Jump to content

மும்பை தாக்குதல், சச்சின் சதம், இந்தியா வெற்றி... சென்னை டெஸ்ட் நினைவலைகள்!


Recommended Posts

மும்பை தாக்குதல், சச்சின் சதம், இந்தியா வெற்றி... சென்னை டெஸ்ட் நினைவலைகள்!

சச்சின்

சென்னையில் நடக்கும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் ஏதோ ஒரு வகையில் ஹிட் அடிக்கும். ஏற்கனவே இந்தியா 3-0 என டெஸ்ட் தொடரை வென்று விட்டது. வர்தா புயல் ஓய்ந்தாலும், மழை அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட், திட்டமிட்டபடி 16ம் தேதி தொடங்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் டெஸ்ட் ரசிகர்கள்.

இரு அணிகளும் கடைசியாக 2008 ல் சென்னை சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. சச்சின் சதம், சேவாக் சரவெடி, நான்காவது இன்னிங்சில் பரபர சேஸ், யுவராஜ் சிங் டெஸ்ட் வீரராக அறியப்பட்டது என பல நினைவுகளைத் தந்தது அந்த டெஸ்ட். எல்லாவற்றையும் விட மும்பை தாக்குதல் முடிந்த ஒரு வாரத்தில், இந்த டெஸ்ட் நடந்ததால் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. 

மும்பை தாக்குதலுக்குப் பின் தங்கள் நாட்டுக்குச் சென்ற இங்கிலாந்து அணி மீண்டும் இந்தியா திரும்பி டெஸ்ட தொடரில் பங்கேற்றதும், சச்சின் தன் சதத்தை பலியானவர்களுக்கு அர்ப்பணித்து பேசியதும் மறக்க முடியாதவை. அந்த டெஸ்ட் குறித்த ரிவைண்ட்.

chennai_test_2008_%286%29_16571.jpg

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 123 ரன்கள் அடித்து உதவ, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 316 ரன்களில் ஆல் அவுட். அமித் மிஸ்ரா, ஹர்பஜன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆடுகளம் சுழலுக்கு சாதகம் என்பதை உணர்த்தினர். இந்தியா தரப்பில் யாரும் சதம் அடிக்கவில்லை. முதல் இன்னிங்சில் 241 ரன்னில் ஆல் அவுட். இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்தார் ஸ்ட்ராஸ் (108). அவருக்கு பக்க பலமாக காலிங்வுட் 108 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 311 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 387 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டெஸ்ட் அரங்கில் நான்காவது இன்னிங்சில் 387 ரன் சேஸ் செய்வது என்பது குதிரைக் கொம்பு என்பதால், இங்கிலாந்து நம்பிக்கையுடன் இருந்தது. டெஸ்ட், ஒன்டே, 20-20 என எந்த ஃபார்மட் என்றாலும், ஒரே மாதிரி விளையாடும் சேவாக், முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் அடுத்தடுத்து பாயின்ட் திசையில் இரண்டு பவுண்டரிகளைப் பறக்க விட்டபோது ‛ஜஸ்ட் ஸ்டேண்டிங் அண்ட் டெலிவரிங்’ என வர்ணனையாளர்கள் ஆர்ப்பரித்தனர். அதே சூட்டோடு ஆடிய  சேவாக் 19 ரன்கள் அடித்திருந்தபோது கேட்ச் கொடுத்தார். பாயின்ட் திசையில் இருந்த குக் அதை தவற விட்டார். அதேபோல, பீட்டர்சன் ஒரு ரன் அவுட் சான்ஸை மிஸ் செய்ய, அதில் இருந்து தப்பிய சேவாக் தன் போக்கில் அரைசதம் அடித்தார். எதைப் பற்றியும் கவலைப்படாது மான்டி பனேசர் பந்துகளை சிக்ஸருக்கு பறக்க விட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 83 ரன்கள் (68 பந்து) எடுத்திருந்தபோது எல்பிடபிள்யு ஆனார். 

chennai_test_2008_%285%29_16254.jpg

நான்காம் நாள் முடிவில் இந்தியா 131 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. மறுநாள் கெளதம் கம்பீர் 66,  டிராவிட் 4, லட்சுமண் 26 ரன்களில் ஆட்டமிழக்க, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தோளில் சுமை. ஐந்தாவது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்திருந்தார் யுவராஜ் சிங். யுவி தன்னை ஒரு டெஸ்ட் வீரனாக நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.  வழக்கம் போல தன் ஸ்டைலில் மான்டி பனேசர் வீசிய பந்தை மிட் விக்கெட், லாங் ஆன் திசைக்கு இடையே தூக்கி அடிக்க எதிர்முனையில் இருந்த சச்சின், யுவி காதைக் கடித்தார். 

‛இதுபோன்ற ஆடுகளங்களில் நீ ஆட்டமிழந்து விட்டால், அடுத்து வருபவர் இந்த பிட்சை புரிந்து ஆட சிறிது நேரம் ஆகும். பந்தும் பழசாகி விடும். அடுத்தடுத்து விக்கெட் சரியும். நாம் இருவரும் கடைசி வரை நின்று இந்த ஸ்கோரை சேஸ் செய்ய  வேண்டும். புரியுதா...’ என, சச்சின் கட்டளையிட, அதன்பின் லூசுத்தனமாக யுவி எந்த ஷாட்டும் அடிக்கவில்லை. கடைசி வரை இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியவில்லை. ஒரு வழியாக யுவி - சச்சின் ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 163 ரன்கள் அடிக்க, இலக்கை சேஸ் செய்து, வெற்றிபெற்றது இந்தியா. இந்த போட்டிக்குப் பின் யுவராஜை ஒரு டெஸ்ட் வீரராக அங்கீகரித்தது கிரிக்கெட் உலகம்.

அதை சச்சின் வார்த்தைகளில் சொன்னால், ‛‛யுவராஜ் டெஸ்ட் வீரரா இல்லையா என மக்கள் தேவையில்லாத அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.  அவர் அசாதாரணமான வீரர். முக்கியமான நேரத்தில் ரன் குவித்துள்ளார். மூன்று சதங்கள் அடித்துள்ளார். இதைவிட வேறென்ன வேண்டும். ஒவ்வொருவருக்கும் இக்கட்டான தருணம் வரும். அதற்காக அவர் டெஸ்ட் பிளேயர் இல்லை என்றாகி விடாது. அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் இந்த இன்னிங்சை பார்த்த பின் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வர் என நம்புகிறேன்’’ என்றார். அதை ஆமோதித்த யுவராஜ் ‛என் கனவு நனவாகி விட்டது. ஆம், டெண்டுல்கருடன் இணைந்து நாட்டுக்காக ஒரு டெஸ்ட் மேட்ச்சில் வெற்றி தேடித் தந்து விட்டேன்’’ என்றார். 


சச்சின் இன்னிங்ஸ்...

chennai_test_2008_%288%29_16035.jpg

இந்த வெற்றிக்கான விதை சச்சின் தூவியது. எந்த இடத்திலும் நிதானம் இழக்காது, பொறுமையாக அவர் அடித்த இந்த சதம், அவரது சதங்களில் பெஸ்ட் எனலாம். சச்சின் அந்த போட்டிக்கு முன்புவரை நான்காவது இன்னிங்சில் இரண்டு முறை சதம் அடித்திருந்தார். இரண்டு முறையும் இந்தியாதோல்வி. குறிப்பாக, சென்னையில் 1997 ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த சதம் (136) வீணானது. இந்த முறை அப்படி எதுவும் நடக்கவில்லை. முதல் முறையாக, நான்காவது இன்னிங்சில் தான் அடித்த சதம், இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்ததில் சச்சினுக்கு மகிழ்ச்சியே.  ‛‛இரண்டாவது இன்னிங்சில் நான் சதம் அடித்திருக்கிறேன்.  ஆனால், இந்த முறை சதம் அடித்ததும், வின்னிங் ஷாட் அடித்து வெற்றி பெற்றதும் ரொம்பவே ஸ்பெஷல். இதைத்தான் நீண்ட நாட்களாக நிறைவேற்ற நினைத்தேன்’’ என்றார் சச்சின். 

தான் ஆட்டமானால், ஆட்டத்தின் போக்கே மாறி விடும் எனத் தெரிந்து ஒவ்வொரு பந்தையும் கவனமாக எதிர்கொண்டார் சச்சின். ஒரு ஷாட் கூட ஏனாதானோவென்று இல்லை. ஒருமுறை கூட இங்கிலாந்துக்கு சான்ஸ் கொடுக்கவில்லை. அதையேதான் வர்ணனையாளர் சிவராமகிருஷ்ணனும் சொன்னார். ‛இந்த இன்னிங்சில் சச்சின் தவறேதும் செய்யவில்லை’என்று. 

ஒரு கட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவது உறுதி என்றாகி விட்டது. ஆனால் சச்சின் 99 ரன்களில் இருந்தார். எதிர்முனையில் இருந்த யுவராஜ் சிங், ரன் எடுக்காமல் சச்சினுக்கு ஸ்ட்ரைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். கடைசியாக, ஃபைன் லெக் திசையில் பந்தைத் தட்டி விட்டு, தன் 41வது சதத்தை எட்டினார் சச்சின். இந்தியாவும் வெற்றி. இதற்கு காரணகர்த்தாவான  சச்சினை கிரவுண்ட் மேனில் இருந்து பெண்கள்  வரை மைதானத்துக்குள் ஊடுருவி, கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். 


மும்பை மக்களுக்கு அர்ப்பணம்: 

chennai_test_2008_%281%29_16245.jpg

வெற்றிக்குப் பின் சச்சின் , இந்த வெற்றியை மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். ‛‛இது வெறுமன மும்பை மீதான தாக்குதல் என்று கருதவில்லை. இந்தியாவின் மீதான தாக்குதல். இதனால் மும்பை மட்டுமல்லாது ஒவ்வொரு இந்தியனும் பாதிக்கப்பட்டுள்ளான். என் மகள் உடன் படிப்பவர்கள் சிலர் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.   இந்த தாக்குதலின் வலியை நான் அறிவேன்.  இந்த கோர தாக்குதலில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இந்த வெற்றியால் மும்பை தாக்குதலை மறந்து விட முடியும் என்று சொல்லவில்லை. மாறாக, மக்கள் முகத்தில் புன்னகை வர இந்த வெற்றி காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். மீண்டும் இந்தியா வந்து இந்த தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியினருக்கு நன்றி. சென்னை மக்கள் நல்லதொரு கிரிக்கெட்டை பார்த்துள்ளனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தவர்களுக்கும் நன்றி’’ என்றார் சச்சின்.

http://www.vikatan.com/news/sports/74945-india-vs-england-chennai-test-2008-memories.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.