Jump to content

நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும்


Recommended Posts

நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும் (பாகம் 1)

muslim_women-jpg-size-custom-crop-1086x686

இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டமானது (MMDA) பல ஆய்வுகளினதும் கற்கைகளினதும் கருப்பொருளாக இருந்து வருகின்றது. எவ்வாறாயினும், மிகவும் மனம் வருந்தத்தக்க வகையில் நடப்பது என்னவென்றால் மறுசீரமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற சகல முயற்சிகளும் ஏதோ ஒரு குழு மட்டத்தில் அல்லது குழுக்கள் பரிந்துரைகளை விடுப்பதுடன் முடிவடைந்து விடுகின்றன. இவற்றிற்கு அப்பால் எதுவும் நடப்பதில்லை. இதனால், தமது கணவன்மாரினால் முஸ்லிம் பெண்கள் மோசமான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவது தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. தமது மனைவிமாரை அடித்துத் தண்டிப்பது தமது உரிமை என்று கூட சில கணவன்மார்கள் நினைக்கின்றனர். தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனும் நிலைக்கு பெண்களைத் தள்ளுமளவிற்கு இத்துஷ்பிரயோகங்கள் கடுமையானவையாக இருக்கின்றன. துஷ்பிரயோகங்கள் மனைவிமாருக்கு மட்டுமல்லாது பிள்ளைகளுக்கும் உடல்ரீதியான தாக்கத்தினையும் மனோரீதியான சித்திரவதையினையும் ஏற்படுத்துகின்றன.

இருப்பினும், பயன்பாட்டிலுள்ள சட்ட முறைமை மூலமாக முஸ்லிம் பெண்களால் பரிகாரம் காண முடியாமையினால் குற்றத்தை நிகழ்த்துபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து அதிகமான சந்தர்ப்பங்களில் தப்பிவிடுகின்றனர். எனவே, இந்தக் கட்டுரையானது முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டமுறைகளில் நிலைநாட்டப்பட்டு பேணப்பட்டுவருவதில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் மௌனமாகத் துயருருகின்ற பெண்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை கோடிட்டுக் காட்டுவதாகவும் உள்ளது. அத்துடன், ஆணாதிக்கத்திற்கு உட்பட்டு மறுசீரமைப்பினைக் கோரி நிற்கின்ற காதி நீதிமன்ற முறைமையிலே பெண்களுக்கு சமமான நீதி கிடைக்காத காரணத்தினால் அவர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளையும் வெளிக்காட்டுகின்ற ஒரு முயற்சியாகவும் உள்ளது.

நற்பண்புடைய மற்றும் நல்ல பதவியினைக் கொண்ட எந்தவொரு ஆண் முஸ்லிமும் காதி நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு நியமிக்கப்படுகின்ற நீதிபதியின் நியாயாதிக்கமானது பிரதேச ரீதியாக வரையறுக்கப்படுவதுடன், அது குறிப்பிட்ட காலத்திற்கும் வரையறுக்கப்பட்டதாகும். நியமிக்கப்படும் காதி நீதிபதியானவர் ஷரியாச் சட்டத்தினைப் பற்றியோ அல்லது குறிப்பாக முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம் பற்றியோ புரிதலைக் கொண்டிருக்கின்றாரா என்பதை வெளிப்படுத்துவதற்கான எந்தத் தேவைப்பாடுகளும் நியமனத்தின்போது கோரப்படுவதில்லை. பெரும்பான்மையான இலங்கையின் காதிகள் முறைசார் சட்டப் பயிற்சியினைக் கொண்டிருப்பதில்லை. காதிமார்களின் தீர்மானங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும்போது அதனை விசாரிப்பதற்காக இச்சட்டமானது காதிச் சபையினை நியமிப்பதற்கான ஏற்பாடுகளையும் வழங்குகின்றது. முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தின் 4ஆம் பிரிவானது பின்வரும் கோரிக்கைகள் எவற்றினையாவது விசாரித்து அவற்றுக்கு தீர்ப்பு வழங்குவதை உள்ளடக்கும் தன்மை மிக்கதான திருமண நியாயாதிக்கத்தினை காதிக்கு வழங்குகின்றது. அவையாவன:

மகரைப் பெற்றுத் தரக்கோரும் மனைவியின் கோரிக்கை, பராமரிப்பினைப் பெற்றுத் தரக்கோரும் மனைவியின் கோரிக்கை அல்லது மனைவியின் சார்பில் பராமரிப்பினை பெற்றுத் தரக்கோரும் கோரிக்கை அல்லது பராமரிப்பினை பெற்றுத் தருமாறு பிள்ளை விடுக்கும் கோரிக்கை (திருமண பந்தத்திற்குள் பிறந்த அல்லது திருமண பந்தத்திற்கு அப்பால் பிறந்த), பராமரிப்பினை பெற்றுத்தருமாறு பிள்ளையின் சார்பில் விடுக்கப்படும் கோரிக்கை, இத்தா பராமரிப்புக்காக விவாகரத்துப் பெற்ற மனைவி விடுக்கும் கோரிக்கை, இந்தப் பிரிவின் கீழ் கட்டளையிடப்படும் எந்தவொரு பராமரிப்புத் தொகையினையும் அதிகரிக்க அல்லது குறைக்க விடுக்கப்படும் வேண்டுகோள், கைக்கூலிக்கான வேண்டுகோள், கணவன் மனைவிக்கு இடையில் காதியினை மத்தியஸ்த்தம் செய்து வைக்குமாறு கோரும் வேண்டுகோள், திருமணத்தினை வறிதாக்கும்படி கணவன் அல்லது மனைவி விடுக்கும் வேண்டுகோள்.

நியாயமான நீதி விசாரணையினை அணுகிக்கொள்ள முடியாமல் பெண்கள் அதிகமாக முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் இச்சமுதாய நீதிமன்ற முறைகளிலேயே ஊசலாடுகின்றன. இச்சமுதாய நீதிமன்றங்கள் ஆணாதிக்கத்திற்கு உட்பட்டிருப்பதுடன் அவை குடும்ப வன்முறைச் சட்டம் உள்ளடங்கலாக பொதுச்சட்டத்தைப் பயன்படுத்தி நீதியினைக் கோருவதை விட்டும் பெண்களை இது அப்புறப்படுத்துகின்றது. மேலும், பெண்களும் சிறுவர்களும் முகங்கொடுக்கின்ற வன்முறையின் தீவிரத்தன்மையினைக் கருத்தில் கொள்வதரிது. அதிகமான சந்தர்ப்பங்களில் குடும்ப வன்முறை நிகழும்போது தங்களது கணவன்மாருடன் செல்லுமாறு பெண்களுக்கு கூறப்படுவதுடன், தனது மனைவிமாரை அன்புடன் நடத்துமாறு கணவன்மாரும் வேண்டப்படுகின்றனர்.

காதி நீதிமன்றங்களில் வழக்குகளைச் சந்தித்துள்ள 26 முஸ்லிம் பெண்களை புத்தளத்திலும் மன்னாரிலும் சந்தித்திருந்தேன். இவர்கள் கூறிய கதைகளில் அதிகமானவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருந்தது. மேலும், காதி நீதிமன்ற முறைமையானது ஆண்களுக்கு பக்கச்சார்பாக இருந்து வருவதுடன் குடும்பங்களின் நலன்களை குறிப்பாக, சிறுவர்களைப் பாதிக்கின்ற மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையினைத் தூண்டுவதாகவும் இருப்பது அக்கதைகளில் இருந்து தெரியவந்தது. நான் நேர்கண்ட பல பெண்கள் தம் கணவன்மாரினாலும் தம் கணவனின் உறவினர்களாலும் தம்மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறையின் தீவிரத் தன்மையினை கருத்தில் கொண்டு விவாகரத்தினை பெற்றுக் கொள்வதை விரும்பாதவர்களாகக் காணப்படுகின்றனர். மாறாக மீளிணக்கத்திற்காக அல்லது பராமரிப்பினைப் பெறுவதற்காகவோ அவர்கள் காதி நீதிமன்றங்களுக்கே செல்கின்றனர். இதற்கான காரணமாவது,

சமுதாயத்தினுள் பாதுகாப்பென்பது சீர்குலைந்திருப்பதும் விவாகரத்தைப் பெற்றவர் என சமூகத்தினால் ஒதுக்கிவைக்கப்படுதலும்
தமது பிள்ளைகளுக்கு ஒரு தகப்பன் தேவையென அவர்கள் நினைக்கின்றனர் (குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு சிறந்த கணவன்மாரினைப் பெற்றுக் கொடுப்பதற்கு தமது கணவன்மார் இருக்க வேண்டுமென அவர்கள் நினைக்கின்றனர்).
தான் விவாகரத்தினை முன்னெடுத்தால் பராமரிப்புக்கும் நட்டயீட்டுக்குமான தமது உரிமையினை தாமும் தமது பிள்ளைகளும் இழந்துவிடுவர் என அவர்கள் பயப்படுகின்றனர்.
அதிகமான சந்தர்ப்பங்களில் இவ்வாறான வன்முறைக்கான காரணங்களாக இருப்பனவற்றை பின்வருமாறு குறிப்பிடலாம். கணவன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் முடிப்பதற்கோ அல்லது தனது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவினை சட்டபூர்வமானதாக்குவதற்கோ பெண்னையும் பிள்ளைகளையும் அச்சுறுத்துவதேயாகும். பெண்ணின் தரப்பில் இருந்து முறைப்பாடு வருகையில், குறிப்பாக ஆண் வேறொரு பெண்ணை நாடுவது தொடர்பான முறைப்பாடுகளாக இருக்கும் பட்சத்தில் தீர்ப்பினை வழங்குவதில் தாமதங்கள் ஏற்படுவதையே என்னுடைய நேர்காணல்கள் எடுத்துக்காட்டின. தனது இறுதித் தீர்ப்பினை வழங்குவதை காதியார் இழுத்தடிப்பது அல்லது ஆண்களின் இவ்வாறான செயற்பாடுகளை நியாயப்படுத்துவதுதான் பெண்களுக்கு கிடைக்கின்ற அனுபவங்களாக அதிகமான சந்தர்ப்பங்களில் காணப்படுகின்றன.

நட்டஈடு மற்றும் பராமரிப்புடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு விவாகரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு உதவாமல் கணவனின் பலதாரமணத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு காதிமார் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மீது (பெண்கள் மீது) அழுத்தத்தினை ஏற்படுத்துகின்றனர். இன்னும் சில சம்பவங்களில் பெண்கள் தமக்குரிய கடமைகளை நிறைவேற்றாத காரணத்தினாலேயே ஆண்கள் வேறு பெண்களை திருமணம் முடிக்கின்றனர் எனவும் இது நியாயப்படுத்தப்படுகின்றது. (இவற்றிலே மனைவியின் கடமைகளாக உரிய நேரத்தில் உணவு சமைத்துக் கொடுக்காமை, தனது நோயுற்ற பெற்றோரைப் பார்த்துவிட்டு உரிய காலத்தில் வீடு திரும்பாமை ஆகியவை உள்ளடங்குகின்றன).

சில காதிமார்கள் பராமரிப்புத் தொகையினை எழுத்து மூலமாக கொடுக்காமல் இருக்கின்றனர். இன்னும் சிலர் வழக்கினை நீண்டகாலத்திற்கு நடத்திச் செல்கின்றனர். மேலும், இஸ்லாம் அனுமதிக்கின்றது என்று கூறி மறுமணத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு பெண்களை நிர்ப்பந்திப்பதன் மூலமும் இதனை சூழ்ச்சிகரமான முறையிலே நிறைவேற்றி வருகின்றனர். தமது கணவன் இன்னுமொரு பெண்ணை அல்லது பல பெண்களை மணப்பதை ஏற்றுக்கொள்வதற்கு பெண்கள் மறுக்கும்போது அவர்களிடம் பாசா விவாகரத்தினை விண்ணப்பிக்குமாறு இவ்வாறான காதிமார்கள பல சந்தர்ப்பங்களில் ஆலோசனை கூறியுள்ளனர். பாசா விவாகரத்தின் மூலம் பெண் ஒருவர் விவாகரத்தினை முன்வைக்கையில் அவருக்கு நட்டஈட்டினைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமை இல்லாமல் போகின்றது.

இதனால் கணவனுக்கு சாதகமான சமரசம் இங்கே ஏற்படுகின்றது. தனது கணவனின் 2ஆவது அல்லது 3ஆவது திருமணத்தினை ஏற்றுக்கொள்ள ஒரு பெண் விரும்பாவிட்டால், அவளினால் நட்டஈட்டினையோ அல்லது பராமரிப்பினையோ கோரமுடியாது எனக் காதிமார்கள் பகிரங்கமாகக் கருத்துக்கூறி இந்த வாதத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காதிமாரின் இந்த நடத்தையினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல காதிமார்கள் தாமே ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்துள்ளதால் அவர்களின் மூலம் எவ்வாறு தமது கணவன்மாரின் நடத்தைக்கு எதிராக சவால் விடுக்க முடியும் என்கின்ற எதிர் முறைப்பாட்டினையும் முன்வைக்கின்றனர்.

தொடரும்…

2004-shreensaroor_1474306387

ஷிரீன் அப்துல் ஷரூர்

http://maatram.org/?p=5212

Link to comment
Share on other sites

நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும் (இறுதிப் பாகம்)

 

சில காலங்களுக்கு முன்பு காதிமார்கள் கல்வி கற்றவர்களாகவும் வயதில் மூத்தவர்களாகவும் சமுதாயத்திலே மரியாதையினையும் நன்மதிப்பினையும் பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. நீதிச்சேவை ஆணைக்குழுவே காதிமாரினை நியமிக்கின்ற போதிலும் தகைமைத் தேவைப்பாடுகள் இல்லாத காரணத்தினால் சில காதிமாரின் நியமனமானது அரசியல் ரீதியானதாக இருக்கின்ற அதேவேளை, அங்கீகாரத்திற்காகவும் சிலர் இவ்வாறான நியமனங்களைக் கோரி வருகின்றனர். தமது வாழ்க்கையினை சட்டத்தரணிகளாகத் தொடங்கி தொழிலாண்மைமிகு சட்டக்கல்வியினை பெற்று அதன்பின்னர் சிரேஷ்ட சட்டத்தரணிகளாக மாறி பின்னாட்களில் நீதிமன்றங்களிலே நீதிபதியாக வருவோரைப் போல் அல்லாது காதிமாருக்கு இதற்குச் சமமான எந்தப் பயிற்சியும் வழங்கப்படுவதில்லை. நியமிக்கப்பட்ட பின்னர்கூட அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. நான் சந்தித்த எந்தவொரு காதிமாரும் 2005ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடும்ப வன்முறைச் சட்டம் பற்றி அறியாதவர்களாக இருந்தனர். நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற 1-2 நாள் பயிற்சியையே காதிமார் பெற்றுக்கொள்வதுடன், இவர்களில் பெரும்பான்மையானோர் இது உரியமுறையில் நடத்தப்படாத காரணத்தினால் இதில் கலந்துகொள்வதும் இல்லை.

காதிமார்களாக சட்டத்தரணிகள் மாத்திரமே நியமிக்கப்படல் வேண்டுமென்கின்ற ஆலோசனைகள் சமுதாயத்தில் இருந்து முன்வைக்கப்படுகின்றன. காதிமார்கள் நீதிபதியின் வகிபாத்திரத்தினை வகிக்கவேண்டுமென பெரிதும் எதிர்பார்க்கப்படாத சூழ்நிலை, பாரம்பரிய முஸ்லிம் சட்டக் கோட்பாடுகளின் காரணத்தினாலேயே சாதாரண நபர்கள் காதிகளாக நியமிக்கப்படும் மரபு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், இவர்களின் தேவைப்பாடானது ஒரு மத்தியஸ்தருக்குரிய முறையிலே நடந்து கொண்டு தமக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கின்ற பிரச்சினையை முறைசாரா விதத்திலும், நட்பான முறையிலும், அச்சுறுத்தாத முறையிலும் அணுகவேண்டுமென்பதேயாகும். இதைத்தவிர காதிமார்கள் தம்முடைய தீர்ப்புக்களை அமுல்படுத்த அல்லது கண்காணிக்க கட்டமைப்பு ரீதியான அதிகாரமற்றவர்களாக இருக்கின்றனர்.

மேலும், சில மாவட்டங்களில் நீதிவான் நீதிமன்றத்திலே மேன்முறையீடு செய்யும் பெண்களுக்கு உதவுவதற்கு பெரும் தயக்கம் காணப்படுகின்றது (பராமரிப்பினை தொடர்ச்சியாக செலுத்தத் தவறுகின்ற நிகழ்வுகளின்போது). இதன் காரணமாக காதிகளின் முன்னால் தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்டத்தரணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு வழக்கிலும் பிரயோகிக்கத்தக்கதான சட்டம் மற்றும் செயல்விதிகள் தொடர்பாக காதிமார் தாமே தரப்பினரை அறிவுறுத்தி வழிநடத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பெண்கள், விவாகரத்துக்காக வழக்கினைத் தாக்கல் செய்யும் சந்தர்ப்பங்களில் இறுதித் தீர்ப்பானது நீண்ட நாட்களுக்கு சிலவேளை, அது பல தசாப்தங்களுக்கு இழுத்தடிக்கப்படுகின்றமையினையும் நாம் அவதானித்திருக்கின்றோம்.

கால தாமதமின்றித் தீர்க்கப்படுகின்ற வழக்குகளைப் பொறுத்தளவில் அவை எல்லாம் வேறொரு பெண்ணைத் திருமணம் முடிப்பதற்காக ஆண்கள் தாக்கல் செய்த விவாகரத்து வழக்குகளாகவே இருக்கின்றன. விவாகரத்து வழக்கானது இறுதித் தீர்மானத்துக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னரே தமது இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியரை ஆண்கள் திருமணம் செய்த சம்பவங்களும் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பலரும் குறிப்பிடுகையில் தமது கணவன்மார்கள் சமுதாயத்தினுள் குற்றச்செயல்கள் செய்பவர்களாக நன்கு அறியப்பட்டவர்களாக இருந்தாளும் அக்கணவன்மாரிடத்திலே தாம் தவறினைக் காணும்போது பாசா விவாகரத்தினை தம்மால் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் குறிப்பிட்டனர். ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையினைக் கொண்டிருப்பதாக கூறி ஆண்கள் பெண்களுக்கெதிராக விவாகரத்தினைத் தாக்கல் செய்யும்போது ஆறு மாதங்களில் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதியில் தலாக் வழங்கப்படுகின்றது.

தற்போது இருக்கின்ற காதிநீதிமன்றக் கட்டமைப்பினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, பலவருடங்களாக தமக்கான கொடுப்பனவினை கணவன்மார்கள் செலுத்தத் தவறுகின்ற சந்தர்ப்பங்களில் தமது பராமரிப்பினைக் கோரி வழக்குத்தாக்கல் செய்யும் போது அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். காதிகளும், காதிச் சபைகளும், நீதவான் நீதிமன்றங்களும் இந்த ஆண்களிடமிருந்து பராமரிப்பினைப் பெற்றுக்கொடுப்பதில் செயற்திறனற்றவையாக இருக்கின்றன. தவணை தவறுகின்ற கணவன்மாரினைக் கைதுசெய்யுமாறு பல கட்டளைகளை நீதவான்கள் பிறப்பித்த போதும் இந்த வழக்குகளை பொலிஸார் புறக்கணிப்பதாகவே தென்படுகின்றது. இதனால், பல சந்தர்ப்பங்களில் தமது கணவன்மார்கள் எங்கே ஒழிந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து பெண்களே அவற்றினை பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டிய சூழ்நிலைகளே அதிகமாகக் காணப்படுகின்றது. காதிச் சபையினைச் சந்திப்பதற்கு பெண்கள் தனியாக கொழும்புக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கின்றது. இதனால், பெண்களுக்கு இச்சபையினை அணுகுவதில் அதிக சிரமங்கள் இருப்பதை சில சமுதாய உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர் (இது செலவுமிக்கதும் கூட). இவர்களைப் பொறுத்தளவில் ஆண்களினால் மாத்திரமே காதி சபையினை இலகுவாக அணுகக்கூடியதாக இருக்கின்றது.

மேலும், அவர்கள் இறுதித் தீர்வு இல்லாமல் வழக்கினை இழுத்தடிப்பதற்கு அல்லது பராமரிப்புக் கொடுப்பனவினை தாமதிப்பதற்கோ, விவாகரத்தினை வழங்குவதற்கோ இந்த மேன்முறையீட்டு நீதி முறைமையினைப் பயன்படுத்துகின்றனர். காதிகளினால் பெண்களுக்கு எதிராக தவறான அல்லது நியாயமற்ற தீர்வு வழங்கப்படும்போது அவர்களின் தரப்பில் வகைப்பொறுப்பு காணப்படுவதில்லை.

“ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் காதிச் சபைச் சேவை நடாத்தப்படவேண்டும். இதனை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நடாத்த முடியும். இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அல்லது சட்டத்தரணிகளை மாவட்டங்களில் ஆரம்ப விசாரணை நடத்துவதற்கு தமது பிரதிநிதிகளாக காதிச் சபை நியமிக்கலாம்” என சமுதாயத் தலைவர் ஒருவர் ஆலோசனைகள் முன்வைத்தார்.

மேலும், “காதி நீதிமன்றத்திலும் காதிச் சபைகளிலும் காதிகளாகவும் ஜூரிகளாகவும் பெண்கள் நியமிக்கப்பட வேண்டும்” என உறுதியான கோரிக்கை பல பாதிக்கப்பட்டவர்களினாலும் செயற்படுனர்களினாலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது, நியாயமான விசாரணைக்கும் பொறுப்பான தீர்ப்புக்கும் ஒரு தளத்தினைத் திறந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் நீங்கலாகத் தற்போது சகல மாவட்டங்களும் குறைந்தளவு ஒரு காதியினையாவது கொண்டிருக்கின்றது. புத்தளத்திலே இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு என ஒரு காதி இருந்து வருகின்றார். மன்னார் தீவிலே இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை காதி நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதுடன், யாழ்ப்பாணத்திலே மாதத்திற்கு ஒரு தடவை விசாரணை நடைபெற்று வருகின்றது. வடக்கிற்குத் திரும்பி வருகின்ற சில பெண்கள் புத்தளத்திற்கோ அல்லது வவுனியாவிற்கோ வழக்கு விசாரணைகளுக்காக வரவேண்டியிருக்கின்றது. இது நீதி முறைமையினை அணுகமுடியாததாக ஆக்கியிருப்பதுடன், மீள்குடியேற்றத்திற்காக திரும்பிச் செல்கின்ற பெண்களுக்கு செலவுமிக்கதாகவும் ஆக்கியிருக்கின்றது. மீள்குடியேற்றப் பிரதேசத்திலே தமது வாழ்க்கையினை பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கு இந்த மக்கள் அல்லல்படுகின்ற போது இது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கின்றது என்பதை அவதானிக்க முடிந்தது.

முஸ்லிம் திருமண, விவாகரத்து சட்ட முறைமையினால் முஸ்லிம் பெண்கள் இருமடங்கான அடக்குமுறைக்கு உட்படுவதையே நான் சந்தித்த பெண்களின் ஊடாக தெரியக்கூடியதாக இருக்கிறது. பொதுவாக பெண்களின் சமமான உரிமையினை குடும்பத்தினுள் புறக்கணிக்கின்ற குறைபாட்டினைக் கொண்டுள்ளதாகவே பொதுச்சட்ட முறைமை காணப்படுகின்றது. இக்குறைபாட்டினை மிகவும் தீவிரமானதாக காதி நீதிமன்றம் ஆக்கியிருக்கின்றது. தீர்ப்பினை வழங்குவதற்கான நியாயாதிக்கத்தினைக் கொண்டுள்ள காதிமார்கள் முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்திலோ அல்லது ஷரீயா சட்டத்திலோ, நாட்டின் பொதுச்சட்டத்திலோ அறிவற்றவர்களாக இருந்தபோதிலும் அதனையும் பொருட்படுத்தாது பாரதூரமான பின் விளைவுகளைக் கொண்ட தீர்ப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பொதுச்சட்டத்தின் ஆளுகைக்கு கீழ் வருகின்ற முஸ்லிம் அல்லாத பெண் ஒருவர் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்ணை விட விரைவாக சிறப்பான நீதியினைப் பெற்றுக்கொள்கின்றார்.

அதேவேளை, முஸ்லிம் பெண்கள் இந்த ஆணாதிக்க சட்டத்திற்கு அடங்கிப்போக வேண்டி இருப்பது மட்டுமல்லாது பாரம்பரியத்தினுள் கட்டுண்டு கிடக்கும் கற்றறிந்திராத ஆணாதிக்கமிக்க ஆண்கள் அவர்களின் நடத்தையினையும் பால்நிலைத் தன்மையினையும் அடிப்படையாகக் கொண்டு வழங்கும் தீர்ப்பினை ஏற்றுக் கொள்ளும் கட்டாய நிலைக்கும் முகம்கொடுக்கின்றனர். முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம், ஷரீயா சட்டம், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் போன்றவற்றிலே சமுதாயப் பெண்கள் அறிவூட்டப்படல் வேண்டும். மேலும், தவறாகத் தீர்ப்புக்கள் வழங்கப்படும்போது அதற்கு சவால்விடுக்க சட்ட உதவி வழங்கப்பட வேண்டும். சாத்தியமானபோதெல்லாம் கட்டாயப்படுத்தப்பட்டு துன்புற்று வாழ்கின்ற வன்முறை வாழ்க்கைக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சூழ்நிலைகளிற்குப் பதிலாக பொதுச் சட்டத்தினை அணுகுவதற்கு சட்ட உதவிகள் வழங்கப்படல் வேண்டுமெனவும் நேர்காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்திக் கூறுனார்கள்.

முற்றும்.

ஷிரீன் அப்துல் ஷரூர்

http://maatram.org/?p=5226

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.