Jump to content

கருப்புப் பணம் = ரஜினி – ஷங்கர் – ஜெயமோகன் – லைக்கா சிறப்புத் தொடர் பாகம் 1


Recommended Posts

“ஒரு திருடன் உங்களை முத்தமிட்ட பிறகு பற்களை எண்ணிக் கொள்ளுங்கள்; ஒரு திருடனின் எழுத்தை படித்த பிறகு உங்களின் விழுமியங்களை சரி பாருங்கள்!”.
– புது மொழி

  • 2.0 முதல் பார்வை – கருப்பின் வெள்ளை அழகு

Lyca Jayamohan 2.0 - 10

எந்திரனுக்கு சன் குழுமத்தின் கலாநிதி மாறன் சுமார் 130 கோடி ரூபாய் செலவழித்தார். இரண்டாவது பாகத்திற்கு இலண்டன் வாழ் லைக்கா மொபைலின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா சுமார் 350 கோடி ரூபாயை செலவழிக்கிறார்.

காலம் நவம்பர் 20, 2016. இடம் மும்பை புறநகரில் இருக்கும் யாஷ் ராஜ் ஸ்டூடியோ. அலைஅலையான விசில்கள், விளிப்புகளுடன் ரசிகர்கள். தமிழகத்திலிருந்தும், தாரவியிலிருந்தும் தர்ம சேவையாக அவர்கள் அழைத்து வரப்பட்டிருக்கலாம். அலைக்கு அணை போட்டுக் கொண்டிருந்தார்கள் பவுன்சர்கள்.

மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பால் தேசமே அலைந்து திரிந்து கொண்டிருந்த போது அங்கே ஒரு பெரும் கூட்டம் எப்போது சொர்க்க வாசல் திறக்குமென்று அலை பாய்ந்து கொண்டிருந்தது. பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் கிடைத்தற்கரிய அந்த தருணத்தை தவறவிடாமல் பதிவு செய்வதற்காக காத்திருந்தனர். ஆம். அது 2.0 எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வு.

ஷங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரனின் இரண்டாவது பாகம் 2017 தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இது 2.0 என்ற பெயரில் அழைக்கப்படும் அத்திரைப்படத்தின் முதல் பார்வை விழா. எந்திரனுக்கு சன் குழுமத்தின் கலாநிதி மாறன் சுமார் 130 கோடி ரூபாய் செலவழித்தார். இரண்டாவது பாகத்திற்கு இலண்டன் வாழ் லைக்கா மொபைலின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா சுமார் 350 கோடி ரூபாயை செலவழிக்கிறார்.

Lyca Jayamohan 2.0 - 1

மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பால் தேசமே அலைந்து திரிந்து கொண்டிருந்த போது அங்கே ஒரு பெரும் கூட்டம் எப்போது சொர்க்க வாசல் திறக்குமென்று அலை பாய்ந்து கொண்டிருந்தது.

எந்திரனில் எழுந்த ரோபாவான சிட்டி, இரண்டாவது பாகத்தில் இன்னும் அதிக வீரியத்துடன் செதுக்கப்பட்டு ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்தி நடிகர் அக்ஷய் குமாருடன் 3 டி படமாக வெளிவருகிறது. முதல் பாகத்தின் இரு பரிமாணத்தை விட இரண்டாம் பாகத்தின் முப்பரிமாணம் தரத்திலும், செலவிலும், நுட்பத்திலும் பிரம்மாண்டமாகத்தான் இருந்தாக வேண்டும். அதிகம் குவிந்திருப்பதால் மட்டுமே பணம் தனது பளபளப்பை பராமரிக்க இயலாது. மேலும் மேலும் தன்னைப் பெருக்கிக் கொள்வதே நிதிக்கலையால் மிளிரும் பணத்தின் ஆகச்சிறந்த அழகு.

முதல் பாகத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சிரமம் இருந்தது என்றால் இரண்டாம் பாகத்தில் தோளில் எவரெஸ்ட் சிகரத்தை சுமந்து கொண்டு உச்சியில் ஏறும் மீப்பெரும் சிரமமும் பொறுப்பும் இருப்பதாக இயக்குநர் ஷங்கர் விழாவில் தெரிவித்தார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் பாமரருக்கு விருப்பப்பட்டு பாரம் சுமக்கும் திரைக்கலைஞனின் வலி தெரியாதாம்.SHANKAR

இந்தி எந்திரனான ரோபோவின் முன்னோட்ட விழாவும் இதே மும்பையில்தான் நடந்தது. இரண்டு பாகங்களும் இந்தியாவின் வணிக தலைநகரமான மும்பையில் மட்டுமே அறிமுகப்படுத்தும் அருகதை கொண்டவை.

விழா விருந்தினர்களை பாதுகாத்து அழைத்துச் செல்வதை விஸ்கிராப்ட் விழா மேலாண்மை நிறுவன ஊழியர்களும், பவுன்சர்களும் ஒய்யாரமான மிடுக்குடன் செய்கின்றனர். அரங்கினுள்ளே மூன்று பெரிய திரைகளில்  கணினியின் பைனரி மொழி மினுமினுக்கிறது. 2.0 விழா ஏற்பாடுகளுக்கான செலவிலேயே ஒரு டஜன் படங்களை தயாரித்து விடலாம் என்கின்றார்கள், ஆங்கில ஊடக சினிமா பத்திரிகையாளர்கள்.

பாலிவுட்டின் இயக்குநர் – தயாரிப்பாளர் கரண் ஜோகர் அனைவரையும் அறிமுகப்படுத்துகிறார். இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத நாள் என்கிறார்.  இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ரஹ்மான், கலை இயக்குநர் முத்துராஜ், இந்தி உரையாடலை எழுதிய அப்பாஸ் டயர்வாலா, படத்தொகுப்பாளர் ஆண்டனி, புகைப்படக் கலைஞர் நீரவ் ஷா, கண்கட்டும் சிறப்புக் காட்சி மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாச மோகன், பாடலாசிரியர் மதன் கார்கி, ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, நடிகர்கள் ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் அனைவரும் மேடை ஏறுகின்றனர். ஒருவர் மட்டும் கொஞ்சம் வெட்கத்துடன் இடது வரிசையில் நிற்கிறார். அவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவர்தான் 2.0-வின் தமிழ் வசனகர்த்தா. இன்னொருவரும் படக்குழுவின் ஓரத்தில் பணிவுடன் நிற்கிறார். குறுந்தாடியுடன் புன்னகை தவிர வேறு பாவனை அறியாத முகத்துக்குச் சொந்தக்காரரான அவர் லைக்கா மொபைல் அதிபர் சுபாஷ் கரண்.

Lyca Jayamohan 2.0 - 2

ஜெயமோகன் முகத்தில் அந்த முரண்பாடு தத்தளிக்கிறது.

அரங்கின் வெளியே ஆஜானுபாக மும்பை மாடல் ரூபாலி சூரி படக்குழுவினரை அறிமுகம் செய்து பேசுகிறார். அவரை அண்ணாந்து பார்த்து பேசும் தமிழக படக்குழுவினரில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது ஆளுமையை தெரிவிப்பதற்கு சிரமப்படுகிறார். ஒய்யாரமான சூழலில் அவரது உடைந்த ஆங்கிலம் எதைப் பேசுவது, எதைத் தவிர்ப்பது என்று தடுமாறுகிறது. பெருந்தொகையே ஊதியமாக வழங்கப்பட்டிருந்தாலும் படைப்புக் களத்தின் வழி தனது ஆகிருதியை காட்டும் பூரண நிறைவு இங்கில்லை. அதே நேரம் உலகை விட்டும் போக இயலாது. ஜெயமோகன் முகத்தில் அந்த முரண்பாடு தத்தளிக்கிறது.

மும்பை பெண்ணிடம் சொதப்பினாலும் மும்பை இயக்குநரிடம் வரலாற்று சிறப்பு மிக்க திரைப்படத்தில் பங்கேற்பதை பெருமை அடைகிறேன் என்று தொண்டைக்குள் இருந்து வெளியேற்றிவிட்டார். கூடவே தான் எழுத்தாளர்தான், சிறந்த பேச்சாளர் இல்லை என்றார். தயாரிப்பாளர் சுபாஷ்கரண் பெருந்தொகையை இந்த படத்தில் கொட்டியிருந்தாலும் எப்படி அவரால் சிரிக்க முடிகிறது என்று கரண் ஜோகர் கேட்கிறார். கதை பிடித்திருந்தது, இயக்குநருக்கு ஓகே சொல்லிவிட்டேன், வெறொன்றுமில்லை என்கிறார் சுபாஷ்கரண். இப்படி ஒரு தயாரிப்பாளரா என்று வியக்கிறார் கரண் ஜோஹர்.

Lyca Jayamohan 2.0 - 5

கருப்புப் பணத்தை விளக்கி படமெடுக்க கருப்புப் பணமும் தேவைப்படாதா? மேடையில் கரண் ஜோகருடன் லைக்கா சுபாஷ்கரன் மற்றும் அவரது குழுவினர்.

முதல் பாகமான எந்திரனின் அறிமுக விழா 2010-ம் ஆண்டில் நடந்த போது இருந்த நகைச்சுவையும், ஊடகங்களை அருகில் அனுமதித்த பாங்கும் இப்போது இல்லை என்று வருத்தப்படுகிறது scroll ஸ்க்ரால் எனும் ஆங்கில ஊடகம். படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் நிதியுலக மாந்தர்கள்தான் அருகில் அமர வைக்கப்பட்டனர் என்றும் அந்த ஊடகம் கூறுகிறது. என்ன இருந்தாதலும் பட்ஜெட் இரண்டு மடங்காகும் போது வர்த்தக பிதாமகர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதை தவறென்று சொல்ல முடியாது. சொல்லப் போனால் ஊடகங்களின் வர்த்தகமே சினிமாக் கடவுளை நம்பித்தானே?

எந்திரனில் வில்லனாக வந்த ரோபோ சிட்டி அரங்கின் முன்னிருக்கையில் ஹோலோ கிராம் வடிவில் அமர்ந்து கொண்டு கரண் ஜோகருக்கு பதிலளிக்கிறது. அதிலொரு கேள்வி “பணமதிப்பிழக்கம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?” உடனே சிட்டிக்கு குரல் கொடுத்த ரஜினி “சிவாஜி”யிலேயே கருப்புப் பணத்தை சூறையாடிவிட்டேன் என்கிறார்.

GROUPஆம். கருப்புப் பணம். நஞ்சை முறியடிக்க நஞ்சிலிருந்துதான் மருந்து தயாரிக்க முடியும் என்றால் கருப்புப் பணத்தை விளக்கி படமெடுக்க கருப்புப் பணமும் தேவைப்படாதா?

  • கருப்பின் களிப்பில் கருப்புப் பண ஒழிப்பு எப்படி ? ஜெயமோகன் விளக்கம்

“ஆமாம், பணம் ஒரு போதும் மகிழ்ச்சியை சம்பாதிக்காதுதான். ஆனால் ஒரு மிதி வண்டியில் இருந்து கொண்டு அழுவதை விட ஒரு பி.எம்.டபிள்யூ காரில் அழுவது வசதியானது அல்லவா?” – புது மொழி

அதே நவம்பர் 20-ம் தேதி. மும்பையில் ஏதோ ஒரு நட்சத்திர விடுதியில் தங்கயிருக்கும் போது எழுத்தாளர் ஜெயமோகன் “மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்” என்ற கட்டுரையை அவரது தளத்தில் வெளியிடுகிறார்.

இந்தக் கட்டுரையில் அவர் கருப்புப் பணம் குறித்து பொருளாதார அறிஞர்களே திடுக்கிடும் வண்ணம் பல கருத்துக்களை தெரிவிக்கிறார். கருப்புப் பணம் பெருகாமல் நிலம், தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யப்படும். அதற்கும் வழியற்ற போது பதுங்கி விடும். கள்ளப்பணத்தை பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவில் இறக்கிவிடுவது குறித்தும் அவர் எச்சரிக்கிறார்.

சிறு வணிகர்களும், சிறு தொழிலதிபர்களும் வரி கட்டாமல் ஏய்ப்பது குறித்து கண்டிக்கும் ஜெயமோகன், இவர்களே இந்தியாவின் வரி வருமானத்தை சூறையாடும் கொள்ளையர்கள் என்கிறார். இவர்களே மோடியின் அறிவிப்பை எதிர்த்து பெருங்கூச்சிலிடுவதாகவும், இவர்களுக்காகவே ஊடகங்களும், அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் பேசுவதோடு நீலிக் கண்ணீரும் விடுகிறார்கள், இது ஆகப்பெரும் கேவலமில்லையா என்று அறம் பாடுகிறார்.

உள்ளூர் கருப்புப் பணத்தின் மிகச்சிறு பகுதியே வெளிநாட்டுக் கருப்புப் பணமாக சென்று அதுதான் ஹவாலாவாக இங்கு திரும்புகிறதாம். வெளிநாட்டு கருப்பு மீட்கும் வரை உள்நாட்டில் கருப்பை மீட்க கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? ஆவேசத்துடன் கேட்கிறார் ஜெயமோகன்.

Jeyamohan-1வங்கி, ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க முடியவில்லை என்று ஊடகங்கள்தான் குழப்புகின்றன என்பவர் ஆதாரமாக மும்பையில் இரண்டு நாட்களில் அவரும், சென்னையில் அவர் மகனும் எந்த பிரச்சினையுமின்றி பணம் எடுத்த கதையை சொல்கிறார்.

ஸ்க்ரோல் எனும் இணைய மஞ்சள் பத்திரிகை மக்கள் கூட்டம் கூட்டமாய் சாவதாக எழுதுவதை சபிக்கிறார். வங்கி வரிசையில் மாரடைப்பால் இறந்து போனால் அது அரசின் படுகொலையாகுமா என்று  கேட்கிறார். ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்தால் அந்த ஆஸ்பத்திரி மேல் நடவடிக்கை எடுக்காமல் மோடி கொலைகாரர் என்று பழிசுமத்துவது ஏன் என்கிறார்.

இன்னும் பல அவர் எழுதியிருக்கிறார். நுண்ணுணர்வு இல்லாதவர்களும் ஜெயமோகனது அகக்கிடக்கையை அறிந்து கொள்வதற்கு இதுவே போதுமானது. இவையெல்லாம் அவர் போகிற போக்கில் எழுதிவிடவில்லை.

இது குறித்து பல்வேறு தொழிலதிபர்களிடம் பேசிவிட்டே எழுதுகிறேன் என்கிறார். யார் அந்த தொழிலதிபர்கள்? விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வீற்றிருக்கும் கோவை திருத்தலத்தில் ஆட்சி செய்யும் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் குழுமம் முதலான அதிபர்களா? கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்யிக்கு அலைய வேண்டிய அவசியம் அவருக்கு ஒருபோதுமில்லை. அந்த அதிபர் சாட்சாத் லைக்கா மொபைலின் சுபாஷ்கரண் அல்லிராஜாவாகவே இருக்கலாம்.

JAYAMOHANமெதுவாக செயல்படும் குறைபாடுள்ள ஒரு பெண் வங்கி ஊழியரைப் பார்த்து கொதிக்கச் செய்த அவரது நுண்ணுணர்வு உலகின் வேகமாக வளர்ந்து வரும் ஒரு கார்ப்பரேட் அதிபரின் புன்னகையையும் அந்நகையை சம்பாதிப்பதற்கு அவர் கடந்து வந்த வலிகளையும் பார்த்த மாத்திரத்திலேயே தரிசித்திருக்கலாம். உலகமெங்கும் ஆட்சி செய்யும் மூலதனத்தின் மேன்மைகளை ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு புரியும் விதத்தில் விளக்குவது சுபாஷ்கரணுக்கு கடினமான ஒன்றல்ல. மேற்குலகில் அகதியாகச் சென்று குடியுரிமை பெற்று இங்கிலாந்தின் பணக்கார வரிசையில் இடம் பிடிப்பதும் எளிதான ஒன்றல்ல.

தொலைத்தொடர்புத் துறையிலே பெரும் ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் மேற்குலகில் ஒரு ஈழத்தமிழன் சாதித்திருக்கிறான். அந்த சாதனையின் வரலாறு என்ன?

  • சுபாஷ்கரன் அல்லிராஜா – ஒரு தொழிலதிபர் சினிமா எடுக்கிறார்!

சுபாஷ்கரன் அல்லிராஜா 1972-ம் ஆண்டில் பிறந்தார். பிரிட்டனின் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபராக அறியப்படும் இவர் 2006-ம் ஆண்டில் ஆரம்பித்த லைக்கா மொபைல் நிறுவனம் இன்று 21 நாடுகளில் சுமார் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களுடன் செயல்படுகிறது. வடக்கு இலங்கை முல்லைத்தீவில்தான் சுபாஷ்கரன் வளர்ந்தார்.

சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இவரது “லைக்கா தயாரிப்பு நிறுவனம்” திரைப்படங்களை தயாரிக்கிறது. கத்தி திரைப்படத்தை 2014-ல் வெளியிட்டவர்கள் தற்போது 2.0 படத்தை அதாவது இந்தியாவிலேயே அதிக செலவு பிடிக்கும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.

subashkaran 1

தொலைத்தொடர்பு எமது தொழில், திரைப்படம் தயாரிப்பது எமது ஆசை – சுபாஷ் அல்லி ராஜா

லைக்கா நிறுவனத்தின் திரைப்பட சாதனையை வியந்து கூறும் தி இந்து ஆங்கிலப் பத்திரிக்கை அவரது சொத்து மதிப்பை ஒரு பில்லியன் யூரோ, கிட்டத்தட்ட 7,20,000 கோடி ரூபாய் என்று கூறுகிறது (ஐரோப்பிய ஊடகங்கள் 1.5 பில்லியன் யூரோ என்கின்றன). இது அவரது நிறுவனத்தின் மதிப்பு என்றால் அவரது தனிப்பட்ட “பாக்கெட் மணி” சொத்தின் மதிப்பு 1,500 கோடி ரூபாயாகும். ஒரு மாத வாழ்க்கைச் செலவுகளுக்காக இரண்டு வேலைகள் செய்யும் ஈழ அகதிகள் வாழும் இங்கிலாந்து மண்ணில் தனது துணைவியோடு சிக்வெல், எஸ்ஸெக்சில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான மாளிகையில் வசிக்கிறார். 2011 அக்டோபருக்குள் லைக்கா நிறுவனம் 250 இடைத்தர சந்தை நிறுவனங்களில் 35-ஆவது இடத்தை பிடித்திருப்பதாக தி சண்டே டைம்ஸ் தெரிவிக்கிறது.

இன்று 44 வயதாகும் அவர் லைக்கா மொபைல் நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் இருக்கிறார். பிரிட்டனில் அவர் 640-ஆவது பணக்காரராக பட்டியலிடப்பட்டு வாழ்கிறார். பிரிட்டனில் இருக்கும் ஆசிய தொழில் முனைவோர் சாதனையாளராக அவர் 2010-ல் கௌரவிக்கப்பட்டு தங்க விருதை பெற்றார். இதே போன்று வேறு சில விருதுகளையும் தொழில் கூறும் ஐக்கிய ராஜ்ஜியம் (united kingdom) எனப்படும் இங்கிலாந்தின் நல்லுலகம் அவருக்கு அளித்திருக்கின்றது.

இலங்கை நாட்களில் அவர் எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி பட ரசிகராக வளர்ந்ததை தி இந்துவின் நேர்காணலில் கூறுகிறார். தொலைத்தொடர்பு எமது தொழில், திரைப்படம் தயாரிப்பது எமது ஆசை என்கிறார். இலங்கை தமிழர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ரசிகர்கள் என்கிறார். இது என்னமோ உண்மைதான். விடுதலைப் புலிகள் முதல் பாமர மக்கள் வரை ஈழம் முழவதும் தமிழ் சினிமாவைக் கொண்டாடுகிறது. புலிகள் செயல்பட்ட காலத்தில் அவர்களது ஆதரவாக ஐரோப்பாவில் இருந்து வெளிவந்த ஈழ முரசு பத்திரிகையில் தமிழ்ப்படங்கள் வெளியாகும் விளம்பரங்களை சாதராணமாகக் காணலாம். இந்த படங்களை புலிகளே விநியோகஸ்தராக வெளியிட்டிருக்கின்றனர். சீமானைப் போன்றவர்கள் கூட திரைப்படத்துறையில் இல்லாதிருந்தால் இவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்காது.

Chairman of Lycamobile Subaskaran Allirajah, pictured in Canary Wharf, London

ஒரு படத்திற்கு தங்களது ஆண்டு ஒதுக்கீடான 1000 கோடி ரூபாயையும் தேவைப்பட்டால் ஒதுக்குவொம் என்று சாதாரணமாகக் கூறுகிறார்.

தி இந்துவின் நேர்காணல் நடக்கும் போது அவர் எந்திரன் 2.0-வில் ரஜினி நடிப்பதால் அவரை சந்திக்க சென்னை வந்திருந்தார். ஒரு கார்ப்பரேட் முதலாளி என்பதைத் தாண்டி அவருக்கு ரஜினி சந்திப்பு நிச்சயம் ஒரு பக்தன் கடவுளைப் பார்த்த பரவசத்தை கொடுத்திருக்கும். ரஜினியோ இயக்குநர் ஷங்கர் போட்டிருக்கும் மீப்பெரும் பட்ஜெட்டின் தயாரிப்பாளரை காலைப்பிடித்து வணங்கும் மனநிலையில் இருந்திருப்பார். அவ்வகையில் இது இரு பெரும் கடவுளர்களின் சந்திப்பாக இருந்திருக்கும். பரபஸ்பர ஆதாயம்.

“இந்திய அரசாங்கம் தொலைத்தொடர்பில் தாராளமயாக்கத்தை முற்றிலும் கொண்டு வருவதற்காக காத்திருப்பதாகவும், செல்பேசி மெய்நிகர் வலைப்பின்னல் Mobile phone Virtual Network இன்னமும் இந்தியாவில் ஆரம்பிக்கப்படவில்லை என்பதால் நாங்கள் இந்திய சந்தையில் கண்டிப்பாக நுழைவோம்” என்கிறார் அவர். இந்தியச் சந்தை யாரை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பெரியது என்பதால் போட்டியெல்லாம் பிரச்சினையில்லை என்கிறார்.

எந்திரன் 2.0-வில் அவர் 350 கோடி ரூபாயை எப்படி துணிந்து முதலீடு செய்கிறார்? இயக்குநரால் வழிநடத்தப்படும் படங்களையே எடுக்க விரும்புவதாக கூறும் சுபாஷ்கரன், ஒருசரியான திட்டத்தை கொண்டிருக்கும் ஒரு படத்திற்கு தங்களது ஆண்டு ஒதுக்கீடான 1000 கோடி ரூபாயையும் தேவைப்பட்டால் ஒதுக்குவொம் என்று சாதாரணமாகக் கூறுகிறார். இந்த முதலீடு தமிழ் – இந்திய சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்லுமாம். எனில் அடுத்த படம் கமலா? தமிழத் திரைப்படத்துறையில் ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது என்றால் இந்நேரம் நமது சினிமா மாந்தர்களின் ஃபேஸ்புக் – டவிட்டர் வலைப்பக்கத்தில் நாளுக்கொரு லைக்கா சுபாஷ்கரண் செய்தி வருவது உறுதி. அவ்விதம் லைக்காக்காவிற்கு இலட்சக்கணக்கான ரசிகர் லைக்கும் நிச்சயம்.

Kathi-1கத்தி திரைப்படத்திறகு வந்த எதிர்ப்புகள்  பிழையான தகவல்களால் உருவானவையாம். அதனால்தான் லைக்கா வெளியிட்ட “நானும் ரவுடிதான்” “விசாரணை” படங்களுக்கு எதிர்ப்பில்லை என்று அவர் பதிவு செய்கிறார். பாரம்பரிய ஊடக நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டம் உண்டா என்று கேட்டதற்கு தான் அடிப்படையில் ஒரு தொழிலதிபர், மீடியாவில் நுழைவது அரசியல் ரீதியாக தவறு, அரசியலில் தான் எப்போதும் நடுநிலை வகிக்கவே விரும்புவதாகவும் கூறுகிறார். என்ன ஒரு ஜனநாயக உணர்வு பாருங்கள்!

ஒரு வேளை சாதாரண மசாலா படங்களுக்கே இப்படி காசைக் கொட்டுபவர் பல்வேறு முதலாளிகளே நேரடியாக ஊடகங்களை கையிலெடுத்திருக்கும் காலத்தில் தனது நிறுவன நலனிற்காக ஏன் ஒரு ஊடகத்தை ஆரம்பிக்க கூடாது? அப்படிப்பட்ட பின்னணித் தகவல்கள் ஏதுமின்றி இந்து பத்திரிகையின் செய்தியாளர் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார். எதிர்பாருங்கள்..விரைவில் லைக்கா தமிழ் தொலைக்காட்சியை பார்ப்பதற்கு…

இருப்பினும் லைக்கா மொபைல் குறித்து ஐரோப்பிய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் அனைத்தும் ஒரு கார்ப்பரேட் கிரைம் தில்லருக்கு உரியவை. இங்கிலாந்து உள்ளிட்டு இந்த ஊடகங்கள்  அனைத்தும் சுபாஷ்கரண் நிறுவனத்தை சர்ச்சைக்குரிய லைக்கா மொபைல் என்றே அழைக்கின்றன.

  • லைக்கா மொபைல் – ஒரு சர்வதேச திருட்டுக் கம்பெனி!

subashkaran with cameron

பிரதமராக காமரூன் இருந்த போது அவருடன் சுபாஷ்கரண்.

ர்ச்சையின்றி ஏது ஒரு முதலாளி? என்று மட்டும் எளிமைப்படுத்தி விடாதீர்கள். பத்தாண்டுகளில் ஒரு பில்லியன் யூரோவை நிறுவன மதிப்பாக கொண்டிருப்பது எப்படிப் பார்த்தாலும் சாத்தியமில்லை. அது நிச்சயம் இருண்ட பக்கத்தைக் கொண்டிருக்கும்.

நவம்பர் 2015-ல் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவிடும் பொருட்டு 6.6 மில்லியன் பவுண்ட் நிதியை – கிட்டத்தட்ட 56 கோடி இந்திய ரூபாயை அளிப்பதாக அறிவிக்கிறார்.

கன்சர்வ்வேட்டிவ் கட்சிக்கு இலங்கை மீதான இந்த திடீர் பாசத்தின் பின்னணி என்ன? இந்த அறிவிப்புக்கு முந்தைய வருடத்தில் அக்கட்சிக்கு அங்கே வாழும் தொழிலதிபரான சுபாஷ்கரன் அல்லிராஜா ஒரு மில்லியன் பவுண்டை அதாவது 8.5 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருக்கிறார்.  அவர் பிறந்து வாழ்ந்த வடக்கு இலங்கைக்குத்தான் இங்கிலாந்து உதவி செய்வதாக அறிவித்தது.

காமரூன் கட்சிக்கு அவர் கொடுத்த நன்கொடையும் இங்கிலாந்து அரசு இலங்கைக்கு அளித்த உதவியும் இப்படி பிரச்சினைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுவதற்கு காரணம், சுபாஷ்கரன் நிறுவனத்தின் வரி ஏய்ப்பும், சட்ட விரோத வருமானமும் ஆகும். இலங்கை அரசின் போருக்கு பிறகு 2009-ம் ஆண்டில் பிரிட்டன் அரசு மனிதாபிமான உதவிகளை செய்வதாக அறிவித்தது. லைக்கா மொபைல் நன்கொடை விவகாரத்திற்கு பிறகு இந்த உதவி சூடு பிடித்தது ஏன்?

2011-ம் ஆண்டில் டோரிக் கட்சி (கன்சர்வேட்டிவ் கட்சி) லைக்கா மொபைலிடமிருந்து பெற்ற தொகை 1,76,000 பவுண்ட் – கிட்டத்தட்ட ஒன்றரை கோடி இந்திய ரூபாய். இதே நன்கொடை 2012-ம் ஆண்டில் இரண்டு கோடியே 13 லட்சம் இந்திய ரூபாயாகவும் உயர்ந்தது. இதே ஆண்டில் இங்கிலாந்து அரசு இலங்கைக்கு அளித்திருக்கும் தொகை 47 கோடி இந்திய ரூபாயாக உயர்ந்தது. 2013-ம் ஆண்டு வரை இங்கிலாந்தின் உதவி 87 கோடி இந்திய ரூபாயை தொட்டது. இதே உதவி ஈராக்கைப் பொருத்த வரை மூன்றில் ஒரு பங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஈராக்கின் அதிபர்கள் யாரும் இலண்டனில் தொழில் செய்து டோரிக் கட்சிக்கு நன்கொடை கொடுக்குமளவு இல்லை.

Sri Lankan president Mahinda Rajapaksa greets David Cameron at the CHOGM

ராஜபக்சே காலத்தில் இலங்கை சென்ற காமரூன்.

நவம்பர் 2013-ம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த காமரூன், 1948 இலங்கை சுதந்திரத்திற்கு பிறகு வடக்கு இலங்கைக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவராக பேசப்பட்டார். அப்போது இலங்கை அரசு சுயேச்சையான நீதி விசாரணை நடத்தி தமிழ் மக்களுக்கு மீதான போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றார்.  அப்போதே கண்ணிவெடி நீக்கத்திற்காக முல்லைத் தீவு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு 18 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார். அவரது அறிவிப்புக்களைப் பார்த்து ராஜபக்சே பயந்து நடுங்குவதாகவும், ஐ.நா சபை அவரைப் பிடித்து கூண்டிலேற்றி தண்டிக்கப் போவதாகவம் ஈழ ஆர்வலர்கள் இங்கேயும், புலத்திலும் பேசினர்.

மார்ச் 2014-ல் பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹூகோ ஸ்வைர், இலங்கையில் கைது செய்யப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் குறித்து கவலை தெரிவித்தார். அதற்கு  13 நாட்கள் கழித்து காமரூன் இலங்கைக்கு 56 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவிக்கிறார். இதே காலத்தில்தான் டோரிக் கட்சியினர் லைக்கா மொபைல் நிறுவனத்திடமிருந்து எட்டரை கோடி ரூபாயையும், சுபாஷ்கரனிடமிருந்து தனிப்பட்ட முறையில் 85 இலட்சம் ரூபாயையும் பெறுகின்றனர். கம்பெனி சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் இரு நன்கொடைகள்!

இதற்கு பிறகு 2015 இலங்கை பொதுத் தேர்தலுக்கு முந்தை இரண்டு மாதத்தில் காமரூன் இலங்கையின் அதிபர் மைத்ரிபால் சிரிசேனாவை சந்தித்து தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய நிலம் குறித்து வாக்குறுதியைப் பெறுகிறார். இதற்கு ஆறு நாட்கள் கழித்து டோரிகள் லைக்கா மொபைலிடமிருந்து 3 கோடியே 17 இலட்சம் ரூபாயை பெறுகின்றனர்.

மார்ச் 2015-ல் சுபாஷ்கரன் டோரிகளின் கட்சி நிதி சேகரிப்பு “பிளாக் அண்ட் ஒயிட்” நிகழ்வில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வில் டோரிக் கட்சி தலைவர்களோடு இரவு விருந்தில் சிக்கன் சாப்பிடுவது, காலையில் ஓடுவது, என்று தலைக்கேற்ற முறையில் நன்கொடை வைத்திருக்கிறார்கள். அதில் 1990-களில் நாடாண்ட மார்க்கரெட் தாட்சரின் வெண்கலச் சிலையை ஒரு கோடியே என்பது இலட்ச ரூபாய் கொடுத்து வாங்குவோருக்கு அனைவரும் கைதட்டி ஆரவரிப்பார்கள். சுபாஷ்கரனும் அந்த ஆரவாரத்தைப் பெறுகிறார்.

LYCA-subhaskaranசரி, இலங்கைக்கு உதவி அளிப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்ததே அதில் இதுவரை எவ்வளவு பணம் இலங்கையில் எங்கே என்னவாக சென்றடைந்திருக்கிறது என்று மெயில் பத்திரிக்கை இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கேட்ட போது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டார்கள். ஏன் பதிலளிக்கவில்லை? மனிதாபிமானத்திற்கு கணக்கு கேட்காதீர்கள் என்றா? இல்லை அந்த அறிவிப்பில்லாம் வந்த நன்கொடைகளுக்கான வெறும் மொய்யா?

லைக்கா மொபைல் நிறுவனம் 2011-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 18 கோடி ரூபாயை டோரி கட்சிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இதில் நான்கில் ஒரு பங்கு நன்கொடைப் பணம் 2016-ம் ஆண்டில் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது எந்திரனின் 2.0 பாகத்தின் முதல் பார்வை நடந்த காலத்தில்.

போரிஸ் ஜான்சன் என்பவர் 2012-ம் ஆண்டில் இலண்டன் மேயராக போட்டியிட்ட போது லைக்கா மொபைல் தனது கால் சென்டரை அவருக்கு இலவசமாக பயன்படுத்த அளித்தது. இப்படி உள்ளூர் கவுன்சிலர், மேயர் முதல் நாடாளும் பிரதமர் வரை லைக்காவின் ‘விருந்தோம்பல்’ கொடிகட்டிப் பறந்திருக்கிறது.

  • லைக்கா மொபைல் கம்பெனியின் நிழல் வருமானம்

தே காலத்தில்தான் லைக்கா மொபைலின் மூன்று ஊழியர்கள் பை நிறைய பணத்தை வைத்துக் கொண்டு இலண்டன் தபால் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது போலீஸ் விசாரணைக்கு வந்தது.

BuzzFeed எனும் செய்தி ஊடகத்தின் வீடியோ பதிவு விசாரணைப்படி லைக்கா மொபைல் நிறுவனம் மூன்று ரொக்க கூரியர்களின் மூலம் பை நிறைய பல்லாயிரம் மதிப்பிலான பணத்தை அன்றாடம் கடத்தியிருக்கிறது.

இதே காலத்தில் அதாவது ஜூன், 19, 2016 இல் லைக்கா மொபைலின் 19 ஊழியர்கள் பிரான்சில் ஒரு சோதனையின் போது கைது செய்யப்பட்டனர். வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணம் சேர்ப்பிற்காக இந்த கைது நடந்தது. பாரிசில் கைது செய்யப்பட்ட 19 பேர்களில் லைக்கா மொபைல் இயக்குநர் அலைன் ஜோகிமெக், அங்கே உள்ள யூத சமூகத்தின் முன்னணியான தலைவரும் கூட. அங்கே இஸ்ரேலுக்கு ஆதவாக ஒரு சேவை நிறுவனத்தை B’nai B’rith நடத்தி வருகிறார். இந்த புகாரில் லைக்காவின் மோசடி 13 மில்லியன் பவுண்ட் அதாவது 111 கோடி ரூபாயாகும். இந்தியாவில் சங்க பரிவாரங்களுக்கு பிரியத்திற்குரிய இஸ்ரேல் ஈழத்தமிழ் தொழிலதிபரான சுபாஷ்கரணின் கிச்சன் கேபினெட்டிலும் இருக்கிறது.

cameron

லைக்கா இப்படி திருட்டுத்தனம் செய்யும் போதுதான் அதற்கு ஆதரவளித்த டேவிட் காமரூன் சட்டவிரோத மற்றும் குற்ற நடவடிக்கை பணத்தை முறியடிப்போம் என்று உலகளாவிய ஊழல் எதிர்ப்பு மாநாடு ஒன்றில் முழங்கினார்.

இதைத் தொடர்ந்து லைக்கா மொபைலின் பாரிஸ் தலைமையகத்தில் நடந்த சோதனையில்  பண மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கூடவே நகரின் பல்வேறு குடியிருப்பு மற்றும் வணிக முகவரிகளில் சோதனை நடத்தப்பட்டு பண மூட்டைகள் பிடிபட்டன. லைக்கா மொபைலின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது.

இந்த பணமூட்டைகளெல்லாம் வழக்கமான வங்கி இருப்புக்கு கொண்டு செல்லப்பட்டது என்று லைக்கா மொபைல் கூறியது. ஆனால் Buzzfeed செய்தி தளத்தின் விசாரணை உதவிப்படி பிரெஞ்சு அதிகாரிகள் மூலம் சட்டவிரோத பணம் பல்வேறு நிழலான நிறுவனங்களிடமிருந்து பிரான்சின் லைக்கா கம்பெனி கணக்கிற்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இவை குற்ற நடவடிக்கைகள் மூலம் திரட்டப்பட்ட பணமாகும். Buzzfeed புலனாய்வின் படி 19-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல பத்து மில்லியன் யூரோக்களை லைக்கா வங்கிக் கணக்கில் கொட்டியிருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் சுபாஷ்கரணது முன்னால் அம்பானி கூட போட்டி போட முடியாது.

லைக்கா இப்படி திருட்டுத்தனம் செய்யும் போதுதான் அதற்கு ஆதரவளித்த டேவிட் காமரூன் சட்டவிரோத மற்றும் குற்ற நடவடிக்கை பணத்தை முறியடிப்போம் என்று உலகளாவிய ஊழல் எதிர்ப்பு மாநாடு ஒன்றில் முழங்கினார்.

Buzzfeed புலனாய்வின் படி லைக்கா மொபைல் பிரிபெய்டு அட்டைகளை கள்ள சந்தையில் விற்று அந்த பணத்தை பினாமி நிறுவனங்களின் ரசீதுகளாக மாற்றி பல சட்ட விரோத ரொக்க பரிவர்த்தனைகளை செய்துள்ளது. Buzzfeed தகவல்களின் படி லைக்கா மொபைல் நிறுவனத்தின் சொந்த ஆடிட்டர்களே கடந்த இரண்டு வருடங்களாக சுமார் 646 மில்லியன் பவுண்ட் அதாவது 55 ஆயிரம் கோடி ரூபாய் லைக்கா மொபைல் கணக்கில் வராமல் பத்து வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். லைக்காவினுடைய வர்த்தக வலைப்பின்னல் சிக்கலானதும், குழப்பமானதும் கூட என்கிறார்கள்.

உலகின் மிகப்பெரிய விர்ச்சுவல் மொபைல் நிறுவனமான லைக்கா, சர்வதேச வான்வெளி அலைக்கற்றைகளை மொத்தமாக வாங்கி இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒப்பீட்டளவில் மலிவான பிரீபெய்டு கார்டுகளாக விற்கிறது. அதனுடைய வருடாந்திர வர்த்தகம் உலக அளவில் 1.5 பில்லியன் பவுண்டாகும் – ஒரு இலட்சத்தி 28 ஆயிரம் கோடி ரூபாய். ஐக்கிய அரசனா பிரிட்டனில் சட்டபூர்வமான கார்ப்பரேட் வரியை தவிர்ப்பதற்காக அதனுடைய பணத்தை வரியில்லா சொர்க்கமான போர்ச்சுகீஸ் அருகில் இருக்கும் மதீரா தீவுகளுக்கு கொண்டு செல்கிறது.

Buzzfeed Labour MP Tom Blenkinsop told the Huffington Post UK: “The Prime Minister knows his party has received over £420k from a company closely associated with the Sri Lankan regime. He was obviously so concerned that his own MPs were recently prevented from visiting there.

The MP, who has written directly to the Prime Minister, added: “So in the interests of transparency I want to know if the Prime Minister is going to investigate why his party has received over £420k from this company so closely associated with the Sri Lankan government.”

விசாரணையைத் தொடர்ந்து இங்கிலாந்தின் லேபர் கட்சி எம்.பியான டாம்  பிளென்கின்சாப் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் லைக்கா மொபைலிடம் வாங்கிய நன்கொடைகளை முடக்க வேண்டும், அந்த நிறுவனத்தை விசாரிக்க வேண்டும் என்று கோரினாலும் கன்சர்வேடிவ் கட்சி அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இடையில் பிரான்சில் கைது செய்யப்பட்ட 19 பேரில் 9 பேர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அதிதல் எட்டு பேருக்கு பிணை கிடைத்து, ஒருவர் நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டார். லைக்கா மொபைல் சோதனையில் 1,30,000 யூரோ ரொக்கமாகவும், 8,50,000 யூரோ வங்கிக் கணக்கிலும் கைப்பற்றப்பட்டது. இது போக வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணம் பல மில்லியன் யூரோ இருக்கும் என இப்பத்திரிகை தெரிவிக்கிறது.

சரி, இத்தனை ஆதாரங்கள் இருந்தென்ன? லைக்கா எனும் திருட்டுக் கம்பெனியின்  கருப்புப் பணத்தையே தனது ஊதியமாக பெற்றோமென அறம் ஸ்பெஷலிஸ்ட்டான ஜெயமோகன் ஒத்துக் கொள்வாரா? மனப்பால் குடிக்காதீர்கள்!

Lyca Jayamohan 2.0 - 4

லைக்கா எனும் திருட்டுக் கம்பெனியின் கருப்புப் பணத்தையே தனது ஊதியமாக பெற்றோமென அறம் ஸ்பெஷலிஸ்ட்டான ஜெயமோகன் ஒத்துக் கொள்வாரா?

மோடியை ஆதரித்து அவர் எழுதிய கருப்புப் பணக் கட்டுரையிலேயே தெளிவாக சொல்லியிருக்கிறார்.

மல்லையாவின் கிங்பிஷர் நஷ்டம் அடைவதற்கு காரணம் அவர் பெங்களூரு பெரிதும் வளரும் என்று நம்பி ஏமாந்தார், அதற்கு காரணம் அரசியல்வாதிகளே அவரல்ல என்கிறார். வங்கிப் பணம் கொடுத்து நடந்த பிழைக்கு அனைவரும் கூட்டுப் பொறுப்பு என்பதால் மல்லையாவை தப்பி ஓடிய அயோக்கியன் என்று சொல்வது மூடத்தனம் என்கிறார். அதாவது இது திருட்டு அல்ல தோல்வியடைந்த தொழில் என்கிறார். ஆகவே சுபாஷ்கரனது சபையிலே ஆஸ்தான புலவராக இருந்து அவர் லைக்காவின் குற்றச் செயல்களுக்கு அறம் போட்ட சட்டை போட்டு அழகு பார்ப்பார், எழுதுவார்.

ஆனால் உண்மை அவரது கணினி விசைப்பலகையில் இல்லை. லைக்காவின் குற்றங்கள் கார்ப்பரேட் ஊடகங்களாலும், பல அரசுகளாலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதலாளித்துவம் வழங்கியிருக்கும் “அபராதம் கட்டி விட்டால் எந்த திருட்டுப் பணமும் முறையான பணமாகிவிடும்” என்ற ஒழுக்கப்படி லைக்கா இன்னும் பீடு நிடை போடுகிறது. ஆனால் அது பீடை நடை என்பதையே மேற்கண்ட விவரங்கள் காட்டுகின்றன.

இதன்படி பார்த்தால் லைக்காவின் தொழிலில் பல்வேறு குற்றச் செயல்கள் இருக்குமென்று தெரிகிறது. அது ஹவாலாவா, மற்ற நிறுவனங்களின் வரி ஏய்ப்பிற்கான உதவியா, போதை பொருள் விற்பனையா, ஆயுத விற்பனையா, புலிகள் உள்ளிட்ட கைவிடப்பட்ட பெருந்தலைகளின் சொத்தா என்று நமக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் செய்யும் அரசியல் நன்கொடைகளும், தைரியமாக பிடிபடும் மோசடிகளும் நிச்சயம் இவர்களது பின்னே பெரும் நிழலான நடவடிக்கைகள் இருப்பதை காட்டுகின்றது.

சரி, இந்த நிழல் உலகைத் தவிர்த்து இவர்களது மொபைல் கம்பெனி எப்படி நடத்தப்படுகிறது?

அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்….

  • தொடரும்.

– இளநம்பி

http://www.vinavu.com/2016/12/02/black-money-lycamobile-jayamohan-part-1/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா....... :grin: அருமையான தலைப்புடன், சேர்வயர்  வந்திருக்கிறார். 
நீண்ட பதிவு... என்பதால், ஆறுதலாக முழுவதையும் வாசித்து விட்டு, எனது கருத்தை சொல்கின்றேன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கள் உழைக்கிறாங்கள்,வரி ஏய்ப்பு சேய்கிறாங்கள்,சொந்தப் படம் எடுக்கிறாங்கள்....அது கள்ளப் பண்மாக இருந்தால் என்ன அவங்கட சொந்தப் பணமாக இருந்தால் என்ன வினவுக்கு என்ன கவலை? அத்தனையும் கடைந்தெடுத்த பொறாமை

Link to comment
Share on other sites

அவங்களுக்கும் கொஞ்சம் குடுத்தா அவங்களேன் பொறாமை படுகிறாங்கள், என்னம்மா எழுதிறீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா நிறைய  நேரம் யோசிச்சு டைம் வேஸ்ட்டு பண்ண வேணாமுன்னு நெனச்சு  பட்டுனு பதில் எழுதிட்டாங்க போல இருக்கு..
வரி ஏய்ப்பு, கள்ளப் பணம் இது எல்லாரையும் பாதிக்கும் விஷயம் தானே அக்கா...
எந்த அளவுக்கு உண்மை, பொய் என்பது தான் ஆராயப்பட வேணும்..

Link to comment
Share on other sites

ஒருவேளை லைக்கா தமிழ் தேசிய ஆதரவாளராக இருந்தால் இங்கே பலர் வந்து கும்மி அடித்திருப்பினம்.

ஆனால் இவர்கள் இலங்கை அரசின் ஆதரவாளர்கள் என்பதால்  கொஞ்சம் மனதுக்கு கஷ்ட்டமாக தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக நதி நீர் இணைப்பிற்காக.... 100 கோடி  ரூபாய்  கொடுப்பேன்,  என்று  சொன்ன ரஜனி.....
கார்த்திகை  8,  வரை.... ஒரு ரூபாய் கூட,  கொடுக்கவில்லை.

அந்த.... 100  கோடி,  மோடியினால்  செல்லாத  காசு.
அதை.... அப்பவே.... குடுத்திருந்தால்,  புண்ணியம் கிடைத்திருக்கும்.

இமய மலைக்கு போன...  எடுப்பும்,  அந்த மனிதனுக்கு இல்லாமல் போய் விட்டது தான்....
கொடுமையின்  உச்சக்  கட்டம். அதை... மெல்லவும், விழுங்கவும்  முடியாமல்....
"சுவிங்கம்"  மாதிரி... சப்பிக்  கொண்டு இருக்க வேண்டியது தான்.
ரசனி . :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Dash said:

ஒருவேளை லைக்கா தமிழ் தேசிய ஆதரவாளராக இருந்தால் இங்கே பலர் வந்து கும்மி அடித்திருப்பினம்.

ஆனால் இவர்கள் இலங்கை அரசின் ஆதரவாளர்கள் என்பதால்  கொஞ்சம் மனதுக்கு கஷ்ட்டமாக தான் இருக்கும்.

இப்ப நீங்க என்ன சொல்ல வாரிங்க ... 

இலங்கை அரசுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு வக்காலத்தா ? இல்லை 
தமிழ் தேசியத்திற்கு ஆதரவு  தருபவர்கள் மேல் கடுப்பா...

Link to comment
Share on other sites

1 hour ago, Sasi_varnam said:

இப்ப நீங்க என்ன சொல்ல வாரிங்க ... 

இலங்கை அரசுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு வக்காலத்தா ? இல்லை 
தமிழ் தேசியத்திற்கு ஆதரவு  தருபவர்கள் மேல் கடுப்பா...

நான் குறிப்பிட்டது என்னவெனில் , லைக்கா தமிழ் தேசியத்த்துக்கு ஆதரவான அமைப்பாக இருந்தால்  தமிழ் தேசியத்தை எவ்வளவு கேவலபடுத்த முடியுமமோ அவ்வளவு கேவலப்படுத்தியிருப்பார்கள். அதாவது தமிழ் தேசியம் என்பது திருடர்களின் உறைவிடம் என்ற ரீதியில் கதை திசை திருப்பப்பட்டிருக்கும் என்பதை குறிப்பிட்டியின்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சசி,நீங்கள் சொன்ன மாதிரி நான் கட்டுரையை வாசிக்கவில்லைத் தான். கறுப்புப் பணம் வைத்திருக்காமல் வியாபாரத்தில் முன்னேறிய யாராவது ஒருவரை சொல்லுங்கள் பார்ப்போம்...லைக்கா/சுபேஸ்/தமிழன் என்ட படியால் பொறாமையில் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பது என்னுடைய கருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

நான் குறிப்பிட்டது என்னவெனில் , லைக்கா தமிழ் தேசியத்த்துக்கு ஆதரவான அமைப்பாக இருந்தால்  தமிழ் தேசியத்தை எவ்வளவு கேவலபடுத்த முடியுமமோ அவ்வளவு கேவலப்படுத்தியிருப்பார்கள். அதாவது தமிழ் தேசியம் என்பது திருடர்களின் உறைவிடம் என்ற ரீதியில் கதை திசை திருப்பப்பட்டிருக்கும் என்பதை குறிப்பிட்டியின் :107_hand_splayed:

 

மன்னிக்கவும் நான் வேறு ஒரு கோணத்தில் உங்கள் கருத்தை வாசித்து விட்டேன்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.