெய் தான் நல்லது. அறிவியல் ஆய்வுகள் மூலம் நமக்கு தெரியவருவது அதுதான்” என்கிறார் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறையின் தலைவருமான எஸ்.சந்திரசேகர்.

தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாகவே சீதோஷண நிலை, வாழ்வாதார நிலை, உணவுப் பொருட்களுக்கு ஏற்றவாறு எண்ணெய் வகை மற்றும் அளவு மாறும். எல்லா வகை எண்ணெய்களிலும் நல்ல கொழுப்பும் உள்ளது, அது உடலுக்கு கண்டிப்பாக தேவை." என்றார்.

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நமது சீதோஷண நிலைக்கு ஏற்ற எண்ணெய் என்றால் அது நல்லெண்ணெய் தான். ஆனால் எவ்வளவு எண்ணெய் சேர்க்கிறோம் என்பது முக்கியம். ஒருவருக்கு இதய நோய், கொழுப்பு பிரச்னை, உயர்ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்தால் எண்ணெய் அளவு மாறுபடும்” எனக் கூறுகிறார் சந்திரசேகர்.

“நல்லெண்ணெய் தவிர்த்து ஆலிவ் எண்ணெய் சிறிதளவு பயன்படுத்தலாம். பொரிப்பதற்கு ரைஸ் பிரான் எண்ணெய் பயன்படுத்தலாம், வறுப்பதற்கு கடலை எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றை குறைவாக எடுத்துக்கொள்ளலாம்."

"எனவே ஒரு எண்ணெய் மட்டுமில்லாமல் எல்லா எண்ணெய்களையும் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. உதாரணமாக ஒரு நாளுக்கு ஒருவருக்கு 15 மில்லிலிட்டர் எண்ணெய் போதுமானது. ஒரு மாதத்திற்கு 450 முதல் 500 மில்லிலிட்டர் என்பது உகந்தது” என்கிறார்.

“எண்ணெய்யை அறவே தவிர்ப்பது என்பது நல்லதல்ல. அவ்வாறு தவிர்த்துவிட்டு வெறும் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவதால், உடலில் பல மாற்றங்களும் சத்துக்குறைபாடும் ஏற்படும். எனவே எண்ணெய் மனித உடலுக்கு என்பது மிகவும் அவசியம், ஆனால் எவ்வளவு எண்ணெய்யை எந்த உணவுப் பொருளுடன் எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார் மருத்துவர் எஸ்.சந்திரசேகர்.

 
ஆரோக்கியமான சமையல் எண்ணெய்
படக்குறிப்பு,

ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

எந்த சமையல் எண்ணெய் உடலுக்கு நல்லது?

இது குறித்து பேசிய ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன், “தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நல்லெண்ணெய் தான் சிறந்த எண்ணெய், ஏனென்றால் அதில் தான் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. அதிகம் எடுத்துக்கொண்டால் நல்லதல்ல என்பதைத் தாண்டி, நல்லெண்ணெயில் ஆபத்துகள் பெரிதாக இல்லை. பெயருக்கு ஏற்றாற்போல இது நல்ல எண்ணெய் தான்” என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், “அதோடு சேர்த்து கடலை எண்ணெய் மற்றும் ரைஸ் பிரான் எண்ணெய்யையும் நான் பரிந்துரை செய்வேன். பாமாயிலையும் பயன்படுத்தலாம், ஆனால் நல்லெண்ணெய் அளவுக்கு நல்லதல்ல” என்கிறார்.

ஆனால் எந்த எண்ணெயாக இருந்தாலும், ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும் என்பதையும் அவர் விளக்கினார்.

“ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தினால் அது நிறைவுறாக் கொழுப்புகளாக மாறும். இதனால் இதய நோய்கள், புற்றுநோயை ஏற்படுத்தும். ஒருநாளைக்கு 3 ஸ்பூன் அளவிலான எண்ணெய் என்ற அளவைத் தாண்டி அதிகமான எண்ணெய்யை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகள் அதிகரித்துவிடும். உடல் எடை கூடுவதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளுக்கு அது வழிவகுத்துவிடும்” என எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

https://www.bbc.com/tamil/articles/c8v3lqd5j2eo

அடுப்பே இல்லாமல் சோறு, சாம்பார், பொறியல் செய்வது எப்படி? உடலுக்கு நல்லதா?

1 month 2 weeks ago
நோ ஆயில், நோ பாயில்: அடுப்பே இல்லாமல் சோறு, சாம்பார், பொறியல் செய்வது எப்படி? உடலுக்கு நல்லதா?
உடல்நலம்: ‘நோ ஆயில், நோ பாயில்’ - சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?

பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM

2 மார்ச் 2024

முருங்கை கீரையை வைத்து வடை, வாழைக்காயை வைத்து கட்லெட் தொடங்கி, அரிசியே இல்லாமல் சோறு, எண்ணெய் இல்லாத ஃபிரைட் ரைஸ், மைதா இல்லாமல் நூடுல்ஸ் என, ‘நோ ஆயில், நோ பாயில்’ என்ற கான்செப்ட் தான் இப்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாக உள்ளது.

அடுப்பு தேவையில்லை, ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் சமைக்காமலேயே சில முறைகளைப் பயன்படுத்தி, பதப்படுத்தி இந்த வகை உணவுகள் தயாரிக்கப்படும் வீடியோக்கள் சமீப நாட்களாக வைரலாகி வருகின்றன.

அரிசிக்குப் பதிலாக ஊறவைத்த அவல்தான் சோறு. இதனால், அடுப்பில் வைக்காமலேயே சோறு தயாராகிவிடும். தவிர, அடுப்பில் வைக்காமலேயே சாம்பார், ரசம், புளிக்குழம்பு, பொறியல், தயிர் இல்லாத மோர்க்குழம்பு, இனிப்பு வகைகள் என ஒரு ‘முழு சாப்பாடு’ இந்த முறையில் சமைக்கப்படுகிறது.

’ஆதிகாலத்தில் இப்படித்தான் சாப்பிட்டோம்’, ‘இந்த முறையில் சாப்பிட்டால் உடலுக்கு உணவின் முழு சத்தும் கிடைக்கும்’ என்பதே இம்முறை சமையலின் ஆதரவாளர்கள் கூறும் கருத்தாக உள்ளது.

இந்த முறை உணவுகள் எப்படி தயார் செய்யப்படுகின்றன, சமைக்காமலேயே காய்கறிகளைச் சாப்பிடலாமா, அவை எல்லோருக்கும் ஏற்றதா? இவ்வகை உணவுகளால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

எப்படி தயார் செய்யப்படுகின்றது?
உடல்நலம்: பயர் வகைகள், காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களும் விளைவுகளும்

பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM

கோயம்புத்தூரில் உள்ள ‘படையல்’ உணவகத்தை நடத்தி வரும் சிவக்குமார், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சுமார் 2,500 உணவு வகைகளை உருவாக்கியுள்ளதாக பிபிசியிடம் கூறுகிறார்.

அவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். முழுக்க காய்கறி சார்ந்த ‘வீகன்’ உணவுகள்தான் இங்கு கிடைக்கும். பால், தயிர் உள்ளிட்டவையும் தாவர அடிப்படையிலானதே. இங்கு ’மயோனீஸ்’ முந்திரியால் செய்யப்படுகிறது. இதே முறையில் உணவு வழங்கும் சில உணவகங்கள் சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

’நறுக்குதல், ஊற வைத்தல், கலத்தல்’ - இந்த சமையல் முறையின் மூன்று அடிப்படை செயல்முறைகள் இவைதான். ஒவ்வொரு காய்கறியையும் என்ன உணவு வகையோ அதற்கேற்ப நறுக்கிக் கொள்கிறார்கள். பின்னர், காய்கறிகளின் தன்மைக்கேற்ப தண்ணீர், இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேங்காய் பால், இளநீர் உள்ளிட்டவற்றில் ஊற வைக்கின்றனர். "இப்படி 12 ஊற வைக்கும் முறைகள் உள்ளன” என்கிறார், சிவகுமார். பின்னர்தான் இந்த உணவு வகைகள் தயாரிக்கப்படுவதாகக் கூறுகிறார் அவர்.

அரிசியைப் பொறுத்தவரை பாரம்பரிய அரிசி வகைகளை அவலாக மாற்றி, பின் ஊறவைத்து சோறு தயாரிக்கின்றனர். “இவ்வகை உணவுகளால் சத்துகள் அப்படியே கிடைக்கும். நம் குடல் நுண்ணுயிரிகளுக்கு நல்லது” என்கிறார் சிவகுமார். இவ்வகை உணவுகள் அனைவருக்கும் ஏற்றது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

ஆனால், சென்னையைச் சேர்ந்த சத்துணவு நிபுணர் தரணி கிருஷ்ணன் அனைத்து உணவுகளையும் இப்படியாக சமைக்காமல் சாப்பிட முடியாது என்கிறார்.

 
சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?
உடல்நலம்: ‘நோ ஆயில், நோ பாயில்’ - சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?

பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM

சென்னையைச் சேர்ந்த சத்துணவு நிபுணர் தரணி கிருஷ்ணன் பிபிசியிடம் இதுகுறித்துப் பேசினார். அவர் சொன்ன தகவல்கள்:

  • நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான வைட்டமின் சி (நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை) மற்றும் வைட்டமின் பி (கீரை வகைகள், பச்சைப் பட்டாணி) ஆகியவை மற்றும் காய்கறிகளைச் சமைக்கும்போது நிச்சயமாக சத்துகள் சிறிதளவு குறையத்தான் செய்யும். ஆனால், எவற்றையெல்லாம் சமைக்காமல் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம்.
  • புரதம், கொழுப்புச் சத்து, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களை வேக வைப்பதால் எந்த பிரச்னையும் வராது.
  • எல்லாவற்றையும் சமைக்காமல் சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படும். வயிற்றுப்போக்கு, சிலவகை சத்துக் குறைபாடு உள்ளிட்டவை ஏற்படலாம்.
  • ஹீமோகுளோபின் குறைபாடு வரலாம். ஏனெனில், ஹீமோகுளோபினில் ‘ஹீம்’ என்பது இரும்புச்சத்து, ’குளோபின்’ என்பது புரதச் சத்து. உணவுப் பொருட்கள் சரியாகச் செரிக்காமல் போனால் இந்த சத்து குறைபாடுகள் ஏற்படலாம்.
  • நார்ச்சத்து மிகுதியான சிறுதானியங்களை எடுத்துக்கொண்டால், கேழ்வரகை மட்டும்தான் முளைக்கட்ட வைத்துச் சாப்பிட முடியும். கம்பு முளைகட்டினாலும் நம்மால் சாப்பிட முடியாது. சாப்பிட முடிந்தாலும் அதனால் பயனில்லை. நாள்போக்கில் உணவு மீது வெறுப்பு ஏற்படும்.
 
சமைக்காமல் சாப்பிடுவது தவறா?
உடல்நலம்: ‘நோ ஆயில், நோ பாயில்’ - சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?

பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM

படக்குறிப்பு,

’படையல்’ சிவகுமார்

இந்தக் கேள்விக்கு மற்றொரு ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி பதிலளித்தார். அவரது கூற்றின்படி, சமைக்காமல் சாப்பிடுவது தவறல்ல. நிச்சயமாக சில வகை காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிடுவதால் நன்மைகள் உண்டு. அதேநேரம், சமைத்தாலும் காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து கிடைக்கும் வகையிலான காய்களும் உண்டு.

"மாவுச்சத்து இருக்கும் பொருட்களைச் சமைத்துச் சாப்பிட்டால் நன்றாக அதில் அச்சத்து இறங்கியிருக்கும். அரிசி வகைகளை அவலாக்கிப் பின் ஊறவைத்து சாப்பிடலாம். முழு பருப்பு வகைகளை ஊறவைத்து பின் சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்."

ஆனால், எல்லோராலும் எல்லாவற்றையும் சமைக்காமல் சாப்பிட முடியும் என்பது தவறு. அது ஒவ்வொருவரின் செரிமான அமைப்பைப் பொறுத்தது என்கிறார் புவனேஸ்வரி.

காய்கறிகளை நறுக்கியபின் சிறிது நேரம் ஆகிவிட்டாலோ, கைப்பட்டாலோ கிருமிகள் வர வாய்ப்புண்டு, பாக்டீரியா தொற்று ஏற்படலாம் எனக் கூறும் அவர், காலிஃபிளவர், பிரக்கோலி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

 
'டிரெண்டிங் பின்னால் செல்லக்கூடாது'
கு.சிவராமன்
படக்குறிப்பு,

கு.சிவராமன்

எண்ணெய் இல்லாமல் சமைக்கப்படும் இவ்வகை உணவுகளால் பல நன்மைகள் உண்டு எனக் கூறுகிறார், சித்த மருத்துவர் கு.சிவராமன்.

”எண்ணெய் இல்லாமல் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் உண்டு. கொழுப்பு என்பது எண்ணெய் இல்லாமலேயே கிடைக்கும். ஆனாலும் சில வைட்டமின்கள் எண்ணெயில் மட்டும்தான் உறிஞ்சப்படும். வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்றவை எண்ணெயில்தான் இருக்கும். தாளிப்பதற்கு எண்ணெய் சேர்ப்பதால் பெரிய பிரச்னைகள் இல்லை. சுத்தமாக எண்ணெயே இல்லையென்றால் இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றார்.

மேலும், ”எந்தவொரு உணவுத் திட்டமும் பொதுவானது அல்ல. ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப மாறுபடும். டிரெண்டிங்கின் பின்னால் செல்லக்கூடாது. உடலுக்கு என்ன தேவை என்பதை அறிந்து சாப்பிட வேண்டும்,” என்றார்.

"என்றைக்கு நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதிருந்து சமைத்தல் என்பது உண்டு." அவித்தல், இட்டல், தாளித்தல், பொறித்தல் ஆகியவை தமிழர் உணவு முறையில் பலகாலமாக இருந்திருப்பதாகக் கூறுகிறார் கு.சிவராமன். உடலுக்கு உள்ளேயும் அதே சூடுதான் உணவுப் பொருட்களைப் பக்குவப்படுத்துகிறது என்றும் அவர் கூறுகிறார்.

இவ்வகை உணவுகளை ஒரு கலவையாக எடுத்துக்கொண்டு வாரம் ஒருமுறை, இருமுறை சாப்பிடலாம் எனக் கூறும் அவர், எல்லா வேளையிலும் அதையே எடுப்பது நல்லதல்ல எனத் தெரிவித்தார்.

இந்த உணவுமுறையில் இருக்கும் இத்தகைய பிரச்னைகளுக்கு விளக்கமளித்த ‘படையல்’ சிவகுமார், “இவ்வகை உணவுகளில் எதுவுமே பச்சையானது அல்ல. காய்கறிகளோ, அரிசியோ எதுவாக இருந்தாலும் அதற்கென குறிப்பிட்ட முறையில் பதப்படுத்தித்தான் கொடுப்போம். ஆனால், இவை சமைக்காத உணவுகள். கேரட், பீட்ரூட், வெங்காயம், தக்காளி, வெண்டை உள்ளிட்ட பலவகை காய்களை நாம் சமைக்காமலேயே உண்ண முடியும். சில வகை கிழங்குகள், காய்கறிகளை அப்படியே உண்ண முடியாது. அவற்றை மிருதுவாக்கவும் அதிலுள்ள கிருமிகளை நீக்கவும் சில முறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்,” என்றார்.

உணவுப் பொருட்களைக் கைகளாலேயே கலக்கும்போது நம் உடலின் சூட்டால் அவை பதப்படுத்தப்படுவதாகக் கூறுகிறார் கு.சிவகுமார். கலவைகளில் சேர்க்கப்படும் கடலை வகைகள், நட்ஸ்கள் போன்றவை அந்தச் சூட்டால் எண்ணெயைப் பிரிப்பதால் வடை, கட்லெட் பதம்கூட கிடைப்பதாக அவர் கூறுகிறார். எண்ணெயை நேரடியாகப் பயன்படுத்தாமல் வேர்க்கடலை, எள், தேங்காய் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களாக இவ்வகை உணவுகளில் பயன்படுத்தப்படுவதாக சிவகுமார் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c88xlvz2n95o

இன்றைய ஸ்பெசல்

2 months 1 week ago

சன்பிரான்ஸ்சிஸ்கோவில் 3 மாத.   த்துக்கொரு தடவை தான் நண்டு பிடிக்க விடுவார்களாம்.

நேற்றைய தினம் கடலுக்கு போய் காவல் நின்று 4 நண்டுகள் ஒன்று 10$ படி வாங்கி வந்தோம்.

பேரனுக்கு நண்டு என்றால் அவரை நண்டுப்பிரியன் என்றே சொல்லலாம்.

இரவே அப்பப்பா கில் பண்ணு கறியைக் காச்சு என்று நின்றான்.பொறடா நாளைக்கு என்றேன்.

காலையில் எழும்பி இதே வேலையாகவே நின்றான்.

https://postimg.cc/gallery/zBh4N83

IMG-0278.jpg

IMG-0277.jpg

IMG-0281.jpg

சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு கல்யாண விருந்து குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்ளும் சிவராமன் & மாதம்பட்டி ரங்கராஜ் பேட்டி

2 months 1 week ago
Doctor சிவராமன் சார் வீட்டு கல்யாணம் எப்படி இருக்கு பாருங்க! அசத்தல் MENU! வாயடைத்து போன சம்பவம்

 

Checked
Fri, 04/19/2024 - 17:40
நாவூற வாயூற Latest Topics
Subscribe to நாவூற வாயூற feed