Jump to content

அப்பா.. ஐவர்.. ஆழம்... - நீலவன்


Recommended Posts

அப்பா.. ஐவர்.. ஆழம்... - நீலவன்

 

 
appa aivar1

 

 

அப்பாவின் போக்கு யாருக்கும் பிடிக்கவில்லை. விளங்கினால் தானே பிடிக்கும்?

போனவாரம் ஒருநாள் இரவு பத்துமணிக்குத் திடீரென்று சொல்லிக் கொள்ளாமல் போனவரை இன்னும் காணோம்.

ஆறுமாதங்களில் அப்பா இப்படி ஒரேயடியாய் மாறிப்போய் விட்டார். அதற்கு முன்னால்? அவரது 'டியர்' இருந்தாள்- அம்மா தான்! அவள் கிழித்த கோட்டை அவர் தாண்ட மாட்டார். அவள் போவதற்குப் பத்து தினங்களுக்கு முன்புதான் தன்னுடைய உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றார். வாழ்க்கையில் எது தான் கவனமும், முன்னெச்சரிக்கையும் கலந்த ஒத்திகை போல் நிகழ்கிறது?

அபாண்டமாய்ச் சொல்லக்கூடாது. அப்பா அம்மாவுடன் கூட வாழ்ந்தவரை பச்சைப் பிள்ளையாய்த்தான் அலட்டிக்கொள்ளாமல் இருந்தார். முன்னேற்ற வழிகளில் தீவிரமான ஓர்  அக்கறை அவருக்கு  எப்போதும் இருந்ததாய்க் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.

மாதந்தோறும் கைநிறையக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுப்பார். அவள் தான் ஜவுளி பாக்கி முதல் பால் பாக்கி ஈறாகப் பட்டுவாடா செய்வாள்.

அப்பாவின் ஆபீசில், அவரைப் போன்ற உத்தியோகஸ்தர்களெல்லாம் 'ராஜ்தூத்' அல்லது லாம்பிரட்டா வைத்துக் கொண்டு நல்ல வசதிகளோடு வாழ்கின்றனர். ஆனால் அப்பா? வலது கைக்குத் தெரியாமல் இடது கையில் வாங்கும் கையூட்டா? அந்தத் திசைப்பக்கம் கூடத் தலை திரும்பாது!  அதற்காகத் திணிக்க முன் வரும் வள்ளல்களை விஜிலன்ஸ் ஆபீசுக்கு அறிமுகம்செய்யத் துணியவும் மாட்டார்; பெருந்தன்மைக்காரர்!

சர்வீஸ் முடிந்து பென்ஷன் ஸ்டேஜ் வந்தபோது ஒரு மச்சு வீடும், பாங்கில் பி.எப்., இன்சூரன்ஸு அது இது எல்லாம் சேர்ந்து வந்த பத்தாயிரமும் தான் 'லைஃபின் அர்த்தங்கள்.

குடும்பம்...அதற்கென்ன குறை? குடும்பக்கட்டுப்பாடு கொள்கைக்கு சிவப்புக்கொடி காட்டி விட்டார்! ஒன்றா? இரண்டா? ஐந்து! மூன்று: சிசர்ஸ், டோனி , பீட்டில்ஸ். இரண்டு: குதிரை வால், பாப். ஆனால் இதுகளுக்கெல்லாம் தாயானவள் ஒரு சந்திரமதி நூற்றாண்டு!

அம்மா இருந்தபோது வீட்டுத்தோட்டத்தில் தலைக்கு முண்டாசு, இடையில் ஒரு நைந்த வேஷ்டி சகிதம், கையில் தாங்கிய மண்வெட்டியில் வியர்வை முத்துக்கள் உதிரும்  வண்ணம் கடுமையாக வேலை செய்வார் அப்பா. மாலை ஐந்தரை அல்லது ஆறு மணிக்கு கீர்த்தனைகள், கீதைப்பேருரைகள்,நவீனங்கள், ரேடியோ இத்யாதி இத்யாதி ... அந்தந்த நேரங்களில்; அந்தந்த வேலைகளைத் தவறாமல் செய்து முடிப்பார்... எல்லாம் ஒரு கம்பியூட்டரின் இயக்கங்கள்.

அம்மாவுக்கு மட்டும் ஏன் அப்படிப் பயந்தார்? அப்படி என்ன அவளிடம் ஒரு நடுக்கம்? அந்த அந்தரங்கம் மிகவும் புனிதமானது.

தனது குழந்தைகளைப் பொறுத்தவரை அவர் எப்படி? உடைகளை பிடித்தும் பிடிக்காமலும், பெண்பாலுக்கும் ஆண்பாலுக்கும் மாற்றிக்கொண்டு நாகரீகம் முற்றி விட்ட தோரணையில் உலாவரும் 'அதுகளை' அவர் அதட்டியது உண்டா? ஊஹூம்!

அப்பா பரம சாது. வண்டிக்குதிரைப் பார்வை. 'குழந்தைகள் வளர்ப்புப் புத்தகம்' கருப்பா சிவப்பா? அவருக்கென்ன தெரியும்? ஆபீஸிலும், அக்கம் பக்கத்திலும் அப்பா ஒரு தனி டைப் தான்! இருக்குமிடம் தெரியாது. பெயருக்கென்ன? தேடி வந்து குவிந்தது: 'ராமபத்ரன் (அப்பாதான்) நல்லவர்...'

அப்பாவுக்கு இந்த ஆறு மாதங்களில் என்னநேர்ந்தது? ஒன்றுமே புரியவில்லை. அவர் மீது ஏன் ஐந்தும் நங்கூரங்கள் பாய்ச்சுகின்றன.

மணிக்கணக்கில், நாட்கணக்கில், வாரக்கணக்கில் வீட்டுக்கு வருவதில்லை அவர். அதைத் துல்லியமாய்க் கணக்கிட்டு டைரியில் குறித்துக்கொண்டு அதற்கெல்லாம் கண்ணும் மூக்கும் வைத்துக் கொண்டிருந்தனர் அவர்கள்.

"அம்மா இருந்தால் அப்பா இப்படி ராத்திரி பகலா சுத்துவாரா?"

"குடும்பத் தலைவி இல்லேன்னா குட்டிச் சுவர் தான்--" குதிரை வால் எம்பிக்குதித்தது.

டோனியும், பீட்டில்சும், பாப்பும் தலைக்குத் தலை எகிறிக் கொண்டிருந்தன.  பூனையின் கழுத்தில் யார் மணியைக்காட்டுவது?

குடும்பத்துக்கு ரொம்பவும் வேண்டியவர்கள் கூட அப்பாவைப் பற்றிக் கேட்க அஞ்சினர். ஏன்? அப்படி வாழ்ந்தவர்... பத்தரை மாத்துத் தங்கம்!

கடைசியாக ஐவர் மாநாடு கூடி, முடிவை அறிவித்தது:

கடைக்குட்டி 'பாப்' அப்பா வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகப் பட்டாசு வெடி வெடிப்பதுபோல் பட் பட்டென்று  கேட்டு விட வேண்டும். அதோடு தீர்ந்ததா? வினாக்களுக்கு விடைகளும் சரியாய்க் கிடைக்க வேண்டும். தெருவில் எத்தனை வெறும் வாய்களுக்கு அவலாய் மெல்ல வழியாகி விட்டது?

போனவாரம் ஒருநாள் இரவு போன அப்பா இந்த வாரம் ஒருநாள் இரவிலோ, பகலிலோ வீட்டுக்கு வரத்தானே போகிறார்? அப்போது 'பாப்' தான் என்கொயரி ஆபீசர்.

கெடிலாக் குலுங்கி நின்றது. சோர்வு கவ்வியமுகம். பருமனைச் சற்றுக் குறைத்துக் காட்டும் ஓய்வின்மை. சற்றே ஆடி ஆடி நடந்து முன் அறைக்குள் நுழைந்து 'தொப்' பென்று  கட்டிலின் மீது சாய்ந்தார் அப்பா. கெடிலாக் அவரிடம் விடைபெறாமலே தார்ப்பாதையைத் தேய்த்துக் கொண்டு கிளம்பிற்று.

பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கே 'பாப்'? எங்கே 'பாப்'?

அதோ! நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை.... பாரதி பாடிய புதுமைப்பெண் அறைக்குள் போய் விட்டாள்! பின்னாலேயே சுவரோரமாக மற்ற நான்கும் பம்மிச் சென்றன - ஒட்டுக்கேட்க.

'பாப்' உள்ளேபோய் நின்றதும் கேட்டது:

"அப்பா, என் மீதோ எங்கள் மீதோ நீங்க கோபம் காட்டாக் கூடாது. அம்மா போன பின்னாடி நீங்க ரொம்ப மோசமாயிட்டீங்க. வீடு, வாசல், பிள்ளைங்கன்னு அக்கறையே இல்லாம நாள் கணக்கிலே எங்கேயோ போறீங்க, இருக்கீங்க, வர்றீங்க. நாங்க அஞ்சு பேரும் ஊரார் விமரிசனத்தைக் காது நீட்டிக் கேட்க முடியலே..."

பாடத்தை 'பாப்' உதறலோ பதறலோ இடையில் தலை காட்டவிடாமல் ஒப்பித்து விட்டால். எப்படியோ பூனையின் கழுத்தில் மணியைக் கட்டியாகி விட்டது... விளைவு?

சில கணங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தன. மயானத்தின் அமைதி நிலவியது. மூச்சுப் பேச்சைக்கூட காணோம்?...

அப்பாவின் குரல் இரண்டு நிமிடங்கள் கழித்து தெளிவாகக்கேட்டது.

"அம்மா...சுவரோரம் ஒட்டுக் கேட்கிற பெரியவர்களையும் கொஞ்சம் உள்ளே கூப்பிடம்மா. இத்தனை மாதங்களாக சொல்லப்படாமல் மறைக்கப்பட்டு வந்த விஷயங்களை இப்போது உங்கள் மத்தியில் தேங்காய் உடைத்து விடுகிறேன், உம்...சீக்கிரம் கூப்பிடம்மா."

ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த நான்கும் 'பாப்' வந்து அழைக்கும் முன்னரே அறைக்குள் சென்று, திசைக் கொன்றாய்த் திரும்பி தலை நிமிராமல் நின்றன.

அப்பா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, வியர்க்க வியர்க்க, குழம்பிய முகத்தில் வலிய மகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டு சொன்னார்:

"ஐ ஆம் ஸாரி. உங்கள் அம்மா நம்மை விட்டுப் போய் ஏறத்தாழ ஆறு மாதங்களாகி விட்டன. அவள் இருந்தவரை குடும்பத்தின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஞானம் எனக்கு எப்போதும் உரைத்ததில்லை. அவளது அகால மரணமும், என் ரிடையர்மெண்ட்டும் என் பர்சனாலிட்டியைப் பரீட்சித்தன. முடிவில், போகும் வயதில் நானும் ஒரு பொறுப்பான குடும்பியானேன். நீங்கள்...?" குளத்துத் தாமரை லேசான அலை வீச்சால் அசைவது போல, தலையை அசைத்தபடி அவர் சொல்லிக் கொண்டுபோனார்.

அதுகள் சிலைகள் போல் அவரையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. எதிரே செல்லாத துணியைப் போர்த்தி விட்டது போல் ஓர் ஆழமான உணர்வு.நெஞ்சிலே நெகிழ்ச்சிக் கோடுகள் பாய்வது மாதிரி ஒரு நினைப்பு.

என்னால் இனியும் தொடர்ந்து உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விளக்க முடியாது. இதோ, என் உள்ளக்கிடக்கையின் மறு பிரதி. ஒன்று விடாமல், சிற்பி தன் நினைவில் எப்படிச் செதுக்குவானோ அப்படி நான் எழுதிய டைரி இது. அதைக் கொண்டு போய் கூடத்தில் உட்கார்ந்து ஒருவர் வாசிக்க மற்றவர்கள் எல்லாம் கவனமாகக் கேளுங்கள். அப்போதாவது உங்களுக்கெல்லாம் என் போக்கு புரியும்!"

வெளியே உக்கிரமான வெயில் விளாசிக் கொண்டிருந்தது.

பிள்ளைகளின் முகங்களில் ஈயாடவில்லை. தரையில் குத்தி நிறுத்திய மூங்கில்கள் போல் எல்லாம் விறைத்து நின்றிருந்தன. உணர்வுகளே உறங்கி விட்ட பிண்டங்களாய் மாறி விட்டனவோ?

மூத்தது சிசர்ஸ்! கட்டிலின் தலை மாட்டில் இருந்த கறுப்பு பிளாஸ்டிக் உறையிட்டிருந்த கனத்த டைரியை எடுத்துக் கொண்டு கிளம்பியது.

டைரியில் ...

1969 செப்டம்பர் 23- ந் தேதி :

'என் இனிய வாழ்வு அஸ்தமித்தது. நான் ஓர் உதவாக்கரை. பலவீனங்களின் மொத்தம். குருவி தலையில் பனங்காயை வைத்த விட்டுப் பொய் விட்டால் அவள். எப்படிச் சுமப்பேன்? எங்கே, எப்போது, யார் மூலம் சுமையை இறங்குவேன்?'

செப்டம்பர் 29- ந் தேதி:

'என் நண்பர் பம்பாயில் ஹார்பரில் நல்ல லாபம் வரும் வியாபாரம் ஒன்றைச் செய்கிறார். குறுகிய காலத்திலேயே பெரும் புள்ளியானவர். அவர் கூட என் நிலைக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அக்டோபர் 1-ந் தேதி:

'பம்பாயில் நண்பர் ஒருவர் வரவேற்கிறார். எனக்கு சோதிடத்தில் அபார நம்பிக்கை. மிகப்பிரபலமான ஒரு சோதிட நிபுணரை நான் சந்தித்தேன். என் அந்தராத்மாவையே கலக்கி விட்டார் அவர். என் எதிர்காலத்தைப் படம் பிடித்துக் காண்பித்தார். அந்தத் தேதி என் முன்னே குரோதமான வில்லன் போல் நகைக்கிறது.'

அதே மாதம் 9- ந் தேதி:

'உலகமே புரியாமல் வளர்ந்து விட்ட என் ஐந்து செல்வங்களுக்கு என் மச்சு வீடும், பத்தாயிரமும் எந்த மூளை? பின்னால் பழி யாருக்கு ? உற்றார், உறவினர் பூசல் எத்தனை எழும்? தந்தை மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்...?

23- ந் தேதி:

'வெள்ளம் வரும் அறிகுறி தென்படுகின்றது, அணைக்கான முஸ்தீபு.'

27-ந் தேதி:

'மீண்டும் பம்பாய் பயணம். நண்பரின் வற்புறுத்தல். பிசினஸ் கடைகால்.'

நவம்பர் 8- ம் தேதி:

பாங்கிலுள்ள பத்தாயிரம்..?

11 ந் தேதி

'பணப்பையோடு பம்பாய்... மெட்றாஸ் டு பாம்பே...'

டிசம்பர் 31-ந் தேதி:

'பாம்பே ஸ்டேட் பாங்கில் ஐம்பதாயிரம்.'

1960 ஜனவரி 28-ந் தேதி:

'அஸ்தமனம் வெகு அருகில்.

பிப்ரவரி 28- ந் தேதி :

'மெட்றாஸ் ஸ்டேட் பாங்கில் சரியாய் ஒன்றரை லட்சம் சொச்சம். பூந்ததமல்லிக்கு அருகிலொரு பெரிய சைட். ஒவ்வொரு செல்வமும் ஒவ்வொரு பங்களா கட்டிக்கொள்ள வசதியானது.'

மார்ச் 3-ந் தேதி:

'மெட்றாஸ் டு பாம்பே- இது லாஸ்ட் டிரிப். நண்பன் வெகு குஷி’யாய் என்னோடு இருந்தான். சோதிடரை அன்றுநான் கன்சல்ட் செய்த போது அவன் அங்கு இல்லையே?'

7 ந் தேதி:

'வீட்டுச் சாமான்கள். இதுவரை என் நண்பனிடம் பாதுகாத்து வைக்கப்பட்டவை. இரண்டு லாரிகளில் மெட்றாஸ்க்கு- என் பெரிய பையன் பெயருக்கு- புக் பண்ணினான்நண்பன். கடைசியாக விடைபெற்றேன் அவனிடமிருந்து.'

இன்று 11 ந் தேதி:

'1969 அக்டொபர்  1-ந் தேதி ஞாபகம் வருகிறது. நான் சந்தித்த சோதிட நிபுணர்.. அவர் போட்டுக்காட்டிய என் வாழ்க்கைப் பாடம்... மீனம்பாக்கத்திலிருந்து இதோ காரில்...'

அதோ என் டியர்! 'அவள் 'என்னையும் தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்ள அழைக்கிறாள். நான் என் செல்வங்களுக்குச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து விட்டேன்; மற்ற ஏற்பாடுகளைப் பணம் செய்யும்; கடவுள் செய்வார் நானும் அவளும் அந்த வான வெளி மேகங்களிடையே தலையை நீட்டி நீட்டி எல்லாவற்றையும் பார்ப்போம். இதோ... சோதிடர் சொன்ன கண்டம்...மார்பை அடைக்கிறதே...

டைரியின் சிலபக்கங்களில் முற்றுப் பெறாத மார்ச் 11-ம் தேதி.

"ஐயோ அப்பா..! எங்களை மன்னித்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்!" என்று ஏக காலத்தில் வீடே இடிந்து விழுவது போல் கத்திக் கொண்டு அறைக்குள் ஐவரும் நுழைந்த போது---

வாயிலிருந்து வழியும் வெண்மையான நுரை, பாதி திறந்தும் திறவாத நிலையில் செருகிய கண்கள், வெளுத்துப்போன முகம்,சாம்பிய உடல், விறைத்து விட்ட நிலையில் இருந்தார் அப்பா. அம்மா அழைத்துக் கொண்டு விட்டாளோ...?

பஞ்சங்கள்...?

நல்ல பெயர்தான் அவர்களுக்கு! ஓவென்றுகதறி விழுந்து புரண்டு அழுதனர் அவர்கள். தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்தும், தன் செல்வங்களிடம் சொன்னால் வருத்தப்படுவார்கள் என்று சொல்லாமலே இருந்த அவ்வளவு அருமையான அப்பாவையே ஆழம் பார்த்தவர்களா அவர்கள்?

 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அருமையான தந்தை ..... கடலில் மீன் அழுதால் யாருக்குத் தெரியும்....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.