அரசியல் அலசல்
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 09
ஈரான், இஸ்ரேல் பதற்றத்துக்குள் வலிந்து சிக்கப்போகும் இலங்கை
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள்.
குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் சக்தி வளாகத்தை திறந்து வைப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார்.
அத்தோடு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதில் இரு தரப்பும் ஆர்வம் செலுத்தியுள்ளமையால் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவுதல் உட்பட இருதரப்பு உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உமா ஓயாத் திட்டத்திற்கான ஆரம்ப மதிப்பீடுகள் 1989ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் பிரகாரம் தல்கொல்ல ஓயாவின் குறுக்கே ஒரு அணையை அமைத்து சுரங்கப்பாதை ஊடாக நீரை மின்திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.
உமா ஓயாவின் துணை நதிகளான மாத்தட்டிலா ஓயாவுக்கு குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டு சுரங்கப்பாதை வழியாக உமா ஓயா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதே இலக்காக இருந்தது. எவ்வாறாயினும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் அங்குராட்பணம் செய்யப்பட்டன.
மொத்த திட்டச் செலவாக சுமார் 529 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் அதில் 85சதவீதம் ஈரான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பக்க நிகழ்வாக ஈரான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே அவருக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆகவே, ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயமானது ஏலவே திட்டமிடப்பட்டதொன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், தற்போதைய சூழலில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்தார். இவ்வாறு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது நேரடியான மோதல் நிலைமைக்கு வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரேல் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாகவும் அங்கு கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லையென ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளதோடு அந்தக் கட்டமைப்பு அவசரமான கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். அவருடைய வருகையானது உண்மையில் இலங்கைக்கு இரண்டு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தவதாக உள்ளது.
முதலாவதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் முக்கியமானதாகின்றது. இஸ்ரேல், ஈரான் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து வேறெந்த நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் உட்புகுந்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்களைச் செய்வதில் தயக்கம் காண்பிப்பதில்லை ஏற்பதற்கு கடந்த காலச் சம்பவங்கள் சான்றுபகிர்கின்றன.
அவ்விதமானதொரு சூழலில் இலங்கைக்கு ஈரானிய ஜனாதிபதியின் வருகையின் போது அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணிசமான பொறுப்பு இலங்கைக்கும் உள்ளது. இஸ்ரேல் போன்ற நாடுகள் பயன்படுத்துகின்ற நவீன ஆயுத தளவாடங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அப்பால் அவற்றை அடையாளம் காண்பதற்கான வல்லமைகள் இலங்கையிடம் இருக்கின்றதா என்கிற கேள்விகள் இருக்கின்றன.
ஆகவே, ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கை வந்து திரும்பும் வரையில் தேசிய பாதுகாப்பையும், நட்புநாட்டின் தலைமையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கைக்கு மிகக்பெரும் நெருக்கடிகள் ஏற்படப்போகின்றன.
இரண்டாவதாக, சமகால நிலைமைகளை அடுத்து ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை கொள்வதையோ, இருதரப்பு உடன்பாடுகளை மேலும் மேம்படுத்துவதையோ இஸ்ரேல் விரும்பவில்லை.
குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளின் நிலைப்பாடுகளின் பிரகாரம், இலங்கை தவறானதொரு தெரிவினை நோக்கிச் செல்கின்றது. இதனால் பாரிய தவறை இழைக்கப்போகின்றது என்ற அடிப்படையில் தான் காணப்படுகின்றது.
இதன் காரணத்தினால் இஸ்ரேல் இலங்கைப் பணியாளர்களை மையப்படுத்தி வழங்கிவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.
குறிப்பாக, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற்சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில், குறித்த உடன்பாடு 2023ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் திகதி இருநாடுகளுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக, இதுவரையில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்காக 602பேர் நாட்டிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்துள்ளனர். அத்துடன் பத்தாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் இலங்கையர்கள் மேலும் இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனைவிடவும், முதியோர் பராமரிப்பு, பொதுஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனைவிடவும். இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகே இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான சேவைகளை அதிகரித்தல், விமான, கப்பல்துறை பிரிவுகளில் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களிலும் இணக்கம் காண்பிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, பொருத்தமற்ற தருணத்தில் இலங்கை அரசாங்கம் அளவுக்கதிகமாக ஈரானுடன் ஆதரவுக்கரத்தினை நீண்டுவது இஸ்ரேலுக்கு எதிர்மறையான மனோநிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்;லை.
இலங்கை அரசாங்கம், ஈரானுடன் கிட்டிய உறவுகளைப் பேணுவதன் ஊடாக எரிபொருட்கள் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கடியற்றதொரு சூழலை ஏற்படுத்தலாம் என்றொரு இராஜதந்திரக் கணக்கினை போடலாம்.
ஆனால், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள ஓரிரு நாட்களிலேயே மசகு எண்ணெயின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த அதிகரிப்பு நிச்சயமாக இலங்கையிலும் தாக்கத்தைச் செலுத்தாது இருக்கப்போவதில்லை.
அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஈரானுடனான நெருக்கமான உறவுகள் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான நப்பாசையாகவே இருக்கும்.
இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதாக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றபோதும், கடந்த காலங்களில் சீன சார்பு நிலையால், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பூகோளப் போட்டித்தளமாக தன்னை மாற்றிக்கொண்டது. அது தற்போது வரையில் நீடிக்கின்றது.
அதன்பின்னர் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தி பலஸ்தீனத்தின் அதிருப்திக்கு ஆளானது. எனினும், பலஸ்தீன் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதால் நெருக்கடிகள் உருவாகவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானுடன் நேசக்கரம் நீட்டி இஸ்ரேலின் அதிருப்தியைச் சம்பாதிக்கிறது.
இஸ்ரேலின் அதிருப்தி என்பது அமெரிக்கா உட்பட மேற்குல நாடுகளின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு நிகரானது என்பதை இலங்கை புரிந்துகொள்வதற்கு வெகுகாலம் நீடிக்காது.
விட்டுக்கொடுப்பற்ற தலைமையே தேவை!
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நினைவேந்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறிய அந்தக் குரூரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைந்துருகினர். 'அந்தப் படுகொலைகளுக்கு நீதி நிலைநாட்டப் படவில்லை. நீதிக்கான பயணத்தை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் - இதயசுத்தியுடன் முன்னெடுக்கவில்லை ' என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
கத்தோலிக்க மதத் தலைவரான கர்தினால் மல்கம் ரஞ்சித் பிரதான நினைவேந்தல் நிகழ்வில் ஆற்றிய உரையில் பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார். கடந்த 5 ஆண்டுகளாக அவரால் தனது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்கமுடியவில்லை என்ற ஆதங்கம் அந்த உரையில் எதிரொலித்தது. இப்போதும் கூட அவர் தனது சமூகத்துக்காக மாத்திரம் குறுகிய வெளிக்குள் நின்றுகொண்டு நீதியைக்கோரி போராடுகின்றார் என்ற குற்றச்சாட்டு இருக்கவே செய்கின்றது. 2009ஆம் ஆண்டு இறுதிப்போரின் போதான மிகப்பெரிய கொடூரத்துக்கு நீதி கோருவதற்கு அவர் தயாரில்லை. மதத் தலைவராக அவர், தனது அருட்தந்தையர்கள் எத்தனையோ பேர் இறுதிப் போரில் கொல்லப்பட்டமைக்கோ, கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமைக்கோ நீதிகோர இன்னமும் தயாரில்லை. இந்த நாடு சிங்கள - பெளத்தர்களுக்குரியது. பௌத்தத்துக்கு முதலிடம் கொடுக்கப்படவேண்டும் என்ற சித்தாந்தம் பேசுபவர் அவர். சிங்கள பௌத்தம் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முயலும் ஆட்சியாளர்கள் அதற்காக எதையும் செய்வார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார் இல்லை. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பௌத்த- சிங்கள பேரினவாத தரப்புகள் ஆட்சியைப்பிடிப்பதற்கே நடத்தியிருந்தன. அப்படிப்பட்டவர்கள் எப்படி நீதியான விசாரணையை முன்னெடுப்பார்கள் என்ற கேள்வியை அவர் இப்போது முன்வைக்கின்றார். சர்வதேச விசாரணையைக் கோரும் தனது நியாயப்பாட்டை வலுப்படுத்துகின்றார். இதையேதான் தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சொல்லி வருகின்றனர். போரை நடத்திய அரசாங்கமே எப்படி தன்மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும்? இது இயற்கை நீதிக்கே முரணானதே. எனவே சர்வதேச விசாரணைதான் தீர்வு என்ற கோஷம் தமிழர் தரப்பில் எழுப்பப்பட்டபோது மௌனியாக இருந்தவர் கர்தினால் மல்கம் ரஞ்சித். இப்போதும் அந்த விடயத்தில் மௌனியாக இருந்து கொண்டு, தனது மதத்தின் மீது நிகழ்ந்த கொடூரத்துக்கு மட்டும் சர்வதேச விசாரணை கோருகின்றார்.
என்னதான், பக்கச் சார்பானவராகவே அவர் இருந்த போதும், தாக்குதலுக்கான நீதி கோரும் அவரது பயணத்தில் இன்னமும் உறுதியானவராக இருக்கின்றார். அதில் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் அவர் தயாரில்லை. யாருடனும் சமரசம் செய்ய அவர் தயாராக இல்லை. இந்த இடத்தில்தான் கர்தினாலிடமிருந்து எமது தமிழ்த் தலைமைகள் பாடம் படிக்க வேண்டும். நல்லாட்சிக் காலத்தில் சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்து கலப்புப் பொறிமுறைக்கு இணங்கினர். இன்று எதுவுமில்லாத நிலையில் வந்து நிற்கின்றது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கான நீதி தேடிய பயணம் இன்று ஓய்ந்திருக்கின்றது. தமிழ்த் தலைமைகள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்கள், இந்த விவகாரங்களைப் பொறுப்பெடுத்துச் செய்தவர்கள் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமூகத்திடமிருந்து பிணை யெடுத்துவிட்டு மல்லாக்காகப் படுத்திருக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இன்னமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதை திரும்பத் திரும்ப ஆயர் மல்கம் ரஞ்சித் முதலானோர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். புதிது புதிதாக ஆதாரங்களைத்திரட்டி ஒப்படைத்துக் கொண்டும் இருக்கின்றனர். ஆனால் தமிழ்த் தலைமைகள் என்ன செய்கின்றன? தங்கள் கட்சிப் பிரச்சினைகளையே நீதிமன்றம் வரையில் கொண்டு சென்று விட்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது தமிழ் மக்களுக்கான நீதியைக்கோரும் போராட்டத்தை முன்கொண்டு செல்ல கர்தினால் போன்ற விட்டுக்கொடுப்பற்ற ஒருவரே தேவை.
https://newuthayan.com/article/விட்டுக்கொடுப்பற்ற_தலைமையே_தேவை!
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 08
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 07
வலி ஒன்று; நீதி இரண்டா
இலங்கை வலியுறுத்திய நிலைப்பாடு ஒன்றுக்காக, ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கின்றது என்றால், அதை நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். ஜனாதிபதி ரணில், மீண்டும் மீண்டும் வலியுறுத்திய சித்தாந்தங்களும் தீர்வுத் திட்டங்களும்தான் ஐ.நா.வில் இன்றைய அரசியலும், பேசுபொருளும், விவாதப் புள்ளியும், எல்லாமும்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான மோதல்கள் முற்றாகமுடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு நிரந்தர அமைதியும் ஆக்கிரமிப்புகளும் தவிர்க்கப்பட வேண்டுமாயின், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் என்ற இருநாடுகள் மலரவேண்டும் என்று அண்மையில் வலியுறுத்தியிருந்தார் ஜனாதிபதி ரணில். 'சுதந்திர பலஸ்தீனம்' மலர்ந்தால் பலஸ் தீனத்துக்கு என தனி இராணுவம் தோற்றம் பெறும். பலஸ்தீன இராணுவத்துடன் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் கூட்டணிகளை (நேட்டோ போன்று) ஏற்படுத்திக்கொண்டால் அது இஸ்ரேலின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும். இன்று ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு நேட்டோ வழங்கும் இராணுவ உதவிகள்போன்று, நாளை இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன இராணுவத்துக்கு வெளிப்படையான உதவிகள் வழங்கப்பட்டால், 'தான் அழிந்துபோவேன் அல்லது அமிழ்ந்துபோவேன்' என்பதுதான் சுதந்திர பலஸ்தீனத்தை இஸ்ரேல் தன் முழுப்பலத்தையும் ஒன்றுதிரட்டி எதிர்க்கக்காரணம்.
உலகின் உச்சபட்ச இராஜதந்திரமும், கருத்துத் தெரிவிக்க அசட்டுத்துணிவும் தேவையான இந்த விடயத்தில், இஸ்ரேல், அமெரிக்காவின் முகங்களை முறிக்காமல் அவற்றை நேருக்குநேராகச் சந்தித்து சுதந்திர பலஸ்தீனத்தை வலியுறுத்திய வெகுசில தலைவர்களில் ரணிலும் ஒருவர். குறைந்தபட்சம் 'ஆயுதங்கள் தாங்கிய இராணுவத்தினர் அற்ற சுதந்திர பலஸ்தீனமாவது உருவாக்கப்படவேண்டும்' என்பது ரணிலின் திருத்தப்பட்ட கொள்கையாகவிருந்தது. அதுதான் இன்று உலகில் பல நாடுகளாலும் பொதுத் தீர்வுத்திட்டமாக' பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகவும் இருக்கின்றது. ஓர் இராஜதந் திரியாக, முதிர்ச்சிமிக்க தலைவராக, அனுபவ ரேகைகளைத் தாங்கியவராக ரணிலை இந்த விடயத்தில் எத்தனை பாராட்டினாலும் அத்தனையும் தகும்.
ஆனால், இந்த விடயத்தில் ரணில் சொல்ல மறந்த அல்லது உணர மறுத்த கதையொன்றும் உள்ளது. யூத சித்தாந்தங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகள் இன்று பலஸ்தீனர்களை எவ்வளவுக்கெவ்வளவு வதைத் தெறிகின்றனவோ அதைவிட ஒருபடி மேலாகத்தான் பௌத்த சித்தாந்தத்தின் ஆக்கிரமிப்புகளால் ஈழத் தமிழர்கள் அனுபவித்த-அனுபவிக்கின்ற வேதனைகள் உள்ளன. அவை வார்த்தைகளால் அளந்தொழுத இயலாதவை - முடியாதவை. அங்கு பலஸ் தீனர்கள், இங்கு ஈழத்தமிழர்கள், அது மத்திய கிழக்கு, இது தெற்காசியா, அங்கு யூத ஆக்கிரமிப்பு, இங்கு பௌத்த ஆக்கிரமிப்பு. அவ்வளவும்தான் வேறுபாடு. மற்றும்படி வலி ஒன்றுதான், வதை ஒன்றுதான்.
தன் நாட்டில் உள்ள ஓர் இனக்குழுமம் நீதியைத் தேடி உழன்றுகொண்டிருக்கையில், அதற்கு ஒரு நிரந்தரத்தீர்வை வழங்காமல், எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நீதியைத் தேடத் தொடங்குவதெல்லாம் சுத்த அபத்தம். தமிழர்களுக்கு நீதியை வழங்கி விட்டு, தன்னையும் தன் நாட்டையும் சான்றாகக் காட்டி தன் விவாதப்புள்ளியை ரணில் எண்பித் திருப்பாராயின் மட்டுமே அது அவரது இதயத்தில் இருந்து வெளிவந்த வார்த்தைகளாக இருந்திருக்கும்...!
வடக்கில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரிப்பு : மூலச்சக்திகள் யார்?
Published By: DIGITAL DESK 3 23 APR, 2024 | 02:54 PM
எம்.நியூட்டன்
வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை காரணமாக மரணித்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
குறிப்பாக, மரணித்தவர்களில் சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறையிலிருந்து நீதிமன்றத்தின் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தனது விடுதலையை கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்த போதை விருந்துபசாரத்தின் போது மரணமடைந்துள்ளார்.
மற்றையவர்கள், அதிகளவான போதைப்பொருளை பயன்படுத்தியமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தவர்களாக உள்ளனர். இந்த மரணங்கள் நிகழ்ந்த பின்னரும் கூட போதைப்பொருள் பாவனை குறைந்ததாக தகவல்கள் இல்லை.
கடந்த வாரத்தில் குறிப்பாக 2024.03.26 முதல் 2024.04.16 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் தொடர்பில் 29 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. அதில் 23.075 கிராம் அளவு ஹெரோயின் வைத்திருந்தமை தொடர்பில் இரண்டு வழக்குகளும் 0.08 கிராம் அளவு ஐஸ் வைத்திருந்தமைக்காக ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கஞ்சா பயன்பாடு மற்றும் வியாபாரம் தொடர்பில் 21 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதோடு 21.299 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கும் அதேநேரம் வடக்கில் போதைப்பொருள் விவகாரமானது, சமூகப் புற்றுநோயாக தொடர்ந்து கொண்டே செல்கிறது.
பூகோள ரீதியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தின் தெற்குப் பாதை இந்து சமுத்திரத்துக்கூடாகச் செல்கின்றது. இதற்கான முக்கிய காரணியாக கடல்வழி அமைகின்றது.
அந்தக் கடல்வழியில் கேந்திர ஸ்தானமாக இருப்பது இலங்கை. இதனால் இலங்கை பூகோள போதைப்பொருள் வர்த்தகத்தில் பிராந்திய மையமாக விளங்குகின்றது என்று ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
நாடொன்றின் கடல் எல்லையாக தரையிலிருந்து 12 கடல்மைல்கள் காணப்படுகின்ற நிலையில் அந்தக் கடல் எல்லைக்குள் தான் கைதுகளை மேற்கொள்ள முடியும் என்பது சர்வதேச கடல் எல்லை விதியாகவுள்ளது.
அதற்கு அப்பாற்பட்ட கடல்வெளியானது எந்தவொரு தரப்பினராலும் கண்காணிக்கப்படாமலேயே உள்ளது. இதுதான் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு நம்பிக்கையான ஏதுநிலையை வழங்குவதாக உள்ளது.
அந்த வகையில், இலங்கையின் கடல் எல்லைக்குள் கடத்தப்படுகின்ற போதைப் பொருள் சர்வதேச கடல் எல்லைக்கு அண்மையில் வைத்து கொள்கலன்களுக்குள் அடைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டு அதிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.
இந்தக் கடத்தலின் யுக்தியாக, சர்வதேச கடல் எல்லையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் தான் அதிகளவில் கொண்டுவரப்படுகின்றன. இன்னும் சில போதைப்பொருள்கள் அதிகாரம் மிக்கவர்களின் செல்வாக்கால் கொண்டு வரப்படுகின்றன. இதற்கு வேலியே பயிரை மேய்வது போன்று பாதுகாப்புத் தரப்பினர் சிலரது பூரணமான ஆதரவும் இருக்கின்றது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் கடந்த 2023 ஜனவரி முதல் ஜூன் வரை போதைப்பொருள் துஷ்பிரயோக கண்காணிப்பு அமைப்பினால் பெறப்பட்ட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட நபர்கள் பற்றிய பகுப்பாய்வு அறிக்கையை அவதானிக்கின்றபோது போதைப்பொருளின் வெகுவான தாக்கம் வெளிப்படுகின்றது.
அதனடிப்படையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 19,544 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் 10,396 பேர் கஞ்சா பயன்படுத்துபவர்களாகவும் 7,778 பேர் 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 98 சதவீதமானவர்கள் ஆண்களாக இருப்பதோடு 2சதவீதமானவர்கள் பெண்களாக உள்ளனர். மேலும், 10,029 நபர்கள் திருமணமானவர்களாகவும் 7,621 பேர் தனிமையில் இருப்பவர்களாகவும் உள்ளனர். அவர்களின் கல்விப் பின்னணியைக் கருத்திற் கொள்ளும்போது கா.பொ.த. சாதாரண தரம் முடித்தவர்களிடமிருந்தே அதிக அளவு போதைப்பொருள் பாவனை பதிவாகியுள்ளது. 12 பேர் தொழில்வான்மையாளர்களாகவும் உள்ளனர்.
அத்தோடு இக்காலத்தில் 23 சதவீதமானவர்கள் சதாரண தொழிலாளர்களாகவும் 12.8 சதவீதமானவர்கள் வேலையில்லாதவர்களாகவும் 8.8 சதவீதமானவர்கள் விவசாயிகளாகவும் 3.2 சதவீதமானவர்கள் சாரதிகள் அல்லது போக்குவரத்து துறையில் பணியாற்றுபவர்களாகவும் உள்ளனர்.
நாடாளவிய ரீதியில் நிலைமைகள் மேற்கண்டவாறு அமைந்திருந்தாலும், போதைப்பொருளின் தாக்கத்துக்கு வடக்கு, கிழக்கு விதிவிலக்கல்ல. வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் என்பது தமிழ் பேசும் இனத்தின் மீது திட்டமிட்டு திணிக்கப்படும் ஒருவிடயமா என்ற சந்தேகம் எழுகின்றது. .
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும் மாறிமாறி ஆட்சிப்பீடத்தில் அமருகின்ற அரசாங்கங்கள் வடக்கு, கிழக்கை தொடர்ந்தும் போர்க்கால சூழலிலேயே வைத்துக்கொள்வதையே வெகுவாக விரும்புகின்றன.
இதற்காகவே மூன்று பொதுமகனுக்கு ஒரு படைவீரர் என்ற விகிதத்தில் முப்படைகளையும் வடக்கு, கிழக்கில் குவித்து வைத்துள்ளது இலங்கை அரசாங்கம். இதற்கு அப்பால் பொலிஸ், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் செயற்பட்டு வருகின்றார்கள்.
இவ்வாறு அதிகரித்த எண்ணிக்கையான படைகளை வடக்கு, கிழக்கில் இருந்து குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற அழுத்தங்கள் ஏற்பட்டபோது, ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெற்றுவிடுவார்கள் என்று காரணம் கற்பிதித்தது இலங்கை அரசாங்கம்.
உண்மையில், வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் விநியோகமானது ஆரம்பத்தில் போதைப்பொருளுக்கான தேவையை அதிகரித்து, வழங்கலைக் மட்டுப்படுத்துகின்றபோது, போதைப்பொருளின் விலை அதிகரிப்பதோடு, பல விநியோக வழிகளை திறப்பதற்காக வலிந்து தள்ளப்படுவதை நோக்காக கொண்டே காய்கள் நகர்த்தப்பட்டன.
அந்த நோக்கம் தற்போது வடக்கு, கிழக்கில் வெற்றிகண்டுவிட்டது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது இப்பிராந்தியத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இளைஞர்களின் சமூக அக்கறைகள் திசைத்திருப்பப்பட்டு போதைப்பொருள் பாவனையை நோக்கி வலிந்து தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அதிகளவான இளையோரே போதைப்பொருள் பாவனையாளர்களாக மாறியுள்ளனர். அண்மைய காலத்தில் அவர்கள் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.
இதனால், வடக்கு இளைஞர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகியுள்ளதோடு, அடுத்த சந்ததியானது, இனவிடுதலைச் சிந்தனையில் இருந்தும், அறிவுசார்ந்த சமூக கட்டமைப்பிலிருந்தும் திசை திருப்பப்படுகின்ற செயற்பாடே சூட்சுமமாக முன்னெடுக்கப்படுகின்றது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் கடந்த 2023 ஜனவரி முதல் ஜூன் வரை போதைப்பொருள் துஷ்பிரயோக கண்காணிப்பு அமைப்பினால் பெறப்பட்ட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட நபர்கள் பற்றிய பகுப்பாய்வு அறிக்கையின் தரவுகளின் பிரகாரம் அம்பாறையில் 438 பேரும், திருகோணமலையில் 891பேரும் மட்டக்களப்பில் 143 பேரும் வவுனியாவில் 181 பேரும் முல்லைத்தீவில் 113 பேரும், மன்னாரில் 121 பேரும், கிளிநொச்சியில் 32பேரும் யாழ்ப்பாணத்தில் 371 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கடற்படைத் தகவல்களின் பிரகாரம் இந்த ஆண்டின் பெப்ரவரி 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 120 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 13 நபர்கள் கைதுசெய்யப்பட்டும் 3 படகுகள் கைப்பற்றப்பட்டுமுள்ளன.
203 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 189 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு 17 நபர்களும் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 39,301 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதுகுறித்த குற்றச்சாட்டில் 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், தற்போதும் கூட வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் இனந்தெரியாத படகுகள் போதைப்பொருட்களுடன் ஒதுங்குவதும், பொதிசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மிதந்து வருவதும் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன.
உண்மையில் வடக்கு, கிழக்கில் முப்படையினரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும், போதைப்பொருள் பாவனையும், போதைப்பொருள் உள்வருகையும் தொடர்வதாக இருக்கின்றதென்றால் நிச்சயமாக அதன் மூலங்கள் யார் என்பது தான் தற்போதுள்ள பெருங்கேள்வியாக உள்ளது.
அதேநேரம், 1984ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க போதைப்பொருள் சார்ந்த நபர்கள் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) சட்டம், 1984 ஆம் ஆண்டு 13ஆம் இலக்க விஷம், ஓபியம் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்தம்) சட்டம், 2006 ஆம் ஆண்டு 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய ஆணையம், 2022ஆம் ஆண்டின் 41இலக்க விஷம், ஓபியம் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்தம்) சட்டம் ஆகிய சட்டங்கள் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக ஏற்பாடுகளாகியுள்ளன.
இதனைவிடவும், 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க போதைப்பொருள் சார்ந்த நபர்கள் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) ஒழுங்குப்படுத்தல் ஏற்பாடு, போதைப்பொருள் மற்றும் மனநோய்க்கான சட்டவிரோத போக்குவரத்துக்கு எதிரான உடன்படிக்கைகள், 2008ஆம் ஆண்டின் முதலாமிலக்க போதைப் பொருள்கள் ஒழுங்குபடுத்தல்கள் ஆகியனவும் காணப்படுகின்றன.
இதனைவிடவும், இலங்கையின் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசியக் கொள்கையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் காணப்பட்டாலும், போதைப்பொருளுக்கு எதிரான போராட்டமானது வெறுமனே அதிகாரிகள், பாதுகாப்புத் துறையினருக்கு அப்பால் இளம் தலைமுறையினரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களாலும் முன்னெடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், யாழ்.மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடந்தவாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றபோது, போதைப்பொருள் விடயம் பேசுபொருளானது.
அதன்போது, போதைப்பொருள் தொடர்பில் சிறுமீன்களே அகப்படுகின்றன. ஆனால் பெரும் முதலைகள் பாதுகாப்பாக உள்ளன என்ற தொனிப்படக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்தச் சந்தர்ப்பத்தில், ஹெரோயின் போன்றபோதைப்பொருட்கள் கிடைப்பதில்லை. அதற்காக மனோநிலை சரியில்லாதவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகளே போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்துகின்றார்கள் என்று பொலிஸார் தரப்பில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், மீண்டும் பொலிஸாரும் வடக்கின் போதைப்பொருள் வியாபாரத்துக்கு துணைபோவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கினைப் பொறுத்தவரையில் ஒரேயொரு தரைவழித்தொடர்பு தான் காணப்படுகின்றது. ஏனைய மூன்று பக்கங்களும் கடல்வழித் தொடர்புகளே காணப்படுகின்றது.
ஆகவே, போதைப்பொருள் உட்பிரவேசிப்பதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றபோது தான் அவற்றை கட்டுப்படுத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் உலாவரும் அனேகமான ஊடகங்கள் அவை அச்சு ஊடகங்களாயினும் சரி மின்னூடகங்களாயினும் சரி அவற்றில் கட்டுரைகள் எழுதும் அரசியல் ஆய்வாளர்-பத்தி எழுத்தாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும் அநேகம் பேர் (சிலவேளை ஆசிரிய தலையங்கங்களில் கூட) முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு வரை இலங்கைத் தமிழர்களுடைய அரசியலில் எல்லாமே சரியாக நடந்து வந்தது போலவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இலங்கைத் தமிழர் தரப்பு அரசியல் குழம்பிப்போய்விட்டது போலவுமே கருத்துக்களைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்கள்.
அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கோலோச்சிய காலத்தில் தமிழர் அரசியலில் எல்லாமே ஒழுங்காகவும் சரியாகவும் நடைபெற்றது போலவும் வழமையான சொல்லாடலான ‘புலிகளின் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட பின்பு’ தமிழர் அரசியல் தலைகீழாக மாறிவிட்டது போலவுமே எழுதியும் வருகிறார்கள். தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசியவாதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளும்கூட இப் போக்கிற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.
இத்தகைய தமிழ் ஊடகங்களிடமும்-அரசியல் ஆய்வு மற்றும் பத்தி எழுத்தாளர்களிடமும்-‘தமிழ்த் தேசியக் கட்சி’ களிடமும்-‘தமிழ்த் தேசியவாதி’களிடமும்-பத்திரிகாசிரியர்களிடமும்கூடப் பின்வரும் கேள்விகளைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்-சொல்லித்தான் ஆக வேண்டும்.
இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பெற்ற 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் சகோதர இயக்கங்களைத் தடைசெய்து அவற்றின் மீது நிகழ்த்திய தாக்குதல்கள்-மாற்றுச் சிந்தனையாளர்களையும் கருத்தாளர்களையும் போட்டுத் தள்ளியமை-அப்பாவிச் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைத் தாக்குதல்கள் என்பவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு, 1987 க்கு பின்னர் நடைபெற்ற விடயங்களை மட்டுமாவது சொல்லி ஆகவேண்டியுள்ளது. கேட்டுத்தான் ஆகவேண்டியுள்ளது கேள்விகள் இதோ.
* இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தது அல்லது அனுசரித்துப் போகாமை சரியா?
* தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரச படைகளுடன் இணைந்து அவர்களுடைய ஆதரவுடன் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஆதரித்த சகோதரப் போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களைத் தேடித் தேடிப் போட்டுத் தள்ளியமை சரியா?
* தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுடன் கூட்டு வைத்துக்கொண்டு, இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் பிரசன்னமாகியிருந்த இந்திய அமைதிகாக்கும் படையின் மீது போர் தொடுத்தது சரியா?
* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின் வாயிலாக அமைந்த வடகிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த மாகாண அரச நிர்வாகத்தை ஆயுத நடவடிக்கைகள் மூலம் சீர்குலைத்ததும் செயலிழக்கச் செய்ததும் சரியா?
*தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக விளங்கியவரும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போவதில் உறுதியாகவிருந்தவருமான அ. அமிர்தலிங்கம் அவர்களைக் கொழும்பில் வைத்து 13.07.1989 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றது சரியா?
* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதில் துணிவோடு செயற்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ பி ஆர் எல் எஃப்) செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபா அவர்களையும் அவருடன் இணைந்த ஏனைய பன்னிரண்டு தோழர்களையும் இந்திய மண்ணில்-சென்னையில் வைத்து 19.06.1990 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது சரியா?
* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிதாமகரான இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய தமிழ்நாட்டு மண்ணில் வைத்துத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் 21.05.1991 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது சரியா?
இவ்வாறு நீலன் திருச்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் போன்றோரின் படுகொலைகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதான கொலை முயற்சித் தாக்குதல் என்று பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய செயற்பாடுகளால் இலங்கைத் தமிழர்கள் அடைந்த நன்மைகள் என்ன?
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இவ்வாறான அரசியலற்ற ஆயுத நடவடிக்கைகள்தானே தமிழ் மக்களுக்கு இறுதியில் முள்ளிவாய்க்காலில் பேரழிவை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
இவற்றை நுணுகி ஆராய்ந்து பிழை எங்கே இருக்கிறது என்று அறிவு பூர்வமாகத் தேடும் உளவியலை இலங்கைத் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வளர்த்துக் கொள்ளாதவரை தமிழர்களுடைய அரசியல் மேலும் மேலும் பின்னோக்கியே செல்லும்; குழப்பமடைந்தே செல்லும். புலிசார் உளவியலிலிருந்து தலைவர்களும் விடுபட வேண்டும். மக்களும் வெளியேற வேண்டும். சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறுவதென்றால் இலங்கைத் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் தேவைப்படுவதும் அவசியமானதும் ‘புலி நீக்கம்’ செய்யப்பட்ட புதியதோர் அரசியல் கலாசாரம் ஆகும்.
புலி நீக்கம் செய்யப்பட்ட தமிழர்களுடைய அரசியலையே தென்னிலங்கையின் முற்போக்குச் சக்திகளும்-வடகிழக்கு மாகாணத்தின் இளைய தலைமுறையும்-இந்து சமுத்திரப் பிராந்திய வல்லரசான இந்தியாவும்-இலங்கைத் தமிழர்களின் மீது அனுதாபம் கொண்டுள்ள சர்வதேச சக்திகளும் ஆதரிக்கும். இவற்றின் ஆதரவு இல்லாமல் தமிழர் தரப்பு அரசியலை (தமிழ்த் தேசிய அரசியலை) முன் கொண்டு செல்ல முடியாது.
நீண்ட காலமாக 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளாலும் 2009க்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகவர்களாலும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழ்ச் சமூகம் இதிலிருந்து விடுபடுவது அல்லது அவர்களை விடுவிப்பது கஷ்டமான காரியம்தான். ஆனாலும், அதுதான் இன்றைய தேவைப்பாடாக உள்ளது என்பதே அறிவுபூர்வமான அரசியல் யதார்த்தம். இதனைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
1) மேலும், ‘புலி நீக்க’ அரசியல் என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரானதல்ல. எனவே ‘புலி நீக்க’ அரசியலென்பதைத் தமிழ்த் தேசிய நீக்க அரசியலென்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது
2) இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்ஜேவி செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களே தமிழர் தாயகம்-சுய நிர்ணய உரிமை- ஈழத் தமிழர் இறைமை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கருத்தியலைக் கட்டமைத்தார்.
3) தந்தை செல்வாவினால் அறிமுகம் செய்யப்பட்டு அவரது தலைமையில் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியலானது, அடிப்படையில் யாழ்குடா நாட்டில் அதிகாரம் செலுத்திய மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன்களைப் பேணும் வர்க்க குணம்சத்தைத் தனது பலவீனங்களில் ஒன்றாகக் கொண்டிருந்த போதும்-தமிழ் மக்களுக்குக் குறிப்பிடத்தக்க சமூக பொருளாதார அரசியல் அடைவுகள் எதனையும் பெற்றுத்தராத ஏட்டுச் சுரக்காய் அரசியலாக இருந்த போதும் இலங்கை அரசாங்கங்களின் பௌத்த சிங்களப் பேரினவாத மேலாதிக்க ஒடுக்கு முறைக்கு எதிர் வினையாற்றி இலங்கைத் தமிழர்கள் தமது சமூக பொருளாதார அரசியல் இருப்பைப் பேணிப் பாதுகாப்பதற்கும் தமது இன மொழி அடையாளங்களை இழக்காமல் இருப்பதற்கும் அது காலத்தின் தேவையாக மாறியது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
4) ஆனாலும், தந்தை செல்வா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியலினதும் அவரின் மரணத்தின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் அ. அமிர்தலிங்கம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளினதும் அவற்றின் பக்க விளைவாகத் தமிழ் இளைஞர்களின் மத்தியிலே தோற்றம் பெற்ற அனைத்து ஆயுதப் போராளி இயக்கங்களும் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்த இராணுவ அழுத்தங்களினதும் ஒட்டுமொத்த விளைவுதான் 1987 இந்திய சமாதான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழர்களுடைய போராட்ட அரசியலுக்குக் (அதன் பலம் பலவீனங்களுக்கும் அப்பால்) கிடைத்ததோர் இராஜதந்திர வெற்றியாகும்.
5) ஆனால், இந்த வெற்றியினால் விளைந்திருக்கக்கூடிய அனுகூலங்களைத் தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாதபடி அதனைப் போட்டுடைத்துச் சீரழித்தது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே. தந்தை செல்வாவினால் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பலம் மற்றும் பலவீனங்களுடன் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியத்தைப் பிரபாகரன் ‘தமிழ்ப் பாசிச’ மாகப் பிறழ்வடையச் செய்தமைதான் இலங்கைத் தமிழினம் இதுவரை அடைந்த/அடைந்து கொண்டிருக்கும் பேரழிவுக்கும் பின்னடைவுகளுக்கும் காரணமாகும்.
6) இதிலிருந்து இலங்கைத் தமிழ்ச் சமூகம் விடுபட்டுச் சரியான அரசியல் செல்நெறியில் தடம் பதிக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசிய அரசியலில் கருத்தியல் ரீதியாகப் -கோட்பாட்டு ரீதியாகப் ‘புலி நீக்கம்’ அவசியமாகும். அப்போதுதான் தமிழர் அரசியலில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு.
“உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்” —– லெனின்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்- நிலாந்தன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்- நிலாந்தன்
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளில், அதிகம் பேசு பொருளாக மாறியிருப்பது இந்தமுறைதான். அது ஒன்றுக்கு மேற்படட தரப்புக்களால் முன்னெடுக்கப்படுவதும் இந்த முறைதான். அதுமட்டுமல்ல,அது அதிகம் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதும் இந்த முறைதான்.
இந்தக் கோரிக்கையை கோட்பாட்டு ரீதியாக முதலில் முன்வைத்தவர் மு.திருநாவுக்கரசு. இக்கோரிக்கையை அதற்குரிய கோட்பாட்டு அடர்த்தியோடு விளங்கிக் கொள்ளாமல் பிரயோகித்தவர்கள் குமார் பொன்னம்பலமும் சிவாஜிலிங்கமும் ஆவர்.
மு.திருநாவுக்கரசு 2010 ஆம் ஆண்டு, அதாவது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த அடுத்த ஆண்டு “பொங்குதமிழ்” என்ற இணையதளத்தில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும் என்று கட்டுரை எழுதினார். ஆனால் அந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தரப்பு ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிப்பதாக நினைத்துக் கொண்டு, அதே ராஜபக்சக்களின் ஆணையை முன்னெடுத்த தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள்.
திருநாவுக்கரசுவின் கட்டுரையை யாரும் பொருட்படுத்தவில்லை. பின்னர் 2015 ஆம் ஆண்டும் திருநாவுக்கரசு அதே கட்டுரையை சிறு மாற்றங்களோடு அதே இணையத் தளத்தில் எழுதினார். அப்பொழுது ஆட்சிமாற்ற அலை வீசியது. ராஜபக்சக்களைத் தோற்கடிப்பதற்காக ரணில்+மைத்திரி கூட்டு ஒன்றை மேற்கு நாடுகளும் இந்தியாவும் சேர்ந்து உருவாக்கின. அப்பொழுதும் தமிழ்மக்கள் ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிப்பதாகக் கருதிக்கொண்டு இறுதிக்கட்டப் போரில் தற்காலிகமாக பாதுகாப்பு மந்திரியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள்.
திருநாவுக்கரசு இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் அதுதொடர்பாக எழுதிய பின்னரும் தமிழ் அரசியல் சமூகம் அது தொடர்பாகக் கவனத்தில் எடுக்கவில்லை. அதனால் நோர்வையில் வசிப்பவரும் திருநாவுக்கரசுவின் மாணவருமான ஒரு புலமையாளர் அவரிடம் கேட்டார்… “என் நீங்கள் திரும்பத் திரும்ப எழுதுகிறீர்கள்?” என்று. அதற்கு திருநாவுக்கரசு சொன்னாராம் ஒருமுறை எழுதியதை யாரும் உள்வாங்கவில்லை என்பதனால்தான் அதைத் திரும்பத் திரும்ப எழுத வேண்டியிருக்கிறது என்று. “கடந்த பல தசாப்தங்களாக தமிழ் அரசியலில் சரியான அறிவியல் முடிவுகள் எடுக்கப்பட்டிருகின்றன. ஆனால் அவை அரசியல் தீர்மானகளாக மாற்றப்படவில்லை” என்று மேற்படி நோர்வீஜியத் தமிழர் அடிக்கடி கூறுவார்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வந்த பொழுது தமிழ் மக்கள் பேரவை ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கியது. அக்குழு ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எல்லாக் கட்சிகளையும் சந்தித்தது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பாக தெளிவான பதில்களைக் கூறவில்லை. கோட்டாபய தனது அமெரிக்கப் பிரஜா உரிமையைத் துறப்பதில் இருக்கும் சட்டச் சிக்கல்களை முன்வைத்து சம்பந்தர் உரையாற்றினார். அதுமட்டுமல்ல, ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அது சிங்கள மக்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களைத் தூண்ட உதவாதா என்றும் அவர் கேட்டார்.
தமிழரசுக் கட்சி அப்பொழுது தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை. கூட்டமைப்புக்குள் அங்கம் வகித்த பங்காளிக் கட்சிகள் துணிந்து முடிவெடுக்கவில்லை. விக்னேஸ்வரன் அதை ஆதரித்தார். ஐங்கரநேசன்,அனந்தி போன்றவர்களும் அதை ஆதரித்தார்கள். எனினும் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த விடயத்தை செயலுருப்படுத்த தமிழ்மக்கள் பேரவையால் முடியவில்லை. அது உருவாக்கிய சுயாதீனக் குழுவானது அதுதொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டதோடு சரி.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கும் பல மாதங்களுக்கும் முன்னரே இந்த விடயத்தை முதலில் கையில்எடுத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அதன் பின் “மக்கள் மனு” என்று அழைக்கப்படும் ஒரு சிவில் சமூகம்அதனை முன்னெடுக்கின்றது. அந்த சிவில் சமூகம் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் இரண்டுகருத்தரங்குகளையும் நடத்தியிருக்கிறது. அதே சமயம் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளி ஒருவரும் இதுதொடர்பில் சிந்திப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.
விக்னேஸ்வரன் அது தொடர்பாக வெளிப்படையாகவே பேசி வருகிறார். தமிழ் பொது வேட்பாளர் என்றுதெரிவை சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு அடுத்தபடியாக அவர் இப்பொழுது அதிகமாகப் பேசி வருகிறார். அவர்சிவகுரு ஆதீனத்தின் முதல்வரை அவ்வாறு பொது வேட்பாளராக நிறுத்தலாமா என்றும் ஒரு பரிந்துரையைச் செய்திருந்தார். அதேசமயம் ஈழத்துச் சிவசேனையின் தலைவராகிய மறவன்புலவு சச்சிதானந்தம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனை பொது வேட்பாளராக சிபாரிசு செய்திருந்தார். இவ்வாறாக தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் இப்பொழுது மேற்பரப்புக்கு வந்துவிட்டது. அது அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக மாறிவிட்டது. அதில் பல்வேறு தரப்புகளும் ஈடுபாட்டைக் காட்டுகின்றன. அல்லது அதைக் குழப்புகின்றன. அவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவைக் குழப்பும் தரப்புகள் அல்லது அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் தரப்புகள்,பின்வரும் காரணங்களை முன்வைக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
முதலாவது காரணம்,தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு ஏற்கனவே தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ஒன்று என்பது. குமார் பொன்னம்பலம் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அதில் ஏற்கனவே தோல்வி கண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. குமாரும் சிவாஜியும் அதை அதற்குரிய கோட்பாட்டு அடர்த்தியோடு முன்னெடுக்கவில்லை. அவர்கள் தமிழ் வேட்பாளர்களே தவிர தமிழ் தரப்பில் பெரும்பாலானவர்களின் விருப்பங்களை பிரதிபலித்த பொது வேட்பாளர்கள் அல்ல.
ஆனால் இப்பொழுது பேசப்படுகின்ற தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், தமிழ் மக்களின் தேசிய ஐக்கியத்தின் குறியீடு. இலங்கை அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலையே தமிழ்மக்கள் மறைமுக பொதுசன வாக்கெடுப்பாக மாற்றலாமா என்ற ஒரு ஜனநாயகப் பரிசோதனை அது. தமிழ்ப்பொது வேட்பாளர் தேர்தலில் வென்று ஜனாதிபதியாக வரப்போவதில்லை. ஆனால் பெருமளவுக்கு தமிழ் வாக்குகளை அவர் திரட்டும் பொழுது, அவர் தமிழ்க் கூட்டு மனச்சாட்சியின் குறியீடாகப் பார்க்கப்படுவார். தமிழ்ப்பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவார் என்ற கற்பனையோடு யாரும் தமிழ் வேட்பாளரை நிறுத்தவில்லை. அவர் சிங்கள வேட்பாளர்களின் வெற்றியை சோதனைக்கு உள்ளாக்குவார் என்ற ஒரு பேர வாய்ப்பு அதில் உண்டு. அதைவிட முக்கியமாக, அவர் தேர்தலில் வெல்லப் போவதில்லை. ஆனால் அவர் தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்ஷம் ஒரு திரளாகத் திரட்டுவார்.
இரண்டாவது காரணம், தமிழ்ப் பொது வேட்பாளர் தோல்வியுற்றால் அது தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளின் தோல்வியாகக் காட்டப்படும் என்பது. உண்மைதான். ஆனால் தேர்தல் என்று வந்தால் வெற்றி மட்டும் தான் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தரப்பை ஒன்றிணைப்பதற்கான மிக வலிமையான ஒரு செய்முறையாக அது இருக்கும் என்பதே வெற்றிதான். அங்கு தேர்தல் வெற்றியை மட்டும் வைத்து அந்த முயற்சியின் இறுதியான விளைவை மதிப்பிட வேண்டியதில்லை.கடந்த 15 ஆண்டுகளிலும் இம்முறை பொது வேட்பாளர் என்ற கோரிக்கை மேற்பரப்புக்கு வந்திருப்பது ஒரு வெற்றி.அதை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எப்படி மேலே உயர்த்துவது என்று தமிழ்த்தரப்பு சிந்தித்து ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
மூன்றாவது காரணம்,ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களைத் தூண்டிவிடுவார் என்பது. சம்பந்தர் திரும்பத் திரும்ப அதைச் சொல்லுகிறார்.தமிழரசு கட்சிக்குள் ஒரு பகுதியினரும் அதைக் கூறுகிறார்கள்.அவ்வாறு தூண்டப்படும் சிங்கள வாக்காளர்கள் ராஜபக்சக்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும் எனவே ராஜபக்சக்களை வெற்றி பெற வைப்பதற்குத்தான் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுகிறார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.தமிழ் மக்கள் எதிர்ப்பைக் காட்டினால் அல்லது தமிழ்மக்கள் தனித்து முடிவு எடுத்தால்,அது சிங்கள இனவாதத்தைத் தூண்டிவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இங்குள்ள அடிப்படைக் கேள்வி என்னவென்றால், சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் இப்பொழுது மட்டும் என்ன தூங்கிக்கொண்டா இருக்கிறது? அப்படி என்றால் விகாரைகளைக் கட்டுவதும் தமிழ் மரபுரிமைச் சின்னங்களை ஆக்கிரமிப்பதும் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பதும் யார்?
சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் கோபித்துக் கொள்ளும் அல்லது அது தன்னை மீண்டும் பலப்படுத்திக் கொள்ளும் என்று பயப்பட்டால் தமிழ் மக்கள் எதிர்ப்பு அரசியலையே கையில் எடுக்கக்கூடாது.தமிழ்த்தேசியம் என்ற வார்த்தையெல்லாம் பயன்படுத்தக்கூடாது.போராட்டம்,சுதந்திரம் என்றெல்லாம் பிரகடனங்களைச் செய்யக்கூடாது.
அதேசமயம் தமிழ்ப் பொது வேட்ப்பாளர் ராஜபக்சக்களை வெல்லவைப்பார் என்று பதட்டமடைபவர்களில் ஒரு பகுதியினர் வெளிப்டையாகச் சொல்லாத ஒரு விடயம் என்னவெனில்,சஜித்துக்குக் கிடைக்கும் தமிழ் வாக்குகளை பொது வேட்பாளர் கவர்ந்து விடுவார் என்பது.
நாலாவது காரணம், ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்துகிறவர்கள் யாரோ ஒரு சிங்கள வேட்பாளரோடு டீல் செய்ய விரும்புகிறார்கள் என்ற சந்தேகம். இருக்கலாம். அதற்கு வாய்ப்புகள் உண்டு.அதேநேரம் அது தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகள் என்ன என்பதில்தான் தங்கி இருக்கின்றது. ஏனென்றால் தமிழ்ப்பொது வேட்பாளரோடு ஏதோ ஒரு டீலுக்கு வரும் சிங்கள வேட்பாளர் சிங்கள பௌத்த வாக்குகளை இழக்க வேண்டிவரும் என்பதே இலங்கைத் தீவின் கள யதார்த்தமாகும். சரத் பொன்சேகாவுக்கு அதுதான் நடந்தது. மைத்திரிக்கு அது நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் சம்பந்தர் மையால் உடன்படிக்கை எழுதுவதற்கு பதிலாக இதயங்களுக்கு இடையில் உடன்படிக்கை செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் இலக்கியத்தனமாகப் பேசினார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் உச்சமான கோரிக்கையை முன்வைத்தால், அவருடன் எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் பேரம்பேச வரமாட்டார் என்பதே யதார்த்தம்.எனவே தமிழ்ப்பொது வேட்பாளர் முன்வைக்கப் போகும் கோரிக்கைகள் எவை என்பதுதான் அதைத் தீர்மானிக்கின்றது.
ஐந்தாவது காரணம், எந்த ஒரு சிங்கள வேட்பாளரையும் நம்ப முடியாது. எனவே தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பது. உண்மை. எந்த ஒரு சிங்கள வேட்பாளரையும் நம்பக் கூடாது என்பதற்காகத்தான் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் முன்வைக்கப்பட வேண்டும் என்று கேட்கப்படுகிறது.15 ஆண்டுகளாக தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றுக் காசோலையாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்கு வழங்கப்பட்டன.அதை நிறுத்தி அதை தமிழ் வேட்பாளருக்கு உரியதாகத் திரும்பினால் என்ன ?
எனது கட்டுரைகளில் திரும்பத் திரும்ப நான் கூறுவது போல, பகிஸ்கரிப்பு ஒரு தெரிவுதான் இந்தியாவில் நோட்டா என்று தெரிவு உண்டு. அதைப்போல. ஆனால் அந்த தெரிவை முன்வைக்கும் ஒரு கட்சி அதற்காக உழைக்க வேண்டும்.அந்த தெரிவை மக்கள் மயப்படுத்த வேண்டும்.அறிக்கையை விட்டுவிட்டு பேசாமல் இருக்க முடியாது.அப்படி இருந்தால் ஏனைய கட்சிகள் மக்களைப் பிழையான வேட்பாளரை நோக்கிச் சாய்த்துக் கொண்டு சென்று விடுவார்கள்.அதாவது தமிழ் வாக்குகள் மீண்டும் வெற்றுக் காசோலையாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கிப் போகும்.தேர்தலைப் புறக்கணிப்பது ஒரு தெரிவு.ஆனால் அதற்காக உழைக்க வேண்டும். அதை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதுதான் சுதந்திரத்திற்காகப் போராடும் ஒரு மக்கள் கூட்டம் செய்ய வேண்டியது.
மேற்சொன்னவற்றைத் தொகுத்துப் பார்த்தால்,தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கும்.தமிழ்ப்பொது வேட்பாளர் எனப்படுபவர் தமிழ்மக்களின் கூட்டு மனோநிலையின் குறியீடாக இருப்பார்.அவர் தமிழ்க்கட்சி அரசியலைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடாது.தமிழ்மக்கள் மத்தியில் தற்போது தூண்டி விடப்படும் பிரதேச,சாதி,சமய,பால் அசமத்துவங்களை அவர் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது.எந்த ஒரு சிங்கள வேட்பாளரோடும் அவர் தன்னிச்சையாக டீலுக்கு போக முடியாது. ஜனாதிபதித் தேர்தல்மூலம் அவருக்கு கிடைத்த பிரபல்யத்தை அவர் அடுத்தடுத்த தேர்தல்களில் முதலீடு செய்யக்கூடாது….போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு பொது வேட்பாளரை தமிழ் மக்கள் முன் நிறுத்துவார்களாக இருந்தால், அவ்வாறு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்குரிய கட்டமைப்புகளை தமிழ் மக்கள் உருவாக்க முடிந்தால்,அது கடந்த 15ஆண்டு கால தமிழ் அரசியலில் திருப்பகரமான ஒரு நகர்வாக அமையும்.இல்லையென்றால், இக்கட்டுரையில் முன்கூறப்பட்ட நோர்வீஜியத் தமிழர் கவலைப்பட்டதுபோல தமிழ் அரசியலில் சரியான அறிவியல் முடிவுகள் எடுக்கப்பட்டபோதிலும்,அவை அரசியல் தீர்மானங்களாக மாற்றப்படாததன் ஆகப்பிந்திய விளைவொன்றை தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்
https://www.nillanthan.com/6695/
வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்!
களுத்துறையில் ஒரு சுற்றுலாப் பயணி - அவர் ஒரு வெள்ளைக்காரர் - ஒரு தேநீர்க் கடையில் வடை சாப்பிடுகிறார். அவரை கடைக்குள் உபசரித்து வடையோடு இரண்டு விதமான சம்பல்களையும் கொடுத்த அந்த கடையைச் சேர்ந்த ஒருவர், அவரிடம் ஒரு வடைக்கும் ஒரு பால் தேனீருக்கும் மொத்தம் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். சுற்றுலாப் பயணிக்கு அந்தத் தொகை அதிகம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அவர் அந்த வழியால் வரும் ஆட்களை மறித்து வடையின் விலை என்னவென்று கேட்கிறார். அந்த வழியால் வந்த இரண்டு சிங்களப் பெண்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் கதைக்கிறார்கள், அவர்களில் ஒருவர் அந்த வடையின் விலை 120 ரூபாய் என்று கூறுகிறார். வெள்ளைக்காரர் உண்மையை கண்டுபிடித்து விட்டார் என்பதை அறிந்த கடைக்காரர் சிறு தொகையை திரும்ப கொடுக்கிறார். இந்த விடயம் “டிக்டொக்” காணொளியில் பரவலாகப் பகிரப்பட்டது. அதன் விளைவாக கடைக்காரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
ஏற்கனவே இது போன்ற மற்றொரு சம்பவத்தில் ஒரு சுற்றுலாப் பயணியை ஒரு கொத்துரொட்டி கடைக்காரர் அவமதிக்கின்றார். சம்பவம் நடந்தது கொழும்பு புதுக்கடையில். அங்கேயும் ஒரு இடியப்ப கொத்து என்ன விலை என்று கேட்டபோது கடைக்காரர் 1900 ரூபாய் என்று கூறுகிறார். சுற்றுலாப் பயணி அதை நம்பாமல் கேள்வி கேட்டபோது கடைக்காரர் சுற்றுலாப் பயணியை நோக்கி வாயை பொத்து என்ற சமிக்கையை காட்டுகிறார். அது சமூக வலைத் தளங்களில் பரவலாக வெளிவந்தது. விளைவாக கடைக்காரர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்தார்கள்.
இந்த இரண்டு விடயங்களையும் முன்வைத்து, சமூக வலைத்தளங்களில் பகிடியாக ஒரு விடயம் பகிரப்படுகிறது. இனி சாப்பாட்டுக் கடைக்கு போகும் போது வீடியோவையும் ஓன் பண்ணிவிட்டு சென்றால் சாப்பாட்டுக் கடைக்காரர்கள் மரியாதையாக நடந்து கொள்வார்கள் நியாயமான விலையைகக் கூறுவார்கள் என்பதே அந்தப் பகிடியாகும்.
இது விடயத்தில் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும்.முதலாவது வெள்ளைத் தோலைக் கண்டால் அல்லது சுற்றுலாப் பயணிகளைக் கண்டால் உள்ளூர் வியாபாரிகள் விலையை உயர்த்திக் கூறும் ஒரு நிலைமை எப்பொழுதும் உண்டு. இது இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவும் உட்பட ஆசிய ஆபிரிக்க நாடுகள் பெரும்பாலானவற்றில் காணப்படும் ஒரு பொதுத் தோற்றப்பாடு. ஒரு வெளிநாட்டுப் பயணிக்கு ஒரு பொருளை டொலர் மதிப்பில் விற்க முற்படுவது.இதுதான் புதுக்கோட்டை மற்றும் களுத்துறைச் சம்பவங்களின் பின்னணி. இது முதலாவது .
இரண்டாவது விடயம்,சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல உள்ளூர் பணக்காரர்களும் சுற்றுலா விடுதிகளில் உணவு அருந்தும் பொழுது அந்த விலைப்பட்டியலைக் குறித்துக் கேள்வி கேட்பதில்லை. சில கிழமைகளுக்கு முன் யாழ்ப்பாணம், திருநெல்வேலிச் சந்தைக்கு அருகாக அமைந்திருக்கும் ஒரு மரக்கறி உணவகத்தில் விற்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்தது. நட்சத்திர அந்தஸ்துள்ள உணவு விடுதிகள் சாதாரண உணவுகளுக்கும் குடிபானங்களுக்கும் பல மடங்கு விலையைப் போடுகின்றன. பணக்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதைக் கேள்வி கேட்காமல் நுகர்கிறார்கள். அதையே தெருவோரக்கடை என்று வந்தால் அல்லது தெருவோரத்தில் பொருளை விக்கும் ஏழை என்று வந்தால் ஆயிரம் நியாயங்கள் கேட்டு விலையை எப்படிக் குறைக்கலாம் என்று முயற்சிக்கிறார்கள் .
அரசாங்கம் இந்த விடயத்தில் உஷாராகக் காணப்படுகின்றது. சுற்றுலா பயணிகளைக் கவர வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு ஏனென்றால் சுற்றுலாப் பயணிகள்தான் இப்பொழுது நாட்டுக்குள் டொலர்களைக் கொண்டு வரும், பொன்முட்டை இடும் வாழ்த்துக்களாகும்.இந்த மாதத்தில் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் மொத்தம் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் வந்திருக்கிறார்கள்.
நாட்டின் பெரும்பாலான நட்சத்திர அந்தஸ்த்துள்ள விடுதிகள் மட்டுமல்ல சாதாரண விடுதிகளும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. நாட்டின் உயர்தர மதுச்சாலைகள்,தேநீர்க் கடைகள்,சிற்றுண்டிச் சாலைகள் போன்றவற்றிலும் கடற்கரைகளிலும் உல்லாசப் பயணத் தலங்களிலும் பெருமளவுக்கு சுற்றுலாப் பயணிகளைக் காண முடிகின்றது.
இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் நாட்டின் தெற்குப் பகுதியை நோக்கியே போவதாக ஓர் அவதானிப்பு உண்டு. வடக்கு கிழக்கை நோக்கி வருபவர்களின் தொகை ஒப்பிட்டுளவில் குறைவு என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள விருந்தகங்கள், சுற்றுலாத் தங்கங்களின் விருந்தோம்பும் பண்பைக் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.சுற்றுலாப் பயணிகளை கவரத்தக்க விருந்தோம்பல் பண்பாடும் அதற்குரிய விருந்தோம்பல் வலை அமைப்பும் தமிழ்ப் பகுதிகளில் குறைவு என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.அவ்வாறு சுற்றுலாப் பயணிகளைக் கவரத்தக்க ஒரு சுற்றுலாப் பாரம்பரியத்தை அல்லது ஒரு சுற்றுலாப் பண்பாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான உயர் கற்கை நெறிகள் இப்பொழுது தமிழ்ப் பகுதிகளில் உண்டு.எனினும் ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் கவர்ச்சிமிகு செழிப்பான விருந்தோம்பல் பாரம்பரியம் ஒன்றைத் தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப முடியவில்லை என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.
மிகவும் துயரமான ஒரு காரணம் உண்டு. உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கும் பொழுது உறவினர்களும் நண்பர்களும் இவர்களிடம் எதையாவது எதிர்பார்க்கின்றார்கள்.அவர்கள் எதிர்பார்ப்பதை இவர்கள் கொடுக்க முடியாத போது அல்லது இவர்கள் கொடுப்பது அவர்கள் எதிர்பார்த்ததை ஈடு செய்யாத போது அங்கே அதிருப்தி உண்டாகிறது. அதனால் மனக் கஷ்டங்கள் ஏற்படுகின்றன.விடுமுறைக் காலத்தை தாய்நாட்டில் சந்தோஷமாகக் கழிப்பதற்கு என்று வரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் மேற்சொன்ன காரணத்தால் தமது விடுமுறை நாட்கள் மன அழுத்தம் மிக்கவைகளாக மாறின என்று குறைபடுகிறார்கள்.
மேலும் அங்கிருந்து வரும் முதலாம் தலைமுறை புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை.பெரும்பாலானவர்களுடைய பெற்றோர் இப்பொழுது உயிரோடு இல்லை.எனவே பெற்றோரோடு தங்க வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்குக் குறைவு. மேலும் பிள்ளைகள் வளர்ந்து விட்டன. தங்கப் போகும் வீடுகளிலும் பிள்ளைகள் வளர்ந்து விட்டன. ஒரு குறுகிய காலத்துக்குள் எல்லாரையும் உள்வாங்கும் அளவுக்கு உள்ளூர் வீடுகளின் அறைகள் போதாமல் இருக்கலாம். மேலும்,வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளைகள் “ஏசி” அறைகளைக் கேட்கிறார்கள். அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சுற்றுலா விடுதிகளில் தங்குவதற்கு ஒரு காரணம். இது போன்ற காரணங்களால் சுற்றுலா விடுதிகளுக்கு வருமானத்தை ஈட்டும் ஒரு தரப்பினராக புலம் பெயர்ந்த தமிழர்களும் மாறி வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு பச்சை மிளகாய் ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு மேல் போனது.ஆனால் இப்பொழுது உள்ளூர் சந்தைகளில் 100 ரூபாய்க்கு சற்று அதிகமாகப் போகின்றது. அப்படித்தான் தக்காளிப் பழம் பெரியது ஒரு கிலோ 800 ரூபாய்க்கு மேல் போனது. இப்பொழுது 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை போகின்றது.
மரக்கறி விலை குறைகிறது. கடல் உணவுகளின் விலையும் குறைக்கின்றது. அரசாங்கம் சாதாரண சிங்கள மக்களைக் கவரும் நோக்கத்தோடு நெத்தலிக் கருவாடு, சீனி,பருப்பு போன்றவற்றின் விலைகளை அவ்வப்போது குறைத்து வருகின்றது.ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் பொழுது மேலும் பல சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் என்று கூறப்படுகின்றவை சாதாரண சிங்கள மக்களைச் சென்றடைந்தனவா என்ற கேள்விக்கு விடை முக்கியம். ஏனெனில் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதற்குரிய பிரதான வாக்காளர்கள் சிங்களக் கிராமங்களில்தான் இருக்கிறார்கள். சிங்கள பௌத்த அரசியலின் வாக்கு வங்கியின் இதயம் கிராமங்களில்தான் உண்டு. கிராமப்புற வாக்காளர்கள் அரசாங்கத்தைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதுதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப் போகின்றது.
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம் ? 1974 ஜூன் 29இல் வெளியான வீரகேசரியில்....
Published By: NANTHINI 19 APR, 2024 | 01:12 PM
1974
கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது.
கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது.
எல்லா போர்களிலும் வென்ற இஸ்ரேலை முடக்கிய ஈரான்
எல்லா போர்களிலும் வென்ற இஸ்ரேலை முடக்கிய ஈரான் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
"என் பார்வையில் ஏன் பொது வேட்பாளர் அவசியம் இன்று" [வெளிப்படையாக செய்த தவறுகளை ஏற்று மன்னிப்பு கேட்க்காத ஜனாதிபதி வேட்ப்பாளர் இருக்கும் பட்சத்தில்]
"என் பார்வையில் ஏன் பொது வேட்பாளர் அவசியம் இன்று" [வெளிப்படையாக செய்த தவறுகளை ஏற்று மன்னிப்பு கேட்க்காத ஜனாதிபதி வேட்ப்பாளர் இருக்கும் பட்சத்தில்]
1915 ஆம் ஆண்டில், டி.பி. ஜயதிலக, டி.எஸ். சேனநாயக்க மற்றும் பல செல்வந்தர்கள் சிங்களவர்கள் தமிழ் பேசும் முஸ்லீமிற்கு எதிராக இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பது இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும்.
பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும்.
இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என்பது மட்டும் அல்ல, தமிழர்க்கு எதிராக துவேசம் கூட பரப்பப் படாமல் கூட இருந்து இருக்கும். தமிழரின் இன்றைய பிரச்னைக்கு முக்கிய காரணம் அல்லது தொடக்கம் இவர்களே!
இது தான் நாம் படித்த பாடம் . ஏன் அன்றே ராமநாதன் படித்த பாடம்
'டோனமோர் என்றால் இனி தமிழர்கள் இல்லை’. அவருடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக இருந்தன; அதன் பின் உயர்சாதி பௌத்த சிங்களவர்களும் கரவ சாதி சிங்களவர்களும் சேர்ந்து சேர் பொன்னம்பலம் இராமநாதனை 1920களின் பிற்பகுதியில் இருந்து தீபவம்சத்திலும், மகாவம்சத்திலும், இறுதியில் ராஜாவலியிலும் எப்படி எல்லாளனை படிப்படியாக ஒரு இனவாதியாக மாற்றி சாடினார்களோ அப்படியே ராமநாதனையும் ஒரு இனவாதி என்று சாடினார்கள் என்பது வரலாறு
ஆகவே எந்த சிங்கள தலைவர்களையும் ஆதரித்தோ அல்லது ஆதாரிக்காமலோ ஒன்றும் நடை பெற போவதில்லை. அது இதுவரை கண்ட காட்சி. காரணம் ராமநாதனின் 1915 இல் இருந்தே வரலாறு கூறும்
ஆகவே தமிழ் பேசும் முழு சமூகமும் ஒரு குடையின் கீழ், வெற்றி தோல்வியை ஒரு புறம் தள்ளிவிட்டு, தமக்கு என ஒருவரை நிறுத்தி, தம் கொள்கை விளக்கத்தை தெரியப்படுத்துதல், வேறு ஒரு வழியிலாவது வெற்றி தரும்
ஒற்றுமை
உலகத்துக்கு உண்மை உரைத்தலும் எடுத்து காட்டுதலும்
அதற்கு இது ஒரு முதல் படியாக கூட இருக்கலாம் ?
என்றாலும் இவை எல்லாம்
தமிழர்களின், தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையிலேயே தங்கி உள்ளது. அது தான் எம்மை என்றும் ஏமாற்றும் ஒன்று ??
உதாரணமாக,
"ஒன்றுபட்டால்உண்டுவாழ்வு என்றவாழ்வைஇன்னும்காணோம்!"
தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது 300BC அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை.
வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது.சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன். அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது .என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார்.
"பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்,
முரசு முழங்கு தானை மூவருங்கூடி,
அரசவை இருந்த தோற்றம் போலப்"
(பொரு. ஆற். படை: 53-54) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம்.
இன்னும் ஒரு சமயம்,
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று பாடினார்.
"நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
......................................................
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
..........................................................
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே."
ஆனால் இவை எல்லாம் இலக்கியத்துடன் நின்றுவிட்டன . அது தான் எம் இனத்தின் பெரும் குறை. ஒற்றுமையை குழப்பவென்றே ஒரு கூட்டம் காரணம் எதாவது ஒன்றைக் கூறிக்கொண்டே இருக்கும். அது நாம் கண்ட வரலாறு!
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
'சமாதானம்' நிலவ வேண்டும் என்றால் அங்கு 'மன்னிப்பு' முக்கிய பங்கு
['சமாதானம்' நிலவ வேண்டும் என்றால் அங்கு 'மன்னிப்பு' முக்கிய பங்கை வகுக்கிறது. 'மன்னிப்பு' என்ற கட்டுரையை, 'மன்னிப்பு' என்ற கவிதையுடன் சமாதான விரும்பிகளின் கருத்துக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி, உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!]
"இருஇனம் வாழும் ஒரு நாட்டில்
இருக்கையை தனதாக்கி பெரும்பான்மை அதிகாரத்தில்
இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி
இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "
"இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி
இணக்கம் கண்டு இதயம் பரிமாறி
இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு
இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! "
இரக்கமின்றி சுடும் காட்டுமிராண்டிகள் அவர்களல்ல
இந்தநாட்டின் பூர்வீககுடிகளில் அவர்களும் ஒருவர்
இணைந்து வாழ்ந்த குடிமக்கள் அவர்கள்
இன்பமாகவாழ இருவரும் மன்னித்து மறவுங்கள்! "
"இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி
இழிவு செய்த வெட்கமற்ற மனமே
இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து
இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' "
"இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது
இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது
இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல
இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! "
"இன்பபுகழை அழியாது கொடுக்கும் அடக்கத்தை
இருஅடி திருக்குறள் கூறியவாறு ஏற்று
இருளாக்கி விடும் அடங்காமையை துறந்து
இருகைகூப்பி மன்னிப்புகேள் உலகம் போற்றும்! "
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"மன்னிப்பு"
மன்னிப்பு என்பதை ஆங்கிலத்தில் pardon, forgiveness, exemption or apology என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது செய்த தவறு, குற்றம் போன்றவற்றுக்காக ஒருவர்மீது கோபம் கொள்ளாமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடிவெடுத்து அதை அவருக்கு உணர்த்தும் செயல் என்றும் கூறலாம். இதற்கு எதிர்மாறான சொல்லாக மன்றுதல் அல்லது ஒறுத்தல் [தண்டஞ்செய்தல்,To fine, punish] காணப்படுகிறது.
மன்னித்தல் [Forgiveness] என்பது உண்மையில் ஒரு உளவியல் [psychological] செயல்முறை, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த ஒருவர், அந்த குற்றச்செயல் [offense] தொடர்பான உணர்வுகள் மற்றும் அணுகுமுறையில் மாற்றத்திற்கு உள்ளாகி அதில் இருந்து விடுபட வழிவகுக்கிறது எனலாம். அதாவது மனக்கசப்பு மற்றும் பழிவாங்குதல் போன்ற எண்ணங்களில் [ negative emotions such as resentment and vengeance ] இருந்து இதனால் அவர் விடுபடுகிறார் எனலாம். எனினும் ஆழமாக சிந்திக்கும் பொழுது மன்னிப்பு என்பது உணர்வு மட்டும் அல்ல அது ஒரு செயல் என்பது தெரியவரும்.
நாம் மனக்கசப்பை விட்டுவிட்டு, நாம் அனுபவித்த காயம் அல்லது இழப்புக்கு ஈடுசெய்யப்பட வேண்டும் என்ற எந்தவொரு கோரிக்கையையும் கைவிடும்போது மற்றவர்களை நாமாகவே மன்னித்து விடுகிறோம் எனலாம். அதே போல எமக்கு கொடுமை இழைத்தவர்கள் தங்கள் கொடுமையை உணர்ந்து, தமது தவறை மறைக்காமல், இனி அப்படி ஒன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து, தாம் செய்த அநியாயங்களை வெளிப்படையாக கூறி, மன்னிப்பு கேட்பது இரு சாராரையும் ஒற்றுமையாக்கும்.
மன்னித்தல் எப்படி மாண்பு மிகுந்ததோ, அப்படித்தான் மன்னிப்பு கேட்பதும். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு பேருள்ளம்வேண்டும் பெருந்தன்மை வேண்டும். கூடுதலாக ஆண்மையும் வேண்டும். மேலும் ஒரு குற்றத்தை ஒப்புக் கொள்வதே அதைத் தவறென்று உணர்ந்திருப்பதை வெளிப்படுத்தும். மன்னிப்பு கேட்பதே குற்றத்திற்கான பாதிதண்டனையை பெற்றுவிட்டதற்கு சமம்.
மன்னிப்பு கேட்பவனை விட மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன் என்பார்கள். அந்த மன்னிக்கத் தெரிந்த குணம் எப்போது வரும் என்றால் தவறு செய்தவன் தவறை உணரும் போதுதான். ஆனால் அந்த தவறையும் உணராமல் மன்னிப்பும் கேட்காமல் அவன் இருந்தால் ? இது தான் இன்று பெரும்பான்மை ஆட்சியாளரிடம் சிக்கி தவிக்கும் சிறுபான்மை இனத்தின் கதி ?
எனவே தான் உண்மையை கண்டறிந்து, கொடூரத்தின் வெளிப்பாட்டை அவனுக்கு உணர்த்தி, அதன் மூலம் அவனை மன்னிப்பு கேட்க வைக்க, இலங்கையில் காணாமல் போன பெற்றோர் இன்னும் அறவழியில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
பொதுவாக கூறுமிடத்து, நம்மை நாம் முதலாவதாக மன்னிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தலாம். அதாவது இந்த தவறை செய்ய மாட்டேன் என முடிவெடுத்து நம்மை நாம் மன்னிக்கும் போது, நாம் அடுத்த நல்ல நிலைமைக்கு நம்மை எடுத்து செல்கிறோம் என்றாகிறது. மற்றவர்களை காட்டிலும் நாம் யாரை மன்னித்தோமோ அவர்களே நம் மீது அதிக அன்பு கூறுவார்கள் என்பது உண்மை. ஒருவர் நமக்கு தீமை செய்கிறார். நமக்கு அவர் மேல் கோபம் கொப்பளிக்கிறது. பின் அவர் தனது தவறை உணர்ந்து நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார். நாமும் மன்னித்தோம் என்று கூறி விடுகிறோம். இதனால் இருவருக்கும் இடையில் சமாதானம் ஏற்படுகிறது. இது தான் நாம் பெரும் பெரிய முதல் பரிசு ஆகும்.
எது எப்படியாகினும், நாம் உண்மையில் மன்னித்தோமா அல்லது மன்னிக்கப் பட்டோமா என்பது முக்கியம். அது கட்டாயம் உறுதிப்படுத்தப் படவேண்டும். அப்ப தான் சந்தேகம் அற்ற சமாதானம் நிலவும்.
இன்றைய உலகில் 'மன்னிப்பு' என்ற செயல் கொஞ்சம் வித்தியாசமாக மட்டும் அல்ல. பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றும். மன்னிப்பார்கள் என்று நம்பி வெள்ளைக்கொடியுடன் சென்று மாண்டவர்கள் எத்தனை ?.
எது எவ்வாறாகினும், நாளும் பிறர்க்குதவும் நல்லெண்ணம் மட்டும் இருப்பதாலோ அல்லது பாசமும் பரிவும் காட்டும் உள்ளங்கள் இருப்பதாலோ நாம் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மன்னிக்கிற மாண்பு மாபெரும் வெற்றிகளை நிகழ்த்துகிறது. ஆமாம், மன்னிப்பு மானுடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது! தண்டனையால் முடியாத மாற்றத்தை மன்னிப்பு நிகழ்த்தி விடுகிறது.
“இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப்போல பகையை பகை அகற்ற முடியாது. அன்புதான் பகையை அகற்றும்” என்றார் மார்ட்டின் லுாதர் கிங் [Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that - Martin Luther King] ஆமாம், அந்த அன்பு தான் மன்னிப்பு ஆகும். எனவே, மன்னித்தல் என்பது இயலாமையோ,கோழைத்தனமோ அல்ல.
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சொல்லியது போல, “மன்னித்தல் என்பது பலசாலிகளின் பண்பு” ஆகும். “கண்ணுக்குக்கண் என்ற பகையுணர்வு இருந்தால் உலகில் எல்லோருமே குருடர்களாகத்தான் திரிந்து கொண்டிருப்பார்கள்” என்று ஒரு முறை மகாத்மா காந்தி கூறியதை நினைவு படுத்துங்கள்.
"மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டால், உங்கள் பரலோகத் தகப்பன் உங்களுக்கு மன்னிப்பார் [For If You Forgive Men When They Sin Against You, Your Heavenly Father Will Also Forgive You]. நீங்கள் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்காவிட்டால், உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார் [But If You Do Not Forgive Men Their Sins, Your Father Will Not Forgive Your Sins]." என்று கிறிஸ்தவம் தனது மத்தேயு 6: 14-15 வில் மனிதர்களுக்கு ஒரு பயமுறுத்தலுடன் போதிக்கிறது.
அதே போல "மன்னித்தல் அல்லாஹ் தனது நபிக்கும் அடியார்களுக்கும் ஏவிய நற்பண்புகளில் ஒன்று" என இஸ்லாத்தில் கூறப்படுகிறது.
உதாரணமாக, 'இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.' [whoever pardons and makes reconciliation – his reward is [due] from Allah]. (அல்குர்ஆன் 42:39-43)
இந்து மதத்தின் ஒரு காப்பியமான மகாபாரதத்தில், வனபர்வம் பகுதி 29 இல் [Mahabharata, Book 3, Vana Parva, Section XXIX,] மன்னிப்பு பற்றிய நீண்ட உரையாடல் காணப்படுகிறது. அதில்
"உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்கள் கருத்து. உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. ஓ அழகானவளே, என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே, ஞானி. அவனே பலவான்.
எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்ட பொறுமையானவர்களுக்காக சிறப்பு மிகுந்த மன்னிக்கும் தன்மை கொண்ட காசியபர் இந்த வரிகளைப் பாடியிருக்கிறார்.
"மன்னிப்பதே {பொறுமையே} அறம்; மன்னிப்பதே வேள்வி, மன்னிப்பே வேதம், மன்னிப்பே சுருதி. இதை அறிந்த மனிதன் எதையும் மன்னிக்கும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். பொறுமையே பிரம்மம், பொறுமையே உண்மை, மன்னிப்பே பாதுகாக்கப்பட்ட ஆன்மத்தகுதி, எதிர்கால ஆன்மத்தகுதியைக் காப்பது பொறுமையே. பொறுமையே தவம், பொறுமையே புனிதம், பொறுமையாலேயே இந்த அண்ட ம் தாங்கப்படுகிறது.
[For, O thou of handsome face, know that the birth of creatures is due to peace! If the kings also, O Draupadi, giveth way to wrath, his subjects soon meet with destruction. Wrath, therefore, hath for its consequence the destruction and the distress of the people. And because it is seen that there are in the world men who are forgiving like the Earth, it is therefore that creatures derive their life and prosperity. O beautiful one, one should forgive under every injury. It hath been said that the continuation of species is due to man being forgiving. He, indeed, is a wise and excellent person who hath conquered his wrath and who showeth forgiveness even when insulted, oppressed, and angered by a strong person. The man of power who controleth his wrath, hath (for his enjoyment) numerous everlasting regions; while he that is angry, is called foolish, and meeteth with destruction both in this and the other world. O Krishna, the illustrious and forgiving Kashyapa hath, in this respect, sung the following verses in honour of men that are ever forgiving, Forgiveness is virtue; forgiveness is sacrifice; forgiveness is the Vedas; forgiveness is the Shruti. Forgiveness protecteth the ascetic merit of the future; forgiveness is asceticism; forgiveness is holiness; and by forgiveness is it that the universe is held together.]" என்று கூறி உள்ளதை கவனிக்க.
"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று."
[குறள் 152]
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் [மன்னித்துக்] கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் [மன்னித்தலையும்] விட நல்லது என்கிறது திருவள்ளுவர் தந்த திருக்குறள். அதாவது, நாம் வாழ்வில் பல மனிதர்களை சந்திக்கிறோம். பெரும்பாலானோரிடம் நல்லவையும் உண்டு குறைகளும் உண்டு என்பதை அறிவோம். சிலரிடம் அதிக குறைகள் உண்டு. அவர்கள் அத்தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், திருத்துத்திக்கொள்ளவும் மாட்டார்கள். மறுபுறம் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். அது அவர்களின் நல்லுள்ளத்திற்கான சான்று. அவர்களின் முன்னேற்றத்திற்கான சான்று.
ஆகவே மன்னிப்பு கேட்பவரை மன்னித்து செல்வது சிறப்பாகும்.
அப்படியான தலைவர்களில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பெரும்பான்மையினரில், யாரும் இருக்கிறார்களா ?
அது தான் முதலில் வெளிப்படையாக தெரியவேண்டும்
இல்லாவிட்டால்
குறைந்தது நாம் ஆவாது எமது ஒற்றுமையையும் கோரிக்கையையும் ஒரு புள்ளியில் காரணங்களுடன் எடுத்துக் காட்டி உலகத்துக்காவது எம் நிலையை சொல்ல, அதனால் உலகத்தின் அழுத்தத்தை அவர்கள் சந்திக்க வழி சமைக்கக் கூடிய
தமிழ் பேசும் எல்லோரும் அல்லது தமிழர் எல்லோரும் ஏற்கக்கூடிய பொது வேட்ப்பாளரை நிறுத்துவது காலத்தின் கட்டாயம் என்று எண்ணுகிறேன்
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் நிலைப்பாடு என்ன? - நிலாந்தன். -
நாடு ஒரு தேர்தலை நோக்கி போய்க்கொண்டிருக்கும் பொழுது தமிழரசுக் கட்சியானது தொடர்ந்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அதன் செயற்பாடுகள் காரணமாக அது படிப்படியாக உடைந்து உடைந்து அதன் ஏகபோகத்தை இழந்து விட்டது என்பது உண்மைதான்.என்றாலும் அதுதான் இப்பொழுது உள்ளத்தில் பெரிய கட்சி. அக்கட்சி ஒரு தேர்தல் ஆண்டில் முடிவெடுக்க முடியாதபடி உடைந்து காணப்படுவது,தென் இலங்கைக்குச் சாதகமானது.
நீதிமன்றம் கட்சியை முடக்கவில்லை. ஆனால் அண்மையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் செயல்பட முடியாத ஒரு நிலை. அதனால் முன்னைய தலைவராகிய மாவை சேனாதிராஜாவே இப்பொழுதும் தலைவராக உள்ளார். மாவை ஒரு திறமையான தலைவராக இருந்திருந்தால் கட்சி இப்படி ஒரு சீரழிவுக்கு வந்திருக்காது என்ற கருத்து கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் உண்டு. அவருடைய தலைமையின் கீழ் தான் கட்சிக்குள் இரண்டு அணிகள் விருத்தியடைந்தன. தேர்தல் மூலம் ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.அது ஜனநாயகமானது தான்.ஆனால் அதனால் கட்சி இரண்டாக உடைந்து நிற்கின்றது.
யாருடைய தலைமையின் கீழ் தமிழரசு கட்சி இரண்டாக உடையும் வளர்ச்சிகள் ஏற்பட்டனவோ அதே தலைவர் தான் தொடர்ந்து அக்கட்சிக்கு தலைமை தாங்குகிறார். எனவே ஜனாதிபதி தேர்தலில் உடைந்த அணிகள் ஒன்றிணைந்து ஒரு பொது முடிவை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டா? அதை நோக்கி கட்சியை ஐக்கியப்படுத்த மாவையால் முடியுமா?அவருக்கு வயதாகிவிட்டது. உடலாலும் மனதாலும் தளர்ந்து விட்டார்.
கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவுகளிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி இரு வேறு நிலைப்பாடுகளோடு காணப்படுவதாகத் தெரிகிறது.
ஏனெனில் தமிழ் மக்களின் வாக்குகள் இயல்பாக சஜித்துக்கு போவதை தடுத்து அவற்றை பொது வேட்பாளர் பெற்றுக் கொள்வார். அதன்மூலம் சஜித்தின் வெற்றி வாய்ப்புகள் குறையும். அது அதன் தக்கபூர்வ விளைவாக ரணிலே வெல்ல வைக்கும் என்று ஒரு வாதம் உண்டு.
இன்னொரு வாதம், தமிழ் பொது வேட்பாளர் எனப்படுகிறவர் சிங்கள மக்கள் மத்தியில் இன விரோதத்தைத் தூண்டுவதற்கு வாய்ப்பாக அமைவார். அதன் மூலம் ராஜபக்சக்கள் மீண்டும் தமது வாக்கு வங்கியைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கூறப்படுவது.
மேற்கண்ட இரண்டு காரணங்களையும் முன்வைத்து தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால், அவர்கள் அனேகமாக சுமந்திரன் அணியை சேர்ந்தவர்கள்,அல்லது சிறீதரன் அணிக்கு எதிரானவர்கள் என்ற ஒரு தொகுக்கப்பட்ட படத்தைப் பெறலாம்.
இந்த விடயத்தில் சுமந்திரன் அணி தெளிவாகவும் தீர்மானகரமாகவும் காணப்படுகின்றது. கட்சி ஒரு முடிவை எடுத்ததோ இல்லையோ அந்த அணி தன் முடிவை பகிரங்கமாகத் துணிச்சலாகக் கூறி வருகின்றது.
ஆனால் அதற்கு எதிரணியாக காணப்படுகின்ற சிறீதரன் அணியோ தன் முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்க தயங்குவதாக தெரிகிறது. சிறீதரன் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்தரங்குகளில் காணப்படுகின்றார்.குறிப்பாக “மக்கள் மனு” என்று அழைக்கப்படும் கருத்தரங்கு தந்தை செல்வா கலையரங்கில் நடந்த பொழுது அதில் அவர் உரையாற்றியிருக்கிறார்.அவருடைய உரை தமிழ் பொது வேட்பாளருக்கு சாதகமாகக் காணப்பட்டது. அவர் கொள்கை அளவில் தமிழ் பொது வேட்பாளர் என்ற தெரிவை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அது தொடர்பான இறுதி முடிவை கட்சி கூடி முடிவெடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.
அவருடைய அணியை சேர்ந்தவராகக் கருதப்படும் தவராசாவும் அவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். மேலும் கிளிநொச்சியில் சிறீதரனின் வலது கை போல காணப்படும் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும் முகநூலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார்.அதை அவர் தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும் ஆனால் கட்சி என்ன முடிவு எடுக்கின்றதோ அதற்குத் தான் கீழ்படிவேன் என்றும் தெரிவித்துள்ளார். எனவே சிறீதரன் அணியானது பொது வேட்பாளர் தெரிவிக்குக் கிட்டவாக நிற்கிறது.
சுமந்திரன் அண்மையில் அனுர குமார யாழ்ப்பாணம் வந்திருந்த பொழுது அந்தக் கூட்டத்தில் முன் வரிசையில் காணப்பட்டார். ஆனால் அதற்காக அவர் ஜேவிபிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
சஜித்,தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி தன்னை நோக்கி தமிழ் வாக்குகளைத் திருப்பும் என்று எதிர்பார்க்கக் கூடும். ஆனால் அது தொடர்பான உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளோ இணக்கங்களோ இதுவரையிலும் ஏற்படவில்லை.
அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கும் குறையாத காலமே இருக்கும் ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சி முடிவெடுக்காத ஒரு நிலை.
அதே சமயம் குத்து விளக்குக் கூட்டணியும் அது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லை என்று தெரிகிறது. கடைசியாக வவுனியாவில் நடந்த கூட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஏனைய கட்சிகளோடு உரையாடுவது என்று அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.அதாவது அந்தக் கூட்டணியின் முடிவு என்ன என்பது உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.
அக்கூட்டுக்குள் காணப்படும் ஈபிஆர்எல்எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் பொது வேட்பாளரை குறித்து அதிகளவு பேசியிருக்கிறார். அறிக்கைகள் விட்டிருக்கிறார் ஊடகச் சந்திப்புக்களையும் நடத்தியிருக்கிறார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலையொட்டி தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கோரிக்கையை முதலிலேயே முன் வைத்தவர் அவர்தான். ஆனால் அவர் இணைந்திருக்கும் கூட்டின் முடிவும் அதுவா என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
குத்துவிளக்கு கூட்டுக்குள் காணப்படும் கட்சிகளில் இரண்டு கட்சிகள் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தளம்புவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக அவர்கள் முடிவெடுப்பதை பெருமளவுக்கு தாமதித்து வருவதாகவும் தெரிகின்றது.தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் தமிழரசுக் கட்சி இணையவில்லை என்றால் அது வெற்றி பெறாது என்று இந்த இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் தங்களுக்கு நெருக்கமானவர்களோடு கதைத்திருக்கிறார்கள். எனவே குத்து விளக்குக் கூட்டுக்குள்ளும் தமிழ் பொது வேட்பாளர் என்ற தெரிவில் உறுதியான ஒருமித்த முடிவு இல்லை.
இந்த விவாதப் பரப்புக்குள் வராத கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அது கடந்த 15 ஆண்டுகளில் நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவைத்தான் எடுத்தது. இந்த முறையும் அக்கட்சி அதே முடிவோடு காணப்படுகின்றது. ஆனால் அந்த முடிவை மக்களுடைய விருப்பமாக மாற்ற அவர்கள் முயற்சிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. அப்படி என்றால் தேர்தலில் மக்கள் என்ன முடிவெடுப்பார்கள்? மக்களைத் தாமாக முடிவெடுக்குமாறு விடுவதோ அல்லது ஏனைய கட்சிகள் மக்களை வழிநடத்தட்டும் என்று முடிவெடுப்பதோ கட்சி அரசியலில் பொருத்தமான ஒழுக்கம் அல்ல. ஒரு கட்சி தான் எடுத்த முடிவை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதற்கு மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதை நோக்கி உழைப்பதாகத் தெரியவில்லை.
கடந்த 15 ஆண்டுகளில் நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்ற விடயங்களில் ஒன்று ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களித்தமைதான். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் போரை வழிநடத்திய தளபதியாகிய சரத் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இறுதிக்கட்ட போரில் தற்காலிகமாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனாவுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.எனவே ராஜபக்சங்களுக்கு எதிராக என்ற தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்ச்சியானது. எனினும்,இம்முறை அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இருக்குமா ?
மேற்கு நாடுகள்,பன்னாட்டு நாணய நிதியம் போன்றன ரணில் விக்கிரமசிங்கவை முதன்மைப்படுத்துவதாகத் தெரிகிறது.ஆனால் அவர் ராஜபக்சக்களின் பதிலியாகத்தான் தேர்தலில் இறக்கப்படுவாரா என்ற கேள்விக்கு விடை முக்கியம். அப்படி ஒரு நிலைமை வந்தால், மேற்கு நாடுகள் தமிழ்க் கட்சிகளிடம் எப்படிப் பட்ட ஒரு முடிவை எடுக்குமாறு வலியுறுத்தும்?
சஜித் பிரேமதாச தன் தலைமைத்துவத்தை இனிமேல் தான் நிரூபிக்க வேண்டும். மேலும் வெற்றியை நோக்கிக் கூட்டுகளை உருவாக்க முடியாதவராகவும் அவர் காணப்படுகின்றார். அது மட்டுமல்ல ஓய்வு பெற்ற படைத் தளபதிகள் அவரை நோக்கிச் செல்கிறார்கள்.ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிக்கும் தமிழ் மக்கள் அந்த ராஜபக்சக்களின் உத்தரவைப் போர்க்களத்தில் அமல்படுத்திய தளபதிகள் அதிகமாக இணையும் ஒரு கூட்டுக்கு வாக்களிப்பார்களா?சரத் பொன்சேகாவுக்கும் மைத்திரிபால சிறிசேனலுக்கும் வாக்களித்ததை போலவா இதுவும்?
அல்லது தமிழரசுக் கட்சிக்குள் சிறீதரன் அணி தெளிவான நிலைப்பாட்டை எடுத்து, துணிச்சலாகத் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்தால், குத்து விளக்குக் கூட்டணியும் உட்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லாத ஏனைய கட்சிகள் ஓர் அணிக்குள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டா ?
இது விடயத்தில் சிவில் சமூகங்களின் தலையீடு கட்சிகளை ஒருங்கிணைக்க உதவுமா ?அல்லது கட்சிகள் தனிப்பட்ட ரீதியில் தென்னிலங்கைக் கட்சிகளோடு டீலுக்குப் போகக்கூடுமா ?
அனுர குமாரவிடம் சில கேள்விகள் – நிலாந்தன்!
அனுர குமாரவிடம் சில கேள்விகள் – நிலாந்தன்!
ஓரு நண்பர், அவர் ஒரு இலக்கியவாதி, தொலைபேசியில் அழைத்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அவரைப் பதட்டமடையச் செய்திருப்பதாகத் தெரிந்தது. பொது வேட்பாளர் என்ற தெரிவை அவர் கடுமையாக விமர்சித்தார். இனங்களுக்கு இடையே அது முரண்பாட்டைப் பெருப்பிக்கும் என்ற பொருள்படவும் அவர் கதைத்தார். அதாவது சம்பந்தன், சுமந்திரன் மற்றும் சில விமர்சகர்கள் கூறுவதை அவர் பிரதிபலித்தார். அதைவிட முக்கியமாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தான் ஜேவிபிக்கு வாக்களித்ததாகவும் கூறினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜேவிபிக்கு இருந்த கவர்ச்சியை விடவும் இப்பொழுது குறிப்பாக 2021 இல் நிகழ்ந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னர் ஜேவிபியின் கவர்ச்சி அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. எனவே அந்த இலக்கிய நண்பர் இந்த முறையும் ஜேவிபிக்குத்தான் வாக்களிக்க போகின்றார் என்று தெரிகிறது. அவரைப் போன்றவர்களை மயக்கக்கூடிய பேச்சாற்றலும் ஜனவசியமும் அனுரகுமாரடவிம் உண்டுதான்.
யாழ்ப்பாணத்திலும் கனடாவிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் இன முரண்பாடுகள் தொடர்பிலும் இன நல்லிணக்கம் தொடர்பிலும் அனுரகுமார ஆற்றிய உரைகள் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக லிபரல் ஜனநாயக வாதிகள் மத்தியில் அதிகம் கவனிப்பை பெற்றிருக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டச் செயற்பாட்டாளரும் ஆகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார், ஜேவிபியை ஆதரிப்பதன் மூலம் தென்னிலங்கை அரசியலில் தாக்கம் செலுத்த முடியுமா என்று.
அப்பொழுது இருந்ததைவிடவும் இப்பொழுது, ஜேவிபியின் மவுசு கூடிவிட்டது. இரண்டு பிரதான கட்சிகளையும் விட ஜேவிபி பரவாயில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கம் கருதுகிறது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான எதிர்பார்ப்பு உண்டா ?
உண்டாயின், அவ்வாறான எதிர்பார்ப்பு உள்ளவர்கள் பின்வரும் கேள்விகளுக்கு ஜேவிபி என்ன பதில் கூறுகிறது என்பதைக் கேட்டுத் தமிழ் மக்களுக்குக் கூறுவார்களா?
முதலாவது கேள்வி, இலங்கை இனப் பிரச்சினை என்பது இலங்கைத் தீவின் பல் வகைமையை ஏற்றுக் கொள்ள மறுத்ததில் இருந்துதான் தொடங்கியது. இலங்கைத் தீவின் பல்வகைமை எனப்படுவது இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மதங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் உண்டு என்பதுதான். இந்த பல்வகைமையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதம் அதாவது பெரிய இனம் ஏனைய சிறிய இனங்களின் தேசிய இருப்பை அழிக்க முற்பட்டமைதான் இனப் பிரச்சினையாகும். எனவே இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? ஆயின் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதனை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? ஆயின் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? இது முதலாவது தொகுதிக் கேள்விகள்.
அனுரகுமார கூறுகிறார் தமிழ் மக்களுக்கு மொழிப் பிரச்சினை, வழிபாட்டுப் பிரச்சினை, பாதுகாப்புப் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சனைகள் உண்டு என்று. உண்டுதான். ஆனால் அவையனைத்தும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைக்குள் அடங்கும். தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு அவர்களுடைய கூட்டுரிமையைப் பாதுகாக்கும் ஒரு தீர்வை முன் வைத்தால் பிரச்சனை தீர்ந்து விடும். எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்வதுதான். இந்த அடிப்படையில் இரண்டாவது தொகுதிக் கேள்விகளைக் கேட்கலாம்.
இனப் பிரச்சினைக்கு ஜேவிபி முன் வைக்கும் தீர்வு என்ன? தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்களோ இல்லையோ மஹிந்த கூறுகிறார் 13 பிளஸ் என்று. ரணில் கூறுகிறார் 13 என்று. சஜித் கூறுகிறார் 13 பிளஸ் என்று. இந்த விடயத்தில் ஜேவிபி தமிழ் மக்களுக்கு முன் வைக்கும் தீர்வு என்ன?
ஏனைய பெரிய காட்சிகளை விடத் தன் கை சுத்தம் என்று ஜேவிபி கூறுகின்றது. ஊழலற்ற, முறைகேடுகளற்ற, குடும்ப ஆதிக்கம் அற்ற ஒரு ஆட்சியைத் தன்னால் தர முடியும் என்று வாக்குறுதி அளிக்கின்றது. ஆனால் ஊழலும் முறைகேடும் குடும்ப ஆட்சியும் எங்கிருந்து வந்தன? இலங்கைத் தீவின் ஜனநாயக இதயம் எங்கே தோல்வி அடைந்தது? இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்த போதுதான். அதாவது இனப்பிரச்சினைதான் நாட்டின் எல்லாப் பிரச்சினைகளுக்குமான தாய்ப் பிரச்சனை. அதை ஜேவிபி ஏற்றுக் கொள்கிறதா? ஆயின் அதற்கு அவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன? ஏனைய கட்சிகளை விட வித்தியாசமான ஒரு தீர்வை அவர்கள் முன்வைப்பார்களா? அதைப் பகிரங்கமாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துக் கூற ஜேவிபி தயாரா?
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்களுடைய பாரம்பரியத் தாயகம் ஆகிய வடக்கு கிழக்கு இணைப்பை ஜேவிபி ஏற்று கொள்கின்றதா? ஏற்கனவே வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக வழக்கு போட்டு சட்டரீதியாக அந்த இணைப்பை பிரித்தது ஜேவிபிதான். அதற்காக ஜேவிபி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்குமா? அல்லது தான் செய்தது சரி என்றால் அதற்குரிய விளக்கத்தை ஜேவிபி பகிரங்கமாகக் கூறுமா? அதாவது ஜே விபி பகிரங்கமாக பொறுப்புக் கூறுமா?
இவை இரண்டாவது தொகுதி கேள்விகள். மூன்றாவது தொகுதி கேள்விகள் வருமாறு… யுத்த காலத்தில் ஜேவிபி படைத்தரப்புக்கு ஆட்சேர்த்துக் கொடுத்தது. போர் வெற்றிகளைக் கொண்டாடியது. ஆனால் தமிழ் மக்கள் அந்த வெற்றிகளை இனப்படுகொலை என்று வர்ணிக்கின்றார்கள். இது தொடர்பாக ஜேவிபியின் நிலைப்பாடு என்ன? அவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைக்கும் பொறி முறை ஒன்று ஐநாவில் செயற்பட்டு வருகின்றது. போரை ஆதரித்த, போரை வழிநடத்திய அனைவரும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். ஜேவிபி பொறுப்பு கூறுமா ?
நான்காவது கேள்வி, ஜேவிபியானது அதன் முதலாவது ஆயுதப் போராட்டத்தின்போது புதிதாக இணைக்கும் அங்கத்தவர்களுக்கு நடத்திய அரசியல் வகுப்புகளில் ஐந்தாவது வகுப்பில் மலையகத் தமிழர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவிகள் என்று விவரித்தது. ஜேவிபி இப்பொழுதும் அதே நிலைப்பாட்டோடு தான் காணப்படுகின்றதா? இந்த விடயத்தில் மலையக மக்களுக்கு எதிரான தனது முன்னைய நிலைப்பாட்டுக்காக ஜேவிபி பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமா?
மேற்படி கேள்விகளுக்கு ஜேவிபியும் ஜேவிபிக்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களும் பதில் சொல்ல வேண்டும்.
கனடாவிலும் யாழ்ப்பாணத்திலும் அனுரகுமார ஆற்றிய உரைகளில் காணப்படும் கவர்ச்சியான மனித நேய வார்த்தைகளைக் கண்டு மயங்கும் தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இனப்பிரச்சினை ஒரு மனிதாபிமான பிரச்சினை அல்ல. மொழி பிரச்சினை வழிபாட்டுப் பிரச்சினை போன்றனவும் உதிரிப் பிரச்சினைகள் அல்ல. அவை யாவும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைகள் சம்பந்தப்பட்டவை. கூட்டு உரிமை என்று எப்பொழுது கேட்கலாம் என்றால் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான். ஆனால் ஜேவிபியும் அதற்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களும் அரசியல் அடர்த்தி மிக்க விடையங்களை மேலோட்டமாகவும் மனிதாபிமான வார்த்தைகளிலும் கதைத்து விட்டுப் போகப் பார்க்கின்றார்கள். அரசியல் விவகாரங்களை அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தி மிக்க சொற்களின் ஊடாகத்தான் உரையாடலாம். அடர்த்தி குறைந்த சொற்களுக்கு ஊடாக உரையாடுவதே ஓர் அரசியல் தான்; தந்திரம் தான்.
ஜேவிபி வெளிப்படையான அரசியல் அடர்த்தி மிக்க வார்த்தைகளில் இனப் பிரச்சினை தொடர்பில் உரையாட வேண்டும். அவ்வாறு உரையாடினால் தென்னிலங்கையில் உள்ள சிங்கள பௌத்த வாக்குகளை அவர்கள் இழக்க வேண்டி வரலாம். எனவே இனப் பிரச்சினை தொடர்பில் ஜெவிபி தெளிவாகப் பேசாமல் ஆனால் கவர்ச்சியாக மனிதாபிமான நோக்கு நிலையில் இருந்து பேசி வருகிறது. ஜேவிபியில் முன்பு உறுப்பினராக இருந்து அதிலிருந்து விலகிய ஒருவர் எழுதிய நினைவுக் குறிப்பு ஒன்றில் அவர் பின்வரும் பொருள் பட கூறுகிறார். “ராஜபக்சக்கள் வெளிப்படையாகத் தெரியும் இனவாதிகள்.ஆனால் ஜேவிபி சமூக நீதியின் பின் பதுங்கும் ஓர் இனவாதி “ என்று. இக்கூற்று உண்மையா இல்லையா என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஜேவிபிக்கு மட்டுமல்ல ஜேவிபிக்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களுக்கும் உண்டு.
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்களும், பெருமளவு சிறுவர்களும் இருந்தார்கள். வழமைபோல ஆண்கள் வட்டமாக அமர்ந்துகொண்டு பேச, பெண்களும் அவ்வாறே செய்தார்கள். நடுவில் சிறுவர்கள் தமது விளையாட்டுத் துப்பாக்கிகளோடு ஓடித்திரிய வீடு அமர்க்களமாகியிருந்தது.
இளையராஜா பாடல்கள், அக்காலத்தில் எமக்குத் தெரியாமலிருந்த இன்னும் சில இசையமைப்பாளர்கள் , அநிருத்தின் சிட்னி இசை நிகழ்ச்சி என்று ஆரம்பித்து சில படங்கள் குறித்த விமர்சனம் என்று நீண்டு, அரசியலுக்குள் நுழைந்தது சம்பாஷணை.
அங்கிருந்தவர்களில் பல தரப்பினர் இருந்தனர். புலிகளை ஆதரிப்பவர்கள், நடுநிலையாளர்கள், விமர்சிப்பவர்கள் என்று மூன்று வகையினர். நடுநிலைவாதிகள் அநேகமான வேளைகளில் அரசியலைப் பேச ஆரம்பிப்பார்கள். அங்கும் இன்றி, இங்கும் இன்றி அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். புலிகளை ஆதரிப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சிப்பவர்கள் எப்போதாவது சம்பாஷணையில் தமக்கான தருணங்கள் வரும்போது கலந்துகொள்வார்கள்.
நேற்றும் அதுதான் நடந்தது. கருணாவின் பிளவு குறித்து ஆரம்பித்த சம்பாஷணை, டி.பி.எஸ்.ஜெயராஜ் குறித்து நீண்டபோது, அவர் அணமையில் கொழும்பு டெயிலி மிரர் பத்திரிக்கையில் எழுதிய "கிழக்கை இழந்த கருணாவும், ஈழத்தைப் பறிகொடுத்த பிரபாகரனும்" என்கிற கட்டுரை குறித்து பேசப்பட்டபோது, நான் தலைப்பைப் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன் என்று கூறவும் நடுநிலைவாதியான ஒருவர், "அது எப்படி கடந்து செல்வீர்கள்? உள்ளே என்ன இருக்கிறது என்று படிக்காமலேயே விமர்சிப்பீர்களா? தலைவர் கூட இறுதிவரை அவரது கட்டுரைகளை இன்னொருவர் மொழிபெயர்க்க அறிந்துகொண்டுதான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். நானோ, "அவர் புலிகள் குறித்து அவதூறாகவே எழுதிவருகிறார், அவரின் வாசகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களே, அவர்களை மகிழ்விக்கவே அவர் இவ்வாறான கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுகிறார்" என்று கூறினேன். இதில் மெதுவாக சம்பாஷணை சூடேறத் தொடங்கியிருந்தது. இடையிடையே சிலர் இதுகுறித்த தமது கருத்துக்களை கூறினார்கள்.
இடையில் யாழ்ப்பாணம் சென்று வந்த ஒருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, நாவற்குழியில் கட்டப்பட்டிருக்கும் விகாரை பற்றியும் பேசினார். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்ற வளைவிற்குப் பின்னால் தெரிவது பெளத்தர்களின் விகாரை என்று அவர் கூறி வேதனைப்படும்போது, உண்மைதான், அங்கு கிட்டத்தட்ட 148 சிங்களக் குடும்பங்களும் குடியேறியிருக்கிறார்கள் என்றுய் கேள்விப்பட்டேன் என்று கூறினேன். இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது.
டி.பி.எஸ்.ஜெயராஜின் அபிமானியான அவர், "சிங்களவர்கள் 83 இற்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், அரச வேலைகள், தனியார் வேலைகள், வியாபாரங்கள் என்று வாழ்ந்தவர்கள், அவர்கள் மீள யாழ்ப்பாணத்திற்கு வருவதில் ஒரு பிரச்சினையுமில்லை. சண்டை ஆரம்பித்ததால் விட்டுச் சென்றவர்கள், தற்போது வருகிறார்கள். நீங்கள் கொழும்பில் சென்று வாழ்வதில்லையா? அதுபோலத்தான் அவர்களும் வடக்குக் கிழக்கில் வாழ்கிறார்கள்" என்று கூறினார். எனக்கு அது சரியென்று படவில்லை.
"கொழும்பில் சிங்களவர்கள் கூறும் விலைக்கு அதிகமாகக் கொடுத்து, காணிகளை வாங்கி வீடுகளை கட்டுவதும், வாங்குவதும், வடக்குக் கிழக்கில் அரச இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களைக் கொன்றுவிட்டோ, அடித்துத் துரத்திவிட்டோ அடாத்தாகக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறுவதும் ஒன்றா? சிங்களக் குடியேற்றவாதிகளை ஆயுதமயப்படுத்தி, கூடவே பாதுகாப்பிற்கென்று இராணுவ முகாம்களையும் அமைத்து, சிறுகச் சிறுக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதும், தமிழர்கள் கொழும்பில் வாழ்வதும் ஒன்றா? கொழும்பில் புலிகள் முகாம் அமைத்துத் தமிழர்களை ஆயுததாரிகளாக்கி, சிங்களவர்களை கொன்றோ அல்லது விரட்டியோ ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்களா? என்று சற்றுச் சூடாகவே கேட்டுவிட்டேன். அவர் மெளனமாகிவிட்டார். எதுவும் பேசவில்லை. "நான் கூறவந்ததைக் கேட்காமலேயே நீங்கள் டென்ஷன் ஆகிவிட்டீர்கள்" என்று மட்டும் கூறினார். ஆத்திரப்பட்டதற்காக வருந்தினேன்.
ஆனால், இக்கேள்வி அடிக்கடி நடுநிலைவாதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு இவர்கள் கேட்பது தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்திவிடுவதாக எனக்குப் படுகிறது. இந்த வேறுபாட்டினை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமற்போனது எங்கணம்? இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?
தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை
தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை
— கருணாகரன் —
2024 இல் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா? என்று இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையே உள்ளது. ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடக்கும் என சில இடங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது நல்லது என்று பொதுஜன பெரமுன உள்ளிட்ட சில தரப்புகள் வலியுறுத்துகின்றன. எதையும் தீர்மானிக்கின்ற ஒரே மனிதராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.
இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்தியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன. அவரே ஜனாதிபதிக்கான அதிகாரங்களை உருவாக்கியவர். அவருக்கு அடுத்தபடியாக அதனுடைய சுவையறிந்து செயற்பட்டுக் கொண்டிருப்பவர் ரணில் விக்கிரமசிங்க. இருவரும் உறவினர்கள் மட்டுமல்ல, ஒரே மாதிரிச் சிந்திப்பவர்களும் செயற்படுகின்றவர்களும். இதனால் இருவரையும் தந்திரமிக்கவர்கள் (நரித்தனமுள்ளவர்கள்) எனச் சொல்லப்படுவதுண்டு. இருவருக்கும் ஒரேயொரு வித்தியாசம். ஜே.ஆர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி நடத்தியவர். அந்தப் பலத்தைப் பயன்படுத்தி எதிர்த்தரப்புகளின் முதுகெலும்பை உடைத்தவர். தன்னுடைய கட்சிக்காரர்களின் ராஜினாமாக் கடிதத்தை வாங்கிப் பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டு முழுமையான நிறைவேற்று அதிகாரத்துக்கு அப்பாலும் செயற்பட்டவர்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறிய – சாதாரண பெரும்பான்மை கூட ஆட்சியில் இல்லை. அவர் ஜனாதிபதியாகிய விதமே – விந்தையே வேறுவிதமானது. யானை மாலை போட்டதால் ராணியாகியதைப்போல, ராஜபக்ஸவினரின் கூட்டுத் தவறுகளின் விளைவாகவும் ஏனைய அரசியல் தலைவர்களின் பலவீனங்களுக்குள்ளாலும் மேலெழுந்து ஜனாதிபதியானவர். இதனால் கேள்விக்கிடமற்று முழுமையான நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஆளாக மாறியிருக்கிறார் ரணில்.
ஆகவே இப்பொழுது ரணில் மிக வலுவான யானையாக உள்ளார். ஆனால், தேர்தலில் இந்த யானைப் பலம் அவருக்கு இருக்குமா? இல்லையா என்பது கேள்வியே. என்பதால்தான் எந்தத் தேர்தல் முதலில் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் தேர்வு எதுவோ அதுவே நடக்கப்போகிறது.
எப்படியிருந்தாலும் 2024 தேர்தல் ஆண்டாக அமையும் என்று நம்பிக்கையாகச் சொல்ல முடியும். இலங்கைத் தேர்தல் ஆணையகமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் – அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானம் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்துள்ள சூழலில்தான் – இலங்கையின் அரசியற் செல்வழி அமையப்போகிறது. அதை மீறிச் செயற்படக் கூடிய நிகராற்றல் வேறெவரிடத்திலும் இல்லை. இதுதான் உண்மை நிலவரம். கவலையும் கூட.
இதற்குள் அவரவர் தமக்கேற்ற விதத்தில் தம்மைத் தயார்ப்படுத்தத் தொடங்கியுள்ளனர். “எந்தத் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயார்” என்று முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜனபெரமுனவின் தலைமைச் சக்தியுமாகிய மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
இருந்தாலும் கடுமையான குழப்பத்தில் இருப்பது, ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுனவாகும். முதலில் பாராளுமன்றத் தேர்தலையா அல்லது ஜனாதிபதித் தேர்தலையா எதிர்கொள்வது என்ற பதட்டத்தில் உள்ளது பெரமுன. ஜனாதிபதித் தேர்தல் என்றால் அதற்கு யாரை நிறுத்தலாம் என்ற குழப்பம் அதற்குள் நீடிக்கிறது. ராஜபக்ஸக்களின் கனவு நாயகன் நாமல் ராஜபக்ஸவை நிறுத்தலாம் என ஆரம்பத்தில் பேச்சடிபட்டது. பிறகு பஸில் ராஜபக்ஸவின் பெயரடிபட்டது. இப்போது அவர்கள் ரணிலையே நிறுத்தினால் என்ன என்று யோசிப்பாகச் சொல்லப்படுகிறது.
அடுத்ததாக உள்ள ஐ.தே.கவின் ஒரே தெரிவு ரணில் விக்கிரமசிங்கதான். அதற்குள் வேறு கவர்ச்சிகரமான ஆட்களில்லை. ஆனால் அதற்கு ரணில் தயாரா என்று தெரியவில்லை இன்னும். தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு இன்னும் ஒரு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால் பெரமுனவினரும் (ராஜபக்கஸவினரும்) ரணிலையே விரும்புவதால் சிலவேளை இரு தரப்பின் வேட்பாளராக ரணில் போட்டியிடக் கூடும் – நிறுத்தப்படக் கூடும்.
இதற்குள் (இலங்கையின் தற்போதைய கையறு நிலையில்) தம்மை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்று சிந்திக்கிறது தேசிய மக்கள் சக்தி என்கிற (மக்கள் விடுதலை முன்னணி) ஜே.வி.பி. அதற்காக அது தமிழ்ப்பரப்பிலும் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை விரிக்கப்பார்க்கிறது. கிளிநொச்சி தொடக்கம் கனடா வரையில் நிகழ்ந்துள்ள அநுர குமாரவின் பயணம் இதற்குச் சான்று.
ராாஜபக்ஸவினரின் மீதான கசப்புணர்வு, நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி, நிறுத்தப்படாத ஊழல், மர்மமாக மேற்கொள்ளப்படும் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகார அரசியல் போன்றவற்றுக்கு மாற்றாகத் தம்மை நிறுத்தி விடலாம் என்று ஜே.வி.பி சிந்திக்கிறது. இதற்கு அதனுடைய கவர்ச்சிகரமான தலைவரான அநுர குமார திஸநாயக்கவை நிறுத்தப் பார்க்கிறது.
இதற்கெல்லாம் அப்பால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற சஜித் பிரேமதாசவின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்குத் தயாராகியுள்ளது. இதற்கான உடன்படிக்கைகள் கூடச் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன.
இந்த நான்கு தரப்பின் மூன்று வேட்பாளர்களும் புதியனவற்றை இலங்கைத்தீவுக்குத் தருவார்கள் என்று நம்புவதற்கொன்றுமில்லை. ஜே.வி.பியிடமிருந்து சிறிய அளவில் மாற்றங்கள் ஏதும் நிகழலாம். அதுகூட இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நிகழச் சாத்தியமில்லை. ஏனென்றால் அதற்கான இடம் ஜே.வி.பியின் இதயத்திலும் இல்லை. மூளையிலும் இல்லை. அதனுடைய கற்பனை வேறு விதமானது. இனவாதத்திலிருந்து மீண்டு விடாத சீர்திருத்தத்தையே அது கொண்டுள்ளது. மெய்யான மாற்றத்தை அல்ல. மாற்றம் போன்ற தோற்றத்தை.
ஆனால், சஜித், ரணில், ராஜபக்ஸவினரை விட வரலாறு அநுரகுமார விடம் அதிகமாக எதிர்பார்க்கிறது. வரலாற்றுச் சூழலும் அவருக்கு (தேசிய மக்கள் சக்திக்கு) வாய்ப்பாக உள்ளது. ஆனால் அதைப் புரிந்து கொண்டு சரியாகச் செயற்படுவதற்கு (துணிவாக முடிவெடுப்பதற்கு) அநுரகுமாரவும் தயாரில்லை. அவருடைய தேசிய மக்கள் சக்தியும் தயாராக இல்லை.
சஜித் பிரேமதாச தன்னை மிகத் தெளிவாகவே நிரூபித்து விட்டார். இனப்பிரச்சினைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் எந்தப் பெரிய நன்மைகளையும் அளிக்கக் கூடிய வல்லமை எதுவும் தன்னிடமில்லை என. அவர் முல்லைத்தீவு – முருகண்டிப் பகுதியில் அமைத்த முழுமையடையாத வீடுகள் இதற்குச் சாட்சியம். எந்தத் தீர்மானத்தையும்
ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் அவர்தான் மீட்பரைப்போலத் தோற்றம் காட்டிக் கொண்டிருப்பவர். அவரைக் கடந்து சிந்திக்கக் கூடிய – செயற்படக் கூடியவர் யாராவது வந்தால்தான் இலங்கையில் மாற்றம் நிகழும். அது அரசியல், பொருளாதாரம் எனச் சகல தளங்களிலுமாக இருக்கும்.
ஆனால் அப்படியான மூளையும் நல்லிதயமும் உள்ள எவரையும் அண்மையில் காண முடியவில்லை.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதைப்போல, யாரும் எங்கிருந்தும் களமிறங்கலாம். அல்லது களமிறக்கப்படலாம். அப்படித்தான் முன்னர் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் சந்திரிகா குமாரதுங்க களமிறக்கப்பட்டார். 2010 இல் யாருமே எதிர்பாராத வகையில் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டார். ஒரு இராணுவத்தளபதி ஜனாதிபதி வேட்பாளரா என்று பலரும் புருவத்தை உயர்த்தி, முகத்தைச் சுழித்தனர். ஆனால், சரத் பொன்சேகா ஐம்பது லட்சம் வாக்குகளைப் பெற்றார்.
அதற்குப் பிறகு 2015 இல் கோட்டபாய ராஜபக்ஸ கூட அப்படியான ஒரு தெரிவினால் நிறுத்தப்பட்டவரே. உண்மையில் தான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவேன், அதில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவேன், அந்த வெற்றியின் ருசியை அனுபவிக்க முன்பு பதவியிலிருந்து அவ்வளவு விரைவாக விரட்டப்படுவேன் என்று கோட்டபாய சிந்தித்திருக்கவே மாட்டார். அவ்வளவும் நடந்து முடிந்தன.
ஆகவே இவற்றைப்போல எதிர்பாராத விதமாக நம்முடைய அவதானத்துக்கு வெளியிலிருந்து வேறு யாரும் கூடப் புதிதாக களமிறக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகளும் உண்டு.
ஏனென்றால் இலங்கை அரசியல், அண்மைய ஆண்டுகளில் இலங்கையர்களால் தீர்மானிக்கப்படும் நிலையிலிருந்து விலகிப் பிற சக்திகளால் தீர்மானிக்கப்படுவதாக மாறியுள்ளது. குறிப்பாக, இந்தியா, சீனா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஆகியன இதில் முழுதாக ஈடுபடுகின்றன. இவற்றின் சதுரங்க ஆட்டத்தின் விளைவுகளே இன்றைய இலங்கை, இன்றையை ஆட்சி, இன்றைய ஜனாதிபதி, இலங்கையில் உலக வங்கி உள்பட அனைத்தும்.
இதனுடைய தொடர்ச்சியாகவே இனிவரும் இலங்கையும் இருக்கும். அதற்கமைவாகவே ஆட்சியும் ஆட்சித் தலைவர்களும் தெரிவு செய்யப்படுவர். இந்தத் தரப்புகளின் விருப்பத்துக்கு மாறான தலைமைகள் அதிகாரத்துக்கு வந்தால் ராஜபக்ஸக்கள் எப்படி தூர விலக்கப்பட்டனரோ அவ்விதம் விலக்கப்படுவர். ஆகவே இங்கே தேர்தல், ஜனநாயகத் தெரிவு என்பதெல்லாம் வெறும் கனவே!
இந்த யதார்த்தத்தை உணராமல், யதார்த்தத்துக்கு வெகு தொலைவில் நிற்கிறது தமிழ்த் தேசியத் தரப்பு. அது எப்போதையும்போல ஜனாதிபதித் தேர்தலிலும் தவறைச் செய்யவே முனைகிறது. கடந்த 11.03.2024 இல் தமிழ்த் தேசியத் தரப்பினர் யாழ்ப்பாணத்தில் கூடி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதைப் பற்றி யோசித்திருக்கின்றனர். இதன் காணொளியும் Yu tupe காணக்கிடைக்கிறது. அதைப் பார்த்தபோது “ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது” என்ற தமிழ்ப்பழமொழிதான் நினைவுக்கு வந்தது.
இந்த மாதிரியான உணர்ச்சிகரமான எதிர்மறைச் சிந்தனைகளால் தமிழ்ச்சமூகம் மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளது. குறிப்பாக சமானிய மக்கள்.
இலங்கைத்தீவின் அரசியல் யதார்த்தத்தை இன்னும் புரிந்து கொள்ளாத – புரிந்து கொள்ள விரும்பாதவர்களின் கோமாளி விளையாட்டு அது. இதனுடைய விபரீதம் சாதாரணமானதல்ல. மேலும் சிங்களப் பேரினவாதத்தைக் கூர்மைப்படுத்தும் முட்டாள்தனமான யோசனை அது.
புதிதாகச் சிந்திக்க முடியாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. வரலாற்றிலிருந்தும் சொந்த அனுபவங்களிலிருந்தும் கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு துயரமானது!
தமிழ் வேட்பாளர் என்பது ஒன்றும் புதியதல்ல. முன்னர் குமார் பொன்னம்பலம் அப்படி நின்றார். பிறகு சிவாஜிலிங்கம். தமிழ் வாக்குகளின்றியே ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியும் என்பதற்கு கோட்டபாய ராஜபக்ஸ உதாரணம். எந்த வாக்குகளுமின்றியே ஒருவர் ஜனாதிபதியாக முடியும் என்பதற்கு ரணில் விக்கிரமசிங்க எளிய சான்று.
இந்த நிலையிற்தான் தமிழ் வேட்பாளர் பற்றிய சிந்தனை இருக்கிறது. குறைந்த பட்சம் மலையக, முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய தமிழ் பேசும் தரப்பிலிருந்து ஒரு வேட்பாளர் என்று சிந்தித்தாற் கூடப் பரவாயில்லை.
ஆக மொத்தத்தில் தேர்தலுக்கு முன்பே தேர்தற் களம் சேற்றுக் குழியாகக் கிடக்கிறது. இதற்குள் முத்தெடுப்பது எப்படி இலங்கை மக்கள்?
https://arangamnews.com/?p=10617