Jump to content

நான் பேலியோவுக்குள் வந்த கதை - ஆர். அபிலாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேலியோவுக்குள் வந்த கதை - ஆர். அபிலாஷ்

நான் கடந்த சில மாதங்களாக பேலியோவை பின்பற்றி வருகிறேன். என் நோக்கம் எடை குறைப்பு அல்ல. (ஆனாலும் சில கிலோக்களை இந்த காலகட்டத்தில் குறைத்து விட்டேன் தான், அதுவும் உடற்பயிற்சி இல்லாமல்.) பத்து வருடங்களாக நீரிழிவுடன் போராடி வருகிறேன். இந்த வருடங்களில் மருந்துகளும் உடற்பயிற்சியும் காப்பாற்றாத நிலையில், பேலியோ உணவு எனக்கு அபாரமாய் உதவியது. என் ரத்த சர்க்கரையை வேறென்றுமே சாத்தியப்படாத ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மருந்துகளை வெகுவாக குறைத்து விட்டேன். இதை ஒரு அற்புதம் என்று தான் என்னளவில் சொல்வேன்.

 என்னுடைய நீரிழிவை brittle diabetes என்பார்கள். அதாவது ரத்த சர்க்கரை அளவு ஒன்று மிக குறைவாக ஆகி 40க்கு கீழ் செல்லும். அல்லது எகிறி 400ஐ தொடும் (ஆரோக்கியமான அளவு 120-180 வரை). மாத்திரை, இன்சுலின் என் சர்க்கரை அளவு நிலையாக வைக்க உதவவில்லை. எனக்கு brittle diabetes உடன் dawn phenomenon எனும் சிக்கலும் உண்டு. அதாவது விடிகாலை என் ரத்த சர்க்கரை தானாக எகிறும். நான் உணவே எடுக்காத போதும் என்னை மீறி நிகழும் பிரச்சனை இது. இதை சமாளிக்க நான் இரவு முழுக்க நீடிக்கும் நீண்ட வேளை இன்சுலின் எடுத்து வந்தேன். இந்த இன்சுலின் என் சர்க்கரை அளவை விடிகாலையில் சீராக வைக்கும். ஆனாலும் காலை உணவின் போது என் சர்க்கரை அளவு மீண்டும் ஹை ஹம்ப் அடிக்கும். இதனால் நான் காலையில் மிக அதிகமாய் இன்சுலின் (60-70 யூனிட் வரை) எடுத்து விட்டு குறைவான கலோரிகள் கொண்ட ஓட்ஸ் போன்ற உணவை எடுத்து வந்தேன். இந்த அளவு அதிக இன்சுலின் பகல் முழுக்க என் ரத்த சர்க்கரை தேவைக்கு அதிகமாய் அளவை குறைத்தபடியே வரும். இதனால் நாள் முழுக்க பசியும் அசதியுமாய் இருப்பேன். விளைவாக எதையாவது சாப்பிட்டபடி இருப்பேன். இன்சுலின் பசியை தூண்டுவதுடன் எடையையும் அதிகரிக்க வைக்கும். 24 மணிநேரமும் பசியில் இருக்கிறீர்கள். அதை தணிக்க அதிகமாய் உண்டால் ரத்த சர்க்கரை எகிறும். இது தான் ஐந்து வருடங்களாய் என் விதியாக இருந்தது. ஊசி முனையில் தலைகீழாக தவமிருக்கும் நிலை அது. 

என் பிரச்சனை இவ்வளவு தீவிரமாக காரணம் நான் எடுத்து வந்த தானிய உணவு. தானிய உணவு உடனடியாய் சர்க்கரையாக மாறி உடல் முழுக்க செல்லும். அப்போது என் ரத்த சர்க்கரை அதிகமாக, அதை கட்டுப்படுத்தும் இன்சுலின் என் உடலில் இயல்பாக இல்லை. நான் வெளியில் இருந்து இன்சுலின் ஊசில் மூலம் செலுத்த வேண்டும். இந்த இன்சுலின் என் ரத்த சர்க்கரையை குறைக்கும். ஆனால் இன்சுலின் தன் பணியை முடித்து கொஞ்ச நேரத்தில் உறங்க செல்லும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. முன்பு நான் உண்ட உணவின் ஒரு பகுதி ஆற்றலாய் மாறி திசுக்களுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும். இன்சுலின் ஆற்றல் இழக்கும் வேளையில் இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை வெளியே வந்து மீண்டும் என் ரத்தசர்க்கரையை எகிற வைக்கும். அதாவது நான் மதியம் உண்ணும் உணவின் கலோரிகள் என் ரத்த சர்க்கரையை உயர்த்தாமல் இருக்கும்படி என் இன்சுலின் பார்த்துக் கொள்ளும். ஆனால் இன்சுலின் தன் பணியை முடித்து உறங்கப் போனதும், மாலை ஆறு மணிக்கு உடம்பில் காலியாகாத கலோரிகள் விழித்துக் கொண்டு ரத்த சர்க்கரையை தட்டி எழுப்பும். இரவு நாம் தூங்கும் போது வீட்டில் பல ஓட்டைகளில் இருந்து எலிகள் வெளியே வந்து கும்மாளமடிப்பது போன்றது இது. 

அதே போல நான் அதிகமாய் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் நாள் முழுக்க என் உடம்பில் வேலை செய்வதால் அடிக்கடி ரத்த சர்க்கரை வெகுவாய் குறைந்து மயக்கம் ஏற்படும். என்னால் இன்சுலின் அளவையும் குறைக்க முடியாது – சர்க்கரை எகிறும். சரி, இன்சுலினை குறைவாக போட்டாலோ அடிக்கடி உடம்பு சர்க்கரைப் பாகாய் மாறி விடும். 

இவ்வளவு பிரச்சனைகளோடு நான் தவித்துக் கொண்டிருந்தேன். மருத்துவர்கள் மருந்தை மாற்றுவார்கள். உடற்பயிற்சி செய்ய சொல்வார்கள். ஆனால் எதுவும் எனக்கு உதவவில்லை. ஏனென்றால் என் பிரச்சனை உணவில் இருந்தது. மருத்துவர்கள் என்னை வழக்கமான உணவை எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தார்கள். கொழுப்பும் இனிப்பும் மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி சோறு, தோசை, இட்லி, சப்பாத்தி என பிரதானமாய் உண்ண வேண்டும்.

நான் ஏற்கனவே பேலியோ குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது ஒரு சமநிலையற்ற உணவுமுறை எனும் எண்ணம் இருந்தது. பல நூறு வருடங்களாய் நம் முன்னோர்கள் உண்டு நீண்ட ஆயுள் வாழ்ந்த உணவுமுறையில் என்ன குறை இருக்க முடியும் என வியந்தேன். சில மாதங்களுக்கு முன்பு நண்பர் விநாயக முருகனை ஒரு இலக்கிய கூட்டத்தில் சந்தித்த போது அவர் நன்றாய் இளைத்திருந்தார். பேலியோ தான் காரணம் என்றார். தான் பின்பற்றும் உணவு அட்டவணையை குறிப்பிட்டார். அப்போது தான் எனக்கும் தூண்டுதல் ஏற்பட்டது. 

நான் எதையும் தடாலடியாய் செய்பவன் அல்ல. அதனால் மெல்ல மெல்லத் தான் உணவுமுறையை மாற்றினேன். முதலில் காலை உணவாக காய்கறி சாலட் முயன்று பார்த்தேன். மதியம் சோற்றை குறைத்து காய்கறிகளை அதிகப்படுத்தினேன். சில நாட்கள் கழித்து மதியம் கறியும் சோறும் சமமாக உண்ணத் துவங்கினேன். ஒருநாள் முழுக்க சோற்றை தவிர்த்தேன். மதிய உணவை முழுக்க மாற்றியதும் எனக்கு வயிறு கொஞ்சம் சிரமம் கொடுத்தது தான். அதற்கு முக்கிய காரணம் புதிய உணவு முறையில் எவ்வளவு இன்சுலின் எடுக்க வேண்டும் என எனக்கு தெரியாதது. பொதுவாக, உணவின் கலோரிகள் பொறுத்து இன்சுலின் அளவை தீர்மானிக்க வேண்டும். பாதி தட்டு சோறு உண்கிறேன் என்றால் 8 யூனிட் இன்சுலின் எடுத்துக் கொள்வேன். மதியம் பழம், முட்டை, காய்கறி சாப்பிடும் போது இந்த அளவு இன்சுலின் எடுத்தால் அரைமணியில் மீண்டும் பசியெடுக்க ஆரம்பிக்கும். கொஞ்சம் வாயு உபத்திரவமும் ஏற்பட்டது. ஆனால் சில நாட்களில் அது சரியாகி விட்டது. தோதான இன்சுலின் அளவையும் சுயபரிசோதனைகள் மூலம் அறிந்து கொண்டேன்.

 காலை உணவை பேலியோவுக்கு மாற்றியதுமே என் ரத்த சர்க்கரை சிறப்பான கட்டுப்பாட்டில் வருவதை உணர்ந்தேன். இன்சுலின் அளவையும் மூன்றில் ஒரு பங்காய் குறைத்துக் கொண்டேன். இது தான் எனக்கு பேலியோவுக்குள் தொடர்வதற்கான தூண்டுதலாக அமைந்தது.

 மதிய உணவை மாற்றிய பின் மாலையில் குறைவான ரத்த சர்க்கரை காரணமாய் நேரும் மயக்கம் நின்றது. நாள் முழுக்க அபாரமான ஆற்றல் கிடைத்தது. முன்பு எப்போதும் இல்லாத புத்துணர்ச்சியுடன் இருந்தேன். பொதுவாய் நீரிழிவு உள்ளோருக்கு எப்போதும் ஒரு சடவு, அசதி இருக்கும். ஒன்று, ரத்த சர்க்கரை குறையும் போது சோர்வு வரும். உணவை எடுத்துக் கொண்டதும், இன்னொரு பக்கம், ரத்த சர்க்கரை ஒரு ஜம்ப் அடிக்கும். அப்போதும் ஒரு மயக்கம், சோர்வு, தள்ளாட்டம் ஏற்படும். ஆனால் பேலியோவுக்கு மாறின பின் இந்த சடவு முழுக்க இல்லாமல் ஆனது. நாள் முழுக்க துடிப்பாக இருக்க முடிந்தது. 

ஆனால் இரவுணவு தான் எனக்கு தலைவலியானது. இரவில் நான் வழக்கமாய் 32 யூனிட் இன்சுலின் எடுத்துக் கொள்வேன். இரவில் பேலியோ உணவு எடுத்துக் கொண்ட போது முதலில் இதை 20 யூனிட்டாக குறைத்தேன். இரவு ஒரு மணிக்கு சர்க்கரை அளவு மிகவும் குறைந்தது. நள்ளிரவில் மீண்டும் அவசரமாய் உணவு எடுத்துக் கொள்வேன். இதற்காகவே முதல் 10 நாட்கள் நான் இரவு மூன்று மணி வரை விழித்திருப்பேன். உணவு உண்டு இரண்டு மணிநேரம் கழித்து சோதித்து பார்த்து, மீண்டும் உணவு அருந்தி மீண்டும் சோதித்து பார்த்து… இப்படி இரவு பதைபதைப்பாக கழியும். இன்சுலினை இரவில் மிகவும் குறைத்தால் சர்க்கரை அளவும் மிகவும் அதிகமாகி விடும். அந்த ரிஸ்கை எடுக்க நான் விரும்பவில்லை. மெல்ல மெல்ல இரவு நேர இன்சுலின் அளவை புரிந்து கொண்டேன். இரவில் சிக்கன் மட்டும் உண்பதென்றால் ஒரு அளவு, வெறும் முட்டை என்றால் அதை விட குறைவான அளவு. இந்த கடைசி கண்டத்தையும் தாண்டிய பின் என் நீரிழிவு யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது.

கடந்த பத்து வருடங்களில் சாத்தியப்படாத ரத்த சர்க்கரை கட்டுப்பாடு இப்போது வந்து விட்டது. இத்தனை வருடங்களும் இந்த உணவு முறையை பின்பற்றவில்லையே என நான் என்னை நொந்து கொண்டேன். ஏனென்றால் நீரிழிவால் இரண்டு முறை மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பினேன். பேலியோவுக்கு பிறகு நீரிழிவின் மீதுள்ள அச்சம் விலகி விட்டது. பயிற்சி பெற்ற போலீஸ் நாய் போல் ரத்த சர்க்கரை என் ஆணைகளுக்கு இணங்கி ஒரே சீராக என்னுடன் ஓடி வருகிறது. 

முக்கியமாய் முன்பு நான் ஒருநாளைக்கு 110 யூனிட் இன்சுலின் எடுத்து வந்தேன். இப்போது அதை 50 யூனிட்டாக குறைத்து விட்டேன். அதுவும் எனக்கு dawn phenomenon சிக்கல் இருப்பதால் தான் இவ்வளவும் கூட எடுக்க வேண்டியதாகிறது. இல்லாவிட்டால் மொத்தமே 20 யூனிட்டுக்குள் இன்சுலினை குறைக்க முடியும். நான் முதல் வகை நீரிழிவு நோயாளி. அதாவது இன்சுலினை உடம்புக்குள் செலுத்தியாக வேண்டும். இரண்டாவது வகை நீரிழிவாளர்களுக்கு உடம்பில் சொற்ப இன்சுலின் இயற்கையாக சுரக்கும். மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டால் சமாளிக்கலாம். இவர்கள் பேலியோவுக்கு மாறுவதானால் மாத்திரையை கூட விட்டு விடலாம் என தோன்றுகிறது. அதாவது தாம் நீரிழிவாளன் என்பதையே மறந்து வாழலாம்.

இவ்வளவு விபரமாய் நான் பேலியோ பற்றி கூறியது ஒரு நோக்கத்திற்காகத் தான். பேலியோ அனைவருக்குமானது அல்ல. ஏதாவது உடல் உபாதை இருந்தால் அதை சீராக்க பேலியோவுக்குள் வரலாம். சில மாதங்களில் உடல் எடையை குறைக்க பேலியோ பயன்படும். மற்றபடி மரபான உணவு முறையே பெரும்பாலானோருக்கு போதும். தேவையின்று உணவு முறையை மாற்றக் கூடாது. ஏன் என அடுத்த பதிவில்கூறுகிறேன்.
 
 
Link to comment
Share on other sites

பெலியோ டையட நம்ம புலம்பெயர்வாளர்களுக்கு ஒரு நல்ல தரமான உணவு கட்டுப்பாடு என்ன பல உள்ளூர் gb மாரின் வயித்தில் புகையும் 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பேலியோ எல்லாருக்கும் சரிப்படாது

ஆர். அபிலாஷ்

 
அனைவருக்கும் பேலியோ பொருந்தாது. என் தோழி ஒருவருக்கு நீரிழிவு உண்டு. அவர் பேலியோ உணவை உண்டதில் அவருக்கு சர்க்கரை அளவு வெகுவாய் குறைந்து மயக்கம் போடும் நிலைக்கு சென்று விட்டார். அதற்கு முக்கிய காரணம் அவர் தன் உடல்நிலை என்ன, அதற்கு போதுமான உணவு எவ்வளவு என்பது குறித்து போதுமான ஆய்வு செய்யவில்லை. தமிழில் பேலியோ குறித்து வந்துள்ள சில நூல்கள், கட்டுரைகள் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது என்கின்றன. ஆனால் ஆங்கிலத்தில் நான் படித்த மட்டிலும் பழங்களை நிச்சயம் உண்ணலாம். தமிழ் பேலியோ நிபுணர்களை கராறாய் பின்பற்றின தோழி வெறுமனே காய்கறிகளை மட்டும் உண்டார். அவரால் அதிகமாய் அசைவம் உண்ண முடியாது. இதனால் அவரது உணவு கலோரிகள் மிகவும் குறைந்து, ஆரோக்கியமற்றதாக மாறி விட்டது.
 

மற்றொரு நண்பரும் இதே தவறை செய்தார். முதல் தவறாக (படிப்படியாய் அன்றி) தடாலடியாக பேலியோவுக்கு மாறினார். இரவு அவர் வெறும் வெண்ணெய் கட்டி மற்றும் காய்கறி உணவை எடுத்துக் கொண்டார். இதனால் அவருக்கு வாயுத்தொல்லை அதிகமாகி விடிகாலையில் கடும் நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தார். மாரடைப்பு வந்து விட்டதென அஞ்சி அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வெறும் வாயுத்தொல்லை தான் என உறுதிப்படுத்தினர். அதனால் நண்பர் இனிமேல் பேலியோ விளையாட்டெல்லாம் வேண்டாம் என ஒதுங்கி விட்டார்.

ஓவியர் சண்முகவேல் இதே போல் பேலியோ உணவை சரிவர புரிந்து கொள்ளாமல் பின்பற்றியதில் அவருக்கு நரம்பு கோளாறு ஏற்பட்டு மிகவும் நொடிந்து போனதாய் கேள்விப்பட்டேன்.

பேலியோவை பொறுத்த மட்டில் customization என்பது மிக முக்கியம். அதாவது யாரோ கொடுக்கிற உணவு அட்டவணையை நாம் கண்ணை மூடி பின்பற்றக் கூடாது. நாமாக நிறைய படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் இறுதியாக நம் சுவைக்கு, உடல் நிலைக்கு எது பொருந்தும் என நாமாக தான் முடிவு செய்ய வேண்டும். என் நண்பர் ஒருவர் பேலியோவை முன்னெடுக்கும் ஒரு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றார். அவர் கொடுத்த் அட்டவணைப்படி உண்ணத் துவங்கினார். அது அவருக்கு தோது படவில்லை என்பது மட்டுமல்ல உடம்பிலும் சிக்கல்களை ஏற்படுத்தின. எப்படி ஆண்டிராய்ட் போனை நம் தேவைக்கு ஏற்றபடி customize செய்கிறோமோ அதே போல் பேலியோவையும் வடிவமைக்கலாம். உதாரணமாய், பேலியோவில் பால் உணவு கூடாது. ஆனால் எனக்கு பால் பிடிக்கும். அதனால் நான் பால் எடுத்துக் கொள்கிறேன். காலையிலும் மதியமும் ஏன் இரவிலும் கூட கறி, மீன், முட்டை உண்ண பேலியோ நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னால் அது முடியாது. அதனால் நான் ஒரே வேளை தான் கறி சாப்பிடுகிறேன். மீதி நேரம் காய்கறி, பழங்கள் உண்கிறேன். எனக்கு சிறுவயதில் இருந்தே பழங்கள் மிக பிடிக்கும். தேங்காயும் பிடிக்கும். ஆக, இந்த இரண்டையும் உணவில் அதிகமாய் சேர்க்கிறேன். முடிந்தளவு காய்கறிகளும் உண்கிறேன். பழங்களிலும் எவை எவை என் ரத்த சர்க்கரையை பாதிக்கும் என சோதித்து அறிந்து வைத்து அவற்றையே உண்கிறேன். மதியம் உண்பதற்கு எனக்கு தேங்காயும் பழங்களுமே தாராளம். ஆனால் மற்றொருவருக்கு இவை பிடிக்காமல் போகலாம். அவர் தன் சுவைக்கு, உடல்வாகுக்கு ஏற்றபடி உணவை வடிவமைக்க வேண்டும்.

பேலியோ உணவுமுறை கீட்டோஜெனிக் டயட் எனப்படுகிறது. அதென்ன கீட்டோஜெனிக்? பொதுவாக நாம் உண்ணும் உணவு சர்க்கரையாக மாறும். அதன் பிறகு அது ஆற்றலாக மாற்றப்படும். ஒருவேளை நாம் விரதம் இருந்தால் உடம்பு கொழுப்பை ஆற்றலாக மாற்ற முயலும். அப்போது உபவிளைவாக தோன்றுகிறவை தான் கீட்டோன். இப்படி கொழுப்பை ஆற்றலாக பயன்படுத்தும் முறையை தான் ketogenic டயட் என்கிறோம். பேலியோவில் நேரடியான மாவுச்சத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. காய்கறி, பழங்கள் ஆகியவற்றில் உள்ள சத்துகள், கறியில் உள்ள புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடல் கீட்டோஜெனிக் முறையில் ஆற்றலாக மாற்ற வேண்டும். அதாவது உணவில்லாத வேளைகளில் உடம்பு செயல்படும் முறைக்கு அதை நிரந்தரமாக மாற்றுகிறோம் (போனில் power saving mode போல).

 இதன் ஒரு பலன் என்னவென்றால் ரத்த சர்க்கரை அதிரடியாய் ஏறி இறங்கி சிக்கல் ஏற்படுத்தாது. இது நீரிழ்வு நோயாளிகளுக்கு அருமையான விசயம். ரத்தத்தில் சர்க்கரை அளவு ஒரே சீராக இருக்கும்.

 உடல் பருமன் கொண்டோருக்கும் கூட இது பலன் தரும். உடல் தன் ஆற்றலுக்காய் கொழுப்பை கரைக்கும் போது இயல்பாகவே எடை குறையும்.

பேலியோவில் உடல் எடை குறைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மாவுச்சத்து மிக்க தானிய உணவு ஒருவித போதை தரக் கூடியது. சுவையான சாம்பார் ஊற்றி ஒரு தட்டு சோறு சாப்பிடுகிறீர்கள். அடுத்து நல்ல வாசனையுடன் ரசம் வருகிறது. இன்னொரு கரண்டி சோறு சாப்பிடத் தோன்றும். பாயசம் வருகிறது. பிரமாதம். இன்னொரு கிண்ணம் சாப்பிட ஆசை ஏற்படும். இப்படி தானிய உணவு நம்மை மேலும் மேலும் கூடுதலாய் சாப்பிட தூண்டும். அது மட்டுமல்ல வயிறும் விரிந்து கொண்டே போகும். ஆனால் புரத உணவு அப்படி அல்ல. நீங்கள் என்னதான் சுவையாக உணர்ந்தாலும் ஒரு அளவுக்கு மேல் சிக்கனை தின்ன முடியாது. பழங்களும் அப்படியே. ஐந்து லட்டு முழுங்கலாம். பத்து இட்லியை சூடாய் சட்னியுடன் தின்னலாம். வயிறு இன்னும் கொடு என கேட்கும். ஆனால் ஐந்து ஆப்பிள்களை சேர்ந்தாற் போல் தின்ன முடியுமா? இரண்டு சாப்பிட்டாலே வெறுத்து விடும். பேலியோ உணவு அதன் இயல்பிலேயே போதையானதோ ஒரு பழக்கத்துக்கு நம்மை அடிமையாக்குவதோ (addictive) அல்ல. அளவாகத் தான் உண்ண முடியும். அது மட்டுமல்ல, பேலியோ பழகின பின் எனக்கு இப்போது தானிய உணவுகளைக் கண்டால் எச்சில் ஊறுவதில்லை. இனிப்பை யாராவது வழங்கினால் கூட கொஞ்சம் சுவைத்ததும் வயிறு வேண்டாம் என்கிறது. முன்பு வெகுசுவையாய் நான் கருதிய பல உணவுகள் மீது இப்போது ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. நானாகவே வெறுத்து ஒதுக்கவில்லை. என் நாவே அவற்றை மறுக்கிறது. சுவை என்பது முழுக்க நம் பழக்கங்களால் கட்டமைக்கப்பட்டது தானே!

 இதனால் தொடர்ந்து பேலியோவை பின்பற்றுகிறவர்கள் உடற்பயிற்சி இல்லாமல் கூட இளைத்து விடுவார்கள்.

ஆனால் ஏற்கனவே ஒல்லியாக இருப்பவர் பேலியோவுக்குள் வரலாமா? இது சற்று சிக்கலானது. அவர்கள் தம் உடல் தேவைக்கு ஏற்ப சரியான அளவு உண்ண வேண்டும். ஏனென்றால் உடம்புக்கு பேலியோ உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் போதுமானதாக இல்லாவிட்டால் கரைப்பதற்கு உடம்பில் போதுமான கொழுப்பு இருக்காது. புத்தாண்டு இரவில் உயிர்மையில் உணவருந்திக் கொண்டிருக்கும் நண்பர் விநாயக முருகனை கண்டேன். பிரியாணியை புரட்டி போட்டு எடுத்துக் கொண்டிருந்தார். “நீங்க எப்போ பேலியோவை கை விட்டீங்க?” என கேட்டேன். அவர் ”சமீபமாக” என்றார். அவர் வெகுவாக எடையை குறைத்து விட்டார். (ஏற்கனவே அவருக்கு நடுவாந்தரமான எடை தான்.) இப்போது ஜிம்மில் எடை தூக்கி பயிற்சி செய்வதால் பேலியோ உணவு போதுமானதாக இல்லை, அதனாலே தானிய உணவுக்கு மீண்டதாய் சொன்னார். இது மிகச்சரியான அணுகுமுறை. அவர் தன் உடலுக்கு ஆற்றல் எவ்வளவு தேவை என புரிந்து அதற்கு ஏற்றாற் போல் உணவையும் தீர்மானிக்கிறார். உணவைப் பொறுத்த மட்டில் பிடிவாதம் கூடாது. நம் தேவைகளே நாம் பேலியோவில் இருக்கிறோமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

ஏற்கனவே ரத்தக்கொழுப்பு உள்ளவர்கள் பேலியோவுக்குள் வரலாமா? அவர்கள் மிகுந்த கவனம் காட்ட வேண்டும். கொழுப்புணவை குறைத்து, புரத, காய்கறி, பழ உணவுகளை அதிகப்படுத்த வேண்டும். ரத்த பரிசோதனை செய்து பேலியோவினால் ஏதாவது சிக்கல் ஏற்படுகிறதா என பார்க்க வேண்டும். இதையே மாரடைப்பு வியாதிக்காரர்களுக்கும் சொல்லலாம். சமீபத்திய ஆய்வுகள் நமது ரத்த கொழுப்புக்கு காரணம் கொழுப்புணவு அல்ல என வலியுறுத்துகின்றன. நாம் சர்க்கரை (மாவு) சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்பதனால் தான் நமது ரத்த கொழுப்பு அதிகமாகிறது. அதாவது வாழைக்காய் சிப்ஸை விட, வெண்ணெயை விட அரிசி, கோதுமை, மைதா மற்றும் கோக், பெப்ஸி ஆபத்தானவை. இவை தான் உடம்பில் சென்று கொழுப்பாய் மாறி தமனிகளை அடைக்கின்றன. ஆக, மாரடைப்பு கோளாறு கொண்டவர்களுக்கு கூட பேலியோ உதவும் என்றே தோன்றுகிறது.

 
முக்கியமாய், பேலியோ அனைவருக்கும் ஆனது அல்ல. சிலர் உடல்வாகுக்கு அது ஒவ்வாமல் ஆகலாம். அவர்கள் தவிர்ப்பது நல்லது.அவரவர் தேவைக்கு ஏற்ப அதை பயன்படுத்த வேண்டும். உடல்வாகு, வியாதிகள், சுவைக்கு ஆகியவற்றுக்கு ஏற்ப இவ்வுணவு முறையை வடிவமைக்க வேண்டும். முக்கியமாய், அடுத்தவர் உணவு அட்டவணையை கண்மூடித்தனமாய் நாம் பின்பற்றுதல் ஆகாது.

பேலியோ உணவு நம் மனச்சோர்வுக்கு நல்லது. ஆற்றலை பெருக்கி நம் இயல்பான உற்சாகம் வடியாமல் பார்த்துக் கொள்கிறது. இது எப்படி என அடுத்த பதிவில் சொல்கிறேன்.

 

http://thiruttusavi.blogspot.co.uk/2017/01/blog-post_1.html?m=1

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பேலியோ உணவு அட்டவணை

என்னுடைய பேலியோ அனுபவங்களைப் பற்றி எழுதியதை தொடர்ந்து நண்பர்கள் எனது உணவு அட்டவணையை கேட்டு வருகிறார்கள். ஒரு தோழர் நீரிழிவு கோளாறு கொண்ட தனது அத்தைக்கு அது உதவும் என்று சொல்லி கேட்டிருக்கிறார். எனக்கு ஒருவர் அட்டவணையை மற்றவர் பின்பற்றுவதில் நம்பிக்கை இல்லை. எனக்கு பொருந்தி வரும் உணவு முறை மற்றொருவருக்கு உத்வாமல் போகலாம்; அல்லது சிக்கலை ஏற்படுத்தலாம். அதனால், நான் அடுத்து கூறும் விசயங்களை அவரவர் தமது உடல் தேவை மற்றும் வாகுக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாய், பேலியோ உணவுமுறையின் சிறப்பு அது எளிமையானது என்பது. ஒரு குழந்தை கூட அதை புரிந்து பின்பற்ற முடியும். விவசாயம் மூலம் கிடைக்கும் உணவுகளை (அதாவது தானியங்கள், உளுந்து, பருப்பு, பயிறு, நிலக்கடை போன்றவை) தவிர்க்க வேண்டும். பதிலாக காய்கறி, பழங்கள் மற்றும் கறி (முட்டை, சிக்கன், மட்டன், மாட்டுக்கறி என எதுவும்) சாப்பிட வேண்டும்.
 இன்றைய காலத்தில் இயற்கையான உணவு என கராறாக எதுவும் இல்லை. ஆனாலும் பேலியோவில் கூறப்படும் இயற்கையாய் நேரடியாய் கிடைக்கும் உணவை எடுத்துக் கொள்ளலாம் எனும் பரிந்துரை ஒரு எளிய காட்சிமுறை விளக்கம் மட்டும் தான். ஆதிமனிதன் போல் நம்மால் உண்ண முடியாது தான். ஆனாலும் பேலியோ உணவில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் இதை ஆதிமனிதன் உடனடியாய் உட்கொண்டிருக்க முடியுமா என யோசித்துப் பார்த்து முடிவு செய்ய முடியும். இதற்காக ஒரு உருவகமாக பேலியோலிதிக் ஆதிமனிதனின் உணவுமுறை என இது விளம்பரப்படுத்தப்படுகிறது என புரிந்து கொள்கிறேன்.
ஆக பேலியோவை பின்பற்றும் முன் அதைப் பற்றி விரிவாக படித்து ஆய்வு செய்ய வேண்டியதில்லை. ஏதாவது ஒரு உணவு பேலியோவில் சேருமா என குழப்பம் ஏற்பட்டால் கூகிளில் தேடிப் பார்க்கலாம் (உதாரணமாய் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்). அது போதும். உணவு விசயத்தில் எப்போதுமே சிறந்த வழிகாட்டி நம் உடல் தான். நம் உடலுக்கு என தனித்துவமான தேவைகள் உண்டு. அதை அறிந்து தோதான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உண்பதற்கான பேலியோ உணவு வகைகளின் விரிவான பட்டியல் உண்டு (கூகிளில் நிறைய ரிஸிப்பிகள் கிடைக்கின்றன). இரண்டு விசயங்களில் கவனம் காட்ட வேண்டும்.
ஒன்று, பேலியோ குறித்து விளக்கும் நூல் ஒன்றை வாங்கிப் படித்து அதை காற்புள்ளி, அரைப்புள்ளி மாறாமல் பின்பற்றக் கூடாது. பேலியோ என்பது ஒரு மருத்துவம் அல்ல. அது யோகா அல்ல. அதற்கென கராறான நிறைய விதிமுறைகள் இல்லை. எளிய விலக்குகள் மட்டுமே. இந்த விலக்குகளுக்கு அப்பால் எந்த உணவையும் நீங்களே தேர்ந்து உங்களுக்கு ஏற்றபடி வடிவமைத்துக் கொள்ளலாம். ஆகவே, பேலியோ ரிஸிப்பிகளை பின்பற்றுவதும் சிக்கலாகிறது. நம்மால் தினமும் சமைக்க முடிகிற ரிஸிப்பிகளை நாம் கவனமாய் தேர்ந்து சமைத்தால் போதும். உதாரணமாய், பாதாம் கேக் செய்து உண்ண வேண்டியதில்லை. சிக்கன் கிரில் செய்து சாலட்டுடன் உண்ண வேண்டியதில்லை. ஒரு டபுள் ஆம்லெட்டும், ஏதாவது ஒரு காய்கறியில் பொரியலும், ஒரு சின்ன வாழைப்பழமும் உள்ளதென்றால் உங்கள் மதிய உணவுக்கு அதுவே தாராளம். வீட்டில் மீன் இருக்கிறது என்றால் அன்று மீனில் வாழைக்காய் போட்டு ஒரு குழம்பு வைத்து அதை சாப்பிடலாம். முடிந்தளவு உங்கள் ஊர்ப்பகுதியில் உள்ள சமையல் வகைகளுக்குள் பேலியோவை தகவமைப்பது நலம்.
இணையத்தில் கிடைக்கும் பேலியோ அட்டவணை மூன்று வேளையும் கறி, முட்டை, மீன் சாப்பிட அறிவுறுத்துகிறது. ஆனால் நமது உடல்வாகுக்கு, பண்பாட்டுக்கு இவ்வளவு அசைவம் ஒத்து வராது. என்னால் சத்தியமாய் மூன்று வேளையும் கறி சாப்பிட முடியாது. தினமும் சிக்கன் சாப்பிடுவதே எனக்கு சிரமம் தான். வாரம் ஒருமுறை கறி உணடே நான் பழகி வந்திருக்கிறேன். என்ன செய்யலாம்?
பேலியோவின் படி நம் உணவில் புரதம் மற்றும் கொழுப்பை பிரதானமாய் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அடுத்தபடியாய் சத்துகள் நிறைந்த காய்கறி மற்றும் பழங்கள். கூடுதலாய் நட்ஸ். ஆனால் மனிதனுக்கு ஒருநாள் புரதத் தேவை உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.08 கிராம் தான். உங்கள் எடை 60 கிலோ என்றால் எவ்வளவு தேவை என கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். அதாவது உள்ளங்கையளவு சிக்கன் ஒருவரது ஒருநாள் புரதத் தேவையை நிறைவேற்றும். இது போக நீங்கள் உட்கொள்ளும் புரதத்தை உடம்பே வெளியேற்றி விடும். இதனால் நான் புரத உணவுகளை மிகுதியாய் எடுத்துக் கொள்வதில்லை.
வழக்கமான பேலியோ அட்டவணையை பின்பற்றுவதில் எனக்குள்ள பிரச்சனைகள் மூன்று வகையானவை. கலாச்சாரரீதியாய், உடல்வாகு பொறுத்து, அறிவியல் ரீதியாய் எனக்கு இந்த பேலியோ பரிந்துரைகளில் உடன்பாடில்லை.
இதனால் நான் என் தினசரி உணவுகளை நான்கு பாகமாய் பிரித்துக் கொள்கிறேன். இதில் மூன்று பாகங்கள் காய்கறி மற்றும் பழங்களால் அமைத்துக் கொள்வேன். ஒரு பாகம் மட்டும் முட்டை அல்லது கறியால் ஆனது. எனக்கு இதுவே தோதுபடுகிறது.
தமிழில் பேலியோ நிபுணர்கள் பழங்கள் மீது கடும் கட்டுப்பாடு விதிக்கிறார்கள். ஆனால் நான் ஆங்கிலத்தில் படித்தவரையில் அப்படியான கட்டுபாடுகள் பழங்கள் மீது இல்லை. பேலியோலிதிக் மனிதன் சாதாரணமாய் பறித்து தின்னக் கூடிய இயற்கை உணவு தானே பழம். அதை ஏன் தவிர்க்க வேண்டும்?
நான் என் காலை உணவாக பழங்களை எடுத்துக் கொள்கிறேன். எனக்கு நீரிழிவு உண்டென்பதால் மாம்பழம், பலாப்பழம், திராட்சை ஆகியவற்றை குறைவாக எடுத்துக் கொள்கிறேன். மாதுளமும் அவ்வாறே. ஆனால் ஆப்பிள், ஆரஞ்ச், வாழைப்பழம், பப்பாளி, கொய்யா ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப உண்கிறேன். பழத்திலும் எவ்வளவு சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவாக இருக்கும் என நான் அறிந்து வைத்திருக்கிறேன். அதே போல் ஒவ்வொரு நீரிழிவாளரும் சுய ரத்த பரிசோதனை மூலம் தமக்கு பொருந்தி வரும் அளவை அறிந்து அதற்கு ஏற்ப உண்ண வேண்டும். நான் அறிந்து கொண்டது என்னவென்றால் எந்த தானிய உணவையும் விட பழங்கள் ரத்த சர்க்கரையை நீண்ட நேரம் நிலையாக வைத்திருக்கின்றன.
மதியம் நான் காய்கறி பொரியல், பழங்கள் எடுத்துக் கொள்கிறேன். காய்கறி இல்லாவிட்டால் பழங்களுடன் இரண்டு முட்டைகள் எடுத்துக் கொள்கிறேன். இரவு ஐந்து சின்ன சிக்கன் துண்டுகள். இது தான் என் உணவு அட்டவணை.
 காலை – மாலை இடைவேளைகளில் கொறிக்க? எனக்கு தேங்காய் வெகு பிரியம். நான் குமரி மாவட்டத்துக்காரன். தேங்காய் எங்கள் எல்லா வாழ்வியல் நிலைகளிலும் ஒன்று கலந்தது. அதனால் நான் தேங்காய் துண்டுகளை கொறிப்பதற்கு வைத்துக் கொள்கிறேன். தேங்காய் உடனடியாய் ரத்தசர்க்கரையை ஏற்றுவதில்லை என்பதுடன் மிக ஆரோக்கியமான உணவும் கூட. அதன் கொழுப்பும் ஆரோக்கியமானது. (சமைக்கவும் நான் தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய் ஆகியவற்றையே பயன்படுத்துகிறேன்.) உங்களுக்கு தேங்காய் விருப்பமில்லை என்றால் வாழைப்பழம் அல்லது அவித்த முட்டையை எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது ஒரு காய்கறியில் செய்த பொரியல் கூட போதும். (பேலியோ உணவுகள் என் ரத்த சர்க்கரையை ஒரே சீராய் வைப்பதால் எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி பசிப்பதில்லை. அதனால் அதிகம் கொறிப்பதில்லை)
பாதாம், முந்திரிப்பருப்பு போன்ற நட்ஸ் வகைகளை கொறிக்க எடுத்துக் கொள்ளலாமா? இந்த நட்ஸ் சுவையானவை, ஆரோக்கியமானவை. ஆனால் இவற்றில் phytic அமிலம் எனும் வஸ்து உள்ளது இந்த அமிலம் உங்கள் பிற உணவுகளில் கலந்து சத்துக்களை உடம்பு உறிஞ்சாமல் பண்ணும். அதனால் இதை anti-nutrient என்கிறார்கள். நட்ஸ் வேண்டுமென்றால் ஊற வைத்து தின்னலாம். அல்லது வறுத்து தின்னலாம். வாரத்தில் சிலமுறை ஒரு கைப்பிடி அளவு உண்டால் எந்த சிக்கலும் இராது. ஆனால் தினசரி இதை கொறிப்பதற்கு வைத்துக் கொள்ள கூடாது. (நிலக்கடலை இந்த நட்ஸ் வகையில் சேராது. அதை முழுக்க தவிர்க்க வேண்டும்.)
பேலியோவில் பால் உணவை தவிர்க்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றால் குறைவாக எடுத்துக் கொள்ளலாம். முதியவர்கள் பேலியோவை பின்பற்றும் போது பால் நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கால்ஷியம் குறைபாடு ஏற்படும். எனக்கு தனிப்பட்ட முறையில் பால் மிகவும் பிடிக்கும். அதனால் நான் பாலை தவிர்க்கவில்லை. உணவு நமக்காகவே அன்றி நாம் உணவுக்காக அல்ல. அதனால் எந்த டயட்டையும் நம் தேவைக்கேற்ப வடிவமைக்கலாம். ராணுவ கரார்தனம் தேவையில்லை.
நான் பேலியோவை பின்பற்ற ஆரம்பித்து சில மாதங்களே ஆகின்றன. இப்போதைக்கு எனக்கு கிடைத்துள்ள முக்கிய பலன் என் தற்காப்பு சக்தி அதிகமாகி உள்ளது. வழக்கமாய் நவம்பர், டிசம்பர் மாதங்களில் எனக்கு தவறாமல் சளி பிடித்துக் கொள்ளும். பத்து கிலோமீட்டர் தொலைவில் யாராவது தும்மினால் எனக்கு இங்கே மூக்கு அடைத்துக் கொள்ளும். அது கூட பரவாயில்லை. மருந்து எடுத்துக் கொள்ளாவிட்டால் சளி நிச்சயம் ஜுரமாக மாறும். ஜுரம் கடுமையாய் மாறி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விடுவேன். எல்லா வருட இறுதியிலும் நான் மூன்று முறைகளாவது நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு சென்று விடுவேன். என்னைப் பார்த்ததுமே அங்குள்ள செவிலிகள் தெர்மோமீட்டரை எடுப்பார்கள். ஜூனியர் மருத்துவர்கள் மருந்துகளை குறிக்க தயாராகி விடுவார்கள். இந்த வருடம் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் பெரும்பாலானோருக்கு சளித்தொல்லை. தும்மிக் கொண்டே இருக்கிறார்கள். மூக்கு வழிகிறது. எனக்கு சன்னமாய் சளி தொற்றியது. ஆனால் வந்த வேகத்தில் மறைந்து விட்டது. ஒரு மாறுதலுக்கு, என்னைச் சுற்றி எல்லாரும் தும்ம நான் மட்டும் இயல்பாய் இருப்பது ஜாலியாக இருக்கிறது.

என்னைப் பொறுத்த மட்டில் கடந்த பத்து வருடங்களில் முதல்முறையாக இவ்வருடம் சளி, ஜுரத்தின் பிடியில் இருந்து நைசாக தப்பி இருக்கிறேன். இது ஒரு எளிய அற்புதம். இது பேலியோவின் நற்பயன் தானா என்பதை அடுத்த வருடம் தான் நான் உறுதிப்படுத்த முடியும். ஆனாலும் இப்போதைக்கு எல்லாம் சுபம்!

 

http://thiruttusavi.blogspot.co.uk/2017/01/blog-post_3.html?m=1

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பேலியோ உணவு ஏன் நம்மை உற்சாகமாக வைத்திருக்கிறது?


பேலியோ உணவு நம் மனநிலையை சீராக வைக்கிறது. Mood swing எனப்படும் அதிரடி மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, களைப்பு ஆகியவற்றுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. இதற்கு ஒரு காரணம் பேலியோ உணவு ரத்த சர்க்கரையை அதிரடியாய் உயர்த்துவதில்லை என்பது. வேறு சில காரணங்களும் உள்ளன.


உணவு நமது சுபாவத்தை தீர்மானிக்கிறது என்பது பற்றி இந்திய மரபில் பல நம்பிக்கைகள் உண்டு. சில வாழ்க்கை மார்க்கங்கள் கொண்டோருக்கு குறிப்பிட்ட உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. (இன்னொரு பக்கம் உணவின் வழி இங்கு சாதியம் நிறுவப்பட்டுள்ளது.) உடலின் குளிர்மை, வெப்பம் பொறுத்து உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. காந்தி உணவின் உளவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது ஜைன மதப் பின்னணி காரணமாயும், இங்கிலாந்தில் அவர் கலந்து கொண்ட சைவ உணவு குழுக்களின் தாக்கம் காரணமாயும் உணவில் சைவத்தை அவர் வலியுறுத்தினார். அவர் உணவு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். காந்தி இயல்பில் கொந்தளிப்பான சுபாவம் கொண்டவர். இளமையில் தனது கட்டுக்கடங்காத காமம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது தத்தளித்தவர். மனதை நிலைப்படுத்துவதில் உணவுக்கு பங்கு உண்டு என அவர் நம்பினார். அவர் அடிக்கடி விரதம் இருந்ததன் ரகசியம் இது தான். எந்த அரசியல் சிக்கல் ஏற்படும் போதும் உண்ணாநோன்பு தன் மனதை தெளிவுபடுத்தி உடலையும் வலுப்படுத்துவதாய் அவர் உணர்ந்தார். (இன்னொரு பக்கம் அவர் தன் உடலை வருத்துவது மக்களுக்கு பெரும் மன எழுச்சியை அளித்து காந்தியத்தின் பின் லட்சக்கணக்கானோரை ஈர்த்தது.) 

அது மட்டுமல்ல, காந்தி உணவை குறைக்க குறைக்க தன் ஆரோக்கியமும் மன உறுதியும் தெளிவும் அதிகரிப்பதையும் கண்டார்.
 இது குறித்து ஏற்கனவே சில ஆய்வுகள் நடந்துள்ளன. அதாவது, மனிதர்கள் எந்தளவு குறைவாக உணவருந்துகிறார்களோ அந்தளவு அவர்களின் ஆயுள் நீடிக்கிறது. பஞ்ச காலத்தில் மனிதர்கள் அதிக காலம் வாழ்ந்ததாய் ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது ஒருவேளை உணவு கிடைக்கும் சூழலில் உடல் ஒரு battery saving modeக்கு செல்கிறது. உடல் ஆற்றலை எரிக்கும் வேகம் குறைகிறது. உடலின் வளர்ச்சி வேகமும் மெத்தனமாகிறது. விளைவாக ஆயுள் அதிகமாகிறது. ஏன்? ஏனென்றால் உணவு குறையும் போது மனிதன் குழந்தை பெற்று வம்சாவளியை நீடிக்க வாய்ப்புகளும் குறைகின்றன. (பொதுவாக பொருளாதார நெருக்கடிகள் குழந்தைப்பேறு ஆர்வத்தை மனிதரில் குறைக்கிறது.) நம்மை மரணத்தை நோக்கி விரைவுபடுத்தும் பொத்தான் ஒன்று நம் மரபணுக்குள் உள்ளது. முப்பது வயது நெருங்கும் போது இந்த பொத்தான் தானே செயல்படத் துவங்குகிறது. ஆனால் உணவை மிகக்குறைவாக உண்ணும் மனிதர்களில் இந்த பொத்தான் off நிலையில் இருக்கிறது. விளைவாக அவர்கள் நீண்ட ஆயுள் வாழ்கிறார்கள். இதனால் தான் உணவு அபரிதமாய் கிடைக்கும் இன்றைய தலைமுறையில் பலரும் ஐம்பது வயதுக்குள் மரிக்கிறார்கள். காந்தி தன் உணவை வெகுவாய் குறைத்து உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தினார். கோட்சே சுடாவிட்டால் மனிதர் நூறு வயதை எளிதில் தொட்டிருப்பார்.


இந்தியர்கள் நம்புவது போல் உணவு நம் ஆளுமையை வடிவமைக்கிறதா என்பது குறித்து தீர்க்கமான அறிவியல் ஆய்வுகள் இல்லை. ஆனால் சிக்மண்ட் பிராய்ட் ஒரு விசயத்தை குறிப்பிடுகிறார். நமது அஜீரணத்துக்கும் துர்கனவுகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதாவது வயிற்று தொந்தரவுகளுடன் தூங்கினால் கனவில் ரத்தக்களறி தோன்றும்; அச்சுறுத்தும் காட்சிகள் மனத்திரையில் ஓடும். நள்ளிரவில் அலறி எழுவோம். குடல் பகுதியில் உள்ள நரம்புகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளதாய் பிராயிட் கணிக்கிறார்.


பேலியோ நிபுணர்கள் இது சம்மந்தமாய் இரண்டு விசயங்களை சொல்கிறார்கள். ஒன்று leaky gut. அவர்களின் கருத்துப்படி, தானிய உணவுகள் குடலில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. விளைவாக குடலில் ஓட்டைகள் தோன்றுகின்றன. சரியாக செரிக்கப்படாத உணவுத் துகள்களும், விஷப்பொருட்களும் ரத்தத்தில் கலக்கின்றன. நாம் உண்ணும் பெரும்பாலான சத்தான உணவுகள் உடலில் ஒட்டாமல் போகின்றன. கல்லீரல் ரத்தத்தில் இருந்து அசுத்தங்களை அகற்ற கடுமையாய் முயலும். ஆனால் ஒரு கட்டத்தில் அதுவும் சோர்ந்து போகும். இப்போது நம் உடலின் தற்பாதுகாப்பு சக்தி விழித்துக் கொள்ளும். ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை அது தொற்றுவியாதி கிருமிகளாய் கருதி தாக்க துவங்கும். இந்த தாக்குதல் நமது உடல் உறுப்புகள் எதிராக நடக்கும் என்பது தான் சிக்கல். அதாவது உடல் தன் கண்ணுக்கு தெரியாத சக்தியை தாக்க முயன்று தன்னையே கடுமையாய் காயப்படுத்தும். விளைவாக உடல் முழுக்க நமக்கு வீக்கம் ஏற்படும். மனம் எப்போதும் பனிமூட்டத்தில் இருப்பது போன்ற குழப்ப நிலை, கசப்புணர்வு, மறதி, தலைவலி ஆகியவை அடிக்கடி ஏற்படும். இப்படி குடலில் ஏற்பட்ட சிக்கல் (பிராயிட் சொன்னது போல்) நம் மனதை வந்து தாக்கும்.


அடுத்து நமது தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்குள் மற்றொரு தற்பாதுகாப்பு சக்தி செயல்படுகிறது. இந்த விதைகள் நாம் உண்பதற்கானவை அல்ல. இவை முளைத்து செடியாக வேண்டியவை. தம் குழந்தைகளை மனிதர்களும் மிருகங்களும் மொத்தமாய் கபளீகரம் செய்வதை விரும்பாத செடிகள் விதைகளுக்குள் சில ஒவ்வாமை ஏற்படுத்தும் ரசாயனங்களை ஒளித்து வைக்கின்றன. இந்த தானியங்களை உண்ணும் நமக்குள் இவை ஒவ்வாமையையும், வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.


 இன்றைய மனிதர்கள் எப்போதும் களைப்பாக, தூக்க சடவோடு இருக்கிறார்கள். இதை போக்க மதுவருந்துகிறார்கள். புகைக்கிறார்கள். பார்ட்டிகள், கொண்டாட்டங்கள் என தம்மை மறக்க முயல்கிறார்கள். ஆனால் களைப்பு அவர்களை விடாமல் துரத்துகிறது. நமது உணவு மூளையை பாதிப்பது தான் இந்த சடவுக்கு காரணம் என்கிறார்கள் பேலியோ நிபுணர்கள்.


பேலியோ உணவுமுறைக்கு மாறும் போது பெரும்பாலானோர் உணரும் முதல் மாற்றம் அபாரமான ஆற்றலும் மனத்தெளிவும் உற்சாகமும். இது குறித்து இணையத்தில் நிறைய பதிவுகள் கிடைக்கின்றன. நானும் என் அனுபவத்தில் உணர்ந்தேன். என் நிரந்தர களைப்பும் உடல் அலுப்பும் மறைந்தன.

 ஆனாலும் இவ்விசயத்தில் போதுமான அறிவியல் ஆய்வுகள் இன்னும் நடத்தப்பட வில்லை தான். அறிவியல் தன் முத்திரையை குத்தினாலும் இல்லாவிட்டாலும் செயற்கையான உணவுகளையும் தானியங்களையும் தவிர்ப்பது தமக்கு மனதளவில் நன்மை பயக்கிறதா என்பதை அவரவர் தனிப்பட்ட முறையில் முயன்று பார்ப்பது தான் சரி. நன்மை விளைந்தால் மகிழ்வோம். இல்லாவிட்டால் கடந்து செல்வோம். நஷ்டம் இல்லையே!

 

http://thiruttusavi.blogspot.co.uk/2017/01/blog-post_59.html?m=1

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பேலியோவுக்கு வந்த சவால்

 

சிலர் வருடாவருடம் மலைக்கு விரதமிருந்து போவது போல் நான் சளி, தும்மல், இருமல், ஜுரத்துடன் அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் ஆஸ்பத்திரிக்கு படையெடுப்பேன். என் கணக்குப் படி இந்நேரம் நான் குறைந்தது நான்கு முறையாவது ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்க வேண்டும். கையில் இருந்து ஆயிரம் ரூபாவுக்கு மேல் காலியாகி இருக்க வேண்டும். ஆனால் சளி லேசாய் எட்டிப் பார்த்து விட்டு மறைந்து விட்டது. ஒரு தும்மல், லேசான இருமல் கூட இல்லை. சரி, நம் பேலியோ வேலை செய்கிறது என நினைத்தேன்.

ஆனால் நேற்று விடிகாலையில் லேசாய் தொண்டை வலித்தது. ஜலதோசம் பலமாய் வந்து தாக்கப் போவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. கடும் களைப்பு. ஆஹா நம் பேலியோவுக்கு முதல் சவால் வந்து விட்டது என நினைத்தேன். இது போன்ற சந்தர்பங்களில் மாலைக்குள் எனக்கு மூக்கு அடைத்து விடும். இரவு தொண்டை கடுமையாய் வலிக்கும். அடுத்த நாள் காலை பேசவே முடியாது. வீரியம் மிக்க ஆடிய்பயாட்டிகள் எடுத்துக் கொள்ளவிடில் நான் ஒரே வாரத்தில் ஜுரத்தில் படுத்து விடுவேன். ஆனால் நான் நேற்று எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை. உப்புநீரை கொப்பளிக்கவில்லை. கஷாயம், வெந்நீர் குடிக்கவில்லை. ஓய்வெடுக்கவில்லை. இரவு கடும் பனியில் வண்டியோட்டி வீட்டுக்கு வந்தேன். நள்ளிரவு தாமதமாய் படுத்தேன். ஆனால் காலையில் சளியின் சுவடு கூட இல்லை.

இப்படியாக தனக்கு வந்த முதல் முக்கிய சவாலை பேலியோ வெற்றிகரமாய் கையாண்டு விட்டது. 

ஒரு பாடிபில்டரை இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்தேன். பதினாறு வருடங்களாய் பயிற்சி செய்து உடம்பை கற்சிலை போல் வைத்திருக்கிறார். ஆனால் பேச்சினிடையே லொக்கு லொக்கு என்று இருமினார். வெளியே என்ன இருக்கிறது என்பதல்ல உள்ளே என்ன போகிறது என்பது தான் நம் உடல்நிலையை தீர்மானிக்கிறது.

 

http://thiruttusavi.blogspot.co.uk/2017/01/blog-post_9.html?m=0

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.