Jump to content

கர்நாடக சங்கீதம் (நீங்கள் விரும்பி கேட்ட பாடல்களை இதில் இணையுங்கள்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக சங்கீதம்

நான் சிறுவனாக இருந்தபோது பார்த்து, கேட்டு வளர்ந்தது தப்பாட்டம், கரகாட்டம், அரிச்சந்திரா, ராமர், வள்ளித்திருமணம் போன்ற தெருக்கூத்து நாடகங்கள். எனவே 23 வயது வரை கர்நாடக சங்கீதம் என்றால் விலை என்ன என்றுதான் கேட்பேன். அப்படி ஒரு ஞானம்! ஆனால்... இன்று கர்நாடக சங்கீத இசை கேட்பது என்பது என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் Relaxation! இதற்கு காரணம்... என் நண்பன் ராஜாராம்! நானும் ராஜாராமும் 10-ம் வகுப்பு முதல் B.E வரை ஏழு வருடங்கள் ஒரே வகுப்பு... ஒரே பெஞ்ச்.


1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் C-DOT-ல் வேலை கிடைத்து பெங்களூர் சென்றேன். அப்போது ராஜாராம் I.I.Sc-ல் M.E முடித்துவிட்டு Ph.D பண்ணிக்கொண்டிருந்தான். எனது கல்லூரி நண்பர்கள் பலர் I.I.Sc பக்கத்தில் யஷ்வந்த்பூரிலுள்ள லாட்ஜ் ஒன்றில் மாத வாடகையில் தங்கியிருந்தார்கள். நானும் அங்கே சென்று அடைக்கலமானேன். நான் வேலை நேரம் போக பெரும்பாலும் ராஜாராமனுடன் அவன் ஹாஸ்டல் ரூமில்தான் இருப்பேன். அப்போது அவன் கர்நாடக இசை கேசட்டுகளைப் கேட்டுக்கொண்டிருப்பான். நான் அவன் ரூமுக்கு சென்றவுடன் செய்யும் முதல் காரியம் “டேய்.. என்னடா இந்த ஆளு/அம்மா ஆஆஆ.........ன்னு கத்திகிட்டு இருக்காங்க. இதப்போய் கேட்டுகிட்டுயிருக்கே.. I.I.Sc-க்கு வந்து கெட்டு போயிட்டடா” என்று சொல்லி டேப்ரிக்கார்டை ஆப் பண்ணி விட்டு சினிமா பாடல் கேசட்டை சுழல விடுவேன். ஆரம்பத்தில் இதைப்பற்றி ராஜாராம் ஒன்றும் கண்டு கொள்ள மாட்டான்.


ஒரு சில மாதங்கள் கழித்து “டேய்.. நானும் ஒன்ன மாதிரிதான் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தேன். என்னோட பிராமின் நண்பர்கள்தான் எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள். இத கொஞ்சம்.. கொஞ்சமா கேட்டு பாருடா. அப்ப இந்த இசையின் அருமை புரியும்” என்றான்.


Ph.D செய்யும் அறிவாளி சொன்னா சரியாத்தான் இருக்குமென நினைத்து “சரிடா.. நானும் கேட்டுப்பார்க்கிறேன்” என்றேன்.


”அப்படி வா. வழிக்கு” என்று சொல்லிவிட்டு கர்நாடக இசை என்றால் என்ன? தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாம சாஸ்திரிகள் மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் மற்றும் கல்யாணி, சண்முகப்பிரியா, ரஞ்சனி, பைரவி, காப்பி அப்படீன்னு ராகங்கள் என்று என்னமோ சொன்னான்.

“எனக்கு தெரிஞ்சதெல்லாம் குடிக்கிற காப்பிதாண்டா.. ஆனாலும்
கல்யாணி, சண்முகப்பிரியா, ரஞ்சனி, பைரவி அப்படீன்னு பிகர் பெயர்களா நீ சொல்றதனால.. ஒரு கிக் இருக்கும்போல இருக்குடா!”


”நான் சொன்னது ஒனக்கு ஒன்னும் புரிஞ்ரிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்” என்று சொல்லிக்கொண்டே ஒரு கர்நாடக சங்கீத பாடலை போட்டு இத நல்லா கேளு என்றான். கேட்டேன். பிறகு அதே ராகத்திலுள்ள சில சினிமா பாடல்களை போட்டு இந்த பாடல்களையும் கேளு என்றான். கேட்டேன்.


“கர்நாடக சங்கீத பாடலுக்கும்.. இந்த சினிமா பாடல்களுக்கும் என்ன ஒற்றுமை?”


”எல்லா பாடல்களும் ஒரு சில சமயங்களில் கேட்கும்போது ஒரே மாதிரியா இருந்ததுடா”


“Good…இந்த பாடல்கள் எல்லாம் ஒரே ராகம்டா”


சட்டென ஏதோவொரு ஈர்ப்பு ஏற்பட்டது. மேலும் ராஜா பல முக்கியமான ராகங்களின் கர்நாடக சங்கீத பாடல்கள் மற்றும் அந்த ராகத்திலுள்ள பாடல்கள் எல்லாவற்றையும் சொல்லி எழுதிக்கொடுத்து கேசட்டுகளை கொடுத்து கேட்க சொன்னான். அந்த சமயத்தில் என்னிடம் டேப் ரிக்கார்டர் கிடையாது. கர்நாடக இசையை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் உடனே ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கி ராஜாராம் கொடுத்த கேசட்டுகளையும், பாடல்களையும் கேட்க ஆரம்பித்தேன். கர்நாடக இசை கேட்க ஆரம்பித்தவுடன் எனக்கு முதலில் பிடித்தது.. பாடகர் பல விதங்களில் ஸ்வரங்கள் பாடுவது அதை வயலினிஸ்ட் பாலோ செய்வது. மிருதங்க வித்வானின் தனி ஆவர்த்தனம் ஆகியவை. இந்த ஆர்வத்தில் தொடர்ச்சியாக கேட்க ஆரம்பித்தேன்.


பையனுக்கு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் வந்துவிட்டதை தெரிந்துகொண்ட ராஜா அடுத்த தூண்டிலை எனக்கு வீசினான்.


”இந்த வெள்ளிக்கிழமை சாயங்கலாம் மல்லேஸ்வரம் கோவிலில் கச்சேரி இருக்கு நான் போறேன்.. நீயும் வற்றியாடா?” என்றான்.

சரியென்று சொல்லிவிட்டு கச்சேரிக்கு ராஜாராம் மற்றும் அவன் I.I.Sc நண்பர்களுடன் சென்றேன். ஹைதராபாத் சகோதரர்களின் கச்சேரி. அந்த கச்சேரி ஒரு மறக்க முடியாத அனுபவம். ஹைதராபாத் சகோதரர்களில் ராகாவாச்சாரிக்கு கனீரென்ற குரல்... சேஷாத்திரிக்கு சற்று மென்மையான குரல். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பாடுகிறார்கள்.... மிருதங்கத்தில் திருவாரூர் பக்தவச்சலம் அதகளமாக பின்னி பெடலெடுக்கிறார்... வயலின் வித்வானும் அருமையாக வாசிக்கிறார். கர்நாடக இசை, ராகங்கள் பற்றி எதுவும் தெரியாத நான் ஏதோ ஒரு சக்தியின் பிடியில் மெய்மறந்து கேட்டேன். கச்சேரி முடிந்ததும் ராஜாவிடம் சொன்னது.


”ராஜா.. இனிமேல் எங்கு கச்சேரிக்கு போனாலும். என்னையும் கூட்டிக்கிட்டு போடா”

அடுத்து சென்ற கச்சேரி கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் கச்சேரி. எனக்கு சிறு வயதிலிருந்து நாதஸ்வரம், மேளம் கேட்க மிகவும் பிடிக்கும். காரணம்.. எட-அன்னவாசல் கிராமத்திலிருக்கும் என் அம்மா வழி தாத்தா வீட்டிற்கு பக்கத்தில் நாதஸ்வர, மேள வாத்திய கலைஞர்கள் வாழ்ந்தார்கள். சிறுவனாக தாத்தா வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வாசிப்பை கேட்பேன். கதரியின் சாக்ஸபோன் இசை நாதஸ்வர இசை போன்று இருந்ததால் சட்டென்று சாக்ஸ் இசை மீது அளவில்லா ஆர்வம். சாக்ஸபோன் ஒரு வெஸ்டர்ன் இசைக்கருவி அதில் கர்நாடக சங்கீத சுரங்கள் வாசிப்பது மிகவும் கடினம். கதரி ஒரு ஜீனியஸ் என்றான் ராஜா. அன்றிலிருந்து இன்றுவரை கதிரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசைக்கு நான் அடிமை!

நானும் ராஜாராமும் மாதா மாதம் HMV சென்று M.S.சுப்புலட்சுமி, D.K.பட்டம்மாள், M.L.வசந்தகுமாரி, T.N.சேஷகோபாலன்,T.Vசங்கரநாரணன், ஹைதராபாத் சகோதரர்கள், மகாராஜபுரம் சந்தானம், கதிரி கோபால்நாத், மாண்டலின் சீனிவாசன், சுதா ரகுநாதன் etc., போன்ற சங்கீத வித்வான்களின் கேசட்டுகளை பட்டியல் போட்டு வாங்கினோம். அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது!


சென்னை டிசம்பர் மாத சங்கீத கச்சேரிகள் கேட்பதற்காக நானும் ராஜாராமனும் 1992-ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை சென்று வரும் அளவிற்கு என் கர்நாடக சங்கீத ஆர்வம் வளர்ந்துவிட்டது. அதன்பிறகு, பாஸ்டன், சிங்கப்பூரில் கச்சேரிகள் நடக்கும்போது வாய்ப்பு கிடைக்கும்போது கச்சேரிகளுக்கு சென்று வந்துகொண்டிருக்கிறேன்.


நான் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவனல்ல. இன்றுவரை எனக்கு ராகங்களின் ஆரோகனம், ஆவரோகனம் பற்றி எதுவும் தெரியாது. ஹம்சத்வனி, ஆபேரி, சண்முகப்பிரியா, கரகரப்பிரியா, கல்யாணி, நாட்டை, மோகனம், சிவரஞ்சனி, சுப பந்துவரளி etc., போன்ற முக்கியமான ராகங்களின் பாடல்களை கேட்டு Pattern Recognition முறையில் ராகங்களை தெரிந்து கொள்ள முடியும். நான் கர்நாடக சங்கீதம் கேட்க கற்றுக்கொண்டது Pattern Recognition மற்றும் சினிமா பாடல்களின் மூலமாகத்தான்.

உதாரணமாக “சண்முகப்பிரியா” ராகத்தை எடுத்துக்கொள்வோம். இந்த ராகத்திலுள்ள “சரவணபவ என்னும் திருமந்திரம்” என்ற இந்த பாடலைக் கேளுங்கள்.





இதே ““சண்முகப்பிரியா” ராகத்திலுள்ள சினிமாப் பாடல்கள்:


மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... (தில்லானா மோகனாம்பாள்)
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே... (பழைய பாடல் – படம் தெரியவில்லை)
தம்.. தம். தன தாளம் வரும் (புதிய வார்ப்புகள்)
கண்ணுக்குள் நூறு நிலவா.. (வேதம் புதிது)
தகிட.. தமிதி.. தந்தான.. (சலங்கை ஒலி)
இப்படி கேட்டு “கர்நாடக சங்கீதம்” தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளலாம். திரைப்படப்பாடல்கள் மூலமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள சிகாகோவிலுள்ள தமிழ் மொழி அறக்கட்டளையின் நிறுவனர் திரு. ராம்மோகன் அவர்களின் முயற்சியில் “திரைப்படப் பாடல்களில் மரபிசை” என்ற தலைப்பில் 7 CD-கள் உள்ள தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் விவரம் இங்கே.


http://www.kural.org/products.php


எனக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால்.. என் குழந்தைகள் இருவரும் தற்போது கர்நாடக சங்கீதம் கற்றுகொண்டு வருகிறார்கள். மகளின் பெயர் சுருதி!


வேலை டென்சன் மற்றும் மன அழுத்தங்கள் இருக்கும்போது நான் ரிலாக்ஸ் செய்யும் முறை இதுதான். ஒரு மணி நேரம் வியர்த்துக்கொட்ட மெது ஓட்டம் அல்லது ஜிம்மில் workout. பிறகு வெண்ணீரில் நல்ல குளியல். Bose- ஹோம் தியேட்டரில் ஒரு கர்நாடக இசைவட்டை சுழலவிட்டுவிட்டு கையில் பியர்! அடடா.... அந்த சுகத்தை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்.


இசை என்பது நாம் கேட்டு மகிழ கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான கலை. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலையும் இந்த அவசர வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த இசையை தினமும் கேட்டு மகிழுங்கள். குறிப்பாக படுக்க போகும் முன்பு கண்ட குப்பை சீரியல்களையும், செய்திகளையும் TV-யில் பார்க்காமல் அமைதியான இசையை கேட்டுக்கொண்டு ஒரு நல்ல புத்தகத்தை ஒரு அரை மணி நேரம் படியுங்கள். ஆனந்தமாக தூக்கம் வரும்!



எனக்கு கர்நாடக இசையை சொல்லிக்கொடுத்து அறிமுகப்படுத்திய என் நண்பன் ராஜாராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!


M.S.சுப்புலெட்சுமி அம்மாவின் தெய்வீக குரலில் இந்த கரகரப்பிரியா ராக பாடலைக் கேட்டு பாருங்கள்! You'll start liking carnatic music!




நன்றி - ரவிச்சந்திரன்
vssravi.blogspot.com
Link to comment
Share on other sites

  • Replies 720
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுக்கும் ராகங்களில் ஒன்று "சுத்த தன்யாசி". இது மேளகர்த்தா ராகமான நடபைரவியின் ஜன்யமாகும். இந்த ராகம் :உதய ரவிச்சந்திரிகா" என்ற பெயரிலும் அழைக்கபடுகின்றது.

இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: ஸ க2 ம1 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ நி2 ப ம1 க2 ஸ

முதலாவது "பலே பாண்டியா" படத்தில் இடம் பெறும் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்ற பாடல். சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் பாடுவது போல அமைக்கப்பட்ட பாடல். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. சிவாஜி, மற்றும் எம்.ஆர்.ராதா இருவரின் ஏட்ட்க்குப் போட்டிகும், அங்க சேஷ்டைக்களுக்காகவும் புகழ்பெற்றது





நன்றி-simulationpadaippugal.blogspot.com
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாருகேசி ராகம் ஒரு மென்மையான ராகம் என்பதற்கு ஒரு உதாரணம் "சிங்காரவேலன்" படத்தில் வந்த "தூது செல்வதாரடி கிளியே" என்ற பாடல்.

http://www.youtube.com/watch?v=7nTjaJMTxcI&feature=player_embedded#at=61


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


'பக்கா' வாத்தியங்கள்

நந்தீஸ்வரர் மத்தளம்.
நாரதர் தம்பூரா.
சரஸ்வதி வீணை.
சிவனார் டமரு.
கிருஷ்ண பரமாத்மா புல்லாங்குழல்.


இப்படிக் கடவுளர் அனைவரும் வாத்தியம் இசைப்பவர்கள் தான். பக்க வாத்தியம் என்று தற்போது மேடையில் ஓரத்தில் உட்காரவைத்தாலும் அதில் சிறப்பாக கொடிகட்டி பறந்து அதை பக்கா வாத்தியமாக மாற்றியவர்கள் பலர். குறிப்பிட்டுச் சொல்லப் பலபேர் (பலபேர்) இருப்பதால் வித்வான்கள் பற்றி எழுதப்போவதில்லை. சங்கீதப் பதிவாக இதை விஸ்தரித்து எழுதவில்லை என்றாலும் இன்று நான் கேட்ட ஒரு வாத்திய கோஷம் என்னை இது எழுத உசுப்பிவிட்டது.



கடம் - விக்கு விநாயக்ராம்


முதலில் இந்த வீடியோ. குடும்பமாக உட்கார்ந்து இசைக்கிறார்கள். கை விளையாடுகிறது.




கீழ்காணும் வீடியோவில் மேதை விக்குவின் கைப்பக்குவம் நன்கு விளங்குகிறது.

தட்டிக் கொடுக்கிறார்...
தடவிக் கொடுக்கிறார்...
குட்டுகிறார்...
குத்துகிறார்...
அடிக்கிறார்...
வாசிக்கிறார்..
நாலு தட்டு தட்டிவிட்டு நம்மையும் கையை தட்ட சொல்கிறார்...

இவர் செய்யும் வித்வத்தை ஜாகிர் ஹுசைன் ரசிப்பதை பார்ப்பது கூட ஒரு அழகுதான்.

http://www.youtube.com/watch?v=Vun2nEpgznY&feature=player_embedded

ஷஷாங்க் சுப்ரமண்யம் - வேங்குழல் நாதம்.


நீலமேக ஷ்யாமளானாக புல்லாங்குழல் ஊதுகிறார். தலையில் மயிலிறகு மிஸ்ஸிங் அவ்வளவுதான். அவர் ஊதும் காற்று அந்தத் துளைகளில் என்ன பாடுபட்டு நாதவெள்ளமாக வெளிவருகிறது? குழல் வாயால் ஊத பார்த்திருக்கிறேன், அதை அடித்துப் பார்த்திருக்கிறீர்களா? அற்புதம்.




குன்னக்குடி வைத்தியநாதன்.


நெற்றியின் வலது கோடியிலிருந்து இடது கோடி வரை ஒரே பட்டையாய் திருநீறு. நடுவில் பழைய ஒரு ரூபாய் நாணயம் சைஸுக்கு குங்குமம். பளபளா என்று ஜிப்பா. ஒரு பட்டு வேஷ்டி. கருடாழ்வார் மூக்கு. காது இடிக்கும் வரை உதட்டை விரித்து ஒரு பெரீய்ய சிரிப்பு. சினிமா மெட்டுக்களை வயலினில் வாசித்து நிறைய இளைஞர்களை தான் பக்கம் திருப்பினார். வாசிக்கும் போது காண்பிக்கும் முகபாவங்கள் அற்புதம். அந்த பாவத்திலே நம்மை மெஸ்மரைஸ் செய்துவிடுவார். திருவையாற்றில் ஆராதனையின் போது நடுநாயகமாக உட்கார்ந்து தாளம் போடும் அழகே தனி. இறைவனடி சேர்ந்த வயலின் மேதையின் "இஞ்சி இடுப்பழகா" பிட்.





பண்டிட் ரவிஷங்கர் - சிதார்


இதுதான் ஹிந்தியில 'சித்தாரு' என்று கமல்ஹாசன் கலாய்த்து பாடியதால் வீணைக்கும், சித்தாருக்கும் உருவ ஒற்றுமை தவிர்த்து வேறென்ன என்று பார்த்தால் வீணைக்கு நாலு தந்தி சித்தாருக்கு ஏழு தந்தி. மகள் அனுஷ்காவுடன் சேர்ந்து இசைத்த கச்சேரி. மீட்ட ஆரம்பித்து உள்ளே செல்ல செல்ல தன்னை மறந்து அவர் அனுபவித்து இசைப்பது கேட்காமலே இனிக்கிறது.

http://www.youtube.com/watch?v=-KXk_8_8oLY&feature=player_embedded

உமையாள்புரம் சிவராமன் - மிரு'தங்கம்'


செம்மங்குடியின் திருச்சி கச்சேரி. நடுவில் கண்ணில் அடிக்கும் ப்ளாஷ் லைட்டை அணைக்கச் சொல்கிறார். தனியாவர்த்தனம் வாசிக்கும் உமையாள்புரம் சிவராமனின் டெடிகேஷன். மலைக்க வைக்கிறார். வாசிப்பதை பார்த்துக் கொண்டிருக்கும்போது நமக்கு கைரெண்டும் உதறுகிறது.



வீணை எஸ். பாலச்சந்தர்
சரஸ்வதி கடாக்ஷம் நிரம்பியவர் என்பது இந்த "அமிர்தவர்ஷினியில்" தெரிகிறது. ஆனந்தாமிர்தகர்ஷினி அமிர்தவர்ஷினி என்று வீணை மீட்டும் போது இசை மழை பொழிகிறது. நேரம் செல்ல செல்ல விண்ணைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் அடைமழையாய் காதுகளை வந்தடைகிறது வீணைகானம். வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு என்ற பாரதியார் பாடல் சட்டென்று நினைவுக்கு வந்து பாடாய்ப் படுத்துகிறது.




நன்றி - http://www.rvsm.in/2011/02/blog-post_04.html
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

உடையார் - குறை நினைக்காமல் பாட்டுக்களை இணைக்கும் போது, என்ன பாட்டு என்று குறிப்பிடுவீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.